புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசூர் வம்சம் (நாவல்)


   
   

Page 13 of 17 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:00 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
அரசூர் வம்சம் - இரா முருகன்


பாயிரம்

அரசூர் பற்றி எழுது.

முன்னோர்கள் சொன்னார்கள்.

அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.

அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.

அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.

அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.

குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.

எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.

வாசலில் செருப்புச் சத்தம்.

திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.

முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.

எழுது.

பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.

என்ன எழுதட்டும் ?

இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.

பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.

எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.

ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.

முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.

அரசூரும் இருக்கிறது.

ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.

இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.

எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.

நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.

பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.

அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.

கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.

வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.

மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.

இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?

இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:56 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் முப்பத்தொன்பது



எடி நாணி, கூத்தம்பலத்திலே என்ன இன்னைக்கு இத்தனை தெரக்கு ?

பகவதிக் குட்டி கூட வந்த நாராயணியைக் கேட்டாள்.

ஓ. உனக்கு யாரும் சொல்லலியா ? சாக்கியார் கூத்தாச்சே. சிரிச்சுச் சிரிச்சு வயிறு கிழிஞ்சு போகும். ஆனாக்க என்ன ? கன்னிப் பொண்ணுகள் ராத்திரியில் அம்பலத்துலே நிக்கக் கூடாதுன்னு வீட்டைப் பாக்க நெட்டோட்டம் ஓட வச்சுடுறதுதானே பதிவு ?

கன்னி கழியாத பெண்களுக்கு அம்பலமும் கூட இருட்டி வெகுநேரம் ஆனபிறகு பத்திரமான இடம் இல்லை. மூல மூர்த்திக்கு நைவேத்தியம் செய்து அப்புறம் நிர்மால்யதாரியான பக்க தேவதைக்கும் படைத்தது போக உண்டான மிச்சத்தை யாசித்துக் கொண்டு அங்கே பலிக்கல் பக்கம் பூதங்கள் வந்து நிற்கும். வழியிலே நடக்கும்போது பிரேத உபாதைகள் கன்னியகை என்றால் எங்கே எங்கே என்று ஓடி வந்து ஒண்ட இடம் பார்க்கும். கல்யாணம் திகைந்த பொண்ணு என்றால் இன்னும் இஷ்டம்.

நாணிக்கு முறைச் செக்கன் எட்டுமானூரிலிருந்து வரப் போகிறான். வேளி கழித்து அவளுக்கு இடம் மாற்றம் வருவதற்கு முன் பகவதிக்குட்டி புகையிலைக் கடைக்காரனைக் கல்யாணம் செய்து கொண்டு பாண்டிக்குக் குடிபோய்விடுவாள்.

புகையிலைக் கடைக்காரனோடு படுத்துப் பிள்ளை பெத்துக்கப் போறே. நாளைக்கு அதுகளுக்குத் தலையிலே வெளிச்செண்ணெய் புரட்டிக் குளிப்பாட்டினாலும் எட்டு ஊருக்கு புகையிலை வாடை தான் அடிக்கும் பாரு.

நாணி அம்பலத்துக்கு வரும்வழியில் அவளைக் களியாக்கிக்கொண்டு வந்தாள்.

ஆமா, உன்னோட நம்பூத்ரிக்கு ஹோமப் புகை நெய்வாடையும் சமித்து வாடையுமா மணக்கப் பிள்ளை பெத்துப் போடப்போறே. நான் புகையிலை வாடையோட பெத்தா என்ன குறஞ்சுது சொல்லு.

பகவதி அவளை அடிக்கக் கையை ஓங்க நாணி வரப்புகளுக்கு நடுவிலே குதித்துக் கொண்டு ஓடினாள்.

ஆக, அரசூர்ச் சங்கரய்யன் பகவதியைக் கூடிய சீக்கிரம் கைபிடிக்கப் போகிறான். அது நடக்குமோ இல்லை அவ்வளவுதானோ என்று இழுபறியாகி இப்போது தான் லிகிதம் வந்து சேர்ந்திருக்கிறது. நிச்சயித்த தேதியில் நிச்சயித்தபடிக்குக் கல்யாணம் வைத்துக் கொள்ளப் பூரண சம்மதம் என்று சுப்பிரமணிய அய்யர் கையொப்பிட்டு அனுப்பிய கடிதத்தை நேற்றைக்கு தமையன் துரைசாமி அய்யன் எல்லோரையும் கூப்பிட்டு வைத்து உரக்கப் படித்தபிறகு பகவதிக்கு நிலைகொள்ளவில்லை.

வீட்டுக்கு மூத்த பிள்ளை இப்படி பகவதி அங்கே படி ஏறி வரும்போது போய்ச் சேர்ந்திருக்க வேண்டாம். வீடே துர்ச்சொப்பனம் போல பற்றி எரிந்து இல்லாமல் போயிருக்கவும் வேண்டாம். ஆனால் அதற்கு பகவதிக்குட்டி என்ன செய்ய முடியும் ? அவள் பார்க்காத அந்த மூத்தானையும், அரண்மனைக்குப் பக்கத்து மச்சு வீட்டையும் நினைத்து ரெண்டு சொட்டுக் கண்ணீர் வடிக்க முடியும். அவளை நிச்சயம் செய்த அப்புறம் நடந்ததாக இருக்கட்டுமே. அவளால் இல்லை அந்த அசம்பாவிதம். பகவதி ஜாதகம் எல்லா விதத்திலும் தோஷமில்லாதது என்று அரசூரில் இருந்து வந்த அய்யங்கார் ஒருத்தர் ஏகப்பட்ட சோழிகளை உருட்டி சிக்கலான கணக்கெல்லாம் போட்டுச் சொன்னதாக தமையன் பிரஸ்தாபித்தது உண்மைதானே ?

அந்த ஜோசியர் துரைசாமி அய்யன் வீடு கூட பிரேதபாதைக்கு உட்பட்ட இடத்தில் இருப்பதாகவும், அதை நிவர்த்திக்க யந்திரம் நிர்மாணித்துத் தருகிறதாகவும் சொன்னார். உடனடியாக முடியாது. கல்யாணத்துக்கு வரும்போது கொண்டு வருகிறேன் என்று கொஞ்சம் முன்பணமும் வாங்கிப் போயிருக்கிறார் அவர். கையோடு செய்து கொடுத்திருந்தால் சிநேகா மன்னியின் தகப்பனார் இப்படிக் கோழி றக்கை மாதிரிப் பறந்து வெடிவழிபாட்டு இடத்தில் விழுந்து இல்லாத கூத்தெல்லாம் பண்ணியிருக்க மாட்டார்.

நாணி அந்த வயசன் பறந்ததைப் பார்க்கக் கொடுத்து வைத்தவர்களில் ஒருத்தி.

பாவமாக்கும் அந்தக் கிளவன். தன்னேர்ச்சயா எவ்விப் பறந்தது மாத்ரம் இல்லே. எங்களோட மனை நம்பூத்ரிகள் மூத்ரம் ஒழிச்சுட்டு வர்ற போது சகலருக்கும் கிடைக்கிற மாதிரி சர்வ தர்சனம் வேறே. இது ஆகாசத்துலேருந்துங்கிறது அதிவிசேஷம். பாரு, நீ சரியாச் சாதம் போடலேன்னா அந்தப் புகையிலைக் காரனும் பறந்துடுவான். இடுப்புலே கயறைக் கட்டி வச்சுக்கோ அவனை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:56 pm

எடா நாணி நீ உன் தம்ப்ரானை இடுப்புக்குக் கீழே பிடிச்சு வச்சுக்கோ. வேதம் படிச்சவன், ஓத்துச் சொல்றவன். சாமாத்திரி ஓய்க்கன். சாடிப் பறந்தா விழறது வலிய தரவாடுலேயாயிருக்கும் கேட்டியோ ?

சிரிப்பும் கும்மாளமுமாக துவஜஸ்தம்பம் தொழுது நாளம்பலத்தில் நுழைய மேல் சாந்தி வலிய பலிக்கல் பக்கம் நின்றபடிக்குத் திரும்பிப் பார்த்தார்.

பகவதியம்மே, இதென்ன சென்னமங்கலம் தேவி க்ஷேத்ரமா, கொட்டும்சிரி வழிபாடு நடத்த ? என்னத்துக்காம் இந்தக் கொம்மாளி ? உன் கல்யாணம் குறிச்சா, அதோ கூட்டுக்காரிக்கும் வரன் திகஞ்சது கொண்டா ?

பகவதிக்குட்டி வீட்டில் மேல்சாந்தி எம்பிராந்திரியை நல்ல வண்ணம் பழக்கம் உண்டு. வீட்டு வாசலில் உட்கார்ந்தபடிக்கு அடக்காயை மென்றபடி அவள் தமயனார் யாருடனோ அல்லது அத்திம்பேர்மாரோடோ வர்த்தமானம் சொல்லிக் கொண்டிருந்து விட்டு சாயங்கால பூஜைக்கு நேரமாச்சு என்று இடுப்பில் தாக்கோலைத் தடவிப் பார்த்தபடி நடக்கிறவர். பகவதிக்குட்டி குழந்தையாக இடுப்பில் அரசிலையும், பட்டுத் துணியுமாகத் தகப்பன் மடியில் உட்கார்ந்தபடிக்கு அன்னப் பிரச்னம் அவர் ஆசியோடு தான் நடந்தது. அம்பல மேல்சாந்தியாக அவர் உத்யோகம் ஏற்றெடுத்த தருணம் அது.

அம்மாவா, இங்கே ஸ்ரீகோவிலிலே நீங்க ஆவானப் பலகையிலே பத்மாசனமிட்டு மூலமந்திரம் பிரயோகம் பண்ற முன்னாடி தலத்ரேயம் பண்ணுவேளே கையைத் தட்டித் தட்டி. அது கொட்டும் சிரியிலே பாதிதானே ?

பகவதிக்குட்டி சிரிப்பை அடக்க முடியாமல் கொஞ்சம் வெடித்துச் சிதறி முகத்தை இன்னும் பிரகாசிக்க வைக்க விசாரித்தாள்.

குட்டிக்கு இதெல்லாம் யாரு படிப்பிச்சது ? பள்ளிக்கூடத்துலே இதும்கூடிக் கல்பிதமோ ?

எம்பிராந்திரி அதிசயப்பட்டுப் போய் நிற்க, நாணி சொன்னாள்.

சும்மாதானா ? பாண்டிக்குட்டியாச்சே. நாலெழுத்துப் படிக்க அவ வீட்டுப் பெரியவா அனுசரனையா இருக்கா. படிச்சிருக்கா.

நீயும் படிக்க வேண்டியதுதானே ?

எம்பிராந்திரி துண்டால் தோளைத் துடைத்தபடி கேட்டார். தளி வாசலில் பரிசாரகன் எங்கே போனான் ?

அம்மாவா நீங்க உங்க பிள்ளையோட இப்பப் பேச்சு வார்த்தை உண்டோ இல்லியோ ? ராஜி ஆயாச்சா ?

பகவதிக்குட்டி விசாரித்தாள்.

ஏன், எனக்கென்ன அவனோடு பிணக்கு ? உங்க மனையிலே அந்த ஆலப்பாட்டு வயசன் எக்கிப் பறந்து இங்கே துவஜஸ்தம்பத்தை அசுத்தப்படுத்தின சல்யம் பத்தி அவன் பிஷாரடி வைத்யன் கட்சி. நான் பிராசீனம் பேசற வைதீகன். போறது. வயசன் தான் இப்போ பறக்கறதை நிறுத்தி நிலத்துலே நடக்கறானாமே. பிஷாரடி கட்சி கட்டினது ஜெயிச்சதோ, என்னோட பழய பஞ்சாங்கம் ஜெயிச்சு வந்ததோ, உபாதையோ பாதையோ நீங்கினதுலே நிம்மதி எல்லோருக்கும்.

ஆனாலும் இன்னும் தகப்பனும் பிள்ளையும் அனுசரித்துப் போவது முழுக்க நேரவில்லை என்று வீட்டில் பேசிக்கொண்டிருந்ததை பகவதிக்குட்டி கேட்டிருக்கிறாள்.

அம்மாவா, செறிய எம்ப்ராந்திரிக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வச்சுடுங்கோ. எல்லாம் சரியாயிடும்.

நாணி கலகலவென்று சிரித்தாள்.

உன் முறைச்செக்கன் இல்லாட்ட நீயே என் மனைக்கு வரலாமேடி பொண்ணே. இப்பவும் ஒண்ணும் குறையலே. அவனை வேறே மனையிலே போய் வேளிகழிக்கச் சொல்லு. என் பிள்ளைக்கு உன்னை முடிச்சுடலாம். ஊரோட மாப்பிள்ளை. நாணிக்குட்டி வெளியே போகவே வேண்டாம்.

தம்ப்ராட்டி எங்கே இருந்தாலும் அந்தர்ஜனம்தானெ எம்பிராந்திரி அம்மாவா. உலகம் தெரியாம மரக்குடைக்குள்ளே ஒடுங்கி உக்காரணும்னு தான் விதிச்சிருக்கு ?

நாணி கேட்டாள் முகத்தில் சிரிப்பு இல்லாமல்.

ஏய் அதெல்லாம் சீக்கிரம் நேராயிடும். நம்பூத்ரிப் பெண்குட்டிகளும் படிச்சு மேன்மையோடு வர காலம் வரப்போறதுன்னு என் புத்ரன் சொல்றான். நெஜமா இருக்குமோ என்னமோ.

தளிவாசலில் நின்று பரிசாரகன் எட்டிப் பார்த்தான். நைவேத்ய அன்னத்துக்கு எம்பிராந்திரி பூத சுத்தி செய்து மூலமந்திரம் ஜெபித்தாலே உலையில் ஏற்ற முடியும்.

அம்மே நாராயணா தேவி நாராயணா என்கிறபடிக்கு நாமம் ஜெபித்துக் கொண்டு சிரியைக் குறைத்துப் பிரகாரம் சுற்றி வாருங்கள் குழந்தைகளா. சாயங்கால பூஜையை நான் ஆரம்பிக்கறேன்.

அவர் கிளம்பும்போது வெடிவழிபாடுகாரன் நொண்டிக்கொண்டே வந்தான். கையில் இருந்த சம்புடத்தை அவரிடம் நீட்டினபடி ஆச்சரியமாயிருக்கு திருமேனி என்றான்.

என்ன ஆச்சர்யத்தைக் கண்டாய் நீ அந்த சம்புடத்துக்குள்ளே ? அசுத்த வஸ்து ஒண்ணும் எனக்குப் பார்க்க வேண்டாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:57 pm

எம்பிராந்திரி பிடிவாதமாக மறுத்தார்.

அது உள்ளே என்னதான் இருக்கும் ? பிரகாரம் சுற்றியபடியே பகவதிக்குட்டி யோசித்தாள். வடக்கே பலிக்கல் பக்கம் வரும்போது வெடிவழிபாடுகாரன் குரல் சத்தமாகக் கேட்டது.

திருமேனி. ஒரு விரல் தானே அதுலே அடச்சுருந்தது. இப்போ அது அஞ்சு வெரலாயி வளர்ந்திருக்கு.

சிநேகா மன்னியின் தகப்பன் அந்த ஆலப்பாட்டு வயசன் மூத்ர நெடியோடு வெடிக்காரன் மேலே விழுந்ததில் அவன் சுண்டுவிரல் தெறித்துப் போய் விழுந்தது நினைவு வந்தது அவளுக்கு. அப்புறம் நாலு காதம் கடந்து ஏதோ செளியில் கிடந்த அதை அம்பலத்துக்கு வந்த யாரோ இலைத் தொன்னையில் வைத்து எடுத்து வந்து கொடுத்தார்களாம்.

பாதிக்கு சதை பிய்ந்து போயிருந்த அதை அப்படியே ஒட்ட வைக்க முடியாது. கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் அது பழைய நிலைக்கு வரும். அப்புறம் நுண்ணிய ஊசியையும், பறவை இறக்கையில் எடுத்த இழையையும் வைத்துத் தைத்தால் தன்பாட்டில் அது சேர்ந்து விடும் என்றார் பிஷாரடி வைத்தியர். அதற்கான செலவாக துரைத்தனப் பணமாகத்தான் வேண்டும் என்றும் அது ஏழரை ரூபாய் என்றும் அவர் சொன்னதை கிட்டாவய்யன் ஏற்றுக் கொண்டான். ஆலப்பாட்டு மைத்துனர்கள் அதில் பாதியையாவது அடைப்பார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு.

பிஷாரடி வைத்தியர் சொன்னபடிக்கு அந்த விரலை வெடிக்காரன் வெளிச்செண்ணெய் புரட்டி மூலிகைத் தண்ணீரில் முழுக வைத்துச் சம்புடத்தில் எடுத்துப் பத்திரப்படுத்தி இருந்தான். கோவில் துவஜஸ்தம்பத்திற்குப் பத்து அடி தள்ளி கிழக்கு நோக்கி அதை வைத்து வெடி வழிபாடு நடத்தினால் அதில் சதை இன்னும் கொஞ்சம் வளரலாம் என்றும் அப்புறம் பிஷாரடி வைத்தியர் சொன்னபடிக்கு அதை சஸ்த்ர சிகிச்சை செய்து அவன் காலில் திரும்பவும் பொருத்தி விடலாம் என்றும் எம்ப்ராந்திரி யோசனை சொன்னபோது பிஷாரடி வைத்தியர் அரைமனதோடு சம்மதித்தாலும் வெடிக்காரன் முழுக்க சம்மதம் என்றான்.

ராத்திரியில் திரி அணைத்து, அம்பலம் அடைத்துப் பூட்டி மேல்சாந்தி நடக்கிறபோது துவஜஸ்தம்பத்திற்கு வெகுதூரம் அப்பால் மண் மேட்டில் பிரதிஷ்டை செய்ததுபோல் நட்டு வைத்திருந்த அந்தச் சம்புடம் கண்ணில் படும். அதின் மேல் சூட்டிய கொன்றைப் பூ மாலையும். நிர்மால்யப் பிரசாதத்தில் ஒரு பருக்கை எடுத்து அந்தப் பக்கம் எறிந்தபடி போவார் அவர்.

தினசரி பிரசாதம் கொடுத்தது அதிக போஷாக்காகி ஒரு விரல் இருந்த இடத்தி ஐந்து விரல் முளைத்து விட்டதாக வெடிக்காரன் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது பகவதி காதில் விழுந்தது. அதிலே எல்லாம் வாச்சி வாச்சியாகப் பேய் பிசாசுக்கு வாய்த்தது போல் நகமும் வேறேயாம்.

குருப்பே நீ யாதொண்ணுக்கும் கவலைப்படாதே. பிஷாரடி வைத்தியன் சஸ்த்ரக்கிரியையிலே ஒரு விரலை மட்டும் கால்லே எடுத்து வச்சுடுவான்.

மத்ததை என்ன செய்ய ?

வெடிக்காரன் விடாமல் கேட்டான்.

பூஜை முடிந்து வந்து யோசிக்கலாம் அதை.

எம்பிராந்திரி கிளம்பிப் போனார். வெடிக்காரன் விந்தி விந்தி நடந்தபடி நாளம்பலத்தை விட்டு இறங்கி வெடிவழிபாடு ஸ்தலத்துக்குப் போனதைப் பார்த்தபடி நமஸ்கார மண்டபத்தில் நுழைந்தாள் பகவதி. தரையில் தேகம் படக் காலை மடித்து நமஸ்காரம் செய்தாள்.

நாணிக்குட்டி இன்னும் பிரதிக்ஷணம் முடிக்கவில்லை. அவள் இருபத்தோரு சுற்று வைப்பது வழக்கம். அது முடிய இன்னும் கொஞ்சம் நாழிகையாகலாம். அதுவரை கூத்தம்பலத்தின் ஓரத்தில் உட்கார்ந்து சாக்கியார் கூத்துக்கான முஸ்தீபுகளைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

அவள் வலிய பலிக்கல் பக்கம் வந்தபோது உடம்பில் பாசி வாடை வீச ஒரு தமிழ் பிராமண ஸ்திரி நின்று கொண்டிருந்தாள்.

பகவதிக்குட்டி, புண்ணியமாப் போறது. எனக்குக் கொஞ்சம் அன்னம் கொடுக்கச் சொல்லு. பசிக்கறது.

இவளுக்கு எப்படி என் பெயர் தெரிந்தது ?

பகவதிக்குட்டி ஆச்சரியப்பட்டுப் பார்க்க அந்தப் பெண் விளக்குமாட வெங்கல விளக்கு வெளிச்சத்தில் உருவம் மங்கிப் போய் ஒரே தட்டையாகத் தெரிந்தாள்.

பிரேத ரூபமோ ?

ஆமா, நான் போய்ச் சேர்ந்து வருஷம் முன்னூறாச்சு. உங்க ஆத்துக்காரர் அரசூர்ச் சங்கரய்யர் மன்னி. அவரோட தமையன் சாமிநாத ஸ்ரெளதிகளோட, சாமாவோட, சாமாத் தடியனோட வப்பாட்டி. விரிச்சுண்டு படுத்தவ.

அவள் சிரிக்க ஆரம்பிக்க, பகவதிக்குட்டி தலையைக் கையில் பிடித்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்தாள்.

விளக்குமாடத்திற்குக் கீழே இருந்து ஒரு செப்புச் சம்புடம் அவள் இருந்த திசைக்கு நகர்ந்து வந்தபடி இருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:00 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் நாற்பது


எடோ தொரையப்பா, புண்ணியமாப் போறது உனக்கு. கொஞ்சம் பதுக்கெப் பேசு. பகவதி உடம்பு சுகவீனமாப் படுத்துப் பத்து நாளாச்சு. இப்பத்தான் கொஞ்சம் தீர்க்கமா உறங்கறா. பிஷாரடி வைத்தியன் மருந்து வேலை செய்யறது போல இருக்கு.

குப்புசாமி அய்யன் தன் தம்பி துரைசாமி அய்யனை இரண்டு கரமும் உயர்த்திச் சேவித்தபடி சொன்னான்.

ஆமா. இப்ப இதொண்ணும் பேச வேண்டாம்.காணியிலே எங்காத்துக்காரருக்கும் பாத்யதை உண்டு. அவர் இல்லாம அதைப் பத்திப் பேச்சு அனாவசியம். அவரும் வரட்டும். ஆலப்பாட்டுலேருந்து என் தமையன்மாரும் வரட்டும். அதுக்கப்புறம் இதைப் பேசுங்கோ.

துரைசாமி நிறுத்தினாலும், கிட்டாவய்யன் பெண்டாட்டி சிநேகாம்பாள் குரல் தாழ்த்தி முணுமுணுப்பாகக் கோரிக்கை விடுவதை நிறுத்தவில்லை.

அவள் நெல் மூட்டையும், அரிசிப் பொரியும், வெல்லமும் சாக்கில் கட்டி வைத்த அறைக் கதவை ஜாக்கிரதையாக மூடிவிட்டுத் தான் பேச ஆரம்பித்திருந்தாள்.

உள்ளே மூங்கில்ப்பாயால் ஒரு தடுப்பு ஏற்பட்டு இருந்தது. மூட்டை முடிச்சாக அரிசியும், புளியும், பருப்பும் ஒரு பக்கம். கூடவே பீங்கான் பரணிகளில் வெளிச்செண்ணெய். கொட்டானில் உப்பு. உத்திரத்திலிருந்து கட்டிக் காயவிட்ட குலையாக மிளகு. இன்னொரு பக்கம், முகத்தில் ரத்தம் போனதுபோல் வெளிறி, சுருண்டு படுத்திருந்த பகவதிக் குட்டி.

பகவதிக் குட்டிக்கு நினைத்துக் கொண்டதுபோல் விழிப்பு வருகிறது. எழுந்து உட்கார்ந்து பசிக்கிறது என்கிறாள். பருப்பும் சாதமுமாகப் பிசைந்தெடுத்தபடி விசாலாட்சி மன்னியோ அக்கா அலமேலுவோ ஓட்ட ஓட்டமாக வருவதற்குள் திரும்பத் தூங்கிப் போகிறள். அது அரைகுறை உறக்கமாக அப்படியும் இப்படியும் பிரண்டபடி கிடக்கிறாள்.

பத்து நாளாக ஆகாரம் கொள்ளாமல், மல மூத்திரம் கழிக்காமல், குளியும் நின்றுபோய் அந்தச் சின்னப் பெண் படுகிற துன்பம் வீட்டில் யாருக்கும் சகித்துக் கொள்ளக்கூடியதாக இல்லை.

சனிக்கிழமை ராத்திரி கூத்தம்பலம் பக்கத்தில் ஜன்னி கண்டது போல் பிதற்றிக் கொண்டு தேகம் விதிர்த்து நடுங்கக் கர்ப்பத்தில் சிசுவாக முழங்கால் தவடைப் பக்கம் உயர மரவட்டை போல் சுருண்டும் கிடந்தவளை கட்டிலில் படுக்க வைத்தபடிக்குத் தூக்கி வந்த ஊர்வலம் ஆலப்பாட்டு வயசனை வெடிவழிபாட்டுப் பரம்பிலிருந்து கொண்டு வந்த மாதிரித்தான் இருந்தது.

ஆனாலும் இப்போது இளைய எம்பிராந்திரி வரவில்லை. அவன் இடத்தில் வலிய எம்பிராந்திரி. காலை விந்தி விந்தி வெடிவழிபாட்டுக்காரனும் தீ கொளுத்திப் பிடித்த காய்ந்த இலைச்சுருளைப் பிடித்தபடி வந்தான்.

பகவதிக்குட்டியிடம் பிரசாதம் யாசித்த குருக்கள் பெண் கையை நீட்டும்போதே பகவதி மருண்டு போனாள். அம்மே நாராயணாவும் தேவி நாராயணாவும் வாய்க்குள் புரள மறுக்க, அவள் கையில் இலைத் தொன்னையில் இருந்த பிரசாதத்தை அப்படியே சாமிநாதனோடு கலந்த பெண்டிடம் நீட்டியபோது, ஊர்ந்து வந்த சம்புடம் அவள் காலுக்கு அருகே வந்து திறந்து கொண்டது.

அதன் உள்ளே இருந்து ஐந்து விரலோடு முளைத்து இருந்த பாதம் மேலே எழும்பி வந்து எனக்கு, எனக்கு என்று குருக்கள் பெண்ணை உதைத்துத் தள்ளியதைப் பார்த்த பகவதி உச்சந்தலையில் முடி சிலிர்த்து நிற்கப் பயத்தில் உறைந்துபோய் இலைத் தொன்னையைக் கீழே நழுவவிட்டாள்.

முன்னூறு வருடம் முன்னால் பஞ்சகாலத்தில் உயிரை விட்ட குருக்கள் பெண்ணும், தேவி க்ஷேத்ர வெடிவழிபாட்டுக்காரன் காலிலிருந்து துண்டிக்கப்பட்டு, பிஷாரடி வைத்தியனும், எம்பிராந்திரியும் கொடுத்த ஆலோசனைகள் கொண்டு போஷிக்கப்பட்டு ஒன்றுக்கு ஐந்தாக விரல் வளர்ந்த மனிதப் பாதமும் அங்கே ஒரு பிடி சோற்றுக்காக அடித்துக் கொண்டதைக் காண பகவதி தவிர யாரும் இல்லாமல் போனார்கள்.

வெறும் மாமிசப் பிண்டம் நீ. உன்னோட உடமைஸ்தன் அங்கே வெடி வெடிச்சுண்டு உக்காந்திருக்கான். நாளைக்கே மருத்துவன் ஒட்ட வச்சா அந்தப் புழுத்த உடம்புலே போய் ஒட்டிக்கப்போறே. இப்ப என்னத்துக்கு உனக்கு சாதமும் எழவும் எல்லாம் ?

குருக்கள் பெண், வெடிக்காரன் கால்விரல்கள் உறுதியாகப் பிடித்திருந்த இலைத் தொன்னையைப் பிடுங்கப் பார்த்தாள். ஆவி ரூபமான அவளுடைய பலத்தால் அந்த மனுஷ விரலிலிருந்து பிடுங்க முடியாத இலைத்தொன்னை தரையில் உருண்டது. நைவேத்தியச் சோற்றைச் சம்புடத்துக்குள் கவிழ்த்துக் கொள்ள அந்த விரல்கள் மும்முரமாக முயற்சி செய்தபடிக்கு இருந்தன. அது முடியாமல் போகவே அவை சம்படத்துக்கு வெளியே தைலமும் தண்ணீரும் மினுமினுக்க வெளிக்கிளம்பி வந்தன.

பகவதி, நீயே சொல்லுடி குழந்தே. எனக்குப் பசிக்கறதுன்னு உன்னை வந்து யாசிச்சா, இந்தப் பிண்டத்துக்கு என்ன வந்தது ? நான் யாருடி ? உன்னோட ஓரகத்தி இல்லியா ? சாமா இல்லாமப் போனா என்ன ? நானும்தான் இப்படி பிரேத ரூபமா, ஆவி ரூபமா அலஞ்சு பிரியத்துக்கும் நாத்தச் சோத்துக்கும் யாசிச்சபடி அங்கேயும் இங்கேயுமா அல்லாடினா என்ன ? பந்தம் விட்டுப் போகுமோடி பொண்ணே ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:01 pm

அவள் ஈன சுவரத்தில் முறையிடக் கூத்தம்பலத்தில் சாக்கியார் சுலோகம் சொல்லி நாலு திசையும் நமஸ்கரித்துக் கதை கேட்க வரும்படி தேவதைகளையும், மனுஷர்களையும் விளித்துக் கொண்டிருந்தார்.

ஐயோ ஐயோ இந்த தர்த்திரப் பிண்டம் இப்படி கைக்கு எட்டினது வாய்க்கும் வயத்துக்கும் எட்டாமப் பிடுங்கிண்டு போறதே. பலிக்கல் தேவதைகளே, அரசூர் குடும்பத்து மூத்த பெண்டுகளே, பகவதி, என் பொன்னு பகவதிக் கொழந்தே. கேட்பாரில்லியா ? சாமா, அட சாமிநாதா. தேவடியாள் மகனே. பகல்லே விரிச்சுக் கிடத்தி என்னை அனுபவிச்சியேடா. இப்பப் பசிக்கறது. ஒரு வாய் சோத்துக்கு வழியில்லாம அல்லாட விட்டுட்டுப் போய்ட்டியேடா. நெருப்பிலே பொசுங்கின உன் லிங்கம் பஸ்பமான இடத்துலே ஆயிரம் நூறு எருக்கஞ்செடியும் நெருஞ்சி முள்ளும் முளைச்சு நாசமாகட்டும். உன்னோட அரசூர் வம்சமே விருத்தி கெட்டுப் போகட்டும்.

குருக்கள்பெண் அரற்ற, இருட்டுக்குள் பிரசாதம் வைத்த இலைத் தொன்னையை இழுத்தபடி ஓடிய வெடிக்காரன் பாதத்தையே பார்த்தபடி பகவதி படிக்கல்லைப் பிடித்தபடி நின்றபோது, பெண்டுகள் ஒரே குரலாகப் பாடுகிற சத்தம்.

இன்னும் பத்து நூறு தலைமுறை அரசூர் வம்சம் செழித்துச் சண்டையும் சச்சரவும் சமாதானமும் ரோகமும் ஆரோக்கியமும் ஆசையும் நிராசையும் போகமும் யோகமுமாக மனுஷ ஜாதி எல்லாம் போல நீண்டு போகும் என்று பாடின பாட்டு அது. நலங்குப் பாட்டாக ஊஞ்சலோடு மேலும் கீழும் உயர்ந்தும் தாழ்ந்தும் படிந்த அந்தக் குரல் பகவதிக்குட்டி கேட்டதுதான். அவளைப் பெண் பார்க்க வந்த அரசூர்க் கூட்டத்தில் வாயைத் துணியால் கட்டிவைத்த ஒரு பழுத்த சுமங்கலி கூடத்துச் சுவரில் சாய்ந்தபடி, வாய்க்கட்டை நெகிழ்த்தியபடிக்குப் பாடிய குரல் அது.

எனக்கு வேணும். பசி பிராணன் போறது. உடம்பு இல்லாட்டாலும் பிராணன் இருக்கு. உனக்கு உடம்பு தான் இருக்கு. பிராணன் இல்லே. எதுக்கோசரம் இந்தச் சோறு ? மண்ணுலே போட்டுப் புரட்டாதே. வேணாம். கொடுத்துடு எனக்கு.

குருக்கள் பெண் அழுதபடிக்கே போக, பகவதி மயங்கிப் போய் தட்டுத்தடுமாறி பலிக்கல் விளக்கின் நிழல் நீண்ட கல்படவில் நடந்து கூத்தம்பல முன்னால் வெறுந்தரையில் மயங்கி விழுந்தாள்.

இந்தப் பத்து நாளாக அவள் குருக்கள் பெண்ணையும், வெடிக்காரன் காலையும் தொடர்ந்தபடிக்கு இருக்கிறாள். மண்ணில் விழுந்த பிரசாதம் மண்ணோடு போனது. வெடிக்காரன் கால் விரலை எடுத்துக் கடிக்க முயன்று வாயில் ரத்தச் சுவடும் வெளிச்செண்ணையும் திளங்கச் சிரித்தக் குருக்கள் பெண்ணின் இடுப்புக்குள் அந்த விரல்கள் புக முயற்சி செய்ய, அவள் சாமா வேண்டாம் கேளுடா அங்கே எல்லாம் காலை வைக்காதே. நீ சாமா இல்லே. அந்நிய புருஷன். படுபாவி. சாமாவோட தேகச் சூடு எனக்குத் தெரியும். வெறும் பிண்டம். வெத்துக் கால் நீ. அடி குழந்தே பகவதி, வந்து இந்தச் சனியனை எடுத்து அந்தாண்டை எறிடா. பகவதி, பகவதி ஏந்திருடி கொழந்தே. பசிக்கறதுடா. புண்ணியமாப் போறது உனக்கு. எனக்காகக் கொஞ்சம் சாப்பிடு. நான் வேணுமானா யாசிக்கறேன். விசாலாட்சி மன்னி, சிநேகா மன்னி, லட்சுமி அக்கா, அலமேலு அக்கா. பருப்புஞ் சாதம் கொண்டாங்கோ. நெய் குத்தி நாலு கவளம் மாத்ரம் போதும். ஜலத்தைக் குடிச்சுட்டுப் படுத்துக்கறேன். பருப்பெல்லாம் இங்கே தான், சாக்கு மறைப்புக்கு அந்தாண்ட மூட்டை மூட்டையா அடுக்கி வச்சிருக்கான் துரைசாமி அய்யன். விசாலாச்சி மன்னி, டா சாலாச்சி, இங்கே தாண்டி படுத்திண்டே அன்னிக்கு ஆத்துக்காரனோட. நாந்தான் எல்லாம் பாத்தேனே. வயசனைத் தூக்கிண்டு வந்து முழுசும் பாக்க விடாமா. போறது. இப்ப சாதம் கொண்டாடி. க்ஷேத்ரத்துலே தேவி மாதிரி இருக்கே விசாலாட்சி. விசாலி. சாலாச்சி. சாலு. சாலும்மா. துரைசாமி ஐயன் மாதிரிக் கொஞ்சறேன். கெஞ்சறேன். பசிக்கறதுடா.

குருக்கள் பெண் சொல்வதில் நாலு வார்த்தையோ மூணோ ஈன ஸ்வரத்தில் பகவதி வாயிலிருந்து எழ, அது சாதம், சாதம், பருப்பும் நெய்யும் குழையப் பிசஞ்சு சாதம் என்று மட்டும் வருகிறது.

ஏண்ணா, பிஷாரடி வைத்தியர் என்ன சொல்றார் ? பகவதிக்கு சொஸ்தமாகல்லேன்னா ஆலப்புழைக்கு காளை வண்டி வச்சுப் பாதிரி வைத்தியன் கிட்டேக் கூட்டிண்டு போயிடலாமே ? பகவதி கல்யாணம் நெருங்கி வர நேரத்துலே இது என்ன கஷ்டம் பாரு.

துரைசாமி தமையன் குப்புசாமியிடம் சொன்னான்.

இன்னியோடு இது சொஸ்தமாயிடும்னார்டா பிஷாரடி. மருந்தை விடாமக் கொடுத்தாறதே. வைத்தியன் மேலே நம்பிக்கை இல்லாட்ட எப்படிக் குணமாகும் சொல்லு.

தமையன் குரல் தாழ்த்திப் பேசியதற்குத் தலையாட்டினான் துரைசாமி அய்யன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:02 pm

காணி விற்பதைப் பற்றிப் பேச அவன் தான் குப்புசாமி அய்யனைக் கூப்பிட்டது. இனியும் நேரம் கடத்தினால் அப்புறம் நாம் எல்லோரும் சேர்ந்து உட்காரும் நேரம் இப்போதைக்குக் கிட்டாது என்று சகோதரிமார்களின் கணவர்களான ராமேந்திரனும், சோமநாதனும் கூடவே சொன்னார்கள்.

அவர் இதோ வந்துடுவார். செத்தப் பொறுங்கோ.

சிநேகாம்பாள் இதையே பேசினபடிக்கு இருக்கிறாள். கிட்டாவய்யன் காலையிலேயே கிளம்பிப் போயிருக்கிறான். இன்னும் வந்தபடியாக இல்லை.

எங்கே போனான் அவன் ? இப்போ தேகண்டமும் இல்லியே எங்கேயும் ?

துரைசாமியும், லட்சுமியும், அலமேலுவும் அவளைத் திரும்பத் திரும்பக் கேட்டாலும் தெரியாது என்றே சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவளுக்குத் தெரியும் கிட்டாவய்யன் போன இடம்.

சாவக்காட்டு வேதக்காரப் பிராமணனைக் கண்டு வரப் போயிருக்கிறான் அவன். பணம் வேண்டி இருக்கிறது. பூர்வீகச் சொத்தான காணி விற்றால் முழுசாக விற்கச் சொல்லித் தன் பங்கைக் கேட்பான் அவன்.

மேலும், சாவக்காட்டுக் காரனிடம் சொல்லி வைத்திருக்கிறான். ரெண்டு வட்டி என்பது அதிகம் தான். ஆனாலும் அடமானம் வைக்கக் கிட்டனுக்குப் பிடி உடைந்த இருப்பச் சட்டியைத் தவிர வேறே என்ன இருக்கு ? குழந்தைகள் காதிலும், சிநேகாம்பாள் மூக்கிலும் கழுத்திலும் ஒட்டிக் கொண்டிருக்கும் இக்கிணியூண்டு தங்கத்தைப் பறித்தெடுக்க அவனுக்கு மனம் வரவில்லை.

வேறே வேதமானாக்க என்ன ? நீரும் நானும் ஒண்ணுதானே. நீர் எனக்குப் பிடி சாதம் தராமல் சவட்டினாலும், இன்னிக்கு என் வீட்டு வாசல்லே வந்து நின்னு கும்புட்டுக் கேட்டாலும் நான் எப்பவும் அதே தான் சொல்றேன். தரேனய்யா. எம்புட்டு துட்டு வேணும், கேளும்.

சாவக்காட்டான் புதிதாகக் கருத்த தலைமுடியும், உடம்பில் வழக்கத்தைவிடச் சுருக்கமும் தளர்ச்சியும் அரைக்கட்டில் பட்டுச் சோமனும் உத்தரியமுமாக உட்கார்ந்து கிட்டனைப் பார்த்துக் கேட்டது முந்தாநாள்.

ஸ்வாமின், நான் ஜாகை மாத்திண்டு அம்பலப்புழைக்கோ கொல்லத்துக்கோ போய் சாப்பாட்டுக் கடை போடறதா உத்தேசம். தேகண்டத்துக்கு வேஷ்டியை மடிச்சுக் கட்டிண்டு அலைஞ்சது எல்லாம் போறும். உம்ம கடனுக்கு ஒவ்வொரு அமாவாசைக்கும் வட்டியும், நாலு வருஷத்துலே கொஞ்சம் கொஞ்சமா முதலையும் அடைச்சுடறேன்.

கிட்டாவய்யன் ஆகாசப் பார்வையில் சொப்னத்தில் லயித்தவனாக மார்புக்குக் குறுக்காகக் கையைக் கட்டியபடி சொல்ல, சாவக்காட்டான் வெற்றிலை மென்று கொண்டு தலையை ஆட்டியபடி அவனை வெட்டுக்கிளியைப் போல் வேடிக்கை பார்த்தவண்ணம் கேட்டுக் கொண்டிருந்தான்.

ஓலப் புரை. தடுக்கு. இலைக்கட்டு. சுவியனும், தோசையும், புட்டும் அப்பமும் இலையடையும் உண்டாக்குகிற உத்தியோகம். உண்டாக்கி உண்டாக்கி செப்புப் பாத்திரத்தில் வைத்துப் படியேறி வருகிறவன் எல்லோருக்கும் யார் என்ன என்ற நதிமூலம் ரிஷிமூலம் தன மூலம் ஒண்ணும் விசாரிக்காமல் மடியில் முடிந்துவைத்த சஞ்சியைக் குறிவைத்துப் பரிமாறிக் காசு சேர்ப்பான் கிட்டன். ஒரு சக்கரமும், இரண்டு சக்கரமும் அரை அணாவும், காலணாவுமாக எந்தப் பேதமும் இல்லை காசுக்கு. அது யார் இடுப்பில் இருந்து இறங்கினாலும், என்ன வாடை அடித்தாலும் இஷ்டமாக எல்லாம் வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொள்வான் அவன். கிரஹம் உயரும். சிநேகாம்பாளும், குழந்தைகளுமாகக் குடும்பம் முழுக்க செழிப்பாக வரும். புத்திரன் பிறப்பான். பட்டும் பீதாம்பரமுமாக அவனுக்கு குருவாயூரில் அன்னப் பிரசன்னம்.

ஓய் கிட்டாவய்யர். நீர் போய்ட்டு வ்யாழனாழ்ச்சை வந்துடும். நான் என்ன தொகை தரலாம்னு யோஜிச்சு வைக்கறேன்.

இன்றைக்குத் தான் வியாழக்கிழமை. சாவக்காட்டு வேதக்காரன் சொன்னபடிக்கு விடிகாலையிலேயே கிட்டாவய்யன் அவனைத் தேடிப் போயிருக்கிறான். அவன் வந்தபிறகு காணி பற்றியும் கல்யாணம் பற்றியும் எல்லாரும் கூடிப் பேசி முடிவுக்கு வரட்டும். கிட்டாவும் பேசுவான்.

லட்சுமிக்கும், அலமேலுவுக்கும், இப்போது பகவதிக்கும் வரன் திகையத் திகையச் செலவுக்கும், சொர்ணம் வாங்கவும், சீர் வைக்கவுமாகப் பணம் புரட்டக் கிள்ளிக் கிள்ளி காணியை விற்றாகிறது. இன்னும் இருக்கப்பட்டதும் பக்கத்திலே நிலம் போக்யதை கொண்டவர்களால் அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. நாளைக்கே அது கண்ணில் காணாமல் மறைந்து விடலாம். அதற்குள் இருக்கப்பட்ட முழுசையும் விற்றுத் தீர்த்துக் குப்புசாமி அய்யனும், துரைசாமி, கிட்டாவய்யன்மாரும் பிரித்து எடுத்துக் கொண்டால் எல்லோருக்கும் நல்லதாகும்.

இந்தக் கூட்டுக் குடித்தனம் பற்றிக் கூட யோசிக்க வேண்டியிருக்கிறது. எல்லாம் பேசி முடித்துவிடலாம். எல்லோரும் வீட்டில் இருக்கப்பட்ட தினம். கிட்டாவய்யன் வந்துவிடுவான்.

ஜல் ஜல் என்று கொலுசுச் சத்தம்.

பகவதிக் குட்டி கூடத்தில் நுழைந்தாள். இருட்டு விலகினது போல் அவள் முகம் தெளிவாக இருந்தது. இப்போது தான் குளித்த நேர்த்தியில் அவள் ஈரமுடி தோளில் தவழ்ந்தபடி இருக்க, அவள் விசாலாட்சி மன்னியைப் பார்த்துப் பூ மலர்ந்ததுபோல் சிரித்தாள்.

சாலாச்சி மன்னி. எனக்குப் பசிக்கறது. நிஜமாவே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:03 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் நாற்பத்தொன்று



இந்தப் பக்கம் தச்சன் இழைப்புளியை வைத்து ஏதோ மரப் பலகையை இழைத்து இழைத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறான். அந்தப் பக்கம் கருமான் ஒருத்தன் மண்ணில் குழித்து நெருப்பு மூட்டி இரும்புக் கம்பியை அடித்து நீட்டிக் கொண்டிருக்கிறான். குளத்தங்கரையில் வெளிக்கு இருந்து விட்டுப் பிருஷ்டம் கழுவ நடக்கிறவன் போல் அவனவன் இடுப்பு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சட்டமாக அங்கேயும் இங்கேயும் நடந்து கொண்டிருக்கிறான்.

இது என்ன அரண்மனையா இல்லை சாவடிப் பக்கத்து முடுக்குச் சந்தா என்று ராஜாவுக்கு விளங்கவில்லை.

போதாக்குறைக்கு ஜோசியக்கார அய்யர் வேறே அரண்மனைத் தோட்டத்தில் சச்சதுரமான ஒரு பெரிய தகட்டைக் கோபுரம் போல மரமேடையில் நடுவிலே நிறுத்தி அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் சாய்த்துப் பிடித்து ஏதோ அளவெடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த அய்யன் வேலையை முடிக்கிற வரை நாங்கள் வருவதாக இல்லை. அவன் பரீட்சை செய்வதற்காக யந்திரத்தை அப்படியும் இப்படியும் திருப்பும்போது எங்கள்மேல் பாலைவனைப் பிரதேசக் காற்று பட்டதுபோல் வெப்பமேறி அடித்து இம்சை செய்கிறது என்று சொல்லி முன்னோர்கள் இந்தப் பக்கம் வருவதையே தற்காலிகமாகத் தள்ளிப் போட்டிருக்கிறார்கள்.

இந்தக் களேபரம் போதாதென்று பக்கத்தில் எரிந்து போன புகையிலைப் பார்ப்பான் வீட்டைத் திரும்பக் கட்ட ஆரம்பித்து முடிக்கிற நிலையில் இருக்கிறார்கள். பால் போல் வெளுத்த சுண்ணாம்பை வெளிச்சுவர் முழுக்கப் பூசி வைக்க அது இடிந்து போன அரன்மனையைப் பார்த்துக் கிண்டலாகச் சிரிக்கிறது.

எல்லாம் அந்த வெள்ளைப்பாண்டுக் கிழட்டுத் துரை வந்து போன பின்னால் நடக்கிற விஷயம். சிம்மாசனத்தில் உட்கார்ந்து அந்தப் பக்கம் இந்தப் பக்கம் தீர விசாரித்து நீதி சாஸ்திரம் இம்மியும் பிசகாது தீர்ப்பு சொல்கிற பட்டி விக்கிரமாதித்யன் என்று நினைப்பு வெள்ளைத் தேவடியாள் மகனுக்கு. பட்டணத்துப் பெரிய துரை ஜாமான் முடிபோல எகிறிக்கொண்டு கிளம்பி வந்து இவன் விதித்துப் போனபடிக்குத்தான் சர்வமும் நடந்து கொண்டிருக்கிறது.

புகையிலைக்கடை அய்யன் வீடு எரிந்து சாம்பலாகப் போனதற்கு ராஜா தான் ஏதாவது நஷ்ட ஈடு தரவேண்டும் என்று அந்த விதைக்கொட்டை வீங்கினவன் உத்தரவு செய்துபோன ரெண்டு நாளிலேயே ஆரம்பமாகி விட்டது எல்லாத் துன்பமும். எழவெடுத்தவன் நீளமாகக் கம்பளிப் பூச்சி நெளிகிறதுபோல் கையொப்பம் இட்டு பழுப்புக் காகிதத்தில் துரைத்தனப் பாஷையில் எழுதின லிகிதத்தைக் குதிரையிலே வந்த ஒருத்தன் கொடுத்துவிட்டு ராஜாவின் இலச்சினையை வாங்கிக் கொண்டு புறப்பட்டுப் போன ராகுகாலப் பொழுது அது.

ராஜா அதை வாங்கி மசி வாடையையும் காகித வாடையையும் முகர்ந்து விட்டுக் காரியஸ்தனிடம் கொடுத்துப் பத்திரமாக வைக்கச் சொன்னதோடு காரியம் முடிந்ததாக நினைத்தது மகாப் பெரிய தப்பு என்று அடுத்த நாளே பட்டது.

குதிரையில் லொங்கு லொங்கென்று வந்த பேய்ப்பயல் புகையிலைக்கடை அய்யன் வீட்டிலும் நுழைந்து துரை எழுதின லிகிதத்தின் இன்னொரு பிரதியை விநியோகித்துவிட்டுப் போயிருக்கிறான். அய்யனும் வெகு காரியமாக அதைப் பூணூலை விட உசத்தியானதாகக் கையில் பற்றிக்கொண்டு பந்து மித்திரர்களுக்கு ஆதியோடந்தமாக எடுத்தோத அவர்களும் கிளம்பி காலை வெய்யில் ஏறுவதற்குள் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்கள்.

ராஜா வந்தவர்களை உட்காரச் சொல்லிக் கையைக் காட்டினார். அவர் அப்போது அரண்மனை முன் மண்டபத்தில் இருந்தார், காரியஸ்தன் சினைப்பூனை மழைக்காலத்தில் கத்துகிறதுபோல் சங்கீதமான குரலில் மாசாந்திர வரவு செலவை வாசித்துக் கொண்டிருந்தான். அதிலே பாதிக் காதும், காலைப் பசியாறிய உறக்கமுமாக உட்கார்ந்திருந்தவரை வந்த கூட்டம் எழுப்பிவிட்டது.

யாரங்கே ஆசனம் கொண்டு வந்து போடுங்கள்.

ராஜா நேரே பார்த்துக் கொண்டு உத்தரவு போட்டார் வழக்கப்படிக்கு. பகலில் அரண்மனை சேவகத்து வருகிற உத்தியோகஸ்தர்கள் இன்று யாரும் வரவில்லை. அவர்கள் வாரச் சந்தையில் நெத்திலிக் கருவாடோ, மாம்பழமோ விற்கப் போயிருக்கிறார்கள் என்பது ராஜாவுக்குத் தெரிந்த சங்கதிதான். அரண்மனை வருமானம் போதாத காரணத்தால், புதன்கிழமை வாரச்சந்தையில் வியாபாரிகளுக்குக் கூடமாட ஒத்தாசை செய்து அவர்கள் ரெண்டு காசு பார்க்கிறதாகத் தெரிந்தபோது ராஜாவுக்கு விசனமாகத்தான் இருந்தது. என்ன செய்ய ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:05 pm

இந்த அய்யன்மார் எல்லாரும் வாரச் சந்தைக்கு மாம்பழமோ கருவாடோ முகர்ந்து பார்த்து வாங்கப் போகாமல் இங்கே வந்து உசிரை வாங்க வேணுமா என்ன ?

காரியஸ்தன் உள்ளே போய் ஆசனம் ஆசனம் என்று ஆசனவாய் தெரிக்கக் கத்த, அப்பின சாந்துப் பொட்டும் தலைமுடியும் எண்ணெய்ப் பிசுக்குமாக இன்னும் இரண்டு குரிச்சி அந்தப்புரத்தில் இருந்து வந்து சேர்ந்தது. ராஜா கையைக் காட்ட, வந்ததில் ஒருத்தர் இருக்கையின் நுனியில் தொடுக்கி வைத்ததுபோல் உட்கார்ந்தார்.

நான் சுப்பிரமணிய அய்யர்வாளோட நெருங்கின பந்து. பட்டணத்துலே கோர்ட்டுக் கச்சேரியிலே உத்தியோகம் பார்த்து இப்போ வயசாச்சோன்னோ ஊரோட இருக்கேன். என் புத்ரன் அங்கே போர்ட் செஞ்சார்ஜ் கோட்டையிலே கிளார்க்கா இருக்கான்.

அந்த பிராமணன் நீளமாகப் பேசிக்கொண்டே போனான். ராஜாவுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது.

கோர்ட்டு, கச்சேரி, கோட்டை, கிளார்க் என்று நூதன விஷயம் ஏகத்துக்கு எடுத்துவிட்டு ராஜாவை போடா புண்ணாக்கு என்கிறான். இவன் துரைத்தனத்தோடு நெருங்கினவனாக இருந்து தொலைப்பவனோ என்னவோ. புகையிலை அய்யன் இவனை அனுப்பி வைத்ததே அரண்மனையை எழுதி வாங்கிக் கொண்டு போகத்தான் போல் இருக்கிறது.

கூட வந்த ஒரு கருத்த பார்ப்பான் இன்னொரு நாற்காலியில் இருந்தபடிக்கு கச்சேரி அய்யன் காதில் ஏதோ சொன்னான். இன்னொரு மனுஷன் திருநீறு வாசனை அடிக்க நாலு அடி தள்ளி நின்றபடி இருந்தான். பார்த்தால் ஜோசியக்கார அய்யனுக்குத் தாயாதி பங்காளி போல் இருக்கப்பட்டவன். குடுமியும் ஜோசியக்காரன் சிகை போல் நீளமாக இருக்கிறது.

இது சுப்பிரமணிய அய்யர்வாளோட அம்மாஞ்சி. கரம்பங்காடு கிருஷ்ணையர். ராமாவரத்துலே மிராசுதார். காவேரிக்கரை மனுஷர். சுகஜீவனம். அவர் சுந்தர கனபாடிகள். அய்யர்வாளுக்கு அத்தான் முறை.

சிவத்தவன், கருத்தவனை இன்னார் என்று சொல்ல, கருத்த பார்ப்பான் ராஜாவுக்கு வெகு மரியாதையாக நமஸ்காரம் செய்தான். ராஜா முகம்மதிய சுல்த்தான் போல் பொதுவாக ஒரு சலாம் வைத்தார்.

நின்றபடிக்கு இருந்த அத்தான் அய்யன் பவதி என்று ஏதோ சமஸ்கிருத மந்திரத்தை உரக்கச் சொல்லி எல்லோரையும் பொதுவாக ஆசிர்வதிக்க, ராஜாவுக்கு மெய் சிலிர்த்துப் போனது. எழுந்து நின்று அவன் காலைத் தொடக் குனிந்தார்.

ஹே ராஜன், அது எதுவும் வேண்டாம். நீர் எஜமான். பிரஜைகளைக் காருண்யத்தோடு காத்து சம்ரட்சிக்கும் க்ஷத்ரியன்.

இந்த அய்யனைச் சரிக்கட்டினால் இவர்கள் வந்த விஷயம் சுலபமாக முடிந்து விடக்கூடும் என்று ராஜாவுக்குப் பட்டது.

நாலு வேதம், சாஸ்திரம் எல்லாம் தவறாம நித்யமும் ஓதற பெரியவாள் நிக்கறீங்களே. நானும் நின்னுண்டுடறேன்.

ராஜா முடிந்தவரைக்கும் சிரத்தையோடு பார்ப்பனக் கொச்சையைப் பேச, காரியஸ்தன் சிரிப்பை அடக்கவோ என்னவோ அந்தாண்டை போனான்.

இருங்கள் என்று தலையை அசைத்து, கனபாடிகள் பத்மாசனம் இட்டு நட்ட நடுக்கூடத்தில் உட்கார்ந்தார். ராஜன் நீர் உம் ஆசனத்தில் இரும் என்று அவர் சொல்ல, தட்ட முடியாமல் ராஜா தன் இடத்தில் திரும்பவும் அமர்ந்தார்.

என்ன விஷயமாகப் பார்க்க வந்திருக்கேள் ?

ஜமீந்தார்வாள், ஹார்ட்டன் துரை அன்னைக்கு இங்கே வந்து ஆக்ஞை பிறப்பித்ததை தஸ்தாவேஜாக்கி அனுப்பியிருக்கார். உங்களுக்கும் வந்து சேர்ந்திருக்குமே.

வந்தது என்றான் காரியஸ்தன் கனகுஷியாக.

அவன் நாக்கை அறுத்துப் போட வேண்டும். ஊத்தை வாயைத் திறக்கச் சொல்லி யார் கேட்டது ?

ராஜா முகத்தை வெகு சோகமாக வைத்துக்கொண்டு கனபாடிகளைப் பார்த்தார்.

என்னத்துக்கு விசனம் ? சொல்லும் என்கிறதுபோல் ஒரு வினாடி ராஜாவைப் பதிலுக்குப் பார்த்துவிட்டு வேறு என்ன செய்வது என்று தெரியாத கனபாடிகள் யோகத்தில் அமர்ந்ததுபோல் கண்ணை மூடிக்கொண்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:06 pm

நான் என்ன சொல்ல ஸ்வாமிகளே. ஜமீனில் நிதிநிலைமை சரியில்லையென்று ஊருக்கே உலகத்துக்கே தெரிஞ்ச சங்கதிதானே ? வசூலிக்கிற வரியெல்லாம் வெள்ளைக்காரனுக்குத்தான். ஏதோ கொஞ்சம் கிள்ளிக் கொடுக்கிறதால் இங்கத்திய நடவடிக்கைகள் எல்லாம் பொன்னை வச்ச இடத்தில் பூவை வச்சதுபோல் அங்கொண்ணும் இங்கொண்ணுமா நடந்தேறி வருது.

ராஜா பலத்த பீடிகையோடு ஆரம்பித்தார். எதிர்பார்த்து வந்தவர்கள் போல் அவர்கள் அனுதாபத்தோடு தலையை ஆட்டினார்கள்.

இப்படியே இன்னும் கொஞ்சம் தரித்திரப்பாட்டு பாடி, நாலு இளநீர் வெட்டிக் கொடுத்து அனுப்பிவிட வேண்டியதுதான். ரொம்பப் போனால், ஜோசியக்கார அய்யனுக்குக் கொடுத்ததுபோல் ஒரு வராகன் அழலாம். அந்த அத்தான் அய்யனுக்கு வேணுமானால் இன்னொன்று இனாமாகத் தரலாம். தானமும் தட்சிணையுமாகக் கொடுத்துக் கொடுத்து இன்னும் கொஞ்சம் தான் மிச்சம் மீதியாகக் கஜானாவில் இருக்கிறது.

போகட்டும். காலைச் சுத்தின பாம்பு ரெண்டு வராகனோடு கடிக்காமல் நகர்ந்து போனால் நல்லதுதானே.

ஜமீந்தார்வாள். நீங்க பணமாவோ காசாவோ ஏதும் தரணும்னு சுப்பிரமணிய அய்யர்வாள் எதிர்பார்க்கலே.

சுகஜீவனம் கிருஷ்ணய்யர் ஏப்பம் விட்டபடி சொன்னார். காலை நேரத்திலே சொகுசாக ஏப்பம் விடுகிற காவேரிக்கரைப் பிராமணன். நிஜமாகவே சுகஜீவிதான். ராஜாவுக்குப் பொறாமை தாங்கவில்லை.

ஆனாலும் இந்தாள் சொல்கிற வார்த்தை இதமாகத்தான் இருக்கிறது. பணம் காசு வேண்டாம் என்றால் சந்தோஷம் தானே வரும் ? ராணி உண்டாகி இருக்கிறதாக வந்து சொன்னால் ஏற்படுகிற சந்தோஷத்துக்கு ஒப்பானதில்லையோ அது ?

அய்யர்வாள் அவா கிரஹத்தை அவரே கட்டிக்கறார் பார்த்திருப்பேள். அதுக்குண்டான ஆஸ்தி பூஸ்தி அவர்கிட்டே பகவான் புண்ணியத்துலே இருக்கு. ஆனா, வியாபாரத்தைத் தொடர்றதுக்கும் விருத்தி பண்றதுக்கும்தான் உங்க ஒத்தாசை வேண்டியிருக்கு.

கச்சேரி அய்யன் சொன்னபோது கனபாடிகள் திரும்பக் கண்விழித்து இன்னொரு தடவை எல்லோரையும் ஆசிர்வாதித்தார்.

என்ன செய்யணும்னு பெரியவா சொன்னா செஞ்சு போட்டுடலாம் சடுதியிலே.

ராஜா கம்பீரமாகச் சொல்ல, உள்ளே இருந்து ராணி குரல்.

புருஷர்கள் இருக்கும் சபையில் அவள் பேசினது இல்லைதான். ஆனால் விஷயம் முக்கியமானபடியால் அவள் திரைக்கு அந்தப்பக்கம் இருந்தபடிக்கு இதில் கலந்து கொள்ள வந்திருக்கிறாள்.

என்னவென்று சொல்லிப்போடம்மா.

ராஜா கனிவாகக் குரல் விட்டார்.

அய்யர் வீட்டுப் பெரியவங்க முதல்லே சொல்லட்டும்.

ராணி தெளிவாகச் சொன்னாள்.

எல்லோரும் திரையைப் பார்க்கத் திரும்பினார்கள். ராஜாவை ஒரு துரும்பு போல் அவர்கள் உதாசீனப்படுத்தி, திரைக்கு அந்தப்பக்கம் இருக்கப்பட்ட ராணியோடு பேச்சு நடத்திப் போக உத்தேசித்திருக்கிறார்கள்.

மகாராணி, தேவி ஸ்வரூபிணி. உனக்கு சர்வ மங்களமுண்டாகட்டும்.

கனபாடிகள் இன்னொரு தடவை ஆசிர்வாதம் செய்தார். இன்றைக்கு முழுக்க ராஜ குடும்பப் புரோகிதனாக அவர் ஆசி மழை பொழியத் தயாராக வந்திருப்பதாக ராஜாவுக்குத் தெரிந்தது. செய்யட்டும். காசு பணம் செலவில்லாமல் அய்யர் வாக்கில் நல்லதாக நாலு வந்தால் ராஜாவுக்கு க்ஷேமமில்லாமல் வேறு என்ன ?

சுவாமிகள் பழம் பால் ஏதும் ஆகாரம் பண்றேளா ? திருவமுது படைக்கச் சொல்லட்டா ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:07 pm

ராஜா பவ்யமாக விசாரிக்க, கனபாடிகள் கால் கண்ணைத் திறந்து அதொண்ணும் வேணாம் என்று கனிவாகச் சிரித்தார்.

சுப்பிரமணிய அய்யர்வாள் பிரம்மபத்திரம் சேகரித்து வைக்க இங்கே அரண்மனையிலே கொஞ்சம் ஸ்தலம் ஒழிச்சுத் தரணும்.

அவர் பேசியது என்ன மாதிரி விஷயம் என்று ராஜா புரியாமல் பார்த்தார்.

புகையிலை அடைச்சு வைக்க அரண்மனையிலே வசதி இல்லையே சாமி. அதுவும் வாடை வேறே தாங்கமுடியாதபடி இருக்குமே.

ராணி நொடியில் விஷயத்தைப் புரிந்து கொண்டு சொல்ல, கச்சேரி ராமநாதய்யர் அவசரமாக எழுந்து கிட்டத்தட்ட திரைக்குப் பக்கம் போய் நின்றார்.

மகாராணி, அரண்மணை முழுக்க புகையிலை அடைக்கறது துராக்ரமமாச்சே. அதை நாங்க கேட்போமா ? வெளிப்புறமா இருக்கறதா ரெண்டு உள்ளு, அப்புறம் கொஞ்சம் வெத்து இடம். இங்கே தோட்டத்துக்குப் பக்கம் ஒரு மூலையிலே கொடுத்தாப் போதும். சுப்பிரமணிய அய்யர்வாள் கீத்துக்கொட்டகையோ, ஓலைப்பந்தலோ போட்டுக் கிட்டங்கியாக்கிப் பட்டியடைச்சுடுவார். புகையிலை வாசம் அரண்மனைக்குள்ளே எட்டிக்கூடப் பாக்காது. இந்தோ வலது வசத்துலே காணறதே அந்த ரெண்டு மனைக்கட்டும் சரியா வரும்போல தோணறது.

கச்சேரி அய்யர் சொல்ல, ராணி அவசரப்படாதீங்க சாமி, எங்கேன்னு நான் பாத்துக் கொடுக்கறேன் எடுத்துக்குங்க என்றாள்.

உங்களுக்கு ஏன் சிரமம் மகாராணி ? ராஜா பாத்துக்கட்டுமே அதையெல்லாம்.

கச்சேரி அய்யர் குறுக்கிட்டார்.

நீ ஒண்ணும் இது குறிச்சு விசனப்பட வேணாம். ஸ்நானம் செய்து ஆகாரம் செய்து ஓய்வாக இரு. ராஜாங்கக் காரியங்களோட சுமை என் தலைமேலேயே இருக்கட்டும் பெண்ணே.

ராஜா ஆதரவாகச் சொன்னார். திரைக்கு அந்தப் பக்கம் சடாரென்று குரிச்சி இழுபடும் சத்தம். ராணி போயிருந்தாள்.

ராஜா வந்தவர்களோடு நடந்த நேரத்தில், பகலிலோ ராத்திரியிலோ ராணியை எதிர்கொள்ளும்போது அவள் வாயில் விழ வேண்டியிருக்கும் என்பதைக் கவலையோடு நினைவுகூர்ந்தார்.

ஒரு அறை, இரண்டு அறை என்று ஆரம்பித்தது ஒரு சுற்று அரண்மனையைச் சுற்றி நடந்தபோது பழைய குதிரை லாயம், சாரட் வண்டி விடும் காடிகானா, நவராத்திரிக்கு குங்குமம் சந்தனம் இட்டு எலுமிச்சம்பழம் குத்தி நடு மண்டபத்தில் பூஜைக்கு வைப்பதற்காகப் பழைய வாளும் கேடயமும் வைத்திருந்த ஆயுதசாலை, அப்புறம் அரண்மனைத் தோட்டத்தில் கிட்டத்தட்ட நாலில் ஒரு பங்கு என்று போய்விட்டது.

இத்தனையும் சுப்பிரமணிய அய்யர் பாத்யதைக்கு ஒப்புக்கொடுத்தால் துரையிடம் ராஜாவின் தாராள மனதைப் பற்றி நீளமாக லிகிதம் எழுதி அனுப்பி வைப்பதாகவும், ராஜா சார்பில் அவருடைய மான்யத்தை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும்படி கோரிக்கை வைப்பதாகவும், பட்டணத்தில் செஞ்சார்ஜ் கோட்டையில் கிளார்க் உத்தியோகம் பார்க்கும் தன் புத்ரன் மூலம் அது பற்றி மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் கச்சேரி அய்யர் சொன்னபோது ராஜாவால் தட்டமுடியாமல் போய்விட்டது.

ராணி திரும்பத் திரை மறைவுக்கு வந்து ஆயுதசாலை மட்டும் வேண்டாம் என்றாள். அது நாலு தலைமுறைக்கு முந்திய போர்க்கருவிகள் வைத்திருக்கும் க்ஷத்ரிய குலத்துக்கான கோவில் போல என்றும் அங்கே போகப்பொருள் அடைப்பதால் நன்மையுண்டாகாது என்றும் அவள் சொல்ல, கனபாடிகள் ஏதோ ஸ்லோகத்தை ஒன்றுக்கு இரண்டு தடவையாக ஓதி அது சரி என்று ஆமோதித்தார்.

வெள்ளைப்பாண்டுக் கிழவனின் துபாஷி வந்து இரண்டு தரப்பிலும் இதற்கு ஒப்புக்கொண்டதாகவும், இந்தக் குத்தகை ஒப்பந்தம் இன்னும் தொண்ணூத்தொன்பது வருஷம் ஆயுசோடு இருக்குமென்றும் எழுதிக் கையொப்பமும் கைநாட்டும் வாங்கிப் போனான் அதற்கு இரண்டு நாள் சென்று.

அதற்கப்புறம் தொடங்கிய வேலைதான் இப்போது ஜரூர் ஆக நடந்து கொண்டிருக்கிறது. ஆயுதசாலையை விட்டுவிட்டு மீதி இடங்களில் புகையிலை அய்யர் வகையறாக்களும் அவர்களிடம் சேவகம் செய்து பிழைப்பவர்களுமாக நடமாட்டமும் சத்தமுமாக ஆக்கிரமித்துக்கொள்ள ராஜா சும்மாப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறார்.

சீக்கிரம் இதெல்லாம் முடிந்து விடும் என்றது அவருடைய மனம். இது முடிந்து இன்னொண்ணு ஆரம்பிக்கும் என்றது புத்தி.

துல்யமான கோணம். மகா அற்புதம். இந்தப்படிக்கே யந்திரம் நிலைக்கட்டும்.

தோட்டத்திலிருந்து ஜோசியக்கார அய்யர் குரல் எல்லா இரைச்சலையும் மீறி ஒலித்தது.

Sponsored content

PostSponsored content



Page 13 of 17 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக