புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10 
6 Posts - 46%
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10 
372 Posts - 49%
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10 
25 Posts - 3%
prajai
அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 16 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசூர் வம்சம் (நாவல்)


   
   

Page 16 of 17 Previous  1 ... 9 ... 15, 16, 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:00 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
அரசூர் வம்சம் - இரா முருகன்


பாயிரம்

அரசூர் பற்றி எழுது.

முன்னோர்கள் சொன்னார்கள்.

அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.

அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.

அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.

அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.

குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.

எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.

வாசலில் செருப்புச் சத்தம்.

திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.

முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.

எழுது.

பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.

என்ன எழுதட்டும் ?

இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.

பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.

எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.

ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.

முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.

அரசூரும் இருக்கிறது.

ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.

இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.

எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.

நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.

பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.

அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.

கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.

வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.

மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.

இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?

இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 11:41 pm

அதுக்காக ஆத்துலே கல்யாணத்தை வச்சுண்டு இறங்கிப் போகணுமா ?

ஒரு மணிக்கூர் கூட ஆகாது. ஊர்க் கோடியிலே சாவக்காட்டார் அனுப்பின வண்டி நிக்கும். ஏறிப்போய் அதிலேயே பணத்தோட திரும்பி வந்துட வேண்டியதுதான். மாங்கலிய தாரணம் ஆறதுக்குள்ளே வந்துடறேன். கவலைப்படாதே.

வண்டியை நாளைக்கு வரச் சொல்லக்கூடாதா ? தோழிப் பொங்கலும், மரவணையுமா அமர்க்களப்படும்போது நீங்க இல்லாததை யாரும் கவனிக்கமாட்டா. இப்போப் போய்க் கிளம்பினா.

ஆமாண்டி. சாப்பாட்டுக் கடை வைச்சுச் செழிக்கணும்னு மனசெல்லாம் ஆக்ரஹம். அதுக்கு இதைப் பண்ணு அதைப் பண்ணு அங்கே போ இவனைப் பாருன்னு ஒரு விரட்டல். பணமும் கிடச்சு அதுவும் வட்டி ஆகக் குறைவாக் கிட்டி வரபோது இன்னிக்கு வேணாம் நாளைக்குப் போன்னு காலைப் பிடிச்சு இழுத்தாறது.

நடுப்பகலுக்குக் கொஞ்சம் முன்னால் தானே மாங்கலிய தாரணம். அதுக்குள்ளே வந்துடுவேனே.

எல்லா நம்பிக்கையும் கொடுத்து விடிகாலை ஸ்நானம் செய்ய வெளியே போகிறதுபோல் கிட்டாவய்யன் கிளம்பிப் போனான்.

பொண்ணை அழச்சுண்டு வாங்கோ. பொண்ணை அழச்சுண்டு வாங்கோ.

கரம்பங்காடு கிருஷ்ணய்யரும், கச்சேரி ராமநாதய்யரும் நல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று உணர்ந்தவர்களாக அவசரப்பட்டார்கள்.

சின்ன எம்பிராந்திரியின் சிநேகிதன் ஒரு துணிப்பொதியோடு ஜோசியரை நெருங்கி, ஸ்வாமி, இதைப் பத்திரமா வச்சுக்குங்கோ. நாளைக்கு மரவணைக்கு வேணும்னார் குப்புசாமி அய்யர் என்றான்.

அதென்னடா குழந்தை மரவணை ? மரப் பலகையா இல்லே தகடா என்று விசாரித்தார் ஜோசியர்.

அவர் நினைப்பு முழுக்கக் கையோடு கொண்டு வந்திருந்த யந்திரத்தில் இருந்தது. எல்லாக் கோலாகலமும் முடிந்தபிறகு குப்புசாமி அய்யனிடம் தட்சணை வாங்கிக் கொண்டு இந்த வீட்டில் வாசல் பக்கமோ இல்லை தோட்டத்திலோ அதை ஸ்தாபித்து விட்டு நாளை மறுநாள் ஊரைப் பார்க்கக் கிளம்ப வேண்டியதுதான்.

மரவணை தெரியாதா ? கெட்டது போங்கோ. நாளைக்கு மறுநாள் பொண்ணு மாப்பிள்ளை ஊருக்குக் கிளம்பற முன்னாடி வேஷம் கட்டி ஆடணுமே ? அதுக்குத்தான்.

அவன் துணிப்பொதியிலிருந்து ஒரு ஒட்டு மீசையை எடுத்து அய்யங்காரின் நெற்றியில் வைத்து அழகு பார்த்தான்.

இதை யாருடா ஒட்டிப்பா ?

ஜோசியர் கேட்கும்போது பகவதி கூறைப் புடவையோடு பந்தலுக்குள் திரும்ப வந்துகொண்டிருந்தாள்.

பாட்டித் தள்ளை யாராவது ஆம்பளை வேஷம் கட்டுவா. உங்களை மாதிரி வயசன் புடவை கட்டிண்டு ஆடுவார்.

ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார் சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருக்க, அவர் காலை மிதித்துக் கொண்டு குப்புசாமி அய்யன் பந்தல் ஓரம் போனான்.

சிநேகா, எங்கேம்மா உங்காத்துக்காரன் ? உன்னண்டை சொல்லிக்காம எங்கேயும் போகமாட்டானே ? இந்தக் கல்யாணத்துலே இஷ்டம் இல்லியா அவனுக்கு ? இப்படி எல்லாரும் கூடியிருக்கிற நேரத்துலே பிராணனை வாங்கிண்டு.

அவள் அழ ஆரம்பிப்பதற்குள் நாதசுவரமும் மேளமும் திரும்ப உச்சத்துக்கு முழங்கின. வாசலில் கிட்டாவய்யன் வந்து கொண்டிருந்தான்.

அதோ வந்துட்டான் கிட்டன். அழாதே நீ.

குப்புசாமி சந்தோஷமாகக் கூச்சலிட்டான்.

கிட்டாவய்யன் மடியில் முடிந்து வைத்த குரிசு வெளியில் தெரியாமல் வேஷ்டி முனையை இடுப்பைச் சுற்றி இறுக்கிக் கொண்டான்.

அவன் ஒரு மணி நேரம் முன்னால் பாதிரி சொன்னபடிக்கு, சாவக்காட்டான் முன்னிலையில் வேதத்தில் ஏறி இருந்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 11:42 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் நாற்பத்தொன்பது


நந்தவனத்திலோர் ஆண்டி.

நாதசுவரக்காரன் நிறுத்தி நிதானமாக வாசித்துக் கொண்டிருந்தான்.சுலபமாக அடி எடுத்து வைத்து ஆடுவதற்குத் தோதான பாட்டு அது. அதுவும் வயதானவர்கள் ஆடுவதற்கு.

ஆலப்பாட்டு சேஷய்யர் ஆடிக்கொண்டிருந்தார். மடிசாரும், காதில் தோடும், தலையில் தேங்காய்நார் முடியும், கண்ணில் அப்பிய மையுமாக சிநேகாம்பாளின் தகப்பனார் ஆடிக்கொண்டிருக்க அம்பலப்புழை தெருக்களூடே சங்கரனின் மரவணை ஊர்வலம் ஊர்ந்து போனது.

சாயந்திரம் ஊருக்குக் கிளம்பணும். இப்ப இப்படி ஊர்கோலம் எல்லாம் என்னத்துக்கு விடணும் என்று சங்கரன் முதலில் வேண்டாம் என்றுதான் மறுத்தான்.

நீங்க தனியாவா போகப்போறேள் ? பகவதிக்குட்டியுமில்லியோ கூட வரப்போறா ? ராத்திரிக்குப் பேசினது போகப் பேச்சு மிச்சமிருந்தா பேசிக்கலாமே வழியிலே ?

நாணிக்குட்டி விசாரித்தாள்.

அம்பர விட்டிடா நீ நாணி. ராத்ரி ஒரு வார்த்தையும் பேசியிருக்கமாட்டா. பேசறதுக்கா ராத்திரி ?

லட்சுமி அவள் காதில் ரகசியம் பேசுவதாகச் சொன்னது எட்டு ஊருக்குக் கேட்டிருக்கும்.

பகவதிக்குட்டி நேற்று ராத்திரியை விட இந்தக் காலைப் பொழுதில்தான் அதிகம் வெட்கப்பட்டதாகச் சங்கரனுக்குத் தோன்றியது.

அவனுக்கு உடம்பு வசப்பட்டிருந்தது. தன்னுடையது. அவளுடையது. இதுக்காகத்தானா இவளை வரித்தது ? இத்தனை மந்திரம் சொல்லி, ஹோமம் வளர்த்து, ஊர்கூடிக் கல்யாணக்கூத்து அடித்தது இரண்டு ராத்திரியும் இன்னும் எத்தனையோ காலமும் உடம்போடு உடம்பாக ஒடுங்கிக் கிடக்கத்தானா ?

மனம் சீக்கிரம் பிடிபட்டு விடும் இரண்டு பேருக்கும். உடம்பு அதிசயமில்லாததாகத் தோன்ற ஆரம்பிப்பதற்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கப்போவதில்லை என்று சங்கரன் நினைத்துக் கொண்டான். என்றாலும் ராத்திரி முழுக்கப் போகம் அனுபவித்த அசதி அவன் கண்ணிலும் பகவதி கண்ணிலும் மாறாமல் தெரிந்தது. அவள் கண்ணில் அப்பிய மையையும் மீறித் தென்பட்ட அசதி அது.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி. அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி.

ஆண்டியும் தோண்டியும் ஒக்கெ சரிதான். வயசன் திரிச்சுப் பறந்துடாம ஒரு கண்ணு நட்டுவை.

ஆலப்பாட்டு சேஷய்யர் ஆடும்போது தன் வீட்டு வாசலில் நின்று கவனித்த பிஷாரடி வைத்தியர் சின்ன எம்பிராந்திரியிடம் சொல்லிவிட்டுத் தலையில் தைலம் புரட்டிக் குளிக்கக் கிளம்பினார். அவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடி எம்பிராந்திரியும் அண்ணாசாமி ஜோசியரும் கனபாடிகளும் மரவணை ஆட்டத்தைக் கண்டபடிக்கு இருந்தார்கள்.

வயசன் காலையில்தான் அம்பலப்புழை வந்து சேர்ந்தது. கல்யாணத்துக்கு ஆலப்பாட்டு மனையிலிருந்து சிநேகாம்பாளின் கடைசித் தம்பி மட்டும் வந்திருந்தான். நாலு இடத்தில் சாஸ்தா ப்ரீதிக்குப் போகவேண்டிப் போனதால் குடும்பத்தில் வேறு யாரும் வரமுடியவில்லை என்றான் அவன் குப்புசாமி அய்யனிடமும் விசாலாட்சியிடமும்.

திருமாங்கலிய தாரணம் கழிந்து பந்தியில் உட்கார்ந்து இலையில் சக்கப் பிரதமனும், அவியலும் பப்படமும் தொடர்ந்து சாதமும் பரிமாறி மேலே புத்துருக்கு நெய்யும் விட்டானதும் அவன் குரல்தான் முதலில் கேட்டது.

என்ன அத்திம்பேரே பரசேஷணம் செய்ய மறந்து போனதோ ? இல்லே நாளைக்குச் சாவகாசமாச் சேர்த்து வச்சுப் பண்ணிக்கலாம்னு விட்டுட்டாரா ?

கிட்டாவய்யன் சாப்பிட ஆரம்பித்திருக்க மற்றவர்கள் இலையைச் சுற்றி நீர் தெளித்துக் கொண்டிருந்தார்கள் அப்போது.

சபைக்கு நடுவிலே ஜ்யேஷ்டன் இப்படித் தன் வீட்டுக்காரனைப் பகடி செய்தது சிநேகாம்பாளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லைதான். முதலில் சாப்பிட்டு முடித்துப் லட்டுருண்டையைப் பாவாடையில் இடுக்கிக் கொண்டு வந்து எச்சில் படுத்தித் தின்றபடி வாசலில் பராக்குப் பார்த்துக் கொண்டு நின்ற மூத்த பெண்குழந்தையை முதுகில் ஒன்று வைத்தாள் அவள். இடுப்பில் இருந்த சின்னதின் பிருஷ்டத்தில் நுள்ளி, நீயும் ஒரு பொசைகெட்டவ என்று சொல்லி நோவெடுத்து அழ வைத்தாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 11:42 pm

கிட்டாவய்யனாவது இந்தச் சின்ன விஷயத்தில் எல்லாம் கொஞ்சம் சிரத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதா என்று அவளுக்கு ஏகக் கோபம். ஏற்கனவே கல்யாணத்தில் அவனுடைய உழைப்பு ஏதும் இல்லை என்று பேச்சுக் கிளம்பியாகிவிட்டது. எப்போதுமே இதையெல்லாம் பெரிசாக நினைக்காத விசாலாட்சி மன்னியே கூட ஒருதடவை வாயைத் திறந்து கேட்டுவிட்டாள் நேற்று. நல்ல வேளை தாலி கட்டுகிற வேளைக்காவது கிட்டாவய்யன் வந்து சேர்ந்தானோ பிழைத்தானோ ? இல்லாவிட்டால் சகலருக்கும் அவன் சத்ருவாகி இருப்பான். காமாட்சி மன்னி அடுத்த சமையல்கட்டு யுத்தத்தின் போது பிரயோகிக்க இன்னொரு பலமான அஸ்திரம் கிடைத்துவிடும். சிநேகா கர்ப்பிணி என்பதால் அவள் சண்டை வலிப்பது குறைந்துதான் போயிருக்கிறது. ஆனாலும் முழுக்க அஸ்தமிக்கவில்லை அது.

சங்கரனும் பகவதியும் சோபான ராத்திரிக்காக சயனக் கிரகத்துக்குள் போனபோது சிநேகாம்பாள் தன் தம்பியை அவசரமாகக் கூப்பிட்டாள்.

எடா, நீ உடனே கிளம்பிப்போய் மூத்தண்ணா ரெண்டு பேரையும் உடனே இங்கே கிளம்பி வரச்சொல்லு.

மளிகைப் பொருளும், அரிசியும், வெல்லமும் வெளியே எடுத்து வைத்துவிட்டு, உள்ளே கட்டில் போட்டு வைத்திருக்க, அடைத்த கதவுக்கு இந்தப்புறம் இருந்து பெண்கள் சிருங்காரப் பாடல் பாடும்போது அதில் மூழ்கியிருந்தான் சிநேகாம்பாளின் சகோதரன். நாணிக்குட்டி ஒரு அப்சரஸ் போல் வெள்ளைப் பட்டுப்புடவையும், நெற்றியில் தொட்ட சந்தனக்குறியுமாகச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது அவன் நினைப்பை வெகுவாக அலைக்கழித்து அங்கேயே காலைக் கட்டிப் போட்டிருந்தது.

இப்பவா ? எல்லாப் பட்டியும் கூர்க்கம் வலிச்சு சுகமாய் உறங்கிக் கிடக்குமே ? எந்த வள்ளம் இருக்கும் இந்தப் பாதி ராத்திரிலே ? வண்டிதான் இருக்குமா கரைக்கு மேலே ஓட்டிப் போக ?

எல்லாம் இருக்கும். நாலு சக்கரம் கூடக் கொடுத்தா வள்ளக்காரனும் வண்டிக்காரனும் ராத்திரி முழுக்கச் சேவகம் பண்ண வந்து நிப்பா. போடா திருதியாயிட்டுக் கிளம்பி.

சிநேகா அவனிடம் துரைத்தனத்துக் காசு நாலைந்து நீட்டினாள். அதற்கு ஒரு வண்டியையோ வள்ளத்தையோ விலைக்குக்கூட வாங்கி வாசலில் நிறுத்திவிடலாம்.

கிட்டாவய்யன் சாவக்காட்டிலிருந்து கொண்டுவந்த தனத்திலிருந்து கிள்ளிக் கொடுத்தது அது. சீக்கிரம் கொல்லத்தில் சாப்பாட்டுக்கடையாகப் போகிறது மிச்சமெல்லாம்.

தண்ணிமத்தங்காய் வாடையடித்த அந்தப் பணம் அவள் கைக்குள் இதமான சூட்டோடு இருந்தது. பணம் அடைத்த பொதி கையில் இருக்கும்போது உலகத்தையே அதைக் கொண்டு ஜெயித்து விடலாம் என்று தோன்றியது சிநேகாம்பாளுக்கு. காமாட்சி ஏதொண்ணும் எடுத்துக்கட்டி நிறுத்திச் சண்டைக்கு வந்தால் இந்தப் பொதியாலே அவள் முகத்தில் அறைய வேண்டும். பணத்தின் வாடை பிடித்தால் யாருக்கும் பின்னே குரல் எழும்புமோ என்ன ? முட்டுக் குத்த வைத்து விடுமே அது, யோகியானால் என்ன போகியாய், ஆசாரம் அனுசரிக்காத தெம்மாடி போலும் இருந்தாலென்ன ?

ஒரேயடியாப் பாஷாண்டி ஆயிடற உத்தேசமா ? சந்தியும் பண்ண மறந்தாச்சா பரசேஷணம் மறந்தமாதிரி ?

கல்யாண தினத்தன்று சாயந்திரம் பணப்பொதியைக் கையில் வச்சுக் கொடுத்து கிட்டாவய்யன் திரும்ப வெளியே கிளம்பியபோது அவன் சந்தியாவந்தனம் செய்ய வேண்டி எடுத்து வைத்த பஞ்ச பாத்திரமும் வீபுதிச் சம்படமும் அப்படியே இருப்பதைக் கவனித்த சிநேகா கேட்டாள்.

கிட்டாவய்யன் சிரித்தான்.

சந்தியும் மாத்யானமும் பரசேஷணமும் எல்லாம் இனிமே இதுக்குத்தான்.

அவன் மடியிலிருந்து குரிசை எடுத்துக்காட்டி விட்டுத் திரும்ப அவசரமாக வைத்துக் கொண்டான்.

இது என்னத்துக்காக மடியிலே முடிஞ்சுண்டு இருக்கேள் ? பாதிரி ஏதாவது மந்திரிச்சுக் கொடுத்திருக்கப் போறான். வீசி எறிஞ்சுடுங்கோ.

அவள் குரலை உயர்த்தவிடாமல் வாயைப் பொத்தியபடி கிட்டாவய்யன் நெருங்கி நின்று சொன்னான் - பாதிரியார் வட்டி எதுவும் கொடுக்க வேண்டாம்னு தான் மந்திரிச்சார். எல்லாம் இதோட மகிமை. அடுத்த வாரம் கடை வைக்க இடமும் பிடிச்சுக் கொடுத்துட்டார் சாவக்காட்டார். சரி போட்டே. கதவுப் பலகை செய்ய ஆசாரிக்குப் பணம் கொடுத்துட்டு வரேன். மீதிச் செலவுக்கு நான் கேட்கறபோது கொடு. அதுவரைக்கும் பத்திரமா இருக்கட்டும்.

கிட்டாவய்யன் மடியைப் பிரியமாகத் தடவியபடி வெளியே போக சிநேகாம்பாள் இதென்ன கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக பணத்தோடு வந்ததோடு மட்டுமில்லாமல் இப்படிக் கிறிஸ்தியானி போலக் குரிசையும் கொண்டு வந்திருக்கிறாரே இந்த மனுஷர் என்று நிலைகுலைந்து போனாள்.

நலங்கு நடக்கப் போறது. இங்கே நின்னு காசை எண்ணிண்டு இருக்கியே சிநேகா. வா சீக்கிரம். ஆரத்தி எடுக்கணும்.

லட்சுமி நவதம்பதிகள் உருட்டி விளையாடத் தேங்காயை எடுத்துப் போனவள் போகிற போக்கில் சொல்லி போனாள்.

சிநேகா பந்தலுக்குப் போனபோது பகவதி நலுங்கு இட வந்த சங்கரனுக்கு பரிசு கொடுத்துக் கொண்டிருந்தாள். அது ஒரு கடியாரம். ஏதோ வெள்ளைக்காரப் பட்டிணத்தில் அதை வெகு கவனமாக உண்டாக்கி அதி ஆச்சர்யமான விஷயமாக விற்பனைக்கு இறக்கியிருந்தார்கள். நீளமான சங்கிலியில் கட்டித் தொங்க விட்ட அந்த உருண்டை யந்திரம் அவ்வப்போது மணியடிக்கவும் செய்யும் என்று பிஷாரடி வைத்தியர் சொன்னார். குப்புசாமி அய்யன் அவர் மூலம் தான் திருவனந்தபுரத்திலிருந்து வரவழைத்திருந்தான் அந்தக் கடியாரத்தை.

பகவதி, இவன் உனக்கு என்ன தரான்னு கேளு.

வைத்திசார் சங்கரனின் இடுப்பில் அந்தக் கடியாரத்தைத் தொடுக்கி வைத்துவிட்டுச் சொன்னான்.

சங்கரன் நிரம்ப யோசித்து அடுத்த மாதம் பெல்ஜியம் கண்ணாடி ஒன்று வாங்கித் தருவதாக வாக்குத் தத்தம் செய்தான். அதை முன்கூட்டியே சென்னைப்பட்டணத்தில் கருத்தானிடமோ, சுலைமானிடமோ சொல்லி வைத்து வாங்கி எடுத்து வந்திருக்கலாம் என்று வெகு தாமதமாகத் தோன்றியது அவனுக்கு.

கண்ணாடியும் மூக்காடியும் வரும்போது வரட்டும் பகவதிக்குட்டி. வேறே ஏதாவது கொடுடான்னு இவனை இப்பவே மடியைப் பிடிச்சு இழுத்துக் கேளு. இல்லாட்ட வாயிலே புகையிலைக் கட்டையை அடைச்சுட்டு அவன் பாட்டுக்குப் பட்டணத்துக்குக் காசு பார்க்கக் கிளம்பிடுவான்.

வைத்திசார் தூண்ட, அதெல்லாம் எங்க மாப்பிள்ளை சொன்னா சொன்னபடிக்குத் தருவார். நீங்க ஒண்ணும் துச்சமா வார்த்தை சொல்லண்டாம் கேட்டேளா. ஏண்டி சிநேகா வாயைத் திறந்துதான் பேசேண்டி நானே மெனக்கெட்டுண்டு நிக்கறேனே என்றாள் விசாலாட்சி மன்னி ஒவ்வொரு வார்த்தைக்கும் குலுங்கிச் சிரித்தபடி.

பின்னே இல்லியா ? சாவக்காடோ, சென்னப்பட்டணமோ, ஒரு கண்ணாடி கிடைக்காதா என்ன மடியிலே பணத்தோடு இறங்கிப்போய் சிரத்திச்சுத் தேடினாக்க ?

சிநேகா ஏதோ பதில் சொன்னாள்.

அவள் முதுகுக்குப் பின்னால் என்னமோ பெரிசாக நடந்திருக்கிறது அல்லது நடக்கப் போகிறது. ஆலப்பாட்டுத் தமையன்மார் வந்தாலே அவளுக்குப் பலமாக இருக்கும்.

ஆனாலும் சிநேகாம்பாளின் தம்பி போய்ச் சேர்ந்து அனுப்பி வைத்தது அவர்களுடைய தகப்பனாரைத்தான்.

எல்லாரும் ஜோலித் தெரக்குலே இருக்கா. நான் தான் பூரணமா ஸ்வஸ்தமாயிட்டேனே. கல்யாணம் விஜாரிச்சுட்டுப் போகலாம்னு கிளம்பி வந்தேன்.

அவர் காலையில் வந்திறங்கி உற்சாகமாகச் சொன்னதற்குக் கொஞ்சம் முன்னால் தான் தோட்டத்தில் வைத்துக் கிட்டாவய்யன் சிநேகாம்பாளிடம் தான் பாதிரிகளின் மதத்தில் ஏறியதை அறிவித்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 11:42 pm

நீ ஏதொண்ணுக்கும் பயப்படாதே. நான் எல்லாம் சமாளிச்சுக்கறேன். இன்னும் பத்து இருபது நாள்லே நாம கொல்லத்துலே இருந்தாகணும். கிளம்பு.

அவன் சொன்னபோது சிநேகாம்பாள் பித்துப் பிடித்ததுபோல் இருந்தாள்.

ஜான் கிட்டாவய்யரே, வீட்டில் உம்மைக் கட்டியோள் நீர் சத்திய வார்த்தையை ஏற்றுக் கொண்டதைக் கேட்டால் மனக் கிலேசமடைந்து போவாள். அது சுபாவமானது தான். ஸ்திரியல்லவா ? அஞ்ஞானம் விலக நேரம் செல்லும். அது விலகி அவளும் நித்திய ஜீவனையும் வெளிச்சத்தையும் அடையாளம் காணும்போது எல்லாம் சரியாகி விடும். அதுவரை அவளுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால்.

சிநேகா, நான் இன்னும் ஒரு கொல்லம், மிஞ்சிப் போனா ரெண்டு கொல்லம் வேதத்துலே இருந்துட்டு அப்புறம் சாவக்காட்டான் காசை அவன் மூஞ்சியிலேயே வீசிட்டுப் பழையபடிக்கு ஆகிடுவேன்.

சிநேகாவால் நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஆனால், சாப்பாட்டுக்கடை நிறையப் பணத்தை வாரிச் சொரியும் தொழில். அதை வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒருத்தர் விடாமல் விருத்தியாகி வந்திருக்கிறதாக அம்பலத்திலும் குளங்கரையிலும் பேசிக் கொள்கிறார்கள் எல்லோரும். கிட்டாவய்யன் விருச்சிக மாதம் தொடங்கி ஆறு மாசத்தில் காசு குறைச்சலில்லாமல் சம்பாதித்து சாவக்காட்டான் கடனை அடைத்துத் திரும்பியும் வீபூதி குழைத்துப் பூசிக் கொள்வான். அதற்கான சாமர்த்தியம் இருக்கப்பட்டவன் சிநேகாம்பாளின் புருஷன்.

மல்லிகைப்பூ மாலையோடு இன்னும் மாப்பிள்ளைக் கோலத்தில் இருந்த சங்கரனிடம் அவசரமாக அடுத்த கிராமம் வரை போய் இன்னும் ரெண்டு மணிக்கூரில் திரும்புவதாகத் தெரிவித்துக் கிட்டாவய்யன் கிளம்பும்போதுதான் அவன் மாமனாரான ஆலப்பாட்டு வயசன் வந்து இறங்கியது.

குளிச்சு, இலையடை நாலு சாப்பிட்டு நீங்க இங்கேயே ஊஞ்சல்லே விச்ராந்தியா இருங்கோ. நான் சுருக்கா வந்துடறேன் என்று அவரிடம் கிட்டாவய்யன் உபச்சார வார்த்தை கூறியபோது, மரவணைக்கு யார் வேஷம் கட்டிண்டு ஆடப்போறா என்று விசாரித்தார் வயசன்.

யாருமே இல்லே. ஆட்டம் இல்லாமத் தான் ஊர்வலம்.

குப்புசாமி அய்யன் வருத்தத்தோடு சொன்னது கேடு, நான் பொம்மனாட்டி வேஷம் கட்டிண்டு ஆடறேன் என்றார் அவர் உடனடியாக. உங்களால் முடியுமா என்று குப்புசாமி அய்யன் விசாரித்தபோது அவர் கோயில் கொடிமரத்தை நனைத்ததை நினைத்துக் கொண்டான்.

இப்பல்லாம் நான் பறக்கறதில்லே குப்புசாமி. தூங்கறபோது சில சமயம் படுக்கைக்கு மேலே ஒரு விரல்கடை தூரத்துலே மிதப்பேனாம். யாராவது பாத்து நடுவிலே இன்னும் ரெண்டு தென்னம்பாயை விரிச்சா சமதளம்தான்.

வயசனுக்கு எதிர்ப்பாட்டு பாடி ஆம்பிளை வேஷம் கட்டி ஆட வயசான தள்ளை ஒருத்தரும் கிடைக்காமல் சுந்தரகனபாடிகளின் பெண்டாட்டியைக் கேட்டார்கள்.

சரின்னு சொல்லுடி. நாலு நறுக்கு ஆடிட்டு வந்துடலாம். ஒரு தமாஷுக்குத்தானே.

சுப்பிரமணிய அய்யரின் குரலில் ஏறி மூத்தகுடிப் பெண்டுகள் கேட்டுக்கொள்ள அவள் அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டாள். சுப்பம்மாளா என்ன அவள், அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் கூடவே போய் சொல்கிறபடியெல்லாம் விழுந்து விழுந்து காரியம் பார்த்துக் கொண்டு கிடக்க ? புடவைக்கு மேலே சேலம் குண்டஞ்சு வேஷ்டியை உடுத்திக்கொண்டு தய்யத் தக்கா என்று தெருவில் குதிக்க அவளுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கு ?

சுப்பிரமணிய அய்யர் சுந்தர கனபாடிகளின் பீஜபலத்தைக் கேலி செய்து பாட ஆரம்பிக்க, கச்சேரி ராமநாதய்யர் அவரை அந்தப்பக்கம் அழைத்துப் போனார். கூடவே நடந்த ஜோசியர் அண்ணாசாமி அய்யரிடம் இந்த மூத்தகுடிப் பெண்டுகளின் அட்டகாசம் தாங்கலை என்றார் அவர்.

சுப்பிரமணிய அய்யர் ஜோசியரைப் பார்த்து போடா, போய் யோனி மாதிரி யந்திரம் பண்ணிண்டு வந்து பிரதிஷ்டை பண்ணிக் கும்பிடு என்றார் பெண்குரலில்.

அதற்குள் மடிசாரும், கண்ணில் மையுமாக ஆலப்பாட்டு வயசன் ஆடியபடி வர, நாதசுவர கோஷ்டியும் பின்னால் மரவணை ஊர்வலமும் கிளம்பிவிட்டது.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி.

கனபாடிகள் பிஷாரடி வைத்தியர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து வயசனின் ஆட்டத்தைப் பார்த்தபடி இருந்தார். நேற்றைய சோபான ராத்திரியில் புரோகிதன் சொன்ன மந்திரம் அவர் நினைவில் சுழன்று வந்தது.

உன்னில் என்னை இட்டு நான் அரணி கடைவேன். நெருப்பாக இங்கே நமக்கு வம்சம் பெருகட்டும்.

அரணி இனி அவருக்கு வசப்படாது. வயதாகி விட்டது. எள்ளும் தர்ப்பையும் திவசமும் கூட அவருக்கு இல்லை. அவர் யந்திரங்களை நிர்மாணிக்கிறவர். நேற்று பகவதி சங்கரனுக்குக் கொடுத்தது போன்ற யந்திரங்கள். தேவதைகள் சகல திக்குகளிலும் நின்று நேரம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது என்று நொடிக்கொரு தடவை சொல்லி, முள்ளைச் சுழற்றி நகர்த்தும் யந்திரங்கள்.

எல்லா யந்திரங்களையும் நிர்மாணித்து முடித்த திருப்தி முகத்தில் தெரிய அவர் சுப்பிரமணிய அய்யரைப் பார்க்க, அவர் கண்ணாடிக் குடுவையில் திரவம் எதையோ கொதிக்க வைத்து அது சரியான சூட்டில் திளைப்பதைப் பார்த்தபடி நிற்கிறதாகவும், கவனத்தைக் கெடுத்துவிட வேண்டாம் என்றும் நல்ல மலையாளத்தில் சொன்னார்.

அந்த எழவெடுத்த பார்ப்பானுக்குக் கொடுத்த சவரனைப் பிடுங்கிட்டு வா என்று துரைத்தனத்துப் பாஷையில் துப்பாக்கியை உயர்த்தித் தோளுக்கு மேல் பிடித்த சிப்பாய்க்குக் கட்டளை பிறப்பித்துவிட்டுப் புகைக் குழாயை தீர்க்கமாக வலிக்கிற பிரயத்தனத்தில் இருந்தார் ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார்.

சங்கரன் பகவதிக் குட்டியின் உள்ளங்கையில் கிள்ளினான்.

நீங்க கிள்ளிப் பிடுங்க இங்கே மட்டும் தான் பாக்கி இருந்தது உடம்பிலே என்றாள் மெல்லிய குரலில் பகவதி அவனிடம்.

அவளுக்கு இடுப்பை இறுக்கிப் பிடிக்கிற ஒரு துரைச்சானி பாவாடை அடுத்த தடவை பட்டணம் போகும்போது வாங்கிவந்து கொடுக்க வேண்டும். அதை உடுத்த வைத்து, அப்புறம் எடுக்க வைத்துப் பார்க்க வேண்டும். போகம் தான் எல்லாம். பழுக்காத்தட்டு சங்கீதம் கொண்டுவரச் சொல்லி அந்த நூதன வாகனக் களவாணிகளிடம் சொல்ல வேண்டும். நக்னமாக மாடியில் நின்றபடிக்கு அதைச் சுழல விட்டுக் கேட்க வேண்டும். சங்கரன் சாமவேதம் படித்தவன். அதை மறந்தவன். மனம் ஒரு நிமிடம் அவனைக் குடிமாற்ற இடுப்பில் கடியாரம் கணகணவென்று மணியடித்தது.

கரண்டிக்கார பிராமணன்

கள்ளிக்கோட்டை போனானாம்.

சாவக்காட்டான் வழிசொல்ல

சாத்திரத்தை மாத்தினானாம்..

கள்ளுச் சொட்டாக் காப்பியும்

காரவடை இட்டலியும்

வேணுமின்னா ஏறுங்கோ

வேதக்காரன் கடையிலே.

ஆலக்காட்டு வயசன் பாடியபடிக்கு மேலே கொஞ்சம் எழும்பினார். மூத்தகுடிப் பெண்டுகள் அவரைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார் கனபாடிகள் ஜோசியரிடம்.

வயசனைப் பிடித்துத் தரையிறக்க ஓடி வந்த சின்ன எம்பிராந்திரி ஜோசியரைப் பார்த்து, யோனி மாதிரி யந்திரம் செய்து என்ன பிரயோஜனம் ? அது கொண்டு விக்ஞான வளர்ச்சிக்குக் கிஞ்சித்தும் பிரயோஜனமுண்டோ என்று பிஷாரடி வைத்தியர் குரலில் விசாரித்தபடி ஓடினான்.

அவன் வாயில் அடித்த வாடை அபின் வாடை ஜோசியருக்கு இதமாக இருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 11:44 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் ஐம்பது



கல்யாணம் விசாரிக்க யாராவது வந்த மணியமாகவே இருந்தார்கள். சீர்வரிசையோடு கொண்டு வந்த அதிரசமும், தேங்குழலும் கைமுறுக்கும் எண்ணெய்க் காறலில் கசப்புத் தட்டும்வரை தின்று தீர்க்கவும் வந்தவர்களுக்கு இலை நறுக்கில் பொதிந்து தாம்பூலத்தோடு கொடுக்கவுமாக எதேஷ்டமாக இருந்தது.

போதாக்குறைக்கு பருப்புத் தேங்காய் வேறு. இது புது தினுசாக பூந்திலாடு சேர்த்துப் பிடித்ததும், குழந்தைகள் ருசித்து எச்சில் ஒழுகச் சாப்பிடும் வர்ண முட்டாயைத் தேங்காய் பர்பிக்கு மேலே பதித்து உண்டாக்கினதுமாக ஏகப்பட்டது.

கல்யாணம் முடிந்த கையோடு புதுவீட்டில் குடித்தனமும் வைத்துக் கொடுத்திருந்தார் சுப்பிரமணிய அய்யர். பழைய பரபரப்பும் சந்தோஷமும் மெல்லத் திரும்பிக் கொண்டிருப்பதாக அவருக்குத் தோன்றிய நேரம் அது.

குப்புசாமி அய்யனும் விசாலாட்சியும் பகவதியை பட்டுப்பாய், பட்சணம், பண்ட பாத்திரம், இதர சீர் வரிசை சகிதம் கொண்டு விட வந்திருந்தார்கள். விசாலாட்சிக்கு அரசூர் மிகவும் பிடித்துப் போனது. கடைத்தெருவுக்கும் கோயிலுக்கும் தனியாகவே போய் வந்தாள் அவள்.

முட்டாயைக் கரைத்த மாதிரி அது ஏன் இந்த ஊர்க் குளம் எல்லாம் சிவந்து வழிகிறது என்று சங்கரனைக் கேட்டாள் அவள். அது குளம் இல்லை அக்கா, ஊருணி என்றான் சங்கரன். ஆனாலும் தண்ணி கல்கண்டா இனிக்கிறது என்று ஊருணித் தண்ணீரை மானாமதுரை மண் கூஜாவிலிருந்து எடுத்துக் குடித்தபடி அவள் சொன்னபோது, தீர்த்ததுலே மண்ணு நெடி அடிக்கறதே. கவனிச்சியோ என்றான் குப்புசாமி அய்யன். பின்னே என்ன ஆகாச வாடையா அடிக்கும் அதிலே என்று விசாலாட்சி சிரித்தாள். அம்பலப்புழைக் குடும்ப ஸ்திரிகள் எல்லோருக்கும், பகவதி உட்பட அழகான சிரிப்பை உண்டாக்கிக் கொடுத்திருக்கிறான் பகவான் என்றாள் ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார் வீட்டுக்காரி.

விசாலாட்சியும், சுகஜீவனம் கரம்பங்காடு கிருஷ்ணய்யர் சம்சாரமும், சுந்தர கனபாடிகள் அகத்துக்காரியுமாகத் தான் ஓடி ஓடி வந்தவர்களுக்கு உபசரித்துக் கொடுத்தது.

கல்யாணி அம்மாள் இன்னும் நினைவு சரிவரத் தெளியாமல்தான் இருந்தாள்.

நாட்டுப்பொண்ணு வந்திருக்கா கல்யாணி. எழுந்து உக்காரு. ஆசிர்வாதம் கேக்கறது குழந்தைகள்.

சுப்பிரமணிய அய்யர் சிரமப்பட்டுக் கல்யாணி அம்மாளைப் பிடித்துப் படுக்கையில் உட்கார்த்த, சாமா, பொண்டாட்டியைப் பத்திரமாப் பாத்துக்கோ. தீப்பிடிக்க விட்டுடாதே என்று முனகிவிட்டுத் திரும்பத் தூங்கப் போய்விட்டாள்.

வீட்டுக்கு வந்த நவ வதுவரனுக்கு ஆரத்தி எடுக்க நித்யசுமங்கலி சுப்பம்மாள் இருந்தால் எடுப்பாக இருக்கும் என்று சுப்பிரமணிய அய்யரும் மற்றவர்களும் அபிப்ராயப்பட்டாலும் சுப்பம்மாள் போன சுவடே தெரியவில்லை.

கல்யாணியைப் பாத்துக்கறேன்னுட்டு இப்படி எங்கேயோ சவாரி விட்டுட்டாளே கிழவி என்றாள் கனபாடிகள் பெண்டாட்டி.

சுப்பம்மாளுக்குக் கடுத்த ஜூரமா இருந்தது. இங்கே இருந்தா கல்யாணிக்கு இன்னும் ரோகம் பாதிக்குமோன்னு தன்னோட கிரஹத்துக்குப் போனா. அது நீங்க கல்யாணத்துக்குக் கிளம்பிப் போனதுக்கு மறுநாளைக்கு மறுநாள்.

பாடசாலை ராமலட்சுமிப் பாட்டி சொன்னாள். அது கழிந்து சுப்பம்மாள் கவலையில்லாமல் பாடிக்கொண்டு நடுராத்திரியில் தெருவில் நடந்து போனதைப் பார்த்ததாகவும் தெரிவித்தாள். அப்போது போனவள் தான்.

மூத்தகுடிப் பெண்டுகள் என்னோடில்லையோ வந்தது ? அப்புறம் எப்படி சுப்பம்மா பாடிக்கொண்டு அவர்களோடு போகமுடிந்தது என்று நியாயமான கேள்வியைச் சுப்பிரமணிய அய்யர் எழுப்பினார்.

அவள் குரல் கர்ண கடூரமாக இருந்ததாகவும் அது மூத்த குடிப் பெண்டுகள் கைவேலை இல்லையென்றும் ஆனால் சுப்பம்மாள் வெகு உற்சாகமாக மழையில் நனைந்தபடி பாடிப் போனதாகவும் ஜோசியர் பெண்டாட்டி அறிவித்தபோது, நீ சும்மா இரு என்று ஜோசியர் அடக்கினார். சுப்பம்மாளுக்குக் கொடுத்த யந்திரத்தை அவள் போகிற போக்கில் அரண்மனைத் தோட்டத்தில் விட்டுப் போனதை இன்னும் அவர் சரியென்று ஏற்கவில்லை. அதனால் எத்தனை கஷ்டம் ? மலையாள வைத்தியன் கொடுத்த ருசியான திரவம் தவிர வேறு சுகம் ஏதும் இல்லை. கொட்டகுடித் தாசி மட்டும் கடாட்சம் காட்டாதிருந்தால் சரிந்து போன மகாயந்திரம் இன்னும் எத்தனை நாசத்தை உண்டாக்கி இருக்குமோ என்று அவர் நினைத்தபோது அம்பலப்புழை பிஷாரடி வைத்தியர் விக்ஞான ரீதியில் யோஜிக்கப் பழகிக் கொள்ளணும் என்றார். வைத்தியர் தன் மனதில் இப்படி அவ்வப்போது வந்து சேதி சொல்லும் சங்கடத்தை நிவர்த்திக்க அடுத்த யந்திரத்தில் என்ன மாதிரியான க்ஷேத்ர கணிதம் போடலாம் என்று யோசித்தபடி ஜோசியர் நடந்தபோது அரண்மனைத் தோட்டத்து யந்திரம் கண்ணில் பட்டது. அது அவர் ஸ்தாபித்ததை விட அளவு சுருங்கிக் காணப்பட்டது.

சங்கரன் பகவதிக்குட்டியைக் கடைத் தெருவுக்கு அழைத்துக் கொண்டு போனான். கொட்டகுடித் தாசி நடந்தபோது நிமிர்ந்த தலைகளை விட இப்போது உயர்ந்தவை இன்னும் அதிகம் என்று அவனுக்குத் தெரிந்தது.

கடை வாசலில் தலையாட்டி பொம்மை கண்ணை உருட்டி உருட்டி பகவதியை வரவேற்றது. அப்புறம் அப்படியே நிலைத்து நின்று விட்டது. பகவதி குறுகின மரப்படிகளின் மூலம் கடைக்குள் ஏறிவரக் கஷ்டப்பட்டாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 11:44 pm

அவளுக்குப் புகையிலை வாடை வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வந்ததாகச் சொன்னான் சங்கரனிடம். என்ன செய்ய பொண்ணே, இதை வித்துத்தான் குடும்பத்தைச் சம்ரட்சிக்ணும் என்று நம் தலையில் விதிச்சு விட்டான் பகவான் என்றான் சங்கரன். வீட்டில் இந்தத் தடவை புகையிலை ஒரு நறுக்கு கூட இல்லாமல் எல்லாம் அரண்மனைக் கிட்டங்கியில் அடைத்து வைக்க வழி பண்ணிக் கொடுத்த வகையில் வங்கிழவன் துரைக்கு மனதில் நன்றி சொன்னான் அவன்.

யாரோ மூக்குத்தூள் வாங்க வந்து நின்று பகவதியைப் பார்த்துத் தயங்கி அப்புறம் வருவதாகச் சொல்லிப் போக, நான் வந்து உங்க வியாபாரம் தடசமானதா இருக்க வேணாம் என்று அவள் படியிறங்கினாள்.

திறக்க ஆரம்பித்த மூக்குத் தூள் பரணியைத் திரும்ப இறுக்க மூடினான் சங்கரன். அப்படியும் பகவதி தும்ம ஆரம்பித்து நடுப்படியிலேயே நின்றாள். மூடிய கண்ணும் ஒரு சிரிப்புமாக அங்கே தும்மிக் கொண்டு நின்றவளை வாரி அப்படியே அணைத்துக்கொள்ள வேண்டும் என்று மனதில் எழுந்து வந்ததை அடக்கிக் கொண்டான் சங்கரன்.

ஐயணை என்று கூப்பிடுவதற்கு முன் ஐயணை கடை வாசலில் வந்திருந்தான்.

ஆலப்பாட்டு வயசன் சாயல் ஐயணைக்கு இருப்பதாகப் பகவதிக்குட்டி சொன்னது அவளுக்கு நினைவு வர சங்கரன் சிரித்தான். அது எதுக்குச் சிரிப்பு என்று புரியாமல் பகவதியும் சிரிக்க ஆரம்பித்தாள்.

கொளந்தைக்கு நெறைவா சிரிப்பு இருக்கு சாமி. வீட்டுலே அதுதான் இத்தனை நாள் காணாம இருந்துச்சு.

ஐயணை பெட்டி வண்டியை ஓட்டிப் போகும்போது சொல்லியபடியே போனான்.

கல்யாணம் விசாரிக்க பக்கத்து அரண்மனையிலிருந்து ராணி வந்தபோது சுப்பிரமணிய அய்யர் குடும்பமே அங்கே கூடியிருந்து அவளை வரவேற்றது. சங்கரன் மட்டும் ஏதோ நினைத்துக் கொண்டது போல் கடைக்குக் கிளம்பி விட்டான்.

மகாராணி. அதுவும் வாயும் வயிறுமாக இருக்கப்பட்ட ஸ்திரி என்று வீட்டுப் பெண்கள் எல்லோரும் அவளை மரியாதையும் பிரியமுமாக வரவேற்றார்கள். கனபாடிகள் பெண்டாட்டியும், கச்சேரி ராமநாதய்யர் சம்சாரமும் குரல் நடுங்க லாலி பாடி அவளுக்கும் சேர்த்து ஆரத்தி எடுத்தார்கள்.

சுப்பம்மாள் கிழவி இருந்தால் அருமையான பாட்டு ஏதாவது பாடி அவளுக்கு மரியாதை செய்வாள். மூத்த குடிப் பெண்டுகளுக்கும் இவள் வரவு இஷ்டமாக இருந்திருக்கும். சுப்பம்மாளோடு அவர்களும் போய்விட்டார்கள் போலிருக்கிறது என்று ஆரத்தியை வாசலில் கொட்டியபோது கனபாடிகள் பெண்டாட்டி நினைத்தாள்.

ராஜாவுக்கு துரைத்தனத்துக் கணக்கு ஏதோ உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவு வந்திருப்பதாகவும் காரியஸ்தனோடு அவர் விடிந்ததிலிருந்தே மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதால் வரமுடியவில்லை என்றும் ராணி அறிவித்தபோது, ஜமீன் நிர்வாகம்னா சும்மாவா, ஏகப்பட்ட பிக்கல் பிடுங்கல் இருக்கத்தானே செய்யும் என்று கச்சேரி ராமநாதய்யர் ஆதரவாகச் சொன்னார். தான் கோர்ட்டில் சிரஸ்ததாராக ஜமீன் கணக்கு வியாஜ்யங்களையே மேலதிகம் ஆயுசு முழுவதும் பார்த்ததாக அவர் கூட்டிச் சேர்க்க, இந்த அய்யரை காரியஸ்தன் இடத்தில் அமர்த்தினால் துரைத்தனத்துக்கு லிகிதம் எழுதி அதிக மான்யம் வாங்கவும், தேவைப்பட்ட போது தர்க்கம் செய்யவும் உபயோகமாக இருக்கும் என்று நினைத்தாள் ராணி.

சுந்தர கனபாடிகள் பெண்டாட்டி வீடு முழுக்கச் சுற்றிக்காட்ட மெல்ல நடந்து போய்ப் பார்வையிட்ட அவள் தாம்பூலத்தோடும் மஞ்சள் குங்குமத்தோடும் கிளம்பும்போது பகவதிக்குட்டியை அணைத்துத் தலையில் வாஞ்சையாக முத்தமிட்டாள்.

கிணற்றடிக்கு மேலே ஓடு இறக்கியோ இல்லை கூறை போட்டோ ஒரு ஏற்பாடு செய்து கொள்ளச் சொல்லிப் போனாள் அவள். அரண்மனையில் புகையிலை அடைக்க இடம் கொடுத்தபிறகு ஆள் நடமாட்டம் அதிகமாகிப் போனதாகவும் குளிக்கும்போது யாராவது வெளியிலே இருந்து பார்க்கக் கூடும் என்பதால் இந்த யோசனை என்றும் அவள் தெரிவித்ததாகச் சங்கரனிடம் பிற்பாடு பகவதிக்குட்டி சொன்னாள்.

யாராவது பார்த்தால் பொசுக்கிப் போடுவேன் என்றான் அவன் தலையைக் குனிந்தபடிக்கு.

கல்யாணம் விசாரிக்க இனிமேல் ஊரில் ஆள் பாக்கி இல்லை. தாணுப்பிள்ளையும் தம்பதி சமேதராக மதுரையிலிருந்து வந்து பெண்ணுக்கும் பிள்ளைக்குமாக ஆளுக்கொரு வராகனும், மதுரை மல்லிகைப் பூவும், மீனாட்சி கோயில் குங்குமமுமாக வந்துவிட்டுப் போனார்.

எல்லோரும் போய் வீடு கூட்டம் குறைந்து சகஜ நிலைக்கு வந்தபோது கருத்தான் வந்து சேர்ந்தான். வந்ததும் முதல் காரியமாகக் கையோடு கொண்டு வந்திருந்த பொடித்தூள் ஜாடிகளை அரண்மனைக் கிட்டங்கியில் வைத்துப் பூட்டி விட்டுச் சாவியை சங்கரனிடம் சேர்ப்பித்தான்.

அய்யர் சாமி, உங்க கல்யாணத்துக்கே மலையாள சீமைக்கு வரத்தான் நினைச்சிருந்தேன். ஆனா பீவி பிள்ளையைப் பெத்துக் கையிலே கொடுத்துட்டா.

சைனா பட்டுத் துணியில் இரண்டு நேர்த்தியான சால்வைகளைப் பிரியத்தோடு சங்கரன் கையில் கொடுத்தான் அவன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 11:45 pm

என்ன குழந்தைடா கருப்பா இந்த விசை உனக்கு என்று விசாரித்தான் சங்கரன் அந்தச் சால்வையில் முகம் புதைத்துக் கொண்டு.

ஆம்பளை ஒண்ணு. கூடவே பொம்பளைப் புள்ளை ஒண்ணு. ரெட்டையாப் பெத்து விட்டுட்டா.

அவன் குரலில் தெறித்த சந்தோஷம் சங்கரனையும் பற்றிக் கொண்டது.

பகவதி, இந்தத் தடியன் தான் எனக்கு வியாபாரத்துலே பாகஸ்தன். கருத்தான்னு பேர்.

பகவதி கருத்தானுக்கு இரண்டு கையையும் கூப்பி நமஸ்காரம் செய்தாள்.

இந்த அபிஷ்டுவுக்குக் காப்பி கொண்டு வந்து கொடு.

கருத்தான் பதறிப்போய் எழுந்து வெளியே ஓடியே விட்டான்.

கல்யாணம் விசாரிக்கக் கடைசியாக வந்தவர்களில் கொட்டகுடித் தாசியும் இருந்தாள். பகவதிக் குட்டிக்கு மட்டுமே அவள் பெயர் மோகனவல்லி என்று தெரிய வந்தது. தான் பகவதியென்று சொல்லி அவளுடைய பெயர் என்ன என்று விசாரித்தபோது, முதல் தடவையாகத் தன்னிடம் இன்னொருத்தர் பெயர் கேட்பதில் அதுவும் யெளவனமும் அழகும் கல்வியும் கொண்ட ஸ்திரி ஒருத்தி விசாரிப்பதில் அவளுக்குத் தாங்கொணாத சந்தோஷம் என்றாள். சங்கரனிடம் ராத்திரி இதைப் பகவதி சொன்னபோது அவன் கொட்டகுடித் தாசியின் முழங்கைகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான்.

பெண்டாட்டியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அன்னிய ஸ்திரியை இச்சிக்கலாமா என்று மனம் கேட்டபோது அவன் பதிலேதும் இல்லாமல் கூடத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்தான். அப்போது நடு ராத்திரிப் பொழுது. வெளியே மழை பெய்கிற சத்தம்.

பகவதியிடம் கொட்டகுடித் தாசி கடைக்கு வந்த விஷயத்தைச் சொல்லவில்லையே என்று பட்டது சங்கரனுக்கு. அதை ஏன் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. அவள் எழுதிக் கொடுத்த வெண்பாவையாவது காட்டியிருக்கலாம். ஆனால் பகவதிக்குத் தமிழ் படிக்க வராது. மலையாளம் தான் வரும். அவளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும். படிப்பிக்க புருஷர்கள் யாரும் சரிப்பட்டு வராது. கொட்டகுடித் தாசி வரச் சம்மதித்தால் நன்றாக இருக்கும். அடுத்த தடவை அவள் கடைத்தெருவுக்கு வரும்போது கேட்க வேண்டும். எனக்கு என்ன கற்றுக் கொடுப்பாய் என்றும் விசாரிக்க வேண்டும்.

பகவதிக்குட்டி அவனுக்குப் பக்கமாக வந்து நின்றாள். இழுத்து அணைத்து ஊஞ்சலில் கிடத்தினான் அவளை. நாபியில் மென்மையாக முத்தமிட அவள் சிலிர்த்தபடி திரும்ப எழுந்து உட்கார்ந்து அவனை ஆரத்தழுவி உதட்டில் முத்தினாள். ஊஞ்சல் ஆட்டத்தில் அவளோடு கலந்தபோது இதெல்லாம் ஏற்கனவே நடந்து முடிந்த விஷயம் என்று சங்கரன் மனதில் வந்து போனது.

ஆனாலும் தான் நீங்க ரொம்பப் படுத்தறேள்.

எழுந்து உட்கார்ந்த அவள் குரல் மட்டும் குறைப்பட்டுக் கொண்டது. அவிழ்ந்த தலைமுடியை திரும்ப முடியத் தொடங்க, வேணாம் இப்படியே இருந்துட்டுப் போகட்டும். குத்து விளக்கு வெளிச்சத்துலே ரதி மாதிரி இருக்கே என்றான் சங்கரன். இதுவும் இவன் சொன்னது இல்லை. ஏற்கனவே பேசப்பட்ட வார்த்தைகள்.

பகவதி, ஒரு பாட்டுப் பாடேன்.

பிராந்தோ, இப்படி அசுத்தமா உக்காந்து தான் சங்கீதம் பாடுவாளோ ?

நான் தொட்டதாலே அசுத்தமாயிட்டியாடி நீ ?

சங்கரன் அவளை மடியில் இழுத்துக் கொண்டு கேட்டான்.

தொட்டதோட விட்டாத்தானே ?

பகவதி சிரித்தாலும், அவனுக்கு முன்னால் தரையில் உட்கார்ந்து பாட ஆரம்பித்தாள்.

ஒவ்வொன்றும் ஏற்கனவே நடந்து போனதாகச் சங்கரனுக்கு இன்னும் நிச்சயமாகப் பட்டது. அவன் தான் சாமா. அவன் முன்னால் உட்கார்ந்து பாடிக் கொண்டிருப்பவள் சாமாவோடு போனவள். இந்த ஊஞ்சல் தான். முன்னால் கால் இடிக்கிற இடத்தில் இதே சுவர்தான். அங்கே வரலட்சுமி முகம் வரைந்து வைத்திருந்தது. பக்கத்தில் புகையிலைக் குழாயில் இருந்து துரை சாம்பலைத் துப்பினான். கூரை இல்லாத இந்த வீட்டுக்கு வெளியே இருந்துதான் சுப்பம்மாக் கிழவி பழுக்காத்தட்டு சங்கீதத்தைப் பாடினாள். அதுவும் சாமா சுழல விட்டுக் கேட்டுக் கொண்டிருந்ததுதான். அதைக் கொண்டுவந்து கொடுத்த களவாணிகள் திரும்பவும் வருவார்கள். அவர்களுக்குச் சாமிநாதன் சங்கரன் எல்லோரும் ஒன்றுதான். இந்த வீட்டையும் யாரோ எரிப்பார்கள். இன்னொரு தடவை இங்கே அப்புறம் உட்கார்ந்து ஊஞ்சலாடுவது வேறு யாரோ. எல்லாம் பழுக்காத்தட்டு போல் சுழன்று சுழன்று மறுபடி மறுபடி நிகழ்ந்தபடி இருக்கும்.

சங்கரன் ஊஞ்சலில் படுத்துத் தூங்கிப் போனான். தரையில் புறங்கையைத் தலையணையாக வைத்தபடி பகவதியும் உறங்கிப்போன அந்த ராத்திரி முழுக்க விடாமல் மழை பெய்தபடி இருந்தது.

மழைக்கு நடுவே பெரிய இடிச்சத்தம். பக்கத்து வீட்டுத் திசையிலிருந்து ஏதோ பற்றி எரிவது போல் வெளிச்சம். ராஜா பதறி எழுந்து ஜன்னல் பக்கம் பார்க்க, ஜோசியர் அரண்மனை நந்தவனத்தில் நிறுத்தியிருந்த யந்திரம் எரிந்து கொண்டிருந்தது. ஒரு வினாடியில் அது பஸ்பமாகக் கீழே விழ, அங்கே சின்னதாக இன்னொரு நெருப்பு. ஏகப்பட்ட பெண்குரல்கள் சண்டை பிடித்தபடி காற்றில் மிதந்தன.

நீ போய்த் தூங்கு. ஒண்ணுமில்லே என்றார்கள் மூதாதையர்கள் ராஜாவிடம். வீடு ஒண்ணும் தீப்பிடிக்கலியே என்று திரும்ப விசாரித்தார் ராஜா. அது மாதிரி ஆகி இருந்தால் அரண்மனையில் அந்தப்புரக் கட்டிலிலும் ஒருபக்கமாகப் புகையிலைச் சிப்பம் அடுக்க இடம் கொடுக்க வேண்டி வரலாம்.

இல்லேப்பா ஒண்ணும் ஆகலே அப்படியெல்லாம் என்றான் புஸ்திமீசையான். சரிதான் என்று சமாதானத்தோடு மூத்திரச் சட்டியை வெளியே எடுத்தார் ராஜா.

அந்தச் சின்ன யந்திரம் தீயோடு பறந்து போனதை ஜன்னல் வழியாகப் பார்த்தார் அவர்.

சே இதொரு சல்யம். அரசூர் ஜோசியனும் அவன் யந்திரமும் எல்லாம் நசிச்சுப் போக. யார் சுப்பம்மா ? எதுக்கு இவனோட யந்திரம் அவள் போன திசைக்குப் பறக்கணும் ? மூட ஜனங்கள். தூக்கத்தைக் கெடுக்கக் கொதுகு போதாதுன்னு இவன் வேறே.

பிஷாரடி வைத்தியர் புதைப்பை இன்னும் இழுத்துப் போர்த்திக் கொண்டு கலைந்த நித்திரையைத் தொடர ஆரம்பித்தபோது விடிந்திருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 11:45 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் ஐம்பத்தொன்று


வண்டி வியாபார நிமித்தம் நிறுத்தி வச்சிருக்கப்பட்டது. வந்தவன் போனவனுக்கு எல்லாம் வடிச்சு எடுத்துண்டு போய் சட்டமாப் படைச்சுட்டு வரதுக்கு இல்லே அது. மாப்பிள்ளை கேட்டால் கோபப்படுவார். உனக்கும் உன் அனுஜத்திக்கும் சகோதர வாஞ்சை பீறிட்டுண்டு வரதா என்ன ?

சோமநாதன் சத்தம் எகிறிக் கொண்டிருக்க, அலமேலு அக்கா குரல் தாழ்த்திப் பேசிக் கொண்டிருந்தது பகவதிக் குட்டிக்குக் காதில் விழுந்தது.

ஐயோ, அந்த மாபாவி கிட்டன் எப்போலேருந்து எனக்கு அண்ணாவானான் ? அறுத்துப் போட்டுட்டு வேதத்துலே ஏறினதுக்கு அப்புறம் உறவாவது மண்ணாவது. அந்தத் தேவிடியா முண்டை சிநேகாம்பாளை நினைச்சாலே பத்திண்டு வரது. பகவதிக்குட்டிக்கு தாராள மனசு. ஏதோ சொல்லியிருக்கா. அதுக்காக என்கிட்டே இரைவானேன் ?

அலமேலு அக்கா சொன்னதைக் கேட்க பகவதிக்குத் துக்கமாக இருந்தது. ஆனாலும் அவளால் ஆகமுடிந்தது என்ன ? புருஷர்கள் இல்லையா இங்கே எல்லாம் எல்லோரும் எப்படி நடக்க வேண்டும் என்று தீர்மானிப்பது.

கல்யாணம் ஆகி அரசூர் வந்த பத்து வருடத்தில் சங்கரன் சொல்லி ஒரு வார்த்தை தட்டியது உண்டா அவள் ?

ஏன்னா அலமு அக்கா ஆத்துக்காரர் சோமநாதய்யர் இருக்காரில்லியோ.

சோமனுக்கு என்ன வந்தது ? மதுரையிலே சாப்பாட்டுக்கடை வச்சுண்டு வசதியாத்தானே இருக்கான் ?

சங்கரன் கேட்டபோது அவள் சும்மா இருந்தாள். சங்கரனுக்கு எல்லாம் தெரியும் என்பது அவளுக்குத் தெரிந்த சங்கதிதான்.

எல்லோரும் சோற்றுக்கடை போடுகிறார்களே, முன்னேற்றமாக வருகிறார்களே என்று சோமநாதனும் அம்பலப்புழையை விட்டுவிட்டு மதுரைக்குக் குடியேறி சோற்றுக்கடை போட்டான். கிட்டாவய்யன் வேதத்தில் ஏறிப் பரம்பரைச் சொத்தான காணியைப் பங்கு பிரித்துப் போன நாலாம் வருஷம் விருச்சிக மாதத்தில் அவன் செய்த காரியம் அது.

விசாலாட்சி மன்னி கதறக் கதற உறவை அறுத்துக்கொண்டு, இரண்டு பெண் குழந்தைகளையும், நிறைமாத சூலியான சிநேகாம்பாளையும் கூட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு கிட்டாவய்யன் பிரிந்து போன தினமும் ஒரு விருச்சிகம் முதல் தேதியில் தான்.

சபரிமலை அம்பலத்துக்குப் போக நான் வருஷா வருஷம் விரதம் ஆரம்பிக்கற தினம்டா கிட்டா இது. மாலை போட்டுண்டு வந்துடறேன். நாளைக்கு எங்கே கூப்பிடறியோ அங்கே வந்து எல்லாக் கையெழுத்தும் போட்டுத் தரேன். ஒரு நாள் பொறுத்துக்கோடா.

தமையன் துரைசாமி அய்யன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கிட்டாவய்யன் கேட்கிற வழியாக இல்லை. விருச்சிகம் பந்திரெண்டில் கொல்லத்தில் கடை ஆரம்பிக்க எல்லா ஏற்பாடும் செய்தாகி விட்டது. ஊருக்கு இப்போதே மூட்டை முடிச்சைக் கட்டாவிட்டால் எல்லாம் தாமதமாகி விடும். யாரோ எங்கோ மலை ஏறட்டும். இறங்கட்டும்.

துரையப்பா, அவனைப் போகவிடுடா. போகணும்னு முடிவு பண்ணிட்டான். கிட்டாவய்யன் இல்லை. இவா ஜான் கிருஷ்ணமூர்த்தி. போய்ட்டு வாங்கோ. க்ஷேமமா இருங்கோ எல்லோரும் எங்கே யாரா இருந்தாலும்.

குப்புசாமி அய்யன் சுவரை வெறித்துக் கொண்டு சொன்னான் அப்போது.

விசாலாட்சி பெருங்குரலெடுத்து அழுது யாரும் பார்த்ததில்லை. இப்போது பார்த்தார்கள். கிட்டாவய்யன் கிறிஸ்தியானி ஆனதில் அவளுக்கு எந்த வருத்தமும் இல்லை. பிள்ளைத் தாய்ச்சியான சிநேகாவையும் சிற்றாடை கட்டின இரண்டு பெண்குட்டிகளையும் இப்படிப் பழகிய இடத்தை விட்டுப் பறித்துக் கிளப்பிக் கொண்டு போகிற துக்கத்தைத் தான் அவளால் தாங்க முடியவில்லை.

அக்கா, எனக்கும் போக என்ன இஷ்டமா ? அதுவும் இப்படி வாயும் வயறுமா நிக்கற ஸ்திதியிலே ? அவரானா பிடிவாதம் பிடிக்கறார். கொஞ்ச நாள்தான் பொறுத்துக்கோங்கோ. எல்லோருமா இங்கே திரும்பிடுவோம்.

விசாலாட்சி அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டாள். அவளுக்கு என்னமோ தோன்றியது அதெல்லாம் நடக்கிற விஷயம் இல்லை என்று. இந்தப் பெண் குழந்தைகள் அடுத்து அச்சனோடு கூட குரிசுப் பள்ளிக்குக் குடை பிடித்துக்கொண்டு நடப்பார்கள். சிநேகா வயிற்றில் இருக்கப்பட்டது ஆணோ, பெண்ணோ பிறந்தது முதல்கொண்டு அப்படியே வளரும். பின்னால் ஏதோ ஒரு தினத்தில் சிநேகாவும் குரிசு பிடித்தபடி ஞாயிறாழ்ச்சை காலை நேரத்தில் பள்ளிக்குப் போவாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 11:46 pm

பங்கு பிரித்து முடித்தபோது கிட்டாவய்யன் உடனடியாகத் தன் காணியை விற்றுக் காசாக்கிக் கொண்டான். குப்புசாமி அய்யன் சிநேகிதன் கருநாகப்பள்ளி சங்குண்ணிதான் அவன் நிலத்தை வாங்கியது.

கிட்டாவய்யன் போன அடுத்த வருடமே, அவன் தமக்கை லட்சுமியும், ராமேந்திரனும் கண்ணூருக்குப் புறப்பட்டுப் போனார்கள். அங்கே அடுக்களைப் பணிக்கு ஒரு தம்புரான் நிறையப் பணம் கொடுத்துக் கூப்பிட்ட காரணத்தால் ராமேந்திரன் கிளம்பினான்.

அடுத்துப் போன அலமேலுவும் சோமநாதனும் தான் மதுரையில் சோற்றுக்கடை போட்டது. மைத்துனன் கிட்டாவய்யன் போல் வரவேண்டும் என்று எதிர்பார்த்து ஆரம்பித்த வியாபாரம் முதலுக்கே நஷ்டமாக முடிந்தபோது மூன்று பிள்ளைகளையும், அலமுவையும் வைத்துக் காப்பாற்ற வழியேதும் தெரியாமல் அலமுவை பகவதியைப் பார்க்க அனுப்பி வைத்தான் சோமநாதன். அவள் வந்த விவரம் எல்லாம் தெரிந்தே தான் பேசினான் சங்கரன்.

அத்திம்பேருக்கு நம்ம கடையிலே ஒரு இடம் கொடுத்தா ஒண்டிப்பார்.

பகவதி தயங்கித் தயங்கித் தெரிவித்தாள் அப்போது.

சின்னக் கடை. அங்கே நான் உக்காந்தாலே பிருஷ்டத்தை அப்படி இப்படித் திரும்ப முடியலே.

அட ராமா, இங்கேன்னா இங்கே இல்லே. மதுரையிலே தாணுப்பிள்ளை கைலாச யாத்திரையானதுக்கு அப்புறம் வேறே யாரையுமே காரியஸ்தனாப் போடலியே. அங்கே இவரை இருக்கப் பண்ணக் கூடாதா ? கணக்கு வழக்கு எல்லாம் படிச்சிருக்கார் திண்ணைப் பள்ளிக்கூடத்திலே.

அந்த இடத்தில் சென்னைப் பட்டணம் தெலுங்கு பிராமணனை நியமிக்க சங்கரனும் கருத்தானும் சேர்ந்து முடிவு எடுத்திருந்தார்கள். ரங்கூனுக்கு வியாபாரத்தை விருத்தியாக்கக் கிளம்பிப்போன இன்னொரு பாகஸ்தன் சுலைமான் தெலுங்கனைக் கப்பலேற்றி உடனே அனுப்பி வைக்கச் சொல்லியிருந்தான்.

பிராமணன் கப்பலேற மாட்டானே என்று சங்கரன் சந்தேகத்தைக் கிளப்ப, ஆமா அய்யர் சாமி, அப்படி ஏறினா கப்பலே தலைகீழாக் கவுந்துபோயிடறதே என்றான் கருத்தன் கள்ளச் சிரிப்போடு.

தெலுங்கு அய்யன் மதுரைக்கும் வரமுடியாது, ரங்கூனுக்கும் வரத் தோதுப்படாது. சென்னை பட்டணத்திலேயே தொடர்ந்தால் சரி. இல்லாவிட்டால் வேறே உத்தியோகம் பார்த்துக் கொள்வதாகத் தீர்மானமாகச் சொல்லவே அந்த யோசனையைக் கைவிட வேண்டி நேர்ந்தது. தெலுங்கனுக்குத் தெரிந்த வியாபார நெளிவு சுளிவு கருத்தானின் வாப்பா தஸ்தகீர் ராவுத்தருக்கே அத்துப்படியானதில்லை என்று ராவுத்தரே சொன்னதால் ஏற்பட்ட மதிப்பின் அடிப்படையில் எடுத்த முடிவு அது.

சோமநாதய்யன் அப்புறம் சங்கரனின் மதுரைக் காரியஸ்தனானான். நாலைந்து மாதம் தவித்துத் தண்ணீர் குடித்து இப்போது இரண்டு வருஷமாக உற்சாகமும் நம்பிக்கையுமாக வியாபாரத்தை விருத்தி பண்ணிக்கொண்டிருக்கிறான்.

பகவதியின் இரண்டாம் பெண் கல்யாணியின் காதுகுத்துக் கல்யாணம் என்று முந்தாநாள் அலமேலுவும் சோமநாதனும் வந்து சேர்ந்த ஒரு மணி நேரத்தில் சங்கரனின் கடைப்பக்கமாக அதி நவீனமான ஒரு சாரட் வண்டி உருண்டோடிக் கொண்டு வந்தது.

பக்கத்து அரண்மனைக்காரன் ஜமீன்தார் ராஜமானியம் உயர்ந்து புது வண்டி பூட்டியிருக்கிறான் என்று சங்கரன் அசிரத்தையோடு பார்க்க, வண்டி அவன் கடை வாசலில் நின்றது.

உள்ளே கிட்டாவய்யன். குடும்பம்.

சங்கரனுக்குத் தெரிந்த கிட்டாவய்யன் இல்லை இது. நீளமான சட்டையும், அரையில் பஞ்ச கச்சமும் மார்பில் வெளியே தெரியும் சிலுவையுமாக இருந்த ஜான் கிட்டாவய்யன் சகலத்துக்கும் காற்றில் குரிசு வரைந்தபடி இருந்தான். அவனுடைய ஒரே மகன் கையிலும் காலிலும் ஆறு விரலோடு சூட்டிகையாகக் கடைக்கு முன்னால் வைத்திருந்த தலையாட்டிப் பொம்மைத் தலையைத் திருகி எடுக்க ஆரம்பித்தான். அது எப்போதோ இயக்கம் நின்றுபோய் தூசியும் துப்பட்டையுமாகக் கிடந்தது.

தூசி எல்லாம் சுவாசத்திலே ஏறினா ஜலதோஷம் வரும்.

வண்டிக்குள்ளே இருந்து இறங்கின சிநேகாம்பாள் மன்னி முன்னைக்கிப்போது பெருத்திருந்தாள். கழுத்தில் தாம்புக்கயிறு போல் ஏகத்துக்கு சொர்ணம் மாலையாகத் தொங்கிக் கொண்டிருந்தது.

வீட்டுக்குக் கூட்டிப் போனபோது அவள் பகவதியிடம் மதுரைக் கோயில் குங்குமத்தை நீட்டினாள்.

இவா எல்லாம் கோயில் குளம்னு எங்கேயும் போறதில்லே. சதா பாதிரி சங்காத்தம், குரிசு பஜனைதான். நம்மால முடியுமோடி பொண்ணே ?

அவள் அப்படியே தான் இருந்தாள். சுற்றி நிகழ்ந்த எதுவும் அவளைப் பாதித்ததாகப் பகவதிக்குத் தெரியவில்லை. இல்லை பணம் பெருக்கும்போது அதெல்லாம் போதத்திலேயே வராது போலும் என்று பகவதி நினைத்துக் கொண்டாள்.

என்னதான் பிரியம் இருந்தாலும் வேதம் மாறிப்போனவனைக் குடும்பத்தோடு வீட்டில் இருக்க வைத்தால் ஜாதிப் பிரஷ்டம் செய்து விடுவார்கள் ஊரில் என்று தோன்ற, சங்கரன் அவர்களை நாலு தெருத்தள்ளி ஒரு காலி மனையில் தங்க வைத்தான். ஊரில் விற்க வருகிற மனையெல்லாம் அவன் தான் இப்போது வாங்கிக் கொண்டிருக்கிறான்.

ஜான் கிட்டாவய்யன் சென்னைப் பட்டணத்தில் ஒரு சுவிசேஷக் கூட்டத்துக்காகக் குடும்பத்தோடு போய்க் கொண்டிருக்கிறான். அது முடித்து, சென்னைப் பட்டணத்தில் சாப்பாட்டுக் கடை போடவும் உத்தேசமாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 11:46 pm

அலமேலு சிநேகாம்பாளோடோ தமையன் கிட்டாவய்யனோடோ முகம் கொடுத்துப் பேசவில்லை. சோமநாதனும் தான்.

சிநேகா சாவக்காட்டுக் கிழவனுக்கு எதைக் காட்டினாளோ, அவன் கள்ளுக் குடித்த குரங்கு மாதிரி லகரி ஏறி இவாளுக்குப் பணமாக் கொட்டி இறைக்கிறான் என்று அலமேலு சொன்னபோது பகவதி அவள் வாயைப் பொத்தினாள்.

அக்கா, எதுக்குத் தூஷணை பண்ணணும் பிறத்தியாரை ?

நான் என்ன சொல்றது ? ஊரோடு வழிச்சுண்டு சிரிக்கறாளாமே. கொல்லத்திலே போய்க் கேட்டுப்பாரு. அதான் பட்டணக்கரைக்குக் குடும்பத்தோடு சவாரி விடறான்.

எல்லா ஊரும் எல்லாரையும் பற்றியும் பேச ஏதாவது வைத்திருக்கிறது. கொட்டகுடித் தாசியோடு சங்கரன் தொடுப்பு வைத்திருக்கிறதாகப் பகவதி காதுக்கும் கேட்கிறது. தாசி பெற்ற ஒரு பெண்குழந்தை சங்கரனுக்குப் பிறந்தவள் என்றார்கள் ஊரில். பகவதியின் மூத்த பிள்ளை சாமிநாதன் கூடத்தான் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறாள் அவள். பக்கத்தில் வைத்துப் பார்க்கும்போதெல்லாம் அந்தக் குழந்தை முகத்தில் சங்கரனின் சாயலைத் தேடி பகவதி தோற்றிருக்கிறாள். குழந்தையிடம் கேட்க முடியுமா ? இல்லை, கொட்டகுடித் தாசி வீட்டுப்படியேறி அவளைக் கேட்க முடியுமா ?

பொண்ணே, இந்தாத்துப் புருஷா எல்லாம் அலையப்பட்டவா. வாச்சதும் பெத்ததும் எல்லாம் தான். இவனைப் பத்திரமாப் பாத்துக்கோ.

கல்யாணி அம்மாள் படுத்த படுக்கையாகவே இருந்து பகவதிக்கு மூத்த பிள்ளை பிறந்ததற்கு அடுத்த மாதம் உயிரை விட்டபோது பகவதியைக் கூப்பிட்டுச் சொன்னது இது.

நான் திருப்புத்தூர் வரைக்கும் போய் ஒரு வியாபார விஷயம் பேசிட்டு வரேன். சாயங்காலம் மதுரை திரும்பணும். தயாரா இரு. வண்டிக்கு வேலை இருக்கு. எந்தப் பன்னாடைக்கும் சேவகம் பண்ண இல்லை இது.

சோமநாதய்யன் சத்தம் போட்டு அறிவித்துப் போனது காதில் விழ பகவதி உள்ளே வந்து என்ன அலமு அக்கா என்று அப்பாவியாக விசாரித்தாள்.

அந்த அவிசாரிக்குச் சாப்பாடு கொண்டு போறதுக்கு வண்டியை அனுப்பணும்னியாமேடி பகவதி ? வண்டியும் மாடும் வைக்கோலும் எல்லாம் உங்காத்துச் சொத்துதான். ஆனாலும் மாப்பிள்ளைக்குச் சொல்லாம நீயே தீர்மானிச்சுக் காரியம் நடத்தறது சரியோடி பொண்ணே ?

சரியில்லையோ என்ன எழவோ அக்கா. அங்கேயும் குழந்தைகள் இருக்கு. சொந்தம் தான் வேண்டாம். விருந்தாளியா வந்திருக்கறவாளைப் பட்டினி போடணும்கிறியா ?

பகவதி வாசலுக்குப் போய் சாமா அடே சாமா என்று சத்தமாக விளிக்க, வெளியே விளையாடிக் கொண்டிருந்த அவள் மகன் ஓடி வந்தான்.

ஐயணை வண்டியிலே இந்தப் பாத்திரத்தை எல்லாம் எடுத்திண்டு போய்.

அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் குஷியாகக் கிளம்பினான்.

அத்தை, நானும் போறேனே.

கூட விளையாடிக்கொண்டிருந்த தோழன் சொன்னான்.

மருதையா. உங்க அம்மா திட்டுவாங்க. நீ அரண்மனைக்குப் போ.

பகவதி அந்தச் சிறுவனிடம் சொன்னாள்.

ராஜாவுக்குக் காலம் தப்பிப் பெய்த மழை போல் வயோதிகத்தில் அடியெடுத்து வைக்கும்போது பிறந்த குழந்தை. அவன் மட்டும் இல்லாவிட்டால், துரைத்தனம் ஜமீன் நிர்வாகத்தை அடிமடியில் கைவைத்துப் பிடுங்கிக் கொண்டிருக்கும் என்பதால் ராணியும் ராஜாவும் ஏகத்துக்கு பிரியத்தைப் பொழிந்து வளர்த்ததில் வயதுக்கு மீறின கடோத்கஜனாக வளர்ந்திருந்தான் அவன்.

ஆத்தா ஒண்ணும் சொல்லாது. நீங்க அதுங் காதுலே ஏன் போடுறீக ?

மருதையன் உப்பின கன்னத்தில் சிரிப்பை அடக்கியபடி சொல்லிவிட்டு ஓடியே போனான். ஐயணையைத் தள்ளிக் கொள்ளச் சொல்லி வண்டியை வேகவேகமாக ஓட்டிக் கொண்டு போனவன் அவன்தான்.

மருதையா, எங்க மாமா மகன் கடையிலே தலையாட்டி பொம்மையைத் திரும்ப நகர வச்சுட்டான் தெரியுமோடா ?

சாமிநாதன் பெருமையோடு சொன்னான். ஒரு நாள் பழக்கத்தில் ஜான் கிட்டாவய்யனின் பிள்ளை வேதையனோடு நெருங்கி இருந்தான் அவன்.

அவனுக்கு ஒவ்வொரு கையிலும் ஆறு விரல் இருக்கு தெரியுமா ?

சாமிநாதன் இன்னொரு தகவலையும் தோழனுக்கு அறிவித்தான்.

கீழே ஒண்ணா ரெண்டாடா என்றான் மருதையன்.

சின்னப் புள்ளைங்க பேசற பேச்சா சாமி இது ?

ஐயணை சத்தம்போட ஆரம்பித்தது இருமலில் முடிய வண்டிக்கூட்டில் சாய்ந்தபடி தூங்க ஆரம்பித்தான்.

நாலு பாஷை பேசுவானாம். களரின்னு ஏதோ யுத்தமெல்லாம் தெரியுமாம். ஆனா வெளவால் மட்டும் கெட்ட பயம்.

சாமிநாதன் சொன்னபோது வண்டியைக் கிட்டாவய்யன் குடும்பம் தங்கியிருந்த வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தான் மருதையன்.

Sponsored content

PostSponsored content



Page 16 of 17 Previous  1 ... 9 ... 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக