புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
83 Posts - 43%
prajai
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
7 Posts - 4%
Barushree
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Jenila
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கும் இமை நானுனக்கு


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:33 pm

First topic message reminder :

காக்கும் இமை நானுனக்கு - Page 2 Kakum

எப்போதும் போலவே அந்தப் பெரிய கடைக்குள் நுழையும் போது, நளினியின் மனதில் ஒரு பெருமிதம் எட்டிப் பார்த்தது.

'உன்னதம்.'

இந்தப் பெரிய பல்பொருள் அங்காடியில் அவள் வேலை செய்கிறாள்.

அகன்ற சலவைக் கல் படிக்கட்டுகளுடன் கம்பீரமாய் மூன்று மாடிக் கட்டடம். எத்தனை கோடி பெறுமோ?

படியேறும் போதே, ஓர் அரண்மனைக்குள் அடியெடுத்து வைக்கும் பிரமிப்பு.

எண்ணம் தொடரும் போதே, அவளது மனதுக்குள் நெருஞ்சியாய் உறுத்தலும் தொடங்கி விட்டது.

தோற்றத்தில் மட்டும் அந்தக் கட்டடம் அரண்மனையாக இருக்கவில்லை! உள்ளே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களும் அரண்மனைவாசிகளுக்கு ஏற்றவை தான். ஏன்? அவர்கள் மட்டும் தான் வாங்கக் கூடியவையும் கூட.

தரத்தால் மட்டும் அல்ல. விலையும் அப்படித்தான்.

துணிகளா? மீட்டர் எண்ணூறு ஆயிரம் எல்லாம் சர்வ சாதாரணம். ஐந்நூறுக்குக் குறைவாக ஒன்றுமே கிடையாது.

அதே போல, மரச் சாமான்கள் பகுதி ஒன்று உண்டு. சோஃபா செட் ஒரு லட்சம் என்பார்கள். என்ன? அங்கங்கே தந்தம் இழைத்திருக்கும்! நல்ல வைரம் பாய்ந்த தேக்காக இருக்கும்.

அசல் நவரத்தினங்கள் பதித்த நகைகள். வைரமிழைத்த கைக்கடிகாரங்கள். அவற்றிலும், செய்கூலியே ஆளைச் சாப்பிட்டுவிடும். கூலி எவ்வளவு, சேதாரம் எவ்வளவு என்று கணக்குப் பார்க்கிறவர்களால், இங்கே வாங்க முடியாது.

அதனாலேயே, சாதாரண மக்கள் இந்தக் கடையின் பக்கம் வருவதில்லை. அப்படியே வந்தாலும், இந்தப் பணக்காரச் சீமான்கள் வாங்கும் பொருட்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று பார்த்துப் போவதற்காகத்தான். அதுவும் அபூர்வமாகத்தான். ஏனெனில், வாங்க இயலாத பொருட்களைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட எத்தனை பேருக்குப் பிடிக்கும்?

யாரும் அறியாமல் தட்டிக் கொண்டு போய்விடும் திட்டத்துடன் வருவோரும் உண்டு. ஆனால் அங்கங்கே சாதாரண உடையில் காவலுக்கு ஆட்கள் இருந்ததால், அது பலித்தது இல்லை. அன்றுவரை!

அந்தக் காலத்தில், பெரிய பெரிய பிரபுக்கள், வெள்ளைக்காரத் துரைகள், ராஜ குடும்பத்தினர், ஜமீந்தாரர்கள் போன்றோருக்கு ஏற்ற பொருட்களை, ஒரே இடத்தில் வாங்குவதற்கு வசதி செய்யும் பொருட்டுச் சில மாதங்களுக்கு முன் வரை இதை நடத்திய பெரியம்மாவுடைய மாமனார், இந்த அங்காடியைத் தொடங்கியதாகச் சொல்லுவார்கள்.

இந்தத் தரம் குறையாமல் காப்பதுதான் முக்கியக் கொள்கையாக இருந்தது.

எனவே, அங்கொருவர், இங்கொருவர் தவிர, இந்தக் கடையில் வாடிக்கையாளர் அலைமோதி, நளினி பார்த்ததே கிடையாது.

குறைந்த பட்சமாக, அவள் இங்கே வேலைக்குச் சேர்ந்த இந்த மூன்று மாத காலமாக. அதைப் பற்றி, அங்கே யாரும் கவலைப்படுவதும் கிடையாது.

தளத்துக்கு ஒருவராக, மூன்று தளங்களுக்கும், மூன்று வயதான நிர்வாகிகள். ரொம்ப காலமாக இங்கேயே பணி புரிகிறார்களாம்.

விற்பனை, இருப்புக் கணக்கு எடுப்பதும், புதிய பொருட்களுக்கு ஆர்டர் கொடுப்பதும் அவர்களது பொறுப்பு.

அவர்களிடம் நளினி மோதிப் பார்த்திருக்கிறாள். அதை விடக் கற்பாறையில் மோதினால், ஏதோ பாறை கொஞ்சம் அசையக் கூடும் என்று புரிந்தும் இருக்கிறாள்.

புருவங்களைத் தூக்கி வைத்துக் கொண்டு, மூக்கு நுனியில் நிற்கும் கண்ணாடி வழியே, ஒரு தூசியைப் போலப் பார்த்து, "இந்தக் கடையின் பாரம்பரியம் பற்றிச் சின்னப் பெண் உனக்கு என்ன தெரியும்? எழுபது ஆண்டுகளாக, எனக்குத் தெரியவே நாற்பத்தைந்து வருஷங்களாக மதிப்பும் மரியாதையுமாக நடத்தப்படுகிற கடை! பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் காரில் வந்து இறங்கி, மறு விலை கேளாமல் வாங்கிப் போகிற இடம்! இதில் போய், உன் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்ப் பொருட்களைக் கொட்டிக் கேவலப்படுத்துவதா? பெரியம்மா மட்டும் இருந்து, அவர்கள் காதில் உன் பேச்சும் விழுந்திருக்கட்டும், உன்னை அப்போதே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருப்பார்கள். முதலில், வேலை பார்க்கக் கூட, நீ இங்கே உள்ளே நுழைந்திருக்க முடியுமா? இப்போதுதான் என்ன? உன்னை நாங்களே வெளியேற்றி விடுவோம்! என்னவோ புதுசாய் வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள் என்று விட்டு வைத்திருக்கிறோம்," என்று மிரட்டுவார் ஒருவர்.

"உன் வேலை என்ன? அங்கங்கே, தளத்துக்குத் தளம் பொருட்களைக் கவர்ச்சிகரமாகக் கண்ணுக்கு அழகாக அடுக்கி வைப்பதுதானே? அத்தோடு நிறுத்திக் கொள். அதற்கு மேல், அதிகப் பிரசங்கித்தனம் செய்யாமல், வாயை மூடிக் கொண்டிரு. மீறினால், வேலைக்கே வேட்டு வைத்து விடுவோம்," என்பார் அடுத்தவர்.

"பெரியம்மா பார்த்து வைத்த ஆட்கள் நாங்கள். எங்களுக்கு வேலை தெரியாது என்று, நீ வந்து சொல்கிறாயா? வயதுக்கு மரியாதை கொடுக்கக் கூடத் தெரியவில்லையே!" என்று ஆளாளுக்கு அவளை மிரட்டினார்களே தவிர, வளாகத்தில் உள்ள கடைப் பொருட்களின் விற்பனைப் பெருக்கத்துக்காக, உருப்படியாக எதையும் செய்யக் காணோம்.

இந்த அழகில், மதிய உணவுக்காக மூடுவது வேறு. பன்னிரண்டு மணிக்கு எடுத்து வைக்கத் தொடங்கினால், மீண்டும் கடை திறக்க நாலு மணி ஆகும்.

வாடிக்கையாளர்கள் வீட்டில் சாப்பிட்டுத் தூங்கி எழுந்து, கடை கண்ணிக்குக் கிளம்பி வர, அவ்வளவு நேரமேனும் ஆகாதா என்று கேள்வி வேறு.

தூக்கம் தேவைப்படுவது, கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு அல்ல, வளாகத்தின் முதிய நிர்வாகிகளுக்குத் தான் என்பது, நளினியின் அபிப்பிராயம்.

ஆனால், யாரிடம் முறையிடுவது?

அவளுக்கும் அலுத்து விட்டது.

எப்படியோ போகிறார்கள்.

இந்த வளாகத்துடைய உரிமையாளர்கள், பல தலைமுறைகளாகப் பெரிய பணக்காரர்கள். எங்கெங்கோ பங்களாக்கள், சொத்துக்கள், பெரிய வருமானங்கள் உண்டு என்று கேள்வி.

இந்தக் கடையிலிருந்து வந்து, நிறைய வேண்டியதில்லை. சும்மா ஒரு கௌரவத்துக்காக நடத்துகிறார்கள் என்றும்.

அப்புறமென்ன?

விற்பனைப் பகுதிப் பொறுப்பாளரிடமிருந்து, கணக்குச் சொல்லி எடுத்த பொருட்களுக்குக் கையெழுத்திட்டு விட்டுப் பொருட்களோடு வந்து, அவற்றை இயன்றவரை கவர்ச்சிகரமாகக் கண்ணாடித் தட்டுகளில் அடுக்கத் தொடங்கிய போது, வளாகத்துடைய காவல் பொறுப்பாளரான பூவலிங்கம் வந்தார்.

"என்னம்மா, நீ அடுக்கிறதைப் பார்த்து, கண்ணாடி அலமாரியோடு தந்துவிடுங்கள் என்று கேட்டு விடுவார்கள் போல இருக்கிறதே!" என்று கிண்டலடித்துவிட்டு, "ஜாக்கிரதை அம்மா! எந்தப் பொருளும் தவறிவிடாமல் பார்த்துக் கொள்," என்று எச்சரித்து விட்டுப் போனார்.

ஆமாம் என்று அவளுக்கும் அலுப்பாகத்தான் இருந்தது.

ஏதோ செய்வன திருந்தச் செய்வது என்ற பழக்கத்தில் செய்து கொண்டிருந்தாளே தவிர, நளினிக்கு, அவளது வேலையில் ஈடுபாடு கொஞ்சம் குறைந்து தான் போயிற்று எனலாம்!

கொஞ்சமென்ன? ரொம்பவே.


எவ்வளவு காலம்தான் இருப்பதையே மாற்றி அமைத்துக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது?

விற்க விற்க, விதம் விதமாகப் பொருட்களைப் புதிது புதிதாக அன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப வாங்கி வாங்கி வைத்தால், அவளும் புதிது புதிதாகக் கண்ணைக் கவரும்படி விதம் விதமாக அடுக்க முடியும்!

அதுவும், இன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப என்றால், எண்ணில் அடங்காத வகைகள் எத்தனையோ கிடைக்கும். அவைகளை வாங்கிக் கொடுத்தால்...

ஆனால், அதெங்கே இங்கே நடக்கும்? அப்புறம், மழை கொட்டோ கொட்டென்று கொட்டி, ஊரெல்லாம் வெள்ளத்தில் முழுகிப் போய்விடாதா?

எண்ணத்திற்கு ஏற்ப, சிறு ஏளனத்துடன் தோளைக் குலுக்கியவாறு திரும்பியபோது தான், நளினி முதலில் அவனைப் பார்த்தது!

நல்ல உயரம்! உயரத்துக்குச் சற்றே மெலிவுதான் என்றாலும், உடல் கட்டில், நடையில் உறுதி தெரிந்தது.

அவள் அடிக்கடி ஆசையாக ஏறி இறங்கும், அழகிய அரண்மனைப் படிக்கட்டுகளின் வழியே வராமல், லிஃப்டின் கதவைத் திறந்து வெளியே வந்து கொண்டிருந்தான்.

அவன் மட்டுமல்ல, அவனோடு இன்னும் சிலரும்... மொத்தம் மூன்று பேர்.

அவனுக்கு முன்னும் பின்னுமாக வந்த மற்ற இரண்டு பேரும், பந்தாவாகப் பாக்கெட்டுக்குள் ஒரு கையை விட்டபடி, இங்கும் அங்குமாகத் திருதிருவென்று விழித்துப் பார்த்தவிதம் அவளுக்குச் சிரிப்பூட்டியது.

பின்னே கடைக்கு வந்தால், என்னென்ன சாமான் இருக்கிறது என்று பாராமல், இங்கே யாரேனும் திருடன் இருக்கிறானா என்று கண்களை உருட்டி உருட்டித் தேடுவது போலப் பார்த்தால்...?

இவர்கள் தேடுவது, திருடனையா... அல்லது காவலாளியையா?

ஒருவேளை, இவர்களே திருடர்களாக இருந்தால்... இருந்தாலும், அப்படி ஒன்றும் பயப்படத் தேவையில்லை! இந்தக் கடை வளாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடு வலுவானது. பில் போட்டுப் பணம் தராத எதையும் எளிதில் வெளியே கொண்டு போய்விட முடியாது. அத்தோடு, அந்தத் தளத்தின் விற்பனை ஆட்களோடு, இவர்களோடு வந்த அந்த மனிதனும் இருக்கிறான்!

நேர் நடையுடன் வந்த அவன் உதவ மாட்டானா, என்ன? பார்த்துக் கொள்ளலாம்.

தன்னையறியாமல் ஓரப் பார்வை அந்தப் புதியவனிடம் ஓடவும், கட்டுப்படுத்திக் கொண்டு திரும்ப முயன்றவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

ஏனெனில், அவன் தனது பழைய கைக்கடிகாரத்தைக் கழற்றி வைத்துவிட்டு, அங்கிருந்த விலை உயர்ந்த ஒன்றை எடுத்துத் தன் கையில் கட்டிக் கொண்டிருந்தான்.

அதன் முள், எண்கள் எல்லாம் வைரங்கள்! விலை லட்சத்துக்கும் மேல்! அதைப் பார்த்ததும், தன் பழைய ஓட்டைக் கடிகாரம் பிடிக்காமல் போய் விட்டது போல!

ஆனால் அதற்காகத் திருடலாமா?

அதுவும் திருடர்களைப் பிடிக்க யார் உதவுவான் என்று நினைத்திருந்தாளோ, அவனே அல்லவா, அங்கே திருடிக் கொண்டிருந்தான். என்ன அநியாயம்!

இருந்திருந்து, அவனைப் போய் நல்லவன் என்று நினைத்தாளே.

நல்லவன் போல வேஷமிடும் அயோக்கியன்.

இவனது முகத்திரையைக் கிழித்து, இவனது உண்மைத் தோற்றத்தை ஊர் உலகத்துக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

அவன் கைக்கடிகாரம் திருடியதை அறியாதவள் போன்று, அவனை நெருங்கினாள் நளினி.

ஆனால், அந்த நெடியவனை அவள் நெருங்கு முன், மற்ற திருதிரு முழிக்காரர்களில் ஒருவன், குறுக்கே வந்து, அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சற்றே விலகி நின்றான்.

ஏன் குறுக்கே வந்தான்? ஏன் விலகிப் போனான்?

எப்படியோ போகட்டும். இவனைப் பார்த்துத் திருடனை விட்டுவிடக் கூடாது என்று எண்ணி, அவனை நெருங்கி, "இங்கிருப்பதை விட விலை உயர்ந்த வைரங்கள் அந்த அறையுள் இருக்கின்றன. பார்க்கிறீர்களா, சார்?" என்று கேட்டாள்.

"பரவாயில்லை. இந்த வளாகத்தில், விற்பனையில் அக்கறை உள்ளவள் நீ ஒருத்தியேனும் இருக்கிறாயே," என்றவன், அவளைப் பாராமல் எங்கோ நோக்க, அந்தத் 'திருதிருமுழி'களில் ஒருவன் வேகமாக அந்த அறையினுள் சென்றுவிட்டுத் திரும்பி வந்தான்.

இன்னொருவன் நெடியவனை ஒட்டிக் கொண்டே நின்றான்.

இவர்கள் மூவருமே கூட்டுக் கள்ளர்களாக இருக்கக் கூடுமோ என்று எண்ணிவிட்டு, இராது என்ற முடிவுக்கு வந்தாள் நளினி. ஏனெனில், மற்றவர்கள் யாரும் பொருட்களின் பக்கம் பார்க்கக் கூட இல்லையே.

அப்படியே கூட்டாக இருந்தால் சேர்ந்து மாட்டட்டும் என்று எண்ணியவளாய், "வாருங்கள் சார்!" என்று அழைத்துச் சென்றாள்.

உள்ளே சென்றதும், அவளையே நோக்கி, "என்னவோ விலை உயர்ந்த வைரங்கள் இங்கே இருப்பதாகச் சொன்னாயே. பார்த்தால், வெறும் பீரோக்கள் மட்டும் தானே இருப்பதாக அல்லவா காண்கிறது?" என்று கேட்டான் அவன்.

"இருக்கின்றன சார். ரொம்பவும் விலை உயர்ந்தனவா? பீரோவில் நன்றாகப் பூட்டி வைத்திருக்கிறார்கள். நான் போய்ச் சாவியை வாங்கி வந்து திறந்து காட்டுகிறேன் சார்!" என்று வேகமாக அறையிலிருந்து வெளியே வந்தவள், அதைவிட அதி விரைவாக அறைக்கதவை இழுத்துப் பூட்டினாள்.

மின்னலெனப் பாய்ந்து கீழிறங்கிச் சென்றவள், கீழ்த்தளத்தில் மூன்று தளத்து நிர்வாகிகளும் சேர்ந்து அமர்ந்து, நிறுவன விஷயமாகக் கலந்துரையாடும் - அவளது அபிப்பிராயப்படி, மூவருமாக வெற்று அரட்டையடிக்கும் - தனி அறைக்குள் வேகமாகச் சென்றாள்.

"அனுமதி கேட்காமல், நீ எப்படி..." என்று அதட்டலாகத் தொடங்கிய ஒருவரின் பேச்சை அலட்சியம் செய்து, "நம் கடை வளாகத்துள் ஒரு திருடன் புகுந்து விட்டான் சார். அவனைக் கூட்டாளிகளோடு, நம் ரிக்கார்டு அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு வந்தேன். வந்து, அவர்களைப் பிடித்துப் போலீஸில் ஒப்படையுங்கள்!" என்று மூச்சு விடாமல் கூறி முடித்து விட்டு, அதன் பின்னரே மூச்சு வாங்கினாள் நளினி.

பெரியவர்கள் மூவருமே திகைத்துத் திணறிப் போயினர்.

அவர்கள் அறிந்தவரையும், திருடர்கள் என்றால், பில் போட்டுப் பணம் கொடுக்காமல், ஒன்றிரண்டு பொருட்களைக் கொண்டு செல்ல முயல்வார்கள். உள் வாயிலைத் தாண்டும் போதே 'பீப்' சத்தம் வந்துவிடும். 'செக்யூரிட்டி' ஆட்கள் உடனே திருடனைப் பிடித்து விடுவார்கள். மரியாதையாகப் பணத்தைக் கேட்பார்கள். பணம் இல்லையென்றால், பொருளைப் பிடுங்கிக் கொண்டு, நாலு தர்ம அடி போட்டு விரட்டி விடுவார்கள்.

இப்போது, இவள் ஒருத்தியாக ஒன்றுக்கு மேற்பட்ட திருடர்களைப் பூட்டி வைத்தாளாமே! நம்புகிறாற் போலவா இருக்கிறது?

மூளை உள்ள எவனாவது அந்த அறைக்குள் வைர நகைகள் இருப்பதாக நம்பி உள்ளே செல்லுவானா?

அங்கே ஒன்றும் இல்லாததும் நல்லதுதான்.

ஆனால், எப்படிப்பட்ட முக்கியமான ரிக்கார்டுகள் அங்கே பத்திரமாய் வைக்கப்பட்டு இருக்கின்றன. சொத்துக் கணக்கு, சொத்துரிமைக் கணக்கு, இத்தனை ஆண்டு வரவு செலவுக் கணக்கு... அங்கே போய்த் திருட்டுப் பயல்களை விடுவதா?

ஆனால், இவள் சொன்னதை நம்பி, மூன்று தடிமாடுகள் வெறும் இரும்புப் பீரோக்கள் இருக்கும் அறைக்குள் போய் மாட்டிக் கொள்வார்களா?

கேழ்வரகில் நெய் வருகிறது என்று ஒரு புளுகிணி சொன்னால், அதை நம்புவதற்குக் கேட்கிற அவர்கள் என்ன, புத்தியில்லாதவர்களா?

அதுவும் பெரியம்மாவால் நியமிக்கப்பட்ட அவர்கள்!

மூவருமாகச் சேர்ந்து வெறும் கதை என்று முடிக்கையில், அந்தப் பக்கமாக வந்த நிறுவனப் பாதுகாப்பு அதிகாரியை, நளினி ஆத்திரத்தோடு கூப்பிட்டாள்.

"பூவலிங்கம் சார், நம் கடையில் வைர வாட்ச் திருடிய ஒருவனையும் அவனுடைய கூட்டாளிகளையும், மேல் தளத்து ரிக்கார்டு அறையில் பூட்டி வைத்திருக்கிறேன். கூடச் சில ஆட்களை அழைத்துப் போய், அவனைப் பிடித்துப் போலீஸில் ஒப்படைக்கிறீர்களா? அங்கே முக்கியமான பத்திரங்கள் இருக்கிறதாம்! அவை, அடுத்தவர் கண்ணில் பட்டாலும் ஆபத்து, என்று இந்தப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அதனால், சீக்கிரமாக ஏதாவது செய்யுங்கள்" என்று பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் கேட்டுக் கொண்டாள்.

"வை...ர வாட்ச்! ஐயோ ஒன்றரை லட்சம் விலையாயிற்றே. அப்படியானால், நீ நிஜமாகத்தான் சொல்லுகிறாயா? கடவுளே, அந்தச் சின்னப் பயலுக்குத் தெரிந்தால், நம்மைத் தொலைத்துக் கட்டி விடுவானே. சீக்கிரம் ஓடுங்கள், பூவு. நம் ஆட்களையே நாலைந்து பேரைக் கூட்டிக் கொண்டு, ஓடிப் போய், அவனைப் பிடியுங்கள். கைக்கடிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டு, அப்புறமாகப் போலீசில் ஒப்படைக்கலாம். ஜன்னல் கின்னலைத் திறந்து, கடிகாரத்தை வெளியே வீசி விட்டால், நமக்கு நட்டத்துக்கு நட்டம். அத்தோடு, அவனது திருட்டுக்கு ஆதாரமும் இராது. அப்புறம் அவன் நம் மேலேயே கேஸ் போட்டு விடுவான்."

மூவருமாக ஆளுக்கொன்றாகச் சொன்னதின் சாராம்சத்தைக் காதில் வாங்கிக் கொண்டு, பூவலிங்கம் தன் ஆட்களைத் திரட்டிக் கொண்டு, மேல் தளத்துக்கு விரைந்தார்.

அதற்குள் நிர்வாகிகள் மூவரும் லிஃப்ட் வழியே, அங்கே வந்து சேர்ந்து, முடிந்தவரை தூரமாய் ஒதுங்கி நின்றனர். கூட வந்த நால்வரையும், நாலு இடங்களில் நிற்கச் செய்துவிட்டு, பூவலிங்கம் கதவைத் தட்டி, "பாருங்கப்பா, கதவைத் திறந்தால், நாலைந்து இடங்களில் துப்பாக்கியோடு நிற்கிறார்கள். அதனால் மரியாதையாகக் கைகளைத் தூக்கிக் கொண்டு வெளியே வாருங்கள். அசட்டுத்தனம் எதுவும் செய்தால், உங்கள் உயிருக்குத் தான் ஆபத்து" என்று உரத்த குரலில் கூறிவிட்டு, மெல்லக் கதவைத் திறந்துவிட்டு ஒதுங்கி நின்றார்.

வாட்ச் திருடனுடைய கூட்டாளி, தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்து, உள்ளே ஏதோ சொல்ல, பூவலிங்கத்தின் எச்சரிக்கையைச் சற்றும் மதியாமல், வெகு அலட்சியமாக வெளியே வந்தான், அந்தத் திருடன்.

"என்ன பூவலிங்கம், என்னைச் சுட்டு விடுவீர்களா?" என்று கேட்ட அவனது ஏளனப் பார்வை, நளினியின் மீது ஒரு கணம் படிந்து மீண்டது.

சூழ இருந்தோரின் முகத்தில் இருந்த இறுக்கமும் பயமும் மறைந்து, ஒருவிதமான அசட்டுத் தனத்தோடு கூடிய பதற்றம் பரவியது.

மூன்று நிர்வாகிகளும், கூழைக் கும்பிடு போட்டபடி, "சா...ர் நீங்களா? உரிமைக்கார உங்களைப் போய், இந்த முட்டாள் பெண்..." என்று வழிந்தவாறு, அந்த நெடியவனிடம் ஓடினார்கள்.

திருடன் என்று தான் அறைக்குள் அடைத்து வைத்திருந்தது யார் என்று புரிபட, நளினியின் கால்களின் கீழிருந்த பூமி நழுவியது.



காக்கும் இமை நானுனக்கு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:41 pm

பெற்றோர் இருவருமே அவளைத் திகைத்து நோக்கியது, நளினிக்கு வியப்பாக இருந்தது.

பொதுவாகக் குடும்ப அங்கத்தினருள் ஒளிவு மறைவு பழக்கமில்லை. அவசியம் இல்லாதது. அவசியமற்ற வீண் வேதனை என்று தோன்றிச் சொல்லாமல் விடுவது தவிர, எல்லாவற்றையும் கலந்து பேசி விடுவதுதான் வழக்கம். ஏதாவது குழப்பம் என்றாலும், நேரடியாகக் கேட்டு விடுவது தான்.

பெரியவர்களாகப் பேசட்டும் என்று சற்றுப் பொறுத்திருக்க முயன்றால், நளினிக்கு வினாடி யுகமாகத் தோன்றியது.

அது புவனேந்திரனின் கார் தானா, இல்லையா?

அவனது கார் தான் என்றால், அதில் அவனே தான் வந்தானா?

அவள் இல்லாத நேரத்தில் வந்து, அவளுக்குத் தெரியாமல், அவளுடைய பெற்றோரிடம் என்ன சொல்லியிருப்பான்?

ஓர் அரை நிமிஷ நேரம் கூடப் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாமல், "என்னம்மா விஷயம்?" என்று கேட்டு விட்டாள் அவள்.

மீண்டும் பெற்றவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவும், பொறுமையிழந்து, "அப்பா, ப்ளீஸ்! எதையும் மறைக்காமல், என்னிடம் சொல்லுங்க. நம் வீட்டுக்குப் புவனேந்திரன் வந்தாரா? அவரது காரைப் பார்த்தேனே, என்னவாம்? என்னை... என்னைப் பற்றி, ஏதேனும் சொன்னாரா? இப்படி, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தது போதும். தயவு பண்ணி விஷயத்தைச் சீக்கிரமாகச் சொல்லுங்கள்... இ...இல்லாவிட்டால், இந்த இறுக்கம் தாளாமல், என் தலையே வெடித்துவிடும்." கெஞ்சுதலாக வற்புறுத்திக் கேட்டாள்.

அப்போதும் கணவனும் மனைவியும் அடுத்தவர் முகத்தைப் பார்க்கவும், கோபமும், கூடவே பயமும் தோன்ற, "போதும்பா! அதுதான் இருபத்து மூன்று ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே, இன்னமும் என்ன? முதலில் என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு, அப்புறமாக உங்கள் பார்வையைத் தொடருங்கள். நீங்கள் இப்படிப் பதில் சொல்லாமல் தயங்கத் தயங்க, எனக்கு என்னவோ ஒரு மாதிரிப் பயமாக இருக்கிறதே!" என்று சற்றுத் தீனமான குரலில் முடித்தாள்.

மகள் கலங்குகிறாள் என்று அறிந்ததும், "பயப்பட ஒன்றும் இல்லை, பாப்பா," என்று பெற்றவர்கள் இருவரும் கோரசாக இயம்பினர்.

"பின்னே?"

நளினி கேள்வியாக நோக்கவும், "மெய்யாகவே பயப்பட ஒன்றுமே கிடையாதுதான். ஆனால், நாம் எதிர்பார்த்திராத சில விஷயங்களைப் பற்றித் திடுமெனக் கேட்கும் போது, சற்று அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது?" என்றார் சுதர்சனம்.

"அப்படி என்ன எதிர்பாராத விஷயம், இப்போது தெரிய வந்தது?"

"முதலில் உட்கார். பேசுவோம். ஏனென்றால், இது உனக்குத் தெரிந்திருக்க வேண்டிய விவரம்," என்று தொடங்கி, "நம் புவனேந்திரன் திருமணம் ஆனவர். உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.

"கல்யாணம் ஆகி..." என்று பெற்றவர் மேலே சொன்னது எதுவும் காதில் விழாமல், நளினிக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.

திருமணம் ஆனவன். ஏன் ஆகியிருக்கக் கூடாது? கிட்டத்தட்ட முப்பதைக் கூட எட்டாத வயது. தோற்றம் இருக்கிறது. தொழில் இருக்கிறது. வளம் இருக்கிறது. பெண் வீட்டார் மொய்ப்பதில் ஆச்சரியம் என்ன?

அவனுக்குத் திருமணம் ஆகிக் குழந்தைகள் கூட இருக்கக் கூடும். இயல்புதானே?

இதில், நளினி இவ்வளவு அதிர்ச்சி அடையவோ, வருத்தப் படவோ என்ன இருக்கிறது?

ஆனால், வயிறு காலியான உணர்வுடன் நெஞ்சை அடைத்து, கண்ணை இருட்டி, அவள் மயக்கமடைந்து கீழே விழாமல் இருந்ததே அதிசயம்தான்.

அந்த அளவுக்கல்லவா அதிர்ந்து போனாள்!

ஆனால், ஏன்?


யாரோ ஒருவன், அவன் முதலாளியாகவே இருந்தாலும், அவனது திருமணம் அவளை இந்த அளவுக்குப் பாதிப்பானேன்?

கேட்பானேன்? உண்மைதான். துலாம்பரமாக விளங்கிற்றே.

"கடவுளே! நான் புவனனை நேசிக்கிறேன். அதனால்தான்..."

"என்ன?" என்று பெற்றோரின் அதிர்ந்த குரல்களைக் கேட்ட பிறகுதான், தன் மனது எண்ணியதை வாய் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறது என்பது, நளினிக்கே புரிந்தது.

என்ன மடத்தனம். நியாய அநியாயங்களைப் பற்றி, அவளுக்குத் தெளிவாகப் போதித்திருக்கும் நல்லவர்களான இந்தப் பெற்றோர், அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

கவலையும், வேதனையுமாக அவர்களைப் பார்த்து, "ஆனால், புவனேந்திரனோடு, நான் அப்படி ஏதும் பழகியது கிடையாதும்மா. என் மனதில் மட்டும் தான்... ஆனால், அவருக்கு மனைவி இருப்பது, எனக்குத் தெரியாதும்மா. யா...யாருமே சொன்னதே இல்லை. சொ...சொல்லியிருந்தால்..." என்று உள்ளிருந்த வலியில் மேலே பேச முடியாமல் நிறுத்தினாள், அவள்.

"மனைவி இருந்தால்தானே..." என்று தொடங்கிய கணவனை விழித்து நோக்கிவிட்டு, "பார் கண்ணு, புவனேந்திரனின் திருமணமே ஒரு பரிதாபமான கதை. இருபத்தோரு வயதிலேயே மணந்து கொண்டு இருக்கிறார். ஆனால், மணமாகிப் பத்தே நாட்களில், அந்தப் புது மனைவியைப் பறிகொடுத்தும் இருக்கிறார். பாட்டியிடம் கொஞ்சமும் ஒட்டுதல் இல்லாததால், திருமணம் பற்றி, முதலில் இங்கே தெரிவிக்கவே தோன்றவில்லையாம். பிறகு, அவளே போய்விட்ட பிறகு, தெரிவிக்கும் அவசியமே இல்லாது போயிற்றாம். இப்போது..." என்று சகுந்தலா தயங்கினாள்.

மணமாகிப் பத்தே நாட்களில், புது மனைவியைப் பறிகொடுத்திருக்கிறானே, பாவம் என்று உருகிக் கொண்டிருந்தவளுக்குத் தாயின் தயக்கம் மனதில் பட்டது.

பெற்றோரை மாறி மாறிக் கூர்ந்து பார்த்து, "இப்போது மட்டும் அதைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது? அதிலும், இங்கே வந்து, உங்களிடம்?" என்று கேட்டாள் நளினி.

சகுந்தலா மேலும் தயங்க, "மிஸ்டர் புவனேந்திரனுக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறதாம். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாராம். அதனால், தன்னைப் பற்றிய விவரம் முழுவதையும் எங்களிடம் தெரிவித்து விடுவதுதான் நியாயம் என்று, இங்கே வந்து சொல்லியிருக்கிறார். உன்னிடமும் சொல்லச் சொன்னார். சொல்லி, நன்கு யோசித்து ஒரு முடிவெடுக்குமாறு கூறினார்," என்று ஒரு கணம் நிறுத்திவிட்டுச் சுதர்சனமே தொடர்ந்தார்.

"அம்மா, நீ உலகம் தெரியாத முட்டாளில்லை. உன்னை நாங்கள் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து வளர்க்கவும் இல்லை. புவனேந்திரனின் வளம், வசதி பற்றி, உனக்கே தெரியும். நாம் கனவில் கூட எண்ணிப் பார்க்க முடியாத சம்பந்தம், இது. ஆனால், அவரிடம் இருக்கும் பணத்துக்காக, அவரை மணந்து கொள் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நீயும் அவரை... அவரை நினைத்திருப்பதாகத் தோன்றுவதால்..."

அவரது பேச்சில் இடைமறித்து, "நீங்கள் ஓர் அபிப்பிராயம் தொனிக்கப் பேசாதீர்கள். எதையும், நளினியே யோசித்து முடிவெடுக்கட்டும்," என்றாள் சகுந்தலா.

ஆனால், உடனேயே, "அவரிடம் பணம் இருக்கலாம். ஆனால், என்ன இருந்தாலும், இரண்டாம் தாரம் அல்லவா? நம் பெண் புதுப் பூ! அதை நினைக்கும் போது எனக்கு உறுத்துகிறதே," என்றாள் தொடர்ந்து.

"என்னைச் சொல்லிவிட்டு, இப்போது நீ அபிப்பிராயம் கூறவில்லையா?" என்று மனைவியிடம் பாய்ந்தார் சுதர்சனம்.

"நீங்கள் சொன்னதால் தான் நானும் சொல்ல வேண்டியதாயிற்று," என்றாள் மனைவி பதிலுக்கு.

"என்னத்தைச் சொன்னாய்? பெரிதாக இரண்டாம் தாரம் என்றாயே, இன்றைக்கு எத்தனை பையன்கள் அங்கே இங்கே போகாமல், நல்லபடியாக இருக்கிறார்கள்? அதை என்னவென்று கொள்வது? தப்பான இடங்களுக்குப் போகாத நல்ல பையனாகத் தேர்ந்தெடுப்பது எப்படி என்று நானே கலங்கிக் கொண்டிருந்தேன். எப்படியும், புவனேந்திரன் நல்ல விதம் என்பது உனக்கும் நிச்சயம்தானே?" என்று சுதர்சனம் கேட்ட போது, சகுந்தலா மறுத்துப் பேசவில்லை.
புவனேந்திரன் அவர்கள் வீட்டிற்கு வந்து, நளினியோடு சேர்ந்து வேலை செய்த போது, அவனது கண்ணியமான நடத்தை குறித்துக் கணவன் மனைவி இருவருமே தனிமையில் பலமுறை பாராட்டிப் பேசியிருக்கிறார்கள்.



காக்கும் இமை நானுனக்கு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:41 pm

பார்வையில் கூடக் கனவான் என்று சகுந்தலாவே சொல்லியிருக்கிறாள்.

ஆனாலும் விடாமல், "அடியாட்கள் மாதிரி, இருவரைக் கூடவே அழைத்துக் கொண்டு அலைவதுதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கிறது," என்றாள் பெற்றவள்.

"பத்திரிகையில் எத்தனை படிக்கிறாய், தொழிலதிபர் கடத்தல், அது இதென்று. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று எச்சரிக்கையோடு இருப்பதைப் பாராட்டாமல், அசட்டுத் தனமாகக் குறைப்படுகிறாயே."

இருவர் பேச்சையும் அரை குறையாகக் கவனித்தபடி நளினி தனக்குள் யோசித்தாள்.

அவன் சிம்லாவுக்கு அழைத்ததை, அவசியமற்ற பிரச்சனை என்று பெற்றோரிடம் சொல்லாமல் விட்டது நல்லதாயிற்று என்று எண்ணினாள் அவள்.

அது மட்டும் தெரிந்தால், அவன் முகத்திலேயே விழித்திருக்க மாட்டார்கள்.

ஆனால், அவளை அப்படி அழைத்தவன், மற்றவர்களோடு அப்படிச் சென்றதே இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? அப்புறம் என்ன நல்லவன்?

ஆனால், மெய்யும் பொய்யுமாய் உலா வரும் அலுவலக வதந்தியின்படி பார்த்தால், பெண்களிடம் அவன் நெருப்புதான். திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை என்றுதான் பேச்சு! கோகுல் மாதிரிக் கோவையிலிருந்து இங்கு வந்து பணிபுரிகிறவர்கள் கூட, அந்த மாதிரித் தவறாக, அவனைப் பற்றிப் பேசியதாகக் கேள்வி இல்லை. சிறு பொறி என்றால் கூடப் பெரு நெருப்பென்று பரவியிருக்குமே! ஒதுங்கிப் போனால் கூட, இது போன்ற விஷயம் என்றால், கூப்பிட்டு வைத்துக் கதையாய்ச் சொல்வார்கள். காவல் பொறுப்பாளர் என்று, கம்பீரமாக ஒதுங்கிப் போகும் பூவலிங்கமே, புவனேந்திரனுடைய பெற்றோர் பற்றி, அவளிடமே சொன்னாரே!

அப்படியானால், அவளிடம் மட்டும் தான், அவன் அப்படியா?

ஆமாம் என்றால்... நளினி சட்டென்று பரபரப்புற்றாள்.

ஒருவேளை, அப்போதே அவனிடம் பாதிப்பு ஏற்பட்டிருந்ததோ? உண்மை நேசம் என்று தெரியாமல், வெற்று ஆசை என்று எண்ணிக் கேட்டிருப்பானோ?

அப்படி மட்டும் இருந்தால்...

ஆனால், ஒரு தரம் மணந்தவனுக்குக் காதல் என்றால் என்னவென்று தெரியாதா?

அந்தக் கணத்தில், அவனை மணந்து, அவனோடு வாழ்ந்த அந்தப் பெண்ணின் நினைவில், அவளுக்கு வயிறு காந்தி விட்டது.

சே! பாவம் செத்துப் போனவளைப் பற்றி, என்ன இது என்று, நளினி தன்னைத் தானே கண்டித்து, நேர்ப்படுத்த வேண்டியிருந்தது.

மகளது முகத்தையே பார்த்திருந்தவர்கள் போல, "என்னம்மா?" என்று பெற்றோர் கேட்கவும், சட்டெனச் சுதாரித்தாள் அவள்.

"நா...ன்... எனக்குக் கொஞ்சம் யோசிக்க வேண்டும், அம்மா!" என்றாள். "என் மனமே எனக்கு இப்போதுதான்... இன்னமுமே, ஒன்றும் தெளிவாகப் புரியவில்லை. ஏதோ குழப்பமாக... அதனால்... அதனால்..." என்று முடிக்க முடியாமல் தடுமாறினாள்.

"அது சரிதானம்மா! வாழ்க்கை முழுவதற்குமான தீர்மானம். இதை அவசரப்பட்டு எடுக்கக் கூடாது. அதனால, நிதானமா, நல்லது கெட்டது பற்றி நன்கு யோசித்து முடிவு பண்ணு. புவனேந்திரன் கூட, அப்படித்தான் சொன்னார். 'நீங்களும் நளினியுமாகத் தீர யோசித்து முடிவு பண்ணிச் சொல்லுங்கள்,' என்றார். ஆனால் பாவம்! கண்ணில் மட்டும் ஒரு தவிப்பு இருக்கத்தான் செய்தது!" என்றார் சுதர்சனம்.

தந்தையின் விருப்பம், நளினிக்கு நன்றாகவே புரிந்தது.
தாய்க்கும் புவனனைப் பிடிக்கத்தான் செய்யும். தந்தை எடுத்துச் சொன்ன பிறகு, அவள் மறுத்துப் பேசவும் இல்லை.

ஆயினும்...

மறுநாள் அலுவலுக்கு நளினி சற்றுச் சீக்கிரமாகவே கிளம்பிச் சென்றாள்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போதும், பெற்றவர்கள் மகளிடம் ஏன் என்று ஒன்றும் கேட்கவில்லை.

சந்தேகம் இருந்தால் தானே கேட்பதற்கு?

நளினி நேராகச் சென்ற இடம், புவனேந்திரனின் வீடுதான். ஆனால், வீடு வரை சென்றவளுக்கு, உடனே மனம் மாறிவிட்டது.

வீட்டிலுள்ள பணியாளர்களுக்கும், கடை வளாகத்து ஆட்களுக்கும் தொடர்பு இருப்பதாக, முன்பே ஒரு தரம் புவனேந்திரன் கூறியிருந்தது நினைவு வர, அங்கே சென்றால், தனியாக வீட்டுக்கே சென்றாளாம் என்று கண்ட பேச்சு கிளம்பக் கூடும் என்று தயக்கம் உண்டாயிற்று.

இது சரியில்லை.

சற்று யோசித்துவிட்டு, ஏதோ நினைவு வர, ஆட்டோவைத் திருப்பி ஓட்டச் சொன்னாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே, சற்றுத் தொலைவில் ஒரு பூங்காவும் அருகில் ஒரு பொதுத் தொலைபேசி பூத்தும் கண்ணில் பட்டன. வரும்போது, அசுவாரசியமாகப் பார்த்தபடி வந்தது. நல்லவேளையாக நினைவு வந்ததே என்று எண்ணியபடி, அங்கே இறங்கிக் கொண்டாள்.

தொலைபேசியில் புவனேந்திரனை அழைத்தபோது, அவளுக்குக் கொஞ்சம் படபடப்புதான்.

ஆனாலும், "நா...ன்... நளினி பேசுகிறேன். உங்களிடம் தனியாகப் பேச வேண்டும். உங்கள் வீட்டிலிருந்து, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு சின்னப் பூங்கா இருக்கிறது. அங்கே என்னைச் சந்திக்க முடியுமா?" என்று வேகமாகக் கேட்டு விட்டுப் பூங்காவின் பெயரைச் சொன்னாள்.

"அந்தப் பூங்காவை வெளியில் இருந்து பார்த்திருக்கிறேன். பத்து நிமிஷங்களில் அங்கே இருப்பேன்!" என்று அவன் உடனடியாக ஒப்பவும், நளினிக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

உள்ளே சென்று தனியே உட்கார்ந்திருக்க மனம் வராமல், பூங்காவின் வாயில் அருகேயே நின்று கொண்டிருந்தாள்.

அதிக நேரம் காத்திருக்கத் தேவை இல்லாமல், அவன் சொன்ன பத்து நிமிஷங்களுக்கும் சற்று முன்னதாகவே, புவனேந்திரனின் நீளக் கார் அங்கே வந்து நின்றது.

சொன்ன நேரத்துக்கு முன்பாகக் கார் வந்துவிட்டது. அவளுக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால், அவனுக்குப் பதிலாக, அவனுடைய பாதுகாவலர்களில் ஒருவன் இறங்கி வந்து, "சார் காரில் இருக்கிறார். வந்து காரில் ஏறிக் கொள்ளுமாறு, உங்களிடம் சொல்லச் சொன்னார்!" என்றதுதான், அவளுக்கு லேசாக உறுத்தியது.

காரில் ஏறினால், இந்தப் பாதுகாவலனும் கூட ஏறுவானே? அப்புறம், அவனிடம் தனியாக என்ன பேச முடியும்?

அவள் நினைத்தது போலவே, அந்தப் பாதுகாவலனும் காரில் ஏறிக் கொள்ளக் கார் கிளம்பியது.

மூன்று வரிசை உட்காரும் இடம் கொண்ட அந்தக் காரின் பின் சீட்டில், அவன் அமர, புவனேந்திரனுடைய அடுத்த காவலன் காரை ஓட்டினன்.

அவள் காரில் ஏறிக் கார் கிளம்பியதுமே, "நளினி வீட்டில் அம்மா, அப்பா சொன்னார்களா? உன் முடிவைச் சொல்லத்தான் அழைத்தாயா? என்ன முடிவு செய்தாய்?" என்று ஆவலாகப் புவனேந்திரன் கேட்கவும், நளினியின் மனம் துணுக்குற்றது.

பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணம் என்றாலுமே, மணமக்கள் இருவரும் மனம் விட்டுப் பேசும்போது, யாரும் கூட இருப்பதில்லை. காருக்குள் இன்னும் இருவர் இருக்கும் நினைவே இல்லாமல், இவன் என்ன, இப்படிக் கேட்கிறான்?



காக்கும் இமை நானுனக்கு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:42 pm

இரண்டு அன்னியர்களை வைத்துக் கொண்டு, என்ன கேள்வி கேட்கிறாய் என்று அதட்டிப் பேசவும் நளினிக்கு மனம் வரவில்லை.

புவனேந்திரனைப் போய் எப்படி அதட்டுவது?

அத்தோடு, அவனது கேள்விக்குரிய பதிலையும், இப்போதே அவளால் கூற முடியாதே! சில விஷயங்களைப் பற்றிப் பேசித் தெளிவு பெற்ற பிறகுதானே, ...குறைந்த பட்சமாய் அவனிடம் ஓர் உறுதியேனும் பெற்ற பிறகல்லவா, அவளால் நிச்சயமாய்ப் பதிலைச் சொல்ல முடியும்?

ஆனால், அதையும் இந்த இரு காவலர்கள்... சகுந்தலாவின் பாஷையில் 'அடியாட்கள்' காது கேட்க, அவளால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியாது.

எனவே, சிறு தயக்கத்துடன், "நான் உங்களிடம் சற்றுத் தனியாகப் பேச வேண்டும்!" என்று தாழ்ந்த குரலில், அவனுக்கு மட்டும் கேட்கும்படி மெல்ல விளம்பினாள்.

"தனியாகத்தானே..." என்று வியப்புடன் தொடங்கியவன் சட்டெனப் புரிந்து, முன்னே காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் தோளைத் தொட்டு, "முத்து, நேற்றுக் கூட்டம் நடந்த நட்சத்திர ஹோட்டல் நினைவிருக்கிறது, அல்லவா? அங்கே, காபி ஷாப்புக்குப் போக வேண்டும். உள்ளே போய் விட்டால், பாதுகாப்பான இடம்," என்றான்.

என்ன பாதுகாப்பு என்று எண்ணியபோதும், நளினி ஒன்றும் சொல்லவில்லை. காபி ஷாப் கூட்டம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொண்டாள். ஏனெனில், அவள் பேச விரும்பியவற்றை, அடுத்தவர் அறிய கேட்க முடியாது!

நட்சத்திர ஹோட்டலில் காபி ஷாப்பில் அந்த நேரத்தில் பெரிதாகக் கூட்டம் இல்லைதான். மொத்தம் இருபது பேர் இருந்திருப்பார்கள். ஆனால், அந்த முத்து தன் சகாவோடு, அவர்களோடு கூடவே உள்ளே வந்து, அவர்களையும், நுழை வாயில்களையும் கவனிப்பதற்கு ஏதுவாக, முன்னும் பின்னுமாக, அவர்களுக்கு அடுத்த மேஜைகளில் உட்கார்ந்தது, அவளுக்கு எரிச்சலூட்டியது.

இப்படி இரண்டு பார்வையாளர்களள வைத்துக் கொண்டு, அவர்களால் எப்படித் தங்கு தடையின்றி, தன்னியல்பாகப் பேச முடியும்?

தன் மெய்க்காப்பாளர்களை நளினி பார்ப்பதைக் கவனித்து விட்டு, "முத்துவும், திருமயனும் எப்போதும் கூடவே இருப்பதால், அவர்களைத் தனிப்பட்ட மனிதர்களாக நினைக்க எனக்குத் தோன்றுவது இல்லை," என்றான் புவனேந்திரன்.

"ஆனால், எனக்கு அப்படி எண்ணத் தோன்றவில்லையே," என்றாள் அவள்.

"தோன்ற வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில் நீக்குப் போக்குக் கூடாது என்று, முன்பே நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேன். அதனால், இந்த இருவரையும், வாழ்வில் ஓர் நிரந்தர அங்கமாக நினைப்பதற்கு நீ பழகிக் கொள்ள வேண்டும்," என்றவன், தலையசைத்து, "நம்பிக்கைதான். என்றாலும், நீ இன்னமும் முடிவே சொல்லவில்லை. அதற்குள் எங்கே போய்விட்டேன் பார்," என்று லேசாக முறுவலித்தான். "சொல்லு நளினி. ஏதோ பேச வேண்டும் என்றாயே."

நம்பிக்கையா? எப்படி வரும்? அதுவும், கேவலமாக ஒன்று கேட்டு, அதை அவள் மறுத்து... எல்லாம் மறந்து விட்டானா?

அதைப் பற்றி இந்த இருவர் முன் எப்படிக் கேட்பது? ஆனால், கேளாமல் விடவும் முடியாது.

"அது... வந்து சார்..." என்று அவள் ஒருவாறு தொடங்க முயற்சிக்கையில், அவன் குறுக்கிட்டு, "இன்னமும் 'சாரா'?" என்று, மென் குரலில் கேட்டான்.

என்ன குரல்!

தலையை உலுக்கித் தன்னைச் சமாளித்துக் கொண்டு, "அ... அன்றைக்குப் பூவலிங்கம் சார் வேலைக்காக, சிம்லாவுக்குக் கூட, வந்து, ஏதேதோ கேட்டீங்களே அது... அது காதல்... வந்து, நேசத்தின் அறிகுறி ஆகுமா?" என்று, ஒரு வழியாகக் கேட்டே விட்டாள்.

கண்ணில் பாராட்டோடு, "கெட்டிக்காரத்தனமான கேள்வி. அதாவது, எப்போதிருந்து உன்னை நினைக்கத் தொடங்கினேன் என்று கேட்கிறாய். அப்படித்தானே?" என்று புன்னகை செய்தான்.

அவள் பேசாதிருக்கவும், "எப்போது என்று சொன்னால், உன்னால் நம்பக் கூட முடியாது, நளினி. அது... முதல் பார்வையில் என்று சொல்ல முடியாது. ஆனால், அசட்டுத் தனமாய் வேலையை விட்டு விட்டாயே என்றேனே, நினைவிருக்கிறதா? அப்போது உன் முகபாவம்! அன்றைக்கு என்னால் தூங்கவே முடியவில்லை. தூக்கம் வருவதற்காக, இரண்டு மணி நேரம் நீந்தினேன். ஆறு ஆண்டுகளாக, எந்தப் பெண்ணும் என்னை அப்படிப் பாதித்தது இல்லை. அதுதான், ஒரு வேளை நெருங்கிப் பழகினால், அந்தப் பாதிப்பு மறைந்து விடக்கூடும் என்று எண்ணினேன். ஆனால், நீ மறுத்த போதும் ஏமாற்றம் தோன்றாமல், ஒழுக்கத்தை மதிக்கிறாய் என்று, எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது..." என்றவன், அவளது விரிந்து நோக்கிய விழிகளைக் கண்டு சிரித்தான்.

"உண்மை கண்மணி. ஆனால், அப்போது, இவ்வளவு உறுதியாக நினைக்கவில்லை. உன்னோடு, உன் குடும்பத்தோடு பேசிப் பழகுவது சந்தோஷமாக இருந்தது. என் வரண்ட வாழ்க்கைக்கு அதுவே பெரிய சுகமாக, அதற்கு மேல், அப்போது நான் எதையும் நாடவில்லை. ஆனால், உன் கண்ணில் நேசம் தெரியவும், கலங்கிப் போனேன். நான் பட்ட மரம்! என்மேல், எப்படி...?"

அவன் கலங்கினானோ என்னவோ, நளினி ரொம்பவே திகைத்துப் போனாள்.

இவன் எப்போதோ அவளை அறிந்திருக்கிறான்.

இன்னதென்று அவளே அறியும் முன்பாகவே, அவன் தெரிந்து வைத்திருக்கிறானே.

ஒரு தொழிலதிபனாகப் பல தரத்தாருடன் பேசிப் பழகியதால் வந்த திறமையா? அல்லது... ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியிருந்ததால் வந்த அனுபவ அறிவா?

தன்னை மீறி, "அவர்களை... உங்கள் மனைவியை மிகவும் நேசித்தீர்களா?" என்று கேட்டாள் நளினி.

சில வினாடிகள், இந்தக் கேள்விக்கு அவன் பதில் சொல்லப் போவதில்லையோ என்று நளினிக்குத் தோன்றியது.

ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டோம் என்று கூட!

அவளுக்கு யுகமாகத் தோன்றிய அரை நிமிஷத்துக்குப் பிறகு, மேஜை மேல் வைத்திருந்த கையிலிருந்து, புவனேந்திரன் பார்வையை அவள் முகத்துக்கு உயர்த்தினான்.

அவளது கண்களை நேராகச் சந்தித்து, "உன்னைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பொய் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை, நளினி. அந்தத் திருமணம் நடந்தபோது, எனக்கு இருபத்தோரு வயது. ரதி இருபதை எட்டவில்லை. அந்தப் பத்து நாட்களுக்குள், சிரிப்பு, அழுகை, சச்சரவு, சமாதானம், அன்பு, ஆசை... எல்லாமே எங்களுக்குள் இருந்தது. சந்தோஷமாகவே இருந்தோம். அவள்...அவள் போன பிறகு, உலகமே இருட்டாகிப் போய் விட்ட மாதிரி இருந்தது. என் தொழில்கள், கூடவே, உள்ளூரச் சில பிடிவாதங்களும் இருந்ததால்தான், மீண்டு வந்தேன் எனலாம். உன்னைச் சந்திக்கும் வரையும், பெண்களிடம் வேறு எந்த நினைவும் எனக்கு வந்தது கிடையாது. உன்னைக் கூட, வந்து போகும் மேகத்தைப் போலச் சற்று வலுவான ஒரு சலனம் என்றுதான், முதலில் நினைத்தேன். பிறகு, உன் கண்ணில் ஆர்வத்தைக் கண்ட போதும், 'இந்தப் பட்ட மரத்தோடா?' என்று, ஓடி விடத்தான் முயன்றேன். ஆனால் உன்னைப் பிரிந்து வாழ முடியாது என்று இந்த இரண்டு மாதங்களில், ஐயம் திரிபற அறிந்து கொண்டேன்," என்றவன், கை நீட்டி, அவளது கரத்தைப் பற்றினான்.

"இனி, நீதான் சொல்ல வேண்டும்."



காக்கும் இமை நானுனக்கு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:42 pm

இணைந்திருந்த கரங்களின் மீது, நளினியின் பார்வை பதிந்தது.

அவனது வலிய, பெரிய கரம், அதனுள், மெல்லிய நீண்ட விரல்களுடன் அவளது கை. இரண்டும் மிகப் பொருத்தமாக இணைந்திருந்தன.

பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் பளிச்சிட்டன.

இமை தாழ்த்தி, அதை மறைத்து, "எப்படிச் சொல்ல வேண்டும்?" என்று வினவினாள் அவள்.

சிறு யோசனையில் சுருங்கிய புருவம் உடனே உயர, "எல்லோரையும் போல, உனக்கும் பிடித்திருக்கிறது என்று வார்த்தைகளால்தான்!" என்று கூறும்போதே, அவன் முகத்தில் ஆவலுடன் கூடிய முறுவல் மலரத் தொடங்கி விட்டது.

ஓரக் கண்ணால் நோக்கி, "இரு மாதங்களுக்கு முன்பாகக் கண்ணில் சேதி படித்தவருக்கு இப்போது படிக்கத் தெரியாதா, என்ன?" என்றபோது, அவளது குரல் கொஞ்சிக் குழைந்தது.

அவனது விழிகள் சட்டெனப் பளபளத்தன.

பார்வையோடு நில்லாமல், "இப்படிப் பொது இடத்துக்கு வந்தது சரியில்லை என்று இப்போது தெரிகிறது!" என்று அவன் கூறவும், அவளது கன்னங்கள் செம்மை பூசின.

ஆனாலும் விடாமல், "என்னைப் பொறுத்தவரையில், இப்போதைக்கு எல்லா இடங்களும் ஒன்றுதான்," என்றாள் நளினி.

"நிஜம்?"

"நிச்சயமான நிஜம்," என்று பிடிவாதமாக இயம்பினாலும், கூச்சமும் மிகவே, பார்வையைத் திருப்பியவளின் கண்களில், புன்னகையோடு வாயிலைப் பார்த்த திருமயன் தென்பட்டான்.

இவ்வளவு நேரம், புவனேந்திரனும் அவளும் பேசியது அனைத்தும், இவர்கள் இருவருக்கும் தெளிவாகக் கேட்டிருக்கும்! கேட்டிருக்கிறார்கள்! முகத்தைப் பார்த்தாலே தெரியவில்லையா?

அவர்கள் இருவருக்கும் மட்டுமே சொந்தமான ஓர் இனிய சல்லாபம், இன்னும் இருவரைப் பார்வையாளர்களாகக் கொண்டு அரங்கேறியிருக்கிறது.

தொண்டையில் ஏதோ கசப்பாக உணர்ந்தாள் அவள். அசங்கியமாகவும்.

பேச்சுப் போக்கில், அவளே இவர்களை மறந்து போனாளே! ஒரு வேளை, புவனனைப் போலவே, அவளும் ஆகிவிட்டாளா?

அதெப்படி முடியும்?

இப்போதே, புவனேந்திரன் அவளது கையைப் பிடித்ததையும், இந்த இருவரும் பார்த்திருப்பார்கள். இன்னும்...கன்னத்தை வருடுவது, ஒரு சின்ன அணைப்பு, உதட்டிணைப்பு... என்று இதெல்லாம் கூட நடக்கக் கூடும்தானே? அதெல்லாம் தனிமையில் நடப்பதுதானே, இனிமை? அவைகளுக்கும், இவர்களைச் சாட்சியாக வைத்துக் கொள்வது என்றால், நினைக்கவே நெஞ்சு கூசும் அருவருப்பாக இருந்தது அவளுக்கு.

இந்த ஒருதரமே, ஏதோ குழப்பமும் ஆர்வமுமாக, அவள் தன்னை மறந்து இருந்து விட்டாள். ஆனால் இதை நீடிக்க விட முடியாது. நிச்சயமாய்!

பாதுகாப்பு விஷயத்தில் நீக்குப் போக்குக் கூடாது என்று பிடிவாதமாக இருப்பவன் புவனேந்திரன். அவனிடம் அவசரப்பட்டுப் பேசிப் பெரிய பிரச்சனையாக ஆக்கி விடக் கூடாது, மெல்லத்தான் சொல்ல வேண்டும் என்று இப்போதைக்கு நளினி சும்மா இருந்த போதும், சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதில் அவளும் உள்ளூரப் பிடிவாதமாகவே இருந்தாள்.

அத்தோடு, இவர்கள் முன்னிலையிலேயே, அவளது எண்ணத்தைச் சொல்வதும் முடியாதுதானே?

ஆனால், புவனேந்திரன் அருகில் இவர்கள் இல்லாத நேரம் எது என்று யோசித்தவாறு பார்த்தால், குடித்த காஃபிக்கும், கொறித்த முந்திரிப் பருப்புக்கும் பில் வந்திருந்தது.

எப்போது கொண்டு வரச் சொன்னானோ?

"உன் வீட்டுக்குப் போய், அத்தை, மாமாவிடம் விஷயத்தைச் சொல்லி விடலாம், வா. பாவம், என்ன ஆயிற்றோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்!" என்று பில்லுக்குச் சில நோட்டுகளை வைத்து விட்டுப் புவனேந்திரன் எழுந்தான்.

என்ன கரிசனம்! அத்தையும், மாமாவும் கவலைப் படுவார்களாமே!

அதற்குள் உறவு கொண்டாடத் தொடங்கி விட்டானே!

"என் அப்பா, அம்மா பற்றி, என்னை விடக் கவலைப் படுகிறீர்கள்!" என்றாள் கிண்டலாக.

"பின்னே? உனக்கு அவர்கள் வெறும் பெற்றவர்கள்! ஆனால், எனக்காக அல்லவா, அவர்கள் உன்னைப் பெற்று வளர்த்து வைத்திருக்கிறார்கள்! இந்த நன்றி கூடக் காட்டவில்லை என்றால் எப்படி?" என்றான் அவன் பதிலுக்கு.

"அது சரிதான்! ஆனால், உங்கள் நன்றியை இன்னும் பல..." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, திருமயன் அருகில் வந்தான்.

"முத்து காரை எடுக்கப் போயிருக்கிறான் சார். எடுத்ததும், செல்லில் கூப்பிடுவான். அப்போது போனால் போதும்! அதுவரை..." என்று, அவர்கள் அருகே நெருங்கி நின்று, கவனத்துடன் சுற்று முற்றும் பார்க்கலானான்.

புவனேந்திரனைப் பாதுகாக்கிறானாம்.

ஒரு சின்ன விதையைப் போட்டு வைக்கலாம் என்று பார்த்தால், கெடுத்துவிட்டானே என்று தோன்றிய எரிச்சலை அடக்கிக் கொண்டு, பேசாமல் நின்றாள் நளினி.

வீட்டில் சுதர்சனம், சகுந்தலா இருவருமே இந்தச் செய்தியை எதிர்பார்த்திருந்ததாகவே தோன்றியது.

இனிப்பு எடுத்து வரும் சாக்கில் மகளை உள்ளே அழைத்துப் போய், "அந்த முதல் மனைவியைப் பற்றி... உனக்கு ஒன்றும் இல்லையேம்மா?" என்று சிறு கலக்கத்துடன் பெற்றவள் வினவினாள்.

தாயை நேராக நோக்கி, "அது அவரது கடந்த காலம் அம்மா. நிகழ்காலமும், எதிர்காலமும் நம்முடையதாக இருக்கும் போது, முடிந்து போன ஒன்றைப் பற்றி, நமக்கு என்ன, அம்மா?" என்று நளினி கேட்கவும், தாயின் முகமும் தெளிந்தது.

எப்போதேனும் சில நினைவலைகள் தோன்றி மறையக் கூடுமே தவிர, மற்றப்படி புவனேந்திரனின் முதல் திருமணத்தை முடிந்து போன விஷயமாகத்தான் நளினி நிச்சயமாக நம்பினாள்.

ஆனால், அது அப்படியல்ல, ஒரு விசித்திரமான வகையில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்று, அவள் அனுபவித்துத்தான் அறிய நேர்ந்தது.



காக்கும் இமை நானுனக்கு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:43 pm

திருமண நிச்சயத்தைப் பகிரங்கப் படுத்தாமல், அவர்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று புவனேந்திரன் சொன்ன போது, யாருமே அதை ரொம்பப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஏனெனில், அவனைப் பற்றி அவநம்பிக்கையுற வழியின்றி, ஒரு நீதிபதி, ஒரு போலீஸ் அதிகாரி, இவர்களின் முன்னிலையில், திருமணம் பற்றி எழுதிக் கையெழுத்திட்டு, அந்தப் பெரிய மனிதர்களின் சாட்சிக் கையொப்பத்தோடு, சுதர்சனத்திடம் அவன் ஏற்கனவே கொடுத்து விட்டிருந்தான்.

அதுவும் சுதர்சனமாக எந்த ஒரு உறுதியையும் கேட்கு முன்னதாகவே.

அத்தோடு, கோவைக்கே சென்று, அவனைப் பற்றிச் சுதர்சனம் தெளிவாக விசாரித்து அறியவும், வழி வகை செய்து கொடுத்திருந்தான்.

சுதர்சனத்துக்குப் பயணத்தில் மிகுந்த திருப்தி. அதன் பிறகு, வருங்கால மருமகன் என்ன சொன்னாலும், அவரைப் பொறுத்த வரையில், அப்பீலே கிடையாது.

சகுந்தலாவுக்கே, தன் செல்ல மகளுக்கு யார் யார் கண்பட்டு விடுமோ என்று பயம் தான்.

ஆனால், புவனேந்திரனுக்கு இது இரண்டாம் மணம் என்பதால், ஆரவாரம் வேண்டாம் என்று எண்ணுகிறானோ என்று அவளுக்குக் கவலையாகவும் இருந்தது.

என்ன இருந்தாலும், அவளுடைய மகளுக்கு இது முதல் திருமணம் தானே! அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டாமா?

ஆனால், "மாப்பிள்ளைக்குப் பிடிக்கவில்லை என்றதால், விட்டுவிட்டேன் சக்கு!" என்று சுதர்சனமும் சொல்லி விட்டார்.

மகளுக்கோ, சடங்குகள், சம்பிரதாயங்கள், உறவினர், கூட்டம் பற்றிய நினைவே இருக்கவில்லை. அவளைப் பொறுத்த வரையில், புவனேந்திரனை அடிக்கடி கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பதே போதுமானதாக இருந்தது.

பானகத் துரும்பாக ஒரே ஓர் எரிச்சல். அவனைத் தனியே சந்திக்க, பேச முடியாமல், பாதுகாப்பு, பாதுகாப்பு என்று அவனது மெய்க்காப்பாளர்கள் கூட இருந்ததுதான்.

ஒருவருக்கு ஒருவர் என்று ஆன பின், அவனைப் பார்க்க வேண்டும், கேலியும் கிண்டலுமாகப் பேசிச் சிரிக்க வேண்டும், தோளில் சாய வேண்டும், அவன் கன்னத்தில் செல்லமாகத் தட்டும் போது, பதிலுக்குத் தானும் அவன் மூக்கைப் பிடித்து ஆட்ட வேண்டும் என்று வயதுக்கும், நிலைமைக்கும் உரிய எத்தனையோ ஆசைகள் அவளுக்கு.

சொல்லப் போனால், எல்லாமே வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு உட்பட்டவைதான்.

ஆனால், எப்போதும் புவனனுடன் கூடவே இருந்த பாதுகாவலர்கள் முன்னிலையில், ஒன்றுமே முடியாமல், தன்னை அடக்கிக் கொண்டு, அவள் சும்மா இருக்கும்படி ஆயிற்று.

நாளுக்கு நாள் பொறுமையிழந்து கொண்டிருந்த நளினிக்கு, அந்த நிலையை எப்படி மாற்றுவது என்பது தவிர, வேறு எதுவும் பெரிதாகத் தோன்றவே இல்லை.

எனவே, சகுந்தலாவும், தன் ஆசைகளை அடக்கிக் கொள்ளும்படி ஆயிற்று.

ஆனால், பூ விரியும் போது வாசனை பரவுவதைத் தடுக்க முடியுமா?

நல்ல வரன் இருப்பதாகக் கூறிக் கொண்டு, ஒரு திருமணத் தரகர் வந்தார். அவரிடம் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி விட்டதைச் சொல்லுவது தானே முறை?

அத்தோடு நளினியுடைய குடும்பம் வசித்தது ஃப்ளாட்டில். எல்லோரிடமும் தோழமையோடு பழகுகிற குடும்பம் என்பதால், பேச்சுவாக்கில், நளினி புவனேந்திரன் திருமணம் பற்றிய செய்தியும் அரசல் புரசலாக வெளியே பரவலாயிற்று!

இந்நிலையில், ஒரு நாள் தெரு முனையில் இருந்த பலசரக்குக் கடையில், வெல்லம் வாங்கி வரச் சென்ற நளினி, தன் பின்னோடு, ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டு, ஒருவன் தொடர்ந்து வரவும் சற்று மிரண்டாள்.


யாரிவன்? எதற்காகப் பின் தொடர்கிறான்?

பொதுவாக, அந்தப் பகுதியில் பயம் கிடையாது. பல ஆண்டுகளாக அங்கேயே வசிப்பதால், பார்த்தால் குறைந்த பட்சமாக ஒரு புன்முறுவலைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்குத் தெரிந்தவர்களே! உதவி என்று அழைத்தால் கட்டாயம் வருவார்கள். எனவே, சின்னப் பிள்ளை கூடத் தனியாகக் கடைக்குப் போய்ச் சாமான் வாங்கி வரும்.

அந்த அளவுக்குப் பாதுகாப்பானது.

பாதுகாப்பு.

சட்டெனப் பொறி தட்ட, நளினி நின்று, தன்னைத் தொடர்ந்தவனைக் கூர்ந்து நோக்கினாள்.

சுற்று முற்றும் கவனத்துடன் ஆராயும் அதே பார்வை! பான்ட் பாக்கெட்டில் மறைந்திருந்த ஒரு கை! துப்பாக்கியோ, கத்தியோ, ஏதோ ஓர் ஆயுதத்தின் பிடியில் அந்தக் கை இருக்கும் என்பது, புவனேந்திரன் மூலம் அவள் அறிந்த விஷயம்.

ஏன் இப்படிப் பாக்கெட்டுக்குள் கையை வைத்தபடியே இருக்கிறார்கள் என்று, முத்து, திருமயன் பற்றிக் கேட்டபோது, புவனேந்திரன் அவளிடம் சொல்லியிருக்கிறான். ஏதேனும் அவசரம் என்றால், அப்போது பயன்படுத்த, ஆயுதம் தயார் நிலையில் இருக்க வேண்டுமாம்!

'தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம்!' என்று பழமொழி உண்டுதான்.

ஆனால், இன்னொரு மனிதரை ரத்தம் சிந்த வைப்பதற்குத் தயார் நிலையில் ஒருவன் அலைவது என்றால், அவளுக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது.

அது ஒரு புறம் இருக்க, தனக்குத்தான் பாதுகாப்பு, பாதுகாப்பு என்று இரண்டு பேரை எப்போதும் கூட்டிக் கொண்டு, அடியாட்களோடு திரியும் தாதா போலப் புவனேந்திரன் அலைகிறான் என்றால், அவளுக்குமா?

அவனையே, இந்தப் பழக்கத்தை விட்டொழிக்கச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தவளுக்கு, ஆத்திரம் வந்தது.

அல்லது, ஒரு வேளை அவள் தான் தவறாக எண்ணுகிறாளோ?

இந்த இடத்தில், யாரும் அவளை எதுவும் செய்துவிட முடியாது என்ற தைரியத்துடன், நளினி, அந்தப் புதியவனை ஒற்றை விரலால் அருகில் அழைத்தாள்.

அவன் வந்ததும், "என்ன வேலை இது? ஏன் என் பின்னோடு வருகிறீர்கள்?" என்று விசாரித்தாள்.

ஆனால், அவள் கூப்பிட்டதும் தயங்காமல் அவன் வந்த விதமே, அவளுக்கு உண்மையை உணர்த்தி விட்ட போதும், ஒரு வேளை அப்படியிராதோ என்று ஒரு சிறு நப்பாசையில், அவனிடம் கேட்டாள் நளினி.

ஆனால், நப்பாசை அற்பாசை ஆகிவிட, "என் பெயர் சக்திவேல். உங்கள் பாதுகாப்புக்காகப் புவனேந்திரன் சார், என்னையும், கண்ணன் என்று இன்னும் ஒருவரையும் நியமித்திருக்கிறார்," என்றான் அவன்.

"இன்னும் ஒருவர் வேறா?"

"ஆமாம்! ஒருவரை மட்டும் பாதுகாப்புக்கு வைப்பது, இக்கட்டான சமயங்களில், பயனற்றுப் போய்விடும். எப்போதுமே, குறைந்தது இரண்டு பேரேனும் சேர்ந்து, இந்த வேலை செய்வது நல்லது," என்று விளக்கினான் அவன்.

நளினிக்கு, வெடிக்கப் போகும் எரிமலை போன்று, மனம் குமுறியது.

ஆனால், அவளது கோபத்தை இவனிடம் காட்டி என்ன செய்வது? எய்தவன் இருக்க, அம்பை நோவது மடத்தனம்.

எனவே, பிடிவாதமாகப் புன்னகைத்து, "ஆமாமாம்! புவனேந்திரன் ஒன்று செய்து, அது பலனற்றுப் போகலாமா? இவ்வளவு நேரம் சும்மா நின்று போரடித்திருக்குமே. அந்தக் கடைக்குப் போய், உபயோகமாய் ஒரு கிலோ வெல்லம் வாங்கி வாருங்களேன்," என்றாள் அவள், இனிய குரலில்.

குரலில் மறைந்திருந்த ஏளனம் எளிதில் கண்டு பிடிக்கக் கூடியதில்லை. பௌதிகப் பாடத்தில், 'உள்ளுறை வெப்பம்' என்பார்களே, அதைப் போல வெளிப்படையாகத் தெரியாமல் கலந்திருந்தது.

அதை, அந்தச் சக்திவேல் கண்டு பிடித்தானோ என்னவோ? ஆனால், வெல்லத்தை வாங்கி வர மறுத்து விட்டான்.

"என் வேலை உங்கள் பாதுகாப்பு, மேடம். கடைக்குப் போய்ச் சாமான் வாங்குவதில் என் கவனத்தைச் சிதற விட முடியாது," என்று ஒரு காரணத்தைச் சொன்னானே தவிர, இருந்த இடத்தை விட்டு அசையவே இல்லை.

அதுவே அவளுக்கு எரிச்சல்.

போதும் போதாதற்கு, அந்தக் குடியிருப்புகளின் சங்கத் தலைவர் வேறு, அவர்களைப் பார்த்துவிட்டு, அருகில் வந்து, "யாரம்மா? எதுவும் பிரச்சனையா?" என்று விசாரிக்கத் தொடங்கினார்.

இந்த மாதிரி விஷயம் என்று உண்மையைச் சொன்னால், பந்தாக் காட்டுவது போல இருக்கும். எனவே, "பி...பிரச்சனை ஒன்றும் இல்லை, அங்கிள். தெரிந்தவர் தான். சும்மாதான் பே... பேசிக் கொண்டிருக்கிறேன்..." என்று ஏதோ வாய்க்கு வந்ததைச் சொல்லிச் சமாளிக்கும்படி ஆயிற்று.

தலையாட்டிவிட்டு அவர் போய் விட்டாலும், நளினியின் சீற்றம் தணிய வெகு நேரம் ஆயிற்று.

ஆத்திரத்தில் புவனேந்திரனிடம் ஏதாவது கண்டபடி பேசிவிடக் கூடாது என்று தோன்றவே, மனம் சற்றுச் சமனப்படும் வரை நளினி பொறுத்திருந்தாள்.



காக்கும் இமை நானுனக்கு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:43 pm

என்ன தான் பழைய ராஜாக்கள் காலம் மாதிரி மெய்க்காவலர்களை அவன் அவனுக்கு வைத்திருப்பதே அவளுக்குப் பிடிக்காவிட்டாலும், அவனோடு வாக்குவாதம் செய்யப் பிடிக்காமல் வாளா இருந்தாள். ஆனால், இப்போது அவன் நியமித்திருப்பது அவளுக்கு அல்லவா?

முன்னதைக் காட்டிலும், இது அதிக எரிச்சல்தான். ஆனால், அவன் செய்தது, அவளது நலம் கருதி. அதனால், அவனிடம் சினம் காட்டுவது, சரியல்ல. நிதானமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஒருவாறு மனதை அமைதிப்படுத்திக் கொண்டு, புவனேந்திரனுக்குப் போன் செய்தால், அவளிடம் விடை பெறாமலே, அவன் சென்னையை விட்டுக் கிளம்பிச் சென்றிருந்தான்.

அப்படி அவன் சொல்லாமல் சென்றதே இல்லையே.

மறுநாளில் இருந்து, திரும்பி வரும்வரை, அவளைப் பார்க்க முடியாதே என்று வருத்தப் படாமல், அவன் பிரிந்து போனதும் கிடையாதுதான்.

சட்டென நளினியின் மனம் கலங்கிப் போயிற்று.

'போய் வருகிறேன்' என்று ஒரு வாக்கியம்.

அவளிடம் ஏன் சொல்லவில்லை? ஏதேனும் கோபமா?

ஏன் கோபம்? அவள் ஏதேனும் தப்பு செய்தாளா?

அவளை அறியாமலே ஏதேனும் தப்பு செய்து, அவளிடம் மனம் வெறுத்துப் போய் விட்டானா?

முன்பும், இதே போல நன்றாகப் பழகிக் கொண்டு இருந்த போதுதான், திடீரென்று ஒதுங்கிக் கொண்டான்.

இப்போதும் அப்படிச் செய்ய மாட்டான் என்று, என்ன நிச்சயம்?

முன்பு திரும்பி வந்தான். ஆனால், இப்போதும் வருவான் என்று என்ன நிச்சயம்?

தொழில் இருக்கிறது. கட்டாயம் வரத்தான் போகிறான்.

ஆனால், அவனிடம் உள்ள அன்பு? அது மாறாமல் இருக்குமென்று என்ன நிச்சயம்?

நிச்சயம் தான். நிச்சயமேதான்! இதே தொழில் முன்னரும் இருந்தது! ஆயினும், அது போதாதென்று, அவளுக்காக வரவில்லையா?

இப்போதும் வருவான்.

இப்படிப் பலவாறு யோசித்து, மிகவும் சிரமப்பட்டு மனதைத் திடப்படுத்திக் கொண்டு, அவள் கவலையோடு காத்திருந்தால், ஒன்றுமே நடவாதது போல, அவன் வெகு சாதாரணமாகத் திரும்பி வந்தான்.

வந்தவன், அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்றது பற்றி, எந்த விளக்கமும் இல்லாமல், "இந்தத் தளிர்ப் பச்சை வண்ண சல்வாரில், நீ தேவதை மாதிரி இருக்கிறாய்!" என்ற போது, நளினியால் அதை இயல்பாக ஏற்க முடியவில்லை.

பத்து நாட்களாகப் பட்ட துன்பம் உசுப்ப, "நான் உங்களைத் தேடினேன். ஆனால், நீங்கள் ஊருக்குப் போய்விட்டதாக, உங்கள் வீட்டுக் காரியஸ்தர் சொன்னார்," என்றாள் ஒரு மரத்த குரலில்.

ஒரு விநாடி தயங்கினானோ?

அவள் நிச்சயப்படுத்திக் கொள்ளுமுன், "அடடா!" என்று தலையில் தட்டிக் கொண்டான் புவனேந்திரன். "இதைத்தான் துரதிர்ஷ்டம் என்பது. வழக்கமாக, நானாகத்தானே ஓடி ஓடி வருவது? அப்படியின்றி அதிசயமாக, மகாராணி நீயே என்னைத் தேடி வந்தால், அந்தச் சமயம் பார்த்து, வேலை என்னை வேறிடத்துக்கு அழைத்துச் சென்று விட்டது, பார்! என்னம்மா, ஏதும் தன்னந் தனிமையில் கவனித்தாக வேண்டிய சமாசாரமா? அதற்கெல்லாம், கால நேரம் எதற்கு? இப்போது வேண்டுமானாலும்... என்ன சொல்லுகிறாய்?" என்று தணிந்த குரலில் கொஞ்சலாகக் கேட்டுக் கண் சிமிட்டினான்.

அவனது பேச்சின் பொருளும், கண் சிமிட்டலுமாக, நளினியின் முகம் செக்கச் சிவந்து போயிற்று.

"ச்சு! போங்கள். என்ன பேச்சு இது? நான் ஒன்றும், அந்த மாதிரி உங்களைத் தேடவில்லை. ஆனால்..." என்றவளை இடைமறித்து, "நினைத்தேன்," என்றான் அவன் சோகமாக.

"நமக்கேதுடா அப்படிப்பட்ட அதிர்ஷ்டமெல்லாம் என்று, முதலிலேயே சந்தேகம் தான்! ஆனாலும், ஒரு நிமிஷம் மனம் என்னென்னமோ ஆகாயக் கோட்டை கட்டி விட்டது. ஆனாலும், அவ்வளவு உயரத்திலிருந்து, மனிதனை இப்படித் தடாலென்று படு பாதாளத்தில் தள்ளக் கூடாதும்மா. பார், ஏமாற்றத்தில் எனக்குச் சரியாகப் பேசக்கூட முடியவில்லையே," என்று, அவன் மேல் மூச்சு வாங்கிக் காட்ட, அடக்க மாட்டாமல், அவளுக்குச் சிரிப்பு வந்துவிட, அந்தப் பேச்சு அத்தோடு போயிற்று.

அவளை வீட்டிற்குக் கூட்டி வந்து, பெற்றோருடன் கலகலப்பாகப் பேசியிருந்து விட்டுப் புவனேந்திரன் கிளம்பிச் செல்லும் வரை, நளினிக்கு வேறுபாடாக ஒன்றும் தோன்றவில்லை.

அதிலும், பேசியது திருமணத் திட்டங்கள்!

எப்படி எளிமையாகக் கோவிலில் திருமணத்தை முடித்துக் கொண்டு, நேரே திருமணப் பதிவு அலுவலகத்துக்குப் போய்த் திருமணத்தைப் பதிவு செய்து விடுவது என்று மண நாளின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி, அவன் விளக்கிக் கூறிய போது, நளினியின் முழு மனதும் அதில்தான் இருந்ததே தவிர, வேறு எதையும் எண்ணிப் பார்க்கக் கூட அவளுக்குத் தோன்றவில்லை.

பிறகும், வீட்டினர் நால்வரும் அது பற்றித்தான் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

தான் விரும்பியது போல, விலை உயர்ந்த டிஷ்யூ, புரோகேட் சேலைகளில் மகளை அலங்கரித்துப் பார்க்க முடியாது போல இருக்கிறதே என்று, சகுந்தலா குறைப்பட்டாள். சூரிய சந்திரப் பிரபைகளோடு நெற்றிச் சுட்டி, நத்து, இடுப்பில் ஒட்டியாணம் என்று, தன் அழகிய மகளின் அலங்காரம் பற்றி, அவளுக்கு எண்ணிறந்த கனவுகள்.

வருங்கால மருமகனின் எளிமையான திருமணத் திட்டத்துக்கு, அந்த மாதிரி அலங்காரங்கள் சற்றும் பொருந்தாது.

இந்தச் சுருக்கமான எளிய திருமணத்திற்கு, அவர் விரும்பிய வண்ணம், அக்கம் பக்கத்தார், உறவினர், நட்பாளர்கள் அனைவரையும் எப்படி அழைப்பது என்ற குழப்பம் சுதர்சனத்துக்கு.

இதற்கிடையே, "எனக்கு வகுப்பில் எந்தப் பரீட்சையும் இல்லாத நாள் பார்த்துத் திருமணத்தை வையுங்கள். லீவு போடவும் சொல்லாதீர்கள். நான் பிளஸ் டூவாக்கும்!" என்று பெரிய முக்கியஸ்தி போல, ஊடுபா ஓடினாள், தங்கை மஞ்சரி.

வீட்டுக் கடைக்குட்டி என்பதால், அவளது பேச்சில் எல்லோருக்கும் சிரிப்புதான் வந்தது.

பேச்சும் சிரிப்புமாக இருந்து விட்டு, நால்வரும் படுக்கப் போகவே, மணி பதினொன்றை நெருங்கி விட்டது.

ஆனால், புவனேந்திரனின் புன்னகை முகத்தை நினைத்த வாறே சுகமாகப் படுத்தவளுக்குச் சட்டென்று உறுத்தியது.

சொல்லாமல் கொள்ளாமல், தான் திடுமென வெளியூர் சென்றது பற்றிய விவரத்தைப் புவனேந்திரன், அவளிடம் சொல்லவே இல்லை.

எப்போதுமே, தனது வேலைகளை எல்லாம் அவளிடம் அவன் ஒப்பித்துக் கொண்டிருந்தான் என்று சொல்ல முடியாது. அப்படி அவள் எதிர்பார்க்கவும் இல்லை.

'உன்னதம்' தவிர, அவனது மற்றத் தொழில்கள் பற்றி, அவனே சொன்னாலும், அவளுக்குப் புரிவதற்கில்லை.

ஆயினும், மில்லுக்குப் பஞ்சு வாங்கப் போனேன், பிரிண்ட் போட்ட பனியன் துணி ஏற்றுமதிக்கு முடித்துக் கொடுப்பதைப் பார்க்க வேண்டியிருந்தது. இப்படிப் பொதுவாக என்ன விஷயம், எங்கே போனான் என்பதைப் பற்றிச் சொல்லுவான்.

செல்லும் போதும் சொல்லுவான். அல்லது, வந்த பிறகேனும் பேச்சில் வரும். 'உன்னிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை!' என்பது போன்ற இயல்பான பேச்சு.

எப்படியும், இன்னும், 'இத்தனை நாட்கள் உன்னைப் பார்க்க முடியாதே!' என்று வருத்தப்படாமல் அவன் பிரிந்து சென்றதே கிடையாது.

ஆனால் இந்த முறை அதெல்லாம் ஒன்றுமின்றி அவன் சென்றது மட்டுமின்றி, சென்று என்ன செய்தான் என்பதையும் சொல்லாமலே மழுப்பி விட்டான்.

அது மழுப்பலேதான்.

மேற்கொண்டு பிடிவாதமாகக் கேட்டு விடுவாளோ என்ற கலக்கத்தில், அதைத் தவிர்ப்பதற்குத்தான், புவனேந்திரன் அவ்வளவு கொஞ்சலும் குலாவலுமாகப் பேசினானோ?

திருமணத் திட்டங்கள் பற்றி விவரித்தது கூட அதற்காகத் தானோ என்று தோன்றவும், நளினி குழம்பிப் போனாள். குன்றியும்!

எப்போதுமே, அவன் சென்னையில் இல்லாத போது, நளினிக்குக் கொஞ்சம் மனதுக்குச் சோர்வாகத்தான் இருக்கும். அப்புறம், அவன் திரும்பி வந்ததும், உலகம் வண்ண மயமாக ஆகிவிடும்.

இப்போது அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் போன போது தோன்றிய, புவனேந்திரன் தன்னை வெறுத்து விட்டானோ, விலகிப் போய் விடுவானோ என்று தோன்றிய கலக்கங்கள் எல்லாமே, அவனை நேரில் பார்த்த பிறகு அடியோடு மறைந்து போயின.

ஆனால், அவன் அறியக் கூடாத ஏதோ ஒரு மர்மம் அவனது வாழ்வில் இருக்கிறதோ என்ற ஐயம் இப்போது அவளுக்கு உண்டாயிற்று.

அது என்னவாக இருக்கக் கூடும்?

அவளிடம் சொல்லக் கூடாதது என்றால், ஒரு வேளை, அது அவனுடைய முதல் மனைவி சம்பந்தப்பட்டதாக இருக்குமோ?



காக்கும் இமை நானுனக்கு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:44 pm

நளினியின் மனம் ரொம்பவே குழம்பலாயிற்று.

புவனேந்திரனின் மர்மப் பயணத்தின் காரணம், அவனுடைய முதல் மனைவி தொடர்புடையதாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் மட்டும்தான், அவளுக்கு முதலில் தோன்றியது.

அந்த ரதியின் பிறந்த நாளோ? அன்றி இறந்த நாளோ? அது தொடர்பான சடங்குகளுக்காகப் புவனேந்திரன் சென்றிருக்கக் கூடும் என்றாலும், அதை முழுமையாக அவளால் ஒப்ப முடியவில்லை.

அந்த மாதிரி விஷயம் என்றால், அதை மூடி மறைப்பானேன்?

அதுவும், ஏற்கெனவே மணமானதை வெளிப்படையாகச் சொன்னவன், இதையும் சொல்லிவிட்டே சென்றிருக்கலாம். ஒருவர் இறந்து விட்டால், சில குறிப்பிட்ட நாட்களில் அவர்களை நினைவு கூர்ந்து, சில சடங்குகளைச் செய்வது, நம்மில் பழக்கம் தானே?

அதுவும் அவனது முதல் மணம் அவனது கடந்த காலம். அதை அவள் பொருட்படுத்தப் போவதில்லை என்று விட்ட பிறகு, இது போன்ற விஷயங்களை அவளிடம் மறைக்கத் தேவையே இல்லையே.

எனவே இது வேறு விஷயம்.

எப்போதும், கிங்கரர்கள் மாதிரிக் கூடவே நிற்கும் காவலர்களின் காதுகளுக்குக் கூட எட்டக் கூடாத தொழில் ரகசியமாக இருக்கக் கூடும் என்று தன்னைத் தானே, நளினி சமாதானம் செய்து கொண்ட போதும், அவள் கொஞ்சமும் அறியாத ஏதோ ஒன்று புவனேந்திரனின் வழியில் இப்போது இருப்பது, அவளுக்கு உறுத்தலாகவே இருந்தது.

அப்படி எதையும் அவனிடமிருந்து மறைக்க வேண்டும் என்று, அவளுக்குத் தோன்றியதே இல்லையே.

இந்நிலையில், அவளது ஆத்திரத்தைத் தூண்டும் விதமாக, மறுநாள் வேறொன்று நடந்தது.

தனக்குப் போலவே, புவனேந்திரன் அவளுக்கும் காவலுக்கு ஆள் வைத்தது, நளினிக்குக் கொஞ்சமும் பிடிக்காத ஒன்று. அது பற்றித் தன்னுடைய வருங்காலக் கணவனுடன் பேசி, அந்தக் காவலை நிறுத்தியாக வேண்டும் என்று, அவள் ஏற்கெனவே முடிவு செய்திருந்தாள்.

ஆனால், ஏற்பாடு செய்து, சம்பளமும் கொடுக்கும் புவனேந்திரனின் சொல்தான், அந்தப் பாதுகாவலர்களிடம் எடுபடும் என்று புரிந்ததால், அவன் திரும்பி வரும்வரை, இந்தப் பாதுகாவல் விஷயம் அவளது குடியிருப்புப் பகுதியில் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காத விதத்தில், மிகவும் எச்சரிக்கையுடனேயே நடந்து கொண்டாள்.

சாதாரணமாக வெளியே செல்வதை நிறுத்திக் கொண்டு, தந்தை வேலைக்குச் செல்லும் போது, அவருடனேயே 'உன்னத'த்துக்குச் சென்று இறங்கிக் கொண்டு, வேலை முடிந்து, அவர் திரும்பி வரும்போது, அவருடனேயே அவளும் திரும்பி வந்தாள்.

குடியிருப்புப் பகுதிக் கடைக்குக் கூடச் செல்வது இல்லை.

துணிகளுக்கு அலங்கார வேலைக்குத் தேவையான பொருட்களை வாங்குவது, வேலை முடித்த துணிகளை உரிய இடங்களில் சேர்ப்பது எல்லாவற்றையும் விட்டு விட்டாள்.

எனவே, அந்தக் காவலர்கள் அவளைப் பின் தொடர்வது, வெளிப்படையாக யார் கண்ணிலும் பெரிதாகப் படாமலே இருந்து வந்தது.

ஆனால், அன்று இரவெல்லம் மனக் குழப்பத்தில் புரண்டவள், காலையில் அதிக நேரம் தூங்கிவிட, சுதர்சனமும் அன்று வெளியே ஒருவரைச் சந்தித்துப் பேசி விட்டு வேலைக்குப் போக வேண்டியதாக இருந்ததால், தேவைப் பட்டால், நளினியை ஆட்டோவில் போகச் சொல்லும்படி மனைவியிடம் கூறிவிட்டு, அதிகாலையிலேயே கிளம்பிவிட்டார்.

நளினிக்கும் அது உசிதமாகவே தோன்றியது.

குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியே வந்தால் 'உன்னத'த்துக்கு வெகு அருகிலேயே இறங்குவதற்குப் பஸ் வசதி இருந்தது.

ஆனால், அவள் பஸ்ஸில் ஏறி, முன்னும் பின்னுமாக இந்தப் பாதுகாவலர்களும் ஏறி, இங்குமங்கும் விழித்துப் பார்த்தால், ஏதேனும் ஏடாகூடம் ஆகி, இவர்களுக்குத் தர்ம அடி விழுந்து விடுமோ என்று, நளினிக்குப் பயமாக இருந்தது.

எனவே, அலுவலகத்துக்குக் கிளம்பி, தெருமுனை வரை நடந்து சென்று, அங்கே வந்த ஆட்டோ ரிக்ஷாவை நிறுத்தி, ஏறினாள்.

முன்னும் பின்னுமாகச் சக்திவேலும், அவனுடைய கூட்டாளியும் கூடவே வந்த போதும், யாரோ தெருவில் போகிறவர்கள் போலவே வந்ததால், அதுவரை பிரச்சனை இல்லை.

ஆனால், அவள் வண்டியில் ஏறுகையில், சக்திவேல் அருகில் வந்து, ஆட்டோ ஓட்டியை முதுகில் தட்டி, "பாரப்பா, நான் இந்த அம்மாவுக்குக் காவல், பின்னோடு பைக்கில் வருவேன், கவனித்துச் சற்று மெதுவாகப் போ," என்றான்.

குழப்பமும் குறுகுறுப்புமாக நோக்கிய போதும், ஆட்டோ ஓட்டியும் தலையாட்டிவிட்டு, ஏவப்பட்ட விதமாக, நிதானமாகவே வண்டியை ஓட்டினான்.

பக்கவாட்டுக் கண்ணாடியில் தெரிந்த அவனது முகத்தில், குறுகுறுப்பையும் ஆர்வத்தையும் கண்ட நளினிக்கு மனதோடு, உடம்பும் கூசிக் குறுகிப் போயிற்று.

இந்த ஆட்டோ ஓட்டி இப்போது என்ன நினைத்துக் கொண்டிருப்பான்?

'காதலனோ, கணவனோ இவளுக்குக் காவல் வைத்திருக்கிறான். இவளது நடத்தை எப்படிப்பட்டதோ?' என்று தானே எண்ணுவான்?

அவன் நினைப்பது மட்டுமா? அவன் முகத்தைப் பார்த்தாலே, இந்தக் கதையை யார் யாரிடமோ சொல்லத் துடித்துக் கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது.

கண், காது, மூக்கு வைத்து, எத்தனை பேரிடமோ நன்றாக அளக்கப் போகிறான்.

சே! என்ன கேவலம், என்ன கேவலம் என்று நளினியின் மனம் பதறித் தவித்தது.

இன்றைக்கு இந்த அசட்டுத் தனத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்த பிறகுதான், நளினிக்குச் சரியாக மூச்சுக்கூட விட முடிந்தது.

அவ்வளவு ஆத்திரம்.

வழக்கம் போலவே, மற்றவர்களை விடச் சீக்கிரமாகவே புவனேந்திரன் வந்திருந்தான்.

வெளிப்படையாக யாரும் உறுதிப் படுத்தாவிட்டாலும், ஊகமும் வதந்தியுமாகப் புவனேந்திரன் - நளினி உறவு அங்கே எல்லோருக்கும் தெரிந்து போயிருந்தது.

அதனால், அவளுக்குத் தனி மரியாதையும் கிடைத்துக் கொண்டிருந்தது.

எனவே, அவனைத் தேடி அவள் சென்ற போது, அவளை யாரும் தடுக்கவில்லை.

சும்மா உள்ளே போகச் சொல்லிவிட்டு, அப்புறமே, அவனுக்கே அறிவித்தார்கள்.

புவனேந்திரனின் அலுவல் அறைக்குள் நளினி சென்ற போது, அங்கே 'உன்னத'த்துடைய தலைமை கணக்கரும், மூன்று தள நிர்வாகிகளும் இருந்தனர்.

எல்லோரின் முகங்களிலும் புன்னகை இருந்தது.

புவனனின் கண்களில் அவளுக்காக ஒரு தனியான பளிச்சிடல். அதைக் கண்டதும், அவளும் தன்னை மீறிப் புன்னகை செய்தாள்.

"வா, நளினி," என்று அவளை முக மலர்ச்சியுடன் வரவேற்ற புவனேந்திரன், "உன் யோசனைப்படி விற்பனைப் பொருட்களை மாற்றினோம், அல்லவா? இந்த மாத விற்பனை வெகுவாகக் கூடியிருக்கிறது!" என்று அவளிடம் தெரிவித்துவிட்டு, மீண்டும் மற்றவர்களிடம் திரும்பினான்.

"ஓகே, சார்! நீங்கள் மூவரும் எந்தெந்தப் பொருட்களில் விற்பனை அதிகமாகி இருக்கிறது என்று ஒரு கணக்கு எடுத்து எனக்கு அனுப்புங்கள். வாடிக்கையாளர்களைக் கவனிப்பதற்கு இன்னும் அதிக ஆட்கள் வேண்டும் என்றால், அதைப் பற்றியும் விவரம் கொடுங்கள். கணக்கர் சார், சென்ற மாத வரவு செலவு பற்றித் தெளிவான ரிப்போர்ட் ஒன்று வேண்டும். இதே போலத் தொடர்ந்தால், தீபாவளிப் போனஸை அதிகமாகக் கொடுக்கலாம், பாருங்கள். இனி அவரவர் இடத்துக்குப் போய், இந்த வேலைகளைப் பார்க்கிறீர்களா?"

அவள் வந்ததும் அனுப்புவது போலத் தோன்றாமல், நால்வரும் சிரித்த முகமாகவே, அவரவருக்கு அளிக்கப்பட்ட வேலைகளைக் கவனிக்கக் கிளம்பும்படி செய்து விட்டானே!

அவன் சொன்ன 'போன'சால் வந்த மலர்ச்சியா?



காக்கும் இமை நானுனக்கு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:44 pm

மற்றபடி, அந்த மூன்று பெரியவர்களும் நளினியின் யோசனை என்பதை எப்படி ஏற்பார்கள்? அவர்களிடம் அவள் முட்டிக் கொண்டதும், அவர்கள் மிரட்டியதும் எப்படி மறக்கும்?

அல்லது, விற்பனை அதிகரிக்க அதிகரிக்க, அவர்களுக்கே உற்சாகம் வந்து விட்டதா?

கணக்கரும் சென்று, அவர் பின்னே கதவு மூடிக் கொண்ட பிறகு, "எல்லோரும் போயாயிற்று. இப்போது சொல். என்னம்மா, என்ன பிரச்சனை?" என்று கேட்டான் அவன்.

பிரச்சனை என்ன? யார் சொன்னது? என்ற கேள்வி தொண்டை வரை வந்து அடங்கியது.

பதிலாக, ஓடி ஓடி வருகிறவன் நான் தானே என்று அவன் சல்லாபிப்பதைக் கேட்டு மயங்கும் மனநிலை அப்போது அவளுக்கு இல்லை.

அத்தோடு, எல்லோரும் போயாயிற்று என்று அவன் சொன்னதே, இருவரின் எண்ணப் போக்குகளுக்கும் இடையே உள்ள இடைவெளியின் அளவை எடுத்துக் காட்டுவதைப் போல இருந்தது அவளுக்கு.

ஏனெனில், அந்த அறையில் நடப்பன எதிலும் சம்பந்தப்படாமல் ஒதுங்கி, அந்தப் பெரிய அறையின் இரு மூலைகளில் முத்துவும், திருமயனும் இப்போதும் நின்று கொண்டுதான் இருந்தனர்.

அவர்கள் இருவரும் அங்கே இருக்கையில், எல்லோரும் போயாயிற்று என்று எப்படிச் சொல்ல முடியும்?

அவனால் முடிந்தது.

ஆனால், அவளால் ஒரு போதும் முடியாதே.

இப்படி அடிப்படையே தவறாக இருக்கிறதே.

அத்தோடு, அவள் பேச வந்த விஷயத்தை, இவர்களை வைத்துக் கொண்டு சொல்லவும் முடியாது.

"தயவு பண்ணிக் கிண்டலாக எதுவும் பேசாதீர்கள், புவனன். நான் உங்களிடம் தனியாகப் பேச வேண்டும். நிஜமாகவே தனியாக," என்றாள் மெல்லிய குரலில்.

என்ன தான் மென்குரலில் பேசினாலும், காவலர்கள் காதிலும் விழுந்து தான் இருக்கும்.

எனவே, புவனேந்திரன் நிமிர்ந்து பார்த்ததும், அவர்கள் இருவரும் அறை வாயிலை நோக்கி நகர்ந்தனர்.

"நாங்கள் கதவின் அருகிலேயே நிற்கிறோம் சார்," என்று முத்து கூற, இருவரும் வெளியே சென்றனர்.

சாத்தியிருந்த கதவை ஒரு தரம் பார்த்துவிட்டுப் புவனேந்திரன் நளினியிடம் திரும்பினான்.

இது போலப் பிறர் தவறாக ஊகிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில், இருவருமே கவனமாகத்தான் இருப்பது. ஆனால், அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இன்றைக்கு நளினி இல்லை என்பது அவள் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

எனவே, தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து, அன்போடு அவளது கைகளைப் பற்றி உட்கார வைத்து, பிரச்சனை என்னவென்று புவனேந்திரன் மறுபடியும் வினவினான்.

நளினி நேரடியாக விஷயத்துக்கு வந்தாள். "எனக்குப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்களா?"

"நிச்சயமாய்! சக்திவேலும், கண்ணனும் கிட்டத்தட்ட முத்து, திருமயனுக்குச் சமமானவர்கள் என்று பாதுகாப்புக்கு ஆள் அனுப்பும் நிறுவனத்தில் சொன்னார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஏன்? வேலையில் ஏதேனும் ஓட்டை விட்டார்களா? என்ன செய்தார்கள்? சொல்லு உடனே. ஆளை மாற்றி விடலாம்," என்றான் அவன் சட்டென மூண்ட கோபத்துடன்.

உச்சுக் கொட்டினாள் நளினி. "நான் ஆளே வேண்டாம் என்கிறேன், நீங்கள் ஆளை மாற்றுவது பற்றிப் பேசுகிறீர்களே," என்றாள் எரிச்சலோடு.

"ஆள் வேண்டாமா? என்ன உளறல் இது?"

"உளறல் ஒன்றும் இல்லை. இவ்வளவு காலம், இருபத்திரண்டு வருஷமாக, இந்த மாதிரிப் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் தான் வாழ்ந்திருக்கிறேன். எனக்கு எதுவுமே ஆனதில்லை. இப்போது மட்டும் எதற்கு?" என்றாள் நளினி, பிடிவாதமான குரலில்.

"உனக்கு விஷயம் புரியவில்லை, நளினி," என்றான் புவனேந்திரன். "இப்போது, நான் தற்பெருமை பேசுவதாக நினைத்துக் கொள்ள மாட்டாய் என்று நம்புகிறேன். இதுவரை நீ வாழ்ந்த விதம் வேறு! எத்தனையோ லட்சக் கணக்கான பெண்களில் ஒருத்தியாக இருந்தாய். அழகிலும், சாதுரியத்திலும் மேம்பட்டிருந்தாலும், பலருள் ஒருத்தியே! ஆனால், இப்போது அப்படியல்ல..."

"ஏன் திடீரென்று எனக்குக் கொம்பு கிம்பு முளைத்து விட்டதா?" என்று கிண்டலாகக் கேட்டுத் தொட்டுப் பார்த்து விட்டு, "இல்லையே!" என்று உதட்டைப் பிதுக்கினாள் அவள்.

புன்னகைத்துவிட்டு, "இது கண்ணுக்குத் தெரியாத கொம்பு. புவனேந்திரனுடைய மனைவி, அதாவது மனைவி ஆகப் போகிறவள் என்கிற கொம்பு!" என்றான் அவன் சிறு வருத்தமும் கேலியும் கலந்த குரலில்.

அவனது வார்த்தைகள் சித்தரித்த நிலைமை மனதிற்கு ஆனந்தமாகத்தான் இருந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சியில், முன்னிருக்கும் பிரச்னையை மறந்து விடக்கூடாதே. அதுவும், அப்படி மறக்கடிப்பதில் அவன் வல்லுனனும் கூட!

யோசிக்கும் பாவனையில் புருவம் சுருக்கி, "புவனேந்திரனுடைய மனைவிக்குக் கொம்பு இருந்தே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்?" என்று கேட்டாள் நளினி.

"புவனேந்திரன் ஒரு பணக்காரன்."

"இருக்கட்டுமே. அப்போதும், உங்கள் வார்த்தைகளையே சொல்வதானால், நீங்களும் பணக்காரப் 'பலருள் ஒருவர்' தானே?"

சற்று தயங்கி, "ஆனால், ஆபத்து நேரக் கூடிய வாய்ப்பு அதிகம் உண்டம்மா!" என்றான் அவன் புரியாத குழந்தைக்குச் சொல்வது போல.

"என்ன பெரிய ஆபத்து? எதுவானாலும் நாமாகச் சமாளிக்க வேண்டியதுதானே? நான் ஒன்றும் தண்ணீர் பட்டால் கரையும் உப்பல்ல. ஓர் ஆபத்தில் சிக்கினால் மீள முடியாமல் அழிந்து போவதற்கு."

கண்கள் பளிச்சிட, "நீ வெறும் உப்புக்கல் அல்ல, கண்மணி. உலகிலேயே விலை உயர்ந்த வைரக் கல் அல்லவா?" என்றான் புவனேந்திரன், பெருமிதக் குரலில்.

முகம் சுளித்த போதும், "அது உங்களுக்குத்தானே? மற்றவர்களுக்கோ, வெறும் உப்புக்கல்லாகக் கூட நான் பயன்பட மாட்டேன். அந்தப் பெறுமானம் கூட இல்லாதவள் தானே? அப்புறம் எதற்கு இந்தப் பாதுகாப்பு, பந்தா எல்லாம்?" என்று விடாமல் கேட்டாள் அவள்.

தொடர்ந்து அந்த அறையில் ஓர் அமைதியற்ற அமைதி நிலவியது.

பிறகு, "இது பந்தா அல்ல. பாதுகாப்பு மட்டுமே. எனக்காக, என் நிம்மதிக்காக, இந்தப் பாதுகாப்பை நீ சகித்துக் கொள்ளக் கூடாதா?" என்று இதமாகவே கேட்டான் அவன்.

ஒரு கணம் தயங்கினாலும், "இதே போல, என் நிம்மதிக்காக விட்டு விடக் கூடாதா என்று, நானும் கேட்கலாம் அல்லவா? எங்கள் வீட்டுச் சுற்றுப்புறம் பார்த்தீர்கள், அல்லவா? இயல்பான, சாதாரணமான வாழ்க்கை. அந்த இடத்தில், இப்படிப் பழைய கால ராஜ பரம்பரை போல, முன்னும் பின்னும் பாதுகாவலுக்கு ஆட்களோடு நடமாடுவது என்றால், அது கொஞ்சம்... கொஞ்சமென்ன, ரொம்பவே 'அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிற' விதமாகத் தோன்றாதா? தோழமையோடு பழகுகிற யார் முகத்தை நான் நிமிர்ந்து பார்க்க முடியும்? நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் வெளியூர் போயிருந்த இத்தனை நாட்களும், நான் கிட்டத்தட்ட வீட்டுக்குள்ளேயே சிறையிருந்த மாதிரிதான் இருந்தேன், தெரியுமா?" என்று வாழைப்பழத்தில் ஊசியாய், அவன் சொல்லாமல் சென்றதையும் குறிப்பிட்டாள் நளினி.

ஊசி குத்திற்றோ இல்லையோ, அதை அவன் கவனித்த மாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை. "நீ பத்திரமாய் இருக்கிறாய் என்பது, மற்ற எதையும் விட, எனக்கு முக்கியம், நளினி. அதற்காகச் சில சங்கடங்களை நாம் சகித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், முதலில் தான் அவை சங்கடங்களாகத் தோன்றும். விரைவிலேயே, என்னைப் போல, உனக்கும் பழகிப் போய் விடும்," என்று அதிலேயே நின்றான் புவனேந்திரன்.

விட்டுக் கொடுக்க அவளுக்கும் மனமில்லை. அவனையுமே இந்தப் பைத்தியக்காரத்தனத்தை விட வைக்க விரும்புகிறவள் ஆயிற்றே.

அதனாலே, "சும்மாவே, நான் பத்திரமாகத்தான் இருப்பேன் என்கிற போது, அனாவசியமாக இந்தச் சங்கடங்களை ஏன் சகிக்க வேண்டும்? தேவையே இல்லை," என்றாள் அழுத்தமாகவே.

மீண்டும் ஒரு மௌனம் அவர்களிடையே நிலவியது.

சற்றுப் பொறுத்து, ஒரு நீண்ட பெருமூச்சின் பின் புவனேந்திரன் பேசினான்.

"ரதி எப்படி இறந்தாள் என்று, உனக்குத் தெரியாதில்லையா?" என்று மிகவும் தாழ்ந்த குரலில் கேட்டு நிறுத்தினான்.

ரதி! அவனுடைய முதல் மனைவி.

திடுக்கிட்டு, நளினி அவனைப் பார்த்தாள்.



காக்கும் இமை நானுனக்கு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:44 pm

ரதியின் பெயர், முன்னொரு தரம் அவர்களிடையே வந்திருக்கிறது. திருமணமாகி அந்தப் பத்து நாட்களுக்குள் அந்த வயதுக்கேற்ப மகிழ்ச்சியோடு இருந்ததாகச் சொன்னான்.

புதுமண மகிழ்ச்சி.

ஆனால், தேவதாசாக, அதே நினைவில் தான் உருகிக் கொண்டிருப்பதாக அவன் கூறவில்லை. அப்படிக் காட்டிக் கொள்ளவும் இல்லை.

இப்போது என்ன சொல்லப் போகிறான்?

அத்தோடு, அவளது இறப்புக்கும், இந்தப் பாதுகாவலர்கள் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் இருக்கக் கூடும்?

மீண்டும் புவனேந்திரன் பேசத் தொடங்குமுன், என்னென்னவோ கேள்விகள் மனதில் குவிந்த போதும், நளினிக்கு எதையும் வாய்விட்டுக் கேட்கத் தோன்றவில்லை.

ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவளைப் போல, அவனையே பாராத வண்ணம் உட்கார்ந்திருந்தாள்.

இன்னும் ஒரு சிறு இடைவெளியின் பின், தொண்டையைச் செருமிக் கொண்டு, புவனேந்திரனே தொடங்கினான்.

"ரதியை நான் மணந்தது, அவள் இறந்தது எதுவுமே, கோவையில் கூட யாருக்குமே தெரியாது," என்று தொடங்கியவன், தொடர்ந்து அதன் காரணத்தை விளக்கினான்.

"என் அப்பாவும் அம்மாவும் இறந்தது, என் இருபத்தொன்றாம் பிறந்த நாளைக்கு இரு மாதங்கள் முன்பு. தொழில் துறை நிர்வாகம் பற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். படிக்கும் போதே அப்பாவுடன் தொழிலைக் கவனித்துக் கொண்டுமிருந்தேன். நம்முடைய நூற்பு ஆலை, நூல் விற்பனை தொடர்பாக, நான் அகமதாபாத்துக்குப் போய் வருவது உண்டு. அம்மா, அப்பாவுக்குப் பிறகு, பாட்டி வந்து என்னை அழைத்தது, நான் வர மறுத்தது எல்லாம், தண்டோரா போட்டுப் பறையறிவிக்காத குறையாக இங்கே எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.

"அம்மா இருக்கும் வரை என்னையும் வெறுத்து இருந்தவர்களுக்கு, இப்போது என்ன திடீர் உருக்கம்? அம்மா இறந்ததால், எனக்கென்ன தீட்டா கழிந்து விட்டது? அம்மா இருந்தாலும், இல்லாவிட்டாலும், என் அம்மாவின் வயிற்றில் நான் பிறந்தது மாறி விடுமா என்ன?

"இப்படியெல்லாம் நினைத்து, அந்த ஆத்திரத்தில் நான் இங்கே வர மறுத்ததோடு, அப்போதைக்கு, அந்த விஷயம் முடிந்து போனது.

"ஆனால், பெற்றோரின் இறப்பு பற்றி வேதனை - அப்போதுதான் கொஞ்சம் அடங்கத் தொடங்கியிருந்தது - இரு மடங்காக மீண்டும் என்னை வாட்டத் தொடங்கிவிட்டது. கோவை வீட்டில் தனியே இருக்கப் பிடிக்காமல், வெளியூர் வேலைகளை அதிகமாக இழுத்துப் போட்டுக் கொண்டு, அங்குமிங்கும் அலைந்து திரிந்து செய்தேன். அப்படி ஒரு தரம் அகமதாபாத் சென்ற போதுதான், ரதியைச் சந்தித்தேன்.

"அவளுக்கும் சின்ன வயதுதான். அப்போது பதினெட்டு தான் ஆகியிருந்தது. என்னைப் போலவே, அவளுக்கும் உறவென்று யாரும் இல்லை. எனக்குப் பாட்டி இருந்தாலும், அவர்களைத்தான் அப்போது நான் உறவாக ஏற்கவே இல்லையே. ரதி இல்லத்தில் வளர்ந்தவள். அலுவலுக்கான படிப்பு கற்றுக் கொடுத்திருந்தார்கள். தற்காலிகமான அலுவலக வேலைகளுக்கு அனுப்புவார்கள். அப்படி எனக்காக வந்தபோது, முதல் பார்வையிலேயே எங்கள் இருவருக்கும் பிடித்துப் போயிற்று. அவளைப் பார்க்கையில், நெஞ்சை அரித்துக் கொண்டிருந்த பெற்றோரின் பிரிவுத் துயரத்தை என்னால் மறக்க முடிந்தது. ஒரே வாரத்தில் திருமணம் நடந்தது. எப்படி இருந்தோம் என்று தான் சொல்லியிருக்கிறேனே.

"மணமாகிப் பத்தாவது நாள், அவள் காணாமல் போனாள்!... கடத்தப்பட்டாள்...!"

"என்னது?!" என்று நளினி அதிர்ந்தாள்.

சூனியத்தை வெறித்த வண்ணம் சொல்லிக் கொண்டிருந்தவன், சட்டெனத் திரும்பி அவளைப் பார்த்தான்.

"ஆமாம்! ரதி கடத்தப்பட்டாள். என் மனைவி என்கிற ஒரே காரணத்துக்காக, அவள் கடத்தப்பட்டாள். ஒரு பணக்காரனுடைய மனைவியைக் கடத்தினால், அவனிடம் நிறையப் பணம் பறிக்கலாம் என்று திட்டமிட்ட மனிதத்தன்மையே இல்லாத ஒரு கும்பலால் அவள் கடத்தப்பட்டாள். கடத்திக் கொலையும் செய்யப்பட்டாள்."


"ஐயோ!" என்று பதறி எழுந்தாள் நளினி. "கொ...கொலையா?"

அமைதியிழந்து நடந்து கொண்டிருந்தவன், அவள் எதிரில் வந்து நின்றான். "ஆமாம்! கொலை தான். அந்த அரக்கர்களிடம், நான் பணத்தையும் இழந்து மனைவியையும் பறிகொடுத்தேன்.

"அவர்களிடமிருந்து, ரதி தப்ப முயன்றாளா, அன்றி அடையாளம் காட்டி விடுவாள் என்று பயந்தோ, இரண்டு, மூன்று என்று, திரும்பத் திரும்பக் கேட்டு, என்னிடம் பத்து லட்ச ரூபாய் பணத்தையும் வாங்கிக் கொண்டு, அவளையும் கொன்று விட்டார்கள், அந்த வெறியர்கள். பாவம்! ஏழைப் பெண். பணத்துக்குக் கஷ்டப்பட்டாலும், எங்கோ நிம்மதியாக உயிரோடு இருந்திருப்பாள். அவளைச் சிறப்பாக வாழ வைப்பதாக நினைத்துச் சாகடித்து விட்டேன். அந்தக் கொலைகாரர்கள் கையால் கொல்லப்படுமுன், ரதி என்னமாகத் தவித்திருப்பாள். அவளை இழந்து, அந்த இருபத்தோரு வயதில் நான் என்ன பாடுபட்டிருப்பேன்? சொல்லு. என் அன்புக்கு உரியவள் என்கிற காரணத்தால், உனக்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாது என்று, உன்னை நான் பாதுகாக்க முயல்வது, எப்படித் தப்பாம்?" என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

அவளது தோளைப் பற்றி உலுக்காத குறை.

ஆனாலும், இப்போதும், இந்தப் பாதுகாவலர்கள் விஷயத்தை அவளால் முழுதாக ஒத்துக் கொள்ள முடியவில்லை.

"ரதி சின்னப் பெண், புவனன். அத்தோடு, இல்லத்தில் வளர்ந்ததால், சில விஷயங்கள் தெரியாமலே வளர்ந்திருக்கக் கூடும்."

"என்னென்ன விஷயங்கள்?"

"எச்சரிக்கை உணர்வு... பாதுகாப்புக் கலைகள். நான் அப்படியில்லை."

அடுத்த வினாடி நடந்ததை, நளினி சற்றும் எதிர்பார்க்கவில்லை!

மின்னல் விரைவுடன் அவளது இரு கரங்களையும் பின்புறமாகச் சேர்த்துப் பிடித்து, ஒரு காலால் அவளது இரு கால்களையும் சுற்றிப் பிணைத்து, மறு கையால் அவளது தாடையைப் பற்றினான் புவனேந்திரன்.

அனிச்சையான திமிறல் பலனற்றுப் போகவும், திகைப்புடன் அவனைப் பார்த்தாள் அவள்.

"என்னவோ பாதுகாப்புக் கலைகள் என்றாயே. அவற்றைப் பயன்படுத்தி, உன்னை விடுவித்துக் கொள்ளேன், பார்ப்போம்," என்றான் புவனன் ஏளனமாக.

தன்னால் முடியாது என்று நன்றாகவே புரியவும், பேசாமல் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் அவள்.

பார்வை இளகக் குனிந்து, அவளது இதழ்களில் லேசாக முத்தமிட்டு, அவளை விடுவித்தான் அவன்.

"பார், அவர்கள் வன்முறையைத் தொழிலாகக் கொண்டவர்கள். இந்தப் போர்க்கலைகள் எல்லாம் அவர்களுக்குத் தண்ணீர் பட்டபாடு! அதனால் தான், அதே கலைகளைத் திறம்படக் கற்றவர்களைப் பயன்படுத்தி, நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிறேன், நான்! ஒரு முறை சூடு பட்டவன் நான். இன்னொரு பேரிழப்பை என்னால் தாங்க முடியாது. நம் ஈடுபாடு வெளியே பரவிவிட்டது. அதனால், உனக்கு ஆபத்து வந்துதான் தீரும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அந்த வாய்ப்பு மிகவும் அதிகம். எனவே, இந்த மனிதர்களின் காவல் உனக்கு இருக்கும்வரை, என்னால் பெருமளவு நிம்மதியுடன் மற்ற வேலைகளைப் பார்க்க முடியும். அதில்லாமல், ஒவ்வொரு கணமும், நீ பத்திரமாக இருக்கிறாயோ, இல்லையோ என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்க என்னால் முடியாது. அதுவும் உனக்கோர் ஆபத்து நேர்ந்தால், அதைத் தாங்கவும் என்னால் முடியாது. அதனால்... அதனால், ஒன்று, இந்தக் காவலை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது, உனக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய காரணத்தை நீக்க வேண்டும். புரிகிறதில்லையா? நாம் பிரிய வேண்டும். இவை தவிர, மாற்று வழியேதும் கிடையாது!" என்று முடித்தான் அவன்.



காக்கும் இமை நானுனக்கு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:45 pm

ஆனால், அவள் பதில் சொல்லு முன்னரே, அவளது கையைப் பற்றி முத்தமிட்டு, "பிரிவே பரவாயில்லை என்று சொல்லிவிடாதே, கண்மணி!" என்றான் கொஞ்சுதலாக.

கெஞ்சுதலாகவும்.
அவளும் தான் அப்படி எப்படிச் சொல்லுவாள்?

தன் சம்மதத்தைச் சொல்லாமல் சொல்லும் விதமாக அவன் தோளில் சற்று நேரம் சாய்ந்திருந்தாள் அவள்.

ஆனால், அப்போதும் அவளது குடியிருப்புப் பகுதியில் இந்தக் காவலர் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் அவளைக் குழப்பியடித்துக் கொண்டிருந்தது.

குடும்ப விவகாரங்களில் தலையிடா விட்டாலும், அங்கே எல்லோருமே ஒருவருக்கொருவர் இலகுவாகப் பேசிப் பழகுகிறார்கள். கேலியும் கிண்டலும் எளிதாக வரும்.

'புதிதாகக் கார் வாங்கியவர், இரண்டே தரம் 'என் கார், என் கார்' என்று விட்டாலே, அவர் 'கார் பந்தா' ஆகி விடுவார். அதற்கு மேல் போனால் 'போர் பந்தா.'

அந்த மாதிரி இடத்தில், முன்னும் பின்னுமாய் மெய்க் காப்பாளர்கள் என்றால், அவளுடைய குடும்பத்துக்கு என்ன பெயர் வைப்பார்கள்? இது ஒரு பக்கம் என்றால், புவனேந்திரன் அஞ்சுகிற மாதிரியான ஆபத்து எதுவும் தனக்கு வரக்கூடும் என்று, அவளால் ஒப்பவும் முடியவில்லை. இதில் எதைச் சொல்லி இந்த அன்பனுக்குப் புரிய வைப்பது?

"என்ன யோசனை, நளினி?" என்று கேட்டான் புவனேந்திரன்.

"வேறென்ன? அங்கே இந்த இருவரையும் எப்படி இயல்பாகப் பொருந்தச் செய்வது என்றுதான்," என்று உண்மையைச் சொன்னாள் அவள்.

"பொருந்துகிறார்களோ, இல்லையோ, அவர்கள் இருக்கப் போவது கட்டாயம்," என்றான் அவன் இறுகிய குரலில்.

கடைசி முயற்சியாக, "அது மிகவும் பாதுகாப்பான பகுதிதான், புவனன். இதுவரை அங்கே சின்னத் திருட்டு கூட நடந்தது இல்லை. அதனால், கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போமா?" என்று கேட்டாள் நளினி.

"பொறுத்து? பொறுத்திருந்து எதைப் பார்ப்பது? உன்னை யாராவது கடத்திக் கொண்டு போகிறார்களா, இல்லையா என்றா? ஒரு வேளை, கடத்திப் போய் விட்டால்? உன் விஷயத்தில், ஆபத்து வருகிறதா இல்லையா என்று பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க, நான் தயாரில்லை. அதனால், இந்த மாதிரி அசட்டுப் பேச்சு இனி வேண்டாம்," என்று கண்டிப்பான குரலில் கூறி முடித்தான் புவனேந்திரன்.

நளினியின் கற்பனைதானோ, என்னவோ, குடியிருப்புப் பகுதியில் உள்ளவர்கள் எல்லோரும் தன்னை இளக்காரமாகப் பார்ப்பது போல, ஓர் எண்ணம்.

சங்கத் தலைவர், செயலாளர் முதலியோரிடம், சுதர்சனம் அவரவர் வீடுகளுக்குப் போய்ச் சக்திவேல், அவனுடைய கூட்டாளி பற்றிச் சொல்லிவிட்டு வந்தார். அவர்கள் இருவரும் தங்கள் வீட்டுக்கு வேண்டியவர்கள் என்று மட்டுமே.

ஆனால், அவர்கள் இருவரும் சும்மாவே அங்கே இருப்பதும், அவள் வெளியே சென்றால் மட்டும் கூட வருவதும், பிறர் கவனத்தைக் கவராது இருக்குமா, என்ன?

அவரவருக்கு அவரவர் பிரச்சனை... இதில் நம்மைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்க, அவர்களுக்கு ஏது நேரம் என்று மகளுக்குச் சமாதானம் சொன்ன போதும், சுதர்சனத்துக்குமே, இந்தப் பாதுகாவல் இந்த இடத்தில் சற்று அதிகப்படியாகத்தான் தோன்றியது.

புவனேந்திரனின் நிலைமைக்கு அது தேவையாக இருக்கலாம். அப்படித்தான் என்று, ஒரு சமயத்தில் மனைவியிடம் அவனுக்காக வக்காலத்து வாங்கிப் பேசியவரும் கூட! ஆனால், அவனுடைய மனைவியாக ஆகாத நிலையில் எதற்கு என்ற எண்ணம் தான்.

ஆனாலும் மகளது நன்மைக்காக என்று எண்ணித்தானே செய்கிறான் புவனேந்திரன் என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டார்.

பெருமளவு மகளையும்.

ஆனால், இருவருமே, புவனேந்திரனின் பிடிவாதத்துக்காகப் பொறுத்துப் போனார்களே தவிர, இந்தக் காவல் அவசியம் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒரு போதும் வரவில்லை.

புவனேந்திரனையே அடியாட்களோடு அலைவது போல இருக்கிறது என்று கூறும் சகுந்தலாவும், கணவனைப் போலவே பொறுத்துப் போனாள்.

பொறுத்துப் போனாலும், சற்று வசதியான மத்திய தரத்து வாழ்க்கையில் பழகியிருந்த அந்தக் குடும்பத்துக்குப் புவனேந்திரனின் அச்சம் புரிபடவே இல்லை.

ஆனால், அவன் அதில் பிடிவாதமாக இருக்கவே, அவனை இழக்க விரும்பாமல், அவனது நிபந்தனையை ஏற்றுக் கொண்டார்கள் எனலாம்.

செல்வம், செல்வாக்கு என்பது ஒரு புறம் இருந்தாலும், மகள் அவனை விரும்புகிறாள் என்பதும் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. ஆயினும், இந்தக் கூண்டுக் கிளி வாழ்வை மகள் எவ்வளவு நாள் தாங்குவாள் என்று, சகுந்தலாவுக்குச் சந்தேகம் தான்.

நளினியைப் பொறுத்த வரையில், தந்தையுடைய காரில் மட்டுமே வேலைக்குப் போவாள். அப்போதும் காவலர்கள் கூட வருவதுதான். ஆனால், முன் போல ஆட்டோ ஓட்டியிடம் ஏதாவது சொல்வது போன்றவற்றுக்கு இடம் இராதல்லவா?

கார் கிடைக்காத போதும், மற்ற சமயத்திலும் வீடே கதியென்று இருக்கத் தொடங்கினாள்.

ஆனால், அப்போதும் நேரத்தை வீணாக்காமல், தனக்கும் தங்கைக்கும் துணிமணிகளில், மணி, கண்ணாடி, கல், சம்கி போன்றவற்றைக் கொண்டு வேலைப்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள்.

பிடித்தமான வேலைதான். ஆனால், இதுவே சில சமயங்களில் நளினிக்கு எரிச்சலூட்டவும் செய்தது.

முனைந்து வேலைச் செய்கிறபோது, சில சமயம், உரிய கற்கள், கோந்து போன்றவை தீர்ந்து போகும். ஒரு தரம் அந்தக் கோந்து கொட்டிக் காய்ந்து போயிற்று. முன்பானால், உடனே ஆட்டோவிலோ, பஸ்சிலோ சென்று தேவையானதை வாங்கி வந்து, மறுபடியும் வேலையைத் தொடங்கி விடுவாள்.

இப்போதானால், சகுந்தலாவிடம் சொல்லியனுப்பி வாங்க வேண்டியிருந்தது.

அன்றாட வேலைகள், திருமண வேலைகள் எல்லாவற்றையும் ஒதுக்கிக் கொண்டு, அவள் சென்று வாங்கி வந்தாலும், சில சமயங்களில் அவை தவறாகிப் போய், நளினியின் பொறுமையைச் சோதித்து, மூச்சு முட்டுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

மற்றப்படி, பட்டுச் சேலைகள், நகைகள் போன்ற அனைத்தையும், தாயையே வாங்கி வரச் சொல்லி விட்டாள், நளினி.

ஏற்கெனவே, மகளின் திருமணத்தின் போது தேவைப்படக் கூடியவை என்று சுதர்சனமும், சகுந்தலாவும் அவ்வப்போது வாங்கிச் சேர்த்து வைத்துக் கொண்டே இருந்ததால், அப்போது பெரிய அளவில் எதையும் வாங்கும்படி நேரவும் இல்லை.

ஆனால், நளினியே நேரடியாகச் சென்று வாங்க வேண்டிய சில பொருட்களும் இருந்தன.

அவளது உள்ளாடைகளை எப்போதுமே அவளே தான் வாங்குவது வழக்கம். வாசனைப் பொருட்கள், மேக்கப் சாமான்கள் போன்றவற்றையும் தானே தேர்ந்தெடுப்பாள். இப்போதும், அந்த வழக்கத்தை மாற்ற, நளினி விரும்பவில்லை.

அதிலும் முக்கியமாக உள்ளாடைகளை!

அதே சமயம், இரு அன்னிய ஆண்கள் புடைசூழச் சென்று, உள்ளாடையைத் தேர்ந்தெடுப்பதும் அவளுக்கு மிகவும் அசூசையாகப் பட்டது.

ஆனால், இதைப் புவனேந்திரனிடம் சொன்னால், அவளது உணர்வை அவன் நிச்சயமாகப் புரிந்து கொள்ள மாட்டான் என்று தோன்றவும், அவனிடம் சொல்லாமலே கடைக்குப் போய்த் தனக்கு வேண்டியதை வாங்கி வந்துவிட நளினி முடிவு செய்தாள்.

ஆனால் அந்த முடிவு, அவளது திருமணத்தையே நிறுத்தி விடும் என்று, பாவம் அவள் எதிர் பார்க்கவே இல்லை.



காக்கும் இமை நானுனக்கு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக