புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10 
32 Posts - 82%
heezulia
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10 
5 Posts - 13%
viyasan
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10 
209 Posts - 41%
heezulia
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கதைகள்: பயணம்: நாவல்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri 8 Feb 2013 - 7:39

First topic message reminder :

பயணம்
நாவல்
ரமணி

முகவுரை

து ஒரு ரொமான்டிக் நாவல். அதாவது, காதலிக்க முற்பட்ட ஒரு சங்கோசப்படும் (timid), அகமுக (introvert) இளைஞனின் கதையைப் படர்க்கையில் (third person) சொல்லும் சுயசரிதம். கதையின் காலம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது--எழுபதுகளில். களம் தமிழகத்தின் கிராம நகர வாழ்க்கை. கதை மாந்தர்கள் சுற்றமும் நட்பும் சூழ்ந்த ஒரு பிராம்மணக் குடும்பத்தின் சம்ப்ரதாய, சற்றே முற்போக்கான உறுப்பினர்கள், உறவினர்கள்.

ஆங்கிலத்தில் stream of consciousness என்று ஒரு நாவல் உத்தியுண்டு. இந்த உத்தியில் ஆசிரியரின் குறுக்கீடு இல்லாமல் பாத்திரங்களின் மனவோட்டத்தின் மூலமே கதை சொல்லப்படும். James Joyce, Virginia Wolf போன்ற நாவலாசிரியர்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தி இலக்கிய அந்தஸ்தும் புகழும் பெற்றனர். இந்த நாவலில் இந்த உத்தி கொஞ்சம் நீர்த்த வகையில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

தடாலடி திருப்பங்களும் நிகழ்வுகளும் கதையோட்டத்துக்கு முக்கியம் இல்லை எனும்போது, கதையின் வளர்ச்சியில் கதைமாந்தர்களுடைய குணநலன்களின் வளர்ச்சி (அல்லது வீழ்ச்சி), அவர்களின் ஊடாட்டம், உள்வினைகள் போன்ற கூறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வாழ்க்கை என்பதே இவ்வகைக் கூறுகள் அடங்கியதுதானே?

கதையின் ஒவ்வொரு வரியையும் ஊன்றிக் கவனித்து, கணித்து, ஒவ்வொரு சொல்லையும் மனதில் வாங்கி, சொற்களில் பயிலும் கவிதையை அனுபவித்து, வருணனைகளை ரசித்துப் பின் எல்லாவற்றையும் மனதில் அசைபோட்டுக் கதாசிரியர் எழுதியதுபோலவே வாசகரும் படித்தால் கதையின் முழுத் தாக்கம் கிடைக்கும்.

பயணம் என்ற தலைப்புடன் கூடிய இந்த நாவலில், ஒரு சங்கோசப்படும் அகமுக இளைஞனின் இல்லறம் நோக்கிய வாழ்க்கைப் பயணம் ஒரு ரயில் பயணத்துடன் தொடங்குகிறது. ரயிலில் பயணிக்கும்போதே அவன் மனம் அவனது கடந்த கால வாழ்க்கை நிகழ்ச்சிகளில் பின்னோக்கிப் பயணம் செய்கிறது...[/color]

கனவுகளில் முன்னோக்கியும் நினைவுகளில் பின்னோக்கியும் காலத்தில் எப்போதும் பயணம் செய்யும் மனம், யதார்த்தத்தை எதிர்கொள்ளும் போது முதலில் தடுமாறிப் பின் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டு, கிடைத்ததை உத்தமமாக்க முயலும்போது வாழ்க்கை சிறக்கும் என்பதை உணர்ந்துகொள்கிறது.

முப்பது வருடங்களுக்கு முன்னரே நான் இந்த நாவலின் பெரும் பகுதியை எழுதியிருந்தபோதிலும், மனதுக்கு சமாதானம் தரும் சரியான முடிவு கிடைக்காமல் நாவலின் இறுதி வடிவத்தை ஒத்திப்போட்டு வந்தேன். ஒரு வழியாக அந்த சரியான முடிவு மனதில் உதித்து நான் தொண்ணூறாம் ஆண்டுத் தொடக்கத்தில் நாவலை என் மனதுக்குப் பிடித்த வகையில் முடிவு செய்தேன். என்னைப் பொறுத்தவரையில் என் இலக்கிய முயற்சிகளின் சிகரமாக நான் இப்படைப்பைக் கருதுகிறேன். அதே சமயம் வாசகர்களின் நேர்மையான பின்னூட்டங்களையும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

தினத்தந்தி செய்தித்தாளில் வந்த (வரும்?) சிந்துபாத் தொடரின் அளவைவிடக் கொஞ்சம் கூடுதலான, சிறிய தவணை முறைகளில் கதையை இங்குப் பதிய எண்ணியுள்ளேன். ஒரு கவிதையைப் படிப்பதுபோல் மனம் விட்டு, மனம் இட்டு வாசகர்கள் படிக்கவேண்டும் என்று விழைகிறேன். உங்கள் பின்னூட்டங்களை இந்த நூலிலேயே பதிவு செய்யலாம்.

இந்த நாவல் இதுவரை எந்தப் பத்திரிகையிலும் வெளிவரவில்லை. இதைப் பகிர்ந்துகொள்ளும் வாசகர்கள், தனியே படியெடுக்காமல் இந்த ’லிங்க்’ கொடுத்துப் பகிர்ந்துகொள்ளக் கோருகிறேன், கொஞ்சம் கொஞ்சமாக நான் இந்த நாவலை என் வலைதளத்தில் பதிவு செய்வதால்.

ரமணி
01/09/2012

*** *** ***



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat 16 Feb 2013 - 9:14

பயணம்: நாவல்
ரமணி

5

கன்னிப் பருவத்தில் அந்நாள்---என்றன்
காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோபெயர ருண்டு---பின்னர்
யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்!
---மஹாகவி பாரதியார், தமிழ் தாய்!


ள்ளிக்கூடம் முடியும்போது மீண்டும் ஒரு ப்ரேயர்:

வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!


என்று சீனியர் மாணவ மாணவியர் நான்குபேர் முன்னின்று பாட, மற்றவர்கள் எதிரொலிக்கும்போது, அவர்களுக்குத் தாமும் அதுபோல் பாடும் நாள் எப்போது வரும் என்றிருக்கும்.

ஒவ்வொரு நாளும் சாயங்காலம் எப்போது வரும் என்று எதிர்பார்க்கத் தோன்றும். செருப்புகளைத் திண்ணையில் விசிறிவிட்டு, புத்தகப் பைகளை நடையிலேயே போட்டுவிட்டு, கிடுகிடுவென்று புழக்கடைப் பக்கம் ஓடித் தயாராக இறைத்து வைத்திருந்த தண்ணீரில் அவசரம் அவசரமாகக் காலலம்பிவிட்டு, "அம்மா, திங்கம்மா!" என்று கூவியபடியே அடுக்களைக்கு ஓடிவந்து முறுக்கோ, கடலையோ, சுண்டலோ, கொடுப்பதைப் பரக்கப் பரக்க வாயில் அடைத்துக்கொண்டு அவனும் அனுவும் வசந்தியும் விளையாடத் திண்ணைக்கு வரும்போது பின்னால் அம்மாவின் குரல் கேட்கும்.

"வசந்தி, அனு, ராஜா! எல்லோரும் வந்து காப்பி குடிச்சிட்டுப் போங்கோ?"

"அனு-ராஜா!"...

அம்மாவின் வாயில் தினமும் ஒலிக்கும் அந்தப் பெயர் இணைப்பு எப்போது சாஸ்வதமாகும்? இதைப் பற்றி அனு என்ன நினைப்பாளோ? அந்த "சம்மதமா!..." உண்மையில் அவள் மனத்தின் எதிரொலிதானோ? அவன் இப்படியெல்லாம் நினைப்பதை யாரிடம் சொல்வது? சொன்னால்தான் புரிந்துகொள்வார்களா?

Was it calf love?

இப்போது நினைத்துப் பார்க்கையில் இல்லை என்றுதான் தோன்றியது. ஆனால் இப்போதும் அவனால் தன் இளமை நாட்களின் முதிர்ந்த எண்ணங்களைப் பகுத்தறிய முடியவில்லை. காதல் என்றால் என்னவென்று தெரிந்திராத நாட்களில் அவன் அனுவைக் காதலித்துக் கொண்டிருந்தான்.

என்ன காதல், என்ன பாசம் அது!
மாடப் புறாக்களைப் போல
மென்மையாக, வெள்ளை உள்ளத்துடன் கூடி,


[’இட்டதோர் தாமரைப்பூ இதழ் விரிந்திருத்தல் போலே..’ என்று நாலாம் வகுப்பில் படித்த பாரதிதாசன் கவிதை இப்போது நினைவில் நெருடியது.]

தெள்ளிய நீரோடை போலப் பரவி,
குழப்பமே இல்லாமல் கணீரென்று
தனியாக
நீண்ட தூரம் ஒலிக்கும் கோவில் மணிபோல
உரிமை கொண்டாடி,

மெல்லிய சுருள்களாகக்
காற்றில் கலைந்து
பரந்து மறைந்து
மணம் பரப்பும்
ஊதுவத்திப் புகை போல
நிர்மலமான உள்ளத்துடன்
வாஞ்சையுடன் உறவாடி,

சின்னச் சின்ன விஷயங்களில்
மனதைப் பறிகொடுத்துக் கொண்டு,
அந்த எளிய, இனிய நாட்களை
இப்போதும் அசை போட்டுக்கொண்டு
கண்கள் சூனியத்தில் நிலைத்திருக்க,
அப்பாவின் கடிதம் மடியில் படபடக்க...


வ்வொரு மாலையும் வெய்யில் தாழும் வரை திண்ணையில் ’நாலு சோவி’ ஆட்டம்.

’முக்கை’ விழும் வரை ஆடலாம். அல்லது அடி தவறும் வரை. ’நாலு’ விழுந்தால் ஏகப்பட்ட போட்டி. ’ஒட்டு’ விழுந்தால் வேண்டுமென்றே அனு ஒரு சோழியால் மற்றொன்றை அடித்து, தள்ளித் தள்ளிப் போடுவாள்!

அல்லது ’அஞ்சு கல்லாட்டம்’. "எப்படி ராஜா நீ இந்தப் மகளிர் விளையாட்டை இவ்ளோ நல்லா விளயாடறே!" என்று தினமும் அனு அதிசயிப்பாள்.

சூரியன் எதிர் வீட்டின் மொட்டை மாடிக்குப் பின்னால் மறந்ததும் ’கல்லா மண்ணா’, அல்லது ’நொண்டி’. [’வெயிட்டீஸ்! அனு, கால் தரையில படுது!’], அல்லது ஓட்டப் பந்தயம் (அவள் உயரம் காரணமாக அதில் எப்போதும் அனுதான் முதலில் வருவாள்).

விளயாட்டு முடிந்ததும் மறுபடியும் கைகால் அலம்பிக்கொண்டு சிரத்தையாக விபூதி இட்டுக்கொண்டு...

அனுவின் பொன்னிற நெற்றியின் நடுவில்
சாயங்காலத்துச் சூரியன் போல
அழகிய, வட்டமான
சிவப்புச் சாந்து.
அதன்மேல் ஒட்டினாற்போல்
சின்ன மேகமாக விபூதி...


கோவிலுக்குப் போய் நெய்விளக்கு ஏற்றி, தீபாராதனை பார்த்துவிட்டு, ஒரு கையில் விபூதியும் ஒரு கையில் குங்குமமும் ஈரமாகக் கொண்டுவந்து அம்மா, அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும் அடுத்தாத்து மாமிக்குக் கொடுத்துவிட்டு, மாமி கிளம்பிப் போனதும் மறுபடியும் ஸ்வாமி படங்கள் முன் உட்கார்ந்துகொண்டு அம்மா பாட எல்லோரும் இனிமையாகத் திருப்பிச் சொல்ல, ’கஜானனம் பூத கணாதி ஸேவிதம்’, ’வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்’ முதல் (செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில்) ’மகிஷாசுர மர்த்தினி’ வரை ஸ்தோத்திரங்கள், ஸ்லோகங்கள்...

அப்புறம் ’போய்ட்றேன் மாமி! போய்ட்றேன் ராஜா! போய்ட்றேன் வசந்தி!’ என்று அனுவின் ஓட்டம், அவள் வீட்டுக்கு. அதன்பின் சாப்பாடு, வீட்டுப் பாடம், ஒன்பது மணிக்கெல்லாம் தூக்கம்!

(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun 17 Feb 2013 - 9:05

விடுமுறை நாட்கள் வந்தால் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஊரிலிருந்து வசந்தியின் சகோதரர்கள் முரளியும், சந்துருவும், அவன் பெரியப்பா பேரன் கண்ணனும், வசந்தியின் அக்கா பானுவும் கட்டாயம் வந்துவிடுவார்கள். எல்லோருக்கும் அவனை மிகவும் பிடிக்கும். காலையில் இருந்து விளையாட்டுக்கள்! பொழுது போவதே தெரியாது.

காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார்கள். உமிக்கரி அல்லது ’கோபால் பல்பொடி’யைக் கைநிறைய எடுத்துக்கொண்டு (பெரியவர்களுக்கு மட்டும் ’பயோரியா’ பல்பொடி. இவர்கள் பல்பொடியை வீணாக்குவதால் அப்பா கொஞ்ச நாளில் சின்னச் சின்ன பொட்டலங்கள் போட்டுவிடுவார்!) புழக்கடைப் பக்கம் பல்தேய்க்கப் போகும்போது முனுசாமி பால் கறந்துகொண்டிருப்பான். பக்கத்தில் கன்றுக்குட்டி ஆவலுடன் காத்திருக்கும், இவர்களைக் குவளைக் கண்களால் நோக்கியபடி.

ஜில்லென்ற நீரில் முகம் கழுவிக்கொண்டு, முனுசாமி பால்குவளையைக் கொண்டுபோய்க் கொடுக்கும்போது ஒரு தடவை எல்லோரும் கிணற்றில் எட்டிப் பார்த்துவிட்டு (சமயத்தில் பானு பார்த்துவிட, கோபித்துக்கொள்ளுவாள்), அம்மா காப்பி குடிக்க அழைப்பதற்குள் தோட்டத்தை ஒரு வலம் வருவார்கள்.

தோட்டத்தில் நுழைந்ததும் முதல் வேலை அன்று புதிதாய் மலர்ந்துகொண்டிருக்கும் பூக்களைக் கண்டுபிடித்து எண்ணுவது. பூக்களை அப்பா தினமும் பூஜைக்குப் பயன்படுத்துவதால் அவர்கள் கையால் அவற்றைத் தொடாமல், வலது கையின் நான்கு விரல்களை மூடிக்கொண்டு கட்டை விரலால் சுட்டுவார்கள்!

"வசந்தி இங்க பார், செம்பருத்தி இலைகளுக்கு இடுக்கில ஒரு ரோஜாப்பூ!"

"ராஜா இங்க ஒண்ணு!"

"அப்பா எவ்ளோ பூ! நான் இன்னிக்குத் தலையில் நிறைய வெச்சுக்கலாம்."

"நான்கூட நேரு மாதிரி சட்டையில ஒண்ணு சொருகிக்குவேன்!"

"காதுல வேணும்னாலும் வெச்சிக்கோயேன், யார் வேண்டான்னா?"

"ஏய், சந்துரு, டேபிள்ரோஸை மோந்து பார்க்காதே, உள்ள பூநாகம் இருக்கும்!"

"அப்புறம் இங்கே பார், மொத்தம் பதினெட்டு செம்பருத்திப் பூ இன்னைக்கு!"

"ஏய் யாரும் தப்பித்தவறி பூக்களைத் தொட்டுடக் கூடாது. குளிச்சப்புறம் மடியா பெரியப்பாக்கு பூஜை பண்ணப் பறிச்சுக் கொடுக்கலாம்."

அடுத்தது, தினமும் கொஞ்சம் இலைவிரியும் வாழைக் குருத்துகள். நீர் முத்துக்கள் தங்கி இருக்கும் இளம்பச்சை இலைக் குழல்களுக்குள் எட்டிப் பார்ப்பதில் தனி மகிழ்ச்சி.

முதலில் உள்ள வாழை அவனுடையது. அடுத்தது அனுவுடையது. அப்புறம் வசந்தி.

"சொன்னா சொன்னதுதான், அப்புறம் மாத்தக்கூடாது", என்பாள் அனு.

"ராஜா, அனுவோட வாழை பாரேன், எவ்ளோ பெரிய எலை விட்டிருக்கு!"

"’டாப்’ இல்ல! அனு வந்ததும் காட்டணும்."

"சந்தோஷம் தலை கொள்ளாது அவளுக்கு."

அனு வந்ததும் ஒரு இனிய சர்ச்சை ஆரம்பமாகும்.

"பத்தியா, நான் சொன்னேல்ல, என்னோட வாழைதான் ஜெயிக்கும்னு!"

"அதெல்லாம் கிடையாது. இன்னும் ரெண்டு மூணு நாள்ல பாரு."

"நடக்கவே நடக்காது!"

"பார்க்கலாமா?"

"ம்...பார்க்கலாம்."

இன்றும் அந்த மூன்று வாழைகள் அவன் வீட்டுத் தோட்டத்தில் வாழையடி வாழையாகத் தழைத்திருப்பதை நினைக்கும்போது பெருமையாக இருந்தாலும், கண்கள் கனத்தன. அனுதான் இல்லை!

ப்புறம் அந்தப் பயிர்க்குழிகளில் ஒவ்வொருவரும் போட்ட விதைகள்...

மூன்று நாட்களில் முளைத்து, இலைவிட்டு, முதலில் சின்னதாகக் கொடிவிட்டு, கொடி கம்புகளிலும் கயிறுகளிலும் பற்றிக்கொண்டு, பந்தலில் படர்ந்து, பரந்து, சூரிய ஒளி தரையில் பொற் செதில்களாகப் பட அடர்ந்து, திடீரென ஒருநாள் ’குப்’பென்று பூத்து...

காலையில் பார்க்கும்போது புடலையின் மென்மையான, சிறிய பூக்களின் வெண் சிரிப்பு. அவரையின் வயலட்-பிங்க் விழிப்பு. மாலையில் பீர்க்கம் பூக்களின் மஞ்சள் வனப்பு. மூக்கைத் துளைக்கும் அந்த வாசனியே தனி!

காய்ப் பூக்கள் வாடிப் பிஞ்சுகளாகி இலைகளில் ஒளிந்துகொண்டு பெரிதாகி, புடலையாய் இருந்தால் நுனியில் கயிறுகட்டிக் கற்கள் தாங்கி, ஒருநாள் எல்லோரும் காய்களை வேட்டையாடி, அப்படியும் சில காய்கள் அலையும் கைகளுக்குத் தப்பி நெற்றாகிப் பிளக்கப்பட்டு விதைகள் அடுத்த சீசனுக்காகப் பரணில் அஞ்சறைப் பெட்டிகளில் பத்திரப் படுத்தப்பட்டு...

தோட்டத்தில் பூசணிக்கென்றே தனிப் பகுதி. காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு அலைவதுபோல் அப்படியொரு வேகமான வளர்ச்சி!

தரையில்தான் அப்படி என்றால் வேலியில் கூடவா? பற்றிக்கொள்ள ஒரு சின்ன, உறுதியான கொழுகொம்பு கிடைத்தால் போதும், கிடுகிடுவென்று மேலே மேலே படர்ந்துவிடும்.

அப்புறம் சாமர்த்தியமாக அந்தக் கொடியை அதன் சுருள் கம்பிகள் அறுகாமல் வளைத்து திசைதிருப்பிட வேண்டும். கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடும்!

மார்கழி வந்தால் போதும். ஒவ்வொரு நாள் காலையும் தோட்டம் கொள்ளாமல் பூக்கள்! அக்கம் பக்கத்து வீடுகளுக்குக் கொடுத்து மாளாது. அனுவும் வசந்தியும் முதல்நாள் இரவே அம்மாவின் கவனிப்பில் திட்டமிட்டு வரைந்து பார்த்து, மறுநாள் காலை ஒருவருக்கொருவர் சளைக்காமல் போட்டி போட்டுக்கொண்டு நடுக்கும் குளிரில் சீக்கிரமே எழுந்து வாசலில் விஸ்தாரமாகப் போடும் கோலங்களில் கற்றை கற்றியாக இந்தப் பூசணிப் பூக்கள் சாண உருண்டைகளில் ’ஜம்’மென்று அமர்ந்திருக்கும்!

எவ்வளவு பூக்கள் பூத்தாலும் அவற்றில் கணிசமாகக் காய்ப்பூக்கள் இருந்தாலும் காய்ப்பதே தெரியாது. திடீரென்று ஒருநாள் எல்லோர்க்கும் ஞானோதயம் உண்டாகி, காலையில் சீக்கிரமே எழுந்து, பனித்துளி படர்ந்து ’டால்’ அடிக்கும் ராட்சச இலைகளின் கம்பளிப்புழு முட்களைப் பொருட்படுத்தாமல் பரபரவென்று விலக்கித் தேடும்போது, சிந்துபாத் கதைகளில் வரும் பெரிய பெரிய முட்டைகள் போல, கைகொள்ளாமல் பசுமை வரிகளுடன் அழகழகான காய்கள்!

அனுவின் பாஷையில் சொல்வதானால் ’குண்டுக்காய்கள்!’

அனுவுக்கு ’குண்டுக்காய்’ என்றால் ரொம்பப் பிடிக்கும். தினமும் பரங்கிக்காய் கூட்டு, சாம்பார் என்றாலும் அவள் ரெடி. பாவம், அவள் வீட்டில் என்னவோ பூசணி சரியாகவே வந்ததில்லை. வந்தாலும் காய்த்ததில்லை. இதனால் பூசணிக்காய் சீசனில் அம்மா வாரம் மூன்று, நான்கு காய்கள் அனு வீட்டுக்கு அனுப்பிவிடுவாள். சமயத்தில் அனுவே அவற்றை ஆசையுடன் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு போவாள்!

"பாவம் மாமி நீங்க! எல்லாக் காயும் நானே எடுத்துண்டு போயிடறேன். ராஜா, உங்களுக்கெல்லாம் இருக்கா?"

அனுவுக்குப் பிடித்த விஷயங்களில் அவனுக்குப் பிடிக்காதது இந்தப் பரங்கிக்காய் மட்டுமே. இருந்தாலும் அவளுக்காகக் கொஞ்சம் சாப்பிட்டு வைப்பான், பிடிக்காது என்று சொல்ல மனம் இல்லாமல்.

இப்போதும் சிலநாள் அம்மா அவன் தட்டில் பரங்கிக்காய் கூட்டை முகத்தில் கொஞ்சம்கூடச் சலனமில்லாமல் பரிமாறும்போது தண்ணீர் நுழைந்த காகிதக் கப்பலாக மனம் கனத்து சமயத்தில் கண்களில் நீர் மல்கிவிடும்.

அம்மா அனுவை அறவே மறந்துவிட்டாள்!

*** *** ***
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon 18 Feb 2013 - 7:53

பயணம்: நாவல்
ரமணி

6

போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்து போனதனால்
நானுமோர் கனவோ?--இந்த ஞாலம் பொய்தானோ?
---மஹாகவி பாரதியார், ’உலகத்தை நோக்கி வினவுதல்’


"ங்கடா போய்ட்டீங்க எல்லோரும்? காப்பி ஆறிப்போயிண்டிருக்கு!"

அம்மா-பானுவின் கூட்டழைப்பில் ஒவ்வொருவரும் தோட்டத்திலிருந்து ஓடிவந்து மளமளவென்று காப்பி குடித்துவிட்டுத் திண்ணையில் புத்தகப் பையுடன் உட்காரும்போது கூடத்துச் சுவர்க் கடிகாரம் ஏழடிக்கும்.

அதன்பின் சளசளவென்ற சந்தைக்கடை இரைச்சலில் மலயமான் திருமுடிக் காரி ரூபாய் 200 வீதம் குதிரை வாங்கி, விற்று, லாபமடைந்து, காற்றுக்கு எடையுண்டு என்று நிரூபிக்கத் தராசில் பலூனை நிறுத்துப் பார்த்து, பாத்திகள் அமைத்து நீர் பாய்ச்சி, வலையில் சிக்கிய சிங்கத்தை விடுவித்து, பாய்மரக் கப்பல் புயலில் சிக்கி ஆளரவமற்ற தீவில் ராபின்சன் க்ரூசோவுடன் ஒதுங்கிக் கோடுகளில் நாட்களைக் கணக்கிடும்போது, அவன் மட்டும் கண்கள் மடியில் உள்ள புத்தகத்தில் நிலைத்திருக்க, மனம் அனுவை நினைத்து அவளின் அன்றைய வருகையை எதிபார்த்துக் காத்திருக்க, மணி எட்டடித்ததும் ஒவ்வொருவராக பானுவின் அழைப்பில் எல்லாவற்றையும் மூட்டை கட்டிவைத்துவிட்டுக் குளிக்கப்போக, ஒன்பது மணிக்கெல்லாம் டிஃபன் ரெடி.

அம்மாவும் பானும்வும் ஒருவர் மாற்றி ஒருவர் சளைக்காமல் சுடச்சுட வார்த்துப்போட அவனும் வசந்தியும் சந்துருவும் முரளியும் கண்ணனும் முழுமூச்சுடன் தோசையை ஒருகை பார்க்க---

எல்லோருக்கும் முதல் தோசைக்கு உறியிலிருந்து தேன்பாகு. அடுத்தது மிளகாய்ப் பொடியுடன் இரண்டு. அப்புறம் ஒன்று கெட்டித் தயிருடன்.

காரம் முடிந்த கையோடு அவர்களின் வால்ட் டிஸ்னி உலகம் இயங்கத் தொடங்கிவிடும். இதற்குள் அனுவும் குளித்து சாப்பிட்டுவிட்டு கைகால் முகம் எல்லாம் மஞ்சள் மணக்க, "நானும் ஆட்டத்துக்கு வருவேன், இல்லேன்னா ஆட்டத்தைக் கலைப்பேன்!" என்ற பிடிவாதத்துடன் அவர்களோடு சேர்ந்துகொள்ளுவாள்.

பழைய தபால் கார்டுகளை நீளவாட்டில் ஒழுங்காக மடித்து கூடத்திலிருந்து திண்ணை வரை இரண்டு வரிசைகள் ரயில் பெட்டிகளாகப் பொறுமையுடன் நிறுத்திவைத்து (இன்ஜினுக்கு ஒரு கலர் கார்டு), "சென்னை செல்லும் தூத்துக்குடி எக்ஸ்ப்ரஸ் இன்னும் சில வினாடிகளில் புறப்படும்" என்று கையைக் குவித்து அறிவித்துவிட்டு, இரண்டு ரயில் வரிசைகளை ஒன்றுக்கொன்று போட்டியாக (சமயத்தில் எதிரும் புதிருமாக) விடத் தீர்மானித்து, முதல் கார்டை அனு மருதாணியால் சிவந்த தன் ஆள்காட்டி விரலால் மெல்லத் தொட, ’ஸ்...ஃபட்...ஃபட்’ என்ற மென்மையான ஒலியுடன் கார்டுகள் தலைவணங்கிப் படிகள் மீது தவழ்ந்தும் கிளைகளாகப் பிரிந்தும் அழகாகச் சாய்ந்து வரிசையாக விழுவதற்கு என்ன வேண்டுமானாலும் தரலாம்!

சமயத்தில் காற்றில் ரயில் தானே கிளம்பிவிடும்! அல்லது படிகளில் நின்று சண்டித்தனம் செய்யும். அல்லது பானு வாசலுக்கு வரும்போது அவள் தாவணியின் சலசலப்பில் தலைகீழாகப் புறப்பட்டுவிட, அவள் வசமாக வாங்கிக் கட்டிக்கொள்ளுவாள்!

கார்டுகளை வைத்து வீடு கட்டுவது, கூழாங்கற்களை ஒளித்து வைத்துவிட்டு தேடச் சொல்லுவது, தாயக்கட்டம், பரமபத சோபான படம்---

"ஏய், இந்த விளையாட்டுல யாரும் பாதியில எழுந்து போகக்கூடாது. போனா, ஸ்வாமி கோவிச்சிப்பார்னு எங்க பாட்டி சொல்லுவா!" என்று அனு ஒவ்வொரு தடவை அறிவித்தாலும் ஒரு முறைகூட அவர்கள் அதை முழுவதும் விளையாடியதாக நினைவில்லை!

அப்புறம் ஆடுபுலி ஆட்டம், கேரம் போர்டு, ’புளிய முத்துகளை’ வைத்துக்கொண்டு சில்லாக்கு அல்லது ஒற்றையா-ரெட்டையா, தீப்பெட்டிப் படக் கரன்சியில் நாலு கோலி, சிகரெட் அட்டைகளில் ஒத்த தீப்பெட்டிப் படங்களை ஒட்டி ஒரு எளிய ரம்மி---இப்படி எத்தனை எத்தனை ஆட்டங்கள்!

இதற்குள் மதியம் சாப்பாட்டுக்கு நேரமாகிவிட, தட்டு வைக்கும்வரை ’சினிமாப் பெயர்’. சரியான நடுப்பகல் வெய்யிலில் அனு விடைபெற்றுக் கொள்ளுவாள்.

சாப்பாடு முடிந்து கடைசிவரை சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் மேல் ’நீதான் கட்டக்கடைசி!’ என்று கைமழை தூறிவிட்டு, அப்பா ஒரு ’பின்னி பிளாங்கெட்’டை விரித்துப்போட, ஒவ்வொருவரும் கையில் ’பஞ்சதந்திரக் கதைகள்’, ’பீர்பால் கதைகள்’ அல்லது ’அம்புலிமாமா’ சகிதம் படுத்துக்கொண்டு, அப்பாவின் கண்டிப்பில் தூங்குவதுபோல் பாவனை செய்துவிட்டு அவர் தூங்கியதும் ஒவ்வொருவராக நழுவி விளையாடப் போக, முனுசாமி பால் கறக்க வந்துவிடுவான்.

ப்படித்தான் ஒரு மாலை முரளி பால்கறக்கும் ஆசையில் பசுவின் மடியில் கைவைக்க, அது பின்னங்காலால் உதைவிட, வலது தொடையில் வெள்ளை சிராய்ப்புடன் கீழே விழுந்த முரளி கேவத்தொடங்க, அப்பா எழுந்துவிடப் போகிறாரே என்ற பயத்தில் அவனும் வசந்தியும் மொட்டை மாடிக்கு ஓடி, அங்கு உலர்த்தியிருந்த கருவடாங்களில் ஒன்றிரண்டு கொண்டுவந்து கொடுத்து முரளியை சமாதானப் படுத்தினார்கள்.

சில நாட்கள் திடீரென்று அப்பா வந்துவிடுவார்!

"நீங்கள்லாம் என்ன பண்ணிண்டிருக்கேள் இங்க? யாருமே தூங்கலையா?"

"தூங்கி எழுந்தாச்சு பெரியப்பா. இப்பதான் காப்பி குடிச்சிட்டு விளையாட வந்தோம்."

"அப்படியா? சரி. வெயிலில் அலையாம விளையாடுங்கோ."

"ஆட்டும் பெரியப்பா!"

அப்பா அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட, அடிக்கடி இதுமாதிரி பார்க்கும் அவர் பார்வையின் பொருள் அனுமதியா, மறுப்பா, கோபமா என்று புரியாமல் அவன் குழம்பி நிற்க, கொஞ்ச நேரத்தில் அனுவும், பானுவும் கூட அவர்கள் விளையாட்டில் கலந்துகொள்ள, எல்லாம் மறந்து மனசு லேசாகிவிடும்.

மூன்று மணி வெய்யிலில் வீட்டில் வலதுபக்கம் காம்பௌன்ட் சுவர்வரை படர்ந்திருக்கும் காட்டுச் செடிகளும் கொடிகளும் நிறைந்த புதர்களில் அவர்கள் பட்டுப் பூச்சிகளைப் பின்தொடர்ந்து அலைந்து, ’தட்டான்’களைப் பிடித்து அவற்றை சிறுசிறு கற்களைத் தூக்கவைத்து மகிழ்ந்து, வாலில் நூல் கட்டிப் பறக்கவிட்டு, காட்டுப் பூக்களைப் பறித்துத் தேனுறிஞ்சி, சில பூக்களின் தலையைச் சுண்டிவிட்டு, ’பட்டாஸ்’ காய்களைத் தண்ணிர் தெளித்து வெடிக்கச் செய்து, ஆமணக்கு விதைகளைச் சேகரித்து (’கணக்கு பிணக்கு ஆமணக்கு’ என்பாள் அனு), அதன் மிருதுவான பூக்களில் மயங்கி, கறையான் புற்றுகளை உடைத்து, தட்டைக்குச்சிக் கட்டுகளை அவிழ்த்து மூங்கில் விற்களில் அவற்றைப் போட்டி போட்டுக்கொண்டு அம்புகளாக வானில் எய்து (அந்த அம்புகள் மேலே செல்லும்போது சின்னதாகி மீண்டும் பழைய நிலைக்கு வந்து விழுவது பார்க்க வியப்பாக இருக்கும்), நன்றாகக் காய்ந்த குச்சிகளைத் தோலுரித்து தக்கை வண்டிகளும் பொம்மைகளும் செய்து விளையாடி, ஓணான்களை வேட்டியாட முயன்று, வானில் பறக்கும் கொக்குகளையும் கருடன்களையும் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டு, கை நகங்களை நகங்களால் தட்டி உரசிவிட்டு, அந்த நகங்களில் அப்போதுதான் கண்ணில்படும் வெள்ளைப் புள்ளைகளை அதிர்ஷ்டத்தின் சின்னங்களாக நினைத்துக்கொண்டு...

பானு இருக்கும்போது அவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு ’கண்ணாமூச்சி’.

அனைவரும் ’சாட்-பூட்-த்ரீ’ போட்டதும் அவள், "தானா பேனா தந்திரிப் பேனா ஒனக்கொரு பழம் எனக்கொரு பழம் கொண்டோடியா!" என்று ’தாச்சி’யின் கண்களைப் பொத்தியபடி மூன்று தடவை உரக்கக் கூவிவிட்டு, "விட்டுட்டேன்... விட்டுட்டேன்... விட்டுட்டேன்!" என்று கண்களைத் திறந்துவிட, கண்களைப் பொத்திக்கொண்டவன் கம்பீரமாக நடந்து ஒவ்வொருவராகத் தேடத் தொடங்க---

"அந்தோ, பச்சைப் பாவாடை செம்பருத்திச் செடிக்குப் பின்னால! வசந்தி வெளிய வா!"

பானுவுக்கு அனுவிடம் கொஞ்சம் தாராள மனசு. அவள் கண்களைப் பொத்திக்கொண்டாலும் சரி, ஒளிந்துகொண்டாலும் சரி, அவளுக்கு பானுவிடமிருந்து நிச்சயம் ஒன்றிரண்டு கண்ஜாடைகள் கிடைத்துவிடும். இதனால் அனுவை ’அவுட்’டாக்குவது ரொம்பக் கஷ்டம். எப்படியாவது கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஓடிவந்து பானுவைத் தொட்டுவிடுவாள். அப்படியே அவுட்டாகி கண்களைப் பொத்திக்கொண்டாலும் எல்லோரையும் கண்டுபிடிப்பது அவளுக்கு கஷ்டமாக இருக்காது.

’கண்ணாமூச்சி’ என்றதும் அவன் சமீபத்தில் படித்த அனிதா தாஸின் 'Games in a Twilight' சிறுகதை ஞாபகம் வந்தது. இப்படித்தான் அந்தக் கதையில் ஒரு சிறுவன் கதவின் சின்ன இடுக்கு வழியே நுழைந்து ஒரு பழைய ’ஷெட்’டில் ஒளிந்துகொண்டு தவம் கிடக்க, மற்ற குழந்தைகள் அவனை அறவே மறந்து வேறு விளையாட்டுகளுக்குச் சென்றுவிட, அவனுக்கு மிகவும் ஏமாற்றமாகப் போய்விடுகிறது. கதையின் அழகிய வருணனைகளும் அந்த feel of wordsஸும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன.

சூரியன் மறைந்ததும் எல்லோரும் திண்ணையின் முன்னால் உள்ள புல்வெளியில் அமர்ந்துகொண்டு, தரை முழுவதும் இறைந்துள்ள வாடிய பூவரசம் பூக்களைப் பொறுக்கி இதழ்களைப் பிய்த்துவிட்டு ’கூஜா’ செய்து (பானு அதில் எக்ஸ்பர்ட்), பூவரசம் இலைகளில் ஊதல்கள் செய்து போட்டி போட்டுக்கொண்டு ஊதி, மஞ்சள், வெள்ளை, சிவப்பு என்று வாசல் ’கேட்’வரை அழகாகப் பூத்திருக்கும் அந்தி மந்தாரைப் பூக்களைப் பார்த்து வியந்து, வாடிய பூக்களை விலக்கி நன்றாகக் கறுத்த விதைகளை சேகரித்து மனம் போன போக்கில் பூமியில் ஊன்றி, மீதம் இருப்பவற்றை தீப்பெட்டிகளில் பத்திரப்படுத்தி, வாடாமல்லிப் பூக்களில் வெளுத்தவற்றைப் பிய்த்துத் தோட்டம் எங்கும் தூவி (சில நாட்களில் அவை பசுமை எறும்புக் கூட்டங்களாக முளைத்துவிடும்), இருட்டத் தொடங்கியதும் வீட்டுக்குள் நுழைவார்கள்.

விளக்கு வைத்ததும் ஸ்லோகங்கள் சொல்லிவிட்டு சீக்கிரமே சாப்பிட்டுவிட்டு

"அனு, நீயும் எல்லோரோடையும் உட்கார்."

"இல்லை பானுக்கா, நான் எங்காத்துக்குப் போய் சாப்டுட்டு வந்துடறேன்."

"உங்க பாட்டி திட்டுவான்னு பயமா?"

"நான் சொல்லிக்கறேண்டி உங்க பாட்டிகிட்ட!"

"வேண்டாம் பானுக்கா".

"அப்ப நீ கதை கேட்க வரலையா?"

"இங்க சாப்டாத்தான் கதை."

"சமர்த்தா ராஜா பக்கத்தில உட்கார்ந்துக்கோ பார்க்கலாம்."

பானு சாப்பிடும்வரை பேருக்கென்று பாடம் படித்துவிட்டு, இரவு ஒன்பது மணி வரை பானு அளக்கும் கதைகளை மெய்மறந்து கேட்டுவிட்டுக் கொட்டாவியுடன் அனு விடைபெற்றுக்கொள்ள படுக்கச் செல்வார்கள்.

(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue 19 Feb 2013 - 8:02

ப்புறம் அந்த ஆற்றங்கரைப் பள்ளிக்கூடம்.

’ப’ வடிவில் அமைந்து பெரியபெரிய வகுப்பறைகளுடன், பெரிய தாழ்வாரத்துடன் புத்தம்புதுக் கட்டடம். ஐந்தாம் வகுப்பு முழுவதும் இனிமேல் இங்குதான் என்று அறிவித்தபோது மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது.

அவன் பள்ளிக்கூட நாட்களின் சிறந்த நேரங்கள் இந்தப் பள்ளியில்தான் கழிந்தன. அவனும் அனுவும் வசந்தியும் போட்டியுடன் படித்து அனைத்துப் பாடங்களிலும் மாறி மாறி முதல் மார்க் வாங்கி---

எப்படியும் முதல் ’ராங்க்’ அவனுக்கே. சமயத்தில் அனுவோ வசந்தியோ அதைப் பறித்து விடுவதுண்டு. வழக்கமாக ராஜா-அனு-வசந்தி என்று வரும் முதல் மூன்று இடங்கள் எப்போதாவது ராஜா-வசந்தி-அனு என்று மாறிவிட அனு தன்னைத்தானே தலையில் குட்டிக்கொள்ளுவாள்!

மூன்று பேரிலும் அனுவின் கையெழுத்து மிக அழகாக இருக்கும். சீரிய கோடுகளையும் வளைவுகளையும் கொண்டு குண்டுகுண்டான எழுத்துக்களில் எழுதியிருக்கும் அவள் நோட்டுப் புத்தகங்களை இரவல் வாங்கிப் படிப்பது ஒரு தனி ஆனந்தம். அனுவின் எழுத்துகளின் ஒரு தனித்தன்மை, எல்லோரும் ’கி, தி’ என்று சாதரணமாக எழுதும்போது அவள் மட்டும் குற்றியலிகரங்களைத் தலைச் சுழியுடன் கலையழகோடு எழுதுவாள்.

சின்ன வயதில் பண்படுத்தப்பட்டு, பள்ளி-கல்லூரி நாட்களில் அழகுடன் எழுதும் வழக்கமுடைய பலர் நாளடைவில் தம் கையெழுத்து தேய்ந்து கிறுக்கத் தொடங்கிவிடுகின்றனர். எப்போதும் ஒரே மாதிரி சீராக, அழகாக, குண்டுகுண்டாக எழுதுபவர்கள் நூற்றுக்குப் பத்து பேர்தான் இருப்பார்கள் என்று தோன்றியது.

அனுவின் கையெழுத்துகூட அவள் கல்லூரி நாட்களில் எவ்வளவு மாறிவிட்டது! என்னதான் அந்தப் பெண்மையின் நளினம் இருந்தாலும் அனுவின் கடிதத்தில் இருந்த எழுத்துகள் அவள் எழுதினவையே என்று அடையாளம் தெரிந்துகொள்வது சிரமமாக இருந்தது.

அனுவின் கடிதம் நினைவுக்கு வர, மனத்தை சோகம் பாரமாக அழுத்தியது. அவனை அவள் எவ்வளவு தூரம் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டாள் என்பதை நினைக்கும்போது உலகமே இருண்டுவிட்டது போலிருந்தது.

ஒருநிமிடம் இரண்டு நிமிடம் என்று
நேரம் ஊர்ந்த போதும்
வாசலே வராத குகைக்குள்
ரயிலில் போய்க்கொண் டிருப்பது மாதிரி.

திடீரெனச் சக்கரங்களில் ஏதோ நெருடத்
தறிகெட்டு ஓடித் தடம்புரண்டு
பெட்டிகள் ஒன்றுக் கொன்று
’தொலைநோக்கி’ யாக
மடிந்து சுருங்கிக்
கூரையில் இடித்து
வழியே இல்லாது அடைத்துக் கொண்டு
வெளியுலகத் தொடர்புகள் முற்றிலும் அறுந்து
லண்டனில் ஏற்பட்ட அந்தப்
பாதாள ரயிலின் விபத்து மாதிரி...


அன்று அனுவின் கடிதம், இன்று அப்பாவின்.
அவனது விருப்பத்துக் கெதிராக வாழ்வின் அத்தியாயங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் திடுமென முடிந்துவிடுகின்றன.

எப்படி இருந்தாலும் அவனால் அப்பாவின் சொல்லை மீற முடியாது. மீறிதான் என்ன செய்வது? பாதையே தெரியாத பயணத்தில் வழித்துணையே வேண்டாம் என்றால் எப்படி?

ஆனாலும் அவனால் அனுவை
எப்படி மறக்க முடியும்?
அவளை மறப்பது என்பது
அவன்தன் பெயரை மறப்பது மாதிரி.


(ஈ ஒன்று தன் பெயர் மறந்த கதைப் பாட்டு சம்பந்தம் இல்லாமல் நினைவில் பளிச்சிட்டு மறைந்தது.)

வாழ்க்கையில் அவனுக்குக் கிடைத்த முதல் தோழி அனு. அவளைமட்டும் சந்தித்திராவிட்டால் அவனுடைய இளமை நாட்கள் இவ்வளவு தூரம் இனிமையாக இருந்திருக்க முடியாது.

அனுவைத் தவிர வேறு யாரும் அவன் மனதை, நினைவுகளை, கனவுகளை இவ்வளவு தூரம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்க முடியாது. அசுர வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் இந்த வைகை எக்ஸ்ப்ரஸின் ஆரவாரமான சூழ்நிலையில் புலன்கள் விழித்திருக்க, மனம் மட்டும் அடிக்கடி சின்னத் தூக்கம் போட்டு, புரஃபசர் மித்ராவின் அழைப்பில், மெஸ்மெரிசத்தில் அந்தப் பழைய நாட்களை மீண்டும் ஒருமுறை வாழ்ந்துகொண்டிருக்க முடியாது.

காலவோட்டத்தின் மணலில் பதிந்த அனுவின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி அலைந்து தேடிக் கொண்டிருக்க முடியாது.

அப்படித் தேடும்போது அந்தக் காலடிச் சுவடுகள் உருமாறிச் சிதைந்து, மெல்ல மெல்ல மறைந்து, அந்த ’லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ சினிமாவில் வரும் காட்சிபோல் மணல் காற்றின் உக்கிரத்தில் அவனிடம் இருந்து அவள் பிரிக்கப்பட்டு மறைந்தே போக,

அவளது தோழமையில் வாழ்ந்த
நாட்கள் நினைவு களாகி
நினைவுகள் கனவு களாகி
சங்கிலித் தொடர்போல் நீண்ட கனவுகள்
ஒவ்வொரு வளையமாக உள்ளத்தின்
ஆழமான இடுக்கில் சென்று மறைய
கடைசி வளையத்தைப் பிடித்துக்கொண்டு
அவன்தொங்கிக் கொண்டிருக்க,
கீழே அதல பாதாளம்...


*** *** ***
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed 20 Feb 2013 - 9:01

பயணம்: நாவல்
ரமணி

7

பழமை பழமை என்று பாவனை பேசலின்றிப்
பழமை இருந்த நிலை!---கிளியே!
பாமர ரேதறி வார்?
---மஹாகவி பாரதியார், நடிப்புச் சுதேசிகள்


னுவின் தோழமையில் அவன் செலவிட்ட நாட்கள் சிவப்பு-ஆம்பர்-பச்சைக் குறிகளாக அவன் பிள்ளைப் பருவத்தைப் பாதித்திருக்க, மனம் அந்த நாட்களை, நிகழ்ச்சிகளை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்ந்து, டயரியின் பக்கங்களில் தன் பயணத்தைத் தொடர்ந்தது.

ஆற்றங்கரைப் பள்ளிக்கூட நாட்களின் மகிழ்ச்சியான நேரங்களைப் பற்றிப் பக்கம் பக்கமாக வருணிக்கப்பட்டிருந்த வரிகளில் கண்கள் ஓடியபோது---

வசந்தியுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதும் அடிக்கடி அவன் பக்கம் தாவிச் சிரிக்கும் அனுவின் அகலமான கண்கள்,

கரும்பலகையில் எழுதிப் போட்டுவிட்டு வகுப்பின் பின்பக்கம் போய் போண்டா தின்னும் ஆசிரியர்,

மீன்களை பாட்டில் தண்ணீரில் அடைத்து விளையாடும் பையன்கள்,

ஆடிமாத நீர்ப்பெருக்கில் முழங்கால் அளவு நீரில் அவர்கள் பாதத்தின் அடியில் மணல் குறுகுறுக்க, மீன்களின் வருடலில் கால்கள் புல்லரிக்க நின்ற சமயங்கள்,

பள்ளியின் அருகில் இருந்த அனுமார் கோவிலின் சில்லென்ற தரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த நாட்கள் போன்ற காட்சிகளும் நிகழ்ச்சிகளும் ஒவ்வொன்றாக நினைவில் எரிந்து பரவசமூட்டின.

சாலையில் திடீரென்று சிவப்பு சிக்னல்!

உயர்நிலைப் பள்ளியில் ஆறாவது வகுப்பில் நுழைந்த சில நாட்களில் வசந்திக்கும் அவனுக்கும் அம்மா கொடுத்த ’அட்வைஸ்’ இப்போதும் காதில் ஒலித்தது.

"ஏ வசந்தி! இனிமே பள்ளிக்கூடத்ல நீங்கள்லாம் ஆணும் பொண்ணும் சேர்ந்து விளையாடக் கூடாது. ’ஏ கோவிந்தா!... ஏ கோபாலா!’-ன்னெல்லாம் கத்தி அமர்க்களம் பண்ணாம அடக்கமா இருக்கணும். ஆம்பளைப் பசங்களோட சேர்ந்து விளையாடினா காது அறுந்துபோகும், தெரியுமா?"

"ஒனக்கும்தாண்டா ராஜா! நீயும் இனிமே ’ஏ கோசலை, ஏ லலிதாங்கி!’ன்னு வகுப்பில வெளியில கத்தாம, ஒழுங்கா படிச்சு முன்னுக்கு வர வழியைப் பாக்கணும், புரிஞ்சுதா?"

அம்மாவின் பலமான ’அட்வைஸ்’ ஊரெங்கும் கேட்டதோ என்னவோ இன்று அவர்கள் கிராமத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி உயர்நிலைப் பள்ளிகள்.

அம்மாவின் ’அட்வைஸ்’ அனுவின் காதுக்கு எட்டிவிட இப்போதெல்லாம் அவள் வசந்தியையே அதிகம் சார்ந்திருப்பதாகத் தோன்றியது.

வகுப்பிலாவது பையன்களும் பெண்களும் நடுவில் இடம்விட்டுத் தனித் தனி வரிசைகளாக ’டெஸ்க்’களில் அமர்வதால் அவர்கள் அதிகம் பேசிக்கொள்ள வாய்ப்பில்லை என்றாலும் (அப்போதுகூட அனுவின் கண்கள் அடிக்கடி அவன் மேல் விழுந்து புன்னகைக்கும்!), மற்ற நேரங்களில் முன்புபோல் அவர்கள் கலகலப்பாக இருக்கும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைந்துவிட்டன.

அதுவும் முக்கியமான அந்த மாலை வேளைகளில்.

’இது பையன்கள் விளையாட்டு’, ’இது பெண்கள் விளையாட்டு’ என்ற பாகுபாட்டில் அனுவும் வசந்தியும் மற்ற பெண்களோடு சேர்ந்துகொண்டு பாண்டி, ரிங் டென்னிஸ், ஸ்கிப்பிங் போன்ற விளயாட்டுக்களில் மெய்மறக்கத் தொடங்கிவிட, அவன் திடீரென்று அதிகமாகிவிட்ட தன் நண்பர்களுடன் பம்பரம், கோலி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் பொழுதைப் போக்க வேண்டியதாயிற்று.

மூவரும் தினமும் ஸ்கூல் போகும் வரும் சமயங்கள் தவிர மற்ற வேளைகளில் அனுவின் தோழமை அவனுக்கு அவ்வளவு தூரம் கிடைக்காததில் வருத்தம் இருந்தாலும் கூடவே ஒரு மகிழ்ச்சி, அவள் மற்ற பையன்களோடு பழகும் வாய்ப்பு அதிகம் இல்லை என்பது. தவிர, அனுவும் அவனை மட்டும் நாடியதால் அவளுக்கு இருந்த ஒரே தோழன் என்கிற மகிழ்ச்சி.

ப்போது எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும்போது அவன் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களைத் தவறவிட்டதாகப் பட்டது.

இவ்வளவு நாள் பழகியும் அவன் ஒரு தடவை கூட அனுவின் வீட்டுக்குப் போனதில்லை!

அவள் பெற்றோர் யார், எந்த ஊரில் இருக்கிறார்கள், அவள் அப்பாவுக்கு என்ன வேலை என்று தெரிந்துகொள்ள முயன்றதில்லை.

அவள் பாட்டி தாத்தாவை ஒருமுறைகூடப் பார்த்ததில்லை.

அவள் வீடு எப்படி இருக்கும், அனு எந்த நேரத்தில் என்ன செய்கிறாள், எப்படிப் படிக்கிறாள், வசந்தியைப் போல வீட்டுக் காரியங்களை அனாயாசமாகச் செய்கிறாளா, அவள் வீட்டில் அன்று என்ன சமையல் என்றெல்லாம் அறிய ஆவல் கொண்டதில்லை.

அப்பா அம்மாவிடம்---ஏன் வசந்தியிடம் கூட---அனுவைப் பற்றிப் பேசியதில்லை.

அனுமாதிரியே அவனும் அவள் மீது உயிராய் இருந்ததைக் காட்டிக் கொண்டதில்லை.

இவற்றையெல்லாம் செய்திருந்தால் ஒருவேளை அப்பா அம்மாவுக்கு அவன் அன்பின் ஆழம் தெரிந்திருந்து நாளடைவில் அவர்கள் அந்த விஷயத்தை ஆதரித்து இருக்கக்கூடும்.

அப்பாவின் இந்தக் கடிதமும் வேறு விதமாக இருந்திருக்கக்கூடும்...

(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu 21 Feb 2013 - 7:44

வன் உயர்நிலைப் பள்ளி நாட்களில் இப்போதும் அனுவை நினைத்துக்கொள்ளும்படி செய்த நிகழ்ச்சிகள் இரண்டு. ஒன்று, அந்த ஆண்டு விழா நிகழ்ச்சி. மற்றொன்று, அந்த தீபாவளிக் கோலாட்டம்.

ஒளிபடைத்த கண்ணினாய் வாவாவா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வாவாவா
களிபடைத்த மொழியினாய் வாவாவா
கடுமை கோண்ட தோளினாய் வாவாவா


என்று மதுர கீதமாய் ஏற்ற இறக்கங்களுடன் பானு ’எம்மெஸ்’ஸை எதிரொலிக்க, அனுவும் வசந்தியும் மடிசார் பட்டுப்புடவை சரசரக்க, பல நூறு கண்கள் அவர்கள்மேல் நிலைத்திருக்க, பானுவின் மேற்பார்வையில் பல தடவை பார்த்த ஒத்திகையின் மெருகு அவர்கள் அணிந்திருந்த நகைகளுக்குப் போட்டியாக மினுமினுக்க,

ஒத்திகையின் போது அனு, வசந்தியுடன் ஜோடியாகப் பலமுறை கைகளைக் கும்பிட்டு வணங்க, அவன் ஒவ்வொரு வணக்கத்தின் போதும் அனுவுக்கு எதிராக நின்றுகொண்டு அவள் அவனை வணங்கியதாக நினைத்து மகிழ்ந்தான்!

பானுவின் உழைப்பு அவர்களுடைய ஒவ்வொரு அசைவிலும் பாவத்திலும் பளிச்சிட, கூட்டத்தின் ஒருமித்த கரவொலிகளைப் பெற்று, விழாத்தலைவர் கொடுத்த பரிசுப் பொருட்களைப் பெருமிதத்துடன் சுமந்துகொண்டு முத்துவின் குதிரை வண்டியில் ஏறி வீட்டுக்கு வந்து விடியவிடிய அந்த விழாவைப் பேசித் தீர்த்தது எப்போதும் மறக்க முடியாத நிகழ்ச்சி.

ப்புறம் அந்த தீபாவளிப் பண்டிகை நாட்கள்.

அப்பாவுக்கு அனுவை அறிமுகப்படுத்தி வைக்கும் நாட்கள்.

அதுவரை அவள்மேல் அக்கறை கொண்டிராத அவர் அன்று தானே அனுவைக் கூப்பிட்டு வெடிகள் வெடிக்கக் கற்றுக் கொடுப்பார்.

ஒரு நீளமான கம்பி மத்தாப்புக் கம்பி அல்லது நீண்ட தட்டைக் குச்சியில் செருகப்பட்ட கம்பியில் ஓலைவெடி, யானைவெடி அல்லது ஊசிவெடியைச் செருகி ஒவ்வொருவராகக் கூப்பிட்டுக் கையில் கொடுத்து அப்பா அவர்கள் கையைப் பிடித்துக்கொள்ள, வெடியை அவர்கள் விளக்கில் காட்டிப் பொறி வந்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டு கையை முடிந்தவரை தள்ளி நீட்ட, மற்றொரு கையால் காதைப் பொத்துவதற்குள்---’டமால்!’

உறவினர்கள் வீட்டில் யாருக்காவது தலைதீபாவளி என்றால் கேட்கவே வேண்டாம். நிறைய வெடிகளை ஒரு பெரிய தகர டின்னில் போட்டு ஒட்டுமொத்தமாக வெடித்து துவம்சம் செய்துவிடுவார்கள்.

தீபாவளி நாட்களில் தொடர்ந்து ஒரு வாரம் அக்ரஹாரத்தில் பெண்கள் கோலாட்டம் நடைபெறும். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது ஒரு அரிய கலை நிகழ்ச்சியாகப் பட்டது.

பள்ளிக் கூடப் பெண்கள் முதல் மடிசார் புடவை கட்டிய மாமிகள் வரை எல்லோரும் ஒன்றாகவும், தனித்தனிக் குழுக்களாகவும், அக்ரஹாரத் தெருக்களில் ஊர்வலம் வந்து, வயது வித்தியாசமின்றிக் கோலடிக்கும் ஓசை தெரு முழுவதும் கேட்கும்.

அந்த நாட்களில் அவனும் சந்துருவும் முரளியும் ’சயன்ஸ்’ வாத்தியார் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு சலிக்காமல் கோலாட்டம் பார்ப்பதுண்டு.

பட்டும் சின்னாள பட்டும்
தினுசு தினுசான உடைகளில்
ஜரிகை வரிகளில் இழைகளில்
கண்ணைப் பறிக்கும் நிறங்களில்
தெருவிளக்கில் மின்னிப் பளிச்சிட

கால்கள் அப்பழுக்கு இல்லாத
வட்டமான பாதையில் நடமிட
வண்ண வண்ண கோல்களைத்
தாங்கிய கைகள் யாவும்
ஆரங் களாகக் குவிந்தும்
தலைகளுக்கு மேலே உயர்ந்தும்
ஒன்றை ஒன்று எதிர்கொண்டும்
ஓயாத ரிதங்களில் சப்திக்க

அந்தத் தாளத்தை உள்ளடக்கி
இனிய குரலொன்று உரக்கக்
கண்ணனின் லீலைகளைப் பாட
எல்லோரும் திரும்பச் சொல்ல...


கோலேன கோலே ஏ
பாலா நீலா லா கோலே
பால பாவன லீல விலோசன
பால ப்ரபஞ்ச கோலே ஏ

சந்தன வனந்தனிலே ஏ -- நாங்கள் பெண்கள்
ஷெண்பக ஒடையிலே
அந்தத் துகிலெடுத்துக் கரம்மேல்கரம் வைத்து
விளையாடும் வேளையிலே ஏ

பசுவா பசுவையா ஆ -- உமக்கு
பணம் கொடுப்பா ருமில்லை
இன்றைக்கு வாவென்று நாளைக்கு வாவென்று
ஏய்க்கிறாரே பசுவே ஏ!

பால் செம்பு கொண்டு ஊ -- நாங்கள் பெண்கள்
பாலென்று கூவையிலே
பாலைத் தாடி என்று க்ருஷ்ணன்
பற்களை உடைத் தாண்டி ஈ!

தயிர்ச் செம்பு கொண்டு ஊ -- நாங்கள் பெண்கள்
தயிரென்று கூவையிலே
தயிரைத் தாடி என்று க்ருஷ்ணன்
தாடையில் அடித் தாண்டி ஈ!

எட்டடிக் குச்சிக் குள்ளே ஏ -- ஸ்வாமி
எத்தனை நாளிருப்பேன்?
மச்சுவீடு கட்டித் தாரும் -- ஸ்வாமி
மலையாளம் போய்வா ரேன்.


இவர்களுக்குச் சரியாக கோலாட்டத்தில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் பாடி வலம் வரும் அனுவையும் வசந்தியையும் அவர்கள் திண்ணையில் உட்கார்ந்து கதை பேசியபடியே பார்த்து மகிழ்வார்கள். சமயத்தில் முரளியும் சந்துருவும் ’போர்’ என்று நழுவிவிட, அவன் மட்டும் தனியாக உட்கார்ந்துகொண்டு வசந்தியை ஊக்குவிக்கும் பாவனையில் அனுவின் நடவடிக்கைகளைக் கண்கொட்டாமல் பார்த்து மகிழ்வான்.

எல்லோருடனும் சரிக்குச் சரியாக ஆர்வத்துடன் பங்கெடுத்துக்கொண்டு ("பானுக்கா, நான் இன்னிக்கு கோலாட்டத்தில உங்க பக்கத்தில, என்ன?"), பாடல்களை உன்னிப்பாக கவனித்துத் தப்பில்லாமல் பாடி, கோலாட்டக்கலையின் நுணுக்கமான பயிற்சிகளை நளினமாகச் செய்யும் அனுவின் நடவடிக்கைகளை, கூட்டத்தில் அவள் அடிக்கடி காணாமல் போய் வருவதை, அதுவும் அவள் அழைப்பின் பேரில் பார்த்துக்கொண்டிருப்பது எப்படி அலுக்கும்?

திடீரென்று ஒருநாள் அனுவைக் காணவில்லை!

ஆறாம் வகுப்பின் முடிவில் பரீட்சைகளை நன்றாக எழுதிவிட்டு, கடைசி பரீட்சையான ’ட்ராயிங்’ பேப்பரில் அவன் வரைந்த அதே தாஜ்மஹால் படத்தை அவளும் வரைந்துவிட்டு---

"ராஜா, நீ என்ன படம் போட்டே?"

"தாஜ்மஹால். நீ?"

"அட! நானும் அதேதான். அழஹ்ஹா குண்டு குண்டா உருண்டையா போட்டு நல்லா மஞ்சள் கலர் அடிச்சு--நிச்சயம் எழுவதுக்குக் குறையாது. உனக்கு?"

"நானும் மஞ்சள் கலர் அடிச்சு உன்னை மாதிரியே நல்லா வரைஞ்சிருக்கேன் அனு."

"ஹை! ஸேம் பிஞ்ச், நீயும் நானும் ஒண்ணு!"

"உன் வாயில மண்ணு!"

"..."

"என்ன்ன அனு, விளயாட்டுக்குச் சொன்னா கோவிச்சுக்கறே பத்தியா? எங்கே, நம்ம ’ஸோஷல் ஸ்டடீஸ்’ டீச்சர் மாதிரி மூஞ்சிய வெச்சுக்காம சிரி, பார்க்கலாம்!"

’ஸோஷல் ஸ்டடீஸ்’ டீச்சரை நினைத்துக் கண்களில் நீர் வரும்வரை கலகலவென்று வழியெல்லாம் சிரித்துக்கொண்டே வந்தவள்தான்.

அவள் வீடு வந்ததும், "இந்த அடியை மறக்காதே ராஜா!" என்று செல்லமாக அவன் முதுகில் அடித்துவிட்டு ஹவாய் செருப்பு படபடக்க, ஜியொமெட்ரி பாக்ஸ் கலகலக்க ஓடி மறைந்தவள்தான்! கோடை விடுமுறைக்குப் பின் வரவே இல்லை.

கேட்டால் அவள் மதுரையில் ஒரு ’கான்வென்ட் ஸ்கூலில்’ சேர்ந்துவிட்டதாக வசந்தி கூறினாள்.

*** *** ***
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri 22 Feb 2013 - 8:32

பயணம்: நாவல்
ரமணி

8

பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேன்
---மஹாகவி பாரதியார், மூன்று காதல்


தன்பின் நாலைந்து வருடங்கள் கழித்து அனுவைப் பார்த்தபோது அடையாளம் தெரியவில்லை.

வசந்தியைவிட அழகாக, நிறமாக, அவனைவிட இப்போதும் கொஞ்சம் உயரமாக, பளீரென்ற முகத்துடன், பூரித்த வளர்ச்சியுடன், பெண்மையின் முழுமையான பொலிவில் கம்பீரமான தோற்றத்துடன்...

என்ன அழகு அது!

பார்ப்பவர் கண்களைக் கிறங்க அடிப்பதாய், தலையைச் சிலிர்த்துக்கொண்டு, கண்களைக் கசக்கிக்கொண்டு, தன் கண்களையே நம்பமுடியாமல் திரும்பிப் பார்க்கச் செய்வதாய், ’யாரிவள்?’ என்ற கேள்விக்குறியை ஒவ்வொரு தலைக்கு மேலும் உலவவிட்டு, வானில் உலவும் ஒரு தேவலோகப் பெண் போல...

வழக்கம்போல் மாலை பிள்ளையார் கோவிலுக்குப் போய்விட்டு வரும்போது தினமும் அனு வீட்டு வாசலின் வெறுமையையே கண்டு பழகிப் போய்விட்ட அசுவாரஸ்யத்துடன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நடந்தவன் கால்களை லகான் போட்டு இழுத்து நிறுத்தியது அந்தக் காட்சி.

கொஞ்ச தூரத்தில் வரும்போதே அவன் அவளைக் கவனித்துவிட்டான். வாசலில் உட்கார்ந்துகொண்டு குழந்தைகள் புழுதியைக் கிளப்பியபடி விளையாடிக் கொண்டிருந்ததை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அடுத்த நிமிடம் மனதில் பழைய நினைவுகள் பொங்கித் ததும்ப, நினைவுகளின் அலையடிப்பின் இதயம் படபடவென்று சிறகடித்து காதில் சப்திக்க, அவனை அவள் பார்த்தவுடன் எப்படி நடந்துகொள்ளக் கூடும் என்று மனம் ஆவலுடன் கணிக்க, ஒருவேளை அடையாளம் தெரிந்துகொள்ள மாட்டாளோ என்ற பயம் எட்டிப் பார்க்க, எல்லாவற்றையும் அவளுடன் முழுமூச்சாகப் பேசித் தீர்த்துவிட வேண்டும் என்ற ஆசை உந்த, வேகமாக நடந்துவந்தபோது---

அவனைக் கண்டதும் கண்கள் சூரியகாந்திப் பூப்போல் விரிய முகத்தில் புன்னகை அரும்ப அவள் எழுந்து நின்றபோது பதிலுக்கு அவனால் ஒரு புன்சிரிப்பைத்தான் தர முடிந்தது.

என் அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறி நாக்கின் முடிச்சு அவிழ மறுக்க, என்னால் மௌனியாகத்தான் நிற்க முடிந்தது!
என்று டயரியில் எழுதியிருந்ததை இப்போது படிக்கும்போதும் அந்த சோகம் அதே கடுமையுடன் மனதில் விரவியது.


ஷேக்ஸ்பியரின் As You Like It நாடகத்தின் நாயகன் ஆலிவர் அந்த மல்யுத்தப் போட்டியில் வென்றதைப் பாராட்டி இளவரசி ரோஸலின் ஓர் அழகிய முத்துமாலையை அவன் கழுத்தில் அணிவித்தபோது, அவன் வியப்பில் வாய்மூடி மௌனியாக நின்ற நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

What passion hangs these weights upon my tongue?

அந்த வரிகளைக் கல்லூரியில் தன் வகுப்பில் விளக்கிச் சொல்லும்போது ஓர் அநாமதேய உதாரணமாக அவன் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுவது வழக்கம்.

ஆலிவர்-ரோஸலினாவது ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். ஆனால் அவனும் அனுவும்? அவனால் எப்படித்தான் அன்று அதுபோல் நடந்துகொள்ள முடிந்தது என்று இப்போதும் புரியவில்லை.

’என்ன அனு, சௌக்யமா?’ என்றுகூட ஒரு வார்த்தை கேட்காமல்...

அவன் மௌனத்தைப் பார்த்துத்தானோ என்னவோ அவளும் ஒன்றுமே கேட்காமல்...

"வசந்தி, இன்னைக்கு நான் அனுவைப் பார்த்தேன். அவாத்து வாசல்ல உட்கார்ந்திருந்தா."

"அப்படியா? என்ன சொன்னா?"

"என்னப் பார்த்து சிரிச்சா. நான் ஒண்ணும் கேட்கலை."

ன்று மட்டுமில்லை. அதற்குப் பின் பல நாட்கள் அனுவைக் கடந்து கோவிலுக்கோ கடைக்கோ போகும்போதும் சரி, வரும்போதும் சரி, அவனால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை!

பதநீர் விற்பவன் சுமையைப் போல் ஒரு பக்கம் நினைவுகளும் மற்றொரு பக்கம் மௌனமும் போட்டு அழுத்த, கண்கள் மட்டும் எந்தத் தளைக்கும் கட்டுப்படாமல் அனுவையே பார்த்துக் கொண்டிருக்க நடக்கத்தான் முடிந்தது.

ஓரிரு முறை அவள் அவன் வீட்டிற்கு வந்திருந்தபோது கூட அவளும் வசந்தியும் பேசிக்கொண்டிருந்ததை மாடி ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிந்தது.

காற்றாட மாடிக்கு வந்து பேசமாட்டார்களா என்று ஏங்கத்தான் முடிந்தது.

அவன்இதுவரை அறிந்த பழகிய அனுராதா
கால ஓட்டத்தின் புகைவண்டிப் பயணத்தில்
பின்னால் பின்னால் சென்று மறைந்தே போக

அவளைப் பற்றிய நீங்காத நினைவுகள் மட்டும்
தூரத்தே அடிவானம் ஒட்டினாற் போலத் தெரியும்
பசுமைத் தீவுகள் போலப் பிடிவாதத்துடன் தொடர்ந்துவர

இப்போது பார்க்கும் இந்த ’டீனேஜ்’ அனுகூட
எவ்வளவு நாளைக்கு சாஸ்வதம்
என்ற கேள்வி தலைதூக்க

கொஞ்ச நாளில் அவளும்
வெறும் ரயிலின் சிநேகிதமாக
ஏதோ தெரியாத நிலையத்தில்
அவனறியாமல் இறங்கிச் சென்றுவிட

அப்பாவின் கடிதம்தான் கையில் நிரடியது
உண்மையின் இன்மை யாக
அல்லது இன்மையின் உண்மை யாக.


னுவை அவன் கடைசியாகப் பார்த்தது ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சியில். ஶ்ரீராம நவமி உற்சவத்தின் போது என்று ஞாபகம்.

அவள் வீட்டு வாசலில் மேடை அமைத்து, பொம்மலாட்டக் கலையில் பல விருதுகள் பெற்ற வல்லுநர் ஒருவர் ஒரு நீண்ட சொற்பொழிவாற்றிவிட்டு, தொடர்ந்து நாலைந்து நாள் ’வள்ளி திருமணம், அரிச்சந்திர புராணம், மார்க்கண்டேய புராணம்’ போன்ற கதைகளைத் தத்ரூபமாக பொம்மைகளிடையே உலவவிட்டதை ஊரே திரண்டு ரசித்தது.

அந்த நாலைந்து நாட்களும் அவன் சயன்ஸ் வாத்தியார் வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்துகொண்டு அனுவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆசிரியர் பேசுவது காதில் விழாமல், பக்கத்தில் சந்துரு, முரளி இருப்பதை மறந்து, கிழே கூட்டத்தில் பானுவுடன் அமர்ந்திருந்த வசந்தி அடிக்கடி அவனைப் பார்ப்பதைப் பொருட்படுத்தாமல், அவள் வீட்டு வாசல்படியில் சில குழந்தைகளுடன் அமர்ந்தபடி நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த அனுவின் ஒவ்வொரு முக பாவத்தையும் செயலையும் அவனது கண்கள் ஒன்று விடாமல் மனதில் பதிவுசெய்ய...

எவ்வளவு அழகாக இருக்கிறாள்!

அவள் தோழமைக்காக ஏங்கிய மனம் பலவாறாகக் கணக்குப் போட்டுப் பார்த்தது. எப்படியாவது மறுநாள் அவளோடு பேசி, தோழமையைப் புதுப்பித்து, அவள் எண்ணங்களை அறிந்துகொண்டு, எல்லாவற்றையும் நேர் செய்துகொண்டு, அவளுடைய குடும்பத்தார்க்கு அவனை அறிமுகப் படுத்திக்கொண்டு, முடிந்தால் அவ்வப்போது கடிதம் எழுத வழிவகை செய்துகொண்டு, பழைய நாட்களின் மலர்ச்சியை மீண்டும் மலரச் செய்ய உறுதி எடுத்துக் கொண்டபோது...

மறுநாள் அவள் ஊருக்குப் போய்விட்டாள்.
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat 23 Feb 2013 - 7:48

தன்பின் இரண்டு வருடங்களில் அனு அவன் மனமாகிய வானத்தில் புதிதாக முளைத்த தாரகைகளிடையே மெல்ல மெல்லத் தேய்ந்து அவள் முகம் கூடக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துபோக---

ஆசை முக மறந்து போச்சே---இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம்---எனில்
நினைவு முகமறக்க லாமோ?


கல்லூரியில் பயின்றபோது ஒருநாள் நிலவும் நட்சத்திரங்களும் அறவே மறந்து சுற்றிலும் இருளானபோது அவன் மனம் திடுக்கிட்டு விழித்துக்கொள்ள, பலபலவென்று விடிந்து காதல் வாழ்வின் லட்சியமும் அன்றைய வெறுமையும் பிடிபட, கிறிஸ்து தன் கடைசி சாப்பாட்டில் பயன்படுத்திய அந்தப் புனிதக் கிண்ணத்தைத் தேடும் பக்தனின் உறுதியுடன் அவன் நீண்டதொரு பயணத்துக்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டு, முன்னேற்பாடாக பழைய நினைவுகளை எல்லாம் டயரி வடிவில் அழகாகத் தொகுத்து வைத்துக்கொண்டு, பயணத்தின் முதல் கட்டமாக அனுவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினான்.

என்ன எழுதினான் என்பது சரியாக நினைவில்லை. நகலும் கைவசம் வைத்திருக்கவில்லை. ஆனால் கடிதம் எழுதிய சூழ்நிலையும், பின்னணியாக அமைந்த நம்பிக்கைகளும் தெரிந்தோ தெரியாமலோ புறக்கணிக்கப்பட்டு, வார்த்தைகள் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, தேநீர்க் கோப்பையில் உருவான புயல் பெரிதுபடுத்தப்பட்டு, அவனுக்கும் அனுவுக்கும் இடையில் இருந்த ஒரே தொடர்பின் சாயலும்கூட அறுந்துபோன நிகழ்ச்சியைப் படிக்கும்போது கண்கள் பனித்தன.

எப்படி அவனால் அந்த மாதிரி திடீரென்று அனுவுக்கு எழுத முடிந்தது என்று நினைத்துப் பார்க்கவே புதிராகவும் வியப்பாகவும் இருந்தது.

ன்ன இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு---அதுவும் அவன் குடும்பத்தாலோ அவள் குடும்பத்தாலோ அல்லது இந்த சமூகத்தாலோ அங்கீகரிக்கப்பட்ட உறவு முறைகளுக்கு அப்பாற்பட்டு, பெண் என்ற காரணத்தாலேயே ’ஃப்ரெண்ட்’ என்றுகூட அங்கீகரிக்கப்படாத நிலையில் நிற்கும் ஒரு பெண்ணுக்கு---இப்படியெல்லாம் பகுத்தறியத் தோன்றாமல், விளைவுகளைப் பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்படாமல், அவன் செயலை அனு மட்டும் அங்கீகரித்தால்கூடப் போதும் ஆனால் அவள் சம்மதிப்பாளா என்ற கேள்வி கவலையை எதிரொலிக்க,

கல்லூரி ஹாஸ்டல் அளித்த தனிமை மற்றும் தைரியம், மணியன் எழுதிய மேனாட்டுப் பயணக் கட்டுரைகளின் கவர்ச்சி, அவன் படித்த ஆங்கில நாவல்களில்---குறிப்பாக ஜேன் ஆஸ்டின்---’இன்டெலெக்சுவல் ரொமான்ஸ்’ தோற்றுவித்த கனவுகள், டாக்டர் ஶ்ரீநிவாச சாஸ்த்ரியின் கட்டுரை A Letter from London விவரித்த ஆங்கில வாழ்க்கை முறைகளில் ஈடுபாடு, முக்கியமாகக் கடிதங்களின் அந்தரங்கத்திற்கு அவர்கள் தரும் மதிப்பில் பொறாமை போன்ற உணர்வுகளின் பிண்ணணியில்,

ஜேன் ஆஸ்டினின் Pride and Prejudice நாவலில் எலிசபெத் தனக்கு வரும் கடிதங்களை எவ்வளவு ’பெர்சனல்’-ஆக வைத்துக்கொள்கிறாள்! அவள் பெற்றோர் உட்பட யாருமே அவளுக்கு வரும் கடிதங்களைப் பற்றி ஆர்வம் கொள்வதில்லை. அவளுடன் ஓர் உண்மையான தோழியைப் போல் பழகும் தன் மூத்த சகோதரிக்கும்கூட ஒருசில பகுதிகளைப் படித்துக் காட்டுவதோடு சரி.

அவன் வீட்டில் இப்படி நடக்க முடியுமா?
"யார் லெட்டர்?’
"பாஸ்கர்-பா."
"எந்த பாஸ்கர்?"
"அதாம்பா என் ஃப்ரெண்ட் பாஸ்கர். காலேஜ்ல என்னோட க்ளாஸ்மேட். எனக்கு எழுயிருக்கான்."
"ஏண்டா, அப்பாட்டதான் கொஞ்சம் காமிக்கறது? அப்படி என்ன சிதம்பர ரகசியம் அந்தக் கடுதாசியில?"


அனுவின் தோழமையைப் புதுப்பித்துக்கொள்ளும் ஆர்வமும் கவலையும் அவசரமும் போட்டு உந்த, அவளை "மை டியர் ஃப்ரெண்ட் அனு" என்று விளித்து, பழைய நாட்களை மீண்டும் அவளுக்கு நினைவூட்ட முயற்சிசெய்து, அவன் அவள்மேல் கொண்டுள்ள பாசத்தையும் நேசத்தையும் உணர்த்த மெக்காலே-ஹன்னாவையும் வேர்ட்ஸ்வொர்த்-டொரதியையும், ஜேன் ஆஸ்டினின் காதலர்களையும் இடம் தெரியாமல் உதாரணம் காட்டி,

அவன் வாழ்க்கையில் கிடைத்த முதல் தோழியான அனுவின் நட்பை மீண்டும் மலரச்செய்து அவள் சம்மதத்துடன் தொடர்ந்து கடிதம் எழுத வழிவகை செய்துகொள்ள வேண்டி,

இந்தமாதிரி கடிதம் எழுதுவது அவள் பெற்றோருக்குப் பிடிக்காது என்று அவள் கருதினால் அவன் கடிதங்களை அவள் மட்டுமே ரகசியமாக வைத்துக்கொள்ளக் கோரி,

அவள் கல்லூரி முகவரிக்கு எழுதிய நீண்ட கடிதத்திற்கு அனுவிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சுதான் பதிலாகக் கிடைத்தது,

ஒரு சின்ன ’இன்லாண்ட் லெட்டர்’ வடிவில்.

*** *** ***
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun 24 Feb 2013 - 8:14

பயணம்: நாவல்
ரமணி

9

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்!
---மஹாகவி பாரதியார், விடுதலை


அன்புள்ள ராஜா,

உன் விரிவான, நீண்ட கடிதம் கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
எனக்கென்னவோ நாம் இருவரும் நண்பர்களாக இருப்பதைவிட, சகோதர பாசத்துடன்
பழகுவது மேல் என்று தோன்றுகிறது. நீ என்ன நினைக்கிறாய்?

கடிதம் எழுவதற்கு முன் ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக யோசித்து எழுதவேண்டும்.
எண்ணங்களுக்கும் எழுத்துகளுக்கும் நடுவில் உள்ள இடைவெளி எப்போதுமே பெரியது. பொல்லாதது.

பழைய நாட்களை நான் மறக்கவில்லை. ஆனால் உன் கடிதத்தில் என்னால்
பழைய ராஜாவைப் பார்க்க முடியவில்லை. இப்படி நான் எழுத நேர்வதற்காக
என்னை மன்னித்துவிடு. உன் முன்யோசனை இல்லாத கடிதம் என்னை
எவ்வளவு தூரம் பாதித்துவிட்டது என்பது உனக்குத் தெரியாது.

எங்கள் கல்லூரியில் ஒரு கெட்ட வழக்கம். மாணவியருக்கு வரும் கடிதங்களை---
அவர்கள் ’டே ஸ்காலர்’களாக இருப்பினும்---பிரித்துப் படித்துப் பார்த்துவிட்டுத்தான்
அவர்களிடம் கொடுப்பார்கள். அதேபோல் ஹாஸ்டல் மாணவியர் எழுதும்
கடிதங்களை ’வார்டன்’ படித்த பின்னரே ’போஸ்ட்’ செய்ய அனுமதிப்பார்கள்.
இந்த விஷயம் உனக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம்.

உன் கடிதம் வந்த அன்று நான் ஒருவாரம் உடல்நலிவு காரணமாக ’லீவில்’ இருந்தேன்.
என் தோழி ஒருத்தி திடீரென்று ஒருநாள் அம்மாவின் முன் பிரிக்கப்பட்ட உன் கடிதத்தைக்
கொடுத்தபோது நான் அடைந்த வேதனைக்கு அளவில்லை. இந்நிலையில் எப்படி நான்
உன் கடிதத்தை ’ரகசியமாக’ வைத்திருக்க முடியும்?

இந்த ’ரகசியம்’ என்ற பதத்துக்கு எனக்குப் பொருள் புரியவில்லை. அந்த வார்த்தை
ஒரு ’டைனமைட்’ என்று உனக்குத் தெரியவில்லையா?

என் அம்மாவிடம் நான் எல்லா விஷயங்களையும் கூறிவிட்டேன். என்னைப் புரியவைக்க
எனக்கு வேறுவழி தோன்றவில்லை.

என் மனம் மிக மென்மையானது என்று நீ அறிவாய். அதை ஒரு முள்ளால்---அது பேனா
முனையாக இருந்தாலும் கூட---குத்திப் பார்க்க உனக்கு எப்படி மனசு வந்தது?

ஆண்-பேண் நட்பும் தோழமையும் கதைகளில் மட்டுமே சாத்தியம். நடைமுறையில் சமூகம்
ஒத்துக்கொள்ளாது. எலிசபெத், ஜேன், எம்மா போன்றோர் ஆங்கில சமூகத்தில் இயற்கையாக
உலாவலாம். இங்கெல்லாம் அவர்கள் வெறும் கதைப் பாத்திரங்கள் தான்.

இதையெல்லாம் நான் எழுதும்போது கொஞ்சம் ’சென்டிமென்டல்’ஆகத் தோன்றலாம்.
ஆனால் நடைமுறையில் பார்க்கும்போது சில உண்மைகளையும் எல்லைகளையும்
புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

எனவே என் கல்லூரி முகவரிக்கோ, வீட்டு முகவரிக்கோ அல்லது வேறெந்த முகவரிக்கோ
மேற்கொண்டு கடிதம் எழுதி வருத்த வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்.

I do not expect any more letters from you.

அன்புடன்,
அனு

பின்குறிப்பு:
1. இந்தக் கடிதத்தை என் அம்மாவிடம் காட்டிய பின்னரே தபாலில் சேர்க்கிறேன்.
2. உன் கடிதத்தால் நான் வெகுவாகப் பாதிக்கப் பட்டாலும் ’தவறுகள் குற்றங்கள் அல்ல’
என்ற நியதிப்படி நடந்தவற்றை எளிதாக எடுத்துக்கொள்ளக் கோருகிறேன்.
---அனு


ந்த நாள் மாலை.

கல்லூரி ’ஃபிலிம் ஷோ’ கூடப் போகாமல் ஹாஸ்டல் அறைக்கு விரைந்து வந்து தனிமையில் ஆவலுடன் அவன் அனுவின் கடித்தத்தைப் பிரித்தபோது---

அந்த ’நண்பர்களாக இருப்பதைவிட’
என்று எழுதி யிருந்த இடத்தில்
பற்றிக் கொண்ட விழிகளின் தீப்பொறி

அவனொன்றும் செய்ய முடியாமல் பார்த்திருக்க,
சுறுசுறு வென்று வரிகளில் அலைந்து,
நெளிந்து பரவிக் கடைசியாக
’டைனமைட்’ கட்டுகளைத் தொட்டுவிட,

கண்கள் குருடாகும் ஒளியில்,
காது செவிடாகும் ஒலியில்,
அவன்மிக ஆசையுடன் கட்டியிருந்த கோட்டைகள்,
அமைத்திருந்த பாலங்கள் தகர்ந்து விழுந்து
கீழே காட்டாற்று வெள்ளம் அடித்துப் போக,

மனம்மட்டும் இப்போதும் பிடிவா தமாக
எதையும் நம்பிட மறுத்து ஏதோவோர்
நம்பிக்கை இழையின் வலிமையில்
சிலந்திக் கூடுகள் பின்ன முயன்று,
ஜேன்*ஆஸ்டின் நாவல் ’எம்மா’வில் வருகிற
அந்த மிஸ்டர் நைட்லியை நினைத்து---

Whom are you going to dance with?" asked Mr. Knightley.

She hesitated a moment, and then replied, "With you, if you will ask me."

"Will you?" said he, offering his hand.

"Indeed I will. You have shown that you can dance, and you know we are not really so much brother and sister as to make it all improper."

"Brother and sister! No, indeed!"


(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon 25 Feb 2013 - 8:18

*************************
மார்ச் 10. வெள்ளி
*************************
கல்லூரியில் மாணவியருக்கு வரும் கடிதங்களைப் படிப்பது---அதுவும் ’டே ஸ்காலர்’களைக் கூட நம்பாமல்---சே, இதென்ன காட்டுமிராண்டித் தனமான செயல்! சட்டத்துக்கு விரோதமானது என்றுகூட சொல்லலாம். எப்போதுதான் நம் மகளிர் கல்லூரிகளில் இதுபோன்ற பத்தாம்பசலித் தனமான வழக்கங்கள் ஒழியுமோ? பாரதியும் திரு.வி.க.வும், காந்தியடிகளும் முன்னின்று நடத்திய பெண் விடுதலைப் போராட்டம் வெறும் வாய்ப் பேச்சாகிவிட்டது வருந்தத் தக்கது.

என்று அவன் டயரியில் எழுதியிருந்ததைப் படிக்கும்போது, அப்போது அதைவிட வேறு ஒன்றும் துணிய முடியாமல் இருந்த அவன் இயலாமையைக் குறித்து இப்போதும் மனம் வருந்தினான்.

I do not expect any more letters from you!

அடுத்த சில மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மனம் ஒரு நிலைக்கு வந்து இலேசாகி உண்மையை எதிர்கொண்டு, தினமும் ஒருமுறையாவது அனுவை நினைத்து அவள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைப் படிப்பதையும், படித்து அந்த இனிய நினைவுகளில் சிலையாகித் தன்னை மறந்து மகிழ்வதையும் குறைத்துக்கொண்டு, இப்படியெல்லாம் செய்வது இனி சரியல்ல என்ற எண்ணம் வலுப்பெற, அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட முயற்சிக்க, இலக்கியப் படிப்பின் ஈடுபாடுகளில் அனுவின் நினைவுகள் தேய்ந்து, அந்த ’பன்டோரா பாக்ஸ்’ நிரந்தரமாக மூடப்பட்டுவிட, கனவுகள் மட்டும் அவ்வப்போது மனதில் ஆழப் பதிந்துவிட்ட ஆசைகளை வானவில்லிட்டுக் காட்டின.

வன் கனவுகளில்...

அனு அவனைவிட உயரம் குறைந்து பளீரென்று தோன்றி தினமும் அவன் தோள்களைப் பற்றிக்கொண்டு மிதந்து பள்ளிக்கூடம் போய்ப் படித்து, பழமொழிகளைத் தவறில்லாமல் சொல்லிப் பாராட்டுகள் பெற்று, அவன் அப்பாவும் தன் சுபாவத்தை மாற்றிக்கொண்டு அவளுடன் சகஜமாக உரையாடி---

’அப்பா, இந்தத் தடவையும் அனுதான் ’ஃபர்ஸ்ட் ராங்க்’!’

’அவளுக்கென்னடா ரொம்பத் தங்கமான பொண்ணு, படிக்கறதுக்குக் கேக்கவா வேணும்?’

திடீரென்று ஒருநாள் அவர்களுக் கிடையில் திரை தொங்கப் பேசா மடந்தையாகி, அவளும் வசந்தியும் பேசிக்கொள்வதை அவன் மாடி ஜன்னம் வெழியே ஒட்டுக்கேட்டு---

’ராஜா ஏன் இப்பல்லாம் பேசவே மாட்டேங்கறான் வசந்தி?’

’அவன் ரொம்ப ’ஷை டைப்’ அனு. நீ மட்டும் அவனோட பேசறேயாக்கும்?’

’சீ, நான் எப்படி அவனோடு வலிய போய்ப் பேசறது? உங்காத்ல தப்பா நெனச்சுக்க மாட்டா?’

அப்புறம் ஒருநாள் அவள் கல்லூரி விடுமுறையில் அவன் வீட்டுக்கு வர, அவன் அவளை மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் எதிர்கொண்டு வரவேற்று,

’அம்மாவும் வசந்தியும் கோவிலுக்குப் போயிருக்கா அனு. உக்காந்துக்கோ, இப்ப வந்துடுவா.’

’அப்பா?’

’அப்பா வாக்கிங் போயிருக்கா.’

’அப்ப நான்--’

’ஒரு நிமிஷம் அனு---’

என்ன என்பதுபோல் அவள் பார்க்க, அவன் மூச்சைப் பிடித்துக்கொண்டு தழதழத்த குரலில்,

’ஐ’ம் ஸாரி ஃபார் தட் லெட்டர், அனு. அது உனக்கு அவ்ளோதூரம் ’எம்பாரஸ்ஸிங்’கா ஆய்டும்னு நான் கனவுலகூட நினைக்கல. என்ன மடத்தனம் பண்ணிட்டேன் இல்லே? உன்னோட லெட்டரை என்னால ஜீரணிக்கவே முடியலை அனு. ’இன்ஃபாக்ட்’ உன்னை மறந்துட்டுகூட இருக்கமுடியும் என்னால, உனக்குத் தோழமையில இஷ்டமில்லைங்கற பட்சத்துல. அடே சமயம் உன்னைப்பத்தி யாராவது ஏதாவது சொன்னால் எனக்குப் பொறுக்காது. அந்த மாதிரி ஒரு சந்தர்பத்தை நானே என்னை அறியாமல் உண்டாக்கி உனக்கு அவப்பெயர் வரக் காரணமாய்ட்டேன்னு தெரிஞ்சபோது எனக்கு எம்மேலேயே வெறுப்பாய்டுத்து அனு.

’ஆனால் அது நான் தெரியாம செஞ்சிட்ட தப்புங்கறதைக்கூட ’எக்ஸ்ப்ளைன்’ பண்ணமுடியாமப் பண்ணிட்டையே அனு, அதுதான் எனக்கு வருத்தம். மெல்லவும் முடியாம, விழுங்கவும் முடியாம, என்ன அவஸ்தை தெரியுமா? நல்லவேளை, இப்பவாவது உன்னைப் பார்க்கற சந்தர்ப்பம் கிடைச்சது. ப்ளீஸ், என்னை மன்னிச்சிடு அனு!’...

கடைசியாக அந்தக் கனவில் ஒருநாள் அவள் அவனுக்கு ஒரு ’இன்விடேஷன்’கூட அனுப்பாமல் கல்யாணம் செய்துகொள்ள, நாதஸ்வர ஓசையில் அவன் விழித்துக்கொண்டு கனவுதானே என்று கொஞ்சம் ஆறுதல் அடைந்தும், மனம் அந்த சாத்தியத்தை எடைபோட்டுப் பார்க்க, ’ஆல் இன் த கேம்’ என்ற சந்நியாச பாவத்துடன் பெருமூச்சு விட்டுக்கொண்டு ஓய்ந்துபோனான்.

*** *** ***
(தொடரும்)


Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக