புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 74 of 84 Previous  1 ... 38 ... 73, 74, 75 ... 79 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 20, 2020 12:01 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (484)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மேலே ஏழு வகை ஆகுபெயர்களுக்கு இலக்கணம் ஓதினார் தொல்காப்பியர் (வே.ம. 31)!
இந்த ஏழு வகைகளும் இரு பிரிவுகளுக்குள் அடக்கம் என அடுத்துக் கூறுகிறார் அவர் :

அவைதாம்
தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும்
ஒப்பில் வழியான் பிறிதுபொருள் சுட்டலும்
அப்பண் பினவே நுவலும் காலை
வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும் (வேற்றுமை மயங். 32)

1 . ‘தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணல்’

‘தெங்கு தின்றான்’ என்பதில், அவன் தின்ற தேங்காயானது, தெங்கோடு ஒட்டியது ! தேங்காய் , தெங்கிற்கு முற்றிலும் புறம்பானதல்ல!
ஒன்றன் பொருள் இன்னொரு பொருளுக்கு ஆகிவந்தாலும் , இதுபோல இரு பொருட்களும் ஒன்றிலிருந்து இன்னொன்று நீங்காது!
இது தொல்காப்பியம் கூறும் முதல்வகை ஆகுபெயர்!

2 . ‘ஒப்பில் வழியான் பிறிதுபொருள் சுட்டல்’
இது இரண்டாவது வகை ஆகுபெயர்!
‘குழிப்பாடி சிறந்தது’- இத் தொடரில், ‘குழிப்பாடி’ ஆகுபெயராய் , அவ்வூரில் நெய்யப்பட்ட துணியைக் குறிக்கிறது!

முன் பார்த்த தெங்கு- தேங்காய் போலக் , குழிப்பாடி என்ற ஊரும் துணியும் அவ்வளவு நெருங்கிய தொடர்புடையன அல்ல!
ஒப்பில் வழி – நெருக்கமல்லாத வழி

ஊர், அதற்கு நெருக்கமல்லாத, பிறிதான துணியைச் சுட்டமுடிந்துள்ளதால், இதனை ‘ஒப்பில் வழியான் பிறிதுபொருள் சுட்டல்’ என்ற ஆகுபெயரில் சேர்க்கின்றனர்!

இந்த இரு வகை ஆகுபெயர்களைப் பொறுத்தவரை உரையாசிரியர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை!

ஆனால், ஈற்றடியான ‘வேற்றுமை மருங்கில் போற்றல் வேண்டும்’ என்பதில் , சேனாவரையரோடு தெய்வச்சிலையார் வேறுபடுகிறார்!

சேனாவரையர், ‘ஆகுபெயரிள் இரண்டிடையே உள்ள வேறுபாடு போற்றிப் பேசப்படும்’என்று முடித்துவிட்டார்.
‘வேற்றுமை’ என்பதற்கு, ‘வேறுபாடு’ எனப் பொருள் கொண்டார் சேனாவரையர்.

ஆனால் தெய்வச்சிலையார் , ‘வேற்றுமை’ என்பதை உருபுகளோடு பேசப்படும் வேற்றுமையாகவே (Declension) பார்க்கிறார் !
எது சரி?

தெய்வச்சிலையார் கருத்தே!
ஏன்?

முதற்கண், தொல்காப்பிய நடைக்கு ஏற்றதாக உள்ளது!

இரண்டாவதாக, வேற்றுமை மயங்கியலில் ஆகுபெயர் பேசப்படுவதற்கான காரணத்தையும் விளக்குவதாக உள்ளது!

மூன்றாவதாக , ஆகுபெயர்களில் எவ்வாறு வேற்றுமை உருபுகள் மயங்குகின்றன எனத் தெய்வச்சிலையாரே விளக்கவும் செய்கிறார் !

தெய்வச்சிலையார் கருத்தை நாம் வருமாறு விளக்கலாம்!-
1 . ‘தெங்கு தின்றான்’ என்ற ஆகுபெயர்த் தொடரில் , ‘தெங்கது காயைத் தின்றான்’ என்ற விரி அறியக்கிடக்கிறது. இங்கே ‘அது’ எனும் வேற்றுமை உருபு வந்துள்ளதை நோக்குக!
‘அது’, ஆகுபெயரின்போது, இடம்பெறாது வந்தது!
‘அது’, ஆகுபெயரின்போது, இடம்பெறாமல் வந்ததையே பொருள் மயக்கம் என்கிறார் தெய்வச்சிலையார்!
‘பொருள் மயக்கம்’ என்பது இங்கே வேற்றுமைப் பொருள் மயக்கமே!

2 . ‘கோலிகன் கொண்டுவா’ என்ற ஆகுபெயர்த் தொடரில், ‘கோலிகனால் செய்யப்பட்ட துணி’ எனும் விரி அறியக்கிடக்கிறது .
இங்கே , ‘ஆல்’ எனும் வேற்றுமை உருபு வந்துள்ளதை நோக்குக!
‘ஆல்’, ஆகுபெயரின்போது, இடம்பெறாது வந்தது!
‘ஆல்’, ஆகுபெயரின்போது, இடம்பெறாமல் வந்ததையே பொருள் மயக்கம் என்கிறார் தெய்வச்சிலையார்!

‘பொருள் மயக்கம்’ என்பது இங்கே வேற்றுமைப் பொருள் மயக்கமே!

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 21, 2020 11:32 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (485)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மேல் ஆய்வில் , ஆகுபெயருக்கு ஏழு அடிப்படைகளைச் சொன்னார் தொல்காப்பியர்!

சொல்லிவிட்டு , ‘இதுபோல ஆகுபெயர் வரும்’ என்று முடித்தார்!

‘அப்படி வேறு எந்த வகையில் ஆகுபெயர் வரும்?’ என் ஒரு மாணவன் கேட்டான் போலிருக்கிறது; வேறு சில வகைகளையும் அடுத்துக் கூறுகிறார்!:

அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி
உளவென மொழிப உணர்ந்திசி னோரே (வேற்றுமை மயங். 33)

படி, லிட்டர்முதலியன இக் கால அளவுப் பெயர்கள்; ‘முகத்தல் அளவு’ என்று இப்போது கூறுகிறோம்.

நாழி, உழக்கு , தூணி, பதக்கு முதலியன பழங்கால அளவுப் பெயர்கள்; ‘அளவு’ என்று அக் காலத்தில் கூறினர்.

‘சோறு வடிக்கலாம் என்றால் , நாழிக்கு வழி இல்லை’ என ஒருத்தி சொன்னால்,அப்போது ‘நாழி’ என்பது, அரிசிக்கு ஆகிவந்து ஆகுபெயர் ஆகும்!

கிராம் , கிலோ முதலியன இக்கால ‘நிறைப் பெயர்கள்’; ‘எடைப் பெயர்கள்’ என்றால் இப்போது அனைவருக்கும் விளங்கும்.

கழஞ்சு, தொடி, துலாம் முதலியன அக்கால நிறைப் பெயர்கள்.

‘மகளுக்குத் திருமணம் செய்யலாம் என்றால், கழஞ்சு கேட்கிறார்கள்’ என ஒருவர் சொன்னால், ‘கழஞ்சு’ பொன்னுக்கு ஆகிவந்து, ஆகுபெயராகிறது!

அளவுப் பெயரையும் நிறைப் பெயரையும் கூறியவர் ஏன் எண்ணுப் பெயரைக் கூறவில்லை?

சேனாவரையர், எண்ணுப்பெயர் ‘ஆகுபெயர் ஆகாது’ என்று எழுதுகிறார்!
இது பொருந்துமாறில்லை!

‘அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்துகிறாள்’ – என்ற தொடரில் , ‘அஞ்சு’ , ‘பத்து’ ஆகியன உரூபாய்க்கு ஆகி வரவில்லையா?

‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ – என்பதில் ‘நால்’ எண்ணுப்பெயர் அல்லவா? அது நாலடியாருக்கு ஆகிவருகிறதல்லவா? ‘இரண்டு’ , திருக்குறளுக்கு ஆகிவரவில்லையா?

ஆகவே, எண்ணுப்பெயரும் ஆகுபெயருக்கு இடம் தரவே செய்கிறது !

எண்ணுப்பெயரைத் தொல்காப்பியர் ஆகுபெயரில் சேர்த்தாரா இல்லையா?

அடுத்த நூற்பா இதற்கு விடை கூறுகிறது!:

கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங்
கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே (வேற்றுமை மயங்.34)

‘நான் மேலே சொன்னதுபோன்ற அடிப்படையில் வேறு இடங்களில் ஆகுபெயர் தோன்றினால், அவற்றையும் ஆகுபெயர்க் கணக்கில் சேர்த்துக்கொள்ளுங்கள்!‘ –
இதுதான் இந் நூற்பாவால் தொல்காப்பியர் கூறியது!

மேல் நூற்பாவுக்குச் சேனாவரையரின் எடுத்துக்காட்டு-
‘யாழ் கேட்டான்’

‘யாழ் கேட்டான்’ என்றால், ‘இந்தாப்பா! அந்த யாழை இப்படிக் கொடு!’ என்று கேட்டானா?

யாழிலிருந்து வரும் இன்னிசையைச் செவிமடுத்தான் என்பதுதானே பொருள்?
இங்கே ‘யாழ்’ , அதன் இன்னிசைக்கு ஆகிவந்துள்ளதால் , ‘ஆகுபெயர்’!

சேனாவரையர் தந்த இன்னொரு எடுத்துக்காட்டு – ‘பாவை வந்தாள்’
இங்கே , ‘பாவை’ ஒரு பெண்ணுக்கு ஆகிவந்ததால் , ‘பாவை’ இங்கே ஆகுபெயர்!

ஒரு பெண்ணைப் பார்த்துப் ‘பாவை நீ’ என்று சொன்னால், வெறும் உருவகம் மட்டும்தான்! இங்கே ‘பாவை’ ஆகுபெயர் இல்லை!

இத்துடன் ‘வேற்றுமை மயங்கியல்’ நிறைவுற்றது!

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 22, 2020 9:13 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (486)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில்,வேற்றுமை மயங்கியலுக்கு அடுத்த இயல் – விளி மரபு!

தொல்காப்பியர், ‘விளி வேற்றுமை’யைச் (Vocative case) சேர்த்துத்தான் வேற்றுமை எட்டு என்ற கணக்கைச் சொன்னார்(வேற்றுமை இயல் 2)!

ஆகவே, வேற்றுமை இயல், வேற்றுமை மயங்கியல் ஆகியவற்றை முடித்த பின்பு, விளியைப் பேசத் தொடங்குகிறார்!

சொற்கள் எவ்வாறு விளியை ஏற்கும் என்பதை விளக்கும் இயல் இது!

விளித்தல் – கூப்பிடுதல்

பரணன் என்பது சிறுவனின் பெயராக இருந்தால் , ‘டேய் பரணா’ என்றுதானே கூப்பிடுவோம் ?

இங்கே ‘பரணா’ என்பது ‘விளியை ஏற்ற பெயர்’!
சுவையான இந்த இயலின் முதல் நூற்பா :
விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு
தெளியத் தோன்றும் இயற்கைய என்ப (விளி மரபு 1)

விளியெனப் படுப – விளி என்று சொல்லப்படுவன,
கொள்ளும் பெயரொடு – தம்மை ஏற்கும் பெயரோடு,
தெளியத் தோன்றும் – விளங்கத் தோன்றும்
இயற்கைய என்ப - இயல்பினை உடைய என்று சொல்வார்கள்!

மேல் ‘பரணன்’ எடுத்துக்காட்டில் , ‘பரணா’ என்ற விளி எப்படி ஏற்பட்டது?
பரணன் என்ற சொல்லின் ஈற்றயல் எழுத்தான ‘ண’, நீண்டுள்ளது; நீண்டு ‘ணா’ஆகியுள்ளது!
‘ணா’ என நீண்டாலும் , விளி கொள்ளும் பெயராகிய ‘பரணன்’ என்பதிலிருந்து மிக விலகிச் செல்லவில்லை! இதைத்தான் ‘கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்றும்’ என மேலை நூற்பாவில் உரைக்கிறார் தொல்காப்பியர்!

விளி மரபின் இரண்டாம் நூற்பா:
அவ்வே
இவ்வென அறிதற்கு மெய்பெறக் கிளப்ப (விளி மரபு 2)

அவ்வே – விளிகொள்ளும் பெயரும் , விளிகொள்ளாப் பெயரும்
இவ்வென – இவை என,
அறிதற்கு – மாணவர்கள் அறிவதற்காகப்,
மெய்பெறக் கிளப்ப - பொருள்படச் சொல்லப்படும்!

என்ன சொல்லப்படுகிறது என்பதை வரும் ஆய்வில் பார்ப்போம்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Nov 23, 2020 4:50 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (487)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
-
விளி மரபில் அடுத்து, 30 நூற்பாக்களில் (3 – 32) , உயர்திணைப் பெயர்கள் எவ்வாறு விளியை ஏற்கும் என விளக்குகிறார்!

முதலாவதாக, உயர்திணைப் பெயர்களில் , விளி ஏற்கும் ஈறுகளைக் தெரிவிக்கிறார்!
அஃதாவது, என்னென்ன ஈறுகளைக் கொண்ட உயர்திணைப் பெயர்கள் விளியேற்கும் எனக் காட்டுகிறார்! :

அவைதாம்
இஉஐ ஓவென்னும் இறுதி
அப்பால் நான்கே உயர்திணை மருங்கின்
மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே (விளி மரபு 3)

இ, உ, ஐ, ஓ – இந்த நான்கு எழுத்துகளை ஈற்றிலே கொண்ட உயர்திணைப் பெயர்ச் சொற்கள் விளி ஏற்கும் !

இதற்கு உரையாசிரியர்தம் எடுத்துக்காட்டுகள்:

1. தம்பி (இ- ஈறு)
2 . வேந்து (உ - ஈறு)
3 . நங்கை (ஐ - ஈறு)
4 . கோ (ஓ - ஈறு)

சரி!

இந்த நான்கு ஈறுகளும் எவ்வாறு விளி ஏற்கும் ?

அடுத்தடுத்த நூற்பாக்களில் விடை கூறுகிறார் தொல்காப்பியர்!:

அவற்றுள்
இஈ யாகும் ஐஆய் ஆகும் (விளி மரபு 4)

இதற்குத் தெய்வச்சிலையார் தந்த எடுத்துக்காட்டுகள் :

1 . சாத்தி – சாத்தீ (இகர ஈற்று உயர்திணைச் சொல், ஈகார ஈற்று உயர்திணைச் சொல்லாக ஆனமை காண்க )
2 . தந்தை – தந்தாய் (ஐகார ஈற்று உயர்திணைச் சொல், ஆய் ஈற்று உயர்திணைச் சொல்லாக ஆனமை காண்க )

இ, ஐ – ஈறுகளுக்குச் சொல்லியாயிற்று!

மீதி இரு ஈறுகள்?

அடுத்த நூற்பா இவை பற்றியதே:
ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும் (விளி மரபு 5)

அஃதாவது – ஓகார ஈற்று உயர்திணைச் சொல்லும், உகர ஈற்று உயர்திணைச் சொல்லும் ஏகாரம் பெற்று விளி ஆகும்!

இதற்குச் சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் :
1 . கோ – கோவே
(ஓகார ஈறு , ஏகாரம் பெறல்; கோ+ வ் + ஏ= கோவே ; வ் – உடம்படு மெய்)
2 . வேந்து – வேந்தே
(உகர ஈறு , ஏகாரம் பெறல்; வேந்+ த் +உ + ஏ= வேந்தே ; குற்றியலுகரம் மெய்விட்டு ஓடியது)

மேலை எடுத்துக்காட்டில், ‘குற்றியலுகரம்’ எனக் கண்டோமல்லவா?

இதைத் தொல்காப்பியர் அடுத்து உறுதிப்படுத்துகிறார்:

உகரந் தானே குற்றிய லுகரம் (விளி மரபு 6)

அஃதாவது, குற்றியலுகரத்தை ஈற்றிலே கொண்ட உயர்திணைச் சொற்கள்தாம் , ‘ஏ’ பெற்று, விளி ஏற்கும்!

ஆனால் ,ஆதித்தர் இதனை மறுத்துக் , ‘குரு’ என்ற உயர்திணைச் சொல், முற்றியலுகர ஈறு பெற்றிருந்தாலும் , ‘குருவே’ என , ஏகாரம் பெற்று விளி ஏற்கிறதே என்கிறார்!
ஆதித்தர் கருத்துச் சரியானதே!

இதற்கு விடை நச்சரே உரைத்துவிட்டார்!: ‘சிறுபான்மை முற்றியலுகரமும் விளியேற்கும்!’

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 27, 2020 6:16 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (488)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இ,ஐ,உ,ஓ – ஆகிய நான்கு உயிர் ஈறுகள் பெற்ற உயர்திணச் சொற்கள் விளிபெறும் வகையைப் பார்த்தோம்!

இந்த நான்கு ஈறுகள் தவிர, மற்ற உயிர் ஈறுகள் கொண்ட உயர்திணைச் சொற்கள் விளி பெறாவா?

‘பெறா’ என்பதற்கே அடுத்த நூற்பா:
ஏனை உயிரே உயர்திணை மருங்கில்
தாம்விளி கொள்ளா என்மனார் புலவர் (விளி மரபு 7)

சரி! அப்படியானால், ‘கணி’ என்ற இகர ஈற்று உயர்திணைச் சொல், ‘கணீ’ எனாது, ‘கணியே’ என விளி பெற்றது எவ்வாறு?

இ,ஐ,உ,ஓ – ஆகிய நான்கு உயிர் ஈறுகள் பெற்ற உயர்திணச் சொற்கள் மட்டுமே விளிபெறும் எனில், ‘மக’ எனும் அகர ஈற்று உயர்திணைச் சொல் , ‘மகவே’ என விளி பெற்றது எப்படி?

இப்படி மாணவர்கள் சேனாவரையரைப் பிடித்துக்கொண்டனர்!

அதற்குச் சேனாவரையர் , ‘கணி’ என்ற உயர்திணைச் சொல், ‘கணியே’ என்று விளி பெற்றது போல, விதி விலக்காக வரும் என்று கூற வந்தவர் , ‘பிறவாற்றானும் விளி கொள்வனவு முள’ என விடை சொன்னார்!

மேலும் , ‘மக’ என்பது விளி பெறாதாயினும், சொல்லுவான் குறிப்பால் ‘மகவே’ என விளி ஏற்கும் என்றார் சேனாவரையர்!
‘மக’ என்ற சொல்லை , ‘மகவே’ என்று , சற்று நீட்டித், தன் உள்ளம் தோயுமாறு ஒருவன் கூறியதையே ‘சொல்லுவான் குறிப்பு’ என்றார் சேனாவரையர்!

சரி!

‘தோழீஇ’ என்ற , அளபெடை பெற்ற உயிரீற்று உயர்திணைச் சொல் உள்ளது; இது எப்படி விளி ஏற்கும்? ‘தோழீஈ’ என்று ஆகுமா?
ஒருவன் வினா!
இதற்கு விடை கூறினார் தொல்காப்பியர்:

அளபெடை மிகூஉம் இகர இறுபெயர்
இயற்கைய வாகும் செயற்கைய என்ப (விளி மரபு 8)

அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் – அளபெடை பெற்ற இகர ஈற்று உயர்திணைச் சொற்களில்,
இயற்கை ஆகும் - இகரம் ஈகாரம் ஆகாது, மற்றொரு இகரமே சேரும்
செயற்கைய என்ப - செயற்பாட்டை உடையன என்பர்!

சேனாவரையரின் எடுத்துக்காட்டின்படி,
தோழீஇ – அளபெடை பெற்ற இகர ஈற்று உயர்திணைச் சொல்; இது விளி பெற்றால், ‘தோழீஇஇ’ என்றுதான் ஆகும்! சில போழ்து , ‘தோழீஇஇஇ’என்றும் ஆகும்!

மேல் நூற்பாவில், ’ இயற்கைய வாகும் செயற்கைய என்ப ’ என்ற தொடரழகைக் காணுங்கள்! ‘ஐயோ இலக்கணமே’ என்று இல்லாமல், சற்று மொழி அழகையும் காணுங்கள்!
‘இயற்கைய’ என்பதற்கு , எவ்வளவு அழகாக முரண்தொடை அமைத்து, அதே அடியில் ‘செயற்கைய’ என்றார் தொல்காப்பியர் பாருங்கள்!
***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 28, 2020 12:31 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (489)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஐ’ ஈற்று உயர்திணைச் சொற்கள் , ‘ஆய்’ பெற்று விளி எற்கும் எனப் பார்த்தோம்!

ஆனால், இதே ‘ஐ’ ஈற்று உயர்திணைச் சொல் , முறைப்பெயரைக் குறித்தால் , ‘ஆ’ ஈறு பெற்றும் விளி ஏற்கும் என்கிறார் தொல்காப்பியர்:

முறைப்பெயர் மருங்கின் ஐயென் இறுதி
ஆவொடு வருதற் குரியவு முளவே (விளி மரபு 9)

இதன்படி-

அன்னை - ‘அன்னா’ என விளி பெறும்.
அத்தை - ‘அத்தா’ என விளி பெறும்.

இந்த நூற்பாவில் வந்துள்ள ‘உம்’மை நோக்கற் பாலது.
’வருதற்கும் உரிய’ என்பதிலுள்ள உம்மை எதிர்மறை உம்மை போலத் தோன்றும்!ஆனால், இது உண்மையில் ‘இறந்தது தழீஇய உம்மை’!

முன்நூற்பா , விளி மரபு 4இல் கூறியபடி, ‘அன்னை’ என்பது ‘அன்னாய்’ என்றும் வரும்;‘அத்தை’ என்பது ‘அத்தாய்’ எனவும் வரும்! இந்தக் கருத்தைத் தழுவுதலால்தான் ‘இறந்தது தழீய’ என்கிறோம்!

சரி!
‘விளி’ என்றால், ‘கூப்பிடுதல்’ என்கிறோம்! ஒருவன் தொலைவில் இல்லாமல், அருகிலே இருந்தால் அவனை எப்படிக் கூப்பிடுவது?

இதற்குத்தான் அடுத்த நூற்பா:

அண்மைச் சொல்லே இயற்கை ஆகும் (விளி மரபு. 10)

1.நம்பி – ‘நம்பி’ என்றே விளி ஏற்கும்!
எடுத்துக்காட்டு – நம்பி வாழி
2 . வேந்து – ‘வேந்து ’ என்றே விளி ஏற்கும்!
எடுத்துக்காட்டு – வேந்து வாழி
3 . நங்கை – ‘நங்கை’ என்றே விளி ஏற்கும்!
எடுத்துக்காட்டு – நங்கை வாழி
4 . கோ – ‘கோ’ என்றே விளி ஏற்கும்!
எடுத்துக்காட்டு – கோ வாழி

மேல் எடுத்துக்காட்டுகளில், ‘இ’, ‘உ’ , ‘ஐ’ , ‘ஓ’ என்ற நான்கு ஈறுகள் பெற்ற உயர்திணைச் சொற்கள் வந்துள்ளதைக் கவனிக்க!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 29, 2020 11:46 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (490)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

விளி மரபில் இதுவரை, உயிரீற்று உயர்திணைச்சொற்கள் விளி பெறுவதையே பார்த்தோம்!
அடுத்தது, மெய்யீற்று உயர்திணைச் சொற்கள் எவ்வாறு விளியேற்கும் எனக் காட்டுகிறார் தொல்காப்பியர்!:

னரலள என்னும் அந்நான் கென்ப
புள்ளி யிறுதி விளிகொள் பெயரே (விளி மரபு 11)

அஃதாவது நான்கு ஈறுகள் கொண்ட உயர்திணைச் சொற்களே விளி ஏற்கும் என்று வரையறுக்கிறார்!
1 . ‘ன்’ னை ஈற்றிலே கொண்ட உயர்திணைச் சொற்கள்
2 . ‘ர்’ ரை ஈற்றிலே கொண்ட உயர்திணைச் சொற்கள்
3 . ‘ல்’ லை ஈற்றிலே கொண்ட உயர்திணைச் சொற்கள்
4 . ‘ள்’ ளை ஈற்றிலே கொண்ட உயர்திணைச் சொற்கள்

இங்கே, ஆதித்தர் ஓர் ஐயத்தை வைக்கிறார்!:
‘பெண்’ , தாய்’ ஆகியன முறையே ‘பெண்ணே’ எனவும் ‘தாயே’ என்றும் விளி ஏற்குமே? ஏன் இவற்றைத் தொல்காப்பியர் குறிக்கவில்லை?

இதற்கு சிவலிங்கனார் தக்க விடை கூறுகிறார்!:
“பெண், ஆய் (தாய்) என்பன உயர்திணையல்ல, விரவுத் திணை!”

சிவலிங்கனார் கருத்துச் சரியானதே!


இங்கே ‘விரவுத் திணை’ என்றால் என்னவென்று நான் உங்களுக்குச் சொல்லவேண்டும்!

‘இந்த நாய் ஆணா பெண்ணா?’ - இவ் வினாவில் ‘பெண்’ எனும் உயர்திணைச் சொல் , அஃறிணையாகிய நாய்க்கும் பொருந்துவதைக் காணலாம்!

இவ்வாறு உயர் திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்தும் பெயர்களே ‘விரவுத் திணைச் சொற்கள்’!

தாய் இவள் √
தாய் இப் பசு √
- இவற்றிலும் ‘தாய்’ எனும் சொல், உயர் திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்தி வருவதை நோக்கலாம்!
விளி கொள்ளும் மெய்யீறுகளை ‘ன்’ , ‘ர்’, ‘ல்’ , ‘ள்’ என வரையறுத்த கையோடு, வேறு மெய்யெழுத்துகள ஈற்றிலே கொண்ட உயர்திணைச் சொற்கள் விளி ஏலா என்று முடிவுகட்டுகிறார் தொல்காப்பியர்!:

ஏனைப் புள்ளி யீறுவிளி கொள்ளா (விளி மரபு 12)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 29, 2020 2:02 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (491)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மேல் ஆய்வில் , ‘ன்’ , ‘ர்’, ‘ல்’ , ‘ள்’ ஆகிய ஈறுகள் கொண்ட உயர்திணைச் சொற்கள் விளி ஏற்கும் என்று பார்த்தோம்!
இவற்றில் ஒவ்வொரு ஈறாக எடுத்துக்கொண்டு, இவை எப்படி விளிகொள்ளும் என்று விவரிக்கிறார் தொல்காப்பியர் !
முதலாவதாக, ‘ன்’ ஈறு பெற்ற உயர்திணைப் பெயர்ச் சொற்கள் எப்படி விளியேற்கும் என்று கூறுகிறார்!:
அவற்றுள்
அன்னென் இறுதி ஆவா கும்மே (விளி மரபு 13)

‘அன்’ ஈறு பெற்ற உயர்திணைப் பெயர்ச்சொற்கள் , ‘அன்’ ஈறு இருக்குமிடத்தில் ‘ஆ’ பெற்று விளிப்பெயராக ஆகும் !

1 . சோழன் – சோழா (சோ+ழ் + அன் = சோழன்; சோ+ழ்+ ஆ= சோழா; இறுதி ‘அன்’, ‘ஆ’வாக மாறியது)
2 . சேர்ப்பன் – சேர்ப்பா (சேர்+ப்+ப் + அன் = சேர்ப்பன்; சேர்+ப்+ப்+ ஆ= சேர்ப்பா;இறுதி ‘அன்’, ‘ஆ’வாக மாறியது)

மேலே நாம் பார்த்தபோது , ‘ன்’ ஈறு பற்றித்தானே ஓதினார் தொல்காப்பியர்?
இப்போது ‘அன்’ ஈறு என்கிறாரே?

ஐயமா?

உயர்திணைப் பெயர்ச்சொற்களில் ‘ன்’ என்பது இறுதி எழுத்தாக இருந்தாலும் , விளி ஏற்கும்போது, இந்த ‘ன்’ மட்டும் மாற்றம் கொள்ளாது! அதற்கு முன்னுள்ள எழுத்தின் ‘அ’வையும் சேர்த்துக்கொண்டுதான் மாற்றம் அடையும்!

மேல் இரண்டு விளிகளும் சேய்மை விளிகள்!
அஃதாவது, சற்றுத் தொலைவில் உள்ளவரைக் கூப்பிடுதல்!

அப்படியானால், அருகில் உள்ளவரைக் கூப்பிடும்போது ’அன்’ ஈற்றுச் சொற்கள் எப்படி விளி பெறும்?

இதற்குத்தான் அடுத்த நூற்பா!:

அண்மைச் சொல்லிற்கு அகர மாகும் (விளி மரபு 14)

அருகில் உள்ளவரைக் கூப்பிடும்போது ’அன்’ ஈற்றுச் சொற்கள் ‘அ’ பெற்று விளி கொள்ளும்!:
1 . துறைவன் – துறைவ (துறை+வ் + அன் = துறைவன்; துறை +வ் +அ= துறைவ; இறுதி ‘அன்’, அகரமாக மாறியது)
2 . ஊரன் – ஊர (ஊர்+ அன் = ஊரன்; ஊர்+அ= ஊர ;இறுதி ‘அன்’, அகரமாக மாறியது)

அஃதாவது, அருகிலே ‘துறைவன்’ இருந்தால், அவனைத் ‘துறைவ’ என்றுதான் அழைக்க வேண்டும்! ‘துறைவா’ என்று கூப்பிடக் கூடாது!
அருகிலே ‘ஊரன்’ இருந்தால், அவனை ‘ஊர’ என்றுதான் அழைக்க வேண்டும்! ‘ஊரா’ என்று விளிக்கக் கூடாது!

ஆமாம், ’சேர்ப்பன்’ ‘துறைவன்’ , ‘ஊரன்’ – இவர்களெல்லாம் யார்?

துறைவன் – நெய்தல் நிலத் தலைவன்
சேர்ப்பன் – நெய்தல் நிலத் தலைவன்
ஊரன் – மருத நிலத் தலைவன்

சில ‘அன்’ஈற்று உயர்திணைச் சொற்கள் , அண்மை விளி (Near vocative) ஏற்பதை வருமாறு குறிக்கலாம்!:

1 . முருகன் – முருக
2 . கண்ணன் – கண்ண
3 . சாத்தன் – சாத்த
4 . பரணன் – பரண
5 .வளவன் - வளவ

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Nov 30, 2020 12:48 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (492)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சற்று முன்பு , ‘அன்’ ஈற்று உயர்திணைச் சொற்கள் விளி பெற்ற வகையினைப் பார்த்தோம்!
இப்போது, ‘ஆன்’ஈற்று உயர்திணைப் பெயர்ச்சொற்கள் விளி ஏற்பதைக் காட்டுகிறார் தொல்காப்பியர்!
‘ஆன்’ஈற்று உயர்திணைப் பெயர்ச்சொற்கள் விளி ஏற்பதை மொத்தம் நான்கு நூற்பாக்களில் உரைக்கிறார்!
ஆனென் இறுதி இயற்கை யாகும் (விளி மரபு 15)
என்ற நூற்பாவில் , ‘ஆன்’ ஈற்று உயர்திணைப் பெயர்ச் சொற்கள், எவ்வித மாற்றமும் இல்லாது, இயற்கையான அதன் வடிவிலேயே விளியைக் கொள்ளும் என்கிறார்!

1 . சேரமான் – சேரமான் (மாற்றமில்லை)
2 . மலையமான் – மலையமான் (மாற்றமில்லை)
ஆதித்தர் இங்கே ஓர் ஐயத்தை முன் வைக்கிறார்!:
‘சேரமான் , விளி பெற்றால் சேரமானே என்றுதானே ஆகும்? மலையமான், விளி பெற்றால் மலையமானே என்றுதானே ஆகும்?’

இதற்கு விடை வேண்டுமென்றால் , இதற்கு முந்தைய நூற்பாவைப் பார்க்கவேண்டும்!
முன் நூற்பாவில் (வி.ம. 14), தொல்காப்பியர் பேசியது ‘அண்மை விளி’ பற்றியே! ஆகவே, அண்மை விளியில் ‘சேரமானே’ , ‘மலையமானே’ என்றெல்லாம் வராது! ‘சேரமான்’ , ‘மலையமான்’ என்றுதான் வரும்!

அடுத்து, ‘ஆன்’ ஈறு பெற்ற வினையாலணையும் பெயர்கள் எவ்வாறு விளி ஏற்கும் என்று விளக்குகிறா!:

தொழிலிற் கூறும் ஆனென் இறுதி
ஆயா கும்மே விளிவயி னான (விளி மரபு 16)

தொழிலிற் கூறும் – தொழிலால் கூறும்,
ஆன் என் இறுதி - ‘ஆன்’ ஈற்று இறுதிச் சொற்கள்,
ஆய் ஆகும்மே – ‘ஆய்’ ஈறு பெறும்,
விளி வயினான – விளிவேற்றுமை அடையும் போது!

தொழிலிற் கூறும் பெயர் - வினையால் அணையும் பெயர்.

அவள் வந்தாள் – இங்கே , ‘வந்தாள்’ வினை முற்று.
வந்தாள் செய்தது சரியில்லை – இங்கே ‘வந்தாள்’ வினையாலணையும் பெயர்.

தொல்காப்பியர் கூறுவது வினையாலணையும் பெயரையே!

‘வீட்டுக்கு வந்தான் என்ன செய்தான்?’ – இங்கே ‘வந்தான்’ வினையாலணையும் பெயர்.
‘வந்தான்’ என்பதற்கு விளிதான் ‘வந்தாய்’!
1 . வந்தான் – வந்தாய் (வந் + த் + ஆன் = வந்தான்; வந் + த் + ஆய் = வந்தாய்; ‘ஆன்’வடிவு, ‘ஆய்’ ஆயிற்று.)
2 . சென்றான் – சென்றாய் (சென் + ற் + ஆன் = சென்றான்; சென் + ற் + ஆய் = சென்றாய்; ‘ஆன்’வடிவு, ‘ஆய்’ ஆயிற்று.)

‘ஆன்’ ஈற்று வினையாலணையும் பெயர் விளிகொள்ளும் வகையைப் பார்த்தோம்!
அடுத்து, இதே ‘ஆன்’ ஈற்றுடன் வரும் பண்புகொள் பெயரானது எப்படி விளிகொள்ளும் எனக் காட்டுகிறார்! :
பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே (விளி மரபு 17)

முதற்கண் ‘பண்புகொள் பெய’ரைக் காண்போம்!

கருமைப் பண்பு கொண்டவன் – கரியான்
சிவப்புப் பண்பு கொண்டவன் – செய்யான்

இங்கே ‘பண்பு’ என்பது நிறத்தைக் குறிக்கிறது! (அகராதி தொகுப்பவர்கள் கவனிக்க!)
‘கரியான்’ , ‘செய்யான்’ ஆகியன ‘பண்புகொள் பெயர்கள்’.
பண்புப் பெயர் என்றாலும் பண்புகொள் பெயர் என்றாலும் ஒன்றுதான்!

மேலே தொல்காப்பியர் கூறியது என்னவென்றால் (வி.ம.17), பண்புகொள் பெயர்களும் ‘ஆய்’ பெற்றே விளியாக வரும்!
1 . கரியான் (இது பண்புப் பெயர்) – கரியாய் (இஃது ‘ஆய்’ ஈறு ஏற்ற விளிப் பெயர்)
2 . செய்யான் (இது பண்புப் பெயர்) – செய்யாய் (இஃது ‘ஆய்’ ஈறு ஏற்ற விளிப் பெயர்)

இவற்றின்பின் , ‘ஆன்’ ஈற்று அளபெடைப் பெயர்களை எடுத்துக்கொள்கிறார் தொல்காப்பியர்! :

அளபெடைப் பெயரே அளபெடை இயல (விளி மரபு 18)

அளபெடைப் பெயரே – அளபெடை பெற்ற ‘ஆன்’ ஈற்று உயர்திணைப் பெயர்கள்,
அளபெடை இயல _ இகர ஈற்று அளபெடைப் பெயர்கள் போல , நீண்டு, இயல்பாக ஒலிக்கும்!

இகர ஈற்று அளபெடைப் பெயர்கள் விளி ஏற்கும் வகையை முன் ஆய்வில் (வி.ம. 8) பார்த்தோமல்லவா?
அதே நடைமுறைய இங்கும் கொள்க என்கிறார் தொல்காப்பியர்! அதன்படி -

1 .உழாஅன் ( ‘ஆன்’ ஈறும் அளபெடையும் பெற்ற பெயர்; உழவன் என்பதே பொருள்; அளபெடையை நீக்கிவிட்டுப் பார்த்தால், ‘ழா’விலுள்ள ‘ஆ’வும் , கடைசி ‘ன்’னும் சேர்ந்து ‘ஆன்’ ஈறு தெரியும்!); இது விளி ஏற்றால் , ‘உழாஅஅன்’ ஆகும்! ‘உழாஅனே’ என ஆகாது!

2 . கிழாஅன் ( ‘ஆன்’ ஈறும் அளபெடையும் பெற்ற பெயர்; உரிமை உள்ளவன் என்பதே பொருள்); இது விளி ஏற்றால் , ‘கிழாஅஅஅன்’ ஆகும்! ‘கிழாஅனே’ என ஆகாது! (விளியில் மூன்று அகரங்கள் வந்துள்ளதை நோக்குக)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Dec 01, 2020 6:08 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (493)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ன்’ ஈற்று உயர்திணைப் பெயர்கள் விளி ஏற்கும் முறைகளைத் தொல்காப்பியர் கூறிவருகிறார்!

இப்போது, ‘ன்’ ஈற்று முறைப் பெயர்களை எடுத்துக்கொள்கிறார்! :

முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே (விளி மரபு 19)

எடுத்துக்காட்டுகள்:
1 . மகன் – மகனே ( ‘ஏ’ பெற்று விளியானது)
2 . மருமகன் –மருமகனே ( ‘ஏ’ பெற்று விளியானது)

இங்கு , ஆதித்தர் ஓர் ஐயத்தை வைக்கிறார்!:
‘ ‘அண்ணன்’ , ‘அப்பன்’, ‘மாமன்’ ஆகியன ‘அண்ணா’ , ‘அப்பா’ , ‘மாமா’ என்று விளி ஏற்கவில்லையா? இங்கெல்லாம் ஈற்றயல்தானே மாற்றம் பெற்றுள்ளது?’

‘அப்பன்’ என்பதன் விளியே ‘அப்பா’ என்றால் , ‘அம்மன்’ என்பதன் விளியாக அல்லவா ‘அம்மா’ அமையும்?

எனவே, ஆதித்தர் கருத்து ஆய்விற்குரியதாகிறது!

தொல்காப்பியர், அடுத்து, ‘ன்’ ஈற்று உயர்திணைப் பெயர்களில் , விளி ஏற்காதவை பற்றிப் பேசுகிறார்!:

தானென் பெயரும் சுட்டுமுதற் பெயரும்
யானென் பெயரும் வினாவின் பெயரும்
அன்றி யனைத்தும் விளிகோ ளிலவே (விளி மரபு 20)

இதன்படிக், கீழ் வருவன விளி ஏலா!:

1 . தான் (Reflexive pronoun)
2 .அவன் (Demonstrative pronoun)
3 . இவன் (”)
4 . உவன் (”)
5 . யான் (Pronoun)
6 . யாவன் (Interrogative pronoun)

இவற்றில், அவன், இவன், உவன் என்ற மூன்று பெயர்ச் சொற்களும் சுட்டு எழுத்துகளை முதலாகப் பெற்றிருப்பதால், ‘சுட்டுமுதற் பெயர்’ என்று நூற்பாவில் குறிக்கப்பெற்றன.

நூற்பாவில், ‘அன்றி அனைத்தும்’ என வந்துள்ளதால், மேலை முறையில் விளி ஏற்காத உயர்திணைப் பெயர்ச்சொற்களைப் பட்டியலிடுகிறார் ஆதித்தர் !:
1 .தாம்
2 . தாங்கள்
3 . அவர்
4 . அவள்
5 .அவர்கள்
6 . நாம்
7 . நாங்கள்
8 . யாவன்
9 . யாவர்

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 74 of 84 Previous  1 ... 38 ... 73, 74, 75 ... 79 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக