புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10 
26 Posts - 43%
Ammu Swarnalatha
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10 
1 Post - 2%
M. Priya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10 
1 Post - 2%
Jenila
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10 
4 Posts - 3%
Jenila
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10 
3 Posts - 3%
Rutu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10 
3 Posts - 3%
Baarushree
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10 
2 Posts - 2%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10 
2 Posts - 2%
manikavi
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 11 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 11 of 84 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 47 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Fri Apr 26, 2013 8:32 am


தங்களது தொடர் அருமை ... இன்றைய சூழலுக்கு ஏற்ப விளக்கங்கள் தருவது இன்னும் அருமை ...!
நான் முதல் பக்கத்தை மட்டும் பார்த்து பதிப்பத்ததே ...இது !
மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்கும் ,
அன்பன்,
சுந்தரம்



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 28, 2013 10:50 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (67)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘புள்ளி மயங்கியல்’ எனில் , ஒரு புள்ளி எழுத்து (மெய்யெழுத்து) இன்னொரு புள்ளி எழுத்து அருகே சென்று சேரும்போது எப்படிச் சேரும் என்பதைக் கூறுவது !

மயங்குதல் – கள் குடித்து மயங்குதல் அல்ல !

மயங்குதல் – இணைதல் ; சேர்தல்

சித்த மருத்துவத்தில் , ‘ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் சேர்த்து’ என்பதைக் கூற ‘மயக்கி’ என்பர் ! அதுதான் பின்பு ‘மசக்கி’ஆனது !

‘அந்தி மயங்கும் நேரம்’ என்றால் , மாலைப் பொழுதும் இரவுப் பொழுதும் சேரும் நேரம் என்பது பொருள் ! இது நமக்குத் தெரிந்ததுதானே?

ஆகவே , தொல்காப்பியரது மயக்கம் என்ற சொல்லைக் கண்டு மயங்க வேண்டாம் !

புள்ளிமயங்கியலில் தொல்காப்பியரின் ணகர ஈற்றுப் புணர்ச்சி விதிகளைப் பார்த்தோம் ! அவற்றைத் தொடர்ந்து அவர் ‘ம்’ஈற்றுச் சொற்கள் புணரும் வகைகளை விவரிக்கிறார் ! அவரைப் பின் தொடர்வோம் ! :-

“மகர இறுதி வேற்றுமை யாயின்
துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே” ! (புள்ளி மயங்கியல் 15)

(துவரக் கெட்டு – முழுவதும் கெட்டு)

அஃதாவது , மகர ஈற்றுப் பெயர்ச் சொற்கள் (Nouns) வேற்றுமைப் பொருளில் புணரும்போது , ‘ம்’ கெட்டு , வருமொழி முதல் வல்லின எழுத்து மிகுந்து முடியும் !

மரம் + கால் = மரக் கால் (வேற்றுமைப் புணர்ச்சி)
உலகம் + பெரிது = உலகப் பெரிது (வேற்றுமைப் புணர்ச்சி)
முகம் + கட்டி = முகக் கட்டி (வேற்றுமைப் புணர்ச்சி)

இளம்பூரணர் இவ்விடத்தில் , “ மகரம் மறைந்து , வல் எழுத்து மிகாத புணர்ச்சி இடங்களும் உண்டு ” என்கிறார் ! அவரின் சான்றுகளை வருமாறு தெளிவுபடுத்தலாம் !

மரம் + ஞாண் = மரஞாண்
மரம் + நூல் = மரநூல்
மரம் + மணி = மரமணி
மரம் + யாழ் = மரயாழ்
மரம் + வட்டு = மரவட்டு
மரம் + அடை = மரவடை
மரம் + ஆடை = மரவாடை
தம் + கை = தங்கை
எம் + கை = எங்கை
எம்+ செவி = எஞ்செவி
எம் + தலை = எந்தலை
நம் + புறம் = நப்புறம்
நும் + கை = நுங்கை என வரும் !

மேல் வந்தவை யாவும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !

‘இந்தப் புணர்ச்சிகளெல்லாம் யாருக்கோ சொன்னவை ’ என்று இருக்கவேண்டாம் ! நீங்கள் பத்திரிகைச் செய்தி போடுபவராக இருந்தால் , ‘உரம் மூட்டை’ என்று எழுதாமல் ‘உரமூட்டை’ என்றுதான் எழுதவேண்டும் ! (இதுவும் வேற்றுமைப் புணர்ச்சிதான் !) .

சில மகர ஈறுகள் வேறுவகையாகவும் புணரும் என்கிறார் தொல்காப்பியர் ! :-

“அகர ஆகாரம் வரூஉங் காலை
ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்தே” (புள்ளிமயங்கியல் 16)

இதன்படி ,

மரம் + அடி = மரவடி √ ( வ் – உடம்படு மெய்)
மரம் + அடி = மராஅடி √

குளம் + ஆம்பல் = குளவாம்பல் √ (வ் – உடம்படு மெய்)
குளம் + ஆம்பல் = குளாஅம்பல் √ என வரும் !

இவை நான்குமே வேற்றுமைப் புணர்ச்சிகள்!

சில மகர ஈறுகள் , வல்லினச் சந்தியும் பெறும் , மெல்லினச் சந்தியும் பெறும் என்கிறார் தொல்காப்பியர் !:-

“மெல்லெழுத் துறழும் மொழியுமா ருளவே
செல்வழி அறிதல் வழக்கத் தான ” (புள்ளிமயங்கியல் 17)

அஃதாவது , கீழ்வருமாறு புணரும் :-

குளம் + கரை = குளக் கரை √
குளம் + கரை = குளங் கரை √

குளம் + சேறு = குளச் சேறு √
குலம் + சேறு = குளஞ் சேறு √

குளம் + தாது = குளத் தாது √
குளம் + தாது = குளந்தாது √

குளம் + பூமி = குளப் பூமி √
குளம் + பூமி = குளம் பூமி √

‘இல்லம்’ என்ற மரப் பெயர் , ‘விசை’ என்ற மரப் பெயர் புணர்வதுபோல மெல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணரும் என்று அடுத்துக் கூறுகிறார் தொல்காப்பியர் ! :-

”இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே” ! (புள்ளிமயங்கியல் 18)

இல்லம் + கோடு = இல்லக் கோடு ×
இல்லம் + கோடு =இல்லங் கோடு √ (கோடு - கிளை)

இல்லம் + செதிள் = இல்லச் செதிள் ×
இல்லம் + செதிள் = இல்லஞ் செதிள் √ (புதிய மரப்பட்டை தோன்றியதும் பழையது செதிள் செதிளாக நிற்கும்)

இல்லம் + தோல் = இல்லத் தோல் ×
இல்லம் + தோல் = இல்லந் தோல் √ (தோல் - பட்டை)

இல்லம் + பூ = இல்லப் பூ ×
இல்லம் + பூ = இல்லம் பூ √

தொல்காப்பியர் குறித்த ‘இல்லம்’ என்ற மரத்தைக் காண ஆர்வம் உள்ளதா உங்களுக்கு ?

[You must be registered and logged in to see this link.]
Courtesy - westafricanplants.senckenberg.de

இதுவே தொல்காப்பியர் கூறிய இல்லம் எனும் மரம் ; நற்றிணையில் ( 376:5-6) இல்லம் என்ற பெயரிலேயே இம் மரம் சுட்டப்படுகிறது.
சில்லமரம், கதலிக மரம்,தேற்றா மரம் என்பன பிற்காலப் பெயர்கள் .
இதன் ஆங்கிலப் பெயர்- Clearing-nut tree ; தாவரவியல் பெயர் - Strychnos potatorum Linn.
சளி, பித்தம் , நஞ்சு அகியவற்றுக்குச் சித்த மருத்துவ மருந்து இத் தாவரம் !
இம் மரக் காய்களை இடித்து கொட்டை எடுத்த பின் , சக்கையைக் கரைத்துக் குட்டைகளில் இட்டால், மீன்கள் மயங்கிக் கரை ஒதுங்கும் என்பர்.

[You must be registered and logged in to see this link.]
Courtesy- ecoport . org
இல்லம் மரத்து விதைகள் !


மேலே நாம் புணர்ச்சி முறைகள் ஆழ்ந்த ஆய்விற்கு உரியன !

சில இடங்களில் தொல்காப்பியர் , ‘வல்லெழுத்துச் சந்தி வரும்’ என்கிறார் ; சில இடங்களில் ‘மெல்லெழுத்துச் சந்தி வரும்’ என்கிறார் !

ஏன் இப்படி ? ஒரே மாதிரியாக இலக்கணம் வகுக்கக் கூடாதா?

நல்ல கேள்வி !

தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் ,விதிகளை விதித்து , ‘நீங்கள் இப்படித்தான் எழுதவேண்டும்’ என்று சட்டமிடும் நூல் (Prescriptive Grammar) அல்ல !

மாறாக , ‘நீண்ட நெடிய வரலாறுள்ள தமிழில் இதுதான் மரபு ; இப்படித்தான் பெரியோர்கள் எழுதி வருகிறார்கள் ! இதைத் தெரிந்துகொள்ளுங்கள் ! ’ என்று போதிப்பதே தொல்காப்பியம் ! இதனை விளக்கமுறை இலக்கணம் (Descriptive Grammar) என்பர்!

சுருக்கமாகச் சொன்னால் , புணர்ச்சித் தடுமாற்றங்களுக்குக் காரணம் , நீண்ட நெடிய தமிழ் மொழி வரலாறே !

=======



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
nikky
nikky
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 08/02/2013

Postnikky Sun Apr 28, 2013 11:26 am

தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழன் ஐயா நீங்கள் .தமிழ் மீது நீங்கள் கொண்டுள்ள பற்றை என்னவென்று பாராட்டுவது..... சூப்பருங்க

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 28, 2013 6:29 pm

நிக்கி அவர்களின் பாட்டுதலுக்கு நன்றி ! ஜி.யூ.போப் போன்ற வெளிநாட்டவர்களையே கட்டிப்போட்டது தமிழ் ! நான் எம்மாத்திரம் ?-

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி.,
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 04, 2013 6:37 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (68)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“அல்வழிப் புணர்ச்சியில் , மகர ஈற்றுச் சொற்கள் (மகர ஈறு = ‘ம்’ஈறு) , மெல்லெழுத்தாக ஆகும் ” என்று ஒரு விதி கூறுகிறார் தொல்காப்பியர் ! :-

“அல்வழி எல்லாம் மெய்யெழுத் தாகும்” ! (புள்ளி மயங்கியல் 19)

இதற்கு எடுத்துக்காட்டுகள் :-

மரம் + குறிது = மரங் குறிது √
மரம் + குறிது = மரக் குறிது ×


மரம் + சிறிது = மரஞ் சிறிது √
மரம் + சிறிது = மரச் சிறிது ×

மரம் + தீது = மரந் தீது √
மரம் + தீது = மரத் தீது ×

மரம் + பெரிது = மரம் பெரிது √
மரம் + பெரிது = மரப் பெரிது ×

இவ்விடத்தில் இளம்பூரணர் தலையிடுகிறார் ! தலையிட்டுக் , கீழ்வருமாறும் மகர ஈற்றுச் சொற்கள் புணரலாம் என்கிறார் !:-

மரம் + ஞான்றது = மர ஞான்றது √
மரம் + ஞான்றது = மரஞ் ஞான்றது ×

மரம் + நீண்டது = மர நீண்டது √
மரம் + நீண்டது = மரம் நீண்டது ×

மரம் + மாண்டது = மர மாண்டது √
மரம் + மாண்டது = மரம் மாண்டது ×

வட்டம் + தழை = வட்டத் தழை √
வட்டம் + தழை = வட்டந் தழை ×

வட்டம் + பலகை = வட்டப் பலகை √
வட்டம் + பலகை = வட்டம் பலகை ×

கலம் + கொள் = கலக் கொள் √
கலம் + கொள் = கலங் கொள் ×

கலம் + நெல் = கல நெல் √
கலம் + நெல் = கலம் நெல் ×

நீலம் + கண் = நீலக் கண் √
நீலம் + கண் = நீலங் கண் ×

பவளம் + வாய் = பவள வாய் √
பவளம் + வாய் = பவளம் வாய் ×

நிலம் + நீர் = நில நீர் √
நிலம் + நீர் = நிலம் நீர் ×

கொல்லும் + கொற்றன் = கொல்லுங் கொற்றன் √
கொல்லும் + கொற்றன் = கொல்லுக் கொற்றன் ×

பறக்கும் + நாரை = பறக்கு நாரை √
பறக்கும் + நாரை = பறக்கும் நாரை ×

மேற்கண்டவை யாவும் அல்வழிப் புணர்ச்சிகளே !

தொல்காப்பியர் சொல்லாததை யெல்லாம் எப்படி இளம்பூரணரால் சொல்லமுடிகிறது ?

இளம்பூரணர் கி.பி.1100ஐச் சேர்ந்தவர் ! தொல்காப்பியரோ கி.மு.1000ஐச் சேர்ந்தவர் ! இந்த இடைவெளிதான் காரணம் !

இளம்பூரணர் காலத்தில் இலக்கணப் புலவர்கள் கொண்ட நடைமுறை விதிகளை எல்லாம் , தொல்காப்பிய உரையின்போது தக்க இடங்களில் சேர்த்துத் தந்துள்ளார் அவர்! அதனால் நாம் பிழைத்தோம் !

தொல்காப்பியர் காலத்தில் இலக்கணம் கற்றவர்களிடையே ஒரு தகராறு!
அகம் + கை = அங்கை
அகம் + கை = அகங்கை
- இவற்றில் எது சரி?

தொல்காப்பியர் இத் தகராறைத் தீர்த்துவைத்தார் ! :-

“அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே
முதனிலை ஒழிய முன்னவை கெடுதலும்
வரைநிலை இன்றே ஆசிரி யர்க்கு
மெல்லெழுத்து மிகுதல் ஆவயி னான ” (புள்ளிமயங்கியல் 20)

அஃதாவது , “ ‘அகம்’ என்பதோடு ‘கை’ புணர்ந்தால் , முதலில் ‘ம்’ கெடப் புணர்தலும் , பின் ‘கம்’ கெடப் புணர்தலுமாகஇரு வகைகள் உண்டு ! இரு வழிகளிலும் இடையில் ‘ங்’ வரும்!”

அகம் + கை = அங்கை √ (அல்வழிப் புணர்ச்சி)
அகம் + கை = அகங்கை √(அல்வழிப் புணர்ச்சி)

“இரண்டுமே சரிதான் ” என்று தகராறைத் தீர்த்துவைத்தார் தொல்காப்பியர் !

‘அகம் + கை = அகக் கை’ – என்று வராதா ?

நல்ல கேள்வி !

வரும் ! அது வேற்றுமைப் புணர்ச்சியில் !

எனவே , புணர்ச்சி இலக்கணத்தில் முதலில் , அல்வழிப் புணர்ச்சியா வேற்றுமைப் புணர்ச்சியா என்று தீர்மானித்துக் கொள்ளவேண்டும்!

ஒருநாள் தொல்காப்பியரிடம் ஒருவன் ஓடோடிச் சென்றான் ! “இலம்படு – என்பது வேற்றுமைப் புணர்ச்சிதானே ? ‘மகர இறுதி வேற்றுமையாயின் துவரக் கெட்டு வல்லெழுத்து மிகும் ’ என நீங்கள்தானே கூறினீர்கள் ? அதன்படி , ‘ இலம்+படு = இலப்படு’ என்றல்லவா வரும்? ஆனால் பாட்டுகளில் ‘இலம்படு’ என்று வருகிறதே” என்று துளைத்தான் !

அப்போது தொல்காப்பியர் சொன்ன விடை ! :-

“இலமென் கிளவிக்குப் படுவரு காலை
நிலையலும் உரித்தே செய்யு ளான” (புள்ளிமயங்கியல் 21)

அஃதாவது , “வேற்றுமைப் புணர்ச்சி என்பதெல்லாம் சரிதான் ! ஆனால் , பாடல்களில் ‘இலப்படு’ என வராமல் , மெல்லெழுத்துச் சந்தி பெற்று ‘இலம்படு’ என்றுதான் வரும் ! செய்யுள் நடைக்கான ஒரு விதிவிலக்கு இது !” என்று விடை கூறினார் தொல்காப்பியர் !

============





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 05, 2013 1:03 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (69)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘ம்’ஈற்றுச் சொற்களின் புணர்ச்சி தொடர்கிறது !

‘ஆயிரம்’ – என்ற சொல்லைப் பிடித்துப் பேசுகிறார் தொல்காப்பியர் !:-

“அத்தொடு சிவணும் ஆயிரத் திறுதி
ஒத்த எண்ணு முன்வரு காலை” (புள்ளிமயங்கியல் 22)

இதற்கியைய இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !:-

ஆயிரம் + ஒன்று = ஆயிரத்தொன்று √
ஆயிரம் + ஒன்று = ஆயிரமே ஒன்று ×

ஆயிரம் + இரண்டு = ஆயிரத்திரண்டு √
ஆயிரம் + இரண்டு = ஆயிரமே இரண்டு ×

ஆயிரம் + மூன்று = ஆயிரத்து மூன்று √
ஆயிரம் + மூன்று = ஆயிரமே மூன்று ×

ஆயிரம் + நான்கு = ஆயிரத்து நான்கு √
ஆயிரம் + நான்கு = ஆயிரமே நான்கு ×

இங்கெல்லாம் , ‘அத்து’ச் சாரியை வந்துள்ளதைக் காண்க !

அஃதாவது , ஆயிரம் + அத்து + ஒன்று = ஆயிரத்தொன்று .

ஆயிரம் – எண்ணுப் பெயர்
அத்து – சாரியை
ஒன்று – எண்ணுப் பெயர்

என்ற முறையில் மேலைப் புணர்ச்சிகளை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும் !

இளம்பூரணர் இந்த இட்த்தில் தம் மாணவர்களுக்குச் சில நுணுக்கங்களைக் கற்றுத்தருகிறார் !

அந் நுணுக்கங்களை அவரது நடையில் படித்தால் யாருக்கும் விளங்காது ! எனவே , கீழ்வருமாறு அவற்றை விளக்கலாம் !:-

ஆயிரம் + குறை = ஆயிரத்துக் குறை √
ஆயிரம் + குறை = ஆயிரக் குறை ×

ஆயிரம் + கூறு = ஆயிரத்துக் கூறு √
ஆயிரம் + கூறு = ஆயிரக் கூறு ×

ஆயிரம் + முதல் = ஆயிரத்து முதல் √
ஆயிரம் + முதல் = ஆயிரமுதல் ×

வெறும் ‘ஆயிரம்’ என்ற சொல்லைக் கொண்டு புணர்ச்சி கூறினார் தொல்காப்பியர் ! ‘பதினாயிரம்’ என்று வந்தால் ? அப்போது ‘ஆயிரம்’ என்பதற்குக் கூறிய விதியே பொருந்துமா ?

நம் ஐயம் !

இதற்குத் தொல்காப்பியர் விடை ! :-

“அடையொடு தோன்றினும் அதனோ ரற்றே” (புள்ளிமயங்கியல் 23)

பதினாயிரம் + ஒன்று = பதினாயிரத் தொன்று
பதினாயிரம் + இரண்டு = பதினாயிரத் திரண்டு
பதினாயிரம் + குறை = பதினாயிரத்துக் குறை
பதினாயிரம் + கூறு = பதினாயிரத்துக் கூறு
பதினாயிரம் + முதல் = பதினாயிரத்து முதல்

‘அடை’ என்ற தொல்காப்பியர் சொல்லாட்சியைக்
கவனியுங்கள் !

ஒரு பெயர்ச்சொல்லுக்கு ‘அடை’வரலாம் என்பது ஈண்டுக் கருத்து !

இந்த ‘அடை’ என்பதைத்தான் ஆங்கிலத்தில் Adjective என்கின்றனர்! ; மொழியியலில் (Linguistics) ‘பெயரடை’ என எழுதுகின்றனர் ! அவ்வளவுதான் !

எனவே , ‘பெயரடை’ , மொழியியலார் (Linguists) கண்டுபிடிப்பல்ல ! தொல்காப்பியருக்கும் முந்தைய தமிழர் கண்டுபிடிப்புதான் !
‘ஆயிரம்’என்பதன் புணர்ச்சியை இதுவரை கூறியிருந்தாலும் அவற்றோடு முடிக்கத் தொல்காப்பியருக்கு மனமில்லை ! விட்டுப்போன ஒன்றைச் சேர்க்கிறார் ! :-

“அளவு நிறையும் வேற்றுமை யியல” (புள்ளிமயங்கியல் 24)

அஃதாவது , ‘கலம்’ போன்ற அளவுச் சொற்களும் , ‘கழஞ்சு’ போன்ற நிறைப் பெயர்களும் (எடை பற்றிய பெயர்களும் ) ‘ஆயிரம்’ என்பதோடு புணர்ந்தால் , வேற்றுமைப் புணர்ச்சியில் , மகரம் மறைந்து , வல்லெழுத்து மிகுந்து வரும் ! :-

ஆயிரம் + கலம் = ஆயிரக் கலம் √
ஆயிரம் + கலம் = ஆயிரத்துக் கலம் ×

ஆயிரம் + சாடி = ஆயிரச் சாடி √
ஆயிரம் + சாடி = ஆயிரத்துச் சாடி ×

ஆயிரம் + தூதை = ஆயிரத் தூதை √
ஆயிரம் + தூதை = ஆயிரத்துத் தூதை ×

ஆயிரம் + பானை = ஆயிரப் பானை √
ஆயிரம் + பானை = ஆயிரத்துப் பானை ×

ஆயிரம் + கழஞ்சு = ஆயிரக் கழஞ்சு √
ஆயிரம் + கழஞ்சு = ஆயிரத்துக் கழஞ்சு ×

ஆயிரம் + தொடி = ஆயிரத் தொடி √
ஆயிரம் + தொடி = ஆயிரத்துத் தொடி ×

ஆயிரம் + பலம் = ஆயிரப் பலம் √
ஆயிரம் + பலம் = ஆயிரத்துப் பலம் ×

ஆயிரம் + பானை = ஆயிரப் பானை √
ஆயிரம் + பானை = ஆயிரத்துப் பானை ×

இளம்பூரணர் இவ்விடத்தில் கூறியுள்ள கூடுதல் செய்தியால் , கீழ்வரும் புணர்ச்சிகளையும் பெறலாம் !:-

ஆயிரம் + நாழி = ஆயிர நாழி √
ஆயிரம் + நாழி = ஆயிரம் நாழி ×

ஆயிரம் + வட்டி = ஆயிர வட்டி √
ஆயிரம் +வட்டி = ஆயிரம் வட்டி ×

ஆயிரம் + அகல் = ஆயிர வகல் √
ஆயிரம் + அகல் = ஆயிரம் மகல் ×

- இம் மூன்று புணர்ச்சிகளிலும் ‘ம்’ கெட்டுள்ளதைக்
காணலாம் !

மேலே பார்த்தவை போன்று அளவுக்கும் நிறைக்கும் ‘ஆயிரம்’ புணர்ந்தது போன்றே , ‘பதினாயிரம்’ என்ற சொல்லும் புணரும் !
மேல் எடுத்துக்காட்டுகளில் வந்துள்ளவற்றில்,

கலம், சாடி, தூதை, பானை, நாழி, படி,வட்டி, அகல் - முகத்தல் அளவுப் பெயர்கள்.
கழஞ்சு , தொடி ,பலம் – நிறுத்தல் அளவுப் பெயர்கள் .

இவையெல்லாம் கற்பனையானவை என எண்ணவேண்டாம் !

‘கழஞ்சு’ – புறநானூற்றில் (11,12) வருகிறது ! (1/6 அவுன்சு எடை கொண்டது என்று குறித்துளர் .); பல தமிழ்க் கல்வெட்டுகளில் வருகிறது !

‘தொடி’ – திருக்குறளில் வந்துள்ளது !

1 வட்டி=1 நாழி = 1 படி ஆகும் !

பலம் , நாழி , படி ஆகியன எனது சிறுவயதில் புழக்கத்தில் இருந்தனையே ! பலசரக்குக் கடைகளில் திராட்சையை இத்தனை பலம் என்று அந்நாளில் விற்று நான் வாங்கியுள்ளேன் !

ஆகவே , தொல்காப்பியம் சில இலக்கணப் புலவர்களுக்கானதுதான் என எண்ணவேண்டாம்! தொல்காப்பியம் மக்களுக்கானது !

======




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 26, 2013 9:07 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (70)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப். (வடமொழி), பி.எச்டி.
சென்னை-33

மகர ஈற்றுப் புணர்ச்சியில் தொல்காப்பியரின் அடுத்த நூற்பாவைக் காண்போம் !

எல்லார் + கையும் = எல்லார் கையும்
-படர்க்கைப் பலர்பால் பெயருடன் நிகழ்ந்த புணர்ச்சி ; வேற்றுமைப் புணர்ச்சி .

எல்லீர் + கையும் = எல்லீர் கையும்
- இது முன்னிலைப் பலர்பால் பெயருடன் நிகழ்ந்த புணர்ச்சி ; வேற்றுமைப் புணர்ச்சி .

‘எல்லார் கையும்’ , ‘எல்லீர் கையும்’ என்பன தொல்காப்பியர் நாளையில் , ‘எல்லார் தங்கையும்’ , ‘எல்லீர் நுங்கையும்’ எனவும் வழங்கலாயின !

அப்போது தொல்காப்பியரின் மாணவர்கள், “ ‘தங்’ , ‘நுங்’ இடையிலே எப்படி வந்தன ? ” என்று கேட்டனர் !

அப்போது எழுதிய நூற்பாதான் –

“படர்க்கைப் பெயரு முன்னிலைப் பெயரும்
தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும்
வேற்றுமை யாயி னுருபிய நிலையும்
மெல்லெழுத்து மிகுத லாவயி னான” (புள்ளி மயங்கியல் 25)

“ ‘எல்லார் தங்கையும்’ , ‘எல்லீர் நுங்கையும்’ என்பன ‘எல்லாரும்’ என்ற பகுதியிலிருந்து வந்தன” - என்று கூறி வருமாறு விளக்கினார் :-

எல்லாரும் + கை = எல்லார் + தம் + கை + உம்= எல்லார் தங்கையும் .
(தம் – சாரியை ; உம் - சாரியை)

தொடர்களில் , ‘எல்லார் தங்கையும் சிறக்க’ , ‘எல்லார் தங்கையும் நன்றே’ என வரும் !

‘தம்’ இடையிலே வந்ததல்லவா ? இதனையே , ‘உருபுப் புணர்ச்சிக்குச் சாரியை வந்தது போல ’ என்று தொல்காப்பியர் கூறினார் ! ; ‘உருபியல் நிலையும்’ என்பதற்கு இதுவே பொருள் !

மேலே பார்த்த புணர்ச்சி ,வேற்றுமைப் புணர்ச்சிதான் எனினும் , ‘தம்’ சாரியை வந்தது உருபுப் புணர்ச்சியில் வந்தது போலாகும் ! ‘வேற்றுமையாயின் ’ என்ற தொல்காப்பியரின் தொடருக்கு இதுவே பொருள் !

உருபுப் புணர்ச்சிக்கும் வேற்றுமைப் புணர்ச்சிக்கும் உள்ள வேறுபாடு யாது ?

கடல் + கரை = கடற் கரை
- இதில் , ‘கடலினது கரை’ என்று ‘அது’ என்ற ஒரு வேற்றுமை உருபைப் போட்டு விரிக்க முடிவதால் , இது வேற்றுமைப் பொருட் புணர்ச்சி !

அஃதாவது , கடலிலிருந்து வேற்றுமைபட்ட கரை என்ற பொருளும் புணர்ந்துள்ளதால் ‘வேர்றுமைப் பொருட் புணர்ச்சி’ !

இவ்வாறு வேற்றுமைப் பொருள் புணராது , வெறும் வேற்றுமை உருபு மட்டும் புணர்ந்தால் அது ‘உருபுப் புணர்ச்சி’ !

கடல் + அது = கடலது
- இஃது உருபுப் புனர்ச்சி ! இங்கே “கடலது … என்ன” என்ற வினா,விடை கூறப்படாமல் நிற்பதைக் கவனியுங்கள் !

மேல் தொல்காப்பியர் நூற்பாவுக்கு இளம்பூரணர் தந்த சுருக்க வடிவ எடுத்துக்காட்டுகளை வருமாறு விரித்துத் தரலாம் !:-

எல்லார் + தம் + செவி+ உம் = எல்லார்தஞ் செவியும்
எல்லார் + தம் + தலை + உம் = எல்லார்தந் தலையும்
எல்லார் + தம் + புறம் + உம் = எல்லார்தம் புறமும்

மேலே ‘எல்லார்தங் கையும்’ வந்ததுபோன்றே , ‘எல்லீர்நுங் கையும்’ வரும் ! :-

எல்லீரும் = எல்லீர் (உ , ம் கெட்டன)
எல்லீர் + நும் + கை + உம் = எல்லீர்நுங் கையும்
நும் – சாரியை ; உம் – சாரியை .

எல்லீர் + நும் + செவி +உம் = எல்லீர்நுஞ் செவியும்
எல்லீர் + நும் + தலை + உம் = எல்லீர்நுந் தலையும்
எல்லீர் + நும் + புறம் + உம் = எல்லீர்நும் புறமும்

‘எல்லீரும் வருக ’ என்றால் , ‘நீங்கள் எல்லோரும் வருக’ என்பது பொருள் !

பின் , தொல்காப்பியர் ‘தாம்’ என்பதை எடுத்துக்கொள்கிறார் !:-

தாம் + கை = தம் +கை (‘தாம்’ , ‘தம்’ ஆகியது)
தம் + கை = தங்கை (sister அல்ல !)
நாம் + கை = நங்கை ( ‘நாம்’ , ‘நம்’ ஆகியுள்ளது)

யாம் + கை = எங்கை ( ‘யாம்’ , ‘எம்’ ஆகியுள்ளது)

‘தம்’ , ‘நம்’ ஆகிய சாரியைகள் பெறாமலும் புணரலாம் என்று விதிவிலக்குக் காட்டுகிறார் இளம்பூரணர் ! :-
எல்லாரும்+கை=எல்லார் கையும்√
எல்லாரும் + செவி =எல்லார் செவியும் √
எல்லாரும் + தலை = எல்லார் தலையும் √
எல்லாரும் + புறம் = எல்லார் புறமும் √

எல்லீரும் + கை = எல்லீர் கையும் √
எல்லீரும் + செவி = எல்லீர் செவியும் √
எல்லீரும் + தலை = எல்லீர் தலையும் √
எல்லீரும் + புறம் = எல்லீர் புறமும் √

மேல் தொல்காப்பிய நூற்பாவில் , ‘தொடக்கம்’ என்ற சொல் வந்ததை நோக்கவேண்டும் !

இந்நாளில் பலரும் ‘துடக்கம்’ , ‘துடங்கியது’ , ‘துடங்கிவைத்தார்’ என்றெல்லாம் எழுதுகின்றனர் ! தவறு இது !
‘தொடக்கம்’ , ‘தொடங்கியது’ , ‘தொடங்கிவைத்தார்’ என்றுதான் எழுதவேண்டும் !

‘எல்லாரும் ’ , ‘எல்லீரும்’ முதலியவற்றிற்கான வேற்றுமைப் புணர்ச்சிகளை மேலே பார்த்தோம் !
இவை அல்வழிப் புணர்ச்சியில் எப்படி வரும் ?

தொல்காப்பியர் விடை !:-

“அல்லது கிளப்பினும் இயற்கை ஆகும்” (புள்ளி மயங்கியல் 26)

அல்லது – அல்வழிப் புணர்ச்சி .

இயற்கை – இயல்பாகச் சாரியை பெறாது முடியும் .

எடுத்துக்காட்டுகள் :-

எல்லாரும் +குறியர் = எல்லாருங் குறியர் .
(புணர்ச்சியில் சாரியை வராவிடினும் , ‘ங்’ என்ற மெல்லெழுத்து வந்ததைக் காண்க .)

எல்லாரும் + சிறியர் = எல்லாருஞ் சிறியர்
எல்லாரும் + தீயர் = எல்லாருந் தீயர்
எல்லாரும் + பெரியர் = எல்லாரும் பெரியர்
எல்லாரும் + குறியீர் = எல்லீருங் குறியீர்
(முன்னிலை விளியாதலின் , ‘குறியர்’ என வராது ‘குறியீர்’ என வந்தது.)

எல்லீரும் + சிறியீர் = எல்லீருஞ் சிறியீர்
எல்லீரும்+ தியீர் = எல்லீருந் தீயீர்
எல்லீரும் + பெரியீர் = எல்லீரும் பெரியீர்

நாம் + குறியம் = நாங் குறியம்
( ‘தாம்’ என்பது வேற்றுமைப் புணர்ச்சியில் ‘தம்’ ஆனதுபோல , அல்வழிப் புணர்ச்சியில் ஆகவில்லை)
நாம் + தீயம் = நாந் தீயம்
நாம் + பெரியம் = நாம் பெரியம்
யாம் + குறியேம் = யாங் குறியேம்
( ‘குறியம்’ – பேசுவோர்களையும் முன்னால் இருப்பவர்களையும் சேர்த்துக் குறிக்கும்;
‘குறியேம்’ – பேசுவோர்களை மட்டும் குறிப்பது;
இதை வைத்துத்தான் திவ்வியப் பிரபந்த உரைகளில் ‘அடியேங்கள்’ என்ற சொல் வரலாயிற்று !
‘அடியேங்கள்’ – அடியவர்களாகிய நாங்கள் .)

யாம் + சிறியேம் = யாஞ் சிறியேம்
யாம் + தீயேம் = யாந் தீயேம்
யாம் + பெரியேம் = யாம் பெரியேம்

ஈண்டு , இளம்பூரணர் மேலும் சில எடுத்துக் காட்டுகளைத் தருகிறார் !:-

எல்லாரும் + நீண்டார் = எல்லாருந் நீண்டார்
எல்லாரும் + நீண்டீர் = எல்லாருந் நீண்டீர்
எல்லாரும் + நீண்டாம் = எல்லாருந் நீண்டாம்
எல்லாரும் + நீண்டேம் = எல்லாருந் நீண்டேம்

இந்தவகைச் சொற்கள் எல்லாம் இன்று வழக்கில் இல்லை !

சற்று வேறுபாடான காரண காரிய இயைபு (Logic) குறைந்த புணர்ச்சிகள் தமிழில் மறைந்த வரலாறு இது !

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 26, 2013 11:00 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (71)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப். (வடமொழி), பி.எச்டி.
சென்னை-33


மகர இறுதிச் சொற்களின் புணர்ச்சியில் ‘எல்லாம்’ எனும் சொல்லை அடுத்ததாக எடுத்துக்கொள்கிறார் தொல்காப்பியர் !

‘எல்லாம்’ எனும் சொல் சற்று வேறுபாடானது !

மனிதர்கள் எல்லாம் வந்தனர் √
மடுகள் எல்லாம் வந்தன √

மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் பொதுவாக ‘எல்லாம்’ வருகிறது பார்த்தீர்களா ?

இவ்வாறு மனிதர்களுக்கும் , விலங்கு இயற்கைகளுக்கும் பொதுவாக வரும் சொல்லை , ‘விரவுச் சொல்’ என்று தமிழில் குறிப்பார்கள் !

தொல்காப்பியர் ‘எல்லாம்’ எனும் விரவுச் சொல்லின் புணர்ச்சியை ,

“அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
எல்லா மெனும்பெயர் உருபியல் நிலையும்
வேற்றுமை அல்வழிச் சாரியை நிலையாது” (புள்ளி மயங்கியல் 27)
என்கிறார் !

இளம்பூரணர் இதற்குக் காட்டும் எடுத்துக்காட்டுகளை வருமாறு விரித்துக் காட்டலாம் ! :-

எல்லாம் + குறியர் = எல்லாக் குறியரும் (உயர் திணை)
எல்லாம் + குறிய = எல்லாக் குறியவும் (அஃறிணை)

எல்லாம் + தீயர் = எல்லாத் தீயரும் (உயர் திணை)
எல்லாம் + தீய = எல்லாத் தீயவும் (அஃறிணை)

எல்லாம் + பெரியர் = எல்லாப் பெரியரும் (உயர் திணை)
எல்லாம் + பெரிய = எல்லாப் பெரியவும் (அஃறிணை)

- இவை அனைத்தும் அல்வழிப் புணர்ச்சிகள் !

எல்லாம் + கோடு = எல்லாவற்றுக் கோடும் (அஃறிணை)
= எல்லாம் + வற்று + கோடு + உம் ; வற்று , உம் – சாரியைகள் .

எல்லாம் + செவி = எல்லாவற்றுச் செவியும் (அஃறிணை)
எல்லாம் + தலை = எல்லாவற்றுத் தலையும்(அஃறிணை)
எல்லாம் + புறம் = எல்லாவற்றுப் புறமும் (அஃறிணை)

- இவை அனைத்தும் வேற்றுமைப் புணர்ச்சிகள் !

அடுத்த நூற்பாவில் ,

“மெல்லெழுத்து மிகினு மான மில்லை” (புள்ளி மயங்கியல் 28)

என்று தொல்காப்பியர் நவின்றதற்கு இளம்பூரணர் தந்த காட்டுகள் !:-

எல்லாம் + குறிய = எல்லாங் குறியவும் √
(சாரியை இலாது புணர்ந்துள்ளதை நோக்குக)

எல்லாம் + சிறிய = எல்லாஞ் சிறியவும் √
எல்லாம் + தீய = எல்லாந் தீயவும் √
எல்லாம் + பெரிய = எல்லாம் பெரியவும் √
எல்லாம் + குறியர் = எல்லாங் குறியரும் √
எல்லாம் + பெரியர் = எல்லாம் பெரியரும் √
எல்லாம் + தீயர் = எல்லாந் தீயரும் √

- இவை அனைத்தும் அல்வழிப் புணர்ச்சிகள் !

‘எல்லாம் பெரியரும்’ என்பதில் ஈற்று ‘உம்’ சாரியை என்றே உரையாசிரியர்களால் காட்டப்பட்டுள்ளது .

இதனை உறுதிப்படுத்தும் வகையில் , இளம்பூரணர் உரை , “உரையிற் கோடல் என்பதனால் இறுதி ‘உம்’மின்றி ‘எல்லாங் குறிய ’ , ‘எல்லாங் குறியர்’ எனவும்படும் ” என அமைகிறது .

அஃதாவது , ‘எல்லாங் குறிய’ என்பதே கூற வந்த செய்தி ! ‘எல்லாக் குறியவைகளும்’ என்பது கூறவந்த செய்தி அல்ல ! ‘எல்லாக் குறியவைகளும்’ என்பது கூறவந்த செய்தியானால் ஈற்று ‘உம்’ , முற்றும்மை ஆகும் ! அப்போது ஈற்று ‘உம்’ சாரியை ஆகாது !
தொல்காப்பியர் நவின்ற ‘எல்லாரும்’ , ‘எல்லாம்’ பற்றிய நுட்பங்களில் பல நமக்கு இன்று நெருக்கமில்லாதவை ! அவற்றை விளங்கிக்கொள்ள மேலே பார்த்த இளம்பூரணர் உரை ஓரளவிற்கு உதவுகிறது !

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 26, 2013 2:02 pm



தொடத் தொடத் தொல்காப்பியம் (72)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப். (வடமொழி), பி.எச்டி.
சென்னை-33

அரசு அலுவலகங்களில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காகக் குறிப்பாணை (Memo) தருவார்கள் !
அதில் உள்ள வாசகங்கள் சுவையாக இருக்கும் !

“உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது ?” என்ற வினாவை இதே மாதிரி எழுதமாட்டார்கள் ! “உம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது ? ” என்று ‘உம்’போட்டு எழுதுவார்கள் !

‘உங்கள்’ என்ற மதிப்புத் தரும் சொல்லைத் தவிர்த்து , ‘உம்’ என்ற மதிப்புக் குறைவான சொல்லைப் போட்ட வரலாற்றைக் குடைந்தால் , அது தொல்காப்பியத்தில் , மகர ஈற்றுப் புணர்ச்சி பற்றிய ஒரு நூற்பாவில் போய் முடிகிறது!

அந் நூற்பா !:-

“நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே” (புள்ளி மயங்கியல் 30)

இந்த ‘நும்’ , ஒரு விரவுப் பெயர் என்று நமக்குத் தெளிவு படுத்துபவர் இளம்பூரணரே !

இளம்பூரணரின் சுருக்க எடுத்துக்காட்டுகளை நாம் வருமாறு விரித்துக்கண்டால் தொல்காப்பிய நூற்பா விளங்கும் ! :-

நும் + கை = நும்கை ×
நுங்கை √

நும் + செவி = நும் செவி ×
நுஞ் செவி √

நும் + தலை = நும் தலை ×
நுந் தலை √

நும் + புறம் = நுப் புறம் ×
நும் புறம் √

- இவை யாவுமே வேற்றுமைப் புணர்ச்சிகள்தாம் !

இவற்றில் வந்த ‘நும்’ ஓர் விரவுப் பெயர் என முன்பே பார்த்தோம் !

அஃதாவது , ஒரு மனிதனைப் பார்த்து , ‘நும் காது’ என்று சொல்லலாம் ; ஒரு மாட்டைப் பார்த்து , ‘நும் காது’ எனவும் சொல்லலாம் ! “ மாடு புரிந்துகொள்ளுமா ? ” என்று கேட்காதீர்கள் ! விலங்குகளைப் பார்த்துப் பேசுவதும் பாடுவதும் தமிழில் ஒரு மரபுதான் ! “தாரா தாரா வந்தாரா ? அவர் சங்கதி ஏதும் சொன்னாரா ?” என்று தாராவைக் (தாரா- வாத்து) கேட்பது போன்ற பாட்டை நாம் அறிவோம் ! தராவுக்கு அக் கேள்வி புரிந்ததா ?

இளம்பூரணர் உரை முடிவில் , “ஒன்றின முடித்தல் என்பதனால் , ‘உங்கை’ என ‘உம்’ என்பதன் முடிபும் இவ்வீறாகக் கொள்க !” என்று எழுதுகிறார் !

இதில்தான் நாம் கட்டுரைத் தொடக்கத்தில் தேடிய வரலாறு நிற்கிறது !

அஃதாவது , ‘உம்’ என்பதும் ‘எல்லாம்’ , ‘நும்’ என்பன போன்ற ஓர் விரவுப் பெயர்தான் என்பது இளம்பூரணர் உரையால் அறிய முடிகிறது !

அறியப்படவேதான் , ‘உம்’ என்பது மனிதனுக்கும் எழுதலாம் , விலங்குக்கும் எழுதலாம் என்பது விளங்குகிறது ! அப்போதுதான் , குறிப்பாணைகளில் இந்த விரவுச் சொல்லான ‘உம்’மைத் தேர்ந்தெடுத்து , ‘உங்கள் மீது’ என எழுதாமல் ‘உம் மீது’ என்று எழுதிய மர்மமும் விளங்கியது !

‘நும்’ என்பதன் இனமாகவே ‘உம்’மும் உள்ளதால் , ‘ஒன்றினம் முடித்தல்’ என்ற உத்தியைப் பாய்ச்சுகிறார் இளம்பூரணர் !
பொருள் கொள்ளும் உத்திகளில் (Techniques) , ‘ஒன்றினம் முடித்தல்’ என்பதும் ஒன்று !

அஃதாவது , ஓர் இனத்தின் ஓர் உறுப்புக்குப் பொருந்தும் உண்மை , அதே இனத்து இன்னோர் உறுப்புக்கும் பொருந்தும் என்பதே இந்த உத்தியின் அடிப்படை !

இலக்கணம் கூறுவதில் மட்டும்தான் உத்திகள் என்று நினைக்காதீர்கள் ! உரைகளிலும்தான் உத்திகள் !

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 26, 2013 2:33 pm



தொடத் தொடத் தொல்காப்பியம் (73)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப். (வடமொழி), பி.எச்டி.
சென்னை-33

‘நீங்கள் குட்டையானவர்கள்’ – இன்றைக்கு எழுதுகிறோம்; சிக்கல் இல்லை !

ஆனால் , தொல்காப்பியருக்கு முந்தைய தமிழில் இதனையே , ‘நீயிர் குறியீர்’ எனவும் குறிக்கும் பழக்கம் இருந்தது !

இதிலுள்ள ‘நீயிர்’ என்பது எப்படி வந்தது ?

‘நும்’ என்பதிலிருந்து வந்தது - தொல்காப்பியர் விடை !

‘நும்’ என்பதிலிருந்து ‘நீயிர்’ எப்படி வருமாம் ?

இப்படியாம் !:-

நும் – உகரம் கெட – ந்ம்
ந்ம்- ஈ வர – நீஇம்
நீஇம்- ம் கெட – நீஇ
நீஇ – ரகர மெய் வர – நீஇர்
நீஇர் – யகர உடம்படுமெய் வர – நீயிர்

பிறகு ?

பிறகு , நீயிர் + குறியீர் = நீயிர் குறியீர் ஆகும் !

இஃது அல்வழிப் புணர்ச்சி !

இவ்வாறே ,

நீயிர் + சிறியீர் = நீயிர் சிறியீர்
நீயிர் + தீயீர் = நீயிர் தீயீர்
நீயிர் + பெரியீர் = நீயிர் பெரியீர்

என வரும் என்கிறார் இளம்பூரணர் !

ஓலைச் சுவடிகளில் தொல்காப்பியர் காலத்து மாணவர்கள் ‘நீயிர் பெரியீர் ’ என்பதைச் சரியாக எழுதாது விருப்பப்படி மாற்றி மாற்றி எழுதியிருப்பர் ! அதனைத் திருத்திச் செம்மைப் படுத்தவே தொல்காப்பியர் மறக்காமல் மேலைக் கருத்தை உள்ளடக்கிக் கீழ்வரும் நூற்பாவை எழுதினார் !:-

“அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை
உக்கெட நின்ற மெய்வயின் ஈவர
இஇடை நிலைஇ ஈறுகெட ரகரம்
நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே
ப்பால் மொழிவயின் இயற்கை யாகும்”
(புள்ளிமயங்கியல் 31)

இந் நூற்பாவிற்கு , இளம்பூரணர் நாம் மேலே பார்த்த எடுத்துக்காட்டுகளை எழுதிவிட்டு , “ஞான்றீர், நீண்டீர், மாண்டீர் என இயல்பு கணத்தோடும் ஒட்டுக” என்று முடித்தார் !

இதன் பொருள் ?

வன் கணம் அல்லாத ஏனை மூன்று கணங்களும் இயல்புக் கணங்களே !

அஃதாவது , க,ச,ட,த,ப என்ற ஐந்து வல்லெழுத்துகளே வன்கணம் !
ஏனை , உயிர் எழுத்துகள், மெல்லெழுத்துகள், இடையின எழுத்துகள் ஆகிய மூன்றும் இயல்புக்கணம் !

இளம்பூரணர் காட்டிய ஞான்றீர், மாண்டீர் , நீண்டீர் ஆகிய மூன்று சொற்களும் இயல்புக் கணங்களில் ஒன்றான மெல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களே !

இளம்பூரணர் ஒட்டச் சொன்னபடி ஒட்டினால் ,

நீயிர் + ஞான்றீர் = நீயிர் ஞான்றீர்
நீயிர் + மாண்டீர் = நீயிர் மாண்டீர்

என வரும் !

இம் மூன்றும் அல்வழிப் புணர்ச்சிகளே !

இடையே சந்தி விகாரம் எதுவும் ஏற்படவில்லை கவனிக்க

‘நீயிர்’ என்பது ‘நும்’மிலிருந்து வந்ததாகத் தொல்காப்பியர் கூறினாரல்லவா ?

இதனை இன்றைய மொழியிலாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை ! “ஏன் சுற்றிவளைத்து ? நீ + இர் = நீயிர் என்று சொல்லவேண்டியதுதானே ?” என்பது அவர்களுடைய வாதம் !

மொழியியலார் வாதம் , ‘நீயிர்’ வந்த பிறகு கூறப்படும் இலக்கணம் ! தொல்காப்பியர் , ‘நீயிர்’ வருவதற்கு முன்பிருந்த தமிழிலிருந்தல்லவா கொண்டுவரக் கடமைப்பட்டவர் ? அதனால்தான் இருவேறு வாதங்கள் !

தவிர்க்க முடியாதவை இவை !
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 11 of 84 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 47 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக