புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 9:52 am

First topic message reminder :

கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் பணியாற்றிய போது எழுதிய தொடர் நாவல் 'கள்வனின் காதலி'. இது ஒரு சமூக நாவலாகும். உலகில் உறுதியானது, உண்மையானது, அழிவில்லாதது ஒன்று உண்டு; அது அன்பு. தீய செயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல் என்ற கருத்தினை இந் நாவல் விளக்குகிறது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 11:36 am

50.நள்ளிரவு


ராயவரம் தாலுகா கச்சேரியையடுத்துள்ள ஸப்-ஜெயிலுக்கு இரவு நேரத்தில் சாதாரணமாய் இரண்டு போலீஸ்காரர்கள் தான் பாரா கொடுப்பது வழக்கம். அவர்களே தான் தாலுகா கச்சேரி 'டிரஷரி'க்கும் காவலர்கள். ஆனால் இன்றிரவு முப்பது போலீஸ்காரர்கள் காவல் புரிந்தார்கள்.

கச்சேரியை அடுத்து கீழ்ப்புறத்தில் ஒரு பெரிய முற்றம் இருந்தது. அந்த முற்றத்தின் தெற்குப் பக்கமும் கீழ்ப்புறமும் 'ட' மாதிரி அமைந்த தாழ்வாரம் இருந்தது. தாழ்வாரத்தையொட்டி, தெற்கே மூன்று அறைகளும் கிழக்கே மூன்று அறைகளும் இருந்தன. சர்க்கார் கட்டிடங்களுக்கு என்று ஏற்பட்ட ஒருவித வாசனை கமகமவென்று அங்கே வந்து கொண்டிருந்தது. அதில் தா ர் வாசனையும், 'பினைல்' வாசனையும் அதிகம் இருந்தனவாயினும், மற்றும் எத்தனையோ தினுசு தினுசான வாசனைகளும் கலந்து வந்து கொண்டுதானிருந்தன.

சப் ஜெயிலில் கீழ்ப்புறத்து அறைகளில் ஒன்றில் முத்தையன் அடைக்கப்பட்டிருந்தான். அவனை அங்கே கொண்டு வந்து சேர்த்ததும், சர்க்கார் ஆஸ்பத்திரியின் பெரிய டாக்டர் தமது கம்பவுண்டருடன் வந்து, அவனுடைய காயங்களையெல்லாம் நன்றாய்க் கட்டிவிட்டுப் போனார். முத்தையன் எப்படியாவது பிழைக்க வேண்டும். அவன் மேல் கேஸ் நடத்தித் தண்டனைக் குள்ளாக்க வேண்டுமென்ற ஆவல் போலீஸ் மேலதிகாரிகளுக்கு ரொம்பவும் தீவிரமாக இருந்தது. ஆனால் டாக்டர் அவர்களுக்கு இவ்விஷயத்தில் அதிக நம்பிக்கை கொடுக்கவில்லை. "நான் செய்ய வேண்டியதைச் செய்கிறேன், பிழைத்தால் போலீஸாரின் அதிர்ஷ்டந்தான்" என்று சொல்லிவிட்டார்.

டாக்டர் திரும்பிப் போகுந் தறுவாயில், ஸர்வோத்தம சாஸ்திரி அவரை ஒரு கேள்வி கேட்டார்: "இனிமேல் ஒரு தடவையாவது பிரக்ஞை வருமா, வரவே வராதா?" என்று. "ஓ! பிரக்ஞை வரும். இன்று நடுநிசி சுமாருக்கே பிரக்ஞை வந்தாலும் வரும். ஆனால் அவனிடம் யாரும் அதிகம் பேச்சுக் கொடுக்கக் கூடாது" என்றார் டாக்டர்.


*****

சப் ஜெயிலில் தென்புறத்துத் தாழ்வாரத்தையொட்டி இருந்த அறைகளில் ஒன்றில் குறவன் சொக்கன் அடைக்கப்பட்டிருந்தான். அவனுடன் பேசிக் கொண்டிருந்தார் ஸர்வோத்தம சாஸ்திரி.

அன்றிரவு சாஸ்திரி தூங்கவேயில்லை. இந்தக் கேஸில் ஆரம்ப முதல் சிரத்தை கொண்டவராதலாலும், கடைசியில் முத்தையனைப் பிடித்தவரும் அவரே ஆதலாலும், கைதிக்குப் பக்கத்திலேயே இருக்கவும், அவனுக்கு ஸ்மரனை வரும்போது அவசியமான விசாரணை செய்யவும் சாஸ்திரிக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. முத்தையனுக்கு ஸ்மரணை வருவதற்குள்ளே, குறவன் சொக்கனிடம் சில விஷயங்களைக் கேட்க வேணுமென்று அவர் விரும்பினார்.

குறவன் சொக்கன் முன்னமேயே பிடிபட்டு விட்டானாயினும், அவனை எவ்வளவோ பாடுபடுத்தியும், முத்தையனைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்ல மாட்டேனென்று ஒரே பிடிவாதமாயிருந்தான். இதனால் அவன் பேரில் சாஸ்திரிக்கு ஒருவித மதிப்பு கூட ஏற்பட்டிருந்தது. இப்போது முத்தையன் பிடிபட்டுவிட்டபடியால் சொக்கன் தனக்குத் தெரிந்ததைச் சொல்வானென்று நினைத்தது சரியாய் இருந்தது. முத்தையன் படுகாயமடைந்துவிட்டான் என்றும், அவன் பிழைப்பது துர்லபம் என்றும் அறிந்த போது சொக்கன் கண்ணீர் விட்டுச் சிறு பிள்ளையைப் போல் அழுது விட்டான். அப்புறம், சாஸ்திரி கேட்ட கேள்விகளுக்குத் தனக்குத் தெரிந்த வரையில் பதில் சொன்னான். முதல் முதலில், திருப்பரங்கோயில் போலீஸ் லாக்-அப்பில் முத்தையன் அடைபட்ட அன்றிரவு நடந்ததெல்லாம் சொக்கனுக்குத் தவிர வேறு யாருக்கும் தெரியாதல்லவா? முத்தையனைத் தன்னுடன் தப்பித்து வரச் சொன்னபோது முதலில் அவன் மறுத்ததையும், பிறகு அவன் காவல் புரிந்த போலீஸ் சேவகனிடம் அபிராமியைப் போய்ப் பார்த்துவிட்டு வர அநுமதி கேட்டதையும், அதற்கு அந்தச் சேவகன் கூறிய துர்மொழியையும், அதன் பிறகே தன்னுடைய யோசனைக்கு முத்தையன் இணங்கியதையும் சொக்கன் சொன்ன போது, சாஸ்திரிக்கே கண்ணில் ஜலம் வந்து விட்டது. "ஐயோ! எப்படிப்பட்ட நல்லபிள்ளை! நெடுகிலும் பிறருடைய குற்றங்களினாலும் தவறுகளினாலும் அல்லவா இவன் இப்படிப்பட்ட துர்க்கதிக்காளாக நேர்ந்தது? உலகத்துக்கு இந்த உண்மையெல்லாம் எங்கே தெரியப் போகிறது? தெரிந்தால் தான் என்ன பிரயோஜனம்! உயிரற்ற இரக்கமற்ற சட்டம் இவனை மன்னிக்குமா?" என்று எண்ணி எண்ணிப் பெருமூச்சு விட்டார்.


*****

நள்ளிரவு. வழக்கம்போல் பாராச் சேவகன் டங், டங் என்று 12-மணி அடித்தான். மணி அடித்து முடிந்ததும் மறுபடியும் நிசப்தம் குடிகொண்டது.

முத்தையன் தான் எங்கேயோ அதல பாதாளத்திலிருந்து மேலே மேலே வந்து கொண்டிருப்பதாக எண்ணினான். 'ஓகோ! தூங்கியல்லவா போய் விட்டோ ம்?' என்று ஒரு கணம் நினைத்தான். 'இது என்ன மணிச் சத்தம் கேட்கிறது? கோயிலில் உச்சிவேளை பூசை நடக்கிறதாக்கும்? ஆனால் ஏன் கல்யாணி இன்னும் வரவில்லை...?"

முத்தையனுடைய கண்கள் திறந்து கொண்டன. சுற்றுமுற்றும் பார்த்து விழித்தன. 'ஓ! இது கொள்ளிடக் கரையில்லை; பாழடைந்த கோயிலுமில்லை.' முதல் நாள் மத்தியானம் நடந்ததெல்லாம் ஒவ்வொன்றாய் ஞாபகம் வந்தது. சரி, சரி, இது ஜெயில்! ஆஸ்பத்திரிகளில் அவன் பார்த்திருப்பது போன்ற கட்டிலொன்றில் அவன் கிடந்தான். கால் கட்டு கைகட்டை யெல்லாம் அவிழ்த்தாகி விட்டது. ஆனாலும் கால்களை அசைக்க முடியவில்லை. அவ்வளவு பலஹீனமாயிருந்தது. கொஞ்சங் கொஞ்சமாக உடம்பெல்லாம் வலி தெரிய ஆரம்பித்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் டக், டக் என்று யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. வேறு யாருமில்லை ஸப் இன்ஸ்பெக்டர் சாஸ்திரிதான். கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார். முத்தையன் எழுந்திருக்க முயன்றான்; முடியவில்லை. அம்முயற்சியினால் உடம்பில் ஏற்பட்ட வலி முகத்தில் பிரதிபலித்தது.


*****

சாஸ்திரி அவன் அருகில் சென்று கருணை ததும்பிய குரலில், "முத்தையா! இனி தப்பிக்கலாம் என்ற ஆசையையெல்லாம் விட்டுவிடு. உன் காலம் நெருங்கிவிட்டது. யாருக்காவது ஏதாவது சமாசாரம் தெரிவிக்க வேண்டுமென்றால் சொல்லு. அல்லது யாரையாவது பார்க்க வேண்டுமென்றாலும் சொல்லு; முடியுமானால் அவர்களை வரவழைக்கிறேன்" என்றார்.

முத்தையன் சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தான். அந்த மனுஷர் சொன்னது வாஸ்தவந்தான். தன்னுடைய அந்திம காலம் நெருங்கி விட்டது; அதனால் தான் அவ்வளவு பலஹீனமாயிருக்கிறது போலும்!

"கல்யாணியைப் பார்க்க வேணும்" என்று முத்தையன் முணுமுணுத்தான்.

"யாரை?" என்று சாஸ்திரி வியப்புடன் கேட்டார்.

"பூங்குளம் கல்யாணியை; திருச்சிற்றம்பலம் பிள்ளையின் மகளை" என்றான்.

சாஸ்திரி சற்றுத் தயங்கி, "அபிராமியைப் பார்க்க விரும்புவாயென்று நினைத்தேன்" என்றார்.

முத்தையனுடைய முகத்திலும் கண்ணிலும் ஆர்வம் ததும்பிற்று.

"என்ன? அபிராமியென்றா சொன்னீர்கள்?"

"ஆமாம்!"

"அபிராமியை உங்களுக்குத் தெரியுமா? எப்படித் தெரியும்?"

"திருப்பரங்கோயிலில் என்னுடைய வீட்டிலேதான் அவள் சில நாள் தங்கியிருந்தாள். என்னுடைய சம்சாரந்தான் அவளைப் பட்டணத்தில் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தது."

முத்தையன் கண்களில்தான் என்ன பிரகாசம்! என்ன மகிழ்ச்சி!

"ஐயா! இன்று என்னைப் பிடித்தது நீங்கள் தானே?" என்றான்.

"ஆமாம் அப்பா! என்ன செய்யலாம்? சட்டம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?"

"நான் என்றைக்காவது பிடிபட்டால், உங்கள் கையில் பிடிபடவேண்டுமென்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். அந்தக் கீர்த்தி உங்களுக்குத்தான் வரவேண்டுமென்று ஆசைப்பட்டேன். பகவான் என்னுடைய மனோரதத்தை நிறைவேற்றினார். உங்களுக்கு நான் வேறு என்ன கைம்மாறு செய்ய முடியும்?" என்றான் முத்தையன்.

சாஸ்திரியின் கண்களில் அன்று மறுபடியும் ஒரு தடவை கண்ணீர் துளிர்த்தது.

"தம்பி! நீ அதிகம் பேசக்கூடாது. அபிராமிக்கு வேண்டுமானால் தந்தியடிக்கிறேன். அவள் வரும் வரையில் நீ உயிரோடிருந்தால் அதிர்ஷ்டந்தான்" என்றார்.

"சரி அப்படியே செய்யுங்கள். ஆனால் நான் கல்யாணியைப் பார்க்க வேண்டுமென்றுதான் சொன்னேன். ஐயோ! எனக்கு ஸ்மரணை இருக்கும்போது அவளை நான் பார்ப்பேனா?" என்றான் முத்தையன்.

"ஆகட்டும், அவளையும் தருவிக்கிறேன். நீ அமைதியாயிரு" என்று சொல்லிவிட்டுச் சாஸ்திரி வெளியே சென்றார். பாராக்காரன் கதவைப் பூட்டினான்.


*****

முத்தையன் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டான். தலையைச் சுற்றுவது போலிருந்தது. மயக்கமாய் வந்தது. அந்த அரை மயக்கத்தில் அவன் காதில் பின் வரும் பேச்சு விழுந்தது.

"சங்கதி என்னவென்று தெரியாதோ! உனக்கு? பூங்குளத்திலே இவனுக்கு ஆசைநாயகி ஒருத்தி இருந்தாளாம். அவள் தான் இவனைக் காட்டிக் கொடுத்துட்டாளாம். சாஸ்திரியார் அதை மறைச்சு, தானே திருடனைக் கண்டு பிடுச்சுட்டது போல் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார். அந்தப் பெண் மட்டும் துரோகம் பண்ணாவிட்டால், இவனையாவது, பிடிக்கிறதாவது?"

"உலகத்திலேயே பொம்பிளையால் கெடறவங்க தானே அதிகம்! தெரியாமலா பெரியவங்க 'இந்திரன் கெட்டதும் பெண்ணாலே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே!' என்று பாடியிருக்காங்க?"

பாராச் சேவகர்கள் பேசிக்கொண்ட இந்த வார்த்தைகள் முத்தையன் காதில் விழுந்தபோது, அவனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. அடுத்த கணம் அவன் மறுபடியும் பிரக்ஞை இழந்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 11:42 am

51.காலைப் பிறை


முத்தையன் பிடிபட்ட அன்றிரவைச் சிவராத்திரியாகக் கழித்தவர்கள் பலர் இருந்தனர். அவர்களில் கல்யாணி ஒருத்தி என்று சொல்லவும் வேண்டுமோ?

பொய் மயமான இந்த உலகத்தில், எந்த ஒன்றை அழிவில்லாத உண்மை என்று கல்யாணி எண்ணியிருந்தாளோ, அது இன்று பொய்யாய்ப் போய்விட்டதை அவள் கண்டாள். துன்பமயமான இந்த வாழ்க்கையை எந்த ஒரு இன்பத்தைக் கருதி அவளால் சகித்துக் கொண்டிருக்க முடிந்ததோ, அந்த இன்பம் வெறும் மாயக் கனவு என்பதை அவள் அறிந்தாள். முத்தையனுடைய காதல் பொய்யாய்ப் போய்விட்டது! அவனுடன் தான் இன்ப வாழ்க்கை நடத்துவதைப் பற்றிக் கட்டியிருந்த ஆகாயக் கோட்டையெல்லாம் சிதறி விழுந்தன. ஆஹா! இத்தனை காலமும் கானல் நீரையல்லவா தேடியலைந்து கொண்டிருந்தோம்? என்ன பேதமை!

அன்று சாயங்காலம் அவளுடைய காதில் விழுந்த ஊரார் பேச்செல்லாம் ஒவ்வொன்றாய் ஞாபகம் வந்தது. திருடன் பிடிபட்டதன் காரணத்தைப் பற்றி இரண்டு மூன்று விதமான வதந்திகள் பரவியிருந்தன. "இந்தப் பக்கத்தில் யாரோ ஒரு பெண் பிள்ளை அவனுக்குச் சிநேகமாம். அவள் தான் பரிசுத் தொகைக்கு ஆசைப்பட்டு அவனைக் காட்டிக் கொடுத்து விட்டாளாம்" என்று ஒரு வதந்தி. "அதெல்லாம் இல்லை; போலீஸாரே ஒரு அழகான தாஸியைப் பிடித்து அனுப்பி முத்தையன் அவளுடைய மோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது பிடித்து விட்டார்களாம்!" என்று இன்னொரு வதந்தி. படுகைக்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடைப் பையன் ஒருவன் காட்டு வழியாக ஒரு பெண் பிள்ளை-ரொம்ப அழகான பெண் பிள்ளை போனதைப் பார்த்ததாகச் சொன்னதன் பேரில் இம்மாதிரி வதந்திகள் எல்லாம் கிளம்பியிருந்தன.

கல்யாணி அன்று மத்தியானம் கொள்ளிடத்துக்குப் போய் குளிக்காமல் திரும்பி வந்த சமாசாரம் ஊரில் எல்லோருக்கும் தெரியுமாதலால், அவளிடம் திருடன் பிடிபட்ட விருத்தாந்தத்தைப் பற்றிப் பேசுவதற்காகவே பலர் வந்தார்கள். முத்தையனுக்குக் கல்யாணியைக் கொடுப்பதாக முன் ஒரு பேச்சு இருந்தபடியால் அவளுடன் இதைப் பற்றி வம்பு வளர்ப்பதில் அவர்களுக்கு ஒரு சுவாரஸ்யம். ஆனால் கல்யாணியோ தான் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல், அவர்கள் சொல்வதையெல்லாம் மட்டும் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.


*****

இரவு தூக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்த போது மேற்சொன்னதெல்லாம் கல்யாணிக்கு நினைவு வந்தது. வதந்திகளுக்கும் உண்மைக்கும் எவ்வளவு நெருங்கிய சம்பந்தம் என்பதை எண்ணி அவள் திகில் அடைந்தாள். கோர்ட்டு விசாரணையின்போது ஒரு வேளை தன்னுடைய இரகசியம் வெளியாகி விடுமோ? முத்தையனைக் காட்டிக் கொடுத்தது இவள் தான் என்று தெரிந்து விடுமோ? அந்தப் பிராமணன் பரிசு தனக்கே வேண்டுமென்று ஆசைப்பட்டு ஒரு வேளை வெளியிடாமலிருக்கலாம். ஒரு வேளை அவன் சொல்லிவிட்டானானால்! - அது முத்தையனுக்கு தெரிந்து போய்விடுமே!

"அவனுக்குத் தெரிந்தால் என்ன?" என்று கல்யாணி எண்ணமிட்டாள். உண்மையில் அவனுக்குத்தான் முக்கியமாகத் தெரியவேணும். அந்தப் பாவி தனக்குச் செய்த துரோகத்துக்கு தான் ஏன் அப்படிப் பழிவாங்கக் கூடாது? ஆமாம், விசாரணை நடக்கும் போது கோர்ட்டுக்கே போய், "நான் தான் முத்தையன் இருக்குமிடம் சொன்னேன்; எனக்குக் கொடுங்கள் பரிசை!" என்று கேட்கலாம். முத்தையன் கைதிக் கூண்டில் நிற்கும்போது அம்மாதிரி போய்க் கேட்க வேண்டும். அப்போது அவன் முகம் எப்படியிருக்கும்?

ஆனால் அவன் அதுவரை உயிரோடிருப்பானா? இப்போதுதான் அவன் உயிரோடு இருக்கிறானோ என்னமோ? - ஐயோ! என்ன தான் அவன் துரோகம் செய்தாலும், நானா அவனுக்கு யமனாக முடியவேண்டும்? என் வாக்கினாலேயா அவனுக்கு இந்த கதி நேர வேண்டும்? ஸ்வாமி! முத்தையன் பிழைப்பானா? - ஆம்; அவன் சாகக் கூடாது. அவனை விசாரணை செய்து எட்டு வருஷம் அல்லது பத்து வருஷம் ஜெயிலில் போட வேண்டும். நாம் ஜெயிலுக்குள்ளே போய் அவனைப் பார்த்து, "முத்தையா! நீ எனக்குத் துரோகம் பண்ணினாய். அதற்கு நான் பழிக்கு பழி வாங்கினேன்; ஆனாலும் இந்தப் பாவியின் மனத்திலிருந்து உன்னுடைய ஞாபகம் போகமாட்டேனென்கிறது!" என்று சொல்ல வேண்டும்...

இப்படி எண்ணிய கல்யாணி தனக்குத்தானே சிரித்தாள். அவளுடைய சிரிப்பின் ஒலி அவளுக்கே பயங்கரத்தை அளித்தது. சீச்சீ! என்ன அசட்டு எண்ணங்கள்! முத்தையன் பல வருஷம் ஜெயிலிலே இருப்பது; அத்தனை காலமும் தான் உயிரோடிருந்து அவனைப் போய் பார்ப்பது இதெல்லாம் நடக்கக் கூடியதா? இனிமேல் நமக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? - இந்த உயிர் வாழ்க்கைதான் இனிமேல் என்னத்திற்கு? முத்தையனுடைய காதல் பொய்யாய்ப் போனபிறகு உயிர் வாழவும் வேண்டுமா? உயிர் வாழத்தான் முடியுமா? இனி இரவு நேரங்களில் தூக்கம் வரப்போவதில்லை. தூக்கம் வராமல் முத்தையனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்து பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும். இப்போதே மனது இப்படியிருக்கிறதே! போகப் போக எப்படியாகுமோ, என்னமோ? பைத்தியம் பிடித்துப் போய் ஊரார் எல்லாம் சிரிக்கும்படி உயிர் வாழ வேண்டுமா - இந்த எண்ணம் தோன்றியதும் கல்யாணி அளவிலாத பயங்கரமடைந்தாள். அடுத்த நிமிஷத்தில் அவள் ஓர் உறுதி கொண்டாள். இன்று இராத்திரி எப்படியாவது தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டியது. வேறு விமோசனம் கிடையாது.


*****

டிங், டிங், டிங் என்று கடிகாரத்தில் மூன்று மணி அடித்தது. கல்யாணி சத்தம் செய்யாமல் எழுந்திருந்தாள். அத்தை காடாந்த நித்திரையில் ஆழ்ந்திருக்கிறாள் என்பதைக் கவனித்து விட்டு வாசற்கதவை மெதுவாகத் திறந்து கொண்டு வெளியே கிளம்பினாள். நடு வீதியில் நாய் ஒன்று படுத்துக் கிடந்தது. அது குரைத்து ஊர்க்காரர்களை எழுப்பி விடப் போகிறதே என்று கல்யாணி ஒரு கணம் திகில் அடைந்தாள். ஆனால் அது குரைக்கவில்லை. அவள் வீதியோடு கொஞ்ச தூரம் போன பிறகு அந்த நாய் ஆகாயத்தை நோக்கிக் கொண்டு மிகவும் தீனமான குரலில் அழுதது. நாய் அழுதால் யமன் வருவதற்கு அறிகுறி என்று கல்யாணி கேள்விப்பட்டிருந்தபடியால், அவள் உடம்பு சிலிர்த்தது.

கிருஷ்ண பட்சத்துக் காலைப் பிறையின் ஒளி மங்கலாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. கல்யாணி ஒரு கையினால் நெஞ்சை அமுக்கிப் பிடித்துக் கொண்டு கொள்ளிடக்கரையை நோக்கி நடந்தாள். ஆற்றிலே விழுந்து இறந்து போய் விடுவது என்னும் எண்ணத்துடனே தான் அவள் அந்த நேரத்தில் வீட்டை விட்டுக் கிளம்பியது. ஆனால், கிட்டத்தட்ட இராஜன் வாய்க்காலின் அருகில் வந்தபோது அவளுக்கு ஒரு சந்தேகம் தோன்றிற்று. ஐயோ! தனக்கு நீந்தத் தெரியுமே? தண்ணீரில் விழுந்தால், நீந்திக் கரையேறத் தானே தோன்றும்? உயிர் போகுமா? கழுத்திலே கல்லைக் கட்டிக் கொண்டு விழுகிறது என்று சாதாரணமாய்ச் சொல்லுவார்கள். நிஜமாகவே அப்படிச் செய்ய முடியுமா? கொள்ளிடக் கரையில் கல்லுக்குப் போவதெங்கே? அல்லது கயிற்றுக்குத்தான் எங்கே போவது? புடவைத் தலைப்பில் கல்லைக் கட்டிக்கொண்டு விழுந்தால், தலைப்பிலிருந்து கல் நழுவி விட்டால் என்ன செய்வது? ஐயோ! உயிரை விடுவதென்பது சொல்வதற்குச் சுலபமாயிருக்கிறதே தவிர, மிகவும் கஷ்டமான காரியமாக அல்லவா தோன்றுகிறது?

கல்யாணி இராஜன் வாய்க்காலின் பாலத்தை அடைந்த போது, அதைக் கடந்து மேலே சொல்லவில்லை. அங்கேயே சற்று நேரம் நின்று சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு வாய்க்கால் ஓரமாய்ச் சென்று தண்ணீர்க் கரையில் ஓரிடத்தில் உட்கார்ந்தாள். சிலுசிலுவென்று காற்றடித்தது. கிராமத்தில் ஜாமக்கோழி கூவிற்று. காக்கையொன்று அரைத் தூக்கமாய்க் கரைந்தது.

கல்யாணி, "இன்று நான் இறக்க வேண்டுமென்று விதி இருந்தால், எப்படியும் யமன் என்னைக் கொண்டு போவான் அல்லவா? பார்க்கலாம்" என்று எண்ணமிட்டாள். பிறகு, "யமனே! வா! என்னைக் கொண்டு போ!" என்று வாய் விட்டுக் கூறினாள்.

அப்படி அவள் சொல்லி வாய் மூடினாளோ இல்லையோ, எங்கேயோ வெகு தூரத்தில் டக், டக், டக், டக் - என்ற சத்தம் கேட்டது.

கல்யாணியின் ரோமம் சிலிர்த்தது. உடம்பெல்லாம் நடுங்கிற்று. ஒரு வேளை தன்னுடைய பிரார்த்தனையைக் கேட்டு யமன் தான் வருகிறானோ?

டக், டக், டக், டக் - இந்த ஒலி நிமிஷத்துக்கு நிமிஷம் பெரியதாகிக் கொண்டு வந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் அது வெகு சமீபத்தில் வந்து விட்டது.

கல்யாணி கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் அந்த டக் டக் சத்தம் கல்யாணிக்கு எதிரில் வாய்க்காலின் அக்கரையில் வந்து நின்றது. யமன் தான், சந்தேகமில்லை! சப்தம் நின்று ஒரு நிமிஷம் ஆயிற்று. இரண்டு நிமிஷம் ஆயிற்று, மூன்று நிமிஷம் ஆயிற்று; கல்யாணிக்கோ இந்த மூன்று நிமிஷமும் மூன்று யுகமாகயிருந்தது. அவளுடைய படபடப்பும் அதிகமாகிக் கொண்டு வந்தது. மறுபடியும் ஒரு தடவை, "யமனே! வா! சீக்கிரம் வந்து என்னைக் கொண்டு போ!" என்று கூவினாள்.

அடுத்த கணம் கல்யாணி தன்னுடைய ஞாபகத்தை இழந்தாள். தண்ணீரில் 'குபுக்' என்று ஒரு சத்தம் கேட்டது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 11:43 am

52.பொழுது புலர்ந்தது


முத்தையன் கல்யாணியைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்ததும், சர்வோத்தம சாஸ்திரி தாமே நேரில் போய்க் கல்யாணியை அழைத்து வருவது என்று தீர்மானித்துக் கொண்டார். வேறு யாராவது போனால் கலவரப்படுத்தி விடுவார்கள் என்றும், ஒரு வேளை அவள் வருவதற்கு மறுத்து விடலாம் என்றும் நினைத்தார். அதோடு கூட, முத்தையன் இருக்குமிடத்தை கல்யாணி தெரிவித்ததற்குக் காரணமான மர்மம் ஏதோ இருக்க வேண்டுமென்பது அவருடைய மனத்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது. இவ்வளவு கண்டுபிடித்த பிறகு அதைக் கண்டுபிடிக்காமற் போனால் என்ன பிரயோஜனம்?

அவர் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த விஷயங்களையும் வைத்துக் கொண்டு, கல்யாணிக்கும் முத்தையனுக்கும் இருந்து வந்த சம்பந்தத்தை ஒருவாறு அவர் ஊகித்து அறிந்து கொண்டார். அவர்கள் காதலர்கள் என்பதிலும் சென்ற சில தினங்களாகக் கல்யாணிதான் முத்தையனுக்கு உணவு அளித்துக் காப்பாற்றியிருக்க வேண்டுமென்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் அன்றைய தினம் அவளுடைய மனக் கலக்கத்திற்குக் காரணம் என்ன? முத்தையனுடைய 'உண்மைக் காதலி'யைப் பற்றி ஏதோ சொன்னாளே, அது என்ன? அப்படியெல்லாம் இருக்குமோ? முத்தையன் அத்தகைய மனிதனாய்த் தோன்றவில்லையே? அவனைப் போலீஸார் சூழ்ந்த போது அங்கே வேறு ஸ்திரீயும் இருக்க வில்லையே? என்ன காரணத்தினால் அவளுக்கு அப்படிப்பட்ட விபரீதமான சந்தேகம் இருக்கக்கூடும்?

கல்யாணியைப் பார்த்துப் பேசினால்தான் இந்த மர்மம் வெளியாவதற்கு வழி உண்டு என்று எண்ணிய சாஸ்திரி ராயவரத்திலிருந்து இரவு மூன்று மணிக்கே குதிரை ஏறிப் பூங்குளத்துக்குப் பிரயாணமானார். திருடனைப் பிடிக்கிற வரையில், குதிரையில் போனால் அவனுக்கு முன்னெச்சரிக்கை கொடுத்தது போலாகுமென்று அவர் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார். இப்போது அந்த பயமில்லையாதலாலும், இரவு நேரமாதலாலும் குதிரை ஏறிக் கிளம்பினார்.


*****

அவர் பூங்குளம் மூங்கில் பாலத்துக்குக் கிட்டத்தட்ட வந்தபோது சுமார் நாலரை மணி இருக்கும். கிழக்குத் திசையில் அப்போது தான் சிறிது வெண்ணிறம் கண்டது.

நன்றாய் விடிந்த பிறகே ஊருக்குள் போகவேண்டுமென்று எண்ணிய சாஸ்திரி, குதிரையின் லகானைப் பிடித்து இழுத்து நிறுத்தினார். வாய்க்காலின் அந்தப்புறம் அவர் தற்செயலாகப் பார்த்தபோது, ஒரு பெண் உருவம் தலைமயிரை அவிழ்த்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பது போல் தெரிந்தது. அந்த வேளையில் அத்தகைய காட்சியைக் கண்டபோது, மகா தைரியசாலியான சாஸ்திரி கூடச் சிறிது கலவரம் அடைந்தார். கொஞ்ச நேரத்துக்கெல்லாம், "யமனே! வா! சீக்கிரம் வந்து என்னைக் கொண்டுபோ!" என்ற குரலைக் கேட்டதும், அவருடைய பயங்கரம் அதிகமாகத்தான் ஆயிற்று. ஆனால் அடுத்த நிமிஷம் அந்த உருவம் தண்ணீரில் தலை குப்புற விழ அதனால் உண்டான 'குபுக்' என்ற சத்தத்தைக் கேட்டதும் சாஸ்திரியின் கலவரம் எல்லாம் பறந்து போயிற்று. உடனே குதிரையிலிருந்து குதித்து, மூங்கில் பாலத்தை இரண்டே எட்டில் தாண்டி, இக்கரைக்கு வந்து வாய்க்காலின் கரையோரமாய் ஓடினார். தண்ணீரில் மேலே மிதந்த தலைமயிரின் மூலமாய்க் கல்யாணி போகுமிடத்தைக் கண்டு பிடித்து, கரையிலிருந்தபடியே அவளைத் தூக்கிக் கரை சேர்த்தார்.

கீழ்த் திசையிலே தோன்றிய வெளிர் நிறம் சிறிது சிறிதாகப் பவுன் நிறத்துக்கு மாறிக் கடைசியில் பத்தரை மாற்றுப் பசும் பொன்னின் நிறத்துக்கு வருகிறது. நட்சத்திரங்கள் நன்றாய் ஒளிமங்கி மறையத் தொடங்குகின்றன. ஆகாயத்தின் கருநிறம் நல்ல நீல நிறமாக மாறி வருகின்றது. நாலாபுறத்திலும் பட்சிகளின் கோலாகலமான சங்கீதக் கச்சேரி நடக்கின்றது.

இத்தகைய நேரத்தில் தான் கல்யாணி கண் விழித்தாள். முதலில் அவள் கண்களுக்குத் தெரிந்தது சாஸ்திரியின் முகம். இதென்ன? இந்தப் பிராமணன் இங்கு எங்கே வந்தான்? தன்னுடைய உடம்பெல்லாம் ஜில்லென்றிருப்பதைக் கல்யாணி உணர்ந்தாள்; ஈரப் புடவை; ஈரத் தலை. ஓஹோ! தண்ணீரிலிருந்து தன்னை இந்தப் பிராமணன் கரையிலே இழுத்துப் போட்டிருக்கிறான். தான் அதிகாலையில் எழுந்து உயிரை விடுவதற்காக அங்கு வந்தது எல்லாம் ஞாபகம் வந்தது. அக்கரையில் குதிரை ஒன்று சேணம் போட்டு நிற்பதையும் பார்த்தாள். குதிரையின் மேல் இந்தப் பிராமணன் வந்ததைத்தான் யமன் வருவதாகத் தான் எண்ணியிருக்க வேண்டும்.

கல்யாணி எழுந்திருந்து உட்கார்ந்தாள். சாஸ்திரியைப் பார்த்து, "ஐயா! உங்களை என் உயிரைக் கொண்டு போக வந்த யமன் என்று நினைத்தேன். நீங்களோ என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்" என்றாள்.

அதைக் கேட்டதும் சாஸ்திரியின் முகத்தில் புன்னகை தோன்றியது. ஆனால், கல்யாணியின் அடுத்த வார்த்தையில் அந்தப் புன்னகை எரிந்து போயிற்று.

"...ஆனால் ஏன் என்னைக் காப்பாற்றினீர்கள்? ஐயோ! நான் இறந்து போயிருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்?" என்றாள்.

"உனக்கு என்ன துக்கமோ, எதற்காக நீ சாக நினைத்தாயோ, எனக்குத் தெரியாது அம்மா! ஆனால் உன்னை அழைத்து வருவதாக முத்தையனிடம் வாக்கு அளித்து விட்டு வந்தேன். நான் வந்ததும் நீ ஆற்றில் விழுந்ததும் சரியாயிருந்தது."

"என்ன? முத்தையனா? முத்தையன் என்னை அழைத்து வரச்சொன்னானா? நிஜந்தானா? நிஜமாக முத்தையன் என்னை அழைத்து வரச் சொன்னானா?" என்றாள் கல்யாணி.

"திருச்சிற்றம்பலம் பிள்ளை மகள் கல்யாணி என்பது நீ தானே?"

"நான் தான் அந்தப் பாவி."

"முத்தையன் உன்னைத்தான் பார்க்கவேண்டுமென்று சொன்னான். வந்தால் அழைத்துப் போகிறேன்."

"வந்தாலா! முத்தையன் அழைத்து நான் வராமலும் இருப்பேனா? இதோ இப்படியே வருகிறேன். அழைத்துப் போங்கள்."

"அது சரியல்ல, அம்மா! நீ வீட்டுக்குப் போய்ப் புடவை மாற்றிக் கொள். வாய்க்காலில் குளித்துவிட்டு வந்ததாக வீட்டில் சொல்லு. நான் பிறகு வந்து, முத்தையன் கேஸில் சாட்சிக்காக நீ வரவேணுமென்று சொல்கிறேன். அப்புறம் நீ வரலாம்."

"ஐயா! சத்தியமாய்ச் சொல்லுங்கள்; நீங்கள் யார்?" என்றாள் கல்யாணி.

"கோபித்துக் கொள்ளாதே, கல்யாணி! நான் போலீஸ் இன்ஸ்பெக்டர். நேற்று உன்னை ஏமாற்றித்தான் விட்டேன். அதற்குப் பரிகாரம் தேட இப்போது வந்திருக்கிறேன். என்னை நம்பி வா!" என்றார் சாஸ்திரி.

கல்யாணி அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். என்ன நடந்தாலும் சரி, அவருடன் போவது என்று உறுதி கொண்டாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 11:47 am

53.கல்யாணியின் கல்யாணம்


நிர்மலமான வானத்தில் பூரண சந்திரன் பவனிவந்து கொண்டிருந்தது. கீழே அலைகளின்றி அமைதியாயிருந்த நீலக்கடலைக் கிழித்துக் கொண்டு நீராவிக் கப்பல் அதிவேகமாய்ச் சென்றது. அந்தக் கப்பலின் மேல் தளத்தில் ஓர் ஓரமாகக் கம்பியின் மீது சாய்ந்து கொண்டு முத்தையனும் கல்யாணியும் நின்றார்கள். முத்தையன், கல்யாணியின் முகத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். "மதி வதனம்" என்று சொல்கிறார்களே, அது எவ்வளவு அறிவீனம்? இரண்டும் வட்ட வடிவமாயிருக்கின்றன என்பதைத் தவிர சந்திரனுக்கும் இந்த முகத்துக்கும் வேறு என்ன பொருத்தமிருக்கிறது? அந்தச் சந்திர வட்டத்தில் கருவிழிகள் இரண்டு உண்டா? அவை நம்மைக்கொன்று விடுவது போல் பார்ப்பதுண்டா? ஒரு கண நேரத்துப் புன்னகையினால் பித்தம் தலைக்கேறச் செய்யும் சக்திதான் சந்திரனிடம் இருக்கிறதா?" என்று அவன் எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று அவனுடைய மனத்தில் மிகவும் விசித்திரமான ஓர் எண்ணம் உண்டாயிற்று. "கல்யாணியின் கண்களிலிருந்து இப்போது கண்ணீர் பெருகினால் எப்படியிருக்கும்? நிலவின் ஒளி அந்தக் கண்ணீர்த் துளிகளின் மீது படும்போது அவை முத்து உதிர்வது போல் உதிருமல்லவா?" என்று நினைத்தான். அப்படி நினைத்ததுதான் தாமதம் - ஐயோ! இதென்ன அந்தக் கரு விழிகளிலிருந்து உண்மையிலேயே கண்ணீர் பெருகி வழிகின்றதே!

முத்தையன் பதறிப் போய், "கல்யாணி! கல்யாணி, என்ன இது? கண்ணீர் ஏன்..." என்று சொல்லி, கண்களைத் துடைப்பதற்காக அருகில் நெருங்கினான்.

ஆனால் கல்யாணி, சடக்கென்று ஒரு அடி பின்வாங்கினாள். "ஏன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனந்தக் கண்ணீர் என்று சொல்கிறார்களோ, அது தானோ என்னமோ? அளவில்லாத ஆனந்தத்திலேதான் மூழ்கியிருக்கிறேன். ஆனால் ஆனால்..." என்று மேலே சொல்வதற்குத் தயங்கினாள்.

"ஆனால் என்ன? அவ்வளவு சொத்து சுதந்திரங்களையும் விட்டு இந்தத் திருடனை நம்பி வந்தோமே என்று தோன்றுகிறதா?..."

"அதெல்லாம் இல்லையென்று உனக்கே தெரியும், முத்தையா! சொத்தும் சுதந்திரமும் இங்கே யாருக்கு வேணும்? நீ திருடன் என்றால் இந்த உலகத்தில் யோக்யர்கள் யாருமே இல்லை. ஆனால், ஆனால்... நான் கேள்விப்பட்ட ஒரு விஷயந்தான், என் மனத்தில் உறுத்திக் கொண்டிருக்கிறது. உனக்கு இன்னொரு ஸ்திரீயிடம் நேசம் உண்டு என்று சொன்னார்கள். நான் அதை நம்பவில்லை. ஆனாலும் உன் வாயிலிருந்தே தெரிந்து கொண்டால் என் மனம் நிம்மதியடையும்."

முத்தையன் சிரித்துக் கொண்டே சொன்னான்:- "ஆமாம்; கல்யாணி! அது வாஸ்தவந்தான். எனக்கு ஒரு ஆசை நாயகி இருக்கிறாள். அவள் பெயர்..."

முத்தையன் அந்த வாக்கியத்தை முடிக்கவில்லை. அவன் அதை "அவள் பெயர்...சதாரம்" என்று சொல்லி முடிப்பதற்குள்ளே, எதிரே நின்ற கல்யாணி மாயமாக மறைந்தாள். கீழே கொந்தளித்த கடலில் 'குபுக்!' என்ற ஒரு சிறு ஒலி கேட்டது. "ஐயோ! இது என்ன விபரீதம்?" என்று முத்தையன் ஒரு கணம் திகைத்து நின்றான். அடுத்த கணத்தில் அவனும் கடலில் குதித்து மூழ்கினான்.

தண்ணீரில் மூழ்கிய முத்தையனுக்கு நினைவு மட்டும் தெளிவாக இருந்தது. கைகளை நாலா புறமும் துளாவவிட்டுக் கல்யாணியைத் தேடினான். கடைசியில், அவனுக்கு மூச்சு முட்டிப் போகும் என்றிருந்த சமயத்தில் கல்யாணி கைகளில் தட்டுப்பட்டாள். உடனே அவளைத் தழுவிச் சேர்த்துக் கொண்டு முத்தையன் மேலே கிளம்பினான். மேலே வருகிறான் வருகிறான் வருகிறான் - ஆனால் இன்னும் தண்ணீர் மட்டத்துக்கு வந்து சேர்ந்த பாடில்லை. மூச்சோ திணறுகிறது. கடைசியாக தன்னுடைய முழு பலத்தையும் பிரயோகித்துக் காலை உதைத்து மேலே எழும்பினான். அப்பா மேலே வந்தாயிற்று. ஒரு நெடிய மூச்சுவிட்டுக் கண்களையும் திறந்தான்.


*****

அச்சமயம், முத்தையனுக்கு உண்மையாகவே பிரக்ஞை வந்தது. அவனுடைய கண்கள் திறந்தன. என்ன ஆச்சரியம். இது நிஜந்தானா? மறுபடியும் கண்களை மூடித் திறந்தான். ஆம் கல்யாணிதான். இத்தனை நேரம் கனவில் பார்த்த கல்யாணியேதான்! இப்போது நிஜமாகவே அவனுடைய அருகில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவளுடைய மென்மையான சரீரந்தான் அவன் மேல் பட்டுக் கொண்டிருக்கிறது. அவளுடைய கண்களிலிருந்து தான் கண்ணீர் பெருகிக் கொண்டிருக்கிறது.

முத்தையன் அவளுடைய கண்ணீரைத் துடைப்பதற்காகத் தன் கையைத் தூக்க முயற்சி செய்தான்; அவ்வாறு தூக்க முடியாமல் பெருமூச்சு விட்டான்.

இதைப் பார்த்த கல்யாணியின் கண்களிலிருது கண்ணீர் இன்னும் ஆறாய்ப் பெருகிற்று. ஸப்-இன்ஸ்பெக்டரிடம் தான் கொடுத்திருந்த வாக்குறுதியையும் மறந்து விம்மத் தொடங்கினாள்.

"வேண்டாம், கல்யாணி! அழாதே!" என்று முத்தையன் ஈனஸ்வரத்தில் கூறினான். "மீண்டும், அடுத்த ஜன்மத்தில் நாம் இம்மாதிரி தவறு செய்ய மாட்டோ ம்; முதலிலேயே கல்யாணம் செய்து கொண்டு விடுவோம்" என்று சொல்லிப் புன்னகை புரிந்தான்.

இதைக் கேட்ட கல்யாணிக்குத் துக்கம் போய் ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. அவளுடைய கண்கள் ஒரு நொடியில் வரண்டு போயின.

"இந்தப் பாவி அடுத்த ஜன்மத்திலே வேறு வந்து உன்னைத் தொந்தரவு செய்ய வேண்டுமா? வேண்டவே வேண்டாம்! அடுத்த ஜன்மத்திலாவது உனக்கு இஷ்டமானவளைக் கல்யாணம் செய்து கொண்டு சுகமாயிரு" என்றாள்.

முத்தையன் சிரித்தான். தன்னுடைய உடல் நோவையெல்லாம் மறந்து குதூகலத்துடன் சிரித்தான்.

"கல்யாணி! கோபம் வரும் போது உன் முகம் இவ்வளவு அழகாயிருக்கும்படி பிரம்மதேவன் படைத்து விட்டான். அதனால் தான் போலிருக்கிறது, அந்த நாளிலிருந்து உனக்குக் கோபமூட்டிப் பார்ப்பதிலேயே எனக்குச் சந்தோஷம்" என்றான்.

கல்யாணியின் முகத்தில் இப்போது எள்ளும் கொள்ளும் வெடித்தது. "முத்தையா! பொய் புனைசுருட்டெல்லாம் இன்னமும் எதற்காக? என் முகத்தில் அழகு வேறு இருக்கிறதா? நீ அன்று கட்டித் தழுவிக் கொண்டு இருந்தாயே, அவளை விடவா நான் அழகு? ஒரு வேளை அது கூட எனக்குக் கோபம் மூட்டுவதற்குத்தான் செய்தாயோ, என்னமோ?" என்றாள்.

"ஆமாம், கல்யாணி! உனக்குக் கோபமூட்டுவதற்குத் தான்! இல்லாவிட்டால், நீ போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் போய் என்னைக் காட்டிக் கொடுப்பாயா?"

கல்யாணியின் கோபம் மாறி, மறுபடி துக்கம் வந்தது. "ஐயோ! முத்தையா! அது பொய்; நான் காட்டிக் கொடுக்கவில்லை. உன்னை இன்னொரு பெண் பிள்ளையுடன் பார்த்ததில் என் சித்தம் கலங்கிப் போயிருந்தது. அப்போது அந்தப் பிராமணன் வந்து என்னவோ கேட்க, நான் என்னமோ உளறி விட்டேன். நீ என்ன தான் துரோகம் பண்ணினாலும், ஐயோ! உன்னை வேணுமென்று நான் காட்டிக் கொடுப்பேனா? நானல்லவா இந்தப் பாழும் உயிரை விட்டிருப்பேன்?" என்றாள்.

"எனக்குத் தெரியும், கல்யாணி! எனக்குத் தெரியும். நீயா என்னைக் காட்டிக் கொடுத்தாய்? விதியின் வினைக்கு நீ என்ன செய்வாய்?" என்றான் முத்தையன்.

"விதிதான் அப்படிப் பெண்ணுருவம் கொண்டு வந்தது போலிருக்கிறது! முத்தையா! நீ என்னிடம் பிரியம் கொள்ளாததில் கூட எனக்கு துக்கம் இல்லை. 'என்னிடம் அன்பாயிரு' என்று ஒருவரைக் கட்டாயப்படுத்த முடியுமா? ஆனால் என்னை எதற்காக நீ ஏமாற்றினாய்? நம்ப வைத்து ஏன் துரோகம் பண்ணினாய்? அதனால் அல்லவா என் சித்தம் அப்படிக் கலங்கிப் போய்விட்டது?"

"கல்யாணி! நான் உன்னை ஏமாற்றவில்லை. விதிதான் உன்னை ஏமாற்றியது. நீ பார்த்தது பெண் பிள்ளையல்ல, கல்யாணி! அவன் என் சிநேகிதன் கமலபதி. நாடகத்தில் என்னுடன் 'சதாரம்' வேஷத்தில் நடித்தவன். நாம் கப்பல் ஏறுவதற்கு ஏற்பாடு செய்திருப்பதைத் தெரிவிப்பதற்காகவே வந்தான். போலீஸ் தொந்தரவுக்குப் பயந்து பெண் வேஷத்தில் வந்தான்" என்றான் முத்தையன்.


*****

இதைக் கேட்டதும் கல்யாணியின் உள்ளத்தில் ஏற்பட்ட மாறுதலை எவ்வாறு விவரிக்க முடியும்? அவளுடைய நெஞ்சை அமுக்கிக் கொண்டிருந்த ஒரு பெரிய பாறாங்கல் திடீரென்று விலகியது போலிருந்தது. மலை உச்சியிலிருந்து சறுக்கி விழுந்து கொண்டேயிருந்தவள் சட்டென்று திடமான பூமியில் உறுதியாக நிற்பது போல் தோன்றியது. முத்தையனுடைய அன்பு பொய்யன்று; அவன் தன்னை ஏமாற்றவில்லை; தனக்குத் துரோகம் செய்யவில்லை; வேறு எது எப்படிப் போனால் என்ன?

இப்படி ஒரு நிமிஷம்; அடுத்த நிமிஷத்தில் தான் செய்த பயங்கரமான தவறு அவளுக்கு நினைவு வந்தது.

"ஐயோ! பாவி! என்ன செய்து விட்டேன்? உன்னை அநியாயமாகச் சந்தேகித்து இப்படி விபரீதம் விளைத்து விட்டேனே? 'பெண் புத்தி' என்று உலகத்தார் இகழ்வது உண்மையாயிற்றே?" என்று கல்யாணி கதறினாள். வறண்டிருந்த அவள் கண்களிலிருந்து மறுபடியும் கண்ணீர் கலகலவென்று பொழிந்தது.

முத்தையனுடைய ஜீவன் நிமிஷத்திற்கு நிமிஷம் மங்கிக் கொண்டிருந்தது. கல்யாணியின் முகத்தை அடங்காத ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு அவன் மிகவும் மெலிந்த குரலில் சொன்னான்:

"எனக்கு அதனால் வருத்தமில்லை; சந்தோஷந்தான்! என்னிடம் உனக்குள்ள அளவற்ற அன்புதானே அப்படிச் செய்யத் தூண்டிற்று? - கல்யாணி! சிங்கப்பூருக்குப் போவது, அங்கே சௌக்கியமாயிருப்பது எல்லாம் நடக்காத காரியம் என்று என் மனத்தின் அந்தரங்கத்தில் ஒரு எண்ணம் இருந்து கொண்டேயிருந்தது. அது நிஜமாயிற்று. இந்த உலகத்தில் யார் யார் எனக்கு ரொம்பவும் பிரியமானவர்களோ அவர்களாலேயே என் வாழ்வு முடிந்தது. முதலில் அபிராமி, அப்புறம் கமலபதி, பிறகு நீ! உங்கள் மூவருடைய அன்புதான் நான் பிடிபடுவதற்குக் காரணமாயிற்று. இது எனக்கு கெடுதலாயிருக்குமா? ஒரு நாளும் இல்லை. இது தான் தகுந்த முடிவு..."

முத்தையனுடைய குரல் இன்னும் மெலிவடைந்தது. அவனுடைய கண் விழிகள் மேலே சென்று மறைந்தன. ஆனால் இதழ்களில் புன்னகை மட்டும் மாறவில்லை.

"கல்யாணி! எங்கே இருக்கிறாய்? அருகில் வா! ஒரு முக்கிய சமாசாரம் சொல்கிறேன்" என்றான். கல்யாணி, இடையில் சற்று விலகியிருந்தவள், மறுபடியும் நெருங்கி வந்து, முத்தையனுடைய முகத்துக்கு அருகில் தன் முகத்தை வைத்துக் கொண்டு "இதோ இருக்கிறேன், முத்தையா" என்றாள்.

"இதோ பார்! அபிராமிக்கு ஒரு ஏற்பாடு செய்து விட்டேன். கமலபதி அவளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான். இனிமேல் நம்முடைய கல்யாணத்துக்கு யாதொரு தடையும் கிடையாது. உனக்குச் சம்மதந்தானே?" என்று முத்தையன் முணுமுணுத்தான்.

"சம்மதம், சம்மதம்" என்றாள் கல்யாணி.

"அப்படியானால், மேளத்தைப் பலமாக வாசிக்கச் சொல்லு. இதோ இப்போதே தாலி கட்டி விடுகிறேன்" என்று சொல்லி முத்தையன், இரத்தமிழந்து பலஹீனமடைந்திருந்த தன் இரண்டு கைகளையும் எடுத்துக் கல்யாணியின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

அப்போது கோயிலில் உச்சிகால பூஜை நடந்து கொண்டிருந்தது.

பெரிய மேளம் ஜாம் ஜாம் என்று முழங்கிற்று.

ஆலாட்சிமணி "ஓம் ஓம்" என்று இசைத்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 11:51 am

54.கடவுளின் காதலி


இத்தனை காலமாக நாம் நெருங்கிப் பழகிய சிநேகிதர்களிடமிருந்து விடைபெற வேண்டிய வேளை வந்து விட்டது.

முத்தையன் இவ்வுலகத்திடம் விடை பெற்றுக் கொண்டு சென்றான். ஆனால் அவனுடைய ஞாபகம் அநேகருடைய உள்ளத்தில் நிலைபெற்று அவர்களுடைய வாழ்க்கையே மாறி அமைவதற்குக் காரணமாயிற்று.

அத்தகையவர்களில் முதன்மையாக ஸ்ரீமான் ஸர்வோத்தம சாஸ்திரியைக் குறிப்பிட வேண்டும். சாதாரணமாய்ப் போலீஸ் உத்தியோகஸ்தர்களிடம் நாம் எதிர்பார்க்கும் குணங்கள் அவரிடத்தில் இல்லையென்பதை முதலிலேயே கண்டோம். அவர் அப்படி ஒரு அசாதாரண போலீஸ் அதிகாரியாயிருந்தபடியினால் தான் இந்தச் சரித்திரம் இவ்வளவு தூரம் நீண்டு வந்தது.

முத்தையனுடைய முடிவு சாஸ்திரியைப் பெரிதும் சிந்தனையில் ஆழ்த்தி, அவரை உலக வாழ்க்கையின் மகா இரகசியங்களைப் பற்றி விசாரணையில் இறங்குமாறு தூண்டிற்று.

"அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை"

என்னும் தமிழ் மறைக் கூற்றின் உண்மைப் பொருளை அவர் அப்போதுதான் நன்கு உணர்ந்தார். இந்தக் குறளுக்குச் சாதாரணமாய், "நற்கருமங்களுக்கே அன்பு ஆதார மென்று தெரியாதவர்கள் சொல்வார்கள்; தீச்செயல்களை விலக்குவதற்கும் அன்பே ஆதாரமானது" என்று வலிந்து பொருள் கூறுவது வழக்கம். ஆனால் தமிழ் நாட்டில் தற்போது வாழ்ந்திருக்கும் பெரியார்களில் ஒருவர், மேற்படி பொருளின் பொருத்தமின்மையை எடுத்துக் காட்டி, "தீய செயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல்" என்று பொருள் கூறியதை சாஸ்திரியார் கேட்டிருந்தார். இது எவ்வளவு உண்மையென்பது முத்தையனுடைய வாழ்விலிருந்து அவருக்குத் தெளிவாக விளங்கிற்று.

அபிராமியிடம் வைத்திருந்த அன்பினால் அல்லவா முத்தையன் கள்வனாக நேர்ந்தது? மற்றும் பல தீச்செயல்கள் அவன் செய்யும்படி நேர்ந்ததற்கு அந்த அன்பேயல்லவா காரணமாயிற்று?


*****

மற்றும், வாழ்வுக்கு அன்பு காரணமாயிருப்பது போல் மரணத்திற்கும் காரணமாயிருக்கிறது என்பதையும் சாஸ்திரியார் கண்டுணர்ந்தார். முத்தையனிடம் அபிராமியும், கமலபதியும், கல்யாணியும் கொண்டிருந்த அன்பேயன்றோ அவனுக்கு யமனாக முடிந்தது? அந்த மரணத்தைத் தீயது என்று சொல்ல முடியுமா? அத்தகைய தூய அன்பின் காரணமாகத் தீமை விளைவது சாத்தியமா?

இவர்களுடைய துன்பத்துக்கெல்லாம் ஆதிகாரணமான கார்வார் சங்குப்பிள்ளை இன்னும் உயிர் வாழ்ந்து தன்னுடைய பாவ கிருத்தியங்களை நடத்திக் கொண்டுதானிருக்கிறார். ஆனால் கொடிய சந்தர்ப்பங்களின் காரணமாகக் கள்வனாக நேர்ந்த முத்தையனோ துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி மரணமடைந்தான். இந்த முரண்பாட்டைப் பார்க்கும்போது, வாழ்வு நல்லது, மரணம் தீயது என்று சொல்வதற்குத்தான் இடமிருக்கிறதா?

உலகத்திலே எல்லாக் காரியங்களும் ஏதோ ஒரு நியதிப்படி காரண காரியத் தொடர்புடன் தான் நடந்து வருகின்றன. நன்மையின் பலன் இன்பம். தீமையின் விளைவு துன்பம் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் நன்மை எது, தீமை எது, சுகம் எது, துக்கம் எது என்றெல்லாம் நிர்ணயிப்பது மட்டும் எளியதன்று. "நன்மை தீமை, சுக துக்கம் முதலிய துவந்த உணர்ச்சிகளைக் கடந்தவன் தான் ஞானி; அவன் தான் சித்த புருஷன்" என்று பெரியோர் சொல்வதன் இரகசியமும் ஒருவாறு சாஸ்திரிக்குப் புலனாகத் தொடங்கிற்று.

இவ்வாறெல்லாம் ஆத்ம சிந்தனையினாலும், தத்துவ விசாரணையிலும் இறங்கிவிட்ட சாஸ்திரிக்குப் போலீஸ் இலாகா உத்தியோகம் பிடிக்காமல் போனதில் வியப்பில்லையன்றோ? உரிய காலத்திற்கு முன்பே அவர் பென்ஷன் பெற்றுக் கொண்டு விலகி, பாரமார்த்திக சாதனங்களிலும், பொது நன்மைக்குரிய காரியங்களிலும் ஈடுபடலானார். "போலீஸ் சாமியார்" என்றும் "போலிச் சாமியார்" என்றுங்கூட அவரை அநேகர் பரிகசித்தார்களாயினும் அவர் அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் ஒன்றாகக் கருதும் மனோநிலையை அவர் அடைந்து விட்டார். அவருடைய நற்காரியங்களுக்கெல்லாம் அவருடைய தர்ம பத்தினி பெரிது உதவி புரிந்து வந்தாள் என்று சொல்லவும் வேண்டுமா?

முத்தையன் இறந்த பிறகு சாஸ்திரியின் முயற்சியினால் குறவன் சொக்கன் விடுதலை செய்யப்பட்டான். ஆனால் அந்தப் பாவி மகன் சும்மா இருக்கவில்லை. கொள்ளிடக்கரைக் காட்டுக்குப் போய்ப் பல தினங்கள் அலைந்து திரிந்து கடைசியில் முத்தையன் மரப்பொந்தில் ஒளித்து வைத்திருந்த சில நகைகளைத் தேடிப் பிடித்தான். அவற்றை அவன் டவுனில் கொண்டு போய் விற்க முயன்ற போது போலீசார் பிடித்துக் கொண்டார்கள். வேறு ஒரு திருட்டுக் கேஸில் அவனை சம்பந்தப்படுத்தி, மூன்று வருஷம் கடுங் காவல் விதித்து சிறைக்கு அனுப்பி விடார்கள். ஆனால், இதன் பொருட்டு நாம் சொக்கனிடம் அனுதாபம் காட்ட வேண்டிய அவசியமில்லை. அவன் பிறவியிலேயே வேதாந்தியாய்ப் பிறந்தவனல்லவா? அவனுக்கு வெளியிலிருப்பதும் ஒன்றுதான்; சிறையிலிருப்பதும் ஒன்றுதான். சுகமும் ஒன்றுதான், துக்கமும் ஒன்றுதான். இருவினைகளையுங் கடந்த யோகி என்று உண்மையில் அவனையல்லவா சொல்லவேண்டும்?


*****

உரிய காலத்தில், கமலபதியும் அபிராமியும் கல்யாணம் செய்து கொண்டார்கள். முத்தையனுடைய மரணத்தினால் கமலபதிக்கும் அபிராமிக்கும் ஏற்பட்ட அளவிலாத துக்கமே அவர்களை ஒன்று பிணைப்பதற்கு முக்கியச் சாதனமாயிருந்தது. முத்தையனை நினைத்து அவர்கள் விட்ட கண்ணீர் அவர்களுடைய காதல் பயிரைத் தளிர்க்கச் செய்யும் வான் மழையாயிற்று. இப்படி அவர்களுடைய நேசத்தைப் பெருக்கி வளர்த்த பிரிவுத் துக்கம் நாளடைவில் மறைய, அவர்களுடைய காதல் இன்பம் மட்டுமே மிஞ்சி நின்றது. சில சமயம் அவர்கள், 'ஐயோ! முத்தையனைப் பிரிந்த பிறகு நாம் இவ்வளவு சந்தோஷமாயிருக்கிறோமே?' என்று எண்ணி வெட்க முறுவார்கள். பின்னர், "நாம் இப்படிச் சந்தோஷமாயிருப்பதுதான் முத்தையனுக்கு மகிழ்ச்சி தருவதாகும்" என்று எண்ணி ஒருவாறு ஆறுதல் பெறுவார்கள்.


*****

கல்யாணி உயிர் வாழ்ந்திருந்தாள்!

முத்தையனுடைய மரணத்திற்குப் பிறகு அவளும் உயிர் துறப்பாள் என்று எதிர்பார்க்கக் கூடும். ஆனால் உண்மையில் அவ்வாறு நேரவில்லை.

முத்தையன் பிடிபட்ட அன்றே உயிர் துறக்க முயன்ற கல்யாணி, அவனுடைய மரணத்திற்குப் பிறகு அம்மாதிரி முயற்சி செய்யாதது ஆச்சரியம் அல்லவா?

ஆச்சரியந்தான். ஆனால் அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கத் தான் செய்தது.

முதல் நாள் கல்யாணி உயிர் துறக்க முயன்றபோது அவள் "இவ்வுலகத்தில் உண்மையானது ஒன்றுமேயில்லை; எல்லாமே பொய்" என்ற மனோபாவத்தில் இருந்தாள். மறுநாள் முத்தையனைப் பார்த்த பிறகு, அந்த எண்ணம் அவளுக்கு மாறிவிட்டது. "உலகில் உறுதியானது, உண்மையானது, அழிவில்லாதது ஒன்று உண்டு; அது அன்பு" என்ற உறுதிப்பாடு அவளுக்கு ஏற்பட்டது.


*****

யமுனா தீரத்தில் வேணுகானம் செய்து மாடு மேய்த்துத் திரிந்த கண்ணன் திடீரென்று ஒருநாள் மதுரைக்கு ராஜரீகம் நடத்தச் சென்ற பிறகு, பிருந்தாவனத்தில் அவனுடைய தோழர்கள் எல்லாம் துயரக் கடலில் ஆழ்ந்து விடுகிறார்கள். ஆனால் ராதை மட்டும் அவ்வாறு துயரப்படவில்லை. அவள் தன் சிநேகிதியிடம் சொல்கிறாள்:

"தோழி! ஏன் துயரப்பட வேண்டும்? இந்த உலகத்தில் சாசுவதமானது எதுதான் உண்டு? சகலமும் அநித்யமல்லவா" மனுஷர்கள் அநித்யம்; வாழ்வு அநித்யம்; சுக துக்கங்கள் எல்லாம் அநித்யம்; இது தெரிந்திருக்கும்போது கிருஷ்ணன் போய்விட்டானே என்று நாம் ஏன் வருத்தப்படவேண்டும்?

"சகியே! இந்த உலகில் நித்யமானது ஒன்றே ஒன்று இருக்கிறது. அது தான் பிரேமை."

"பிரேமைக்கு உரியவன் கூட அநித்யந்தான்; அவன் போய்விடுவான். ஆனால் பிரேமை மட்டும் ஒரு நாளும் அழியாது. அது நித்யமானது.

"தோழி! நமது ஹரி பெரிய திருடன் அல்லவா? ஆனால் அவன் கூடத் திருட முடியாத ஒன்று இருக்கிறது. அதுதான் நமது இதயத்திலுள்ள காதல். அவனால் கூட அதைத் திருடிக் கொண்டு போக முடியவில்லையல்லவா?"

"பின் எதற்காக நாம் துக்கப்பட வேண்டும்?"

ராதையின் மேற்சொன்ன மனோநிலையைத்தான் கல்யாணி அடைந்திருந்தாள். முத்தையனுடைய மரணம் அவளுக்குத் துக்கம் விளைவிக்கவில்லையென்று நாம் சொல்ல மாட்டோ ம். ஐயோ! கல்யாணிக்கா துக்கமில்லை? துக்கமில்லாமலா அப்படிச் சித்திரப் பதுமை போல நிற்கிறாள்? துக்கமில்லாமலா அப்படிக் கண்ணீர் பெருக்குகிறாள்? ஆனால் அது சாதாரண துக்கமல்ல; அதிசயமான துக்கம் என்று மட்டும் சொல்லத்தான் வேண்டும்.

சாதாரணமாயிருந்தால் அதை மறக்க முயல்வது அல்லவா நியாயம்? அதுதானே மனித இயற்கை? ஆனால் கல்யாணி அந்தத் துக்கத்தை மறக்க விரும்பவில்லை. அந்த மகத்தான துக்கத்தில் அவள் ஏதோ ஒரு மகத்தான இன்பத்தையும் கண்டிருக்க வேண்டும்.

உண்மையில், கல்யாணி இரண்டாம் முறை உயிர் துறக்க முயலாததன் காரணமே இதுதான்; உயிர் துறந்தால், முத்தையனுடைய ஞாபகம் போய்விடுமோ, என்னமோ? அன்றிரவு தண்ணீரில் விழுந்தவுடனே எல்லா ஞாபகமும் போய்விட்டதே! சாவிலும் அப்படித்தானே போய்விடும்? - முத்தையனையும் அவனுடைய காதலையும் மறந்துவிடச் செய்யும் மரணம் வேண்டாம்.

கல்யாணியின் சுயநலமற்ற, பரிசுத்தமான காதல் அவளை ஒரு தெய்வப் பிறவியாக மாற்றியது. வாழ்க்கையில் அவளுடைய செயல்கள் எல்லாம் அதற்கு உகந்தவையாகவே அமைந்தன. பூங்குளத்திலும் தாமரை ஓடையிலும் அவளுக்கிருந்த திரண்ட சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளின் துயர்தீர்ப்பதற்காகவே அவள் பயன்படுத்தி வந்தாள்.

கள்வனின் காதலி, நாளடைவில், கடவுளின் காதலி ஆனாள்.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக