புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10 
251 Posts - 52%
heezulia
நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10 
150 Posts - 31%
Dr.S.Soundarapandian
நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுப்புறப் பாடல்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:00 pm

First topic message reminder :

முன்னுரை


நாட்டுப்புறப் பாடல்கள் மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாட்டுப்புறப் பாடலைக் கேட்டு மயங்கும் சூழல் அமைந்துள்ளது. நாட்டுப்புறப் பாடலின் இன்ப இசை எல்லா மக்களாலும் வெகுவாகச் சுவைக்கப்படுகின்றது. பாரதியார் கூட,


ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்



நெஞ்சைப் பறிகொடுத்ததாகப் பாடுகின்றார்.


இத்தகைய சிறப்பு வாய்ந்த நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்பியல்புகளை அறியும் வண்ணம் இப்பாடப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.


நாட்டுப்புற இலக்கியங்கள் பற்றிய முந்தைய பாடத்தில் பாடல்கள் உள்ளிட்ட அனைத்து வகை நாட்டுப்புற இலக்கியங்களின் தன்மைகள் பற்றிக் கூறப்பட்டது. நாட்டுப்புற இலக்கியத்தின் ஓர் அங்கமான நாட்டுப்புறப் பாடல்களுக்கும் அந்தத் தன்மைகள் அப்படியே பொருந்தும். இந்தப் பகுதியில் நாட்டுப்புறப் பாடல் பற்றிய வரையறைகள், அவற்றை வகைப்படுத்துதல், நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும் உத்திகள், தமிழகத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் சேகரிப்பு ஆகியவை பற்றி விளக்கமாகக் காணலாம். தாலாட்டுப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், தொழிற் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், இரத்தல் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் எனும் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்கள் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.


நாட்டுப்புறப் பாடல் - வரையறைகள்


நாட்டுப்புறப் பாடல்கள் எவை என்பதை அவற்றைக் கேட்கும் போதோ படிக்கும் போதோ கண்டுபிடித்துச் சொல்லி விடலாம். எதைக் கொண்டு அவ்வாறு சொல்ல முடிகிறது? அவற்றின் தன்மைகள் கேட்டுப் படித்த அனுபவத்தில் உங்களுக்குள் பதிவாகியிருக்கின்றன. அவற்றின் வரையறைகளை விளக்கிச் சொல்ல முடியுமா? அறிஞர் பலர் நாட்டுப்புறப் பாடல்களுக்கான வரையறைகளைத் தெரிவித்துள்ளனர். அவற்றை இங்குக் காண்போம்.


நாட்டுப்புறப் பாடல்களை - நாட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாக் கவிதைகள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், மரபுவழிப் பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப் பாடல்கள், நாட்டார் பாடல்கள் எனப் பலவாறு பெயரிட்டு அழைக்கின்றனர். (சு.சண்முக சுந்தரம், நாட்டுப்புறவியல், பக். 186)


"புலவர்களால் உருவாக்கப்பட்டுக் கற்றவர்களால் காப்பாற்றப்படுபவை இலக்கியங்கள். பாமர மக்களால் உருவாக்கப்பட்டு அவர்களாலேயே காப்பாற்றப்படுபவை நாட்டுப்புறப் பாடல்கள். இலக்கிய வரலாறு என்னும் கடலில் சங்கமம் ஆகும் ஆறுகளில் நாட்டுப்புறப் பாடல் என்னும் ஆறு ஒன்றாகும்" என்கிறார் ஆறு. அழகப்பன்.


நாட்டுப்புறப் பாடல் பற்றி விளக்கும்போது சு. சண்முக சுந்தரம் பின் வருவனவற்றைக் குறிப்பிடுகின்றார். " நாட்டுப்புறம் என்பது கிராமமும் கிராமீயம் சார்ந்த இடங்களும் ஆகும். இவ்விடங்களில் பாடப்பட்டு வருகின்ற பாடல்களை நாட்டுப்புறப் பாடல்கள் எனலாம். இப் பாடல்கள் எளியவை; இனியவை; எழுதப்படாதவை. வாயில் பிறந்து செவிகளில் உலவிக் காற்றில் மிதந்து கருத்தில் இனிப்பவை. இவை தனி உரிமை, உடைமை உள்ளவையல்ல. பொது உரிமையும், உடைமையும் கொண்டவை. என்று பிறந்தவை, எவரால் பிறந்தவை என எடுத்துச் சொல்ல இயலாத பண்பும் பாங்கும் இவற்றுக்கு உண்டு."


நாட்டுப்புறப் பாடல்களின் தன்மைகள் பற்றி அவர் மேலும் கூறுகிறார்.


"நாட்டுப்புறப் பாடல்களின் சொற்கள் எளியவை, எங்கும் தேடிப் பெறாதவை; அன்றாட வாழ்வில் புழங்குபவை; கொச்சையானவை. நாட்டுப்புறப் பாடல்களில் அடிகளைத் திரும்பப் பாடும் வழக்கம் உண்டு. இதனால் அவர்களுக்குச் சலிப்பு ஏற்படுவதில்லை. மாறாக, சொன்னதையே சொல்வதன் மூலம் அக்கருத்து வலுப் பெறுகிறது. கேட்கவும் இனிமை பயக்கிறது".



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:14 pm

வழிபாட்டுப் பாடல்கள்


தங்களுக்கு நன்மை வேண்டும் போதும், நன்மை கிடைத்த போது அந்த நன்மை கிடைக்கச் செய்ததற்காக நன்றி செலுத்தும் போதும் கிராமப்புற மக்கள் தெய்வங்களை வழிபட்டுச் சிறப்புச் செய்வர். கிராமப் புறங்களில் பெருந்தெய்வ வழிபாடு காணப்பட்டாலும் நாட்டுப்புறத் தெய்வ வழிபாடுகளே மிகுதி. அவ்வாறு வழிபடும் காலங்களில் வழிபடும் தெய்வங்களைக் குறித்துப் பாடல்கள் பாடப்படும். அம்மை வார்த்திருக்கும் போது மாரியம்மனை வேண்டிப் பாடல் பாடப்படும். பூசை, நோன்பு, சாமி ஊர்வலம் முதலிய சூழல்களில் பாடல்கள் பாடப்படும். இவ்வாறு தெய்வங்களை வழிபடும் சூழல்களில் பாடப்படும் பாடல்கள் அனைத்தையும் வழிபாட்டுப் பாடல்கள் என்ற பிரிவில் அடக்கிக் கொள்ளலாம். தொழில் செய்யும்போது பாடப்படும் பாடல்களிலும் தெய்வங்களைப் போற்றி வழிபடும் பாடல்கள் இடம்பெறும். வழிபாடு அதன் பொருளாக இருந்தாலும் பாடப்படும் சூழலால் அவற்றைத் தொழிற் பாடல்கள் என்று கருத வேண்டுமேயொழிய வழிபாட்டுப் பாடல்கள் என்று கருதக் கூடாது.


திண்டிவனம் பகுதியில் உள்ள வெள்ளிமேடுப்பேட்டை எனும் ஊரில் சேகரிக்கப்பட்ட வழிபாட்டுப் பாடல் ஒன்று எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது.


கெங்க கரைமேல
கரவங்க ஜோடிச்சி
மாய சஞ்சுதா இத
மாயமா போறாளே
ஆத்தங்கரை ஓரம்
கரவங்க ஜோடிச்சி
மாய சஞ்சுதா இது
மாயமா போறாளே



[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி-2, பக் - 76]


நாட்டுப்புறத் தெய்வங்களை தூக்கிக் கொண்டு ஊர்வலமாக வரும் பழக்கம் இந்தப் பகுதியில் உண்டு. அவ்வாறு வரும் முன் நீர் நிலைக்குச் சென்று, கரகம் சோடித்து, பாட்டுப் பாடி, தெய்வத்தை வரவழைத்த பின் ஊர்வலம் புறப்படும். இந்தப் பாடல் கன்னிமார் சாமி தூக்குவதற்கு முன் கரகம் சோடிக்கும் போது பாடப்படும் பாடல் ஆகும்.

குறிப்பிட்ட வேண்டுதல்கள் சொல்லித் தெய்வத்தை வழிபடுவதுண்டு - வயிற்றுவலி தீர வேண்டுமாம், பாட்டு வருகிறது :


நாட்டரசன் கோட்டையிலே
நல்லதொரு கண்ணாத்தா
வயித்தவலி தீர்த்தியானா
வந்திருவேன் சன்னதிக்கே



(கண்ணாத்தா - கண்ணகியைக் குறிக்கும்)


ஒரு பெண் பிள்ளையாரிடத்தில் குழந்தை வரம் கேட்கிறாள்


நத்தத்துப் பிள்ளையாரே
நான் நடந்தேன் மாதாந்தம்
கைக்குழந்தை தந்தியானா-உனக்கு
கடைவிளக்கு நான்விடுவேன்



(நா. வானமாமலை, 1964, ப. 53, 55)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:16 pm

கொண்டாட்டப் பாடல்கள்


கொண்டாட்டம் என்ற சொல்லுக்கு சந்தோஷம், உற்சவம் முதலிய விசேஷங்கள் என்று தமிழ்ப் பேரகராதி பொருள் கூறுகின்றது. மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கொண்டாட்டம் எனலாம். கொண்டாட்டமான சூழல்களில் பாடப்படும் அனைத்துப் பாடல்களையும் கொண்டாட்டப் பாடல்கள் என்று வகைப்படுத்தலாம். கொண்டாட்டப் பாடல்களைச் சமுதாயத்திற்குரியவை, குடும்பத்திற்குரியவை என இரண்டாக வகைப்படுத்திக் கொள்ளலாம்.


சமுதாயத்திற்குரிய கொண்டாட்டப் பாடல்கள்



பொங்கல், தீபாவளி போன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளின் போதும், கார்த்திகை தீபம், ஆடிப்பெருக்கு போன்ற சில பகுதிகளுக்குரிய விழாக்களின் போதும், நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டு விழாக்களின் போதும் மக்கள் பல்வேறு களியாட்டங்களில் ஈடுபடுவர். மக்கள் தாங்களே களியாட்டங்களில் நேரடியாகப் பங்குபெறுவதும் கலைஞர்களைக் கொண்டு களியாட்டங்கள் நிகழ்த்தச் செய்து அதைக் கண்டு கேட்டு மகிழ்தலும் உண்டு. சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சில கலைஞர்கள் தாங்களாகவே களியாட்டங்கள் நிகழ்த்தி வெகுமதி பெறுதலும் உண்டு. இச் சூழலில் பாடல்கள் பாடப்படும். இத்தகைய பாடல்களை சமுதாயத்திற்குரிய கொண்டாட்டப் பாடல்கள் எனக் கூறலாம். இப்பாடல்களைப் பொது மக்கள் பாடல்கள், கலைஞர் பாடல்கள் என்று இரண்டாக வகைப்படுத்திக் கொள்ளலாம்.

பொதுமக்கள் பாடல்கள்


பொதுமக்கள் கும்மி, கோலாட்டம் முதலியவற்றில் நேரடியாகப் பங்கு பெறும் சூழல்களில் பாடப்படும் பாடல்களைப் பொதுமக்கள் பாடல்கள் என்று கூறலாம். சான்றாகப் பின்வரும் பாடலைக் காண்போம்.


ஒரு சொம்பு லே லேலே நீரெடுத்து
ஊத்துங்கடி லே லேலே பூஞ்செடிக்கு
கிள்ளுங்கடி லே லேலே முல்லரும்ப
சாத்துங்கடி லே லேலே சரஸ்வதிக்கு


ரெண்டுசொம்பு லே லேலே நீரெடுத்து
. . . . . . . . . . . . . . . . . .


[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி-2, பக் - 82]





இந்தப் பாடல் ஒரு கும்மிப் பாடல் ஆகும். பெண்களில் ஒருவர் ஓர் அடியைப் பாட ஏனைய பெண்கள் அதே அடியைத் திரும்பப் பாடிக் கும்மியடிப்பர். இந்தப் பாடலின் முதல் நான்கு வரிகள் திரும்பத் திரும்பப் பாடப்படும். அவ்வாறு பாடப்படும் போது முதல் வரியின் முதற் சொல்லான ‘ஒரு சொம்பு’ என்பது மட்டும் ‘ரெண்டு சொம்பு’, ‘மூன்று சொம்பு’ எனப் பத்து வரை எண்ணிப் பாடப்படும். இவ்வாறு எண்ணை மட்டும் மாற்றிப் பாடலைத் திரும்பத் திரும்பப் பாடிக் கும்மியடிப்பர்.


கலைஞர் பாடல்கள்


கலைஞர்கள் பொதுமக்களின் ஆதரவுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவர். விழாக்களின் போது நிகழ்பவை இவை. கரகாட்டம், சிலம்பாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், புலியாட்டம், மயிலாட்டம் முதலியவை பாடல் இடம்பெறாத கலை நிகழ்ச்சிகள். பாடல் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகளும் மிகுதியாக இடம்பெறும். அப்பாடல்களில் கதையோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளும் உண்டு; கதைத் தொடர்பில்லாத நிகழ்ச்சிகளும் உண்டு.


கதையோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளுள் கதைப் பாடல் நிகழ்ச்சி, வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, தெருக்கூத்து, தோல் பொம்மலாட்டம், கொலைச் சிந்து ஆகியன சிறப்புடையன. இவை ஒவ்வொன்றும் தனித் தன்மை கொண்டவை. எனினும் இவை அனைத்தும் அவற்றுக்கென்றே உரிய கலைஞர்களால் பாடப்படுபவை; கதையோடு தொடர்புடைய பாடல் நிகழ்ச்சிகள் என்ற அளவில் ஒன்றுபடுகின்றன. இத்தகைய

நிகழ்ச்சிகளின்போது கதையோடு தொடர்பற்ற உதிரிப் பாடல்களும் இடம் பெறுவதுண்டு. இத்தகைய பாடல்களில் பல அந்தந்தக் கால நிகழ்ச்சிகளைச் செய்தியாகவோ, விமர்சனமாகவோ வெளியிடுவனவாக இருக்கும். இதில் பஞ்சப் பாடல், புயல் - வௌ்ளப்பாடல், விபத்துப் பாடல் முதலியன அடங்கும். இவை தவிர நகைச்சுவையை முதல் நோக்கமாகக் கொண்ட ஏராளமான உதிரிப் பாடல்களும் இது போன்ற நிகழ்ச்சிகளில் பாடப்படும். பொதுவாக இந்தப் பாடல்கள் கதைத் தொடர்பு நிகழ்ச்சிகளின்போது பாடகன் ஓய்வு வேண்டும் போதோ அல்லது நன்கொடைகள் பெறும்போதோ பாடப்படும். இத்தகைய பாடல்களுக்குச் சான்றாகத் தெருக் கூத்தின் போது பாடப்படும் பின்வரும் பாடலைக் கூறலாம்.


தற்கால நாகரிகம் தலையகெடுக்குது இப்ப
டிராமா சினிமா வந்து பெண்கள் துணிய
கெடுக்குது ஆத்தில்கட்டும் பாலம்போல
பூவவைக்கிறாங்கோ அதை பார்த்த மைனர்
பதைபதைத்து துடிதுடிக்கிறாங்க ஆலம்விழுத
போலஜிமிக்கி ஆள மெரட்டுது - அத கண்ணால்
கண்ட மைனரெல்லாம் கண்ணடிக்குது
தங்கமெல்லாம் மாறிப்போச்சு தங்கம் தில்லாலே - இது
வாத்தியார் மாணிக்கப் பாட்டுஇது தாங்கு தில்லாலே
தைதோம் தைதோம் தித்தித்தா.



[ஆறு. இராமநாதன்;
2001, தொகுதி - 3, பக் - 66]


[தலைய - தலையலங்காரத்தை; மைனர் - Minor, பதினெட்டு வயது நிரம்பாத இளைஞன்; ஜிமிக்கி சிறு குடை வடிவில் உள்ள மகளிர் காதணி, தொங்கட்டான்]


கலைஞர்கள் கதைத் தொடர்பில்லாத நிகழ்ச்சிகளான கரகாட்டம், காவடியாட்டம், புலியாட்டம் போன்றவற்றின் இடையிடையே பாடுவதும் உண்டு. இதற்குச் சான்றாகக் கரகாட்ட நிகழ்ச்சியின் இடையே பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்களைக் கூறலாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:18 pm

மஞ்சக்கொல்ல நரிக்கொறவங்க நாங்களசாமி - திருச்சி
மண்டலத்த சுத்திவருவங்க கேளுங்கசாமி அஆ
மண்டலத்த சுத்திவருவங்க கேளுங்கசாமி
சாமிய மறக்கமாட்டோம் சாமி
சத்தியங்க செய்யமாட்டோம்
குளிச்சி மொழுவ மாட்டோம் சாமி
கோவிலுக்கோ போகமாட்டோம்
பொய்பொருட்டு பேசமாட்டோம் சாமி
போலீசு கச்சேரி போகமாட்டோம்
ஊருஊரு சென்றிடுவோம் சாமி
ஒன்றாவந்து சேர்ந்திடுவோம்
பச்சமணி பவளமணி நாங்களசாமி இந்த
பட்டணத்தில் கட்டிவருவோம் கேளுங்க சாமி அஆ
பட்டணத்தில் கட்டிவருவோம் கேளுங்கசாமி
ஏழுபான பொங்கவப்போம் சாமி
எருமகெடா வெட்டிபடைப்போம்
எருமகெடா வெட்டயிலே சாமி
ஏகசத்தம் போட்டிடுவோம்



[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி-3, பக் - 115, 116]


இந்தப் பாடல் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உறுமிசெட் பாடல் என அழைக்கப்படுகின்றது. இதில் நரிக் குறவர்களின் வாழ்க்கை முறை, இயல்புகள், தொழில், வழிபாடு முதலியன பற்றிக் கூறப்பட்டுள்ளது.


குடும்பம் தொடர்பான கொண்டாட்டப் பாடல்கள்


குடும்பத்திற்குரிய கொண்டாட்டங்களில் அந்தக் குடும்பத்தினரும் உறவினரும் மட்டுமே கலந்து கொள்வர். காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, திருமணம் அதனைச் சார்ந்த விழாக்கள், வளைகாப்பு விழா முதலியன குடும்பம் தொடர்பான கொண்டாட்டங்களாகும். இக்கொண்டாட்டச் சூழல்களில் பாடப்படும் பாடல்களை அந்தந்த

நிகழ்ச்சிகளின் பெயரால் காதணி விழாப் பாடல்கள், மணவிழாப் பாடல்கள், சம்பந்தப் பாடல்கள், வளைகாப்புப் பாடல்கள் என்று பெயர் சுட்டிக் குறிப்பிடுவர். ஒரு மணவிழாப் பாடலைப் பாருங்கள். மணவிழாவில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருக்கிடையே கேலிகள் கிண்டல்கள், நகைச்சுவைப் பேச்சுகள் நிறைந்திருக்குமல்லவா! விழாவைக் காண்போர்க்கு இத்தகைய பேச்சுகள் சுவையாக இருக்கும். நாட்டுப் பாடல்களில் இச்சுவையைக் காணலாம்.


ஏரி(யி)லே மேஞ்சிவரும்
எரும ஒதடனுக்க
வச்சிருந்து பொண்குடுத்தன்
வரணப்ப சுங்கிளிய


குட்டையில மேஞ்சிவரும்
குணுக்கு ஒதடனுக்கு
வச்சிருந்து பொண்குடுத்தன்
வரணப்ப சுங்கிளிய


[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி - 3, பக் - 169]
[குணுக்கு - பணியார வகைகளுள் ஒன்று, மாதர் காதணிகளுள் ஒன்று]


இந்தப் பாடலில் மணமகள் வீட்டார் மணமகனைக் கேலி செய்வது தெரிகிறதல்லவா? அதே போல் மணமகளை மணமகனின் சகோதரிகள் கேலி செய்தும் பாடுவர்.


கொக்குக் கழுத்துபோலக்
குறுங்கொடிந்த மங்கையர்க்கு - எங்கள்
கோவேந்தன் தம்பியரும்
எங்கிருந்து வாய்ச்சார் காண்.



(சு. சண்முகசுந்தரம், 1975, ப. 201)


மணமகளை அவள் நாத்தனார், நாழி அரிசி வடிக்கத் தெரியாதவள் என்றும், தன் அண்ணனிடம் சரணடைந்தாள் என்றும் பாடுகிறாள். கேலி சற்று முற்றி ஏச்சுப் போலத் தோன்றுவதும் உண்டு.

நெய்க்கிணறு வெட்டி
நிழல் பார்க்கப் போகும்போது - என்
அண்ணார் அழகைக் கண்டு
பெண்ணாள் சரணமென்றாள்
பால்கிணறு வெட்ட
பல்விளக்கப் போகும்போது - என்
அண்ணார் அழகைக் கண்டு
பெண்ணாள் சரணமென்றாள்
நாழி வரவரிசி நயமாய் வடிக்கிறியா?
நாதேரிச் சிறுக்கிமகள் எங்கிருந்து வாச்சாளோ?
உழக்கு வரவரிசி
உருவா வடிக்கிறியா
ஊதாரிச் சிறுக்கிமகள்
எங்கிருந்து வாச்சாளோ?



(நா. வானமாமலை,
1564, ப. 282)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:20 pm

இரத்தல் பாடல்கள்


இரத்தலாவது யாசித்தல். ஊர் ஊராகச் சென்று யாசித்து வாழ்வதையே வாழ்க்கையாக உடைய நாடோடிகள் பலர் உள்ளனர். பிச்சைக்காரர்கள், குடுகுடுப்பைக்காரர்கள், குறி சொல்லிகள், உண்டிபிலிகாரர்கள் முதலியோர் இவ்வகையினர். இவர்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை முதலியவற்றை யாசிக்கும்போது பாடல்கள் பாடுவதுண்டு. பெரும்பாலும் பாடுவோரின் தேவை பற்றியும், பொருளளிப்போரின் சிறப்பு, எதிர்காலம் பற்றியும் பாடல்கள் அமைந்திருக்கும். பொருள் தர மறுப்போரின் கருமித் தனத்தைக் கேலி செய்யும் பாடல்களும் உண்டு. இவை அனைத்தும் இரத்தலையே - யாசித்தலையே - முதன்மை நோக்காக உடையவை. ஆதலால் இவற்றை இரத்தல் பாடல்கள் என ஒரு பிரிவில் அடக்குவது பொருத்தமானது ஆகும்.

கஞ்சி குடுவகொண்டு நானு
கருவேட்டு மண்ட சுட்டு
இஞ்சி தொய்யிலுடனே நானு
இளங்கொ டியாள் கொண்டு வந்தேன்
மாடறக்கும் காவலனே நானு
மங்கையாள் வாடுறனே.



[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி - 3, பக் - 185]

[தொய்யிலுடனே - துவையலுடன்; மாடறக்கும் - மாடு அறுக்கும்]


இந்தப் பாடல் வீடுவீடாகப் பாடி உணவு, காசு முதலியன வாங்கிச் செல்லும் நோக்கர் எனும் இனத்தவர் பாடிய பாடலின் ஒரு பகுதி ஆகும்.


பெருமாள் மாட்டுக்காரன் பாடி இரக்கிறான் :


சிரிச்சமுகத்தோட
சீதேவி கையோட - ஆயாநீ
கொடுத்தும் குறையாது
குறைவந்தும் நிற்காது.



பிச்சைக்காரி பாடுகிறாள் :


உன்னாட்டம் பெண்ணுக்கு
ஏசாதே பேசாதே - அம்மா
காலணா அரையணா - அம்மா
கால்காசு அரைக்காசு - அம்மா



எவ்வளவு கெஞ்சல் இந்தப் பாட்டில் அடங்கியிருக்கிறது, பாருங்கள்!


குடுகுடுப்பைக்காரன் தேவதைகளை வரவழைத்துப் பாடுகிறான்


காளி கபாலி மகா சூலி மகேஸ்வரி
கருணை செய்ய ஓடி வா.



பண்டாரங்கள் பாட்டில் குறியீடாகத் தத்துவம் மிளிர்கிறது.

நந்த வனத்திலார் ஆண்டி
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி



(சு. சண்முகசுந்தரம், 1975, ப. 204 - 205)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:22 pm

இழப்பு (ஒப்பாரி)ப் பாடல்கள்


மிக நெருங்கியவர்களையோ உடைமைகளையோ இழக்கும் போது ஏற்படும் சோகத்தில் பாடப்படும் பாடல்களை இழப்புப் பாடல்கள் எனலாம்.சாவை ‘இழவு’ எனும் சொல்லால் குறிப்பது உண்டல்லவா! மகளிர் பாடும் ஒப்பாரிப் பாடல்களும் உண்டு; கலைஞர் பாடும் ஒப்பாரிப் பாடல்களும் உண்டு. இறந்து போனவரின் உறவினர்களாகிய பெண்கள் ஒப்பாரி வைத்துப் பாடுவது நாம் அறிவதே. சில இடங்களில் சாவு நிகழ்ச்சியில் கூலி வாங்கிக் கொண்டு ஒப்பாரி பாடுவதற்கென்று கலைஞர்களே உள்ளனர் என்பது நாம் அறியத்தக்க செய்தி.


மகளிர் பாடுவன


நெருங்கிய உறவினர்கள் இறக்கும்போது இழப்பின் துயரம் தாங்காமல் அழும் மகளிர் இறந்தவர்களின் சிறப்புகளையும் அவர்களை இழந்ததால் தாம் அடையப் போகும் துயரங்களையும் பாடலாகப் பாடுவர். கணவன், பிள்ளைகள், தாய், தந்தை, உடன்பிறந்தோர், மாமனார், மாமியார், கொழுந்தன், கொழுந்தி, சுற்றத்தார் ஆகியோர் இறக்கும் போது பாடுவதற்கென்று ஒவ்வொருவர் இழப்பையும் குறிக்கும் தனித் தனிப் பாடல்கள் உள்ளன. இறந்தவுடன் பாடப்படும் பாடல், எட்டாம் நாள் பதினாறாம் நாள் சடங்கில் பாடப்படும் பாடல், இறந்து பல ஆண்டுகள் நினைத்து நினைத்து அழும் பாடல் என்று இப்பாடல்கள் அமைந்துள்ளன. ஆயினும் உயிர் இழப்புப் பாடல்களை அவை பாடப்படும் சூழல்களில் சேகரிக்க இயலாது ஆகையாலும் ஒரு காலத்தில் பாடிய பாடல் மற்ற காலங்களில் பாடப்பட மாட்டாது எனத் திட்டமாகக் கூறவியலாதாகையாலும் ஒரே பாடலே அனைத்துச் சூழல்களிலும் சிற்சில மாறுபாடுகளுடன் பாடப்படுகின்றதாகையாலும் இவற்றைத் தனித் தனியே தெளிவான வகையாகப் பிரிப்பது இயலாமல் போகிறது. எனவே, இவற்றை உயிர் இழப்புப் பாடல்கள் என்ற ஒரே பிரிவில் வகைப்படுத்திக் கொள்வதே பொருத்தம். பாடப்படும் சூழலிலேயே பாடலைப் பதிவு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டால் பாடலின் குறிப்புரையில் அதனைக் குறிப்பிடலாம். உயிர் இழப்புப் பாடல்கள் ஒப்பு, ஒப்பாரி, விண்ணாலம், அழுகாச்சி என்ற சொற்களால் சுட்டப்படுகின்றன.

பாம்பு கடித்து இறந்த கணவனை நினைத்துப் பெண் ஒருத்தி பாடும் பாடலைப் பார்க்கலாம்.


கருப்புக்கர வேஷ்டித்துண்டு
காராளனா போடுந்துண்டு
காராளனும் கன்னியாளும்
கலந்து படுக்கும்போது
கருந்தல நாகேந்திரன்
செவுரேறி வந்ததென்ன
கன்னிய விட்டுப்போச்சி - கன்னிக்கு வந்த
காராளன தொட்டதென்ன.


செவப்புக்கர வேஷ்டித்துண்டு
சீராளனா போடுந்துண்டு
சீராளனும் செல்வியாளும்
சேர்ந்து படுக்கும்போது
செந்தல நாகேந்திரன்
செவுரேறி வந்ததென்ன
செல்விய விட்டுபோச்சி - செல்விக்கு வந்த
சீராளன தொட்டதென்ன.


[ஆறு. இராமநாதன்
2001, தொகுதி 3, பக். 188]


(காராளன் - வேளாளன்; கன்னியாள் - திருமணமானவள் தான்; மோனைக்காகக் கன்னியாக மாறியுள்ளாள்; செவுரேறி - சுவர் ஏறி.)


இது எதிர்பாராத அதிர்ச்சி தந்த சாவு. கணவனை இழந்த இழப்பை மட்டுமே காட்டும் பாடல்.


நம் நாட்டில் கணவனை இழந்த விதவை எஞ்சிய வாழ்நாளில் எவ்வளவோ இழக்கிறாள். தாலி நகை, பட்டு, மங்கலச் சின்னங்கள், ஊராரின் மதிப்பு போன்றவற்றையும் இழக்கிறாள். இவற்றையெல்லாம் சொல்லி அழுவதுண்டு.

கடுகு சிறுதாலி
கல்பதிக்க அட்டியலாம்
கல்பதிக்க அட்டியலை - நான்
கழட்டி வைக்க நாளாச்சே
பட்டு கழட்டி வச்சேன்
பாதம் வரை வெள்ளையிட்டேன்
சிகப்பு கழட்டி வச்சேன் - என்
தேகமெல்லாம் வெள்ளையிட்டேன்



விதவையை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? உறவினர் மதிப்பதில்லை; ஊராரும் மதிப்பதில்லை; உடன் பிறந்தோர் மனைவிகள் விதவையைப் புறக்கணிக்கின்றனர்.


கள்ளிமேல் கத்தாழ
கருணனெல்லாம் எம்பிறப்பு
கருணனுக்கு வந்தவளே - என்னை
மதிக்காளில்லே



விதவை ஊருக்குள் நடுமாடுவதே முடியாததாகி விடுகிறது.


பொன்னு அடுப்பு வச்சு
பொங்க வச்சேன் சாதங்கறி
பொங்கி வெளியவந்தா
பொகை போவச் சன்னலுண்டு
பொங்கி வெளியே வந்தா
புருசனில்லாப் பாவியென்பார்


(நா. வானமாமலை, 1964, ப. 455, 458, 484)


கலைஞர் பாடுவன


சாவு வீடுகளில் பாடல் பாடி மாரடிப்பதற்கென்றே சில கலைஞர்கள் உள்ளனர். தமிழகத்தின் தென் பகுதிகளில் இப்பழக்கம் காணப்படுகின்றது. நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வழங்கும் ‘கூலிக்கு மாரடிப்பவர்’



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:24 pm

என்ற வழக்கு இத்தகைய கலைஞர்களையே சுட்டுகின்றது. இவர்களின் பாடல் "மாரடிப்பாடல்" என அழைக்கப்படுகின்றது. மாரடித்துப் பாடாமல் மேளம் அடித்துக் கொண்டு "கைலாசப் பாடல்" பாடும் கலைஞர்களைத் தமிழகத்தின் வட பகுதிகளில் காணலாம். இறந்தவர்களைக் "கைலாசம்" அனுப்புவதாகப் பாடல் அமையும். இவ்வகைப் பாடல்களும் உயிர் இழப்புப் பாடல்களே. இதற்குச் சான்றாகப் பின்வரும் பாடலைக் கூறலாம்.


தங்கத்த உருக்கியல்லோ - ஏ என் வீமசேனர
வில்லெடுக்கும் ராமரே இன்னைக்கு
தரையிலே ஊத்திவந்தேன்
தங்க(ம்) உருவுலியே - இன்னைக்கு
தங்கருந்து உருவுணுமே
பொன்ன உருக்கியல்லோ - ஏ பாளையப்பட்டே
என் பணமுகத்து வன்னியரே இன்னைக்கு
பூமியிலே ஊத்தி வந்தேன்
பொன்னு உருவுலியே - இன்னைக்கு
பொண்ணாருந்து உருவுணுமே



வேலிமே ஏ வெள்ளருகு - இன்னைக்கு
வெடிக்காத முல்லரும்பு
வெடிச்சி வெளிய வந்தா - இன்னைக்கு
வெசனங்க தோணாதே.

[ஆறு. இராமநாதன்
2001; தொகுதி 3; பக் - 247]


இந்தப் பாடல் இறந்தவரின் பெண் சார்பாக ஆட்டக்காரர்கள் பாடும் பாடல் ஆகும். இது பறை மேளமடித்துப் பாடப்படும் ‘உரைப்பாட்டு’ என்று கூறப்படும்.


(உருவுணுமே - உருக வேண்டுமே. பெண்ணே பாடுவதாக இருந்தால் ‘உருவுறனே’, ‘உருவுனனே’ என்று வந்திருக்கும். ஆட்டக்காரர்கள் பாடுவதால் இவ்வாறு வந்துள்ளது.)

நிலம், பணம் போன்ற பொருள் இழந்த நிலையிலும் மானத்துக்கு ஊறு நேர்ந்த நிலையிலும் குடும்பத்தின் அச்சாணி போன்றவர்களுக்குச் செயலற்ற நிலை வந்துற்ற நிலையிலும் வாழ்க்கையில் தங்களுக்கு இருக்கும் குறைகளால் துயருற்ற நிலையிலும் பெண்களால் தனித்துப் பாடப்படும் பாடல்களைப் பிற இழப்புப் பாடல்களாகக் கருதலாம். இவை பாடல் வடிவத்தால் ஒப்பாரியை ஒத்திருக்கும். இவற்றைப் ‘புலம்பல்’ என்றும் கூறலாம். புலம்பலாவது (துன்பம் வந்துற்ற போது அதனை நினைத்து) தனித்து வருந்துதல். இவ்வகைக்குச் சான்றாகப் பின்வரும் பாடலைக் கூறலாம்.


எட்டு ரூவா கொத்தமல்லி - என்னப் பெத்த அம்மாடி எனக்கு
எழப்பெழச்ச கோடாலி - இந்த ராச்சியத்த
எடுத்து செரா பொளக்க - எனக்கு வாய்ச்ச
இந்திரனும் நோவாளி


பத்துரூவா கொத்தமல்லி
பதுவச்ச கோடாலி - இந்த பழிகார சீமையிலே
பாத்து செரா பொளக்க - எனக்கு வாச்ச
பாண்டியனும் நோவாளி.


[இராமநாதன், ஆறு; 2001, தொகுதி - 3, பக். 255]


இந்தப் பாடல் கணவன் உடல்நலமற்று இருப்பதைச் சொல்லிப் புலம்பும் பாடல் ஆகும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:25 pm

நாட்டுப்புறப் பாடல் - பாடும் உத்திகள்


சில சூழ்நிலைகளில் நீண்ட நேரம் பாடல்களைத் தொடர்ந்து பாட நேர்கிறது. நாட்டுப்புறப் பாடகர்கள் சில எளிய உத்திகளைப் பின்பற்றுவதன் வாயிலாகத் தங்களின் நீண்ட நேரம் பாடும் தேவைகளை நிறைவு செய்து கொள்கிறார்கள். இங்கு இரு உத்திமுறைகளைக் காணலாம்.


நீண்ட பாடல்களை உருவாக்குதல்


தாலாட்டு, ஒப்பாரி, தொழிற் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள் முதலியவற்றைப் பாடும்போது பாடும் காலத் தேவைக்கு ஏற்றவாறு பாடலின் நீளத்தை நீட்டிக் கொள்ளவோ சுருக்கிக் கொள்ளவோ செய்கின்றனர். இதனை அப் பாடகர்கள் எவ்வாறு சாதிக்கின்றனர்?


"ஓர் அடிக்கருத்தைப் பலபட விரித்துரைத்தல் அல்லது சிலவாகச் சுருக்கியுரைத்தல் [Expansion Or Contraction] என்னும் முறையால் தாலாட்டுப் பாடல் கால அளவிற்குத் தக்கவாறு பாடப்படுகிறது" என்றும், "குறைவான கருத்து, ஒரு கருத்தை இரு பத்திகளில், முன் மாதிரி - நேர் பகர்ப்புப் பத்தியமைப்பில் அமைத்தல் என்னும் இவ்விரு முறைகளால் ஒப்பாரிப் பாடல் எளிதாக உருவாகிறது" என்றும் ஒப்பாரி, தாலாட்டு பற்றிய அமைப்பியல் ஆய்வு செய்த பா.ரா. சுப்பிரமணியன் குறிப்பிடுகின்றார். இதன் விளக்கத்தைக் கீழே காணுங்கள்.


ஓர் ஆதார நிகழ்ச்சி அல்லது செயல் அடுக்கப்படுவதன் வாயிலாக ஒரு தொழிற் பாடலையோ அல்லது கொண்டாட்டப் பாடலையோ வேண்டுமளவு நீட்டிக் கொள்ள அடுக்கைக் குறைத்துக் கொள்வதன் மூலம் சுருக்கிக் கொள்ளவும் முடியும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில் நிகழும் வேலைகள் அல்லது ஒரு நிகழ்ச்சி தொடர்பான செயல்கள், உணவு, எண், திசை, வண்ணம், மரம், ஆடை, அணி, விலங்கு, பறவை, உறவு முதலியவற்றின் பெயர்கள் ஆகியவை ஆதார நிகழ்ச்சிகளை அடுக்கிப் பாடலை நீட்டிக் கொள்ளத் துணைபுரியும் என்பதை அறிய முடிந்தது. அடுக்கிக் கூறுவதில் ஓர் ஒற்றுமையைக் காண முடியும். அதாவது வண்ணப் பெயர் முதலில் தொடங்கினால் பாடல் முழுக்க வண்ணப் பெயர்களே தொடர்ந்து அடுக்கிக் கூறப்படும். அது போல எந்த இனத்தில் தொடங்குகிறதோ அந்த இனத்திலேயே தொடரும். அந்த இனத்தில் இனிக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலை வரும்போது வேறு இனம் மாற்றப்பட்டு அதிலேயே தொடரும். இது போன்ற உத்தியைக் கையாண்டே நீண்ட நேரம் பாடுகின்றனர். சான்றாகப் பின்வரும் நடவுப் பாடலைப் பாருங்கள்.

ஆலாமரமோடி ஆலாமரமோடி இந்த
ஆலமரத்து வேரதிலே கலந்த மருந்தையா
மருத்த முறிஐயா மருத்தமுறி ஐயா எந்தன்
மாமன் மகன மகராசனே மருத்த முறிஐயா


மருந்தோ இல்லோடி மருந்தோ இல்லோடி
எந்தன் அத்தமவள ரத்தன கிளியே
மனமோ மருந்தோடி மனமே மருந்தோடி



கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளவை மாற்றமுறும் அடிகள். கீழே பாடலின் மாற்றமுறும் அடிகள் மட்டும் தரப்படுகின்றன. ஏனைய அடிகள் அப்படியே திரும்ப வரும்.


அத்தி மரமோடி அத்தி மரமோடி இந்த
அத்தி மரத்து வேரதிலே கலந்த மருந்தையா
(மருத்த......)


கருவ மரமோடி கருவ மரமோடி இந்த
கருவ மரத்து வேரதிலே கலந்த மருந்தையா
(மருத்த.....)


தென்ன மரமோடி தென்ன மரமோடி இந்த
தென்ன மரத்து வேரதிலே கலந்த மருந்தையா
(மருத்த.....)



[இராமநாதன், ஆறு; 2001; தொகுதி - 2; பக் - 38]


இந்தப் பாடலில் மரங்களின் பெயர்களை மாற்றுவதன் வாயிலாகப் பாடலை வேண்டுமளவு நீட்டித்துக் கொள்வதைக் காணமுடிகிறது.


ஒரே கருத்து அல்லது சிந்தனை சிறுசிறு சொல் மாற்றங்களுடன் திரும்பத் திரும்ப அடுக்கி வருதல் எழுத்திலக்கியத்தில் தாழிசை என்னும் அமைப்பில் காணப்படுவது. நாட்டுப்புறப் பாடல்களில் இத்தகைய அடுக்கு - அதன் மூலமாகப் பாடலை எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டிக் கொள்ளும் வசதி அதிகம். வழக்கமான தாலாட்டு பாடல்களில் குழந்தையின் அழுகைக்குத் தாய் வரிசையாகக் காரணங்களை அடுக்குகிறாள்.

அம்மா அடித்தாளோ கண்ணே
அமுதூட்டும் கையாலே
பாட்டி அடித்தாளோ கண்ணே
பால் வார்க்கும் கையாலே
மாமா அடித்தானோ கண்ணே
மல்லிகைப்பூச் செண்டாலே
மாமி அடித்தாளோ கண்ணே உனக்கு
மைதீட்டும் கையாலே



(நா. வானமாமலை, 1964, ப. 115)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:27 pm

சூழலுக்கேற்பப் பாடலை மாற்றல்


சூழலுக்குத் தக்கவாறு பாடலை மாற்றிக் கொள்ளும் உத்தி முறையாலும் மக்கள் தங்கள் பாடல் தேவையை எளிதில் நிறைவு செய்து கொள்கின்றனர்.


‘காளேஎ - எந்தோழி’, ‘காளையரே’, ‘எந்தோழி காளைகளே’, ‘எந்தோழி காளரியே’, ‘எந்தோழனார் காளைகளே’ போன்ற விளிச் சொற்களையும் ‘ஏலேலம்’, ‘ஏலமே ஏலம்’, ‘ஏலசிங்கேலம்’, ‘ஏலேலம்படி ஏலேலம்’, ‘ஏலேலம் முருகா ஏலேலம்’ போன்ற ஒலிக் குறிப்புச் சொற்களையும் முன்னோ, பின்னோ அல்லது முன்னும் பின்னுமாகவோ பொருத்தமாகச் சேர்ப்பதன் வாயிலாக ஒரே பாடலைச் சூழலுக்கு ஏற்ப ஏர்ப்பாடலாகவோ, கும்மிப் பாடலாகவோ, நடவுப் பாடலாகவோ வேறு தொழிற் பாடலாகவோ மாற்றிக் கொள்ள முடியும்.


ஒப்பாரிப் பாடல் நடவுப் பாடலாகவும் கும்மிப் பாடலாகவும் மாறும் போது ஏற்படும் மாற்றங்களுக்கு ஒரு சான்று காணலாம்.


கூடையிலே கல்பொறுக்கி என்சாமி
கோபுரங்கள் கட்டிவச்சேன் - இந்த
குயில் வந்து சேர்ந்தாலும்
குயில தொரத்தாதீங்க
குயில் முட்டைய எடுக்காதீங்க - இந்த
குயிலோட பாவம் - ஒங்க
கோட்டைய சுத்துமோ.



இது ஓர் ஒப்பாரிப் பாடல்.

"கூடையிலே கல்பொறுக்கி அய்யனே
கோவிரங்கள் உண்டுபண்ணி அய்யனே
கோவிரங்கள் உண்டுபண்ணி
கோவிரத்தின் உள்ளாலதான் அய்யனே
குயிலுபோயி மிட்டையிடும் அய்யனே
குயிலுபோயி மிட்டையிடும்
குயிலவி ராட்டாதீங்கோ அய்யனே
குயில்மிட்டைய எடுக்காதீங்கோ அய்யனே
குயில்மிட்டைய எடுக்காதீங்கோ
குயிலுவிடும் வாசாங்குதான் அய்யனே
கொடியாள சுத்துமையா அய்யனே
கொடியாள சுத்துமையா".



என்பது ஒரு நடவுப் பாடல்.


"கூடையிலே கல்பொறுக்கி
கூடையிலே கல்பொறுக்கி
கூடையிலே கல்பொறுக்கி
கோவிரங்கள் உண்டுபண்ணி


கோவிரத்தின் உள்ளாலே
கோவிரத்தின் உள்ளாலே
கோவிரத்தின் உள்ளாலே
குயிலு வந்து முட்டையிடும்.


[பாடலின் ஏனைய அடிகளும் இவ்வாறே பாடப்படும்]


என்பது ஒரு கும்மிப்பாடல்.


நாட்டுப்புறப் பாடல்களை ஒருவர் பாடுவதைப் போலவே மற்றவர் பாடுவது கிடையாது. ஒருவரே ஒரு பாடலை மறுமுறை பாடும்போது மாற்றம் ஏற்படும். எனவே, இங்குக் காட்டப்பட்ட மூன்று பனுவல்களிலும் காணப்படும் மூலப்பனுவல் வேறுபாடுகள் [உ.ம். கோபுரங்கள் கட்டி வச்சேன் - கோவிரங்கள் உண்டுபண்ணி] இயல்பானவையே. ஆனால் பாடப்படும் முறையால் ஒப்பாரிப் பாடலிலிருந்து நடவுப் பாடலும், கும்மிப் பாடலும் முற்றிலும் மாறுபடுவதைக் காணலாம். ‘என்சாமி’, ‘அய்யனே’ போன்ற சொற்களும் இசை மாற்றமும் பாடும் தொனியும், சூழலுக்குத் தக்கவாறு மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத்தக்க நெகிழ்ச்சியான பாடலமைப்பும் ஒரே பாடலைச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வதில் மக்களுக்குத் துணைபுரிகின்றன.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:28 pm

தமிழகத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் சேகரிப்பு


சார்லஸ் இ. கோவர் [Charles E. Gowar] என்னும் ஆங்கில ஆட்சியாளர் தமிழ் நாட்டுப்புறப் பாடல் சேகரிப்புப் பணியைத் தொடங்கி வைத்தார். Folk Songs of Southern India என்ற இவருடைய நூல் 1871 இல் வெளிவந்தது. தமிழ் நாட்டுப்புறப் பாடல்களை ஆங்கிலத்தில் வெளியிட்ட முதல் நூல் இது. இந்திய மக்களின் உணர்வுகளை ஐரோப்பியர்கள் உள்ளது உள்ளபடி அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களை நல்குவது அவருடைய முதல் நோக்கம் என்பதை அவரே தமது முன்னுரையில் குறிப்பிடுகின்றார். தேவராஜு பிள்ளை என்ற பி.ஏ பட்டதாரியின் உதவியுடன் இவர் சேகரிப்புப் பணியைச் செய்தார். மொழி தெரியாத கோவர் நாட்டுப்புறப் பாடல்கள் எவை, எழுத்திலக்கியம் எவை என்று இனம் பிரித்து அறியாமல் இரண்டையும் தமது நூலில் தந்துள்ளார். திருக்குறள், பத்ரகிரியார் பாடல்கள், கபிலர் அகவல், சிவவாக்கியர் பாடல்கள் போன்றவற்றை நாட்டுப்புறப் பாடல்கள் எனக் கொண்டு மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். தொழிலாளர்களின் நாட்டுப்புறப் பாடல்கள் இந்நூலின் சிறப்பம்சம். ஆனால் அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழிலும் தந்திருந்தால் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட பழமையான தமிழ் நாட்டுப்புறப் பாடல்களாக அவை இருந்திருக்கும்.


1910இல் ‘விவேக சிந்தாமணி’ இதழில் கல்யாணப் பாட்டு வெளிவந்தது. முதன் முதலாக நாட்டுப்புற இலக்கியத்தை வெளியிட்ட தமிழ் இதழ் இதுவாக இருக்க வேண்டும் என்று சு.சண்முகசுந்தரம் கருதுகின்றார்.


சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1939இல் ‘குழந்தைப் பாட்டுகள்’ என்ற தலைப்பில் சிறு நூலை வெளியிட்டது.


கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இதுவரை தமிழில் வெளிவந்த நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு நூல்கள் 97. சார்லஸ் கோவர் நூல் இதில் சேர்க்கப்படவில்லை. இவை பக்க அளவால் வேறுபட்டவை. சான்றாக ‘மலையாள நாட்டுப்புறப் பாடல்கள்’ 41 பக்கங்களைக் கொண்டது. ‘மன்னார் நாட்டுப் பாடல்கள்’ 46 பக்கங்களைக் கொண்டது. ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ 667 பக்கங்களைக் கொண்டது.


வெளிவந்த நூல்களுள் 18 நூல்கள் இலங்கையில் சேகரிக்கப்பட்டு வெளிவந்தவை. ஏனையவை தமிழ் நாட்டில் சேகரிக்கப்பட்டு வெளிவந்தவை. 1955க்கு முன் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்த தொகுப்பு நூல்கள் அதற்குப்பின் தொடர்ச்சியாக (1963, 68, 89, 92 ஆம் ஆண்டுகள் தவிர்த்து) ஒரே சீராக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட பாடல் வகையை மட்டும் வெளியிடும் நூல்கள் பல வெளிவந்துள்ளன. அவற்றுள் குழந்தை மற்றும் தாலாட்டுப் பாடல் நூல்களும் (மொத்தம் 9) ஒப்பாரி நூல்களும் (8) எண்ணிக்கையில் அதிகம். திருமணப் பாடல் நூல்கள் மூன்றும், பூசாரிப் பாடல்கள் இரண்டும், தொழிற்பாடல்களுள் ஏற்றப் பாடல் நூல்கள் மூன்றும், தொழில் பாடல் என்ற தலைப்பில் ஒன்றும் அம்பாப் பாடல், நடவுப்பாடல் என்பன தலைக்கு ஒன்றும் வெளிவந்துள்ளன. இராவாண்டைப் பாடல், சிறுவர் பாடல், தெய்வப் பாடல், தெம்மாங்குப் பாடல், சடங்குப் பாடல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நூல் வெளிவந்துள்ளது.


சேகரிக்கப்பட்ட இடப்பகுதி அடிப்படையில் தஞ்சை மாவட்டத்துப் பாடல்கள் ஒரு நூலும், நெல்லை மாவட்டப் பாடல்கள் இரு நூல்களும், கொங்கு நாட்டுப் பாடல்கள் இரு தொகுதிகளும் வெளிவந்துள்ளன. கத்திரி மலை, பாலை மலை மக்களின் பாடல்கள் தலா ஒவ்வொன்று வெளிவந்துள்ளன. இலங்கையிலிருந்து வட இலங்கை மன்னார், மட்டக் களப்பு, வன்னிவள நாடு போன்ற பகுதிகளின் பாடல்கள் அந்தந்த இடப் பெயர்களால் வெளியிடப்பட்டுள்ளன.


மொழி பெயர்ப்பு நூலாக மலையாள நாட்டுப்புறப் பாடல் (சிறுநூல்) மட்டும் வெளிவந்துள்ளது.


கதம்பக ஒப்பாரி, பதினாறு ஒப்பாரிக் கட்டடம், நவரத்தின ஒப்பாரி மற்றும் 1978இல் வெளிவந்துள்ள 'ஒப்பாரிப் பாடல்' ஆகிய நூல்கள் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டவை அல்ல, எழுதி வெளியிடப்பட்டவை.


‘கும்மிப் பாடல்கள்’ என்னும் நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டவை அல்ல. எழுதப்பட்ட இலக்கியங்களின் பதிப்பு.


தமிழகத்தில் இசுலாமியர்களின் பாடல்கள் சேகரித்து வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் இலங்கையிலிருந்து இசுலாமியத் தமிழர்களால் இசுலாமியர்களிடம் சேகரிக்கப்பட்டுச் சுமார் ஐந்து நாட்டுப்புறப் பாடல் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


மேலே காட்டப்பட்டுள்ள தொகுப்பு நூல்களேயன்றி நாட்டுப்புறப்பாடல் ஆய்வு நூல்களின் பின்னிணைப்புகளிலும் எடுத்துக்காட்டுகளிலும் பாடல்கள் பல இடம்பெற்றுள்ளன. அவற்றுள் அ.மு. பரமசிவானந்தம் (1984), டாக்டர். பா.ரா. சுப்பிரமணியன் (1975), டாக்டர். இ. பாலசுந்தரம் (1979), டாக்டர். மீ.அ.மு. நாசீர் அலி (1987), சி. ருக்மணி (1988), செங்கோ வரதராசன் (1979, 1988), ஆறு. இராமநாதன் (1988), பேராசிரியர் வி. அசோக் குமார் (1992), டாக்டர். மா. கோதண்டராமன் (1996) போன்றோரின் ஆய்வு நூல்கள் குறிப்பிடத் தக்கவை. அசோக் குமார் சமணர்களிடமிருந்து பாடல் சேகரித்துள்ளார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:31 pm

மேலும் நாட்டுப்புறப் புலவர்களால் எழுதி 19ஆம்நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சிறு சிறு நூல்களாக வெளியிடப்பட்ட கும்மி, குறவன் குறத்தி பாட்டு, சம்பந்தி ஏசல் முதலான ஏசல் பாடல்கள், கல்யாணப் பாடல்கள், ஏற்றப் பாடல்கள், தாலாட்டுகள், ஒப்பாரிகள், கொலைச் சிந்துகள், தற்கொலைச் சிந்துகள், தெருக்கூத்துப் பாடல்கள் முதலானவை எண்ணிலடங்கா. இவை வாய்மொழி மரபில் கலந்து விட்ட நிலையை இங்குக் குறிப்பிடலாம்.


இதுவரை வெளிவந்துள்ள நாட்டுப்புறப் பாடல் நூல்களில் மிகச் சிறப்பானதாக ‘நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம்’ என்னும் நூலைக் கூறலாம். இது மெய்யப்பன் பதிப்பக வெளியீடாக 2001இல் வெளிவந்த நூல். பத்துத் தொகுதிகளைக் கொண்டது. இதன் முதன்மைப் பதிப்பாசிரியர் ஆறு. இராமநாதன். இந்நூல் தமிழகத்தின் தலைசிறந்த நாட்டுப்புறவியல் அறிஞர்களால் தமிழகத்தின் இருபது மாவட்டங்களைச் சேர்ந்த 225 ஊர்களிலிருந்து 625 பாடகர்களிடம் களப்பணி வாயிலாகச் சேகரிக்கப்பட்ட பாடல்களைக் கொண்டுள்ளது. இந்நூலின் தொகுதிகளில் 1493 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. நாட்டுப்புறவியல் ஆய்வாளருக்குப் பெரிதும் உதவும் வண்ணம் இருப்பதோடு சாதாரண மக்களும் படித்துச் சுவைக்கும் வண்ணம் இத்தொகுதிகள் அமைந்துள்ளன.


இவையேயன்றித் தமிழகம் முழுவதும் எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி. பட்டங்களுக்காக நடைபெற்ற ஆய்வுகளுக்காக ஏராளமான பாடல்கள் சேகரிக்கப்பட்டு அச்சிடப்படாமல் ஆய்வேடுகளில் உள்ளன. பல்வேறு இதழ்களில் நாட்டுப்புறப் பாடல்கள் வெளிவந்துள்ளன. பல ஆய்வுக் கட்டுரைகளிலும் ஆய்வாளர்கள் புதுப்புதுப் பாடல்களைச் சேகரித்து வெளியிட்டுள்ளனர்.


இதுவரை கண்டவற்றை அடிப்படையாகக் கொண்டு சில கருத்துக்களை நிறைவாகச் சுட்டலாம்.


எழுத்திலக்கியங்கள் தோன்றி வளர்ச்சி பெற்ற போதும் தமிழர்கள் நாட்டுப்புறப் பாடல்களில் தொடர்ந்து ஆர்வம் காட்டியிருக்கின்றனர். அவற்றைச் செப்பமான இலக்கியங்களாக்கியும், இலக்கியங்களில் சுட்டியும் வந்துள்ளனர். பல்வேறு நோக்கங்களுக்காக மக்களை அணுக வேண்டிய காலகட்டங்களில் எல்லாம் நாட்டுப்புறப் பாடல் வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அவற்றைச் சேகரித்துத் தனி நிலையில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.


காலச் சூழலின் தூண்டுதலால் சார்லஸ் கோவர் 1871இல் தமிழ் நாட்டுப்புறப் பாடல் சேகரிப்புப் பணியைத் தொடங்கி வைத்தார். ஏறத்தாழ 134 ஆண்டுகள் கடந்த நிலையில் 96க்கு மேற்பட்ட நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன.

பாடல்களைக் சேகரிப்பதற்கான காரணங்கள் காலத்துக்குக் காலம் மாறி வருகின்றன. மதம், அரசியல், தேசீய உணர்வு, பிரச்சாரம், கல்வி, சாதி என்று பல காரணங்கள் உள்ளன.


வெளிவந்த நூல்களின் எண்ணிக்கை பலவாயினும் சில நூல்களே குறிப்பிடத் தக்கவையாக உள்ளன. அவற்றிலும் பல குறைகள் காணப்படுவதை ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர். பாடல்கள் செப்பம் செய்யப்பட்ட நிலை (பேச்சு மொழியை எழுத்து மொழியாக மாற்றியமை), சேகரிப்பு விவரம் இல்லாத நிலை, பாடகர் விவரம் இல்லாத நிலை, விளக்கம் தரப்படாத நிலை போன்றவை குறிப்பிடத்தக்கவை. களப் பணியில் ஈடுபட்டுப் பாடல் சேகரித்த பதிப்பாசிரியர்கள் குறைவு. அவர்களுக்குள்ளும் முறையாகச் சேகரித்தவர்கள் மிகமிகக் குறைவு.


பல பதிப்பாசிரியர்கள் ஆர்வமாகப் பாடல்கள் சேகரித்தனர். இவர்களின் ஆர்வம் பாராட்டத்தக்கது; போற்றத்தக்கது. இவர்கள் தந்துள்ள பாடல்களில் பல விவரங்கள் இல்லை. இவர்கள் பாடல்களின் பனுவல் [Text] எதிர்கால வரலாற்று / ஒப்பீட்டு ஆய்வுகளுக்குப் பயன்படும்.


நாட்டுப்புறப் பாடல் சேகரிப்பு மற்றும் பதிப்புப் பணி குறித்து இதுவரை கூறாத சில செய்திகளையும் இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.


வணிக நோக்கில் பிற நூல்களிலிருந்து எவ்வித நன்றி அறிவிப்பும் இன்றிப் பாடல்களை எடுத்து நூலாக வெளியிடும் போக்கினையும், தங்கள் சேகரிப்புப் போல் ‘பாவனை’ செய்து ஆய்வுகளில் பயன்படுத்துவதையும் காண முடிகின்றது. இத்தகைய பதிப்பாளர்கள் / ஆய்வாளர்கள் ஒரே பாடல் பல இடங்களிலும் பாடப்படும் என்னும் நாட்டுப்புறப்பாடல் இயல்பினைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர். ‘ஒரு பாடலை ஒரு பாடகரே மறுமுறை பாடும்போது அதில் மாற்றம் காணப்படும்’ என்பதை அவர்கள் மறந்துவிடுவதால் அம்பலப்பட்டு விடுகிறார்கள். சில ஆய்வாளர்கள் தங்கள் கருத்துக்கேற்ப நாட்டுப்புறப் பாடலையே மாற்றி விடுகின்றனர்.


இதுவரை வெளிவந்த நாட்டுப்புறப் பாடல் பதிப்பு நூல்களைப் படிக்கும் வாசகர்களும் ஆய்வுத் தரவுகளாகக் கொள்ளும் ஆய்வாளர்களும் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக