புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
31 Posts - 36%
prajai
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
3 Posts - 3%
Jenila
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
1 Post - 1%
M. Priya
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
1 Post - 1%
jairam
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
7 Posts - 5%
prajai
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
6 Posts - 4%
Jenila
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
4 Posts - 3%
Rutu
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
2 Posts - 1%
manikavi
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 14 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசூர் வம்சம் (நாவல்)


   
   

Page 14 of 17 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:00 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
அரசூர் வம்சம் - இரா முருகன்


பாயிரம்

அரசூர் பற்றி எழுது.

முன்னோர்கள் சொன்னார்கள்.

அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.

அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.

அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.

அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.

குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.

எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.

வாசலில் செருப்புச் சத்தம்.

திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.

முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.

எழுது.

பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.

என்ன எழுதட்டும் ?

இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.

பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.

எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.

ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.

முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.

அரசூரும் இருக்கிறது.

ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.

இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.

எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.

நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.

பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.

அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.

கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.

வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.

மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.

இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?

இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:09 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் நாற்பத்திரெண்டு



ராஜா என்ன சொல்லிப் பார்த்தாலும் ஜோசியர் விடுகிற வழியாக இல்லை.

இதை நிர்மாணம் செய்யப் பக்கபலமா இருந்து சகல ஆதரவும் கொடுத்தது சமூகம்தான். லோக க்ஷேமத்துக்காக யந்திரத்தை ஸ்தாபனம் பண்ணியாச்சு. அங்குரார்ப்பணம் செஞ்சா அது பாட்டுக்கு இயங்க ஆரம்பிச்சுடும். நீங்க வந்தால்தான் அதெல்லாம் நடக்கும்.

அய்யன் கெஞ்சிக் கூப்பிடும்போது தட்ட முடியவில்லை. ஆனாலும், இந்த வகையில் இன்னும் ஏதாவது காசு பிடுங்கத் தந்திரோபாயமோ என்றும் சந்தேகமில்லாமல் இல்லை.

வரலாம்தான் அய்யரே. ஆனா, அரண்மனைத் தோட்டத்திலே அந்த இடம் புகையிலை வீட்டுக்காரங்க பாத்யதையிலே இருக்கப்பட்டதாச்சே ?

அது குத்தகை தானே மகாராஜா ? அதுக்கு அப்புறம் உங்களுக்குத்தானே திரும்பி வரும் ? இந்த பூபரப்புக்கெல்லாம் அதிபதி நீங்களில்லையா ?

சந்தேகமே கிஞ்சித்தும் வேண்டாம். அய்யன் குடுமியை முடிந்து கொண்டு இறங்கி இருப்பதே மடியிலே பணம் முடிந்துகொண்டு திரும்பத்தான். இன்னும் தொண்ணூத்தொம்பது வருசம் கழித்து புகையிலைக்காரர் இந்தா பிடி என்று எல்லாவற்றையும் திரும்ப ஒப்படைத்துவிட்டுப் போக உயிரோடு இருக்கப் போவதில்லை. வாங்கிக் கொள்ள ராஜாவும் இருக்க மாட்டார். ஜோசியக்கார அய்யரும் சாட்சிக்கு வந்து நிற்க மாட்டார் என்பதும் திண்ணம்.

ஆனாலும் விநோத வாகனக் களவாணிகள் இருப்பார்கள் என்றார்கள் முன்னோர்கள். ஜோசியக்கார அய்யரோடு அவர்களும் நுழைந்திருந்தார்கள் வார்த்தை சொல்ல.

முன்னோர்கள் சொல்வது நடக்கக் கூடியதுதான் என்று பட்டது ராஜாவுக்கும்.

புகையிலை அய்யருக்குப் பாகப் பிரிவினை செய்தமாதிரி அரண்மனைக்குள் இடம் பிரித்துக் கொடுத்த பிற்பாடு முன்னோர்களும் தங்குதடையில்லாமல் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் முன் எப்போதையும் போல். ஆனால், அந்தப் பாப்பாத்தியம்மாளைக் கொஞ்ச நாளாகக் காணவில்லை அவர்களோடு.

எல்லாமே நல்லதுக்குத்தான் என்று நினைத்துக்கொண்டார் ராஜா.

சுப்பிரமண்ய அய்யர்வாளும் நீங்க வந்து முன்னாலே இருந்து நடத்திக் கொடுத்தாத்தான் நிறக்கும்னு ஏக அபிப்ராயத்தோட இருக்கார். இதுக்கான சடங்கு, சம்பிரதாயம், பூஜை, புனஸ்காரம் எல்லாம் அவர் செலவிலே தான் நடக்கப்போறது. சக்ரவர்த்திகள் சக்ரவர்த்தினியோடு எழுந்தருளி இருந்து அனுக்ரஹம் செஞ்சா எதேஷ்டம்.

ஜோசியக்கார அய்யர் திரும்பச் சொன்னார்.

புஸ்தி மீசைக் கிழவன் சாவுக்குக் கூப்பிட்டனுப்பி பிருஷ்டத்தைத் தாங்கிப் பிடித்து மைத்துனன் வகையறாக்கள் உபச்சாரம் செய்ததை விட இது அதிக சந்தோஷகரமானதாக இருந்தது ராஜாவுக்கு. இந்த மரியாதையோடேயே தானும் ராணியும் போய்ச் சேர்ந்துவிட்டால் அப்புறம் சீமையில் போய்க் குளிர்காலத்தில் மூத்திரச் சட்டியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு கையேந்தியபடி அலைய வேண்டாம்.

சொல்லிடலாமா ? சொல்லிடலாமா ?

புஸ்தி மீசைக் கிழவன் யாரையோ கேட்டான். அவன் பாதிரியார் மாதிரி அங்கியும் காலில் தோல் பாதரட்சைகளும் அணிந்து முன்னைக்கிப்போது மிடுக்காக இருந்தான். இரண்டு வில்லை கண்ணாடிச் சில்லுகளை எப்படியோ கட்டி நிறுத்தி அதைக் கண்ணுக்கு முன்னால் அணிந்து கொண்டும், இடுப்பில் நீளத் தொங்கிய பட்டுக் கயறில் ஒரு கடியாரமுமாக அவன் இருந்த ஒய்யாரம் சொல்லி மாளாது.

போய்ச் சேர்வதில் இருக்கும் வசதிகள் நிறைய என்றுபட்டது ராஜாவுக்கு. இப்படி வேளைக்கு ஒன்றாகச் சிங்காரித்துக் கொள்ளலாம். நாலு அன்னிய பாஷையும் தன்னாலே வந்து சேரும். மல மூத்திரம் சரிவரப் பிரியாமல் திரேக அசெளகரியம் எல்லாம் எப்போதும் கிடையாது. அப்புறம் இன்னதென்று வேலைவெட்டி இல்லாமல் அவ்வப்போது ஊர் வம்பு பேச ஆஜராகி விடலாம். என்ன, சாராயம் எல்லாம் கிடைக்காது. போகட்டும். சாராயம் மட்டும்தானா உலகத்தில் எல்லாம் ?

மருதையா, உன் மருமவன் கிட்டே நல்ல சமாச்சாரம் இப்போ ஒண்ணும் கோடிகாட்ட வேணாம். ஆனா நாளைக்கு அமாவாசை ராத்திரிக்கு சாராயம் ஊத்திப் போடணும்னு ஐயர் கிட்டே சொல்லச் சொல்லு.

இன்னொரு பெரிசு ராஜா நாற்காலியை ஒட்டி நின்று கொண்டு வெள்ளைப் பூண்டும் பெருங்காயமும் சாப்பிட்டது மூச்சில் வரச் சொன்னது. அந்த வாடை எதிரில் கூனிக் குறுகி நின்ற ஜோசியக்கார அய்யர் மூக்கிலும் துளைத்திருக்க வேண்டும். அய்யர் தோளில் கிடந்த உத்தரியத்தால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறது போல் மூக்கைப் பிடித்தபடி தீர்க்கமாக சுவாசம் விட்டதை ராஜா கவனிக்கத் தவறவில்லை.

ஐயரே, நாளைக்கு எப்போன்னு சொல்லுங்க. காரியஸ்தன் கிட்டே கேட்டு அந்த நேரத்திலே ராஜாங்க சோலி ஏதும் இல்லாம இருந்தா நானும் ராணியம்மாவும் அவசியம் கலந்துக்கறோம். அப்புறம் ஒண்ணு. நாளைக்கு அமாவாசை ஆச்சுதா ?

ஆமாமா, அது கொண்டுதானே வச்சிருக்கு இந்தக் கிரிசை எல்லாம் நாளைக்கு ? நீங்களும் காலையிலே பித்ரு தர்ப்பணம் செய்து பெரியவாளுக்கு எள்ளும் தண்ணியும் இரைக்கணுமே ? அதை பிரம்ம முகூர்த்தத்துலேயே முடிச்சுக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:10 pm

அவுகளுக்கு எள்ளும் தண்ணியும் என்னமோ சரிதான். ஆனால் கொஞ்சம் போல் சாராயமும் இருந்தா நல்லா இருக்கும்னு அபிப்ராயப்படறாங்க.

ராஜா சொல்லிக் கொண்டிருந்தபோதே பாம் பாம் என்று சத்தம் போட்டுக் கொண்டு வாசலில் நூதன வாகனம் வந்து நின்றது. இறுக்கமான வெள்ளைக் குப்பாயம் இடுப்புக்கு மேலே தரித்த களவாணிகள் தான்.

ராஜா நினைக்காவிட்டால் என்ன ? முன்னோர்கள் நினைத்த மாத்திரத்திலேயே பயல்கள் வந்து இறங்கி விட்டார்கள்.

எடா, கொஞ்சம் உப்பு எடுத்துக்கொண்டு விரசாக ஓடிவா.

ராஜா இரைய சமையல்காரன் சிட்டிகை உப்பை ஒரு கரண்டியில் ஏந்தியபடிக்கு ஓட்டமாக ஓடி வந்தான்.

கோழி அறுத்துக் கொண்டிருந்தான் கறி வைக்க. இழுத்துப் பிடித்துக் கூட்டி வந்தேன் என்றான் புஸ்தி மீசைக் கிழவன். அவன் கோழி ரத்தம் படிந்த தன் விரலைக் குச்சி மிட்டாய் போல் திருப்தியாக சூப்பிக் கொண்டிருந்தான்.

உனக்குப் புண்ணியமாப் போறது. நாளைக்கு ராத்திரி சாராயத்தோட கொஞ்சம் காடைக்கறியும் படைச்சுடு.

புஸ்தி மீசையான் கேட்க அது எப்படி சாத்தியமாகும் என்று ராஜா யோசித்தார்.

ஐயரிடம் சாராயம் ஊத்தறதுக்கான சம்பிரதாயத்தை எழுதி வாங்கிக்கோ. அப்படியே அதை அந்தக் களவாணிகள் நடத்தித்தர சன்னத்தையும். மீதியை நாங்க பாத்துக்கறோம்.

புஸ்தி மீசையான் கம்பீரமாகச் சொல்லியபடி பிரம்மாண்டமான கொக்கு போல் வெள்ளை உடுப்போடு அறைக்கு மேலே எழும்பி அங்கேயும் இங்கேயும் பறந்து வேடிக்கை விநோதமாகப் பொழுது போக்க ஆரம்பித்தான்.

சரி அய்யரே, நான் நாளைக்கு வரேன். அப்படியே உம்ம கிட்டே இன்னொன்னும் பேசி முடிவாக்க வேண்டியிருக்கு. இன்னிக்கு சாயந்திரம் வெய்யில் தாழ வந்தா அதை முடிச்சுடலாம்.

ராஜா சொல்ல, மரியாதையாகச் சரி வருகிறேன் என்று தலையசைத்துப் போனார் ஜோசியர்.

இது ராஜாவே கூப்பிட்டு அனுப்பிய சமாச்சாரம் என்பதால் தட்சிணை வைத்துத்தான் ஆக வேண்டும்.

சரி, என்னவோ விஷயம் சொல்றதாச் சொன்னீங்களே மாமா ? அதைச் சொல்லிப் போடுவதுதானே ?

ராஜா புஸ்தி மீசைக்கிழவனை ஆர்வமாக விசாரித்தார். பனியன் சகோதரர்கள் வாசலில் செருப்பை விட்டுவிட்டு அரண்மனைக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். கையில் பெரிய தோதில் இரண்டு புத்தகங்களைப் பிடித்தபடி இருந்தார்கள் அவர்கள்.

கொக்கோகமா ? வெள்ளைக்காரிகளும் வெள்ளைக்காரன்களும் அடங்காமல் அலைந்து குளிருக்கு அடக்கமாகக் கூடி முயங்கியதை கர்மசிரத்தையாகக் கருப்புப் பெட்டியில் பிடித்து வைத்து அச்சுப்போட்டு எடுத்து வந்த புத்தகமா இரண்டும் ?

உன் புத்தி எப்பவும் கவட்டுலே தான். மேலே வாப்பா.

புஸ்தி மீசையான் மகா உத்தமன் போல் ராஜா தோளில் வலது காலால் வருடியபடி சொல்லியபடி பறந்துகொண்டிருந்தான் அறைக்குள்.

சரி, கிளம்பலாம், இவன்கள் போன அப்புறம் மீதி விசயம் எல்லாம் சாவகாசமாகப் பேசிக்கலாம்.

ஏதோ சொல்லட்டா சொல்லட்டான்னு கேட்டாங்களே மாமா ?

ராஜா கெஞ்சினார்.

எல்லாம் நல்ல விஷயம் தான். சில்லுண்டிச் செலவுக்கெல்லாம் யோசிக்காதே. மலை மாதிரி அதிர்ஷ்டம் வருது.

குடுகுடுப்பாண்டி மாதிரி புஸ்தி மீசையான் சொல்ல, அவனையும் இழுத்துக்கொண்டு மற்ற முன்னோர்கள் ஒற்றைச் சாட்டத்தில் மறைந்து போனபோது பனியன் சகோதரர்கள் அறை வாசலில் தயங்கி நின்றார்கள்.

ராஜா வெளியே பார்த்தார். இரும்புக் கதவு அடைத்த காடிகானாவும், குதிரை லாயமும் தோட்டத்தில் சின்னத் தோதில் காரைக் கட்டிடமும் கண்ணில் பட்டன. எல்லாத்துக்கும் உள்ளே புகையிலை தான் அடைத்து இருக்கிறது. பக்கத்திலே திரும்பவும் எழும்பி இருந்தது அய்யர் வீடு. அது முன்னால் நெட்டை பனியன் போல் உசரமாக இருந்தது. இப்போது குறுக்கே பெருத்து மேலே மச்சில்லாமல் குட்டை பனியன் போக் குள்ளமாக நிற்கிறது. அவனைப் போலவே வெள்ளைச் சாயம் தரித்துக் கொண்டு.

இடுப்பில் உப்பை முடிந்துகொண்டு, வாங்க உள்ளே என்று ராஜா உத்திரவு போட்டார்.

என்ன விஷயமா வந்திருக்கிறீங்க ?

எதுவும் தெரியாததுபோல் ராஜா விசாரித்தார்.

அவிடத்திலே கூப்பிட்டனுப்பினது ராஜாங்கக் காரியத்துக்கு இடையிலே மறந்து போயிருக்கலாம்.

குட்டை பனியன் பணிவிலும் பணிவாகச் சொல்லியபடி கையில் பிடித்திருந்த பேரேட்டைக் கட்கத்தில் இடுக்கிக் கொண்டு ஒரு எலுமிச்சம்பழத்தை மரியாதைக்கு நீட்டினான். ராஜா அதை முகர்ந்து விட்டு உடனடியாகக் குப்பாயத்திற்குள் போட்டுக் கொண்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:11 pm

பூத்திருவிழா வருதில்லே ? அதான் வசூலுக்குப் பட்டணம் போயிருந்தோம்.

நெட்டை பனியன் சொன்னான்.

அது தான் நான் நடத்தறேனே. என்னத்துக்கு வசூல் என்று ராஜா கேட்டபோது அவர்கள் சிரித்தார்கள். ராஜாவுக்குத் தன் வார்த்தையின் அபத்தம் அப்போதுதான் புலப்பட்டது.

ஆமாமா, இது வருங்காலத்துலே நடக்கற திருவிழா இல்லையா. நான் எங்கே நடத்தப்போறேன் ?

ராஜா தன்னிரக்கத்தோடு தலையை அந்தப்பக்கமும் இந்தப் பக்கமும் ஆட்டியபடி முணுமுணுத்தார்.

சமூகம் இருக்காவிட்டாலும் ராஜ பரம்பரை இருக்குமே.

குட்டை பனியன் உபசாரமாகச் சொல்லியபடி தடித்த புத்தகத்தில் ஒன்றை நீட்டினான்.

பிரித்துப் பார்க்க, சேடிப்பெண் அதி ஒய்யாரமாக புஸ்திமீசைக் கிழவனைப் படுக்க வைத்துக் குடத்தில் நீர் எடுத்து வழிய வழிய அவன் மேல் பொழிந்து கொண்டிருந்த நேர்த்தியான படம்.

அருமையா இருக்கு.

ராஜா மனம் திறந்து பாராட்டினார். புஸ்திமீசையான் இந்தப் புத்தகத்தையும் சாராயத்தோடு கேட்டு வாங்கிக் கொள்வான் என்று பட்டது ராஜாவுக்கு. அந்தப் படத்தை மேலும் கீழும் அசைக்க, தொடுக்கினாற்போல் புத்தகத்தில் வைத்த அது கையோடு வந்து விட்டது.

நல்லதுக்குத்தான் இது என்று ராஜா அதை எடுத்து மேஜை மேல் வைத்தார். தொடர்ந்து புத்தகத்தைப் புரட்ட எல்லாப் பக்கத்திலும் கல்யாண மாப்பிள்ளை போல் தோரணையாக புஸ்தி மீசையான் தான்.

போகட்டும். நாளைக்கு அமாவாசை ராத்திரிக்கு இதையும் அவனுக்கும் மற்ற முன்னோர்களுக்கும் காட்டித் தரலாம். கூடவே சாராயமும் காடைக்கறியும்.

ராஜா உள்ளே போய் வராகனோடு திரும்பி வந்தார். எப்போதும் போல் இல்லாமல் அவர் முகத்தில் கும்மாளச் சிரிப்பு. முன்னோர்கள் நல்லது நடக்கும் என்கிறார்கள். கஜானா காலியாகிற அளவுக்கு எல்லா வராகனும் காத்தானுக்கும் தீத்தானுக்கும் போய்ச் சேர்ந்தாலும், நாளைக்கே எல்லாம் வட்டியும் முதலுமாகத் திரும்பி வந்து விடும்.

நாளைக்கு ராத்திரி இருபது புட்டி சாராயத்தோடு வரணும். என்ன, சரியா ?

அவர் புன்சிரிப்போடு விசாரித்தபடி வராகனை உயர்த்திப் போட்டுப் பிடித்து விளையாடினார். பழுக்காத்தட்டில் கேட்ட சோகமான ஒப்பாரி ஒன்றை வார்த்தை இல்லாமல் அவர் வாய் சந்தோஷமாக முணுமுணுத்தது.

சாராயம்தானே ? சமூகத்துக்கு எந்தக் கவலையும் வேண்டாம். எதுக்கும் இருக்கட்டும்ணு பட்டணத்துலே வாங்கி வச்சுருக்கோம். நாளைக்கு எல்லாம் எடுத்துட்டு வந்து சேர்ந்துடறோம்.

நெட்டை பனியன் வராகனையே பார்த்தபடி சொன்னான்.

அதை அவனுக்குக் கொடுத்துவிட்டு ராஜா ஆதரவாகக் கேட்டார்.

பட்டணத்துலே என்ன விசேஷம் ?

புகையிலை அய்யர் மகனை அங்கே வச்சுப் பார்த்தோம். நாசீகா சூரணம் வியாபாரம் ஆரம்பிக்க வந்திருந்தாப்பலே.

அந்த மூக்குத்தூள் சமாச்சாரம் என்ன என்று பரீட்சித்துப் பார்க்க வேண்டும்.

பனியன் சகோதரர்கள் கிளம்பிப் போனபிறகு ராஜா நினைத்துக் கொண்டார்.

இங்கே தானே எல்லாம் அடச்சு வக்கப் போறான் அய்யன் ?

முன்னோர்கள் திரும்பி வந்திருந்தார்கள். மேசையின் மேலே வைத்த புத்தகத்தின் பக்கங்கள் தன்பாட்டில் விரிய, வந்தவர்கள் உற்சாகமாக எல்லாம் பார்வையிடும் சத்தம்.

அவர் தனியாக எடுத்து வைத்த படத்தை முகர்வது போல் புஸ்தி மீசையான் குனிய ராஜா அதை எடுத்து அங்கிக்குள் வைத்துக் கொண்டார்.

அட, நாளை அமாவாசை ராவுக்குக் காட்டலாம்னு வச்சா, அதுக்குள்ளே அவசரமா ?

ராஜா பெரிசுகளைப் பார்த்து பாசம் பொங்கச் சிரித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:13 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் நாற்பத்திமூன்று



இலைத் தொன்னை. அரண்மனைத் தோட்டம் முழுக்க அதுதான் காலில் தட்டுப்படுகிறது. நெய்யும், சந்தனமும், பாலும், பூவன் பழத்தைக் கூழாக்கி வெல்லப்பாகோடு பிசைந்து வைத்ததும், தேனுமாக எல்லாம் நிரம்பி வழிந்து இருந்தன காலையில். சடங்கெல்லாம் முடிந்து இப்போது தோட்டம் முழுக்கக் காலில் இடறக் கிடக்கிறது.

ராஜா குனிந்து ஒவ்வொரு இலைத் தொன்னையாகப் பொறுமையாக எடுத்தார். அவர் மனம் சந்தோஷத்தால் குளிர்ந்திருந்தது.

நாள் நல்ல படிக்குப் போயிருக்கிறது. போயிருக்கிறது என்பது வெறும் வார்த்தை. காட்டுக் குதிரை மாதிரி அது ஒரு பாய்ச்சலில் போக, கூடவே வாலைப் பிடித்துக் கொண்டு ஓடின பிரமை ராஜாவுக்கு.

நேற்றுப் பகல் முதல் ராணிக்கு தேக செளக்கியம் குறைந்து சாப்பிடப் பிடிக்காமலும், நித்திரை வராமலும் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் யந்திரம் நிர்மாணிக்க ஜரூராக ஏற்பாடுகள் நடந்தவண்ணம் இருந்தன.

நேற்றைக்குப் புதிதாக யார்யாரோ வந்து ராஜாவுக்கு மரியாதை கொடுத்துப் போனார்கள். பட்டணத்திலிருந்து வந்தவர்கள் அவர்கள் எல்லோரும். கோட்டை உத்தியோகஸ்தன் வைத்தியனாத அய்யனும், புகையிலை அய்யர் பாகஸ்தரான சுலைமான் ராவுத்தன் என்ற அதி கெம்பீரமான ஒரு துருக்கனும் அதில் அடக்கம்.

வைத்தியநாத அய்யன் மட்டுமில்லாவிட்டால் இன்னேரம் துரைத்தனத்தார் ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்யமுடியாமல் நொந்து நூலாகிக் கப்பலேறிப் போயிருப்பார்கள் என்று அவன் சொன்னதை வைத்து ராஜாவுக்குப் புரிந்தது. உத்தியோக விஷயமாகவோ, வேறே எதோ காரியத்துக்காகவோ சீமையிலிருந்து வந்து சேர்கிற துரைகள், துரைச்சானிகள் எல்லாரும் அவன் பேரேட்டில் பதிந்தாலே பட்டணக்கரையில் கால்வைத்து வந்த வேலையைப் பார்க்க முடியும் என்பது எத்தனை தூரம் உண்மை என்று ராஜாவுக்கு அர்த்தமாகவில்லை. என்றாலும், இவன் தொடர்பு ஏதாவது விதத்தில் உபயோகமாகலாம் என்று அவருக்கு மனதில் பட்டது.

நேர்மாறாகத் துருக்கன் மேல் அவருக்கு ஒரு வாஞ்சையும் மரியாதையும் பார்த்த க்ஷணமே ஏற்பட்டுவிட்டது. அவருக்கு மட்டுமில்லை. முகத்தை நோக்காடு பிடித்தது போல் வைத்துக் கொண்டு வந்தவர்களை அரை வார்த்தை சொல்லி வரவேற்க வந்த ராணியை அவன் பார்த்த மாத்திரத்தில் ராணி சாகிபா என்று கனமாக விளித்து ஆறடி உடல் கிட்டத்தட்ட மண்ணில் பட குனிந்து சலாம் செய்தான். என்னுடைய மூத்த சகோதரி போல் இருக்கிறீர்கள். இங்கே வந்ததற்கு வேறு எதுவும் பிரயோஜனம் இல்லையென்றாலும் உங்களைச் சந்தித்த இந்த மகிழ்ச்சி ஒன்றே ஆயுசுக்கும் போதும் என்று அவன் சொன்னபோது ராணி உள்ளபடிக்கே மகிழ்ந்து போனாள்.

இந்தத் தம்பி ஒரு சாயலுக்கு என் இளைய தமையன் வெள்ளையன் போல் இருக்காரில்லே என்று அவள் ராஜாவிடம் விசாரித்தபோது கட்டை குட்டையான வெள்ளையனையும் ஆறடித் துருக்கனையும் எந்த விதத்தில் ஒன்று சேர்ப்பது என்று புரியாவிட்டாலும் ராஜா ஆமா என்று தலையாட்டினார். ராணிக்கு சந்தோஷம் கொடுக்கிற காட்சிகளும் வார்த்தைகளும் அவருக்கும் அதேபடிக்கே என்றாகிப் போனது இன்று நேற்றா என்ன ?

சுலைமான், ராணிக்கு நல்ல வாசனை மிகுந்த பிரஞ்சு தேசத்து வாசனைத் தைலத்தை ஒரு குப்பியில் வைத்து மரியாதையோடு அன்பளிப்பாகக் கொடுக்க அவள் அட்டியின்றி வாங்கிக் கொண்டாள்.

சுலைமான் பட்டணத்திலிருந்து வண்டியில் கொண்டு வந்திருந்த ஜாடிகளை ஆயுத சாலையில் ஒரு ஓரமாக இப்போதைக்கு வைத்துக் கொள்ளலாம் என்றும் அவள் தாராளமாக அனுமதி கொடுத்தது மட்டுமில்லாமல் பரிசாரகனையும், பங்கா இழுக்கிறவர்களையும், ஒன்றிரண்டு காவலர்களையும் அவற்றைப் பத்திரமாக உள்ளே கொண்டு வந்து சேர்க்க ஒத்தாசைக்கும் அனுப்பி வைத்தாள்.

இது நல்ல வாடையாகத்தான் இருக்கிறது. மூக்கில் பட்டால் ஜலதோஷமும் பீனிசத் தலைவலியும் இல்லாது ஒழியும் என்று வைத்தியர் குறிப்பிட்டது சரிதான் என்று அவள் சொன்னபோது ராஜாவுக்கும் அந்த வாடை சகித்துக்கொள்ளக் கூடியதாகப் போனது.

ராணி உள்ளே போன பிற்பாடு சுலைமான் சீமைச் சாராயப் புட்டிகள் இரண்டை ஒரு சஞ்சியிலிருந்து எடுத்து ராஜாவுக்குப் பிரியமாகக் கொடுத்தான். இது எதற்கு என்றாலும் ராஜா அதை வாங்கிக் கொண்டு நன்றி சொன்னார்.

நூதன வாகனக் களவாணிகள் கொண்டு வரப்போகிற சாராயம் எல்லாம் வேறு இடத்துக்குப் போய்ச் சேர வேண்டியது. இது ராஜாவுக்கு காணிக்கை வந்தது. யாரோடும் பங்கு போட வேண்டியதில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:16 pm

ராஜா இஷ்டப்பட்டால் அவரும் மூக்குத் தூள் விற்பதற்கோ அல்லது சீமைச் சாராயம் விற்கவோ தன்னோடு பாகஸ்தராகலாம் என்று சுலைமான் சொன்னபோது வேணாம், வேணாம். ராஜ்ய பரிபாலனம் செய்கிறவன் நிர்வகிக்கிற தொழில் இல்லை என்று ராஜா கவுரதையோடு மறுத்துவிட்டார். அதெல்லாம் செய்தால் நாலு காசு பார்க்கலாம் தான். ஆனால் முதல் போட வெறுங்கை தவிர ராஜாவிடம் வேறு என்ன இருக்கு ?

காரியஸ்தன் வேறு சுலைமான் புறப்பட்டுப் போனபிறகு அந்த மாதிரி வியாபார விஷயத்தில் எல்லாம் ஈடுபட்டால் துரைத்தனத்தோடு பொல்லாப்பு வரும் என்றும் அப்புறம் கொடுக்கிற மானியத்திலும் அவர்கள் கைவைத்துவிட நேரிடும் என்றும் பணிவாகச் சொல்லிப் போயிருந்தான்.

இறங்கி வந்த முன்னோர்களும் அதெல்லாம் உனக்கு விதிக்கப்பட்டதில்லை என்று அறிவித்தார்கள். ஆனாலும் அவர்களும் துருக்கனை நம்பும்படியும் அந்தக் கோட்டை கிளார்க் அய்யன் விஷயத்தில் ஜாக்கிரதை அவசியம் என்று எச்சரித்தும் போனார்கள். புகையிலைக்கடை அய்யர் யோக்கியமானவர் என்பதால் அவரையும் முழுக்க நம்பலாம் என்றவர்கள் அய்யருக்கு துரை அனுப்பிய இரண்டு லிகிதங்கள் பற்றிப் பிரஸ்தாபித்தார்கள்.

ராஜா சொன்னதற்கு மேலேயே அவருக்கு சகாயம் செய்திருப்பதால், குத்தகைக்கு எடுத்த அரண்மனை இடத்துக்குக் குடக்கூலியாக மாதம் முப்பது ரூபாயும் அதை ஏற்பாடு செய்து கொடுத்த வகையில் தனக்கு அதிலிருந்து மாதம் ஐந்து ரூபாயும் தரவேண்டும் என்றும் அவற்றில் அறிவித்திருந்ததாகவும் அவர்கள் சொன்னார்கள்.

இதில் துரைக்குப் போகும் பணம் பற்றி சென்னைக் கோட்டையில் இருக்கப்பட்ட மகா பிரபு உட்பட யாருக்கும் தெரியக்கூடாது என்று உத்தரவாம். அதனால் அது மட்டும் இரண்டாவது லிகிதமாக வந்ததாம். எல்லா ஷரத்துக்கும் அய்யர் ஒப்புக் கொண்டதால் அடுத்த மாதம் முதல் ராஜாவுக்கு அய்யர் வகையில் மாசாந்திரம் இருபத்தைந்து ரூபாய் வருமானம் உண்டு என்பதாக சந்தோஷ சமாச்சாரம் சொல்லிப்போனார்கள் அவர்கள்.

குடக்கூலி சம்பந்தமான அந்த முதல் லிகிதம் மாத்திரமாவது ஒரு நகல் எடுத்து ராஜாவுக்கும் வெள்ளைப்பாண்டுக் கிழவன் துரை அனுப்பியிருக்கலாம். ராஜா ஆனால் என்ன, துரையானால் என்ன, எல்லோருக்கும் பணத்துக்குத் தட்டுப்பாடுதான். இருபத்தைந்து ரூபாய் வரப்போகிறதை உத்தேசித்து ஐந்து ரூபாயை வெள்ளைக்காரனுக்கு விட்டுக்கொடுக்க ராஜாவுக்கும் யாதொரு ஆட்சேபமும் இல்லை.

போகிறது. அய்யரையே கேட்டு துரையின் லிகிதத்தைப் பிரதி செய்து வைத்துக்கொள்ள வேண்டியதுதான் என்று அவர் தீர்மானித்து அந்தப்புரத்துக்குப் போக, ராணி வழக்கம்போல் பகம் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள்.

சாயந்திரம் வந்து பார்த்த வைத்தியன் பிரம்ம முகூர்த்தத்தில் வந்து நாடி பிடித்துப் பார்த்து என்ன விஷயம் என்று தெரியப்படுத்துவதாகக் கூறிப் போனான்.

ராஜா ராத்திரிக்குச் சுலைமான் ராவுத்தன் கொண்டு வந்த சீமைச் சரக்கில் கொஞ்சம் போல் பானம் செய்து படுக்க, பக்கத்தில் ராணி இல்லை. அவள் ஆரோக்கியக் குறைவால் தனியாக நித்திரை போவதாக சேடி வந்து அறிவிக்க, ஏதாவது பழவர்க்கமாவது புசித்து உறக்கம் கொள்ளச் சொன்னார் ராஜா.

காலையில் எழுந்தபோதே வைத்தியன் நல்ல செய்தியோடு எழுப்பினான்.

ராணி கர்ப்பவதியாகி இருக்கிறாள்.

அப்போது தொடங்கிய சந்தோஷம் ராஜாவுக்குப் பரிபூரணமாக இன்னும் தொடர்ந்து கொண்டு வந்தது.

ராஜா தோட்டத்தில் எழும்பி நின்ற அந்த செப்புத் தகட்டு யந்திரத்தை ஒரு மரியாதையோடு பார்த்தார். அது என்னத்துக்காக அங்கே நிற்கிறது என்று அவருக்குத் தெரியாது. ஜோசியக்கார அய்யர் சிக்கலான க்ஷேத்ர கணிதம் கொண்டு இத்தனை பாகை கிழக்கு, இவ்வளவு மேற்கு, இவ்வளவு மேல்நோக்கி என்றெல்லாம் குறித்து அந்தப்படிக்குத் துல்லியமாக அதை நிறுத்தி வைத்ததால் எல்லோருக்கும் நன்மை என்றால் அவருக்கும் மகிழ்ச்சிதான்.

ராணி கர்ப்பந் தரித்ததற்கும் அந்தச் செப்புத் தகட்டுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அதுக்கு அவரல்லாமல் வேறு ஒரு காரணம் யாராவது நாக்கில் பல்லுப்போட்டுச் சொல்ல முடியுமா என்ன ?

காலையில் மடியாகக் குளித்துவிட்டு, பட்டு வஸ்திரத்தைப் பஞ்ச கச்சமாக அணிந்து ஜோசியக்கார அய்யர் வைத்தியனைத் தொடர்ந்து வந்து ராஜாவை வணங்கினார்.

மஹாராஜா ஸ்நானம் முடித்து வந்தால் ஆரம்பிச்சுடலாம். நடுப்பகலுக்கு முன்னே ஆவாஹனம் பண்ணிட்டா என் கடமை முடிஞ்சது.

அவர் அவசரத்தோடு நிற்க, வைத்தியனுக்கு அப்புறம் மரியாதை செய்வதாக அறிவித்து ராஜா காலைக்கடன் முடிக்கக் கிளம்பினார்.

அதற்கு முன் அய்யரிடம் இந்த சந்தோஷ சமாச்சாரத்தைப் பகிர்ந்து கொள்ள எல்லாம் பகவான் கிருபை என்றார் அய்யர் மலர்ந்த முகத்தோடு.

அய்யரே, இன்னிக்கு அம்மாவாசை ஆச்சுதா ? எங்க பெரிசுங்க கேட்டுட்டே இருக்கறாங்களே, அவுங்களுக்குப் பிரியமானதைக் கொடுத்துப் போட்டுடலாமே ?

மகாராஜா கோபிச்சுக்கப்படாது. அதெல்லாம் அவாளுக்கு விலக்கப்பட்ட வஸ்து. அங்கேயே கிடைச்சால் பிரயோஜனப்படுத்தறதுலே தடையேதும் இல்லை. இங்கே இருந்து தரமுடியாது. சாஸ்திரம் கண்டிப்பாச் சொல்றது.

யந்திரத்திலே இதற்குண்டான பரிகாரத்தையும் சேத்துடலாமே ? நான் மாசம் ஒரு ரூபாய் உமக்கு அதை பராமரிக்கத் தரணும் என்று எங்க பெரிசுகள் உத்தரவு பிறப்பித்திருக்கு.

ராஜா சொன்னது பொய்தான். அய்யர் கொடுக்கப் போகிற குடக்கூலியில் ஒரு ரூபாயை இவருக்குக் கொடுக்கலாம் என்று சற்று முன்னர்தான் ராஜா தீர்மானித்திருந்தார். வயிறு இளகிக் கொண்டு வரும்போது ஏற்பட்ட சந்தோஷமும் மற்றதோடு சேர அவருடைய மனம் தாராளமாகிக் கொண்டிருந்ததன் விளைவு அது.

பெரியவா சொன்னா அதுக்கு எதிர்ப்பேச்சு உண்டா ? சின்னதா நாலு கணக்கு போட்டு உங்க இஷ்டப்படியே பண்ணிடலாம். ஆனா, நான் எப்படி அதை எல்லாம் கையிலே எடுத்து வார்த்து.

அதை நான் பாத்துக்கறேன். வேறே யாராவது உம்ம சார்பிலே பண்ற மாதிரி ஏற்பாடு செஞ்சு கொடுத்திடும்.

அதுக்கென்ன, செஞ்சுட்டாப் போச்சு. ஒரு பவித்ரம் மந்திரிச்சுக் கொடுக்கறேன். வலது கை மோதிர விரல்லே மாட்டிண்டா யார் வேணும்னாலும் அந்தக் கிரியையைச் செய்யலாம். எப்படின்னு ஓலையிலே எழுதியும் கொடுத்திடறேன்.

அய்யர் உற்சாகமாக வார்த்தை சொன்னார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:18 pm

நல்ல வேளை, புஸ்திமீசைக் கிழவன் வாய் உபச்சாரம் கொடுத்தேயாக வேண்டும் என்று அடம் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டவராய் ராஜா கிளம்பிப் போய்க் குளித்து விட்டுப் பட்டும் பீதாம்பரமுமாகத் தோட்டத்துக்கு வந்துசேர அங்கே எல்லோரும் காத்துக் கொண்டிருந்தார்கள். ராணி தலை நிறைய மல்லிகைப் பூவும், ஜரிகைப் புடவையுமாக ஸ்திரிகளோடு உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.

கொஞ்ச தூரத்தில் ஆண்கள். சுலைமான் ராவுத்தன் மரியாதையோடு தோட்டத்துக்கு வெளியே நின்று கொண்டிருக்க, ராஜா அவனைப் பிரியத்தோடு அழைத்துத் தன்பக்கம் ஒரு ஆசனத்தில் அமரச் சொன்னார்.

ஒரு ஓரத்தில் புகையிலைக்கடை அய்யர் மகன் சங்கரன் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் பட்டணம் போய் வந்ததிலிருந்து முகத்தில் தீவிரமும் ஆத்திரமும் போய் ஏதோ சொல்ல ஒண்ணாத குழப்பம் வந்து அப்பியிருப்பதாக ராஜாவுக்குப் பட்டது.

அவனையும் ராஜா அமரும்படி அழைக்க அவன் வீட்டு மனுஷர்களோடேயே இருப்பதற்கு விருப்பப்பட்டவன் போல் கையைக் கூப்பி இதுவே போதும் என்பதுபோல் பார்த்தான்.

ராஜா வேடிக்கை விசித்திரம் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு பிராமணக் கிழவி பெரிய மூங்கில் அடுக்கைக் கொண்டு வந்து ஜோசியக்கார அய்யரிடம் நீட்டினாள். துரை வந்தபோது பழுக்காத்தட்டு சங்கீதம் நேர்த்தியாகப் பாடியவள் அவள்.

இதுக்கென்ன அவசரம் மாமி ? இந்த தேவதைகளை மெல்ல மேலே ஏத்திக்கலாமே ? இன்னும் ஒரு வாரம் சிரத்தையா அபிஷேகம் பண்ணுங்கோ. அதுக்குள்ளே கணக்கெல்லாம் போட்டு வச்சுடறேன்.

ஜோசியர் சொன்னபோது முகம் எல்லாம் ஏமாற்றம் எழுதிக் கொண்டு அந்தக் கிழவி மூங்கில் கூடையோடு வாசலுக்கு நடந்தாள்.

அப்புறம் ஒரு மணி நேரம் ஜோசியக்கார அய்யர் தரையில் கிடத்தியிருந்த யந்திரத்தைச் சுற்றிச் சுற்றி நடந்து ஒவ்வொரு திசையிலும் சுண்ணாம்புக் கட்டியால் ஏதோ குறிகள் எழுதி ஓலைச் சுவடியின் ஒரு நறுக்கையும் மேலே எடுத்து வைத்தார். அவர் சொன்னபடிக்கு ராஜாவும் மற்றவர்களும் இலைத் தொன்னைகளில் இருந்த பாலையும், மற்றதையும் நிலத்தில் கவிழ்த்தார்கள்.

சூரியன் உச்சிக்குப் போகும் நேரத்தை எதிர்பார்த்தபடி இருந்த அய்யர் கண்காட்ட, கொல்லன் அவர் சொன்ன இடத்தில் அடித்து நிறுத்திய அச்சில் யந்திரத்தை ஏற்றினான். செவ்வகங்களும், சதுரங்களும், முக்கோணங்களும், வட்டமுமாக இருந்த அந்தச் சிக்கலான யந்திரம் வானத்தைப் பார்த்து சவால் விட்டதுபொல் ஒரு வினாடி உயர்ந்து, நடக்கிறது நடக்கட்டும் என்பதுபோல் ஒரு ஓரமாகத் தாழ்ந்தது. அது தரையில் படாதவாறு நான்கு வலிய தேக்கங்கட்டைத் தூண்களைத் தச்சன் அய்யர் காட்டிய இடங்களில் நிறுத்தினான் அப்போது.

இதை ஸ்தாபித்து முடிந்தாகி விட்டது என்று அய்யர் அறிவித்தார். இன்னும் இரண்டு நாழிகையில் அரசூரில் கனத்த மழை பெய்யும் என்றும் ஆறு குளம் எல்லாம் தண்ணீர் கரைபுரண்டு வரும் என்றும் சொன்னார் அவர்.

ராஜா கடைசி இலைத் தொன்னையை எடுத்து ஓரமாக வைத்தபோது அவர் தோளில் இரண்டு தூறல் துளிகள் விழுந்தன. அது மழையாவதற்குள் ராஜா தலைக்கு மேல் குடை பிடிக்கப்பட்டது.

சமூகம் உத்தரவாக்கினா, அய்யர் சொன்னபடிக்கு படைச்சுட்டுக் கிளம்பிடுவோம்.

குடையைப் பிடித்தபடி குட்டை பனியன் மெதுவாகப் பேசினான்.

ஆமா, நாங்களும் கிளம்பிப் போய் நேரத்தோட ஓய்வெடுத்துக்கறோம்.

புஸ்தி மீசைக் கிழவன் சொன்னான். அவன் குரல் ஏனோ வருத்தமாக இருந்தது.

இருக்காதா என்ன ? பாப்பாத்தி அம்மாளை யந்திரத்துலே ஏத்தி மேலே அனுப்பிட்டாரே அய்யர்.

இன்னொரு பெரிசு சொன்னது.

எங்கே என்று விசாரிக்க ராஜாவுக்கு ஆர்வம் இல்லை.

தோட்டத்தில் பூக்குப்பையை ஈரமாக்கிவிட்டு இன்னும் வலுக்காமல் மழை சுருக்கமாகப் பெய்துவிட்டு நிற்க, ராஜா உள்ளே போனபோது ராணி நித்திரை போயிருந்தாள்.

நெட்டை பனியன் கூடத்தில் காத்துக் கொண்டிருந்தான்.

வண்டியைக் கிளப்பி வை. முடிச்சுட்டு வந்துடறேன்.

அவன் குட்டையனிடம் சொல்ல குட்டை பனியன் மடக்கிய குடையை இடுக்கிக் கொண்டு வாசலுக்குப் போனான்.

ஆரம்பிக்கலாம் என்றார் ராஜா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:19 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் நாற்பத்திநான்கு



இன்னொரு பயணம். அலைச்சல். களைப்பு. போயே தீர வேண்டும். யாருக்கு இல்லாவிட்டாலும் பகவதிக்குட்டிக்காவது.

சங்கரனுக்கு அலுப்பை மீறித் தன்மேலேயே ஆத்திரம். யாரிடமும் கொட்டித் தீர்க்க முடியாதபடி அவமானம்.

புகையிலைத் தூள் வாங்கப் போய்ப் போகம் வாங்கி வந்து ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டது. கருத்தானைக் கண்ணில் பார்க்க முடியாமல், சுலைமானோடு மனது விட்டுப் பேச முடியாமல், வைத்தி சாரோடு அரட்டை அடிக்க முடியாமல், கோமதி மன்னியிடம் வாத்சல்யத்தோடு இன்னொடு குவளை காப்பி கேட்டுச் சமையல்கட்டுக்குப் போய்க் குடிக்க முடியாமல் கால் இழுத்துக் கொள்கிறது. கண் சதா தரையைப் பார்க்கச் சொல்லிக் குனிகிறது. முன்னைக்கிப்போது புத்தி தடுமாறுகிறது. சாமாவும் அவன் கூடிக் கலந்தவளும் நினைவில் தேய்ந்து சிறுபுள்ளியாக மறைய உருண்ட தனங்களையுடைய துரைசானிகளும், சீமைச் சாராய வாடையும், ஏதெல்லாமோ கலந்த சாப்பாட்டு வாடையும், கப்பல் வாடையுமாக நினைத்துக்கொண்டாற்போல் மேலெழும்பி வருகிறது. வயிறு வாய்க்குள் விழுந்த குமட்டலோடும் தலையில் நாலு கப்பலை நேரே நீட்டி நிமிர்த்தின பாரத்தோடும் ஓடிப்போய் கொல்லைப்பக்கம் உட்கார்ந்து வாந்தி பண்ணினால் உடம்பு சமனப்படுகிறது. படுத்து உடனே நித்திரை போகச்சொல்லித் தூண்டுகிறது. எழுந்தால் எல்லாம் சரியானது போல் ஒரு தோற்றம். அது அப்புறம் மாறிப் போகும்.

கருத்தான் சங்கரனைத் தனியாக அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் சுலைமான் அவன் கூடத் துணைக்கு அரசூருக்கு வந்தான். சுலைமானுக்கு எல்லாம் தெரியும். ஆனாலும் சங்கரனை என்ன ஏது என்று விசாரிக்கவில்லை.

அவன் இது பற்றி ஏதும் பேசாததே சங்கரனுக்குச் சங்கடமுண்டாக்கியது. இவனிடமாவது வாயைத் திறந்து எல்லாம் கொட்டித் தீர்க்க வேண்டும். எதை ? கப்பலில் நடந்தது என்ன என்றே குழப்பமாக இருக்கிறது இன்னும்.

தஸ்தகீர் ராவுத்தரின் விசுவாசமுள்ள ஊழியனாக ஒரு நாள் முழுக்க இருந்தது சங்கரனா இல்லை வேறு யாராவதா ? அந்தப் பெண்களில் எத்தனை பேரோடு அவன் போகம் கொண்டாடினான் ? எல்லோரும் கர்ப்பம் தரித்திருப்பார்களா ? துரைச்சானிகளோடு சுகம் அனுபவித்த கருப்பு நாயைச் சிறையில் இடுவார்களோ ?

அந்தப் பெண்கள் கப்பலில் இறங்கிய கையோடு பிராது கொடுத்திருந்தால் கொத்தவாலோ எவனோ வைத்தி சார் வீட்டு வாசலுக்கு விலங்கோடு வந்திருப்பானில்லையா ? அப்படி எதுவும் நடக்கவில்லையே. ஆக அவன் கப்பலில் இருந்ததெல்லாம் கனவுதானா ? அப்புறம் தஸ்தகீர் ராவுத்தர் ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னது யாரை ? அரைக்குக் கீழே புழுத்துச் சொட்டுமா ? ஏன் ?

பட்டணத்திலிருந்து மூக்குத் தூள் ஜாடிகளோடு சுலைமானும் சங்கரனும் பயணம் புறப்பட்டபோது சுலைமான் கவனமாக வியாபாரத்தை விருத்தியாக்குவதைப் பற்றி மட்டுமே பேசினான்.

சங்கரா, ஆரம்பிக்கும்போதே தனிக்கடை ஏதும் போட வேணாம். இருக்கப்பட்ட இடத்துலேயே கொஞ்சம் இடம் ஒதுக்கி இதையும் வச்சுக்கோ. எப்படி இதைக் கலக்கறது, எப்படி வாழைமட்டையிலே அடைக்கிறதுன்னு உங்க கடை வேலையாள் ரெண்டு மூணு பேருக்கு நான் சொல்லித்தரேன். நீயும் கவனிச்சுக்கோ. வியாபாரம் விருத்தியாற வரைக்கும் நானோ கருத்தானோ மாசம் ஒருதடவை வந்து போறோம். நீயும் அப்பப்போ பட்டணம் வந்துட்டு இரு.

சங்கரன் வேண்டாம் என்று அவசரமாகத் தலையாட்டினான்.

அட, கப்பல்லே எல்லாம் ஏற வேண்டாம்பா. கரையிலேயே உங்க உறவுக்காரங்க வூட்டுலே நொங்கம்பாக்கத்துலேயே இருந்துக்க. கருப்புப் பட்டணத்துக்கு மட்டும் வந்து போனாப் போதும்.

சுலைமான் அந்த ஒரு சந்தர்ப்பம் தவிர, சங்கரனிடம் கப்பலில் ஏறினது பற்றி நினைவு படுத்தவே இல்லை.

சங்கரனும் சுலைமானும் அரசூருக்கு வந்து சேர்ந்தபோது, அரண்மனையில் இடம் கிடைத்துக் கிட்டங்கி உண்டாக்கவும், பக்கத்தில் வீட்டைப் பழையபடி கட்டி நிறுத்தவும் எல்லா முஸ்தீபும் தொடங்கிக் காரியங்கள் அதி வேகமாக நடந்து முடிந்திருந்தன.

கட்டி முடித்தாலும், குடி போக யோசித்துக் கொண்டிருந்த வீட்டில் சுலைமான் எந்தக் கவலையும் இல்லாமல் தங்கியிருந்தான். கல்யாணி அம்மாள் இன்னும் படுத்த படுக்கையாகக் கிடந்ததால் பாடசாலை ராமலட்சுமிப் பாட்டி சமையல் தான் எல்லோருக்கும்.

சங்கரா, இம்புட்டுச் சைவமா ஒரு வாரம் தின்னு தின்னு உச்சிக்குடும்பி எனக்கும் முளைச்சிடுச்சு பாரு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:21 pm

சுலைமான் உச்சந்தலையில் கொத்தாக முடியை நிறுத்தியபடி சிரித்தான். அவன் சுறுசுறுப்பாக அலைந்து அரசூரில் மூக்குத்தூள் வியாபாரம் ஆரம்பமாக ஏற்பாடு செய்தான். ராஜா உட்பட ஊர்ப் பெரிய மனுஷர்களுக்கு நாசிகா சூரணத்தைப் பெரிய வாழைமட்டைச் சுருளில் சுற்றி அலங்காரமாகப் பட்டுக் கயிறிட்டு எடுத்துப் போய் காணிக்கை என்று சொல்லிக் கொடுத்தான்.

அவன் கூடவே எல்லா இடத்துக்கும் சங்கரன் போக வேண்டி இருந்தாலும் பக்கத்து அரண்மனையில் ராஜாவைப் பார்க்கப் போகும்போது மட்டும் வரமாட்டேன் என்று மறுத்துவிட்டான்.

அந்த ஜமீந்தார் வீட்டைக் கொளுத்திட்டான்னு சங்கரனுக்கு எண்ணம். அது தப்புடா கொழந்தே. அவன் அப்பாவி. முரடனா இருந்தாலும் பரம சாது.

கச்சேரி ராமநாதய்யர் சொன்னபோது இவனா குழந்தை என்பதுபோல் சுலைமான் உரக்கச் சிரித்தான். அவனுக்கு ராணி தமக்கை முறையாகிப் போனது சங்கரனுக்குத் தெரியும். கூடப் பிறந்தவள் குளிக்கும்போது மாடியிலிருந்து எக்கிப் பார்த்தவன் இந்தப் பேர்வழி என்று தெரிந்தால் சுலைமான் அவன் தலையைத் துண்டித்து விடுவான்.

மூக்குத்தூள் விற்கிற கடையில் முன்னால் பார்வையாக வைக்க சுலைமான் தச்சனைக் கூப்பிட்டு ஒரு பெரிய பொம்மை செய்யச் சொன்னான். அது இருந்த இடத்திலேயே நட்டமாக நின்று தலையை மட்டும் அப்படி இப்படித் திருப்பும். கண்ணைச் சுழற்றும். பொம்மைக்குள்ளே அதற்கான விசையைப் பொருத்தக் கருமானோடும் தச்சனோடும் ஜோசியர் அண்ணாசாமி அய்யங்காரும் ஒத்துழைத்தார்.

அரண்மனைப் பக்கம் தலையைத் திருப்பும்போது அந்த பொம்மை அப்படியே உறைந்து போய் நின்றது கொஞ்ச நாள். யாராவது அதைத் தலையைத் திருப்பி விட வேண்டி இருந்தது அப்பொழுதெல்லாம்.

அண்ணாசாமி அய்யங்கார் அப்புறம் சில கணக்குகள் போட்டுப் பார்த்து, அரண்மனைத் தோட்டத்தில் நிறுத்திய யந்திரத்தின் ஆகர்ஷத்தில் இந்தப் பொம்மை இப்படி இயக்கம் தடைப்பட்டு நின்றுவிடுவதாகச் சொன்னார். யந்திரத்தை இனிமேல் மாற்ற முடியாது என்றும் அதற்கான சிக்கலான கணிதங்களைத் திரும்ப எடுத்தால் பிழை வந்து சேரும் என்றும் அவர் சொன்னதால், பொம்மைக்குள்ளே விசையை மாற்றியமைக்க வேண்டி வந்தது.

சுலைமான் ஊருக்குக் கிளம்பியதற்கு முந்திய ராத்திரி அவனோடு வியாபார நெளிவு சுளிவுகள் பற்றிப் பேசிக்கொண்டு சங்கரன் புதிதாகக் கட்டின வீட்டில் தங்கினான். ரா முழுக்கப் பேசிக் கொண்டிருந்தபோது அவனுக்கு மனம் லேசாகி இருந்தது.

இனிமேல் நடக்கப் போறதைப் பத்தி யோசிச்சு அதுக்கேத்த மாதிரி உழைக்கறது மட்டுமே போதும் என்று சுலைமான் வியாபாரத்தைப் பற்றிச் சொன்னதை சொந்த ஜீவிதத்துக்குமான வார்த்தையாக எடுத்துக்கொள்ள சுலபமாக இருந்தது சங்கரனுக்கு.

ஆனாலும் அவன் கிளம்பிப் போனதும் ஒரு வெறுமை. திரும்ப மனக் குமைச்சல். அவமானமும் குற்ற போதமுமாக நினைப்புத் தடுமாறியது. அன்று இரவும் வீட்டிலேயே தனித்துத் தங்கினான் அவன்.

என்னவோ தோன்றப் பட்டணத்தில் தைத்த குப்பாயத்தை அணிந்து கொண்டு சுலைமான் போல் கால்சட்டையோடு கொட்டகுடித் தாசி வீட்டுக்குப் போனான். நடுராத்திரி தாண்டி இருந்தது அப்போது.

அவள் அன்றைக்குத் தனியாகத் தான் இருந்தாள். இல்லை, வந்தவர்கள் போயிருக்கலாம். சங்கரனை யார் என்று அடையாளம் தெரியாமல் அவள் தடுமாறினாலும் உள்ளே வரச்சொன்னாள். மண் பானையில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்து என்ன வேணும் என்று விசாரித்தாள்.

தான் புகையிலைக்கடைக்காரன் என்றும் கடைவீதியில் பெரிய கடை இருப்பதாகவும் வாசலில் பொம்மை நிறுத்தி மூக்குத்தூள் வியாபாரம் செய்வதாகவும், அதைப் பார்க்கப் பெருங்கூட்டம் கூடுவதாகவும், பகவதிக்குட்டியைக் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாகவும் அவன் நினைத்து நினைத்துச் சொன்னதை எல்லாம் கொட்டகுடித்தாசி ஆதரவாகக் கேட்டுக் கொண்டாள்.

பக்கத்தில் வைத்துப் பார்க்க அவள் கொஞ்சம் வயது சென்றவளாகத் தெரிந்தாள் சங்கரனுக்கு. ஆனாலும் என்ன ? அவளிடம் ஆசையைச் சொன்னான். கப்பலில் கிடைத்த மாதிரி தேகம் சுகம் கேட்டுக் கொண்டிருந்தது.

உங்களுக்குக் கல்யாணம் ஆகப்போவதாகச் சொன்னீங்களே ?

கொட்டகுடித்தாசி அவன் தலையை வருடியபடி கேட்டாள்.

ஆமா. அதுக்கென்ன ? தப்போ சரியோ எனக்கு இப்போ உடம்பு தகிக்க ஆசை முன்னாலே வந்து நிக்கறதே. காசு நிறையக் கொண்டு வந்திருக்கேன் பாரு. இது பாத்தியா ? டாலர். அமெரிக்க தேசப் பணம். ஒரு டாலர் ரெண்டு துரைத்தனத்து ரூபாய்க்குச் சமம்.

அவள் வாங்கிப் பார்த்துவிட்டு அந்தக் காசைத் திரும்பக் கொடுத்தாள்.

வேண்டாமா ?

எதுக்கு ?

என்கூடப் படுத்துக்கறதுக்கு ?

யார் கூடவும் படுக்க இப்போ எல்லாம் பிடிக்க மாட்டேங்கிறது.

ஏன் என்று கேட்டான் சங்கரன்.

தெரியலை. அரண்மனையிலே நிறுத்த யந்திரம் செய்யறதுக்காக ஜோசியக்கார அய்யர் பாட்டு கேட்டு எழுதி வாங்கிட்டுப் போனார். அதை நிறுத்தின அப்புறம் இப்படி ஆகிப்போனது.

ஏன் ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:23 pm

சங்கரன் அவளை இழுத்து அணைத்தபடி ஆர்வத்தோடு கேட்டான்.

யந்திரம் அரண்மனைத் தோட்டத்தில் இருந்து என் வீட்டை, அதுவும் நான் சயனிக்கும் இடத்தைப் பார்க்க நிற்கிறது. அது முதல்கொண்டு மனதில் நிம்மதியும் சஞ்சலமும் மாறிமாறி வருகிறது. இந்த விதமான இச்சை எதுவும் வருவதே இல்லை.

சங்கரன் பிடியில் இருந்து விலகியபடி அவள் சொன்னாள்.

இல்லே, நான் கப்பல்லே ஸ்திரிலோலனா குளிக்காத வெள்ளக்காரிகளோட கூத்தடிச்சேன். அது தெரிஞ்சு தான் வேணாம்கிறே என்னோடு படுக்க. சுலைமான் சொன்னானா ? நம்பாதே அதையெல்லாம். அழுகிச் சொட்டலை. வேணும்னா பாக்கறியா ?

அவன் கால்சராய் முடிச்சை அவிழ்க்க ஆரம்பிக்க, வேண்டாம் என்று தடுத்தாள் கொட்டகுடித் தாசி.

மானையும் மயிலையும் நான் என்னத்தைக் கண்டேன் ? இப்போ விருப்பம் இல்லே அவ்வளவுதான். அதுனாலே நீங்க உடனே எழுந்து போகவேண்டாம். பேசிட்டு இருங்க. கேட்டுக்கிட்டே இருக்கேன். ராத்திரி முழுக்க எனக்கும் உறக்கம் வரமாட்டேன்கிறது.

சங்கரன் அவள் தோளில் தலை சாய்த்து கிரகணத்திலிருந்து ஆரம்பித்தான். நடுநடுவே அவள் நிறுத்தி அதையெல்லாம் அழகான வெண்பாவாக்கிச் சொல்லி அவனை ஆச்சரியப்படுத்தினாள்.

இதெல்லாம் எப்படி உனக்கு முடியறது ?

சங்கரன் கேட்க அவள் சும்மா சிரித்தாள்.

விடிவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக சங்கரன் அவள் வீட்டிலிருந்து திரும்பினான். அவன் கொடுத்த தனம் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் கொட்டகுடித் தாசி.

சங்கரன் அப்புறம் வீட்டிலேயே ராத்திரி தங்க ஆரம்பித்தான். கட்டிலைத் திருப்பி அரண்மனைத் தோட்டத்து யந்திரம் இருந்த திசைக்கு நேராகப் போட்டுக் கொண்டான். சுகமான உறக்கத்தோடு ராத்திரியும், வேலையில் முழு மனமும் லயிக்கிற படிக்குப் பகல் பொழுதும் ஊர்ந்து போக, இப்படியே இருந்துவிடலாம் இனிமேல் என்று முடிவு செய்தபோது, சுப்பிரமணிய அய்யர் வந்து கல்யாணம் வைத்திருக்கிறது வா என்றார்.

எதுக்கு அப்பா அதெல்லாம் ? இப்படியே இருந்துட்டுப் போறேனே ?

அசடாட்டம் பேசாதே. அதது நடக்கற காலத்துலே நடக்கணும். கிளம்பு.

வீட்டை, கடையை விட்டுட்டா ? யாராவது திரும்ப வந்து கொளுத்திட்டா ?

யாரும் அப்படி எல்லாம் பண்ண மாட்டா. ஜமீந்தார் நாலு சேவகனைப் பாரா கொடுக்க நியமிக்கறதாச் சொல்லியிருக்கார். நானும் மதுரையிலேருந்து தாணுப்பிள்ளை வகையறாவிலே ஒருத்தரை வரவழைக்கிறேன். ஐயணையும் இருக்கான். எல்லாம் பத்திரமாப் பாத்துப்பா. நீ எதுக்கும் கவலைப்படாதே.

அவ்வளவு தூரம் திரும்பப் பிரயாணம் செய்ய கல்யாணி அம்மாளால் முடியாது என்பதால் அவளை விட்டுவிட்டுப் போக முடிவானது. சுப்பம்மாள் அவளுக்குத் துணையிருக்கச் சம்மதித்தாள்.

சாமாவோடு கலந்த பிரேத ரூபமான பெண் போய்ச் சேர்ந்தாலும் சுப்பம்மாளுக்கு இன்னும் சுதந்திரம் கிட்டவில்லை. இந்த ஜோசியன் கடங்காரன் படுத்தாமல் அவளுக்கு நிர்மாணித்துக் கொடுத்த யந்திரத்தையும் ஒரு வழி ஆக்கி அரண்மனை யந்திரத்தோடு இசைத்துச் சேர்த்தால், அவள் வெளியே கிளம்பி இஷ்டம் போல் பிரயாணம் செய்யலாம். தேவதைகளைக் கட்டித் தூக்கிப் போய், தினசரி குளிக்க வைத்து, ஆகாரம் கொடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது என்று அவள் வாயில் பாட்டாக மூத்த குடிப் பெண்டுகள் பாடினதால், சுப்பிரமணிய அய்யர் அவளைச் சிரமப்படுத்த வேண்டாம் என்று தீர்மானித்திருந்தார்.

சுப்பம்மா மாமி வராம நலுங்கு எல்லாம் யார் பாடறது ?

சுந்தர கனபாடிகள் கேட்டார்.

சுப்பிரமணிய அய்யர் பெண்குரலில் நலுங்கு பாட ஆரம்பித்திருந்தார் அப்போது. மூத்தகுடிப் பெண்டுகள் அவரோடு கிளம்பி இருந்தார்கள்.

சங்கரா புறப்படு.

அதுவும் மூத்தகுடிப் பெண்டுகள் சொன்னதுதான். கல்யாண வேடிக்கையில் கலந்து கொள்ளப்போகிற சந்தோஷம் சுப்பிரமணிய அய்யரின் பெண் குரலில் இருந்தது.

கொட்டகுடித் தாசிக்கும் இதே குரல் தான் என்று சங்கரனுக்கு நினைவு வந்தது.

அவள் ஜாகை மாற ஏற்பாடு செய்தால் என்ன ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:27 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் நாற்பத்தைந்து



கிளம்பு என்று சுப்பிரமணிய அய்யர் சொன்னால் உடனே கிளம்பிவிட முடிகிறதா ? எல்லாம் எடுத்து வைத்து, சாயங்காலம் வெய்யில் தாழ்ந்து வியாழக்கிழமை கிளம்பலாம் என்று சித்தம் பண்ணி வைத்திருந்தபோது ஏகக் கோலாகலமாக கச்சேரி ராமநாதய்யர் வந்து சேர்ந்தார். தன் சீமந்த புத்ரன் வைத்தியும், அவன் அகமுடயைாள் கோமதியும் குழந்தைகளும் வரப் போகிறதாகச் சந்தோஷ சமாச்சாரம் சொன்னார் அவர்.

நம்மாத்துலே ரொம்ப வருஷம் கழிச்சு நடக்கிற கல்யாணம். எல்லோரும் சேர்ந்தே போகலாம். வியாழக்கிழமை காலம்பற வராளா ? வந்ததுமே குழந்தைகளுக்கும், ஏன் பெரியவாளுக்கும்தான் உடனே இன்னொரு பெரிய பிரயாணம் வைக்கக் கஷ்டமா இருக்கும். ரெண்டு நாள் சிரம பரிகாரம் பண்ணிட்டு ஞாயித்துக்கிழமை கிளம்பலாம் ராகுகாலம் கழிஞ்சு.

சுப்பிரமணிய அய்யர் உடனே கிளம்பும் தேதியைத் தள்ளி வைத்து அம்பலப்புழைக் குப்புசாமி அய்யன் குடும்பத்துக்கு லிகிதம் அனுப்பினார்.

ஏழு நாள் முன்னால் போய்ச் சேருவதற்குப் பதிலாக, நாலு நாள் முன்னால் இஷ்ட மித்ர பந்துக்களோடு போய் இறங்குவதால் எந்தக் குறைச்சலும் இல்லைதான்.

காலம் கிடக்கிற கிடப்பில் நாலு நாள் கல்யாணம் எல்லாம் மூணு நாளாகச் சுருங்கிக் கொண்டு வருகிறது. ஆனாலும் குப்புசாமி அய்யன் பிடிவாதமாக நாலு நாள் கல்யாணம் நடந்தாலே தனக்கும் தன் குடும்பத்துக்கும் கவுரவம் என்றும், எப்படியாவது தேவரீர் ஆதரித்து வந்து நடத்திக் கொடுக்க வேண்டுமென்றும் தெண்டனிட்டு எழுதி புகையிலைச் சுப்பிரமணிய அய்யர் மதிப்பில் அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொண்டு விட்டான்.

சொன்னபடிக்கு வைத்திசார் குடும்பத்துடன் வியாழக்கிழமை வந்து சேர, குழந்தைகளுக்கு ஜூரம். வைத்திக்கு வழக்கம்போல் வயிற்றுப் பொருமல். கோமதி மன்னிக்கு பிரயாணச் சூட்டில் தூரம் வேறு நாள் தவறி முன்னால் வந்து விட்டது.

சனிக்கிழமை குளிச்சுடுவா என்றார் வைத்திசார்.

ஊர் முழுக்கத் தண்டோரோ போட்டுட்டு வாங்கோ என்றபடி கோமதி மன்னி உள்ளே போனாள். பிரஷ்டையான ஸ்திரிக்கு சுபாவமாக வரும் கோபம் அவள் முகத்தில் எட்டிப் பார்த்தாலும் சங்கரனைப் பார்த்ததும் அது வாஞ்சையாகி ஒரு வினாடி சிரிப்பாக மலந்து அடங்கினது.

வைத்திசார் பொழுது போகாமல் வல்லவெட்டைப் போட்டுக் கொண்டு சங்கரனோடு அரசூரைச் சுற்றி வந்தான்.

என்னடா சங்கரா, அரைக் கோமணம் நீளம் கூட இருக்காது போலிருக்கு. இப்படியும் ஊராடா என்று கேட்டுச் சிரித்தான். ஆனாலும் கடைத்தெருவும், புகையிலைக் கடையில் புகையிலையும், புதிதாக வியாபாரம் ஆகிற பட்டணத்து மூக்குப்பொடியும் வாங்க அலைமோதுகிற கூட்டமும் அவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

சுத்தி இருக்கப்பட்ட பட்டி தொட்டிலேருந்து வர மனுஷா எல்லாரும் என்று சங்கரன் சொன்னபோது அவன் மனசுக்குள்ளேயே இங்கிலீஷில் கணக்குப் போட்டுப் பார்த்தான். செயிஞ்சார்ஜ் கோட்டை நேவிகேஷன் கிளார்க்காகக் குண்டி தேயக் குப்பை கொட்டி வெள்ளைக்காரன் பேரேட்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டு கொடுக்கிற பணத்துக்கு மேலேயே இந்த அரசூரான் கல்லாவில் உட்கார்ந்து வாழைப்பட்டையில் பொடி மடித்துக் கொடுத்தே சம்பாதித்துவிடுவான் என்று நிச்சயம் செய்து கொண்டான்.

அவன் கடையில் இருக்கும்போது தெரு வழியாகப் போன கொட்டகுடித் தாசி கல்லாவில் சங்கரனைப் பார்த்ததும் தடதடவென்று படி ஏறி வந்துவிட்டாள். அவளுக்கும் தலையைத் திருப்பிக் கண்ணைச் சுழற்றும் பொம்மையைப் பக்கத்தில் இருந்து பார்க்க ஆசையாக இருந்திருக்கும் என்று சங்கரன் நினைத்தான். இல்லை, அவனைப் பக்கத்தில் வைத்துப் பகல் பொழுதில் லட்சணமாக இருக்கிறானா என்று பார்க்க வந்தாளோ என்னமோ.

கொட்டகுடித் தாசிக்கு நாலு வெற்றிலையும், எலுமிச்சை பிழிந்த சர்க்கரைத் தண்ணீரும் கொடுத்து உபசரித்தான் சங்கரன். அவளை நெருக்கத்தில் பார்க்கவே, எப்போதும் கூடுவதை விட இரண்டு மடங்கு கூட்டம் கடை வாசலில் கூடி விட்டது. கொட்டகுடியாள் அந்தப் பொம்மையைப் பற்றி ஒரு வெண்பாவும், இந்துஸ்தானி கீர்த்தனம் ஒன்றும் எழுதிக் கொடுத்துவிட்டுப் போனாள்.

குட்டி யாருடா ? ஷோக்கா இருக்காளே ?

வைத்திசார் சங்கரனை விசாரித்ததில் அசூயை தெரிந்தது.

Sponsored content

PostSponsored content



Page 14 of 17 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக