புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:18

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதையல் தீவு - Page 2 Poll_c10புதையல் தீவு - Page 2 Poll_m10புதையல் தீவு - Page 2 Poll_c10 
30 Posts - 81%
heezulia
புதையல் தீவு - Page 2 Poll_c10புதையல் தீவு - Page 2 Poll_m10புதையல் தீவு - Page 2 Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
புதையல் தீவு - Page 2 Poll_c10புதையல் தீவு - Page 2 Poll_m10புதையல் தீவு - Page 2 Poll_c10 
1 Post - 3%
viyasan
புதையல் தீவு - Page 2 Poll_c10புதையல் தீவு - Page 2 Poll_m10புதையல் தீவு - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதையல் தீவு - Page 2 Poll_c10புதையல் தீவு - Page 2 Poll_m10புதையல் தீவு - Page 2 Poll_c10 
207 Posts - 41%
heezulia
புதையல் தீவு - Page 2 Poll_c10புதையல் தீவு - Page 2 Poll_m10புதையல் தீவு - Page 2 Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
புதையல் தீவு - Page 2 Poll_c10புதையல் தீவு - Page 2 Poll_m10புதையல் தீவு - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதையல் தீவு - Page 2 Poll_c10புதையல் தீவு - Page 2 Poll_m10புதையல் தீவு - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
புதையல் தீவு - Page 2 Poll_c10புதையல் தீவு - Page 2 Poll_m10புதையல் தீவு - Page 2 Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
புதையல் தீவு - Page 2 Poll_c10புதையல் தீவு - Page 2 Poll_m10புதையல் தீவு - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
புதையல் தீவு - Page 2 Poll_c10புதையல் தீவு - Page 2 Poll_m10புதையல் தீவு - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
புதையல் தீவு - Page 2 Poll_c10புதையல் தீவு - Page 2 Poll_m10புதையல் தீவு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புதையல் தீவு - Page 2 Poll_c10புதையல் தீவு - Page 2 Poll_m10புதையல் தீவு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
புதையல் தீவு - Page 2 Poll_c10புதையல் தீவு - Page 2 Poll_m10புதையல் தீவு - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதையல் தீவு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 30 Apr 2009 - 16:46

First topic message reminder :

புதையல் தீவு

- பா.ராகவன்



"ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு கரண்டி பொங்கல்" என்று மகாலிங்க வாத்தியார் சொன்னதுமே பாலுவுக்கு அழுகை வந்துவிட்டது. அடக்கடவுளே! ரெண்டு இட்லியும் ஒரு வடையும் ஒரே வாயில் உள்ளே போய்விடும். ஒரு கரண்டி பொங்கல் என்பது உள்ளே போவதுகூடக் கஷ்டம். பல்லுக்கு மட்டும்தான் அது போதுமானது! அப்புறம் பசி எங்கிருந்து அடங்கும்?

சின்னப்பையன்களுக்குக் கச்சாமுச்சாவென்று பசிக்காது என்று யார் இந்த மகாலிங்க வாத்தியாரிடம் சொன்னது? அதுவும் தன்னைப்போல பீமபுஷ்டிப் பையன்கள் ஐயோ பாவம் என்று ஏன் இவருக்குத் தோன்றவே தோன்றுவதில்லை?

அவனுக்கு அன்றைய காலை மெனுவைக் கேட்டதுமே அழுகை அழுகையாக வந்துவிட்டது. குறைந்தபட்சம் பத்து இட்லிகள் வேண்டும். பொங்கல் என்றால் மூணு ப்ளேட். வடைக்கு லிமிட் உண்டா என்ன? எத்தனை ஆனாலும் சம்மதமே.

"குண்டா! கொஞ்சம் சாப்பாட்டைக் குறைக்கணும்டா. ஸ்கவுட்ல இருக்கற பையன் இவ்ளோ குண்டா இருந்தா எப்படி ஓடி ஆடி வேலை செய்யமுடியும்?" என்று கேட்டார் வாத்தியார்.

பாலுவுக்கு சிரிப்பு வந்தது. அவன் குண்டுதான். செம குண்டு! பின்னால் நின்று வேறு யாராவது இறுக்கிப் பிடிக்கப் பார்த்தால், அவன் தொப்பை ஒருபோதும் இரு கைகளுக்கு அடங்காது! மூக்கில் வழுக்கி வழுக்கி விழும் கண்ணாடியும் அவன் தொப்பையும், வாரவார அடங்காமல் தூக்கிக்கொண்டு முன்னால் நிற்கும் தலைமுடியும் சேர்ந்து அவனை வகுப்பறையில் ஒரு கார்ட்டூனாகத்தான் எப்போதும் காட்டும். ஆனால் யாரும் அவனை கிண்டலுக்காக 'குண்டா' என்று கூப்பிடமாட்டார்கள். அது ஒரு செல்லப்பெயர்.

"க்ளாஸுக்கு ஒரு புள்ளையார் இருந்தா நல்லதுதானே சார்" என்பான் பக்கத்து டெஸ்க் பத்மநாபன்.

"இவர் கொழுக்கட்டை சாப்பிடற பிள்ளையார் இல்லே... கொழுக்கட்டையாவே இருக்கற பிள்ளையார்!"

"அதுவும் சாதாரண கொழுக்கட்டை இல்லே.. ஜம்போ கொழுக்கட்டை!"

வகுப்பறையே சிரிப்பில் வெடிக்கும். பாலுவும் சேர்ந்து சிரிப்பான். அவனது உருவத்தைப் பற்றி யார் பேசினாலும் அவனுக்குக் கோபமோ, வருத்தமோ வராது. எல்லாமே அன்பால் செய்யப்படும் தமாஷ் என்றுதான் எடுத்துக்கொள்ளுவான். குறிப்பாக மகாலிங்க வாத்தியார். அப்பா! எப்பேர்ப்பட்ட கிண்டல் பேர்வழி! அதுவும் பாலுவைச் சீண்டுவது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. சே, கொழுக்கட்டை சாப்பிடுவது மாதிரி.

கிண்டல் முடிந்த சூட்டிலேயே அவர் இன்னொன்றும் சொல்லுவார். அதுதான் அவரிடம் பாலுவுக்கு ரொம்பப் பிடித்த விஷயம்.

"பாருங்கடா! நம்ம புள்ளையாருக்கு உடம்பு மட்டுமில்லை... மூளையும் பெரிசு. இன்னி வரைக்கும் க்ளாஸ்லே அவனளவுக்கு வேற யார் மார்க் வாங்கியிருக்காங்க, சொல்லுங்க பாப்போம்? ஒரு எக்ஸாம்லயாவது ௬பர்ஸ்ட் ரேங்க்கைத் தவிர வேற வாங்கியிருக்கானா? நாம சாப்பிடற இட்லியெல்லாம் உடம்புல கீழ் நோக்கிப் போவுது... நம்ம புள்ளையாருக்கு மட்டும்தான் உள்ள போற எல்லாமே மேல்நோக்கிப் போவுது" என்பார்.

பாலுவுக்குப் பரம சந்தோஷமாக இருக்கும். மனசுவிட்டு ஒரு வாத்தியார் இப்படி அத்தனை மாணவர்களூக்கு எதிரில் பாராட்டுவதைவிட வேறென்ன வேண்டும்? இதற்காகவே இன்னும் நன்றாகப் படிக்கலாம்! இதற்காகவே இன்னும் பத்து இட்லி கூடுதலாகச் சாப்பிடலாம்!

அவன் அம்மாவுக்குத்தான் அந்த விஷயம் கவலையளித்தது. பார்க்கிற டாக்டர்களிடமெல்லாம் தவறாமல் கேட்டுக்கொண்டிருப்பாள். "என் பிள்ளை ஏன் டாக்டர் இவ்ளோ குண்டா இருக்கான்?"

என்னமோ சில ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதனால்தான் குண்டர்கள் குண்டாக இருக்கிறார்கள் என்று எல்லா டாக்டர்களும் சொன்னார்கள்.

"டயட்ல இருக்கணும். தினமும் வாக்கிங் போகணும். சின்னப்பையந்தானே... பதினாறு, பதினெட்டு வயசாறதுக்குள்ள இளைச்சுடுவான்" என்பார்கள்.

ஆனால் பாலுவுக்கு இளைக்கிற உத்தேசமே இல்லை! எதற்கு இளைக்க வேண்டும்? குண்டாக இருப்பதிலும் பல சௌகரியங்கள் இருக்கின்றன. ரொம்ப முக்கியம், அத்தனைபேரின் கவனத்தையும் சுலபமாகக் கவரமுடிகிறது. வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி. யாரும் அதிகமாக வேலை வாங்குவதில்லை. சும்மா இருக்கிற நேரங்களில் உட்கார்ந்து உருப்படியாக நிறையப் படிக்க முடிகிறது. செஸ் விளையாட முடிகிறது. வம்புச் சண்டைக்கு வரும் பையன்களைச் சமாளிப்பதும் ரொம்ப சுலபம்! கையைக்காலை ஆட்டி அடித்து உதைக்கவே வேண்டாம். தொபுக்கட்டீர் என்று மேலே விழுந்து அப்படியே படுத்துக்கொண்டுவிட்டால் போதும்! ஐயோ, அம்மா என்று அலறி, தம் தோல்வியை ஒப்புக்கொண்டுவிடுவார்கள்!

இப்படியான காரணங்கள் மட்டுமில்லை. இயல்பிலேயே அவனுக்கு நொறுக்குத்தீனி என்றால் ரொம்பப் பிடிக்கும். கட்டுப்படுத்தமுடியாத ஒரே பெரிய கெட்ட பழக்கம் அது. வறுத்த வேர்க்கடலை, பொறித்த அப்பளம், சமோசா, ப௬ப், பஜ்ஜி, வடை, பூரி கிழங்கு என்று எதெல்லாம் நாக்குக்குப் பிடிக்கிறதோ, அதெல்லாம் ஏனோ உடம்புக்குப் பிடிப்பதில்லை. நாக்குக்கும் உடம்புக்கும் அப்படியென்ன ஜென்மப்பகையோ? ஐ டோண்ட் கேர்! என் ஓட்டு நாக்குக்குத்தான் என்று தெளிவாக இருந்தான் பாலு.

"நல்லா படிக்கறே. கெட்டிக்காரனா இருக்கே. கொஞ்சம் தீனியைக் குறைச்சுக்கோடா பாலு" என்று அம்மா அடிக்கடி சொல்லுவாள். மகாலிங்க வாத்தியாரும் அதையேதான் எப்போதும் சொல்லுவார். "பாலு, இன்னிக்கு மத்தியானம் மட்டும் நீ உண்ணாவிரதம் இரேன்!"

"ஓயெஸ். இருக்கேன் சார். அதுக்கு முன்னாடி கொஞ்சம் சாப்டுட்டு வந்துடறேனே. கொஞ்சம் தெம்பா இருக்கலாமே!" என்பான் அதே நகைச்சுவையுடன்.

"குண்டா! குண்டா! புள்ளையாரே!" வாத்தியார் செல்லமாக அவன் தொப்பையில் குத்துவார்.

அத்தனை தூரம் அவனைப்பற்றி நன்கு அறிந்த வாத்தியார்தான் இன்றைக்கு இப்படி இரக்கமே இல்லாமல் ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு கரண்டி பொங்கல் என்று சொல்லுகிறார்! அடுக்குமா இது! பாவம், அவன் வயிறு என்ன பாடுபடும்?

"புள்ளையாரே! நாம ஸ்டீம் போட்டுல போகப்போறோம். அந்தத் தீவுல ஆசுபத்திரியெல்லாம் ஒண்ணும் கிடையாது. உடம்புக்கு ஒண்ணுன்னா ரொம்பக் கஷ்டமாயிடும். லிமிட்டா சாப்பிடறதுதான் நல்லது. தவிர, கடல் பயணத்தின்போது நிறைய சாப்பிடறதும் நல்லதில்லை" என்று மகாலிங்க வாத்தியார் சொன்னார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 30 Apr 2009 - 16:55

"அது ஒண்ணுதாண்டா எனக்கு பயமா இருக்கு. எனக்கு வேற நீச்சல் தெரியாது!" என்று வருந்தினான் பாலு.

"பத்திரமா போய்ச்சேருவோம். கவலையே படாத. கட்டுமரம் ஏறினா, சரியா அரை மணி நேரத்துல பன்றித்தீவுக்குப் போயிடலாம். காத்து நமக்கு சாதகமா இருக்கணும். அது ஒண்ணுதான் என் கவலை. உன்னை பத்திரமா கொண்டுபோகவேண்டியது என் பொறுப்பு. போதுமா?" என்றான் டில்லிபாபு.

மூவரும் திருப்தியுடன் கலைந்து, அவரவர் வீடு போய்ச் சேர்ந்தார்கள்.

மறுநாள் காலையிலிருந்தே பாலு கவனமாகத் தன் அம்மாவிடம், அன்றிரவு குடுமிநாதன் வீட்டுக்குப் படிக்கப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தான். "க்ரூப் ஸ்டடி பண்ணப்போறோம்மா. அரையாண்டுப் பரீட்சை வருதில்ல? அதுக்காக" என்கிற அவனது பொய் அவனுக்கே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஒரு நல்ல காரியத்துக்காகச் சொல்லப்படும் பொய் தவறாகாது என்றும் தன்னையே தேற்றிக்கொண்டான்.

"இத்தனை நாள் இல்லாம இதென்னடா புதுப்பழக்கம்? வேணும்னா அவனை நம்ம வீட்டுக்கு வந்து படிக்கச் சொல்லேன்" என்றாள் பாலுவின் அம்மா.

"ஐயோ அம்மா! கொஞ்சம் புரிஞ்சுக்கோயேன். இன்னிக்கு நானும் மத்த சில ௬ப்ரெண்ட்ஸும் அவன் வீட்டுக்குப் போறோம். இன்னொருநாள் எல்லாரும் நம்ம வீட்டுக்கு வருவாங்க. சேர்ந்து படிச்சி எல்லாரும் நைண்டி மார்க்ஸுக்கு மேல வாங்கறதா ப்ளான் பண்ணியிருக்கோம்" என்றான் பாலு.

"சரி, நல்லா படிங்க. அதுபோதும்" என்றவள், "போகும்போது ஞாபகப்படுத்து. ராத்திரி பசிச்சா சாப்பிட கொஞ்சம் தின்பண்டங்கள் தரேன்" என்றும் சொன்னாள்.

ஆஹா. கட்டுமரப் பயணத்துக்கு உற்ற தின்பண்டங்களாக அவை இருக்குமோ என்று பாலுவுக்குள் ஒரு குஷி பிறந்தது. அடக்கிக்கொண்டு வழக்கம்போல் பள்ளிக்குப் போய்வந்தான்.

மாலையிலிருந்தே அவனுக்குப் பரபரப்பு தொற்றிக்கொண்டுவிட்டது. குடுமிநாதனும் அவன் வீட்டில் 'க்ரூப் ஸ்டடி'க்காக பாலுவின் வீட்டுக்குப் போவதாகவே சொல்லியிருந்தான். கவனமாக திட்டமிட்டே இருவரும் செயல்பட்டார்கள். டில்லிபாபுவுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. கட்டுமரம் எடுத்துக்கொண்டு கடலுக்குள் போவது அவனைப் பொறுத்தவரை மிகவும் சாதாரணமானதொரு விஷயம். அதுவும் பொதுவாகவே மாலை வேளையில்தான் அவனும் அவனது அப்பாவும் மீன் பிடிக்கக் கிளம்புவார்கள். மறுநாள் மாலைதான் கரைக்கு வருவார்களாம். டில்லி சொல்லியிருக்கிறான்.

"என்னைப்பத்தி கவலைப்படாதிங்கடா. எனக்குப் பிரச்னையே இல்லை. எப்படியும் கரெக்டா வந்துடுவேன். நீங்க ஒழுங்கா வந்து சேருங்க. அதுபோதும். வரும்போது எடுத்து வரவேண்டிய பொருட்கள் ஞாபகம் இருக்கில்ல?"

"ஓ. ஒரு டார்ச் லைட், சின்ன கேமரா, பேனா கத்தி, ஒரு பெரிய கயிறு.. அப்புறம்..."

"மறந்துட்டியா? கொசு மருந்து அடிக்கற குழாய் சொல்லியிருந்தேனே" என்று நினைவூட்டினான் டில்லி.

"கண்டிப்பா எடுத்துட்டு வரேன். எங்கவீட்டுல ஒரு காலி ஸ்ப்ரே பாட்டில் இருக்கு. உள்ள தண்ணி ஊத்தி அடிச்சி விளையாடியிருக்கேன்." என்றான் பாலு.

"ஆனா, நான் சொன்னது விளையாட அல்ல. ஒரு பாதுகாப்புக்கு. அதுக்குள்ள நான் ஒரு சமாசாரம் ஊத்தி வெக்கறேன். ஒருவேளை உபயோகப்படலாம்" என்றான் டில்லி.

"என்னதுடா?" என்றான் குடுமிநாதன்.

"உஷ்! அதெல்லாம் நாளைக்குப் போகும்போது சொல்லுறேன்." என்று அவன் சொல்லியிருந்தான்.

இரவு ஏழு மணிக்கே அப்பாவின் குட்டி கேமராவை எடுத்து, அதில் பிலிம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத் தன் பள்ளிக்கூட நோட்டுப்புத்தகப் பையில் போட்டுக்கொண்டான் பாலு. தான் எடுத்துச் செல்லவேண்டிய பிற பொருட்களையும் ரகசியமாக எடுத்து அதே பையில் திணித்துக்கொண்டு மேலே இரண்டு புத்தகங்களை வைத்து மறைத்துக்கொண்டான். கயிறு மட்டும் குடுமிநாதன் எடுத்து வருவதாகச் சொல்லியிருந்தான். இதெல்லாம் எதற்கு என்று திட்டம் இல்லாவிட்டாலும் ஏதாவது வகையில் உபயோகப்படும் என்று டில்லிபாபுதான் வலியுறுத்திச் சொல்லியிருந்தான்.

கடவுளே! இத்தனை ரகசியமாகத் திட்டமிட்டுப் புறப்படும் காரியம் நல்லபடியாக முடியவேண்டும்! பன்றித்தீவின் மர்மம் என்னவென்று எப்படியாவது தாங்கள் கண்டுபிடித்தே ஆகவேண்டும். கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் சமூக விரோதிகளைப் பிடித்தே தீரவேண்டும் என்று மானசீகமாக வேண்டிக்கொண்டு எட்டு மணிக்கு சாப்பிட உட்கார்ந்தான் பாலு.

"ராத்திரி ரொம்பநேரமெல்லாம் கண் விழித்துப் படிக்கவேணாம் பாலு. ஒரு பன்னெண்டு மணீக்குப் படுத்துடணும்" என்றார் பாலுவின் அப்பா.

"சரிப்பா."

"நான் வேணா உன்னை அவங்க வீட்டுவரைக்கும் கொண்டுபோய் விட்டுட்டு வரேன்"

திடுக்கிட்ட பாலு, "ஐயோ, அதெல்லாம் வேணாம்பா. நான் என்ன குழந்தையா? பக்கத்துத் தெருவுக்குப் போகத்தெரியாதா?" என்று அவரை அடக்கிவிட்டு அவசர அவசரமாகச் சாப்பிட்டு முடித்தான்.

"ஏண்டா இன்னிக்கு சரியாவே சாப்பிடலை?" என்றாள் அம்மா.

"இல்லியேம்மா. ஒழுங்காத்தானே சாப்பிட்டேன்?"

"ம்ஹும். என்னவோ சரியில்லை. சாயங்காலத்துலேருந்தே ஒரே பரபரப்பா இருக்கே நீ!"

அவனுக்கு திக்கென்றது. அம்மா எப்படி இப்படி எல்லாவற்றையும் அலட்சியமாகக் கண்டுபிடித்துவிடுகிறாள்! பன்றித்தீவு மர்மத்தைக் கூட அம்மா ஒருத்தியை அனுப்பினால் கண்டுபிடித்து விடுவாளோ.

மனத்துக்குள் வியந்தபடி புறப்பட்டான்.

பாலு கடற்கரை மாதா கோயிலை அடையும்போது மணி சரியாக ஒன்பது. குடுமி வந்திருக்கவில்லை. மிகவும் அமைதியாக இருந்தது சூழ்நிலை. தூரத்தில் கடலின் மெல்லிய இரைச்சல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. தெற்கே இருநூறு அடி தொலைவில் சாலையில் மங்கலான விளக்கு ஒளி தெரிந்தது. அங்கிருந்து யார் பார்த்தாலும் அவன் அங்கே நிற்பது தெரியாது. தப்பித்தவறி மாதா கோயிலுக்கு இந்நேரம் பார்த்து யாரும் வராமல் இருந்தால் போதும் என்று அவன் நினைத்துக்கொண்டான்.

ஒன்பது பத்துக்குத்தான் குடுமி வந்தான். சொன்ன நேரத்துக்கு ஐந்து நிமிடம் முன்னதாகவே டில்லிபாபுவும் வந்துவிட்டான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 30 Apr 2009 - 16:55

"எல்லாரும் தயாரா? கிளம்பலாமா?"

மூவரும் ஒரு நிமிடம் கண்மூடி கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டார்கள்.

"நாம சின்னபசங்கதாண்டா. ஆனாலும் ஒரு நல்ல காரியமாத்தான் கிளம்பறோம். கஷ்டமில்லாம நல்லபடியா முடிச்சிட்டு வந்தா பிள்ளையாருக்குக் கண்டிப்பா ஒரு தேங்காய் உடைக்கணும்" என்று பாலு சொன்னான்.

"சரி, கிளம்புவோம்" என்றான் டில்லி.

மூவரும் அடிமேல் அடிவைத்து கடலை நெருங்கினார்கள். பாலுவுக்கு திக் திக் என்று அடித்துக்கொண்டது. காரணம் விளங்காத பயம் ஒன்று பந்துபோல் மனத்துக்குள் சுழன்றது. டில்லியும் குடுமியும் முனைந்து கட்டுமரத்தை இழுத்துத் தண்ணீரில் விட்டார்கள்.

"வாடா, சீக்கிரம் வந்து ஏறு" என்று கத்தினான் டில்லிபாபு.

பாலு நீரில் இறங்கி கட்டுமரத்தைப் பிடித்து ஏறும்போதே அது ஒரு பக்கமாகச் சரிந்தது.

"டேய்,டேய்! பாத்துடா! நீ ஏறினா கட்டுமரத்துக்கே வலிக்க்குது போலிருக்கே!"

"பயமா இருக்குடா"

"சீ, பயப்படாம ஏறு. எங்க ரெண்டுபேருக்கும் நீச்சல் தெரியும். கவலைப்படாத" என்றான் டில்லி.

ஒரு வழியாக அவன் கட்டுமரத்தில் ஏறி உட்கார்ந்து ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்திக்கொண்டான். அதிகம் அலையில்லாத கடலில் கட்டுமரம் மிதக்கத் தொடங்கிய அதேவேளை -

பாலுவின் அம்மாவுக்குக் கவலை வந்துவிட்டது. "இந்தப் பையனுக்கு ராத்திரி பசிக்குமே! முறுக்கு எடுத்து வெச்சேன். குடுக்க மறந்துட்டேன். நான் ஒருநிமிஷம் அந்த பத்மநாபன் வீட்டுவரைக்கும் போயிட்டு வந்துடறேன்" என்று பாலுவின் அப்பாவிடம் சொல்லிவிட்டு அவசரமாகப் படியிறங்கினாள்.

தெரு முனையிலேயே குடுமிநாதனின் அம்மா எதிரே வருவதைப் பார்த்தாள்.

"யாரு? பாலு அம்மாவா? எங்க பையன் உங்க வீட்டுக்குத் தானே வந்திருக்கான்? படிக்கப் போறேன்னு சொல்லிட்டு புத்தகத்தை மறந்துட்டுப் போயிட்டான். அதைத்தான் எடுத்துக்கிட்டு வந்தேன். நீங்க குடுத்துடறிங்களா?" என்று கேட்டாள்.

"என்னது!" என்று அதிர்ந்து நின்றுவிட்டாள் பாலுவின் அம்மா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 30 Apr 2009 - 16:56

பாலு, குடுமிநாதன், டில்லிபாபு குழுவினர் ஏறிய கட்டுமரம் கடலுக்குள் இறங்கி, சீரான வேகத்தில் நகரத்தொடங்கியபோது மணி சரியாக இரவு 9.30.

என்னதான் சாகசம் செய்யும் பரவசம் இருந்தாலும் பாலுவுக்கு உள்ளுக்குள் ஓர் உதைப்பு இருக்கவே செய்தது. மேலும் தான் ஒரு குண்டு பையன் என்கிற எண்ணம் அவனுக்கு அடிக்கடி மனத்துக்குள் எழுந்து எழுந்து அடங்கியது. ஒரு அவசர ஆத்திரத்துக்குப் பத்தடி ஓடக்கூட முடியாதே தன்னால் என்று நினைத்து மிகவும் வருந்தினான்.

"இப்ப வருத்தப்பட்டு என்னடா பிரயோஜனம்? மசால்வடை, போண்டா, ஸ்வீட்டையெல்லாம் லபக் லபக்குனு அமுக்கும்போது யோசிச்சிருக்கணும். நாலு இட்லி சாப்டு பிரேக்பாஸ்டை முடிக்கிறவங்களைப் பார்த்திருக்கோம். இவன் இட்லின்னாலும் இருபது கேக்கறாண்டா" என்று டில்லிபாபுவிடம் சொல்லிச் சிரித்தான் குடுமிநாதன்.

பாலுவுக்கு வெட்கம் கலந்த புன்னகை வந்தது. "போங்கடா. நான் என்ன செய்யட்டும். பசி அப்படி இருக்கு" என்றான் தலை குனிந்தபடி.

"இருக்கட்டும்டா. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு குணம். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதம். பாலுவுக்கு உடம்பு மட்டுமா பெரிசு? மனசும்தான் பெரிசு! நீயே சொல்லு. அவனுக்குத்தானே, இந்த பன்றித்தீவு மர்மத்தைக் கண்டுபிடிச்சி சமூக விரோதிகளை அடையாளம் காட்டி பிடிச்சிக்குடுக்கணும்னு தோணியிருக்கு? நானும்தான் பன்றித்தீவுக்கு அடிக்கடி போறவன். அங்க சிலபேர் புதையல் பத்திப் பேசிக்கறதையும் கேட்டிருக்கேன். ஆனா இன்னிய வரைக்கும் அதை ஆராயணும்னெல்லாம் எனக்குத் தோணலையே. பாலுவுக்குத்தானே அந்த யோசனை வந்தது? குண்டா இருந்தா என்ன? குண்டு தைரியமும் ஜாஸ்தியாத்தானே இருக்கு?" என்றான் டில்லிபாபு.

"அது சரிதாண்டா. நம்மால அவங்களைப் பிடிக்க முடியும்னு நினைக்கறே?" என்று சந்தேகமுடன் கேட்டான் குடுமி.

"தெரியலை. ஆனா நம்ம நோக்கம் நல்ல நோக்கம். திட்டமும் தெளிவாத்தான் இருக்கு. நல்லதுதான் நினைச்சிக் கிளம்பியிருக்கோம். கடவுள் நம்ம பக்கம் கண்டிப்பா இருப்பார்டா" என்றான் பாலு.

"விஷயம் தெரிஞ்சவுடனேயே கடற்படை ஆபீசர்கிட்ட சொல்லியிருக்கலாம்தான். ஆனா சின்னப்பசங்க சொல்றதை எவ்ளோதூரத்துக்கு அவங்க நம்புவாங்கன்னும் சந்தேகம் இருந்ததாலதான் முதல்ல நாமளே போய்ப் பார்த்து கன்பர்ம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன்" என்றும் சொன்னான் கொஞ்சம் இடைவெளி விட்டு.

" நாளைக்கு வீட்டுக்குப் போனா எங்கம்மா என்ன கேப்பாங்கன்னு பயமா இருக்குடா" என்றான் குடுமி, திடீரென்று.

"ஏண்டா?"

"ஒருவேளை நாம க்ரூப் ஸ்டடி பண்ணப் போகலை. இப்படி கடலுக்குத்தான் போயிருந்தோம்னு தெரிஞ்சிடிச்சின்னா?"

"கவலையே படாத. நாம வெற்றி அடைஞ்சாத்தான் நாம பன்றித்தீவுக்குப் போற விஷயம் தெரியும். இல்லாட்டி, க்ரூப் ஸ்டடி பண்ணமாதிரிதான்" என்று கண்ணடித்தான் பாலு.

திடீரென்று சந்தேகம் வந்தவனாக டில்லிபாபுவிடம், "டேய்! கரெக்டா காலைல ஆறு மணிக்கு வீட்டுல இருக்கணும். அதுக்கேத்தாப்பல கிளம்பிடணும் அங்கேருந்து. ஞாபகம் இருக்கில்ல?" என்றான் பாலு.

"அதெல்லாம் வந்துடலாம்டா. அவங்க ப்ளான் பண்ணியிருக்கற டயம் என்ன? சரியா நடுராத்திரி வருவாங்கன்னுதானே சொன்னே? அப்பலேருந்து கணக்கு வெச்சிக்கிட்டாக்கூட ரெண்டு மணிக்குள்ள நமக்கு விஷயம் தெரிஞ்சிடும். முழுக்க தெரிஞ்சிக்கிட்டு மூணு மணிக்குக் கிளம்பினாக்கூட நாலு மணிக்குள்ள கரைக்கு வந்துடலாம். டோண்ட் ஒரி" என்று தைரியம் கொடுத்தான் டில்லி பாபு.

கடலில் அலை மிகவும் குறைவாகத்தான் இருந்தது. காற்றும் மிக மென்மையாகவே வீசிக்கொண்டிருந்தது. பொதுவாக அமாவாசையன்று கடலில் அலை மிகவும் ஓங்கித் தணியும் என்று பாலு படித்திருக்கிறான். அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் அலைகளின் உக்கிரம் மிகவும் அதிகமாகத்தான் இருக்கும் என்று டில்லிபாபுவும் அதை ஆமோதித்திருந்தான். கொஞ்சம் உதறலுடன் தான் அவன் கட்டுமரத்தில் ஏறினான். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக அன்றைக்குக் கடலின் இரைச்சலேகூட மிகவும் குறைந்திருப்பதாக டில்லிபாபு சொன்னான்.

"அமாவாசை அன்னிக்குக் கட்டுமரத்துல போறதை எங்க ஆட்களே பலர் விரும்பமாட்டாங்க. அலை ரொம்ப உசரமா வரும். அதுமட்டுமில்ல. கடல் கொந்தளிப்புங்கறது கொஞ்சம் பேஜாரான விஷயம். கட்டுமரம் தூக்கித் தூக்கிப் போடும். பேலன்ஸ் சரியா கிடைக்காது. படகுன்னாக்கூடப் பரவால்ல. கட்டுமரம் தள்றது ரொம்பக் கஷ்டம்" என்று அவன் சொல்லியிருந்தான்.

ஆனால் பன்றித்தீவில் பாலு சந்தித்த மர்ம மனிதர்கள் அந்த பாழாய்ப்போன அமாவாசை புதன்கிழமையைத்தானே சொல்லியிருந்தார்கள்? வேறு வழி?

"ஏறி உக்காந்ததும் கெட்டியா பிடிச்சிக்கடா. கொஞ்சம் முன்னப்பின்ன குலுங்கினா பயந்துடாத. ஒரு கட்டுமரத்தை ஆட்டி அசைக்கறது வேணா சுலபமா இருக்கலாம். ஆனா குப்புறக் கவுக்கறது ரொம்பக் கஷ்டம். பெரிய புயலெல்லாம் வந்தாத்தான் பிரச்னை. சாதாரணமான வேகக்காத்தை எனக்கு சமாளிக்கத் தெரியும்" என்றும் அவன் தைரியம் கொடுத்திருந்தான்.

ஒருவேளை முழுக்கவே நீரில் மூழ்கி மூழ்கி எழ வேண்டியிருந்தாலும் கூட பயப்படவேண்டாம் என்று சொல்லியிருந்தான் டில்லிபாபு.

"முதல்ல நமக்கு நீச்சல் தெரியாதுங்கற எண்ணத்தை உதறித்தள்ளு பாலு. ஒரு நாள்ள உன்னால அதைக் கத்துக்கவும் முடியாது. ஆனா மன தைரியம் இருந்தா எந்த இக்கட்டான சூழலையும் சமாளிக்க முடியும்"

ஆனால் அப்படியெல்லாம் பிரச்னை ஏதும் வராததில் பாலுவுக்கு மிகவும் ஆசுவாசமாக இருந்தது. கடல் அமைதியாகவே இருந்தது. இரவு பத்தரைக்கு அப்புறம் தான் கொந்தளிப்பு ஆரம்பிக்கும் என்றும் டில்லி சொல்லியிருந்தான். பத்தரைக்குள் சுலபமாக பன்றித்தீவுக்குப் போய்விடவும் முடியும் என்பதால் பிரச்னையே இல்லை!

"இங்க டால்பினெல்லாம் உண்டாடா?" என்றான் பாலு.

"நீவேற. சாதாரண மீன்களே கம்மி. பன்றித்தீவை அடுத்து இன்னும் நாலு தீவு இருக்கு. முயல்தீவு, முருங்கைத் தீவு, கோயில்தீவு, கோட்டைத்தீவுன்னு பேரு. அந்த நாலு தீவையும் தாண்டினப்புறம்தான் நாப்பது மீனாவது கண்ணுல படும். நம்ம தேசத்தோட கடல் எல்லைன்னு ஒண்ணு இருக்கு. அந்தப் பக்கம் மீன் வரத்து அதிகம். இங்க ஒண்ணுமே கிடையாது. கரை ஒதுங்கினா, சில சிப்பிகள்தான் கிடைக்கும். எங்க பிரச்னையே அதுதான்" என்று வருத்தமுடன் சொன்னான் டில்லி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 30 Apr 2009 - 16:56

"ஏன்?" என்றான் குடுமிநாதன். அவனது குடுமி, கடல் காற்றில் ட்ரியோவென்று எழும்பி எழும்பி ஆடி அடங்கிக்கொண்டிருந்தது. சே, ஒரு ரப்பர்பேண்ட் போட்டுக்கொண்டு வந்திருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. அடிக்கடி இழுத்து இழுத்து முடிந்துகொள்ளவேண்டியிருந்தது.

"ஏன்னா, இப்பல்லாம் கடலை யாரும் மதிக்கறது கிடையாது. எல்லா கம்பெனிகளோட கழிவு நீரையும் ஆறு மாதிரி கடலை நோக்கித் தான் திறந்துவிடறாங்க. எல்லாம் வெறும் கெமிக்கல்ஸ். மீன்கள் பாவம் என்ன செய்யும்? வருஷக்கணக்கா கெமிக்கல்ஸ் வந்து தண்ணில கலந்துகிட்டே இருந்தா அதுங்க எப்படி உயிர்வாழ முடியும்? அதான், இடத்தை மாத்திக்கிட்டு வேற பக்கம் போயிடுதுங்க" என்றான் டில்லி.

"சே" என்றான் பாலு. "கடல்நீர் மாசுபடுதல்னு" அப்பப்ப பேப்பர்ல பாப்பேண்டா. இதான் விஷயமா? ரொம்பத் தப்பாச்சே. நம்ம கவர்ன்மெண்ட் ஏதாவது செய்யக் கூடாதா?" என்றான் குடுமிநாதன்.

"போடா.... கவர்ன்மெண்ட் என்ன செய்யணும்? நம்ம கம்பெனின்னா நமக்குத்தானே அக்கறை இருக்கணும். எங்கப்பா அடிக்கடி சொல்லுவார். கம்பெனிக்கழிவுகளைக் கடலுக்கு அனுப்பறதுக்கு முன்னாடி ஓரளவாவது சுத்திகரிச்சிட்டு அனுப்பணுமாம். அவங்க கம்பெனில அப்படித்தான் செய்யறாங்களாம்" என்றான் பாலு.

பேசிக்கொண்டிருந்தாலும் கட்டுமரம் செலுத்துவதில் கண்ணாக இருந்த டில்லிபாபு, இப்போது கட்டுமரம் போய்க்கொண்டிருந்த திசையை மெல்லத் திருப்பத் தொடங்கினான்.

"அவ்ளோதாண்டா. இந்த இடத்துல தெற்கு நோக்கித் திரும்பினா, கண்ணை மூடிக்கிட்டு ஓட்டிடலாம். சரியா ஒன்றரை கிலோமீட்டர் இங்கேருந்து. எங்க மீனவர்கள் கணக்குல சொல்லணும்னா முக்கால் மைல்" என்று சொன்னான்.

"ஒரு காம்பஸ் கூட இல்லாம எப்படிடா கரெக்டா திசை தெரிஞ்சி ஓட்டறே?" என்றான் பாலு.

"பழக்கம்தான். ஒரு விஷயம் தெரியுமா? தரையில புதுசா ஒரு ஊருக்குப் போய் தெரு எதுன்னு தேடறதைவிட, கடல்ல திசை பார்த்து, நாம போகவேண்டிய இடத்தைக் கண்டுபிடிக்கறது சுலபம். தண்ணிலயே அடையாளம் உண்டு. தண்ணியோட நிறம், அலை எழும்பற வேகம், நீர் ஆழம் இதெல்லாமே அடையாளங்கள்தான். கொஞ்சம் அனுபவம் உள்ள மீனவர்கள் காத்து வீசற வேகத்தை வெச்சே எங்க இருக்கோம் இப்பன்னு சொல்லுவாங்க" என்று சொன்னான்.

ஓ" என்றான் பாலு.

"இந்தப் பயணம் வெற்றிகரமா முடிஞ்சா கண்டிப்பா நான் நீச்சல் கத்துப்பேண்டா" என்றான் பாலு.

"கண்டிப்பா உடம்பைக் குறைப்பேன்னு சொல்லு முதல்ல!" என்றான் குடுமி.

மூவரும் மனம் விட்டுச் சிரித்தார்கள்.

பன்றித்தீவை அவர்கள் அடையும்வரை எந்தப் பிரச்னையும் வரவில்லை. டில்லிபாபு மிகத் திறமையாகக் கட்டுமரத்தைச் செலுத்தி, சரியாகப் பத்து ஐந்துக்கு பன்றித்தீவின் கரையை நெருங்கிவிட்டான். "வந்துடுச்சிடா" என்று ரகசியமாக அறிவிக்கவும் செய்தான்.

அவர்கள் உடனே பரபரப்பானார்கள்.

"தோபாரு. இனிமே உரக்கப் பேசக்கூடாது. ராத்திரிவேளைல சுவருக்குக் கூடக் காது உண்டுன்னு எங்கம்மா சொல்லுவாங்க. இந்தத் தீவுல ஒண்ணு ரெண்டு ஆள் நடமாட்டம் மட்டும்தான் உண்டுன்னு நாம நம்பறோம். அவங்க கண்ணுல நாம படக்கூடாதுங்கறதுதான் நம்ம முதல் லட்சியம். கவனமா இறங்கி நைஸா காட்டுக்குள்ள போயிடணும்" என்றான் பாலு.

கட்டுமரம் கரையைத் தொடுவதற்குப் பதினைந்து அடி தூரம் இருக்கும்போதே டில்லிபாபு தொப்பென்று அதிலிருந்து நீரில் குதித்தான். ஆழம் அதிகமில்லாத கடல் அது. பாலுவும் குடுமியும் கட்டுமரத்திலேயே இருக்க, "குதிங்கடா, குதிங்கடா" என்று குரல் கொடுத்தான்.

"ஏண்டா?"

"டேய்! கரை வரைக்கும் உன்னை இது இழுத்துட்டுப் போகாது. மண்ணுல மோதிடும். இங்க குதிச்சி, நாமதான் இதை இழுத்துட்டுப் போகணும்" என்றான் டில்லி.

வேறு வழியில்லாமல் அவர்களும் தொப் தொப்பென்று நீரில் குதித்தார்கள். டில்லி கவனமாக பாலு குதிக்கும்போதே அவன் சட்டை காலரைப் பிடித்துக்கொண்டான்.

"குண்டா, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க. இங்க நீ மூழ்க முடியாது. ஆனாலும் ஆழம்தான். கவனமா கட்டுமரத்தைத் தள்ளிக்கிட்டே நடந்து வா" என்றான் டில்லி.

மூச்சு வாங்க அவர்கள் கட்டுமரத்தைத் தள்ளிக்கொண்டே நடந்து கரைக்கு வந்து அந்த மரத்தை ஒரு ஓரமாகக் கவிழ்த்துப் போட்டார்கள். பாலுவுக்கு மிகவும் மூச்சு வாங்கியது.

"என்னடா இது! ரொம்ப பேஜார் வேலையா இருக்கே" என்றான் அலுத்துக்கொண்டு.

"ம்ம்? சரிதான். பத்தடி நடக்க முடியலியா உன்னால? பத்துநாள் பட்டினி போடு, சரியாயிடும்" என்றபடியே மற்ற இருவரும் சட்டைகளைக் கழற்றிப் பிழிய ஆரம்பித்தார்கள்.

"இனிமேத்தாண்டா நாம ஜாக்கிரதையா இருக்கணும். யாரும் உரக்கப் பேசாதிங்க. சட்டை கொஞ்சம் காய்ஞ்சதும் கிளம்பிடலாம். அதுவரைக்கும் மண்ணுலயே படுத்திருங்க" என்றான் டில்லி.

மூவரும் அமைதியாக மண்ணில் படுத்தார்கள். வானில் சிறு வெளிச்சம் கூட இல்லை. ஒரு நட்சத்திரம் கூடத் தென்படவில்லை. டில்லி எப்படித்தான் அத்தனை துல்லியமாக கட்டுமரத்தைச் செலுத்தினானோ என்று பாலுவுக்கு வியப்பாயிருந்தது. தன் வயதுப் பையந்தானே அவனும்? எத்தனை புத்திசாலித்தனம்! தன் தொழிலில் எத்தனை தன்னம்பிக்கை! எதைச் செய்தாலும் அந்த நேர்த்தியுடன் செய்யும்போதுதான் சிறக்கிறது.

மனத்துக்குள் அவன் நினைத்துக்கொண்டான். ஒரு லட்சியத்துடன் அவன் அந்தத் தீவுக்கு வந்திருக்கிறான். யார் அந்த சமூக விரோதிகள்? அவர்கள் என்ன திட்டம் போட்டிருக்கிறார்கள்? என்ன புதையலை எடுக்கப் போகிறார்கள்? எத்தனை பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? இதையெல்லாம் கவனமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதுதான் முதல் வேலை. அவர்களை எப்படி கடற்படை அதிகாரிகளிடம் பிடித்துக் கொடுப்பது என்பது அடுத்த வேலை.

தெளிவான நோக்கம். பொதுநல நோக்கமும் கூட. ஆகவே கடவுள் கண்டிப்பாகத் தன் பக்கம்தான் இருப்பார் என்று அவன் தீர்மானமாக நம்பினான்.

மூவரும் மிக அமைதியாக, ஒரு சொல் கூடப் பேசாமல் அந்தப் பரந்த மணல் வெளியில் சட்டையைக் கழற்றிவிட்டுப் படுத்திருந்தார்கள். கடற்காற்றின் மிக மெல்லிய ஓசையும் அலைகளின் ஓசையும் தவிர வேறு ஒரு சத்தம் இல்லை.

பத்து நிமிடங்கள் கழிந்திருக்கும். "கிளம்பலாமாடா?" என்று பாலு கேட்டான். சட்டை காய்ந்துவிட்டதா என்று தலைமாட்டில் தொட்டுப் பார்க்கக் கழுத்தைத் திருப்பிப் பின்னால் பார்த்தான்; அதிர்ந்தான்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 30 Apr 2009 - 16:56

பாலுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒருவினாடி மூளை தன் சிந்திக்கும் ஆற்றலையே இழந்துவிட்டதோ என்று கருதும் விதத்தில் உறைந்துபோய்விட்டது. பயத்தில் அவனுக்கு நெஞ்சு வறண்டுபோனது. உடல் உறுப்புகள் எல்லாம் கட்டுப்பாட்டை இழந்து தொளதொளவென்று ஆகி உதற ஆரம்பித்தன. பேச்சு வரமறுத்தது. ஒரு வார்த்தை குரல் கொடுத்துத் தன் நண்பர்களை எழுப்ப நினைத்தான். ம்ஹும். எது செய்யவும் அவனால் முடியவில்லை. காரணம், அவன் கண்ட காட்சி!

சட்டையின் ஈரம் உலர்ந்துவிட்டதா என்று பார்ப்பதற்குத்தான் அவன் தலைமாட்டில் உலர்த்தியிருந்த சட்டையை எடுக்கக் கையை நீட்டித் தலையைத் திருப்பினான். ஆனால் பத்தடி தூரத்தில் எமகாதகன் மாதிரி ஒரு மனிதன் அமைதியாக நின்றுகொண்டு தங்களையே பார்த்துக்கொண்டிருப்பான் என்று அவன் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை. யாரைத் தேடி அவன் அந்தத் தீவுக்கு வந்திருந்தானோ, அவர்களுள் ஒருவன்! புதையல் எடுக்கிறேன் பேர்வழி என்று பேசிய கூட்டத்தில் ஒருத்தன். ஏதோ சட்டவிரோதமான காரியத்தில் மனப்பூர்வமாக ஈடுபட்டிருக்கும் கும்பலைச் சேர்ந்தவன்! அவர்கள் எடுக்கும் புதையல் எது, எப்படி எடுக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காகத்தானே அவனே அங்கே வந்திருக்கிறான்! ஆனால் இப்படி அவனிடமே மாட்டிக்கொள்ள நேர்ந்துவிட்டதே என்று அவனுக்கு அழுகையே வந்துவிட்டது.

'டேய், டேய்' என்று மெதுவாக டில்லிபாபுவைப் பார்த்துக் குரல் கொடுக்க முயற்சி செய்தான்.

'இருடா. இன்னும் ரெண்டு நிமிஷம் ரெஸ்ட் எடுத்துப்போம். அப்புறம் ௬புல்நைட் வேலை இருக்கில்ல?' என்றான் டில்லிபாபு.

'டேய், பின்னால பாருடா' என்றான் குரலை அடக்கி, ரகசியமாக.

வேண்டாவெறுப்பாகத் தலையைத் தூக்கிப் பார்த்த டில்லியும் மின்சாரம் பாய்ந்தவன் போலச் சுருட்டிக்கொண்டு எழுந்து நின்றான். இருவரும் இப்படி எதைப் பார்த்து மிரள்கிறார்கள் என்ற யோசனையுடன் தானும் எழுந்த குடுமிநாதன், சிறிது தொலைவில் லுங்கியை மடித்துக்கட்டி, கால்களைச் சாய்த்துவைத்து நின்று தங்களையே பார்த்துக்கொண்டிருக்கும் அந்த மர்ம மனிதனைக் கண்டதும் 'ஐயோ, அம்மா பயமா இருக்கே' என்று புலம்ப ஆரம்பித்துவிட்டான்.

அவ்வளவுதான். அதற்குமேல் அந்த மர்ம மனிதன் வெறுமனே கைகட்டி நிற்கவில்லை. மெல்ல அடியெடுத்து வைத்து அவர்கள் மூவரையும் நெருங்கினான். அருகே வந்த சூட்டிலேயே டில்லிபாபுவின் தலைமுடியை ஒரு கையாலும் பாலுவின் காதை ஒரு கையாலும் இறுகப் பிடித்து 'யார்றா நீங்க?' என்றான் கட்டைக் குரலில்.

ஒருகணம் என்ன பேசுவது என்று தெரியாமல் மூவரும் தடுமாறிப் போனார்கள். ஏதாவது பொருத்தமாகக் கதைவிடலாம் என்று பாலுவுக்குத் தோன்றியது. ஆனால் மூவரும் ஒரே சமயத்தில் வேறு வேறு கதைகளாக விடத்தொடங்கினால் விபரீதமாகப் போய்விடுமே என்றும் கவலையாக இருந்தது. அவன் இவ்வாறு வேகவேகமாக யோசித்துக்கொண்டிருந்ததே தன் 'கதாகாலட்சேபத்தை' குடுமிநாதன் ஆரம்பித்துவிட்டான்!

"இல்லசார்... நாங்க ஸ்கூல் பசங்க சார்... இன்னிக்கி ஸ்டவுட்ஸ் மாணவர்களை இங்க பிக்னிக் மாதிரி சாயங்காலம் கூட்டிக்கிட்டு வந்தாங்க சார்.... மொத்தம் பதினஞ்சு பாய்ஸ் வந்தோம் சார்... எல்லாரும் கரையிலேயே இருந்தாங்க. நாங்க மூணுபேர் மட்டும் தீவை சுத்திப் பாக்கலாம்னிட்டுப் போனோம்.. கால் வலி எடுத்து ஒரு இடத்துல படுத்தோம். அப்படியே தூங்கிட்டோம் சார். எழுந்து பார்த்தா இருட்டிடிச்சி. இங்க எங்க ஸ்கூல் பசங்களைத்தேடி வந்தோம். அவங்கல்லாம் போயிட்டாங்க போலருக்கு" என்று அழுவது போல நடிக்கத் தொடங்கினான் குடுமி.

அந்த மர்மமனிதன் ஒரு வினாடி அவன் சொன்ன கதையை உள்வாங்கி யோசித்தான். ம்ஹும். திருப்தி ஏற்படவில்லை போலிருக்கிறது.

'டேய், என்னடா கதை சொல்றிங்க? மூணு பசங்களை விட்டுட்டு எப்பிடிடா உங்க வாத்திமாருங்க போவாங்க?' என்றான் கோபமாக.

'தெரியலை சார்.. அதான் எங்களுக்கும் கவலையா இருக்கு. இப்ப நாங்க எப்படி வீட்டுக்குப் போவோம்?' என்று பாலு தன் பங்குக்கு அழுவது போல நடிக்க ஆரம்பித்தான்.

இவர்களை என்ன செய்யலாம் என்று அவன் கொஞ்சநேரம் மீண்டும் யோசித்தான். மூவரின் தோள்களையும் பிடித்துத் தள்ளிக்கொண்டு, 'வாங்கடா என்னோட' என்று நடக்க ஆரம்பித்தான்.

இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே என்று மனத்துக்குள் வருந்தியபடி மூவரும் அவன் பின்னாலேயே நடக்க ஆரம்பித்தார்கள். நல்ல வேளையாக அவர்கள் வந்த கட்டுமரத்தை டில்லிபாபு அத்தனை சுலபமாகக் கண்ணில் பட்டுவிடாதபடி இழுத்துக்கொண்டுபோய் ஏற்கெனவே ஒரு புதரின் பின்னால் ஒளித்துவைத்துவிட்டு, கட்டுமரத்தை இழுத்து வந்த மண்பாதையில் சுவடு தெரியாத வண்ணம் காலால் மண்ணை எத்தி எத்தி மூடியிருந்தான்.

அந்த மர்ம மனிதன் அவர்களை காட்டுக்கு உள்ளே அழைத்துப் போக ஆரம்பித்திருந்தான். பாலுவுக்கு இனி நடக்கப்போவது என்ன என்பது எளிதில் விளங்கிவிட்டது. எப்படியும் அவன் தங்களைத் தம் குழுவினர் முன் கொண்டுபோய் நிறுத்துவார்கள். நாலுபேரோ, பத்துபேரோ, நாற்பதுபேரோ. நடுராத்திரி இந்தத் தீவில் எப்படி அவர்கள் தனியே வந்து படுத்திருக்கிறார்கள் என்று விசாரிப்பார்கள். பதில் திருப்திகரமாக இருந்தால் ஒருவேளை தப்பிக்கலாம். இல்லாவிட்டால் என்ன செய்வார்களோ. இப்படியாகிவிட்டதே என்று பாலு மிகவும் வருந்தினான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 30 Apr 2009 - 16:57

காட்டுப்பாதை மிகவும் இருட்டாக இருந்தது. ஒரு பொட்டு வெளிச்சம் கூட இல்லை எனினும் நன்கு பழகிய பாதை போல அந்த மர்ம மனிதன் அவர்களை வழிநடத்தி இழுத்துப் போய்க்கொண்டே இருந்தான். பாலுவுக்குத் தங்களை அவன் அழைத்துப்போகும் இடம் எதுவாக இருக்கும் என்பது பற்றிய ஒரு யூகம் இருந்தது. அந்தத் தீவில் அவன் முந்தைய வாரம் பார்த்தப் பாழடைந்த பங்களா தவிர வேறு கட்டடம் கிடையாது. எப்படியும் அவன் அங்கேதான் போவான் என்று அவன் நினைத்தான். அங்கேதான் அந்த மர்ம கும்பல் தங்கியிருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது.

இருபது நிமிட நடைக்குப் பிறகு அவன் நினைத்தது போலவே அந்த மர்ம பங்களாவை அவர்கள் அடைந்தார்கள்.

'வாங்கடா' என்று மூவரின் தோள்களையும் ஒரே கையால் அணைத்து உள்ளே தள்ளிக்கொண்டுபோனான் அந்த மர்ம மனிதன்.

சத்தம் கேட்டு பங்களாவுக்குள் சில மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு வேறு சிலர் உடைந்த சன்னல் வழியே எட்டிப்பார்த்தார்கள்.

தபதபவென்று வேறு சிலர் வெளியே வருவதையும் பாலு பார்த்தான். 'யாரு யாரு' என்றுஅவர்கள் கேட்கவும், அழைத்துவந்த மர்ம மனிதன், குடுமிநாதன் சொன்ன கதையை அவர்களிடம் சொன்னான்.

'உஸ்கோலு பசங்களாம். டூருக்கு வந்திருந்தாங்களாம். இவனுகளை மட்டும் விட்டுட்டுப் பூட்டாங்கன்னு சொல்றாம்பா. என்னால நம்ப முடியல' என்றான் அந்த மர்ம மனிதன்.

'ஆமாப்பா. போனவாரம் கூட இந்தமாதிரி ஒரு ஸ்கூல் பசங்க குரூப்பு இங்க வந்திருந்ததுன்னு நம்ம மாணிக்கம் சொன்னான். கரையோரம் என்னவோ க்ளாஸ் எடுத்தாங்களாமா...' என்றான் இன்னொருவன்.

'டேய், யார்டா நீங்க? உண்மைய சொல்லுங்க?' என்றான் வேறொருவன்.

'சார்.. உண்மையிலேயே நாங்க ஸ்கூல் பசங்க தான்சார். எங்களோட மொத்தம் பதினஞ்சுபேரு வந்தாங்க. நாங்க வழி தவறிப்போய் தீவுக்கு அந்தப்பக்கம் போயிட்டோம் சார்" என்றான் டில்லிபாபு.

"மணி என்னாடா ஆவுது?'' என்றான் புதிதாக அங்கே வந்த இன்னொரு மர்ம மனிதன்.

'பதினொண்ணாவப் போவுது' என்றான் அவர்களை அழைத்துவந்தவன்.

'இவனுகளை விசாரிச்சிட்டிருக்க இப்ப டயம் இல்லை. போட் வந்துடும். பேசாம இவங்களை ரூம்ல போட்டுப் பூட்டுங்க. நம்ம வேலை முடிச்சிட்டு, விடிஞ்சதும் விசாரிச்சிப்பம்' என்றான் அவன்.

'சரி' என்று உடனே அவர்களில் ஆளுக்கொருவர் அவர்கள் மூவரையும் பிடித்து இழுத்துக்கொண்டு அந்த பங்களாவின் உள்ளே போனார்கள்.

தடதடவென்று நடந்தால் சத்தமெழுப்பும் மாடிப்படியேறி அழைத்துச் சென்றவர்கள், அங்கே இருந்த நான்கு அறைகளுள் ஒன்றில் அவர்கள் மூவரையும் பிடித்துத் தள்ளி, வெளியே இழுத்துத் தாழ்ப்பாள் போட்டார்கள். 'பசங்களா, பேசாம படுத்துத் தூங்குங்க. இங்கல்லாம் முழிச்சிக்கிட்டு இருக்கக் கூடாது' என்றான் அழைத்து வந்தவர்களுள் ஒருவன்.

'சரிங்க' என்று சமர்த்து போல உள்ளிருந்தபடி குரல் கொடுத்தான் பாலு.

ஐந்து நிமிடங்கள் அவர்கள் பேசக்கூட இல்லை. ஆளுக்கொரு மூலையில் நடுங்கியபடி அமர்ந்திருந்தார்கள். இருட்டில் ஒருவர் முகம் கூட அடுத்தவருக்குத் தெரியவில்லை. அந்த அறை எத்தனை நீள அகலம் கொண்டது, ஜன்னல் இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை. வெளியிலிருந்து அன்றைக்குப் பார்த்தபோது சன்னல், கதவுகள் எதுவுமே இல்லாத பாழடைந்த ஒரு கட்டடமாகத் தென்பட்ட அந்தக் கட்டடத்தில் இப்படியொரு சிறைக்கூடம் இருக்க முடியுமா என்று பாலுவுக்கு வியப்பாக இருந்தது.

தனது பதற்றத்தை முதலில் தணித்துக்கொண்டு அதன்பிறகு நிதானமாக யோசிக்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு அமைதியாகச் சிலநிமிடங்கள் படுத்து இருந்தான்.

நடந்தது என்ன? எதிர்பாராவிதமாக அவர்களை மர்ம மனிதர்களுள் ஒருவன் கடற்கரையில் பார்த்துவிட்டான். அழைத்துக்கொண்டு வந்து இந்த அறையில் அடைத்துவைத்திருக்கிறார்கள். ரொம்ப சரி. ஆனால் பாலு எதற்காக அத்தனை பாடுபட்டு அந்தத் தீவுக்கு வந்தான்? அவர்கள் என்ன செய்கிறார்கள், எந்தப் புதையலை எடுக்கப் போகிறார்கள் என்று பார்த்துக் கண்டுபிடித்து, காவல்துறையில் அவர்களை பிடித்துக் கொடுப்பதற்குத்தானே? இன்றைக்கு விட்டால் மீண்டும் எப்போது அதற்கான சந்தர்ப்பம் வரும்? வாய்ப்பே இல்லை. எப்படியும் அவர்கள் தம் வேலையைப் பன்னிரண்டு மணிக்குப் பிறகுதான் தொடங்குவார்கள். இன்னும் ஒருமணிநேர அவகாசம் இருக்கிறது. அதற்குள் இந்த அறையிலிருந்து வெளியேறி, அவர்களைப் பின் தொடர்ந்து ரகசியத்தைக் கண்டுபிடிக்க முடியாதா என்ன?

முடியும்! கண்டிப்பாக முடியும். முடியாது என்று ஒன்று உண்டா என்ன?

அவன் தன் இரு நண்பர்களையும் ரகசியக் குரலில் அருகே அழைத்தான்.

'என்னடா?'

'இதோ பாருங்கடா. நாம ஒரு சங்கடத்துல மாட்டிக்கிட்டிருக்கோம். அதுக்காக மனச்சோர்வு அடைஞ்சிடக் கூடாது. கண்டிப்பா இவங்க யாரு என்னன்னு நாம கண்டுபிடிச்சே தீரணும். நம்ம திட்டத்துல எந்தப் பிசகும் இருக்கக் கூடாது' என்றான் பாலு.

'அதான் எப்படின்னு கேக்கறேன். முதல்ல எப்படி இந்த அறையிலேருந்து வெளிய போறது?' என்றான் குடுமி.

'போறோம். நிச்சயம் வெளிய போகத்தான் போறோம். ரகசியத்தைக் கண்டுபிடிக்கத்தான் போறோம்' என்றான் பாலு மிகுந்த நம்பிக்கையுடன்.

'அட, எவண்டா இவன்! எப்படிப் போகப்போறோம்? அதைச்சொல்லு" என்றான் டில்லிபாபு.

பாலு மர்மமாகப் புன்னகை செய்தான்.

"வழி தோணிடிச்சி. கிட்டவாங்க. உங்க காதுகளை என் வாய்கிட்ட கொண்டுவந்து வைங்க. சொல்றேன்" என்றான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 30 Apr 2009 - 16:58

இருட்டு என்றால் பயங்கர இருட்டு. உற்றுப்பார்த்தால் உள்ளங்கை கூடத் தெரியாத கும்மிருட்டு. அந்தக் காட்டு பங்களாவின் சுவர்கள், கூரை, தரை, சன்னல்கள், கதவுகள் அனைத்துமே இருளினால் செய்யப்பட்டவை மாதிரி தோன்றியது, பாலுவுக்கு. அறையில் உடன் இருந்த நண்பர்கள் குடுமிநாதன், டில்லிபாபு இருவரையும் தன்னருகே வந்து நெருக்கமாக உட்காரச் சொன்னவன், இருட்டில் வேறு யாராவது ஒருவர் அங்கே தங்களைக் காவல் காப்பதன் பொருட்டு ஒளிந்திருப்பார்களோ என்று கொஞ்சம் சந்தேகப்பட்டான். யார் கண்டார்கள்? இருக்கலாம். தான் ஏதாவது பேசப்போய் அவர்கள் காதில் விழுந்துவிட்டால் என்னவேண்டுமானாலும் செய்துவிடுவார்களே. இப்போதைக்கு, சின்னப்பசங்கள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டுவிட்டார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கே பொழுதுவிடிந்தால் என்ன தண்டனை தருவார்களோ. இந்த நிலையில் அவர்களது நடவடிக்கைகளைக் கண்காணிக்கத்தான் தாங்கள் வந்திருக்கிறோம் என்பதும் தெரிந்தால் வேறு வினையே வேண்டாம்!

இவ்வாறு தோன்றியதும் நண்பர்களிடம் தன் ரகசியத் திட்டத்தை காதோரம் விவரிக்கலாம் என்று முடிவுசெய்ததை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்தான் பாலு.

எதற்கு அவர்களிடம் சொல்லவேண்டும்? அதுவும் கிட்டே கூப்பிட்டு ரகசியம் பேசும் குரலில்? ஒருவேளை குண்டர்கள் காதில் அது விழாமல் போனால் கூட, என்னவோ ரகசியம் பேசுகிறார்கள் என்கிற சந்தேகத்தை ஏன் கிளப்பவேண்டும்? ஆகவே நண்பர்களுக்கே கூடத் தெரியாமல்தான் தன் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் என்று முடிவு செய்தான் பாலு.

"என்னடா விஷயம்? என்கிட்டே சொல்லு" என்று கத்தினான் குடுமி.

'உஷ்ஷ்ஷ்' என்று அவனை அடக்கப்பார்த்தான் பாலு.

இனிமேல் யோசித்துக்கொண்டிருந்தும் பேசிக்கொண்டும் இருப்பதில் பிரயோசனமில்லை என்று முடிவு செய்தவனாக, திடீரென்று சம்பந்தமில்லாமல் குரல் எழுப்பி அழ ஆரம்பித்தான்.

'அய்யாங்... ஆஆஆங்ங்ங்ங்... அம்மா....ஊ..ஆ...ஊ" என்று விதவிதமாகக் குரலில் ஏற்ற இறக்கங்களைக் காட்டி உரத்த குரலெடுத்து அழத் தொடங்கினான் பாலு.

"என்னடா! என்னாச்சுடா!" என்று நண்பர்கள் இருவரும் பதறிக்கொண்டு அவன் அருகே நகர்ந்து வந்து உட்கார்ந்தார்கள்.

ஆனால் பாலு பதில் சொல்லுவதாக இல்லை. இன்னும் குரலை உயர்த்தி, தீவிரமாக அழத் தொடங்கினான்.

"டேய்!டேய்! சொல்லிட்டு அழுடா. பூச்சு எதனா கடிச்சிடிச்சா?" என்றான் டில்லிபாபு.

ம்ஹும். பாலுவாவது, பதில் சொல்லுவதாவது!

தன்னாலான அதிகபட்ச சத்தத்தை வெளியிட்டுக் கதறியழ ஆரம்பித்துவிட்டான். ஐந்து நிமிடங்கள் இப்படி தீவிரமாக அழவேண்டியிருந்தது. திடீரென்று அந்த அறையின் வெளியே ஒரு சத்தம் கேட்டது. பூட்டு திறக்கும் ஓசை. பிறகு 'யார்றா அது?' என்றொரு கட்டைக்குரல்.

"சார்.... எனக்கு பாத்ரூம் போவணும்சார்... ரொம்ப அர்ஜெண்டு... முட்டிக்கிட்டு வருது. வலி தாங்கமுடியலேஏஏஎ" என்று இன்னும் தீவிரமாகக் கத்தி அழ ஆரம்பித்தான் பாலு. மனத்துக்குள் இன்ன செய்வது என்றொரு தீர்க்கமான முடிவுக்கு அவன் வந்திருந்தான்.

"பாத்ரூமெல்லாம் இங்க இல்லை. சும்மா கிட" என்றான் வந்தவன். இருட்டில் அவன் குரல் மட்டும்தான் வந்ததே தவிர ஆள் யார், எப்படி இருக்கிறான் என்பது கூடத் தெரியவில்லை.

"சார், சார்... தாங்கமுடியலை சார். சாயங்காலத்துலேருந்து ஒண்ணுக்கே போகலை சார். வலிக்குதே, அம்மாஆஆ" என்று கதறிமனமுருகி அழத் தொடங்கினான் பாலு.

"இன்னாடா இது உங்களோட பேஜாரா போச்சே" என்று அலுத்துக்கொண்ட அந்த குண்டன், "சரி, என்னோட வந்துத் தொலை" என்று உத்தேசமாக பாலுவை நெருங்கி கையைப் பிடித்துக்கொண்டு திரும்பினான்.

சட்டென்று அழுகையை நிறுத்திய பாலு, "இங்கயே இருங்கடா. நான் பாத்ரூம் போயிட்டு வந்துடறேன். என்னால தாங்கமுடியலை. இதை கண்டிப்பா முதல்ல முடிச்சாகணும்" என்று தன் நண்பர்களைப் பார்த்துக் குரல் கொடுத்தான். அந்த சமிக்ஞை அவர்களுக்குப் புரிந்தாகவேண்டுமே என்று மனத்துக்குள் கடவுளை வேண்டிக்கொண்டான். குண்டன் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

மாடிப்படி இறங்கும்போது கொஞ்சம் வெளிச்சம் இருந்தது. கீழே சன்னலுக்கு வெளியே ஓரிரு மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருந்ததையும் தாங்கள் வந்தபோது பார்த்த குண்டர்படையில் ஒரு சிலர் அங்கே நின்றுகொண்டிருந்ததையும் அவன் கண்டான். எப்படியும் ரொம்பதூரம் அழைத்துப்போக மாட்டார்கள். கட்டடத்துக்குப் பக்கத்திலேயேதான் போகச்சொல்லுவார்கள் என்று பாலு எதிர்பார்த்தான். வாகான ஒரு வாய்ப்பு கிட்டுமானால் மூச்சைப் பிடித்துக்கொண்டு தப்பித்து ஓடிவிடவேண்டுமென்றும் எங்காவது பதுங்கியிருந்து அவர்களது நடவடிக்கைகளை கவனிக்கவேண்டும் என்பதும் அவனது திட்டம். இதில் உள்ள அபாயம் குறித்தும் அவன் சிந்திக்கத் தவறவில்லை. பிடித்துவிட்டார்கள் என்றால் எப்படியும் கட்டிவைத்து உதைத்தே தீருவார்கள். கொலை செய்யவும் தயங்காதவர்கள். அதற்காக, எடுத்துக்கொண்ட நோக்கத்தைக் கைவிடமுடியாதல்லவா? இவர்கள் யார்? என்ன சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்? புதையல் எடுக்கப்போகிறேன் பேர்வழி என்று எதை எடுத்து என்ன செய்யப்போகிறார்கள்? இதை எப்படியும் கண்டுபிடித்தே தீரவேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 30 Apr 2009 - 16:59

மனத்துக்குள் எல்லா தெய்வங்களையும் அவன் வேண்டிக்கொண்டான். அந்த குண்டன், தன் நண்பர்களிடம் "ஒண்ணுமில்லப்பா. இந்தப்பையனுக்கு பாத்ரூம் போவணுமாம்" என்று சொல்லியபடி, 'டேய், அந்தா பாரு. அந்த மரத்தடில போய் போயிட்டுவா' என்று வாசலில் இருந்தபடியே அவன் கையை விடுவித்தான்.

'ரொம்ப தேங்ஸ் சார். இதோ வந்துடறேன்' என்றபடி பாலு சந்தோஷமாக நடக்க ஆரம்பித்தான். நடக்கும்போதே மனத்துக்குள் ஒரு கணக்குப்போட்டான். அந்தப் பாழடைந்த கட்டடத்துக்கும் இடதுபக்கம் குண்டன் சுட்டிக்காட்டிய மரத்தடிக்கும் இடையே பத்து மீட்டர் இடைவெளியாவது அவசியம் இருக்கும். அந்த மரம்தான் ஆரம்பம். அங்கிருந்து வரிசையாகப் பல மரங்கள் இருந்தன. சுற்றிலுமே மரங்கள்தான். இருளில் எல்லா மரங்களும் மலைமாதிரி கவிந்து நிற்பதுபோல் பட்டது அவனுக்கு. ஒரு மரத்தின் பின்னால் போய் ஓட ஆரம்பித்தால் எப்படியும் தப்பித்துவிடலாம் என்று அவனுக்குத் தோன்றியது. ஓடுவதென்றால் எங்கே ஓடுவது? கடற்கரைக்குத்தான் ஓடவேண்டும். எப்படியும் மாட்டிக்கொள்ளப்போவது உறுதி. அதற்குள் படகு எந்தப்பக்கம் வரும், அதில் என்ன ஏற்றுகிறார்கள் என்று பார்க்கவேண்டும். அதைவிட முக்கியம், புதையலை எங்கிருந்து தோண்டி எடுக்கிறார்கள் என்று பார்க்கவேண்டியது. இதையெல்லாம் பார்த்துவிட்டபிறகு மாட்டிக்கொண்டால் நல்லது. பார்க்குமுன்னரே மாட்டிக்கொண்டால் முயற்சி வீணாகிவிடும்.

என்ன செய்யலாம்? அவன் மனத்துக்குள் வேகவேகமாகக் கணக்குப் போட்டான். எப்படியும் மணி பதினொன்றேமுக்கால் இருக்கும். இன்னும் கால்மணிநேரத்தைக் கடத்தவேண்டும். பன்னிரண்டு மணிக்குப் படகு வரும் என்பதாகத்தானே பேசிக்கொண்டார்கள்? அந்தநேரம் எல்லாருமே பிசியாகிவிடுவார்கள். அட, ஒரு புதையலை எடுத்துப் படகில் ஏற்றுவதென்றால் முன்னதாக ஒரு கால்மணிநேரம் வேலை இருக்காதோ? இந்த குண்டர்கள் இப்படி வெட்டியாக நின்றுகொண்டிருக்கிறார்களே என்றும் அவனுக்கு அலுப்பாக இருந்தது. இதற்கிடையில் தனது திட்டம், தன் நண்பர்களுக்குச் சரியாகப் புரிந்திருக்குமா, அவர்கள் ஏதாவது உபாயம் செய்து தப்பிவந்து தன்னைக் காப்பாற்றுவார்களா, அல்லது தான் தப்பித்ததை ஒட்டி, அவர்களை குண்டர்கள் அடித்து உதைப்பார்களா என்று விதவிதமான கவலைகள் அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தன. வேறு வழியில்லை. துணிந்து ஒரு முடிவு செய்தாகிவிட்டது. இனி பின்வாங்கமுடியாது என்று தோன்றியது.

ஆகவே, "சார், எனக்குத் தனியா போக பயமா இருக்கு. நீங்க கூட வரிங்களா?" என்று தன்னை அழைத்துவந்த குண்டனிடம் கேட்டான். தன்மீது துளி சந்தேகமும் வராமலிருக்க இது உதவும் என்று அவனுக்குத் தோன்றியது.

"அட பயமாமில்லே?" என்று சுற்றியிருந்தவர்கள் எகத்தாளமாகச் சிரித்தார்கள். "நீ போதம்பி. நாங்க இங்கதான் இருக்கோம். பயப்படாத. இந்தக் காட்டுல எங்களை மீறி உன்னை யாரும் எதுவும் செய்துடமுடியாது" என்று நம்பிக்கை சொன்னான் ஒருவன்.

"சரிங்க, " என்று பவ்யமாக பதில் சொல்லிவிட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தான் பாலு. அவனது நல்லநேரம் அவன் இரண்டடி எடுத்து வைப்பதற்குள் எதிர்திசையிலிருந்து வேகமாக ஓடிவந்த இன்னொரு புதிய குண்டன், "போட் வந்துடிச்சி, போட் வந்துடிச்சி" என்று கத்தியபடியே வந்தான்.

ஆஹா என்று மனத்துக்குள் சந்தோஷப்பட்டுக்கொண்ட பாலு சட்டென்று நின்று திரும்பிப்பார்த்தான். அவர்கள் இப்போது பாலுவை கவனிப்பதை விட்டுவிட்டு புதிய குண்டனிடம் பேச ஆரம்பித்தார்கள்.

"எங்க நிக்குதுடா?" என்றான் தலைவன் போலிருந்த ஒருவன்.

"வழக்கமா நிக்கற இடம்தான். கொஞ்சம் சீக்கிரம் முடியணும்னு சொன்னாங்க" என்றான் அவன்.

"சரி, இதோ" என்றவன் திரும்பி, தன் நண்பர்களைப் பார்த்தார்கள். அவர்கள் உடனே புறப்பட்டு, அந்தக் கட்டடத்தின் பின்புறமாக கும்பலாக நடக்க ஆரம்பித்தார்கள். பாலுவுக்கு நம்பவே முடியவில்லை. தன்னையோ, தன்னிரு நண்பர்களையோ சுத்தமாக மறந்துவிட்டு அத்தனை பேரும் இப்படிப் புறப்படுகிறார்களே என்று அவனுக்கு வியப்பாக இருந்தது. எல்லாம் நல்லதுக்கே என்று நினைத்துக்கொண்டவனாக தடதடவென்று அந்தக் கட்டடத்தின் வலப்புறமாகத் திரும்பி தானும் அவர்கள் ஓடும் திசைக்கு எதிராக ஓட ஆரம்பித்தான். பத்தடி போனவன் சட்டென்று தாமதித்தான். கட்டடத்தில்தான் இப்போது யாருமில்லையே? போய்த் தன் நண்பர்களையும் உடன் அழைத்துக்கொண்டு வந்தால் என்ன என்று தோன்றியது. வேண்டாம், விபரீதம் என்று உள்ளுணர்வு எச்சரித்தது. தயங்கித்தயங்கி அவர்கள் போன திசையைக் குறிவைத்து அவன் மட்டும் முன்னேற ஆரம்பித்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 30 Apr 2009 - 16:59

பயம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவியிருந்தது. அந்தக் குளிர் இரவிலும் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. நாக்கு வறண்டு, தாகம் எடுத்தது. கடவுளே, காப்பாத்து என்று வேண்டியபடி மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தான். பத்து நிமிடங்கள் ஓடிக்களைத்தபின், நூறடி தூரத்தில் அவர்கள் அனைவரும் ஓர் அடர்ந்த புதரின் மறைவிலிருந்து எதையோ வெளியே எடுக்க முயற்சி செய்வதை ஒளிந்திருந்து பார்த்தான்.

என்ன அது? தெரிந்துகொள்ளும் ஆவல் அவனுக்குக் கட்டுக்கடங்காமல் போனது. சே, இந்த இருட்டு இப்படியா சதி செய்யவேண்டும்?

சில நிமிட முயற்சிக்குப் பின் அவர்கள் வெளியே இழுக்க முயற்சி செய்த உருவங்கள் ஒவ்வொன்றும் வரிசையாக வெளியே வருவதையும் பார்த்தான். ஒவ்வொன்றும் ஒரு பூதம் மாதிரி பெரிதாக இருக்கும் என்று தோன்றியது. நான்கு பேர் சேர்ந்துதான் ஒரு பொருளைக் கட்டி இழுத்தார்கள். பிறகு கடற்கரையை நோக்கிச் செல்லும் திசையில் அதை உருட்டிக்கொண்டு போக ஆரம்பித்தார்கள். பாலு இன்னும் முன்னால் போய் தெளிவாகப் பார்க்க முடிகிறதா என்று பார்த்தான். ம்ஹும். வேறு வழியே இல்லை. உயிரைப் பணயம் வைத்து, அவர்களுக்கு எதிரே போய் நின்றுதான் அது என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. உயிரே போனாலும் தெரிந்துகொள்ளாமல் விடக்கூடாது என்றும் உறுதி ஏற்பட்டது. தான் கொஞ்சம் ஒல்லிப்பையனாக இருந்திருக்கலாம். ஓடுவதற்கும் ஒளிவதற்கும் சௌகரியமாக இருந்திருக்கும். இப்படியொரு குண்டனாக வளர்ந்துவிட்டோமே என்று முதல்முறையாகக் கவலைப்பட்டான். ஆனாலும் மன உறுதியை விட்டுவிடாமல் வேகவேகமாக நடக்க ஆரம்பித்தான்.

அவனது இலக்கு இப்போது அவனுக்குத் துல்லியமாக இருந்தது. நூறடி இடைவெளி இருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் போகும் பாதைக்குச் சமமாகவே பக்கவாட்டில் நடந்து கடற்கரை வெளியை அடைந்துவிடவேண்டும். மணல்வெளியில் பதுங்கவெல்லாம் முடியாது. அங்கே பார்த்துவிடுவார்கள். அதற்குள் அவர்களை நெருங்கி, இழுத்துப்போகப்படும் பொருள் என்னவென்பதைப் பார்த்துவிடவேண்டும்.

மூச்சைப்பிடித்துக்கொண்டு அவன் பதுங்கி நடந்தான். ஏழு நிமிடங்களில் கடற்கரை வந்துவிட்டது. பக்கவாட்டில் அவர்களும் அந்தப் பொருட்களை உருட்டிக்கொண்டு வருவது தெரிந்தது. கிட்டே போகலாமா என்று யோசித்தான். சட்டென்று வேறொரு யோசனை வந்தது. எதற்குக் கிட்டே போய் மாட்டிக்கொள்ளவேண்டும்? மாறாக, அதோ தூரத்தில் கரையோரம் தெரியும் படகின் அருகே போய் பதுங்கிக்கொண்டுவிட்டால் பார்ப்பது சுலபமாயிற்றே.

இப்படித் தோன்றியதுமே பாலு கடலோரத்தில் நின்றுகொண்டிருந்த படகை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 30 Apr 2009 - 17:00

தனக்கு எங்கிருந்து அத்தனை துணிச்சல் வந்தது என்று பாலுவுக்கே ஆச்சர்யமாக இருந்தது. உடலில் அசாதரணமான பலமும் மனத்தில் அளவற்ற துணிச்சலும் பொங்கிக்கொண்டிருப்பதாக அவன் உணர்ந்தான். ஏதோ ஒன்று பெரிதாக சாதிக்கப்போகிறோம் என்று நிச்சயமாக அவனுக்குத் தோன்றியது. ஆனால் அது என்ன?

சாதிப்பதெல்லாம் அப்புறம் இருக்கட்டும். முதலில் இந்த மறைவிடத்திலிருந்து, நூறடி தொலைவில் தெரியும் படகை எப்படி அடைவது? ஏதோ உந்துதலில் ஓட ஆரம்பித்துவிட்டான். ஆனால் ஓடத்தொடங்கி, பத்தடி தூரம் கூடக் கடந்திருக்காது. அதற்குள், 'சே, இதென்ன பைத்தியக்காரத்தனம்! வெட்ட வெளியில், கடற்கரை மணலில் ஓடினால் குண்டர்களுக்குத் தானே கூப்பிட்டு விருந்து கொடுப்பது போலாகிவிடாதா' என்று புத்தியில் உறைக்க, சட்டென்று அப்படியே தரையில் குப்புறப் படுத்துக்கொண்டான்.

இருட்டு. நல்ல இருட்டுதான். அப்படியொன்றும் துல்லியமாக அவன் அங்கே படுத்திருப்பதைப் பார்த்துவிடமுடியாதுதான். அதுவும் அவர்கள் புதையலை இழுத்துக்கொண்டு படகை நோக்கி வரப்போகிற தூரத்தைக் கணக்கிட்டால் அவன் அங்கே இருப்பது ஒரு பொருட்டே அல்ல. ஆனாலும் ஆபத்து, ஆபத்துதானே! ஒருத்தன் கண்ணில் பட்டுவிட்டால் கூட ஆபத்துதான். கதைகளில் வருவதுபோல, படகிலிருந்து யாரும் டார்ச் அடித்துப் பார்க்காமல் இருக்கவேண்டும். அது ஒரு அவ?தை.

இவ்வாறு எண்ணியபடியே பாலு படுத்தவாக்கில் தவழ்ந்து, தவழ்ந்து முன்னேறத் தொடங்கினான். ஒரு பாம்பு போல வயிற்றால் நகர்ந்து முன்னேறிப் படகை அடைந்துவிடவேண்டும் என்பதே அவன் நோக்கம். ஆனால் உடம்பு ஒத்துழைக்க மறுத்தது. முகம் ஒரு பூசணிக்காய் அளவில் இருக்கிறது. தொப்பையோ, பொங்கலுக்கு வைக்கிற பானை மாதிரி. கைகளும் கால்களும் நல்ல குண்டு குண்டாக கிழங்கு வெட்டி எடுத்ததுபோல! சே. இத்தனை குண்டாக இருக்கிறேனே, உடம்பு நகரமாட்டேனென்கிறதே என்று அவனுக்கு அழுகையாக வந்தது. போதாத குறைக்கு இந்த சோடாபுட்டிக் கண்ணாடி வேறு! நாலடி நகர்வதற்குள் மூச்சிறைத்தது. ஒரு பயனற்ற முயற்சியைச் செய்கிறோமோ என்கிற சந்தேகமும் வந்தது. வேண்டாத கவலையாக, அங்கே இருட்டறையில் அடைபட்டிருக்கும் தன் நண்பர்கள் என்ன ஆனார்களோ என்றும் கொஞ்சம் கலவரமடைந்தான்.

இதனிடையில், பூதம் பூதமாக கனத்த புதையல் 'உருவங்களை' புதரிலிருந்து வெளியே தோண்டி எடுத்த குண்டர்கள் அவற்றைக் கயிறு கட்டி இழுத்து வந்தார்களல்லவா? அவர்களும் மணல்வெளியின் எல்லைக்கு வந்துவிட்டார்கள். மரங்களின் மறைவிலிருந்து அந்தக் கூட்டம் வெளியே வந்துவிட்டதை பாலு பார்த்தான். அவர்களூக்கென்ன? புதையலை உருட்டிக்கொண்டு விறுவிறுவென்று நடந்து படகை அடைந்துவிடுவர்கள். ஆனால் தான் எப்படி அவர்களுக்கு முன்னால் படகின் அருகே போவது? அந்தப் புதையல் என்னவென்று எப்படி அறிந்துகொள்வது? அதுவும் அவர்கள் யாரும் பார்க்காதபடியும் நடந்துகொள்ளவேண்டும். வெட்டவெளிவேறு! என்னதான் செய்யப்போகிறோம் என்பதே அவனுக்குப் புரியவில்லை. பெரியதொரு ஆபத்தில் சிக்கிக்கொள்ளவிருக்கிறோம் என்று மட்டும் உறுதியாகத் தோன்றியது.

உயிரே போனாலும் எடுத்த காரியத்தை முடிக்காமல் பின்வாங்குவதில்லை என்று முடிவு செய்துகொண்டவனாக முன்னைக்காட்டிலும் வேகமாகப் படகை நோக்கித் தரையில் தவழத் தொடங்கினான்.

சரியாக ஐந்து நிமிடங்கள். மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்க ஒரு வழியாக யாரும் தன்னைப் பார்க்காமலேயே அவன் படகின் அருகில் வந்து சேர்ந்தான். வியர்வையும் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த மணலும் மிகவும் உறுத்தியது. எழுந்து தட்டிக்கொள்ளவெல்லாம் சந்தர்ப்பம் இல்லை. இப்போது படகில் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும்.

அவன் படகிலிருந்து ஐந்தடி தூரத்தில் இப்போது இருந்தான். கும்மிருட்டில் படகே ஒரு பூதம் போலத்தான் தெரிந்தது. கன்னங்கரேலென்ற உயர்ந்த உருவமாக! அந்தப் படகுக்கு நேர் பின்னால் கடலில் ஐம்பதடி தொலைவில் ஒரு மோட்டார் படகு நின்று கொண்டிருப்பதையும் அவன் பார்த்தான்.

உடனே அவனுக்கு வி?யம் விளங்கிவிட்டது. மோட்டார் படகு கரைக்கு வரமுடியாது. இந்தப் பகுதியில் ஆழம் குறைவு. வந்து சிக்கிக்கொண்டால், திரும்பப் போகாது. ஆகவே மரப்படகில் புதையலை ஏற்றி அதை மோட்டார் படகின் அருகே கொண்டு போகப்போகிறார்கள்! பிறகு அதை மோட்டார் படகில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுவிடுவார்கள்.

மூச்சு விடும் சத்தம் கூடக் கேட்காதவாறு அவன் மரப்படகின் அடியே தவழ்ந்து வந்தான். படகின் மேல் யாரேனும் இருக்கிறார்களா என்று நோட்டம் பார்த்தான். அதிர்?டவசமாகப் படகில் வந்தவர்களும் இறங்கி, புதையலை இழுத்துவரப் போயிருக்கவேண்டும். படகு தன்னந்தனியாகத்தான் கரையில் இருந்தது. ஆகவே பின்புறமாகச் சுற்றித் தவழ்ந்து சென்று படகில் ஏறுவதற்காக எழுந்து நின்றான்.

இதற்குள் குண்டர்களின் படை படகின் அருகே வந்துவிட்டிருந்தது. முன்புறத்தில் 'மெதுவா, மெதுவா, பாத்து தள்ளு, நீ நகர்ந்துக்கடா... கொஞ்சம் பக்கவாட்டுல வழி விடு' என்று என்னெல்லாமோ குரல்கள் கேட்டன. எப்படியும் இருபதடி தூரத்துக்குள் அவர்கள் வந்திருப்பார்கள் என்று பாலு யூகித்தான். படகின் பின்புறம் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றைப் பிடித்து மெல்ல எழும்பி, படகின் முதுகில் கால் வைத்து ஒவ்வோர் அடியாக உயர்ந்து மேலே ஏறி படகின் விளிம்பைப் பிடித்தான். சட்டென்று, இதென்ன பைத்தியக்காரத்தனம்! தானே வலிந்துபோய் அவர்களிடம் மாட்டிக்கொள்வது போலச் செய்கிறோமே என்று தோன்றிவிடவே, படகின் மீது ஏறாமல், கயிற்றைப் பிடித்துத் தொங்கியபடியே நடப்பதை கவனிக்கலாம் என்று முடிவு செய்தான்.

குண்டர்கள் படகின் அருகே வந்துவிட்டார்கள். "?ுப்...?ூப்... ம்ம்.... ஏத்து.... ஏத்து... தூக்குடா.... ஆங்ங்ங்... ஓவ்" என்று சத்தமெழுப்பியபடியே அவர்கள் புதையலைத் தலைக்கு மேலே தூக்குவது போலத் தூக்கிப் படகினுள்ளே பொத்தென்று போட்டார்கள். 'டம்' என்று சத்தம் கேட்டது. ஒன்று. இன்னொரு டம். இரண்டு. இன்னும் ஒரு டம். மூன்று.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக