புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
சிவா
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10 
15 Posts - 4%
prajai
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10 
7 Posts - 2%
jairam
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 10:56 pm

First topic message reminder :

தமிழர் என்ற பெருமை மட்டும் போதுமா... மொழியை அறிய வேண்டாமா?


சொல்லறிவு என்னும் திறப்பு


பேச்சுத் தமிழைக் கொடுந்தமிழ் என்று சொல்வார்கள். ஒரு மொழியின் பேச்சு வழக்கில் கருத்துகளைச் சொல்வதுதான் முதன்மையாக இருக்குமேயன்றி பிற எவையும் முன் நில்லா. ஒரு சொல் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டுமோ அவ்வாறே பேச்சு வழக்கில் ஒலிக்கும் என்று கூறுவதற்கில்லை. ஒலிப்பின் அழுத்தங்கள் குறைந்து, நுண்மைகள் குன்றி வழுக்கலாய் ஒலிக்கும். பேச்சு மொழியின் பயன் அந்தந்த நேரத்து உரையாடலும் செய்தி தெரிவிப்பதுமே. தேவைக்கேற்ப விரைவுக் குறிப்போடு இருப்பதும் இயல்புதான். எழுத்துத் தமிழானது பேச்சுத் தமிழின் வழுக்கள் அனைத்தையும் நீக்கியதாகத்தான் இருக்கும். எழுத்துத் தமிழைத்தான் 'செந்தமிழ்' என்பார்கள்.

மொழி, இலக்கணம் கூறுகின்ற அனைத்து இயல்புகளுக்கும் உட்பட்டவாறுதான் எழுத்து இருக்க வேண்டும். பேச்சில் தவறாகச் சொல்லப்படுவது குற்றமாகாது. ஆனால், எழுத்தில் எந்தத் தவற்றுக்கும் இடமில்லை. அதனால்தான் இம்மொழியானது எழுத்துத் தமிழில் உறைகிறது. பேச்சுத் தமிழில் உலவுகிறது. எழுத்துத் தமிழில் சங்க காலத்து வழக்குக்கும் அண்மைக் காலத்து வழக்குக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளும் எளிதில் விளங்குகின்றன. அண்மைக் காலத்து எழுத்துகள் விளங்குகின்றவாறு சங்கச் செய்யுள்கள் விளங்குவதில்லை. அது ஏன் என்றால், அண்மைக் காலத்து உரைநடை எழுத்துகள் தனித்தனிச் சொற்களாகப் பிரித்து எழுதப்படுகின்றன. சங்கச் செய்யுள்கள் புலமைத் தமிழில் சேர்த்து எழுதப்பட்டுள்ளன. படிப்போர்க்கு எளிதில் விளங்க வேண்டும் என்பதற்காகவே செய்யுள்களைப் பிரித்துப் பதிப்பார்கள். அவ்வாறு பிரித்துப் பதிக்கப்பட்ட செய்யுள்கள் மிக எளிமையாக விளங்கும்.


எடுத்துக்காட்டாக, திருக்குறள்களை எடுத்துக்கொள்வோம். ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட செந்தமிழில் குறட்பாக்கள் எழுதப்பட்டுள்ளன. எல்லாக் குறள்களும் நமக்கு விளங்காமல் போயினவா…? இல்லையே. 'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று'. இந்தக் குறள் படிக்கின்ற எல்லார்க்கும் தெளிவாக விளங்குகிறது. இதை விளக்கிச் சொல்ல வேண்டுவதில்லை. விளங்காமைக்கு இடமேயில்லை. ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதில்லை, ஒருவர் நமக்குச் செய்த நன்மையல்லாதவற்றை அன்றே மறந்துவிடுவதுதான் நல்லது என்பது அக்குறளின் பொருள். நம் மொழியின் பழைய எழுத்து முறைமையும் இன்றைய எழுத்து வழக்கும் மிகவும் நெருக்கமான தன்மைகளைப் பெற்றிருக்கின்றன என்பது கண்கூடு.

சரி, எல்லாக் குறள்களும் இதே தன்மையோடு இருக்கின்றனவா? 'ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு'. மேற்காண்பதும் குறள்தான். ஆனால், முதலில் சொன்ன நன்றி மறப்பது குறளைப்போல இக்குறள் எளிமையாய் விளங்கவில்லை. அதற்குக் காரணம் என்ன ? இக்குறளில் உள்ள சில சொற்களுக்குப் பொருள் தெரியும், சில சொற்களுக்குப் பொருள் தெரியவில்லை. கை, கயவர், உடைக்கும், அல்லாதவர்க்கு ஆகிய சொற்களின் பொருள்கள் நமக்குத் தெரியும். ஈர்ங்கை, கூன்கை, விதிரார், கொடிறு ஆகிய சொற்களின் பொருள்கள் நமக்குத் தெரியவில்லை. ஆக, நமக்குச் சொற்பொருள் தெரியவில்லை. அதனால் விளங்கவில்லை. அதாவது தமிழில் உள்ள சொற்கள் பலவற்றின் பொருளை நாம் அறிந்திருக்கவில்லை என்பதால் அச்சொற்களைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள செய்யுள்கள் விளங்கவில்லை.

அச்சொற்களின் பொருள்களைக் கூறுகிறேன். இப்போது விளங்குகிறதா என்று பார்ப்போம். ஈர்ங்கை என்றால் “உணவு உண்டபின் கழுவிய கை” என்பது பொருள். அதாவது எச்சிற்கை. விதிர்தல் என்றால் நடுங்குதல் என்பது பொருள். உதறும் செயலானது கையை நடுங்கச் செய்வதுதானே ? இங்கே விதிரார் என்பதற்கு “உதறார்” என்ற பொருளைக் கொள்ளலாம். அடுத்து கூன்கை. கூன் என்றால் தெரியும், வளைந்துவிடுவது. கூன்முதுகு என்றால் வளைந்த முதுகு. கூன்கை என்பதற்கு வளையும்கை என்று பொருள். ஒருவரை அடிப்பதற்கோ, ஒன்றை உடைப்பதற்கோ கையை வளைத்து வீசவேண்டும். கொடிறு என்றால் கன்னக்கதுப்பு. இப்போது குறளுக்குச் செல்வோம் வாருங்கள். ஈர்ங்கை விதிரார் கயவர் – உணவு உண்டபின் கழுவிய கையைக்கூட கயவர்கள் நடுங்கவிடமாட்டார்கள் / உதறமாட்டார்கள். கொடிறுடைக்கும் – கன்னத்தை உடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு – வளைந்து வருகின்ற கைகள் இல்லாதவர்கட்கு. “தம் தாடையைப் பெயர்க்க வளைந்து வந்து அடிக்கும் கைகளை உடையவர்களுக்கு அல்லாது மற்றவர்க்காகத் தாம் உண்ட எச்சிற்கையைக்கூட உதறமாட்டார்கள் கயவர்கள்” என்பது குறளின் பொருள். இப்போது குறட்பொருள் நன்கு விளங்குகிறது.

நம் மொழியிலுள்ள எண்ணற்ற சொற்களின் பொருள்கள் தெரியவில்லை என்பதால்தான் சங்கச் செய்யுள்கள் விளங்கவில்லை. பழகிய ஆயிரம் சொற்களுக்குள்ளாகவே நாம் புழங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் ஏன் நம் சொல்லறிவைப் பெருக்கிக்கொள்ளக்கூடாது?





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 11:10 pm

மனமும், நெஞ்சும் ஒன்றா?


சொற்களை அறிவது என்னும் நெடும்பயணத்தை மேற்கொள்வதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. அகராதியின் துணையை நாடுவது, பேச்சுத்தமிழை ஊன்றிக் கேட்பது, வட்டார வழக்கில் வழங்கப்படும் தனித்தன்மையுள்ள சொற்களை இனங்காண்பது, சொல்வேட்கையோடு இலக்கியங்களைப் படிப்பது, செய்யுள்களைப் பொருளுரை பொழிப்புரை விளக்கவுரையோடு கற்பது என எண்ணற்ற வழிகள் இருக்கின்றன.

பேச்சுத் தமிழை ஊன்றிக் கேட்டல் என்னும் முறைமையில் நம்முடைய முயற்சியே இராது. பேசிக்கொண்டிருப்பவரின் மொழிகளுக்குச் செவிகொடுத்தால் போதும். அவருடைய சொற்களை நாம் தொடர்ந்தறிந்தபடியே இருக்கலாம். அதைக் குறித்து நான் பிறகு விளக்குகிறேன்.

அகராதியின் துணையை நாடுவது என்பதை முதலாவதாகக் குறிப்பிட்டிருக்கிறேன். அகராதியின் வழியாகவே சொற்களை எப்படி அறிந்து நினைவிற்கொள்வது? முன்பே சொன்னதுதான், அகராதியைக் கதைநூல் படிப்பதைப்போல் தொடர்ந்து படித்துச் செல்வது இயலாது. அவ்வப்போது நமக்கு வேண்டிய சொல்லின் பொருளை அறிவதற்காகவே அகராதியைப் படிக்க வேண்டியிருக்கிறது.

எப்போதாவது நமக்குத் தேவைப்படுகின்ற சொல்லின் பொருளை அறிவதன் வழியாகவே நமக்கு வேண்டிய சொல்லறிவை மிகுதியாகப் பெற்றுவிட முடியாது. அந்நிலையில்தான் ஒரு சொல்லைக் குறித்து அறியத் தொடங்கும்போது அச்சொல்லின் முதல் அசையைத் தொடக்கமாகக்கொண்ட அனைத்துச் சொற்களையும் ஒருசேர அறிந்து வைப்பது என்னும் வழிமுறையைச் சொன்னேன்.

மனம் என்ற சொல்லின் பொருளை அறியத் தொடங்குகையில் “மனம் என்பதை முன்னொட்டாகக் கொண்ட நூற்றுக்கணக்கான சொற்களின் பொருள்களையும் அப்போதே அறிந்துகொள்வது” என்னும் தொகுப்பு முறை.

மனக்கசப்பு, மனக்கசிவு, மனக்கடினம், மனக்கண், மனக்கலக்கம், மனக்கவலை, மனக்கவற்சி, மனக்களிப்பு, மனக்கனிவு, மனக்காய்ச்சல், மனக்கிடக்கை, மனக்கிலேசம், மனக்குருடு, மனக்குழப்பம் என்று தொடங்கும் அச்சொற்களின் அணிவரிசை இறுதியாக மனனம் என்ற சொல்லில் முடிகிறது.

மனம் என்கின்ற ஒரு சொல் வழியாக நெஞ்சம் என்பதைக் குறிக்கும் ஒரு பொருளோடு தொடங்கியது நம் சொற்றேடல். அதற்குப் பின்னொட்டுகள் அமைந்து பொருள் கூட்டியபோது பற்பல பொருள்களைப் பெற்றுவிட்டோம். இவ்வாறு அறிவதன் வழியாக பின்னொட்டுச் சொற்களின் தனிப்பொருளையும் நாம் அறிந்தவர்களையும் அறிந்தவர்களாகிறோம்.

கசப்பு, கசிவு, கடினம், கண், கலக்கம், கவலை, கவற்சி, களிப்பு, கனிவு என்று கைந்நிறைந்த சொற்களை அறிந்துவிட்டோம். அவற்றில் பல சொற்களின் பொருள் நமக்கு முன்பே தெரியும் என்றாலும் இப்போது துலக்கமாகத் தெரிந்துகொண்டோம். கவலை என்பதற்கும் கவற்சி என்பதற்கும் வருத்தம் என்கின்ற ஒரே பொருள்தான். கவல் என்பதிலிருந்து கவலை (கவல்+ஐ) தோன்றுகிறது, கவற்சி (கவல்+சி) தோன்றுகிறது.

மனக்கிடக்கை என்பதிலுள்ள கிடக்கை என்ற சொல்லின் பொருள் தெரியவில்லை. மனக்கிடக்கைக்கு உள்ளக்கருத்து என்ற பொருளைப் பெற்றோம். கிடக்கை என்பது கிடத்தல் என்னும் பொருளில் வழங்கப்படும் தொழிற்பெயர். மனத்தில் நெடுநாளாய்க் கிடந்தது மனக்கிடக்கை. இப்போது கிடக்கையின் பொருள் தெரிந்துவிட்டது. ஒரு சொல்லின் வழியாக ஒன்பது சொற்களை அறிந்துகொள்ளும் எளிய வழி இஃது.

உங்களுக்கு நன்றாகவே தமிழ் தெரியும் என்றால் இவ்வாறு அறிகையில் பெரும்பாலும் பழக்கப்பட்ட சொற்களாகவே இருக்கும். ஆனால், இடையிடையே உங்கள் மொழியறிவைக் கூர்மைப்படுத்தும் அருஞ்சொற்களும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும்.

மொழியைப் பொறுத்தவரையில் எல்லாச் சொற்களுக்கும் பொருளறிந்தவர்கள் என்று எவருமே இல்லை. புலவர் பெருமக்களேகூட எங்கேனும் ஓரிடத்தில் ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியாமல் அகராதியை நாடி வருவார்கள். அன்றேல் ஒரு சொல்லுக்கு அவர் அறிந்த பொருளுக்கும் மேலான வேற்றுப்பொருள் இருக்கிறதா என்பதையும் தெளிவு பெறத் துணிவார்கள். அதனால் ஒரு சொல்லின் பொருள் வழங்கீட்டுக்கு முடிவே இல்லை என்று கூறலாம். சொற்களோடும் அவற்றின் பொருள்களோடும் தொடர்ந்து குடித்தனம் நடத்தியே ஆகவேண்டும்.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 11:11 pm

ஒரு மொழியின் சொற்கள் என்பவை வெறும் பெயர்ச்சொற்கள்தாமா?



ஒரு சொல்லின் ஒரு பகுதியைக்கொண்டு அப்பகுதியில் தொடங்கும் அனைத்துச் சொற்களையும் அறிந்தது எளிமையாக இருந்தது. அகராதியைத் தொட்டு சொல்லாற்றல் பெறுவதற்கு அது நல்ல வழி. அவ்வாறே இன்னோர் எளிய முறையும் இருக்கிறது. இது இன்னும் வலிமையாய் நம் சொல்லாட்சித் திறத்தைப் பெருக்கும் வழிமுறையாகும்.

தமிழில் உள்ள நான்கு வகைச் சொற்கள் எவை ? பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவை அவை. அந்நான்குவகைச் சொற்களில் பெரும்பான்மையாக இருப்பவை எவை ? அகராதியை எடுத்து அதன் ஒரு பக்கத்தில் உள்ள சொற்களை ஆராய்ந்து பாருங்கள். பெயர் வினை இடை உரி என்னும் நான்கு வகைச்சொற்களில் பெயர்ச்சொற்களே மிகுதியாக இருக்கின்றன.

ஒரு மொழியின் சொற்கள் என்பவை வெறும் பெயர்ச்சொற்கள்தாமா? வேறு சொற்களே இல்லையா ? வினைச்சொற்கள், இடைச்சொற்கள், உரிச்சொற்கள் ஆகியன எங்கே ? அவையும் இருக்கின்றன. ஆனால், பெயர்ச்சொற்களே பெரும்பான்மையானவையாய் இருக்கின்றன.

பெயர்ச்சொற்களிலும் ஆட்பெயர்ச்சொற்கள், ஊர்ப்பெயர்ச்சொற்கள் போன்றவற்றை ஓர் அகராதியில் தேடிக் கண்டடைய முடியுமா ? ஆட்பெயர்ச்சொற்களின் அகராதியாய் அபிதான சிந்தாமணி போன்ற பெயர்ச்சொற்களஞ்சிய நூல்கள் விளங்குகின்றன. அதிலும்கூட வள்ளுவர் என்ற சொல்லின் பொருள் காண முடியாது. வள்ளுவர் என்பவர் யார் என்பதைத்தான் பெயர்ச்சொற்களஞ்சியங்கள் விளக்கும். ஆக, ஒரு சொல்லின் பொருளை அறிவதேகூட சொல்லாராய்ச்சியின் தலைவாயிலில் அடியெடுத்து வைத்ததைப்போல்தான். திருக்குறளுக்கு உரையெழுதுவதற்காக நான் பல்வேறு அகராதிகளுக்குள் குடியிருந்தபோதுதான் எனக்குச் சொல்லாய்வு வேட்கை பெருகியது.

அகராதிகளில் பெயர்ச்சொற்களே மிகுதியாக இருப்பின் வினைச்சொற்களை அறிவது எப்போது? இடைச்சொற்களையும் உரிச்சொற்களையும் இனங்கண்டு பொருள் காண்பது எவ்வாறு? பெயர்ச்சொற்களை மட்டுமே அறிந்தபடியிருந்தால் ஒரு வினைச்சொல்லைப் புதிதாய் அறிந்து பயன்படுத்துவது எப்போது? பெயர்ச்சொல்லறிவு பெருகிக்கொண்டே போகையில் வினைச்சொற்கள் எவற்றையும் அறியாமல் இருப்பின் அது முறையாகுமா?

இங்கேதான் நமக்குத் தமிழ்மொழியைப் பற்றிய “அடிப்படை இலக்கண அறிவு” வேண்டுவதாகிறது. அகராதியை அணுகும்போது எல்லாச் சொற்களும் ஒரே வகைமையில் இருந்தால் நம் சொல்லறிவு பெருகிவிடாது. ஒவ்வொரு அகராதியும் ஒவ்வொரு வகைமைச் சொற்களைச் சேர்த்திருக்கின்றன. வட்டார வழக்கு அகராதி ஒரு வட்டாரத்து மக்களின் பேச்சுமொழியைக் குறிப்பிட்டு நிற்கும் ஆவணமே தவிர, அதில் பொதுநிலைச் சொல்லாட்சியைப் பெற்றுக்கொள்ள இயலாது. ஆனால், சொல்லாய்விலும் அகழ்விலும் ஈடுபட்டுள்ளவர்க்கு ஒரு வட்டார வழக்கு அகராதியானது இல்லான் கண்ட புதையலாகும். தற்காலத் தமிழகராதி இன்றைய பயன்பாட்டில் வழங்கப்படும் சொற்களைத்தான் தொகுத்துத் தருமேயன்றி, திருக்குறளில் பயிலும் ஒரு நற்சொல்லைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும். ஈர்ங்கை, ஒறுத்தல் போன்ற சொற்களைத் தற்கால அகராதி கொண்டிருக்காது. அதனால்தான் அகராதியைத் தேர்ந்தெடுப்பதைக் குறித்துத் தலைப்பாடாக அடித்துச் சொன்னேன். முறையாய்த் தொகுக்கப்பட்ட நல்ல அகராதியைக் கைக்கொண்டவர்தான் சொல்லறிவுடையவராகத் தழைத்தெழல் இயலும்.

பெயர்ச்சொற்களை மட்டுமே அறிந்து செல்லல் என்ற தடையினை எப்படித் தாண்டுவது? எல்லாவகைச் சொற்களையும் அங்கே கண்டடைவது இயலாதா? இயலும். பெயரைக் குறிப்பவை பெயர்ச்சொற்கள். வினையைக் குறிப்பவை வினைச்சொற்கள். இவ்விரண்டுக்கும் இடையில் தோன்றுபவை இடைச்சொற்கள். பெயர்க்கும் வினைக்கும் உரியனவாய் அமைந்து சிறப்பித்துக் கூறுபவை உரிச்சொற்கள். ஆக, இடைச்சொற்களும் உரிச்சொற்களும் பெயரையும் வினையையும் சார்ந்தே வரும். தனித்து வரமாட்டா. அவற்றின் எண்ணிக்கையும் அளவில் குறைவே. எண்ணிக்கையில் குறைவு என்பதால் அவற்றை எளிதில் அறிந்து முடித்துவிடலாம். பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களுமே பெருங்கடலாய்த் திரண்டிருக்கின்றன என்கின்ற முடிவுக்கு வருகிறோம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 11:12 pm

பெயர் பெரிதா? வினை பெரிதா? தமிழ் கூறுவது என்ன...


சொற்களை அறிவதில் பெயர்ச் சொற்களை அறிந்தபடியே செல்வது ஒரு முறைமை. அதற்கு மாற்றாக வினைச்சொற்களை ஒவ்வொன்றாக அறிந்து செல்வது இன்னொரு முறைமை என்று கூறினேன். வினைச்சொற்களை அறிவதற்கும் பல்வேறு முறைமைகள் இருக்கின்றன. பேச்சுத் தமிழை ஊன்றி நோக்குவது நல்ல பயன் தரும். பாமரர் பேசுகையில் செவிப்புலனைக் கூர்தீட்டிக் கேளுங்கள். அவர்கள் பேச்சுப்போக்கில் அடிக்கடி அருஞ்சொற்களை இறைத்துக்கொண்டே செல்வார்கள்.

அகராதியின் ஒரு பக்கத்தில் ஐம்பது சொற்களுக்குப் பொருள்கள் தரப்பட்டிருந்தால் அவற்றில் நாற்பது சொற்கள் பெயர்ச்சொற்களாகவே இருக்கும். நான்கைந்து சொற்கள்தாம் வினைச்சொற்களாக இருக்கும். அப்படியானால் அகராதியைப் போன்ற பெருந்தொகை நூலிலேயேகூட வினைச்சொற்களை இனங்கண்டபடியே சென்றால் ஐயாயிரம் சொற்களைத்தான் தேடிப் பிடிக்க முடியும். பல இலட்சக்கணக்கான சொற்கள் தமிழில் இருப்பதாகக் கூறித்திரிந்தவர்களாயிற்றே நாம்! இப்போது வெறும் ஐயாயிரம் வினைச்சொற்கள்தாம் பட்டியலில் வந்தடைந்தனவா? சொற்களில் பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களுமே பெரும்பான்மையானவை என்று கூறிவிட்டு அவற்றில் ஐயாயிரமே வினைச்சொற்கள் என்றால் ஏமாற்றமாக இராதா? பல இலட்சங்களில் ஒரு இலட்சமேனும் வினைச்சொற்களாகவே இருக்க வேண்டுமே. இருபெரும் சொற்பிரிவுகளில் வினைச்சொற்களும் ஒன்று எனில் அதுதானே சரிநிலையாக இருக்கவேண்டும்? இப்போது வருகின்ற கணக்கு சிற்சில ஆயிரங்கள் எனில் பொருந்தவில்லைதானே? இந்த முரண்பாட்டைப் பற்றி நாம் இன்னும் தெளிவாக அறியப்போகிறோம். அதன் தொடக்கப்புள்ளியை இங்கே தெரிவித்துவிடுகிறேன் - அகராதிகளில் இல்லாத எண்ணற்ற அருஞ்சொற்கள் வினைச்சொற்களாகவே இருக்கின்றன. அவை பேச்சு மொழியின் வாயிலாகவே ஒவ்வொரு வட்டாரத் தமிழிலும் இம்மண்ணின் மக்களால் வழங்கப்பட்டு வருகின்றன. சுருக்கமாகக் கூற வேண்டுமெனில் “பேச்சுத் தமிழில் எண்ணற்ற வினைச்சொற்கள் பயின்று வருகின்றன.”

பேச்சுத் தமிழை ஊன்றிக் கற்றபோதுதான் அகராதிகளில் இல்லாத எண்ணற்ற பல தமிழ்ச்சொற்களை இனங்கண்டேன். அச்சொற்கள் யாவும் மொழி இலக்கணச் செம்மையோடு விளங்கின. அவற்றில் பலவும் வினைச்சொற்கள் என்பதும் வியப்பூட்டியது. ஏனோ அகராதியைத் தொகுத்தவர்கள் அத்தகைய சொற்களைப் பட்டியலுக்குள் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். நம்முடைய பேரகராதி முயற்சிகள் யாவும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளோடு முடிந்து நிற்கின்றன. அக்கால வரம்புக்குப் பிறகுதான் வட்டார இலக்கியத்துக்கேகூட அச்சு வாய்ப்பு ஏற்பட்டது. ஊர்ப்புறத்து மண்ணின் மணம் கமழத் தொடங்கியது. கடைநிலை வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் படைப்பிலக்கியத்தின் பக்கம் வந்தனர். அவர்களுடைய எழுத்துகளில் இயற்கையாகவே வட்டாரத் தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றன. கொடுந்தமிழ் என்று கருதியமையால் எழுதப்படாமல் விலக்கப்பட்ட பேச்சுத்தமிழ்த் தொடர்கள் மேற்கோள் குறிகளுக்குள் எழுதப்பட்டன. கதையில் உரையாடும் பாத்திரங்களின் மொழியாக அவை எழுதிக் காட்டப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே வட்டார வழக்குகளுக்கு எழுத்துப் பதிவுகள் தோன்றின.

எழுத்தில் ஏறவில்லை என்பதற்காக பேச்சுத்தமிழில் மட்டுமே வழங்கப்பட்ட அச்சொற்கள் அழிந்து போய்விடவில்லை. அருஞ்சொற்களைப் பேசுகின்ற பாமர மக்கள் ஒவ்வொருவரும் தமிழகராதியின் சில பக்கங்கள் என்று கருதத் தக்கவர்கள். அவருடைய பிள்ளைகளான நாம் அந்தப் பேச்சு முறையிலிருந்து வழுவாமல் நிற்க வேண்டும். வட்டாரத் தமிழைப் பேசுவதற்கு வெட்கப்படாவே கூடாது. சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்ற பெருமை நம்மிடம் தோன்றவேண்டும். வட்டாரத் தமிழில் பேசினால் நம் பேச்சு மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பது தானாகக் குறைந்துவிடும். நாம் மறந்த சொற்கள்கூட ஆழத்திலிருந்து நீர்க்குமிழிபோல் எழுந்துவரும். ஒவ்வொருவரின் இளமையை எண்ணிப் பார்க்கும்போதும் நம் தாத்தனும் பாட்டியும் கற்றுக்கொடுத்த பற்பல சொற்கள் நினைவுக்கு வரும். அந்தச் சொற்களைப் பயன்படுத்தாமல் அடையாளமற்றவர்களாக நிற்கிறோம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 11:13 pm

மாட்டேனும், மாண்டேனும் ஒன்றா?



பேச்சுத் தமிழில் நிறையவே சொற்கள் இருக்கின்றன. அவை அகராதிகளின் படியேறாமல் தேங்கிக் கிடக்கின்றன. பொதுமக்களின் பேச்சு மட்டத்தில் அவை நற்பொருள் தருகின்றவையாகவும் பேசத் தகுந்தவையாகவும் இருக்கையில் எப்படி அகராதிகள் அவற்றைப் புறக்கணித்தன ? வேண்டுமென்றே அவை புறக்கணிப்பட்டன என்று கூற இயலாதுதான். ஆனால், மக்கள் வாய்மொழியைக் கருத்தில் கொள்ளாமல் விட்டனர் என்று உறுதியாகக் கூற முடியும்.

கோவைப் பகுதிகளில் ‘மாட்டேன்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘மாண்டேன்’ என்று சொல்வார்கள்.

“நீ கேட்டதுக்கு நான் மாண்டேன்னா சொன்னேன் ?” என்பார்கள். “அவன் வரமாண்டேங்கிறான்…” என்பார்கள். “எடத்தைக் கொடுக்கச் சொல்லி எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்… எல்லாரும் மாண்டேன்னுட்டே இருக்கறாங்கொ…” என்று கூறுவார்கள்.

இந்த “மாண்டேன்” என்ற சொல் ஆராய்ச்சிக்குரியது. மாட்டேன் என்பதன் பேச்சு வழக்காக மாண்டேன் என்ற சொல் பயில்வதாகத் தோன்றும்.

இலக்கணத்தில் மெலித்தல் விகாரம் என்று ஒன்று இருக்கிறது. வல்லின மெய் தோன்றவேண்டிய இடங்களில் மெல்லின மெய் தோன்றி வன்மை ஒலிப்பை மென்மையாக்குவது. இத்தகைய விகாரங்கள் செய்யுள்களில்தாம் தோன்றும் என்று இலக்கணத்தை அடியொற்றியே நிற்க வேண்டுவதில்லை. பேச்சுப் பயன்பாடு வரைக்கும் இறங்கி வராத இலக்கணக் கூறுகளே இல்லை.

மெலித்தல் விகாரத்தில் தட்டை என்பது தண்டை என்றாகிவிடும். தொப்பி என்பது தொம்பி என்றாகும். புத்தி புந்தியாகும். கலப்பு அகம் என்ற இரு சொற்சேர்க்கையே கலப்பகமாகி மெலித்தல் விகாரமடைந்து கலம்பகம் ஆயிற்று. ஆக, கலம்பகம் என்று தனிச்சொல் பயிலும்போதும்கூட மெலிந்து விகாரமடையும் என்பதை ஏற்பர். சொற்களில் தோன்றிய வல்லின மெய் மெல்லின மெய்யாகி அச்சொல்லின் வன்மையை நீக்கி மென்மையாக்கித் தருவது மெலித்தல் விகாரத்தின் பணி. அதன்படி மாட்டேன் என்பது மாண்டேன் ஆகிற்றா என்று ஆராய்வது ஒரு பார்வை.

அடுத்து தன்வினை, பிறவினை என்று இருகூறுகள் இருக்கின்றன. மாண்டேன் என்ற சொற்பயன்பாட்டை மாட்டேன் என்பதோடு தொடர்புபடுத்தி நோக்கினால் தன்வினை, பிறவினைப் பொருட்பாட்டுக்கு வாய்ப்பிருக்கிறது.

மீண்டான், மீட்டான் என்கிறோம். தானே மீள்வது மீண்டான் என்னும் தன்வினை. தான் பிறிதொன்றை மீளூம்படி செய்வித்தால் மீட்டான் என்று பிறவினை ஆகும்.

வெள்ளத்திலிருந்து எப்படியோ நீந்தி மீண்டான். வெள்ளத்தில் விழுந்தவர்களைத் துணிந்து நீரில் இறங்கி மீட்டான். இரண்டு ஒரே செயல்தான். தனக்குச் செய்துகொண்டது, பிறர்க்குச் செய்வித்தது என்னும் இருவகையால் வேறுபடுகிறது. அதுதான் தன்வினை, பிறவினை எனப் பயிலும் வினைச்சொற்களின் பொருள் வேறுபாடு.

தன்வினை பிறவினை வேறுபாடுகளோடு பயிலும் எண்ணற்ற சொற்கள் கொங்குத் தமிழில் கலந்திருக்கின்றன. நான் முன்பே சொன்னதுதான், தாட்டி விடுவது என்ற சொல்லை இங்கே பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம்.

“பையனை வீடு வரைக்கும் அனுப்பி விடுங்க.. வேலை முடிஞ்சதும் உடனே தாட்டி விட்டுர்ரேன்..”

“பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ள அமைஞ்சதும் காலா காலத்துல தாட்டி விட்டுர்ர வேண்டியதுதான்…”

“கிணத்துல தண்ணி கம்மியாத்தான் இருக்குது… இன்னும் இரண்டு பாத்திக்குத் தாட்டுமான்னு தெரியில…”

இவை தாட்டுதல் என்ற வினைச்சொற்பயன்பாட்டில் அமைந்த பேச்சு வழக்குகள். தாண்டு என்னும் தன்வினைக்குரிய பிறவினைச்சொல் தாட்டு என்பதாகும்.

பையனின் வேலை முடிந்ததும் இருக்குமிடத்திலிருந்து தாண்டிச் செல்ல வைப்பது. பெண்ணுக்கு மாப்பிள்ளை அமைந்ததும் பிறந்த வீட்டிலிருந்து தாண்டிச் செல்ல வைப்பது. இரண்டாம் பாத்தி வரைக்கும் தண்ணீரைத் தாண்டச் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை.

மாளுதல் அல்லது மாண்டுதல், தாட்டுதல் ஆகிய சொற்கள் அகராதிகளில் இல்லை. மாளுதல் என்ற சொல் இருப்பினும் மக்கள் வழங்கும் நுண்ணிய பொருளில் காணப்படவில்லை. சங்கச் சொல்லடைவு அகராதியில் மட்டும் சாதல், அழிதல், கழிதல், இயலுதல் ஆகிய நான்கு பொருள்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அச்சொற்கள் யாவும் சொற்கள் இல்லையா ? பேச்சுத் தமிழின் வினைச்சொல் வளம் அகராதிப் பெருமக்களின் பார்வையில் படாதது ஏன் ? அச்சொற்கள் தாமாகவே இலக்கணத் தன்மைகளோடு வெளிப்பட்டுத் துல்லியமாகப் பொருளுணர்த்திப் பயன்பட்டு வருவதை யாரேனும் கண்டுணர்த்தினார்களா ? ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. விடையில்லை.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 11:14 pm

"ஒரு உடல் ஓராயிரம் சொற்கள்"



ஒரு வினைச்சொல் எப்படியெல்லாம் பயிலும் என்பதை அறிந்தால் வியப்பின் கொடுமுடிக்கே சென்றுவிடுவோம். எண்சாண் உடம்பில் பொருந்தியுள்ளவை எல்லாம் உறுப்புகள். உறுப்புகள் இல்லையேல் இவ்வுடலால் என்ன பயன் ? எல்லாச் செயற்பாடுகட்கும் உறுப்புகளே உதவும் கருவிகள். அதனால்தான் அவ்வுறுப்புகள் ஒவ்வொன்றைக்கொண்டும் எண்ணற்ற வினைச்சொற்களை ஆக்கி வழங்குகிறோம். எப்படி என்று பார்ப்போம்.

உறுப்புகளில் தலையாயது கண். அந்தக் கண்ணைக்கொண்டு எத்தனை வினைச்சொற்களை ஆக்கிக்கொள்கிறோம் தெரியுமா ? தூங்கு என்பதைக் “கண்வளர்” என்று சொல்கிறோம். தாலாட்டுப் பாட்டில் குழந்தையினைத் தூங்கு என்று சொல்லாமல் “கண்வளர்வாய்” என்பார்கள். குழந்தைக்குத் தூக்கமே கண்வளர்ச்சி. தூக்கத்தினின்று விழிப்பதைக் “கண்மலர்வாய்” என்பார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டால் “கண்கலந்தது” என்றும் இரங்கிய மனநிலையைக் “கண்ணோடுதல்” என்றும் கூறுவர். திருக்குறளில் கண்ணோட்டம் என்றே ஓர் அதிகாரம் இருக்கிறது. அறியாமையில் இருப்பவர்க்கு அறிவுண்டாகும்படி ஒன்றைக் கூறினால் “என் கண்ணைத் திறந்துட்டீங்க…’ என்று மகிழ்வர். இப்படிக் கண்ணைக்கொண்டே எண்ணற்ற வினைச்சொற்கள் இருக்கின்றன. கண்படுதல், கண்காட்டுதல் என்று கண்ணை முன்வைத்துத் தோன்றிய வினைச்சொற்கள் பல.

கண்ணிருந்தால் காதும் இருக்க வேண்டுமே. நம்ப முடியாதவாறு பொய்யுரைத்தலைக் ‘காது குத்துதல்’ என்கிறோம். மறைவாய் ஒன்றைச் சொல்வதைக் ‘காதுகடித்தல்’ என்கிறோம். காதினைக் குறிக்கும் இன்னொரு சொல்லான செவியையும் விட்டுவைக்கவில்லை. ஒன்றை ஏற்று இணங்கிக் கேட்பவன் ‘செவிசாய்க்கிறான்’. வெறுமனே கேட்டு வைப்பது ‘செவிமடுப்பது’.

கை கால்களும் உறுப்புகளாயிற்றே… அவற்றைக்கொண்டும் எண்ணிறந்த வினைச்சொற்களை ஆக்கிக்கொண்டுள்ளோம். இல்லை என்று சொல்வதைக் ‘கைவிரித்தான்’ என்கிறோம். துள்ளுகின்ற ஒருவரை அமைதிப் படுத்துவதைக் ‘கையமர்த்தினான்’ என்கிறோம். துன்பத்தில் உதவினால் ‘கைகொடுத்தான்’ என்கிறோம். சண்டையில் முடிந்தால் அது கைகலப்பாகிவிடுகிறது. ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டால் அது கைப்பிடிப்பதாகும். துன்பத்தில் இருப்பவர்க்கு மேம்பாடடையும் வழி காட்டினால் அது கைதூக்கிவிடுவது. நட்போடு ஒன்றுபட்டால் கைகோப்பது. கையெழுத்திட்டால் அது கைநாட்டுவது. நட்டமானால் கையைக் கடிக்கிறது. அடிக்கத் துணிந்தால் கைநீட்டுவது. பணிவது கைகட்டுவது. எத்தனை எத்தனை சொற்கள் !

கைக்குச் சற்றும் இளைப்பில்லாத உறுப்பு கால். கால்களை வைத்து ஆக்கிய வினைச்சொற்கலை நினைவுபடுத்திப் பாருங்கள். குழந்தை கழித்தால் கழுவிவிடுவதைக் ‘கால்கழுவுதல்’ என்று இடக்கரடக்கலாகச் சொல்கிறோம். மதியாதார் தலைவாயில் மிதிக்கத் தயங்கும் மனநிலையைக் ‘கால்கூசுகிறது’ என்பர். கால்கொள்வது ஒன்றைத் தொடங்குவதாகும். ஒருவரைப் பணிந்து கெஞ்சுவது ‘காலைப் பிடிப்பது’. புதிதாய் ஓரிடத்தில் வெற்றியை நாட்டினால் அது ‘காலூன்றுவது’. காலின் கீழ்ப்பாகமான பாதத்தை அடி என்று சொல்கிறோம். அடியைக்கொண்டும் வினைச்சொற்கள் பல தோன்றியிருக்கின்றன. தாழ்ந்து பணிந்தவன் அடிபணிந்தான். பின்பற்றுபவன் அடியொற்றினான். ஒன்றைப் புதிதாய்த் தொடங்கியவன் அடிவைத்தான்.

முகத்தைக்கொண்டும் பல வினைச்சொற்கள் ஆக்கப்படுகின்றன. சினப்பது முகங்கடுப்பது. மகிழ்வது முகமலர்வது. “அவ என்கூட முகங்கொடுத்தே பேசல’ என்கிறோம். ஒருவரை அன்போடு எதிர்கொள்வது முகங்கொடுத்தலாகும். ஏமாற்றத்தாலும் துன்பத்தாலும் தளர்வது முகஞ்சுண்டுதல். அருவருப்பைக் காட்டுவது முகஞ்சுழிப்பது. கடுமையாக மறுத்தால் அது முகத்தில் அடித்தல். “என்னப்பா இப்படி முகத்துல அடிச்சாப்பல சொல்லிட்டே…”

உடலின் முதற்பேருறுப்பு தலைதான். தலையைக் கொண்டு வழங்கப்படாத வினைச்சொற்களே இல்லை என்னுமளவுக்கு அச்சொற்கள் பரவிக்கிடக்கின்றன. ஏற்றுக்கொள்வது ‘தலையாட்டுவது.’ செத்துப் போவது ‘தலை சாய்ந்தது. தலை தொங்கியது’. பெயருக்கு எட்டிப் பார்ப்பவன் வருபவன் ‘தலைகாட்டுகிறான்’. அடங்காமல் ஆகாதன செய்பவன் ‘தலைவிரித்தாடுகிறான்’. நாணத்திற்கு ஆட்படுவது “தலைகவிழ்வது’. இழிவுக்கு ஆட்படுவது ‘தலைகுனிவது’. ஒரு செயலில் முன்வந்து பங்கேற்பது ‘தலைகொடுப்பது’. ஒன்றில் வலிந்து நுழைவது ‘தலையிடுவது’. மேன்மையுற விளங்குவது ‘தலைசிறந்தது’. முடியை ஒழுங்குபடுத்துவது ‘தலைசீவுவது’. அஞ்சிய இடத்தினின்று விரைந்தகல்வது ‘தலைதெறிக்க ஓடுவது’. தாழ்நிலையிலிருந்து உயர்வது ‘தலைநிமிர்வது’. ஒன்றை முற்றாய்த் துறப்பது ‘தலைமுழுகுவது’. இன்னும் இன்னும் நினைவிலிருந்து கூறிக்கொண்டே செல்லலாம். தலையைக்கொண்டு ஆக்காத வினைச்சொற்களே இல்லை என்னுமளவுக்கு அவை பெருகிக்கிடக்கின்றன.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 11:15 pm

தண்ணீரோடு தொடர்புடைய சொல். ‘மி’ என்ற எழுத்தில் தொடங்க வேண்டும். அது என்ன???


தொலைக்காட்சியில் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள். இரு தரப்பினரோ பல தரப்பினரோ கலந்துகொள்ளும் அந்நிகழ்ச்சியில் ஒருவர் விட்ட இடத்திலிருந்து இன்னொருவர் தமது பாட்டைத் தொடங்க வேண்டும். அவர் விட்ட இடத்திலிருந்து எடுத்துக்கொள்வது ஒரு சொல்லாக இருக்கலாம், அசையாக இருக்கலாம், ஓர் எழுத்தாககூட இருக்கலாம். கண்ணே என்று ஒருவர் தம் பாட்டை முடித்தால், அதிலிருந்து தொடங்குபவர் தம் பாட்டைக் கண்ணே என்றும் தொடங்கலாம், ஏ என்றும் தொடங்கலாம், நே என்றும் தொடங்கலாம். அப்போட்டிக்கு நடுவர் இருப்பின் ‘விட்ட சொல்லிலிருந்து தொடங்குவதா, எழுத்திலிருந்து தொடங்குவதா’ என்று கூறுவார். அவரே எடுத்துக்கொடுப்பார். ஒருமுறை பாடிய பாடலை மறுமுறை பாடக்கூடாது என்ற கட்டுப்பாடும் இருக்கும். பாடலின் பெயரால் இயங்கும் சொல்லறிவு நிகழ்ச்சிகளில் அஃதும் ஒன்று. ஓரெழுத்தில் தொடங்கும் சொல்லை நினைவில் கொணர்ந்து அதற்குரிய பாடலையும் கண்டறிந்து பாடுவது மூளைக்கு நல்ல வேலை.

பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியைப் போலவே “சொல்லுக்குச் சொல்” என்ற நிகழ்ச்சியை வடிவமைத்தால் நம்மில் யாரேனும் தேர்ச்சியடைவோமா ? “தண்ணீரோடு தொடர்புடைய சொல். மி என்ற எழுத்தில் தொடங்க வேண்டும்…” என்று சொற்புதிர் நிகழ்ச்சியை உருவாக்கினால் நம்மில் யாரேனும் தேர்வோமா ? ‘மிதவை’ என்று நமக்குச் சொல்லத் தெரியுமா ? ஐயம்தான். ஓரளவு நல்ல சொற்பயிற்சியுடையோம் என்று நம்மை நாமே கருதிக்கொண்டிருந்தாலும் ஏதேனும் தேர்வு நடத்தினால் நாம் தோற்றுப் போய்விடுவோம் என்பதே உண்மை. அவ்வளவுக்கே நாம் சொல்லறிவில் திறமுடையோராய் இருக்கிறோம்.

எழுத்திலும் பேச்சிலும் படிப்பிலும் சிறப்படைய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு சொல்லை நினைவில் கொண்டு வர முடியுமா என்ற தன்னாய்வில் அடிக்கடி ஈடுபடுங்கள்.

எடுத்துக்காட்டாக, மா என்ற நெடிலில் தொடங்கும் வினைச்சொற்கள் என்னென்ன என்று கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் நினைவில் வருகின்ற சொற்கள் என்னென்ன ? மாட்டிக்கொண்டான், மாறினான், மாற்றினான், மாண்டான் என்று சில சொற்கள் தோன்றும். அச்சொல் தனித்த வினைச்சொல்லாக இருக்க வேண்டும். மாட்டிவிடு, மாட்டிக்கொள் போன்று துணைவினையோடு வருபவற்றையும் “மாட்டுதல்” என்னும் ஒரே வினைச்சொல்லாகத்தான் கருத வேண்டும்.

மா என்ற நெடிலில் தொடங்கும் வினைச்சொற்கள் எத்தனை நினைவுக்கு வந்தன ? மூன்று நான்கு சொற்கள் நினைவுக்கு வந்தன. மூன்று இலட்சம் சொற்கள் வழங்கப்படுவதாகக் கூறப்படும் தமிழ் மொழியில் மா என்ற எழுத்தில் தொடங்கும் வினைச்சொற்கள் எத்தனை இருக்க வேண்டும் ? ஒவ்வோர் எழுத்திலும் ஆயிரம் சொற்களேனும் தொடங்கவேண்டுமில்லையா ? அப்போதுதான் இரண்டு இலட்சத்து நாற்பத்தேழாயிரம் சொற்கள் என்னும் கணக்கு வருகிறது. அவற்றில் பெரும்பாலான எழுத்துகள் சொல்லுக்கு முதலாகத் தோன்ற மாட்டா என்றாலும் ஆயிரம் சொற்களையேனும் நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லை.

ஆயிரம் பக்கங்கள் கொண்ட அகராதியில் க என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களே மிகுதியாக இருக்கின்றன. க என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்கள் எழுபத்து ஐந்து பக்கங்களுக்கு விரிகின்றன. இது ஓர் அகராதியில் இடம்பெற்ற சொற்களின் எண்ணிக்கையில் ஏறத்தாழ ஏழு விழுக்காடு. ககரத்தைப் போலவே மகர எழுத்துகளில் தொடங்கும் சொற்களும் எண்ணிக்கையில் மிகுதி. ஆனால், மகர எழுத்துகளின் நெடில் ஒன்றுக்கு நம்மால் பத்து வினைச்சொற்களைக்கூடச் சொல்ல முடியவில்லை.

நம்மால்தான் சொல்ல முடியவில்லை. இயலாமையை ஏற்றுக்கொள்கிறோம். ஓர் அகராதியினை எடுத்து வைத்துக்கொண்டு மா என்னும் நெடில் வரிசையில் தொடங்கும் வினைச்சொற்களைப் பட்டியலிட்டே பார்த்துவிடுவோம். மா என்ற எழுத்தில் தொடங்கும் வினைச்சொற்கள் நூற்றுக்கணக்கில் இருக்க வேண்டும்தானே ? இருக்கின்றனவா என்று பார்த்து விடுவோம். அப்போதுதான் இந்தக் காட்சி முழுமையாய் விளங்கும்.

மாசறு – குற்றம் நீங்கு

மாசுறு – குற்றம் ஆகு

இவ்வரிசையில் மாசு அடை, மாசு தீர், மாசு களை போன்று பல சொற்களை உருவாக்கலாம் என்றாலும் மாசு என்ற முன்னொட்டோடு தோன்றுவதை ஒரே வரிசையில் வைத்துக்கொள்ளலாம்.


மாட்டுதல் – இணைத்தல் உள்ளிட்ட பல பொருள்கள். அதிலிருந்து மாட்டுவித்தல் என்னும் பிறவினைச்சொல்.

மாண்டல் , மாளுதல் – சாதல்

மாந்துதல் – ஊக்கமழிதல் உள்ளிட்ட பல பொருள்கள்

மாய்தல், மாய்த்தல் – அழிதல், அழித்தல் உள்ளிட்ட பல பொருள்கள்

மார்தட்டுதல் – போட்டி போடுதல்

மார்புயர்த்தல், மார்நிமிர்த்தல் போன்று பல சொற்கள்

மாலைகட்டுதல், மாலைசூட்டுதல், மாலை சாத்துதல், மாலைமாற்றுதல் உள்ளிட்ட பல சொற்கள்

மாழ்குதல் – மயங்குதல்

மாழாத்தல் – ஒளிமங்குதல்

மாற்றுதல் – வேறுபடுத்தல் உள்ளிட்ட பல பொருள்கள்

மாறுதல் – வேறுபடல் உள்ளிட்ட பல பொருள்கள். (மாறுபடு போன்ற முன்னொட்டுகளில் பல சொற்கள்)

மானம்போதல், மானம்மூடுதல், மானம்பார்த்தல் உள்ளிட்ட பல சொற்கள்

மானித்தல் – செருக்கடைதல் உள்ளிட்ட பல பொருள்கள்.

மானுதல் – ஒத்தல், ஒன்றுபோலாதல்.


எண்ணிப் பார்த்தால் பதினைந்து வினைச்சொற்கள்தாம் மா என்ற நெடிலில் தொடங்குகின்றன. அவற்றைக்கூட அறியாமல் நாம் திருதிருவென்று விழித்தோம். இந்தப் பன்னிரண்டு சொற்களை நாம் நன்கு அறிந்திருப்பின் அவற்றிலிருந்து தோன்றிய இருநூறு சொற்களின் பொருள்களையும் நாம் அறிந்தவர்கள் ஆவோம். நம் அணுகுமுறையைத் தரைமட்டத்திற்கு இறக்கிக்கொண்டால் கற்பது எளிதே.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 11:17 pm

தென்னை இலையா? தென்னை ஓலையா?



“நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு இதுவரை அறிந்து வைத்திருக்கின்ற சொற்களே போதும், புதிது புதிதாய்ச் சொற்களை அறிந்துகொள்வதற்கு நாமென்ன புலவரா…? அவற்றால் என்ன பயன் இருக்கப் போகிறது?” என்று பலர்க்கும் தோன்றலாம். நம்முடைய அன்றாடப் பாடுகளுக்கு நாம் பேச்சில் பயன்படுத்துகின்ற சொற்களே போதுமென்று நம்பிக்கொண்டிருக்கிறோம். இன்றைய நகர்ப்புறத்து அடுக்ககம்வாழ் குழந்தைகட்கு அரிசி மண்ணில் விளைகிறது என்னுமளவுக்குக்கூடத் தெரிந்திருக்கவில்லை என்பது அதிர்விக்கும் உண்மை. அரிசியும் பருப்பும் பொட்டணப் பொருள்கள் என்றே நினைக்கின்றன. இல்லாவிட்டால் அரிசி எந்தச் செடியில் விளைகிறது என்று கேட்கும் நிலையில் இருக்கின்றன.

அன்றாடச்சொற்கள் போதும் என்னுமளவில் வாழ்ந்த பெற்றோர் தத்தம் குழந்தைகட்குச் சொல்லறிவைப் புகட்டவேயில்லை என்பதுதான் காரணம். இந்தப் போக்கின் வீழ்ச்சியும் விளைவும் நம் குழந்தைகளிடம் வெளிப்படுகின்றன. உரிய சொற்களைத் தெரிந்துகொள்ளாமல் அவர்கள் வளர்கின்றார்கள். குழந்தைகளின் இயல்பு பெரியவர்களை அப்படியே அடியொற்றுவதுதான். பெரியவர்கள் கூறும் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக்கொள்வதுதான். அவர்களுக்குக் கிடைக்காத சொற்களை, அவர்களிடம் சொல்லப்படாத சொற்களை அவர்கள் எப்படிப் பெறுவார்கள் ?

நகரத்தில் தென்னை மரங்களை வளர்ப்போர் வீடுகளில் வளரும் குழந்தைகள் “தென்னை இலை” என்று சொல்கின்றன. இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது ? தென்னைக்கு இலை இல்லை. ஓலைதான் உண்டு. தென்னை ஓலை என்று சொல்ல வேண்டும். தென்னைக்கும் பனைக்கும் இருப்பவை ஓலைகள். ஓலைக்கும் இலைக்கும் இடையே இருக்கும் வேறுபாடு ஓரெழுத்து மட்டும்தான் என்றா நினைக்கிறீர்கள் ? ஓராயிரம் வேறுபாடுகள் இருக்கின்றன. தென்னை ஓலையில் கிளி அமரும். இலையில் அமருமா ? இலைக்கும் ஓலைக்கும் நடுவில் மாறுபடும் இயல்புகள் இவை. அதனால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர். அதற்குரிய பெயரைக்கொண்டு அழைக்க வேண்டும். மாற்றி அழைத்தால் அறியாமை வெளிப்படும்.

மாமரத்திலும் வாழை மரத்திலும் ஆல் அரசிலும் இருப்பவைதாம் இலைகள். தென்னையிலும் பனையிலும் இருப்பவை ஓலைகள். நெல், கேழ்வரகு போன்ற புல்வகைகளில் தண்டினை ஒட்டி வளர்பவை தாள்கள். கரும்புக்கும் சோளத்திற்கும் அவை தோகைகள். கற்றாழைக்கும் தாழைக்கும் மடல்கள். ஆமணக்கு, ஒடுவன் போன்ற செடிகளில் செழித்து வளர்பவை தழைகள். மாவிலை, வேப்பிலையை மாந்தழை, வேப்பந்தழை என்று பேச்சுத் தமிழில் மாற்றிக் கூறுவோரும் உள்ளனர். இலைக்கும் தழைக்கும் பெரிதாய் வேறுபாடில்லை என்று கொள்ளலாமே தவிர, இலைக்கும் ஓலைக்கும் தாளுக்கும் தோகைக்கும் இடையே தோற்றத்திலிருந்து இயல்புகள் வரை பலப்பல வேறுபாடுகள் இருக்கின்றன.

ஒரு தென்னை மரத்தின் முன்னால் நின்றபடி அதன் உறுப்புகளைக் கூறச்சொன்னால் கைக்கொள்ளாத அளவுக்குச் சொற்கள் வந்து விழ வேண்டும். தென்னைக்கு ஓலை. ஓலையின் உறுப்பாவது ஈர்க்கு. அவ்வீர்க்குகளைச் செதுக்கிச் சேர்த்தால் விளக்குமாறு கிடைக்கிறது. தென்னை பனை கமுகு ஆகியவற்றின் பூமூடிய மடல் பாளை. தென்னையின் பிஞ்சு குரும்பை, குரும்பை முற்றினால் இளநீர், இளநீர் முற்றினால் தேங்காய். காய்த் தொகுதி குலை, காய்த்தொகுதியை மூடிய பகுதி மட்டை. சிலர் தென்னை ஓலையின் முழுப்பகுதியையும் மட்டை என்பர். தென்னைக் குலையிடைப் பகுப்புறுப்பு பன்னாடை. தென்னம்பாளையைச் செதுக்கி வடிக்கும் பொருள் கள்ளு. எத்தனை சொற்கள்… எத்தனை சொற்கள்…! அடுக்ககத்தில் பிறந்து வளரும் நகரக் குழந்தைகளுக்கு இச்சொற்களை எப்போது கூறி உணர்த்தினீர்கள் ?

தென்னையின் காய்த்தொகுதி குலை என்று பார்த்தோம். தெங்கு, பழை, வாழை, கமுகு, காந்தள், ஈந்து ஆகியவற்றின் காய்த்தொகுதி குலை. இங்கே தெங்கு எனப்பட்டது தென்னைதான். ஈந்து என்பது ஈச்சை மரத்தைக் குறிக்கும். நெல்லும் தொகுப்பாக விளைகிறது அதை என்னென்று சொல்வது ? கதிர் என்று சொல்ல வேண்டும். நெல்லும் சோளமும் கதிர்களாய் விளைவன. புளியங்காய்களும் தொகையாக விளைகின்றன, அவற்றை என்ன என்று சொல்ல வேண்டும் ? கொத்து. மாவும் புளியும் கொத்தாய் விளைவன. இவற்றை ஒன்றுக்கொன்று மாற்றிக்கூறக் கூடாது.

ஒவ்வொரு விளைபொருளின் உள்ளே இருப்பதற்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது. நெல்லுக்குள் இருப்பது அரிசி. அவரை துவரைக்குள் இருப்பது பருப்பு. வாழைக்குள் இருப்பது தசை. முருங்கைக்குள் இருப்பது சோறு.

இப்பொழுது விளங்குகிறதா ? அன்றாடப்பாட்டில் ஆயிரம் சொற்கள் வகை வகையாய் இருக்கின்றன. நாம் எல்லாவற்றையும் பொத்தாம் பொதுவாகக் கூறிக்கொண்டிருக்கிறோம். நமக்குத் தெரிந்தவற்றில் பகுதியளவே நம் பிள்ளைகளும் தெரிந்து வைத்திருக்கின்றன. நிலைமை இப்படியே சென்றால் இத்தகைய எளிமையான பழகுதமிழ்ச் சொற்கள்கூட மறக்கப்பட்டுவிடும். அறியாத சொல் அருஞ்சொல்லாகிவிடும். அரிதாகும் ஒவ்வொன்றும் நம்மிடமிருந்து மெல்ல மெல்ல அகன்றுவிடும். அதற்கு இடம் தரலாமா ? நம் சொற்களை இழக்கலாமா ? நம் பிள்ளைகள் சொல்லாட்சியின்றித் தவிப்பது தகுமா ? சொல்லறிவு பெறல் புலவர்க்கே உரித்தான தொழிலா ? எண்ணிப் பாருங்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 11:18 pm

“புலிப்பறழ்” என்ற சொல்லுக்கு பொருள் தெரியுமா?


என்னுடைய ஈருருளிக்குப் பொருத்தமான பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போது வண்டியின் முகப்பிலும் பின்புறத்து எண்பலகையிலும் ஏதேனும் விருப்பமான சொற்றொடர்களை எழுதிக்கொள்வது வழக்கமாக இருந்தது. இன்றைக்கும் அவ்வழக்கம் தணிந்துவிடவில்லை. வாங்கிய புதிதில் என்னுடைய பல்சர் ஈருருளி நன்கு பாய்ந்து சென்றது. அந்தப் பாய்ச்சலுக்குப் பொருத்தமான பெயரைத் தலைவிளக்கின் முகப்பில் எழுதவேண்டும் என்று நினைத்தேன்.

வண்டிக்கு எண் ஒட்டச் சென்றபோது கடைத்தம்பியே முன்வந்து முன்னும் பின்னும் எழுதி ஒட்டவேண்டிய சொற்றொடர்களைக் கூறுமாறு கேட்டான். “புலிப்பறழ்” என்று தலைவிளக்கில் ஒட்டுமாறு கூறினேன். தம்பி என்னை மேலும் கீழுமாகப் பார்த்தான்.

“புலிப்பறழா… என்ன சார் அது ?” என்று விழித்தான்.

“புலிப்பறழ்னா புலிக்குட்டிப்பா” என்று சொன்னேன்.

“புலிக்குட்டின்னே எழுதலாம்ல… என்ன அது பறழ்னு ?” என்றான்.

“தமிழ் மரபின்படி ஒவ்வொரு விலங்கினத்தின் இளமைக்கும் தனித்தனிப் பெயர்கள் இருக்குப்பா… அதன்படி புலியின் குட்டியைப் பறழ் என்று சொல்லணும். யானை, எருமையைக் கன்றுன்னு சொல்லணும். சிங்கத்தைக் குருளைன்னு சொல்லணும். புலியைப் பறழ்னு சொல்லணும்….” என்றேன்.

தம்பி மகிழ்ச்சியாகிவிட்டான். மிகுந்த விருப்போடு அவ்வெழுத்துகளைச் செதுக்கி ஒட்டித்தந்தான். அன்று தொட்டு அப்பெயரைக் காண்போர் ஒவ்வொருவரிடமும் அவ்விளக்கத்தைத் தொடர்ந்து கூறி வருகிறேன். அப்பெயர் விளக்கத்தைக் கேட்டவர்கள் மகிழ்ந்தார்கள். நானும் அப்பெயரின்கண் மயக்குற்றவனாகி அண்மையில் வெளிவந்த என் கவிதைத் தொகுப்புக்குப் “புலிப்பறழ்” என்றே தலைப்பிட்டேன். நிற்க.

தமிழில் ஒவ்வோர் உயிரின் இளமைக்கும் தனித்தனியான பெயர்கள் இருக்கின்றன. விலங்கினங்களின் தவழும் நிலையிலான இளமையைத் தனித்துக் குறிக்கும் அப்பெயர்கள் குழவிப்பெயர்கள் எனப்படும். மரஞ்செடிகொடிகளுக்கும் அத்தகைய இளமையைக் குறிக்கும் தனிப்பெயர்கள் இருக்கின்றன. தென்னை மரம் சிறிதாக இருக்கையில் அதனை மரம் என்று சொல்ல முடியுமா ? கன்று என்று சொல்ல வேண்டும். தென்னங்கன்று என்று சொல்கிறோம். தென்னங்கன்றினைத்தான் வாங்கி வந்து நட முடியும். தென்னை மரத்தை வாங்கி வந்து நடமுடியுமா ? அதனால்தான் தென்னங்கன்று, தென்னம்பிள்ளை என்று வழங்கிறோம். தென்னை, வாழையின் இளமைப்பெயர் கன்று என்றால் நெல்லம் பயிரின் இளமைப்பெயர் நாற்று.

தொல்காப்பியத்தில் இளமைப் பெயர்கள் குறித்துத் தெளிவான வரையறை இருக்கிறது.

மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பிற்

பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்

கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென்

றொன்பதும் குழவியோ டிளமைப் பெயரே.

என்கிறது அந்நூற்பா. பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி என்கின்ற ஒன்பது பெயர்களும் இளமைப் பெயர்கள் என்று அந்நூற்பா வரையறுக்கிறது. ஒவ்வொன்றையும் பார்ப்போம்.

பார்ப்பு என்பது பொதுவாக மரக்கிளைகளில் தொற்றியும் உறங்கியும் வாழும் உயிரினங்களின் இளமையைக் குறிக்கும். “பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை” என்கிறது நூற்பா. கிளையில் தவழ்வனவற்றின் கிளையமர்ந்து பறப்பனவற்றின் இளமைக்குப் பார்ப்பு என்று சொல்லலாமாம். குரங்குப் பார்ப்பு. கிளிப் பிள்ளை.

நாய், பன்றி, புலி, முயல், நரி ஆகியவை பறழ் எனப்படும். இவற்றில் நரி தவிர்த்து மீதமுள்ள நான்கினையும் குருளை என்றும் கூறலாம். கீரி, காட்டுப்பூனை, எலி, அணில் ஆகிய நான்கும் குட்டிக்குரியவையாய் இருந்து பிறகு பறழென்றும் வழங்கப்பட்டன. மேற்சொன்னவற்றில் நாய்தவிர்த்து அனைத்தையும் பிள்ளை என்றும் சொல்லலாம் என்கிறது தொல்காப்பியம். அதனால்தான் கீரிப்பிள்ளை, அணிற்பிள்ளை என்கிறோம்.

ஆடு, குதிரை, கலைமான், புள்ளிமான் ஆகியவற்றின் இளமைக்கு மறி என்று பெயர். அதனால்தான் ஆடுகளின் ஓரினத்திற்குச் செம்மறி என்றே பெயர் வந்தது.

குரங்கின் இளமையைப் பற்பல பெயர்களாலும் வழங்கலாம் என்கிறார் தொல்காப்பியர். மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு என்றும் அதற்கு மேலும் ஏதேனும் பெயராலும் வழங்கலாம் என்கிறார்.

யானை, குதிரை, காட்டு மான், கடமா, எருமை, மரை, கவரிமான், கரடி, ஒட்டகம் ஆகியவற்றின் இளமைக்குக் கன்று என்று பெயர்.

குழவி, மகவு ஆகிய இரண்டும் மட்டுமே மக்களுக்குரிய குழந்தைப் பெயர்கள்.. பிற்காலத்தில் பிள்ளை என்ற சொல்லும் மக்களுக்குரியதாயிற்று.

இங்கே சொல்லப்படாதவற்றில் ஒன்றுக்குரியவை இன்னொன்றுக்கும் வழங்கப்படும். சிங்கத்தைப் புலியைப்போல் கருதலாம். கழுதையை மறி என்றும் சிங்கத்தைக் குருளை என்றும் வழங்க வேண்டும். உடும்பு, ஓந்தி, பல்லி ஆகியவற்றை அணிற்குரிய சொற்களால் வழங்கலாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 01, 2018 5:55 am

“இதற்குப் பெண்பால் என்ன ?’

நான் மிகுதியாக எதிர்கொண்ட ஐயவினாக்களில் ஒன்று “இதற்குப் பெண்பால் என்ன ?’ என்பதுதான். பால் பகுப்பில் ஆண்பாலும் பெண்பாலும் தலையாயவை என்பதனால் எவ்வோர் ஆண்பாற்கும் உரிய பெண்பாற்பெயர் இருந்தே தீரும் என்பது நம் நம்பிக்கை. ஆணும் பெண்ணும் கலந்த நிலையில் இருக்கும் பால் ஆண்பாலா பெண்பாலா என்பதும் ஓர் ஐயம். அது மட்டுமின்றி ஒவ்வோர் ஆண்பாற்கும் பெண்பால் தேடினால் பலவற்றுக்கு இல்லை. அதனை முன்வைத்து இது ஆணாதிக்கக் குமுகாயம், மொழியே ஆணாதிக்க மொழிதான் என்று இளநிலைக் குதியாளர்கள் குதியாளம் போடுவதைப் பார்க்கின்றோம்.

இன்றைக்கு நமக்குக் கிடைத்த வாய்ப்புகள் வல்லமைகள் முன்னேற்றங்கள் முற்போக்கினங்கள் ஆகியவற்றைக்கொண்டு ஈராயிரம் ஆண்டுகட்கு முந்திய குமுகாயத்தினை மதிப்பீடு செய்வது அறிவுடைமை ஆகாது. அக்காலத்துத் தேவையும் கருத்தும் பாதுகாப்பும் போக்குவரத்தும் இருப்பும் இன்மையும் இன்றுள்ளவற்றோடு எவ்வகையானும் பொருத்தப்பாடுகள் உடையவையல்ல. அன்றைய மொழிப்பாடுகளில் பாற்செயல்களே வெவ்வேறாக இருந்திருப்பின் எங்ஙனம் இருபாற்சொற்கள் தோன்றி வழங்கலாகும் ? மேலும் இன்றைய கருத்தியல்கள் இறுதியானவையும் முடிவானவையுமாம் என்று உறுதி கூறலாகுமா ? பெருவழிநடையில் நாம் நிற்குமிடம் சிறுபுள்ளி.

ஒரு சொல் எப்படித் தோன்றும் ? முதலில் தொடக்க நிலையில் ஏதேனும் ஒன்றைக் குறிக்கத் தோன்றும். அது ஆணை நோக்கித் தோன்றினால் அங்கே முதற்சொல் ஆண்பாலாக இருக்கும். பெண்ணை முன்வைத்துத் தோன்றினால் பெண்பாலாக இருக்கும். அதன் பிறகு அதன் எதிர்பாற்குரிய சொல் தோன்றலாம். தோன்றாமலே விளங்கினாலும் பிழை காண்பதற்கில்லை. அன்றிருந்த நிலையில் மன்னன் என்பவன்தான் குடிகாக்க முனைமுகத்து நிற்க வேண்டும். மன்னனுக்குப் பெண்பால் என்ன என்றால் விடையில்லை.

புலவன் என்ற சொல் ஆண்பாற்சொல். அதற்குப் பெண்பால் என்ன ? புலவி என்று சொல்ல இயலாது. காதலவரிடையே ஊடல் முதிர்கின்ற அந்தப் பொன்னான நேரத்திற்குப் ‘புலவி’ என்று பெயர். ‘புலவி நுணுக்கம்’ என்றே திருக்குறளில் ஓர் அதிகாரம் வகுக்கப்பட்டிருக்கிறது. அதனால் புலவன் என்பதற்குப் பெண்பால் ‘புலவி’ என்றால் பொருத்தப்பாடு தோன்றவில்லை. ஆண்பாலோடு நிற்கும் பெயர்களில் பெண்பால் தோற்றங்கள் ஏற்பட்டபோது நம் மூத்தோர் முன்னொட்டாகவே “பெண்பால்” என்று சேர்த்துக்கொண்டனர். பெண்பாற்புலவர் என்று கூறியமைந்தனர். ஔவையார் “பெண்பாற்புலவர்”. பெரும்புலவர்கள் கோலோச்சிய அக்காலத்திலேயே இப்படிச் சொல்வது வழக்காக இருந்தது. நண்பன் என்ற சொல்லுக்கு நண்பி என்பது தவறு. ‘பெண்பால் நண்பர்’ என்றே சொல்ல வேண்டும்.

ஆண்பாற்கும் பெண்பாற்கும் தனித்தனி விகுதிகள் இருக்கின்றன. விகுதி என்பது ஒரு சொல்லின் பின்னொட்டு. இறுதிப்பகுதி. ஒருவன் என்பதில் ஒரு என்பது ஒருமையை, ஒற்றைத்தன்மையைக் குறிக்கிறது. அன் என்பது பின்னொட்டாகச் சேர்ந்த விகுதி. இங்கே அன் என்பது ஆண்பால் விகுதி. ஒருவன் என்னும்போது ஓர் ஆணைக் குறிக்கிறது. ஒருவன் என்பதற்குப் பெண்பால் ஒருத்தி. ஒருவள் என்று சிலர் பிழையாக எழுதுகின்றனர். அள் என்பதும் பெண்பால் விகுதிதான். ஆனால், எல்லாவிடங்களிலும் அள் விகுதி வருவதில்லை. குறவன் குறத்தி, உழவன் உழத்தி, ஒருவன் ஒருத்தி… இப்படித்தான் வரவேண்டும்.

அன், ஆன் ஆண்பால் விகுதிகள் என்றால் அள், ஆள் பெண்பால் விகுதிகள்.

மணமகன் மணமகள், வெறுங்கையன் வெறுங்கையள், பிறன் பிறள், அவன் அவள் என்னுமிடங்களில் அன், அள் விகுதிகள் இருபாற்கும் முறையே வருகின்றன. அடியான் அடியாள், ஆண்டான் ஆண்டாள் ஆகிய இடங்களில் ஆன் ஆள் விகுதிகள் இருபாற்கும் வருகின்றன.

தோழன் தோழி, அரசன் அரசி, கூனன் கூனி, குமரன் குமரி, கிழவன் கிழவி, காதலன் காதலி ஆகிய இடங்களில் இ என்ற விகுதி பெண்பாற்கு வந்தது. காதலி, காதலள், காதலாள் என்று பலவாறும் சொல்லத் தகுந்த இடங்களும் இருக்கின்றன. ஐகார விகுதி பெறும் பெண்பாற்பெயர்களும் இருக்கின்றன. ஆசிரியன் ஆசிரியை, ஐயன் ஐயை.

ஆண்பால் பெண்பால் சொற்கள் இவ்வாறு இணையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. தொடர்பே இல்லாமலும் இருக்கலாம். ஆண் என்பதற்குப் பெண் என்பதே தொடர்பில்லாத சொல்தானே ? அடூஉ மகடூஉ என்பன முறையே ஆண் பெண்ணைக் குறிக்கும் தூய தமிழ் வழக்காகும். தந்தை தாய், பாணன் பாடினி. கன்னிக்குக் காளை என்பது ஆண்பால்.

ஆன்றோன், சான்றோன், அண்ணல், செம்மல், அமைச்சன் போன்ற சொற்களுக்குப் பெண்பால் இல்லை. பேதை பெதும்பை அரிவை தெரிவை போன்ற சொற்களுக்கு ஆண்பால் இல்லை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 01, 2018 5:57 am

நில் என்பதற்கு எது எதிர்ச்சொல் நட என்பதா, அமர் என்பதா?

ஒரு சொல்லினை நினைத்தால் அது சார்ந்த அனைத்துச் சொற்களையும் நினைவுபடுத்திப் பார்ப்பது சொற்களைப் பற்றிய திளைப்பில் இன்றியமையாத பகுதி. இறைத்தொண்டர் எனில் அவர் தமக்கு ஓய்ந்த நேரத்திலும் வாய்த்த நேரத்திலும் இறைப்பண் பாடுவதிலோ முணுமுணுப்பதிலோ ஈடுபட்டிருப்பார். சொற்களைத் தொடர்ந்து எண்ணிக்கொண்டிருப்பதும் அத்தகைய செயலே. நமக்கு ஓய்ந்த நேரத்தில் அச்சொல்லினை நடுவாக வைத்து எல்லாத் திக்குகளிலும் பார்வையைச் செலுத்த வேண்டும். ஒரு சொல்லுக்கு அதன் எதிர்ச்சொல்லைத் தேடுவதும் அவற்றில் ஒன்று.

மேல் என்று ஒன்றிருப்பின் கீழ் என்றும் ஒன்றிருக்கும். தொடக்கம் என்று ஒன்றிருந்தால் முடிவு என்றும் ஒன்றிருக்கும். வடக்கு என்று ஒன்றிருந்தால் தெற்கும் இருக்கும். இவ்வாறு பொருளுணர்த்தும் எல்லாச் சொற்களும் அவற்றுக்குரிய எதிர்ச்சொற்களைப் பெற்றிருக்கும். நமக்கு எல்லாச் சொற்களுக்கும் எதிர்ச்சொற்கள் தெரியுமா ? எல்லாச் சொற்களுக்கும் எதிர்ச்சொற்களும் உண்டா ? சில சொற்கள் எதிர்ச்சொற்களைப்போல் தோன்றினாலும் அவை எதிர்ச்சொற்கள்தாமா ? இப்படிப் பல ஆய்வுகளில் மூழ்கலாம்.

எதிர்ச்சொல்லா, எதிர்சொல்லா ? இரண்டுமே சரிதான். எதிர்க்கட்சியா எதிர்கட்சியா ? இரண்டுமே சரிதான். எப்படி ? எதிர் என்பது பெயர்ச்சொல்லானால் எதிர்ச்சொல், எதிர்க்கட்சி என்று வல்லொற்று மிகும். ‘எதிரை உணர்த்தும் சொல், எதிரை நிறுவும் கட்சி’ என்று இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை என்று கொண்டால் அங்கே வலிமிகும். எதிர்த்த கட்சி, எதிர்க்கின்ற கட்சி, எதிர்க்கும் கட்சி என்று வினைத்தொகையாகக் கொண்டால் அங்கே வலிமிகுவதில்லை.

செய்யுளில் முரண்தொடை என்று ஒன்றுண்டு. ஒரு சொல்லுக்கு எதிர்ச்சொல் அமைத்துப் பாடுவது முரணழகைத் தோற்றுவிக்கும். ‘அடிக்கிற கைதான் அணைக்கும், அணைக்கிற கைதான் அடிக்கும், இனிக்கிற வாழ்வே கசக்கும், கசக்கிற வாழ்வே இனிக்கும்’ என்பதுதான் முரணழகு.

இன்று விளங்கும் புதுக்கவிதைகளுக்கு முன்வடிவான உரைக்கவிதைகளைப் பாரதியாரும் எழுதியிருக்கிறார். ஆனால், அவர் எழுதியவை பெரும்போக்கினை உருவாக்கவில்லை. ஐம்பதுகளின் இறுதியில் சி.சு. செல்லப்பாவினால் வெளியிடப்பட்ட எழுத்துச் சிற்றிதழும் அதனைப் பொதுப்போக்காக்கவில்லை. ஆனால், எழுபதுகளில் தோன்றிய வானம்பாடி இயக்கம் புதுக்கவிதைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது. கவியரங்குகளுக்குப் பெருந்திரளான மக்கள் வந்தனர்.

வானம்பாடி இயக்கம் புதுக்கவிதையை மக்கள் பரப்பில் கொண்டுபோய்ச் சேர்த்ததற்கு முதன்மைக் காரணம் அவர்கள் தம் கவிதைகளில் எளிய முரண் சொற்களைக் கையாண்டதுதான். இரவிலே வாங்கினோம் இன்னும் விடியவில்லை என்பார்கள். இரவும் விடிவும் முரண். அட்சயப் பாத்திரம், பிச்சைப் பாத்திரம் என்றார்கள். பட்டு வேட்டியைப் பற்றிய கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது என்றார்கள். பட்டு வேட்டியும் கோவணமும் முரண். வரம் சாபம், வசந்தம் இலையுதிர்காலம், கனவு நனவு, ஆண்டான் அடிமை என்று எதிர்ச்சொற்களுக்கிடையே முரண்கோட்டை கட்டினார்கள் வானம்பாடிகள். அந்த முரணீர்ப்பினால் பொதுப்போக்கு ஆகி முன்னிலைக்கு வந்தது புதுக்கவிதை. எதிர்ச்சொற்களின் பொருளுணர்த்தும் ஆற்றல் அத்தகையது என்பதை உணர்த்துவதற்காக இதனைச் சொன்னேன்.

பொய் என்பதற்குப் பொய்யின்மை என்பதும் எதிர்ச்சொல்தான். ஆனால், அது தனித்துயர்ந்து விளங்கும் சொல்லாகாது. பொய் என்பதற்கு மெய் என்பதுதான் நேர்நிகர்த்த எதிர்ச்சொல். ஆங்கிலத்தில் இப்படி ஏதேனும் ஒரு முன்னொட்டினைச் சேர்த்துவிட்டு எதிர்ச்சொல் என்பார்கள். Dependant என்பதோடு முன்னொட்டாக In சேர்த்துவிட்டால் Independent என்ற எதிர்ச்சொல் கிடைக்கும். இது குறுக்குவழி என்று நமக்கே தெரிகிறது. தமிழிலும் ஒன்றை எதிர்ச்சொல்லாக்க அல், இல், இன்மை என்று பலவற்றையும் சேர்க்கலாம். சொற்பொருளுக்காக அப்படிச் சேர்ப்போம். அல்வழி, பொறியில், அருளிலி, பொருளிலி என்று கூறுவோம். ஆனால், அவை சிற்றளவே.

சில எதிர்ச்சொற்கள் களிநயமானவை. இது எதிர்ச்சொல்தானா என்று நம்மையே குழப்பும். “ஆணுக்குப் பெண் எதிர்ச்சொல் போலவே இல்லையே... இணைச்சொல் என்றுதானே கூறவேண்டும்…? ஒரு தண்டவாளத்துக்கு இன்னொரு தண்டவாளம் எதிராகுமா…?” என்று எண்ணுவது இனிய மொழி விளையாட்டாகும். உயர்திணைப் பால் நிலையில் மாற்று நிலை என்ற வழியில் எதிர்ச்சொல் ஆகும். வா என்பதற்குப் போ எதிர்ச்சொல்லாகலாம். நில் என்பதற்கு எதிர்ச்சொல் நட என்பதா, அமர் என்பதா என்று திகைக்கலாம். இரண்டும் உரிய எதிர்ப்பொருள்களைப் தருபவைதாம்.

ஒரு சொல்லுக்கு உடனே எதிர்ச்சொல் சொல்லத் தெரிந்துவிட்டால் நாம் மொழியாளுமையில் சிறந்து விளங்குகிறோம் என்று பொருள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக