புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 13:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
70 Posts - 45%
ayyasamy ram
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
69 Posts - 44%
mohamed nizamudeen
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
1 Post - 1%
Kavithas
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
1 Post - 1%
சிவா
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
1 Post - 1%
bala_t
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
1 Post - 1%
prajai
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
300 Posts - 42%
heezulia
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
6 Posts - 1%
prajai
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
4 Posts - 1%
manikavi
குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி


   
   
kumarv
kumarv
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 17/04/2017

Postkumarv Tue 16 May 2017 - 15:20

வேல ராமமூர்த்தி தமிழ் ஹிந்து நாளிதழில் தொடராக எழுதிய " குருதி ஆட்டம் " நாவல் 27 வார தொடரில்( 16 - 20 )தொடர்

16
எப்போ வர்றான்?

கடல் நீர் சுழித்து இழுத்த இழுப்பில், கப்பலின் அடிவாரத்தில் மோதிச் சிதறுண்டு சல்லி சல்லியானான் டி.எஸ்.பி. ஸ்காட்.
அதிகாரத்தின் உச்சத்தில் கோலோச்சிய நாட்களில், தான்போய் கால் வைத்த அடிமை தேசத்துப் பெண்களை எல்லாம் கரு சுமக்க வைத்தவன். சதை சதையாகப் பிய்த்தெறியப்பட்டான்.
பலாத்காரம் செய்து கரும்புள்ளிக் குத்தியவனின் சதையை ருசிக்க, ஆப்பிரிக்கக் கண்டத்து கென்ய நாட்டுத் திமிங்கலங்கள், கீழைக் கடலின் சுறாக்கள், இலங்கை மற்றும் பர்மிய திருக்கைகள் என சர்வதேசத்து மீன்களும் வங்காள விரிகுடாவுக்குப் படைப் படையாய் அணிவகுத்தன. வந்த மீன்களும் ஸ்காட்டின் சதையை உண்ண வந்த மீன்கள் அல்ல; கடிக்க வந்த மீன்கள். வெள்ளைச் சதையை விழுங்கவில்லை. கடித்துக் குதறித் துப்பின.
கூந்தலை அள்ளி முடிந்து கோடாலிக் கொண்டை இட்ட அத்தை அரியநாச்சியை, எட்ட நின்று பார்த்துக் கொண்டிருந்தான் துரைசிங்கம். ரத்தம் குடித்த அதிகாரியைக் கடலில் தூக்கி வீசிக் கொன்றுவிட்டு, ஏதும் அறியாதவள் போல் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றாள். விரி கடலையும் இருள் வானையும் அடைத்து விஸ்வரூபம் எடுத்து நின்றாள்.
அரியநாச்சியின் திசை நோக்கி மண்டியிட்டான்.
ஸ்காட்டின் ஜலசமாதியைக் கடந்து கப்பல் வெகு தூரம் வந்திருந்தது. ‘கொலைத் தடயம் எதுவும் இல்லாமல் ஒழிந்தான் ஸ்காட்’ என்பதை உறுதி செய்து கொண்டவள், வாய் நிறைய எச்சில் குவித்து கடலுக்குள் பிணம் போன போக்கில் காரித் துப்பினாள். அலுங்காமல் நடந்து வந்தாள். எதிரே மண்டியிட்டிருந்த துரைசிங்கத்தின் தலையில் கை வைத்து முடி கோதினாள்.
துரைசிங்கம், அத்தையின் பாதம் தொட்டு கண்களில் ஒற்றினான்.
“எந்திரி…” என்றாள்.
எழுந்தவனை அணைத்துக் கொண்டு இரும்பு ஏணிப் படிகளை நோக்கி நடந்தாள்.
நடந்துகொண்டே துரைசிங்கத்தை ஏறிட்டாள்.
“இரை கை மாறிருச்சே’ன்னு வருத்தமா? உன்னோட இரை, கரையிலே காத்திருக்கு. ரெண்டு நாள் பொறு…” என்றவாறு ஏணிப் படிகளில் இறங்கினாள்.
அரண்மனைக்குள் உற்சாகமாக நுழைந்தார் கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம். செண்பகத்தோப்புக்குப் போய் திரும்பிய பெருங்குடி ஆட்கள் எல்லோரும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.
காட்டுக்குள் போய்விட்டு உயிருடன் திரும்புவோமா... என்ற அச்சத்தில் இருளடித்துப் போயிருந்த ‘லோட்டா’, அரண்மனை எல்லையை மிதிக்கவும் தலை சிளுப்பி நடந்தான். முனியாண்டியின் கண்ணெல்லாம் ‘லோட்டா’வின் சிளுப்பலின் மேலேயே இருந்தது. முந்தி எட்டு வைக்கிற சாக்கில் ‘லோட்டா’வின் காலை இடறிவிட்டார். தடுமாறி நிமிர்ந்தவன், ‘‘சித்தப்பூ… அதெல்லாம் காட்டுக்குள்ள வெச்சிக்கிறணும். அரண்மனைக்கு நான் செல்லப் புள்ள. மகனை மதிச்சு நடக்கணும்… மிதிச்சு நடக்கக் கூடாது’’ என்றவன், பின் முடியைக் கோதிவிட்டான்.
“பெரிய்ய்ய புலவரு… அடுக்கு மொழியிலே பேசுறாரு! ஒன்னக் காட்டுப் பாம்பு கொத்த விட்டிருக்கணும்டா…” என்று சொல்லி ‘லோட்டா’வின் இடுப்பில் ஒரு கிள்ளு கிள்ளினார் முனியாண்டி.
தலைவாசல் திறந்து எல்லோரும் உள்ளே நுழைந்தார்கள். அரண்மனையின் பிரம்மாண்டமான மைய மண்டபத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான் உடையப்பன்.
வந்திருப்பவர்களில் கணக்குப் பிள்ளை மற்றும் ‘லோட்டா’வைத் தவிர்த்து, யாரும் இதுநாள் வரை இந்த மைய மண்டபத்தைப் பார்த்தவர்கள் இல்லை.
இடுப்போடு குனிந்து எல்லோரும் உடையப்பனை வணங்கினார்கள்.
‘‘போனது என்னாச்சு..?’’ கணக்குப்
பிள்ளையை மட்டும் பார்த்துக் கேட்டான் உடையப்பன்.
‘‘தவசியாண்டி சம்மதிச்சிட்டான் அரண்மனை.’’
முழியை உருட்டினான். ‘‘நீங்க போய் கேட்டவுடனேயே சம்மதிச்சிட்டானா..?’’
எல்லோரும் மவுனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘‘டேய் ‘லோட்டா’ நீ உள்ளதைச் சொல்லு… அவன் என்ன சொன்னான்?’’
தன் தலையில் பாரம் விழும் என எதிர்பார்க்காத ‘லோட்டா’, ‘‘அது… வந்து அரண்மனை…’’ என இழுத்தான்.
இல்லாதது பொல்லாததை ‘லோட்டா’ சொல்லிவிடுவான் எனப் பதறிய நல்லாண்டி, ‘‘அது… வேற ஒண்ணுமில்ல அரண்மனை. குலசாமி கோயிலைக் கும்பிடாததுனால… ஊருஅனுபவிக்கிற இடைஞ்சல்களை எடுத்துச் சொன்னோம். தவசியாண்டி உடனே ஒத்துக்கிட்டான்…’’ என்றார்.
உடையப்பன் எழுந்து, ஏதோ யோசனையில் முன்னும் பின்னும் நடை போட்டான்.
‘‘ஊருக்குள்ள எப்போ… வர்றான்?’’
’’நாளைக் காலையில வந்துருவான்.’’
கணக்குப்பிள்ளையைப் பார்த்து, ‘‘கொடையை சீரும் சிறப்புமா… நடத்துங்க. செலவைப் பத்தி யோசிக்க வேணாம்…’’ என்ற உடையப்பன், ‘நம்ம வண்டவாளம் தெரிஞ்ச ஒரே சாட்சி வந்து சிக்குறான். கதையை முடிச்சிறணும்…’ மனக்கணக்குப் போட்டான்.
பொழுது விடிந்து வெகுநேரம் கழிந்திருந்தது. சர்வதேசக் கடற் பரப்பில் சஞ்சரித்த கப்பல், இந்தியப் பெருங்கடல் எல்லைக்குள் நுழைந்தது. இங்கிலாந்து தேசத்துக்கு சொந்தமான கப்பலின் உச்சியில் இதுவரை ‘கிரேட் பிரிட்டன்’ கொடி மட்டும் பறந்தது. சர்வதேச சட்டப்படி இந்தியப் பெருங்கடல் எல்லைக்குள் நுழைந்ததை உணர்த்தும் வண்ணம், இந்திய தேசியக் கொடியும் ஏற்றப்பட்டது.
இரவு ஏறிய போதை, இன்னும் இறங்காத சைமன் தடுமாறி எழுந்தான். கண் விழித்ததும் ஸ்காட்டின் ஞாபகம் வந்தது. ‘நேற்று நடுநிசி தாண்டியும் ஸ்காட்டின் அறை பூட்டியே இருந்ததே!’
முகம் கூட கழுவாமல், அறையை விட்டு வெளியேறி ஸ்காட்டின் அறைக்குப் போனான். பூட்டியே கிடந்தது. ‘ஸ்காட்டை எங்கே காணோம்?’ சாப்பாட்டுக் கூடம் நோக்கி நடந்தான். ஓரிரு வெள்ளைக்காரர்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்கள். ‘ஸ்காட்டை பார்த்தீர்களா?’ ‘நேற்று இரவு முதல் ஸ்காட்டைக் காணோம். பார்த்தீர்களா…’ விசாரித்துக் கொண்டே, முதல் வகுப்பு பொறுப்பதிகாரியின் அறைக்கு வந்து சேர்ந்தான்.
‘‘காணோமா?’’
‘‘ஆமாம்… நேற்று இரவிலிருந்து ஸ்காட்டை காணோம்!’’
செய்தி, கப்பல் முழுக்க தீயாய் பரவியது. சிப்பந்திகள், கப்பல் முழுக்க அலசினார்கள். எங்கும் காணோம்.
ஒரு அதிகாரி சொன்னான். ‘‘நேற்று மாலை, முதல் வகுப்பு அறை வாசலில் பைத்தியம் பிடித்ததைப் போல் ஒருவன் அமர்ந்திருந்தான். அவனுடன் ஒரு பெண்ணும் இருந்தாள். இருவரும் இந்தியர்கள். ஏதோ பிடிவாதத்தில் அவன் அமர்ந்திருந்தான். அவள், அவனை சமாதானம் பண்ணிக் கொண்டிருந்தாள். நான் கூட இருவரையும் கண்டித்துவிட்டுப் போனேன். அவர்களை விசாரியுங்கள்’’
கப்பல் சிப்பந்திகள், அரியநாச்சியின் அறையை நோக்கி ஓடி வந்தார்கள்.
17
ஏன் சிரிக்கிறே?

ஏன் சிரிக்கிறே?
வெள்ளையம்மா கிழவியின் தொண்டையில் முட்டி நிற் கும் வார்த்தை வெளியேற மாட்டேன் என்கிறது.
எதிரே அமர்ந்திருந்தவளைப் பார்த்து பேரன் கஜேந்திரன் கேட்டான், “சொல்லுங்க பாட்டி… எங்கே போறீங்க?”
“ஊருக்கு.”
“எந்த ஊருக்கு?”
“நம்ம ஊருக்கு.”
“நம்ம ஊருன்னா..?”
“பெருங்குடி.”
“அங்கே யாரு இருக்காங்க?”
வெள்ளையம்மா கிழவியால் பதில் சொல்ல முடியவில்லை.
“சொல்லுங்க பாட்டி… அங்கே யாரு இருக்காங்க?”
“உன்னோட…” விழுங்கினாள்.
“என்னோட…” புருவம் நெறியக் கேட்டான்.
“நம்மளோட சொந்த பந்தங்கள்.”
“இருபது வருஷமா… எந்த சொந்த பந்தத்தையும் என் கண்ணுல காட்டவே இல்லையே!”
வார்த்தைகளின்றி மவுனமாக அமர்ந்திருந்தாள்.
உற்றுப் பார்த்தவன், சிரித்துக் கொண்டே எழுந்தான். வெள்ளையம்மா கிழவியின் மட்டத்துக்கு குனிந்து, நேருக்கு நேராக கண்களைப் பார்த்து, “ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? நீங்க ஊருக்கு போக வேணாம்னு நான் சொன்னேனா? பத்திரமா போயிட்டு வாங்க…” என்று சொல்ல வந்ததை முடிக்காமல் இடையிலேயே நிறுத்தியவன், “அதென்ன பாட்டி எல்லோரும், ‘பத்திரமா போயிட்டு வா’, ‘பத்திரமா பார்த்துக்கோ’, ‘பத்திரமா இருக்கணும்’னு சொல் றாங்க? ‘பத்திரம்’னா சொத்து டாக்குமென்ட்தானே பாட்டி?” என்றான்.
பதில் தெரியாமல் வெள்ளையம்மா விழித்தாள்.
“அதாவது… சொத்துப் பத்திரம், நம்ம உயிருக்கு சமமாம். சொத்துக்கு அவ்வளவு மரியாதையா?” குழந்தை யாய் பேசியவன் திரும்பினான். எங்கோ பார்த்தவாறு, “நமக்கு ஏதும் சொத்து இருக்குதா பாட்டி?” என்றான்.
வாய் திறக்க முடியாத வேதனையுடன், ‘சொத்து இருக்குதாவா? ஆப்ப நாட்டுல பாதி சொத்துக்கு சொந்தக்காரன் நீ. ஆனா, அந்த சொத்து நீ அனுபவிக்க முடியாத சொத்து’ என உள்ளுக்குள் குமைந்தாள்.
வெள்ளையம்மாவின் கலங்கிய கண்களைக் கண்டு திடுக்கிட்டவன், “என்ன பாட்டி… எதற்கெடுத்தாலும் அழுகைதானா? கெளம்புங்க. நான் உங்களை ரயில் ஏத்திவிட்டு வர்றேன்” பின்புறமாக வந்து தோள்களைத் தொட்டான்.
படுக்கையில் விழித்தவாறு படுத்திருந்தான் துரைசிங்கம். அரியநாச்சி, குளியலறைக்குள் இருந்தாள்.
கப்பல் சிப்பந்திகள், அறைக் கதவை மெதுவாக தட்டினார்கள். பிறகு ஓங்கி ஓங்கி குத்தினார்கள்.
துரைசிங்கம் எழுந்து வந்து கதவைத் திறந்தான். வாசலில் நிற்கும் சிப்பந்திகளை ஏற இறங்க பார்த்தான். ஊமை மொழியில், ‘என்ன வேணும்?’ என்றான்.
சிப்பந்திகள், தமக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களில் ஒருவன். “அறையில் வேறு யார் இருப்பது?” என்றான்.
துரைசிங்கம், சைகையில் சொன் னான். புரியாமல் விழித்தார்கள். வாசலில் நின்றவர்கள், அறைக்குள் நுழைந்தார்கள்.
“இந்தியாவுக்குப் போறீங்களா?”
‘ஆமாம்,’ என தலையை ஆட்டினான்.
“இந்தியாவிலே எங்கே?”
துரைசிங்கத்தின் கைகள் ஆடிய நாட்டியத்தில் குழம்பினார்கள். குளியல் அறைக் கதவை திறந்து அரியநாச்சி ஈரத் தலையை வெளியே நீட்டியதும் துணுக்குற்றவர்கள், “மன்னிக்கணும் மேடம்,” என்றவாறு, அறையை விட்டு வெளியேறி வாசலில் நின்றார்கள்.
“சொல்லுங்க, என்ன வேணும்?” என்றாள்.
சிப்பந்திகளில் ஒருவன், “மேடம்… இவரு யாரு?” என துரைசிங்கத்தைக் காட்டி கேட்டான்.
“என் மருமகன். ஏன் கேக்கிறீங்க?”
“ஊமையா?”
“ஆமாம். அதோடு கொஞ்சம்… புத்தி சுவாதீனம் இல்லாதவன். வைத்தியம் பார்க்கத்தான் இந்தியாவுக்கு அழைச் சிட்டுப் போறேன். வயசு இருபத்தஞ்சு ஆவுது. ஆனா, குழந்தை மாதிரி. சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் அடம்பிடிப்பான். நேத்து ராத்திரி கூட, ‘கடலை பார்த்துக்கிட்டே மேல் தளத்திலதான் தூங்குவேன்’ன்னு பிடிவாதம் புடிச்சான். சமாதானம் பண்ணி கீழே அழைச்சுட்டு வர பெரும் பாடாயிடுச்சி. அது சரி… ஏன் இந்த விசாரணை?” ஈரக் கூந்தலைத் துண்டால் துவட்டிக் கொண்டே கேட்டாள்.
“நம்ம கப்பல் பயணி ஒருவரை நேற்று இரவிலிருந்து காணோம்.”
“அப்படியா?” கூந்தலை துவட்டுவதை நிறுத்திவிட்டு அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“பெரிய போலீஸ் அதிகாரி. பெயர், ஸ்காட்!”
“வெள்ளைக்காரரா?”
“ஆமாம். நேற்று இரவு, மிச்சமான போதையில் இருந்திருக்கிறார். கப்பல் மேல் தளத்தில் காற்று வாங்கி கொண்டிருந்த ஒரு கருப்பினப் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றிருக்கிறார். அவள் பாவம்… சொல்லிச் சொல்லி அழுகிறாள்.”
“அவருக்கு வயது என்ன இருக்கும்?”
“ஐம்பத்து ஐந்து.”
“ஒருவேளை… போதையில் தடுமாறி…” இழுத்தாள்.
“அப்படித்தான் இருக்கும்” என்றவன், சக சிப்பந்தியை பார்த்து, “கால் இடறிக் கடலில் விழுந்திருக்கலாம்” என்றான்.
“அய்யோ.. பாவம்!” என்றாள் அரியநாச்சி.
“தொந்தரவுக்கு மன்னிக்கணும் மேடம்” என்றபடி இரண்டு சிப்பந்திகளும் நகன்றார்கள்.
துரைசிங்கத்தின் கையை பிடித்து உள்ளே இழுத்த அரியநாச்சி, அறைக் கதவை பூட்டினாள். இமைகளை அகல விரித்து, அத்தை அரியநாச்சியை வியந்து
பார்த்த துரைசிங்கம், மெல்ல மெல்ல சிரிக்கத் தொடங்கினான். இரண்டு கைகளாலும் அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தான்.
துரைசிங்கத்தை அடிக்க கை ஓங்கிய அரியநாச்சி, “ஏய்… ஏன் சிரிக்கிறே? ஏன் சிரிக்கிறே…?” என்று சொல்லிக் கொண்டே கண்ணீர் வர சிரித்தாள்.

18
சாட்சியை அழிக்கணும்

பந்தக் கால் ஊன்றி, காப்பு கட்டியதில் இருந்து ஊருக்குள்ளே கள்ளு, சாராயப் புழக்கமில்லை; கால் அதிரும் நடை இல்லை; காது அதிரும் பேச்சு இல்லை.
எல்லா ஆண்களும் வலது கையில் மஞ்சள் காப்பு கட்டி, பக்தி பழுத்துப் போய் இழைந்து திரிந்தார்கள்.
பெண்கள் எல்லாம் மஞ்சள் சேலையில் அதிகாலைக் குளியலாடி, நீர் சொட்டச் சொட்ட, நுனி முடியில் கொண்டை இட்டிருந்தார்கள். இளவட்டங்கள், பத்து நாள் தாடியை சொரிந்துகொண்டு அலைந்தார்கள்.புஷ்பவதி ஆகாத ஏழு பெண் குழந்தைகளை ‘பேச்சியம்மன்’ ஆக்கி, கூனிக் கிழவி வீட்டு முன் நித்தமும் ஊர் கூடி பாத பூஜை செய்தார்கள்.
நாராயணத் தேவர் வீட்டு சனி மூலை இருட்டுக்குள் நூறு, இருநூறு முளைப்பாரிகள் வளர்ந்து கொண்டிருந் தன. இந்த வருட முளைப்பாரி எக்குப் போட்டு வளர்வதை பார்த்தால், ‘நல்ல மழை பெய்து நாடு செழிக்கும்’ என்ப தில் அட்டி இல்லை. ‘நாடு செழிக்குதோ… இல்லையோ, நம்ம ஊரைப் பிடிச்ச பீடை விலகணும். அது போதும்’ என்பதுதான் ஊர்க் கணக்கு.
எவர் விட்ட சாபமோ! பதினேழு, இருபது வருஷங்களாக ஊர் பட்டழிந்து விட்டது. ஏதோ… இருளப்பசாமி புண்ணியத்துல இந்த வருஷம் எல்லாம் கூடி வருது. சாமி குத்தம் இல்லாம நல்லபடியாக நடத்தி முடிக்கணும்.
கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம் ஊண், உறக்கமின்றி ஈசலாய் அலைந் தார். அத்தனை சுமையும் அவர் தலையில் ஏறிக் கிடந்தது. அரண்மனைச் சேவகத்தில் சிக்கித் தவிக்கும் அவரைச் சுற்றிலும் ஐந்து தலை நாகமாக, திசைக்கொரு நாக்கு நீண்டு கழுத்தை வளைக்கிறது.
தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக, உடையப்பன் மிரட்டுகிறான். சென்னைப் பட்டணத்தில் இருக்கும் வெள்ளையம்மா கிழவி ஒரு பக்கம் உத்தரவிடுகிறாள். செண்பகத் தோப்புக் காட்டுக்குள் இருக்கும் தவசியாண்டி மறு பக்கம் ‘தண்ணி’ காட்டுகிறான். கண் முன்னே பெருங்குடி கிராமம்; முதுகுக்குப் பின்னே தன் பெண்டு பிள்ளைகள்.
எவர் மனதும் கோணாமல் இசைவாய் காய் நகர்த்தி காரியத்தை முடிக்க வேண்டிய பொறுப்பு ரத்னாபிஷேகம் பிள்ளையின் தலையில் விழுந்து கிடக்கிறது.
இடையில் வந்து அரண்மனையோடு ஒட்டிக் கொண்ட ‘லோட்டா’வும் ஒரு வகையில் கணக்குப்பிள்ளைக்கு ஒத் தாசையாக இருந்தான். ஏவிய காரியங்களுக்கு எல்லாம் ஓடி, நடந்து ஊழியம் செய்யும் ‘லோட்டா’, தன்னைத் தானே ‘பாதி அரண்மனை’யாக நினைத்துப் பூரித்துப் போயிருந்தான். இந்த நினைப்பே கணக்குப்பிள்ளையின் பாதிச் சுமையை இறக்கியது.
“ ‘லோட்டா’… அரண்மனைக்குள்ள என் ஊழியம் இன்னும் எம்புட்டு நாளைக்கோ… தெரியல. எனக்குப் பின்னாடி உனக்குதான் அந்த பாக் கியம் கிடைக்கப் போகுதுன்னு நெனைக்கிறேன். என் கண்ணுள்ளபோதே அரண்மனை நெளிவு சுளிவுகளை கத்துக்கோ…” என அவ்வப்போது ‘லோட்டா’வுக்கு ‘உருமா’ கட்டி விடுவார்.
‘லோட்டா’, கணக்குப்பிள்ளை சொல்வதையும் தாண்டி யோசித்தான். ‘உங்களுக்கு பின்னாடி ‘கணக் குப் பிள்ளை’ உத்தியோகம் மட்டுமா என் கைக்கு வரப் போவுது? உடையப்பனுக்குப் பின்னாடி ‘அரண்மனை’ பட்டமே எனக்குத்தான்! வாரிசு இல்லாத சொத்துதானே? என் தலைவிதி இப்படி இருக்கும்போது, எவன் தடுக்க முடியும்?’ என்கிற நினைப் பில் தோள்பட்டையைத் தூக்கிக் கொண்டு, உறங்காமலே கனவுகளோடு அலைந்தான்.
இருபதுக்கு மேற்பட்ட அரண்மனைச் சேவகர்களுக்கு இப்போதெல்லாம் ‘லோட்டா’தான் மேஸ்திரி. இவ்வளவு பேரில் ஒரே ஒருத்தன் மட்டும் ‘லோட்டா’வை மதிப்பதில்லை.
அவன் பேரு, ‘கூழு’. காதில் கடுக்கண் அணிந்திருப்பான். நெற்றியில் குங்குமப் பொட்டு. இடுப்புக்கு கீழே இறங்காத, அடர் வண்ண ரவிக்கை போன்ற ஆம்பளை சட்டை. கொசுவம் வைத்துக் கட்டிய கைலி. வாய் நிறைய வெற்றிலைக் குதப்பல். இடுப்பை முழங்கைகள் உரச, இடமும் வலமும் புட்டம் ஆடும் நடை. உடையப்பனின் அந்தரங்கப் பட்சி. அரண்மனைக்கு ‘பெண்’கள் ஏறி வரும் நீல வண்ணக் கூட்டு வண்டியில், இம்மி தூசு தங்க விட மாட்டான். பளபளக்க துடைத்துக் கொண்டே இருப்பான்.
ஊருக்குள் காப்புக் கட்டியதில் இருந்து ‘கூழு’க்கு வேலை இல்லை. இன்னும் ரெண்டே நாள். திருவிழா முடியவும் கூட்டு வண்டிக்கும் ‘கூழு’க்கும் வேலை வந்துரும்.
அரண்மனைக்குள்ளே ‘லோட்டா’வுக் குப் பேச்சு துணை ‘கூழு’தான். வலிய பேச்சுக்கு இழுத்தான். “ஏப்பா ‘கூழு’... ஏழெட்டு நாளா அரண்மனை கடுமையான விரதத்தில இருக்காரோ?” என்றான்.
வெற்றிலை நாக்கால் உதடுகளைத் துழாவிக் கொண்டே, ‘லோட்டா’வின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ரெண்டு முறை, ஏற இறங்க நோட்டமிட்ட ‘கூழு’, “கூட்டு வண்டிக்குத்தான் வேலை கிடையாது. பாட்டிலும் கிளா ஸும் எப்பவும் போல உருளுது!” என வாயைக் குணட்டினான்.
“என்னது… பாட்டிலு உருளுதா? அப்புறம் என்ன விரதம்?”
“எனக்கென்னமோ… இது சாமி விரதமா தெரியல. ஏதோ சபதத்தை நிறைவேத்தப் போற ஆங்காரமும் வெறியுமாதான் தெரியுது. போதையில தினமும் புலம்பல் தான். ‘உயிரோட இருக்கிற ஒரே சாட்சியை அழிக்கணும். ஒரே சாட்சியை அழிக்கணும்’னு புலம்புறாரு. பத்தாம் நாள் திருவிழாவில யாரு தலை உருளப் போகுதோ… தெரியல” சொல்லி விட்டு ‘கூழு’ நாலு திக்கும் பார்த்தான்.
“அடேய் ‘லோட்டா’ அங்கே என்னடா புரணி? வாடா இங்கே...” உள்ளே இருந்து குரல் கேட்டது.
“இந்தா… வர்றேன் அரண்மனை” பதறி விழுந்தடித்து ஓடினான் ‘லோட்டா’.
தனுஷ்கோடி துறைமுகத்தில் ஒதுங்கியது கப்பல். பயணிகள் ஒருவர் பின் ஒருவராக இறங்கினார்கள்.
வரவேற்க வந்து கரையில் நிற்கும் கூட்டம், அவரவரின் விருந்தாளிகளைக் கண்டதும் உற்சாகத்தில் கை அசைத்தார்கள்.
பிறந்த மண்ணைவிட்டு வெளி யேற்றப்பட்டபோது கன்னியாய் இருந்த அரியநாச்சியையும் பாலகனாய் இருந்த துரைசிங்கத்தையும் இருபது வருஷங் கள் கழித்து அடையாளம் காண இயலாமல் தவித்துப் போய் நின்றான் தவசியாண்டி.
19
இருபத்திரெண்டாவது வெட்டு

உடையப்பனின் குரல் கேட்டு அரண்மனைக்குள் பதறி ஓடிய ‘லோட்டா’, நுழைவு வாசல் படி இடறி விழுந்தான்.
“டேய்… ‘லோட்டா’!”
மறுபடியும் அரண்மனையின் குரல் கேட்டதும் ‘லோட்டா’வுக்கு ஈரல் குலை அறுந்து விழுந்தது போல் இருந்தது.
அரண்மனை, எவரையும் ஒரு தடவை பெயர் சொல்லி அழைப்பதே அபூர்வம். கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகத்தைக் கூட, “கணக்கு” என எப்போதாவது கூப்பிடுவது உண்டு. அதற்கே கணக்குப் பிள்ளையின் திரேகம் ஆடிப் போகும். அரண்மனையின் கண் ஜாடையைப் புரிந்துகொண்டு காரியமாற்றுவார். துளி பிசகாது. அந்த சாமர்த்தியம் உள்ளவன்தான் அரண்மனைக்குள்ளே காலம் தள்ள முடியும்.
‘நேத்து வந்த பயல் நான். நம்ம பேரை ரெண்டு தடவை உச்சரிக்கிறாருன்னா… சனியன் சடைப் போட்டு, உச்சந்தலை யிலே ஏறி உக்காந்துட்டான்! நம்ம சீட்டு கிழியப் போவுது. சீட்டுக் கிழிஞ்சாலும் பரவாயில்ல, ஓடி தப்பிச்சு பிழைச் சுக்கிறலாம். உசுரு தப்பிக்குமான்னு தெரியலையே! அரண்மனை… விரதம் இருந்தா என்ன? இல்லாட்டி நமக்கென்ன?
எங்கே போனாலும் நாக்குச் சனி. நம்மளை விடுதில்லையே. எல்லாம் ‘கூழு’ப் பயலாலே வந்த வினை!
முன் வேட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடி, உடையப்பனின் முன் னால் போய், வாய் பொத்தி நின்றான்.
“‘கூழு’ப் பயலோடு உனக்கென் னடா… பேச்சு?”
“நான் பேசல அரண்மனை. அவன் தான்…” தலைக்கு மேல் கும்பிட்டான்.
“என்ன சொன்னான்?”
“அது வந்து அரண்மனை…” வாய் வறண்டது.
கண் குத்திப் பார்த்தான் உடையப்பன்.
“திருவிழா ஏற்பாடுகளைப் பத்தி கேட்டான் அரண்மனை.”
‘லோட்டா’ சொல்வதை நம்பாத உடையப்பன், திரும்பாமலே, “அரண்மனைச் சேவகம், அம்புட்டு லேசு இல்லடா ‘லோட்டா’. இங்கே ஆயிரம் அந்தரங்கம் இருக்கும்; ரகசியங்கள் இருக்கும். இங்கே இருந்து, அரண்மனைச் சொத்து மட்டுமில்லை… அரண்மனைச் சேதியும் வெளியே போகக் கூடாது.” திரும்பினான். “என் தோட்டத்தில நிற்கிற ஒவ்வொரு தென்னை மரத்துக்குக் கீழேயும் உன்னை மாதிரி உளறு வாயன்ங்கதான் உரமா கிடக்கிறானுங்க.”
‘லோட்டா’வுக்கு மூத்திரம் முட்டியது. தப்பி தவறி இறங்கினால் இப்பவே தென்னைக்கு உரம்தான். இறுக்கினான். “உத்தரவு அரண்மனை… உத்தரவு அரண்மனை…” வார்த்தைகள் கிழிந்து விழுந்தன.
மவுனமாக அமர்ந்திருந்த உடையப் பன், இமைகளை மட்டும் உயர்த்தி, “பத்தாம் நாள் திருவிழாவில, இருளப்ப சாமிக்கு எத்தனை கிடாய் வெட்டுப் படுது?” என்றான்.
பேச்சு திசை மாறியதில் ‘லோட்டா’ வுக்கு மூச்சு வந்தது. “இருபத்தியோரு கிடாய் அரண்மனை.”
“கிடாய் வெட்டுறது யாரு?”
“காவக்கார திருமால் தேவர். ஒரு கிடாய்க்கு ஒரு வெட்டுதான். தலை துண்டா ஓடும் அரண்மனை!”
“இருபத்தியோரு கிடாய்களை வெட்டிட்டு, இருபத்திரெண்டாவதும் ஒரு வெட்டு இருக்குதுன்னு… காவக் காரத் திருமாலுகிட்ட சொல்லி வை.”
‘லோட்டா’ வாய் பிளந்து பார்த்தான்.
“இருபத்திரெண்டாவது வெட்டுப்பட போறது… கிடாய்த் தலை இல்லை. மனுசத் தலை. ஒரே வெட்டுல தலை துண்டா ஓடணும்.”
‘லோட்டா’வின் பாதம் வரை கால் நனைந்தது. ‘வகை தப்பா வந்து மாட்டிக்கிட்டியேடா ‘லோட்டா’! உன் தலைவிதி இப்பிடி இருக்கையில… என்னென்ன நெனைப்பெல்லாம் ஓடுச்சு? கணக்குப்பிள்ளை உத்தியோகமாம்… அதையும் தாண்டி, அரண்மனை வாரிசாம். நெனப்பு… பொழப்பைக் கெடுத்துருச்சேடா ‘லோட்டா’.’ கண்ணீர் ஓடியது.
“போ…” ஒற்றைச் சொல்லில் உதறினான் உடையப்பன்.
தன் உயரத்தில் பாதி ஆளாய் குனிந்தவாக்கில் தடுமாறி நகர்ந்தான் ‘லோட்டா’.
அரியநாச்சி, கப்பலை விட்டு இறங்க வேண்டிய கடைசி ஆளாய் நின்றாள்.
20 வருடங்களுக்கு முந்தைய தனுஷ்கோடி தீவுக்கரை அரியநாச்சியின் கண்ணில் அலைந்தது.
‘அரியநாச்சியின் மீது ஸ்காட்டின் கடைசிக் கோபம் கொப்பளித்தது. முன்னும் பின்னும் மாறி மாறி விழுந்த அடியில் கைப்பிரம்பு தெறித்தது. ம்..ஹூம்.. அரியநாச்சி அலுங்கலே. அத்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டான் துரைசிங்கம்.
கப்பலேறிய அரியநாச்சி, கரையில் நின்ற ஸ்காட்டைப் பார்த்து, “துப்பாக்கிப் போலீஸைத் துணைக்கு வெச்சுக்கிட்டு… ஒரு பொட்டச்சியை அடிக்கிற வெள்ளை நாயே! எத்தனை கடல் தாண்டி அனுப்புனாலும்… திரும்பி வருவோம்டா. வந்து… பழி தீர்ப்போம்!” துரைசிங்கத்தின் கன்னம் திருப்பி, “நேத்து வரை வாய் பேசுன இந்த பச்சப் பாலகனை ஊமையாக்கி அனுப்புறீங்களே… உங்களையும் உங்களுக்குத் துணை போன உள்ளூர் துரோகிகளையும்… இவனே வந்து அழிப்பான்டா!” கரை கேட்க கத்தினாள்.
நீர் திரண்ட கண்களால் துரை சிங்கத்தை ஏறிட்டுப் பார்த்தாள் அரியநாச்சி. துரைசிங்கம், இமைக்காமல்,கரையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
வலம்புரிச் சங்கு வடிவ தனுஷ்கோடி தீவு. அண்ணன் ரணசிங்கம், வெள்ளை ஆதிபத்தியத்துக்கு எதிரான ஆப்பநாட்டு முதல் அனற்பந்தை கொளுத்தி தூக்கிப் போட்ட தீவு. அதிகார ஜொலிப்போடு இந்தியப் பெருங்கடலில் நங்கூரம் பாய்ச்சி நின்ற ‘கிரேட் பிரிட்டன்’ கப்பலை, ரணசிங்கம் வைத்த குண்டு, சல்லி சல்லியாய் சிதறடித்த தீவு. வெள்ளை வல்லாதிக்கக் கழுகு தம்மை வெளியேற்றியபோது அடிமைப்பட்டிருந்த தீவு, இன்று சுதந்திரக் கடற்காற்று தாலாட்டும் பூமி.
கப்பலில் இருந்து இறங்கியவர்களை ஏற்றிக் கொண்ட படகு, கரையை நெருங்கி கொண்டிருந்தது. அலைகள் இல்லாத கீழைக்கடல், பெண்கடல். படகு அலுங்காமல் வந்து கொண்டிருந்தது. கரையில் குவிந்திருக்கும் கூட்டத்தில் வெள்ளை முகங்களை அதிகம் காணோம். கை அசைக்கும் முகங் களில், செட்டிநாட்டு நகரத்தார் பெரும்பாலோர். பஞ்சக்கச்ச வேட்டி கட்டி, நீள் கோட்டும் அரைஅடி உயர அடர் வண்ணத் தொப்பியும் அணிந்த கனவான்கள் நிறைய தென்பட்டனர்.
எவரும் தம்மை எதிர்கொண்டு கை அசைக்காத கரையை காண விரும்பாத அரியநாச்சி, எங்கோ பார்த்தவாறு வந்தாள். படகு நெருங்க நெருங்க, கரை சலசலத்தது. எல்லா சலசலப்புகளையும் தாண்டி கத்தினான் தவசியாண்டி, “அரியநாச்சி தாயீ…!”




20
ஓம் சாந்தி ஓம்!

“அரியநாச்சி தாயீ..!”
கரையில் இருந்து தவசியாண்டி கத்தியது, அரியநாச்சிக்குக் கேட்கவில்லை. படகு வந்து கொண்டிருக்கும் கீழைக்கடல் காற்று, தவசியாண்டிக்கு எதிர்க்காற்று. காற்றை எதிர்த்து ஏறாத ‘சொல்’, திரும்பி தவசியாண்டியின் முகத்தில் அடித்தது.
கரையோரம் நின்று கை அசைத்துக் கொண்டிருக்கும் செல்வச் சீமான்களுக்குள் முண்டியடித்துக்கொண்டு நுழைந்தான். எல்லோருக்கும் முன் ஆளாய் நின்று, கடல் நோக்கிக் கத்தினான்.
“தாயீ… அரியநாச்சி!”
அரியநாச்சி பார்த்தாள். ‘தன் பெயரை உச்சரிப்பவன் இங்கு எவன்?’ என அறியாதவளாய்… தலை தூக்கி, கண் ஊன்றி கரையைப் பார்த்தாள்.
இரு கைகளையும் உயர்த்தி, இடமும் வலமும் ஆட்டினான் தவசியாண்டி.
“யார் இந்த கிறுக்குப் பயல்?” கனவான்கள் முகம் சுழித்தார்கள்.
அரணாக நின்ற போலீஸ்களில் ஒருவன், “ஏய்! யார்… நீ?” என்றான்.
போலீஸைப் பொருட்படுத்தாத தவசியாண்டியின் பார்வை கடல் பார்த்திருந்தது. தோளைத் தொட்டு இழுத்த போலீஸ், லத்தியை ஓங்கினான்.
திரும்பிப் பார்த்த தவசியாண்டி, “ஏய்… எடு கையை!” என்று சொல்லி தோளை உலுப்பிவிட்டான்.
“நாட்டை விட்டு, வெள்ளைக்காரன் தான் போயிருக்கான். வெள்ளைக்காரப் புத்தி இன்னும் போகலை….” போலீஸின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தவன், “என்னைப் பார்த்தால், காட்டுப் பயலாத் தெரியுதா உனக்கு? நான்… ‘ரணசிங்கம் சேனை’. ரணசிங்கம் தெரி யுமா… ரணசிங்கம்? உங்களுக்கெல்லாம் உடுப்பு மாட்டிவிட்ட வீரன்! அந்த மாவீரனோட ‘ஆப்ப நாட்டு கருஞ் சேனை’யிலே ஒரு அணில் நான். எடு கையை…” தோளைக் குலுக்கியவாறு கடலைப் பார்த்தான்.
படகு, கரையை நெருங்கி கொண்டிருந்தது.
தவசியாண்டியை அடையாளம் கண்டுகொண்டாள் அரியநாச்சி.
“தவசி!” படகிலிருந்தே அழைத்தாள்.
தவசியாண்டிக்கு சந்தோஷம் கண்ணைக் கட்டியது.
“ஆத்தா… ஆப்பநாட்டுக் குல விளக்கே! சேவிக்கிறேன் தாயீ!” தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டுக்கொண்டே அழுதான்.
எல்லோரும் கரை இறங்கினார்கள்.
இரண்டு கைகளையும் மார்புக்குக் குறுக்காக கட்டிக்கொண்டு, அரியநாச் சிக்கு முன்னால் போய் நின்றவன், நெடுஞ் சாண்கிடையாக காலில் விழுந்தான். அரியநாச்சி பதறிப் போனாள். “ஏய்ய்… தவசி! இதென்ன? எந்திரி…” ஒரு எட்டு பின் வைத்தவள், குனிந்து தூக்கினாள்.
எழுந்தவன் கூர்ந்து துரைசிங்கத்தைப் பார்த்தான். துரைசிங்கம், ‘யார் இது?’ என சைகையில் அரியநாச்சியிடம் கேட்டான்.
“ஆத்தாடீ! என் சிங்கம் பெத்த சிங்கமா… இது? ஆப்பநாட்டு குரல் வளையையே நெறிச்சுடான்ங்களே!” முகத்தை மூடிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதான் தவசியாண்டி. கண்ணைத் திறந்து துரைசிங்கத்தைப் பார்க்க பார்க்க, அழுகை கூடியது. சுற்றி நின்ற எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள்.
ஒரு வடநாட்டு ஜடாமுடி தேசாந்திரி, வலிய முன்னே வந்து, தலைக்கு மேல் கை வைத்து, “கித்னா முஸ்கில் ஆயேகா தோ பீ… மத் ரோனா… மத்ருக்னா. பக வான் ஹை ஹமாரே சாத். சாந்தி… ஓம் சாந்தி!” என்று ஆசீர்வதித்தார்.
ஜடாமுடி சாமியாரின் உபதேசம் தவசியாண்டிக்கு ஒண்ணுமே புரியலே. வடமொழிக் கலப்பே ‘மலேயா’ மொழி என்பதால், அரியநாச்சிக்கும் துரைசிங்கத்துக்கும் அது புரிந்தது.
“தன்யவாத் குருஜி…” சாமியாரை வணங்கிவிட்டு, “தவசி… வா வெளியே போவோம்” தவசியாண்டியின் தோளைத் தொட்டுத் திருப்பினாள் அரியநாச்சி.
விடிந்தால் பத்தாம் நாள் திருவிழா.
கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகத் துக்கு உட்கார நேரமில்லை. படுக்க நேரமில்லை. என்னதான் ஓடினாலும் ஆடினாலும் தோள் சுமை குறையக் காணோம்.
நேற்று இரவு சென்னைப்பட்டணத்தில் ரயிலேறி வந்து கொண்டிருக்கும் வெள் ளையம்மா கிழவியை அழைத்து வர, ரயிலடிக்கு போய்க் கொண்டிருந்தார்.
‘ஊருக்கு வருவேன். சாமி கும்பிடுவேன். அரண்மனைக்குள்ளே நுழைய மாட்டேன்’னு அந்தம்மா நிபந்தனை போட்டுச்சு. அரண்மனைக்கு உடைமைப்பட்ட மகராசிக்கு அப்படி என்ன வைராக்கியமோ… தெரியலே! நல்லாண்டி வீட்டிலேதான் தங்க வைக்கணும். இருபது வருஷமா… பட்டணவாசி. சவுகரிய குறைச்சல் தான். என்ன பண்ண?
‘கட்டாயம் வந்துருவேன்’னு சொன்ன பூசாரி தவசியாண்டியை இன்னைக்கு வரை ஊருக்குள்ளே காணோம். ‘என் னப்பா தவசியாண்டி… ஏன் இன்னும் வரக் காணோம்?’னு கேட்டு காட்டுக் குள்ளே போகவும் முடியாது. அவ னோட விறைப்பும் முறைப்பும் ஊரை பயமுறுத்துது. அவன் வந்தால்தான் ‘கிடாய் வெட்டு’. என்ன பண்ண காத்திருக்கானோ… தெரியலே.
இந்தப் பக்கம், அரண்மனை இடிக் கிற இடி, பெரும் இடியா இருக்குது. உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஊர் விவரம் கேட்கிறாரு! ‘பந்தல் போட் டாச்சா? மாலை, பூவெல்லாம் வந்து ருச்சா? இந்த வருஷம் முளைப்பாரி வளர்த்தி எப்படி? வெட்டுக் கிடாய் இருபத்தி ஒண்ணும் எங்கே நிக்குது? இரை தின்னுச்சா? ஆட்டம் பாட்டம் கச்சேரி எல்லாம் எப்படி நடக்குது?’ அடுக்கடுக்கா கேட்கிறக் கேள்விக்கு விவரம் சொல்றதுக்குள்ளே, நாக்கு தள்ளுது!
ரயிலடி நெருங்கியது. தான் ஏறி வந்த மோட்டார் வாகனத்தை ஓரமாக நிறுத்தச் சொல்லிவிட்டு, ரயில் நிலை யத்துக்குள் நுழைந்தார்.
தனுஷ்கோடி ‘போட் மெயில்’ அல றிக் கொண்டு வந்தது. பயணிகளோடு வெள்ளையம்மா கிழவியும் இறங்கி னாள். கணக்குப்பிள்ளை மூச்சிரைக்க ஓடினார்.
தவசியாண்டி ஓட்டி வந்த கூட்டு வண்டி, பெருங்குடி கடந்து, செண்ப கத்தோப்பு காட்டுப் பாதை விலக்கில் வந்து கொண்டிருந்தது. வெள்ளையம்மா கிழவியும் கணக்குப்பிள்ளையும் ஏறி வந்த மோட்டார் வாகனம், கூட்டு வண்டிக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றது. வண்டி ஓட்டி வரும் தவசியாண்டி, யார் கண்ணிலும் படாமல் காட்டுக்குள் பாய்ந்து போகும் யத்தனிப்பில் மாடுகளை விரட்டினான்.
மோட்டாருக்குள் அமர்ந்திருந்த வெள்ளையம்மா, “இவன் யாரு? நம்ம ஊரு தவசியாண்டிதானே? இன்னும் உயிரோடு தான் இருக்கானா? இவன் உயிரோடு இருந்தால்… அரண்மனை உயிரோடு இருக்க முடியாதே!” என்றாள்.
கணக்குப்பிள்ளைக்கு உடம்பெல்லாம் வியர்த்தது.
அரியநாச்சியும் துரைசிங்கமும் அமர்ந்து வரும் கூட்டு வண்டி, செண்பகத்தோப்புக் காட்டுக்குள் பாய்ந்து போனது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக