புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_m10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_m10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10 
13 Posts - 25%
Baarushree
முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_m10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_m10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10 
2 Posts - 4%
prajai
முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_m10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10 
2 Posts - 4%
Rutu
முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_m10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10 
1 Post - 2%
சிவா
முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_m10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10 
1 Post - 2%
viyasan
முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_m10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_m10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_m10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10 
1 Post - 8%
Rutu
முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_m10முத்தமிழ்: சொல்லேர் உழவர் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தமிழ்: சொல்லேர் உழவர்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 12:23 am


மானுட மனத்தில் அறிவுக்கூறு, உணர்ச்சிக்கூறு, முயற்சிக்கூறு என்ற மூக்கூறுகளும் ஒன்றையொன்று பற்றிப் படர்ந்துள்ளன. தமிழ்மொழி சங்க காலத்தில் மூன்று வகைகளில் நிலைபெற்றிருந்தது. ஒன்று இயல், மற்றொன்று இசை, பிறிதொன்று நாடகம். தமிழ் மொழி, “இயல்“ வழியாக மானுடத்தின் அறிவுக்கூறையும் “இசை“ வழியாக உணர்ச்சிக் கூறையும் இயலும் இசையும் இணைந்த “நாடக“த்தின் வழியாக முயற்சிக்கூறையும் வளர்த்தது. இயலையும் நாடகத்தினையும் இணைக்கும் கயிறுதான் இசை. முத்தமிழின் மையமும் அதுதான்.

கூத்தும் நாடகமும் ஒரு பொருள் குறித்த சொற்கள்தான். அக்காலத்தில் “கூத்து“ என்று அறிய்பட்டது பின்னாளில் நாடகமாக நிலைபெற்றது. முத்தமிழைப் “பரிபாடல்“ என்ற நூல் “தமிழ்மும்மை“ என்றது. “ஒரு விஷயத்தைச் சொல்லால் விளக்குவது இயல், பாட்டால் விளக்குவது இசை, நடிப்பால் விளக்குவது நாடகம்“ என்று குறிப்பிட்டுள்ளார் ஆறு. அழகப்பன். “நடனமும் நாடகமும் கூத்துமெல்லாம் முதன் முதல் கண்டறிந்து நூல்கள் எழுதினோர் பண்டைத் தமிழாசிரியர்களே. தொன்று தொட்டு இயலும் இசையும் நாடகமும் தமிழுக்கே உரியவாதலில் தெரிந்து சான்றோர் எல்லாம் தமிழை “முத்தமிழ்“ என வழங்கி வருகின்றனர்“ என்றார் மறைமலை அடிகள். பிற்கால ஔவையின் செய்யுளில் உள்ள “சங்கத் தமிழ் மூன்றும் தா“ என்ற அடியிலிருந்து, “இயல், இசை, நாடகம் (கூத்து) ஆகிய மூன்றும் இணைந்ததே சங்கத் தமிழ்“ என்பது தெளிவாகின்றது.

புலவர் மரபு

இயற்றமிழை வளர்த்து, வாழச்செய்த அக்காலச் செந்நாப் புலவர்களைச் “சொல்லேர் உழவர்“ என்று இலக்கியங்கள் சிறப்பித்துள்ளன. “இளவேனிற் காலத்தில் சான்றோர் நாவிற்பிறந்த கவிதைகளின் புதுமையை மதுரை மக்கள் கொண்டாடுவர். புலவர்கள் தம் செவிகளை வயலாகவும் தமக்கு முற்பட்ட சான்றோர் கூறிய செய்யுட்களைத் தம் சொல்லை வளர்க்கும் நீராகவும் கொண்டு தமது அறிவுடைய நாவாகிய கலப்பையால் உழுது உண்டனர். இத்தகு புலவர் பெருமக்கள் கவிகளைப் பாண்டியன் கேட்டு மகிழ்வான்“ என்ற செய்தியைக் கலித்தொகையின் நெய்தற்கலி 35ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது. விவசாயி ஏரினைக் கொண்டு நிலத்தினை உழுது நல்ல பயிரினை விளைவிப்பதைப் போலப் புலவர்கள் சொற்கள் என்ற ஏரினைக் கொண்டு தமிழ்மொழியினை உழுது நல்ல செய்யுட்களைப் புனைந்துள்ளனர். ஆதலால், அப் புலவர்களைச் “சொல்லேர் உழவர்“ என்று “தமிழ்விடுதூது“ என்ற சிற்றிலக்கியம் குறிப்பிட்டுள்ளது.

இப் புலவர்கள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நான்கு வகையான பாக்களைக் கொண்டு இயற்றமிழ் வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றியுள்ளனர். சங்க காலப் புலவர்களாக 473 பேரைக் குறிப்பிடுவர். 102 பாடல்களை இயற்றிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. 473பேரில் 41பேர் பெண் புலவர்கள். மொத்தச் சங்க இலக்கியப் பாடல்கள் 2381. இவற்றுள் 235 பாடல்கள் கபிலர் இயற்றியவை. சங்க இலக்கியத்தில் மூன்று அடிகளிலும் ஒரு பாட்டு உண்டு, 782 அடிகளிலும் ஒரு பாட்டு உண்டு. பாட்டும் தொகையும்தான் சங்க இலக்கியம் என்பர். பாட்டு என்பது பத்துப்பாட்டினைக் குறிக்கும். தொகை என்பது எட்டுத்தொகையினைக் குறிக்கும்.

எட்டுத்தொகை

தனிப்பாடல்களின் தொகுப்புதான் எட்டுத்தொகை. அதாவது எட்டுத்தொகுப்புகள். ஒவ்வொரு தொகுப்பும் பாடல்களின் அடிவரையறை மற்றும் பொருள்மரபு (பாடல் அடிகளின் எண்ணிக்கை, அகப்பொருள், புறப்பொருள்) ஆகியவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பெற்றுள்ளது. இத்தொகுப்பு நூல்களை “எண்பெருந்தொகை“ என்பர். எட்டுத்தொகையில் உள்ள மொத்தப் பாடல்களில் மிகக் குறைந்த அடி அளவு மூன்றாகவும் மிகுதியான அடி அளவு 140 ஆகவும் உள்ளது.

நற்றிணை

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் ஒன்பது அடிகள் முதல் பன்னிரண்டு அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 400 பாடல்களின் தொகுப்பு நூல் நற்றிணை. விதிவிலக்காக இத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள 110 மற்றும் 379 ஆகிய பாடல்கள் உள்ளன. “நல்ல திணை“ என்ற பொருளில் இத்தொகுப்பு நூலின் தலைப்பு வைக்கப்பெற்றுள்ளது. இதிலுள்ள பாடல்களை 187 புலவர்கள் இயற்றியுள்ளனர். 56 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. நற்றிணைப் பாடல்களைத் திரட்டித் தொகுக்கச் செய்த வேந்தர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இந்நூலுக்கு “நற்றிணை நானூறு“ என்ற பெயரும் உண்டு.

காதலன் (தலைவன்) வரவினைப் பல்லி ஒலி எழுப்பிக் கூறுவதாகக் கருதி, நம்பிக்கையுடன் காத்திருக்கும் காதலி (தலைவி), காதலர் வரும் வரை சுவரில் கோடிட்டு எண்ணும் வழக்கத்தினை இத்தொகுப்பு நூலில் காணமுடிகின்றது.

சோழ மன்னர் அழிசிக்குரிய பெருங்காட்டில் விளைந்த நெல்லிக்கனிகளின் புளிப்புச் சுவையை நினைத்து வாவல் (வெளவால்) தன் கனவிலும் ஏங்கும் என்ற செய்தி குறிப்பிடத்தக்கது.

இத்தொகைநூலில் அதியமான் அஞ்சி, அழிசி, ஆய் அண்டிரன், உதியன், ஓரி, காரி, குட்டுவன், சேந்தன், நன்னன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகியோர் சுட்டப்பெற்றுள்ளனர்.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 12:23 am

குறுந்தொகை

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் நான்கு அடிகள் முதல் எட்டு அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 400 பாடல்களின் தொகுப்பு நூல் குறுந்தொகை. இதிலுள்ள பாடல்களை 203 புலவர்கள் இயற்றியுள்ளனர். 10 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. குறுந்தொகைப் பாடல்களைத் திரட்டித் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். விதிவிலக்காக இத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள 307 மற்றும் 391 ஆகிய பாடல்கள் உள்ளன. இந்நூலுக்குக் “குறுந்தொகை நானூறு“ என்ற பெயரும் உண்டு. இத்தொகைநூலில் ஆகுதை, அதியன், ஆய், எவ்வி, ஓரி, கட்டி, குட்டுவன், நள்ளி, நன்னன், பாரி, மலையன், வடுகர் ஆகியோர் சுட்டப்பெற்றுள்ளனர். காஞ்சியூர், உறந்தை, தொண்டி, குறும்பூர், மாந்தை, சிறுநல்லூர், குன்றூர் முதலிய பழந்தமிழக ஊர்களும் சுட்டப்பெற்றுள்ளன.

குழந்தைகள் சிறுதேர் இழுத்தும் பெண்கள் குரவைக்கூத்து ஆடியும் மகிழ்ந்துள்ளனர். நல்வினை, தீவினை, வீடுபேறு, சுவர்க்கம், நரகம், கூற்றுவன் (எமன்) போன்ற தொன்மக் கருத்துகளையும் வீட்டின் கூரையின் மீதமர்ந்து காக்கை கரைந்தால் வீட்டிற்கு விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கைசார்ந்த கருத்துகளையும் இத்தொகுப்பு நூலினுள் காணமுடிகின்றது.

பண்டமாற்றாக இடையவர் பாலைக்கொடுத்துத் தானியத்தைப் பெற்றதனையும் உமணர்கள் உப்பினைக் கொடுத்து நெல்லினைப் பெற்றதனையும் இத்தொகுப்பு நூலின் வழியாக அறியமுடிகின்றது.

நடனப் பெண்ணை “ஆடுகள மகள்“ என்றும் நடனமாடும் ஆடவரை “ஆடுகள மகன்“ என்று அக்காலத்தில் அழைத்துள்ளனர். அக்காலத்தில் பறை, பண்லம், பதலை, முழவு, தட்டப்பறை, குளிர் முரசு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தியுள்ளனர். இவற்றை இத்தொகுப்பு நூலின் வழியாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது.

தலைவன் மீது தலைவிகொண்ட காதல் நிலத்தைவிடப் பெரியதாகவும் வானத்தைவிட உயர்ந்ததாகவும் கடலைவிட ஆழமானதாகவும் உள்ளது என்று நீள, அகல, உயர (ஆழ) கணித அளவீடுகளால் புலவர் குறிப்பிட்டுள்ளார். இது, அம் மூன்றின் (நிலம், வானம், கடல்) தன்மை சார்ந்தும் உயர்வானதாகக் குறிக்கப்பெற்றுள்ளது எனலாம்.

தமிழர்கள் அக்காலத்திலேயே “சேமச்செப்பு“ என்ற மட்பாண்டத்தை இக்கால ஃபிளாஸ்க் (தெர்மாசு குடுவை) போலப் பயன்படுத்தியுள்ளனர். “முன்பனிக் காலத்திற்கு உகந்த சூட்டையுடைய நீரைச் சேமச்செப்பிலிருந்து பருகலாம்“ என்ற செய்தி குறுந்தொகையின் 277ஆவது பாடலில் இடம்பெற்றுள்ளது. வெப்பத் தண்ணீரை நெடுநேரம்வரை வெப்பமாகவே வைத்திருக்கும் கலத்தினைத் தமிழர்கள் உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளனர் என்பது இப்பாடலின் வழியாக உறுதிப்படுகின்றது.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 12:24 am

ஐங்குறுநூறு

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் மூன்று அடிகள் முதல் ஐந்து அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 500 பாடல்களின் தொகுப்பு நூல் ஐங்குறுநூறு. இதிலுள்ள பாடல்களை ஓரம்போகி, அம்மூவன், கபிலர், ஓதலாந்தை, பேயன் ஆகிய ஐந்து புலவர்கள் இயற்றியுள்ளனர். இப்பாடல்களைத் திரட்டித் தொகுத்தவர் கூடலூர்கிழார் ஆவார். இப்பாடல்களைத் திரட்டித் தொகுக்கச் செய்த வேந்தர் யானைக்கட்சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஆவார். திணைக்கு நூறு பாடல்கள் வீதம் அன்பின் ஐந்திணைகளுக்கு ஐநூறு பாடல்கள் இயற்றப்பெற்றுள்ளன. ஒவ்வொரு நூறு பாடலும் பத்துப் பிரிவுகளாகவும் பிரிவுக்குப் பத்துப் பாடல்கள் வீதமும் தொகுக்கப்பெற்றுள்ளன. இத்தொகுப்புகள் ஒவ்வொன்றும் “பத்து“ என்ற சொல்லினைப் பின்னொட்டாகக்கொண்ட தலைப்பினைப் பெற்றுள்ளன. நெய்தல் திணையில் அம்மூவனார் இயற்றிய “தொண்டிப்பத்து“ என்ற தொகுப்பு அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. இத்தொகுப்பு நூலில் சோழன் கடுமான் கிள்ளி, குட்டுவன், பாண்டியன், சேரன் ஆதன்அவினி, விராஅன், மத்தி, கொற்கைக்கோமான் ஆகியோர் சுட்டப்பெற்றுள்ளனர். ஆமூர், தேனூர், இருப்பை, கொற்கை, மாந்தை, கோவலூர், கழார் (காவிரி), தொண்டி ஆகிய ஊர்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன. இத்தொகுப்பு நூலில் “அம்மை“, “அழகு“ ஆகிய வனப்புகள் முழுமையாக இடம்பெற்றுள்ளன.

இந்திரவிழா, தைந்நீராடல் போன்ற பழந்தமிழரின் பழக்க வழக்கங்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன. இறைவனை வேண்டி நோன்பு நோற்றுப் பிள்ளைபெற்ற தம்பதியரை இத் தொகுப்பு நூலில் காணமுடிகின்றது.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 12:24 am

பதிற்றுப்பத்து

பாடாண்திணையில் (புறத்திணை) ஆசிரியப்பாவில் எட்டு அடிகள் முதல் 57 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 100 பாடல்களின் தொகுப்பு நூல் பதிற்றுப்பத்து. இது, பத்துப்பத்துப் பாடல்களின் தொகுப்பாகப் பத்துத் தொகுப்புகள் அடங்கிய 100 பாடல்களின் தொகுப்பு நூல். முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கப்பெறவில்லை (20 பாடல்கள்). நான்காம் பத்து அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு பத்துப்பாடல்களின் இறுதியிலும் பதிகம் காணப்படுகின்றது. அப்பதிகத்தில் பாடினோர் பெயர், செய்யுட்களின் பெயர், புலவர் பெற்ற பரிசில், அரசர் ஆண்ட கால அளவு, வேந்தனின் பெற்றோர், வேந்தனின் சிறப்புகள் ஆகியன குறிப்பிடப்பெற்றுள்ளன. பாடலின் சிறப்பான தொடரே அப்பாடலின் தலைப்பாக வைக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் முதலிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. 18 துறைகள் இத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளன. பயன்பாட்டில் இல்லாத சொற்கள் பல இத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளமையால் இத்தொகுப்புநூலினை “இரும்புக்கடலை“ என்பர்.

புலவர் குமட்டூர்க்கண்ணனார் 58ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பற்றிப் பாடிய பாடல் இரண்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் உம்பற்காட்டில் 500 ஊர்களை பிரமதேயமாகவும் தென்னாட்டு வருவாயுள் பாதியினைச் சில ஆண்டுகளுக்கும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

புலவர் பாலைக்கௌதமனார் 25ஆண்டுகள் ஆட்சிபுரிந்த பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பற்றிப் பாடிய பாடல் மூன்றாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் பெற்ற பரிசில் குறிப்பிடத்தக்கது. அவர் விரும்பிய வண்ணம் பத்துப் பெரு வேள்விகள் செய்து அவரும் அவரின் மனைவியும் விண்ணுலகம் அடைய வேந்தர் உதவியுள்ளார்.

புலவர் காப்பியாற்றுக்காப்பியனார் 25ஆண்டுகள் ஆட்சிபுரிந்த களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைப் பற்றிப் பாடிய பாடல் நான்காம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் 40,00,000 பொன்னும் ஆளுவதில் பாதியையும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

புலவர் பரணர் 55ஆண்டுகள் ஆட்சிபுரிந்த கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பற்றிப் பாடிய பாடல் ஐந்தாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் உம்பற்காட்டு வருவாயையும் வேந்தரின் மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

புலவர் காக்கைப்பாடினியார் 88ஆண்டுகள் ஆட்சிபுரிந்த ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பற்றிப் பாடிய பாடல் ஆறாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் ஒன்பது துலாம் (காய்ப்) பொன்னும் 1,00,000 பொற்காசுகளும் “அவைக்களப் புலவர்“ என்ற தகுதியையும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

புலவர் கபிலர் 22ஆண்டுகள் ஆட்சிபுரிந்த செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பற்றிப் பாடியபாடல் ஏழாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் 1,00,000 (காணம்) பொற்காசுகளும் “நன்றா“ என்ற குன்றின் மீதேறி அவரின் கண்களுக்கு எட்டிய எல்லைவரையிலுள்ள நிலங்களையும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

புலவர் அரிசில் கிழார் 17ஆண்டுகள் ஆட்சிபுரிந்த தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் பற்றிப் பாடிய பாடல் எட்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் 9,00,000 (காணம்) பொன்னும் அரசுக் கட்டிலும் பெற்றார்.

புலவர் பெருங்குன்றூர்க் கிழார் 16ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இளஞ்சேரல் இரும்பொறையைப் பற்றிப் பாடிய பாடல் ஒன்பதாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் 32,000 பொற்காசுகளும் பல நூறாயிரம் அருங்கலன்களும் ஊரும் மனையும் ஏரும் பிறவும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

செல்வக்கடுங்கோ வாழியாதன் வேள்விகள் பல செய்ய புரோசுகளுக்கு (புரோகிதர்கள்) மிகுதியான பொருட்களை வழங்கியுள்ளார். வேள்வியில் ஆகுதியாக்குவதற்குச் சிறந்த நெல்லான ஓத்திரநெல் ஓகந்தூரில் மிகுதியாக விளைந்துள்ளது. ஆதலால், அந்த ஊரினை தேவதானமாக புரோசுகளுக்கு இவ் வேந்தர் வழங்கியுள்ளார். தன்னைப் “புரோசு மயக்கி“ என்று பெருமையாக அழைத்துக்கொண்டார்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் துணங்கைக் கூத்தாடுவோரோடு தானும் சேர்ந்து அக் கூத்தினை ஆடி மகிழ்ந்துள்ளார்.

யாழ் போன்று இனிய இசையைத் தரவல்ல “இன்னரம்“ என்ற கருவியைப் பற்றிய குறிப்பு இத்தொகுப்பு நூலினுள் உள்ளது. ஆம்பற்குழல், கொம்பு, வலம்புரிச்சங்கு போன்ற இசைக்கருவிகள் சிறப்பித்துக் கூறுப்பெற்றுள்ளன.

இத்தொகுப்பு நூலில் போரில் விழுப்புண்ணடைந்து வருந்தும் வீரர்களை விறலியர்கள் யாழிசைத்து ஆறுதல் படுத்திய செய்தியைக் காணமுடிகின்றது.

சகுனம் பார்த்தலை “நிமித்தம்“ என்பர். இதனை நல்நிமித்தம், தீநிமித்தம் என்று இருவகைப்படுத்துவர். “நிமித்தம்“ என்பதனை இத்தொகுப்பு நூல் “உன்னம்“ என்று குறிப்பிட்டுள்ளது. இது ஒரு வகை மரம் என்றும் அதன் நிலையைக் குறித்து நிமித்தம் கணிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

பேய்கள் தாம் விரும்பிய உயிர்களின் மீது மேவும் என்றும் உரிய பலியினை அவற்றுக்குத் தந்தால் அவை அவ் உயிரை விட்டு நீங்கும் என்று நம்பினர்.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 12:25 am

பரிபாடல்

அகத்திணையும் புறத்திணையும் கலந்து, பரிபாட்டு என்ற பாவகையில் 32 அடிகள் முதல் 140 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 70 பாடல்களின் தொகுப்பு நூல் பரிபாடல். ஆனால், 22 பாடல்களே கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றைப் பாடியுள்ள புலவர்களின் எண்ணிக்கை 13. மதுரை மாநகரை ஒட்டி ஓடும் வைகையாற்றில் புதுவெள்ளம் வந்தபோது மக்கள் அடைந்த மகிழ்ச்சியும் அவர்களின் செயல்பாடுகளும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. மதுரை, வையைஆறு, திருப்பரங்குன்றம், அழகர்கோவில், காளி ஆகியன சிறப்பிக்கப்பெற்றுள்ளன. பாலையாழ், நோதிறம், காந்தாரம் ஆகிய மூப்பண்களைக் கொண்டு பாடல்கள் புனையப்பட்டுள்ளன.

இந்நூலுள் மருத நிலத்திற்குரிய தெய்வமாக மதுரை மாதெய்வமும் நெய்தலுக்குரிய தெய்வமாக வைகையாகிய நீர்த்தெய்வமும் உள்ளீடாகக் குறிக்கப்பெற்றுள்ளன என்பர்.

சுழியத்தை (பூசியம்) “பாழ்“ என்றும் அரையைப் “பாகு“ என்றும் ஒன்பதைத் “தொண்டு“ என்றும் இந்நூல் குறிப்பிட்டுள்ளது.

சாக்தம் (காடுகாள்), கௌமாரம் (செவ்வேள்), வைணவம் ஆகிய மூன்று சமயங்கள் பற்றி இந்நூல் பகர்ந்துள்ளது.

புலவரின் கற்பனைத் திறத்திற்கு ஒரு பெருஞ்சான்று – “விரும்பத்தகுந்த ஈரமான அணிகளைக் கொண்ட உடலினது ஈரமானது தீரும்பொருட்டு, ஒருத்தி வண்டு மொய்க்கும் போதை கொண்ட கள்ளைத்தன் கையில் ஏந்தி நின்றாள். அவ்வேளையில் அவள் கண்கள் கரிய நெய்தல் மலரைப் போலத் தோன்றின. அவள் பெருமகிழ்ச்சியை உண்டாக்கும் போதை மிகக் கள்ளைக் குடித்தாள். குடித்ததும் அவளுடைய கருநிறக் கண்கள், பெரிய நறவம் பூவைப் போலச் செந்நிறத்தை அடைந்தன“. இக் கற்பனைசார்ந்த வருணனை பரிபாடலின் 60 முதல் 65 வரையிலான அடிகளில் உள்ளன.

பழந்தமிழகத்தில் இருந்த தைநீராடல் வழக்கம், காலப்போக்கில் மார்கழி நீராடலாக மாற்றம் பெற்றதோடு, பனிநீர் தோய்தலும் பாவையாடலுமாகத் திகழ்ந்த இளம் பெண்களின் விளையாட்டு, காலப்போக்கில் வழிபாடும் பாவைநோன்புமாக வளர்ந்துவிட்டது. பாகவதத்தில் கார்த்தியாயினி விரதம் நோற்று கண்ணனை அடையும் நெறி மார்கழி மாதத்தில் நிகழ்கின்றது. இக்குறிப்பு, பழந்தமிழகத்தின் பாவை நோன்புடன் உறவுடையது. பரிபாடலில், “அம்பா ஆடல்“ என்று கூறப்பெறுவதுதான் கேரளத்தில் திருவாதிரைத் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 12:25 am

கலித்தொகை

அகத்திணை சார்ந்து கலிப்பாவில் 11 அடிகள் முதல் 80 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 149 பாடல்களின் தொகுப்பு நூல் கலித்தொகை. இதிலுள்ள பாடல்களைத் திணைக்கு ஒரு புலவராக பாலை பாடிய பெருங்கடுங்கோ (பாலை), கபிலர் (குறிஞ்சி), மருதன் இளநாகனார் (மருதம்), சோழன் நல்லுருத்திரன் (முல்லை), நல்லந்துவனார் (நெய்தல்) ஆகிய ஐந்து புலவர்களும் ஐந்து திணைகள் சார்ந்த பாடல்களை இயற்றியுள்ளனர். இப்பாடல்களைத் திரட்டித் தொகுத்தவர் நல்லந்துவனார் ஆவார். இத்தொகுப்பு நூலினை “நல்லந்துவனார் கலித்தொகை“ என்றும் குறிப்பிடுவர். இந்நூலுள் 641 உவமைகள் உள்ளன.

இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஓரங்க நாடக அமைப்பினைப் பெற்றுள்ளன. கைக்கிளையும் பெருந்திணையும் இந்நூலுள் காணப்படுகின்றன. குறிஞ்சிக்கலியில் ஒத்தாழிசைக்கலியும் கொச்சகக்கலியும் பெருமளிவில் இடம்பெற்றுள்ளன. முல்லைக்கலியில் ஏறுதழுவுதல், குரவையாடுதல் போன்றன பற்றிய செய்திகள் சுட்டப்பெற்றுள்ளன. நெய்தற்கலியில் தைநீராடுதல், மடலேறுதல் போன்றன பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. “பெண்கள் பிறந்தவீட்டிற்கு உரியவர்கள் அல்லர்“ என்ற சிந்தனையை இத்தொகுப்பு நூல் வலியுறுத்தியுள்ளது.

கலித்தொகையில் குறிஞ்சிக்கலியில் அன்னாய் வாழிப் பத்து என்ற தலைப்பில் உள்ள ஒரு பாடலில் புலவர் கபிலர் ஓர் உளவியல் நிபுணர்போலச் செயல்பட்டுள்ளார். தலைவனால் தலைவிக்கு ஏற்பட்ட காதல்நோயினைத் தலைவியின் தாய் ஏதோ அணங்கு பற்றியதாகக் கருதி, அதனை நீக்க வெறியாடல் நிகழ்த்த ஏற்பாடுசெய்கின்றாள். அன்னையின் அச்செயலினைத் தடுத்த தலைவியின் தோழி, “அன்னையே! நான் சொல்வதைக் கேட்பாயாக. நின் மகள் அடைந்துள்ள இந்நோய் தீர்வதற்குரிய மற்றொரு முறையும் உள்ளது. அது யாதெனில்? நின் மகளை நமது வீட்டுப் புழக்கடையில் உள்ள, விலங்குகளைப் பலியிடுவதால் புலால் நாற்றம் தாங்கிய துறு கல்லின் மீது ஏற்றி நிறுத்தி, அவர் நாட்டில் உள்ள பூக்கள் பொருந்திய குன்றத்தை நோக்கி, நீலமணி போல் விளங்கும் இழையை அணிந்த இவள் நிற்கும் நிலைபெறின் இவள் உற்ற நோய் எளிதி்ல் தீரும். வெறியாடற் செயலினும் இச்செயல் சிறந்தது“ என்று கூறுகின்றாள். தலைவியின் மன அழுத்தத்தினைப் போக்கத் தலைவன் வாழும் இடத்தின் காட்சி ஒரு மருந்தாகப் பயன்படுவதனைக் கபிலர் உளவியல் நோக்குடன் இப்பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூல் எட்டு அறக்கருத்துகளை எடுத்துரைத்துள்ளது. அவை செல்வம் நிலையாமை, வறியவரது இளமை சிறக்காது, ஈகையற்றவரின் செல்வம் அவரை அண்டியோர்க்குப் பயன்படாது, பிறருக்குத் தீங்கு செய்வோர் தாமே ஒழிவர், இளமையும் காலமும் தாமே கழியும் தன்மையுடையன, அறவழியில் பொருளீட்டினால் அச்செல்வம் இவ் உலக வாழ்விற்கும் மறு உலக வாழ்விற்கும் பயன்படும், நிலையாமையை உணர்ந்தவர் ஈகைபுரிவர், மனித உடல் பெறுவதற்கு அரியது என்பனவாகும்.

கலித்தொகைப் பாடல்கள் யாப்பால் இயற்றமிழ், வழங்கொலியால் இசைத்தமிழ், பா அமைப்பால் நாடகத்தமிழ் என்று முத்தமிழையும் கலித்தொகையில் கண்ணுறமுடிகின்றது.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 12:25 am

அகநானூறு

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் 13 அடிகள் முதல் 31 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 400 பாடல்களின் தொகுப்பு நூல் அகநானூறு. இதிலுள்ள பாடல்களை 158 புலவர்கள் இயற்றியுள்ளனர். மூன்று பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. அகநானூற்றுப் பாடல்களைத் திரட்டித் தொகுத்தவர் உருத்திரன் சன்மனார் ஆவார். இப்பாடல்களைத் திரட்டித் தொகுக்கச் செய்த வேந்தர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி ஆவார். இத்தொகுப்பு நூலுக்கு நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு, அகப்பாட்டு என்ற பெயர்களும் உண்டு. இத்தொகுப்பு நூலில் உள்ள பாடல்கள் களிற்றியானைநிரை (1-120), மணிமிடை பவளம் (121-300), நித்திலக்கோவை (301-400) என்ற மூப்பிரிவினை உடையன. பாலைத்திணைப் பாடல்கள் 1,3,5,7,9 என ஒற்றைப்படை எண்வரிசையிலும் குறிஞ்சித்திணைப் பாடல்கள் 2,8,12,18 என்ற எண்வரிசையிலும் முல்லைத்திணைப் பாடல்கள் 4,14,24,34 என்ற எண்வரிசையிலும் மருதத்திணைப் பாடல்கள் 6,16,26,36 என்ற எண்வரிசையிலும் நெய்தற்திணைப் பாடல்கள் 10,20,30,40 என்ற எண்வரிசையிலும் வைக்கப்பெற்றுள்ளன.

இத்தொகுப்பு நூலுள் அஃதை, அகுதை, அதியமான் நெடுமான் அஞ்சி, அத்தி, ஆதிமந்தி, உதியஞ் சேரலாதன், அவ்வி, எழினி, கரிகால் வளவன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகியோர் குறிப்பிடப்பெற்றுள்ளனர்.

சங்க இலக்கியங்களிலேயே அகநானூற்றில்தான் “முதலிரவு“ நிகழ்வு இலக்கிய நயத்துடன் காட்டப்பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் ஒரு கோட்டோவியமாகவே இது இடம்பெற்றுள்ளது. அகநானூற்றில், திருமணம் முடிந்தபின் புதுமண மக்கள் தனித்து விடப்படுகின்றனர். தலைவி நாண மிகுதியால் முகம் புதைத்து நிற்கின்றாள். தலைவன் விருப்பமுடன் அவள் முகத்தை மூடிய கைகளை விலக்கிவிடத் தொடுகின்றான். தலைவனின் முதல் தீண்டலில் தலைவியின் நாணம் அச்சமாக மாறிப் பெருமூச்சாக மிகுந்துவிடுகின்றது. தலைவியின் மெல்லிய உணர்வுகளைப் புரிந்து கொண்ட தலைவன், அவளின் அச்ச உணர்வினைப் போக்கும்விதமாக, “நின் மனத்தில் நினைப்பதை அஞ்சாமல் கூறு“ என்று தணிந்த குரலில் இனிமையாகப் பேசுகின்றான். தலைவனின் மென்மையான சிரிப்பும் அருகில் அமர வைத்து, பேசத்தூண்டியதுமான அணுகுமுறையும் தலைவின் அச்சத்தை நீக்குகின்றன. தலைவியின் மனத்தில் தோன்றிய மகிழ்ச்சி அவளின் முகத்தில் வெளிப்படுகின்றது என்ற செய்தி நயத்துடன் கூறப்பெற்றுள்ளது.

குடவேலைத் தேர்தல் முறை, ஆடுமகள் (நடனப்பெண்) பாவைபோல வெறியாடும் நிலை போன்றன இத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளன.

பொ.யு.மு. 326 ஆம் ஆண்டுல் நடைபெற்ற அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு அஞ்சிய வடநாட்டைச் சார்ந்த நந்தர்கள் தங்களின் செல்வங்களைக் கங்கை நதிக்கு அடியில் மறைத்து வைத்த செய்தியையும் பொ.யு.மு. 310 ஆம் ஆண்டு நடைபெற்ற சந்திரகுப்த மோரியரின் மாமன் பிந்துசாரனின் தென்னகப் படையெடுப்புக்கு வடுகர் உதவினர் என்ற செய்தியையும் இத்தொகுப்பு நூலின் வழியாக அறியமுடிகின்றது.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 12:26 am

புறநானூறு

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் நான்கு அடிகள் முதல் 40 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 399 பாடல்களின் தொகுப்பு நூல் புறநானூறு. இதிலுள்ள பாடல்களை 157 புலவர்கள் இயற்றியுள்ளனர். 14 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடல் எழுந்த சூழல் போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன.

பாண்டிய வேந்தர்கள் 12பேர், சேர வேந்தர்கள் 18பேர், சோழ வேந்தர்கள் 13பேர் வேளிர்கள் 18பேர் பற்றியும் அவர்களின் வீர, தீர, ஈர உணர்வுகளையும் இத்தொகுப்பு நூல் விரித்துக்கூறியுள்ளது. அதியமான் நெடுமான் அஞ்சி, ஆய் அண்டிரன், ஓய்மான் நல்லியக்கோடன், சோழன் கரிகாற் பெருளத்தான், குமணன், கோப்பெருஞ்சோழன் ஆகியோருக்கும் அவர்களைச் சார்ந்த புலவர்களுக்கும் இருந்த உறவுநிலையினை விரிவாகக் கூறியுள்ளது.

அருவிக்குத் துகில் (துணி), அருளுக்கு நீர், கந்தைத்துணிக்குப் பாசியின் வேர், கள்ளின் மயக்கத்திற்கு தேளின் கடுப்பு, கலிங்க ஆடைக்குப் பாம்பின் தோல், குதிரையின் வேகத்திற்குக் காற்றின் வேகம், நரைத்த கூந்தலுக்குக் கொக்கின் இறகு, பொறுமைக்கு நிலம் ஆகியன உவமையாக இத்தொகுப்பு நூலில் கூறப்பெற்றுள்ளன. 10 வகையான ஆடைகள், 28 வகையான அணிகலன்கள், 30 வகையான படைக்கருவிகள், 67 வகையான உணவுகள் முதலியன சுட்டப்பெற்றுள்ளன.

தனிமனிதனின் உரிமைகளும் கடமைகளும் சமூக இணைப்பும் பழக்கவழக்கங்களும் விருப்பு வெறுப்புகளும் ஆகிய இயல்புகள் எல்லாம் அறக்கோட்பாட்டால் கட்டுப்படுத்தப்பட்டன. இவ் அறக்கோட்பாட்டினை உருவாக்குவதும் வழிநடத்துவதும் சமூகத்தின் பொருளாதார உறவு முறைகளே. பொருளாதார வளர்ச்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்போர் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கச் சமூகத்தின் கருத்துகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பொருளாதார வளர்ச்சியால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை நெறிப்படுத்துவதே அறத்தன் முதன்மைநோக்கம். அறத்தின் இயல்பு, சிறப்பு, ஆற்றல் பற்றிப் புறநானூற்றில் ஏறத்தாழ 35 பாடல்கள் எடுத்துரைத்துள்ளன. நிலையாமை பற்றி ஏறத்தாழ 40 பாடல்கள் வலியுறுத்தியுள்ளன.66 “மறவாழ்வில் அறநெறி முதன்மையானது“ என்பதனை மீண்டும் மீண்டும் கூறுகின்றன. “சங்க இலக்கியங்களுக்கு முன்னர் தமிழ் மக்களிடையே தோன்றி வளர்ந்த அறநூல்கள் பல இருந்து, அவை பற்றி அறிவதற்குப் போதிய சான்றுகள் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், ஆலத்தூர் கிழார் காலத்த்திலும் திருவள்ளுவரின் காலத்திலும் அவை இருந்துள்ளன. அக்கால அரசர்கள் அறங்கூறவையங்களில் அவற்றைப் பேணிக்காத்தனர். அவையே அறங்கூறுவோர்க்கும் பிறர்க்கும் வழிகாட்டியாக இருந்துள்ளன“67 என்ற சிந்தனையைச் சொ. இலக்குமணசாமி முன்வைத்துள்ளார். “அறம்“ என்ற சொல் புறநானூற்றில் ஆட்சி, நீதி, கொடை, மக்கள் நலம் ஆகியவற்றைக் குறிப்புணர்த்தும் சொல்லாகவே புறநானூற்றில் கையாளப்பெற்றுள்ளது.

கணவரை இழந்த கைம்மைப் பெண்கள் தங்களின் பொருளாதாரத்திற்கு பருத்தி நூல்நூற்றல் தொழிலினைச் செய்கின்றனர் என்ற செய்தியினை இத்தொகுப்பு நூல் சுட்டியுள்ளது. அத்தகைய பெண்களைப் “பருத்திப்பெண்டிர்“ என்று சுட்டியுள்ளது.

இத்தொகுப்பு நூல் வெண்ணிப்பறந்தலை, வாகைப் பறந்தலை, கழுமலம், தகடூர், தலையாலங்கானம், காணப்பேரெயில் போன்ற போர்க்களங்களின் விரிவான வரலாற்றை எடுத்துக்கூறியுள்ளது.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 12:26 am

பத்துப்பாட்டு

பத்து நெடிய தனிப்பாடல்களின் தொகுப்புதான் பத்துப்பாட்டு. ஒரு பாடல் ஒரு தனிநூல். இந்தப் பத்துப் பாடல்களும் ஆசிரியப்பாவினால் பாடப்பட்டுள்ளன. எல்லாம் பாடாண்திணையில் அமைந்தவை. எட்டுப் புலவர்கள் ஆறு தலைவர்களைப் பற்றிப் பாடப்பட்ட பத்துப் பாடல்களின் தொகுப்பினைத்தான் “பத்துப்பாட்டு“ என்கிறோம். இதில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படையைச் சார்ந்தவை. ஆற்றுப்படை என்றால் “வழிப்படுத்துதல்“ என்று பொருள். ஆற்றுப்படை நூல்கள் ஒருவகையில் பயணக்குறிப்பு இலக்கியங்கள்.

திருமுருகாற்றுப்படை

புலவர் நக்கீரர், செவ்வேளாகிய முருகப்பெருமானைத் தலைவராகக்கொண்டு ஆற்றுப்படை இலக்கணத்தில் 317 அடிகளில் புறத்திணையில் பாடிய பாடல்தான் திருமுருகாற்றுப்படை. இந்நூல் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது.

இந்நூலுக்குப் “புலவராற்றுப்படை“ என்றும் “முருகு“ என்றும் வேறுபெயர்கள் உண்டு. துன்பப்படுவோரை முருகனிடம் செல்லுமாறு கூறி (ஆற்றுப்படுத்தி – வழிகாட்டி) அவர்கள் தம் துயரிலிருந்து விடுபட நக்கீரர் உதவியுள்ளார். இந்நூலின் நோக்கமும் இதுதான். முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவி நன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என ஆறுபடைவீடுகள் உண்டு. அவற்றைச் சென்றடைந்து முருகப்பெருமான வழிபட நக்கீரர் வழிகாட்டியுள்ளார். ஒரு படைவீட்டிற்கு ஒரு பகுதியென இந்நூல் ஆறு பகுதிகளை உடையது.

இந்நூலுள் திருமால், பரமசிவன், இந்திரன், பிரம்மன் முதலிய தெய்வங்கள் பற்றிய குறி்ப்புகளும் உண்டு. முருகனைக் காட்டிலும் சோலைகளிலும் ஆற்றிலும் குளக்கரையிலும் கடம்பமரத்திலும் முச்சந்தியிலும் நாற்சந்தியிலும் ஐஞ்சந்தியிலும் அம்பலத்திலும் மரத்தடியிலும் மரக்கட்டையிலும் உறைந்திருப்பதாகக் கருதி வழிபட்டனர் என்பதனை இப்பாடலின் வழியாக அறியமுடிகின்றது. முருகப்பெருமானை ஆறு முகங்களையும் 12 கரங்களையும் உடைய உருவமாகக் கற்பனைசெய்து வழிபட்டனர். சிறிய தினை அரிசியை மலரோடு கலந்து வைத்தும் ஆடறுத்தும் கோழிக் கொடியோடு முருகனை வரிசையாக நிறுத்தியும் ஊர்கள் தோறும் முருகனுக்குச் சிறந்த விழாக்களை நடத்தினர். பலிப் பொருட்களைப் பிரப்பங்கூடைகளில் வைத்து முருகனைத் தொழுதனர். இந்நூலுள் மாபுராணம், பூத புராணம், கந்தபுராணம் போன்றவற்றின் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 12:27 am

பொருநராற்றுப்படை

புலவர் முடத்தாமக் கண்ணியார், கரிகாற்பெருவளத்தானைத் தலைவராகக்கொண்டு ஆற்றுப்படை இலக்கணத்தில் 248 அடிகளில் புறத்திணையில் பாடிய பாடல்தான் பொருநராற்றுப்படை. இந்நூல் வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டுள்ளது.

வேடம் புனைந்து பாடுவோரைப் (பாடுநர்) “பொருநர்“ என்பர். வேளாண்மையைப் பற்றிப் பாடும் ஏர்க்களம் பாடுநர், போர்க்களத்தில் நின்று அது பற்றி வர்ணித்துப்பாடும் போர்க்களம் பாடுநர், போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற மன்னரின் வெற்றியைப் பாடும் பரணி பாடுநர் எனப் பொருநரில் மூன்று வகையினர் உண்டு. இந்நூலில் குறிப்பிடப்படும் பொருநர் போர்க்களம் பாடுநராவர்.

கரிகாற்பெருவளத்தானிடம் பரிசில் பெற்றுத் திரும்பிய ஒரு பொருநர் தன்னை எதிர்ப்படும் வறிய பொருநரிடம், “கரிகாற்பெருவளத்தானின் பெருமைகளைக் கூறி, அவனிடம் சென்று நீயும் பரிசில் பெற்று வளம்பெருக“ என்று வழிகாட்டும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

பொருநரின் மனைவியர் யாழ்வாசிப்பதிலும் இன்னிசை பாடுவதிலும் வல்லவர்களாக இருந்தனர். ஆதலால், அவர்களைப் “பாடினி“ என்றனர். அந்தப் பாடினியின் உருவ அழகினைப் பொருநராற்றுப்படை நுட்பமாக வர்ணித்துள்ளது. ஆற்றுமணல் போன்ற கூந்தல், எட்டாம் பிறைபோன்ற நெற்றி, வில் போன்ற புருவங்கள், மழைபோன்ற கண்கள், இலவம் பூப்போன்ற வாய், முததுப்போன்ற பற்கள், மகரக் குழைகள் ஆடுபவை போன்ற காதுகள், வெட்கத்தால் கவிழ்ந்திருக்கும் கழுத்து, மூங்கில் போன்ற தோள்கள், மெல்லிய மயிர் நிறைந்த முன் கைகள், காந்தள் போன்ற மெல்லிய விரல்கள், கிளியின் வாய் போன்ற நகங்கள், பிறருக்கு வருத்தம் விளைவிக்கும் மார்புகள், நீர்ச்சுழி போன்ற கொப்பூழ், உண்டென்று உணரப் படாத நுண்ணிடை, மேகலை அணியப்பெற்ற அல்குல், யானையின் துதிக்கை போன்ற தொடைகள், மயி்ர் ஒழுங்குபட்ட கணைக்கால், ஓடி இளைத்த நாயின் நாக்கு போன்ற சிவந்த பாதங்கள் என அவளது தலை முதல் பாதம் வரையுள்ள 19 உறுப்புகளையும் புலவர் வர்ணித்துள்ளார்.

யாழினிசை, “தீயோரின் குணத்தை மாற்றி, அவர்களை நல்லோராக மாற்றவல்லது“ என்று இந்நூல் தெரிவித்துள்ளது.

அக்காலக்கட்டத்தில் மக்களிடையே இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வினை இருவேறு வர்ணனைகளின் வழியாக இந்நூல் தெரிவித்துள்ளது. செல்வ வளமுடையவர்கள் கண்ணால் காணமுடியாத அளவு மெல்லிய நூலால் நெய்யப்பெற்ற, அழகான பூவேலைப்பாடுகள் செய்யப்பெற்ற, பாம்பின் தோலைப் போல மென்மையும் வழவழப்பும் பளபளப்பும் உடைய மெல்லி துணியினை அணிந்தனர். கொட்டைக் கரை போட்ட பட்டாடையை அணிந்தனர். வறுமையில் வாடுவோர் ஈரும் பேனும் கூடிக் குடியிருந்து அரசாட்சி செய்யக்கூடிய, வேர்வையால் நனைந்து நாற்றமடிக்கக்கூடிய, வேறு நூல்கள் நுழைந்திருக்கின்ற தையல் போடப்பெற்ற, கிழிந்த கந்தையினை அணிந்திருந்தனர்.

அக்காலத் தமிழர்கள் தாம் உணவு உண்பதற்கு முன்னர் காக்கைக்கு உணவிடும் வழக்கத்தினை இந்நூலின் 181 முதல் 184 வரையிலுள்ள அடிகள் குறிப்பிட்டுள்ளன. “உயர மற்ற தென்னை மரங்கள் நிறைந்திருக்கின்ற குளிர்ந்த சோலை. அந்தத் தென்னந்தோப்பின் வாசலில் நெற்குதிர் நிற்கின்ற குடிசை. அக் குடிசையில் குடியிருப்போர் இரத்தங்கலந்த சோற்றைக் காக்கைக்குப் பலியாகக் கொடுத்தனர். அந்தப் பலியைக் கருங்காக்கைகள் உண்டன“ என்ற செய்தி அவ் அடிகளில் உள்ளன.

அக் காலத்தில் வழக்கிலிருந்த பண்டமாற்றுமுறை பற்றியும் இந் நூலில் அறியமுடிகின்றது. தேனையும் நெய்யையும் கிழங்கையும் கரும்பினையும் அவலினையும் கொடுத்து, மீனையும் நெய்யையும் மதுவையும் மானிறைச்சியையும் கள்ளையும் பெற்றுச் சென்றுள்ளனர்.

விருந்தினரைப் பேணிப் பின்னர் அவர்களை வழியனுப்பும்போது அவர்களுடன் ஏழடி நடந்துசென்று வழியனுப்பும் பண்பாடு அக்காலத்தில் இருந்துள்ளமையை இந் நூல் குறிப்பிட்டுள்ளது.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக