புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
31 Posts - 36%
prajai
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Jenila
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
7 Posts - 5%
prajai
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_m10கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கியின் சிவகாமியின் சபதம்


   
   

Page 2 of 17 Previous  1, 2, 3 ... 9 ... 17  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 10:36 pm

First topic message reminder :

ஆசிரியரின் உரை


நீல வானத்திலிந்து பூரண சந்திரன் அமுதக் கிரணங்களைப்
பொழிந்து கொண்டிருந்தான். பூவுலகம் மோகன நிலவிலே மூழ்கி அமைதி குடிகொண்டு
விளங்கியது. எதிரே எல்லையின்றிப் பரந்து கிடந்த வங்காளக் குடாக் கடலில்
சந்திரக் கிரணங்கள் இந்திர ஜாலவித்தை செய்து கொண்டிருந்தன. கரையோரத்தில்
சின்னஞ்சிறு அலைகள் அதிக ஓசை செய்து அமைதியைக் குலைக்க விரும்பாதவை போல்
இலேசான சப்தத்துடன் எழுந்து விழுந்து கொண்டிருந்தன.

கடல் ஓரத்து வெண் மணலில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். ரஸிகமணி ஸ்ரீ. டி.
கே. சிதம்பரநாத முதலியார் அவர்களும் இன்னும் இரு நண்பர்களும் நானும்
இருந்தோம். வேறு மனிதர்களோ பிராணிகளோ கண்ணுக்கெட்டிய தூரம் காணப்படவில்லை.

மாமல்லபுரத்துக் கடற்கரை. பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னால் நடந்த
சம்பவம். ரஸிகமணி அவர்கள் வழக்கம்போல் கவிதையைப் பற்றிப் பேசிக்
கொண்டிருந்தார்.

'விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு! - முன்பு
விட்டகுறை வந்து தொட்டாச்சு!'

என்ற ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடல் வரிகளை அழுத்தந்திருத்தமாக எடுத்துரைத்தார்.

'முன்பு - விட்டகுறை வந்து தொட்டாச்சு!' என்னும் வரி ஒரு சக்தி வாய்ந்த
மந்திரத்தைப்போல் என்னை மதிமயங்கச் செய்தது. அந்தக் கடற்கரை மணலில் அதே
மாதிரி வெண்ணிலவில் இதற்கு முன் எத்தனையோ தடவை நான் உட்கார்ந்திருந்ததாகத்
தோன்றியது. முந்தைய பிறவிகளில் விட்ட குறைதான் இங்கே என்னைக் கொண்டு வந்து
சேர்த்து இன்று இந்தக் கடற்கரை ஓரத்திலே உட்காரச் செய்திருக்கிறது என்றும்
தோன்றியது.

கடலிலே ஆயிரமாயிரம் படகுகளும் கப்பல்களும் திடீரென்று காட்சி அளித்தன.
கரையிலே கூட்டங் கூட்டமாக ஆடவரும் பெண்டிரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
சற்றுத் தூரத்தில் உச்சியில் ரிஷபக் கொடிகளும் சிங்கக் கொடிகளும்
உல்லாசமாகப் பறந்தன. இனிமை ததும்பிய இசைக் கருவிகளிலிருந்து எழுந்த
சங்கீதம் நாற்புறமும் சூழ்ந்து போதையை உண்டாக்கிற்று. கண்ணுக்குத் தெரிந்த
பாறைகளில் எல்லாம் சிற்பிகள் கையில் கல்லுளியை வைத்துக் கொண்டு வேலை
செய்தார்கள். எங்கேயோ யாரோ காலில் கட்டிய சதங்கை ஒலிக்க நடனமாடிக்
கொண்டிருப்பதை உணர முடிந்தது.

சிறிது நேரத்துகெல்லாம் அந்த அகக் காட்சிகள் தெளிவடைந்தன. உருவங்களும் முகங்களும் இனந்திரியுமாறு எதிரே தோன்றின.

ஆயனரும் சிவகாமியும் மகேந்திர பல்லவரும் மாமல்லரும் பார்த்திபனும்
விக்கிரமனும் அருள்மொழியும் குந்தவியும் பொன்னனும் வள்ளியும் கண்ணனும்
கமலியும் புலிகேசியும் நாகநந்தியும் என்னுடைய மனக்கண் முன்னால் பவனி
வந்தார்கள். அப்படிப் பவனி வந்தவர்கள் என் உள்ளத்திலேயே
குடிபுகுந்துவிட்டார்கள்.

இரண்டு தினங்கள் மாமல்லபுரத்தில் தங்கியிருந்தோம். அற்புத சிற்பங்களைத்
தாங்கிய கற்பாறைகளைப் பார்த்தோம். குன்றில் குடைந்தெடுத்த கோயில்களையும்
விமானங்களையும் பார்த்தோம். ஒவ்வொரு கல்லும் ஒரு கதை சொல்லிற்று. ஒவ்வொரு
சிற்பமும் ஓர் இதிகாசத்தை எடுத்துரைத்தது. பார்க்கப் பார்க்க வியப்பு
மிகுந்தது; கேட்கக் கேட்கப் பரவசமாயிற்று. கையிலே பிடித்த கல்லுளிகளையே
மந்திரக் கோல்களாகக் கொண்டு எந்த மகா சிற்பிகள் இத்தகைய மகேந்திர
ஜாலங்களைச் செய்தார்களோ என்று நினைத்தபோது அவர்களைக் கையெடுத்துக்
கும்பிடத் தோன்றியது. அந்தச் சிற்பிகளிடம் தோன்றிய பக்தியினால் தலை
தானாகவே வணங்கிற்று.

'சிவகாமியின் சபதம்' என்னும் பெயர் தாங்கிய இந்த நூலை ஏதேனும் ஒரு வழியிலே
பெற்றுக் கையில் ஏந்திக் கொண்டிருக்கும் அன்பர்கள் 'இது அபாரமான புத்தகம்'
என்று உடனே தீர்மானித்துவிடக்கூடும். ஆயிரத்துக்குமேல் பக்கங்கள் உள்ள
புத்தகம் அல்லவா? அதற்குத் தகுந்த கனமும் இருக்கத் தானே செய்யும்?

இவ்வளவு பாரத்தையும் ஏறக்குறைய பன்னிரண்டு வருஷகாலம் என் உள்ளத்தில்
தாங்கிக் கொண்டிருந்தேன். 'சிவகாமியின் சபத'த்தில் கடைசிப் பாகம், கடைசி
அத்தியாயம், கடைசி வரியை எழுதி 'முற்றும்' என்று கொட்டை எழுத்தில் போட்ட
பிறகுதான் பன்னிரண்டு ஆண்டுகளாக நான் சுமந்துகொண்டிருந்த பாரம் என்
அகத்திலிருந்து நீங்கியது.

மகேந்திரரும் மாமல்லரும் ஆயனரும் சிவகாமியும் பரஞ்சோதியும் பார்த்திபனும்
விக்கிரமனும் குந்தவியும் மற்றும் சில கதாபாத்திரங்களும் என்
நெஞ்சிலிருந்து கீழிறங்கி, 'போய் வருகிறோம்' என்று அருமையோடு சொல்லி
விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள்.

ஆகா! அந்தப் பழந்தமிழ்நாட்டுப் பிரமுகர்கள், பெயருக்கும் புகழுக்கும்
மிக்க ஆசை கொண்டவர்கள் போலும்! என்றென்றும் அழியாத கற்பாறையிலே அல்லவா
தங்களுடைய புகழை அவர்கள் எழுதி வைத்துவிட்டுச் சென்றார்கள்! வேண்டுமென்று
செய்தார்களோ, வேண்டாமலே செய்தார்களோ, நினைத்துச் செய்தார்களோ, நினையாமலே
செய்தார்களோ. அவர்கள் செய்து வைத்த காரியங்கள் நீடுழி காலம் அவர்களுடைய
நினைவை நிலைநாட்டுமாறு அமைந்திருக்கின்றன.

பல காலமாகப் பண்டைத் தமிழகத்தின் பெருமையைப் பற்றியும் பண்பாட்டின்
சிறப்பைப்பற்றியும் கேள்விப்பட்டுக் கொண்டிருந்தேன்; படித்துமிருந்தேன்.
ஆனாலும், கேட்டது படித்தது எதுவும் உள்ளத்தில் நன்கு பதியவில்லை!
நம்பிக்கையும் அவ்வளவாக உண்டாகவில்லை.

மகாபலிபுரம் என்று வழங்கும் மாமல்லபுரத்துக்குச் சென்று கண்ணால் நேரிலே
பார்த்த பிறகு நம்பிக்கை ஏற்பட்டது. ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு
முன்னால் நமது செந்தமிழ் நாட்டில் இவ்வளவு அற்புதமான சிற்பங்களைச் செய்த
மகா சிற்பிகள் இருந்தார்கள்! அவர்களை ஆதரித்துப் போஷித்து உற்சாகப்படுத்தி
அவர்களுடைய கலைத் திறனைப் பிரகாசிக்கச் செய்த மன்னர்களும் இருந்தார்கள்!

அப்படியென்றால், அந்தக் காலத்தில் தமிழகத்தின் பண்பாடும் சமூக
வாழ்க்கையும் எவ்வளவு மேம்பட்டிருக்கவேண்டும்? அத்தகைய மேம்பாட்டை ஒரு
சமூகம் அடைய வேண்டுமானால் அதற்கு எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னாலிருந்து
அச்சமூகத்திலே கலையும் கல்வியும் நல்லாட்சி நல்லொழுக்கம் வளர்ந்து
வந்திருக்க வேண்டும்? இதையெல்லாம் நினைக்க நினைக்க பண்டைத் தமிழ்நாட்டில்
வாழ்ந்த நம் மூதாதையர்களிடம் பக்தியும் மரியாதையும் பொங்கி வளர்ந்தன.

தமிழகத்தில் பழம் பெருமையைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையென்பது
மட்டுமல்ல, இதுவரை உண்மையை ஓரளவு குறைத்துச் சொல்லியே வந்திருக்கிறார்கள்
என்று தோன்றியது.

'கோயில்களும் கோபுரங்களும் குன்றைக் குடைந்தெடுத்த விமானங்களும் பாறைச்
சிற்பங்களும் அந்த நாளைய மன்னர்களின் கொடுங்கோன்மை மூலமாகத் தோன்றியவை',
என்று ஒரு சிலர் கூறியதையும் கேட்டிருந்தேன். அந்தக் கொள்கை முற்றிலும்
அபத்தமானது என்ற முடிவுக்கு வந்தேன். கொடுமையினாலும் பலாத்காரத்தினாலும்
வேறு பல வேலைகளைச் செய்வித்தல் சாத்தியமாயிருக்கலாம். ஆனால், இத்தகைய கலை
அற்புதங்கள் ஒரு நாளும் கொடுமையின் மூலம் உண்டாயிருக்க முடியாது.
கட்டாயப்படுத்தி நிலத்தை உழச் செய்யலாம். துணி நெய்யச் செய்யலாம். ஆனால்
அத்தகைய கட்டாய முறைகளினால் கலை வளர்ந்து விடாது. குழந்தையை அடித்து அழச்
செய்யலாம்; ஆனால் பாடச் செய்ய முடியாது. குழந்தையை அடிமேல் அடியடித்து
ஓடச் செய்யலாம்; ஆனால் ஆடச் செய்யமுடியாது.

மாமல்லபுரத்தில் உள்ளது போன்ற சொப்பன சிற்ப லோகத்தைப் பலவந்தத்தின் மூலமாகச் சிருஷ்டி செய்திருக்க முடியாது.

எனவே, எந்த வகையிலே சிந்தித்துப் பார்த்தாலும் பழந்தமிழ் மக்களிடம் என்னுடைய பக்தி பெருகி வளர்வதாயிற்று.

'பார்த்திபன் கனவு', 'சிவகாமியின் சபதம்' ஆகிய கதைகளை எழுதிவந்த காலத்தில்
இந்தக் காலத்துத் தமிழ் மக்கள் பழந்தமிழ் நாட்டின் பெருமையைத் தெரிந்து
கொள்வதில் எவ்வளவு ஆர்வங்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.

'கல்கி' பத்திரிகை தொடங்கிய புதிதில், சில நண்பர்கள் தொடர்கதை எழுதும்படி
கேட்டார்கள். 'ஆகட்டும்; தொடர்கதை எழுதத்தான் போகிறேன்!' என்று
சொல்லிவிட்டு, 'கல்கி'யின் மேனேஜரிடம் என்னுடைய உத்தேசத்தைச் சொன்னேன்.
'கூடவே கூடாது!' என்று சொன்னார் நண்பர் சதாசிவம். 'இப்போதே
காகிதத்துக்குத் திண்டாட்டமாயிருக்கிறது. தொடர்கதை எழுதினால் எப்படிச்
சமாளிப்பது?' என்றார். 'அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். காகிதத்
தேவையைக் குறைக்கக் கூடிய சக்திவாய்ந்த தொடர்கதை எழுதப் போகிறேன்!
தொடர்கதை ஆரம்பித்துச் சில இதழ்களிலேயே தெரிந்துவிடும்!' என்றேன். 'அது
என்ன அவ்வளவு அதிசயமான கதை' என்று கேட்டார். 'தமிழ்நாட்டுச் சரித்திரக்
கதை - 'பார்த்திபன் கனவு' என்று பெயர். தமிழ்நாட்டில் நம்மவர்கள்
இராஜபுத்திரர்களைப் பற்றியும் மொகலாயர்களைப் பற்றியும் சரித்திரக் கதை
எழுதினால் குதூகலத்துடன் படிப்பார்கள். தமிழ்நாட்டுச் சரித்திரம்
தமிழர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்காது. ஆகையால், இந்தத் தொடர் கதையினால்
உங்களுக்கு மிக்க சௌகரியம் ஏற்படும்?' என்றேன்.

நான் கூறியதை நம்பாமல் ஸ்ரீ சதாசிவம் தலையை அசைத்தார்.

அவர் சந்தேகப்பட்டது உறுதியாயிற்று. நான் எண்ணியபடி நடக்கவில்லை.
தமிழ்நாட்டுச் சரித்திரக் கதையில் தமிழ் மக்கள் எவ்வளவு ஆர்வம்
கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது.

'கல்கி' மானேஜர் மிகவும் கஷ்டப்பட்டுப் போனார். பம்பாய் எங்கே, கல்கத்தா
எங்கே, டில்லி எங்கே என்று நாலு திசையிலும் சென்று பத்திரிகைக்குக்
காகிதம் வாங்க வேண்டியதாயிற்று.

'பார்த்திபன் கனவு' முடிந்த பிறகு, மன நிம்மதி பெறலாம் என்று பார்த்தால்
அதற்கு ஆயனரும் சிவகாமியும் இடங் கொடுக்கவில்லை. மாமல்லபுரத்தில் முதன்
முதலில் என் மனக் கண் முன்னால் தோன்றியவர்கள் அவர்களேயாதலால் அவர்களை
அலட்சியம் செய்ய முடியவில்லை. எனவே, 'சிவகாமியின் சபதம்' ஆரம்பமாயிற்று.
ஆனால், இலேசில் முடிகிறதாக இல்லை! ஆகா! பேதை சிவகாமி எளிதில் சபதம் செய்து
விட்டாள். அதை நிறைவேற்றி வைப்பதற்கு மாமல்லர் ஒன்பது ஆண்டுகள்
பிரம்மப்பிரயத்தனம் செய்தார். அந்த வரலாற்றை எழுதி முடிப்பதற்கோ எனக்கு
இத்தனை காலம் ஆயிற்று.

வாரப் பத்திரிகையில் தொடர் கதை படிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம்
அல்ல. ஒரு வாரத்தில் வெளியான கதைப் பகுதிகளைப் படித்தபிறகு அடுத்த
பகுதிக்கு ஒரு வாரம் வரையில் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். பழைய
நிகழ்ச்சிகளையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கவேண்டும். இந்தத்
தொல்லைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் மேற்படி தொடர் கதைகளை வாராவாரம்
படித்து என்னை ஊக்கப்படுத்தி வந்த பதினாயிரக்கணக்கான தமிழ் அன்பர்களுக்கு
என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாசகர்களின் ஆர்வமும்
ஊக்கமுமே இந்த இரு கதைகளையும் எழுதி முடிப்பதற்கு உறுதுணையாயிருந்தன.

தொடர் கதை படிப்பதற்கு வேண்டிய பொறுமையிருக்கும் என்று எதிர்பார்க்க
முடியாத தமிழ்நாட்டுப் பிரமுகர்கள் சிலர் இந்தச் சரித்திரக் கதைகளைப்
படித்து வந்ததாக அறிந்து உற்சாகமடைந்தேன். அவர்களில் ஒருவர் தற்சமயம்
சென்னை மாகாணத்தின் உள்நாட்டு மந்திரி பதவி வகிக்கும் டாக்டர் ப.
சுப்பராயன் அவர்கள். தொடர்கதை வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் அவர்களைச்
சந்திக்க நேரும் போதெல்லாம் மற்ற விஷயங்களையெல்லாம் விட்டு விட்டு,
'சிவகாமியின் சபதம்' கதையில் சென்ற வாரத்தில் வந்திருக்கும்
நிகழ்ச்சிகளைப் பற்றியும், அடுத்த வாரத்தில் வரலாமென்று ஊகித்த
நிகழ்ச்சிகளைப் பற்றியும் டாக்டர் அவர்கள் பேசுவார்கள்.

அத்தகைய ஊக்கத்தைச் 'சிவகாமியின் சபதம்' முடியும் வரையில் இடைவிடாது
காட்டி வந்ததுடன், இந்த நாவலுக்கு ஓர் அழகிய முன்னுரையும் எழுதி
உதவியதற்காக டாக்டர் சுப்பராயன் அவர்களுக்குப் பெரிதும் கடமைப்
பட்டிருக்கிறேன்.

'சிவகாமியின் சபதம்' 'பார்த்திபன் கனவு' ஆகிய இரு நூல்களும் சரித்திரக்
கதைகள் என்று அடிக்கடி சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. டாக்டர் ப.
சுப்பராயன் அவர்களும் அவ்விதம் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே,
அதைப்பற்றிச் சில வார்த்தை சொல்ல வேண்டியதாயிற்று. அதாவது, மேற்படி
நூல்களில் சரித்திரம் எவ்வளவு என்று விளக்கி விடுவது அவசியமாயிற்று.

கதாபாத்திரங்களைப்பற்றி முதலில் சொல்ல விரும்புகிறேன். மகேந்திர பல்லவர்,
மாமல்ல நரசிம்மர் இருவரும் தமிழ்நாட்டின் சரித்திரத்தில் புகழ்பெற்ற
உண்மையான பாத்திரங்கள், மற்றும் தளபதி பரஞ்சோதியார், வாதாபி புலிகேசி,
இலங்கை மானவன்மன், நெடுமாற பாண்டியன், மங்கையர்கரசி, குலச்சிறையார்
ஆகியவர்கள் சரித்திர பூர்வமானவர்கள். அப்பரும், சம்பந்தரும் சரித்திரப்
பிரசித்தியானவர்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

மற்றபடி இந்த இரண்டு சரித்திரக் கதைகளிலுமே வருகிறவர்கள் அனைவரும் கனவிலோ, கற்பனையிலோ, கல் சொன்ன கதைகளிலோ உதயமான பாத்திரங்கள்.

மகேந்திர பல்லவர், மாமல்ல நரசிம்மர் இவருடைய குணாதிசயங்களைப் பற்றிச்
சரித்திரத்தில் பல குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. அந்தக்
குறிப்புகளுக்கு இணங்கக்கூடிய வகையில் இந்தக் கதைகளிலும் அவர்களுடைய
குணாதிசயங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.

மன்னர் மன்னர்களான அந்த இருவரும் சிறந்த கல்விமான்கள் என்றும், சித்திரம்,
சிற்பம், சங்கீதம் நடனம் ஆகிய கலைகளில் அளவில்லாத பற்று உடையவர்கள்
என்றும், மாறுவேடம் பூணுவதில் நிகரற்ற திறமையாளர்கள் என்றும், யுத்த
தந்திரங்களில் கைதேர்ந்தவர்கள் என்றும், போர்க்களத்தில் மகாவீரர்கள்
என்றும் நிர்ணயிப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் சரித்திர நிபுணர்களின்
கல்வெட்டு ஆராய்ச்சிகளிலிருந்து கிடைத்திருக்கின்றன.

இந்தக் கதைகளிலே வரும் நிகழ்ச்சிகளில், சில முக்கியமான நிகழ்ச்சிகள்
சரித்திர ஆதாரமுடையவை. அவற்றில் முக்கியமானவை: 1. மகேந்திர பல்லவர்
முதலில் சமணராயிருந்து பின்னர் அப்பர் சுவாமிகளின் உபதேசம் பெற்றுச் சைவர்
ஆனது. 2. வாதாபி புலிகேசி மாபெருஞ் சைனியத்துடன் தென்னாட்டின் மீது
படையெடுத்து வந்து காஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டது. 3. புலிகேசி
கொள்ளிடக்கரை சென்று அங்கே சேர, பாண்டிய, களப்பாள மன்னர்களைச் சந்தித்தது.
4. காஞ்சிக் கோட்டையைக் கைப்பற்ற முடியாமல் புலிகேசி திரும்பிச் சென்றது.
5. சளுக்கரின் படையெடுப்புக்குப் பழிக்குப் பழி வாங்கும் பொருட்டுப் பல்லவ
சைனியம் வாதாபிக்குப் படையெடுத்துச் சென்றது. 6. வாதாபி நகர் மீது
படையெடுத்த பல்லவ சைனியத்திற்குப் பரஞ்சோதி தளபதியாயிருந்தது. 7. பல்லவ
சைனியம் வாதாபியைக் கைப்பற்றி அந்நகரத்தைத் தீக்கிரையாக்கியது. 8. தளபதி
பரஞ்சோதி பிற்காலத்தில் சேனாதிபதி உத்தியோகத்தை விட்டுத் தமது சொந்தக்
கிராமமாகிய திருச்செங்காட்டங் குடிக்குச் சென்று சிவநேசச் செல்வராக
வாழ்க்கை நடத்தியது - ஆகிய இவையெல்லாம் சரித்திர பூர்வமான உண்மைச்
சம்பவங்கள்.

இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த காலத்தில் தென்னாடு கலை வளத்தில் தலைசிறந்து
விளங்கியது என்பது சரித்திரம் ஐயமற அறிவிக்கும் உண்மையாகும். சிற்பம்,
சித்திரம், சங்கீதம், நடனம் ஆகிய அழகுக் கலைகள் எல்லாம் தமிழகத்தில்
அப்போது வளம் பெற்றிருந்தன. இந்தக் கலைகளுள் முக்கியமாகச் சிற்பமும்
சித்திரமும், விந்திய பர்வதத்திலிருந்து இலங்கை வரையில் ஏறக்குறைய ஒரே
விதமாகப் பரவியிருந்தன என்பதும், ஒரே பாணியில் அமைந்திருந்தன என்பதும்
சரித்திர பூர்வமாகத் தெரிய வருகின்றன. அஜந்தாவின் குகை மண்டபங்களிலும்
தமிழகத்தில் இப்போது சிற்றன்ன வாசல் என வழங்கும் சித்தர் வாச மலையிலும்,
இலங்கையில் உள்ள ஸ்ரீகிரி மலையிலும் ஒரே விதமான சித்திரங்கள் - அழியா
வர்ணங்களில் எழுதிய அற்புதக் கலைப்பண்பு வாய்ந்த சித்திரங்கள் -
காணப்படுகின்றன. உலகத்தில் வேறு எங்கேயும் இத்தகைய பண்டையச்
சித்திரங்களைக் காணமுடியாது என்று கலை நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ஏறக்குறைய ஒரே காலத்தில் அஜந்தாவிலும் எல்லோராவிலும் வாதாபியிலும்
கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள நாகார்ஜுன மலையிலும் மாமல்லபுரத்திலும்
குன்றுகளைக் குடைந்து விமானங்கள் அமைக்கும் கலை பரவி மகோன்னத நிலையை
அடைந்திருக்கிறது என்பதையும் சரித்திர ஆராய்ச்சியிலிருந்து தெரிந்து
கொள்ளலாம்.

மேற்கூறிய சரித்திர உண்மைகளையெல்லாம் இந்த இரண்டு கதைகளிலும் கொண்டுவர
முயன்றதன் பயனாக வாழ்க்கையிலேயே ஒப்பற்ற அநுபவம் ஒன்று எனக்குக்
கிடைத்தது; அதுதான் அஜந்தா யாத்திரை. அஜந்தா சித்திரங்களைப் பற்றிப்
புத்தகங்களில் படித்ததை ஆதாரமாகக் கொண்டே 'சிவகாமியின் சபதம்' எழுதுவதற்கு
ஆரம்பித்தேன். ஆனால், கதையை எழுதிக் கொண்டு போகப் போக, ஆயனருக்குப்
பிடித்தது போன்ற அஜந்தா பைத்தியம் என்னையும் பிடித்துக் கொண்டது. கதையில்
நேர்முகமாக அஜந்தாவைப் பற்றிச் சொல்லும் கட்டம் வருவதற்கு முன்னால்
அங்குள்ள சித்திரங்களை நேரிலே பார்த்துவிட வேண்டுமென்ற விருப்பமும்
நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. அந்த விருப்பமும் நிறைவேறுவதற்கு
இறைவன் திருவருள் துணை புரிந்தது.

அஜந்தா யாத்திரை பற்றிய கட்டுரையை இந்தப் புத்தகத்தின் அநுபந்தமாகச்
சேர்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், புத்தகம் ஆயிரம்
பக்கங்களுக்கு மேலே போனதும் அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. அது
பயணக் கட்டுரை நூலாகத் தனியே பிரசுரமாகிறது.

ரா. கிருஷ்ணமூர்த்தி
'கல்கி'
சென்னை
5-3-1948









ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 10:45 pm

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

10. கண்கட்டு மாயம்

பரஞ்சோதி தரையில் படுத்தவுடனே கண்ணயர்ந்தான்.
ஆயினும், அவன் நல்ல தூக்கம் தூங்கினான் என்று சொல்வதற்கில்லை. ஏதேதோ
பயங்கர துர்க்கனவுகள் தோன்றித் தூக்கத்தைக் கெடுத்தன.

ஒரு சமயம் ஐந்தாறு புத்த பிக்ஷுக்கள் வந்து அவனைச் சூழ்ந்து நின்றார்கள்.
அவர்களில் ஒருவர் தம் கையிலிருந்த தீபத்தைத் தூக்கிப் பரஞ்சோதியின்
முகத்தில் வெளிச்சம் விழும்படி பிடித்தார்.

"ஆமாம்! நாகநந்தி சொல்வது சரிதான் இவன் முகத்தில் அபூர்வமான
களையிருக்கிறது. இவன் மகாவீரன் ஆவான்! அல்லது மகாத்மா ஆவான்!" என்று யாரோ
ஒருவர் சொன்னது போலிருந்தது.

இன்னொரு சமயம் அவனை ஒரு மதயானை துரத்திக் கொண்டு வருகிறது. பரஞ்சோதி
சட்டென்று ஒரு பன்னீர் மரத்தின் மேல் ஏறிக்கொள்கிறான். புஷ்பக் கொத்துடன்
கூடிய ஒரு பன்னீர்க் கிளையை ஒடித்து யானையின் மேல் போடுகிறான். அச்சமயம்
திடீரென்று இரு குதிரை வீரர்கள் தோன்றி, "அடப்பாவி! கோயில் யானையைக்
கொன்று விட்டாயா?" என்று கூவிக் கொண்டே தங்கள் கையிலிருந்த வேல்களை
அவன்மீது எறிகிறார்கள்!

மற்றும் ஒரு பயங்கரக் கனவு! நாகநந்தியடிகள் வந்து அவன் பக்கத்தில் நின்று
அவனுடைய முகத்தை உற்றுப் பார்க்கிறார். அப்படி
பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவருடைய முகமானது படமெடுத்தாடும் பாம்பின்
முகமாக மாறுகிறது! அந்தப் பாம்பு அதனுடைய மெல்லிய பிளவுபட்ட நாவை நீட்டி
அவனுடைய முகத்தைத் தீண்ட வருகிறது!

பரஞ்சோதி அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்திருந்தான். பார்த்தால், நாகநந்தி
அடிகள் உண்மையாகவே அவன் அருகில் நின்று அவனைக் குனிந்து பார்த்துக்
கொண்டிருந்தார்.

"பிள்ளாய்! ஏன் இப்படிப் பயப்படுகிறாய்? ஏதாவது துர்க்கனவு கண்டாயா?" என்று பிக்ஷு கேட்டார்.

பரஞ்சோதி, "இல்லை, இல்லை, ஒன்றுமில்லை நீங்கள் திடீரென்று தொடவே கொஞ்சம் திடுக்கிட்டேன்" என்றான்.

"பொழுது விடிய இன்னும் ஒரு முகூர்த்தந்தான் இருக்கிறது. புறப்படு,
போகலாம்! பொழுது விடிவதற்குள் இந்தக் கோட்டையைக் கடந்துபோய்விட வேண்டும்."

"ஏன் சுவாமி?"

"புத்த தேவருடைய ஆக்ஞை!"

"யாருக்கு?"

"எனக்குத்தான் உன்னை அபாயத்திலிருந்து தப்புவிக்கும்படி ஆக்ஞை. என்னிடம்
உனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லையா?" என்று நாகநந்தி பரிவு ததும்பிய
குரலில் கேட்டார். பரஞ்சோதி மௌனமாயிருந்தான்.

"போகட்டும். இன்னும் ஒரே ஒரு முகூர்த்த காலம் இரவு கழிந்து பொழுது
விடியும்வரையில் நான் சொல்கிறதைக் கேள். புத்த தேவருடைய கட்டளையை நான்
நிறைவேற்றி விடுகிறேன். கோட்டைக்கு வெளியே உன்னைக் கொண்டு போய்
விட்டுவிடுகிறேன் அப்புறம் உன் இஷ்டம்போல் செய்."

கனிந்த குரலில் கூறிய இந்த வேண்டுகோளைப் பரஞ்சோதியினால் மறுக்க முடியவில்லை.

"ஆகட்டும், அடிகளே!" என்றான்.

"அப்படியானால் இன்னும் ஒரு முகூர்த்த காலம் என்னிடம் நம்பிக்கை வைத்து நான் சொன்னபடி கேட்பாயல்லவா!"

"கேட்கிறேன்."

"உன்னுடைய கண்களைக் கட்டி இவ்விடமிருந்து அழைத்துப் போகவேண்டியதாயிருந்தால்?"

பரஞ்சோதி ஒரு நிமிஷம் திகைத்து நின்றுவிட்டு, "எப்படியானாலும் சரி" என்றான்.

உடனே, நாகநந்தி அடிகள் ஒரு சிறு துண்டை எடுத்துப் பரஞ்சோதியின் கண்களைச் சுற்றிக் கட்டினார்.

"பிள்ளாய்! என் கையைப் பிடித்துக் கொண்டே வர வேண்டும். நான் சொல்கிற
வரையில் கண்ணின் கட்டை அவிழ்க்கக் கூடாது. இப்போது நீ என்னிடம் காட்டும்
நம்பிக்கையின் பலனை ஒருநாள் அவசியம் தெரிந்து கொள்வாய்!"

இவ்விதம் கூறிப் பரஞ்சோதியின் கரத்தைப் பிடித்துக் கொண்டு, நாகநந்தி
நடக்கத் தொடங்கினார். பரஞ்சோதியின் நெஞ்சு 'படக் படக்' என்று
அடித்துக்கொண்டது. ஆயினும், அவன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு
பிக்ஷுவைப் பின்பற்றி நடந்தான்.

முதலில், புத்த விஹாரத்தின் வாசல் வழியாக வெளியேறுவது போலப்
பரஞ்சோதிக்குத் தோன்றிற்று. பின்னர், வீதியோடு நடந்து போவதாகத்
தோன்றிற்று. பன்னீர் புஷ்பங்களின் வாசனையிலிருந்து அன்று முன்னிரவில் மேல்
மாடத்திலிருந்து வீதியில் இறங்கிய இடமாக இருக்கலாமென்று ஊகித்துக்
கொண்டான்.

இன்னும் சிறிது தூரம் நடந்த பிறகு, போகும் திசை மாறியது. சற்று
நேரத்துக்கெல்லாம் மீண்டும் பன்னீர்ப் பூவின் நறுமணம். "வந்த வழியே
திரும்பிப் போகிறோமா, என்ன? ஆ! இந்தப் பொல்லாத பிக்ஷு எனக்கு வழி அடையாளம்
தெரியாமலிருப்பதற்காக இப்படி இழுத்தடிக்கிறார் போலும்!" என்று பரஞ்சோதி
எண்ணிக் கொண்டான்.

மறுபடியும் ஒரு கட்டிடத்துக்குள் பிரவேசிப்பது போலிருந்தது. அகிற்
புகையின் மணத்திலிருந்து, "இது இராஜ விஹாரந்தான்' என்று பரஞ்சோதி
தீர்மானித்தான். பிறகு சிறிது நேரம் இருளடைந்த குகைகளின் வழியாகச்
சுற்றிச் சுற்றி வருவது போல் தோன்றியது. கண்ணைக் கட்டியிருந்தபடியால் வெகு
நேரம் முடிவேயில்லாமல் நடந்து கொண்டிருப்பதாகப்பட்டது.

"அடிகளே! இன்னும் எத்தனை நேரம் இவ்விதம் கண் கட்டு வித்தை செய்ய வேண்டும்?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"பிள்ளாய்! கிட்டத்தட்ட வந்துவிட்டோ ம் இன்னும் கொஞ்சம் பொறு!" என்றார் பிக்ஷு.

திடீரென்று இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்துவிட்டதாகப் பரஞ்சோதி உணர்ந்தான்.

"பரஞ்சோதி! நாம் வரவேண்டிய இடத்துக்கு வந்து விட்டோ ம். கண்கட்டுச் சோதனை
முடிந்தது" என்று சொல்லிக் கொண்டே அடிகள் கட்டை அவிழ்த்தார்.

புத்த பகவான் அருளால் சொர்க்கலோகத்துக்கே வந்து விட்டோ மோ என்று
பரஞ்சோதிக்குத் தோன்றியது. அவன் கண் முன்னால் அத்தகைய சௌந்தர்யக் காட்சி
தென்பட்டது. அகழி நீரில் அஸ்தமன சந்திரனின் வெள்ளிக்கிரணங்கள் படிந்து,
உருக்கிய வெள்ளி ஓடையாகச் செய்து கொண்டிருந்தன. அகழிக்கப்பால் மரங்கள்
அடர்ந்த வனப் பிரதேசம் காணப்பட்டது. மரங்களின் உச்சியில் சந்திர கிரணங்கள்
இலைகளின் மீது தவழ்ந்து விளையாடின. அகழியில் ஒரு படகு மிதந்தது,
பரஞ்சோதியைச் சிறை மீட்க உதவி செய்த இளம் பிக்ஷு கையில் துடுப்புடன்
படகில் நின்றார்.

பெரிய பிக்ஷுவும் பரஞ்சோதியும் அகழியண்டை போய் படகில் ஏறினார்கள் படகு நகர்ந்தது.

"இந்த அகழியைத் தாண்டப் படகு என்னத்திற்கு? எளிதில் நீந்திக் கடந்து விடலாமே?" என்றான் பரஞ்சோதி.

"ஆம்; நீந்தத் தெரிந்தவர்கள் நீந்தலாம்."

"இந்த அகழியினால் கோட்டைப் பாதுகாப்புக்குத்தான் என்ன பிரயோஜனம்? எதிரிகள் வந்தால் சுலபமாய் நீந்திவிடமாட்டார்களா?"

"அதோ பார்!" என்றார் பிக்ஷு, சற்றுத் தூரத்தில் ஒரு முதலை பயங்கரமாக வாயைத் திறந்தது.

"ஐயோ!" என்றான் பரஞ்சோதி.

"இம்மாதிரி நூற்றுக்கணக்கான முதலைகள் இந்த அகழியில் இருக்கின்றன. சாதாரண
காலங்களில் அங்கங்கே இரும்புக் கூண்டுகளில் அடைத்து வைத்திருப்பார்கள்.
யுத்த காலங்களில் திறந்து விட்டுவிடுவார்கள். நேற்று இரவு திறந்து
விட்டிருக்கிறார்கள்."

"அப்படியானால், யுத்தம் வருவது நிஜந்தானா? சுவாமி!"

"பின் எதற்காக இவ்வளவு அமர்க்களமெல்லாம் என்று நினைத்தாய்!" என்றார் பிக்ஷு.

பரஞ்சோதி மௌனமாயிருந்தான். படகு அகழியின் அக்கரையை அடைந்தது.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 10:46 pm

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

11. ஆயனச் சிற்பி


வானளாவி வளர்ந்திருந்த மரங்களின் கிளைகள் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம்
பரவிப் பின்னிக்கொண்டிருந்த வனப் பிரதேசத்தின் மத்தியில் அழகான சிற்ப வீடு
ஒன்று காணப்பட்டது.

மனோகரமான காலை நேரம், சூரியோதயமாகி ஒரு ஜாமம் இருக்கும். ஓங்கி
வளர்ந்திருந்த மரங்களின் உச்சியில் வஸந்த காலத்தில் இளந்தென்றல்
உலாவியபோது 'சலசல'வென்று இலைகள் அசையும் இனிய ஓசை எழுந்தது. பட்சி
ஜாலங்களின் கண்டங்களிலிருந்து விதவிதமான சுருதி பேதங்களுடன் மதுர மதுரமான
அமுத கீதங்கள் பெருகிக் கொண்டிருந்தன.

வீட்டைச் சுற்றியிருந்த மரங்களின் அடியில் ஆங்காங்கே பெரிய பெரிய
கருங்கற்கள் கிடந்தன. அந்தக் கருங்கற்களில், தனித்தனியாகவும் இருவர்
மூவராகவும் இளம் சிற்பிகள் அமர்ந்து கையில் கல்லுளியுடன் வேலை செய்து
கொண்டிருந்தார்கள். இளம் சிற்பிகள் கருங்கற்களில் கல்லுளியினால் வேலை
செய்த போது உண்டான 'கல்கல்' என்ற ஓசை, இலைகள் அசையும் ஓசையுடனும்
பட்சிகளின் மதுரகானத்துடனும் கலந்து, செவி கொடுத்துக்
கேட்பவர்களுக்கெல்லாம் நாத போதையை உண்டாக்கிற்று. இத்தகைய கீதப்
பிரவாகத்துக்கிடையே, திடீரென்று வீட்டிற்குள்ளிருந்து 'ஜல்ஜல்' என்ற
சத்தம் வந்தது.

இளம் சிற்பிகள் அவ்வளவு பேரும் சொல்லி வைத்தாற்போல வேலையை
நிறுத்திவிட்டுக் காது கொடுத்துக் கேட்டார்கள். அவர்களுடைய முகங்கள்
எல்லாம் ஏக காலத்தில் மலர்ந்தன. ஏனெனில் அந்த 'ஜல்ஜல்' ஒலியானது,
அவர்களுடைய ஆச்சாரிய சிற்பியின் மகள் சிவகாமி தேவியின் பாதச் சலங்கை
ஒலியென்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். மூன்று நாளாக ஏதோ ஒரு
காரணத்தினால் சோகத்தில் ஆழ்ந்திருந்த சிவகாமி இன்றைக்குச் சோகம் நீங்கி
மீண்டும் நடனம் செய்ய ஆரம்பித்திருக்கிறாள் என்பதை அந்த 'ஜல்ஜல்' ஒலி
பறையறைந்து தெரிவித்தது.

சற்று நேரம் அந்த இனிய ஒலியைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு,
ஒருவரோடொருவர் முக பாவத்தினாலேயே சம்பாஷித்து விட்டு, இளம் சிற்பிகள்
மறுபடியும் தங்கள் வேலையை ஆரம்பித்தார்கள்.

ஆயனரின் சிற்பக் கோயிலுக்குள்ளே நாம் பிரவேசிப்பதற்கு முன்னால், அவர் அந்த
நடுக்காட்டில் வந்து வீடு கட்டிக்கொண்டு வசிக்க நேர்ந்ததேன் என்பதைச்
சிறிது கவனிப்போம்.

தெற்கே பாண்டிய நாட்டின் எல்லையிலிருந்து வடக்கே கிருஷ்ணா நதி வரையில்
பரந்திருந்த பல்லவ ராஜ்யத்தில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு மகேந்திரவர்ம
சக்கரவர்த்தி சிறப்புடன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில்,
தமிழகமெங்கும் ஓர் அதிசயமான 'கலை மறுமலர்ச்சி' ஏற்பட்டிருந்தது. செந்தமிழ்
நாடெங்கும் மகா சிற்பிகளும் சித்திரக் கலைஞர்களும் தோன்றிச் சிற்ப,
சித்திரக் கலைகளை அற்புதமாக வளர்த்து வந்தார்கள். குன்றுகளைக் குடைந்து
கோயில்களாக்கும் கலையும், கற்பாறைகளிலே சிற்பங்களைச் செதுக்கும் கலையும்
எங்கெங்கும் பரவி வந்தன.

அதே சமயத்தில் தெய்வத் தமிழகத்தில் சைவ, வைஷ்ணவ சமயங்கள் புத்துயிர்
பெற்றுத் தழைக்கத் தொடங்கின. சிவனடியார்களும், வைஷ்ணவப் பெரியார்களும்
ஸ்தல யாத்திரை என்ற வியாஜத்தில் தேசமெங்கும் பிரயாணம் செய்து, சைவ வைஷ்ணவ
சமயங்களைப் பரப்பி வந்தார்கள். இது காரணமாகத் தமிழகத்தில் சென்ற சில
நூற்றாண்டுகாலமாய் வேரூன்றியிருந்த புத்த, சமண சமயங்களுக்கும், சைவ,
வைஷ்ணவ சமயங்களுக்கும், தீவிரப் போட்டி ஏற்பட்டது. அந்தந்தச் சமயத்
தத்துவங்களைப் பற்றிய விவாதங்கள் எங்கே பார்த்தாலும் காரசாரமாக நடந்து
கொண்டிருந்தன.

மேற்படி சமயப் போட்டியானது கலைத் துறையில் மிகுதியாகக் காணப்பட்டது.
ஒவ்வொரு சமயத்தினரும் தங்கள் தங்கள் சமயத்தையொட்டிக் கலைகளை வளர்க்க
முயன்றார்கள். சைவ வைஷ்ணவர்கள் சிவன் கோயில்களையும், பெருமாள்
கோயில்களையும் நாடெங்கும் நிர்மாணிக்க விரும்பினார்கள். புத்தர்களும்
சமணர்களும் எங்கெங்கும் புத்த விஹாரங்களையும் சமணப் பள்ளிகளையும் நிறுவத்
தொடங்கினார்கள்.

பாறைகளுக்கும் குன்றுகளுக்கும்கூடப் பெரிய போட்டி ஏற்பட்டது! ஒவ்வொரு
மதத்தினரும், "இது எங்கள் குன்று; எங்கள் பாறை!" என்று பாத்தியதை
கொண்டாடினார்கள். அந்தப் பாறைகளையும் குன்றுகளையும் குடைந்து
கோயில்களையும் விஹாரங்களையும் நிர்மாணிக்கும் ஆசையினால் தான் அத்தகைய
போட்டி உண்டாயிற்று.

அதே மாதிரி சிற்பிகள், சித்திரக் கலைஞர்களின் விஷயத்திலும் பலமான போட்டி
ஏற்பட்டிருந்தது. பெயர் பெற்ற சிற்பிகளிடமும் சித்திரக் கலைஞர்களிடமும்
நாலு மதத்தினரும் வந்து மன்றாடி அழைத்தார்கள். அத்தகைய பலமான போட்டிக்கு
ஆளாகியிருந்தவர்களில் ஆயனச் சிற்பியும் ஒருவர்.

காஞ்சி மாநகரில் பிறந்து வளர்ந்து கலை பயின்ற ஆயனர், இளம் பிராயத்திலேயே
'மகா சிற்பி' என்று பெயர் பெற்றுவிட்டார். ஆயனருடைய புகழ் வளர வளர,
அவருடைய வேலைக்குக் குந்தகம் அதிகமாக ஏற்பட்டுக் கொண்டிருந்தது. மகேந்திர
சக்கரவர்த்தி முதல் சாதாரண ஜனங்கள் வரையில் அடிக்கடி அவருடைய விடுதிக்கு
வருவதும் அவருடைய சிற்ப வேலைகளைப் பாராட்டுவதுமாக இருந்தார்கள்.
வந்தவர்களை வரவேற்று உபசரிப்பதிலேயே அவருடைய காலம் அதிகமாகச் செலவழிந்து
வந்தது.

சைவ குலத்தில் பிறந்த ஆயனர் இயற்கையாகச் சைவ மதப்பற்றுக் கொண்டிருந்தார்.
அதோடு, பழந்தமிழ்நாட்டுச் சிற்ப வடிவங்களில் சிறந்த ஸ்ரீநடராஜ வடிவம்
அவருடைய உள்ளத்தைப் பூரணமாய்க் கவர்ந்திருந்தது. எனவே, அவருடைய சிற்ப
வேலைகள் பெரும்பாலும் சைவ மதத்தைத் தழுவியனவாக இருந்தன. இது காரணமாக,
புத்த பிக்ஷுக்களும் சமண முனிவர்களும் ஆயனரைத் தங்கள் சமயத்தில்
சேர்த்துக்கொள்ள இடைவிடாத முயற்சி செய்த வண்ணமிருந்தார்கள்.

இந்தத் தொல்லையிலிருந்து விடுபடுவதற்காக, ஆயனச் சிற்பியார் ஒரு
தீர்மானத்துக்கு வந்தார். அதாவது காஞ்சி நகரை விட்டுச் சென்று எங்கேயாவது
நடுக்காட்டில் ஏகாந்தமான பிரதேசத்தில் வீடு அமைத்துக்கொண்டு வசிக்க
வேண்டும் என்பதுதான்.

அவ்விதம் ஆயனர் தீர்மானித்ததற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருந்தது.
அந்த மகா சிற்பி, சிற்ப சித்திரக் கலைகளை நன்கு பயின்றதோடு, பரத சாஸ்திரம்
என்னும் மகா சமுத்திரத்தையும் கரை கண்டவராக இருந்தார். அவருடைய ஏக புதல்வி
சிவகாமி குழந்தையாயிருந்த போதே நடனக் கலையில் அவள் சிறந்த தேர்ச்சியடைவாள்
என்பதற்கு அறிகுறிகள் காணப்பட்டன.

ஆயனருடைய உள்ளத்தில் ஒரு பெரிய ஆசை உதயமாயிற்று. 'குழந்தை சிவகாமிக்குப்
பரத நாட்டியக் கலையில் பயிற்சி அளிக்கவேண்டும்; அவளுடைய நடனத்
தோற்றங்களைப் பார்த்து அவற்றைப் போல் ஜீவகளையுள்ள நவநவமான நடன வடிவங்களைச்
சிலைகளிலே அமைக்க வேண்டும்' என்னும் மனோரதம் அவருக்கு உண்டாகி, நாளுக்கு
நாள் வலுப்பெற்று வந்தது. நகரத்தை விட்டு எங்கேயாவது ஏகாந்தமான
பிரதேசத்துக்குப் போனாலொழிய மேற்படி மனோரதம் நிறைவேறுவது சாத்தியமாகாது
என்பதையும் அவர் நன்கு உணர்ந்தார்.

ஆயனர் தமது விருப்பத்தை மகேந்திர சக்கரவர்த்தியிடம் விண்ணப்பித்துக்
கொண்டபோது, கலைஞர்களுடைய விசித்திர குணாதிசயங்களை நன்கு அறிந்தவரான
மகேந்திர பல்லவர் உடனே அவருடைய யோசனைக்குச் சம்மதம் அளித்தார். அதற்கு
வேண்டிய சௌகரியங்களையும் செய்து கொடுக்க முன்வந்தார்.

காஞ்சியிலிருந்து ஒரு காத தூரத்தில், ராஜபாட்டையிலிருந்து விலகியிருந்த
அடர்ந்த வனப் பிரதேசம் ஒன்றை ஆயனர் தேர்ந்தெடுத்து, அங்கே வீடுகட்டிக்
கொண்டு, குழந்தை சிவகாமியுடனும், பதியை இழந்திருந்த தம் தமக்கையுடனும்
வசிக்கலானார்.

எந்த நோக்கத்துடன் ஆயனர் அந்த ஏகாந்தமான பிரதேசத்தைத் தேடி வந்தாரோ அந்த
நோக்கம் சில அம்சங்களில் நன்கு நிறைவேறிவந்தது. சிவகாமி நாட்டியக் கலையில்
நாளுக்கு நாள் தேர்ச்சி அடைந்து வந்தாள். அவளுடைய நடனத் தோற்றங்களைப்
பார்த்து ஆயனர் முதலில் அவை போன்ற சித்திரங்கள் வரைந்துகொண்டார். பிறகு
அந்தச் சித்திரங்களைப் போலவே அதிசயமான ஜீவகளை பொருந்திய நடன உருவங்களைக்
கல்லிலே அமைக்கலானார்.

ஆயனர் ஏகாந்தமான பிரதேசத்துக்குப் போன போதிலும், வெளி உலகம் அவரை அடியோடு
தனியாக விட்டு விடவில்லை. கலைஞர்களும், கலைகளில் பற்றுடையவர்களும் காட்டு
வழிகளிலே புகுந்து ஆயனர் வீட்டை அடிக்கடி தேடிச் சென்றார்கள். அவ்வாறு
சென்றவர்களில் முக்கியமானவர்கள் மகேந்திர சக்கரவர்த்தியும் அவருடைய
குமாரர் மாமல்லருந்தான். இவர்கள் ஆயனர் வீடு செல்லுவதற்கு ஒரு முக்கியமான
முகாந்திரமும் இருந்தது.

சக்கரவர்த்தியும் மாமல்லரும் ஒருநாள் கடல்மல்லைத் துறைமுகத்துக்குச்
சென்றிருந்தபோது, கடற்கரையோரமாகப் பரந்து கிடந்த குன்றுகளும் பாறைகளும்
அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தன. அந்தக் குன்றுகளிலும் பாறைகளிலும்
விதவிதமான சிற்ப வேலைகளைச் செய்து கடல்மல்லைத் தலத்தை ஒரு சொப்பன லோகமாகச்
செய்துவிட வேண்டுமென்று அவர்கள் தீர்மானித்தார்கள். தமிழகமெங்குமிருந்து
ஆயிரக்கணக்கான சிற்பிகள் அங்கு வந்து வேலை செய்யத் தொடங்கினார்கள்.

இந்த வேலைகள் சம்பந்தமாக ஆயனரிடம் கலந்து ஆலோசிப்பதற்கும், அவ்வப்போது
அவரை அழைத்துச் சென்று நடந்திருக்கும் வேலைகளைக் காட்டுவதற்குமாகச்
சக்கரவர்த்தியும் மாமல்லரும் அவருடைய வீட்டுக்கு அடிக்கடி
வரவேண்டியிருந்தது. அப்படி வரும்போதெல்லாம் ஆயனரின் நடனச் சிற்பங்களைப்
பார்த்து அவர்கள் பாராட்டியதுடன் சிவகாமியை நடனமாடச் சொல்லியும் பார்த்து
மகிழ்ந்தார்கள்.

சிவகாமி மங்கைப் பருவத்தை அடைந்து நடனக் கலையில் ஒப்பற்ற தேர்ச்சியும்
அடைந்த பிறகு, காஞ்சி ராஜ சபையில் அவளுடைய நடன அரங்கேற்றத்தை நடத்த
வேண்டுமென்று சக்கரவர்த்தி ஆக்ஞாபித்தார்.

அந்த அரங்கேற்றம் எப்படி இடையில் தடைப்பட்டுப் போயிற்று என்பதை இந்த வரலாற்றில் ஆரம்ப அத்தியாயங்களில் பார்த்தோம்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 10:46 pm

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

12. தெய்வமாக் கலை


அரண்ய மத்தியில் அமைந்த ஆயனர் வீட்டின் உட்புறம் கண்கொள்ளாக்
காட்சியளித்தது. வெளித் தாழ்வாரத்தையும் முன் வாசற்படியையும் தாண்டி உள்ளே
சென்றதும், நாலுபுறமும் அகன்ற கூடங்களும், நடுவில் விசாலமான முற்றமாக
அமைந்த பெரிய மண்டபமும் காணப்பட்டன. முற்றத்துக்கு மேலே மண்டபம்
எடுப்பாகத் தூக்கிக் கட்டப்பட்டிருந்தது. கூடங்களில் ஓரங்களில் சிற்ப
வேலைப்பாடு அமைந்த தூண்கள் நின்றன. அவை மேல் மண்டபத்தைத் தாங்குவதற்காக
நின்றனவோ, அல்லது அலங்காரத்துக்காக நின்றனவோ என்று சொல்ல முடியாமல்
இருந்தது.

நாலு புறத்துச் சுவர்களிலும் விதவிதமான வர்ணங்களில் அழகழகான சித்திரங்கள்
காணப்பட்டன. அந்தச் சித்திரங்களில் ஸ்ரீநடராஜ மூர்த்தியின் நாதாந்த நடனம்,
தாண்டவ நடனம், குஞ்சித நடனம், ஊர்த்வ நடனம் ஆகிய தோற்றங்கள் அதிகமாக
இருந்தன. அம்மாதிரியே ஓர் அழகிய இளம் பெண்ணின் பலவகை அபிநய நடனத்
தோற்றங்களும் அதிகமாகக் காட்சியளித்தன.

முற்றத்தில் பெரிய கருங்கற்களும், உடைந்த கருங்கற்களும், பாதி வேலை
செய்யப் பெற்ற கருங்கற்களும் கிடந்தன. ஒரு பக்கத்துக் கூடத்தில் வேலை
பூரணமாகி ஜீவ களையுடன் விளங்கிய சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.
சித்திரங்களில் தோன்றிய அதே இளம் பெண்ணின் மோகன வடிவந்தான் அந்தச்
சிலைகளிலும் விளங்கின. ஒவ்வொரு சிலையும் பரத சாஸ்திரத்தில்
சொல்லியிருக்கும் நூற்றெட்டு அபிநயத் தோற்றங்களில் ஒன்றைக்
குறிப்பிடுவதாயிருந்தது.

ஆனால், நாம் குறிப்பிடும் சமயத்தில் அந்தச் சிற்ப மண்டபத்துக்குள்
பிரவேசிப்பவர்கள் மேற்கூறிய சிற்ப அதிசயங்களையெல்லாம் கவனம் செலுத்திப்
பார்த்திருக்க முடியாது. அவர்களுடைய கருத்தையும் கண்களையும்
அம்மண்டபத்தின் ஒரு பக்கத்துக் கூடத்தில் தோன்றிய காட்சி பூரணமாகக்
கவர்ந்திருக்கும்.

சித்திரங்களிலும் சிலைகளிலும் தோற்றமளித்த இளம் பெண்ணானவள் அங்கே சுயமாகவே
தோன்றி, கால் சதங்கை 'கலீர் கலீர்' என்று சப்திக்க நடனமாடிக்
கொண்டிருந்தாள், அவளுக்கெதிரே சற்றுத் தூரத்தில் ஆயனச் சிற்பியார்
உட்கார்ந்து கண்கொட்டாத ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று, "நில்!" என்றார், அந்த க்ஷணமே
சிவகாமியும் ஆட்டத்தை நிறுத்தி, அப்போது நின்ற நிலையிலேயே அசையாமல்
நின்றாள்.

ஆயனர் கையில் கல்லுளியை எடுத்தார். அவர் அருகில் ஏறக்குறைய வேலை
பரிபூரணமான ஒரு சிலை கிடந்தது. அதன் கண் புருவத்தின் அருகே ஆயனர்
கல்லுளியை வைத்து, இலேசாகத் தட்டினார். மறுபடியும் சிவகாமியை நிமிர்ந்து
பார்த்து, "சற்று இரு! அம்மா!" என்று கூறி, மேலும் அச்சிலையின்
புருவங்களில் சிறிது வேலை செய்தார். பிறகு, "போதும்! குழந்தாய்! இங்கே
வந்து உட்கார்!" என்றார்.

சிவகாமி ஆயனர் அருகில் சென்று உட்கார்ந்தாள். அவள் முகத்தில் முத்து
முத்தாகத் துளித்திருந்த வியர்வையை ஆயனர் தம் அங்கவஸ்திரத்தினால்
துடைத்துவிட்டு, "அம்மா! சிவகாமி! பரத சாஸ்திரத்தை எழுதினாரே, அந்த மகா
முனிவர் இப்போது இருந்தால் உன்னிடம் வந்து அபிநயக் கலையின் நுட்பங்களைக்
கற்றுக் கொள்ள வேண்டியதாயிருக்கும். கண் பார்வையிலும், புருவத்தின்
நெறிப்பிலும் என்ன அற்புதமாய் நீ மனோபாவங்களைக் கொண்டு வந்து விடுகிறாய்?
நடன கலைக்காகவே நீ பிறந்தவள்!" என்றார்.

"போதும் அப்பா, போதும் எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை!" என்ற அலுப்பான குரலில் கூறினாள் சிவகாமி.

"பிடிக்கவில்லையா? என்ன பிடிக்கவில்லை?" என்று ஆயனர் வியப்புடன் கேட்டார்.

"நான் பெண்ணாகப் பிறந்ததே பிடிக்கவில்லை!" என்றாள் சிவகாமி.

"சிவகாமி! இது என்ன இது? மூன்று நாளாகத்தான் உடம்பு நன்றாக இல்லை என்று
சொன்னாய். இன்றைக்கு ஏன் இத்தனை வெறுப்பாய்ப் பேசுகிறாய்? என் பேரில்
ஏதாவது கோபமா?" என்று ஆயனர் பரிவுடன் கேட்டார்.

"உங்கள் பேரில் எனக்கு என்ன கோபம், அப்பா! பரத சாஸ்திரம் என்று ஒன்றை
எழுதினாரே, அந்த முனிவரின் பேரில்தான் கோபம். எதற்காக இந்தக் கலையை
கற்றுக் கொண்டோ ம் என்றிருக்கிறது" என்று கூறிப் பெருமூச்சு விட்டாள்
சிவகாமி.

"ஆகா! என்ன வார்த்தை சொன்னாய்? பரத முனிவரின் பேரில் கோபமா? சிவகாமி!
நிருத்யக் கலையில் நீ அபூர்வமான தேர்ச்சியடைந்திருக்கிறாய். ஆனால், அந்தக்
கலையின் பெருமையை நீ உணரவில்லை. நிருத்யக் கலைதான் மற்ற எல்லாக்
கலைகளுக்கும் அடிப்படை. சிவகாமி! அதனாலேதான் இதைத் தெய்வமாக் கலையென்றும்,
பிரம்ம தேவர் பரத முனிவருக்கு அருளிய 'நாட்டிய வேதம்' என்றும்
சொல்கிறார்கள். நிருத்யக் கலையிலிருந்துதான் சித்திரக்கலை உண்டாயிற்று.
அதிலிருந்து தான் சிற்பக்கலை வளர்ந்தது. இசைக் கலைக்கும் நிருத்யக்
கலைதான் ஆதாரம். பரத சாஸ்திரம் அறியாதவர்கள் சங்கீதத்தின் ஜீவதத்துவத்தை
அறிய முடியாது. அம்மா! அன்றைக்கு ருத்ராச்சாரியாரே இதை ஒப்புக்
கொண்டுவிட்டார்..."

"யார் ருத்ராச்சாரியார்? சக்கரவர்த்திக்குப் பக்கத்தில் பெரிய வெள்ளைத் தாடியோடு உட்கார்ந்திருந்தாரே, அவரா?"

"ஆம்; அவர்தான் நமது மகேந்திர சக்கரவர்த்தியின் சங்கீத ஆசிரியர்.
சங்கீதத்தைப் பற்றிச் சாஸ்திரம் எழுதியிருக்கிறார். இப்போது கிழவருக்கு
வயது அதிகமாகிவிட்டது. இருந்தாலும் தடியை ஊன்றிக்கொண்டு உன்னுடைய
அரங்கேற்றத்துக்கு வந்திருந்தார். உன்னுடைய ஆட்டத்தைப் பார்த்துப்
பிரமித்துப் போய்விட்டார். சபை கலைந்தவுடனே அவர் என்னைக் கூப்பிட்டு, 'உன்
மகள் நன்றாயிருக்கவேண்டும். அவள்தான் இன்று என் குருட்டுக் கண்களைத்
திறந்து, ஒரு முக்கியமான உண்மையை உணரச் செய்தாள். நான் சங்கீத சாஸ்திரம்
எழுதியிருக்கிறேனே, அதெல்லாம் சுத்தத் தவறு. பரத சாஸ்திரம் பயிலாமல் நான்
சங்கீதத்தைப் பற்றி எழுதியதே பெரும் பிசகு!' என்று சொன்னார். சங்கீத
மகாசாகரமாகிய ருத்ராச்சாரியாரே இவ்வாறு சொல்லுகிறதென்றால்..."

"அப்பா! யார் என்ன சொன்னால் என்ன? எனக்கு என்னமோ ஒன்றும் பிடிக்கவில்லை.
பரத, சங்கீதம், சிற்பம், சித்திரம் இவற்றினால் எல்லாம் உண்மையில் என்ன
பிரயோஜனம்?"

"சிவகாமி! நீதானா கேட்கிறாய் கலைகளினால் என்ன பிரயோஜனம் என்று? மகளே! நான்
கேட்கிறதற்கு விடை சொல். வஸந்த காலத்தில் மரங்களும் செடிகளும் பூத்துக்
குலுங்குவதனால் என்ன பிரயோஜனம்? பௌர்ணமி இரவில் பூர்ண சந்திரன் பால்
நிலவைப் பொழிகிறதே, அதனால் என்ன உபயோகம்? மயில் ஆடுவதனாலும், குயில்
பாடுவதனாலும் யாது பயன்? கலைகளின் பயனும் அவை போன்றதுதான். கலைகளைப்
பயில்வதிலேயே ஆனந்தம் இருக்கிறது. அந்த ஆனந்தத்தை நீ அனுபவித்ததில்லையா?
இன்றைக்கு ஏன் இப்படிப் பேசுகிறாய், அம்மா?"

சிவகாமி மறுமொழி சொல்லாமல் எங்கேயோ பார்த்தவண்ணம் இருந்தாள். காதளவு நீண்ட
அவளுடைய கரிய கண்களில் முத்துப்போல் இரு கண்ணீர்த் துளிகள் துளித்து
நின்றன. இதைப் பார்த்த ஆயனர் திடுக்கிட்டவராய்ச் சற்று நேரம் சிந்தனையில்
ஆழ்ந்திருந்தார். பிறகு, சிவகாமியின் கூந்தலை அருமையுடன் தடவிக் கொடுத்த
வண்ணம் கூறினார்.

"அம்மா! எனக்குத் தெரிந்தது. உன்னை அறியாப் பிராயத்துச் சிறு குழந்தையாகவே
நான் இன்னமும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். அது தவறுதான். உனக்குப் பிராயம்
வந்து உலகம் தெரிந்து விட்டது. உன்னை ஒத்த பெண்கள் கல்யாணம் செய்துகொண்டு
குடியும் குடித்தனமுமாய் வாழ்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறாய். உன்
அன்னை உயிரோடு இருந்திருந்தால், இத்தனை நாளும் உனக்குக் கல்யாணம் செய்து
வைக்கும்படி என் பிராணனை வாங்கியிருப்பாள். ஆனால், நானும் அந்தக் கடமையை
மறந்து விடவில்லை. சிவகாமி! பரத சாஸ்திரத்தில் சொல்லி இருக்கும்
நூற்றெட்டு அபிநயத் தோற்றங்களில் நாற்பத்தெட்டு தோற்றங்களைச் சிலைகளில்
அமைத்துவிட்டேன். இன்னும் அறுபது சிலைகள் அமைந்தவுடனே, உனக்குத் தக்க
மணாளனைத் தேடிக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு மறுகாரியம் பார்ப்பேன்!"

இவ்விதம் ஆயனர் சொன்னபோது சிவகாமி கண்களைத் துடைத்துக் கொண்டு அவரை
நிமிர்ந்து பார்த்து, "கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டாம் என்று எத்தனை தடவை
சொல்லியிருக்கிறேன். அப்பா! எனக்குக் கல்யாணமும் வேண்டாம், ஒன்றும்
வேண்டாம். உங்களைத் தனியாக விட்டு விட்டு நான் போவேனா? அத்தகைய கிராதகி
அல்ல நான்!" என்றாள்.

உண்மை என்னவென்றால், சிவகாமியைக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பதில் ஆயனருக்கு
அந்தரங்கத்தில் விருப்பம் கிடையாது. குழந்தைப் பிராயத்திலிருந்து அவளைக்
கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தவர் அவர். கல்வியும் கலையும் பயில்வித்தவர்
அவர். பெண்ணை விட்டுப் பிரிந்து ஒரு நிமிஷங்கூடத் தாம் உயிர் வாழ முடியாது
என்று ஆயனர் எண்ணினார். ஆனாலும், என்றைக்காவது ஒரு நாள் அவளைக் கல்யாணம்
செய்து கொடுத்துத்தானே ஆக வேண்டும் என்னும் நினைவு அடிக்கடி அவர் மனத்தில்
உறுத்திக் கொண்டிருந்தது.

எனவே, சிவகாமியின் கல்யாணத்தைப் பற்றி அவர் சில சமயம் பிரஸ்தாபிப்பது
உண்டு. அப்போதெல்லாம் சிவகாமி, "எனக்குக் கல்யாணம் வேண்டாம்" என்று
மறுமொழி கூறுவதைக் கேட்பதில் அவருக்கும் மிகவும் ஆனந்தம்.

இன்றைக்கும் சிவகாமியின் மறுமொழி ஆயனருக்கு ஆறுதலை அளித்தது. எனினும்,
அவர் மேலும் தொடர்ந்து, "அதெப்படி, சிவகாமி! மணம் செய்து கொடுக்காமலே நான்
உன்னை என் வீட்டிலேயே வைத்துக் கொண்டிருந்தால் நன்றாயிருக்குமா? உலகம்
ஒப்புக்கொள்ளுமா? ஒரு தகுந்த பிள்ளையாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்
கொடுக்க வேண்டியதுதான். ஆனால் இந்த யுத்தம் ஒன்று வந்து
தொலைந்திருக்கிறது. இதனால் நமது குமார சக்கரவர்த்தியின் திருமணம்கூடத்
தடைப்படும் போலிருக்கிறது."

சிவகாமியின் முகத்தில் அப்போது ஒரு அதிசயமான மாறுதல் காணப்பட்டது.
ஆங்காரத்தினால் ஏற்பட்ட கிளர்ச்சி அந்த அழகிய முகத்தை இன்னும்
அழகுபடுத்தியது.

"என்ன அப்பா சொல்கிறீர்கள்? யாருக்குத் திருமணம்? குமார சக்கரவர்த்திக்கா?" என்றாள்.

"ஆமாம்! மாமல்லருக்கு இந்த ஆண்டில் திருமணம் நடத்த வேண்டுமென்று
மகாராணிக்கு மிகவும் ஆசையாம். யுத்தம் முடிந்த பிறகுதான் கல்யாணம் என்று
சக்கரவர்த்தி சொல்லிவிட்டாராம். இதனால் புவன மாதேவிக்கு மிகுந்த வருத்தம்
என்று கேள்வி."

சிவகாமி குரோதம் ததும்பிய குரலில், "அப்பா! யார் வேணுமானாலும் கல்யாணம்
செய்துகொள்ளட்டும்! அல்லது செய்து கொள்ளாமல் இருக்கட்டும். நான் என்னவோ
கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை" என்றாள்.

ஆயனர் மீண்டும், "அதெப்படி முடியும், சிவகாமி! சைவ குலத்துப் பெண்ணை மணம்
செய்து கொடுக்காமல் எப்படி வைத்திருக்கலாம்? நாலு பேர் கேட்டால், நான்
என்ன சொல்லுவது?" என்றார்.

"அப்பா! நீங்கள் கவலைப்படவேண்டாம். நான் புத்த மதத்தைச் சேர்ந்த
பிக்ஷுணியாகி விடுகிறேன். அப்போது உங்களை ஒருவரும் ஒன்றும்
கேட்கமாட்டார்கள்" என்றாள் சிவகாமி.

அவள் இவ்விதம் சொல்லி வாய்மூடிய அதே சமயத்தில், வாசற்புறத்தில் "புத்தம் சரணம் கச்சாமி" என்று குரல் கேட்டது.

இருவரும் திரும்பிப் பார்த்தார்கள் வாசற்படிக்கு அருகில் நாகநந்தி
அடிகளும், அவருக்குப் பின்னால் வியப்புடன் உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டு
பரஞ்சோதியும் நின்று கொண்டிருந்தார்கள்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 10:47 pm

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

13. அமர சிருஷ்டி


புத்த பிக்ஷுவின் குரலைக் கேட்டதும் திரும்பிப் பார்த்த ஆயனர்,
விரைந்தெழுந்து, "வாருங்கள்! அடிகளே வாருங்கள்!" என்று கூறிக்கொண்டே
வாசற்படியண்டை சென்றார்.

சிவகாமி அவசரமாக எழுந்து அருகிலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.

உள்ளே பிரவேசித்த பிக்ஷு நாலாபுறமும் சுற்றிப் பார்த்து விட்டு "ஆயனரே!
நான் சென்ற தடவை வந்துபோன பின்னர், புதிய சிலைகள் செய்திருக்கிறீர்களோ?"
என்றார்.

"ஆம், சுவாமி! அப்புறம் பன்னிரண்டு ஹஸ்த வகைகளை அமைத்திருக்கிறேன். இதோ பாருங்கள்! இந்தச் சிலைகளெல்லாம் புதியவை!" என்றார் ஆயனர்.

பிக்ஷு ஆயனர் காட்டிய சிலைகளைக் கண்ணோட்டமாய்ப் பார்த்துவிட்டு, தூணைப்
பிடித்துக் கொண்டு நின்ற சிவகாமியை நோக்கியபடி, "அதோ அந்தத் தூணின்
அருகில் நிற்பதும், சிலைதானோ?" என்று வினவினார். அப்போது புத்த பிக்ஷுவின்
கடூர முகத்தில் தோன்றிய புன்னகை அந்த முகத்தின் விகாரத்தை அதிகமாக்கிற்று.

ஆயனர் சிரித்துக்கொண்டே, "இல்லை சுவாமி! அவள் என் பெண் சிவகாமி!...
குழந்தாய்! இதோ, நாகநந்தி அடிகள் வந்திருக்கிறார், பார்! பிக்ஷுவுக்கு
வந்தனம் செய்!" என்றார்.

சிவகாமி அச்சமயம், நாகநந்திக்குப் பின்னால் வந்த இளைஞனைக் கடைக் கண்ணால்
பார்த்துக் கொண்டிருந்தாள். ஆயனர் கூறியதைக் கேட்டதும் பிக்ஷுவின் பக்கம்
திரும்பி நமஸ்கரித்தாள்.

பிக்ஷுவுடன் உள்ளே பிரவேசித்த பரஞ்சோதி அந்தச் சிற்ப மண்டபத்தில்
நாலாபுறமும் காணப்பட்ட அதிசயங்களைப் பார்த்த வண்ணம் வாசற்படிக்கு
அருகிலேயே பிரமித்துப்போய் நின்றான். அம்மாதிரியான அபூர்வ வேலைப்பாடமைந்த
சிற்பங்களையும் சித்திரங்களையும் அவன் அதற்கு முன்னால் பார்த்ததே இல்லை.

இடையிடையே அவன் ஆயனர், சிவகாமி இவர்களையும் கவனித்தான். அன்று பல்லக்கில்
அமர்ந்திருந்தவர்கள் - மதயானையின் கோபத்திலிருந்து தன்னால்
காப்பாற்றப்பட்டவர்கள் அவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்டான்.

புத்த பிக்ஷுவை ஆர்வத்துடன் வரவேற்று அவருடன் பேசிக் கொண்டே சென்ற ஆயனர்
பரஞ்சோதியைக் கவனிக்கவே இல்லை; அவனைத் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை.

ஆனால், தூணருகில் நின்ற அவருடைய மகள் அவ்வப்போது தன்னைக் கடைக் கண்ணால்
கவனிப்பதைப் பரஞ்சோதி தெரிந்துகொண்டான். நடனத்துக்குரிய ஆடை ஆபரணங்களை
அணிந்து நின்ற சிவகாமியின் நவ யௌவன சௌந்தர்யத்தின் ஒளி பரஞ்சோதியின்
கண்களைக் கூசச் செய்தது.

கிராமாந்திரத்தில் பிறந்து வளர்ந்தவனும், இயற்கையில் சங்கோசமுடையவனும்,
தாயைத் தவிர வேறு பெண்களுடன் பழகி அறியாதவனுமான பரஞ்சோதியினால்
சிவகாமியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. அதிலும், சிவகாமி
தன்னைக் கவனிக்கிறாள் என்பதை அவன் அறிந்த பின்னர். அவர்கள் இருந்த பக்கமே
திரும்பாமல் எதிர்ப்புறக் கூடத்தில் காணப்பட்ட சிலைகளைப் பார்த்த வண்ணம்
நின்று கொண்டிருந்தான். அந்தச் சிலைகளின் தோற்றத்திலும், முக பாவத்திலும்
ஏதோ ஓர் அதிசயம் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அந்த அதிசயம்
இன்னதென்பது மின்வெட்டைப் போல் அவன் உள்ளத்தில் உதித்தது. ஆ! இந்தச்
சிலைகள் எல்லாம் தூணருகில் நின்று தன்னைக் கடைக்கண்ணால் பார்த்துக்
கொண்டிருக்கும் பெண்ணின் பல்வேறு தோற்றங்கள் தாம்! இந்த உண்மையை அவன்
உள்ளம் கண்டதும், சிவகாமியினிடம் அவனுக்குத் தெய்வங்களிடம் உண்டாவது போன்ற
பயபக்தி உண்டாயிற்று.

சிவகாமி புத்த பிக்ஷுவை நமஸ்கரித்தபோது அவர் ஆர்வம் ததும்பிய விழிகளால்
அவளை விழுங்குபவர்போல் பார்த்துவிட்டு "புத்த தேவர் அருளால் உன் கோரிக்கை
நிறைவேறட்டும், அம்மா! புத்த பிக்ஷுணி ஆக விரும்புவதாகச் சற்று முன்னால்
நீதானே சொல்லிக்கொண்டிருந்தாய்?" என்றார்.

இந்த ஆசி மொழியானது சிவகாமிக்கு அருவருப்பை உண்டாக்கியது என்று அவள்
முகபாவத்தில் தெரிந்தது. ஆயனருக்கும் அது பிடிக்கவில்லையென்பது அவருடைய
வார்த்தைகளில் வெளியாயிற்று.

"அடிகளே! குழந்தை ஏதோ வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். நாலு
நாளைக்கு முன்னால் காஞ்சியில், சிவகாமியின் அரங்கேற்றம் நடந்தது. ஆகா!
தாங்கள் அதற்கு இல்லாமல் போய்விட்டீர்களே!" என்றார் ஆயனர்.

"எல்லாம் கேள்விப்பட்டேன் அரங்கேற்றம், அதற்குப் பின்னால் நடந்தவை எல்லாம்
அறிந்து கொண்டேன். உங்களுக்குப் பெரிய ஆபத்து வந்ததாமே? மதயானையின்
கோபத்துக்குத் தப்பினீர்களாமே!" என்றார் பிக்ஷு.

"ஆம், சுவாமி! ஏதோ தெய்வத்தின் அருள் இருந்தபடியால் தப்பிப் பிழைத்தோம்...
தங்களுக்குச் சாவகாசம் தானே? இன்று பிக்ஷை இங்கேயே வைத்துக் கொள்ள
வேண்டும்" என்று கூறி, ஆயனர், பிக்ஷுவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.

"ஆகா! எனக்குச் சாவகாசந்தான். இன்றைக்குத் தங்கள் கிருஹத்திலே பிக்ஷை
என்று எண்ணிக் கொண்டுதான் வந்தேன். தங்களுக்கு அதிகச் சிரமம்
இல்லாவிட்டால்...?" என்று பிக்ஷு கூறுவதற்குள் "சிரமமா? என்னுடைய
பாக்கியம்!" என்றார் ஆயனர்.

முற்றத்தில் கிடந்த இரண்டு பெரிய கற்களில் இருவரும் எதிர் எதிராக
அமர்ந்தார்கள். "அம்மா, சிவகாமி! நீயும் உட்காரலாமே? அடிகளுக்குக்
கலைகளில் அபார பிரேமை, தெரியுமோ, இல்லையோ?" என்று ஆயனர் கூறிவிட்டு,
பிக்ஷுவைப் பார்த்துச் சற்று மெதுவான குரலில், "அடிகளே! அஜந்தா
சித்திரங்களைப் பற்றி ஏதாவது தகவல் வந்ததா?" என்று கேட்டார். அப்போது
அவருடைய முகத்தில் அளவிடக்கூடாத ஆர்வம் தோன்றியது.

ஆயனர் உட்காரச் சொல்லியும் சிவகாமி உட்காரவில்லை. தூணைப் பிடித்துக்கொண்டே
நின்றாள். அவளுடைய கவனம் இவர்களுடைய பேச்சில் இருந்தபோதிலும், இடையிடையே
கண்கள் பரஞ்சோதியையும் கவனித்தன.

புத்த பிக்ஷு ஆயனரின் கேள்விகளுக்கு மறுமொழி சொல்லாமல், "ஆயனரே!
தெய்வத்தின் சிருஷ்டியைக் காட்டிலும் தங்களுடைய சிருஷ்டியே மேல் என்று
எனக்குத் தோன்றுகிறது!" என்றார்.

"சுவாமி.." என்று ஆயனர் மறுமொழி சொல்ல ஆரம்பித்தபோது, பிக்ஷு அதற்கு
இடங்கொடாமல் தொடர்ந்து சொன்னார்: "நான் முகஸ்துதி செய்யவில்லை, ஆயனரே!
உண்மையைச் சொல்லுகிறேன். தெய்வத்தின் சிருஷ்டி அழிந்து போகக் கூடியது.
இந்த மனித உடம்புக்கு நூறு வயதுக்கு மேல் கிடையாது. நரை, திரை, மூப்புத்
துன்பங்கள் மனித தேகத்துக்கு உண்டு. ஆனால், நீர் அமைத்திருக்கிறீரே, இந்த
அற்புதச் சிலைகள், இவற்றுக்கு அழிவே இல்லையல்லவா? நரை, திரை, மூப்புத்
துன்பம் இந்தச் சிலைகளை அணுகாவல்லவா? கல்லால் அமைந்த இந்தச் சிலைகளில்
விளங்கும் ஜீவகளை ஆயிரம் ஆயிரம் வருஷங்கள் ஆனபோதிலும் மங்காமல்
பிரகாசிக்குமல்லவா? உம்முடைய சிருஷ்டி தெய்வ சிருஷ்டியைக் காட்டிலும் மேல்
என்பதில் சந்தேகம் என்ன?"

இதையெல்லாம் கேட்ட ஆயன சிற்பியின் முகத்தில் கலை ஞானத்தின் கர்வம்
தாண்டவமாடியது. "அடிகளே! தாங்கள் சொல்லும் பெருமை எல்லாம் சிவகாமிக்கே
சேரும். நடனக் கலையில் அவள் இவ்வளவு அற்புதத் தேர்ச்சி அடைந்திராவிட்டால்,
இந்தச் சிலை வடிவங்களை நான் எப்படி அமைத்திருக்க முடியும்?.. ஆஹா!
குழந்தையின் அரங்கேற்றத்துக்கு நீங்கள் இல்லாமல் போய்விட்டீர்களே!
ருத்ராச்சாரியார் பிரமித்து ஸ்தம்பித்து நின்றுவிட்டார். அன்றைக்கு
இரண்டுபேர் இல்லாமல் போனதாலே தான் எனக்கு வருத்தம். தாங்களும் இல்லை;
நாவுக்கரசர் பெருமானும் இல்லை..."

"ஆமாம், ஆமாம்! ஆயனரே! நாவுக்கரசர் சிவகாமியின் அரங்கேற்றத்தின்போது
இருந்திருந்தால் ரொம்பவும் குதூகலமடைந்திருப்பார். முக்கியமாக,
சக்கரவர்த்தியின் 'மத்தவிலாச'த்திலிருந்து எடுத்து அபிநயம் செய்த கட்டத்தை
ரொம்பவும் ரசித்திருப்பார் நாவுக்கரசர். மதுபானம் செய்த புத்த பிக்ஷுவும்
காபாலிகனும் சண்டையிட்ட இடம் வெகு ரசமாக இருந்திருக்குமே?"

ஆயனரின் முகம் சிறிது சுருங்கிற்று. "சுவாமி! ஹாஸ்ய ரஸத்தைக்
காட்டுவதற்காக அந்த விஷயத்தைச் சிவகாமி எடுத்துக் கொண்டாள். மற்றபடி
அவளுக்கு மகான்களாகிய புத்த பிக்ஷுக்களைப் பரிகசிக்கும் எண்ணம் கொஞ்சமும்
இல்லை!" என்றார்.

மகா ரசிகரும் சகல கலைகளிலும் வல்லவருமான மகேந்திரவர்ம சக்கரவர்த்தி
ஜைனராயிருந்தபோது, 'மத்த விலாஸம்' என்னும் ஹாஸ்ய நாடகத்தை
இயற்றியிருந்தார். அதில் காபாலிகர்களும் புத்த பிக்ஷுக்களும்
பெருங்கேலிக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள். அந்த நாடகத்தில் ஒரு
பகுதியைச் சிவகாமி அபிநயத்துக்கு விஷயமாக எடுத்துக் கொண்டிருந்தாள். அதைக்
குறித்துத்தான் மேற்கண்ட பேச்சு நடந்தது.

பின்னர் பிக்ஷு சொன்னார்: "வாஸ்தவந்தான்; ஹாஸ்ய ரசத்தை அபிநயித்துக் காட்ட
மிகவும் பொருத்தமான சம்பவம். காபாலிகன் புத்த பிக்ஷுவின் தலைக் குடுமியைப்
பிடிக்கப் பார்த்து, மொட்டைத் தலையைத் தடவி விட்டுக் கீழே விழும்
கட்டத்தில் ஹாஸ்ய ரசம் ததும்பியிருக்கும்! ஆனால், சபையோர் சிரித்து
முடிவதற்குள்ளே ஏதோ யுத்தத்தைப் பற்றிய செய்தி வந்து, சக்கரவர்த்தி
எழுந்து போய் விட்டாராமே? சபையும் கலைந்துவிட்டதாமே?.."

"ஆமாம், ஆமாம்! அதுதான் சற்று மனக் கிலேசத்தை அளித்தது. அதனாலேயே
சிவகாமிகூட நாலு நாளாக உற்சாகமில்லாமல் இருந்தாள். அரங்கேற்றத்துக்குப்
பிறகு இன்றைக்குத்தான் மறுபடியும் காலில் சதங்கை கட்டிக் கொண்டாள்.
அடிகளே, யுத்தம் எதற்காக வருகிறது? எதற்காக ஜனங்கள் ஒருவரையொருவர் கொன்று
கொண்டு சாகவேண்டும்?" என்றார் ஆயனர்.

"ஆயனரே! அந்தக் கேள்வியை ஏழை பிக்ஷுவாகிய என்னிடம் கேட்டு என்ன பிரயோஜனம்?
உலகத்திலுள்ள திரிபுவன சக்கரவர்த்திகளையும், குமார சக்கரவர்த்திகளையும்,
மகாராஜாக்களையும் யுவ ராஜாக்களையும், சிற்றரசர்களையும் படைத்
தலைவர்களையும் கேட்கவேண்டும். கொலையும் கொடூரமும் நிறைந்த இந்த உலகத்தில்
புத்த பகவான் அவதரித்து அன்பு மதத்தைப் பரப்பினார். அதற்காகப்
பிக்ஷுக்களின் சங்கத்தையும் ஸ்தாபித்தார். அந்தப் புத்த பிக்ஷுக்களை ராஜ
சபைகளில் பரிகசித்துச் சிரிக்கும் காலம் இது! யுத்தம் ஏன் வருகிறது என்று
என்னைக் கேட்டு என்ன பயன்?"

அந்தப் பொல்லாத புத்த பிக்ஷுவிடம், பேச்சு யுத்தத்தில் அகப்பட்டுக்கொண்டு
தன் தந்தை திணறுவதைச் சிவகாமி அறிந்தாள். அவளுடைய கண்களில் கோபக் கனல்
வீசிற்று. அவள், "அப்பா! புத்த பகவான் அன்பு மதத்தையும் அஹிம்சா
தர்மத்தையும் உபதேசித்தது உண்மைதான். ஆனால் இந்தக் காலத்தில் அந்தப் புத்த
பகவானுடைய பெயரைச் சொல்லிக் கொண்டு போலி பிக்ஷுக்கள் தோன்றி, மக்களை
வஞ்சித்து ஏமாற்றி வருகிறார்கள். அதனால்தான் யுத்தம் முதலிய விபரீதங்கள்
வருகின்றன!" என்றாள்.

ஆயனருக்கு, 'இதேதடா வம்பு?' என்று தோன்றியது. அங்கிருந்து சிவகாமியை
எப்படியாவது அனுப்பிவிட எண்ணி அவளை இரக்கம் தோன்றப் பார்த்து, "குழந்தாய்,
சிவகாமி! நீ வேணுமானால் உள்ளே அத்தையிடம் போய்.." என்று ஏதோ சொல்ல
ஆரம்பித்தார்.

அதற்குள் நாகநந்தி, "ஆயனரே! நான் தோற்றேன். சிவகாமி மிகவும் புத்திசாலி!
அவள் சொல்லியதில் ரொம்பவும் உண்மை இருக்கிறது!" என்றார். அவருடைய கடூர
முகத்தில் மறுபடியும் ஒரு கண நேரம் விசித்திரமான புன்னகை காணப்பட்டது.

பேச்சை வேறு வழியில் திருப்பியாக வேண்டுமென்று ஆயனர் கருதிச் சுற்று
முற்றும் பார்த்தார். அப்போது அவருடைய பார்வை அம்மண்டபத்தின் இன்னொரு
பக்கத்தில் சிலைகளையும் சித்திரங்களையும் பார்த்துக் கொண்டு நின்ற
பரஞ்சோதியின் மேல் விழுந்தது.

"சுவாமி! அந்தப் பிள்ளை யார்? உங்களுடைய சீடனா?" என்று கேட்டார் ஆயனர்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 10:48 pm

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

14. தாமரைக் குளம்


தன்னைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பது காதில் விழுந்ததும் பரஞ்சோதி அவர்கள் இருந்த பக்கம் திரும்பிப் பார்த்தான்.

அதே சமயத்தில் புத்த பிக்ஷு, "என்னுடைய சீடன் இல்லை, ஆயனரே! தங்களுடைய சீடனாகப் போகிறவன். பரஞ்சோதி! இங்கே வா!" என்றார்.

பரஞ்சோதி அவர்களருகில் நெருங்கி வந்தான். அப்போதுதான் அவனை நன்றாகக்
கவனித்த ஆயனர் வியப்புடன், "யார் இந்தப் பிள்ளை? எங்கேயோ பார்த்த மாதிரி
இருக்கிறது?" என்றார்.

"அப்பா! உங்களுக்குத் தெரியவில்லையா? அன்றைய தினம் மத யானையின்மேல் வேலை
எறிந்தாரே, அவர்தான்!" என்று உற்சாகத்துடன் கூறினாள் சிவகாமி.

பரஞ்சோதி நன்றியறிதலுடன் சிவகாமியை ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்தான்.

ஆயனரின் முகத்தில் ஆச்சரியமும் ஆர்வமும் பொங்கின. "என்ன? என்ன? அந்த வீர
வாலிபனா இவன்? என்ன லாகவமாய் வேலை எறிந்தான். மாமல்லர்கூட
அதிசயிக்கும்படி! இவனுக்கு எந்த ஊர்? இத்தனை நாளும் எங்கே இருந்தான்?
தங்களை எப்போது சந்தித்தான்...?" என்று சரமாரியாக ஆயனர் கேள்விகளை
அடுக்கினார்.

சாதாரணமாக, ஆயனர் தாம் ஈடுபட்டுள்ள கலைகளின் விஷயத்திலே தவிர, வேறெதிலும் இவ்வளவு ஆர்வம் காட்டிப் பேசுவதில்லை.

"சித்தர்வாச மலைக்குப் போய்விட்டுத் திரும்பும்போது இந்தப் பிள்ளையை
வழியில் பார்த்தேன்.." என்று பிக்ஷு ஆரம்பிப்பதற்குள்ளே ஆயனர் பரஞ்சோதியை
மறந்து விட்டார்.

"ஆஹா, அடிகள் சித்தர் மலைக்கா போயிருந்தீர்கள்? அங்கேயுள்ள சித்திர அதிசயங்களைப் பார்த்தீர்களா?" என்றார்.

"பார்த்தேன், ஆயனரே! அதைப்பற்றி அப்புறம் சொல்லுகிறேன். நான் வரும்
வழியில் சாலை ஓரத்தில் இந்தப் பிள்ளை படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான்.
இவனை ஒரு பெரிய நாக சர்ப்பம் கடிக்க இருந்தது. என்னுடைய கொல்லா விரதத்தைக்
கூடக் கைவிட்டு அந்த நாகத்தைக் கொன்று இவனைக் காப்பாற்றினேன்..."

"இது நல்ல வேடிக்கை! தங்கள் திருநாமம் நாகநந்தி! இவனை நாகம் தீண்டாமல்
தாங்கள் காப்பாற்றினீர்கள்! இவன் எங்களை நாகம் கொல்லாமல் காப்பாற்றினான்!
ஆஹா! ஹா!" என்று ஆயனர் சிரித்தார்.

நாகம் என்பது சர்ப்பத்துக்கும் யானைக்கும் பெயரானபடியால் ஆயனருக்கு மேற்படி சிலேடைப் பொருத்தம் மிக்க விநோதத்தை அளித்தது.

புத்த பிக்ஷு, "இவனை நான் காப்பாற்றியதனால் பல காரியங்களுக்குச்
சாதகமாயிற்று. தங்களுக்கு இவன் ஓலை கொண்டு வந்திருக்கிறான்!" என்றார்.

"ஓலையா? யாரிடமிருந்து?"

"திருவெண்காட்டு நமசிவாய வைத்தியரிடமிருந்து, அவருடைய மருமகன் இவன்!"

ஆயனர் ஆர்வத்துடன் எழுந்து, "என் அருமைச் சிநேகிதரின் மருமகனா நீ? உன்
பெயர் என்ன, தம்பி!" என்று கேட்டுக் கொண்டே பரஞ்சோதியைத் தழுவிக்கொண்டார்.

பிறகு, "ஓலை எங்கே?" என்று கேட்டார்.

பரஞ்சோதி நாகநந்தியை நோக்கினான் அவர், "ஆயனரே ஓலை காணாமல்
போய்விட்டபடியால் வாலிபன் இங்கு வருவதற்கே தயங்கினான். அதற்காகவே இவனை
நான் அழைத்துக்கொண்டு வந்தேன். இவனுடைய மாமன் தங்களுக்கும்
நாவுக்கரசருக்கும் ஓலைகள் கொடுத்திருந்தாராம். அந்த ஓலைகளை மூட்டைக்குள்
கட்டி வைத்திருந்தான். அன்றிரவு யானைமேல் வேல் எறிந்த இடத்தில் மூட்டை
காணாமல் போய் விட்டது..." என்று நிறுத்தினார்.

அப்போது ஆயனர், "ஆமாம், ஆமாம்! யானை நின்ற இடத்தில் ஒரு மூட்டை கிடந்தது.
அதை நான் எடுத்து வந்தேன். ஆனால், மறுநாள் கோட்டைக் காவல் தலைவர் ஆள்
அனுப்பி அதை வாங்கிக்கொண்டு போய்விட்டார். போனால் போகட்டும், என் அருமை
நண்பரின் மருமகன் என்று சொன்னால் போதாதா! ஓலை வேறு வேணுமா?.. சிவகாமி,
நம்மைப் பெரும் விபத்திலிருந்து காப்பாற்றிய வீரப்பிள்ளை இவன்தான்
இவனுக்கு உன்னுடைய நன்றியைத் தெரியப்படுத்து!" என்றார்.

சிவகாமி பரஞ்சோதியைப் பார்த்தவண்ணம், "இவருக்கு நான் நன்றி செலுத்தப்
போவதில்லை. இவரை யார் விதிக்குக் குறுக்கே வந்து வேலை எறியச் சொன்னது?
இவர் பாட்டுக்கு இவர் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போவதுதானே?" என்றாள்.

சிவகாமியின் இந்தக் கடுஞ்சொல், கேட்டுக்கொண்டிருந்த மூன்று பேரையும் சிறிது திடுக்கிடச் செய்தது.

நாகநந்தி ஆயனரைப் பார்த்து, "உங்கள் குமாரிக்கு என்ன ஏதாவது உடம்பு குணமில்லையா?" என்று கேட்டார்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை, சுவாமி! அன்று அரங்கேற்றம் நடுவில்
தடைப்பட்டதிலிருந்து அவளுக்கு உற்சாகக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அது ஏதோ
அபசகுனம் என்று நினைக்கிறாள்... சிவகாமி! நீ உன் அத்தையிடம்போய்,
'அதிதிகள் வந்திருக்கிறார்கள்' என்று சொல்லு, அம்மா!" என்றார்.

"ஆகட்டும், அப்பா!" என்று சொல்லிவிட்டுச் சிவகாமி அந்த வீட்டின் பின்கட்டை
நோக்கிச் சென்றாள். மண்டபத்தின் பின்வாசற்படியை அவள் தாண்டிக் கொண்டிருந்த
போது, புத்த பிக்ஷு பின்வருமாறு பரிகாசக் குரலில் சொன்னது அவள் காதில்
இலேசாக விழுந்தது. "உம்முடைய குமாரியைத் தாங்கள் நன்றாகக்
கவனிக்கவேண்டும், ஆயனரே! சாதாரணமாக, இளம் பெண்கள் உயிரின்மேல் வெறுப்புக்
கொண்டார்கள் என்றால், அதற்குக் காரணம் காம தேவனுடைய புஷ்ப பாணங்களாகத்தான்
இருக்கும் என்பது உமக்குத் தெரியாதா?"

சிவகாமி தனக்குள், "இந்த புத்த பிக்ஷு பொல்லாதவர்; நெஞ்சிலும் நாவிலும்
நஞ்சு உடையவர்; இவருடன் அப்பாவுக்கு என்ன சிநேகம் வேண்டிக் கிடக்கிறது?"
என்று சொல்லிக் கொண்டாள்.

இரண்டாங் கட்டுக்குள் சிவகாமி நுழைந்ததும் அங்கே 'கலகல' என்றும் 'சடசட'
என்றும், பலவிதமான சப்தங்கள் ஏக காலத்தில் உண்டாயின. பச்சைக் கிளிகளும்
பஞ்சவர்ணக் கிளிகளும், 'அக்கா! அக்கா! என்று கூவின. நாகணவாய்ப் புட்கள்
'கிக்கி!' என்றன. புறாக்கள் 'சடசட' என்றும், சிறகுகளை அடித்துக் கொண்டன.
முற்றத்துக் கூரைமேல் உட்கார்ந்திருந்த மயில் 'ஜிவ்'வென்று பறந்து தரைக்கு
வந்தது. அங்கிருந்த மான்குட்டி மட்டும் சப்தம் ஒன்றும் செய்யாமல்,
சிவகாமியின் முகத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு அவள் அருகில் வந்து
நின்றது.

இந்தப் பட்சிகள், மிருகங்கள் எல்லாம் சிவகாமி விளையாடிப்
பொழுதுபோக்குவதற்காகவும், ஆயனரின் சிற்ப சித்திரவேலைகளுக்காகவும்
இரண்டாவது கட்டில் வளர்க்கப்பட்டு வந்தன.

சிவகாமி பிரவேசித்ததும் அவை போட்ட சத்தத்தைக் கேட்டு, "சீ!
பேசாமலிருங்கள்! தலைவேதனை!" என்று அதட்டினாள். உடனே அங்கு அதிசயமான
நிசப்தம் உண்டாயிற்று.

சிவகாமி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு "இன்றைக்கு ரதியைத்தான்
அழைத்துப் போக வேண்டும். ரதிதான் சத்தம் போடாமல் வருவாள்! ரதி வா!" என்று
கூறிவிட்டு மேலே சென்றபோது, மான்குட்டி மட்டும் அவளைத் தொடர்ந்து சென்றது.
மற்ற பட்சிகள் மௌனமாயிருந்த போதிலும், தலையைச் சாய்த்துக்கொண்டும் மற்றும்
பலவிதக் கோணங்கள் செய்து கொண்டும் ரதியைப் பொறாமை ததும்பிய கண்களால்
நோக்கின.

இரண்டாவது கட்டைத் தாண்டியதும், மூன்றாவது கட்டு ஒன்று இருந்தது. அது
சமையல் கட்டு என்பது, அங்கு வந்த புகையினாலும், அடுப்பிலிருந்து வந்த
பலவகை உணவுப் பதார்த்தங்களின் நறுமணங்களினாலும் தெரியவந்தது.

தாழ்வாரத்தில் நின்றபடி, "அத்தை!" என்று கூப்பிட்டாள் சிவகாமி.

"ஏன், குழந்தாய்?" என்று கேட்டுக்கொண்டு ஒரு மூதாட்டி சமையல் அறை வாசலில் தோன்றினாள்.

"அதிதிகள் இரண்டுபேர் வந்திருக்கிறார்கள். முன்னொரு தடவை வந்தாரே கடுவன்
பூனை போன்ற முகத்துடனே ஒரு புத்த பிக்ஷு அவர் வந்திருக்கிறார்" என்றாள்
சிவகாமி.

"பெரியவர்களைப்பற்றி இப்படியெல்லாம் சொல்லாதே, கண்ணே நீ எங்கே கிளம்புகிறாய், ரதியையும் அழைத்துக் கொண்டு?" என்று மூதாட்டி கேட்டாள்.

"அப்பாவும் அந்தப் புத்த பிக்ஷுவும் ஏதோ தர்க்கம் செய்து
கொண்டிருக்கிறார்கள். அது முடிகிறவரையில் நான் தாமரைக் குளத்துக்குப்
போய்வருகிறேன்!" என்று சொல்லி விட்டுச் சிவகாமி சமையற்கட்டைத்
தாண்டிச்சென்று வீட்டின் கொல்லைப்புறத்தை அடைந்தாள்.

கொல்லைப்புறத்தில் வீட்டைச் சேர்ந்தாற்போல் மல்லிகை, முல்லை, அலரி,
பாரிஜாதம், சம்பங்கி முதலிய பூஞ்செடிகளும் கொடிகளும் காணப்பட்டன.
அவற்றையெல்லாம் தாண்டி மரங்களடர்ந்த வனப் பிரதேசத்துக்குள்ளே சிவகாமி
பிரவேசித்தாள். அந்தக் காட்டில் நடக்கும் போது அவள் ரதியிடம் பின்வருமாறு
சொல்லிக்கொண்டு போனாள்.

"என்ன ரதி! அப்பாவுக்கு என் அரங்கேற்றத்தின்போது இரண்டே இரண்டுபேர்
வரவில்லை என்றுதான் வருத்தமாம்! இந்தப் புத்த பிக்ஷு வந்து என்
அரங்கேற்றத்தைப் பார்க்கவில்லையென்று வருத்தம் என்ன வந்தது?.. யாருடைய
பாராட்டுதலைப் பெறுவதற்காக நான் இரவு பகலாய்ப் படாதபாடுபட்டு இந்த
நிருத்தியக் கலையைப் பயின்றேனோ, அவர் அன்றைக்கு வரவில்லை. இந்தப் பெரிய
பல்லவ ராஜ்யத்துக்குள்ளே யார் மகா ரசிகரோ, அப்பேர்ப்பட்டவர் வரவில்லை. ஏழு
வருடங்களுக்கு முந்தி, நான் உன்னைப் போல் சிறு குழந்தையாய் இருந்த
காலத்தில், எவர் என்னுடன் கைகோத்து நின்று தாமும் நடனம் ஆடுவேன் என்று
பிடிவாதம் பிடித்தாரோ - தமக்கும் நடனக் கலை சொல்லிக் கொடுக்கும்படி எவர்
என் மோவாய்க்கட்டையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாரோ - அவர் வரவில்லை, ரதி
நீயே சொல்லு! ஆண் பிள்ளைகளைப்போல் பொல்லாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா...?"

ரதி பாவம், சிவகாமி தன்னிடம் சொல்லிக்கொண்டுவந்த விஷயங்களின்
முக்கியத்துவத்தைக் கொஞ்சமும் அறிந்து கொள்ளாமல் ஆங்காங்குத் தரையில்
காணப்பட்ட அறுகம்புல்லின் நுனியைக் கடித்து மென்றுகொண்டு வந்தது.

அரை நாழிகை நேரம் அவர்கள் காட்டுக்குள் நடந்து வந்த பிறகு, கொஞ்சம்
இடைவெளி காணப்பட்டது. அந்த இடைவெளியில், ஓர் அழகிய தடாகம் இருந்தது. அதில்
தாமரை, செங்கழுநீர், நீலோத்பலம் முதலிய மலர்கள் செழித்து வளர்ந்திருந்தன.
சிவகாமி அந்தக் குளத்தில் இறங்கி நீர்க்கரை ஓரமாய் நின்று தண்ணீரில்
தன்னுடைய நிழலைப் பார்த்தவண்ணம் பேசினாள்.

"ரதி! இதைப் பார்! அவர்மட்டும் இனிமேல் எப்போதாவது வரட்டும், நான்
முகங்கொடுத்துப் பேசப் போவதே இல்லை! 'போதும், உம்முடைய சிநேகிதம்! போய்
விட்டு வாரும்!' என்று கண்டிப்பாய்ச் சொல்லுகிறேனா, இல்லையா, பார்!" என்று
சொல்லிய வண்ணம், அதற்கேற்ப அபிநயம் பிடித்தாள்.

சிவகாமி குளக்கரையில் வந்து நின்ற சிறிது நேரத்துக்கெல்லாம் காட்டில்
சற்றுத் தூரத்தில் ஓர் உயர்ந்த ஜாதிக் குதிரை வந்து நின்றது. அதன்மேல்
வீற்றிருந்த வீரன் சத்தம் செய்யாமல் குதிரை மேலிருந்து இறங்கித் தடாகத்தை
நோக்கி வந்தான்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 10:49 pm

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

15. ரதியின் தூது

குதிரை வந்த சப்தம் சிவகாமியின் செவியில் விழுந்தது.
குதிரை நின்றதையும் அதன்மேல் வந்த வீரன் இறங்கித் தன்னை நோக்கி நடந்து
வருவதையும் அவள் உணர்ந்தாள். வருகிறது இன்னார்தாம் என்பதை அவளுடைய நெஞ்சு
அவளுக்கு உணர்த்தியது. இருந்தாலும், திரும்பிப் பார்த்துச் சந்தேகம்
தீரவேண்டுமென்ற ஆவல் அளவில்லாமல் எழுந்தது. அந்த ஆவலைப் பலவந்தமாக
அடக்கிக்கொண்டு, சிவகாமி சிலையைப்போல் அசையாமல் நின்றுகொண்டிருந்தாள்.

குமார சக்கரவர்த்தி, மாமல்ல நரசிம்மர் கையில் பிடித்த வேலுடன் வந்து
சிவகாமியின் அருகில் குளக்கரைப்படியில் நின்றார். குளத்தின் தெளிந்த
நீரில் சிவகாமியின் உருவத்துக்குப் பக்கத்தில் நரசிம்மவர்மரின் உருவமும்
புலப்பட்டது. அப்போதும் சிவகாமி அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை.

வீர சௌந்தரியம் குடிகொண்டு தேஜஸுடன் விளங்கிய நரசிம்மரின் நவ யௌவன
முகத்தில் இலேசாகப் புன்னகை அரும்பியது. அவரும் சிவகாமியை நேராகப்
பார்க்காமல், தண்ணீரில் பிரதிபலித்த அவளுடைய முழுமதி முகத்தை உற்று
நோக்கினார்.

சிவகாமி சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு அவளுக்கு இன்னொரு
பக்கத்தில் நின்ற மான்குட்டியைப் பார்த்து, "ரதி! இவர் யார்? எதற்காக
இங்கு வந்தார் என்று கேள்?" என்றாள்.

இதைக் கேட்ட நரசிம்மரின் முகத்தில் புன்னகை மறைந்தது, புருவங்கள்
நெறிந்தன. அவரும் ரதியைப் பார்த்து, "ரதி! உன் எஜமானி பரத கண்டத்திலேயே
இணையற்ற பரத கலாராணியாகிவிட்டாள் அல்லவா? பழைய சிநேகத்தை நினைவு
வைத்திருக்க முடியுமா? 'இவர் யார்?' என்று கேட்கத்தான் தோன்றும். இது
ஒன்றும் எனக்கு ஆச்சரியமில்லை, ரதி!" என்றார்.

சிவகாமி ஆத்திரம் நிறைந்த குரலில் கூறினாள்: "ரதி! ஆச்சரியத்தையே
அறியாதவரான சக்கரவர்த்தியின் திருக்குமாரருக்கு என்னுடைய ஆயிரங்கோடி
நமஸ்காரத்தைச் சொல்லிவிட்டு இதையும் சொல்லு. அவரோ பூமண்டலாதிபதியின்
புதல்வர்! தேசதேசங்களின் ராஜராஜாக்கள் எல்லாம் தம் திருப்பாதங்களில்
விழுந்து வணங்கப்பெற்ற பிரபு; அப்பேர்ப்பட்டவர்க்கும் இந்த ஏழைச்
சிற்பியின் மகளுக்கும் சிநேகம் எப்படிச் சாத்தியம்? அந்த எட்டாத
பழத்துக்கு ஆசைப்பட்டது என்னுடைய அறிவீனந்தான் என்பதை உணர்ந்து கொண்டேன்,
ரதி!"

மாமல்லர் பரிகாசம் தொனித்த குரலில் சொன்னார்: "ரதி! உன் எஜமானிக்கு ஒரு
விஷயத்தை ஞாபகப்படுத்து. பரத சாஸ்திர பண்டிதையான சிவகாமி தேவி இப்போது
ஆடரங்கத்தில் நிற்கவில்லை; அபிநயம் பிடிக்கவில்லை. நிருத்தம்,
நிருத்தியம், ஹஸ்தம் அபிநயம் ஆகியவைகளைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்து விட்டு
என்னுடன் சுபாவிகமாகப் பேசச் சொல்லு!"

இயற்கையில் செவ்வரியோடிய சிவகாமியின் கண்கள் இப்போது கோபத்தினால் கோவைப்பழம்போல் சிவந்தன.

"ஆமாம் ரதி, ஆமாம்! நான் நடன அரங்கத்தில் நடிக்கும் நாடகக்காரிதான்.
காஞ்சிச் சக்கரவர்த்தியின் திருக்குமாரர் எங்கே? ஆயனச் சிற்பியின் மகள்
எங்கே? மாமல்லரின் அருளைப் பெறுவதற்கு அரண்மனைகளிலும் அந்தப்புரங்களிலும்
வளரும் எத்தனையோ இராஜகுமாரிகள் தவங்கிடக்கிறார்கள்! அரங்க மேடையில் ஏறி
ஆடும் இந்த ஏழைப் பெண்ணின் ஞாபகம் அவருக்கு எப்படி இருக்கும்?" என்று
சிவகாமி சொன்னபோது, அவளுடைய குரல் தழுதழுத்தது. அவளுடைய கண்களில் நீர்
துளித்தது.

நரசிம்மவர்மர் மனங்கனிந்தவராய் அன்பு ததும்பிய குரலில் "சிவகாமி! ஏன்
இப்படியெல்லாம் பேசுகிறாய்? இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு நான்
உண்மையில் தலைவனாகும்போது, அரங்க மேடையில் சதங்கை ஒலிக்க ஆடும் உன் அழகிய
பாதங்களுக்கு அந்தப் பதவியை அர்ப்பணம் செய்வேன். என் உள்ளம் உனக்குத்
தெரியாதா?" என்றார்.

இதனாலும் சிவகாமியின் மனம் மாறவில்லை. மீண்டும் அவள் மான் குட்டியையே
பார்த்தவளாய், "ரதி! கதைகளிலும் காவியங்களிலும் புருஷர்களுடைய
நயவஞ்சகத்தைப் பற்றி எவ்வளவோ கேட்டறிந்திருக்கிறேன். ஆனால் அவர்களில்
யாரும் காஞ்சி குமார சக்கரவர்த்திக்கு இணையாக மாட்டார்கள்" என்றாள்.

நரசிம்மவர்மருக்கு இப்போது உண்மையாகவே கோபம் வந்ததென்று அவருடைய
புருவங்களின் நெறிப்பிலிருந்து தெரிந்தது. "சிவகாமி! ஏன் இன்றைக்கு
இவ்விதம் மாறிப்போயிருக்கிறாய்? எவ்வளவோ ஆசையுடன் நான் உன்னைத் தேடி
வந்தேன். எவ்வளவோ விஷயங்கள் பேச எண்ணியிருந்தேன். நான் வந்ததே உனக்குப்
பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது இதோ போகிறேன்" என்று ஓர் அடி எடுத்து
வைத்தார்.

அப்போது சிவகாமி விம்மிய குரலில், "ரதி! அவர் போகிறதாயிருந்தால் போகட்டும்
ஆனால், குற்றத்தை என் பேரில் சுமத்தி விட்டுப் போகவேண்டாமென்று சொல்லு!"
என்றாள்.

நரசிம்மர் மேலே அடி எடுத்து வைக்காமல் நின்று, "நான் தான் என்ன குற்றம்
செய்துவிட்டேன்? அதைச் சொல்லிவிட்டுக் கோபித்துக்கொண்டால் மிகவும்
நன்றாயிருக்கும்!" என்றார்.

சிவகாமி பெண் சிங்கத்தைப்போல் கம்பீரமாக அவரைத் திரும்பிப் பார்த்து,
"என்னுடைய நடனக் கலையைப் பற்றி எப்படி எப்படியெல்லாம் பாராட்டிப்
பேசினீர்கள்! எவ்வளவெல்லாம் முகஸ்துதி செய்தீர்கள்! அப்படியெல்லாம்
பேசிவிட்டு, என் அரங்கேற்றத்துக்கு ஏன் வராமல் இருந்தீர்கள்?" என்று
கண்களில் கனல் பறக்கக் கேட்டாள்.

நரசிம்மர் 'கலகல'வென்று சிரித்து, "இதை முன்னமேயே கேட்டிருக்கக் கூடாதா?
நான் அரங்கேற்றத்துக்கு வரவில்லையென்று உனக்கு யார் சொன்னது? மேல்
உப்பரிகையில் என் தாய்மார்களோடு உட்கார்ந்து 'பார்த்துக்கொண்டுதான்
இருந்தேன். அவர்களுக்குப் பரத சாஸ்திர நுட்பங்களைப்பற்றி அவ்வப்போது
எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் சபையில் நேரில் வந்து
உட்கார்ந்தால், ஒருவேளை உன் ஆட்டத்துக்குப் பங்கம் விளையுமோ என்று
பயந்தேன். அதற்காக இவ்வளவு ஆர்ப்பாட்டமா?" என்று கேட்டபோது, சிவகாமியின்
முகத்தில் அதுவரை காணப்படாத மகிழ்ச்சியும் மலர்ச்சியும் தோன்றின.

நரசிம்மரை ஆர்வத்துடன் நோக்கி, "இதை ஏன் முன்னமே நீங்கள் சொல்லவில்லை?" என்று கேட்டாள்.

"சொல்வதற்கு நீ இடம் கொடுத்தால்தானே? இன்னும் எவ்வளவோ
சொல்லவேண்டியிருக்கிறது. உன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்து பேசலாம்,
வா!" என்று கூறி, நரசிம்மர் குளக்கரையில் மரத்தடியில் அமைந்திருந்த
பலகையைப் பார்த்தவாறு சிவகாமியின் கரத்தைப் பிடித்து அழைத்துப் போக
யத்தனித்தார். சிவகாமியோ, அவர் பிடித்த கையைச் சட்டென்று இழுத்துக்கொண்டு,
மானைப்போல் துள்ளிக் கரைமீது ஏறினாள்.

அவர்கள் இருவரும் போய் மரத்தடியில் போட்டிருந்த பலகையில் உட்கார்ந்ததை ரதி
தலை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. இனி நம்முடைய தூது
இவர்களுக்குத் தேவையில்லை என்பதைத் தெரிந்துகொண்டதுபோல், அது
குளத்தோரமாகக் 'கருகரு'வென்று வளர்ந்திருந்த பசும் புல்லை மேயச் சென்றது.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 10:50 pm

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

பதினாறாம் அத்தியாயம் - தடைப்பட்ட திருமணம்

பலகையில் உட்கார்ந்த பிறகும் சிவகாமி வேறு பக்கம்
முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பதைப் பார்த்த நரசிம்மர், "இன்னும் என்ன
கோபம், சிவகாமி? இப்படி நீ பிடிவாதம் பிடிக்கும் பட்சத்தில் என்னிடம்
உனக்குப் பிரியம் இல்லை என்றுதான் எண்ணிக்கொள்வேன்" என்றார்.

சிவகாமி உடனே திரும்பி, நரசிம்மரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்து,
"உங்களுக்கு மட்டும் என்னிடம் பிரியம் இருக்கிறதா? இருந்தால் இந்த மூன்று
நாளாக என்னுடைய ஞாபகம் இல்லாமல் போனதேன்?" என்று கேட்டாள்.

"இந்த மூன்று தினங்களாக நானும் உன்னைப் பார்க்க வரவேணுமென்று
துடித்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் முக்கியமான இராஜாங்க வேலைகள்
குறுக்கிட்டன. அன்றைக்கு உன்னுடைய அரங்கேற்றத்தை நடுவில் முடிக்கும்படி
நேர்ந்தது ஏன் என்று உனக்குத் தெரியாதா? பல்லவ சாம்ராஜ்யத்தில் பல
வருஷங்களாக இல்லாத பெரிய யுத்தம் வந்திருக்கிறது..."

இவ்விதம் நரசிம்மர் சொல்லி வந்தபோது சிவகாமி குறுக்கிட்டு, "நானும்
கேள்விப்பட்டேன். யுத்தம் வந்து விட்டதே என்று நினைத்து நினைத்துக்
கவலைப்பட்டுக் கொண்டிருந்தீர்களாக்கும்!" என்றாள்.

"கவலையா? ஒருநாளும் இல்லை, சிவகாமி! பல்லவ குலத்தில் பிறந்தவர்கள் யுத்தம்
வந்துவிட்டதே என்று கவலைப்பட மாட்டார்கள், குதூகலப்படுவார்கள். என்
பாட்டனார் சிம்ம விஷ்ணு மகாராஜாவின் காலத்திலிருந்து பல்லவ
சாம்ராஜ்யத்தில் யுத்தம் நேரவில்லை. பல்லவ சேனா வீரர்களின் கையில்
வேல்களும் வாள்களும் துருப்பிடித்து வந்தன. இப்போது அவற்றுக்கெல்லாம் வேலை
வந்திருக்கிறது. போர்க்களத்தில் ஆயிரக்கணக்கில் மின்னிப் பாயும்
வேல்களையும், வாள்களையும் கண்டு பயப்படுகிறவன் நான் அல்ல. ஆனால், உன்னுடைய
கரிய விழிகளிலிருந்து கிளம்பிப் பாயும் வாள்களையும் வேல்களையும் கண்டுதான்
அஞ்சுகிறேன்!"

சிவகாமி தன்னை மீறி வந்த புன்முறுவலை அடக்கிக் கொள்ள முடியாதவளாய்,
"புருஷர்களே இப்படித்தான் போலிருக்கிறது. சாதுர்யமாயும் சக்கரவட்டமாயும்
பேசி உண்மையை மறைக்கப் பார்ப்பார்கள்" என்று முணுமுணுத்தாள்.

ஆனாலும், அந்த வார்த்தைகள் நரசிம்மரின் காதில் விழாமல் போகவில்லை.
"பழிமேல் பழியாகச் சுமத்திக் கொண்டிருக்கிறாயே? எந்த உண்மையை நான்
மறைக்கப் பார்த்தேன்!" என்று மாமல்லர் கேட்டார்.

"பின்னே, நீங்கள் யுத்தத்துக்குப் பயப்படுகிறவர் என்று நான் சொன்னேனா?
நீங்கள் வீராதி வீரர், சிம்ம விஷ்ணு மகாராஜாவின் பேரர், மகேந்திர
சக்கரவர்த்தியின் குமாரர் என்பதெல்லாம் எனக்குத் தெரியாதா? இந்த யுத்தம்
வந்ததனால் திருமணம் தடைப்பட்டுவிட்டதே? அதைப்பற்றிக்
கவலைப்படுகிறீர்களாக்கும் என்று தானே சொன்னேன்?"

இவ்விதம் சிவகாமி கூறியபோது, அவளுடைய முகத்தில் நாணத்துடன் கோபம்
போராடியது. நரசிம்மர் வியப்புடன், "சிவகாமி! என்ன சொல்லுகிறாய்? திருமணம்
தடைப்பட்டு விட்டதா? யாருடைய திருமணம்?" என்று கேட்டார்.

"ஓகோ! உங்களுக்குத் தெரியவே தெரியாதுபோல் இருக்கிறது. நான் சொல்லட்டுமா!
காஞ்சி மாநகரத்தில் மகாராஜாதிராஜதிரிபுவன சக்கரவர்த்தி மகேந்திரவர்ம
பல்லவர் இருக்கிறாரோ, இல்லையோ, அந்தச் சக்கரவர்த்திக்குத் தேசமெல்லாம்
புகழ்பெற்ற மாமல்லர் என்னும் திருக்குமாரர் ஒருவர் உண்டு. அந்தக் குமார
சக்கரவர்த்திக்குத் திருமணம் பேசி வருவதற்காக மதுரைக்கும், வஞ்சிக்கும்,
இன்னும் வட தேசத்துக்கும் தூதர்களை அனுப்ப ஏற்பாடாகி இருந்ததாம்.
அப்பேர்ப்பட்ட சமயத்தில் யாரோ ஒரு பொல்லாத அரசன் பல்லவ ராஜ்யத்துக்குள்
படையெடுத்து வரவே கல்யாணத்தைத் தள்ளிப் போடவேண்டியதாகி விட்டது. இதெல்லாம்
தங்களுக்குத் தெரியாதல்லவா?" என்றாள் சிவகாமி.

நரசிம்மர் 'கலகல' வென்று சிரித்துவிட்டு, "இதற்குத்தானா இவ்வளவு
பாடுபடுத்தினாய்? நான் பயந்து போய் விட்டேன். உனக்குத்தான் ஒருவேளை ஆயனர்
திருமணம் நிச்சயம் செய்துவிட்டாரோ என்று! அப்படி ஒன்றும் இல்லையே?"
என்றார்.

சிவகாமி கண்களில் கபடக் குறும்பு தோன்ற அவரைப் பார்த்து, "ஏன் இல்லை? என்
தந்தைகூட அடிக்கடி என் கல்யாணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டுதான்
இருக்கிறார். அவரிடம் சிற்ப வேலை கற்றுக்கொள்ளும் கெட்டிக்கார சீடப்பிள்ளை
ஒருவனைப் பார்த்து என்னை மணம் செய்து கொடுக்கப் போகிறாராம்" என்றாள்.

"ரொம்ப சந்தோஷம் உன் தந்தை நிஜமாக அப்படிச் சொன்னாரா? அவரை உடனே பார்த்து
என்னுடைய நன்றியை அவருக்குத் தெரிவித்துக்கொள்ள வேண்டும்" என்று நரசிம்மர்
கூறிய மறுமொழி சிவகாமியைத் திடுக்கிடச் செய்தது. அவள் தொடர்ந்து
கலக்கமுற்ற குரலில், "ஆனால், நான் அதற்குச் சம்மதிக்கவில்லை. 'எனக்குக்
கல்யாணமே வேண்டாம்! நான் புத்த பிக்ஷுணி ஆகப் போகிறேன்' என்று அப்பாவிடம்
சொல்லி விட்டேன்" என்றாள்.

"என்ன? நீயா புத்த பிக்ஷுணி ஆகப் போகிறாய்? ஆயனர் மகளா இப்படிப்
பேசுகிறது? சிவபெருமானும் திருமாலும் உனக்கு என்ன தீங்கைச் செய்தார்கள்?
சிவகாமி! நம் திருநாவுக்கரசர் பெருமானின் தேனினும் இனிய சைவத் திருப்
பாடல்களை நீ கேட்டிருக்கிறாயே?

'குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்'

என்ற தெய்வீகப் பாடலுக்கு அபிநயங்கூடப் பிடித்தாயே? அப்படியிருந்தும்,
புத்த பிக்ஷுணி ஆக வேண்டுமென்ற எண்ணம் உன் மனத்தில் எப்படி உதித்தது?"
என்று நரசிம்மர் சரமாரியாய்ப் பொழிந்தார்.

"எனக்குச் சிவன்பேரிலும் திருமாலின் பேரிலும் வெறுப்பு ஒன்றுமில்லை.
கல்யாணத்தின் பேரிலேதான் வெறுப்பு. புத்த பிக்ஷுணியாகி, நான் தேச யாத்திரை
செய்யப்போகிறேன்" என்று சிவகாமி தலை குனிந்தவண்ணம் கூறினாள்.

"சிவகாமி! அந்தமாதிரி எண்ணமே உனக்குத் தோன்றி இருக்கக்கூடாது. மகா
மேதாவியான உன் தந்தையின் பேச்சை நீ தட்டலாமா? அவருடைய விருப்பத்தின்படி
அவருடைய சீடர்களில் மிகவும் கெட்டிக்காரன் எவனோ, அவனை, நீ மணம் புரிந்து
கொள்ளத்தான் வேண்டும்" என்று நரசிம்மர் கடுமையான குரலில் சொன்னார்.

"என்னை எந்த அசட்டுப் பிள்ளையின் கழுத்திலாவது கட்டி விடுவதில் உங்களுக்கு
என்ன அவ்வளவு சிரத்தை? அரண்மனையில் பிறந்து வளர்ந்த அரசிளங்குமரியை
நீங்கள் மணந்து கொள்வதை நான் குறுக்கே நின்று தடுக்கவில்லையே?" என்றாள்
சிவகாமி. அவளுடைய கண்களில் நீர் ததும்பி நின்றது.

"ஜாக்கிரதை, சிவகாமி! அசட்டுப் பிள்ளை என்று யாரைச் சொன்னாய்? உன்
தந்தையின் சீடர்களுள் ரொம்பக் கெட்டிக்காரன் யார் என்பது உனக்குத்
தெரியாதா? ஆயனர் எத்தனையோ தடவை, 'குமார சக்கரவர்த்திக்குச் சிற்பக் கலை
வருவதுபோல் வேறு யாருக்கும் வராது' என்று சொல்லியதில்லையா? ஆயனரின்
சீடர்களில் மிகவும் கெட்டிக்காரனுக்கு உன்னை மணம் செய்து
கொடுப்பதாயிருந்தால் எனக்குத்தானே கொடுக்க வேண்டும்! அதற்காக உன்
தந்தைக்கு நான் நன்றி செலுத்தவேண்டாமா?" என்று நரசிம்மர் கூறியபோது,
அவருடைய முகத்தில் குறும்பும் குதூகலமும் தாண்டவமாடின.

சிவகாமியோ சட்டென்று பலகையிலிருந்து எழுந்து நின்றாள். "பிரபு! இந்த ஏழைப்
பெண்ணுக்கு ஏன் வீண் ஆசை காட்டுகிறீர்கள்...?" என்று கூறி, மேலே
பேசமுடியாமல் விம்மி அழத் தொடங்கினாள்.

நரசிம்மவர்மர் அவளுடைய கரங்களைப்பிடித்து மறுபடியும் பலகையில் தம்
அருகில் உட்காரவைத்துக் கொண்டு, "சிவகாமி! என்னை நீ இன்னும்
தெரிந்துகொள்ளவில்லையா? இப்படி நீ கண்ணீர் விடுவதைப் பார்க்கும் போது.."
என்று கூறுவதற்குள், சிவகாமி விம்மிக்கொண்டே, "பிரபு! இது ஆனந்தக்
கண்ணீர்! துயரக் கண்ணீர் அல்ல!" என்றாள்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 10:51 pm

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

பதினேழாம் அத்தியாயம் - வேலின் மேல் ஆணை!

நரசிம்மர் தமது அங்கவஸ்திரத்தின் தலைப்பினால்
சிவகாமியின் கண்ணீரைத் துடைத்த வண்ணம், "நினைக்க நினைக்க ஒரு விஷயம்
எனக்கு வியப்பையளிக்கிறது!" என்று கூறினார்.

சற்றுமுன் சிவகாமியின் முகத்தை ரதி ஏறிட்டுப் பார்த்தது போல் இப்போது
சிவகாமி நரசிம்மரை ஏறிட்டுப் பார்த்தாள். "அது என்ன வியப்பான விஷயம்?"
என்னும் கேள்வியை அவளுடைய கண்களின் நோக்கும், புருவங்களின் நெறிப்பும்
கேட்பன போலத் தோன்றின.

நரசிம்மர் சிவகாமியின் முகத்தைக் கண்களால் விழுங்கி விடுபவர்போல்
பார்த்துக்கொண்டு கூறினார்: "மூன்று வருஷ காலத்திற்குள் உன்னிடம்
ஏற்பட்டிருக்கும் மாறுதலைத்தான் சொல்லுகிறேன். உனக்கு ஞாபகம் இருக்கிறதா,
சிவகாமி? சக்கரவர்த்தியும் நானும் அந்த நாளில் உங்கள் வீட்டுக்கு வருவோம்.
என்னைக் கண்டதும் நீ கொஞ்சமும் கூச்சமோ, தயக்கமோ இல்லாமல் ஓடி வருவாய்.
என் கைகளைப் பிடித்துக் 'கரகர'வென்று இழுத்துக் கொண்டு போவாய். நம்
இருவருடைய தந்தையரும் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்கும் போது நாம் இன்னொரு
பக்கத்தில் கொட்டம் அடிப்போம்! சில சமயம் நான் உன்னை எனக்குப்
பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கும்படி கேட்பேன். நீ சொல்லிக் கொடுக்க
முயல்வாய். எனக்கு நன்றாய் வராது. அதைக்கண்டு நீ கலகலவென்று சிரிப்பாய்.
உன்னுடைய முல்லைப்பல் வரிசையைப் பார்த்து நான் மதிமயங்கி நிற்பேன்.
இன்னும் சிலசமயம் நாம் இருவரும் ஓடிப்பிடித்து விளையாடுவோம். சில சமயம்
ஆயனர் அமைத்த கற்சிலைகளுக்கு மத்தியில் நீயும் ஒரு சிலையைப்போல் அசையாமல்
நிற்பாய். நானும் வேண்டுமென்றே உன்னைச் சிலையாகப் பாவித்துக்கொண்டு மேலே
போவேன். உன்னுடைய சிரிப்பின் ஒலியைக் கேட்டபிறகு திரும்பிப் பார்த்து
உன்னைப் பிடித்துக் கொள்வேன். 'அகப்பட்டுக் கொண்டாயா, சிவகாமி தேவி?'
என்று பாடுவேன். இப்படியெல்லாம் நாம் விளையாடுவதைப் பார்த்து நம்முடைய
தந்தைமார்களும் சந்தோஷப்படுவார்கள். அதெல்லாம் ஒரு குதூகலமான கனவு மாதிரி
இப்போது தோன்றுகிறது."

"பிரபு! நான் ஏதோ மாறிப்போனதாகச் சொன்னீர்கள். எந்தவிதத்தில் மாறியிருக்கிறேன்?" என்று சிவகாமி கேட்டாள்.

"நல்லவேளை, ஞாபகப்படுத்தினாய் எனக்குப் பதினாறு பிராயம் பூர்த்தியானபோது,
சக்கரவர்த்தி என்னைத் தேச யாத்திரைக்கு அழைத்துச் சென்றார். தெற்கே
சித்தர் மலையிலிருந்து வடக்கே நாகார்ஜுன மலை வரையில் நாங்கள் யாத்திரை
செய்தோம். மேற்கே, காவிரி நதியின் ஜனன ஸ்தானம் வரையில் போயிருந்தோம்.
யாத்திரையை முடித்துக் கொண்டு நாங்கள் திரும்பி வருவதற்கு மூன்று வருஷம்
ஆயிற்று..."

"அந்த மூன்று வருஷமும் எனக்கு மூன்று யுகமாக இருந்தது" என்றாள் சிவகாமி.

"மூன்று வருஷம் கழித்து நான் திரும்பி வந்து மறுபடியும் உன்னைப்
பார்த்தபோது, நீ பழைய சிவகாமியாகவே இல்லை. தேவ சபையிலிருந்து அரம்பையோ,
ஊர்வசியோ வந்து ஆயனர் வீட்டில் வளர்வதாகவே தோன்றியது. உருவ மாறுதலைக்
காட்டிலும் உன்னுடைய குணத்திலும் நடவடிக்கையிலும் காணப்பட்ட மாறுதல்தான்
எனக்கு அதிக வியப்பை அளித்தது. என்னைக் கண்டதும் நீ முன்போல் ஆர்வத்துடன்
ஓடிவந்து வரவேற்கவில்லை; கலகலப்பாகப் பேசவில்லை; தூண் மறைவில் மறைந்து
கொண்டு நின்றாய்; நான் உன்னைப் பார்க்கும்போது நீ வேறு பக்கம் திரும்பிக்
கொண்டாய்; நான் உன்னைப் பார்க்காத சமயங்களில் கடைக்கண்ணால் என்னைப்
பார்த்துக்கொண்டிருந்தாய். தப்பித் தவறி நம் கண்கள் சந்திக்கும் சமயம்
உடனே தலையைக் குனிந்துகொண்டாய். உன்னுடைய கலீரென்ற சிரிப்பு
மறைந்துவிட்டது! சில சமயம் உன் கண்களில் நீர் ததும்பி நிற்பதைக் கண்டேன்.
ஒரு காரணமுமில்லாமல் நீ பெருமூச்சு விடுவதைக் கேட்டேன். எல்லாவற்றையும்
விட அதிக வியப்பை எனக்கு அளித்தது என்னவென்றால், என்னை அறியாமல் நானே சில
சமயம் பெருமூச்சு விடத் தொடங்கினேன்!.." என்று நரசிம்மர் சொன்னபோது,
சிவகாமி கலீர் என்று சிரித்து விட்டாள்.

நரசிம்மர் மீண்டும் தொடர்ந்து கூறினார்: "என் உள்ளத்திலும் ஒரு மாறுதலைக்
கண்டேன். இரவும் பகலும் சதா சர்வ காலமும் உன்னுடைய நினைவு என் இருதயத்தில்
குடிகொண்டது. அந்த நினைவு, இன்பத்தையும் வேதனையையும் ஏககாலத்தில்
அளித்தது. எப்பேர்ப்பட்ட முக்கியமான காரியத்தில் ஈடுபட்டபோதிலும் உன்னை
என்னால் மறக்க முடியவில்லை. இந்த நிலைமையில் இந்தத் தாமரைக் குளக்கரையில்
ஒருநாள் நாம் தனியாகச் சந்தித்தோம். மூன்று வருஷம் உன்னை வந்து
பார்க்காமல் இருந்ததற்காக நீ என்னைச் சண்டை பிடித்தாய். கடைசியில் உன்னை
மறப்பதில்லை என்று கையடித்துச் சத்தியம் செய்து கொடுக்கச் சொன்னாய்.
எனக்குச் சிரிப்பு வந்தது உன்னை ஒருகணமும் மறக்க முடியாமல் நான் திண்டாடிய
திண்டாட்டம் எனக்கல்லவா தெரியும்? ஆனாலும், உன்னுடைய மனத்திருப்திக்காகச்
சத்தியம் செய்து கொடுத்தேன். அதன் பிறகு, இன்றுதான் நாம் இந்தக்
குளக்கரையில் சந்திக்கிறோம். ஒருவேளை நீ இங்கு இருக்கமாட்டாயா என்ற
ஆசையினால் வந்தேன். வந்து பார்த்தால், நீ இங்கே இருக்கிறாய்! நம்முடைய
உள்ளங்கள்தாம் எப்படி ஒத்திருக்கின்றன!" என்று சொல்லி நரசிம்மர்
நிறுத்தினர்.

இவ்வளவெல்லாம் சொன்னீர்கள் நான் முதலில் கேட்ட கேள்விக்கு மட்டும் மறுமொழி சொல்லவில்லை!" என்றாள் சிவகாமி.

"என்ன கேள்வி அது? தயவு செய்து ஞாபகப்படுத்தினால் நல்லது" என்றார் மாமல்லர்.

"மதுரைக்கும் வஞ்சிக்கும் திருமணத் தூதர்களை அனுப்புவதாக இருந்த விஷயந்தான்!"

நரசிம்மர் இலேசாகச் சிரித்துவிட்டு, "அது உண்மைதான் மகனுக்குக் கல்யாணம்
செய்யவேண்டுமென்று எந்தத் தாயாருக்குத்தான் எண்ணமில்லாமலிருக்கும்? என்
தாயாருடைய ஏற்பாடு அது! ஆனால், நான் சக்கரவர்த்தியிடம் என் மனநிலையைத்
தெரியப்படுத்தச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். அதற்குள்
இந்த யுத்தம் வந்து அதற்கு அவசியமே இல்லாமல் செய்து விட்டது" என்று
கூறினார்.

"பிரபு எனக்கு என்னவோ நிம்மதி இல்லை. மூன்றரை வருஷத்துக்கு முன்பு
இருந்ததுபோல் நாம் இருவரும் குழந்தைகளாகிவிடக் கூடாதா என்று தோன்றுகிறது."

"இல்லை, சிவகாமி! மறுபடியும் குழந்தைகள் ஆவதற்கு ஒரு நாளும்
சம்மதிக்கமாட்டேன். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
முதலாவது, தேவி சிவகாமியைப் பார்த்தபிறகு குழந்தை சிவகாமியை நான் விரும்ப
முடியாது. இரண்டாவது காரணம், சக்கரவர்த்தி இப்போதே நான் போர்க்களம்
போவதற்கு ஆட்சேபிக்கிறார். நான் குழந்தையாயிருந்தால் சம்மதிப்பாரா?"

"பிரபு! தாங்கள்கூட உண்மையாகவே போர்க்களம் போவீர்களா?" என்று சிவகாமி கவலையுடன் கேட்டாள்.

"அவசியம் போவேன் என் தந்தையுடன் அதைப்பற்றித் தான் மூன்று நாளாக வாதம்
செய்துகொண்டிருக்கிறேன். நூறு வருஷ காலமாக அந்நியர்கள் காலடி வைக்காத
பல்லவ சாம்ராஜ்யத்தில் இன்று சளுக்கர்கள் படையெடுத்திருக்கிறார்கள்.
அவர்களைத் துவம்ஸம் செய்து புத்தி புகட்ட வேண்டாமா?"

"பிரபு! அதற்குப் பல்லவ சைனியங்கள் இல்லையா? படைத் தலைவர்கள் இல்லையா? தாங்கள் ஏன் போக வேண்டும்?"

"பல்லவ சைனியங்கள் அன்னியர்களை எதிர்த்து வீரப் போர் புரியும்போது, நான்
என்ன செய்வதாம்? அரண்மனையில் உட்கார்ந்து அறுசுவை உண்டி அருந்தி அந்தப்புர
மாதர்களுடன் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருக்கட்டுமா? அப்படி நான் இருந்தால்,
ஆயனர் மகளின் காதலுக்குப் பாத்திரம் ஆவேனா?"

சிவகாமி கூறினாள்: "பிரபு! தாங்கள் போர்க்களம் போவதைத் தடுப்பவள் நானல்ல.
தாராளமாய்ச் சென்று பகைவர்களை வென்று வாகைமாலை சூடி வாருங்கள், ஆனால்.."

"ஆனால், என்ன?"

"என்னுடைய கோரிக்கையைப் பரிகாசம் செய்யக் கூடாது."

"இல்லை, சிவகாமி, சொல்லு!"

"வள்ளியம்மைக்கு சுப்பிரமணியர் சத்தியம் செய்து கொடுத்ததுபோல், உங்கள்
கையிலுள்ள வேலின் மேல் ஆணை வைத்துச் சொல்லுங்கள், போர்க்களத்திலும் என்னை
மறப்பதில்லையென்று!"

நரசிம்மர் புன்முறுவல் செய்து, "இவ்வளவுதானே? 'என்னை மறந்துவிடுங்கள்'
என்று நீ ஆணையிடச் சொன்னால்தான் என்னால் முடியாது! மறக்காமலிருப்பதற்கு
எத்தனை தடவை வேணுமானாலும் செய்கிறேன். இதோ...!" என்று வேலைத் தூக்கிப்
பிடித்தவர், சட்டென்று தயங்கி நின்றார்.

"பிரபு! ஏன் தயங்குகிறீர்கள்? அதற்குள்ளே மனம் மாறி விட்டதா?" என்றாள் சிவகாமி.

"இல்லை, சிவகாமி இல்லை! இந்த வேல் என்னுடையதில்லையே! இன்னொருவருடைய வேலின்மேல் ஆணையிடலாமா என்றுதான் நான் யோசிக்கிறேன்."

"உங்களுடைய வேல் இல்லையா? பின் யாருடையது?"

"அரங்கேற்றத்தன்று மதயானையின்மேல் வேல் எறிந்து ஆயனரையும் உன்னையும்
தப்புவித்தானே, அந்த வீர வாலிபனுடையது. அந்த மகாவீரனை நேரில் கண்டு
அவனிடம் கொடுக்க வேண்டுமென்று வைத்திருக்கிறேன்."

"அப்புறம் அந்த வாலிபனை நீங்கள் பார்க்கவே இல்லையா?" என்று சிவகாமி கேட்டாள்.

"மூன்று நாளாக நாடு நகரமெல்லாம் தேடுகிறோம். அவன் மட்டும் அகப்படவில்லை."

"பிரபு! அவன் இருக்குமிடம் சொன்னால், எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டாள் சிவகாமி.

"அவன் இருக்குமிடம் உனக்குத் தெரியுமா? சீக்கிரம் சொல், சிவகாமி! உனக்கு என்னையேதான் கொடுத்திருக்கிறேனே! வேறு என்ன தரப்போகிறேன்?"

"அந்த வாலிபன் இப்போது எங்கள் வீட்டில் இருக்கிறான்."

நரசிம்மர் துள்ளி எழுந்து, "என்ன சொல்லுகிறாய் சிவகாமி! உங்கள் வீட்டுக்கு அவன் எப்படி வந்தான்?" என்று கேட்டார்.

"முன்னே உங்களிடம் சொன்னேனல்லவா, ஒரு புத்த பிக்ஷு அடிக்கடி வந்து
அப்பாவையும் என்னையும் வடநாட்டுக்கு வரும்படி அழைத்துக்கொண்டிருக்கிறார்
என்று, அந்த நாகநந்தி அடிகள் தான் அழைத்துக்கொண்டு வந்தார்."

"ஆகா! சக்கரவர்த்தி கூறியது உண்மையாயிற்று..சிவகாமி! அதோ கேள்!" என்றார் நரசிம்மர்.

தூரத்தில் பேரிகை முழக்கம், சங்கநாதம், குதிரைகளின் காலடிச் சத்தம் கலந்து கேட்டன. "யார், சக்கரவர்த்தியா?" என்றாள் சிவகாமி.

"ஆம்; சக்கரவர்த்திதான் வருகிறார் இதோ! நான் போய்ச் சக்கரவர்த்தியுடன்
சேர்ந்துகொள்கிறேன். நீயும் சீக்கிரம் வீடு வந்து விடுவாயல்லவா?"

"குறுக்கு வழியாக வந்துவிடுவேன்; பிரபு! தாங்கள் போர்க்களம் போவதற்கு முன்னால் இங்கே மறுபடியும் வருவீர்களா?"

"அவசியம் வருகிறேன்! உன் கருவிழிகளில் மின்னும் வேல்களின்மீது ஆணை!" என்று
சொல்லிவிட்டு நரசிம்மர் திரும்பிப் பார்த்துக்கொண்டே விரைந்து சென்று
குதிரை மீதேறினார்.

அவர் போவதை மலர்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டு நின்ற சிவகாமி,
குதிரை காட்டுக்குள் மறைந்ததும் வீட்டை நோக்கி விரைந்து நடந்தாள்.
வீட்டிலிருந்து வந்தபோது அவளுடைய நடையில் காணப்படாத மிடுக்கும் குதூகலமும்
இப்போது காணப்பட்டன. ரதியை அவள் மறந்து சென்றாலும், அவள் போவதைப்
பார்த்துவிட்டு ரதி பின் தொடர்ந்து துள்ளி ஓடிற்று.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 10:52 pm


முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

பதினெட்டாம் அத்தியாயம் - முத்துமாலை


பழந்தமிழ் நாட்டு மன்னர்களுக்குள்ளே ஒப்புயர்வு அற்றவரும், தமது
இணையில்லாத புகழை என்றும் அழியாத வண்ணம் கல்லிலே செதுக்கி வைத்தவருமான
மகேந்திர பல்லவ சக்கரவர்த்தியை அன்றொரு நாள் இரவில், யுத்தச் செய்தி வந்த
அவசரத்தில் மதயானையின் வெறியினால் நிகழ்ந்த தடபுடலுக்கு மத்தியில்
நேயர்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.

எத்தகைய சாமான்யக் குறுநில மன்னர்களையும்கூட அந்தந்த இராஜாங்கக் கவிகள்
புத்தியிலே பிருகஸ்பதி என்றும், வித்தையிலே சரஸ்வதி என்றும், அழகிலே
மன்மதன் என்றும் வீரத்திலே அர்ஜுனன் என்றும், கொடையிலே கர்ணன் என்றும்
வர்ணிப்பதுண்டு. இந்த வர்ணனையெல்லாம் மகேந்திர சக்கரவர்த்தியின்
விஷயத்தில் உண்மையிலேயே பொருந்துவதாயிருந்தது.

மகேந்திரவர்மர் ஆஜானுபாஹுவான தோற்றமுடையவர். அவருடைய கம்பீரமான முகத்தில்
பல நூறு வருஷங்களாக வாழையடி வாழையாக வந்த இராஜ குலத்தின் வீரக் களையோடு
சிறந்த கல்வி ஆராய்ச்சியினாலும் கலைப் பயிற்சியினாலும் ஏற்படும்
வித்யாதேஜஸும் பிரகாசித்தது. காஞ்சி நகரின் பிரசித்தி பெற்ற
பொற்கொல்லர்கள் சித்திர விசித்திர வேலைப்பாடுகளுடன் செய்த கிரீடம்,
குண்டலம், வாகுவலயம், வீரக்கழல் முதலிய ஆபரணங்கள் அவர் தரித்திருந்தார்.
அவருடைய விசாலமான வீர லக்ஷ்மி குடிகொண்ட மார்பை விதவிதமான வர்ணங்களுடன்
பிரகாசித்த நவரத்தின மாலைகள் அலங்கரித்தன. அபூர்வ அழகும் நயமும்
மென்மையும் வாய்ந்த பட்டுப் பீதாம்பரங்களை உற்பத்தி செய்வதில் அந்த
நாளிலேயே காஞ்சி நகரம் பெயர் பெற்றிருந்தது. அத்தகைய பீதாம்பரங்களை
மகேந்திர சக்கரவர்த்தி அழகு பொருந்த அணிந்தபோது, அவை அதிக சோபை பெற்று
விளங்கியதாக நெசவுக் கலைஞர்கள் பெருமிதத்துடன் கூறினார்கள்.

மகேந்திரர் தமிழ்மொழி, வடமொழி, பிராகிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும்
சிறந்த தேர்ச்சிபெற்ற பண்டிதராக விளங்கினார். வடக்கே தக்ஷசீலம் முதல்,
தெற்கே கன்னியாகுமரி வரையில் உள்ள பண்டிதர்கள், மகா ரசிகரான மகேந்திர
சக்கரவர்த்தியிடம் தங்களுடைய புலமையைக் காட்டிப் பரிசுபெறும் பொருட்டுக்
காஞ்சி நகரில் வந்து மொய்த்த வண்ணம் இருந்தார்கள். அன்றைக்கு ஐந்நூறு
வருஷங்களுக்கு முன்னால் வடநாட்டில் உஜ்ஜயினி நகரத்தில், அரசு செலுத்திக்
காளிதாஸன் முதலிய மகா கவிகளை ஆதரித்த சந்திரகுப்த விக்கிரமாதித்யருக்குப்
பிறகு, பண்டிதர்களுக்கும் கவிஞர்களுக்கும் கற்பகவிருக்ஷமாக விளங்கியவர்
காஞ்சி மகேந்திர சக்கரவர்த்தி தான் என்பது வெகுஜன வாக்காயிருந்தது.
சித்திரம், சிற்பம் ஆகிய கலைகளில் சக்கரவர்த்தி
ஆர்வங்கொண்டிருந்ததோடல்லாமல் அவற்றை நன்றாகப் பயின்று அந்தந்தக் கலையில்
வல்லவர்களாயிருந்த கலைவாணர் எல்லாரும் பார்த்து வியக்கும்படியான
தேர்ச்சியும் பெற்றிருந்தார்.

சிற்பத் துறையில் மகேந்திரனின் அதிசயமான கற்பனைத் திறனைக்கண்டு வியந்து,
சிற்பசாஸ்திர பண்டிதர்கள் அவருக்கு 'விசித்திர சித்தர்' என்ற பட்டத்தை
வழங்கியிருந்தார்கள். அவ்விதமே சித்திரக்கலை வல்லவர்களிடம்
'சித்திரக்காரப் புலி' என்னும் பட்டத்தைச் சக்கரவர்த்தி பெற்றிருந்தார்.
'மத்தவிலாஸப் பிரகசனம்' என்னும் ஹாஸ்ய நாடகத்தை வடமொழியில் இயற்றி
'மத்தவிலாஸர்' என்னும் பட்டத்தை அடைந்தார். சங்கீத சாஸ்திரத்தைக் கரை
கண்டிருந்த ருத்ராசாரியாரிடம் அவர் சங்கீதக் கலை பயின்று, ஏழு நரம்புகள்
உடைய 'பரிவாதினி' என்னும் வீணையை அபூர்வமாய்க் கையாளும் திறமை
பெற்றிருந்தார். தாள வகைகளிலே 'ஸங்கீர்ண ஜாதி' தாளத்தை அதிசயமாகக்
கையாளும் வல்லமை காரணமாக 'ஸங்கீர்ண ஜாதிப் பிரகரணர்' என்ற பட்டம் அவருக்கு
அளிக்கப்பட்டிருந்தது.

மகேந்திரர் இளம் பிராயத்தில் சமண மதத்தில் ஈடுபட்டிருந்து பிற்காலத்தில்
சிவபக்திச் செல்வரான பிறகு, எந்த மதத்தையும் துவேஷிக்காதவராய், தமது
சாம்ராஜ்யத்தில் இருந்த சைவர், வைஷ்ணவர், பௌத்தர், சமணர், சாக்தர் ஆகிய
சகல மதத்தினரையும் தர்மம் தவறாமல் பரிபாலித்து வந்தபடியால், 'குணபரர்'
என்ற சிறப்புப் பெயரும் அவருக்கு ஏற்பட்டிருந்தது. 'திருவதிகை' ஸ்தலத்தில்
அவருடைய கொடையினால் கட்டப் பெற்ற சிவாலயத்துக்குக் 'குணபரேச்வரம்' என்ற
பெயர் வழங்கிற்று.

மகேந்திர சக்கரவர்த்திக்கு முற்பட்ட சுமார் முந்நூறு வருஷ காலத்தில்
வடநாட்டிலிருந்து பண்டிதர்களும், கவிகளும், சமண முனிவர்களும், புத்த
பிக்ஷுக்களும் இடைவிடாமல் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து காஞ்சி
நகரில் வித்யா பீடங்களை ஏற்படுத்தி வந்தார்கள். இக்காரணத்தினால் நமது
வரலாறு நிகழ்ந்த காலத்தில் தமிழகத்தில் சமஸ்கிருதமும் பிராகிருதமும் மிக்க
பிரபலமடைந்து, செந்தமிழ் மொழியின் சிறப்பை ஓரளவு மங்கச் செய்திருந்தன
என்பதையும் நேயர்கள் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். திருநாவுக்கரசர்
முதலிய சைவ நாயன்மார்களும், பொய்கையார் முதலிய வைஷ்ணவ ஆழ்வார்களும்
பக்திச் சுவை சொட்டும் பாடல்களைப் பொழிந்து தெய்வத் தமிழ் மொழியை மீண்டும்
சிம்மாசனம் ஏறச் செய்த மகோன்னத காலம் தமிழகத்தில் அப்போதுதான்
ஆரம்பமாகியிருந்தது. எனவே, மகேந்திர சக்கரவர்த்தியின் பட்டங்கள்
பெரும்பாலும் வடமொழியில் இருப்பதன் காரணத்தை நேயர்கள் ஊகித்து அறியலாம்.

மகாராஜாதிராஜா - பூமண்டலாதிபதி - திரிபுவன சக்கரவர்த்தி - மத்தவிலாஸ -
விசித்திர சித்த - ஸங்கீர்ண ஜாதிப் பிரகரண சித்திரக்காரப் புலி - குணபரரான
மகேந்திர பல்லவ சக்கரவர்த்தியை இத்தனை நேரம் ஆயனர் வீட்டு வாசலிலேயே
நிறுத்தி வைத்து விட்டதற்காக வாசகர்களின் மன்னிப்பைக் கோருகிறோம்.
அவ்விதம் நாம் அந்த மன்னர் பெருமானை நிறுத்தி வைத்துவிட்ட போதிலும், ஆயனச்
சிற்பியார் அவரை வரவேற்று உபசரிப்பதில் சிறிதும் காலம் தாழ்த்தி
விடவில்லை. சக்கரவர்த்தியின் வருகையை அறிவித்த பேரிகை ஒலி வெகுதூரத்தில்
கேட்ட போதே ஆயனர் பரபரப்புடன் வீட்டு வாசலுக்கு வந்து அவரை வரவேற்க
ஆயத்தமாக நின்றார்.

குதிரையிலிருந்து இறங்கும்போதே சக்கரவர்த்திப் பெருமான் "ஆயனரே! அன்றிரவு
சுகமாக வந்து சேர்ந்தீர்களா? சிவகாமி சௌக்கியமா?" என்று கேட்டுக்கொண்டே
இறங்கினார்.

ஆயனர், முன்னால் ஓர் அடி சென்று கும்பிட்டு, "ஆகா! சுகமாக வந்து
சேர்ந்தோம்! குழந்தைதான் மூன்று நாளாக அவ்வளவு சௌக்கியம்
இல்லாமலிருந்தாள்..." என்பதற்குள் மகேந்திர பல்லவர், "அப்படியா? இப்போது
எப்படி இருக்கிறாள்?" என்று கவலைக் குரலில் கேட்டார்.

"இன்று சற்றுப் பாதகமில்லை" என்றார் ஆயனர்.

எல்லோரும் வீட்டுக்குள் சென்றார்கள் சக்கரவர்த்தி வரும் சமயங்களில்
அமர்வதற்காகவே ஆயனர் ஓர் அழகிய கல்சிம்மாசனத்தை அமைத்திருந்தார். அந்தச்
சிம்மாசனத்தில் மகேந்திரர் அமர்ந்ததும், ஆயனர் சிவகாமிக்குச் சமிக்ஞை
செய்ய அவள் அருகில் நெருங்கி வந்து சக்கரவர்த்திக்கு நமஸ்கரித்தாள்.

அப்போது ஆயனர், "பெருமானே! அரங்கேற்றம் நடுவில் தடைப்பட்ட காரணத்தினால்
குழந்தை உற்சாகம் இழந்திருக்கிறாள். அவளுடைய சௌக்கியக் குறைவுக்கு அதுதான்
காரணம். ரசிக சிரோமணியான தாங்கள்தான் அவளுக்கு ஆசிகூறி உற்சாகப்படுத்த
வேண்டும்" என்றார்.

"ஆயனரே! உமது குமாரி அன்றைக்கு நடனமாடியதாகவே எனக்குத் தோன்றவில்லை. நடனக்
கலையே ஓர் உருவம் எடுத்து வந்து ஆடியதாகவே தோன்றியது" என்றார் மகேந்திரர்.

"ஸங்கீர்ண ஜாதி தாளத்தை உபயோகப்படுத்தி ஓர் ஆட்டம் கற்பித்திருந்தேன்; அதை
ஆடமுடியாமல் போய் விட்டது" என்று ஆயனர் ஏமாற்றமான குரலில் கூறினார்.

"ஆம்; ஆம்! இன்னும் என்னவெல்லாமோ விந்தைகள் வரப் போகின்றன என்று எனக்குத்
தெரிந்துதான் இருந்தது. நடுவில் எழுந்து போக நேர்ந்ததில் எனக்கு ஏற்பட்ட
வருத்தத்தைச் சொல்லி முடியாது. அவ்வளவு முக்கியமான செய்தியாயிராவிட்டால்
போயிருக்க மாட்டேன்!" என்றார் சக்கரவர்த்தி.

"நானும் கேள்விப்பட்டேன், பிரபு! நமது ராஜ்யத்துக்குள்ளே அந்நியர்கள்
படையெடுத்து வந்திருக்கிறார்களாமே? என்ன தைரியம்! என்ன துணிச்சல்
அவர்களுக்கு!" என்று ஆயனர் உண்மையான ஆத்திரத்துடன் கூறினார்.

"அந்தத் துணிச்சலுக்குத் தகுந்த தண்டனையை அவர்கள் அடைவார்கள். ஆயனரே! பல
வருஷ காலமாகப் பல்லவ ராஜ்யத்துக்குள் பகைவர் படைகள் நுழைந்ததில்லை. நான்
போர்க்களத்தைக் கண்ணால் காண வேண்டும் என்பதற்காக என் தந்தை என்னை
இலங்கையில் நடந்த போருக்கு அனுப்பி வைத்தார். ஆனால், நரசிம்மனுக்கோ
இங்கேயே போர்க்களத்தைப் பார்க்கும்படியான பாக்கியம் நேரிட்டிருக்கிறது.
வாதாபி அரசன் புலிகேசி பெரும் படைகளைத் திரட்டிக் கொண்டு படையெடுத்து
வருகிறான். நாமும் பெரும் பலம் திரட்டிக் கடும்போர் செய்ய
வேண்டியிருக்கும். ஆனால், ஒரு விஷயம் சொல்லுகிறேன். நமது ராஜ்யத்தில்
சளுக்கர் படையெடுத்ததனால் எனக்கு உண்டாகும் கோபத்தைக் காட்டிலும் அதனால்
சிவகாமியின் அரங்கேற்றம் தடைப்பட்டதுதான் அதிகக் கோபத்தை உண்டாக்குகிறது.
இந்தக் குற்றத்துக்குத் தகுந்த தண்டனையை அவர்கள் அனுபவித்தே தீர
வேண்டும்!" என்றார்.

இதைக் கேட்ட ஆயனர் பெருமையினால் பூரித்தவராய், அருகில் தலை குனிந்தவண்ணம் நின்ற சிவகாமியை அருமையுடன் நோக்கினார்.

சக்கரவர்த்தி மேலும் கூறினார்: "அரங்கேற்றத்தன்று நான் என்னவெல்லாமோ
திட்டம் போட்டிருந்தேன். அதெல்லாம் ஒன்றும் முடியாமல் போயிற்று. சபையிலே
செய்திருக்க வேண்டிய சம்மானத்தை இங்கேயாவது செய்யலாமென்று
உத்தேசித்திருக்கிறேன். அதற்கு ஆட்சேபணை ஒன்றுமில்லையே?" இவ்விதம்
சொல்லிக்கொண்டு சக்கரவர்த்தி தம் கையிலிருந்த இரத்தினப் பையிலிருந்து
அழகான இரட்டை வட முத்துமாலையை எடுத்தார்.

அப்போது ஆயனர், "பெருமானே! தங்கள் திருக்கரத்தினால் கொடுக்கும்போது எங்கே
கொடுத்தால் என்ன? சிவகாமி! உன் பாக்கியமே பாக்கியம்! இந்தப் பரத
கண்டத்திற்குள்ளே சகல கலைகளின் நுட்பங்களையும் நன்குணர்ந்தவரான விசித்திர
சித்த மகாப் பிரபு உன்னுடைய கலைத் திறமையை மெச்சி உனக்குச் சம்மானம்
அளிக்கப்போகிறார்!" என்று கூறிச் சமிக்ஞை செய்யவும், சிவகாமி முன்னால்
வந்து சக்கரவர்த்தியைப் பணிவுடன் வணங்கிக் கரங்களை நீட்டினாள்.

மகேந்திரர் முத்துமாலையை எடுத்துச் சிவகாமியின் நீட்டிய கரங்களில்
வைத்தபோது...அடடா! இதென்ன மீண்டும் அபசகுனம்! மாலை அவள் கையிலிருந்து
நழுவிக் கீழே தரையில் விழுந்துவிட்டதே! ஆயனரின் முகம் சட்டென்று
சுருங்கியது. மகேந்திர பல்லவருடைய திடசித்தங்கூடச் சிறிது கலங்கிவிட்டதாக
அவருடைய புருவங்களின் நெறிப்பிலிருந்து தெரிந்தது. சிவகாமியின் மனத்திலும்
ஏதேனும் துணுக்கம் ஏற்பட்டிருக்குமோ என்னவோ, நமக்குத் தெரியாது. ஆனால்
அடுத்த கணத்தில் அவளுடைய முகம் மலர்ந்ததைப் பார்த்தால் அவளுடைய உள்ளமும்
மலர்ந்திருக்க வேண்டுமென்று நிச்சயமாகத் தெரிந்தது.

கீழே விழுந்த முத்துமாலையை அந்தக் கணத்திலேயே குமார சக்கரவர்த்தி
சட்டென்று குனிந்து எடுத்தார். எடுத்த மாலையைச் சிவகாமியின் நீட்டிய
கரங்களில் அவர் வைக்க, சிவகாமி அதை ஆர்வத்துடன் வாங்கிக் கண்களில் ஒத்திக்
கொண்டு கழுத்திலும் அணிந்துகொண்டாள். அந்த முத்துமாலைப் பரிசைக் குமார
சக்கரவர்த்தியின் கையினால் பெற்றுக் கொள்ள நேர்ந்தது பற்றிச் சிவகாமியின்
உள்ளத்தில் பொங்கிய உவகை முகத்திலும் பிரதிபலித்தது இயல்பே அல்லவா!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 10:53 pm

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

பத்தொன்பதாம் அத்தியாயம் - புத்தர் சிலை


நழுவித் தரையில் விழுந்த முத்துமாலையைக் குமார சக்கரவர்த்தி குனிந்து
எடுத்துக் கொடுத்ததையும், அதைச் சிவகாமி முகமலர்ச்சியுடன் வாங்கி அணிந்து
கொண்டதையும் பார்த்த ஆயனரின் முகம் மீண்டும் பிரகாசம் அடைந்தது.

சக்கரவர்த்தி இதையெல்லாம் கவனியாததுபோல் கவனித்தவராய், ஆயனரைப் பார்த்து,
"மகா சிற்பியாரே! இந்த முத்துமாலையைப் போல் எவ்வளவோ உயர்ந்த
பரிசுகளையெல்லாம் உமது புதல்வி வருங்காலத்தில் அடையப் போகிறாள்! இந்தப்
பல்லவ ராஜ்யத்துக்கே அவளால் புகழும் மகிமையும் ஏற்படப் போகின்றன.
வருங்காலத்தில் எது எப்படியானாலும், சிவகாமியின் நடனக் கலைப் பயிற்சி
மட்டும் தடைப்படக்கூடாது. அவளுக்கு எவ்விதத்திலும் உற்சாகக் குறைவு
நேரிடாமல் நீர் பார்த்துக் கொள்ள வேண்டும்!" என்று சொன்னார்.

ஆயனர், "பல்லவேந்திரா! தாங்களும் குமார சக்கரவர்த்தியும்
உற்சாகப்படுத்துவதற்கு இருக்கும்போது சிவகாமிக்கு உற்சாகக் குறைவு ஏன்
ஏற்படப்போகிறது? எனக்குத்தான் என்ன கவலை?" என்று சொல்ல, மகேந்திர பல்லவர்
கூறினார்: "அப்படியில்லை, ஆயனரே! இந்த யுத்தம் காரணமாக நானும் குமார
சக்கரவர்த்தியும் சில காலம் இவ்விடம் வரமுடியாமலும், உங்களைப் பார்க்க
முடியாமலும் போகலாம். அதனாலே உங்கள் இருவருடைய கலைப் பணிக்கும் எந்தவிதமான
குந்தகமும் ஏற்படக்கூடாது. சிவகாமி புத்த பிக்ஷுணியாக விரும்புவதாகச்
சற்று முன்னால் சொன்னீரல்லவா? ஒருவிதத்தில் அது பொருத்தமானதுதான். சிவகாமி
சாதாரணமான பெண் அல்ல. மற்றப் பெண்களைப் போல் உரிய பருவத்தில்
இல்வாழ்க்கையை மேற்கொண்டு அற்ப சுகங்களில் காலம் கழிக்கப் பிறந்தவள் அல்ல.
பெண்ணாய்ப் பிறந்தவர்களில் லட்சத்திலே ஒருவருக்குத்தான் இப்பேர்ப்பட்ட கலை
உணர்ச்சி ஏற்படும். அதைப் போற்றி வளர்க்கவேண்டும். சம்சார வாழ்க்கையைப்
பொருத்தவரையில் சிவகாமி தன்னைப் பிக்ஷுணியாகவே நினைத்துக் கொள்ளலாம்.
தெய்வீகமான நடனக்கலைக்கே அவள் தன்னை அர்ப்பணம் செய்து கொள்ளவேண்டும்!"

இந்த மொழிகளைக் கூறியபோது மகேந்திரபல்லவரின் மனத்திலே என்ன இருந்தது
என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவருடைய மொழிகள் அங்கிருந்த மூன்று
பேருடைய உள்ளங்களிலும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளை
உண்டாக்கியிருக்கவேண்டுமென்பது அவர்களுடைய முகபாவ மாறுதல்களிலிருந்து
நன்கு தெரிந்தது.

ஆயனர் தமது உள்ளக் கிளர்ச்சியை வார்த்தைகளினாலே வெளியிட்டார்: "பிரபு,
என்னுடைய மனத்தில் உள்ளதை அப்படியே தாங்கள் கூறிவிட்டீர்கள்.
இல்வாழ்க்கையை மேற்கொண்டு குழந்தைகுட்டிகளைப் பெற்று வளர்ப்பதற்கு
எத்தனையோ லட்சம்பேர் இருக்கிறார்கள். இந்த அபூர்வமான தெய்வக்கலையைப்
பயின்று வளர்ப்பதற்கு அதிகம் பேர் இல்லை தானே?" -இவ்விதம் ஆயனர்
சொல்லிக்கொண்டே சிவகாமியைத் திரும்பிப் பார்த்து, "சக்கரவர்த்தியின்
பொன்மொழிகளைக் கேட்டாயா, குழந்தாய்?" என்றார்.

சிவகாமியின் முகமானது அச்சமயம் கீழ்த்தரச் சிற்பி அமைத்த உணர்ச்சியற்ற
கற்சிலையின் முகம்போல் இருந்தது. எத்தனையோ விதவிதமான
உள்ளப்பாடுகளையெல்லாம் முகபாவத்திலே கண்ணிமையிலே, இதழ்களின் மடிப்பிலே
அற்புதமாக வெளியிடும் ஆற்றல் பெற்றிருந்த சிவகாமி, அச்சமயம் தன் சொந்த
மனோநிலையை முகம் வெளியிடாதபடி செய்வதில் அபூர்வத் திறமையைக் காட்டினாள்
என்றே சொல்லவேண்டும்.

ஆனால், நரசிம்மவர்மர் அபிநயக் கலையில் தேர்ச்சி பெறாதவரானபடியால்,
சக்கரவர்த்தியின் வார்த்தைகளைக் கேட்டதும் அவருடைய முகம் சிவந்தது,
இதழ்கள் துடித்தன. மற்றவர்கள் கவனியாதவண்ணம் உடனே அவர் திரும்பி
பக்கத்தில் இருந்த சிலைகளையும் சித்திரங்களையும் பார்ப்பவர் போல்
இவரிடமிருந்து பெயர்ந்து அப்பால் சென்றார்.

சக்கரவர்த்தியும் தாம் இத்தனை நேரம் வீற்றிருந்த சிற்ப
சிம்மாசனத்திலிருந்து எழுந்து, "சிற்பியாரே! எவ்வளவோ முக்கியமான அவசர
வேலைகள் எனக்கு இருக்கின்றன. இருந்தாலும் இங்கு வந்துவிட்டால் எல்லாம்
மறந்து விடுகிறது. உமது புதிய சிலைகளைப் பார்த்துவிட்டுச் சீக்கிரம்
கிளம்பவேண்டும்" என்று சொல்லிக்கொண்டே நடந்தார். ஆயனரும் சிவகாமியும்
அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.

மகேந்திர பல்லவர், புதிதாகச் செய்திருந்த நடனத்தோற்றச் சிலைகளைப்
பார்த்துக்கொண்டே, 'இது கஜஹஸ்தம்' 'இது அர்த்த சந்திர ஹஸ்தம்' என்று
சொல்லிய வண்ணமாக நடந்து, ஆயனர் கடைசியாகச் செய்து முடித்திருந்த
சிலையண்டைப் போனதும் "ஆஹா! என்று கூறிவிட்டு நின்றார். சற்று நேரம் அதை
உற்றுப் பார்த்துவிட்டு, "ஆயனரே! தொண்டை மண்டலத்திலுள்ள மகா
சிற்பிகளுக்குள்ளே உமக்கு நிகரானவர் எவருமில்லை. ஆனால், நீர் கூட இத்தனை
காலமும் இந்தச் சிலையைப்போல் ஜீவ களை பொருந்திய சிலையைச் செய்தது
கிடையாது. அன்பிற்குரியவர் நெடுங்காலம் வராதபடியினால் ஏற்பட்ட இருதய
தாபத்தை இந்தச் சிலையின் முகபாவமும் மற்ற அங்கங்களின் நெளிந்த தோற்றமும்
எவ்வளவு நன்றாய் வெளியிடுகின்றன! கண்களும், கண்ணிமைகளும், புருவங்களும்கூட
அல்லவா நம்மோடு வார்த்தையாடுகின்றன? ஆயனரே! சிவகாமியின்
அரங்கேற்றத்துக்குப் பிற்பாடு இந்தச் சிலையைப் பூர்த்தி செய்திருக்கிறீர்,
இல்லையா?" என்று கேட்டார்.

"ஆம், பெருமானே! இன்று காலையில்தான் பூர்த்தி செய்தேன். சிவகாமி பெரிய
மனது செய்து இன்றைக்கு எனக்காக மறுபடியும் ஆடி அபிநயம் பிடித்தாள்!"

மகேந்திரர் மந்தஹாஸத்துடன் சிவகாமியைப் பார்த்துவிட்டு, "சிற்பியாரே! பரத
சாஸ்திரத்தைத் தொகுத்து எழுதிய முனிவர் 'ஏழு வகைப் புருவ அபிநயம்'
என்றுதானே சொல்லியிருக்கிறார்? அவர் நமது சிவகாமியின் நடனத்தைப்
பார்த்திருந்தால், புருவ அபிநயம் ஏழு வகை அல்ல, எழுநூறு வகை என்று
உணர்ந்து அவ்விதமே சாஸ்திரத்திலும் எழுதியிருப்பார்!" என்றார்.

இவ்விதம் உல்லாசமாகப் பேசிக்கொண்டு சென்ற சக்கரவர்த்தியின் பார்வை சிறிது
தூரத்தில் இருந்த ஒரு பிரம்மாண்டமான புத்தர் சிலையின்மீது விழுந்தது.
அவ்விடத்திலேயே சற்று நின்று புத்த விக்ரகத்தைப் பார்த்தவண்ணம், "ஆஹா!
கருணாமூர்த்தியான புத்த பகவான் பூவுலகத்திலிருந்து ஹிம்சையையும்
யுத்தத்தையும் அடியோடு ஒழிக்க முயன்றார். அவருடைய உபதேசத்தை இந்த
உலகிலுள்ள எல்லா மன்னர்களும் கேட்டு நடந்தால், எவ்வளவு நன்றாயிருக்கும்?
அவ்விதம் நடந்த புண்ணிய புருஷர் மௌரிய வம்சத்து அசோக சக்கரவர்த்தி
ஒருவர்தான். அப்புறம் அத்தகைய அஹிம்சாமூர்த்தியான அரசர் இந்த நாட்டில்
தோன்றவில்லை!" என்றார் மகேந்திரவர்மர்.

ஆயனர் மௌனமாய் நிற்கவே, சக்கரவர்த்தி, "நல்லது, சிற்பியாரே! உம்மை
இராஜாங்க விரோதியாகப் பாவித்து நியாயமாகத் தண்டிக்கவேண்டும்..." என்று
சொன்னபோது, ஆயனரின் முகத்தில் பெரும் கலவரம் காணப்பட்டது. சக்கரவர்த்தி
அடுத்தாற்போல் கூறிய மொழிகள் அந்தக் கலவரத்தை ஒருவாறு நீக்கின.

"ஆமாம்; இங்கு வந்துவிட்டு உடனே திரும்பவேண்டும் என்று எண்ணியிருந்த என்னை
இத்தனை நேரம் இங்கே தங்கும்படி வைத்து விட்டீர் அல்லவா? அதனால் எவ்வளவு
காரியங்கள் தடைப்பட்டு விட்டன? போகட்டும் இந்தத் தடவை உம்மை மன்னித்து
விடுகிறேன்!" என்று கூறி ஹாஸ்ய நகைப்புடன் மகேந்திரர் வாசலை நோக்கி
நடந்தார். மற்றவர்கள் அவரைத் தொடர்ந்து சென்றார்கள்.

வீட்டு வாசற்படியைத் தாண்டியதும் சக்கரவர்த்தி ஆயனரைத் திரும்பிப்
பார்த்துக் கூறினார்: "ஆயனரே உம்முடைய சிற்பத் திருக்கோயிலுக்கு மீண்டும்
நான் எப்போது வருவேனோ, தெரியாது. ஆனால், ஒன்று சொல்லுகிறேன், பூர்வீகமான
இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு ஒரு காலத்தில் அழிவு நேர்ந்தாலும்
நேரலாம்.."

"பெருமானே! ஒரு நாளும் இல்லை, அப்படிச் சொல்ல வேண்டாம்!" என்று ஆயனர் அலறினார்.

"கேளும், சிற்பியாரே! உலகத்தில் இதற்குமுன் எத்தனையோ சாம்ராஜ்யங்கள்
இருந்திருக்கின்றன; மறைந்திருக்கின்றன. ஹஸ்தினாபுரம் என்ன, பாடலிபுத்திரம்
என்ன, உஜ்ஜயினி என்ன இவையெல்லாம் இப்போது இருந்த இடம் தெரியவில்லை.
அதுபோல் இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கும் ஒருநாள் முடிவு ஏற்படலாம்.
ஆனால், உம்முடைய கலாசாம்ராஜ்யத்துக்கு ஒரு காலத்திலும் அழிவு கிடையாது.
தெய்வத் தமிழ்மொழியும், தமிழகமும் உள்ள வரையில் உம்முடைய சிற்ப
சம்ராஜ்யமும் நிலைபெற்றிருக்கும்!"

அப்போது ஆயனர் உணர்ச்சி ததும்பிய குரலில், "பிரபு! என்னைப்போல் ஆயிரம்
சிற்பிகள் தோன்றுவார்கள்; மறைவார்கள்! எங்களுடைய பெயர்களும் மறைந்தொழிந்து
போகும். ஆனால், இந்த நாட்டில் சிற்ப சித்திரக் கலைகள் உள்ளவரைக்கும்,
தங்களுடைய திருப்பெயரும் குமார சக்கரவர்த்தியின் பெயரும் சிரஞ்சீவியாக
நிலைத்து நிற்கும்" என்றார்.

அந்த மகாசிற்பியின் வாக்கு எவ்வளவு உண்மையான வாக்கு! மாமல்லபுரத்தை ஒரு
சொப்பன உலகமாகச் செய்த தமிழ்நாட்டு மகாசிற்பிகளின் பெயர்கள் உண்மையில்
மறைந்து போய்விட்டன! ஆனால், மகேந்திர பல்லவர், நரசிம்ம பல்லவரின் பெயர்கள்
சரித்திரத்தில் இடம் பெற்று இன்றைக்கும் சிரஞ்சீவிப் பெயர்களாய்
விளங்குகின்றன அல்லவா?

சக்கரவர்த்தியும் அவருடைய குமாரரும் தத்தம் குதிரை மீது ஏறிக்கொண்டார்கள்.
மகேந்திரர் குதிரைமேல் இருந்தபடியே, ஆயனரை மறுபடியும் நோக்கி,
"பார்த்தீரா? வெகு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன்; 'நான் வடக்கே
கிளம்புவதற்கு முன்னால் மாமல்லபுரத்தில் நடக்கவேண்டிய வேலைகளைப் பற்றி
ஆலோசித்து முடிவு செய்யவேண்டும். நாளை பிற்பகல் நீர் துறைமுகத்துக்கு
வரவேண்டும்" என்றார்.

"ஆக்ஞை, பிரபு! வந்து சேருகிறேன்!" என்றார் ஆயனர். போகும் குதிரைகளைப்
பார்த்துக்கொண்டு ஆயனரும் சிவகாமியும் வீட்டு வாசலில் நின்றார்கள்.

மகேந்திர பல்லவர் ஆயனர் வீட்டு வாசலுக்கு வந்ததிலிருந்து அவர் திரும்பிக்
குதிரைமீதேறிய வரையில் அவரும் ஆயனரும் சம்பாஷணை நடத்தினார்களே தவிர, குமார
நரசிம்மராவது, சிவகாமியாவது வாய்திறந்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.
ஆனால், அவர்கள் தங்களுக்குள்ளே கண்களின் மூலமாகச் சந்தர்ப்பம்
கிடைத்தபோதெல்லாம் பேசிக்கொள்ளவில்லையென்று நாம் சத்தியம் செய்து சொல்ல
முடியாது.

கடைசியாகச் சிவகாமியிடம் விடை பெற்றுக் கொள்வதற்கும் குமார சக்கரவர்த்தி அந்தக் கண்களின் பாஷையையே கையாண்டார்.

நரசிம்மரின் குதிரை சிறிது தூரம் சென்றதும், அவர் தமது தலையைமட்டும்
திரும்பிச் சிவகாமி ஆவல் ததும்பப் பார்த்துக் கொண்டு நிற்பதைக்
கவனித்தார். உடனே தம் கையிலிருந்த வேலினை உயரத் தூக்கிப் பிடித்துப்
புன்னகை புரிந்தார். மறுகணத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டு குதிரையைத்
தட்டி விட்டார்.

குமார சக்கரவர்த்தியின் சமிக்ஞையைச் சிவகாமி அறிந்து கொண்டாள். அவளுடைய
கண்களும், கண்ணிமைகளும், புருவங்களும் கலீரென்று சிரித்தன. குதிரைகள்
காட்டுக்குள் மறையும் வரைக்கும் சிவகாமி இமைகொட்டாமல் பார்த்துக்
கொண்டிருந்தாள். குதிரைகள் மறைந்து சிறிது நேரத்துக்குப் பிறகுதான் அவள்
திரும்பி வீட்டுக்குள் செல்ல யத்தனித்தாள்.

நரசிம்மர் வேலைத் தூக்கிப் பிடித்துச் சமிக்ஞை செய்ததை நினைத்து உவகை
கொண்ட சிவகாமிக்கு இன்னொரு விஷயம் ஞாபகம் வந்தது. அந்த வேலுக்கு உடையவனான
இளைஞன் எங்கே? நரசிம்மர் பலமுறை இந்தக் கேள்வியைக் கண்களின் மூலமாகவே
கேட்டதையும், தான் மறுமொழி சொல்லமுடியாமல் விழித்ததையும் நினைத்தபோது
சிவகாமிக்குச் சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது. தனக்கு முன்னால்
வீட்டுக்குள் போய்விட்ட ஆயனரிடம் அந்த வாலிபனைபற்றிக் கேட்கவேண்டுமென்னும்
எண்ணத்துடன் அவள் உள்ளே புகுந்தபோது புத்தர் சிலைக்கு அருகாமையில் ஆயனர்
செல்வதையும் அந்தச் சிலைக்குப் பின்னாலிருந்து புத்தபிக்ஷுவும் அவருடன்
வந்த இளைஞனும் திடீரென்று எழுந்து நிற்பதையும் கண்டாள். அப்போது
சிவகாமிக்கு ஏற்பட்ட வியப்பையும் திகைப்பையும் சொல்ல இயலாது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 17 Previous  1, 2, 3 ... 9 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக