ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரதேசி - விருதுகள் பல குவிக்கும்

4 posters

Go down

 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Empty பரதேசி - விருதுகள் பல குவிக்கும்

Post by சிவா Mon Mar 18, 2013 9:14 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Mar/f3c7768f-ecbe-4eb0-a3be-565f577f72ca_S_secvpf.gif

1939-ல் சாலூர் என்ற கிராமத்தில் துவங்குகிறது கதை... ஊர் கோடாங்கியாக இருக்கும் அதர்வா, உருப்படியாக எந்த வேலையும் செய்யாமல், தெருதெருவாக சென்று கொட்டடித்து சேதி சொல்லி, பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். அப்பா, அம்மாவை இழந்த அதர்வாவுக்கு பாட்டி மட்டுமே துணையாக இருக்கிறார். இந்நிலையில், அந்த ஊரிலேயே வசிக்கும் வேதிகா மீது அதர்வா காதல் வயப்பட்டு, இந்த காதல் ஊடலாகவும் மாறுகிறது.

இந்நிலையில், ஊரில் பஞ்சம் ஏற்பட, பிழைப்பு தேடி பக்கத்து ஊருக்கு செல்லும் அதர்வா, அங்கு கங்காணி ஒருவரை சந்திக்கிறார். அதர்வா மூலம் ஊர் மக்களை சந்திக்கும் கங்காணி, தன்னுடைய ஊரில் தேயிலைத் தோட்டங்கள் அதிகமாக இருக்கிறது. அங்கு வேலை செய்ய ஆட்கள் தேவை. நல்ல சம்பளம், ஆண்டுக்கு ஒருமுறை விடுமுறை தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி அவர்களை அழைக்கிறார்.

வறட்சியின் பிடியில் கிடந்து சாவதைவிட அங்கு சென்று ஒரு வாய் சோறு உண்டு காலத்தைத் தள்ளலாம் என முடிவெடுக்கும் கிராம மக்களிடம், கங்காணி வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, முன்பணத்தையும் கொடுத்து தேயிலைத் தோட்டத்துக்கு அழைத்துச் செல்கிறார். 48 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு ஒருவழியாக தேயிலைத் தோட்டத்துக்கு வந்து சேர்கிறார்கள்.

இந்நிலையில், ஊரில் அதர்வாவுடன் நெருங்கிப் பழகிய வேதிகா கற்பம் அடைகிறாள். இதுதெரிந்து, அவளது வீட்டில் பிரச்சினைவர அவளை வீட்டைவிட்டு வெளியேற்றுகின்றனர். இதனால், அதர்வாவின் பாட்டி வேதிகாவுக்கு அடைக்கலம் தந்து, தனது வீட்டிலேயே தங்க வைக்கிறாள்.

தேயிலை தோட்டத்தில் கணவனால் கைவிடப்பட்டு, 2 வயது பெண் குழந்தையுடன் தனியாக வாழும் தன்சிகாவை சந்திக்கிறார் அதர்வா. ஆதரவற்று இருக்கும் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறார் அதர்வா.

இந்நிலையில், வேதிகா கற்பமான விஷயம் பாட்டி அனுப்பும் கடிதம் மூலம் அதர்வாவிற்கு தெரிய வருகிறது. எனவே, வேதிகாவைப் பார்க்கத் துடிக்கும் அதர்வா, விடுமுறையில் ஊருக்கு சென்றுவர நினைக்கிறான். ஆனால், விடுமுறை கொடுக்கமுடியாது. மேலும் சில ஆண்டுகள் நீங்கள் இங்கு பணிபுரிய வேண்டும் என சம்பளத்தை பிடித்துக் கொண்டு ஊர் மக்களை ஏமாற்றுகிறார் கங்காணி.

இதனால் ஏமாற்றமடைந்த அதர்வா, தேயிலைத் தோட்டத்திலிருந்து தப்பித்து செல்ல முடிவெடுக்கிறார். ஒருமுறை தப்பித்துச் செல்லும்போது, கங்காணியின் ஆட்கள் அதர்வாவை பிடித்து விடுகின்றனர். இனிமேல் தப்பித்துச் செல்ல முடியாதபடி அதர்வாவின் கால் நரம்பை துண்டித்துவிடுகிறார்கள்.

கடுமையான வேலைப்பளு, சரியான மருத்துவ வசதி இல்லாமை மற்றும் சுகாதாரம் இல்லாத காரணத்தால் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் நிறைய பேருக்கு விஷ காய்ச்சல் வந்து இறந்து போகிறார்கள். இந்த விஷக்காய்ச்சலுக்கு தன்ஷிகாவும் பலியாகிறாள்.

இதிலிருந்து தப்பித்து அதர்வா, வேதிகாவை சந்தித்தாரா? தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை விடுவித்தார்களா? என்பதே மீதிக்கதை.

ஊர் கோடங்கியாக வரும் கதாநாயகன் அதர்வா, முதல் பாதி முழுவதும் விளையாட்டு, சண்டை, காதல் என தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். கண் அசைவில் இருந்து நடை, உடை, பாவனை என அனைத்திலும் தூள் கிளப்பியுள்ளார்.

தனக்கு சாப்பாடு போடாத கோபத்தில் தனியே அமர்ந்து இவர் கொட்டடிக்கும் காட்சியில் நம்மை பரிதாபப்பட வைக்கிறார். படம் முழுக்க கோணிப் பையையே உடையாகவும், செருப்பே போடாமலும் நடித்துள்ள அதர்வாவுக்கு மிகப்பெரிய சல்யூட். கிளைமாக்சில் இவர் கதறி அழும் காட்சி கல் நெஞ்சையும் கரைய வைக்கும்.

அதர்வாவின் காதலியாக வரும் வேதிகாவுக்கு உண்மையிலேயே பாராட்டத்தக்க வேடம். கவர்ச்சி, குத்தாட்டம் என ஆடிக்கொண்டிருந்த வேதிகா இப்படத்தின் முதல்பாதியில் நடிப்பு யுத்தமே நடத்தியுள்ளார் என்றால் அது மிகையாகாது. தன்னுடைய முகத்தை மட்டுமல்லாமல், கை, நகம் என அனைத்தையும் கருப்பாக்கி, உடல் அமைப்பையே மாற்றி வாழ்ந்துள்ளார். கிளைமாக்சில் இவருடைய நடிப்பு இருக்கையோடு நம்மை உறைய வைத்திருக்கிறது.

வேதிகாவின் தோழியாக வரும் புதுமுக நாயகி ரித்விகா நெஞ்சை வருடுகிறாள். ரித்விகாவின் கணவனாக வரும் அந்த நாயகனின் நடிப்பு மெய்சிலிர்க்கிறது. இந்த கணவன்-மனைவி ஜோடி பல இடங்களில் நெஞ்சை நெகிழ வைத்திருக்கிறது. ‘அரவான்’ புகழ் தன்சிகா நம் கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் இவருடைய நடிப்பு அதர்வாவை சற்றே பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அடிமைப்படுத்தபட்டு, பல்வேறு கொடுமைகள் அனுபவித்ததற்கு ஆங்கிலேயர்கள் மட்டும் காரணமல்ல, நம் இன மக்களும்தான் என்பதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் பாலா.

முதல் பாதி முழுக்க காதல், காமெடி என ஆரம்பித்து, கிளைமாக்சில் நெஞ்சை அதிர வைக்கும் காட்சிகள் என தனக்கே உரித்தான பாணியில் படத்தை உருவாக்கியுள்ளார் பாலா.

முதல் பாதியில் பொழுதுபோக்கு அம்சங்களை கொடுத்த பாலா, இரண்டாம் பாதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்ததுபோன்ற ஒரு உணர்வை கொடுத்திருக்கிறார்.

ஒரு இனத்தைப் பற்றிய கதை என்பதால் படம் முழுக்க காமிராவில் குறைந்தபட்சம் 50 பேர் இருந்து கொண்டே இருக்கின்றனர். அத்தனை பேரிடமும் இவ்வளவு அழுத்தமான நடிப்பை பாலா எப்படி வாங்கினார் என்பது ஆச்சர்யப்பட வைக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் அனைத்துப் பாடல்களும் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ளன. அவற்றை படத்தில் காட்சியப்படுத்திய விதத்தைப் பார்க்கும்போது மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். படத்தின் டைட்டில் போடுவது முதல் கடைசி வரை படத்தின் கதையோடு நம்மை ஒன்ற வைப்பதில் இவரின் பங்கும் இன்றியமையாதது.

நாஞ்சில் நாடன் மொழிபெயர்ப்பு செய்த ‘எரியும் தணல்’ நாவலின் தழுவலே இந்த பரதேசி. நாஞ்சில் நாடனே இப்படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். இவருடைய வசனங்கள் சில இடங்களில் சற்று முகம் சுளிக்க வைக்கும் நகைச்சுவையாக இருந்தாலும் பல இடங்களில் கதை கருவின் உண்மை தன்மையை விளக்கி கூறியிருக்கிறது.

சுதந்திர போராட்டத்திற்கு முன்பு நடக்கும் நடக்கும் கதை என்பதால் உடை, அலங்காரம், செட், வசன உச்சரிப்பு என அனைத்திலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் ஒருங்கே காட்சிப்படுத்தி நம் கண்களில் நீங்கா இடம் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் செழியன். சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தியே லைட்டிங் அமைத்து பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘பரதேசி’ விருதுகள் பல குவிக்கும் என்பதில் ஐயமில்லை.

மாலைமலர்


 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Empty Re: பரதேசி - விருதுகள் பல குவிக்கும்

Post by சிவா Mon Mar 18, 2013 9:22 pm



இதற்கு முன் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு திரைப்படம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை எனப் பாராட்டும் அளவிற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் காட்சியமைப்புகள் வாயிலாகவும், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாகவும் மிகப் பிரமாதமாக வெளிவந்திருக்கிறது பாலாவின், "பரதேசி" என்றால் மிகையல்ல!

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததற்கு முந்தைய காலகட்டத்து கதை! அதுவும், இன்று நாம் சுறுசுறுப்பாக இருக்க சுள் ளென்ற சுவையுடன் அருந்தும் தேனீர்பானமும், தேயிலை தோட்டங்களும் பிறந்‌த கதையை சொல்லும் பெருங்கதைதான் "பரதேசி படம் மொத்தமும்!

சென்னை புறநகரப் பகுதிகளில் இருந்து பஞ்சம் பிழைக்க நண்டு, சிண்டுகளோடு குடும்பம் குடும்பமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளின் தேயிலை தோட்டங்களுக்கு கூட்டி வரப்பட்ட கிராம மக்களை, கூண்டோடு கொத்தடிமைகளாக்கி ஆங்கிலேயர்களுக்கு விசுவாசம் காட்டிய கங்காணிகளின் கதை! ஆங்கிலே‌யர்களின் காலணி ஆதிக்கத்து கதற வைக்கும் கண்ணீர் கதைகளில் இதுவும் ஒன்று! அகப்பட்ட அடிமை இந்துக்களிடம், கிறிஸ்துவை பரப்பிய ஆங்கிலேய அடிவருடிகளின் கதை..., இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் பரதேசியின் கதையையும், களத்தையும். ஆனால் இதுமாதிரியானதொரு அடிமைகளின் கதையில் ஓர் அழகிய காதலையும், அவர்களின் பிரிவையும் கலந்து கட்டி பரதேசியை கலர்புல்லாகவும், காண்போர் மனதை கரைக்கும் படியாகவும் செய்திருக்கும் பாலாவின் சாமர்த்தியத்திற்கு அவரே நிகர்.

ஒட்டுப்பொறுக்கி, குசுப்பொறுக்கி என ஏகப்பட்ட பட்டப்பெயர்களுடன் வெள்ளந்தி கிராமத்து இளைஞன் ராசாவாக அதர்வா முரளி. சட்டி கிராப்பும், சாக்கு துணி சட்டையும், அழுக்கு பஞ்சகட்ச வேஷ்டியும் சகிதமாக ஊரில் நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் தண்டோரா போட்டு வயிற்றை கழுவும் அந்தக்கால இளைஞனாக அறிமுகமாகும் அதர்வா, நாலுகாசு சம்பாதித்து, நல்ல பெயர் எடுக்க, ஆதரித்த அம்மா வழி பாட்டியையும், காதலித்த அங்கம்மா வேதிகாவையும் அம்போ என விட்டுவிட்டு, கங்காணியின் பேச்சை நம்பி ஊர் மொத்தத்தையும் கூட்டிக்கொண்டு வேலை தேடி போகும் காட்சிகளில் நம் கண்களில் நீரை வரவழைத்து விடுகிறார் என்றால், அதன்பின் வரும் அடிமைத்தன காட்சிகளில் அனைவரது கண்களிலுமே நீரை வரவழைத்து விடுகிறார். நடிப்பில் அவரது அப்பா முரளியை மிஞ்சியிருக்கிறார் மனிதர். இதையெல்லாம் பார்க்க இன்று நடிகர் முரளி இல்லையே என்ற ஆதங்கம் நம்முள்ளும் எழுகிறது. "ஹேட்ஸ் ஆப் அதர்வா. அதர்வாவுக்கு பல விருது நிச்சயம்! அதர்வாவுக்கு மட்டுமல்ல, இப்படத்தின் லைட்பாய்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளில் தொடங்கி இயக்குனர் பாலா வரை அனைவருக்கும் தேசிய விருது உள்ளிட்ட ‌அனைத்து விருதுகளையும் தரலாம்!

கிராமத்து அங்கம்மாவாக வேதிகா, அதர்வாவை ஆரம்பம் முதலே வம்புக்கு இழுப்பதும், ஒருகட்டத்தில் அன்பால் அடிப்பதும், இரண்டுங்கெட்டானான அதர்வாவின் கருவை தன் வயிற்றில் சுமந்து, தனது வீட்டாரால் ஒதுக்கிவைக்கப்படுவதும், பின் க்ளைமாக்ஸில் அதர்வாவுக்கு பிறந்த பிள்ளையுடன் அவர் வாழும் அடிமை வாழ்க்கைக்கே வந்து சேர்வதுமாக நம் கண்களை ஈரப்படுத்திவிடுகிறார்.

வேதிகா இப்படி என்றால் இன்னொரு நாயகி தன்ஷிகாவோ மரகதம் கேரக்டரில் அதர்வாவிற்கு முந்தைய செட் அடிமையாக ஒரு ‌பெண் குழந்தையுடன், புரு‌ஷனை தொலைத்துவிட்டு படும்பாடு சொல்லிமாளாது. மற்ற இயக்குனர்களிடமிருந்து வேறுபட்டு பாலா, அதர்வாவிற்கும், தன்ஷிகாவிற்கும் காதலை கண்சிமிட்ட விடாமல் நல்ல நட்புடன் விட்டிருப்பது பலே சொல்ல வைக்கிறது. இதுநாள்வரை பாலா பட நாயகர்கள் அளவு, பாலா பட நாயகிகள் பேர் வாங்கியதில்லை எனும் குறையை போட்டி போட்டுக்கொண்டு போக்குவார்கள் தன்ஷிகாவும், வேதிகாவும் ‌என நம்பலாம்.

கங்காணி - ஜெர்ரி, அவரது மனைவியாக வரும் "அங்காடித்தெரு சிந்து, தங்கராசு, உதய் கார்த்திக், கருத்தக்கன்னி - ரித்விகா, டாக்டர் வேஷம் போடும் குரூஸ்-மோகன், பாட்டி-கச்சம்மாள், டாக்டர் பரிசுத்தம்-சிவசங்கர், ஆங்கிலேய துரை - டிம் உள்ளிட்டவர்களும் பரதேசியில் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

பரதேசி பின்னால் நடக்க இருக்கும் கதையை முன்கூட்டியே சொல்லும் வைரமுத்துவின் வைர வரிகளும், அதற்கு ஜி.வி.பிரகாஷ்குமாரின் இனிய இசையும், பாடல்கள் இசை போன்றே பின்னணி இசையும், இது பாலாவின் பரதேசியா, ஜி.வி.பிரகாஷ்குமாரின் பரதேசியா என கேட்க தூண்டுகின்றன. அதேமாதிரி செழியனின் செழுமையான ஒளிப்பதிவும், நாஞ்சில் நாடனின் வசனமும், கிஷோரின் "நச் என்ற படத்தொகுப்பும் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன.

ஆக மொத்தத்தில், பாலாவின் எழுத்து-இயக்கத்தில் "பரதேசி" - தமிழ்சினிமா ரசிகர்களுக்கு - "புதுருசி!"

தினமலர் விமர்சனம்


 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Empty Re: பரதேசி - விருதுகள் பல குவிக்கும்

Post by சிவா Mon Mar 18, 2013 9:26 pm


எப்போதுமே பாலாவின் படங்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் வலியையும் பேசுவதாகவே இருக்கும். அதையே மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் பாலா. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நம் ஊர் ஏழை மக்கள் எப்படி அடிமாடுகளாய் அவர்களுக்கு விலைபோனார்கள் என்பதையும், அதற்கு இங்கு இருக்கும் ஆதிக்க சக்திகள் எப்படி துணை போனது என்பதையும் ஆணி அடிப்பது போல அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார் பாலா.

பாலா மீது தனிப்பட்ட விமர்சனங்கள் நிறைய இருக்கலாம். அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு படைப்பை படைப்பாக அணுகுவதே ஆரோக்யமானதாக இருக்கும்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தமது கால்களை வலுப்படுத்திக் கொண்ட நேரம். இங்கிருக்கும் காடுகளை அழித்து விட்டு, தேயிலை தோட்டத்தை உருவாக்கி, அவர்கள் பணமெத்தையில் படுத்து உருள்வதற்காக, இங்கிருக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி எடுத்தார்கள் என்பதே கதையின் மையம்.

1939ஆம் ஆண்டு - சாலூர் கிராமத்தில் தன் வயதான பாட்டியுடன் வாழ்ந்துவருகிறார் ராசா (அதர்வா). வீடு வீடாகச் சென்று ‘ராசா வந்திருக்கேன்..’ என்று அவராகவே சொன்னாலும், ஊர் மக்கள் அவரை அழைப்பது என்னவோ ‘ஒட்டுபொறுக்கி’ என்றுதான். ஆம், ராசா ஊர்மக்களுக்கு வேலைகள் செய்து அவர்களிடம் அரிசியோ, சோறோ வாங்கி சாப்பிடுவது வழக்கம். ஊருக்குள் விசேஷமோ, கெட்ட
செய்தியோ எதுவாக இருந்தாலும் தம்பட்டம் அடித்து ஊரைக்கூட்டுவது ராசா தான்.

இந்த நேரத்தில் தான் ராசாவுக்கும் அங்கம்மா(வேதிகா)வுக்கும் காதல் வருகிறது. காதலையும் தாண்டி அவர்களுக்குள் எல்லாம் முடிந்துவிடுகிறது. இது ரகசியமாக இருந்த வரை யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இது ஒரு நாள் ஊருக்குத் தெரிந்துவிட, பிரச்சனை பெருசாகிறது.

அப்போது தான், கங்காணி ஊருக்குள் வருகிறான். ’இங்க கிடந்து கஞ்சிக்கு கஷ்டப்படுவதைவிட, என் கூட வந்து, நான் சொல்ற வேலையை செஞ்சா, நல்ல பணம் கிடைக்கும்’னு ஊர் மக்களை ஆசை காட்டுகிறான் கங்காணி. அவன் மோசம் செய்யத்தான் அழைக்கிறான் என்பதை உணராத மக்கள் அவன் பின்னே செல்கிறார்கள். அங்கம்மாவை ஊரில் விட்டுவிட்டு ராசா வேலைக்கு போகிறான்.



ஒரு வருட ஒப்பந்தத்தின் பெயரில் எல்லோரும் வேலைக்கு சேர்க்கப்படுகிறார்கள். போன முதல் நாளே கொடுமைகள் தொடங்குகிறது. அங்கே தான் மரகதம் (தன்ஷிகா) தன் கைக்குழந்தையோடு வேலை செய்கிறாள். அங்கே சரியான உணவு இல்லாமல், சங்கு ஊதினா வேலைக்கு புறப்பட்டு போகும் அடிமைகளாக நடத்தப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது. ஒரு நாளைக்கு ஆள் உயரம் உள்ள முப்பது கூடைகளில் தேயிலைப் பறிக்கும் பெண்களும், காட்டு மரங்களை வெட்டும் ஆண்களும் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அந்த மக்களை தொட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களை கம்பால் தள்ளிவிடும் விஷயங்களும் மறைக்காமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அட்டைப்பூச்சு கடிகளால் அவதிப்படும் மக்களை பார்க்கும் போதே இதயம் பதறுகிறது. வெள்ளைக்கார துரைகளுக்கு இளம் பெண்கள் வலுக்கட்டாயமாக விருந்தாக்கப்படுவதும் தொடர்கிறது. தப்பித்து செல்ல முயற்சி செய்பவர்களோட கால்பாதத்திற்கு பின் பகுதியில்
கட்டிங் பிளேயரால் வெட்டப்படுவதும் சகித்துக்கொள்ளமுடியாத கொடூரங்கள். ராசாவும் இந்த கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறான்.

ஒரு வருட ஒப்பந்தம் முடிந்துவிட்ட நிலையில், ஊருக்கு போகலாம் என்று சம்பளப்பணத்திற்காக கையேந்தி நிற்கும் நேரம், சாப்பாட்டு செலவு, மருத்துவ செலவு, என பணத்தை எடுத்துக் கொண்டு, ’இந்த கடனைத் தீர்க்க இன்னும் நீ பல வருஷம் வேலை செய்யணும்’னு சொல்கிற சூழ்ச்சி தாங்கிக்கொள்ள முடியாத பயங்கரம்.



இப்படி பல வருடங்கள் ஆகியும் ஊருக்கு போக முடியாத ராசா, இந்த அதிகார வர்க்கத்தில் சிக்கிக்கொண்டு தவிக்க... அங்கம்மாவோ ஒரு பிள்ளைக்கு தாயாகி, ராசா ஊருக்கு வருவான் என்ற ஏக்கத்தோடு ஊரில் காத்துக் கிடக்கிறாள். இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பதை வலியோடும் வேதனைகளோடும் மீதி படம் சொல்கிறது.

அதர்வாவின் பாட்டியாக வந்திருக்கும் கச்சம்மாள், காமெடியில் கலக்கி இருக்கிறார். வேதிகாவுடன் காதல் வந்ததும், கனவு கண்டு புலம்பும் அதர்வாவிடம், ’எனக்கு கூட நீங்க ரெண்டு பேரும் பிச்சை எடுக்குற மாதிரி கனவு வந்தது’ என்று சொல்லுகிற காட்சியில் தியேட்டரே அதிருது!

படத்தின் இரண்டு தூண்களாக கம்பீரமாய் காட்சியளிக்கிறார்கள் ஜி.வி.பிரகாஷும் வைரமுத்துவும். பரதேசி படத்திற்கு வேறுஒரு பாடலாசிரியரை எண்ணிப்பார்க்க முடியாத நிலையில், நிஜமாகவே தன் ரத்தத்தால் பாடல்கள் எழுதியிருக்கிறார் வைரமுத்து. மக்கள் ஊர்விட்டு போகும்போது ‘செங்காடே...’ எனத் தொடங்கும் பாடலில் ‘கங்காணி பேச்சக்கேட்டு சனம்போகுதே... நண்டுகள
கூட்டிக்கொண்டு நரிபோகுதே...’ என்ற வரி உண்மையின் உச்சம். ‘செந்நீர் தானா...’ என்ற பாடல் இதயத்தில் கண்ணீரை வரவழைப்பது உறுதி.

ஜி.வி.பிரகாஷுக்கு கிடைத்த வரப்பிரசாதத்தை நியாயமான முறையில் பயன்படுத்திக் கொண்டுள்ளார். பின்னணி இசை நம் காதுகளில் சிம்மாசனம் போட்டு அமர்கிறது. ஒளிப்பதிவாளர் செழியனின் உலகத்தரமான ஒளிப்பதிவு கண்களுக்கு பிரமிப்பை காட்டுகிறது.

அதர்வாவுக்கு பல அழுத்தமான காட்சிகள் படத்தில் உண்டு. அதுபோன்ற காட்சிகளில் தன்னால் முடிந்தவரை கடினமான உழைப்பைக் கொடுத்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. வேதிகாவுடனான காதல் காட்சிகளிலும் தன்ஷிகாவுடனான சோக காட்சிகளிலும் அதர்வா நடிப்பால் அதிரவைக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் தேயிலை தோட்டத்தின் பாறைமேல் உட்கார்ந்தபடி ‘நியாயமாரே... கொஞ்சம் இரக்கம் காட்டுங்க...’ என்று கதறுகிற காட்சியைப் பார்த்தால் கல்லுக்கும் கண்ணீர் வரும். அதர்வாவின் பெரிய கண்கள் அவருக்கு ப்ளஸ்! வேதிகா, தன்ஷிகா என இருவருமே இருவேறு கதாபாத்திரங்களில் வெளுத்து வாங்கி இருக்கிறார்கள்.

இந்திய இயக்குனர்களுக்கு ஆச்சரியக்குறியாய் விளங்கும் பாலா, உலக சினிமாவையே வியக்க வைக்க முயற்சித்திருக்கிறார். இதற்கு முந்தைய படைப்பில் கொஞ்சம் சறுக்கிய பாலா, பரதேசியில் சுதாரித்துக்கொண்டு இராட்சஷ பலத்தொடு கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிறார். நாம் அருந்தும் தேநீரில் சுவையைத் தாண்டி இத்தனை பெரிய சுமைகளும் வலிகளும் அடங்கி இருக்கிறது என்பதை நமக்கு உணர வைப்பதே பாலாவின் முழு வெற்றி.

பரதேசி - தேநீரின் சுவைக்குள் அடங்கிய சுமைகளும் வலிகளும்!

நக்கீரன் விமர்சனம்!


 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Empty Re: பரதேசி - விருதுகள் பல குவிக்கும்

Post by சிவா Mon Mar 18, 2013 9:26 pm

 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் PARADESI-46


 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Empty Re: பரதேசி - விருதுகள் பல குவிக்கும்

Post by சிவா Mon Mar 18, 2013 9:28 pm

ஏன் எனக்கு பரதேசி படம் பிடிக்கவில்லை ?

எந்தப் படத்தையும் முழுமையாக ஏற்கவும் முடியாது. நிராகரிக்கவும் முடியாது என்ற வாதங்கள் வைக்கப்படுகின்றன. இது ஏற்றுக் கொள்ளவேண்டிய உண்மை போல தோன்றும். ஆனால் இதே வாதம் படு மோசமான மசாலா படங்களுக்கும் பொருந்தும். அவற்றில் கூட ஓரிரு ஏற்கத்தக்க அம்சங்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு படம் வெகுஜன பார்வையாளர்கள் முன்பு வைக்கப்படும்போது அவர்கள் அந்தப் படத்தை எப்படி புரிந்துகொள்ளும் வாய்ப்பை அந்தப் படம் தருகிறது என்பதே எனக்குப் பிரதானமானது. வெகுஜனங்களுக்கான படத்தில், சிறப்பான அம்சங்கள் அறிவுஜீவி ஆய்வாளர்களுக்கும் திரைவிமர்சன மேதைகளுக்கும் மட்டுமே புரிகிற மாதிரியும், சாதாரணப் பார்வையாளருக்கு அவை எட்டாத விதத்திலும் இருந்தால் எனக்கு அது உடன்பாடில்லை. ஒரு படத்தின் இறுதியில் ஒற்றை செய்தியாக ஒரு சிறந்த கருத்து சாதாரணப் பார்வையாளர்களுக்குப் போய் சேர்ந்துவிடுகிறது என்பதற்காக அந்தப் படத்தில் மறைக்கப்படும், மழுப்பப்படும் திரிக்கப்படும் திணிக்கப்படும், கருத்துகள் பற்றிக் கவலைப்படாமல் இருக்கமுடியாது. பார்வையாளர்கள் அந்தக் கருத்துகளையும் படச் செய்தியுடன் சேர்ந்தே ஏற்றுக் கொள்ளச் செய்யப்படுகிறார்கள். அப்படிப்பட்ட குறைகள் சிறியனவாக உள்ளனவா, அதிகமாக் உள்ளனவா என்பதை கவனித்தே ஆகவேண்டியிருக்கிறது. இதன் காஸ்ட் பெனஃபிட் ரேஷியோ முக்கியமானது.

பரதேசி படத்தைப் பற்றி விரிவாக எழுத எனக்கு விருப்பமில்லை. என் சக்தியையும் நேரத்தையும் அதில் வீணடிக்க எனக்கு விருப்பமில்லை. எனவே என் கருத்துகளை சுருக்கமாக மட்டுமே சொல்லப் போகிறேன். இந்த ஒவ்வொரு கருத்தையும் விரிவுபடுத்திப் பேச என்னிடம் விஷயம் உண்டென்றபோதும்.

எரியும் பனிக்காடு என்ற டாக்டர் டேனியலின் டாக்கு-நாவலையும் நாஞ்சில் நாடனின் இடலாக்குடி ராசா என்ற சிறுகதையையும் பாலா இணைத்து தன் திரைக்கதையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.இரண்டு கதைகளும் கருப்பொருளில் தொடர்புடையவையே அல்ல. எனில், இதற்கான அவசியம் என்ன ? எரியும் பனிக்காடு அதனளவில் முழுமையாகப் படமாக்கப்பட்டாலே மூன்று மணி நேரப் படமாக எடுக்கும் சாத்தியங்களும் பாத்திரங்களும் உள்ள நாவல். ஆனால் அதில் பாலா தன் படங்களில் வழக்கமாக வைத்திருக்ககூடிய பார்முலாவுக்கான பாத்திரம் எதுவுமில்லை. சேது, பிதாமகன் விக்ரம் பாத்திரங்கள் போலவோ அகோரி போலவோ ஒரு பாத்திரத்தை கதாநாயகனாக வைக்கும் பார்முலா பாலாவுடையது. இடலாக்குடி ராசா அதற்கு தோதான பாத்திரம். இதே போல பரதேசி படத்தில் வரும் பிரதான பெண் பாத்திரங்கள் எல்லாம் பாலாவின் முந்தைய படங்களில் லைலா, சங்கீதா போன்றோர் செய்த பாத்திரங்களின் மறுவார்ப்புதான். இவர்களின் உடல்மொழி எல்லாம் தொடர்ந்து பாலாவின் முந்தைய படங்களில் இருக்கும் அதே செயற்கையான உடல்மொழிதான். இதற்கெல்லாம் சம்பந்தமே இல்லாத ஒரு படைப்பு எரியும் பனிக்காடு. அதில் தன் சைக்கிக் பர்வர்ட்டட் பார்முலாவை பாலா புகுத்திச் சிதைத்திருப்பதுதான் என்னைப் போன்றோரைக் கண்டிக்க வைக்கிறது. லைஃப் ஆஃப் பை நாவலை பாலாவிடம் படமாக்கக் கொடுத்தால் என்ன ஆகும் என்று கற்பனை செய்தால் இந்த சிக்கல் புரியும்.

எரியும் பனிக்காடு நாவலை எழுதிய டாக்டர் டேனியல் ஒரு விஷயத்தை தெளிவாக முன்னுரையில் சொல்லியிருக்கிறார். அந்தக் கதை 1900களில் தேயிலைத்தோட்டங்களில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அப்போது அங்கே வேலை பார்த்தவர்களிடம் அவர் கேட்டு பதிவு செய்ததன் அடிப்படையில் எழுதுவதாக் சொல்கிறார். தன் கதையின் ஆரம்பத்திலேயே கதை நடக்கும் வருடம் 1925 என்று சொல்கிறார். அந்தக் கிராமம் அரிஜனங்கள் வாழும் கிராமம் என்று எழுதுகிறார்.

பாலாவோ தன் படத்தில் கதை நடப்பது 1939ல் என்கிறார். அது தலித்துகளின் (அரிஜனங்களின்) கிராமம் என்பதற்கான குறிப்பு எதுவும் என்னைப் போன்ற பாமர பார்வையாளனுக்குப் புரியும் விதத்தில் படத்தின் முதல்பகுதியில் கிடையாது. அந்த கிராமம் பொய்யானது. அதில் இருக்கும் மனிதர்கள் தட்டையாக எல்லாரும் பாலாவின் சைக்கிக் பொம்மலாட்ட பொம்மைகளாக இருக்கிறார்கள். கிராமத்தில் வர்க்க அடுக்கோ சாதி அடுக்கோ தெரியவருவதில்லை. சோழர் காலத்திலிருந்து வரிவசூல் முறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுவிட்ட தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் அதற்கான அரசுப் பிரதிநிதி உண்டு. ஆட்சி சோழர் முதல் இங்கிலீஷ்காரர்கள் வரை மாறினாலும் இந்தப் பிரதிநிதியும், ரெவின்யூ அமைப்புகளும் தொடர்ந்து வருகின்றன. பாலாவின் கிராமத்தில் எதுவும் கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக அந்த கிராமம் 1939ன் தமிழ் கிராமம் என்பது பெரும்பொய். ஏனென்றால் 1939 என்பது இன்னும் எட்டே வருடங்கள்தான் சுதந்திரத்துக்கு அப்பால் இருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் உச்சமே கடந்துவிட்ட காலம் அது கடைசி போராட்டமே 1942தான். பெரியார் 1917லிருந்து 1924 வரை காங்கிரசில் இருந்துவிட்டு பின் சுயமரியாதை இயக்கம் நடத்திவிட்டு அடுத்து நீதிக்கட்சியிலும் இணைந்துவிட்டார். 1920 முதல் 1937க்குள் நீதிக்கட்சி 13 வருடம் ஆட்சி நடத்தியிருக்கிறது. 1939ல் பெரியார்தான் அதன் தலைவர். தனி திராவிட நாடு கோரி பெரியார் மாநில மாநாடு நடத்தியது 1939ல்தான். முதல் பாதி முழுக்க பாலா காட்டும் கிராமத்தில் இதற்கான எந்த அடையாளமும் கிடையாது. படத்தின் கடைசி பகுதியில் மட்டும் திடீரென இரண்டொரு வசனங்களில் காந்தியும் காங்கிரசும் தலை நீட்டுகிறார்கள்.

பாலா காட்டும் தேயிலை எஸ்டேட்டும் 1939ன் எஸ்டேட் அல்ல. ஏனென்றால் 1936 லேயே தேயிலைத் தோட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன. அதற்கான விழிப்புணர்ச்சி அங்கே தொடங்கிவிட்டது. பாலாவின் எஸ்டேட்டில் அதற்கான அறிகுறியே இல்லை. காரணம் நாவல் 1925ல் நடப்பதாக டேனியல் சொன்னதை பாலா 1939 என்று மாற்றிய தவறுதான். ஏன் 1939 என்று மாற்றினார் ?

எழுத்தாளர் டாக்டர் டேனியல் 1940 எஸ்டேட்டுக்குள் வந்தார். பாலாவின் படத்தில் வரும் கிறித்துவ டாகடர் பரிசுத்தமும் அப்போதுதான் வரவேண்டும் என்பதற்காக கதையை பாலா 1939ஆக மாற்றியிருக்கிறார். அதாவது டேனியல் பாத்திரத்தைத்தான் பரிசுத்தமாக பாலா இழிவுபடுத்த் திட்டமிட்டிருக்கிறார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.பாலாவின் இந்துத்துவ அரசியல் தொடர்ந்து கண்காணிக்கப்படவும் ஆய்வு செய்யப்படவும் வேண்டியதாகும். டேனியலின் நாவலில் அவர் தன்னையே ஆபிரகாம் என்ற டாக்டர் பாத்திரமாக்கி தான் எஸ்டேட்டுக்கு வந்ததையும் தன் அனுபவங்களையும் சொல்கிறார். தொழிலாளர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியதை விவரிக்கிறார். அந்த கிறிஸ்துமஸ் அனுபவங்களை பாலா எடுக்கவில்லை. நேர்மாறாக டேனியலைக் கேவலப்படுத்தி குத்தாட்டம் போட்டு மதமாற்றம் செய்யும் கோமாளியாகக் காட்டியிருக்கிறார். கதை உரிமையை படமாக்க பாலாவுக்குக் கொடுத்த டேனியலின் வாரிசுகள் இதற்காக பாலா மீது அவதூறு நஷ்ட ஈடு வழக்கு போட போதுமான முகாந்தரம் இருக்கிறது. மத போதகர்களை கிண்டலடிப்பதையும், படத்தின் முதல்பாதியில் நாஞ்சில் நாடனின் சரமாரியான தென் தமிழக பாலியல் கெட்ட வார்த்தை வசவுகளையும் யூ படத்தில் அனுமதித்திருக்கும் சென்சார் போர்ட், இனி பாலாவின் ஆன்மீக வழிகாட்டி ஜக்கி, ஜயேந்திரர், பிஜே போன்றோரை கிண்டல் செய்தும், சென்னை தமிழ் வசவுகளை சரமாரியாக அனுமதிக்கவும் முன்வரவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன்.

டேனியலின் நாவலில் கங்காணிகளும் அதே சாதியினர்தான். அதுதான் முதலாளிகளின் தந்திரம். பாலா படம் அந்த தந்திரம் பற்றிப் பேசுவதில்லை.டேனியல் நாவலில் முழு கிராமமும் நடை பய்ணமாக புறப்பட்டு செல்வதில்லை. ஒரு ஜோடி ஊரை விட்டு பழனிக்குப் போய் ரயிலில் கங்காணியால் அழைத்து செல்லப்பட்டு போகிறது. பாலா படத்தில் எல்லாரும் போகிறார்கள். ஏன் எல்லாரும் போகிறார்கள்? கடும் பஞ்சமா? ஊரில் வேலை இல்லையா? அதெல்லாம் எதுவும் சொல்லப்படவில்லை. ஊரை பஞ்சக் கொடுமையில் சிக்கி தவிக்கும் ஊராகவே பாலா காட்டவில்லை. குதூகலமாக கல்யாணம் நடக்க விருந்து சாப்பிடும் சூழல்தான் காட்டப்படுகிறது. அதையடுத்து பெரும் பஞ்சம் என்ற ஒரு குறிப்பு கூட கிடையாது. ரயிலில் செல்லாமல், நடந்து எஸ்டேட்டுக்கு செல்பவர்கள் 48 நாள் நடக்கிறார்களாம். அப்படி நடந்தால் உத்தரப் பிரதேசத்துக்கே போய்விடலாம். தென் தமிழ்நாட்டிலிருந்து மேற்கு வால்பாறைக்கு செல்ல பத்து நாள் நடந்தாலே போதும். பாலாவின் ஜனங்கள் நடந்து போகிற வழியில் 48 நாட்களிலும் வழியில் ஒரு ஊர் கூட கிடையாது. வழி நெடுக பொட்டல் காடுதான். இப்படி எல்லாமே பொய். எஸ்டேட்டில் ஆங்கிலேய முதலாளி பாத்திரம் மசாலா சினிமாவின் காமெடி வில்லன் மாதிரி இருக்கிறது. குமரிமுத்து மாதிரி அவர் தோட்டப்பெண் தொழிலாளிகளிடம் விஷமம் செய்கிறார். டேனியலின் நாவல் எஸ்டேட் அதிபர்கள் எப்படி பாலியல் குற்றங்கள் செய்வார்கள் என்பதை துல்லியமாக சொல்லியிருக்கிறது, ஆசைப்படும் பெண்ணை பங்களாவுக்கு அனுப்பச் சொல்வார்களே ஒழிய, திறந்த வெளியில் களத்தில் வம்பு செய்யமாட்டார்கள். அப்படி செய்யக்கூடியவர்கள் மேஸ்திரிகள், கங்காணிகள் போன்றோர்தான். இந்த நுட்பங்களெதிலும் பாலாவுக்கு அக்கறையில்லை. இவரைத்தான் மகா இயக்குநர் என்று ஜால்ரா அடிக்கிறது ஒரு கூட்டம்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். சொல்லப் போவதில்லை. இப்படியாக பாலாவின் சைக்கிக் பார்முலாவில் மொண்னையாக எடுக்கப்பட்ட ஒரு படம்தான் பரதேசி. ஒவ்வொரு முறை டீ குடிக்கும்போதும் தோட்டத் தொழிலாளிகளின் ரத்தமும் வியர்வையும் நினைவுக்கு வருவதை சாதித்த ஒரே படம் சில வருடங்கள் முன்பு ம.க.இ.க எடுத்த ஆவணப்படம்தான். தொழிலாளர்களின் அடிமை நிலையைப்பற்றிய சோகத்தையும் அதையொட்டிய நம் கோபத்தையும் கமர்ஷியல் பார்முலாவுக்குள்ளேயே நின்று எடுத்த வசந்தபாலனின் அங்காடித்தெரு ஏற்படுத்தியதில் கால்வாசியைக் கூட பரதேசி எனக்கு ஏற்படுத்தவில்லை. கலைப்படம் போல பொய்த் தோற்றம் காட்டும் ஒளிப்பதிவும், இசையும், படக்குழுவினரின் கடும் உழைப்பும் ஒரு படம் சரியானதாக இருப்பதற்குப் போதாது. படத்தில் ஒரே நிஜமான பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை அளித்திருப்பது அதர்வாவின் பாட்டியாக நடித்திருக்கும் கச்சம்மாள் மட்டும்தான். அவரை நடிக்கவைத்ததற்காக பாலாவைப் பாராட்டுவதைத் தவிர வேறு எதற்காகவும் என்னால் பாலாவைப் பாராட்ட முடியாது.

Gnani Sankaran @ Facebook


 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Empty Re: பரதேசி - விருதுகள் பல குவிக்கும்

Post by சிவா Mon Mar 18, 2013 10:23 pm


பரதேசி - பாலாவின் வன்மம்!


எரியும் பனிக்காடு ( Red Tea ) படித்துவிட்டு வேதனையால் புலம்பியவள் என்பதால் படத்தை ஆர்வமுடன் போய் பார்த்தேன்.

இன்று நாம் கதகதப்பாக உறிஞ்சும் தேநீரில் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் கண்ணீரும் செந்நீரும் கலந்துள்ளது என்பதையும், ஒவ்வொரு தேயிலைத்தோட்ட வேர்களும் எம்மக்களின் பிணக்குவியல் மீது தான் நிமிர்ந்து நிற்கிறது என்ற உண்மையையும் வெளிக்கொண்டு வந்த பாலாவின் முயற்சிக்கு முதலில் நன்றிகள்!..ஆனால்,உண்மைக்கதை என்று படத்தின் ஆரம்பத்திலேயே வலுவாக பதிவு செய்துவிட்டு பொய்யான வாழ்வியலை காட்டலாமா பாலா ??

உண்மையில் கடுமையான பஞ்சத்தாலும் சாதிக்கொடுமையாலும் தான் மக்கள் தேயிலைத்தோட்டங்களுக்கு கொத்தடிமைகளாக புலம்பெயர்ந்தார்கள்.படத்தில் ஒரு இடத்தில் கூட தேயிலைத்தோட்ட வேலைக்கு செல்வதற்கான வலுவான காரணங்களோ, சாதிய கொடுமைகளோ இடம்பெறவில்லை. பாலாவும் சாதிப்பற்றுள்ள நாஞ்சில் நாடனும் திட்டமிட்டே மறைத்துவிட்டனர்.

படத்தின் கலை மற்றும் ஒளிப்பதிவு முதல்பாதி சுமார்.பின்பாதி மிக மிக மட்டமானது.போர்த்திய மூடுபனியையும் மழைப்பொழிவையும் அடிக்கடி சந்திக்கும் இடம் தான் தேயிலைத்தோட்டம்.காட்சிகளில் மக்கள் தேயிலைத்தோட்டங்களில் வாழ்கிறார்கள் என்ற உணர்வே ஏற்படவில்லை.இன்றும் இலங்கையின் தென் பகுதியில் வாழும் மலையகத் தமிழர்கள் வீடுகளில் வசிக்காமல் வரிசையாக சிறு அறைகள் கொண்ட லைனிலேயே அடிமையாக வாழ்கிறார்கள்.தமிழக மலைப்பகுதிகளிலும் அப்படித்தான் வாழ்ந்துள்ளார்கள்.ஆனால்,படத்திலோ குடிசை வீடுகளில் வாழ்வதுப்போல் காட்டி கதையுடன் ஒன்றவிடாமல் செய்துள்ளனர்.

1838 ம் ஆண்டே சம்பளம் கொடுக்காமல் இருந்த தேயிலைத்தோட்ட முதலாளியான ஆங்கிலேயரை எதிர்த்து 45 அசாம் தொழிலாளர்கள் 20 நாட்களுக்குமேல் போராட்டம் செய்துள்ளனர்.உலகின் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் முதல் புரட்சி இதுதான்.படத்தில் அனைத்து தொழிலாளிகளையும் ஏன் கோழையாக சித்தரிக்க வேண்டும் ??சம்பளம் தராமல் ஏமாற்றிப் பிழைக்கும் மேஸ்திரியை எதிர்க்க சிறு உணர்வுகளை கூட அவர்கள் முகத்தில் காட்டவில்லையே ! ( எரியும் பனிக்காடில் வரும் கருப்பனை கூட ஓரளவிற்கு வீரமானவனாகத்தான் சித்தரித்திருப்பார்கள்)ஜிவி பிரகாஷின் இசையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.இளையராஜாவை சேர்த்திருக்கலாம்.

பாலா நிச்சயமாக சாடிஸ்டாக தான் இருக்க வேண்டும்! டேனியல் எவ்வளவு மனிதமிக்கவர் என்றும்,கதையில் வரும் டாக்டர் கேரக்டர் டேனியல் தான் என்பதையும் எரியும் பனிக்காடு 9Red tea )நாவல் படித்த அனைவருக்குமே தெரியும்.அவர் மனிதத்தை நேசித்ததால் தான் அடிமைப்பட்டுக்கிடந்த எம்மக்களின் வலியை நூலாக வெளிக்கொண்டு வந்து தோட்டத் தொழிலாளர்களுக்காக சங்கத்தையும் நிறுவினார்.அவரது நாவலையே படமாக்கிவிட்டு படத்தில் வரும் டாக்டர் கேரக்டரை கோமாளியாக்கியது நியாயமா பாலா ?? இது தாய்க்கு செய்யும் துரோகமல்லவா ??கட்டாய மதமாற்றம் செய்வது இன்றும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.அதற்காக படத்தில் திடிரென வரும் நோயால் ( என்ன நோய் என்றே குறிப்பிடவில்லை) கொத்துகொத்தாக மக்கள் இறந்துக்கொண்டிருக்கும்போது டேனியலை இழிவுப்படுத்துவதற்கென்றே ஒரு பாடலை வைத்து அப்பத்திற்காக மக்கள் மதம் மாறுகிறார்கள் என்று காட்டுவது அப்பட்டமான இந்துத்துவா வன்மம்.

தேயிலைத்தோட்டங்களில் மேஸ்திரிகள் மற்றும் ஆங்கிலேயேர்களின் கொடுமையை அனுபவித்தது மட்டுமல்லாமல் வேலை செய்யும்போது தேயிலை செடியை நறுக்க பயன்படும் கவாத்து கத்தியால் தவறி கைகளை வெட்டிக்கொண்டும்,மிருகங்களாலும் பல்வேறு இன்னல்களை தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் சந்தித்துள்ளனர்.இது எதுவுமே படத்தில் இல்லை!வைரமுத்து பாடல் வரிகள் ஏற்படுத்திய வலியை பாலாவின் திரைப்படம் ஏற்படுத்த தவறிவிட்டது.மற்றபடி படித்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

( இந்தப் பதிவுக்கு உடனே வந்து ஒரே படத்தில் அனைத்தையும் எப்படி காட்டமுடியும் என்று கேட்டு விடாதிர்கள்.பாலாஜி சக்திவேலிடம் படம் எடுப்பது எப்படி என்று பாலா நிச்சயமாக கற்றுக்கொள்ள வேண்டும்.வழக்கு எண் படத்தில் கந்துவட்டி,குழந்தை தொழிலாளர்,விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேடாக மாறுவது,தெருவோரங்களில் வாழும் விளிம்புநிலை மக்கள்,அதிகார வர்க்கம்,காவலர்களின் முகத்திரை,ஆசிட் வீச்சு போன்ற பல அவலங்களை பதிவு செய்து நெகிழ்ச்சியையும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் பாலாஜி சக்திவேல்.பரதேசி படத்தில் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் உண்மையான வாழ்வியலும்,வலிகளும் கால்வாசிக் கூட பதிவு செய்யப்படவில்லை ) தேயிலைத்தோட்ட மக்களின் வலிகள் நிறைந்த வாழ்வியலை படமாக்க முயன்றதுக்கு மட்டும் பாலாவுக்கு வாழ்த்துக்கள்!

Vini Sharpana @ Facebook


 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Empty Re: பரதேசி - விருதுகள் பல குவிக்கும்

Post by சிவா Mon Mar 18, 2013 10:24 pm

 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் 556942_521505077895541_2033039287_n


 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Empty Re: பரதேசி - விருதுகள் பல குவிக்கும்

Post by பிளேடு பக்கிரி Tue Mar 19, 2013 12:07 am

விருது குவிப்பது நிச்சயம்



 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Empty Re: பரதேசி - விருதுகள் பல குவிக்கும்

Post by அருண் Tue Mar 19, 2013 11:20 am

முதல் பகுதியில் உணர்வுடன் கொண்டு சென்ற பாலா!
பிற் பகுதியில் உணர்வுடன் கொண்டு செல்ல தவற விட்டு விட்டார்.

பிற் பகுதியில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் பரதேசி மறக்க முடியாத சினிமாவை தமிழ் உலகத்திற்கு கொடுத்து இருக்கலாம்.

வழக்கு எண் படம் பார்த்து வெளி வந்தவுடன் எதோ ஈர்ப்பு என்னிடம் காணப்பட்டது;
ஆனால் இந்த படத்தை பார்த்து வெளி வந்தவுடன் எந்த உணர்வும் தோன்றவில்லை.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Empty Re: பரதேசி - விருதுகள் பல குவிக்கும்

Post by mbalasaravanan Tue Mar 19, 2013 1:21 pm

நண்பரே நான் பார்த்து விட்டு சொல்கிறேன்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

 பரதேசி - விருதுகள் பல குவிக்கும் Empty Re: பரதேசி - விருதுகள் பல குவிக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum