ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு Empty ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு

Post by Admin Sun Aug 28, 2011 9:17 am

முன்னுரை

கதையோ, கவிதையோ எல்லாமே செய்யப்படுவதுதான். யுகங்களாக நீள விரியும் கணங்களோ, திரும்பிப் பார்ப்பதற்குள் கடந்து மறையும் பத்தும் இருபதுமான வருடங்களோ, மனதில் சூல் கொள்ள வைத்த அனுபவமும் அதன் தாக்கமும் வார்த்தைகளைத் தேடித் தேடி எழுத்தில் வடிக்கும்போது, செயற்கைத் தனம் எப்படியோ கலந்து ஏதோ ஓர் அளவில் அந்நியப்பட்டுத்தான் போகிறது.

அதையும் மீறிப் படைப்பு வெற்றி பெறுகிறது என்றால், ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அந்தக் கவிதைக்குள் வாசகர் தன்னுடைய கவிதையை எழுதிக் கொள்கிறார். எழுத்துக்கும் எனக்கும் உள்ள இருபதாண்டு உறவு கவிதையில் தொடங்கியது. என் உரைநடையைச் செம்மைப் படுத்தியது கவிதையே. சிறுகதையிலும், குறுநாவலிலும் மும்முரமான பிறகு, இந்தக் கவிதைகளைத் திரும்பப் படிக்கும்போது, ஒவ்வொன்றுக்குள்ளும் இருக்கும் கதைதான் உடனடியாக மனதில் படுகிறது. இதை எல்லாம் கதையாக எழுதியிருந்தாலும் இந்தத் தொனிதான் இருந்திருக்கும் என்ற நினைப்பும் கூடவே ஆசுவாசமாக எழுகிறது. கவிஞர் மீராவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் ஊர்க்காரரும், என் கல்லூரி ஆசிரியருமான அவருடைய பிரபலமான ’கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ என்னைப் பாதித்திருக்காவிட்டால் முதல் கவிதையை எழுதியிருக்க மாட்டேன்.

இந்தக் கவிதைகளில் பெரும்பான்மையானவை கணையாழியில் வெளியானவை. இருபத்தைந்து வருடங்களாகக் கணையாழியில் கவிதைகளும், "முன்பிருந்த தரத்தில் கவிதைகள் இல்லை. கவிதைத் தேர்வில் கவனம் தேவை" என்று கடிதங்களும் தொடர்ந்து வருவதிலிருந்து ஆங்காங்கே எல்லோரும் அடிக்குச்சிக் கவிதைகளை வைத்திருப்பது புலப்படுகிறதோ இல்லையோ, ’இன்றைய தேதியில் எழுதப்படுவது மோசமான எழுத்து’ என்ற எண்ணம் பரவலாக இருப்பதாகத் தெரிகிறது. சங்க காலத்திலும், இப்படி அதற்கு முந்திய காலத்தை உற்சாகமாகக் கையைக் காட்டித் திருப்திப்பட்டிருக்கலாம்!

என் கவிதைகளை வெளியிட்ட கணையாழிக்கும், மற்றப் பத்திரிகைகளுக்கும் நன்றி. சிற்றிதழ் வட்டாரத்தில் மட்டும் தெரிந்திருந்த என்னை வெகுஜனப் பத்திரிகை வாசக வட்டத்திலும் பலமாக அறிமுகம் செய்த ’எங்க வாத்தியாரை’ (சுஜாதா) இங்கே நினைக்காவிட்டால், "இன்றைக்கு ராத்திரி சோறு கிடைக்காது;"

’ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்’ சென்னை ஸ்நேகா பதிப்பகம் வெளியீடாக வந்தது. நேர்த்தியான அச்சமைப்போடு கூடிய அதன் முகப்போவியத்தைச் சிறந்த நவீன ஓவியர்களில் ஒருவரான ஆதிமூலம் வரைந்திருந்தார். என் நண்பர் எழுத்தாளர் - கவிஞர் - ஓவியர் யூமா வாசுகி புத்தகத்துக்கு உள்ளே தான் இக்கவிதைகளை உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில் அற்புதமான கோட்டோவியங்களை வரைந்தளித்திருந்தார். இருவருக்கும் என் நன்றி.

இரா.முருகன்
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு Empty Re: ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு

Post by Admin Sun Aug 28, 2011 9:18 am

நாள்

விடியும்போது ஒலிபெருக்கி எழுப்பச்
சேவல் அடித்தனர் விருந்து சமைக்க.
பூப்பு நீராடப் போனாள் சிறுமி.
காய்கறிக் கடைக்குக் கூடை சுமந்து
புடவை திருத்தி நடந்த அலிக்குச்
சோப்பு வாங்கக் கடையே திறக்கலை.
கரகக் காரனைப் பகலில் பார்த்தேன்,
நாவிதர் கடையில் ஆள்வராப் பொழுதில்
முகத்தைக் கொடுத்துத் தூங்கத் துவங்கி.
செண்டை மேளம் முழங்கும் தெருவில்
கருப்புச் சாமிகள் ஊர்வலம் வந்தனர்.
துடைக்கத் துடைக்கச் சிந்திய ரத்தம்.
நாடக அரங்கில் கூட்டம் குறைவு.
வசனம் மறந்து இருமி இறந்து
பணத்தை வாங்கி வெளியே நடந்தான்.
ஒற்றை அறையில் கூட்டத் தூக்கம்.
மனைவியை உசுப்ப அம்மா இருமினாள்.
மருந்து வாங்க மறந்து போனது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு Empty Re: ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு

Post by Admin Sun Aug 28, 2011 9:19 am

சமாதியிலிருந்து கோயில் வரைக்கும்

கோவணச் சாமியார் கிழட்டுத் தளபதி,
பாளையக் காரன் தடவி அலுத்த
பழைய வைப்பாட்டி, வைப்பாட்டி வளர்த்த
உள்ளே யாரோ ஊர் மறந்தாச்சு.
கோடையில் ஒருநாள் தரிசுக ளூடே
மேற்கி லிருந்து நடந்து வந்த
ஒருத்தன் சொன்னதால் வெள்ளை யடித்துக்
கோயில் புதுக்கினர் கிராமம் செழிக்க.
சாலியா புரத்துச் சந்தைக் கடையில்
ஆடும் மாடும் அரையில் ரோகமும்
மலிவாய் வாங்கி விளம்பர வைத்தியன்
மருந்து விழுங்கும் பெரிய்ய பண்ணை
செய்து வைத்தார் லிங்கப் பிரதிட்டை.
வாரிசு இல்லாக் குருக்களின் விதவை
எரவா ணத்தில் செருகி இருந்த
செல்லரித்த புத்தகம் படித்து
மந்திரம் சொன்ன கிழப் பூசாரி
பழகிக் கொண்டான் தீட்டுப் பார்க்க.
நூறு வருசம் பின்னால் நடந்தால்
சமாதி மூலம் தெளிவாய்த் தெரியலாம்.
பத்து வருடம் முன்னால் நகர்ந்தால்
கோயில் மகிமை புத்தகம் போடலாம்.
இப்பச் செய்ய என்ன இருக்கு?
சாலியா புரம் சந்தைக்குப் போகலாம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு Empty Re: ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு

Post by Admin Sun Aug 28, 2011 9:19 am

பயம்

போகக் கூடா தென்பதை மீறி
வெளியில் நடந்து திரும்பி வந்தால்
பாதை யிருட்டில் நெளியும் வாசல்
படிக் கட்டிலும் அசுவனி உதிர்க்கும்
பந்தல் கீழும் துரத்தி வரும்.
நாற்கா லியிலும் யோகம் போலக்
கால்கள் மடித்து அமர வைக்கும்.
மின்விசை தவறிய வீட்டில் இருளில்
மெழுகின் நிழலில் பலவாய்ப் பெருகும்.
படுக்கை விரித்தால் தலைக்கு மேலே
சீறத் துவங்கித் தூக்கம் கெடுக்கும்.
தூளிக் கயிற்றில் இறங்கு மென்று
பக்கம் கிடத்திய குழந்தை சிணுங்கும்.
தூறத் துவங்கிய போது சன்னலைச்
சாத்தப் போனால் திரும்ப வைக்கும்.
விடியும் நேரம் கொஞ்சம் அயர்ந்தால்
கனவில் நீண்டு கழுத்தில் படரும்.
விடிந்த பிறகு மகுடி வைத்து
ஊதிப் பார்த்தால் ஒன்றையும் காணோம்,
நேற்றுப் பார்த்ததாய்ச் சத்தியம் செய்தவர்
இல்லையென்று புதிதாய் மறுக்கக்
கோணிப் பையில் அரிசி வாங்கிப்
போனான் பிடாரன் பயத்தைப் பிடித்து.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு Empty Re: ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு

Post by Admin Sun Aug 28, 2011 9:19 am

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்

மூடுவண்டித் திரைக்குப் பின்
முனகிநீ புரண்டிருக்கக்
காற்றணைக்கும் லாந்தர்
கைப்பிடித்துக் கூட வந்து
ஊர் உறங்கும் வேளை
பேர்தெரியா மருத்துவச்சி
வாசலிலே நின்றபோது
பேச்சுக் குரலெழுந்து
நித்திரை கலைந்த
நாய்கள் அதட்டும்.
பின்னிரவுப் பனியும்
பீடிப் புகையுமாய்
வாசலிலே நின்று
வானம் வெறித்திருக்க,
வெள்ளம் அழித்த அறுவடையை,
வீட்டுச் சுவர்கள் விழுந்ததை,
நீல மூக்குத்தி கடன்
நிலுவையில் மூழ்கியதை,
பால் மரத்த பசுமாட்டை,
பஸ் அடித்த வெள்ளாட்டை,
ஆயிக்குத் திவசம் தர
அய்யருக்கு அலைந்ததை,
காளிக்குத் தரவேண்டிய
கழுத்தறுத்த சேவல்களை,
ஆசையாய் நீ கேட்டு,
வாங்காதுபோன வட்டுக் கருப்பட்டியைச்
சுற்றும் நினைவுகள்
சூழ்ந்து குழம்ப,
நேரம் மறந்து நின்றபோது
ஆரோ வந்து சொன்னார்
அழகான குழந்தையென்று. *
ஆற்றுச் சலசலப்பில்
காலை விடிந்தபோது
உலகம் புதுசாச்சு
உள்ளமும் நேராச்சு.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு Empty Re: ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு

Post by Admin Sun Aug 28, 2011 9:21 am

திருவாளர் சங்கப் புலவர்

ஆற்றுப் படையெழுத அச்சாரம் வாங்கி
அரண்மனைப் படிகளில் இறங்கிய புலவன்
யோசித்த படிக்குத் தெருவில் நடந்தான்.
ஆற்றங் கரையில் புதிய கூட்டம்.
ஆண்கள், பெண்கள், சின்னக் குழந்தைகள்.
துண்டு விரிப்பில் பேரியாழ் கிடந்தது.
அருகே ஒருசிசு ஒன்றுக் கிருந்தது.
பாணர்கள் குழுமிப் பல்விளக் கினார்கள்.
குந்தி யிருந்து வந்த பாணன்
அரண்மனை போக வழியைக் கேட்டான்.
புலவன் தொடங்கினான் ஆற்றுப் படுத்த.
இப்படிப் போனால் விரசாய்ப் போகலாம்.
விறலியை முன்விட்டு மெல்லநீ பின்போ.
குழந்தை இடுப்பில் கிள்ளி அழவிடு.
யாழின் நரம்பை முறுக்கிக் கட்டி
மன்னனை வாழ்த்திப் பாடணும் சத்தமாய்.
திருமகள் கேள்வன் காது மந்தம்.
ஆற்றுப் படுத்திய காரியம் முடிந்து
அருகே அமர்ந்து வெற்றிலை போட்டான்
ஊர்பேர் விவரம் உசாவிக் கொண்டு.
தொலைவில் கிழக்கே கிழக்கேயோர் நாட்டிலே
நிலம் இருந்தது உள்ளங்கை அளவு
கொஞ்சம் விளைந்தது குடும்பம் நடந்தது.
அரசன் கனவில் ஆண்டவன் வந்து
ஆற்றுப் படுகை நிலமெலாம் கேட்டதால்
பறித்துக் கொண்டனர் ஆலயம் எழுப்ப.
கோயில் குடமுழுக் காகும் போது
குடிசை பிரித்துத் துரத்தி விட்டார்கள்
குதிரை நிறுத்த இடமில்லை என்று.
சோறு தேடி அலைந்தபோது
பழைய யாழிது மலிவாய்க் கிடைத்தது.
பழகிக் கொள்கிறோம் வாசிக்க அனைவரும்.
இவள் என்மனைவி பாடத் தெரியும்
நானும் கொஞ்சம் பாட்டுக் கட்டுவேன்.
கவனப் படுத்திய பாட்டிதைக் கேட்டுத்
திருத்திக் கொடுத்தால் நன்றி உனக்கு.
எதிரி நாட்டைத் தீயிடை மடுத்தது
எல்லா வயது மங்கையர் வளையும்
நெகிழச் செய்தது, செங்கோல் சிறப்பு -
எல்லாம் கேட்டு முடித்த பின்னர்
யாழின் நரம்பை மாற்றச் சொல்லி
யோசனை தந்து புலவன் கிளம்பினான்.
ஆயிரம் ஓலை புதிதாய் வாங்கி
ஆற்றுப் படையெழுதத் தொடங்கும் முன்பு
யாப்பிலக்கணம் யாரிடம் வாங்கலாம்?
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு Empty Re: ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு

Post by Admin Sun Aug 28, 2011 9:21 am

பிரதானம்

மழையில் நனையும் ஊர்வலம் எதுவோ
உருவம் சிதையக் கடந்து போகும்,
குறுக்குச் சந்தில் நெருங்கி நடந்து
வெற்றிலை உமிழத் தரையைத் தேடும்,
வாசல் மறித்து நீளும் குடங்களின்
வரிசையோடு நகர்ந்து கதைக்கும்,
எண்ணெய் கசியும் இனிப்புக் கூட்டிய
பொட்டலம் பிரித்துப் படித்து மெல்லும்
தெருவின் முகங்கள் பார்த்தது போதும்.
பொடிக்கடை முன்பு கண்கள் உருட்டி
விளம்பரம் செய்ய நிறுத்தி இருந்த
பொம்மைக் கழுத்து மூங்கில் தெரியத்
தலையைத் திருடிய பயலைத் தேடும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு Empty Re: ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு

Post by Admin Sun Aug 28, 2011 9:21 am

சுழல்

வெள்ளை யடித்துச் சுவரின் மேல்
சின்னம் எழுத வந்தார்கள்.
பேசிச் சிரித்துப் பீடி புகைத்து
அளவாய்க் கொஞ்சம் நிறங்கள் கலந்து
பார்த்துப் பார்த்து எழுதி விட்டுப்
பக்கச் சுவரில் சிறுநீர் கழித்துப்
போனவர் மீண்டும் திரும்பி வந்து
இந்தச் சுவரை நனைத்துப் போவார்.
வெள்ளை யடிப்பதும் மூத்திரம் பெய்வதும்
நிலைக்கச் சுவர்கள் விழுந்து முளைக்கும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு Empty Re: ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு

Post by Admin Sun Aug 28, 2011 9:22 am

ஆத்தா

கடுதாசுக் கட்டெடுத்துக்
கையிலொரு குடை பிடித்து,
வேகாத வெய்யிலிலே
வீதிவழி போறவரே,
சாகாமல் கிடந்து
சன்மம் சீரழிஞ்சு
போகாதா நாளெண்ணு
பொழுதெண்ணிப் பார்த்திருந்து
புத்தி கெட்டுப் புலம்பறதைச்
சித்த நின்னு கேளுமய்யா.
பாதிரா வேளையிலே
பாவிநான் பரிதவிக்கப்
பட்டாளம் சேர என்னை
விட்டோடிப் போனபிள்ளை
எங்கேயோ இருந்து
எழுதின கடிதாசை
பிரியமுள்ள அம்மா
பிள்ளைநான் சேமமின்னு
வாசித்துக் காட்டிவிட்டுப்
போனது நினைவிருக்கா?
மாசம் பொறந்து
மணிமணியாக் கையெழுதி
மகன் சொல்லும் சங்கதிகள்
மணியார்டர் காயிதங்கள்
கொண்டு வந்தெனக்குத்
தந்ததெல்லாம் நினைவிருக்கா?
மகனையே நினைச்சு
மனசுருகிக் காத்திருந்து
பார்க்க வேணுமின்னு
பரிதவித்து நிற்கையிலே
வாரானென்னு சேதி
வந்து சொல்லிப் போனீங்க.
வெள்ளனவே எளுந்திரிச்சு
வென்னீரும் தான்வச்சுப்
பிள்ளை பசியாறப்
புட்டு அவிச்சு வச்சுச்
சீரகச் சம்பாச் சோறும் தான் சமச்சு
அயிலைமீன் குழம்பும்
ஆக்கி வச்சுக்
காத்திருந்தேன்.
நிலைவாசல் படிதாண்டி
நிழல் தட்டும் போதெல்லாம்
வந்துட்டான் மகனென்னு
வாரி எழுந்து வந்தேன்.
அக்கம் பக்கத்திலே
அம்மான்னு குரல் கேட்டா,
எனமகன் என்று சொல்லி
எழுந்து ஓடிவந்தேன்.
எதிர்பார்த்து இருந்ததெல்லாம்
ஏமாந்த கதையாக,
வரலையென்னு சேதி
வந்துசொல்லிப் போனீங்க.
தூரத்துத் தேசத்திலே
யுத்தமொண்ணு வந்திடுச்சாம்.
சண்டை முடிந்தங்கே
சமாதானம் ஆனபின்னே
வந்திடுவான் மகனென்று
வாசித்துச் சொன்னீங்க.
சண்டையெல்லாம் முடிஞ்சிடுத்து
சமாதானம் ஆயிடுச்சு
புதுசாச் தேசமொண்ணு
பெறந்துடுச்சு என்னெல்லாம்
தந்திப் பேப்பரிலே
வந்ததாகச் சொன்னாங்க
என்னத்தை நான் கண்டேன்
எழுத்தறியாப் பாவிமக
பிள்ளையையே நினைச்சுப்
பரிதவிச்சுக் காத்திருந்தேன்.
அய்யோ நான் என்ன சொல்ல
அன்னைக்கு வந்த சேதி
தேகம் நடுங்குதே
வார்த்தையுந்தான் குழறுதே
நெஞ்சிலே துக்கம்
நெரிகட்டி இறுக்குதே.
முன்வரிசைச் சிப்பாயா
முகம்சிரிச்சுப் போனபிள்ளை
தொலைஞ்சுட்டான் அவன்போன
தடங்கூடப் புலப்படலை.
ஆபீசர் கையெழுதி
அந்த லெட்டர் வந்துச்சு.
இந்த இடிவிழுந்தும்
இருக்கேனே போகாம
பித்துப் பிடித்தவளாப்
புலம்பறேனே ராப்பகலா.
அரச மரஞ் சுத்தி
ஆத்தாளைக் கும்பிட்டு
வரம் வாங்கிப் பெற்று வந்த
வயிரத்தைக் காண்பேனோ
வரும்வரையில் இருப்பேனோ.
அல்லல் துன்பப்பட்டு
அக்கரைச் சீமைக்குத்
தாயாரைக் காப்பாத்தத்
தங்க மகன் போகவேண்டாம்
எங்கேயோ உசிரோடு
இருக்கிறதா அவனெழுதிக்
கடுதாசு வந்தாலே
காலமெல்லாம் போதுமய்யா.
கடுதாசுக் கட்டெடுத்துக்
கையிலே குடைபிடிச்சு
வேகாத வெய்யிலிலே
வீதிவழி போற அய்யா
உங்க முகம் பார்த்தா என்
தங்கம் நினைவு வரும்.
இன்னைக்கும் கடுதாசு
இல்லையென்னு சொல்லாது
நாளைக்கு வருமென்னு
நம்பிக்கை சொல்லிடுங்க.
நல்லா இருப்பீங்க
நாச்சியா கிருபையிலே.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு Empty Re: ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு

Post by Admin Sun Aug 28, 2011 9:22 am

பெண்

கனவிலும்
வரிசை தப்பாது வரும்
வீடுகள் கடந்து
கோபுர நிழல் நீளும்
சின்ன வீதியில்
நடக்க மாட்டேன்.
ஆற்றங் கரையில்
ஊற்றுத்தோண்டிக்
கதைகள் பேசி
அலுத்த பின்னே
குடம் நிறைத்து
ஈரமண் உதிரும்
சிற்றாடை அசையக்
கூடநடந்து வந்த தோழிகளைத்
தேட மாட்டேன்.
அப்பா வந்ததும் குதித்தோட
அண்ணாவோடு காத்திருந்த
கல் யானைப் படிகள் ஏறி,
ஞாயிற்றுக் கிழமை நாடகங்களில்
அம்மாவின் பழம்புடவை
தரை புரளும் ராணியாய்
வலம் வந்த திண்ணை கடந்து
இருண்ட நடையுள்
போக மாட்டேன்.
மௌனமாய்க் கண்ணீரில்
அம்மா கரைய,
அண்ணா உறவு மறுக்க,
தெருவே கூடிப் பேசி நிற்க,
படமாய்த் தொங்கிப் புன்னகைக்கும்
அப்பாவையே பார்த்தபடி
நின்ற கூடத்தில்
பாதம் பதிக்க மாட்டேன்.
உறவுகள் கடந்து உன்னைப் படர்ந்து
மலர்த்திய உறவு தொட்டிலில் துயிலும்.
பாதித் தலையணையில் விழித்த உடலிருக்க
மனம் மட்டும் அங்கெல்லாம்
மெல்லப் பயணம் போகும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு Empty Re: ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum