ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள்

2 posters

Go down

நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள் Empty நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள்

Post by சிவா Sat Aug 12, 2023 10:16 pm

நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள் BfWjgpG

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த 17 வயது பட்டியல் சாதி மாணவனை ஜாதி ரீதியிலாக வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவனையும் அவனது தங்கையையும் வெட்டியதாக பதியப்பட்ட வழக்கில் 6 சிறார்களை போலீசார் சிறார் நீதி வாரியத்தில் ஒப்படைத்துள்ளனர்.

திருநெல்வேலியில் இருந்து சுமார் 43 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வள்ளியூர். சிறிய வியாபார நகரமான வள்ளியூரில் உள்ள மிகப் பழமையான அரசு உதவி பெறும் பள்ளியில் தான் வெட்டுப்பட்ட பட்டியல் சாதி மாணவனும், அவனை வெட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆதிக்க சாதி மாணவர்களும் படித்து வருகின்றனர்.

சராசரியாக படிக்கும் அமைதியான மாணவன்


8ம் வகுப்பு வரை சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வந்த பட்டியல் சாதி மாணவனான பிரபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 9ம் வகுப்பில் வள்ளியூர் பள்ளியில் சேர்ந்துள்ளான். அவனது தங்கை 6 வகுப்பு முதல் இப்பள்ளியில் தான் படித்து வருகிறார்.

அமைதியான குண நலனுள்ள பிரபு சராசரியாக படிப்பான், என்கிறார் பிரபுவுக்கு பத்தாம் வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியர்.

பிரபுவை வெட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவர்களில் இரண்டு பேர் அவன் பயிலும் அதே பன்னிரெண்டாம் வகுப்பிலும் மற்றொரு மாணவர் பதினொன்றாம் வகுப்பிலும் படித்து வருகின்றனர்.

பிரபு குறித்து பேசிய பள்ளி தலைமை ஆசிரியை, ஆகஸ்ட் 3 ம் தேதி முதல் பிரபு பள்ளிக்கு வரவில்லை. இதையடுத்து அவனது வகுப்பாசிரியர் அவனது அம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஜாதி சான்றிதழ் எடுக்க சென்றுவிட்டதால் அவன் பள்ளிக்கு வரவில்லை என்று அவனது அம்மா முதலில் கூறியுள்ளார்.

தொடர்ந்து அடுத்த நாட்களும் அவன் பள்ளிக்கு வராததால் மீண்டும் வகுப்பாசிரியர் அவனது அம்மாவிடம் தொலைபேசியில் கேட்டுள்ளார். அதற்கு ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய சென்றுவிட்டதாகவும் வேறு பல காரணங்களையும் கூறி சமாளித்துள்ளார்.

பள்ளிக்கு வரும் வழியில் ஆதிக்க சாதி மாணவர்களால் அனுபவித்த கொடுமைகள் குறித்து பிரபு அவனது அம்மாவிடம் முதலில் எதுவும் கூறாமல் இருந்துள்ளான். ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என்று அம்மா கேட்டதற்கு, தனக்கு பள்ளிக்கு செல்ல பிடிக்கவில்லை என்று மட்டும் தான் கூறியுள்ளான். இதனால் தான் அவனது அம்மா எங்களிடம் ஒன்றுமில்லா காரணங்களை கூறி சமாளித்து வந்துள்ளார்.

சாதிய கொடுமையால் படிப்பை கைவிட முடிவு செய்த மாணவன்


இதற்கிடையே குடும்ப வறுமையை போக்க சென்னைக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதிக்க முடிவு செய்துள்ளதாக அம்மாவிடம் தெரிவித்துள்ளான் பிரபு.

இதையடுத்து பிரபு வெட்டப்படுவதற்கு முந்தைய நாள் 8ம் தேதி சென்னைக்கு செல்ல ரயில் நிலையம் சென்று பயணச் சீட்டும் எடுத்துள்ளான்.

அப்போது நாங்குநேரி ரயில் நிலையத்தில் வைத்து பிரபுவை பார்த்த அவனது சித்தியின் மகன், படிப்பதற்கு பயந்து தான் பிரபு சென்னை செல்ல முயல்வதாக எண்ணி அவனை சமாதானபடுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது கூட ஆதிக்க சாதி மாணவர்களால் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து அவன் யாரிடமும் வாய்திறக்கவில்லை.

தொடர்ந்து பிரபுவின் சித்தி சுமதி, அவனிடம் ஏன் பள்ளிக்கு செல்ல பிடிக்கவில்லை காரணத்தை கூறுமாறு கண்டிப்பாக கேட்ட பிறகு தான் அவன் நடந்தவற்றை கூறியுள்ளான்.

உடனே அவனது அம்மா தொலைபேசி மூலம் எங்களிடம் அவனுக்கு நடந்த கொடுமைகள் குறித்து விவரித்தார். இதையடுத்து பிரபுவையும் அவனது அம்மாவையும் அடுத்த நாள் பள்ளிக்கு வர கூறினோம். ஆகஸ்ட் 9ம் தேதி இருவரும் பள்ளிக்கு வந்தனர்.

அவனுக்கு என்ன என்ன கொடுமைகள் நடந்ததோ அது குறித்து எழுதி தர கேட்டேன். அவன் எழுதி தந்ததை படித்து பார்த்து திகைத்தே விட்டோம், என்றார் தலைமை ஆசிரியை.

"ஆதிக்க சாதி மாணவர்களின் புத்தக பைகளையும் சுமக்க நிர்பந்தம்"


பிரபு அவனது ஊரிலிருந்து அரசு பேருந்தில் வள்ளியூர் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து பள்ளிக்கு நடந்து வருவது வழக்கம். அவன் வரும் போது ஊரிலிருந்து ஆதிக்க சாதி மாணவர்களும் உடன் பேருந்தில் வருவார்களாம். அவர்களுக்கும் சேர்த்து இவன் தான் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவார்களாம்.

வள்ளியூர் பேருந்து நிலையத்தில் இருந்து பள்ளி வரும் வரை ஆதிக்க சாதி மாணவர்களின் புத்தக பைகளை பிரபுவிடம் கொடுத்து சுமக்க சொல்லிவிடுவார்களாம். அவன் தான் அதையும் சுமந்து கொண்டு பள்ளிக்கு நடந்து வந்துள்ளான்.

பள்ளிக்கு வரும் வழியில் அவனிடம் ஏவல் பணிகளை செய்ய சொல்வது, வீட்டுப்பாடங்களை எழுத சொல்வது என அவனை ஆதிக்க சாதி மாணவர்கள் கொடுமைபடுத்தியுள்ளனர்.

பிரபுவின் அம்மாவை ஏளனமாக பேசுவதுடன் அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவதையும் வாடிக்கையாக செய்து வந்துள்ளனர் அந்த மாணவர்கள். அவனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து அவன் யாரிடமாவது கூறினால் அவனை கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து அவன் இது குறித்து யாரிடமும் கூறாமல் அமைதியாக இருந்துள்ள்ளான்.

பிரபு எழுதி தந்த புகார் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு அவனை வகுப்புக்கு செல்ல கூறினேன். அன்று அந்த ஆதிக்க சாதி மாணவர்களின் பகுதியில் உள்ள கோயிலில் திருவிழா எனபதால் அவர்கள் பள்ளிக்கு வரவில்லை.

அடுத்த நாள் அவர்கள் பள்ளிக்கு வந்ததும் அவர்களது பெற்றோரை வரவழைத்து விஷயத்தை கூறலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் அதற்குள் அந்த ஆதிக்க ஜாதி மாணவர்களுக்கு தகவல் சென்றுள்ளது. அன்று மாலையே பிரபுவை அழைத்து மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அன்று இரவே அவர்கள் பிரபுவை வெட்டியதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது என்றார் தலைமை ஆசிரியை.

பள்ளி வளாகத்திலேயே சாதிய பிரச்சனைகள்


எங்கள் பள்ளியில் பல ஜாதி மாணவர்கள் படித்து வருகின்றனர். நாள்தோறும் பள்ளி காலை வழிபாட்டின் போது போதனைகளை வழங்குகிறோம், வெளியில் இருந்து ஆற்றுப்படுத்துபவர்களை (counsellor) வரவழைத்தும், காவல்துறையினர் மூலமும் மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் (Counselling) வழங்குகிறோம். விளையாட்டு மைதானங்களிலும் மாணவர்களை பின்தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

ஆன போதும், தங்கள் ஜாதி தான் உயர்வானது என்று பள்ளி கழிப்பறைகளில் எழுதி வைப்பது, பெண் ஆசிரியைகள் பாடம் எடுக்கும் போது விசில் அடிப்பது, வகுப்பறையில் உள்ள பென்ச் டெஸ்குகளில் ஜாதி பெயரை எழுதி வைப்பது என மாணவர்களால் தொடர்ந்து பள்ளியில் ஜாதி ரீதியிலான பிரச்சனைதான்.

சில நேரங்களில் காவல்துறையினரை பள்ளிக்கு வரவழைத்து சில பிரச்சனைகளில் மாணவர்களை எச்சரிக்கை செய்ய சொல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது, என்றார் மேல் வகுப்புகளுக்கு பாடம் கற்றுகொடுக்கும் அந்த பள்ளியை சேர்ந்த ஒரு ஆசிரியர்.

பிரபுவை வெட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீது பள்ளியில் ஏற்கனவே பல புகார்கள் உண்டு. அவர்களுக்கு டி.சி., (மாற்று சான்றிதழ்) வழங்கி பள்ளியை விட்டு வெளியேற்றிவிடலாம் என ஆசிரியர்களிடமிருந்து பல முறை கோரிக்கை எழுந்தது.

கல்வியாண்டு முடிய இன்னும் ஆறு மாத காலம் தான் உள்ளது. எப்படியாவது சமாளித்து விட்டால் படிப்பை முடித்து வெளியே சென்றுவிடுவார்கள் என்று தான் நாங்களும் பொறுமையாக இருந்தோம். ஆனால் அதற்குள் இப்படி நடந்து விட்டது, என்றார் மற்றோரு ஆசிரியர்.

கழுவப்படாத ரத்த கறை


வெட்டப்பட்ட போது வீடு முழுவது வழிந்த பட்டியல் சாதி மாணவன் பிரபு மற்றும் அவனது தங்கையின் ரத்தம் இன்னும் கழுவப்படாமல் அவர்கள் வீட்டு முற்றம் மற்றும் வீட்டின் உள் அறைகளில் அப்படியே உறைந்து கிடக்கிறது.

அரசியல் கட்சி தலைவர்களும், சாதிய அமைப்பு நிர்வாகிகளும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட அந்த இரு அறை கொண்ட பிரபுவின் வீட்டின் உள்ளே சென்று பார்வையிட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

நாங்குநேரி பெருந்தெருவின் நுழைவு பகுதியில் தற்காலிக கூடாரம் அமைத்து காவல்துறையினர் ஊருக்குள் நுழைபவர்களையும் வெளியே செல்பவர்களையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஊருக்குள்ளேயே புகுந்து இப்படி வெட்டிட்டானுகளே என்று பெண்கள் ஒருவித மிரட்சியுடன் அங்கங்கே கூடி நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

சுமார் 200 வீடுகள் உள்ள பெருந்தெருவில் வசிக்கும் பட்டியல் சாதியின மக்களில் பெரும்பாலானவர்கள் கூலி வேலைக்கு செல்பவர்களாக தான் உள்ளனர்.

சம்பவதன்று இரவு சுமார் 10.30 -11 மணி இருக்கும். ஊரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் கதவை அடைத்து விட்டு தூங்க சென்றுவிட்டனர். பிரபுவின் வீட்டிலிருந்து திடீரென கேட்ட அழுகுரலை கேட்டு தான் நாங்கள் வெளியே வந்து பார்த்தோம். பிரபுவையும் அவனது தங்கையையும் வெட்டி விட்டு அவர்கள் தப்பித்து ஓடிக் கொண்டிருந்தனர், என்றார் பிரபுவின் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் துரை பாண்டியன். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான துரை பாண்டியனுக்கு வெட்டுகாயமடைந்த பிரபு ஒருவிதத்தில் பேரன் முறை.

எங்கள் ஊரில் சங்கர ரெட்டியார் அரசு மேல் நிலை பள்ளி உள்ளது. ஆனால் அங்கு எங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் அவர்களை அந்த பள்ளியில் சேர்ப்பதில்லை, என்கிறார் நாங்குநேரி பெருந்தெரு ஊர்தலைவர் அன்பழகன்.

அங்கு படிக்கும் ஆதிக்க சாதி மாணவர்களால் தொடர்ந்து எங்கள் பிள்ளைகள் வன்கொடுமைகளை சந்தித்து வந்தனர். எங்கள் பிள்ளைகளை அவர்கள் படிக்க விடுவதும் இல்லை. இதனால் எங்கள் ஊரை சேர்ந்த பிள்ளைகளை அருகில் உள்ள களக்காடு மற்றும் வள்ளியூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சேர்த்து வருகிறோம் என்றார் அவர்.

முத்துநாயகன் குளம், மறவகுறிச்சி காலனி, தென்னிமலை காலனி, நாலுகால் மண்டபம் உள்ளிட்ட கிராமங்களில் பட்டியல் சாதி மக்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வந்தனர். இவை அனைத்தும் எங்கள் ஊரின் அருகில் இருந்த கிராமங்கள்.

கடந்த 20 முப்பது வருடங்களில் ஆதிக்க சாதியினரின் அடக்கு முறைகளால் இன்று இந்த ஊர்கள் காலியாகிவிட்டது. அங்கு வசித்த பட்டியல் சாதி மக்கள் ஊரையே காலி செய்துவிட்டு வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.

தற்போது நாங்குநேரி நெடுந்தெருவில் வசிக்கும் பட்டியலின மக்களையும் காலி செய்ய வைக்க வேண்டும் என அவர்கள் எண்ணுகிறார்களோ என்னவோ, என்கிறார் துரை பாண்டியன்.

இங்க படிச்சா தான் எங்க பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லைனு களக்காடு, வள்ளியூர்னு கொண்டு சேர்த்தோம். இப்ப அங்கேயும் பிரச்சனைகள் வர ஆரம்பிச்சாச்சு. பிரபு வெட்டப்பட்ட பிறகு எங்க பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்லவே பயப்படுகின்றனர், என்றார் அன்பழகன்.

இனியும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ஊரில் சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்பு ஏற்படுத்த வேண்டும், காவல் துறை கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஊர் மக்கள் வைக்கின்றனர்.

பிபிசி


Last edited by சிவா on Sat Aug 12, 2023 10:26 pm; edited 1 time in total


நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள் Empty Re: நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள்

Post by சிவா Sat Aug 12, 2023 10:26 pm

நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள் WJozYsI


நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள் Empty Re: நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள்

Post by சிவா Sat Aug 12, 2023 11:18 pm

"திமுக விதைத்த விஷவிதை மரமாக மாறியுள்ளது": அண்ணாமலை



சென்னை: திமுக விதைத்த விஷவிதை இன்று மரமாக மாறி இருக்கிறது. அதை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என தமிழக பாஜ,, தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவனது தங்கையை சக மாணவர்கள் அரிவாளால் தாக்கினர். இது தொடர்பாக தமிழக பா.ஜ., அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: திமுக விதைத்த விஷவிதை இன்று மரமாக மாறி இருக்கிறது. அதை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஜாதியப் பிரச்னைகள் காரணமாக, பன்னிரண்டாவது வகுப்பு படிக்கும் மாணவர் மற்றும் அவரது சகோதரி இருவரும், சக பள்ளி மாணவர்களால் வெட்டப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

இந்த சம்பவத்திலும், திமுக கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் போலீசார் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவருகின்றன. உதட்டளவில் சமூகநீதி பேசி, தேர்தல் ஓட்டுகளுக்காக சமூகத்தில் ஜாதிய வேற்றுமையை வளர்த்துக் கொண்டிருக்கும் திமுக.,வின் செயல்பாடுகளின் விளைவுதான், இது போன்ற கொடூர சம்பவங்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?


திமுக கட்சியிலும், பொதுமக்கள் மத்தியிலும், திமுக அமைச்சர்கள் பட்டியல் சமூக மக்களை அவமானப்படுத்தும் விதமாக நடத்துவது, செய்திகளில் வந்து கொண்டுதான் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் பட்டியல் சமூக உள்ளாட்சி உறுப்பினர் ஒருவரை ஜாதியின் பெயரைச் சொல்லி அழைத்த அமைச்சர் பொன்முடி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பட்டியல் சமூக ஊராட்சி மன்ற பெண் தலைவரை, தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுத்தும், அமர்வதற்கு நாற்காலி கூடக் கொடுக்காமல் அவமானப்படுத்திய உங்கள் கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதியானது நாங்கள் போட்ட பிச்சை என்று சொன்ன ஆர்.எஸ்.பாரதி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த உங்கள் கட்சி பார்லி., உறுப்பினருக்குக் கூட நாற்காலி கொடுக்காமல் நிற்க வைத்த உங்கள் அமைச்சர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?. வேங்கைவயல் சம்பவம் நடந்து 200 நாட்களுக்கு மேல் ஆகிறது.

இதுவரை நீங்கள், குற்றவாளியைக் கைது செய்ய எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மத்திய அரசு, பட்டியல் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் வழங்கும் நிதியைச் செலவிடாமல் திருப்பி அனுப்பி வருகிறீர்கள். இதுவரை பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான நிதியை திருப்பி அனுப்பியிருக்கிறீர்கள். இன்னும் ஒரு படி மேலாக, பட்டியல் சமூக மக்களுக்குப் பயன்படுத்த வேண்டிய நிதியை, மற்ற திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

வெகுதொலைவில் இல்லை


திமுக ஆட்சியின் அவலங்கள் அனைத்திற்கும் யார் மீதோ பழிபோட்டு மடைமாற்றிக் கொண்டிருக்கும் திருமாவளவன் உடைந்த பழைய நாற்காலி, தனிப்பட்ட முறையில் உங்களுக்கு வேண்டுமானால் போதுமான சமூக நீதியாக இருக்கலாம். ஆனால், உங்களையும் தலைவர் என்று பின்தொடரும் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் இதன் மூலம் நீங்கள் கொடுக்கும் செய்தி என்ன? இப்படி திமுகவின் சமூகநீதிக்கெதிரான செயல்கள் அனைத்தையும் மடைமாற்றுவதால் உங்களுக்குக் கிடைக்கும் பலன்தான் என்ன?

முதல்வர் ஸ்டாலின் வெறுப்பில் பிறந்து, எழுபது ஆண்டுகளாக தமிழகத்தில் வெறுப்பை மட்டுமே விதைத்துக் கொண்டிருக்கும் உங்கள் கட்சி, தற்போது விதைத்துக் கொண்டிருப்பது, சமூகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டிருக்கும் ஜாதியப் பாகுபாடு என்னும் விஷ விதை. உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் வளர்த்து வரும் இந்த விஷச் செடி, எம் தமிழக மக்களால் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள் Empty Re: நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள்

Post by சிவா Sun Aug 13, 2023 9:13 am

பள்ளி மாணவர்கள் மத்தியில் பெருகும் 'சாதி பெருமை' குற்றங்கள் - தமிழக அரசு தீர்வு காணத் தவறிவிட்டதா?



அக்டோபர் 11, 2019. மதுரை மாவட்டம் பாலமேட்டிற்கு அருகில் உள்ள மறவப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவன் வகுப்பு முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு மாணவன், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த மாணவனின் முதுகில் பிளேடால் கிழித்தார். சாதியின் பெயரைச் சொல்லி திட்டியே தனது முதுகில் மாணவன் பிளேடால் கிழித்ததாக பாதிக்கப்பட்ட மாணவன் தரப்பில் கூறப்பட்டது.

ஏப்ரல் 25, 2022. திருநெல்வேலி மாவட்டம், பள்ளக்கால் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவருக்கும் 11ஆம் வகுப்பு மாணவருக்கும் கையில் சாதிக் கயிறு கட்டியிருப்பது தொடர்பாகத் தகராறு ஏற்படுகிறது.

இதில் 11ஆம் வகுப்பு மாணவர் தாக்கியதில் காயமடைந்த 12ஆம் வகுப்பு மாணவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி ஏப்ரல் 29ஆம் தேதி உயிரிழந்தார்.

ஆகஸ்ட் 9, 2023. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, பெருந்தெருவில் வசிக்கும் 17 வயது மாணவர் ஒருவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

வள்ளியூரில் உள்ள பள்ளியில் அவனுடன் படிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர்கள் வீட்டினுள் புகுந்து அவனையும் அவனது சகோதரியையும் வெட்டியுள்ளனர்.

தற்போது இருவரும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியிலும் சாதி இருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த பள்ளி மாணவர்கள் இடையிலான சாதிய மோதல்கள் தொடர்பாக சமூகத்தில் கவனம் பெற்ற சம்பவங்கள்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. இதுபோல் வெகுஜன மக்களின் கவனத்திற்கு வராத இன்னும் பல நூறு சம்பவங்கள் இருக்கலாம்.

சாதிப் பற்று என்பது வயதில் பெரியவர்களுக்குத்தான் இருக்கும் என்ற பிம்பத்தை தவிடுபொடியாக்கும் விதமாக தற்போது 13, 14 வயது சிறுவர்களிடம்கூட சாதி மீதான பிடிப்புகளைக் காண முடிகிறது.

சமூகரீதியாக வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு கூறப்பட்டு வரும் சூழலில் பள்ளி மாணவர்கள் இடையே காணப்படும் இத்தகைய சாதிய முரண்பாடுகள், அதன் காரணமாக அரங்கேறும் குற்றச் செயல்கள் போன்றவை எதைக் காட்டுகின்றன?

பள்ளி மாணவர்கள் சமூகத்தில் இருந்து வேறுபட்டவர்களா?


பள்ளி மாணவர்கள் என்று குறுகிய வட்டத்திற்குள் இத்தகைய நிகழ்வுகளை அடைக்க முடியாது. சமூகத்தின் ஓர் அங்கம்தான் அவர்கள், சமூகத்தில் நிகழ்பவையே அவர்களிடமும் பிரதிபலிக்கிறது என்று கூறுகிறார் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.

“ஒரு மாணவன் சமூகத்தில் இருந்து வரும்போது அவனை அப்படியே வெளியே அனுப்பாமல் மாற்றி அமைக்கும் வேலையை கல்வி செய்ய வேண்டும். ஆனால், நீண்ட நாட்களாகவே கல்வி அந்த வேலையைச் செய்வதில்லை.

ஒருவன் படித்துவிட்டால் சாதியில் இருந்து வெளியே வந்துவிடுவான் என்று கூறப்படுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ்நாட்டில் கல்வி கற்றவர்களின் சதவீதம் உயர்ந்து வரும் அளவுக்கு சாதிய கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன,” என்கிறார் அவர்.

முந்தைய காலங்களில் வெளிப்படையாக இருந்த சாதிய கொடுமைகள் தற்போது மறைமுகமாக உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

“என்னைத் தொடக்கூடாது என்று தற்போது யாரும் நேரிடையாக சாதிய தீண்டாமை கொடுமை ஈடுபடுவதில்லை. ஆனால், தேர்தல், வேலைவாய்ப்பு போன்றவற்றில் கண்ணுக்குத் தெரியாத தீண்டாமையாக சாதி மாறியுள்ளது.

படிப்பின் வழியாகக் கிடைக்கும் வேலைவாய்ப்பு, ஊதியம் போன்றவை சாதிய பாகுபாட்டை குறைப்பதற்குப் பதிலாக சாதியை வளர்க்க பயன்படுகிறது,” என்றும் ஸ்டாலின் ராஜாங்கம் வருத்தத்துடன் கூறினார்.

பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவும் இதையே கூறுகிறார்.

“பல்வேறு பாகுபாடுகள் நிறைந்த சமூகத்தில் இருந்து பல்வேறு சிக்கல்களுடன் குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கு வருகிறார்கள். 10, 12 ஆண்டுகள் ஒரு பள்ளியில் படித்துவிட்டு மாணவன் வெளியே செல்லும்போது இந்த சிக்கல்களை உணர்ந்தானா? அதைத் தீர்ப்பதற்கான நம்பிக்கைகளைப் பெற்றானா?

அதுதான் உண்மையான மதிப்பீடு. ஆனால் அத்தகைய மதிப்பீடுகளுக்குள் செல்ல அரசு முயற்சி செய்வது இல்லை.

வாழ்வின் அனைத்து பரிணாமங்களையும் ஒரு குழந்தை அறிந்து நடக்கக்கூடிய வாய்ப்பை கற்றுத்தரும் இடமாக மேற்கு நாடுகளில் பள்ளிகள் பார்க்கப்படுகின்றன.

ஆனால், இங்கே, வெறும் அணா, ஆவண்ணா கற்றுக்கொடுக்கும் இடமாகவே பள்ளிகள் பார்க்கப்படுகின்றன. சமூக வாழ்வுக்கு மாணவனை தயார்படுத்தும் இடம்தான் பள்ளிக்கூடம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் தேவை,” எனத் தெரிவித்தார்.

வெறும் பாடப்புத்தகத்தால் மட்டுமே மாற்றம் ஏற்படாது


அத்தகைய மாற்றங்களை பாடநூல்களை மட்டுமே படிப்பதால் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட முடியாது என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

"சமூகத்தில் அவர்கள் பார்க்கும் தலைவர்கள், குடும்பங்கள், ஊடகங்கள் போன்றவைதான் அவர்களின் சித்தாந்தத்தை தீர்மானிக்கிறது.

வீட்டில் சாதி இருக்கிறது, சமூகத்தில் சாதி இருக்கிறது. அப்படி இருக்கும்போது பாடப்புத்தகத்தில் இருந்து மட்டும் சாதியை நீக்குவதால் மாணவனிடம் எத்தகைய தாக்கம் ஏற்பட்டுவிட போகிறது?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

இதனால், ஒரு கட்டத்தில் பாடப்புத்தகம் என்பது வெறும் வேலைக்குச் செல்ல மட்டுமே உதவும் என்ற எண்ணம் மாணவரிடம் ஏற்பட்டுவிடும் என்றும் அவர் கூறுகிறார்.

அரசியல் கட்சிகளின் தவறு என்ன?


காந்தியைப் போல், பெரியாரைப் போல் மாணவர்களுக்கு முன்மாதிரியாகச் சொல்லக்கூடிய தலைவர் ஒருவரும் தற்போது இல்லை என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

இன்று இருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் இத்தகைய கொடுமைகள் நடந்த பிறகு மட்டுமே எதிர்வினையாற்றுவதாகவும் தெரிவிக்கும் அவர், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க சமூகத்தில் அவர்களும், அவர்களின் இயக்கங்களும் என்ன செய்கின்றன எனவும் கேள்வி எழுப்புகிறார்.

“அரசியல் கட்சிகள் சாதிரீதியாகத்தான் செயல்படுகின்றன. ஒவ்வொரு சாதியையும் தனித்தனியாக திருப்திப்படுத்தும் வேலையைத்தான் செய்கின்றன. எதைப் பற்றியும் கவலைப்படாமல், எதிர்த்து பேசும் இயக்கங்கள் இன்று இல்லை.

தற்போது உள்ள அரசியல் கட்சிகளிடையே ஒரு தொலைநோக்குப் பார்வை இல்லை. அவர்களின் எண்ணம் அதிகாரம் குறித்ததாக உள்ளது. இதற்காக சாதியையே, மதத்தையோ சார்ந்தே அவர்கள் இயங்குகின்றனர்.

தனக்கு வாக்கே கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று இந்த சாதி, மத அரசியலை உடைத்து வெளியே வருவதற்கு எந்த கட்சிகளும் ரிஸ்க் எடுப்பதில்லை,” என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைக்கிறார்.

சாதி கொடுமைகளுக்கு எதிராக தேர்தல் நிர்பந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கூட்டமைப்பு தற்போது தேவையாக இருக்கிறது என்றும் கூறுகிறார்.

சம்பவங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம் - தீர்வுகளில் அல்ல


"பொதுவாக இதுபோன்று ஒரு சம்பவம் நிகழும்போது, அது குறித்து மட்டுமே சில நாட்களுக்கு பரபரப்பாகப் பேசிவிட்டு அதைக் கடந்து விடுகிறோம்.

முக்கிய பிரச்னை குறித்து நாம் விவாதிப்பதும் இல்லை, அதைக் களைவது எப்படி என்று முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் இல்லை," என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

“சில ஆண்டுகளுக்கு முன்பு, திருநெல்வேலியில் தன் அக்காவை காதலித்தார் என்பதற்காக 27 வயது நபர் ஒருவரை பள்ளி மாணவன் ஒருவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்றார். சாதியின் பெயரில் வன்முறையை கையில் எடுக்கும் இந்த தைரியம் எங்கிருந்து மாணவர்களுக்கு வருகிறது?

வீட்டில் சாதியை ஊட்டி வளர்க்கிறார்கள். சாதி என்பது மாணவர்களுக்கு சமூகத்தில் இருந்து கற்பிக்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது சமூக ரீதியிலும் இந்தப் பிரச்னையை அணுக வேண்டும். சாதிக்காக உறவினர்கள் வன்முறையில் ஈடுபடுவதைப் பார்த்து வளரும் குழந்தைகள் அவர்களும் சாதியத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்,” என்கிறார் அவர்.

இதுபோன்ற விவகாரங்களில் உடனடியாக ஒரு தீர்வைக் காண வேண்டும் என்று மட்டுமே அரசு நினைக்கிறது என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

“தற்போதுகூட கல்வித்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட மாணவனை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாரே தவிர பள்ளி மாணவர்களிடையே உள்ள சாதிய பிரச்னையைக் களைவது குறித்து எதுவும் பேசவில்லை.

நிவாரணங்களோ, நடவடிக்கையோ ஒரு பிரச்னையை முடிவுக்கு கொண்டுவராது. கிராமங்களில் நிகழும் சாதிய கொடுமைகளுக்கு அந்த வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் சாதிகளே காரணமாக இருக்கின்றன. எனவே, தேர்தல் நேரத்தில் அவர்களுடன் கூட்டணி சேர்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.

திருந்துவதற்கான வழியாக தண்டனைகள் இருக்க வேண்டும்


இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கு சாதி குறித்த புரிதல்கள்கூட முழுமையாக இருப்பதில்லை என்று கூறுகிறார் பாளையங்கோட்டை மத்திய சிறையின் முன்னாள் மனநல ஆலோசகரான வழக்கறிஞர் கே. ஆர். ராஜா.

“பாளையங்கோட்டை சிறையில் நான் மனநல ஆலோசகராக இருந்தபோது, பலரும் அவர்களின் உடல்களில் தங்களின் சாதித் தலைவர்களின் புகைப்படத்தை பச்சை குத்தியிருந்ததைப் பார்த்தேன். அவர்களை பற்றிக் கேட்கும்போது ஒன்றிரண்டு வரிகளைக்கூட அவர்களுக்கு சொல்லத் தெரியவில்லை. அந்த அளவுக்குத்தான் அவர்களைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.”

சாதி இல்லை என்று நாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம், ஆனால் அதை எந்தளவு பாடத்தில் கொண்டு வருகிறோம் என்பதை பார்க்கவேண்டும். ஒரு சில இடங்களில் ஆசிரியர்களே சாதியரீதியாக நடந்துகொள்கிறார்கள்.

நடைமுறை இப்படி முரணாக இருக்கும்போது, இந்தப் பிரச்னையின் வேரைக் கண்டறிந்து அதை அணுகுவதே சரி என்று கூறும் வழக்கறிஞர் கே.ஆர்.ராஜா, “குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் அவர்கள் திருந்துவதற்கான வழியாக தண்டனை இருக்க வேண்டுமே தவிர, என் சாதிக்காக தான் சிறைக்கு சென்றேன் என்ற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

இதுபோன்ற விவகாரங்களில், "சிறார்களுக்கு தண்டனை கொடுப்பதைப்போல் சம்பந்தப்பட்ட ஊரைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் ஆகியோருக்கும் தண்டனை கொடுக்க வேண்டும். குழந்தைகள் மனதில் சாதிய எண்ணங்களை தூண்டிவிடுவதே அவர்கள்தான்," என்றார்.

பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு


நாங்குநேரியில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் தொடர்புகொண்டு பேசியது.

“ஒரு வாரத்துக்கு முன்புகூட தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி இதுபோன்ற உணர்வுப்பூர்வ விஷயங்களை எவ்வாறு கையாள்வது என விவாதித்தோம். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவனுக்குத் துணையாகவே இருந்துள்ளனர்.

தற்போது தொகுதிவாரியாக ஒரு குழுவை அமைத்துள்ளோம். இணை ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர், கல்வித்துறையில் இருந்து மாவட்ட அளவிலான அதிகாரி, காவல்துறை அதிகாரி, வருவாய் அதிகாரி, குழந்தை பாதுகாப்பில் இருந்து ஓர் உறுப்பினர் என ஐந்து பேர் இந்த குழுவில் இருப்பார்கள்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சாதிய பதற்றமுள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

தேவைப்படும்பட்சத்தில் குழந்தைகள் மனநல ஆலோசகர் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழல்களை எப்படிக் கையாள்வது என்று ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. அடுத்த வாரத்தில் இந்த முயற்சி செயல்படுத்தப்படும்,” என்று தெரிவித்தார்.

ஆசிரியர்கள் உடனான கூட்டம், பெற்றோர்கள் உடனான கூட்டம், மாணவர்கள் உடனான கூட்டம் ஆகியவை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

நாங்குநரி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் தற்போது ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் நாங்குநேரி சம்பவம் குறித்து மட்டும் அறிக்கை தாக்கல் செய்யாமல் இதுபோல் இனி நிகழாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் கல்வியாளர் பிரன்ஸ் கஜேந்திரன்.


நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள் Empty Re: நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள்

Post by Dr.S.Soundarapandian Sun Aug 13, 2023 1:20 pm

”நாள்தோறும் பள்ளி காலை வழிபாட்டின் போது போதனைகளை வழங்குகிறோம்.” -
போதனைகளைத்தான் வேதக்காலத்திலிருந்து வழங்கு வழங்கு என்று வழங்கிக் கொண்டிருக்கிறோமே?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள் Empty Re: நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள்

Post by சிவா Sun Aug 13, 2023 2:42 pm

Dr.S.Soundarapandian wrote: ”நாள்தோறும் பள்ளி காலை வழிபாட்டின் போது போதனைகளை வழங்குகிறோம்.” -
போதனைகளைத்தான் வேதக்காலத்திலிருந்து வழங்கு வழங்கு என்று வழங்கிக் கொண்டிருக்கிறோமே?


அந்த பள்ளி போதனைகளை மறக்கடிக்கத்தான் தமிழகத்தில் டாஸ்மாக் கஞ்சா என பலவகையான போதையை அரசாங்கமே வழங்குகிறார்களே...


நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள் Empty Re: நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கிருஷ்ணகிரி: மழைவேண்டி ஊரை காலி செய்த மக்கள்
» போலீசாருக்கு பயந்து ஊரை காலி செய்த கிராமத்தினர்: மலை அடிவாரத்தில் தங்கினர்
» வாய் பேச முடியாத மகனின் சம்பளத்தை குடித்து காலி செய்த தந்தை கொலை
» யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்
» தினகரன் எரிப்பு வழக்கில் சிபிஐ அசமஞ்சம்-118 நாள் கழித்து அப்பீல் செய்த கொடுமை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum