ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

+46
M. Jagadeesan
krishnaamma
K.Senthil kumar
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
சசி
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி
M.Jagadeesan
monikaa sri
சிவனாசான்
விமந்தனி
CHENATHAMIZHAN
கோம்ஸ் பாரதி கணபதி
M.Saranya
jesifer
M.M.SENTHIL
Ponmudi Manohar
Syed Sardar
ayyasamy ram
அனுராகவன்
myimamdeen
அசுரன்
yarlpavanan
பூவன்
கவிஞர் கே இனியவன்
sivarasan
ராஜு சரவணன்
nikky
sundaram77
Dr.சுந்தரராஜ் தயாளன்
முனைவர் ம.ரமேஷ்
balakarthik
mohu
mbalasaravanan
Aathira
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
THIYAAGOOHOOL
யினியவன்
ச. சந்திரசேகரன்
பாலாஜி
கேசவன்
சதாசிவம்
Dr.S.Soundarapandian
50 posters

Page 77 of 84 Previous  1 ... 40 ... 76, 77, 78 ... 80 ... 84  Next

Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 77 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 77 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (510)

Post by Dr.S.Soundarapandian Thu Apr 22, 2021 8:56 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (510)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அஃறிணைப் பெயர்ச்சொற்கள் இவ்வளவுதானா? இன்னும் இருக்கிறதா?
- ஒரு மாணவன் கேட்டான் தொல்காப்பியரை!

அவனுக்கு விடையாக ஒரு நூற்பாவைப் ‘புறனடை’யில் எழுதுகிறார்!

அப் புறனடை நூற்பா :
அன்ன பிறவும் அஃறிணை மருங்கின்
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
என்ன பெயரும் அத்திணை யவ்வே (பெயரியல் 16)

அஃதாவது-
அஃறிணை ஒருமை, பன்மைகளைத் தெளிவாகக் காட்டி, நிற்கக்கூடிய எல்லாப் பெயர்ச்சொற்களுமே அஃறிணைப் பெயர்ச்சொற்கள் என்ற பட்டியலில்தான் வரும்!

நச்சர் தரும் எடுத்துக்காட்டுப் பட்டியல்!:-
1. பிறிது
2. பிற
3. அனையது
4. அனையன
5. மற்றையது
6. மற்றையன
7. பல்லவை
8. சில்லவை
9. உள்ளது
10. இல்லது
11. உள்ளன
12. இல்லன
13. அன்னது
14. அன்னன
15. நிலம்
16. நீர்
17. தீ
18. வளி
19. ஆகாயம்
20. உண்டல்
21. தின்றல்
22. கருமை
23. செம்மை

இவற்றில் –
பிறிது – ஒருமை
பிற – பன்மை
உண்டல் – தொழிற்பெயர்
தின்றல் – தொழிற்பெயர்
கருமை – பண்புப் பெயர்
செம்மை – பண்புப் பெயர்

தொழிற்பெயராக இருந்தாலும், பண்புப் பெயராக இருந்தாலும் அவையும் பெயர்ச்சொற்களே என்பதை அறிதல் தகும்.
அடுத்தது , அஃறிணைப் பெயர்ச்சொற்களில், இறுதிச் சூத்திரம்:
தெரிநிலை யுடைய அஃறிணை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே (பெயரியல் 17)

அஃதாவது-
ஆ – ஒருமை
ஆக்கள் – பன்மை
குதிரை – ஒருமை
குதிரைகள் – பன்மை
எனக் ‘கள்’ விகுதி பெற்று, அஃறிணைப் பெயர்ச்சொற்கள் , பன்மையைக் குறிக்கும் என்று முன்பு பார்த்தோம் (பெய.15)!
இந்த நூற்பாவில் (பெய.17), ‘கள்’ விகுதி பெறாவிட்டாலும், அடுத்து வரும் வினையைக் கொண்டு, அஃறிணைப் பெயர்ச்சொற்களின் ஒருமை பன்மைகளைத் தீர்மானிக்கலாம் என ஓதுகிறார்!
ஆ வந்தது - ஈண்டு ‘வந்தது’ என்ற வினையே , அதற்கு முன் நிற்கும் அஃறிணைப் பெயர்ச்சொல்லானது(ஆ), ஒருமையில் பயில்வது என்று தெரிகிறதல்லவா?
குதிரை வந்தன - ஈண்டு ‘வந்தன’ என்ற வினையே , அதற்கு முன் நிற்கும் அஃறிணைப் பெயர்ச்சொல்லானது(குதிரை), பன்மையில் பயில்வது என்று தெரிகிறதல்லவா? ( ‘குதிரை’ என்ற இயற்பெயர் ஒருமைக்கும் வரும் பன்மைக்கும் வரும்! – விதி : பெயரியல் 15 சேனா. உரை)
இத்துடன், அஃறிணைப் பெயர்களை முடித்துகொண்டு தொல்காப்பியர் , அடுத்த பகுதிக்குச் செல்கிறார்!
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 77 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (511)

Post by Dr.S.Soundarapandian Fri Apr 23, 2021 10:22 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (511)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அஃறிணைப் பெயர்ச்சொற்களுக்குப் பின், தொல்காப்பியர் நமக்குத் தருவது ‘விரவுப் பெயர்கள்’.
விரவுப் பெயர்களைத் தொல்காப்பியர் 26 நூற்பாக்களில் விளக்குகிறார்!
உயர்திணைப் பெயர்களை விளக்கத்
தொல்காப்பியர் ஒதுக்கிய நூற்பாக்கள் – 5 (நூ.8-12)
அஃறிணைப் பெயர்களை விளக்கத்
தொல்காப்பியர் ஒதுக்கிய நூற்பாக்கள் – 5 (நூ.13 -17)
விரவுத்திணைப் பெயர்களை விளக்கத்
தொல்காப்பியர் ஒதுக்கிய நூற்பாக்கள் – 26 (நூ.18-43)

இதிலிருந்து, ‘விரவுத்திணைப் பெயர்’ என்பது நன்கு விளக்கினாலன்றிப் புரிபடாது என்று தெரியவருகிறது! தொல்காப்பியரின் மாணவர்கள், அவர்மீது விரவுத்திணைப் பெயர்களுக்காக வினா மேல் வினாக்களைத் தொடுத்தனர் எனக் கருதவேண்டும்!


‘விரவுத்திணைப் பெயர்’ என்று எப்படித் தெரிந்துகொள்வது?
விடையை இரு நூற்பாக்களில் (பெய.18,19) நல்குகிறார் தொகாப்பியர். அவற்றில் முதலாவது :

இருதிணைச் சொற்கு மோரன்ன உரிமையின்
திரிபுவேறு படூஉம் எல்லாப் பெயரும்
நினையுங் காலைத் தத்தம் மரபின்
வினையோ டல்லது பால்தெரி பிலவே (பெயரியல் 18)

இருதிணை – உயர்திணை, அஃறிணை
‘திரிபுவேறு படூஉம் எல்லாப் பெயரும்’ – ஒரே பெயர்ச்சொல் , அஃறிணைப் பெயர்ச்சொல்லாக ஒரு வழக்கிலும், உயர்திணைப் பெயர்ச்சொல்லாக இன்னொரு வழக்கிலுமாக மாறுபட்டு வருவதாகிய திரிபுபடு பெயர்ச்சொற்கள் எல்லாம்.
‘வினையோ டல்லது பால்தெரி பிலவே’ - பெயர்களோடு பயிலும் வினைச்சொல்லால்தான் , அப் பெயர்கள் ‘விரவுத்திணை’ப் பெயர்கள் என்று புலனாகும்!

நம் காலத்து எடுத்துக்காட்டால் விரவுத்திணையை விளக்கலாம்!

நிம்மி பள்ளி சென்றுள்ளாள் – இதில், ‘நிம்மி’ என்பது ஒரு சிறுமியின் பெயர் எனத் தெரிகிறது.
நிம்மி குரைக்கிறது – இதில், ‘நிம்மி’ என்பது ஒரு நாயின் பெயர் எனத் தெரிகிறது.
ஆனால், இரு தொடர்களிலுமே வந்துள்ள பெயர்ச்சொல் ‘நிம்மி’ என்ற ஒன்றுதான்! ஒரு தொடரில் உயர்திணைக்கும், இன்னொரு தொடரில் அஃறிணைக்கும் அந்தச் சொல் வந்துள்ளது!
இவ்வாறு உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்துவது போல வரும் பெயர்ச்சொல்லையே ‘விரவுப் பெயர்’ என்கின்றனர்!
இப்போது, பழைய எடுத்துக்காட்டு:-
முடவன் வந்தான் - ‘வந்தான்’ என்ற உயர்திணை முடிபு வருவதால், ‘முடவன்’ , ஓர் ஆளைக் குறிப்பது தெளிவு.
முடவன் வந்தது - ‘வந்தது’ என்ற அஃறிணை முடிபு வருவதால், ‘முடவன்’ , ஒரு காளை மாட்டைக் குறிப்பது தெளிவு.
இங்கே , ‘முடவன்’ என்பது , விரவுத்திணைப் பெயர்ச்சொல்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 77 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (512)

Post by Dr.S.Soundarapandian Sat Apr 24, 2021 9:13 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (512)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

விரவுப் பெயராக உள்ள உயர்திணை ஒருமைச் சொல்லை, நிகழ்காலம் சுட்டும் ‘செய்யும்’ எனும் வினையால் அறிந்துகொள்ளலாம்!
- இதுதான் அடுத்த நூற்பாப் பொருள்!
நிகழூஉ நின்ற பலர்வரை கிளவியின்
உயர்திணை யொருமை தோன்றலும் உரித்தே
அன்ன மரபின் வினைவயி னான (பெயரியல் 19)


மேல், ‘பலர்வரை’ என்பதற்குப் பதிலாகப் ‘பால்வரை’ எறும் பாடம் உண்டு!இரண்டுமே ‘செய்யும்’ என்னும் வினை முற்றுச்சொல்லையே குறிக்கும்!
பலர்வரை கிளவி – பலர்பாலிற் பயிலாத சொல்.
பால்வரை கிளவி – இன்னபால் எனச் சுட்டத வினைச்சொல்.

நூற்பாக்களில் ஏற்படும் பாட வேறுபாடுகளுக்குக் காரணம், இரு பாடங்களுக்குமே ஒரே பொருள் இருப்பதும் ஒரு காரணம்!
இது சுவடி இயலிலும் (Manuscriptology) , செம்பதிப்பிலும் (Critical Edition)குறிப்பிடத்தக்கது!
சாத்தன் – இப் பெயர் , மாட்டையும் குறிக்கும்; ஆளையும் குறிக்கும்.
அருகிலே வரும் வினையைப் பார்த்துச், ‘சாத்தன்’ மனிதனா மாடா என்று தீர்மானித்தோம், இதற்கு முந்தைய நூற்பாவில்(பெ.18)! இல்லையா?
இப்போது பார்க்கும் இந்த நூற்பாப்படி(பெ.19), அருகிலே வரும் ‘செய்யும்’ எனும் வினை முற்றைக்கொண்டு, முன்வந்தது உயர்திணைப் பெயர்ச்சொல்லே எனத் தீர்மானிக்கலாம்!
சாத்தன் யாழ் எழூஉம் – இதில் ‘எழூஉம்’ என்பதே ‘செய்யும்’ எனும் வாய்பாட்டு வினை முற்று. எழூஉம் – எழுப்பும் ; மீட்டும். ‘சாத்தன் யாழை மீட்டுவான்’ என்பது பொருள். இதனால், ‘சாத்தன்’ விரவுப்பெயர் என்றாலும், ‘செய்யும்’ எனும் வினையால், அது உயர்திணைப் பெயரே எனத் தெளிய முடிகிறது!
சாத்தி சாந்து அரைக்கும் – இதில் ‘அரைக்கும்’ என்பதே ‘செய்யும்’ எனும் வாய்பாட்டு வினை முற்று. அரைக்கும் – அரைப்பாள். ‘சாத்தி,சாந்தை அரைப்பாள்’ என்பது பொருள்.

இதனால், ‘சாத்தி’ விரவுப்பெயர் என்றாலும், ‘செய்யும்’ எனும் வினையால்,அது உயர்திணைப் பெயரே என அறிய முடிகிறது!
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 77 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (513)

Post by Dr.S.Soundarapandian Sat May 01, 2021 1:26 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (513)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

விரவுப் பெயர்களை எப்படித் தெரிந்துகொள்வது என்று காட்டிய தொல்காப்பியர், இப்போது அவற்றின் தொகை மற்றும் பிரிவுகளைச் சொல்லுகிறார்:-
இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே
முறைப்பெயர்க் கிளவி தாமே தானே
எல்லா நீயிர் நீயெனக் கிளந்து
சொல்லிய அல்ல பிறவு மாஅங்கு
அன்னவை தோன்றின் அவற்றொடுங் கொளலே (பெயரியல் 20)


தொல்காப்பியர் தந்த விரவுப் பெயர்ப் பட்டியல் !:-
1.இயற்பெயர்
2. சினைப்பெயர்
3. சினைமுதற் பெயர்
4. முறைப்பெயர்
5. தாமே
6. தானே
7. எல்லா
8. நீயிர்
9. நீ

1. இயற்பெயர் – பேச்சி ; பொன்னு என்று வரும் இயற்பெயர்கள் .
‘பேச்சி’ என்பது பெண்ணுக்கும், பசுவுக்கும் வருவதால் , விரவுப் பெயர். ‘பொன்னு’ என்பது ஆணுக்கும் காளை மாட்டுக்கும் வருவதால், விரவுப் பெயர்.
2. சினைப்பெயர் – மண்டையன் ; சப்பை மூக்கன் என்று உறுப்பை அடிப்படையாகக் கொண்டு வரும் பெயர்கள். சினை - உறுப்பு
‘மண்டையன்’ என்பது, பெரிய மண்டையைக் கொண்ட ஆணுக்கும், பெரிய மண்டையைக் கொண்ட நாய்க்கும் வருவதால் , விரவுப் பெயர்.
‘ சப்பை மூக்கன்’ என்பது, சப்பையான மூக்குக் கொண்ட ஆணுக்கும் , சப்பையான
மூக்குக் கொண்ட மீனுக்கும் வருவதால், விரவுப் பெயர்.
3. சினைமுதற்பெயர் – சினைப் பெயரோடு தொடர்ந்து வரும் முதற்பெயர்.
‘தொங்கு உதட்டுச் சாத்தி’ – இதில், ‘தொங்கு உதடு’ என்பது சினைப் பெயர் (= உறுப்புப் பெயர்); ‘சாத்தி’ என்பது முதற்பெயர். ‘தொங்கு உதட்டுச் சாத்தி’
என்பது, ஒரு பெண்ணுக்கும், பசுவுக்கும் பொதுப்பெயர் ஆதலால், இது விரவுப் பெயர்.
4. முறைப்பெயர் – ஒரு பசுவைச் சுட்டி , ‘இஃது இக்கன்றின் தாய்’ எனக் கூறலாம்; ஒரு பெண்ணைச் சுட்டி ‘இவள் இக் குழந்தையின் தாய்’ என்றும் கூறலாம்; இவ்வாறு உயர்திணை, அஃறிணை ஆகிய இரு இடங்களுக்குமே பொருந்துவதால், ‘தாய்’ என்ற பெயர்ச்சொல், விரவுப் பெயர்ச்சொல்.
5. தாம் - ‘தாம் நன்றாக ஓடுவோம் என்ற நினைப்பு அவர்களுக்கு’ என்று கூறலாம்; ‘தாம் நன்றாக ஓடுவோம் என்ற நினைப்பு புலிகளுக்கு’ என்றும் கூறலாம்; ஆகவே, ‘தாம்’ என்பது உயர்திணை இடத்தும் அஃறிணை இடத்தும் வரலான், விரவுப் பெயர்.
6. தான் - ‘தான் நன்றாக ஓடமுடியும் என்று எண்ணினான்’ எனக் கூறலாம்; ‘தான் நன்றாக ஓடமுடியும் என்பது மாட்டின் நிலை ’ என்றும் கூறலாம். ஆகவே , ‘தான்’ என்பது உயர்திணை அஃறிணை ஆகிய இரு திணைகளுக்குமே பொருந்துவதால், அது விரவுப் பெயர்.
7. எல்லாம் - ‘எல்லாம் வந்தாயிற்று என்று நிகழ்ச்சி தொடங்கிற்று’ எனக்கூறலாம் ; ‘எல்லாம் வந்தாச்சு என்று குதிரைலாயம் பூட்டப்பட்டது’ எனவும் கூறலாம். ஆகவே ‘எல்லாம்’ என்பது , விரவுப் பெயர்.
8. நீயிர் - ‘நீயிர் எல்லோரும் பேசிவிட்டீர்களா?’ எனக் கேட்கலாம்; ‘நீயிர் எல்லாம் போங்கள்’ என்று மாடுகளை விரட்டலாம். எனவே ‘நீயிர்’ என்பது, விரவுப் பெயர்.
( ‘நீயிர்’ என்பது அஃறிணையைக் குறிப்பது என்பது நமக்குப் புதிது; இஃது தொல்காப்பியர் காலப் பழைய வழக்கு)
9. நீ - ‘நீ வா’ என்று ஒரு பெண்ணைப் பார்த்துக் கூப்பிடலாம்; ‘நீ போ’ என்று ஒரு கோழியைப் பார்த்து விரட்டலாம். ஆகவே ‘நீ’ என்பது உயர்திணை அஃறிணை ஆகிய இரு திணைகளுக்குமே பொருந்துவதால், அது விரவுப் பெயர்.
இந்த ஒன்பது விரவுப் பெயர்களை அடுத்து, ‘அன்ன பிறவும்’ என்று ஒரு நீட்சிக்கு வழி கொடுத்துள்ளார் தொல்காப்பியர்!
‘அன்ன பிறவும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுகளை, நச்சர் மற்றும் கல்லாடனார் உரைகளிற் காணமுடிகிறது! :

1. மக
2. குழவி
3. காடன்
4. காடி
5. நாடன்
6. நாடி
7. தரையன்
8. திரையன்
9. மலையன்
10. முதியாள்
11. சுமையன்
12. குறவன்
13. இறவுளன்
14. குன்றுவன்
15. துறைவன்
16. சேர்ப்பன்
17. ஆண்
18. பெண்

1. மக – பழந்தமிழில் , இச் சொல் மகனையும் குறித்தது; மகளையும் குறித்தது; ‘பிள்ளை’யையும் குறித்தது; குரங்குக் குட்டியையும் குறித்தது. உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்தியதால், இச் சொல் விரவுப் பெயர்ச்சொல்.
2. குழவி – பிளைகளின் இளமைப் பெயராக இது உயர்திணையில் வந்தது. ‘யானை’ எனும் பொருள் தந்து, அஃறிணையையும் குறித்தது. எனவே, இச் சொல், விரவுப் பெயர்ச்சொல்.
3. காடன் – காட்டில் வழ்பவனைக் ‘காடன்’ சுட்டும்போது, இது உயர்திணைச் சொல்; ‘காடனை அறுத்துக் குழம்பு வை’ எனும்போது, ‘காடன்’, மீன் வகையைச் சுட்டுகிறது. எனவே, இது விரவுப் பெயர்.
4. காடி – ‘காடன்’ என்பதற்குப் பெண்பால் , ‘காடி’; உயர்திணைப் பெயர். ‘சோறு புளித்துக் காடி ஆகிவிட்டது’ பாட்டி சொல்கிறாள்; இங்கே ‘காடி’ , புளிப்பு நீரைச் சுட்டுவதால், அஃறிணப் பெயர். இவ்வாறு ‘காடி’ , விரவுப் பெயர்.
5. நாடன் – குறிஞ்சி நிலத் தலைவனைக் குறிக்கும்போது, உயர்திணைச் சொல்; கார்த்திகை நாளைக் குறிக்கும்போது, அஃறிணைச் சொல். எனவே ‘நாடன்’, விரவுப் பெயர்ச்சொல்.
6. நாடி – ‘நாடன்’ என்பதன் பெண்பாற் பெயர்; உயர்திணைப் பெயர். வாயில் ,உதட்டுக்குக் கீழுள்ள உறுப்பு, நாடி. ‘அவள் ஒத்த நாடிக்காரி’ என்பர். எனவே , ‘நாடி’ , விரவுப்பெயர்.
7. தரையன் – மலைவாழ்நரை, ‘மலையமான்’, ‘மலையன்’ என்றாற் போலத் தரையில் வாழ்வோரைத் ‘தரையன்’ என்று சுட்டியிருக்கலாம். ‘நடையன்’ என்று செருப்பைச் சுட்டுவதுபோலத், தரையில் ஊர்ந்துசெல்லும் பாம்பு போன்றவற்றைத் ‘தரையன்’என்று அழைத்திருக்கலாம். இவ் வகையில் இச் சொல் விரவுப் பெயர்ச் சொல் எனப்பட்டிருக்கலாம்.
8. திரையன் – நெய்தல் நிலத் தலைவனின் பெயர்; உயர்திணைச் சொல். தேங்காயின் உட்பகுதியான வெள்ளைச் சதைப் பகுதி மடிந்து மடிந்து சுருக்கமாக இருந்தால் அதைத் திரை என்பார்கள்; அப்படிப்பட்ட தேங்காயே ‘திரை விழுந்த காய்’! அதுவே மருவித் ‘தேரை விழுந்த காய்’ ஆயிற்று! திரை விழுந்த காயே ‘திரையன்’ எனப்பட்டிருக்கலாம். இப்படியாகத் ‘திரையன்’ , விரவுச் சொல் ஆகியிருக்கலாம்.
9. மலையன் – மலைவாழ் மக்களை ‘மலையர்’ எனல் உண்டு; ஆகவே ‘மலையன்’ , உயர்திணைப் பெயரே. மலையில் வாழும் பாம்பை ‘மலையன்’ என்று சுட்டியிருக்கலாம். இங்ஙனம் , இச் சொல் விரவுப் பெயர்ச்சொல்.
10. முதியாள் – மூத்தவள் எனும் பொருளில் , இஃது உயர்திணைப் பெயரே. கூந்தல் போலக் காணப்படும் தாவரம் ஒன்று ‘முதியாள்’ எனச் சொல்லப்பட்டிருக்கலாம். இவ் வகையில் விரவுப் பெயர்ச்சொல் எனப்பட்டிருக்கலாம்.
11. சுமையன் – சுமை தூக்குபவன் என்பது பொருள்; உயர்திணைப் பெயர்ச்சொல். சுமைதாங்கிக் கல்லைச் ‘சுமையன்’ என்றனரோ? இப்படி, ஏதோ வகையில் , இச் சொல்லை விரவுப் பெயர்ச்சொற் பட்டியலில் உரையாசிரியர்கள் சேர்த்திருக்கவேண்டும்.
12. குறவன் – ’நரிக் குறவன்’ என்ற வழக்கால், இஃது உயர்திணைப் பெயர்ச்சொல். ‘பாதரசம்’ என்ற பொருளைத் தருவது மூலிகை அகராதி; இங்கு அஃறிணைப் பெயர். எனவே, விரவுப் பெயர்ச்சொல் என்பதில் அட்டியில்லை.
13. இறவுளன் – குறிஞ்சி நில மகனைச் சுட்டும்; உயர்திணைப் பெயர்ச்சொல். இறால் மீன்கள், ‘இறவுளர்’ எனப்பட்டனரோ?
14. குன்றுவன் – குறிஞ்சி நில மகனே இவன்; இதன் பெண்பால், ‘குன்றுவத்தி’. ‘குண்டுமணி’ என்பதுபோல , ஏதோ ஒரு மூலிகை அல்லது பொருளையும் இச் சொல் சுட்டியிருக்கலாம்.
15. துறைவன் – உயர்திணைப் பெயர்ச்சொல்லாக , நெய்தல் நிலத் தலைவனைக் குறிக்கும். சங்கு போன்ற ஏதாவது கடற்கரை உயிரினமாகவும் இருக்கலாம்.
16. சேர்ப்பன் – நெய்தல் நிலத் தலைவனுக்கே இப் பெயர். சேப்பங்கிழங்கு எனப்படுவது ‘சேர்ப்பன்’ எனப்பட்டதோ?
17. ஆண் – ஆண் (male) என்பது உயர்திணைப் பெயர்ச்சொல் என்பது கூறாமலேயே விளங்கும். ‘ஆண்’ என்றே ஒரு மரம் உள்ளது; ‘ஆண்மரக் கிளவி’ – தொல்காப்பியம்.இவ் வகையில், இது விரவுப் பெயர்ச்சொல்.
18. பெண் – பெண் (female) என்பது உயர்திணைப் பெயர்ச்சொல் என்பதும் கூறாமலேயே விளங்கும். கற்றாழையும் ‘பெண்’ என்றே அறியப்படும். இங்ஙனம், இது விரவுப் பெயர்சொல்லே.


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 77 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (514)

Post by Dr.S.Soundarapandian Wed May 05, 2021 7:34 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (514)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தொல்காப்பியர் விரவுப் பெயர்கள் என்று இயற்பெயர் , சினைப்பெயர், சினைமுதற் பெயர், முறைப்பெயர் என்றெல்லாம் சில வகைகளைக் கூறினாரல்லவா? பிறகு, அவற்றின் தொகைகளைத் தெரிவிக்கிறார் !:

அவற்றுள்
நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர்
நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே
முறைப்பெயர்க் கிளவி இரண்டா கும்மே
ஏனைப் பெயரே தத்தம் மரபின (பெயரியல் 21)

அஃதாவது,
இயற்பெயரில் – நான்கு விரவுப் பெயர் வகைகள்
சினைப்பெயரில் – நான்கு விரவுப் பெயர் வகைகள்
சினைமுதற்பெயரில் – நான்கு விரவுப் பெயர் வகைகள்
முறைப்பெயரில் – இரண்டு விரவுப் பெயர் வகைகள்
ஏனைய பெயர்களில் – ஒவ்வொன்றிலும் ஒரு விரவுப் பெயர் வகை

இவற்றுக்கான விளக்கத்தை வரும் நூற்பாக்களில் விளக்குகிறார் தருகிறார்:

அவைதாம்
பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர்
பன்மை இயற்பெயர் ஒருமை இயற்பெயரென்று
அந்நான் கென்ப இயற்பெயர் நிலையே (பெயரியல் 22 )

அஃதாவது-
பெண்மை இயற்பெயர் – ‘சாத்தி’ என்ற பெண்ணையும் குறிக்கும், ‘சாத்தி’ என்ற
பசுவையும் குறிக்கும் ; ஆதலால் ‘சாத்தி’, பெண்மை விரவுப் பெயர்.
ஆண்மை இயற்பெயர் – ‘சாத்தன்’ என்ற ஆணையும் குறிக்கும், ‘சாத்தன்’ என்ற
காளையையும் குறிக்கும் ; இப்படி வருவது, விரவுப் பெயரில் ஆண்மை இயற்பெயர்.
பன்மை இயற்பெயர் – ‘யானை’ என்பது, ஓர் யானையையும் குறிக்கும்; பல
யானைகளையும் சுட்டும். ‘யானை அட்டகாசம் தாங்கலை’
என்றால் , பல யானைகளின் தொல்லை என்பதும்
பொருள். ‘யானை வந்தான்’ என்றும் , ‘யானை வந்தாள்’
எனவும் கூறலாம்; இங்ஙனம் வருவது,விரவுப் பெயரில் பன்மை இயற்பெயர்.
ஒருமை இயற்பெயர் - ‘கோதை’ என்ற ஒருமைச் சொல், ‘கோதை வந்தாள்’ என்பதிலும்,
‘கோதை வந்தான்’ என்பதிலும் பயிலக் காண்கிறோம்; ஆதலால் ’கோதை’ விரவுப்பெயரில் ஒருமை இயற்பெயர்.

மேல், ‘சாத்தன்’, ‘சாத்தி’, ‘யானை’, ‘கோதை’ ஆகிய நான்கும் ‘இயற்பெயர்கள்’ என்பதைக் கவனிக்க!
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 77 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (515)

Post by Dr.S.Soundarapandian Wed May 05, 2021 7:39 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (515)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது, விரவுப் பெயர் வகைகளில் சினைப்பெயர் :

பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர்
பன்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயரென்று
அந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே (பெயரியல் 23)

இந் நான்கு சினைப்பெயர்கள் அமையுமாறு -
1. பெண்மைச் சினைப்பெயர் – ‘முடத்தி’ என்றதுமே , அந்த ‘முடம்’ ஒரு பெண்ணுடையது என்ற பால் தெரிகிறது. ‘முடத்தி வந்தாள்’ என ஒரு பெண்ணைச் சுட்டிப் பேசலாம்; ‘முடத்தி வந்தது’ என்று ஒரு பசுவைச் சுட்டியும் பேசலாம்; ஆகவே விரவுப் பெயர்.
2. ஆண்மைச் சினைப்பெயர் - ‘முடவன்’ என்றதுமே , அந்த ‘முடம்’ ஒரு ஆணுடையது என்று பால் தெரிகிறது. ‘முடவன் வந்தான்’ என ஓர் ஆணைச் சுட்டிப் பேசலாம்; ‘முடவன் வந்தது’ என்று ஒரு காளையைச் சுட்டியும் பேசலாம்; ஆகவே விரவுப் பெயர்.
3. பன்மைச் சினைப்பெயர் - ‘முடம் வந்தன’ என்று முடமான விலங்குகளைச் சுட்டிப் பன்மையைப் பேசலாம். ‘முடம் வந்தனர்’ என உயர்திணைப் பன்மையையும் சுட்டலாம். இரு திணைகளிலும் வரலான், விரவுப் பெயர்.
4. ஒருமைச் சினைப்பெயர் – ‘குருடு வந்தாள்’ என்று ஒருமை உயர்திணையிலும் எழுதலாம்; ‘குருடு வந்தது’ என்று ஒருமை அஃறிணையிலும் குருட்டு மட்டைக் குறிக்கலாம். இரு திணைகளிலும் வருவதால், விரவுப் பெயர்.

இப்போது, சினைமுதற் பெயர்:

பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே
ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயரே
பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே
ஒருமை சுட்டிய சினைமுதற் பெயரென்று
அந்நான் கென்ப சினைமுதற் பெயரே (பெயரியல் 24)

நூற்பா குறிக்கும் நான்கு சினைமுதற் பெயர்கள்-
1. பெண்மை சுட்டிய சினைமுதற் பெயர் - ‘முடக்கொற்றி வந்தாள்’
என்று உயர்திணைப் பெண்பாலிலும் வரும் ( ‘கொற்றி’ இங்கே இயற்பெயர்) ‘முடக்கொற்றி வந்தது’ என அஃறிணைப் பெண்பாலிலும் எழுதலாம். எனவே , விரவுப் பெயர். முடக்கொற்றி – கால் முடமான கன்றுப் பசு. முடம் என்பது , ‘சினை’; கொற்றி என்பது ’முதல்’.
2. ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயர் - ‘முடக்கொற்றன் வந்தான்’
என்று உயர்திணை ஆண்பாலிலும் வரும் ( ‘கொற்றன்’ இங்கே இயற்பெயர்); ‘முடக்கொற்றன் வந்தது’ என அஃறிணை ஆண்பாலிலும் எழுதலாம். எனவே , விரவுப் பெயர். முடக்கொற்றன் – கால் முடமான கன்றுக் காளை.

3 . பன்மை சுட்டிய சினைமுதற் பெயர் – ‘செங்கண் அரிமா வந்தனர்’
என்று எழுதலாம்; ‘செங்கண் அரிமா வந்தன’ என்றும் வரையலாம். இரு திணைகளுக்கும் வருவதால், விரவுப் பெயர். செங்கண்- சினைப்பெயர்; அரிமா- முதற்பெயர்.
செங்கண் அரிமா – சிவந்த கண்ணுடைய சிங்கம்
அரிமா- சிங்கம்
அரி – வலிமை (சூடாமணி நிகண்டு)
மா – விலங்கு
வலிமை மிகு விலங்கு ஆதலால், ‘சிங்கம்’ , அரிமா எனப்பட்டது தமிழர்களால்!
ஆனால், சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி (லெக்சிகன்) , ‘ஹரி’ , என்பதிலிருந்தே ‘அரி’ வந்தது எனக் காட்டுகிறது!
4 . ஒருமை சுட்டிய சினைமுதற் பெயர் – ‘கொடும்புற மருது வந்தான்’ என்று உயர்திணையிலும் வரும்; ‘கொடும்புற மருது வந்தது’ என அஃறிணையிலும் எழுதலாம். எனவே, விரவுப் பெயர். கொடும்புறம் – சினை; மருது – முதல்.

கொடும்புற – வளைந்த முதுகை உடைய
மருது – இயற்பெயர் (சாத்தன் என்பது போல)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 77 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (516)

Post by Dr.S.Soundarapandian Wed May 05, 2021 7:41 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (516)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சினைமுதற் பெயரை அடுத்துத் தொல்காப்பியர் பேசுவது – முறைப்பெயர் ! :

பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயரென்று
ஆயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே (பெயரியல் 25)
அஃதாவது –
1 . பெண்மை முறைப்பெயர் – தாய்
‘தாய்’ என்றதும், உயர்திணையா அஃறிணையா என்பது தெரியாது; ஆனால், ‘பெண்மை ’ புலனாகிவிடுகிறது.
‘தாய் வந்தாள்’ என்றதும், ‘தாய்’ உயர்திணைப் பெயர் எனத் தெரியவருகிறது. ‘தாய் வந்தது’ என்றால், ‘தாய்’ அஃறிணப் பெயர் ஆகிறது. ‘ தாய்ப் பசு’ எனக் கூறமுடியும். ’தாய்’ இரு திணைகளுக்கும் பொதுவாதலால், விரவுப்பெயர்.
2 .ஆண்மை முறைப்பெயர் – தந்தை
‘தந்தை’ என்றதும், உயர்திணையா அஃறிணையா என்பது தெரியாது; ஆனால், ‘ஆண்மை ’ புலனாகிவிடுகிறது.
‘தந்தையின் மீசை’ என்றதும், ‘தந்தை’ உயர்திணைப் பெயர் எனத் தெரியவருகிறது. ‘தந்தை வந்தது’ என்றால், ‘தந்தை’ அஃறிணப் பெயர் ஆகிறது. ‘ கன்றுக்குத் தந்தை இக் காளை’ எனக் கூறமுடியும். ‘தந்தை’ இரு திணைகளுக்கும் பொதுவாதலால், விரவுப் பெயர்.

அடுத்துப் , பெண்மை சுட்டிய பெயரைக் கூறுகிறார் தொல்காப்பியர்:

பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே (பெயரியல் 26)

பெண்மை சுட்டிய எல்லாப் பெயர்களும் –
1 . பெண்மை இயற்பெயர்
2 . பெண்மைச் சினைப்பெயர்
3 . பெண்மைச் சினைமுதற் பெயர்
4. பெண்மை முறைப்பெயர்

எடுத்துக்காட்டுகள்:
1 . பெண்மை இயற்பெயர்
சாத்தி வந்தாள் – உயர்திணை
சாத்தி வந்தது – அஃறிணை ( ‘சாத்தி வந்தது’ என்று ஒரு பசுவைச் சுட்டிக் கூறமுடியும்)
ஆதலால், ‘சாத்தி’ , விரவுப் பெயர்.
2 . பெண்மைச் சினைப்பெயர்
முடத்தி வந்தாள் – உயர்திணை ; முடம் - சினை ; சினை- உறுப்பு
முடத்தி வந்தது – அஃறிணை ( ‘முடத்தி வந்தது’ என்று ஒரு பசுவைச் சுட்டிக் கூறமுடியும்)
ஆதலால், ‘முடத்தி’ , விரவுப் பெயர்.
3 . பெண்மைச் சினைமுதற் பெயர்
முடக்கொற்றி வந்தாள் – உயர்திணை; முடம் – சினை; கொற்றி – முதல் ; கொற்றி, ‘வேலன்’ என்பதுபோன்ற இயற்பெயர்.
முடக்கொற்றி வந்தது – அஃறிணை ( ‘முடக்கொற்றி வந்தது’ என்று ஒரு பசுவைச் சுட்டிக் கூறமுடியும்)
ஆதலால், ‘முடக்கொற்றி’ , விரவுப் பெயர்.
4 . பெண்மை முறைபெயர்
தங்கை வந்தாள் – உயர்திணை; முறை – உறவு முறை
தங்கை வந்தது – அஃறிணை ( ‘இப் பசு, அப் பசுவுக்குத் தங்கை’ என்று ஒரு பசுவைச் சுட்டிக் கூறமுடியும்)
ஆதலால், ‘தங்கை’ , விரவுப் பெயர்.
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 77 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (517)

Post by Dr.S.Soundarapandian Fri May 07, 2021 9:03 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (517)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பெண்மை சுட்டிய விரவுப் பெயர்களைப் பார்த்தோம்!
அடுத்தது, ஆண்மை சுட்டிய விரவுப் பெயர்கள்:

ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே (பெயரியல் 27)
ஆண்மை சுட்டிய எல்லா விரவுப் பெயர்களும் :
1 . ஆண்மை இயற்பெயர்
2 . ஆண்மைச் சினைப்பெயர்
3 . ஆண்மைச் சினைமுதற் பெயர்
4 . ஆண்மை முறைப்பெயர்

1 . ஆண்மை இயற்பெயர் – ‘சுந்தரன் சோறுண்டான்’ என்றதுமே, தொடரானது உயர்திணை ஆணைக் குறிப்பது தெளிவாகிவிடுகிறது. ‘சுந்தரன்’ , இயற்பெயர். ‘சுந்தரன் வண்டி இழுத்தது’ என்று அஃறிணையான ஒரு காளை மாட்டையும் குறித்துப் பேசலாம். இவ்வாறு அமைகிறது, விரவுப் பெயரில் ஆண்மை இயற்பெயர்.
2 . ஆண்மைச் சினைப்பெயர் – ‘முடவன் சிரித்தான்’ என்றதுமே, உயர்திணை ஆணைக் குறிப்பது தெளிவாகிவிடுகிறது. ‘முடம்’ , சினைப்பெயர். ‘ முடவன் மேய்ந்தது’ என்று அஃறிணையான ஒரு காளை மாட்டையும் குறித்துப் பேசலாம். இவ்வாறு அமைகிறது, விரவுப் பெயரில் ஆண்மைச் சினைப்பெயர்.
3. ஆண்மைச் சினைமுதற் பெயர் – ‘ முடக்கொற்றன் காசு கேட்டான்’ என்றதுமே, உயர்திணை ஆணைக் குறிப்பது தெளிவாகிவிடுகிறது. ‘முடம்’ , சினைப்பெயர். ‘கொற்றன்’ , முதற்பெயர். ‘முடக்கொற்றன் புல் தின்றது’ என்று அஃறிணையான ஒரு காளை மாட்டையும் குறித்துப் பேசலாம். இவ்வாறு அமைகிறது, விரவுப் பெயரில் ஆண்மைச் சினைமுதற் பெயர்.
4 . ஆண்மை முறைப்பெயர் - ‘தந்தை மகனை அழைத்தார்’ என்றதுமே, உயர்திணை ஆணைக் குறிப்பது அறியப்படுகிறது. ‘தந்தை’ – முறைப்பெயர். ‘ இக் கன்றின் தந்தை, அக் காளை’ என அஃறிணையான காளை மாட்டையும் சுட்டிப் பேசலாம். இவ்வாறு அமைகிறது, விரவுப் பெயரில் ஆண்மை முறைப்பெயர்.

இப்போது வருவது – ‘பன்மை சுட்டிய பெயர்’! :

1 . பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றே பலவே ஒருவ ரென்னும்
என்றிப் பாற்கும் ஓரன் னவ்வே (பெயரியல் 28)

நூற்பா , ‘பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்’ என்றது, கீழ்வரும் மூன்று பெயர்களை:
1 . பன்மை இயற்பெயர்
2 . பன்மைச் சினைப்பெயர்
3 . பன்மைச் சினைமுதற் பெயர்

‘ஒன்றே பலவே ஒருவ ரென்னும், என்றிப் பாற்கும் ஓரன் னவ்வே’ என்றது, மேற்சொன்ன மூன்றுவகைப் பெயர்களுமே கீழ்வரும் மூன்று பாற்களுக்கும் உரியன என்பதையே :
1 . ஒன்றன் பால்
2 . பலவின் பால்
3 . உயர்திணை ஒருமைப்பால்

முதற்கண் , பன்மை இயற்பெயரானது மூன்று பாற்களுக்கும் வருவதற்கு எடுத்துக்காட்டுகள்:
1 . ஒன்றன் பால் - ‘யானை வந்தது’ என்பதில் உள்ள ‘யானை’ பன்மையையும் குறிக்கும் என்றாலும் , இத் தொடரில் , அஃறிணை ஒருமைக்கு வந்ததைக் கவனிக்க.
2 . பலவின் பால் - ‘யானை வந்தன’ என்பதில் உள்ள ‘யானை’ ஒருமையையும் குறிக்கும் என்றாலும் , இத் தொடரில் , அஃறிணைப் பன்மைக்கு வந்ததைக் கவனிக்க.
3 . உயர்திணை ஒருமைப்பால் - ‘யானை வந்தான்’ என்பதில் உள்ள ‘யானை’ அஃறிணையையும் குறிக்கும் என்றாலும் , இத் தொடரில் , உயர்திணை ஒருமைக்கு வந்ததைக் கவனிக்க.
மேலனவற்றில், ‘யானை’ என்பதே ‘இயற்பெயர்’. நமது இந்நாள் நடையில் ‘யானை வந்தான்’ என்ற வழக்கெல்லாம் இல்லை; உரையாசிரியர்களே பழைய வழக்குகளை நமக்குக் காட்டுகின்றனர். ‘உரையாசிரியர்கள் காட்டும் மறைந்த வழக்குகள்’ என்பதே ஒரு நல்ல ஆய்வுத் தலைப்பு (Research topic)!

இரண்டாவதாகப் , பன்மைச் சினைப்பெயரானது மூன்று பாற்களுக்கும் வருவதற்கு எடுத்துக்காட்டுகள்:
1 . ஒன்றன் பால் - ‘நெடுங்கழுத்தல் வந்தது’ என்பதில் உள்ள ‘நெடுங்கழுத்தல்’ (ஒட்டகம்) ,பன்மையையும் குறிக்கும் என்றாலும் , இத் தொடரில் , அஃறிணை ஒருமைக்கு வந்ததைக் கவனிக்க.
2 . பலவின் பால் - ‘நெடுங்கழுத்தல் வந்தன’ என்பதில் உள்ள ‘நெடுங்கழுத்தல்’ ஒருமையையும் குறிக்கும் என்றாலும் , இத் தொடரில் ,அஃறிணைப் பன்மைக்கு வந்ததைக் கவனிக்க.
3 . உயர்திணை ஒருமைப்பால் - ‘நெடுங்கழுத்தல் வந்தான்’ என்பதில் உள்ள ‘நெடுங்கழுத்தல்’ அஃறிணையையும் குறிக்கும் என்றாலும் , இத் தொடரில் , உயர்திணை ஒருமைக்கு வந்ததைக் கவனிக்க.
மேலனவற்றில், ‘நெடுங்கழுத்தல்’ என்பதே சினைப்பெயர்.

மூன்றாவதாகப் , பன்மைச் சினைமுதற் பெயரானது மூன்று பாற்களுக்கும் வருவதற்கு எடுத்துக்காட்டுகள்:
1 . ஒன்றன் பால் - ‘பெருங்கால் யானை வந்தது’ என்பதில் உள்ள ‘பெருங்கால் யானை ’(பெரிய கால்களை உடைய யானை) ,பன்மையையும் குறிக்கும் என்றாலும் , இத் தொடரில் , அஃறிணை ஒருமைக்கு வந்ததைக் கவனிக்க.
2 . பலவின் பால் - ‘பெருங்கால் யானை வந்தன’ என்பதில் உள்ள ‘பெருங்கால் யானை’ ஒருமையையும் குறிக்கும் என்றாலும் , இத் தொடரில் ,அஃறிணைப் பன்மைக்கு வந்ததைக் கவனிக்க.
3 . உயர்திணை ஒருமைப்பால் - ‘பெருங்கால் யானை வந்தான்’ என்பதில் உள்ள ‘பெருங்கால் யானை’ அஃறிணையையும் குறிக்கும் என்றாலும் , இத் தொடரில் , உயர்திணை ஒருமைக்கு வந்ததைக் கவனிக்க.
பெருங்கால் யானை – இதில், ‘பெருங்கால்’ என்பதே சினை; சினை – உறுப்பு. ‘யானை’ என்பதே முதல்.
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 77 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (518)

Post by Dr.S.Soundarapandian Fri May 07, 2021 9:17 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (518)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

விரவுப் பெயர்களில் இப்போது ஒருமை சுட்டிய பெயர்கள்:

ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே (பெயரியல் 29)

‘ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்’ என்றது கீழ்வரும் முன்று பெயர்களையே-
1 . ஒருமை இயற்பெயர்
2 . ஒருமைச் சினைப்பெயர்
3 . ஒருமைச் சினைமுதற் பெயர்

இம் மூன்றும் , கீழ்வரும் இரண்டுக்கும் உரியன:
1. அஃறிணை ஒருமை
2. உயர்திணை ஒருமை

இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் –

1 . ஒருமை இயற்பெயர் – ‘ அழகி’, இயற்பெயர். ‘அழகி வந்தது’ என்று மாட்டைக் குறிப்பிட்டுக் கூறலாம்; இங்கே ‘அழகி’ , அஃறிணை ஒருமையில் வந்துள்ளதைக் கவனிக்க.
‘அழகி வந்தாள்’ என்று பெண்ணைக் குறிப்பிட்டும் கூறலாம்; இங்கே ‘அழகி’ , உயர்திணை ஒருமையில் வந்துள்ளதைக் கவனிக்க.
2 . ஒருமைச் சினைப்பெயர் – ‘செவியிலி வந்தது’ என்று குரங்கைச் சுட்டிக் கூறலாம். இங்கே ‘செவியிலி’ , அஃறிணை ஒருமையில் வந்துள்ளதைக் கவனிக்க. ’செவியிலி வந்தாள்’ என்று பெண்ணைச் சுட்டியும் கூறலாம். இங்கே ‘செவியிலி’ , உயர்திணை ஒருமையில் வந்துள்ளதைக் கவனிக்க.
செவி – காது; சினைப்பெயர்; இச் சினை அடிப்படையில், வந்துள்ளதால் ‘செவியிலி’, சினைப்பெயர்.
3 . ஒருமைச் சினைமுதற் பெயர் - ‘கொடும்புற மருதி வந்தது’ என்று முதுகு வளைந்த ஒரு பசுவைச் சுட்டிக் கூறலாம். இங்கே ‘கொடும்புற மருதி’, அஃறிணை ஒருமையில் வந்துள்ளதைக் கவனிக்க. ‘கொடும்புற மருதி வந்தாள்’ என்று முதுகு வளைந்த ஒரு பெண்ணைச் சுட்டியும் கூறலாம். இங்கே ‘கொடும்புற மருதி’, உயர்திணை ஒருமையில் வந்துள்ளதைக் கவனிக்க.
கொடும்புறம் – சினை; மருதி – முதல் ; கொடும்புற மருதி – சினைமுதற் பெயர்.
மேலே வந்தவற்றுள் , ‘அழகி’ , ‘செவியிலி’, ‘கொடும்புற மருதி’ ஆகிய மூன்றுமே விரவுப்பெயர்கள் என்பதைக் குறித்தல் தகும்.
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 77 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (519)

Post by Dr.S.Soundarapandian Fri May 07, 2021 10:58 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (519)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

விரவுப் பெயர்களில் அடுத்ததாகத் ‘தாம்’ என்னும் பெயர் !:

தாமென் கிளவி பன்மைக் குரித்தே (பெயரியல் 30)

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் –
1 . தாம் வந்தார் (உயர்திணைப் பன்மை)
2 . தாம் வந்தன (அஃறிணைப் பன்மை)

கீழ் வரும் எடுத்துக்காட்டுகளை நாம் தரலாம்:
1 . ‘ஐவர் பேசினார்கள் ; தாம் பேசியதே சரி என்றும் வாதிட்டனர்’. இத் தொடரில் வந்துள்ள ‘தாம்’ உயர்திணைப் பன்மையைக் குறித்தல் காண்க.
2 ‘இரு மாடுகள் மேய்ந்தன; தாம் மேய்ந்த இடம் சரியில்லை என்று வேறு இடம் சென்றன’. இத் தொடரில் வந்துள்ள ‘தாம்’ அஃறிணைப் பன்மையைக் குறித்தல் காண்க.

மேல் இரு எடுத்துக்காட்டுகளில், ‘தாம்’ என்ற பெயர்ச்சொல், உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்த வருவதால் , ‘தாம்’என்பதை விரவுப்பெயர் என்கிறோம்!

இதைப் போன்றே ‘தான்’ ! :
தானென் கிளவி ஒருமைக் குரித்தே (பெயரியல் 31)

சேனவரையரின் எடுத்துக்காட்டுகள் –
1 . தான் வந்தான் (உயர்திணை ஒருமை)
2 . தான் வந்தது (அஃறிணை ஒருமை)

கீழ் வரும் எடுத்துக்காட்டுகளை நாம் காட்டலாம்:
1 . ‘ஒரு மணி நேரம் பேசினான் ; தான் பேசியதே சரி என்றும் வாதிட்டான்’. இத் தொடரில் வந்துள்ள ‘தான்’ உயர்திணை ஒருமையைக் குறித்தல் காண்க.
2 ‘ஒரு மாடு மேய்ந்தது; தான் மேய்ந்த இடம் சரியில்லை என்று வேறு இடம் சென்றது’. இத் தொடரில் வந்துள்ள ‘தான்’ அஃறிணை ஒருமையைக் குறித்தல் தெளிவு.

மேல் இரு எடுத்துக்காட்டுகளில், ‘தான்’ என்ற பெயர்ச்சொல், உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்த வருவதால் , ‘தான்’என்பதை விரவுப்பெயர் என்கிறோம்!
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 77 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 77 of 84 Previous  1 ... 40 ... 76, 77, 78 ... 80 ... 84  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum