ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

+46
M. Jagadeesan
krishnaamma
K.Senthil kumar
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
சசி
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி
M.Jagadeesan
monikaa sri
சிவனாசான்
விமந்தனி
CHENATHAMIZHAN
கோம்ஸ் பாரதி கணபதி
M.Saranya
jesifer
M.M.SENTHIL
Ponmudi Manohar
Syed Sardar
ayyasamy ram
அனுராகவன்
myimamdeen
அசுரன்
yarlpavanan
பூவன்
கவிஞர் கே இனியவன்
sivarasan
ராஜு சரவணன்
nikky
sundaram77
Dr.சுந்தரராஜ் தயாளன்
முனைவர் ம.ரமேஷ்
balakarthik
mohu
mbalasaravanan
Aathira
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
THIYAAGOOHOOL
யினியவன்
ச. சந்திரசேகரன்
பாலாஜி
கேசவன்
சதாசிவம்
Dr.S.Soundarapandian
50 posters

Page 30 of 84 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 57 ... 84  Next

Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Mon Dec 31, 2012 4:14 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 8:18 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (229)

Post by Dr.S.Soundarapandian Sun Mar 23, 2014 2:37 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (229)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

உருபியலில் நின்று விளையாடுகிறோம் !

இப்போது –

“அழனே புழனே யாயிரு மொழிக்கும்
அத்து மின்னு முறழத் தோன்றும்
ஒத்த தென்ப வுணரு மோரே” (உருபு . 21)

 ‘அழனே புழனே யாயிரு மொழிக்கும்’ -  ‘அழன் , ‘புழன்’ ஆகிய இரு சொற்களுக்கும் ,

 ‘அத்தும் இன்னும் உறழத் தோன்றும்’ -  அத்துச் சாரியையும் , இன் சாரியையும் இரண்டுமே வரும் !

‘ஒத்த தென்ப உணரு மோரே’ – இரண்டு சாரியைகளும் அவ்வாறு வருதலையுடைய என்று இலக்கணம் கற்றோர் உணர்வர் !

 அழன் + ஐ = அழனை ×  

அழன் + ஐ = அழன் + அத்து + ஐ = அழத்தை  √

அழன் + ஒடு = அழனொடு ×  

அழன் + ஒடு = அழன் + அத்து + ஒடு = அழத்தொடு √  

அழன் + ஐ = அழனை ×  

அழன் + ஐ = அழன் + இன் + ஐ = அழனினை  √

அழன் + ஒடு = அழனொடு ×  

அழன் + ஒடு = அழன் + இன் + ஒடு = அழனினொடு √  
(அழன் - பிணம்)

புழன் + ஐ = புழனை ×  

புழன் + ஐ = புழன் + அத்து + ஐ = புழத்தை  √

புழன் + ஒடு = புழனொடு ×  

புழன் + ஒடு = புழன் + அத்து + ஒடு = புழத்தொடு √  

புழன் + ஐ = புழனை ×  

புழன் + ஐ = புழன் + இன் + ஐ = புழனினை  √

புழன் + ஒடு = புழனொடு ×  

புழன் + ஒடு = புழன் + இன் + ஒடு = புழனினொடு √  

ஈண்டு இளம்பூரணர் கூடுதலாகத் தரும் இலக்கணம்
– “தோன்றல் என்பதனான் , ‘எவன்’ என்றும்  ‘என்’ என்றும் நிறுத்தி ,
‘வற்று’க்  கொடுத்து வேண்டும் செய்கை செய்து , ‘எவற்றை’ , ‘எவற்றொடு எனவும் ‘எற்றை’ , ‘எற்றொடு’ எனவும் முடிக்க !” .

இளம்பூரணரின் இக் கருத்துப்படி –

எவன் + ஐ =  எவனை ×

எவன் + ஐ =  எவன் + வற்று + ஐ = எவற்றை √


எவன் + ஒடு =  எவனொடு ×

எவன் + ஒடு =  எவன் + வற்று + ஒடு = எவற்றொடு √

 இங்கே ‘எவன்’ என்ற பெயர்ச் சொல் ,  ‘எவை’ என்ற வினாப்பெயரில் நிற்கக் காணலாம் !


என் + ஐ =  எனை ×

என் + ஐ =  என் + வற்று + ஐ = எற்றை √


என் + ஒடு =  எனொடு ×

என் + ஒடு =  என் + வற்று + ஒடு = எற்றொடு √

இங்கே ‘என்’ என்ற பெயர்ச் சொல் ,  ‘எது’ என்ற வினாப்பெயரில் நிற்கக் காணலாம் ! ‘என் னுடையரேனு மிலர்’ என்பதை நோக்குக !

மேலும் ஒரு கூடுதல் இலக்கணத்தை இளம்பூரணர் தருகிறார் பாருங்கள் ! :-

“ஒத்தது என்பதனான் ‘எகின்’ என நிறுத்தி , ‘அத்து’ம்  ‘இன்’னும் கொடுத்துச் செய்கை செய்து ‘எகினத்தை’ ‘எகினத்தொடு ’ எனவும் ‘எகினினை’ ‘எகினினொடு’ எனவும் முடிக்க !” .

எகின் + ஐ = எகினை ×

எகின் + ஐ = எகின் + அத்து + ஐ = எகினத்தை √

எகின் + ஒடு = எகினொடு ×

எகின் + ஒடு = எகின் + அத்து + ஒடு = எகினத்தொடு √


எகின் + ஐ = எகினை ×

எகின் + ஐ = எகின் + இன் + ஐ = எகினினை √

எகின் + ஒடு = எகினொடு ×

எகின் + ஒடு = எகின் + இன் + ஒடு = எகினினொடு √

  இளம்பூரணர் , நூற்பா ஓசை பற்றிய நுணுக்கம் ஒன்றையும் தருகிறார் ! :-

 “  ‘அத்து’ முற்கூறிய வதனான் , ‘அத்து’ப் பெற்றவழி இனிது இசைக்கு மெனக் கொள்க !  ”

என்ன பொருள் ?

மேல் நூற்பாவில் அத்து , இன் ஆகிய இரு சாரியைகளைக் கூறினார் அல்லவா தொல்காப்பியர் ? அங்கே ஏன் ‘அத்து’ச் சாரியையை முன்னே கூறி ‘இன்’ சாரியையைப் பின்னே வைத்தார் ?

 இதற்கு விடைதான் மேலே இளம்பூரணர் கூறியது!

அஃதாவது , ஓசை இனிமைக்காக ‘அத்து’ச்  சாரியையை முதலில் எழுதி ‘இன்’ சாரியையைப் பின்னே எழுதினார் தொல்காப்பியர் என்று ஓசை ஆராய்ச்சியை நிறைவு செய்கிறார் இளம்பூரணர் !

இதனால் , நூற்பா யாப்பாக இருந்தாலும் அதற்கும் ஓசைத் திட்பம் இருக்கவேண்டும் என்ற கருத்து ஏற்படுகிறது !

தமிழ் யாப்பியல் (Prosody) நோக்கில் இது குறிப்பிடத் தக்கது !  


***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (230)

Post by Dr.S.Soundarapandian Sun Apr 06, 2014 4:52 am

                   தொடத் தொடத் தொல்காப்பியம் (230)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
 
                                நாம் பார்த்துவரும் உருபியலில் அடுத்த நூற்பா ! :-
 
 “அன்னென்  சாரியை யேழ  னிறுதி
முன்னர்த்  தோன்று  மியற்கைத் தென்ப”  (உருபு . 22)
 
 
 ‘அன் என்  சாரியை’ -  ‘அன்எனப்படும் சாரியை,
 
 ‘ஏழன்  இறுதி’ -   ‘ஏழ்’ எனும் சொல்லின் இறுதியில்,
 
  ‘முன்னர்த் தோன்றும்  இயற்கைத்து என்ப’ -  முன்பாகத் தோன்றும் இயல்பை உடையது என்பார்கள் !
 
 ஏழ் + ஐ = ஏழ் +இன் + ஐ = ஏழினை ×
ஏழ் + ஐ = ஏழ் +அன் + ஐ = ஏழனை √  (அன் - சாரியை)
 
ஏழ் + ஒடு = ஏழொடு ×
ஏழ் + ஒடு = ஏழ் +இன் + ஒடு = ஏழினொடு ×
ஏழ் + ஒடு = ஏழ் +அன் + ஒடு = ஏழனொடு √(அன் - சாரியை)
 
இளம்பூரணர் தரும் வேறு சில எடுத்துக்காட்டுகள் !:-
 
    பூழ் + ஐ = பூழ் + இன் + ஐ = பூழினை ×
   பூழ் + ஐ = பூழ் + அன் + ஐ = பூழனை √  (அன் - சாரியை)
 
 
    பூழ் + ஒடு = பூழொடு ×
   பூழ் + ஒடு = பூழ் + இன் + ஒடு = பூழினொடு × 
  பூழ் + ஒடு = பூழ் + அன் + ஒடு = பூழனொடு √  (அன் - சாரியை)
 
 
   யாழ் + ஐ = யாழ் + இன் + ஐ = யாழினை ×
  யாழ் + ஐ = யாழ் + அன் + ஐ = யாழனை √  (அன் - சாரியை)
 
  பூழ் + ஒடு = பூழ் + இன் + ஒடு = பூழினொடு × 
  பூழ் + ஒடு = பூழ் + அன் + ஒடு = பூழனொடு √  (அன் - சாரியை)
 
  சாரியைகளைச் சரியாகப் பயன்படுத்துவது அவசியமானது !
 
 இன் , அன் – சாரியைகள் குழப்புகின்றனவா?
 
   கீழ் வரும்  எடுத்துக்காட்டுகளைப்  பாருங்கள் ! :-
 
 காட்டனை அழித்தான்  (அன்  சாரியை வந்துள்ளது) ×
காட்டினை அழித்தான்  (இன்  சாரியை வந்துள்ளது)
 
வீட்டனைக்  கட்டினான்  (அன்  சாரியை வந்துள்ளது) ×
விட்டினைக்  கட்டினான்  (இன்  சாரியை வந்துள்ளது)
 
கண்டினன்  (இன் சாரியை வந்துள்ளது) ×
கண்டனன்  (அன் சாரியை வந்துள்ளது)
 
எட்டின்  உருபு (இன் சாரியை வந்துள்ளது) ×
எட்டன்  உருபு (அன் சாரியை வந்துள்ளது)
 
 
      சாரியை நுணுக்கங்கள், பழம் நூலைச் செம்பதிப்பாக (Critical edition) வெளியிடும்போது மிகவும் தேவைப்படுவதாகும் !
 
         சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், தமிழ்ச் செவ்வியல் (Classical) நூற்களைச் செம்பதிப்பாகக் கொணரும் ஆய்வு நடைபெற்றுவருவது அறியத் தக்கது !
 
                                                ***

 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (231)

Post by Dr.S.Soundarapandian Mon Apr 07, 2014 9:44 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (231)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

  பெயர்ச் சொற்களோடு வேற்றுமை உருபுகள் சேரும் தருணத்தில் சாரியைகள் வருவதைப் பார்த்துவருகிறோம் !


குற்றியலுகரம் பெற்ற பெயர்ச் சொற்கள் நிலைமொழியாக நிற்கும்போது ? :-

 “குற்றிய லுகரத் திறுதி முன்னர்
 முற்றத் தோன்று  மின்னென் சாரியை”  (உருபு . 23)

‘குற்றிய லுகரத் திறுதி முன்னர்’ – குற்றியலுகரச் சொற்களின் ஈற்றெழுத்தின் முன்பாக ,

‘முற்றத் தோன்று  மின்னென் சாரியை’ -  இன் சாரியை முழுவதுமாகத் தோன்றும் !

வரகு + ஐ = வரகு + அன் + ஐ = வரகனை ×
வரகு + ஐ = வரகு + இன் + ஐ = வரகினை √

வரகு + ஒடு = வரகு + அன் + ஒடு = வரகனொடு ×
வரகு + ஒடு = வரகு + இன் + ஒடு = வரகினொடு √

(வரகு – உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தை ஈற்றிலே  பெற்ற பெயர்ச் சொல்)


நாகு + ஐ = நாகு + அன் + ஐ = நாகனை ×
நாகு + ஐ = நாகு + இன் + ஐ = நாகினை √

நாகு + ஒடு = நாகு + அன் + ஒடு = நாகனொடு ×
நாகு + ஒடு = நாகு + இன் + ஒடு = நாகினொடு √ (இன் - சாரியை)
(நாகு – நெடில்தொடர்க் குற்றியலுகரத்தை ஈற்றிலே  பெற்ற பெயர்ச் சொல் )


மேல் எடுத்துக்காட்டுகள் தொல்காப்பியர் காலத்துப் புணர்ச்சிகளுக்கு இயைந்தவை !

அஃதாவது , தொல்காப்பியர் படித்ததும் அவர் காலத்தில் இருந்ததும் மேலே பார்த்த புணர்ச்சிதான் !

ஆனால் , இளம்பூரணர் காலத்தில் இலக்கண நெகிழ்ச்சி உண்டாயிற்று !

ஆகவே என்ன சொன்னார் இளம்பூரணர் ? :-

“முற்ற என்றதனால்  பிற சாரியை பெறுவனவும் கொள்க.  ‘வழக்கத்தாற் பாட்டாராய்ந்தான்’,  ‘கரியதனை’ ,‘ கரியதனொடு’ என வரும் ! ”

இதன் விளக்கம் –

வழக்கு + அத்து + ஆல் + பாட்டு + ஆராய்ந்தான் = வழக்கத்தாற்              
பாட்டாராய்ந்தான் √

(வழக்கு – வன்றொடர்க் குற்றியலுகரத்தை ஈற்றிலே பெற்ற பெயர்ச் சொல்; அத்து - சாரியை)

கரியது + அன் + ஐ = கரியதனை √
(கரியது – உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தை ஈற்றிலே பெற்ற பெயர்ச் சொல்; அன் - சாரியை)

கரியது + அன் + ஒடு = கரியதனொடு √ (அன் – சாரியை ; ஒடு – மூன்றாம்    
வேற்றுமை உருபு)


மேலே கண்ட ‘அன்’ சாரியைதான் இளம்பூரணர் சொன்ன ‘பிற சாரியை’ !
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (232)

Post by Dr.S.Soundarapandian Tue Apr 08, 2014 7:24 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (232)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

 முன் ஆய்வில் , நெடில்தொடர்க் குற்றியலுகரப் பெயர்ச் சொல்லோடு வேற்றுமை உருபு புண்ரும் விதியைப் பார்த்தோம் !  (நாகு + இன் + ஐ = நாகினை).

ஆனால் எல்லா இடத்தும் இவ்விதி பொருந்தாது என்று உடனே கூறவருகிறார் தொல்காப்பியர் ! :-

“ நெட்டெழுத்  திம்ப  ரொற்றுமிகத்  தோன்றும்
 அப்பான்  மொழிக ளல்வழி  யான ”                (உருபு . 24)

‘நெட்டெழுத்து   இம்பர்  ஒற்றுமிகத்  தோன்றும்’ – நெடில் தொடர்க் குற்றியலுகரச்    
                                                                                         சொற்கள் வேற்றுமை உருபோடு புணரும்போது ,
                                                                                         அந்த நெடிலை அடுத்துவரும் எழுத்தின் மெய் வடிவம்
                                                                                          இரட்டிக்கும் !

அப்பால்  மொழிகள் ’ – க, ச, த, ப ஆகிய எழுத்துகள்,

‘அல்வழி ஆன’ – இலாதபோது !

  இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்திக் கீழ்வருமாறு விளக்கலாம் ! :-

யாடு + ஐ = யாடை ×
யாடு + ஐ = யாட்டை √ (நெட்டெழுத்தாகிய ‘யா’வை அடுத்துள்ள ‘டு’வின்
                                                          மெய்யான ‘ட்’ ஆனது, இரட்டித்துள்ளதைக் காண்க!)

 
யாடு + ஒடு = யாடொடு ×
யாடு + ஒடு = யாட்டொடு √ (நெட்டெழுத்தாகிய ‘யா’வை அடுத்துள்ள
                                                              ‘டு’வின் மெய்யான ‘ட்’ ஆனது,
                                                               இரட்டித்துள்ளதைக் காண்க!)

காசு + ஐ = காச்சை × (நெட்டெழுத்தாகிய ‘கா’வை அடுத்துள்ள
                                                      ‘சு’வின் மெய்யான ‘ச்’ ஆனது,
                                                       இரட்டிக்கக்  கூடாது என்பதைக்  காண்க!)

காது + ஐ = காத்தை × (நெட்டெழுத்தாகிய ‘கா’வை அடுத்துள்ள
                                              ‘து’வின் மெய்யான ‘த்’ ஆனது,
                                                இரட்டிக்கக்  கூடாது என்பதைக்  காண்க!)

பாகு + ஐ = பாக்கை × (நெட்டெழுத்தாகிய ‘பா’வை அடுத்துள்ள
                                               ‘கு’வின் மெய்யான ‘க்’ ஆனது,
                                                  இரட்டிக்கக்  கூடாது என்பதைக்  காண்க!)

 ‘அப்படியானால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்களிலும் இரட்டித்தல் உண்டா’ ? – உங்கள் ஐயம் !

விடைகூறுகிறார் இளம்பூரணர் ! :-

“ தோன்றும் என்றதனான் , உயிர்த்தொடர் மொழியும் ‘இன்’ பெறாது , இனவொற்று மிகுதல் கொள்க ! ‘முயிற்றை , ‘முயிற்றொடு’ என வரும் !”

அஃதாவது –

முயிறு + ஐ = முயிறை ×
முயிறு + ஐ = முயிறு + இன் + ஐ =  முயிறினை ×
முயிறு + ஐ = முயிற்றை √  (பகுதிச் சொல்லிலுள்ள ‘று’வின் ‘ற்’ , இரட்டியதைக்
                                                                காண்க!  )  

முயிறு + ஒடு = முயிறொடு ×
முயிறு + ஒடு = முயிறு + இன் + ஐ =  முயிறினொடு ×
முயிறு + ஒடு = முயிற்றொடு √  (பகுதிச் சொல்லிலுள்ள ‘று’வின் ‘ற்’ , இரட்டியதைக்
                                                                        காண்க!  )

கயிறு + ஐ = கயிறை ×
கயிறு + ஐ = கயிறு + இன் + ஐ =  கயிறினை ×
கயிறு + ஐ = கயிற்றை √  (பகுதிச் சொல்லிலுள்ள ‘று’வின் ‘ற்’ , இரட்டியதைக்
                                                              காண்க!  )

கயிறு + ஒடு = கயிறொடு ×
கயிறு + ஒடு = கயிறு + இன் + ஒடு =  கயிறினொடு ×
கயிறு + ஒடு = கயிற்றொடு √  (பகுதிச் சொல்லிலுள்ள ‘று’வின் ‘ற்’ , இரட்டியதைக்
                                                                    காண்க!  )

வயிறு + ஐ = வயிறை ×
வயிறு + ஐ = வயிறு + இன் + ஐ =  வயிறினை ×
வயிறு + ஐ = வயிற்றை √  (பகுதிச் சொல்லிலுள்ள ‘று’வின் ‘ற்’ , இரட்டியதைக்
                                                           காண்க!  )

வயிறு + ஒடு = வயிறொடு ×
வயிறு + ஒடு = வயிறு + இன் + ஒடு =  வயிறினொடு ×
வயிறு + ஒடு = வயிற்றொடு √  (பகுதிச் சொல்லிலுள்ள ‘று’வின் ‘ற்’ , இரட்டியதைக்
                                                                       காண்க!  )

இதனால்தான் ‘இளம்பூரணம்’ என்று நாம் அவரது உரையைப் பெருமையாகக் கூறுகிறோம் !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Empty [b] தொடத் தொடத் தொல்காப்பியம் (233)[/b]

Post by Dr.S.Soundarapandian Fri Apr 11, 2014 8:16 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (233)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

உருபியலில் நாம் பார்த்த நூற்பாவுக்கு ( ‘நெட்டெழுத்…’) விளக்கமாக அடுத்து ஒரு நூற்பாப் போடுகிறார் தொல்காப்பியர் ! : -

“அவைதம்  
இயற்கைய வாகும் செயற்கைய வென்ப” (உருபு . 25)


அஃதாவது , நெட்டெழுத்திற்கு அடுத்துக் குற்றியலுகரம் வரக்கூடிய சொற்கள் , வேற்றுமை உருபுகளோடு புணரும் வேளையில்,  ‘இன்’சாரியை பெறா என்று இதற்கு முன்னே கூறினார் தொல்காப்பியர் !

இன் சாரியை
பெறாவிட்டால் பின் எப்படிப் புணரும் என்று ஒரு வினா எழுகிறது !

அதற்கு விடைதான் நாம் இப்போது பார்த்த நூற்பா!

  ‘இயற்கை  ஆகும்  செயற்கைய  என்ப’  -  சாரியை எதுவுமின்றி இயற்கையாகச் செயற்படும் !
செயற்கைய  - செயற்படும் தன்மையன .

 முன் ஆய்வில்  பார்த்த அதே எடுத்துக்காட்டுகளே இங்கும் வரும் ! -

யாடு + ஐ = யாட்டை √
யாடு + ஒடு = யாட்டொடு √

‘ஆனால் எல்லாச் சொற்களுக்குமே இதனை விதியாகக் கொள்ளமுடியாது ! சில இடங்களில் மாறியும் வரும்’  என்கிறார் இளம்பூரணர் ! –

 யாடு + ஐ = யாடு +இன் + ஐ = யாட்டினை √
யாடு + ஒடு = யாடு +இன் + ஒடு = யாட்டினொடு √

முயிறு + ஐ = முயிறு +இன் + ஐ = முயிற்றினை √
முயிறு + ஒடு = முயிறு +இன் + ஒடு = முயிற்றினொடு √

விதிகளைத் தொல்காப்பியத்தில் படிக்கிறோம் ; விதி விலக்குகளை இளம்பூரணர் உரையில் படிக்கிறோம் !


***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (234)

Post by Dr.S.Soundarapandian Sat Apr 12, 2014 8:48 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (234)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33


‘ஒன்றனை’  -    ‘ஒன்றினை’ -   எது சரி ?

நாம் பார்க்கப்போகும் நூற்பாவில் இவ் வினாவிற்கு விடை உள்ளது ! :-

“எண்ணி  னிறுதி  யன்னொடு  சிவணும்”  (உருபு . 26)

அஃதாவது , குற்றியலுகர ஈற்றைக் கொண்ட எண்ணுப் பெயர்ச் சொற்கள் , வேற்றுமை உருபை ஏற்கும்போது ,  ‘அன்’ சாரியைதான் பெறும் !-

ஒன்று + ஐ = ஒன்று +இன் + ஐ = ஒன்றினை ×
ஒன்று + ஐ = ஒன்று +அன் + ஐ = ஒன்றனை √

ஒன்று + ஒடு = ஒன்று +இன் + ஒடு = ஒன்றினொடு ×
ஒன்று + ஒடு = ஒன்று +அன் + ஒடு = ஒன்றனொடு √

இரண்டு + ஐ = இரண்டு +இன் + ஐ = இரண்டினை ×
இரண்டு + ஐ = இரண்டு +அன் + ஐ = இரண்டனை √

இரண்டு + ஒடு = இரண்டு +இன் + ஒடு = இரண்டினொடு ×
இரண்டு + ஒடு = இரண்டு +அன் + ஒடு = இரண்டனொடு √

‘ஒன்று’ , ‘இரண்டு’ ஆகிய இரு மென்றொடர்க்  குற்றியலுகர எண்ணுப் பெயர்ச் சொற்களுக்கே இளம்பூரணர் எடுத்துக்காட்டுகள் தந்துள்ளார் .

நாம் மேலும் சில எடுத்துக்கட்டுகளைத் தரலாம் ! :-

ஆறு + ஐ = ஆறு +இன் + ஐ = ஆறினை ×
ஆறு + ஐ = ஆறு +அன் + ஐ = ஆறனை √

ஆறு + ஒடு = ஆறு +இன் + ஒடு = ஆறினொடு ×
ஆறு + ஒடு = ஆறு +அன் + ஒடு = ஆறனொடு √

(ஆறு -  நெடில் தொடர்க் குற்றியலுகரச் சொல்)


எட்டு + ஐ = எட்டு +இன் + ஐ = எட்டினை ×
எட்டு + ஐ = எட்டு +அன் + ஐ = எட்டனை √

எட்டு + ஒடு = எட்டு +இன் + ஒடு = எட்டினொடு ×
எட்டு + ஒடு = எட்டு +அன் + ஒடு = எட்டனொடு √

(எட்டு -  வன்றொடர்க் குற்றியலுகரச் சொல்)

   இவ்வகையில் , பழைய ஓலைச் சுவடிகளை(Palmleaf manuscripts) ஆய்ந்து செம்பதிப்பைத் (Critical edition) தயாரிப்போர் , எத்தகைய பாடங்களை நாம் கொள்ளவேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகத் (Guide book)தொல்காப்பியம் திகழ்கிறது !


***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (235)

Post by Dr.S.Soundarapandian Tue Apr 15, 2014 9:37 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (235)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

  உருபியலில் , குற்றியலுகர எண்ணுப்பெயர்களோடு
, வேற்றுமை உருபுகள் சேரும்போது வரக்கூடிய சாரியை பற்றித்தான் கீழ்வரும்  நூற்பாவும் நுவல்கிறது ! :-

“ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉம்
எல்லா வெண்ணுஞ் சொல்லுங் காலை
ஆனிடை வரினு மான மில்லை
அஃதென் கிளவி யாவயிற் கெடுமே
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே”  (உருபு . 27)

‘ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉம்
எல்லா வெண்ணுஞ் சொல்லுங் காலை’ –  ‘ஒன்று ’ , ‘இரண்டு’ முதான எண்களோடு , ‘பத்து’ என்பதைச் சேர்த்து வரக்கூடிய ‘ஒரு பஃது’ , ‘இருபஃது’ என்பவற்றுடன் , வேற்றுமை உருபுகள் சேரும்போது ,

‘ஆனிடை  வரினும்  ஆனம்  இல்லை’  -  ‘ஆன்’ சாரியை வந்தால் தவறில்லை !

‘அஃதென் கிளவி ஆவயிற் கெடுமே’ – ‘அஃது’ என்ற சொல் அப்போது கெடும் !

‘உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே’ – அப்போது , ‘ப்’ மட்டும் எஞ்சும் !

எடுத்துக்காட்டுகள் –

ஒருபஃது + ஐ = ஒருப் + ஐ ( ‘அஃது’ கெட்டது)
ஒருப் + ஐ  = ஒருப் + ஆன்+ ஐ ( ‘ஆன்’ சாரியை சேர்ந்தது)
ஒருப் + ஆன்+ ஐ = ஒருபானை

இங்கே ‘பானை’ , தண்ணீர்ப் பானை அல்ல !
ஒருபானை – ஒருபஃதை – ஒருபத்தை = பத்தை (பத்தினை)

இருபஃது + ஐ = இருப் + ஐ ( ‘அஃது’ கெட்டது)
இருப் + ஐ  = இருப் + ஆன்+ ஐ ( ‘ஆன்’ சாரியை சேர்ந்தது)
இருப் + ஆன்+ ஐ = இருபானை
[இருபானை – இருபஃதை – இருபத்தை = இருபதை (இருபதினை)]

முப்பஃது + ஐ = முப் + ஐ ( ‘அஃது’ கெட்டது)
முப் + ஐ  = முப் + ஆன்+ ஐ ( ‘ஆன்’ சாரியை சேர்ந்தது)
முப் + ஆன்+ ஐ = முப்பானை
[முப்பானை – முப்பஃதை – முப்பத்தை = முப்பதை (முப்பதினை)]

 மேல் நூற்பாவில் , ‘ஆனிடை வரினும்’ என்ற தொடரைக் கவனியுங்கள் !
இதிலுள்ள ‘உம்’ , எதிர்மறை உம்மை!  நச்சினார்க்கினியர் உரையிலும் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது !

  எதிர்மறை உம்மை என்றால் ?

இங்கே எதிர்மறை உம்மை என்றால்  -  ‘அஃது’ என்பது கெடவும் செய்யலாம், கெடாமலும் இருக்கலாம் !
‘அஃது’ கெட்டதற்கு எடுத்துக்காட்டுகளை மேலே பார்த்தோம் !

‘அஃது’ கெடாமலிருப்பதற்கு எடுத்துக்காட்டுகளைக் கீழே காண்போம் ! :-

ஒருபஃது + அன் + ஐ = ஒருபஃதனை ( ‘அஃது’ கெடவில்லை)
இருபஃது + அன் + ஐ = இருபஃதனை ( ‘அஃது’ கெடவில்லை)
முப்பஃது + அன் + ஐ = முப்பஃதனை ( ‘அஃது’ கெடவில்லை)

  ‘பஃது’ – என்பதெல்லாம் இன்று தமிழில் மறைந்துவிட்டது !

  இப்படிப்பட்ட  மறைந்த தமிழ் வடிவங்கள் (Obsolete Tamil forms) மொழி ஆராய்ச்சிக்கு மிகவும் தேவையாகும் !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (236)

Post by Dr.S.Soundarapandian Thu Apr 17, 2014 8:23 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (236)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

உருபியலில் , அடுத்து ‘யாது’ , ‘அஃது’ ஆகிய இரு பெயர்ச் சொற்களோடும் வேற்றுமை உருபுகள் சேரும்போது எந்தச் சாரியை வரும் என்று காட்டுகிறார் தொல்காப்பியர் ! : -


  “யாதென்  னிறுதியுஞ்  சுட்டுமுத  லாகிய
  வாய்த  விறுதியு  மன்னொடு  சிவணு
   மாய்தங்  கெடுத  லாவயி  னான ”   (உருபு . 28)

‘ யாது  என்  இறுதியும் , சுட்டுமுதல் ஆகிய
                                             ஆய்த இறுதியும்  ’   -        ‘யாது’ எனும் சொல்லின் ஈறாகிய உகரமும் , ‘அஃது’ எனும் சுட்டுமுதல் ஆகிய சொல்லின் ஈறாகிய உகரமும் கெட்டு, அவற்றின் முன் உள்ள ‘த்’ உடன் ,

‘அன்னொடு  சிவணும்’ – அன்  சாரியை  சேரும் !

‘ஆய்தம் கெடுதல் ஆவயின் ஆன’ – அப்போது ஆய்த எழுத்துக் கெடும் !

 யாது + ஐ = யாதை ×    
யாது + ஐ = யாது + அன் + ஐ = யாதனை √

யாது + ஒடு = யாதொடு ×    
யாது + ஒடு = யாது + அன் + ஒடு = யாதனொடு √

அஃது + ஐ = அஃதை ×    
அஃது + ஐ = அஃது + அன் + ஐ = அதனை √

அஃது + ஒடு = அஃதொடு ×    
அஃது + ஒடு = அஃது + அன் + ஒடு = அதனொடு √

இஃது + ஐ = இஃதை ×    
இஃது + ஐ = இஃது + அன் + ஐ = இதனை √

இஃது + ஒடு = இஃதொடு ×    
இஃது + ஒடு = இஃது + அன் + ஒடு = இதனொடு √


உஃது + ஐ = உஃதை ×    
உஃது + ஐ = உஃது + அன் + ஐ = உதனை √

உஃது + ஒடு = உஃதொடு ×    
உஃது + ஒடு = உஃது + அன் + ஒடு = உதனொடு √

  ‘உஃது’என்பதெல்லாம் இப்போது வழக்கில் இல்லை என்பது கூறாமலேயே விளங்கும் !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (237)

Post by Dr.S.Soundarapandian Tue Apr 22, 2014 11:49 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (237)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொல்காப்பியர்
தம்  இலக்கணத்தின் நடுவே எப்படித் தாவரப்பெயர்களைக் கூறத் தவறமாட்டாரோ  அதைப்போலவே திசைப்பெயர்களையும் குறிப்பிடத் தவறமாட்டார் !

 “ஏழ  னுருபிற்குத்  திசைப்பெயர் முன்னர்ச்
  சாரியைக்  கிளவி யியற்கையு மாகும்
  ஆவயி  னிறுதி  மெய்யொடுங்  கெடுமே  ” (உருபு . 29)

‘ஏழன் உருபிற்கு ’  -  ‘கண்’ எனும் எழாம் வேற்றுமை உருபுகள் ,

‘திசைப்பெயர்  முன்னர்’ – ‘கிழக்கு’ , ‘மேற்கு’ , ‘தெற்கு’, ‘வடக்கு’ எனும் திசைப் பெயர்களோடு  சேரும்போது,

‘இயற்கையும் ஆகும்’ – இயற்கையாகப் புணரும் !

‘ஆவயின் இறுதி’ – அப்போது , திசைப்பெயர்களின் ஈற்றெழுத்துகளின் இறுதியாகிய  ‘உ’,

‘மெய்யொடும்   கெடுமே’ -  ‘க்’ என்ற மெய்யெழுத்தோடு கெடும் !

 கிழக்கு + கண் = கிழக்கண்  √  ( கு , கெட்டது ; கண் – ஏழாம் வேற்றுமை உருபு)
கிழக்கு + கண் = கிழக்கின்கண்  √ (இன் – சாரியை இயற்கையாகப் புணர்ந்தது)

மேற்கு + கண் = மேற்கண்  √  ( கு , கெட்டது ; கண் – ஏழாம் வேற்றுமை உருபு)
மேற்கு + கண் = மேற்கின்கண்  √ (இன் – சாரியை இயற்கையாகப் புணர்ந்தது)

தெற்கு + கண் = தெற்கண்  √  ( கு , கெட்டது ; கண் – ஏழாம் வேற்றுமை உருபு)
தெற்கு + கண் = தெற்கின்கண்  √ (இன் – சாரியை இயற்கையாகப் புணர்ந்தது)

வடக்கு + கண் = வடக்கண்  √  ( கு , கெட்டது ; கண் – ஏழாம் வேற்றுமை உருபு)
வடக்கு + கண் = வடக்கின்கண்  √ (இன் – சாரியை இயற்கையாகப் புணர்ந்தது)

கிழக்கு , மேற்கு , தெற்கு , வடக்கு – என்ற வரிசையில் மேலே எடுத்துக்காட்டுகள் வந்துள்ளன அல்லவா?
ஆனால் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் , வடக்கு , கிழக்கு , தெற்கு , மேற்கு என்ற வரிசையில் எடுத்துக்காட்டுகளை எழுதியுள்ளனர் !

இதன் காரணம் விளங்கவில்லை !

இளம்பூரணர் ‘கண்’ என்ற வேற்றுமை உருபு மட்டுமல்லாது , பக்கத்தைக் குறிக்கும் ‘சார்’ , ‘புடை’ போன்ற  பெயர்ச் சொற்கள்கூட , மேலே ‘கிழக்கண்’ எனச் சாரியை பெறாது புணர்ந்தது போலப் புணரும் என்று ஓர் இலக்கண நுணுக்கத்தைத் தெரிவிக்கிறார் ! :-

கிழக்கு + சார் =  கீழ் சார் √            (சாரியை பெறாது திரிந்து முடிந்தது)
கிழக்கு + புடை =  கீழ் புடை √     (,,)

மேற்கு + சார் =  மேல் சார் √         (,,)
மேற்கு + புடை =  மேல் புடை √  (,,)


தெற்கு + சார் =  தென் சார் √        (,,)
தெற்கு + புடை =  தென் புடை √ (,,)


வடக்கு + சார் =  வட சார் √          (,,)
வடக்கு + புடை =  வட புடை √   (,,)

இந்த எடுத்துக்காட்டுகளில் , கிழக்கு , மேற்கு , தெற்கு , வடக்கு – என்ற வரிசையை இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் பின்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (238)

Post by Dr.S.Soundarapandian Sun May 18, 2014 2:13 pm

                   தொடத் தொடத் தொல்காப்பியம் (238)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
 
                                பண்ணினை
                                பண்ணை
-      இரண்டும் சரியா?
அப்படியானால் தொல்காப்பியத்தில் இதற்கு விதி உள்ளதா?
 
உள்ளது ! :-
 
 “புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியும்
சொல்லிய வல்ல வேனைய வெல்லாம்
தேருங் காலை யுருபொடு சிவணிச்
சாரியை நிலையுங் கடப்பா டிலவே”  (உருபு . 30)
 
 ‘புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும்’ – ஒற்றெழுத்தை ஈற்றிலே கொண்ட பெயர்ச் சொல்லும் , உயிரெழுத்தை இறுதியிலே கொண்ட பெயர்ச் சொல்லும் ,


 ‘சொல்லிய அல்ல ஏனைய எல்லாம்
தேரும் காலை’ – இதுவரை உருபியலில் புணர்ச்சிகளுக்குக் கூறப்படாத  மெய் ஈறுகளான  ண், ய், ர்,ல்,ள் ஆகியவற்றையும் , உயிர் ஈறான ‘இ’யையும் ஆய்ந்து பார்த்தால் ,


‘உருபொடு சிவணிச் சாரியை நிலையும் கடப்பாடு இலவே’ – வேற்றுமை உருபோடு சேரும்போது சாரியை வரலாம் வராமலும் இருக்கலாம் !
 
        மண் + ஐ = மண்ணை (சாரியை பெறவில்லை)
        மண் + ஐ =மண் + இன் +ஐ = மண்ணினை (சாரியை பெற்றுள்ளது)
 
        வேய் + ஐ = வேயை (சாரியை பெறவில்லை)
        வேய் + ஐ =வேய் + இன் +ஐ = வேயினை (சாரியை பெற்றுள்ளது)
 
        நார் + ஐ = நாரை (சாரியை பெறவில்லை)
        நார் + ஐ =நார் + இன் +ஐ = நாரினை (சாரியை பெற்றுள்ளது)
 
        கல் + ஐ = கல்லை (சாரியை பெறவில்லை)
        கல் + ஐ =கல் + இன் +ஐ = கல்லினை (சாரியை பெற்றுள்ளது)
 
        முள் + ஐ = முள்ளை (சாரியை பெறவில்லை)
        முள் + ஐ =முள் + இன் +ஐ = முள்ளினை (சாரியை பெற்றுள்ளது)
 
        கிளி + ஐ = கிளியை (சாரியை பெறவில்லை)
        கிளி + ஐ =கிளி + இன் +ஐ = கிளியினை (சாரியை பெற்றுள்ளது)
 
         இங்கு , இளம்பூரணர் , “எடுத்தோதிய ஈற்றுள் ஒழிந்தனவு மெல்லாம் ஈண்டுக் கொள்ளப்படும்  ” என்கிறார் !
        இதற்கு என்ன பொருள் ?
 
 அஃதாவது,  ‘ன்’ ஈற்றுச் சொற்களில் , ‘தான் , யான் , அழன் , புழன்’
ஆகிய சொற்களுக்கே இதே உருபியலில் (நூற்பா 20,21) புணர்ச்சி விதிகூறினார் !
 
 ஆனால், ‘ன்’ ஈற்றுச் சொல்லான ‘பொன்’ என்பதும் மேல் நூற்பா (உருபு.30) விதிக்குள் வரும் ! :-
பொன் + ஐ = பொன்னை (சாரியை பெறவில்லை)
பொன் + ஐ = பொன் + இன் + ஐ = பொன்னினை (சாரியை பெற்றுள்ளது)
 
இதனைப் போலவே , ‘ழ்’ஈற்றுச் சொற்புணர்ச்சியிலும் முன்பு (உருபு . 22)
, ‘ஏழ்’ என்ற சொல்லுக்கே விதி கூறினார் தொல்காப்பியர் !
ஆனால் , ‘தாழ்’ என்ற சொல் , மேற்கூறிய விதிக்கு (உருபு .30) உட்படும் என்பதை எடுத்துக்காட்டு மூலம் காட்டுகிறார் இளம்பூரணர் ! :-
 
 தாழ் + ஐ = தாழை (சாரியை பெறவில்லை)
தாழ் + ஐ = தாழ் + இன் + ஐ = தாழினை (சாரியை பெற்றுள்ளது)
 
 ‘ஈ’ ஈற்றுச் சொல்லான ‘நீ’ என்பதற்கே உருபியலில் (நூற்பா7) விதி கூறினார் !
ஆனால் , அவ்விடத்தே குறிப்பிடப்படாத ‘ஈ’ ஈற்றுச் சொற்களான ‘தீ’ , ‘ஈ’ , ‘வீ’ ஆகியன   மேற்கூறிய விதிக்கு (உருபு .30) உட்படும் என்பதை எடுத்துக்காட்டு மூலம் காட்டுகிறார் நச்சினார்க்கினியர் ! :-


தீ + ஐ = தீயை (சாரியை பெறவில்லை)
தீ + ஐ = தீ + இன் + ஐ = தீயினை (சாரியை பெற்றுள்ளது)
 
ஈ + ஐ = ஈயை (சாரியை பெறவில்லை)
ஈ + ஐ = ஈ + இன் + ஐ = ஈயினை (சாரியை பெற்றுள்ளது)
 
வீ + ஐ = வீயை (சாரியை பெறவில்லை)
வீ + ஐ = வீ + இன் + ஐ = வீயினை (சாரியை பெற்றுள்ளது)
 
இவை போன்றே , ‘ஐ’ ஈற்றுச் சொல்லான ‘யாவை’ என்பதற்கு மட்டுமே உருபியலில் (நூற்பா 6) விதி கூறினார் ! அச் சொல்நீங்கலான ‘தினை’ , ‘கழை’ ஆகியனவற்றுக்கு நாம் பார்த்த (நூற்பா 30) நூற்பா பொருந்தும் என்கிறார் நச்சினர்க்கினியர் ! :-
 
தினை + ஐ = தினையை (சாரியை பெறவில்லை)
தினை + ஐ = தினை + இன் + ஐ = தினையினை (சாரியை பெற்றுள்ளது)
 
கழை + ஐ = கழையை (சாரியை பெறவில்லை)
கழை + ஐ = கழை + இன் + ஐ = கழையினை (சாரியை பெற்றுள்ளது)
 
இவ்விடத்தே , நச்சினார்க்கினியர் , வேற்றுமை உருபை ஈற்றிலே கொண்ட சொற்கள் எவ்வாறு புணரும் என்று சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறார்! :-
 
நம்பியை + கொணர்ந்தான் = நம்பியை கொணர்ந்தான் ×
நம்பியை + கொணர்ந்தான் = நம்பியைக் கொணர்ந்தான் ( ‘ஐ’ உருபோடு ஒற்று சேர்ந்தது)
 
மண்ணினை + கொணர்ந்தான் = மண்ணினை கொணர்ந்தான் ×
மண்ணினை + கொணர்ந்தான் = மண்ணினைக் கொணர்ந்தான் (‘ஐ’ உருபோடு ஒற்று சேர்ந்தது)
 
கொற்றனை + கொணர்ந்தான் = கொற்றனை கொணர்ந்தான் ×
கொற்றனை + கொணர்ந்தான் = கொற்றனைக் கொணர்ந்தான் (‘ஐ’ உருபோடு ஒற்று சேர்ந்தது)
 
மலையொடு + பொருதது = மலையொடுப் பொருதது ×
மலையொடு + பொருதது = மலையொடு பொருதது (‘ஒடு’ உருபுடன் இயல்பான புணர்ச்சி)
 
மத்திகையால் + புடைத்தான் = மத்திகையால் புடைத்தான் ×
மத்திகையால் + புடைத்தான் = மத்திகையாற் புடைத்தான் (‘ஆல்’ உருபின் ஈறாகிய ‘ல்’ , ‘ற்’ ஆகத்  திரிந்தது)
 
சாத்தற்கு + கொடுத்தான் = சாத்தற்கு கொடுத்தான் ×
சாத்தற்கு + கொடுத்தான் = சாத்தற்குக் கொடுத்தான் (‘கு’ உருபுடன் ஒற்று சேர்ந்தது)
 
ஊர்க்கு + சென்றான் = ஊர்க்கு சென்றான் ×
ஊர்க்கு + சென்றான் = ஊர்க்குச் சென்றான் (‘கு’ உருபுடன் ஒற்று சேர்ந்தது)
 
காக்கையின் + கரிது = காக்கையின் கரிது ×
காக்கையின் + கரிது = காக்கையிற் கரிது (‘இன்’ உருபின் ஈறாகிய ‘ன்’ , ‘ற்’ ஆகத்  திரிந்தது)
 
காக்கையது + பலி = காக்கையதுப் பலி ×
காக்கையது + பலி = காக்கையது பலி (‘அது ’ உருபுடன் இயல்பான புணர்ச்சி)
 
மடியுள் + பழுக்காய் = மடியுள் பழுக்காய் ×
மடியுள் + பழுக்காய் = மடியுட் பழுக்காய் (‘உள்’ உருபின் ஈறாகிய ‘ள்’ , ‘ட்’ ஆகத்  திரிந்தது)
  (பழுக்காய் – பழுத்த பாக்கு)
 
தடாவினுள் + கொண்டான் = தடாவினுள் கொண்டான் ×
தடாவினுள் + கொண்டான் = தடாவினுட் கொண்டான் ( ‘உள்’ உருபின் ஈறாகிய ‘ள்’ , ‘ட்’ ஆகத்  திரிந்தது)
  (தடா – பானை )
 
       தொல்காப்பிய எழுத்ததிகாரத்து ஆறாவது இயலாகிய  உருபியல் இத்துடன் முடிகிறது !
 

                                        ***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 30 of 84 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 57 ... 84  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum