ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கதைகள்

4 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ரமணியின் கதைகள் - Page 2 Empty ரமணியின் கதைகள்

Post by ரமணி Thu Nov 01, 2012 10:04 am

First topic message reminder :

லக்கியத்தைப் பொறுத்தவரை "முயன்றால் முடியாததும் உண்டோ?" என்பது கல்லூரி நாட்களில் என் குறிக்கோளாக இருந்ததால் என்னுடைய இலக்கிய முயற்சிகள் ஆங்கிலக் கவிதைகளில் ஆரம்பித்துத் தமிழ்க் கதைகளில் தலைகாட்டியது. நான் க்ருஹஸ்தனான புதிதில் ஐந்து சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு முழு நாவல் எழுதினேன். இவற்றில் மூன்று சிறுகதைகள் மட்டும் பிரசுரமாயின: ஒன்று நான் எழுதிய முதல் கதை; இன்னொன்று ஒரு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பகிர்ந்துகோண்ட கதை. கவிதைகளைப் படிப்பதுடன் நிறுத்திக்கொண்டேன்!

சுஜாதா, தி.ஜ.ரா போன்ற ஆசிரியர்களை நிறையப் படித்ததாலும், ஆங்கில நாவல்களைப் படித்ததாலும் கதை உத்திகளை அறிந்துகொண்டேன். எனினும் பின்னர் ஏற்பட்ட கணிணித்துறை ஈடுபாடுகளில் கதைகள் எழுதுவது பிரசவ வேதனையாக இருந்ததால் கதைகள் எழுத முனைவதையும், படிப்பதையும் அறவே விட்டுவிட்டேன். வயதில் அரை செஞ்சுரி அடித்ததும், கடந்த பத்து வருடங்களுக்குமேல் மனம் ஆன்மீகத்துறையில் அலைபாய்ந்து தத்தளிக்கவே, லௌகிகப் படிப்பு வகைகளைக் குறைத்துக்கொண்டுவிட்டேன்.

கடந்த சிலநாட்களாக இந்த வலைதளத்தில் படித்த இலக்கிய முயற்சிகளைப்பார்த்து என் பழைய கதைகளை பகிர்ந்துகொண்டால் என்ன என்று தோன்றியது. அதனால்தான் இந்தத்தொடர் (ஜாக்கிரதை)! வாசகர்களும் தங்கள் எண்ணங்களையும் விமரிசனங்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.

இக்கதைகளின் உரிமை ஆசிரியருக்கே என்றாலும் இவற்றைப் பிரதி எடுத்து மற்றவர்களுடன் பிரத்தியேகமாகப் பகிர்ந்துகொள்வதில் தடையில்லை, கதாசிரியரின் பெயர் பிரதிகளில் குறிப்பிடப்படவேண்டும் என்ற ஒரு நிபந்தனையுடன்.

இந்தக் கதைகள் என் வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. தொடர்வது நான் எழுதிப் பிரசுமான முதல் கதை. படிக்க வசதியாக கதைகளைத் தவணை முறையில் தருகிறேன்

*** *** ***.
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down


ரமணியின் கதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கதைகள்

Post by ரமணி Tue Nov 06, 2012 3:48 pm

"சார், இந்த மெமோவை வடிவேலு கையெழுத்து போட்டு வாங்கறதுக்கு முன்ன, அவர் செஞ்ச தப்பு என்னன்னு கொஞ்சம் விளக்கி சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்" என்றான் யூ.செ. மாணிக்கம்.

"மிஸ்டர் மாணிக்கம், நீங்க இப்படி எதுக்கெடுத்தாலும் ’டிஃபென்ட்’ பண்ணித்தான் இன்னிக்கு இந்த நிலைமையில இருக்கு. யாரா இருந்தாலும் ஒரு காரியத்தை ஒப்படைச்சா பொறுப்பா செய்ய வேணாம்? வடிவேலு அஜாக்ரதையா அந்தக் கழுதையை ’ரெகார்ட் ரூம்’ல விட்டு பூட்டிட்டுபோனதால இன்னிக்கு--"

"எக்ச்சுஸ் மி சார், ஒரு நிமிஷம்! வடிவேலுதான் அந்தக் கழுதையை ’ரெகார்ட் ரூம்’ல விட்டார்னு எப்படிச் சொறீங்க?"

"என்னய்யா இது பேத்தல்? ’ரெகார்ட் ரூமை’ப் பூட்டறச்ச உள்ளே கழுதை இருக்கறதுகூடவா தெரியாது ஒரு மனுஷனுக்கு? தாழ்வாரத்தில கட்டியிருந்த அந்தக் கழுதை எப்படி ’ரெகார்ட் ரூம்’குள்ள நுழைஞ்சது? அப்படியே நுழைஞ்சிருஞ்சாலும் ஏன் அதை அவர் பாக்கலை? செய்யறதையும் செஞ்சிட்டு இப்ப நான் வரதுக்குள்ள கழுதையை அவுத்து வெளியில விட்டுட்டாரு! கார்த்தால எங்க வீட்டு முன்னால ஒரே ஆர்ப்பாட்டம்! இப்ப நான் இந்த ஜனங்களுக்கு என்ன பதில் சொல்றது? நம்ம ’ஹெட் ஆஃபீஸ்’க்கு என்ன பதில் சொல்றது? ’ஐ யாம் ஸாரி மிஸ்டர் மாணிக்கம். ஐ கேன்னாட் டாலரேட் சச் இன்டிஸிப்ளின் இன் மை ஆஃபீஸ் எனி லாங்கர்!"

"ஸோ, வடிவேலுதான் கழுதையை ’ரெகார்ட் ரூம்’ல விட்டுப் பூட்டிட்டுப் போய்ட்டார், வடிவேலுதான் கழுதையை அவுத்து வெளியில விட்டுட்டார்னு சொல்றீங்க?"

"சொல்றது என்ன, அதானே உண்மை!"

"உண்மைன்னு நீங்க சொல்றீங்க சார். நாங்க சொல்றதுலயும் கொஞ்சம் உண்மை இருக்கலாமில்ல?"

"’வாட் நான்சென்ஸ்!’ நீங்க என்ன சொல்லப் போறீங்க புதுசா?"

"இன்னும் ஒருமணி நேரத்தில எங்க உதவிப் பொதுச்செயலாளர் வந்ததும் சொல்றோம் சார். இப்போதைக்கு நான் ஒரே ஒரு விஷயம்தான் சொல்ல விரும்பறேன். காலையில ஏழு மணிக்கு வடிவேலு உங்ககிட்ட சாவி வாங்கிட்டுப்போனதுக்கு அப்பறம் இப்பதான் பாங்க் உள்ளாற நுழையறார். ஊருக்குப்போன ஸ்வீப்பரம்மா இன்னும் வரலைபோல. ஏன்னா அவங்க வடிவேலுகிட்ட சாவி வாங்கிக்க வரலை. தவிர, ’ரெகார்ட் ரூம்’ சாவி உஙகிட்டேயும் ஒண்ணு இருக்குங்கற உண்மையை ஞாபகம் வெச்சுக்குவோம் சார்."

"வாட்டுயு மீன்?"

இந்த சமயத்தில் "குட் மார்னிங் மிஸ்டர் ராமானுஜம்!" என்று ஒருவர் அறைக்குள் நுழைய, அவரை ஒருகணம் முறத்துப் பார்த்து அடையாளம் தெரிந்துகொண்ட ராமானுஜத்துக்குத் தலை சுற்றியது. ஹெட் ஆஃபீஸ் இன்ஸ்பெக்*ஷன்!

*** *** ***
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கதைகள்

Post by ரமணி Tue Nov 06, 2012 3:49 pm

(இறுதிப் பகுதி)

அடுத்த சில நாட்கள் அங்கு ஏற்பட்ட பிரளயத்தை இந்தச் சிறுகதையில் வர்ணிக்கமுடியாது. தொழிற் சங்கம், நிர்வாகம் மற்றும் பொதுஜனம் இவற்றின் மும்முனைத் தாக்குதலில் ராமானுஜம் துணை யாருமின்றித் தனியே போரிட முயன்று தோற்றார்.

அவர் மலைபோல் நம்பியிருந்த சட்டம், ஒழுங்கு, நியாயம், உண்மை முதலிய துணைவர்கள் ஒவ்வொருவராகப் புறமுதுகிட்டு ஓடி ஒளிந்துகொள்ள, பாரதப் போரின் கர்ணன்போல் அவர் ஒவ்வொரு கணையாக மார்பில் ஏற்று, வாய்மை எப்படியும் இறுதியில் வென்றுவிடும் என்ற நம்பிக்கையுடன் போராடி, முடிவில் தன்னைக் கல்கி அவதாரமாக நினத்துக்கொண்டு விஸ்வரூபம் எடுக்க முனைந்து தோற்று, ஓர் அரக்கனாகக் கணிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டார்.

ஓர் ஏழைத் தொழிலாளியின் கழுதையைப் பறிமுதல் செய்யப் பரிந்துரைத்து செயல்பட்டது மக்கள் நலனுக்கெதிரான மகத்தான குற்றமாகக் கருதப்பட்டது.

அந்தப் பறிமுதல் செய்யப்பட்ட கழுதையையும் சரிவரப் பாதுகாக்கமுடியாமல் இழந்தது அவருடைய அஜாக்ரதையைக் காட்டியது. கடைசியில் கழுதை கிடைத்தும் தொழிலாளி ராஜுவிடம் சல்லிக்காசு பெயராதது அவருடைய திறமையின்மையைக் காட்டியது.

’ரெகார்ட் ரூமில்’ கழுதை புகுந்து நாசம் விளைவித்ததற்கான பொறுப்பு சரிவர நிரூபிக்கப்படாமல் அவர் தலையில் விழுந்தது. வங்கியின் முக்கிய தஸ்தாவேஜ்களை சரிவர்ப் பாதுகாக்கமுடியாமல் இழக்க நேரிட்டது நிர்வாகத்தால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது.

தொழிற்சங்கத் தலைவர்கள் குழப்பிய குட்டையில் அவர்மீது கணக்குகள் சரிவர நேர்செய்யப் படவில்லை, நேர்செய்வதற்கான வவுச்சர்களை இழந்தது போன்ற ஆதாரங்களின்பேரில் கிரிமினல் குற்றங்கள் சுமத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, அதிகாரிகள் சங்கம் தலையிட்டு அத்தகைய நடவடிக்கைகளைத் தவிர்த்து, அவர் நாலைந்து நாட்கள் மற்ற அதிகாரிகளின் மேற்பார்வையில் இரவும் பகலும் பாடுபட்டுக் கணக்குகளை நேர்செய்து கொடுத்து ஒருவழியாகத் தப்பினார்.

கடன்களைப் பட்டுவாடா செய்வதில் காட்டப்படவேண்டிய வேகத்தை அவற்றைப் பராமரிப்பதில் காட்டாதிருப்பது விவேகம் என்ற கசப்பான உண்மையை விழுங்கமுடியாமல், ராமானுஜம் அந்த ஊரிலிருந்து மற்றொரு குக்கிராமத்துக்கு மாற்றப்பட்டபோது, தன் ஆறுமாத சர்வீஸை விடுமுறையாக மாற்றிக்கொண்டு முன்னதாகவே ஓய்வுபெற்றார்.

*** *** ***
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கதைகள்

Post by ரமணி Sun Nov 11, 2012 7:58 am

முகம் தெரியாப் பகைவர்கள்
ரமணி
(இதயம் பேசுகிறது, 13 Mar 1988)

முரளிதரன் ஒரு நெடிய பெருமூச்சுடன் எழுந்துகொண்டான். கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். பேண்ட்டின் பின்புறம் படிந்திருந்த உலர்ந்த புல் துணுக்குகளைத் தட்டிவிட்டான்.

வலது கையில் கட்டியிருந்த டிஜிடல் கடிகாரத்தில் அவன் எப்போதோ அமைத்திருந்த அலாரம் ’கீங்க்கி...கீங்க்கி...’ என்று சிணுங்கியது.

"எழுந்திரு மோகனா! மணி ஆறே-காலாச்சு, போலாம். அப்பா வேற ஊர்லேர்ந்து வந்திருக்கார்."

கைகளைத் தலைக்கடியில் முட்டுக்கொடுத்து புல்தரையில் மல்லாக்கப் படுத்தபடி செக்கர் வானத்து விந்தைகளை ரசித்துக்கொண்டிருந்த மோகனா அவனை நோக்கிக் கைகளை நீட்டினாள்.

அவன் அவள் கைகளை வளையல்களுடன் பற்றி இழுத்தபோது மோகனா விலுக்கென்று எழுந்து உட்கார்ந்து தரையில் மல்லிகைப் பூக்கள் உதிர, புறங்கையால் நெற்றியில் விழுந்த குழல்களை சரிசெய்துகொண்டு, "எங்க இந்திரா?" என்றாள்.

*** *** ***

"காடி தஸ்-பந்த்ரா மினிட் மே ரவானா ஹோகி" (வண்டி பத்து-பதினஞ்சு நிமிஷத்தில் கிளம்பும்) என்றான் எதிரில் இருந்தவன்.

அவதார் சிங் தலையாட்டி நன்றி கூறிவிட்டு அந்த பஸ்ஸில் ஏறினான். பஸ் ஏறக்குறைய காலியாக இருக்க, கவுன்ட்டரில் சீக்கிய கண்டக்டர் ஒருவர் டிக்கெட் வழங்கிக் கொண்டிருந்தார்.

நுழைந்ததும் வலப்புறம் காலியாக இருந்த சீட்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சன்னலோரம் அமர்ந்தான்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் அவன் ஓர் ஆங்கிலப் பத்திரிகையை தன் சீட்டில் வைத்துவிட்டு பேண்ட் பைகளில் கைவிட்டபடி தோளில் ஜோல்னாப்பை ஊசலாட கீழிறங்கியபோது அவன் அமர்ந்திருந்த சீட்டின் அடியில் புத்தம் புதியதொரு டிரான்சிஸ்டர் ’மறதியாக’ விடப்பட்டிருந்தது.

*** *** ***

அப்போதுதான் குழந்தையின் ஞாபகம் வர அவர்கள் துணுக்குற்று நாலா திசைகளிலும் பார்த்தபோது கொஞ்ச தூரத்தில் ஒரு மரத்தின் பின்னால் இருந்து குரல் கேட்டது.

"டாடி, லுக் ஹியர்!"

"இந்து, கமான் நேரமாச்சு. இருட்டறதுக்குள்ள வீட்டுக்குப் போகலாம்."

அவள் குரல் வந்த திசையை நோக்கி நடந்தான்.

"இதப் பாருங்க டாடி, வொன்டர்ஃபுல்!" என்றபடி குழந்தை ஒரு மரத்தின் பின்னிருந்து வெளிப்பட்டாள்.

"ஏய், என்னது கைல டிரான்சிஸ்டர்?"

"இந்த இடத்ல புல்தரைல கிடந்தது டாடி! புதுசு! யார்தோ தெரியல, பாவம்!"

*** *** ***

தனக்குக் கொடுக்கப்பட்ட ஐந்து டிரான்சிஸ்டர் பெட்டிகளையும் ஒரு வழியாக நகரின் முக்கியமான, ஜனசந்தடி மிகுந்த இடங்களில் புறக்கணித்துவிட்ட நிம்மதியுடன் அவதார் சிங் சாலையில் தன் யெஸ்டி பைக் சீராக படபடக்க வந்துகொண்டிருந்தான்.

பின்னால் ஒரு மாருதி காரின் கொம்பொலி கேட்க பைக்கின் வலப்புறக் கண்ணாடியில் பார்த்தபடி சாலை ஒரம் ஒதுங்கியவன் இந்த ஐந்து மாத காலத்தில் தன் வாழ்க்கை எவ்வளவு தூரம் மாறிவிட்டது என்று நினைத்துக்கொண்டான்.

கடந்த நவம்பர் மாதம் டில்லியை ஆட்டிவைத்த சீக்கிய எதிர்ப்புக் கலவரங்களில் அநியாயமாகத் தாக்குண்டு உடலும் மனமும் சிதைந்து ஏறத்தாழ உயிரிழந்தவன் இறுதியில் நெருங்கிய நண்பனால் காப்பாற்றப்பட்டு இன்று உடல் தேறி மனம் பாறையாக இறுகி ஒரு ஃபீனிக்ஸ் பறவையாக மறுபிறவி எடுத்து எதற்கும் துணிந்தவனாக, பயங்கரவாதிகளின் தற்கொலைப்படையில் ஓர் உறுப்பினனாகத் திகழ்வது குறித்துப் பெருமை கொண்டான்.

சீக்கிய மதத்தையும் இனத்தையும் காக்க அவன் தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தான். யாரோ இரண்டு கொடியவர்கள் செய்துவிட்ட துரோகச் செயலுக்கு ஒரு சமூகத்தையே பொறுப்பாக்கி ஒரு பாவமும் அறியாத ஏராளமான சீக்கிய மக்களை அநியாயமாகக் கொன்று குவித்ததற்கு அவனுடைய முகம் தெரியாப் பகைவர்கள் பதில்கூறியே ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டபோது அவன் இதழ்களில் ஒரு குரூரப் புன்னகை அரும்பியது.

கூடவே மதம் என்பது எவ்வளவு ஆபத்தான, இருபுறமும் கூரான ஆயுதம் என்ற எண்ணம் எழுந்தது. அதனால்தான் என்னவோ சயன்ஸ் ஃபிக்*ஷன் கதைகள் வருணிக்கும் எதிர்கால உலகங்களில் மதம் முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஒன்றாக விளங்குகிறது என்று தனக்குள் அனுமானித்துக்கொண்டான்.

அந்தக் கருப்பு நவம்பர் கலவரங்களில் அவன் தன் தொழிலையும் குடும்பத்தையும் உறவினர்களையும் ஒருசேர இழந்து அவனது எதிர்காலக் கனவுகள் குரூரமாகக் கலைக்கப்பட்டுவிட, அமைதியாக ஓடிக்கொண்டிருந்த அவனது தனிமனித, சமூக வாழ்வில் உணர்ச்சிகள் கொந்தளித்துப் பெருகி இன்று அவனை ஒரு காட்டாறாக மாற்றிவிட, இந்த சமூகத்தில் வாழும் சீக்கியர் அல்லாத ஒவ்வொரு மனிதனையும் அவனது நேரடிப் பகைவனாகக் கருதுவதற்கும் அவன் தயாராக இருந்தான்.

ஒரே ஒரு மனிதனைத் தவிர.

அன்று விதியின் கரங்களில் இருந்து அவனை விடுவித்த அந்த ஒரே நண்பனைத் தவிர.

"குட் ஹெவன்ஸ், ஐ ஹாவ் நாட் வார்ன்ட் ஹிம்!" என்று முனகியவன், டெலிஃபோன் பூத் ஒன்று கண்ணில்பட, வண்டியை நிறுத்திவிட்டு முரளிதரன் வீட்டு எண்களை சுழற்றத் தொடங்கினான்.

*** *** ***
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கதைகள்

Post by ரமணி Sun Nov 11, 2012 7:20 pm

முரளிதரன் அந்த டிரான்சிஸ்டர் ரேடியோவை வாங்கிக்கொண்டான். பளிச்சென்று புதிதாக இருந்தது. இடப்புறம் மைக்ரோஃபோன் வரிகள் மென்மையாகத் தெரிய வலப்புறம் வால்யூம் குமிழ் அருகில் ’ஸோபர்’ என்ற பெயர் தாங்கியிருந்தது.

பார்க்க ஜப்பான் செட் போலிருக்கு என்று நினைத்துக்கொண்டான். கூடவே சென்னையிலிருந்து அன்று காலை வந்திறங்கிய அப்பாவின் ஞாபகம் வந்தது.

மோகனாவின் கேள்விகள் கவனத்தைத் திசைதிருப்ப, அவளுக்கு சுருக்கமாக விஷயத்தை விளக்கியபடி அவன் தன் ஸ்கூட்டரைக் கிளப்பினான்.

"அந்த டிரான்சிஸ்டரை நான் வெச்சுக்கறேன் டாடி! குடுங்க பாக்கலாம். வீட்லபோய்த்தான் திருகுவேன், ப்ராமிஸ்!" என்றாள் இந்திரா.

மௌனமாகத் தலையாட்டிவிட்டு டிரான்சிஸ்டர் இருந்த அந்த வலைப்பையைக் குழந்தையிடம் கொடுத்தபோது அந்த சைஸிற்கு டிரான்சிஸ்டர் கொஞ்சம் கனமாகப் படுவதாக நினைத்துக்கொண்டான். மேலும் யோசிக்க நேரமின்றி, அவர்கள் பின்னால் உட்கார்ந்ததும் அவன் கியரை நியூட்டரிலிருந்து விடுவித்து வண்டியைக் கிளப்பி சாலையில் விரைந்த மற்ற வாகனங்களுடன் ஐக்கியமானான்.

*** *** ***

"முர்லி பாஹர் கயா ஹ க்யா? ஐ’ம் அவதார் அங்கிள்... கைசே ஹை ஆப்? யூ ஆர் எக்ஸ்பெக்டிங் ஹிம் ரைட் நௌ? அச்சா, ஐ’ல் கம் அரௌன்ட் எய்ட்." (முர்லி வெளியே போயிருக்கிறானா? நான் அவதார் அங்கிள்... நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? அவனை இன்னேரம் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? நல்லது, நான் எட்டு மணிக்கு வருகிறேன்.)

அவதார் சிங் மீண்டும் பைக்கைக் கிளப்ப முயன்றபோது சைரன் ஒலிக்க ஒரு போலீஸ் ஜீப் அவனைக் கடந்து சென்றது. தொடர்ந்து நகர பஸ் ஒன்றும் சில கார்களும் ஒரு மாருதி வேனும் விரைந்தன.

பைக்கின் வலப்புறம் கண்ணாடியில் தன் முகத்தை ஒருதரம் பார்த்துக்கொண்டான். அளவாக வெட்டிவிடப்பட்டிருந்த கேசத்தை ஹெல்மெட் மறைத்திருக்க முகம் முழுவதும் மழமழவென்று ஷேவ் செய்துகொண்டு சீக்கியப் புனித வஸ்துக்களான கேசம், கங்கா, கச்சா, கரா, கிர்பன் அனைத்தையும் துறந்து, முரளியின் வார்த்தைகளில் ஒரு ’டிப்பிகல் மத்ராஸி ப்ராமின் லட்கா’வாகக் காட்சியளித்தான்.

ஆம்புலன்ஸ் ஒன்று அலறியபடி விரைய பின்னால் மணியடித்தபடி ஒரு தீயணைப்பு வாகனமும் தொடர்ந்து மற்றொரு போலீஸ் ஜீப்பும் சென்றன.

வழிவிட்டு ஒதுங்கிய நீளமான ட்ரக் ஒன்று ’தம்’ பிடித்து சாலையின் நடுவுக்கு நெளிந்து சோம்பேறித்தனமாக ஊர்ந்துகொண்டிருக்க, அவர்களது திட்ட முதல்படி வெற்றியில் மகிழ்ந்து அவன் உற்சாகமாக பைக்கை ஓசையுடன் கிளப்பி வேகம் பிடிக்க அந்த எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது.

ஸ்கூட்டர் ஒன்று அவனைக் கடந்து விரைந்து விடாப்பிடியாக ஹார்ன் விர்ரித்து அந்த நீளமான ட்ரக்கின் வலப்புறம் கடக்க முயன்றது.

அவதார் சிங் அவநம்பிக்கையுடன் பார்த்தான். ஸ்கூட்டரின் பின்சீட்டில் தாயின் மடியில் அமர்ந்திருந்த ஐந்து வயதுக் குழந்தை ஒன்று தன் மடியில் ஒரு வலைப்பையை வைத்துக்கொண்டு அதனுள்ளிருந்த டிரான்சிஸ்டர் குமிழ்களை ரகசியமாக ஆராய்ந்து கொண்டிருந்தது இவ்வளவு தூரத்திலிருந்தும் தெளிவாகத் தெரிந்தது.

அவன் தன் பைக்கின் வேகத்தை அதிகரித்து அவர்களுக்கு இடையே இருந்த தூரத்தைக் குறைக்க முற்பட்டபோது, அது முரளிதரன்தான் என்று திகிலுடன் உதயமாக, மேலும் பைக்கின் வேகத்தை அதிகரிக்க முயன்றபோது இடப்புறம் ஒரு சந்தில் இருந்து திடீரென்று வெளிப்பட்ட போலீஸ் ஜீப் ஒன்று சைரன் ஒலிக்க இடையில் நுழைந்துகொள்ள, ஸ்கூட்டர் அவன் பார்வையில் இருந்து மறைந்துபோனது.

அடுத்த சில வினாடிகள் அவதார் சிங் தன் தலைக்குள் வெற்றிடம் பாய்ந்து மரத்துப் போவதை உணர்ந்து முழுமூச்சுடன் பைக்கின் வேகத்தை மேன்மேலும் அதிகரித்து இடைவிடாது ஹார்ன் அடித்து ஒவ்வொரு வாகனமாகக் கடந்தபோது அந்த போலீஸ் ஜீப்பும் பிடிவாதமாகக் குறுக்கிட்டு முன்னால் செல்ல, பின்னால் ஒரு ஆம்புலன்ஸின் சங்கொலி கேட்க, அவன் கவலையுடன் பார்த்தபடி விரைய, முன்னால் கொஞ்ச தூரத்தில் சாலை சிணுங்கித் திரும்பியபோது திருப்பத்தில் அந்த ஸ்கூட்டர் தென்பட்டது.

*** *** ***
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கதைகள் - Page 2 Empty ரமணியின் கதைகள்

Post by ரமணி Mon Nov 12, 2012 12:33 am

(இறுதிப் பகுதி)

யாரோ தன்னை பெயர்சொல்லி உரக்கக் கூப்பிடுவதைக் கேட்ட முரளிதரன் வண்டியின் வேகத்தைக் குறைத்து திரும்பிப் பார்த்தபோது அவதார் சிங் கண்ணில்பட, சட்டென்று ப்ரேக்கை அழுத்தினான்.

மறுகணம் பின்சீட் பக்கம் எழுந்த பயங்கர ஒலியில் தன்னைத் தாக்கியது எது என்று உணர்வதற்குள் அவன் தூக்கி எறியப்பட்டு முதுகெல்லாம் ரத்த விளாறாகி எலும்புகள் நொறுங்க விழுந்தபோது, அவன் நண்பன் அவதார் கைகளால் முகத்தைப் பற்றிக்கொள்வதும் அவனது பைக் தடுமாறுவதும் கண்களில் பளிச்சிட, ’காட், ஹி இஸ் கோயிங் டு டை!’ என்று பொருத்தமில்லாமல் நினைத்தவன் அந்த நினைப்பு முடிவதற்குள் முடிந்துபோனான்.

முரளிதரனின் ப்ரேக் தோற்றுவித்த குலுக்கலில் குழந்தை இந்திராவின் விரல்கள் அந்த டிரான்சிஸ்டர் குமிழை வலம்புரித்துவிட, உள்ளிருந்த வெடிகுண்டின் டெடனேட்டர் பின்புறம் அமைந்த ஒன்பது வோல்ட் பாட்டரியுடன் இணைப்புப் பெற்று மின்பொறிகளை உதிர்க்க, சுற்றியிருந்த இருநூறு கிராம் வெடிமருந்து பற்றிக்கொண்டு ராட்சத ஆற்றலுடன் விரிவடைந்து அழுத்தத்தைப் பலமடங்கு அதிகரிக்க, குண்டின் வெளிஓடு சுக்குநூறாகி சுற்றிலும் பறந்து கணைகளாகத் தாக்க, வெடியோசையைத் தொடர்ந்த புகைமண்டலம் தெளிவானபோது பின்சீட்டில் இருந்த இருவரும் உருத்தெரியாமல் சிதைந்து கருகியிருந்தனர்.

அவதார் சிங் தலைக்குள் இன்னொரு குண்டு வெடித்து அவன் கைகள் தாமாக முகத்தைப் பொத்திக்கொள்ள, அந்த யெஸ்டி பைக் தத்தித் தடுமாறி சில அடிகள் முன்னேறி பின்னால் அந்த ட்ரக் மோத, அவன் தூக்கி எறியப்பட்டு பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்து மல்லாந்தான்.

ஹெல்மெட் காரணமாக இன்னமும் உயிரோடு இருந்தவன் போலீஸ் அதிகாரி ஒருவரால் பொறுக்கப்பட்டு அவரது முதல் கேள்விக்கு பதிலாகத் தன் பெயரைக் கூறியவன், "எதோ டிரான்சிஸ்டர்னு கத்தினையே, என்னய்யா அது?" என்ற அடுத்த கேள்விக்கு பதில்கூற முயன்று நினைவிழந்தான்.

*** *** ***

ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டபோது அவனுக்கு நினைவு திரும்பியது. உடல் எங்கும் ரத்தக் காயங்களும் கைகால்களில் எலும்பு முறிவுகளும் திடீரென்று ஏராளமாக வலிக்கத் தொடங்க, விழியோரம் அந்த போலீஸ் அதிகாரி சன்னல் பக்கமாக அமர்ந்திருப்பதும், அருகில் இரண்டு பெரிய ஒரு சிறிய உடல்கள் வெள்ளைத் துணியால் முழுதும் மூடப்பட்டு அவனுடன் பயணம் செய்வதும் தெரிந்தது.

நடந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர மனம் வெதும்பி, "ஐ ஹாவ் கில்ட் முர்லி! ஐ ஹாவ் கில்ட் தெம் ஆல்!" என்று மௌனமாகப் புலம்பினான்.

அந்த அதீதமான சோக வெள்ளம் அவன் நினைவுகளில் பிரவகித்து உணர்வுகளில் தளும்பிக் கண்களில் தாரையாகப் பெருக்கெடுக்க, அந்த வெள்ளத்தில் அவனுடைய விபரீத ஆசைகள், இன உணர்வுகள், காலிஸ்தான் கனவுகள் கரைந்துவிட, மின்சாரம் துண்டிக்கப்பட்ட கூறை விசிறியாக அவன் உடல் உணர்வுகள் செயல் இழக்கத் தொடங்க, அவனுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட வாழ்வின் கடைசிக் கணங்கள் மணிக்குமிழில் வடியத் தொடங்க, பிறந்தும் பிறவாத இறந்தும் இறவாத அந்த சோக சுக நிலையில் எண்ணங்கள் பிம்பங்களாக உருப்பெற்று அவன் முன் காற்றில் மிதந்தன.

’யூ லுக் லைக்க டிப்பிகல் மத்ராஸி ப்ராமின் லட்கா யார்!’

’எ வெரி ஸ்வீட் கர்ல் முர்லி, யுவர் இந்திரா. ஒரு இருவது வருஷம் முன்னாடி அவள் பிறந்திருந்தா ஐ வுட் ஹாவ் மேரீட் ஹர்!... இந்திரா கௌர்!... அச்சா லக்தா ஹ ந ஏ நாம்?’ (இந்தப் பெயர் நன்றாக இருக்கிறதல்லவா?)

பின்னால் ஆரவாரம் கேட்கத் திரும்பியபோது ஒரு கூட்டம் ஆயுதங்களுடன் அவன்மேல் பாய்ந்தது. அடிகளின் மழையில் அவன் மரவட்டையாகச் சுருண்டு டர்பன் கிழிய முகம் எங்கும் ரத்தம் கசிய மரக்கட்டையாகச் சாய்ந்தபோது ஸ்கூட்டர் ஒன்று ஓசையின்றி அருகில் வந்து நின்றது.

அவன் மௌனமாக முரளியின் கைகளில் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தான். முரளி அவன் முதுகை வருடியபடி, ’ஐயாம் ஸோ ஸாரி அபௌட் யுவர் பேரண்ட்ஸ் அவதார்! அன்ட் அபௌட் யுவர் ந்யூபைல் ஸிஸ்டர்! ஒரு மதத்தோட பெயரால மனிதர்களை வேட்டையாடுவதை விடக் காட்டுமிராண்டித் தனமான செயல் இல்லை. இந்த நாட்லயா காந்தி பிறந்தார்? வி ஆர் எ ஃபர்ஸேக்கன் லாட், அவதார்! விமோசனமே கிடையாது’ என்றான்.

அவன் அந்த ஐந்து டிரான்சிஸ்டர்களையும் திறமையுடன் ஒரு பார்க், ஒரு ஹோட்டல், ஒரு வயல்வெளி, ஒரு பாங்க் மற்றும் ஒரு பஸ்ஸில் புறக்கணித்துவிட்டு வெற்றியுடன் பைக்கில் ஊர்ந்துகொண்டிருந்தபோது நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது இப்போது வெட்கமாகவும் வேதனையாகவும் அவமானமாகவும் இருந்தது.

"ஸேம் டிரான்சிஸ்டர் தட் கில்ட் ஹிம்" என்று அவன் ஈன ஸ்வரத்தில் முனகியபோது முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டு, "வாட் டிரான்சிஸ்டர் யங் பாய்? கௌன் பனாயா ஓ சப் கோலியான், போலோ" (யார் அந்த குண்டுகளைத் தயாரித்தது, சொல்லு) என்ற கட்டைக்குரல் ஒன்று காதருகில் கேட்டது.

"ப்ளீஸ், என்னத் தனியா விடுங்களேன்! நான் நிம்மதியா, அமைதியா சாகணும்" என்று கண்களை மூடிக்கொண்டான்.

"காந்திய வழிகள்ல எதும் பயன் கிடையாது" என்றது அந்த கட்டைக்குரல் ஹிந்தியில்.

ஒரு வலிய கரம் அவனது ஜனன விதைகளைப் பற்றியது. முதலில் மெதுவாகவும் போகப்போக அழுத்தமாகவும் பிசையத் தொடங்கியது.

"இப்ப சொல்லு! யார் கொடுத்தது அந்த டிரான்சிஸ்டர்?"

அவதார் பற்களைக் கடித்துக்கொண்டான். அவனும் முரளியும் அந்தக் கல்லூரியின் பின்புறம் யூரினல்ஸில் இருந்தனர். ’கவர் யுவர் சீஸ் அவதார்! எல்லாத்தயும் நேஷனலைஸ் பண்ற காலம் இது. ஏதாவது பெரிசா பாத்தா நேஷனலைஸ் பண்ணிடுவாங்க!’ என்று முரளி சிரித்தான்.

கலைடாஸ்கோப்பில் காட்சி மாறியது. முரளியும் அவனும் ஹாஸ்டல் அறையில் தலைகீழாக, ஏறக்குறைய நிர்வாணமாக நின்றுகொண்டு உடற்பயிற்சி செய்தவாறே செய்தித்தாள் படித்துக்கொன்டிருந்தனர். திடீரென்று முரளி செய்தித்தாளை விசிறி எறிந்துவிட்டு, "என்னய்யா பெரிய மதம்! தாடி வெச்சா முஸ்லிம், தலப்பா கட்டினா சீக்கியன். தாடிய எடுத்துட்டுப் பட்டையடிச்சா சைவன், நாமம் போட்டா வைஷ்ணவன். சிலுவை போட்டுண்டா கிறிஸ்துவன். அவத்துப்போட்டா எல்லாம் மனுஷன்தானய்யா?" என்றான்.

திடீரென்று எங்கிருந்தோ இரண்டு கவிதை வரிகள் தலைகாட்டின.

"குருநானக் ஷா ஃபக்கீர்
ஹிந்து கா குரு, முஸல்மான்கா பீர்."

சட்டென்று முளைத்தது அந்தக் கேள்வி. ’இறைவன் ஒருவனே என்று கரடியாகக் கத்தும் மதங்கள் யாவும் மனிதன் ஒருவனே என்று ஏன் போதிக்கத் தவறிவிட்டன?’

கால்களிடையே அழுத்தமும் வலியும் அதிகமாக அவன் ஒருகணம் முழுவதும் விழித்துக்கொண்டு தன்னை எதிர்நோக்கியிருந்த போலீஸ் முகத்திடம் ஸ்பஷ்டமான ஹிந்தியில், "அவுத்துப்போட்டா எல்லோரும் மனுஷன்தான்!" என்றான்.

அவர் அவனை நம்பமுடியாமல் பார்த்தார். அவன் கண்கள் மெல்ல மூடிக்கொள்ளத் தலை சாய்ந்து எங்கும் இருள் சூழ்ந்தது.

*** *** ***
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கதைகள்

Post by றினா Mon Nov 12, 2012 12:41 pm

அருமையானதொரு கதை.
வாழ்த்துக்கள்,
நன்றிகள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ரமணியின் கதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கதைகள்

Post by ரமணி Thu Dec 13, 2012 11:45 am

பெண்மையின் அவலங்கள்
ரமணி
(’அமுதசுரபி’ May 1990)
(சிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பகிர்ந்துகொண்ட இரண்டு கதைகளில் ஒன்று)

"மன்னி, உங்களுக்கு அமெரிக்கன் ஸாஃப்ட்வேர் கம்பெனிலர்ந்து லெட்டர் வந்திருக்கு!"

ராதாவின் வார்த்தைகளில் தெறித்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்ள, செருப்பைக்கூடக் கழற்றத் தோன்றாமல் அவசரமாக அந்த ஏர்-மெய்ல் உறையைப் பிரித்தேன். ராதாவும் என்னுடன் சேர்ந்து கடிதத்தின் வரிகளில் கண்களை ஓட்டினாள்.

"...உங்களுடைய ’மைக்ரோ மோஷன் பிக்சர்ஸ்’ பொழுதுபோக்கு சாஃப்ட்வேர் வகைகளில் ஓர் அறுதியான சாதனையாகும். ஒரு சிறிய, பன்னிரண்டு அங்குல கம்ப்யூட்டர் திரையில் நீங்கள் இயக்கியுள்ள முபபரிமாண கார்ட்டூன் பாத்திரங்களும், அவற்றின் வடிவமைப்பும், பின்னணி சூழல்களும் இசையும் வியக்கவைக்கின்றன. எனினும், கதை நிகழ்ச்சிகளையும் உரையாடல்களையும் எழுத்து மூலம் வெளியிடுவது கொஞ்சம் செயற்கையாகவும் மௌனப் படங்கள் போன்றும் இருக்கிறது. பதிலாக, ஒரு வாய்ஸ் சிந்தசைஸர் எவ்வளவு உதவியாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்... "

"மன்னி, உங்களை அமெரிக்காவுக்கு வரச் சொல்லியிருக்கா! ஆறு மாசம் ட்ரெய்னிங், அப்புறம் வேலை வாய்ப்பு! வாவ், கங்கிராட்ஸ் மன்னி", என்றாள் ராதா, எனக்கு முன்பாகவே கடிதத்தை முடித்தபடி.

என்னுடைய ஸாஃப்ட்வேர் படைப்பில் வாய்ஸ் சிந்தசைஸர் உதவியுடன் உரையாடல்களையும் மற்ற எழுத்து வர்ணனைகளையும் இணைக்கத் தேவையான அதிநவீன டெக்னிக்களில் ஆறுமாதகாலப் பயிற்சியும், முன்பணமும், அதன்பின் விரும்பினால் நான் அவர்களுடைய என்டர்டெய்ன்மென்ட் ஸாஃப்ட்வேர் டிவிஷனில் ரிசர்ச் அதிகாரியாகப் பணியாற்ற இரண்டு வருட வேலை வாய்ப்பும் அளிக்க அந்த அமெரிக்கக் கம்பெனி முன்வந்திருந்தது.

அத்துடன் என் படைப்புக்கான சன்மானமும் ராயல்டியும் விரைவில் நிர்ணயிக்கப்டும் என்றும், என் பதில் கண்டு அடுத்த மூன்று மாதத்திற்குள் பயண ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அந்தக் கம்பெனி அறிவித்திருந்தது.

"அம்மா, மன்னி அமெரிக்கா போகப்போறா, இன்னும் மூணே மாசத்திலே!"

ராதாவின் குரல்கேட்டு என் மாமியார் வெளிப்பட்டார்.

நான் சுருக்கமாக விஷயத்தை விளக்கிவிட்டு, அவர் ஆசியுடன் அந்தப் பயணத்தை மேற்கொள்ளப் போவதாகக் கூறியபோது, "என்னடி உளர்றே?" என்றார்.

தொடர்ந்து, "அமெரிக்காவுக் கெல்லாம் ஒரு பொம்மனாட்டி தனியாப் போய்ட்டு வர முடியுமா? உனனை யார் அந்தக் கம்பெனிக்கெல்லாம் உன் படைப்பை அனுப்பச் சொன்னா? சரிசரி, அப்புறம் பேசிக்கலாம். நீ போய்க் கால் அலம்பிண்டு அப்பாவுக்கு காப்பி டிஃபன் பண்ணிக்கொடு. ஏற்கனவே லேட்!" என்றார்.

*** *** ***
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கதைகள்

Post by ரமணி Thu Dec 13, 2012 11:46 am

"நோ சான்ஸ்", என்றார் என் கணவர், இரவு சாப்பாட்டு மேசையில் என் அமெரிக்கப் பயண வாய்ப்பு அலசப்படும்போது.

"முதல்ல நீ என்ன கன்சல்ட் பண்ணாம இந்தக் காரியத்ல இறங்கினதே---"

நான் இடைமறிக்க நேர்ந்தது. "கன்சல்ட் பண்ணலன்னு சொல்ல்தீங்கோ. என்னிக்கு நீங்க என்னுடைய கம்ப்யூட்டர் படைப்புகள்ல அக்கறை காட்டியிருக்கீங்க? கேட்டா, எனக்குத் தெரிஞ்ச ஸாஃப்ட்வேர் பனியன், ஜட்டிதான்னு இளக்காரம் வேற... இந்தப் பாக்கேஜை டெவெலப் பண்ண ஆறு மாசமா எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? கல்ல எறிஞ்சு வெப்போம்னு அந்தக் கம்பெனிக்கு அனுப்ச்சேன். இவ்ளோதூரம் உற்சாகமா பதில் வரும்னு நானே எதிர்பார்க்கலை. திஸ் இஸ் எ லைஃப்டைம் சான்ஸ்; ப்ளீஸ், லெட்’ஸ் நாட் ஸ்கிப் இட்!"

"டோன்ட் பி ஸில்லி, ஹேமா! உனக்கு நம்ம குடும்பம் பத்தி நல்லாத் தெரியும். நம்பர் ஒன், வயசான அப்பா அம்மாவுக்குப் பணிவிடை செய்யறதைத் தவிர உனக்கு வேற எதுவும் முக்கியும் இல்லை. நம்பர் ட்டூ, ராதாவுக்குக் கூடிய சீக்கிரமே கல்யாணம் பண்ணியாகணும். நம்ப ரெண்டுபேர் சம்பளத்ல குடும்பத்தையும் நிர்வகிச்சிட்டு இவ கல்யாணத்துக்கும் சேக்கறதுக்கே தாவு தீந்துரது. இந்த நிலைமைல நான் ஒரு பெரிய ரிஸ்க் எடுக்க முடியாது."

"எனக்கென்ன விஸ்வம் இப்ப கல்யாணத்துக்கு அவசரம்?", என்றாள் ராதா. "நான் இப்பதான் போஸ்ட் கிராஜுவேஷன் பண்றேன். நானும் மன்னி மாதிரி ஒரு நல்ல கம்ப்யூட்டர் கம்பெனில ரிசர்ச் அசிஸ்டன்ட்டா ரெண்டு மூணு வருஷம் வேலை பார்த்துட்டுத்தான் கல்யாணம். எங்க காலத்லயாவது கம்ப்யூட்டர் சயன்ஸ் ஒரு காலேஜ் சப்ஜக்ட்டா இருக்கு. மன்னி’ஸ் ரியலி க்ரேட். எம்.எஸ்ஸி ஃபிஸிக்ஸ்ல அவள் யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட். சின்ன வயசிலர்ந்தே லைஃப்ல ஏதாவது ஒரு சாதனை செய்யணுங்கற உத்வேகம் இருக்கறதா மன்னி அடிக்கடி சொல்லியிருக்கா. அவளோட வாழ்க்கை லட்சியம் இப்ப பூர்த்தியாகற வாய்ப்பு. அதைக் கெடுத்திடாதீங்கோ?"

"காலேஜ் வேற, லைஃப் வேற. என்னக்கேட்டா ஒரு பொண்ணோட லட்சியம் லைஃல ஒரு நல்ல கணவன், குடும்பம் அமையணும், அமைதியா வாழ்க்கை ஓடணும், இவ்வளவோட நிக்கறது நல்லதும்பேன். ஏதோ ஒண்ணு ரெண்டு பேர் காலேஜ்ல எக்ஸ்ட்ரா ப்ரில்லியன்ட்டா இருக்கலாம். அதெல்லாம் வாழ்க்கைல அடிபட்டுப் போய்டும்."

"அந்த் ஒண்ணு ரெண்டு பேர்க்கும் வாழ்க்கை எப்படி அமையறது பார்த்தியா?"

"இவளுக்கென்னடி இப்ப கொறச்சல்?" என்றார் என் மாமியார். "வசதியான வீடு, கைநிறைய சம்பாதிக்கற புருஷன். அனுசரணையான குடும்பம். வேறென்ன வேணும் ஒரு பொண்ணுக்கு, ம்?"

"அமெரிக்கா போற இந்த சான்ஸ் விஸ்வத்துக்கு வந்திருந்தா நாம பேசாம இருப்போமாம்மா? இல்ல எனக்கு வந்தா விடுவேளா? இந்திரா காந்தி பிரதமரா இருந்த நாட்ல ஒரு பொண்ணோட தனிமனித சுதந்திரம் கல்யாணத்தோட நின்னு போவது என்ன நியாயம்?"

"அதிகப் பிரசங்கித்தனமா பேசாதடி! இங்க என்னடி உங்க மன்னிக்கு சுதந்திரத்துக்குக் கொறச்சல்? வேளா வேளைக்கு சாப்பாடு போடலையா, துணிமணி எடுத்துக் கொடுக்கலையா, மாசம் 200 ரூபாய் பாக்கட் மணி தரதில்லையா, வேறென்ன செய்யலை? என்ன பேசற நீ?"

"நீ இப்ப சொன்னதெல்லாம் சுதந்திரம் இல்லைமா; அதெல்லாம் ஒரு பொண்ணோட அத்தியாவசியத் தேவைகள், அவள் புகுந்த வீட்டோட கடமைகள். நான் சொல்ற சுதந்திரம் வந்து, ஒரு கல்யாணமான பொண்ணோட நியாயமான உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து, கூடுமானவரை அவற்றை நிறைவேற்றுவது. மன்னிக்குதான் இந்த வீட்ல ஒரு பத்திரிகை படிக்கவோ, அல்லது டி.வி.ல க்விஸ் பாக்கவோ நேரமோ அல்லது உரிமையோ இருக்கற மாதிரிகூடத் தெரியலையே? ஒவ்வொரு தடவையும் அவள் ஏதாவது படிக்கவோ எழுதவோ கையில் எடுக்கறபோதுதான் நீ அவளுக்கு ஏதாவது வேலை கொடுப்பே!"

மாமியார் முகம் சிவந்தார். "இதப்பாருடி! படிப்பு முக்கியமா, வாழ்க்கை முக்கியமாங்கறதை ஒவ்வொரு பொண்ணும் கல்யாணத்துக்கு முன்னாடியே தீர்மானிச்சுடணும். உனக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். கல்யாணம் ஆயிடுச்சுன்னா குடும்பத்தைப் பத்திய நினைவைத்தவிர எல்லாத்தையும் மூட்டைகட்டி வெச்சுடணும். உங்க மன்னியத் தனியா அமெரிக்கா அனுப்பறதுக்கில்ல. அதுக்காக வேலையையோ சம்பளத்தையோ விட்டுட்டு விஸ்வம் பின்னாடியே போகமுடியாது."

"மன்னிக்கு அமெரிக்கால தங்க இடம் இருக்கேம்மா! அவ சித்தி பையன் இருக்கானே அதே ஃப்ளாரிடால! தவிர அவள் அங்க போறதால இன்னும் கூடத்தானே சம்பாதிக்கப்போறா? ரெண்டு வருஷம்தானே? அப்புறம் இண்டியாலயே போஸ்ட் பண்றதாச் சொல்லியிருக்காளே?"

அதுவரை பேசாமல் இருந்த என் மாமனார், "நான் வேணும்னா ரெண்டு வருஷம் கூடப்போய் இருந்துட்டு வரேன்", என்றார்.

"ஆமாம், நீங்க போறேளாக்கும்! உங்களுக்கு வாசப் படியைத் தாண்டியே ரெண்டு வருஷமாச்சு...". தொடர்ந்து தனக்குள், ’கொஞ்சங்கூட விவஸ்தைகெட்ட மனுஷர்’" என்றார்.

சமையல் அறைப்பக்கம் என் தலை மறைந்ததும் தாழ்ந்த குரலில், "அப்பாவும் பொண்ணும் சேர்ந்து உசிர வாங்காதீங்கோ! எல்லாம் நான் ஒரு காரணத்துக்காகத்தான் சொல்றேன். இதபார் விஸ்வம். கல்யாணமாய் ஒரு வருஷங்கூட ஆகலை. புதுப் பொண்டாட்டியைத் தனியா தூரதேசம் அனுப்சிட்டு ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா நாலு பேர்க்கு பதில் சொல்லமுடியாது. இதுக்குத்தான் அன்னைக்கே சொன்னேன், ’ரொம்பப் படிச்ச பொண்ணுடா, ஒரு தரத்துக்கு ரெண்டு தரம் யோசிச்சிக்கோன்னு.’ எவ்வளவுக் கெவ்வளவு படிப்பும் அழகும் இருக்கோ அவ்வளவுக் கவ்வளவு திமிரும் கூடவே இருக்கே, என்ன செய்யறது? பணம் நிறைய வர்றதுன்னு ஃபாரின் போகமுடியுமா? சினிமால நடிச்சாக் கூடத்தான் பணம் வரும்! எல்லாம் இந்த சம்பாத்யத்ல குப்பை கொட்டினாப் போறும்" என்றார்.

*** *** ***
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கதைகள்

Post by ரமணி Thu Dec 13, 2012 8:20 pm

என் கணவரின் பிடிவாதம் தொடர்ந்தது. என் பிடிவாதமும்தான்! இவர்களுக்கெல்லாம் நான் வெறும் சமையல்காரிதான் என்ற எண்ணம் மேலோங்க, மனதில் வெறுப்பும் கோபமும் சோகமும் வளர்ந்தது. கல்லூரி நாட்களில் என் அசாதாரண ஐக்யூவை வியந்து பலவிதத்திலும் என்னை ஊக்குவித்துத் துணைநின்ற என் தந்தையும் இந்த விஷயத்தில் என்னைக் கைவிட்டு, "எல்லாம் மாப்பிள்ளை சொல்றபடி செய்யம்மா" என்று நழுவியது எனக்குப் பேரிடியாக இருந்தது.

என் பாட்டி மட்டும் இருந்திருந்தால்! நான் சிறுமியாக இருந்தபோதே அவர் அடிக்கடி என் தந்தையிடம், "ரொம்ப கெட்டிக்காரப் பொண்ணுடா! நீ வேணும்னாப் பார், ஒரு நாள் இவ ஃபாரின் போகப்போறா" என்று மெச்சிக்கொண்டது ஞாபகம் வரக் கண்ணீர் துளிர்த்தது.

கடைசியில் மேலும் மூன்று மாசம் அவகாசம் கேட்டு அந்தக் கம்பெனிக்குக் கடிதம் எழுதினேன், என் கணவருக்குத் தெரியாமல். அந்தச் செய்கை என் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திசை திருப்பப் போகிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்க நியாயமில்லை. இடைப்பட்ட காலத்தில் என் நலம் விழைவோர் உதவியுடன் என் பயணத்துக்குத் தேவையான பாஸ்போர்ட் முதலியன வாங்க முயற்சிகள் மேற்கொண்டேன்.

அடுத்த சில தினங்கள் நான் யாருடனும் சரியாகப் பேசவில்லை. கேட்கப்பட்ட கேள்விகளுக்குமட்டும் கூடியவரை ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில்கூறிவிட்டு நான் உண்டு என் வேலை உண்டு என்றிருந்தேன்.

வேலைகளுக்கு ஒன்றும் குறைவில்லை. ராதா கோடை விடுமுறையைக் கழிக்கத் தன் உறவினர் வீடு சென்றுவிட, அவ்வப்போது பயமுறுத்திக் கொண்டிருந்த வேலைக்காரியும் நின்றுவிட, காலை 5 மணிக்கு எழுந்ததுமுதல் இரவு 11 மணிவரை நிமிடங்கள் ஓய்வின்றி வீட்டிலும் அலுவலகத்திலும் என் பணிகள் என்னை வருத்தின. சரியான உணவும் உறக்கமும் இல்லாமல் என் முகம் களையிழந்தது. யாரும் என்னைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. என் கணவருக்கு மட்டும் இரண்டு இரவுகளுக்கு ஒரு முறை நான் தேவைப்பட்டேன்.

*** *** ***

திடீரென்று ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து ஒரு கேபிள் வரும்வரை எனக்கு அந்த சாத்தியம் உறைக்கவில்லை. கேபிளில், நான் அந்த மாதம் 15-ஆம் தேதி அமெரிக்கா வருவதற்கான பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டதற்கு என்னிடம் இருந்து ஒப்புதல் வரவில்லை என்றும், நான் உள்ளூர் ஏர் இந்தியா அலுவலகத்திலிருந்து என் பயணச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, தேவையான கான்ட்ராக்ட் படிவங்களைக் கையொப்பமிட்டு அனுப்பக்கோரி அவர்கள் முன்பு அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதில் இல்லை என்றும், உடனடியாக என் ஒப்புதலைக் கேபிளில் வேண்டியும் அந்தக் கம்பெனி கேட்டிருந்தது.

"வாட் த ஹெல் யு திங்க் யு ஆர் டூயிங்?" என்றேன் என் மதிப்பிற்குரிய கணவரிடம், அன்று மாலை, அவர்முன் மேசையில் அந்தக் கம்பெனியின் முந்தைய கடித உறையை எறிந்தவாறே. "என் பெயருக்கு வந்த தபாலை என்கிட்டக்கூடக் காட்டாம டேபிள்ள வெச்சுப் பூட்ட உங்களுக்கு உரிமை இருக்கறதா நான் நினைக்கல."

"ஐ’ம் யுவர் ஹஸ்பன்ட், மைண்ட் யூ. உன்கிட்ட எனக்கு எல்லா உரிமையும் உண்டு. இப்ப நான் நினைச்சா இந்தக் கவரைக் கிழித்துப்போட முடியும்."

என் கணவரின் கைகள் அந்த உறையை நாட, நான் அதிர்ந்து, சட்டென்று செயல்பட்டு, அவரது முரட்டுத்தனத்தை சமாளித்து அந்தக் கவரை அவர் கைகளிடமிருந்து விடுவித்து பத்திரப்படுத்திக் கொண்டேன். அந்த சில நிமிடப் போராட்டத்தில் அவரது கண்ணாடி கீழே விழுந்தது.

"யு ஆர் அஸால்டிங் மீ, ப்ளடி பிட்ச்!"

அவரது கரங்கள் தாறுமாறக என் உடலில் வசைபாட நான் உதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக்கொண்டு, "லுக் ஹியர்! இதோட நாலஞ்சுதரம் அடிச்சாச்சு. இப்ப சொல்றேன், நான் அமெரிக்கா போகத்தான் போறேன், என்ன வந்தாலும் சரி! நாளைக்கே ஏர் இண்டியா ஆஃபீஸ் போய் டிக்கெட் கலெக்ட் பண்ணிண்டு, வர்ற பதினஞ்சாம் தேதி ஐ’ம் க்ளியரிங் அவுட் ஆஃப் யுவர் லைஃப்! யாரும் என்னத் தடுக்க முடியாது--என்னக் கொன்னுபோட்டால் ஒழிய. அதையும் செய்யத் தயங்க மாட்டேள் நீங்கள்லாம்!

*** *** ***
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கதைகள்

Post by ரமணி Thu Dec 13, 2012 8:22 pm

விமானம் புறப்பட ஒருமணி நேரம் இருந்தது. செக்யூரிடி செக் முடிந்து லௌஞ்சில் காத்திருந்தபோது மனதில் அமைதி நிறைந்திருந்தது. புயலுக்குப்பின் அமைதி. சந்நியாச பாவமானதொரு அமைதி. அல்லது துறவு.

கடந்த சில மணி நேரத்தில் நான் எல்லாவற்றையும் துறந்து, என் வாழ்வில் ஒரு பயணத்தை முடித்து மற்றொரு பயணத்தைத் தொடங்கிய நிகழ்ச்சிகளை மனதில் அசைபோட்டபோது நான் இப்போதுதான் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தொடங்குவதாகப் பட்டது.

என் உடலின் பரிமாணங்களை மட்டும் நேசித்து என் மனதின் பரிமாணங்களைப் புறக்கணித்த உலகிலிருந்து விடுதலை.

இத்தனை நாள் வெறும் ரோபோவாக இருந்த நான் இந்த நிமிடம் முதல் ஒரு முழு மனிதனாக, சாதனையாளனாக, வளரும் கம்ப்யூட்டர் வித்தகனாகப் பரிணமித்து என்னைச் சுற்றியிருந்த கூண்டை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டபோது வெளியுலகம் அழகாகவும், நம்பிக்கை மிகுந்ததாகவும் தோற்றமளித்தது.

தூரத்தே மறைந்துவிட்ட சூரியனுடன் என் வாழ்வின் ஒரு அத்தியாயம் முடிந்து நாளை ஒரு புதிய பூமியில் நான் புதுப்பிறவி எடுக்கப்போவதை நினைத்துக்கொண்டபோது பயணிகள் விமானத்தில் நுழவதற்கான அறிவிப்பு வந்தது.

இன்னமும் நான் யாருக்காக அல்லது எதற்காகக் காத்திருக்கிறேன்? நிகழ்வதற்கு இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது?

புரிந்தது. என் மன உணர்வுகளில் லயித்திருந்தபோது நான் சற்று சாவதானமாக அமர்ந்திருக்க, காற்றில் மெலிதாக ஊசலாடிக் கொண்டிருந்த என் மாங்கல்யம் எதிரில் அமர்ந்திருந்த ஓர் இளம் அமெரிக்க ஜோடியின் கவனத்தை ஈர்க்க, அவர்கள் அதைப்பற்றி மெல்லிய குரலில் ஏதோ உரையாடிக்கொண்டிருக்கத் திரும்பிப் பார்த்தபோது என் கணவர் பூனைபோல வந்து அருகில் நின்றிருந்தார், தனது இடது உள்ளங்கையை விரித்தபடி.

"வாசப் படியத் தாண்டறதுக்கு மின்ன, கட்டின தாலியைக் கழட்டி வெச்சுட்டுப் போடி நாயேன்னு சொன்னனில்ல? எவ்வளவு திமிர் இருந்தால் லெட்டர் எழுதி வெச்சிட்டு, நான் ஆஃபீஸில் இருந்து வீடு திரும்பறதுக்குள்ள கிளம்பிவருவ? என்னையே வேண்டான்னதுக்கப்புறம் நான் கட்டிய தாலி மட்டும் எதுக்கடி உனக்கு? கமான், ரிமூவ் இட்!"

"ஓவராக் கத்தாதீங்கோ. இந்தப் பயணம் ஒரு நிரந்தரப் பிரிவு இல்லை. யு நோ ஐ ஹாவ் டு மேக் திஸ் ட்ரிப். கொஞ்ச நாள்ல நீங்க உங்க தப்பை உணர்ந்து, மனசு மாறி, என்னோட இந்த செயலை அங்கீகரிப்பீங்கன்னு இப்பவும் நான் நம்பறேன். இந்தத் தாலி அந்த வகையில நமக்கிடையில் ஒரு தொலைத் தொடர்பு வளையமாகவும், எனக்கு ஒரு பாதுகாப்---"

பளார் என்று என் கன்னத்தில் அறை விழுந்தது.

"ப்ளடி பிச்! எனக்கு அறிவுரை கூற உனக்கு என்னடி தகுதியிருக்கு? கெட் லாஸ்ட், அந்தத் தாலியைக் கழட்டிக் கொடுத்திட்டு! ஆர் எல்ஸ், ஐ’ல் க்ரியேட் அ சீன் அன்ட் டிலே யுவர் ஃப்ளைட்!"

அங்குமிங்கும் புருவங்கள் உயர, அந்தக் கௌன்டர் பெண் "மேடம், யு ஆர் அல்ரெடி லேட், ப்ளீஸ்!" என்று விண்ணப்பிக்க, "ஃபைனல் கால் ஃபர் பாஸஞ்சர்ஸ் போர்டிங் த ஃப்ளைட்..." என்ற அறிவிப்பு கணீரென்று ஒலிக்க, நான் சட்டென்று தீர்மானித்து, என் மனதில் எழமுயன்ற சம்பிரதாய உணர்வுகளைக் கம்ப்யூட்டரின் ’க்ளியர் ஸ்க்ரீன்’ ஆணைபோல் சுத்தமாகத் துடைத்துக்கொண்டு, என்னுடைய கடைசி நினைவுச் சின்னத்தையும் துறந்துவிட்டு, விடுவிடுவென்று கேட்டைத் திறந்துகொண்டு, ஓட்டமும் நடையுமாக அந்த விமானத்தில் ஏறிக்கொள்ள, சில நிமிடங்களில் எஸ்கலேட்டர் விடுபட்டு அந்த விமானம் ரன்வேயில் டாக்சியித்துக்கொண்டு கிளம்பியது.

"யு ஆர் ஆல்ரைட்?" என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். பக்கத்தில் அந்த அமெரிக்கப் பெண்.

"ஐ’ம் ஃபைன். அன்ட் ரிலீவ்ட், தாங்க் யு."

உரிமையுடன் அவள் அணிந்திருந்த பைனாகுலரை எடுத்துக் கண்களில் பொருத்திக்கொண்டபோது, தூரத்தே என் கணவர் முகம் அஷ்டகோணலாக, கண்களில் அவநம்பிக்கையுடன் என் விமானம் சென்ற திசையில் வெறித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

*** *** ***
(இன்னும் முடியவில்லை)
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum