ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ருசி (குறுநாவல்)

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 6 Empty பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:19 am

First topic message reminder :

இரும்புக்கட்டிலின் படுக்கை விரிப்பில் தூங்கிக்கிடந்த மூர்த்தி அவசரமாக விழித்துக்கொண்டான். அவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கல்லூரி விடுதியில் யாரும் இல்லை. எல்லாரும் படிப்பு விடுமுறைக்காக அவரவர் ஊருக்குப் போய்விட, மூர்த்தியும் இன்னும் கொஞ்சப்பேரும் விடுதியிலேயே தங்கிவிட்டார்கள்.

அவர்களின் கிராமத்து வீட்டில் மின்சாரம் கிடையாது என்பதாலும், அவ்வளவாக அங்கு படிக்க வசதியில்லாததாலும்(வயல்காட்டு வேலைகள், கொசுக்கடி, நண்பர்கள் தொல்லை) அவன் இங்கேயே தங்கிப்படிப்பது என்று முடிவெடுத்திருந்தான்.

அவன் நெகிழ்ந்துகிடந்த கைலியை அவிழ்த்து மீண்டும் சரியாகக் கட்டிக்கொண்டு, வராண்டாவுக்கு வந்தான். விடுதிக்குக் குறுக்காக கருமையாகக் கிடக்கும் தார்ச்சாலையில், மத்தியான வெயில் பாதரசம் போல் உருகி வழிந்தோடிற்று. வராண்டாவைச் சுற்றி அடர்ந்திருந்த புங்கைமரக் கிளைகளில் சில காகங்கள் தியானம்போல் அமைதியாய் துயில்கொண்டிருந்தன. அதிலொன்று, அலகால் தன் றெக்கையை மெதுவாகக் கோதிவிட்டுக்கொண்டிருந்தது. அங்கிருந்த நுனாமரப் பூக்களுக்கிடையில் தன் சின்னஞ்சிறு வாலை மேலும் கீழுமாய் உயிர்ப்புடன் ஆட்டியபடி, இங்குமங்கும் தாவிக்கொண்டிருந்தது தேன்சிட்டொன்று.

மூர்த்திக்குப் பசியெடுத்தது. அறைக்குத் திரும்பி அலமாரியில் இருந்த அவனது கனமான வெண்ணிற ஹெச்.எம்.டி. கடிகாரத்தை எடுத்து மணிபார்த்தான். ரெண்டாகப் பத்துநிமிடம் இருந்தது.

கல்லூரி மெஸ் மூடிவிட்டபடியால், அங்கிருந்து அரைக்கிலோமீட்டர் தள்ளியிருந்த தனியார் மெஸ்ஸ¤க்குப் போய்த்தான் சாப்பிட்டுவர வேண்டும்... அதுவரை நடக்கவேண்டும் என்பதை நினைத்தாலே மிகவும் அலுப்பாகவும் அசதியாகவும் இருந்தது.

வராண்டாவில் நடந்து சதுரமாய் இருந்த விடுதியிம் ஒரு ஓரத்தில் இருந்த பொதுக்குளியலறைக்குப் போய் முகம்கழுவி வந்து, சிவப்புநிறக் காசித்துண்டை அறையோரமாய் கட்டியிருந்த கம்பிக்கொடியில் இருந்து உருவியெடுத்து, முகத்தைதுடைத்தபடி , கட்டிலில் அமர்ந்தான். அவனது அறைத்தோழன் மனோகரின் கட்டில் எதிரே வெறுமையாகக் கிடந்தது. அதைத்தாண்டி மனோகர் சுவரில் ஒட்டிவைத்திருந்த ரவீணா டாண்டனின் முக்கால் சைஸ் வண்ணப்படம் எங்கேயோ பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தது. அவன் அந்தப்படத்தின் இடைப்பாகத்தில் தன் விழிகளைப் படர்த்தினான். அவனுள் ஒரு உற்சாகம் படர ரம்பித்தது. களைப்பு கொஞ்சம் வடிந்துவிட்டதுபோல் ஆயிற்று.

சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். சட்டைப்பையில் ஏதேனும் சில்லறை இருக்குதா என்று தட்டிப்பார்த்துக்கொண்டான்.

கொஞ்சதூரம் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் தலையில் சுள்ளென்று வெயில் அறைந்தது. சாலையில் மருங்கில் வரிசையாய் கருகியதுபோல் கருவேல மரங்களாய் நின்றபடியால், நிழலில் ஒதுங்கி நடக்க முடியவில்லை. இந்தக் காரைக்குடியே இப்படித்தான். சரளைமண் பூமி. வருஷம்பூரா கோடைபோல்தான் இருக்கும்.

அவன் சாப்பிடப்போகும் அய்யர் மெஸ்ஸில் அவனுக்கு அக்கௌண்ட் இருந்ததால், மாதக்கடைசியில் பணம் கட்டினால் போதும்.

அப்பா கிராமத்தில் விவசாயிதான் என்றபோதும் அவனிடம் அடிக்கடி "நல்லா சாப்ட்டு உடம்பைத் தேத்துடா...இப்பிடியா நோஞ்சாங் கணக்கா இருக்குறது!" என்று அடிக்கடி சொல்வார். அதை இப்போது நினைத்து லேசாகச் சிருத்துக்கொண்டான்...என்ன சாப்பிட்டாலும் உடம்பு தேறமாட்டேங்குதே... என்ன செய்யிறது என்று தனக்குத்தானே முனகிக்கொண்டான்...அவன் நிழலும் அவன் காலடியில் பதுங்கி அவனோடேயே நடந்தது. சற்றுத் தள்ளியிருந்த கொல்லங்காளி கோயில் பேருந்து நிறுத்த நிழற்குடையில் யாரோ ஒரு பெண் உட்கார்ந்திருந்ததுபோல் பட்டது.

உற்சாகம் பீறிட, அவன் நடையில் வேகம் கூடியது. அவன் நிழலும் அவனோடு வேகமாய் நகர, தலை மிகவும் சூடுகண்டது. தலையில் கைவைத்துப்பார்த்தான். கொதித்தது.

அவனுக்கு திடீரென்று அய்யர் மெஸ் புவனேஸ்வரியின் முகம் காட்சியானது. நேற்றிரவு இவன் சாப்பிடும் பெஞ்சுக்கு எதிரில், அவள் வீட்டின் உள்ளிருந்த ஆட்டுக்கல்லில் கையால் மாவரைத்துக்கொண்டே இவனை வைத்தகண் வாங்காமல் பார்த்தாள். நல்ல கொழுகொழுவென்று மதர்ப்பாக இருந்தாள். தன் மகள் பி.காம்., அஞ்சல் வழியில் படிப்பதாக அய்யர் அடிக்கடி பரிமாறிக்கொண்டே சொல்வார். அவர் இவனிடம் மட்டும்தாம் இவ்வளவு வாஞ்சையாகப் பேசுவதுபோல் பட்டது. மாமியும் அப்படித்தான். இவனுக்கென்று மேலும் ஒரு அப்பளம் எடுத்துவந்து சத்தமில்லாமல் இலையில் வைத்துவிட்டு, "நன்னா சாப்டூங்கோ...அப்பத்தானே ஒடம்பு தேறும்?" என்று கேட்டுவிட்டு மூக்குத்தி மின்ன சிருத்துக்கொண்டே சமயல்கட்டுக்குப் போவாள்.

பஸ் ஸ்டாப் நெருங்கிவிட்டிருந்தது. அதுவரை குனிந்துகொண்டே நடந்தவன், பஸ் ஸ்டாப் நிழற்குடையை நோக்கி ஆவலுடன் முகத்தைத் திருப்பினான். அவன் அங்கு கண்ட காட்சி அவனுக்கு மகா வெட்கத்தைக் கொடுத்துவிட்டது. தூரத்தில் வரும்போது அவன் பெண் என்று நினைத்த அந்த உருவம், இப்போது நல்ல பூப்போட்ட கைலியைக் கட்டி ஆணாக மாறிவிட்டிருந்தது! அட ராமா! அவனுக்கு யாரோ முகத்தில் ஓங்கி அறைந்ததுபோலாகிவிட, முகத்தைத் திருப்பிக்கொண்டு கிட்டத்தட்ட ஓடாத குறையாக மெஸ்ஸை நோக்கி நடையைக்கட்டினான். அவனுக்கு புவனேஸ்வரியின் சிரித்தமுகம் இப்போது காட்சியாக, அவள் இவனைப்பார்த்து கிண்டலும் கேலியாகவும் சிரிப்பாதுபோல் பட்டது...

முகத்தில் தாறுமாறாக வழிந்துகொண்டிருந்த வேர்வையை, குனிந்து கைலியின் முனையால் துடைத்துக்கொண்டு நடந்தான். இன்று புவனேஸ்வரியைப் பார்க்க முடியுமா?...பார்க்க முடியும்...பார்த்தாக வேண்டும்... மூளையில் ஒருவித வெப்பம் படர மெஸ்ஸை நோக்கி வேகநடைபோட்டான் மூர்த்தி.
avatar
Guest
Guest


Back to top Go down


பெண்ருசி (குறுநாவல்) - Page 6 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:54 am

"என்னடீம்மா இது! முந்தநா நைட்லேர்ந்து இதேதாண்டா.. நீதாண்டீ கண்ணு நேக்குப் பண்டுவம் பார்க்கணும்! நோக்கில்லெ நான் பார்த்துண்டிருக்கேன்!" என்று கட்டிலருகே சென்று புவனாவின் மார்பிலும் வயிற்றிலும் தடவிக்கொடுத்தாள், "வரவர கொழந்தையாட்டம் ரொம்பப் பொலம்புறாடா..நேக்கு உயிர்போய் உயிர் வர்றது! அய்யர் வேறே நல்லாப் பார்த்துக்கோ, பார்த்துக்கோன்னு உயிரை வாங்கறார்..உஸ்ஸ்.."என்று பெருமூச்சுவிட்டாள் மாமி.

"அய்யரைக் காணோம் மாமி?" என்று மாமியைப் பார்த்தவன், அவளது ஒய்யாரமான ஊசிக்கொண்டையின் அழகில் சிக்குண்டான்.

"மார்க்கெட் போயிருக்கார்..நேத்திக்கும் இன்னிக்கும் இவளாலே மெஸ் லீவு..நாளைக்கினாச்சும் தொறக்கணுமோன்னோ.."

மாமியின் கண்களில் களைப்பும் தூக்கk கலக்கமும் அப்பியிருந்தாலும் முகத்தில் ஒரு சோபை ஒளிர்வதைக் கண்ணுற்றான். அவளிடமிருந்து மின்விசிறியில் சுழட்டலில் பறந்துவந்து அவன் நாசியை நிரப்பிய அபூர்வ மணத்தை இன்னதென்று அவனால் அடையாளம்காண இயலவில்லை!

புவனா மீண்டும் வலியில் முனகினாள்..அவளருகே குனிந்து, “என்ன புவனா..என்னம்மா செய்யுது?” என்று பரிவுடன் கேட்டான்.

"வயித்துலே ஊசிகுத்தறாப்லெ வலிக்குது மூர்த்தி..நேத்து நான் செத்துப்போயிருவேன்னுதான் நெனைச்சேன்..நீங்க ஆஸ்பத்ரிக்கு வரலையா..?" அவள் குரலில் கொடிய வலியின் சாயை வெளிப்பட்டது..

மாமி குறுக்கிட்டு, தணிவான குரலில், "அவன் படிக்க வேணாமாடீ! நாங்கதான்டீம்மா அவங்கிட்டே ஆஸ்பத்ரிக்குப் போறதெப்பத்திச் சொல்லலே..நாளைக்கி அவனுக்குப் பரீட்சைடீம்மா.." என்றாள்.

"ஆமா புவனா..அவங்க யாரும் எங்கிட்டே சொல்லவேல்லெ! அதான்.."

சட்டெனப் புவனாவின் கண்கள் பனித்து, நீர் திரண்டது. அவளது முகமெங்கும் சோகமும் பீதியும் படிந்திருந்தன. கன்னங்கள், சோபையிழந்து வறண்டுபோயிருந்தன.

சற்றுநேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன்,"நான் ரூம்லெ போய்க் கொஞ்சம் படிக்கட்டுமா புவனா..எல்லாம் சரியாய்டும்.. நீ ரொம்பப் பயப்படாதே.." என்றவன், மாமியிடம் "வர்றேன் மாமி..போய்ப் படிக்கிறேன்.." என்று கிளம்பினான்.

"அதான் மணி பதினொண்ணு ஆச்சே.. சூடா ஒரு கா·பி சாப்பிட்டுப்போயேண்டா.." என்றாள் மாமி.

"இல்லெ மாமி..கொஞ்சம் நேரங்கழிச்சு சாப்பிடறேன்."” என்று நாற்காலியைவிட்டு எழுந்தவன், மனசில் ஒரு யோசனை தோன்ற, "மாமீ..ஒரு உதவி.." என்றான் தயங்கிய குரலில்.

"ஏண்டாம்பீ..என்ன வேணும் சொல்லு..?"
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 6 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:54 am

"ஒண்ணுமில்லே.. புதுக்குடிலே எங்க சொந்தக்காரர்னு சொன்னேன்லெ, அவருக்கு ஒரு பேத்தியிருக்கா..அவளுக்கு ஏதாவது வேலையிருந்தா சொல்லச்சொன்னார் தாத்தா..அதான் உங்களுக்குத் தெரிஞ்ச எடத்துலே சொல்லி ஏதாவதொரு வேலை."”

"அவ நல்ல பொண்ணாடா.."ஆர்வமாய்க் குறுக்கிட்டாள் மாமி.

"நல்ல பொண்ணு மாமி..கிராமத்துப்பொண்ணச்சா..ரொம்ப அப்பாவியா இருக்கும்.. சாப்பாட்டுக்கே வழியில்லாமெ ரொம்ப நொந்துபோயி ரயில்லே விழுந்து சாகப்போயிட்டாளாம்..அவ தாத்தா சொன்னார்.."

"அவளுக்கு அப்பா அம்மா இல்லையாடாம்பீ.."

"இல்லே மாமி..அவ அநாதை.."

"அப்போ வரச்சொல்லு..நானே மெஸ்ஸ¤க்கு ஒரு நல்ல பொண்ணா தேடிண்டிருக்கேன்! என்னாலே இனி ஓடிஓடிப் பண்ண முடியல்லே..காலு கையெல்லாம் அசந்து வருது.."

"ரொம்ப தாங்க்ஸ் மாமி.."

"தேங்க்ஸ் எதுக்குடா..அவதானேடா நேக்கு உதவிசெய்யப்போறா..அவ பேர் என்னடாம்பீ..? நல்லா சமைப்பாளோ.."

"அந்தப் பொண்ணு பேரு நந்தினி மாமி.. நல்லாச் சமைப்பா.."

"அதென்ன ‘அந்தப் பொண்ணு, அந்தப்பொண்ணுன்னு உருகுறே..ம்ஹம்..வரச்சொல்லு.. மொதல்லே மூஞ்சியெப் பார்ப்போம்.. மூஞ்சியெ வச்சே அவ நல்லவளா கெட்டவளான்னு கண்டுபிடிச்சிருவேண்டாம்பீ.."

"சரி மாமி..கண்டுபிடிச்சு நல்ல பொண்ணாருந்தா சேத்துக்கோங்க.."

"நீ சொல்லிட்டியோனோ.. அப்றம் மறுபேச்சு எதுக்கு.. நல்ல பொண்ணாத்தான் இருப்பா..சரி, போய்ப்படி.. நாளைக்கு பரீட்சை முடிச்சுட்டு சாயந்தரமாப்போய் சொல்லிட்டு வந்துடு நாளான்னியிலேர்ந்து வேலைக்கு வரட்டும்.. இங்கியே வேணா நம்ம மெஸ்லேயே தங்கிக்கட்டும்..அவ அநாதைன்னு சொல்லிட்டியோன்னோ..அவளுக்கு நாமளும் ஏதாவது உதவினாத்தான் பகவான் நமக்கும் கண்தொறப்பார்..நமக்கும் அப்பிடிப் பொண்ணுதான் சரிப்பட்டு வருவா.."

"ரொம்ப தாங்க்ஸ் மாமி.." என்றவன்,உள்ளே சந்தோஷம் கொப்பளிக்க, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தன் அறைக்குப் போனான். அவன் கால்கள் தரையில் பாவாமல் மிதந்தன.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 6 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:55 am

குப்புறப்படுத்து தலையணையில் விம்மிக்கொண்டிருந்த தட்ஷிணியை முதுகில் மெதுவாகத் தடவிக் கொடுத்து எழுப்ப முயன்றாள் வனஜா. ஆனால் தட்ஷிணி எழுந்து உட்கார விருப்பமற்று சுவர்ப்பக்கம் முகம் சாய்த்து அப்படியே அசைவற்றுக்கிடந்தாள்.

"ஏய்..விடிஞ்சா எக்ஸாம்..இப்பிடி அழுதிட்டிருந்தா எப்பிடி..எழுந்திரிச்சுப் படி..நம்ம முர்த்தி ஒண்ணும் எங்கேயும் ஓடிரமாட்டான்..அவன் நம்மகிட்ட திரும்ப வருவான்.. எந்திரிடீ.." இப்போது சற்று அழுத்தமாக அவள் முதுகில் தட்டினாள் வனஜ்.

"தயவுசெஞ்சு என்னைத் தனியா இருக்கவிடு.." என்று படுத்தபடியே லேசாய் முகம் தூக்கி முனகிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள் தட்ஷிணி.

"..ம்கூம்..உன்னையெத் திருத்தவே முடியாது..நா என் வேலையெப் பாக்குறேன்..மெஸ்ஸ¤க்கு சாப்பிடப் போறேன்..நீ மெதுவாக் கெளம்பி வா.."

வனஜா மெஸ்ஸ¤க்குப் போய்விட்டாள்..

மெதுவாக எழுந்தமர்ந்த தட்ஷிணிக்கு வாழ்க்கை அர்த்தமேதுமற்றதாகப் பட்டது.

எப்போதும் அழகாய், இதமாய் விளங்கும் இந்த இரவும் அறையின் வெண்மையான குழல் விளக்கொளியும் அவளுக்கு மிகுந்த எரிச்சலையூட்டின.

மீண்டும் மீண்டும் இந்த மூர்த்தி ராஸ்கல் ஏன் தன் கண்ணுக்குள் வந்து நிற்கவேண்டும்?

கனவிலும் நனவிலும் அவன் ஏன் தன்னை விடாது ஒரு கொடும் பேயெனத் துரத்துகிறான்..ச்சே!
அவனிடமிருந்து, அவன் பிம்பத்திலிருந்து விடுபடும் வழிதான் என்ன?

குழம்பினாள்..மிகவும் குழம்பினாள்..மூர்த்தியின் பிரிவு அவளை இப்படி உலுக்கியெடுக்கும் என்பதை அவள் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை..கடவுளே..!

பசி வயிற்றைக் கிள்ளிற்று. மெஸ்ஸ¤க்குச் சீக்கிரம் போகவேண்டும்..வயிறு ஏன் இப்படி
திகுதிகுவென்று எரிகிறது?

மூர்த்தியிடம் அன்று சண்டை போட்டு அவனை அனுப்பி வைத்த மறுகணத்திலிருந்து தொற்றிக்கொண்டது இந்த பிளம்பு! அந்தப் பிளம்பை அவள் முற்றிலுமாய் நிராகரிக்கப்பார்த்தாள்.. அதில் அவளுக்குப் படுதோல்வியே கிட்டிற்று... அப்பிளம்பு, ஒரு கொள்ளிவாய்ப் பிசாசுபோல் அவளது அடிவயிற்றில் பற்றியெரியும் விந்தையை என்னென்பது!

அப்படி என்னதான் இருக்கிறது இந்த மூர்த்தி நாயிடம்!? அவனும் எல்லாரையும்போல தன் கூடப்படிக்கும் சக மாணவன்தானே! அவனைவிட உருவிலும் நிறத்திலும் ஆகச்சிறந்தவர்கள் எத்தனையோ பேர்! இந்த மூர்த்திப்பயல் அப்படியொன்றும் உருவ அமைப்பில் நேர்த்தியானவனில்லை!

கெச்சையாய்..ஒல்லியாய்..'தொசக்..தொசக்..' என்ற வாத்துநடையுடன்..ச்சே! அவனிடம் இருக்கும் மாயம்தான் என்ன! ஒழுங்காய் 'ட்ரெஸ்' கூட பண்ணத் தெரியாதவனாயிற்றே அவன்!

சட்டென அவளுக்கு மூர்த்தியின் கண்கள், அவற்றின் ஆழம், அவற்றின் ஜ்வலிப்பு, பார்ப்பவரை ஈர்த்து தம்முள் அமிழ்த்திக்கொள்ளும் அவற்றின் மாயம் இதெல்லாம் ஞாபகத்தில் பளிச்சிட்டன...
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 6 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:55 am

அவனது புருவங்கள்தான் என்ன அடர்த்தி! என்ன ஒரு நீளம் அவை! அவனது நீண்டு வளைந்த கண் இமைகளையும் அவற்றின் சிமிட்டலையும் அவள் மிகவும் ஆழ்ந்து ரசித்திருக்கிறாள்!

ச்சே! கவுத்துட்டான் பயல்! ஆனாலும் அவன் சுத்த மோசம்தான்! பின் எதற்கு என்னிடமே வந்து
நந்தினி..அது..இது..என்று கதையளக்கவேண்டும்!

அறைக்கதவைப் பூட்டிவிட்டு மெஸ்ஸ¤க்கு நடந்தாள்..சாப்பிட்டுமுடித்து எதிரே வந்துகொண்டிருந்தாள் வனஜா..

"என்ன சோகத்திலேர்ந்து விடுபட்டுட்டியாடீ.." இரவின் மின்விளக்கொளியில் பாதி மறைந்த முகத்துடன் கேட்டாள் வனஜா..

"ச்சீ..போடி.."

"இப்ப ஏதோ உன் முகத்துலே தெளிவு வந்திருக்கே..நாளைக்கு எக்ஸாமுக்கு வர்ற மூர்த்தியைப் பார்த்துடலாம்னுதானே அந்தத் தெளிவு?" அவள் காதுகளில் கிசிகிசுத்துக்கேட்டாள் வனஜ்.

வராண்டாவில் சாப்பிட்டுமுடித்த பெண்கள் அவரவர் அறைநோக்கி வந்துகொண்டிருந்தார்கள்.. சிலர் அவர்கள் இருவரையும் பார்த்து ஏதோ கிசுகிசுத்துக்கொண்டார்கள்..

"மூர்த்தி தட்ஷிணியின் ஆள்.." என்பதுதான் அந்தக் கிசுகிசுப்பின் பொருளாக இருக்கவேண்டும்!

இப்படி இன்னும் சில பெண்களுக்கு 'ப்ரத்யேக ஆட்கள்' அந்த விடுதிப்பெண்களுக்கு உண்டு!
ஒருத்தியின் 'ஆளுடன்' இன்னொருத்தி ஏதும் வைத்துக்கொள்ளமாட்டாள்..இது அங்கு எழுதப்படாத விதி!

"ச்சீ..போறியா..யார் காதுலயாவது விழுந்துடப் போவுது..ரூம் கீ இருக்கா, வேணுமா?'

"அதெல்லாம் என் கீ என்கிட்டே பத்தரமா இருக்கு! உன் கீ தான் உன்கிட்டே இருக்கான்னு
தெரியணும்.."

"இருக்கு..இருக்கு.."

"நான் அந்தக்கீயைக் கேக்கலே.."

"பின்னே?"

"மூர்த்தி உனக்குப் பூட்டுப் போட்டுட்டு அவன்பாட்டுக்குப் போயிட்டான்லே, அந்தக்கீயை கேட்டேன்.."

"உனக்கு கொழுப்பு ஜாஸ்திடீ.."

"கொழுப்பெல்லாம் ஒண்ணுமில்லே..இந்த வனஜாதானே நாளைக்கு உங்க ரெண்டுபேரையும் மீண்டும் சேர்த்துவைக்கப்போறேன்! அதுக்கு என்ன 'ட்ரீட்' குடுப்பே?"

"எதுவேணாக் கேளு!" சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள் தட்ஷிணி.

இப்போது அவள் அடிவயிற்றில் கபகபவென்று எரிந்துகொண்டிருந்த பிளம்பு தன் வெம்மையைக் குறைத்து அவளுக்குச் சற்று இதம் கொடுத்தது...

அவள் மெஸ்ஸை நோக்கி சிட்டாய் விரைந்தாள்...
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 6 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:57 am

நட்டநடு நிசி.. சுவர்க்கெடியாரத்தில் மணி இரண்டரையாகியிருந்தது. தன் அறையின் குழல் விளக்கொளியில் கண்விழித்துப் படித்துக்கொண்டிருந்தான் மூர்த்தி. விடிந்தால் தேர்வாயிற்றே! ஒரு மணிவாக்கில் அவனுக்கு மாமி ஒரு சூடான அடர்த்தியான தேநீர் கொடுத்துவிட்டுப்போனாள்.அதை அவள் இவனுக்காக ப்ரத்யேகமாக தயார் செய்து கொடுத்ததால் தேநீரின் மணமும் ருசியும் அதன் உச்சத்தில் இருந்தது. ருசி, தேநீரிலா, நாவிலா..இல்லை, மனசுக்குள்ளா..? மனசு என்றால், கொடுப்பவரின் மனசிலா,குடிப்பவரின் மனசிலா..? எதில், எது ஒளிஞ்சிருக்கு?

அவனுக்குத் தேநீர் தயாரித்து ஒரு ·ப்ளாஸ்க்கில் எடுத்துக்கொண்டு அவன் அறைக்கே வந்துவிட்டாள் மாமி..இப்படி அவள் வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை! உள்கதவைத் திறந்து வைத்து, அவர்களின் தூக்கத்தைக் கெடுக்க விரும்பாததால், மூர்த்தி அதன் தாழ்ப்பாளை நீக்காமலே வைத்திருந்தான். மாமி எவ்வளவோ சொல்லியும் அவன் உறுதியாக மறுத்துவிட்டான்..

அவள் முகத்தில் தூக்கக் கலக்கம் இழையோடிற்று. எனினும் அதிலொரு ப்ரத்யேக சோபை துலங்கியதைக் கண்ணுற்றான் மூர்த்தி. இவனுக்குத் தேநீர் தருவதற்காக நடுநிசிவரை தூங்காமல் கிடந்திருப்பாள்போல!

மூர்த்தி தேநீரை ஒரே மூச்சில் குடிப்பதில்லை. அதுவும், சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட இதுபோன்ற அடர்த்தியான, தேயிலையின் மணமும், லேசான கசப்பும் மேலோங்கிய தேநீர் என்றால் அதைத் துளித்துளியாய் மெதுவாக நுனிநாக்கில் உறிஞ்சி அணுஅணுவாய் அனுபவித்துக் குடிப்பான்.

அவன் தேநீர் அருந்துவதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மாமி. மூர்த்தியும் அவள் கண்களையும் அதில் தெரிந்த விவரிக்கவொண்ணாத் திருப்தியின் இழையையும் அறிந்து திருப்தியுற்றான்..

"நல்லாருக்கா டீ?" வார்த்தை வெளிவராமல் முனகலாய்க் கேட்டாள்..

"நல்லாருக்கு.."அவனுக்கும் வார்த்தை வெளிவரவில்லை.

"சரி..படி.." என்று சொல்லிவிட்டு எலுமிச்சைநிற சேலைத் தலைப்பால் தன் உடலைப் போர்த்திக்கொண்டு எழுந்துபோனாள். அவள் போய் ஒன்றரை மணி நேரமாகியும் மாமியின் முகமும் அதன் உயிர்ப்பான, பிசிறு தட்டாத சௌந்தர்யமும் அவன் கண்ணில் சுழன்றபடியே இருந்தது!

கையில் தேர்வுக்கான குறிப்பேட்டை விரித்து வைத்திருந்தான். எல்லாம் ஏற்கனவே படித்தவைதான். என்றாலும் அனைத்தையும் ஒருமுறை திருப்பிப்பார்க்கவேண்டும்.. அப்போதுதான் தடுமாறாமல் தேர்வெழுத இயலும்..

மீண்டும் மீண்டும் படித்தாலும் சலிக்காத புத்தகம் ஏதாவது இருக்கிறதா உலகில் என்ற கேள்வி அவனுள் திடீரென உதித்தது. அப்படியொரு புத்தகத்தின் அதீத பக்கங்களில் தன் இருப்பு நிலைகொண்டிருப்பதாய் உணர்ந்து அவனுக்கு மெய்சிலிர்த்தது. வாழ்வின் ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு பகலும், ஒவ்வொரு அனுபவமும் எல்லையற்ற பக்கங்களைக்கொண்டதொரு தலைப்பில்லாத புத்தகத்தின் பகுதிகளாகத் தோன்றின.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 6 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:57 am

தேர்வுக்காக கடைசி நேரத்தில் இப்படிக் கண்விழித்துப் படிப்பதில் ஒரு சாகஸத்தின் திருப்தி கிட்டத்தான் செய்கிறது. இந்த சாகஸம் எல்லா மாணவர்களும் செய்வதுதான்.. கடைசி நேரத்தில் விடியவிடிய ‘ஹோல் நைட்’ அடித்துப்படிப்பது, கல்லூரி விடுதியிலும் சரி, வெளியே அறையெடுத்துத் தங்கிப் படிப்போரிடமும் சரி, ஒரு ‘கட்டாய வழக்காக’ மாறிப்போயிருந்தது! பஸ் கிளம்பும்வரை ஏறாமல் நின்றுவிட்டு, கிளம்பியவுடன் ஓடிப்போய் தொற்றி ஏறுகையில் கிடைக்கும் சாகஸ திருப்தி, இப்படி ‘விடியவிடியப்’ படிப்பதில் ஏற்படுவது உண்மைதான்! ‘எப்படியோ ஊர்போய்ச் சேர்ந்தால் சரி’ என்பதுபோன்ற மனோபாவம் அனைத்து மாணவர்களிடமும் இருந்தது.. இப்படியில்லாமல், ஆரம்பத்தில் இருந்தே படுசிரத்தையாகப் படிக்கும் மாணவர்களை ‘சரியான ஞானப்பழம்!’என்று கிண்டலடிப்பார்கள் அறைத்தோழர்களும் சக மாணவர்களும்.. ‘சுத்தக் கடம்!’ என்றும் ‘பயங்கர தட்டல் கேஸ்’என்றும், ‘சுத்த சொம்புடா அவன்..எப்பப்பார்த்தாலும் உருட்டிக்கிட்டே கெடப்பான்..’ என்றும் கேவலப்படுத்துவது கல்லூரிகளில் சகஜம்!

மூர்த்திக்கு இவர்களின் போக்கு ஆரம்பத்தில் சற்று ஆச்சர்யமாய் இருந்தாலும், பள்ளிகளில் ‘ஸ்கூல் ·பர்ஸ்ட்’ வந்தவர்களே கல்லூரிக்குப் போனவுடன் இப்படியாகிவிடுவது அவனுள் ஒரு புரிதலை ஏற்படுத்திவிட்டது. மூர்த்தி இரண்டு செயல்பாடுகளுக்கும் இடைப்பட்டவனாகத் தன்னைக் கருதிக்கொண்டான்.. அதாவது,அவன் ‘சுத்தக் கடமும்’ அல்ல. முற்றிலும் படிக்காமலே ‘கோட்டை’ விட்டுவிடுபவனும் அல்ல. பேராசிரியர்களின் விரிவுறைகளை அவன் நன்கு மனதில் இருத்திக்கொள்வான். பிறகு, தேர்வுக்கு முக்கியமானவை எவை, கேள்விகளை பொதுவாக எப்படிக் கேட்பார்கள் என்பது போன்ற விவரங்களைச் சேகரிப்பான். அதற்கென்று ஒரு தனியான குறிப்பேட்டை ஏற்படுத்தி, அதைத்தான் இப்படிக் கடைசி நேரத்தில் புரட்டிப்பார்ப்பான். எல்லார்க்கும் எல்லா வழிமுறைகளும் உதவுவதில்லை என்பதையும், அவரவர்க்கான வழிமுறைகளை அவரவரே தேர்ந்துகொள்வதுதான் சரி என்பதையும் அவன் மெல்லமெல்ல உணர ஆரம்பித்தான். அப்படிப்பட்டதொரு தீர்மானத்தின்பேரில்தான் அவன் கிராமத்துக்குப் போகமல், இங்கேயே தங்கிப்படிப்பது!

என்றபோதிலும், இந்தப் படிப்பின்மீது, ‘இது என்ன படிப்பு!’ என்ற விமர்சனமும் அவனுக்கு இருந்தது! இதெல்லாம் இவனது தனிப்பட்ட, திருப்திகரமான வாழ்க்கைக்கு உதவுமா என்பதில் அவனுக்கு எல்லையற்ற சந்தேகம் இருந்தது. தன்னால், பொறியியல் கல்வியை முடித்துவிட்டு, எந்திரமயமாய் இயங்கிவரும் நகரங்களுக்குச் சென்று பணியாற்ற இயலுமா என்ற கேள்வி அவனுக்கு எப்போதும் உண்டு! இதைவிட்டால் வேறு என்னதான் வழி என்ற குழப்பமும் அவனுக்கு உண்டு.

இந்த மனசுதான் எவ்வளவு பெரிய குரங்கு! இதற்கு ஒரே மரத்தின் கிளையும் கனிகளும் அலுத்துப்போகிறது. இதுக்கு புதுப்புதிதாய் அனுபவங்கள் தொடர்ந்து தேவையாயிருக்கிறது! தாவிக்கொண்டே இராவிட்டால் இக்குரங்கு மண்டையைப் போட்டுவிடும், நோயுற்றுவிடும், சோகித்து-துக்கித்துத் துவண்டுபோகும்போல!

மூர்த்தி இந்தப் பத்தொன்பது வயதில் கண்டதையும் படித்து கொஞ்சம் பழுத்துப் போயிருந்தான். அதனால்தானோ என்னவோ, அவன் மனம் எதிலும் திருப்தியற்று காற்றில் துரும்பென அலைக்கழிகிறது..

சட்டென அவன் மனத்திரையில் தட்ஷிணி உதித்தாள். காலை பத்துமணிவாக்கில் தேர்வெழுதும் அறையில் அவளை சந்திக்கவேண்டிவரும். அப்போது வனஜாவும் வருவாள். அன்று ஏதோ சொல்வதற்காக அவனிடம் ஓடிவந்த வனஜாவை அவன் நிராகரித்து பஸ்ஸில் ஏறிவந்தது, அவனுக்கு மிகுந்த உறுத்தலைக் கொடுத்தது. அவனிடம் எதைச் சொல்ல வந்தாளோ..
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 6 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:57 am

தட்ஷிணி ஸ்ரீதருடன் வரக்கூடும்! அந்தக் காட்சியை அவனால் கண் கொண்டு பார்க்க இயலாது! மூர்த்திக்கு திடீரென உச்சந்தலையில் சிலிர்ப்போடி மூச்சுக்காற்று சட்டெனச் சூடானது..அவனது உடல் மிக நுண்மையாய் உள்ளடங்கி நடுங்கிற்று! மூளை சூடாகிக்கொண்டேவந்தது. அவன் கண்கள் வெறுமையாய் தன் இருகைகளுக்கிடையே விரிக்கப்பட்டிருந்த புத்தகத்தை வெறித்துக்கொண்டிருந்தன.உடனே அதை மூடிவிட்டு, உள்ளே தாழிட்டிருந்த கதவைத் திறந்து அறைக்கு வெளியே வந்தான். இரவின் அமைதி அவன் மீது கனமாய்க் கவிந்தது..திடீரென அவனுள் துக்கம் மேலிட்டு கண்களில் நீர் முட்டியது..

உடம்பில் சட்டையணியாமலே தெருச்சாலையில் இறங்கி நடந்தான்..சற்று தள்ளியிருந்த தார்ச்சாலையில் ஒரு லாரி அதன் கனத்த இரைச்சலோடு முக்கி முனகிச் சென்றது.

மூர்த்திக்கு இப்போது இரவையும் அதன் கனத்த அமைதியையும் ரசிக்க இயலவில்லை. இரவின் கனம் அதீத இறுக்கத்துடன் அவன் தலையுள் கவிந்து, அவனை மூச்சுமுட்டச் செய்தது. கைகளைப் பின்னால் இறுக்கமாக் கட்டிக்கொண்டு, வீடுகளற்ற சாலையில் வெகுதூரம் நடந்தான். பிறகு வந்த வழியே திரும்பினான்..பிறகு மீண்டும் நடந்தான்.. எத்தனை முறை அப்படி நடந்திருப்பானோ தெரியாது.

மெஸ்ஸிலிருந்து உள்ளடங்கியிருந்த ஊரின் தெருவிலிருந்து சேவலொன்று தெள்ளத்தெளிவாய்க் கூவியபோதுதான் அவனுக்கு காலப் பிரக்ஞை உண்டானது.. மூர்த்திக்கு சேவலின் கூவல் பிடிக்கும். அதை தனது வெற்றிக்கான கூவலாக அவன் பலமுறை உணர்ந்திருக்கிறான். அந்தக் கூவல் மரத்துப்போயிருந்த அவனைக் கொஞ்சம் உயிர்ப்பித்தது..கண்களில் அவனையறியாமல் தொடர்ந்து வழிந்துகொண்டிருந்த நீர், வற்றி, கன்னப்பரப்பிலும், உதட்டோரத்திலும் உப்புக்கோடுகளை வரைந்திருந்தது..

ஏன் இந்தத் துக்கம்..? இதற்குக் காரணம் தட்ஷிணிதானா..இல்லை, என் அறியாமையா.. ஒருவேளை, என் முட்டாள்தனம் கூட இதற்குக் காரணமாயிருக்கலாம்..! ஏன் மடத்தனமாக ‘நந்தினி விஷயத்தை’ அவளிடம் அப்பட்டமாய்ச் சொன்னேன்! அதுதானே தட்ஷிணியின் கோபத்துக்கு முக்கியக் காரணம்! மற்றபடி தட்ஷிணி எவ்வளவு நல்லவள்! அவள் என்மீது அதீதப் பிரியம் வைத்திருப்பதை எத்தனை சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன்..மெல்லிய இரவின் மென்தென்றல் போன்றதல்லவா அவளின் ப்ரியம்..அதைக் கொடூரமாய்க் குத்திக்கிழித்த கொடுமையைச் செய்தவன் நான்தானே..

இப்போது இரண்டாம் முறையாக ஏற்ற இறக்கத்துடன் அழுத்தமாகக் கூவிற்று சேவல்.. அவனுக்குள் இப்போது ஏதோவொரு சக்தி முகிழ்த்து முளைவிட்டு வளர்ந்தது..தனக்கு ஏதோவொரு நல்ல விஷயம் நடக்கப்போவது உறுதியாகிவிட்டதை அவன் உள்ளுணர்வு அவனுக்கு உணர்த்தியது!

வேகமாய் அறைநோக்கி நடந்தான். வைகறையின் தெளிந்த மென்குளிர்க்காற்று அவன் மேனியைத் தழுவிச்சென்றது.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 6 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:59 am

பொறியியல் கல்லூரி வளாகமே களைகட்டியிருந்தது. ஆங்காங்கே இருந்த சிமெண்ட் ஸ்லாப்புகளிலும், புல்வெளிகளிலும் மாணவர்களும் மாணவிகளும் குழுமி, பத்துமணிக்குத் துவங்க இருக்கும் செமெஸ்டெர் தேர்வில் 'எப்படியும் பாஸ் செய்துவிடவேண்டும்' என்ற மனோபாவத்தில் சீரியஸாகப் படித்துக்கொண்டிருந்தார்கள்.

சில குழுக்கள், வெறும் மாணவர்களை மட்டும் கொண்டிருக்க, சிலவற்றில் மாணவர்களும் மாணவியரும் சேர்ந்திருந்து படித்தனர். ஏற்கனவே படித்துமுடித்த கும்பல்,சிரித்து அரைட்டையடித்து சரியாகப் படிக்காதவர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளானது..

மூர்த்தி ஒரு புங்கைமரத்தின் குளிர்ந்த நிழலில் போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்ச்சில் தனியாக அமர்ந்து குறிப்பேட்டைப் புரட்டிக்கொண்டிருந்தான்..அவன் கண்கள் தட்ஷிணியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து பெண்கள் விடுதியின் பக்கமாய் அடிக்கடி பார்த்தபடியிருந்தன..படிப்பில் மனம் லயிக்காமல் தவித்தான்..ஸ்ரீதரையும் காணோம்..ஒருவேளை வகுப்பறைக்குள் எங்காவது உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பார்களோ..அப்படியிருக்க வழியில்லை.. தட்ஷிணியை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்ற தாபம் தகிக்க, சீக்கிரமே மெஸ்சில் சாப்பிட்டுவிட்டு, மாமிகூடக் கேட்டாள் "ஏண்டா இப்டி இட்லியே முழுசு முழுசா முழுங்கறே"ன்னு எட்டரைமணிக்கே வந்து இங்கு உட்கார்ந்துவிட்டான். இவனைத் தாண்டிப்போய்த்தான் யாரும் கல்லூரிக்குள் நுழைந்திருக்கமுடியும்..

"மாப்ளே ஊத்திக்கும் போலிருக்குடா.." என்றபடி மூர்த்தியை நோக்கி வந்தான் மூர்த்தியின் அறைத்தோழன் மனோகர்.

"வரும்போதே ஏண்டா ஊத்திக்கும்ங்றே?" என்றபடி அவனை ஏறிட்டுப்பார்த்தான் மூர்த்தி.

அவன் முகம் மிகவும் வாடியிருந்ததைக் கவனித்த மனோகர், "எல்லாம் கேள்விப்பட்டேண்டா மாப்ளே.. ஸ்ரீதர் உன்னே ஆளுவச்சு அடிக்கப்பாத்தானாமே..பேசாமெ நீ ஊருக்கே போய் படிச்சிருக்கலாம்டா மாப்ளே..என்னைப்பாரு...'நீட்'டா போனேன், அழகா படிச்சேன்..இப்ப 'பக்கா'வா எழுதி பாஸ் பண்ணப்போறேன்.."

"உனக்கு வீட்டிலே வசதி இருக்கு..நான் போய் மண்ணெண்னை விளக்கு வச்சில்லே படிக்கணும்.."

"ஏண்டா மாப்ளே..பகல்லே படிச்சுட்டு நைட்டு ரெஸ்ட் எடுத்திருக்கலாமில்லே?"

"அதாண்டா முடியாது..அங்கே என்னோட ஸ்கூல்மேட்ஸ் என்னையே சுத்தமா படிக்கவிட மாட்டானுகடா..அதான் போகலே.."

"சரி..படி..நான் அப்டி தனியாப்போய் கொஞ்சம் புரட்டிப்பாத்துக்கிறேன்.." என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் மனோகர்.

அப்போது சற்று தள்ளி வேப்பமரத்தடியில் நின்று ஏதோவொரு நோட்டை மும்முரமாகப் புரட்டிக்கொண்டிருந்தான் ஸ்ரீதர். அவனோடு தட்ஷிணி இல்லை! மூர்த்திக்கு ஆச்சர்யம் தாளவில்லை! என்னாயிற்று...? அவன் யோசனையில் ஆழ்ந்திருக்கையில், தட்ஷிணியும் வனஜாவும் விடுதியிலிருந்து மூர்த்தியைப் பார்த்தபடி வந்துகொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்த கணத்தில் மூர்த்தியின் வயிற்றில் ஒரு சிலிர்ப்போடிற்று. எவ்வளவு நாளாயிற்று தட்ஷிணியைப் பார்த்து! அவளைப் பார்க்கும்போது அவனையறியாமல் ஒரு இன்பம், மெல்லிய வலிகலந்த இன்பம் அவனுள் முகிழ்ப்பதேன்..?

நேரே அவனிடம் புன்னகைத்தபடியே வந்தாள் வனஜா. தட்ஷிணி சற்று தள்ளி அலங்காரப் பூச்செடியொன்றின் அருகாமையில் நின்றுகொண்டிருந்தாள். அவள் கண்களில் ஒருவித சோகம் அப்பியிருந்ததை ஒரு கணப் பார்வையில் உணர்ந்துகொண்டான் மூர்த்தி.

"என்ன மூர்த்தி படிச்சிட்டியா நல்லா.." என்று கேட்டாள் வனஜ்.

"படிச்சிருக்கேன்.." அவன் குரலில் சுரத்தில்லை.

"காலையிலே சாப்டியா, இல்லையா? குரலே வெளிவரமாட்டேங்குது?"

"சாப்டேன்.."

"ஆனா இங்கெ ஒருத்தி ரொம்பநாளா சரியா சாப்பிடவேயில்லெ.."

"யாரு?"

"தட்ஷிணி.."

"ஏன்..?"

x
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 6 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:59 am

"எல்லாம் உன்னாலேதான்! ஸ்ரீதர்கிட்டேருந்து காப்பாத்தத்தான் அவ அப்டி நாடகமாடினா..நீ அதைக்கூடப் புரிஞ்சிக்காமே போயிட்டே..ஹாஸ்டலையும் காலிபண்ணிட்டு!" என்றவள், தட்ஷிணிபக்கம் திரும்பி, "இங்கே வாடி.." என்றாள். தட்ஷிணி பச்சை நிற சுடிதாரில் தேர்போல் நகர்ந்து வந்தாள். எப்படி அவளால் அழுங்காமல் அசையாமல் நடக்கமுடிகிறதோ!

அருகே வந்த அவளிடம், "இந்தா பார்டீ..மூர்த்திகிட்டே எல்லாம் சொல்லிட்டேன்! பேசாமெ அடுத்த அரைமணி நேரத்துக்காகவாவது சேர்ந்து படிங்க! நான் கொஞ்சம் தனீயாப் போய் பார்க்குறேன்..மணி ஒன்பதரை ஆச்சு.." என்றுவிட்டுப்போய்விட்டாள்.

சற்று தள்ளி நின்று இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஸ்ரீதர் இப்போது தட்ஷிணியை நோக்கி வந்தான். மூர்த்தியின் பக்கம் திரும்பாமலே, "என்ன தட்ஷிணி, படிச்சிட்டியா..?" என்று கேட்டான் சுரத்தில்லாமல்.

"ம்ம்..படிச்சிருக்கேன்..ஏதோ.." அவனுக்கு 'ஏதாவது சொல்லவேண்டுமே' என்பதற்காக அவன் முகத்தைப்பாராமலே பதில்சொன்னாள். அவளது நாசுக்கான நிராகரிப்பை மூர்த்தி சட்டெனெப் புரிந்துகொண்டான்.

"சரி..நான் வர்றேன்..நல்லாப்படி.." என்றுவிட்டுப் போய்விட்டான் ஸ்ரீதர்.ஒருவேளை அவனும் அவளது பாராமுகத்தைப் புரிந்துகொண்டானோ!

மூர்த்திக்கருகில் சிமெண்ட் பெஞ்ச்சில் மெதுவாக அமர்ந்து முகம் குனிந்திருந்தாள் தட்ஷிணி.

"படிச்சிட்டியா தட்ஸ்.." மெதுவாக பேச ஆரம்பித்தான் மூர்த்தி.

"போடா நாயே..இத்தினி நாள் எங்கடா போய் ஒளிஞ்சே?" அவன் முகத்தை நேரே பார்த்துக் கேட்டாள். மூர்த்தி ஏதும் பேசாமல் மௌனம் காத்தான்.அவளிடம் எதைச் சொல்வது!

"ஏதோவொரு கோபத்துலே திட்டினா, நீபாட்டுக்குப் போய்டுறதா! நா நொந்து நூலாப் போயிட்டேண்டா நாயே!" அவளது சிவந்த, கூரிய நாசி அகண்டு விரிந்தது..கண்கள் படபடத்தன...

"உன் கோபம் நியாயம்தான் தட்ஷிணி..நான்தான் புரிஞ்சிக்கலே.." ஆறுதல் சொன்னான்.

தட்ஷிணி சமாதானம் ஆகாமல் அவனை முறைத்தபடியிருந்தாள். அவள் முகத்தில் கோபக்கனல் கொழுந்துவிட்டெரிந்தது. கன்னத்தசைகள் வறண்டு நிறமிழந்துபோயிருந்தன....

"யாருடா அவ நந்தினி?"

"அது..அவ..சும்மா..கதைவுட்டேன்!"
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 6 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 3:00 am

"இல்லே..அது கதைமாதிரி தெரியலே..உன் முகமே உள்ளதைச் சொல்லிடும்! உன்னாலே எதையும் மறைக்கமுடியாது! யாரவ? அவகிட்டே உனக்கென்ன வேலை..?"

"சொன்னாக் கேளு தட்ஷிணி..நந்தினி, அது இதுன்னு அன்னிக்கு நான் சொன்னதெல்லாம் வெறும் கதை! என்னை நம்பு!"

"அதான் முடியாது..நீ நல்லவன் இல்லே! என்னையே நம்பவச்சு கழுத்தறுத்துட்டே! நீ ஒரு பொறுக்கி!" தட்ஷிணிக்கு அழுகை முட்டிக்கொண்டுவந்தது.

"சொன்னா நம்பமாட்டியா..சும்மா ஒரு கதை விட்டுப்பார்த்தேன்..அதுக்கு நீ எப்டி 'ரியாக்ட்' பண்றேன்னு பார்க்கலாமேன்னு! அதைப்போய் நீ சீரியஸா எடுத்துக்கிட்டா எப்டி?"
சொல்லிவிட்டு சிரிக்க முயன்றான். ஆனால், அவனது அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

"நீ பொய் சொல்றேங்கறதெ உன் கண்ணே காட்டிக்குடுக்குதுடா..சரி..இப்போ படி..டைம் ஆய்டுச்சு..நாளைக்கு மீதியே வச்சுக்கிறேன்!" சொல்லிவிட்டு சட்டென எழுந்துபோனாள் தட்ஷிணி. இப்படியொரு முகத்தை தட்ஷிணியிடம் இப்போதுதான் பார்க்கிறான் மூர்த்தி. அவளது இந்தத் திடீர்ப் பிரிவை மூர்த்தியால் ஜீரணிக்க முடியவில்லை..

மணி பார்த்தான்...பத்தாகிவிட்டது..எல்லாரும் தேர்வு அறைகளுக்குள் நுழைந்துவிட்டார்கள். தட்ஷிணியும் வேகமாய் நடந்து தேர்வு அறைக்குள் நுழைந்துகொண்டிருந்தாள்..வனஜா ஏற்கனவே உள்ளே போய்விட்டாள்போல..

வளாகமே காலியாகிவிட்டிருந்தது.கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோலிருந்தது மூர்த்திக்கு. கைக்குக் கிடைத்த அமிர்தம் வாய்க்குக் கிடைக்காததுபோல் ஆகிவிட்டது. அந்த இடத்தை விட்டெழுந்து நகர்ந்து ஒரு புங்கைமர நிழலில் போய் தரையில் காலைநீட்டி அமர்ந்துகொண்டான் மூர்த்தி.

தன் குறிப்பேட்டைப் புரட்டி மிகவும் ஆழ்ந்து அந்தத் தேர்வுக்கான பாடத்தைப் படிக்க ஆரம்பித்தான்..பத்தரை மணிக்குள் தேர்வறைக்குள் நுழைந்தால்போதும்!

எப்படியும் இந்தத் தேர்வில் பாஸ் செய்துவிடவேண்டும் என்ற வெறி அவன் கண்களில் தகித்துக்கொண்டிருந்தது.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 6 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum