ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ருசி (குறுநாவல்)

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 3 Empty பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:19 am

First topic message reminder :

இரும்புக்கட்டிலின் படுக்கை விரிப்பில் தூங்கிக்கிடந்த மூர்த்தி அவசரமாக விழித்துக்கொண்டான். அவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கல்லூரி விடுதியில் யாரும் இல்லை. எல்லாரும் படிப்பு விடுமுறைக்காக அவரவர் ஊருக்குப் போய்விட, மூர்த்தியும் இன்னும் கொஞ்சப்பேரும் விடுதியிலேயே தங்கிவிட்டார்கள்.

அவர்களின் கிராமத்து வீட்டில் மின்சாரம் கிடையாது என்பதாலும், அவ்வளவாக அங்கு படிக்க வசதியில்லாததாலும்(வயல்காட்டு வேலைகள், கொசுக்கடி, நண்பர்கள் தொல்லை) அவன் இங்கேயே தங்கிப்படிப்பது என்று முடிவெடுத்திருந்தான்.

அவன் நெகிழ்ந்துகிடந்த கைலியை அவிழ்த்து மீண்டும் சரியாகக் கட்டிக்கொண்டு, வராண்டாவுக்கு வந்தான். விடுதிக்குக் குறுக்காக கருமையாகக் கிடக்கும் தார்ச்சாலையில், மத்தியான வெயில் பாதரசம் போல் உருகி வழிந்தோடிற்று. வராண்டாவைச் சுற்றி அடர்ந்திருந்த புங்கைமரக் கிளைகளில் சில காகங்கள் தியானம்போல் அமைதியாய் துயில்கொண்டிருந்தன. அதிலொன்று, அலகால் தன் றெக்கையை மெதுவாகக் கோதிவிட்டுக்கொண்டிருந்தது. அங்கிருந்த நுனாமரப் பூக்களுக்கிடையில் தன் சின்னஞ்சிறு வாலை மேலும் கீழுமாய் உயிர்ப்புடன் ஆட்டியபடி, இங்குமங்கும் தாவிக்கொண்டிருந்தது தேன்சிட்டொன்று.

மூர்த்திக்குப் பசியெடுத்தது. அறைக்குத் திரும்பி அலமாரியில் இருந்த அவனது கனமான வெண்ணிற ஹெச்.எம்.டி. கடிகாரத்தை எடுத்து மணிபார்த்தான். ரெண்டாகப் பத்துநிமிடம் இருந்தது.

கல்லூரி மெஸ் மூடிவிட்டபடியால், அங்கிருந்து அரைக்கிலோமீட்டர் தள்ளியிருந்த தனியார் மெஸ்ஸ¤க்குப் போய்த்தான் சாப்பிட்டுவர வேண்டும்... அதுவரை நடக்கவேண்டும் என்பதை நினைத்தாலே மிகவும் அலுப்பாகவும் அசதியாகவும் இருந்தது.

வராண்டாவில் நடந்து சதுரமாய் இருந்த விடுதியிம் ஒரு ஓரத்தில் இருந்த பொதுக்குளியலறைக்குப் போய் முகம்கழுவி வந்து, சிவப்புநிறக் காசித்துண்டை அறையோரமாய் கட்டியிருந்த கம்பிக்கொடியில் இருந்து உருவியெடுத்து, முகத்தைதுடைத்தபடி , கட்டிலில் அமர்ந்தான். அவனது அறைத்தோழன் மனோகரின் கட்டில் எதிரே வெறுமையாகக் கிடந்தது. அதைத்தாண்டி மனோகர் சுவரில் ஒட்டிவைத்திருந்த ரவீணா டாண்டனின் முக்கால் சைஸ் வண்ணப்படம் எங்கேயோ பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தது. அவன் அந்தப்படத்தின் இடைப்பாகத்தில் தன் விழிகளைப் படர்த்தினான். அவனுள் ஒரு உற்சாகம் படர ரம்பித்தது. களைப்பு கொஞ்சம் வடிந்துவிட்டதுபோல் ஆயிற்று.

சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். சட்டைப்பையில் ஏதேனும் சில்லறை இருக்குதா என்று தட்டிப்பார்த்துக்கொண்டான்.

கொஞ்சதூரம் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் தலையில் சுள்ளென்று வெயில் அறைந்தது. சாலையில் மருங்கில் வரிசையாய் கருகியதுபோல் கருவேல மரங்களாய் நின்றபடியால், நிழலில் ஒதுங்கி நடக்க முடியவில்லை. இந்தக் காரைக்குடியே இப்படித்தான். சரளைமண் பூமி. வருஷம்பூரா கோடைபோல்தான் இருக்கும்.

அவன் சாப்பிடப்போகும் அய்யர் மெஸ்ஸில் அவனுக்கு அக்கௌண்ட் இருந்ததால், மாதக்கடைசியில் பணம் கட்டினால் போதும்.

அப்பா கிராமத்தில் விவசாயிதான் என்றபோதும் அவனிடம் அடிக்கடி "நல்லா சாப்ட்டு உடம்பைத் தேத்துடா...இப்பிடியா நோஞ்சாங் கணக்கா இருக்குறது!" என்று அடிக்கடி சொல்வார். அதை இப்போது நினைத்து லேசாகச் சிருத்துக்கொண்டான்...என்ன சாப்பிட்டாலும் உடம்பு தேறமாட்டேங்குதே... என்ன செய்யிறது என்று தனக்குத்தானே முனகிக்கொண்டான்...அவன் நிழலும் அவன் காலடியில் பதுங்கி அவனோடேயே நடந்தது. சற்றுத் தள்ளியிருந்த கொல்லங்காளி கோயில் பேருந்து நிறுத்த நிழற்குடையில் யாரோ ஒரு பெண் உட்கார்ந்திருந்ததுபோல் பட்டது.

உற்சாகம் பீறிட, அவன் நடையில் வேகம் கூடியது. அவன் நிழலும் அவனோடு வேகமாய் நகர, தலை மிகவும் சூடுகண்டது. தலையில் கைவைத்துப்பார்த்தான். கொதித்தது.

அவனுக்கு திடீரென்று அய்யர் மெஸ் புவனேஸ்வரியின் முகம் காட்சியானது. நேற்றிரவு இவன் சாப்பிடும் பெஞ்சுக்கு எதிரில், அவள் வீட்டின் உள்ளிருந்த ஆட்டுக்கல்லில் கையால் மாவரைத்துக்கொண்டே இவனை வைத்தகண் வாங்காமல் பார்த்தாள். நல்ல கொழுகொழுவென்று மதர்ப்பாக இருந்தாள். தன் மகள் பி.காம்., அஞ்சல் வழியில் படிப்பதாக அய்யர் அடிக்கடி பரிமாறிக்கொண்டே சொல்வார். அவர் இவனிடம் மட்டும்தாம் இவ்வளவு வாஞ்சையாகப் பேசுவதுபோல் பட்டது. மாமியும் அப்படித்தான். இவனுக்கென்று மேலும் ஒரு அப்பளம் எடுத்துவந்து சத்தமில்லாமல் இலையில் வைத்துவிட்டு, "நன்னா சாப்டூங்கோ...அப்பத்தானே ஒடம்பு தேறும்?" என்று கேட்டுவிட்டு மூக்குத்தி மின்ன சிருத்துக்கொண்டே சமயல்கட்டுக்குப் போவாள்.

பஸ் ஸ்டாப் நெருங்கிவிட்டிருந்தது. அதுவரை குனிந்துகொண்டே நடந்தவன், பஸ் ஸ்டாப் நிழற்குடையை நோக்கி ஆவலுடன் முகத்தைத் திருப்பினான். அவன் அங்கு கண்ட காட்சி அவனுக்கு மகா வெட்கத்தைக் கொடுத்துவிட்டது. தூரத்தில் வரும்போது அவன் பெண் என்று நினைத்த அந்த உருவம், இப்போது நல்ல பூப்போட்ட கைலியைக் கட்டி ஆணாக மாறிவிட்டிருந்தது! அட ராமா! அவனுக்கு யாரோ முகத்தில் ஓங்கி அறைந்ததுபோலாகிவிட, முகத்தைத் திருப்பிக்கொண்டு கிட்டத்தட்ட ஓடாத குறையாக மெஸ்ஸை நோக்கி நடையைக்கட்டினான். அவனுக்கு புவனேஸ்வரியின் சிரித்தமுகம் இப்போது காட்சியாக, அவள் இவனைப்பார்த்து கிண்டலும் கேலியாகவும் சிரிப்பாதுபோல் பட்டது...

முகத்தில் தாறுமாறாக வழிந்துகொண்டிருந்த வேர்வையை, குனிந்து கைலியின் முனையால் துடைத்துக்கொண்டு நடந்தான். இன்று புவனேஸ்வரியைப் பார்க்க முடியுமா?...பார்க்க முடியும்...பார்த்தாக வேண்டும்... மூளையில் ஒருவித வெப்பம் படர மெஸ்ஸை நோக்கி வேகநடைபோட்டான் மூர்த்தி.
avatar
Guest
Guest


Back to top Go down


பெண்ருசி (குறுநாவல்) - Page 3 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:33 am

"அடக்கடவுளே! என்ன சொல்றே புவனா? நீ சொல்றதெல்லாம் உண்மையா?" என்று கண்கள் விரியக் கேட்டான் மூர்த்தி.

"அப்றம், பொய்யா சொல்றேன்..? வேணுமின்னா அப்பா வந்தப்புறம் கேட்டுக்கோங்க!"-இப்போது அவள் அழுகை மேலும் பொங்கிற்று. பெஞ்ச்சில் கைவைத்து குனிந்தபடி தேம்ப ஆரம்பித்தாள்.

இப்போது பொங்கலைச் சாப்பிட்டு முடித்திருந்தான் மூர்த்தி.

சட்டென உள்ளிருந்து வந்த மாமி, "எல்லாத்தையும் கேட்டுண்டுதாண்டா இருந்தேன்! இவ இதை எப்பிடியும் உன்கிட்டே சொல்லிடுவான்னு நேக்கு நன்னாவே தெரியும்! ஒட்டுக்கேட்டுக்கிட்டிருந்தேன்னு தப்பா நினைச்சிக்காதேடாம்பீ...இவ நேத்திலேர்ந்து இருக்குற மூடைப் பார்த்தே கண்டுபிடிச்சிட்டேன்! வாழ்க்கைய்¢லே நான் பழம் தின்னு கொட்டைபோட்டவடாம்பீ!
ஆனா ஒண்ணு, இவளுக்கு எப்பவும் நான் சொந்த அம்மாவாத்தான் இருந்திருக்கேன்! என்ன கொறைவச்சேன்னு சொல்லச்சொல்லு பார்க்கலாம்!" என்று புவனாவின் பக்கம் கையை நீட்டியவள்,அவனைக் கேள்வியுடன் பார்த்தாள்.

மூர்த்திக்கு ஒருகணம் 'திக்'கென்றிருந்தது.அவளுக்கு இப்போது என்ன சொல்வது?

"நா ஒண்ணும் விவஸ்தைகெட்ட குடும்பத்திலேர்ந்து வரலைடாம்பீ... "தான் சொல்லிருக்கேனோல்லியோ, அப்பா பேங்க் பீஸர்! வசதியாத்தான் இருந்தோம்...திடீர்னு அப்பா அட்டாக்லே போயிட்டார்... அப்றம் ரெண்டு வருஷத்துக்கப்புறம் அம்மா எனக்கு ஒருத்தனைப் பார்த்து கட்டிவச்சா...ஆனா, அவன் ஒரு பிக்பாக்கெட் அப்படீங்கறது அப்றந்தான் தெரிஞ்சது!அம்மா ஏமாந்துட்டா!அந்தக் கவலையிலே அவளும் செத்துப்போயிட்டா!அப்றந்தான் இவாளை யதேச்சையா ஒரு கல்யாணத்துலே சந்துச்சேன்..." -மாமியின் முகத்தில்
வியர்த்துக் கொட்டியது. முந்தானையால் முகத்தைத் துடைக்கையில், அவளது ஜாக்கெட் வியர்வையில் தொப்பலாய் நனைந்துபோயிருந்ததைக் கவனித்தான் மூர்த்தி.

"என்னடாம்பீ எதுவுமே பேசாமே வெறுமனே பாத்துண்டேயிருக்கே?சரீ... ஏன் இன்னும் கை அலம்பாமே உட்கார்ந்திருக்கே? போய் மொதல்லே கை அலம்பிண்டு வாடா...இப்பிடியே சாப்பிட்ட கையை காயவச்சுண்டு இருக்கப்படாதுடா,சாஸ்திரப்படி! " என்றாள் மாமி.

சாப்பிட்ட இலையை எடுத்துப்போட்டு, கை அலம்பிவிட்டு மீண்டும் பெஞ்சில் வந்து அமர்ந்துகொண்டான் மூர்த்தி. அதற்குள் மெஸ்ஸை விட்டு வீட்டினுள்ளே போய்விட்டிருந்தாள் புவனா.

அவனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த மாமி, "மூர்த்தி, ஒண்ணு சொல்றேன், தப்பா நினைச்சிக்காதே... புவனாவுக்கு வயசு ஏறிக்கிட்டே போவுது... அய்யரும் அங்கங்கே வரன் பார்த்துட்டுத்தான் இருக்கார், சரியா அமையலே... அதிர்ஷ்டக் கட்டை! இல்லேன்னா பத்து வயசுலேயே அம்மாவை முழுங்கிருப்பாளா? மூதேவி!... அவளாலே இப்போ சும்மா இருக்க முடியலை...அதான் இப்பிடி அழுது பொலம்பிக்கிட்டுத் திரியிறா!" என்றாள்.

"புவனா பாவம் மாமி, அப்பிடியெல்லாம் பேசாதேள்!"

"ஹைய்! என்னடாம்பி, நீயும் அய்யர் பாஷேலே பேசுறே?"
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 3 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:34 am

"அதான் மாமி, உங்களோட பேசிப்பேசி..."

"அப்பிடிப்போடு! இனி நீ எங்களவா யிட்டே!பேருக்குப் பின்னாடி அய்யர்னு போட்டுக்கோடா இனி!" என்றவள் கலகலவெனச் சிரித்தாள்.

"இல்லே மாமி,அவா அவா இயல்புதான் வரும், அவாவாளுக்கு!" என்றான்.

இப்போது அவனருகில் பெஞ்சில் உட்கார்ந்தகொண்ட மாமி, மீண்டும் கலகலத்தாள். பெண்மை ததும்பும் மெலிதான வெடிச்சிரிப்பின் அதிர்வில் அவள் உடல் இங்குமங்கும் குலுங்கிற்று. அவளிடமிருந்து வந்த வியர்வைகலந்த பூமணம் அவன் நாசியைத் துளைத்தது.

"இங்கே பாருடா மூர்த்தி: நீ இருந்தா எனக்கு பொழுதுபோறதே தெரியல்லேடா! நான் வேறெதும் உன்கிட்டேக் கேக்கலே! சும்மா உன்னையைப் பாத்துண்டேருந்தாப் போதும்டாப்பா!" என்றவள், தன் வளப்பமான முழங்கையை அவனருகில் வைத்து, அதில் மின்னிய தங்க வலையல்கள் இரண்டையும் காட்டி, "இதாண்டாம்பி நான் அய்யருக்கு சீதனமாக் கொண்டுவந்தது! இதுவும் எங்கம்மாவோடது! என்னை ஏமாத்திக்கல்யாணம் பண்ணின்டானே அந்தத் திருட்டு ராஸ்கல், அவன் எங்கம்மா போட்ட சீதனத்தையெல்லாம் ஒருநாள் மொத்தமா திருடிண்டுபோய் வித்துட்டான். சுத்த காவாலிப்பய!"

மெஸ்ஸின் சுவர்க்கடியாரத்தில் மணிபார்த்தான் மூர்த்தி. பத்தே முக்கால்.

"சரி மாமி, அப்போ கெளம்புறேன், தட்ஷிணி, வனஜால்லாம் எனக்காகக் காத்திண்டிருப்பா"

"அப்படியே நீ மாறிட்டேடாம்பி! அய்யர் பாஷே இனி எங்களுக்கு மறந்தாலும் உனக்கு மறக்காது!....சரி, நீ அப்பக் கெளம்பு! போய் நன்னாப் படி. பொண்ணுங்ககிட்டே ஜாக்ரதை! நைட்டு சீக்கிரமா வந்துடு!"

இப்போது அவனது அடிவயிற்றில் ஒரு சிலிப்போடியது. மாமியின் பேச்சுத்தோரணை அவனுக்கு சற்று வியப்பைத்தந்தது.

பெஞ்ச்சைவிட்டு எழுந்து,வீட்டினுள் எட்டிப்பார்த்தான். ஹாலில்கிடந்த கட்டிலில் குப்புறப்படுத்திருந்தாள் புவனா. அவளருகில்போய் அவளது முதுகில் லேசாகத்தட்டி அவளை எழுப்பினான்.
திடுக்கிட்டு எழுந்த புவனாவிடம், "நான் படிக்கப்போறேன் புவனா...நைட்டு வந்திர்றேன்...அப்றம் எல்லாம் பேசிக்கலாம்..." என்றவன், அவள் நிறைய அழுதுவடிந்திருப்பதைக் கவனித்தான்.சற்று யோசனைக்குப்பின், அவளது கன்னத்தை மெதுவாகத் துடைத்துவிட்டான். கன்னத்தில் தடமிட்டிருந்த நீர்த்தாரை அவன் விரல்நுனிகளில் உறுத்தியது.

அவன் முதுகுக்குப் பின்னால் நின்று இதைக் கவனித்துக்கொண்டிருந்த மாமி, "அவ ஒரு கொழந்தைடாம்பீ... அப்பப்போ இப்பிடித்தான் அழுதிட்டிருப்பா... அதையெல்லாம் கண்டுக்காதே...அப்றம் நீ படிக்கமுடியாது! ஏன்னா அவ தினம் தினம் அழுதிண்டேதான் இருக்கா...நீ இப்ப படிக்கக் கெளம்பு..." என்றாள்.

மூர்த்தி படிக்கத் தேவையான நோட்டுகளை பக்கத்து அறையில்போய் எடுத்துக்கொண்டு கல்லூரி வளாகம்நோக்கி நடந்தான். மெஸ்ஸைவிட்டு சாலையில் இறங்கும்போது, அவன் தலையிலும் முதுகிலும் பளீரென அறைந்தது ஏறுவெயில்.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 3 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:34 am

தட்ஷிணியும் வனஜாவும் கொல்லங்காளி கோயில் வாசலில் நின்றுகொண்டிருப்பதைக் கவனித்தான் மூர்த்தி. ரெண்டுபேரும் இவன்மீது பயங்கரக் கோபத்தில் இருப்பார்கள்! அந்தக் காளிதான் காப்பாற்றவேண்டும்!

கோயில் நெருங்க நெருங்க அவர்களின் கோபத்தை எப்படி சமாளிப்பது என்று யோசித்தபடி நடந்தான் மூர்த்தி. மெஸ்சில் நடப்பவற்றை அவர்களிடம் சொல்லிவிடலாமா..? எப்படிச் சொல்வது..? சொன்னால், தட்ஷிணியும் வனஜாவும் என்னைப்பற்றி என்ன நினைத்துக்கொள்வார்கள்...?

கோயில் வாசலை நெருங்கியதும்,"வாங்க ஸார், மூர்த்தி ஸார்...எங்களையெல்லாம் பார்த்தா உங்களுக்கு மனுஷங்களாத் தெரியாது ஸார்!!...சொன்ன நேரத்துக்கு வரமாட்டீங்க!" என்று கிண்டலடித்தாள் தட்ஷிணி.

"ஆமா...சாப்பிடப்போனா வர்றதுக்கு ஏண்டா இவ்ளோ நேரம்..?
மெஸ்ஸிலேயே செட்டில் ஆயிட்டியா? வருவே வருவேன்னு எவ்ளோ நேரம் கால்கடுக்க நிக்கிறோம் தெரியுமா?" என்றாள் வனஜா,அலுப்படைந்த குரலில்.

"ஸாரி...கொஞ்சம் லேட்டாயிடுச்சு...ஒண்ணாங்கிளாஸ்லேர்ந்தே ஸ்கூலுக்கு லேட்டாப் போய்ப்போய் அதே பழக்கமாப்போயிடுச்சு! ஏன், கோயிலுக்குள்லே போயி உட்கார்ந்திருக்கலாமே!"

"சரிசரி...இனியும் ஏதாவது பேசி அறுத்துக்கிட்டிருக்காதே..! படிக்க டைம்மே இல்லே...நாள் ஓடிட்டேயிருக்கு" என்று அவசரப்படுத்தினாள் தட்ஷிணி.

மூவரும் கல்லூரி வளாகம் நோக்கி நடந்தார்கள்.

"எப்பிடியாவது சமாளிச்சிர்றேப்பா!" என்று அவனைப்பார்த்து தன் மையிட்ட விழிகளை அகட்டி அப்பாவித்தனமான குரலில் சொன்னாள் வனஜா. ஒருவிதக் காவிநிறச்சேலையில் 'அசல் பட்டிக்காடு' மாதிரியிருந்தாள் வனஜா.

"ஆமா மூர்த்தி...நீ ஹாஸ்டல்லேதானே தங்கியிருந்தே நைட்டு? ஹாஸ்டல்லே ஏதோ ப்ராப்ளமாமே,கேள்விப்பட்டோம்! ஏய், நம்ம ஸ்ரீதரை யாரோ மூக்கை உடைச்சிட்டானாமேடா?" என்று அவனைப் பார்த்துக் கேட்டாள் தட்ஷிணி.

"யார் சொன்னது?"

"யாரும் சொல்லலே. கோயில் வாசல்லே நிக்கும்போது ரெண்டு சீனியர் பசங்க பேசிட்டுப்போனாங்க...ப்ராப்ளம் ரொம்பப் பெரிசாயிடுச்சுபோல! தன்னோட மூக்கை உடைச்சவனை பழிவாங்கணும்னு அலைஞ்சிட்டிருக்கானாம் ஸ்ரீதர்...கொடுமைல்லே?!"

ஏதும் பேசாமல் மௌனமானான் மூர்த்தி.

"என்ன மூர்த்தி பேசமா இருக்கே? என்ன ஏதுன்னு சொல்லேன்! உனக்குத்தான் எல்லாம் தெரியுமில்லே? ஸ்ரீதரை மூக்கை உடைச்சது யாரு? ஏன் உடைச்சான்..?" என்று கேட்டாள் வனஜா.

"இல்லே...நான் ராத்திரி ஹாடல்லே தங்கலே...மாமா வீட்டுக்குப் போயிட்டேன்...அதான் அங்கே என்ன நடந்ததுன்னு தெரியல்லே...ஆனா, ஸ்ரீதர் மூக்கை உடைச்சது யாருன்னு தெரியும்!"

"யாரு?!"-இருவரும் ஒரே நேரத்தில் ஆவலுடன் கேட்டனர்.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 3 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:34 am

சற்று நிதானித்து, "அது நாந்தான்! நேத்திக்கு இங்கே படிச்சிட்டுப்போனப்ப, அவன் வந்திட்டிருந்தான் இல்லையா, அப்போதான் நடந்தது!"

"எங்களுக்குத் தெரியாதே மூர்த்தி!"என்று கோரஸாய்க் கத்தினர்.

"நீங்க ஹாஸ்டல் பக்கம் திரும்பினப்புறம் நடந்தது!"

”ஏன் மூர்த்தி இதெல்லாம்? நல்லா ·ப்ரெண்ட்ஸாத்தானே இருந்தீங்க ரெண்டுபேரும்?" என்று சோகம் கப்பக் கேட்டாள் வனஜா.

"இருந்தோம்...இப்போ இல்லே...ஏன் சண்டை வந்ததுன்னு கேக்கலீயே!"

"சொல்லு"-தட்ஷிணி.

"எல்லாம் உன்னாலேதான்!"

"என்னது?! என்னாலேயா?"

"ஆமா...உங்கூட சேர்ந்து படிச்சா நீ என்னை 'செட்டப்' பண்ணிருவியாம்!"

"செருப்பாலே அடிப்பேன் நாயை! அப்படியா சொன்னான்! அதுக்கு நீ என்ன சொன்னே?"

"அதுங்க நல்ல பொண்ணுங்கடான்னேன்...அதுக்கு அவன், அப்பிடித்தாண்டா வேஷம் போடுவாளுக! அப்புறம் வலையிலே வீழ்த்தி கவுத்திருவாளுகடா மாப்ளேன்னான்...சண்டை வந்திடுச்சு!"

"அவன் மூக்கை உடைச்சது சரிதான் மூர்த்தி!" என்று உற்சாகம் பொங்கக் கூறினாள் வனஜா.

"அப்பிடியாக்கா! இப்போ அவன் ஆளைச்சேர்த்துக்கிட்டு இவன் மூக்கை உடைக்கப்போறானே, அதுக்கென்ன பண்றதாம்?" என்று வனஜாவைக் கிண்டலடித்தாள் தட்ஷிணி.

மூவரும் இப்போது சோகமானார்கள்.அவர்கள் முகத்தில் இப்போது ஒருவித பீதி நிலவியது.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 3 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:35 am

"இப்போ என்ன பண்றது மூர்த்தி?"-கையைப்பிசைந்தாள் வனஜா.
"பேசாமே இருடி...பார்த்துக்கலாம்!" என்றாள் தட்ஷிணி: "மூர்த்தி... நீ ஒண்ணும் கவலைப்படாதே...ஸ்ரீதரைப் பார்த்து நான் பேசிக்கிறேன்..."
"நீ என்னடி பேசுவே?" என்றுகேட்டாள் வனஜா.
"ஒரு ஐடியா இருக்குடீ! அவனையும் நாம் இங்கே படிக்கக் கூப்பிடுவோம்..."
"அய்யோ! அவனோட எப்பிடிடி படிக்கிறது? "
"நான் கூப்பிடுவோம்னுதான் சொன்னேன்...சேர்ந்து படிக்கப்போறோம்னு சொன்னேனா?" என்றாள் தட்ஸ்.
"நீ பெரிய கில்லாடிடீ!" என்றான் மூர்த்தி: "என்ன பண்ணுவியோ தெரியாது...அவன் என் மூக்கை உடைச்சிறாமே பாத்துக்க!"

"சரி...அதான் நைட்டு மாமாவீட்டுக்குப் போயிட்டியாக்கும்? ஆமா மாமாவுக்குப் பொண்ணு இருக்கோ?" என்று குறும்பான த்வனியில் கேட்டாள் தட்ஷிணி.
"ம்ம்! இருக்கு, இருக்கு!" என்றான் மூர்த்தி.

"என்ன வயசு அவளுக்கு?" என்றுகேட்டாள் வனஜா.
"இருபது! அதிலே ஒரு ஜீரோவைக் கழிச்சிடு!"
"அப்போ! ரெண்டு வயசா!" என்றாள் வனஜா.
"...ஆமா! அதனாலே நீங்கள்லாம் அவமேலே பொறாமைப்படவேண்டாம்!"
"ச்சீ! நாங்க எதுக்குப் பொறாமப்படுறோம்!நீ பெரிய மன்மதனாக்கும்!"-என்றாள் தட்ஷிணி ஒருவித வெட்கிய குரலில்.
"அதிலென்ன சந்தேகம் உனக்கு?அங்க வந்து பார் தெரியும்!"

"எங்கே?"
"மெஸ்ஸ¤லே!"
"என்ன நடக்குது அய்யர் மெஸ்லே?"
"அதை இன்னொரு நாளைக்குச் சொல்றேன்...இப்போ படிக்கிற வேலையைப்பார்ப்போம்!"
அதற்குள் படிக்கவேண்டிய கட்டிடம் வந்திருந்தது. மூவரும் திறந்தே கிடக்கும் அந்த லெக்சர் ஹாலில் அமர்ந்து மின்விசிறியைப் போட்டுக்கொண்டு படிக்க அமர்ந்தார்கள்.

மணி இப்போது ஒன்று. வனஜாவும் தட்ஷிணியும் விடுதிக்குக் கிளம்பினார்கள். மூர்த்தியும் மறுநாள் படிக்கவேண்டிய புத்தகங்களை எடுப்பதற்காக ஆண்கள் விடுதிக்குப் போனான். ஸ்ரீதர் பற்றிய எண்ணம் அவன் மனசில் இழையோடியது....

மத்தியான வெயிலினூடே கல்லறை அமைதியில் உறைந்து நின்றது ஹாஸ்டல்.அவனுக்கு இப்போது அது ஏதோவொரு புதிய இடம்போல் தென்பட்டது. காலமும் சூழலும் மனிதனையும் மனோநிலைகளையும் எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது!

அறையைத் திறந்து உள்ளே போனான் மூர்த்தி. ரெண்டுநாள் இந்தப் பக்கம் வராமல் இருந்ததே பல ஆண்டுகள் வராததுபோன்ற ப்ரம்மையை அவனுள் ஏற்படுத்தியது. ஆங்காங்கே ஒட்டடைபடிந்து ஒரு பாழ்மண்டபம்போல் காட்சியளித்தது அறை.கட்டிலில் மல்லாந்து படுத்து விட்டத்தைப் பார்த்தான்.சுழலாத மின்விசிறி அவனைப் பார்த்து 'சௌக்யமா?' என்று கேட்பதுபோல் பட்டது.

மாமி மெஸ்ஸ¤க்குப் போக அலுப்பாயிருந்தது.எழுந்து மின்விசிறியைப் போட்டுக்கொண்டு கட்டிலில் மீண்டும் படுத்துக்கொண்டான்.

விழித்தபோது அறை மிகவும் இருட்டாயிருந்தது.கண்கள் கபகபவென எரிந்தன.மதியமும் சாப்பிடாததால், வயிறு காய்ந்து வறண்டுவிட்டிருந்தது.

எழுந்து மின்விளக்கைப் போட்டபோது, அறைக்கதவை யாரோ தட்ட, கதவைத் திறந்தான். எதிர்வரிசை அறையில் இருக்கும் நாராயணன்.இவனுக்கு ஒரு வருஷம் சீனியர்.

"வாங்க ஸார்" என்றான் மூர்த்தி, கண்ணைத் துடைத்தபடி.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 3 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:35 am

"மூர்த்தி...இப்போ உன்கிட்டே ஒரு ரகசியம் சொல்லப் போறேன்:நல்லாக் கேட்டுக்கோ! நீ ஸ்ரீதரை அடிச்சிட்டியாமே, அதுக்கு பழிக்குப்பழி வாங்க ஸ்ரீதர் அடியாட்களை செட்டப் பண்ணியிருக்கானாம்...அடியாட்கள் வேறு யாரும் இல்லை...பக்கத்து ஆர்ட்ஸ் காலேஜ்லே படிக்கிற அவனோட ·ப்ரண்ட் தான்...நீ வெளியே போகும்போது உன்னை அடிச்சிச் துவைச்சிர்றதா இருக்கானுங்க! நீ ஜாக்ரதையா இருக்கணும்...இங்கவந்து அடிச்சா, நாங்கள்ளாம் பிரின்ஸிபால்கிட்டே சொல்லிருவோம்னு அவனுங்களுக்குப் பயம்!... அவ்வளவுதான்... வரட்டுமா?" - கிசுகிசுப்பாய்ச் சொல்லிவிட்டு அறையைத் திறந்துகொண்டு போய்விட்டான் நாராயணன்.

மூர்த்திக்குப் 'பக்'என்றிருந்தது. மணிபார்த்தான். எட்டு! கிட்டத்தட்ட,ஏழு மணிநேரம் தூங்கியிருக்கிறான்...ஒரே கனவு வேறு!

அவசரமாய் பாத்ரூம்போய்க் குளித்துவிட்டு, மாமி மெஸ்ஸ¤க்குக் கிளம்பினான் மூர்த்தி.

சாலையில் இறங்கியபோது அவனை நோக்கி ஓடிவந்த நாராயணன்,
"டேய் மூர்த்தி...ஸ்ரீதர் ஆளுங்க கொல்லங்காளி கோயில்லே காத்திருக்காணுங்களாம்...நீ இப்படியே ஹாஸ்டலுக்குப் பின்புறமா ஓடிப்போயிடு...ஓடு!" என்றான்.

ஹாஸ்டலுக்குப் பின்புறம் ஒரே கும்மிருட்டு...மணி ஒன்பதுக்கு மேலிருக்கும். ரயில்வே தண்டவாளத்தை நோக்கி மூச்சுவாங்க ஓட ஆரம்பித்தான் மூர்த்தி. கையில் அரிவாள், கம்புகளுடன் அவனை ஒரு கும்பல் துரத்திக்கொண்டிருந்தது. ஸ்ரீதர் ஏவிவிட்ட ஆட்கள் எப்படியோ அவன் ஓடுவதை மோப்பம்பிடித்து, அவனைத் துரத்தினார்கள்.நல்லவேளை! நாராயணன் கடவுள்போல் வந்து காப்பாற்றினான்.இல்லையென்றால், இந்நேரம் அவன் சட்னியாகியிருப்பான்!

உயிருக்குப் பயந்து முட்புதர்களைத் தாண்டி இப்படிப்பட்ட கும்மிருட்டில் ஓடுவது மூர்த்திக்குப் புது அனுபவம். அவனுக்கு மூச்சு வாங்கியது. பேசாமல் அவர்களை எதிர்த்து 'ஒரு கை' பார்த்துவிடலாமா என்றுகூட ஒருகணம் யோசித்தான். மூர்த்திக்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகம் அவனை அப்படி சிந்திக்க வைத்தது.ஆனால்,அது மூடத்தனம் என்றது அவன் புத்தி.

பாடத்தில் படித்த 'புறமுதுகிடுதல்' அவனுக்கு இப்போது ஞாபகத்துக்கு வர, நடைமுறைக்கும் புத்தகப் படிப்புக்குமான வேறுபாட்டை எண்ணி தனக்குள் நகைத்துக்கொண்டான்.

மூச்சுவாங்க ஓரிடத்தில் நின்று திரும்பிப் பார்த்தான். யாரையும் காணோம். இருட்டில் ஏதும் தெரியவில்லைபோல! அப்பாடா...!
எப்படியும் தப்பிவிடலாம் இனி!

சரி...இன்று தப்பித்தாகிவிட்டது....நாளை?

அந்தநேரம்,ஒரு பெரிய கருவேல மரத்திலிருந்து ஆந்தைக்கூடமொன்று காரேமூரேவென்று அலறி ஓலமிட்டன. கெட்ட சகுனமாச்சே இது!அவன் சின்ன வயசில் இருந்து சகுனம் பார்ப்பான்.அவன் தாத்தாவும் அநியாயத்துக்குச் சகுனம் பார்ப்பவர்.

'கணக்குப் பார்க்காமெ வாழ்ந்தவனும் கெட்டான்!சகுனம் பார்க்காமப் போனவனும் கெட்டான்!'- இப்படி அடிக்கடி சொல்வார் அவன் தாத்தா. அவன் ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போதே அவர் பரலோகம் போய்விட்டார்.

தான் இறக்குமுன் அவர் மாயக்கிருஷ்ணன் பற்றிய பக்திப் பாடலொன்றை பாடிக்கொண்டிருந்ததாக பக்கத்துவீட்டு பாட்டியம்மா அடிக்கடி சொல்லி அதிசயித்துக்கொண்டிருப்பாள்.அந்தப் பாட்டு அவனுக்கு இப்போது ஞாபகத்தில் வந்தது.

சுற்றிலும் பார்த்தான் மூர்த்தி. தண்டவாளம் நீண்டோடிய மேட்டில் ஏறி அந்தப்பக்கம்போனால் அடர்ந்த முந்திரிக்காடு.இப்போது முந்திரிகள் குழைகுழையாய்ப் பழுத்திருக்கும்.
தண்டவாளத்தைக்கடந்து முந்திரித் தோப்புக்குள் புகுந்தான்.முந்திரிப்பழத்தின் அடர்மணம் அவன் நாசியைத் துளைத்தது.பெரிய பாம்பு ஒன்று அவன் காலடியில் சரசரத்துப்போனது. நல்லவேளை, அதை 'டக்'கெனத் தாண்டிவிட்டான். பொதுவாகப் பாம்புகள் காலைச் சுற்றிக்கொண்டால், லேசில் விடாது என்பார்கள்.அவனை இப்போது பிடித்தாட்டும் பாம்பு எது? முந்திரி மரங்களுக்கிடையிலான இருள்வெளியில் அவனுள் இந்தக்கேள்வி எழுந்தது.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 3 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:36 am

முந்திரித்தோப்பினூடான இருளின் அணைப்பில் திகைத்து நின்றான் மூர்த்தி. தன் உயிர் மீதான அக்கறை முதன்முதலாக அவனுக்குத் தோன்றியதுபோல்பட்டது.இந்தச் சூழலிலும் அவனுக்குப் பசியெடுத்தது. சாலையில் அடிபட்டு குற்ருயிராய்க்கிடக்கும் நாயானது, தன் சிதைந்த உடலின் பாகத்தை கடித்து ருசிபார்க்கும் என்பார்களே,அதை இப்போது நினைத்துக்கொண்டான். இந்த நேரத்திலும் இந்தப்பசித்தொல்லை தாங்கமுடியவில்லை. எங்கிருந்துதான் வருகிறதோ இது!

எல்லாவற்ரையும் மீறி எப்படியாவது வாழ்ந்தாகணும் என்ற வெறி இப்போது அவனுள் குடிகொண்டது... வாழ்ந்தாகணும்... வாழ்ந்தாகணும்...வாழ்ந்தே ஆகணும்...

அருகிருந்த முந்திரிமரத்தின் கிளையொன்றில் குத்துமதிப்பாய்க் கைநீட்டித் துழாவினான். ஒன்றும் கிட்டவில்லை. இன்னொரு கிளைக்கு நகர்ந்து மீண்டும் துழாவினான். விரல்களினூடே தட்டுப்பட்டது ஓர் முந்திரிப் பழம்.

அதை வெடுக்கெனப் பறித்து ஆவலாய் உண்டான்.முந்திரிச்சாறு சட்டையில் வழிந்து
வயிற்றுப்பகுதியை நனைத்தது.முந்திரி கரைபட்டால் போகாது என்பது அவனுக்குத் தெரிந்தும் அதுபற்றி அவன் கவலைப்படவில்லை.

இருள்போர்த்தியிருந்த முந்திரிக்கிளைகளில் மீண்டும் மீண்டும் துழாவி, மீண்டும் மீண்டும் கனிகளைப் பறித்துப் புசித்தான்...பசி..பசி..பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது எவ்வளவு உண்மை!

எத்தனை கனிகளைப் புசித்தானோ தெரியாது.இப்போது பசி சுத்தமாய்ப் போய்விட்டிருந்தது. எங்கிருந்தோ அவனுக்குள் ஒரு அதீத பலம் புகுந்துவிட்டிருப்பதை அவனால் உணரமுடிந்தது.

இவ்வளவு இருளிலும் அவனுக்கு சுத்தமாய்ப் பயம் என்பதே தோணவில்லை. வேட்டைநாய்க்குப் பயந்தோடும் முயலுக்கு திடீரென ஒரு அசுரபலம் வந்துவிடும் என்பார்களே அந்தக்கதியில் இருந்தது அவன் கதி.எப்படியும் இனி பிழைத்துக்கொள்ளலாம்.எவனாவது அடிக்கவந்தால்கூட, இனி எதிர்த்துநிற்கலாம்.

இருளின் நீள்வெளியில் இருளோடிருளாய்க் கருத்தோடிய தண்டவாளம் மட்டுமே அவனுக்கு இப்போது ஆறுதல்.அதுமட்டுமே இப்போது அவன் பற்றுக்கோல்; அவன் பக்கபலம்!
அதன்போக்கில்-அதன்வழி நடந்தால் போதும்.ஏதாவது ஊர் வந்துவிடும்!

கல்லூரியின் பின்புறம் கண்ணுக்கெட்டிய தூரம்வரை முந்திரிக்காடுகளும், யூகலிப்டஸ் காடுகளும்தான். தூரத்து இருளில் மின்விளக்குகளூடே இரவின் ப்ரத்யேக அமைதியில் உறைந்திருந்தது கல்லூரி வளாகம். வளாகத்தின் மறுகோடியில் இருக்கும் கோட்டையூர் ரயில்வேநிலைய சோடியம் விளக்குகள் மஞ்சளாய் மினுங்கிக்கொண்டிருந்தன. அரைமணிநேரம் நடந்தால் ரயில் நிலையத்தை அடைந்துவிடலாம்.அங்கிருந்து பத்துநிமிஷ நடையில் மாமி மெஸ் வந்துவிடும்.

முந்திரிமரங்களை பின்னால்விட்டுவிட்டு, தண்டவாள மேட்டில் ஏறி கவனமாய் நடக்க ஆரம்பித்தான் மூர்த்தி. இந்த ரயில்வே ட்ராக் இவனுக்காகவே பதிக்கப்பட்டிருப்பதாய் உணர்ந்தான்.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 3 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:36 am

முந்திரித்தோப்பைக் கடந்து யூகலிப்டஸ் காட்டுப்பகுதிக்கு வந்திருந்தான். உயர்ந்து வான்முட்டி இருளில்நின்ற யூகலிப்டஸ் விருட்சங்களும், அதிலிருந்து கிளம்பிய ஊதல் காற்றோசையும் அவனுள் இருவித கிலியை உண்டுபண்ணின. அவன் சாப்பிட்ட முந்திரிப் பழங்களின் வாசம் இன்னும் அவனைவிட்டு அகலாமல் இருந்தது.

பத்து நிமிடம் நடந்திருப்பான்.தண்டவாளம் இப்போது ஒரு பாலத்தின்மீது ஊர்ந்துசென்றதை உணர்ந்தான்.

மாலை வேளைகளில் இந்தப் பக்கம் இவனும் நண்பர்களுமாய் காற்றுவெளியில் உலவியபடியே படிக்கும்பொருட்டு ஒருசில தடவை வந்திருக்கிறார்கள். அப்போதும் படிப்பைவிட அரட்டையும், முந்திரிப் பழங்கள் பறித்துண்பதுமே முக்கியமாய் நடக்கும்.சமயத்தில் தோப்பினூடே சிதறிக்கிடக்கும் முந்திரிக்கொட்டைகளைப் பொறுக்கி, அதை ஹாஸ்டலுக்கு எடுத்துப்போய் நெருப்பில்சுட்டு உண்பதும் நடக்கும்.

அடடா.. ரெண்டுவருஷம் ஓடியதே தெரியவில்லையே! எந்த இடத்தில் சிக்கல் முளைத்தது? தப்பு யார்பேரில்? சூழலின் தவறா, தன் தவறா, தன் பிராயத்தின் தவறா?

அவன் பெருமூச்சிட்டான். இன்னும் இருபதே நிமிடங்களில் கோட்டையூர் ஸ்டேஷன் வந்துவிடும். பிறகு மாமி மெஸ்.

மணி இப்போது பதினொன்றுக்கு மேலிருக்கும். கையில் கெடிகாரம் வேறு இல்லை. கெடிகாரத்தை எங்கே தொலைத்தான்? ஒருவேளை மாமி மெஸ்ஸில் இருக்கக்கூடும். வரவர ஞாபக மறதி அதிகமாகிவிட்டது.

திடீரென அந்தச் சூழலின் அமைதியை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டது ஒரு மெல்லிய அழுகுரல். சட்டென வெளிப்பட்ட அக்குரலால்,அவனுக்கு ஒருகணம் மூச்சே நின்றுபோனது.

உச்சந்தலை முடிகள் விரைத்து குத்திட்டு நின்றன. ஒருவேளை இது பிசாசாய் இருக்குமோ..? பொதுவாகப் பிசாசுகள் விதவிதமான தோற்றத்தில் வேஷமிட்டு உலவும் என்பார்கள். தன்னைச் சிக்கவைக்க ஏதோவொரு பிசாசு இப்படி அழுகுரல் இடுகிறதோ?

பாலத்தின்கீழான அடர் இருளில் உற்றுப்பார்த்தான்.எதுவும் சரியாகத் தெரியவில்லை. இப்போது அழுகுரல் கொஞ்சம் உக்கிரமாகியிருந்தது.பீதியின் உச்சத்தில் என்னசெய்வதென்று புரியாமல் ஒருகணம் திகைத்துநின்றான்.

அவனை ஏதோவொரு சக்தி முன்னடத்த, தைரிமாய் நடையைத் தொடர்ந்தான். இப்போது அழுகுரல் அவனை மிகவும் நெருங்கிவர, தரைக்குப்பக்கத்தில் தலையைத்தாழ்த்தி கண்ணைக் கூராக்கிப் பார்த்தான். தண்டவாளத்தின் மையத்தில் அழுதபடி உட்கார்ந்திருந்தது கரிய உருவொன்று.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 3 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:37 am

கால்கள் நடுங்க அந்தக் கரிய உருவத்தை நெருங்கினான் மூர்த்தி. அழுகுரல் இப்போது தேம்பலாக மாறியிருந்தது. அது ஒரு பெண்குரல் என்பதை இப்போது அடையாளம் கண்டுகொண்டான்.

அவனுக்குத் தொண்டை வரண்டுவிட்டிருந்தது. தீனமான குரலில் "யாரு..?" என்றான். எந்தப்பதிலும் வராமல்போக, மீண்டும் “யாரது?” என்றான் சற்று குரலுயர்த்தி.

இப்போது தேம்பல் அதிகமானது. அந்த உருவத்தை மெதுமெதுவாய் நெருங்கிப்போய் உற்றுப்பார்த்தான். முக்காடிட்டு அமர்ந்து தேம்பிக்கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

"ஹலோ..யாரு நீங்க..?" என்றான் மீண்டும். அவனுக்கு இப்போது வலது தொடைப்பாகத்தில் ஒரு சிலிர்ப்போடிற்று. முக்காட்டை விலக்கிப்பார்க்க பயம்! அது ஒரு பேயாக இருந்தால்..?

திடீரென கிராமத்தில் கேள்விப்பட்ட கதையொன்று ஞாபகம் வர, மேலும் அதிகரித்தது திகில். ஆட்டோக்காரன் ஒருவன் நடுஇரவு வீடுதிரும்புகையில், குழந்தையுடன் நின்றிருந்த பெண்ணொருத்தியை 'சவாரி ஏற்றிப்போனானாம். யதார்த்தமாய்ப் பின்சீட்டில் திரும்பிப்பார்த்திருக்கிறான். அந்தப் பெண் தன் கையிலிருந்த குழந்தையின் குடலை உருவி விழுங்கிக்கொண்டிருக்க, அதிர்ச்சியில் ஆள் 'அவ்ட்!' அதுபோல் ஏதாவது ஆகிவிட்டால்?

இதயத்தை திடப்படுத்திக்கொண்டு, அவளை நெருங்கி முகத்தை நிமிர்த்திப் பார்த்தான். "என்னை விடு! ரயிலில் விழுந்து சாகப்போறேன்..செத்தே ஆகணும் நான்! என்னைவிடு!"என்று முனகிக்கொண்டிருந்தாள் அப்பெண்.

மூர்த்திக்குப் 'பகீர்' என்க, "நீங்க எந்த ஊருங்க?" என்றான் தாழ்வான குரலில்.

"அதெல்லாம் உனக்கெதுக்கு? உன் வேலையைப் பாத்துக்கிட்டுப்போ!" என்றாள் அவள்.

"சும்மா சொல்லுங்க.. ஏங்க இப்பிடி செத்தே ஆகணும்ங்றீங்க?"-அவன் கேள்வி அவனுக்கே அபத்தமாகப்பட்டாலும், சும்மா கேட்டுவைத்தான்.

"எனக்கு வாழப்புடிக்கலே, சாவப்போறேன்! அவ்வளவுதான்!பேசாமப்போயிடு..இல்லே, ரசாபாசம் ஆயிடும், ஆமா!"-இப்போது அவள் குரலில் ஒரு உறுதி தென்பட, சற்றே பதறிப்போனான் மூர்த்தி.

மூர்த்திக்கு மிகவும் பரிதாபமாய் இருந்தது. வாழ்க்கையில் இப்படியெல்லாம் இருப்பார்களா என்ன!

"டே பையா..இந்த வாழ்க்கை இருக்கே வாழ்க்கை.. இதே யாருமே புருஞ்சிக்கவே முடியாதுடா... இது எல்லாருக்கும் 'பெப்பே' காட்டிட்டு தன்போக்கில் காட்டாறு மாதிரி போயிட்டே இருக்கும்டா..."-அவன் தாத்தா அடிக்கடி சொல்லும் வாசகங்கள் இவை! அவர் சொல்வது எவ்வளவு உண்மை!

தண்டவாள மத்தியில் அவளருகில் அமர்ந்துகொண்ட மூர்த்தி, "இந்த இருட்டுலே எப்பிடிம்மா இவ்வளவு தைரியமா இங்கே வந்தீங்க?" என்று ஏதாவது பேசியாகவேண்டுமே என்பதற்காகக் கேட்டான்.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 3 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed Jan 21, 2009 2:37 am

"சாகப்போறோம்! அப்றம் பயப்புடறதுக்கு என்ன இருக்கு? தலைக்குமேலே வெள்ளம்!" என்றாள் அப்பெண். இப்போதும் அவள் குரலில் சூடும் உக்கிரமும் தென்பட்டது.

"உங்களுக்கு என்ன வயசு?"

"அதெல்லாம் எதுக்கு உனக்கு?போ..போய் உன் ஜோலியைப்பாரு!"-சொல்லிவிட்டு டக்கென எழுந்து அவனைவிட்டு சற்று தள்ளிப்போய் தண்டவாளத்தில் தலைவைத்துப்படுத்துக்கொண்டாள் அவள்.

திடுக்கிட்ட மூர்த்தி, "ஏங்க! என்னங்க இப்பிடிப்பண்றீங்க? பேசாமக் கெளம்புங்க!" என்றான் பதைப்புடன்.

"எங்கே?"

"எனக்கு ஒரு தெரிஞ்ச இடம் இருக்கு, அங்கே.."

"நான் உங்கூட வந்தா எனக்கு வாழ்வுகுடுப்பியா நீ?"

மௌனமானான் மூர்த்தி.

"நான் செத்தே ஆகணும்! என்னைத் தடுத்தே, அப்புறம் நீயும் ரயில்லே அடிபட்டுப் போகவேண்டியதுதான்!"

"இல்லே..நீங்க சாகக் கூடாது!"

அந்தச்சமயம்,தண்டவாளத்தில் ஒரு அதிர்வு கிளம்ப, சற்று தள்ளி ஒரு ரயில் வந்துகொண்டிருப்பதை அறிந்து அதிச்சியுற்றான் மூர்த்தி.

அந்தப்பெண் இப்போதும் எழவில்லை. தண்டவாளத்தின்மீது இன்னும் நன்றாகப்படுத்துக்கொண்டாள். பதற்றத்தின் உச்சியில் தண்டவாளத்தைவிட்டு வெளியேகுதித்து அவளது கால்களைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தான் மூர்த்தி.ரயிலின் ஹாரன் ஒலி மிகவும் நெருங்கிவர, பலங்கொண்டமட்டும் அவளை இழுத்தான். அசைந்துகொடுக்கவில்லை அவள்! என்ன ஒரு பலம்!

சாகப்போகிறவர்களுக்கு சாவின் கடைசி நிமிடங்களில் வரும் பலம் இது!

"ஏய்..எழுந்திரு..எழுந்திரு..ரயில் நெருங்கிடுச்சு..ஏந்திரிடீ.."-கத்திக்கொண்டே மீண்டும் இழுக்க, கொஞ்சம் அசைந்துகொடுத்தாள் அவள். பின், சட்டென எழுந்து தண்டவாளத்தைவிட்டு வெளியே வந்தாள்..கிட்டத்தட்ட அதே நொடியில் அந்த இடத்தைக் கடகடப்புடன் கடந்தது ரயில்.

ரயிலின் மொத்தநீளமும் கரைந்துபோகும்வரை, அவளைக் கட்டிப்பிடித்தபடி நின்றுகொண்டிருந்தான் மூர்த்தி.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 3 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum