புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துளியோ பெருவெள்ளமோ! Poll_c10துளியோ பெருவெள்ளமோ! Poll_m10துளியோ பெருவெள்ளமோ! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
துளியோ பெருவெள்ளமோ! Poll_c10துளியோ பெருவெள்ளமோ! Poll_m10துளியோ பெருவெள்ளமோ! Poll_c10 
3 Posts - 8%
heezulia
துளியோ பெருவெள்ளமோ! Poll_c10துளியோ பெருவெள்ளமோ! Poll_m10துளியோ பெருவெள்ளமோ! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
துளியோ பெருவெள்ளமோ! Poll_c10துளியோ பெருவெள்ளமோ! Poll_m10துளியோ பெருவெள்ளமோ! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
துளியோ பெருவெள்ளமோ! Poll_c10துளியோ பெருவெள்ளமோ! Poll_m10துளியோ பெருவெள்ளமோ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

துளியோ பெருவெள்ளமோ!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 09, 2012 6:28 pm

நாப்பது வருடங்களுக்கு முன்னால் திசையன்விளைப்பக்கம் ஒரு கடலோர கிராமத்திலிருந்து வந்த ஒரு கிறித்துவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த தம்பதிகள் அவர்கள். எங்கள் ஊர்ப் பள்ளிக்கூடத்தில் ரெண்டு பேரும் ஆசிரியர்களாகப் பணியேற்றார்கள். ரெண்டு பேராக வந்த அவர்கள் இப்போது ஒன்பது பேர் கொண்ட பெரிய குடும்பமாகியிருந்தார்கள். சாருக்கும் டீச்சருக்கும் இடையிலான அளவற்ற காதலின் அடையாளமாக ஏழு பிள்ளைகள். ரெண்டு பேரும் நல்ல வாட்டசாட்டமான வளர்த்தி. நல்ல ஆரோக்கியமான உடல்வாகு. ஆகவே ஏழு பிள்ளைகளும் வாச்சி வாச்சியாக நல்ல வளர்த்தி. பள்ளிக்கூடத்தின் சகல விளையாட்டுப் போட்டிகளிலும் டீச்சரின் பிள்ளைகள்தான் கப்கள் வாங்குவார்கள். படிப்பு சுமாராக இருக்கும். ஆனால் விளையாட்டில் யாரும் கிட்ட நிக்க முடியாது. முட்டையும் மீனும் கருவாடும் பாலுமாக டீச்சர் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்ப்பதை ஊரே பார்த்துப் பார்த்துப் பொறாமைப்படும். நாலு பையன்கள், மூணு பெண்கள். எல்லாம் கிட்டத்தட்ட ஒரே முக ஜாடை-திசையன்விளைச் சாடை. அப்பக்கத்து மக்களின் முகத்தில் எப்போதும் ஒரு ஆரோக்கியம் தவழும். முரட்டு உழைப்பாளிகள். இயற்கையோடு இயைந்த வாழவும் சாப்பாடும். பொய்யான பூச்சுகள் ஏதுமற்ற அசலான ஊர்ச்சாடை படிந்த முகங்கள்.

நாங்கள் இருபத்தஞ்சு வருடத்துக்கு முன்னால் இந்த ஊருக்குக் குடி வந்தபோது தினசரி இந்த டீச்சர் வீட்டில்தான் பால் வாங்குவோம். அவர்கள் வீட்டில் எப்பவும் நாலைந்து பால் மாடுகள் நிற்கும். ஏழு பிள்ளைகளுக்கும் வளமாகப் பால் புகட்ட நாலு மாடும் மற்றவர்களுக்கு விற்க ஒரு மாடும் எந்நேரமும் பால் தந்துகொண்டே இருக்கும். ஏழு பிள்ளைகளும் தெருவுக்கு ஒன்றாகக் காலையும் மாலையும் பதிவு வீடுகளுக்குத் தூக்குவாளிகளில் பால் கொண்டுபோய் ஊற்றுவார்கள். பிள்ளைகள் பால் ஊற்றிவிட்டுப் போகவும் பின்னாலேயே அந்த சார் சைக்கிளில் வருவார். ஊரின் மாதச்சம்பளக்காரர்கள் எல்லோருமே அவரிடம் சீட்டுப் போட்டிருப்போம். எப்படிக் கட்டு செட்டாப் பொழைக்கிறாங்க. நாமளும் வாழ்க்கைன்னு ஒண்ணு நடத்துறமே என்று என் துணைவியார் என்னை இடித்துரைக்க ஒரு முன்னுதாரணமாகவும் அந்தக் குடும்பம் இருந்து கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடந்த ஆசிரியர் போராட்டத்தில் மாதக்கணக்கில் அவர் சிறைக்கும் போயிருந்தார் என்பதால் எனக்கும் அவர்மீது ஒரு அன்பு இருந்தது. அந்த ஒரு காரணத்துக்காகவே அவரிடம் மாதச்சீட்டு போட்டேன். சேமிப்பது தப்பு என்கிற கொள்கை எனக்கு அப்போது திடமாக இருந்தது. சம்பாத்திக்கிறதை அப்பப்போ செலவழிச்சிடணும். இள வயசில் இப்படி ஏராளமான லட்சியங்கள், கொள்கைகளெல்லாம் இருக்கும் தானே?

அப்பவே அவரிடம் ஒரு என்ஃபீல்டு மோட்டார் பைக் உண்டு. ஆனால் அதை அவர் எல்லா நேரமும் வெளியே எடுக்க மாட்டார். அவரும் டீச்சருமாக சர்ச்சுக்குப் போகும்போது அல்லது திருநெல்வேலிக்குச் சாமான்கள் வாங்கப்போகும்போது தம்பதி ஜமேதாராகப் போவதற்கு மட்டுமே அந்த வண்டி. பள்ளிக்கூடத்துக்கு ரெண்டுபேரும் பைக்கில் ஜோடியாக வரும் காட்சியைப் பார்ப்பது ரொம்ப உற்சாகமாக இருக்கும். பைக் சத்தம் கேட்டு நான் வீட்டுக்குள்ளேயிருந்து ஓடிவந்து ஜன்னல் வழியாக அந்த அன்பு கலந்த காட்சியைப் பார்ப்பேன். இந்தப் பள்ளிக்கூடத்தில் டீச்சர்களின் கொண்டை இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற உத்தரவு ஏதும் இல்லை. ஆகவே எல்லா டீச்சர்களும் கொண்டை போடாமல் ஜடையைத் தொங்கவிட்டே போவார்கள்-என் துணைவியார் உட்பட. ஆனால் அந்த டீச்சர் மட்டும் எப்போதும் போல வட்டக் கொண்டை போட்டுத்தான் சாருடைய பைக்கில் பின்னால் உட்கார்ந்து வருவார். சிறுவயதில் திசையன்விளைப் பக்கம் கிறித்துவப் பள்ளிக்கூடம்-டீச்சர் என்றாலே இந்த வட்டக் கொண்டையும் கையில் குடையும் என்கிற பிம்பம் அவருடைய மனதில் ஆழப் பதிந்திருக்க வேண்டும். பள்ளி தவிர்த்த வேறு இடங்களுக்கு அவர் கொண்டை போட்டுப் போவதில்லை என்பதையும் சில கல்யாண வீடுகளில் அவரைப் பார்த்த அனுபவத்தில் தெரிந்துகொண்டிருந்தேன். சாருடன் பைக்கில் வரும்போது டீச்சரின் கறுத்த முகத்தில் பெருமிதத்தின் ஒளி படர்ந்திருக்கும். சார் இல்லாத நாட்கலில் தனியாக அவர் குடை பிடித்து நடந்து வரும் சமயங்களில் அந்த ஒளி காணாமல் போயிருப்பதையும் நான் ஜன்னல் வழியே கவனித்திருக்கிறேன்.

சார் எப்போதும் அந்த டீச்சரை வாடா போடா என்றுதான் செல்லமாகக் கூப்பிடுவார். சின்னக் காரியமானாலும் டீச்சரிடம் கலந்து பேசாமல் சார் ஒரு முடிவும் எடுக்க மாட்டார். ரொம்ப ஜனநாயகமாகக் குடும்பம் நடத்துவார்கள். சீட்டுப்பணம் வாங்க பணம் கட்ட என்று ஓரிரு முறை அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கிறேன். அவ்வளவு அந்நியோன்யமாக அவர்கள் பரிமாறிக்கொள்ளும் வார்த்தைகள் எனக்குப் பெரும் மன நெகிழ்ச்சியை உண்டு பண்ணுவதாக இருக்கும். ஐம்பது வயதைத் தாண்டிவிட்ட பிறகும் அவர்களுக்கிடையில் பரிமாறிக்கொள்ளப்படும் காதலின் மெருகு குலையாத அந்த வார்த்தைகள் கேட்டுப் பெருமூச்சில் என் நெஞ்சு விம்மித் தணியும். அவர்கள் வீட்டில் சாதாரணமாக மத்தியதரவர்க்க வீடுகளில் இறைந்து கிடக்கும் நுகர்வுக் கலாச்சாரச் சாதனங்கள் எதையும் பார்க்க முடியாது. தொழுவத்தில் மாடுகள் கத்தும் ‘ம்மா...’ சத்தமும், பாலும் சாணமும் கலந்தடிக்கும் ஒருவிதக் கவிச்சியும் அவர்கள் வீட்டுக்குள் எப்போதும் சுழன்று கொண்டிருக்கும். எந்த ஊருக்குப் போனாலும் தம் பூர்வீக ஊரைத் தம் வீட்டுக்குள் கொண்டுவந்துவிட முடிகிற அவர்கள் மீது பொறாமையாக இருக்கும். என்ன ஒரு அசலான வாழ்க்கை. நாங்கள் அக்கிரகாரத்தில் குடி புகுந்ததால் ஆரம்ப நாட்களில் அண்டை அயலாரின் மன உணர்வை மதித்து கவிச்சி ஏதும் சமைப்பதில்லை. அந்த நாட்களில் டீச்சர் வீட்டில் கருவாடு மீன் சமைத்தால் அங்கிருந்து தூக்குவாளியில் குழம்பு எங்க வீட்டுக்கு வந்துவிடும். ஏழு பிள்ளைகளில் ஒன்று குழம்புடன் வந்து வாசலில் நிற்பதைக் கண்டாலே எங்களுக்கு ஆன்ந்தமாகிவிடும். சாம்பாரைத் தூக்கி ஓரங்கட்டி விட்டு சுறுசுறுப்பாக களத்தில் இறங்கிவிடுவோம்.

இதுவரையிலான கதையில் சுவாரஸ்யம் ஒன்றும் இல்லை. திடீரென்று ஒருநாள் அந்த சாரைக் காணவில்லை. அவருடைய பைக் மட்டும் தனியாக பாளையங்கோட்டையில் ஒரு கடை வாசலில் நின்று கொண்டிருந்ததை ரெண்டு நாள் கழித்து அவருடைய பையன்கள் கண்டுபிடித்தார்கள். யாரும் கடத்திக் கொண்டு போய்விட்டார்களா? எங்காவது பஸ்ஸில், லாரியில் அடிபட்டு விட்டாரா? ஒன்றும் புரியவில்லை. போலீஸ் ஸ்டேசன்களிலும் அரசாங்க ஆஸ்பத்திரி மார்ச்சுவரிகளிலும் தெரிந்த ஊர்களிலுமென அவருடைய நான்கு இளவட்டப் பையன்களும் டீச்சரின் அண்ணன், தம்பிமார்களும் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். பள்ளிக்கூடத்தில் சார் லீவு லெட்டரும் கொடுக்காம ஒரு தந்திகூடக் கொடுக்காம ஆப்சென்ட் ஆகியிருக்காரே என்னம்மா சொல்றீங்க என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். பத்துநாள் ஆகியும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. பள்ளி நிர்வாகம் ஆளைக் காணவில்லை என்று தினசரிகளில் ஒரு விளம்பரம் கொடுத்தார்கள். சாரையும் டீச்சரையும் பிடிக்காதவர்கள் கொண்டாட்டமாகக் கதைகளைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள். டீச்சரும் லீவு போட்டுவிட்டு வீட்டில் அழுதபடி கொலைப்பட்டினியாகக் கிடந்தார்கள். அவருடைய மூன்று பெண்மக்களும் அவரைச் சுற்றிலும் சுருண்டு கிடந்தார்கள். நாங்கள் போய் ஆறுதல் சொல்லிவிட்டு வந்தோம். என் ராஜன் எங்கே எப்படி பட்டினி கிடக்காரோ? என்ன நிலைமையில் இருக்காரோ என்று டீச்சர் அழுது புலம்பியபடி இருந்தார். சரியாகத் தீவனம் வைக்காததால் மாடுகள் தொழுவத்திலிருந்து எந்நேரமும் ம்மா... ம்மா... என்று கதறியபடி இருந்தன. ‘உங்க அப்பாவைக் காணலியே... உங்களுக்கு யாரு தீவனம் வைப்பா...’ என்று மாடுகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டு டீச்சர் அழுதார். அதிக நேரம் அங்கு உட்காரச் சகியாமல் எங்களுக்குத் தெரிந்த சில யோசனைகளைச் சொல்லிவிட்டு ‘எப்படியும் சார் வந்திடுவாரு பயப்படாதீங்க’ என்று பொதுவாகச் சொல்லித் திரும்பிவிட்டோம்.

பத்திரிகைகளில் பள்ளி நிர்வாகம் விளம்பரம் கொடுத்த மூன்றாவது நாள் கதையில் திருப்புமுனை ஏற்பட்டது. தேனியிலிருந்து பள்ளிக்கூடத்துக்கு ஒரு தந்தி வந்தது. ஒரு மாதம் லீவு கேட்டு சார் அனுப்பிய தந்தி அது. ஒரு வேனை எடுத்துக்கொண்டு பையன்களும் டீச்சரின் சகோதரர்களும் பறந்தார்கள். டீச்சரின் முகத்தில் நம்பிக்கை ஒளிக்கீற்று. போன மூணாவது நாள் பையன்கள் போன வேன் திரும்பி வந்தது. வேனிலிருந்து இறங்கிய சாரின் முகம் உடம்பெல்லாம் அடிபட்ட காயம். ஓடிவந்து சாரைச் சேர்த்துக்கொண்டு அழுத டீச்சரைப் பிரித்துத் தூரத் தள்ளிய அவருடைய பையன்கள் சாரை வீட்டுக்குள் தள்ளிக் கதவைப் பூட்டிக்கொண்டு அவரைச் சாத்த ஆரம்பித்துவிட்டர்கள். அவர் எந்த எதிர்ப்புமில்லாமல் பையன்களிடம் அடி வாங்கிக் கொண்டிருந்தார்.

பின்னாடியே போலீஸ் ஸ்டேஷனிலிருந்து எல்லோரையும் உடனே வரச்சொல்லி சேதி வந்தது. சஸ்பென்ஸ் ஒண்ணும் இல்லை. எல்லாம் வழக்கமான ஆண்களின் துரோகம்தான். ஒரு பொண்ணை அழைத்துக் கொண்டு சார் தேனிப்பக்கம் போய்ப் புது வாழ்க்கை துவங்கிவிட்டார். கல்யாண வயசில் ரெண்டு பொண்ணுங்க. முழுத்த இளவட்டமாக மூணு பசங்க. இந்த வயசிலே சார் புத்தி இப்பிடிப் போயிட்டுதே என்று ஊரார் பேச்சு உடனே துவங்கியது. சார் அழைத்துச் சென்ற அல்லது சாரை அழைத்துச்சென்ற அந்தப் பெண்ணுக்கு முப்பது வயதிருக்கும். கணவனை இழந்த அவர் சார் மீது கொண்ட காதலால் தேனிக்குப் புறப்பட்டுவிட்டாள். அங்கே ஒரு மில்லில் காண்ட்ராக்ட் தொழிலாளியாக சார் வேலைக்குச் சேர்ந்து அன்றாடங்காய்ச்சியாகப் புது வாழ்வு துவங்கியது. ஆனாலும் பத்து நாளில் பழைய வாழ்வு வேன்போட்டுத் தேடி வந்துவிட்டது.

அவள் சார் வீட்டுக்கு அடுத்த தெருவில் குடியிருந்த பெண் தான். அவ்வப்போது வந்து டீச்சருக்கு வீட்டு வேலைகளில் உதவியாக இருந்து கொடுப்பதை வாங்கிக்கொண்டு போகிற பெண்ணாக இருந்தாள். தன் பிரியமான காதல் மனைவிக்கு உதவி செய்கிற பெண்ணாக இருக்கிறாளே என்பதால்தான் அவள்மீது தனக்கு ஈடுபாடு வந்ததாக ஸ்டேஷனில் வைத்து சார் சொன்னார். எல்லோரும் சிரித்தார்கள். ‘ஏன்வே... இப்படி மானத்த வாங்குதீரு..’ என்று அவருடைய மச்சினன்மார்கள் தலையில் அடித்துக்கொண்டார்கள். ஆனால் டீச்சர் சார் சொன்னதை அப்படியே நம்பியது போலத்தான் இருந்தது. தன் மீது கொண்ட அளவற்ற காதலின் நிழல்தான் அந்தப் பெண்மீது விழுந்ததாக டீச்சரும் நம்பினார். பத்து நாள் வாழ்ந்த வகைக்கு என்று கொஞ்சம் பணமும், தையல் மிஷினும், ஒரு டி.வி. பெட்டியும் கொடுத்து ஸ்டேஷனில் சாரின் அந்தப் புது வாழ்க்கையை வெட்டி விட்டார்கள்.

மீண்டும் ரெண்டுபேரும் பள்ளிக்கூடம் வர ஆரம்பித்தார்கள். பைக் சத்தம் கேட்டு நான் ஜன்னலுக்கு ஓடி வந்தேன். இப்போது அந்த டீச்சரின் முகம் எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆசைப் பட்டேன். ஆனால் பைக்கை டீச்சரின் மூத்த மகன் தான் ஓட்டி வந்தான். பின்னால் சார் தனியாக சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். குடும்பத்தில் பையன்கள் தலையெடுத்துவிட்டது தெரிந்தது. பையன்கள் வாராத ஒரு நாள் மாலை ஸ்கூல் விட்டபிறகு எல்லோரும் போகட்டும் என்று காத்திருந்து அப்புறம் தனியாக டீச்சர் நடந்து வந்ததைப் பார்த்தேன். தெருவில் அவரால் நிதானமாகவே நடக்கவே முடியவில்லை. ஒரு ஓரமாக நடந்து வந்தவர் அவரை அறியாமலே அப்படியே நடந்து நடந்து மறு ஓரத்துக்கு சரிந்து வந்தார் மீண்டும் மறு ஓரம். தள்ளாடிய அவரது நடை மனதைப் பிசைவதாக இருந்தது. அவர் என்ன தப்பு செய்தார்? அவருக்கு ஏன் இந்த அவமான உணர்வு? எத்தனை பெருமையும் பெருமிதமும் கொண்டதாக ஓடிக்கொண்டிருந்த வாழ்வின் மீது கேலிச்சிரிப்புகள் மோதி எதிரொலிக்கும்படி ஆகிவிட்டதே? ஆனாலும் டீச்சர் செய்த தப்பு என்ன?

சாரும் தொடந்து பள்ளிக்கு வரவில்லை. விருப்ப ஓய்வுக்கு எழுதிக்கொடுத்துவிட்டார். சரி, அவருக்கும் எல்லோரையும் சந்திப்பது சங்கடமாகத்தானே இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பென்சன் கிராஜுட்டி பணம் முழுவதையும் மனைவியே பெற்றுக் கொள்ளும்படியாக ஏற்பாடு செய்துவிட்டு மறுபடியும் சார் காணாமல் போய்விட்டார். (அந்தப் பெண்ணும் காணாமல் போனாள் என்பது சொல்லாமலே விளங்கும்) இப்போது அவரைத் தேடிக் கண்டுபிடிக்க எந்தத் தடயத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. பிள்ளைகளும் சனியன் தொலையட்டும் என்று விட்டுவிட்டார்கள்.

சாருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் அவர்போன பிறகு சொன்ன தகவல் காற்றில் பரவிக்கொண்டிருந்தது. சாருக்கும் டீச்சருக்கும் இடையில் ஊடாடிய அளவற்ற காதலை வீட்டில் வேலை செய்ய வந்த அந்தப் பெண் அருகிருந்து பார்த்து அந்தக் கதகதப்பில் தானும் மயங்கி அவள்தான் முதலில் சார் மீது மையல் கொண்டாளாம். எல்லோரும் நினைப்பதைப் போல சார் ஒன்றும் இன்னொரு பெண் தேடி அலையவில்லையாம். அவள் தினசரி வீட்டுக்கு வந்து சாரோடு வலியப் பேச்சுக் கொடுத்து காதலை மூட்டி வளர்த்து அவளோடு வந்து வாழாவிட்டால் பிளேடு கொண்டு தன் தொண்டையை அறுத்துக்கொண்டு செத்துப்போவேன் என்று சாரை மிரட்டி அழைத்துப் போனாளாம். மிரட்டி என்று சொல்ல முடியாது. எப்படி பிளேடால் தன்னை அழித்துக் கொள்வேன் என்பதற்கு சாம்பிளாக பிளேடு கொண்டு தன் கையில் கீறிக்காட்டுவாளாம். இத்தனை வன்மையான காதலுக்கு மரியாதை செய்யாமல் எப்படிவே... இருக்க முடியும் என்று சார் அந்த நண்பரிடம் சொன்னாராம். இப்போது எந்தக் காதலின் நிழல் எந்தக் காதல் என்று டீச்சருக்குக் குழம்பிவிட்டது.

கதை இன்னும் முடியவில்லை. டீச்சரின் மூத்த பொண்ணுக்குக் கல்யாணம் பேசினார்கள். கல்யாணப் பத்திரிகை வந்தது. ஆவலோடு பிரித்துப் பார்த்தேன். அதில் சாருடைய பெயர் எந்த இடத்திலும் இல்லை. பையன்கள் ரொம்ப உறுதியுடன் அவரை நிராகரித்து விட்டது தெரிந்தது. தவிர இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதற்குத்தான் எந்தத் துப்பும் இல்லையே. பாஸ்போர்ட் வாங்கிக் கொண்டு ரெண்டு பேரும் துபாய்க்குப் போய்விட்டதாகவும் ஒரு வதந்தி இருந்தது. கல்யாணத்துக்குப் போனோம். மண்டப வாசலில் சாரும் டீச்சரும் தம்பதி ஜமேதராக நின்று எல்லோரையும் வரவேற்றபடி நின்றார்கள். எனக்கு அதிர்ச்சி-பலரும்தான். எப்படித் தகவல் கிடைத்து எப்படிச் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தார் என்பது ஆச்சரியமாக இருந்தது. காதலுக்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா? வேறொண்ணுமில்லை பிள்ளைகள் வெறுத்தாலும் டீச்சர் அவரை வெறுக்கவில்லையே. அவரும் டீச்சர் மீது கொண்ட காதல் அப்படியேமாறாமல் இருப்பதாகத்தானே போலீஸ் ஸ்டேசனில் வைத்து சொன்னார். அவர் என்கே இருக்கிறார் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது டீச்சருக்குத் தெரியுமாம். சார் எங்கிருந்தாலும் தினசரி ராத்திரி படுக்கப் போகுமுன் டீச்சரிடம் (கடைக்குட்டியான சின்ன மகளுடன்) போனில் பேசிவிட்டுத்தான் போவாராம். பத்துப்பைசாகூட இந்த வீட்டிலிருந்து எடுத்துச் செல்லாமல் அன்றாடம் அங்கே உழைத்துதான் அங்கே கஞ்சி குடிக்கிறார். அவரளவில் ஒரு நியாயத்தை அவர் வைத்திருப்பதாக நினைக்கிறார். இப்படி ஒரு சமநிலைக்கு அந்தக் குடும்பம் வந்துவிட்டது. அந்தக் குடும்பத்தைப் பற்றி பேச்செடுத்தாலே ‘அவன் ஒரு மனுசன்னு அவன் பேச்சை எடுக்குறீங்க’ என்று மற்ற வீடுகளில் நிறுத்துவார்கள். ‘ நல்லா நாலு மிதி மிதிச்சு அவளை எங்கிட்டாச்சும் விரட்டி விட்டுட்டு புருசன்காரனை வீட்டிலே கட்டிப் போடாம டீச்சர் இப்படி விட்டுட்டாளே’ என்று பேசுகிறார்கள். ‘இத்தனை வயசுக்குப் பிறகு....ம். என்ன குடும்பமோ போங்க...’ என்று எங்க வீட்டிலும் பேச்சு வரும்.

கல்யாணமண்டபத்தில் அவரும் டீச்சரும் ஓடி ஓடி எல்லோருக்கும் பரிமாறினார்கள். அவர் எல்லோர் பார்வையிலும் படாமல் எங்காவது ஒரு அறைக்குள் அடைந்து கிடந்தால் நல்லது என்று பையன்கள் கோபப்பட்டார்கள். ‘உம்மை யாரு பரிமாறச் சொன்னது’ என்று வெளிப்படையாகவே திட்டினார்கள். ‘சரியப்பா... சரியப்பா’ என்று பையன்களைச் சமாதானம் செய்துகொண்டே அவர் பரிமாறிக் கொண்டிருந்தார். பரிமாறிக்கொண்டிருந்த டீச்சரைப் பார்த்து ‘ நீ ஏண்டா... கஷ்டப் படுறே... வச்சிட்டுப் போ... நான் பாத்துக்க மாட்டேனா...’ என்று அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தார். அவர் அப்படிச் சொல்லும்போது நான் அவசரமாக டீச்சரின் முகத்தைப் பார்த்தேன். பழைய அந்தப் பெருமிதத்தின் ஒளிக்கீற்று அவர் முகத்தில் மின்னலைப் போல இப்போதும் ஒரு கணம் தோன்றி மறைந்ததைக் கண்டேன்.

பெருவெள்ளமாகக் கிடைத்தாலும் சரி இப்படி ஒரு கீற்றுப்போல ஒரு கணம் மின்னினாலும் சரி காதல் அழியாமல் இருக்கிறதே அதுவே போதும் என்று டீச்சர் சமாதானமாகிவிட்டார். சரி தப்பென்று இக்கதையை அலசலாம்தான். ஆனால் எனக்கு முக்கியமாகப் படுவது இந்தச் சமாதானமாகும் மனநிலைதான். அந்த முதல் பத்துநாள் புது வாழ்க்கையோடு சாரும் சமாதானமாகியிருந்தால் பழைய வாழ்க்கையைச் சில நாட்களில் மீண்டும் சகஜநிலைக்குக் கொண்டு வந்திருக்கலாம். அல்லது ரெண்டாவது முறை அவர்கள் கிளம்பிப் போனதை ஏற்காமல் டீச்சர் சமாதானமாகாமல் இருந்திருந்தால் சாரும் திரும்பியிருப்பார். சரி போதும் என்று அந்தப் பெண்ணும் சமாதானமாகியிருக்கலாம்.

சமாதானம் ஆகிவிட்டால் எந்த மாற்றமும் நடக்காதல்லவா?

- ச. தமிழ்ச்செல்வன்
(பேசாத பேச்செல்லாம்...)
பகிர்வு - http://www.tamilleader.in/news/1186-2012-01-09-08-05-51.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக