ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரபுலக எழுச்சியில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய பாடங்கள்

Go down

அரபுலக எழுச்சியில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய பாடங்கள்  Empty அரபுலக எழுச்சியில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய பாடங்கள்

Post by கண்ணன்3536 Sun May 29, 2011 2:25 pm


பெரும்பாலான தமிழ் வலைப்பூக்களும் இணையத்தளங்களும் வெறும் அரட்டை மடங்களாகவும் அவதூறுக் களஞ்சியங்களாகவும் செயற்படும் இன்றைய சூழலில் அரபுலக இளைஞர்கள் வரலாற்றில் தமக்குரிய இடம் குறித்த மிகுந்த பொறுப்புடன் செயற்பட்ட இந்நிகழ்வு ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கது. இதே பொறுப்புடன் தொடர்ந்து அவர்களின் செயற்பாடுகள் அமைந்தன.

மத்திய கிழக்கு என நாம் பொதுவாகச் சொல்லக்கூடிய வட ஆபிரிக்கா மற்றும் வளைகுடாவை உள்ளடக்கிய பகுதிகளில் தொடராக அமைந்துள்ள முஸ்லிம் நாடுகளின் கிழட்டு சர்வாதிகாரிகளும் முடி மன்னர்களும் இன்று கதிகலங்கிக் கிடக்கின்றனர். டியூனீசியா, எகிப்து இரு நாட்டுக் கொடுங்கோலர்களும் ஏற்கனவே ஓடியாயிற்று. லிபியாவின் 40 ஆண்டுகால சர்வாதிகாரி முஅம்மர் கடாபி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். பிற நாடுகளின் சர்வாதிகாரிகளும் முடி மன்னர்களும் ஏராளமான வாக்குறுதிகளையும் சலுகைகளையும் அள்ளி வீசி வருகின்றனர். பல ஆண்டுகால நெருக்கடி நிலை அறிவிப்பை நீக்குதல் (அல்ஜீரியா), பிரதமரைப் பதவியிலிருந்து நீக்குதல் (ஜோர்தான்), அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டேன் என அறிவித்தல் (யேமன்), ஏராளமான பொருளாதாரச் சலுகைகளை அறிவித்தல் (சவூதி அரேபியா) என்கிற வடிவங்களில் இந்த வாக்குறுதிகள் அமைகின்றன.

டியூனீசியாவில் வெடித்துப் பற்றிய தீ ஒரு முனையில் பற்ற வைத்த பட்டாசுக் கட்டு கண நேரத்தில் அடுத்தடுத்து தாவி வெடித்துச் சிதறுவதைப் போல தொடராகவுள்ள இந்த நாடுகளில் பற்றி வெடித்து எரிந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 20 நாடுகளில் இன்று மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.

இந்த எழுச்சிகளை முன்னின்று நடத்துகிறவர்கள் பாரம்பரிய மிக்க அரசியல் கட்சிகளோ, மதவாத அமைப்புகளோ,மூத்த தலைவர்களோ அல்ல.இளைஞர்கள் முப்பது வயதை ஒட்டிய ஆண்களும் பெண்களும் வேலையில்லாதவர்களும் புதிதாக உருவாகியுள்ள நுண் வணிகங்களைச் சார்ந்தவர்களும் முன்னணியிலிருந்து இதை உருவாக்கினர். திகைத்து நின்ற எதிர்க்கட்சியினரும் மதவாத அமைப்பினரும் இதர மூத்தோர்களும் வேறு வழியின்றி அவர்களைப் பின் தொடர்ந்தனர். "கத்தியின்றி இரத்தமின்றி' எனச் சொல்வோமே. ஒரு வகையில் அப்படியுந்தான். இன்னொரு வகையில் பெருந் தலைமைகளின்றி, கட்சி வழிகாட்டல்களின்றி, இறுக்கமான கொள்கைச் சவடால்களின்றி நடந்து கொண்டுள்ளன இந்தப் புரட்சிகள். மாறியுள்ள உலகச் சூழலைப் புரிந்து கொண்டவையாக புதிதாய்க் கிடைத்துள்ள மக்கள் தொடர்புக் கருவிகளை சாதுரியமாகக் கையாள்பவையாக இவை அமைகின்றன. புதிய சூழலுக்குரிய புதிய வடிவம் மட்டுமல்ல.

புதிய மொழி ஒன்றும் இந்த அரசியலினூடாக உருவாகியது. ஆம், கெட்டித்தட்டிப்போன பழைய வறட்டு அரசியல் மொழியை அவர்கள் உதறித்தள்ளினர். இந்தப் புரட்சிகளின் மிக முக்கியமான அம்சம் இதுவே. இந்தப் புதிய மொழி ஒருபக்கம் "முஸ்லிம் சகோதரர்கள்',"மறுமலர்ச்சிக் கட்சி' முதலான இஸ்லாமிய மதவாதக் கட்சிகள் இன்னொரு பக்கம் பெயரிலேயே பொதுவுடைமை என்கிற சொல்லைத் தாங்கிய இடதுசாரி அமைப்புகள்,தொழிற்சங்கங்கள் என்ற ஒரு அகன்ற வண்ண நிறமாலையை உருவாக்கிப் பலரையும் ஒன்றாக இணைத்து அரச படைகளுக்கு எதிராக நிறுத்தக் காரணமானது. ஏ.கே.47 களையும் தற்கொலைப் படையினரையும் கூட எளிதில் எதிர்கொள்ளக்கூடிய இராணுவ சர்வாதிகாரிகளும் முடிமன்னர்களும் இதன் முன் திகைத்து நின்றனர்.

எனினும் பழைய மொழியையே பயன்படுத்த அறிந்தோருக்குப் பல கேள்விகள் எழுவது தவிர்க்க இயலாததே. இரண்டு நாடுகளில் போராட்டங்கள் வெற்றிபெற்றாலும் பிற நாடுகளில் எதிர்பார்த்தது போல உடனடிப் பலன்கள் கிட்டவில்லையே? இந்த இரு நாடுகளிலும் கூட பழைய சர்வாதிகாரிகள் தானே ஓட்டம் பிடித்துள்ளனர். உருவாகியுள்ள தற்காலிக ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா? ஈரானில் இப்படி நடந்த புரட்சியை (1979) வலதுசாரி மதவாதிகள் கைப்பற்றியதைப் போல இங்கும் ஆகாதென்பதற்கு என்ன உத்தரவாதம்? உறுதியான பொருளாதாரத் திட்டங்களும் மாற்று அரசியலும் வலுமிக்க கட்சியின் வழிகாட்டலுமில்லாத இந்த வெற்றிகள் எப்படி வெற்றிகளாகும்? பஹ்ரெய்ன், யேமன், லிபியா முதலான நாடுகளில் போராட்டங்கள் அடக்கு முறையால் எதிர்கொள்ளப்படுகிறதே, என்ன செய்யப் போகிறார்கள்?

இந்தக் கேள்விகள் முக்கியமானவைதான். வழக்கமான பாணியில் சிந்திக்கக் கூடியவர்கள். வழக்கமாக எதிர்கொள்ளக்கூடியவை தான். இவை குறித்துச் சிந்திப்பதற்கு முன்னதாக இந்த நாடுகள், இந்த இளைஞர்கள், இந்த அமைப்புகள், இவற்றின் இராணுவங்கள் குறித்துச் சிலவற்றை அசைபோடுதல் முக்கியம்.

இந்த நாடுகள் அனைத்தும் முந்தைய ஆட்சிகளைக் கவிழ்த்து உருவான இராணுவ சர்வாதிகாரிகள் (டியூனீசியா,எகிப்து,லிபியா) மற்றும் பரம்பரை முடிமன்னர்களால் (சவூதி, பஹ்ரெய்ன், ஜோர்தான்) பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து ஆளப்படுபவை. இவை எல்லாமே மேலோட்டமாகப் பார்க்கும்போது முஸ்லிம் நாடுகள் எனினும் உள்ளுக்குள் பல வேறுபாடுகளைக் கொண்டவை.வளைகுடாக் கரையோர நாடுகள் பலவும் ஷியா முஸ்லிம்களை அதிகளவில் கொண்டவை. ஈரான் மட்டுமன்றி, ஈராக், பஹ்ரெய்ன் (60 சதம்) முதலான நாடுகளிலும் ஷியாக்கள் பெரும்பான்மையினர் பஹ்ரெய்னை ஒட்டியுள்ள சவூதியில் அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 12 சதமாக உள்ள ஷியாக்கள் வசிக்கின்றனர்.

லிபியா முதலான நாடுகளில் பழங்குடிகளின் அடிப்படையில் வேறுபாடுகள் உண்டு. நாற்பதாண்டு சர்வாதிகாரி முஅம்மர் கடாபி தனது கதாத்ஃபா பழங்குடியினருக்கு ஏகப்பட்ட சலுகைளை வழங்கித் தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் ஒன்றை அமைத்து ஆட்சியைத் தொடர்பவர். கடாபியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட மன்னர் இத்ரிசின், தலைநகர் பெங்காஸிதான் இன்று எதிர்ப்பாளர்கள் உருவாக்கியுள்ள "லிபியா தேசிய கவுன்ஸிலின்' தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் ஷியா உர் ரஹ்மான் அல்லது பாகிஸ்தானின் முஷாரப் போல இந்த இராணுவ சர்வாதிகாரிகளும் முடிமன்னர்களும் தேர்தல் பாதைக்குத் திரும்பத் துணியாததற்கு இந்த உள் வேறுபாடுகள் முக்கிய காரணமாகவுள்ளன. பெரும்பான்மை வாக்கு வங்கிகளைக் கண்டு இவர்கள் அஞ்சுகின்றனர். எனவே, எல்லாவிதமான தேர்தல் தில்லுமுல்லுகள், அடக்குமுறைகள், கடும் கண்காணிப்புகள் ஆகியவற்றின் மூலம் தம் ஆட்சிகளை இவர்கள் நிலைநிறுத்தி வருகின்றனர். மக்களால் கடுமையாக வெறுக்கப்பட்ட ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சி சென்ற பொதுத் தேர்தலில் 93 சத இடங்களைக் கைப்பற்றியதன் பின்னணி இதுவே. வேட்பாளர் தேர்விலிருந்து வாக்கு எண்ணிக்கை வரை அரசு தலையீடுகள் இருந்தன.

அரசியல் அமைப்புகள்,குறிப்பாக இஸ்லாமிய அமைப்புகள் (முஸ்லிம் சகோதரர்கள்,மறுமலர்ச்சிக் கட்சி) முதலானவை தடை செய்யப்பட்டன. முக்கிய தலைவர்கள் புலம்பெயர நேரிட்டது. எதிர்ப்புகள் வன்முறையாக ஒடுக்கப்பட்டதோடு ஊடகங்களும் மனித உரிமைப் போராளிகளும் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டனர். ஜனநாயக மறுப்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் இன்னொரு பக்கமாக இலஞ்ச ஊழல் பெரிய அளவில் தலைவிரித்தாடியது. சர்வாதிகாரிகளின் குடும்பத்தினரும் விசுவாசிகளும் நாட்டின் பொருளாதாரத்தையும் உளவுத்துறை முதலானவற்றையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஏராளமான தங்கப் பாளங்களுடன் இன்று தப்பிச் சென்றுள்ள டியூனீசிய சர்வாதிகாரி பென் அலியின் குடும்பமும் அந்நாட்டின் மொத்த தொழில் முதலீட்டில் 50 சதத்தை தம் கையில் வைத்திருந்தன. அடிமாட்டு விலைக்கு இலாபகரமான தொழில் நிறுவனங்களை வாங்குதல், பொதுச் சொத்துகளை வளைத்துப் போடுதல், ரியல் எஸ் மாபியாக்களைக் கையில் வைத்திருத்தல் என்பதான அம்சங்களிலும் வாரிசு அரசியலிலும் தமிழகத்தையும் இவர்கள் விஞ்சியிருந்தனர்.முபாரக்கின் மகன் கமால்முபாரக், கடாபியின் மகன் ஸைப் இஸ்லாம் கடாபி ஆகியோர் அடுத்த வாரிசுகளாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த வாரிசுகள் தாராளமயம், உலகமயம், அமெரிக்கச்சார்பு ஆகியவற்றைத் தத்தம் நாட்டில் நடைமுறைப்படுத்துவதில் முன்னணியிலிருந்தனர். கனிமொழி கருணாநிதி தனது பாராளுமன்றக் கன்னிப் பேச்சில் அமெரிக்க அணு ஒப்பந்தத்தை ஆதரித்து ஆற்றிய உரை நினைவிற்குரியது. இந்த வாரிசுகள் விசுவாசிகளுக்குத் தொழில் உரிமங்களை வழங்கி கார்ப்பரேட் முதலாளிய ஆதரவைத் தம் கட்டுப்பாட்டிற்குள் முடக்கிக் கொண்டனர்.

சுயஸ்கால்வாய்,மத்திய தரைக்கடல், முஸ்லிம் நாடுகளின் எண்ணெய் வளம் ஆகியவற்றின் மீது அடங்கா ஆர்வம் கொண்டிருந்த அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் இந்த சர்வாதிகாரிகளைத் தமது வாடிக்கையாளர்களாக்கிக் கொண்டனர். பன்னாட்டு நிதியம், உலகவங்கி ஆகியவற்றினூடான பொருளாதாரக் கட்டுப்பாடுகள் மற்றும் மிகப்பெரிய அளவில் கடனுதவி ஆகியவற்றின் மூலம் இது சாத்தியமாக்கப்பட்டது. இராணுவ ஒப்பந்தங்களினூடாக பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் வலுமிக்க இராணுவத் தளங்களாக எகிப்து முதலியவை செயற்பட்டன. சவூதியை ஒட்டியுள்ள பஹ்ரைனில் அமெரிக்காவின் ஆறாவது கப்பற்படை நிறுத்தி வைக்கப்பட்டது. தனது ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் முரண்டு பிடித்த கடாபியும் கூட இறுதிப் பத்தாண்டுகளில் அமெரிக்காவின் நண்பரானார். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் நம்பிக்கையான பங்காளியாக அறிவிக்கப்பட்டார். லிபியா மற்றும் சவூதியில் குவிந்த எண்ணெய் மூலதனம் மேற்கு நாடுகளில் முதலீடு செய்யப்பட்டன

தாராளமயம், உலகமயம் முதலியன அவற்றின் தர்க்கபூர்வமான பின்விளைவுகளைக் கொண்டிருந்தன. கடும் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை உழைப்புச் சுரண்டல் ஆகியவற்றை இம்மக்கள் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இம்மக்களின் சராசரி வருமானம் நாளொன்றுக்கு வெறும் 2 டொலர்கள் என்கிற அளவிற்குக் குறைந்தது. எகிப்து முதலான நாடுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழிருந்தவர்களின் அளவு 40 சத அளவுக்கு இருந்தது. இளைஞர்கள் மத்தியில் 50 சதமும் தொழிலாளர்கள் மத்தியில் 20 சதமும் வேலையில்லாத் திண்டாட்டம் இருந்தது. ஒரு பக்கம் தாராளமயம், உலகமயம். இன்னொரு பக்கம் இதற்குச் சற்றும் பொருத்தமற்ற ஜனநாயக மறுப்பு வலிமைமிக்க பாதுகாப்பு மற்றும் உளவுத் துறைகள் என்பதான ஒரு முரண்பட்ட நிலை இந்நாடுகளெங்கும் உருவானது.

எப்படித் தமிழர்களுக்கு ஈழப்பிரச்சினை ஒரு உணர்ச்சிமயமான ஈடுபாடாகவுள்ளதோ, அதேபோல அரபுலக மக்களுக்கு பாலஸ்தீனியப் பிரச்சினை உள்ளது. முபாரக்கும் சவூதி மன்னரும் பிறரும் பாலஸ்தீனியப் பிரச்சினையில் செய்த துரோகங்கள் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்குமிடையில் மிகப்பெரிய பிளவு உருவாவதற்குக் காரணமாயின. அமெரிக்க இஸ்ரேல் எகிப்து கூட்டு பாலஸ்தீனியர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்ததையும் பொய்க்காரணங்கள் சொல்லி ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டதையும் ஹமாஸை ஒடுக்க வேண்டும் என்கிற ஒரேநோக்குடன் அமெரிக்கா எகிப்து பாலஸ்தீனியத் தலைவர் அப்பாஸ் ஆகியோர் இணைந்து பாலஸ்தீனத்தின் பெரும் பகுதியை இஸ்ரேலுக்கு விட்டுக் கொடுக்கும் சதித்திட்டமொன்று சமீபத்தில் அல்ஜசீரா மற்றும் கார்டியன் ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்டதையும் அரபுலக மக்களால் சகித்துக்கொள்ள இயலவில்லை.

புதிய பொருளாதாரச் சூழல் ஏற்படுத்திய சில மாற்றங்கள் நமது கவனத்திற்குரியவை. கல்வி,மருத்துவம் முதலியன வணிக மயமாக்கப்பட்டு வெளிநாட்டு மூலதனங்கள் ஊக்குவிக்கப்பட்டன. ரஷ்யா, சீனா, பிரேஸில், துருக்கி, மத்திய ஆசியக் குடியரசுகள், வளமிக்க வளைகுடா நாடுகள் முதலியன அரபு நாடுகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கின. இதன் மூலம் அமைக்கப்பட்ட ஏராளமான உற்பத்தி மையங்களில் பெரிய அளவில் ஆண்களும் பெண்களும் நியமிக்கப்பட்டனர். கடும் உழைப்புச் சுரண்டல், சாதகமற்ற தொழிற் கூட்டங்கள் ஆகியவற்றின் பின்னணியில் உழைக்கக் கூடிய விரிந்த தொழிலாளி வர்க்கம் ஒன்று உருவாகியது. ஆண்பெண் சமத்துவத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த போதிலும் மொத்தமுள்ள எகிப்தியப் பெண்களில் 22 சதவீதம் பேர் வீடுகளை விட்டு வெளியில் சென்று உழைக்கும் தொழிலாளியாக இருந்தனர். மிகப்பெரிய அளவில் கெய்ரோவின் தாஹிர் சதுக்கத்தில் பெண்கள் குழுமியிருப்பதை நாம் இந்தப் பின்னணியில் விளங்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறு உருவான தொழிலாளி வர்க்கம் (குடணிணீ ஙிணிணூடுஞுணூண்) ஆலைத் தொழிலாளிகளுடன் இணைந்து 2008 இல் மிகப்பெரிய வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொண்டனர்.

தாராள மயமாக்கலினூடாக அரசு தனது நலப்பணிகளை முடிவுக்குக் கொண்டு வந்ததையொட்டி அதற்கு ஈடாக அதிகளவில் நுண்கடன்கள் வழங்கப்பட்டன. சுயதொழில் தற்சார்பு என்கிற பெயரில் உலக வங்கியின் உதவியோடு இளைஞர்கள் மற்றும் பெண்களை இலக்காக்கி இவ் உதவிகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கடன்களுக்கும் காப்புறுதி கொடுக்க வசதியில்லாத இந்த இளைய தலைமுறையினருக்கு அவர்களது உடல்களே காப்புறுதிகளாக அமைந்தன. இந்த உடல்கள் மீதான வன்முறை அவமானம்,பாலியல் அத்துமீறல்கள் ஆகியன இக்கடன்களை வசூலிக்கும் கருவிகளாயின. இவ்வகையில் புதிதாய் உருவான இந்த நுண் வணிகப் பொருளாதாரம் இளைஞர்கள் செயற்படுவதற்கான கடினமான களமாக மாறியது. அதேநேரத்தில் இந்நிலை பெண்களையும் இளைஞர்களையும் அடக்குமுறை,சுரண்டல், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை எதிர்த்து நிற்கும் வலிமை மிக்க ஒருங்கிணைந்த சக்தியாக உருவாக்கியது. இன்ரநெற் கபேகள் இந்த நுண் வணிகத் தளங்களில் ஒன்று என்பதும் இத்தகைய கபே ஒன்றில் பகுதி உரிமையாளரான கலீத் சயீத் காவல்துறையால் கொல்லப்பட்டதையொட்டி எகிப்தில் மிகப்பெரிய இயக்கம் உருவானதும் கவனத்திற்குரியது.

இந்த எழுச்சிகளில் இராணுவங்களின் பங்கும் வெவ்வேறு மட்டங்களில் அமைந்தது. டியூனீசியா,எகிப்து இரண்டிலும் அவை சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக இல்லை. எகிப்தில் ஒரு குறிப்பிட்ட அளவு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகவுமிருந்தது. லிபியாவில் கூட அரச படையின் ஒரு பிரிவினர் எதிர்த்தரப்புடன் உள்ளனர். இதன் பின்புலமென்ன? இந்த சர்வாதிகாரிகள் பலரும் தத்தம் இராணுவங்களை முழுமையாக நம்பவில்லை. சந்தேகத்துடன் அணுகிச் சற்று ஒதுக்கியே வைத்தனர். சட்டம்,ஒழுங்கு, உளவுத்துறை, உள்நாட்டுப் பாதுகாப்பு முதலியவற்றிற்கு தமக்கு விசுவாசமாகவுள்ள சிறப்புப் படையினரையே நம்பியிருந்தனர். கடாபியின் மகன்களின் தலைமையில் சில படைப்பிரிவுகள் இயங்கின. எகிப்தின் உளவுத்துறை சி.ஐ.ஏ.வுடன் நெருக்கமாகத் தொடர்பு வைத்திருந்த உமர் சுலைமானின் கட்டுப்பாட்டில் இயங்கியது. ரொம்பவும் சுவையான விடயம் என்னவெனில் கேம்ப் டேவிட் ஒப்பந்தத்திற்குப் பின் போர் செய்வது தடை செய்யப்பட்டதையொட்டி எகிப்தியப் படைகள் வேறு வகையான பொருளாதாரத் துறைகளில் ஈடுபடுத்தப்பட்டன. கடற்கரை ரிசார்ட்கள், சுற்றுலாத் தலங்கள், ஷொப்பிங் மால்கள் முதலியவற்றை இவை இயக்கி வந்தன. இலங்கையில் ஏ9 சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவம் போருக்குப் பின்னர் இதுபோன்ற கடைகள் நடத்துவதையும் இன்று அங்குள்ள படையினர் குடும்பத்துடன் ஆங்காங்கு தங்க அனுமதிக்கப்பட்டிருப்பதும் இத்துடன் ஒப்பிடத்தக்கன.

பெரிய அளவில் வளமான நிலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டதையும் சுற்றுலா முதலான தொழில்களில் வெளிநாட்டு மூலதனங்கள் ஈடுபடுத்தப்பட்டதையும் ஒருவகை தேசிய முதலாளியப் பண்புடன் இராணுவம் எதிர்த்தது. எழுச்சியின் போது ஒரு பக்கம் அரசுக்கு எதிராகவும் இன்னொரு பக்கம் கிளர்ச்சியினூடாக சுற்றுலா வருமானம் குறைவது குறித்த சங்கடத்தோடும் எகிப்திய இராணுவம் களத்தில் நின்றதை நாம் இப்படித்தான் புரிந்துகொள்ள நேர்கிறது.

ஒரு காலத்தில் ஷரியாச் சட்டத்திலான ஆட்சி மேற்குலக மதிப்பீடுகளுக்கு எதிர்ப்பு என்கிற நிலைப்பாடுகளை எடுத்திருந்த முஸ்லிம் சகோதரர்கள், மறுமலர்ச்சிக் கட்சி முதலான இஸ்லாமிய அமைப்புகள் இன்று இடதுசாரி அமைப்புகளுடன் கைகோர்த்து நின்றதும் ஆட்சி மாற்றத்திற்குப் பின் உருவாகும் அமைப்பில் அவர்களுக்கும் பங்குண்டு என வெளிப்படையாக அறிவித்திருப்பதும் இடதுசாரிகளும் கூட புதிய அமைப்பில் இம்மதவாதிகளுடன் இணைந்து செயற்படத் தயார் என ஏற்றுக்கொண்டுள்ளதும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு.

எகிப்திலுள்ள முஸ்லிம் சகோதரர்கள் அமைப்பு நீண்ட பாரம்பரியம் உடைய ஒரு வலிமையான அமைப்பு. மக்கள் மத்தியில் பல்வேறு சேவைகளையும் புரிந்து மிக்க மரியாதையை சம்பாதித்துள்ள அமைப்பு. இவ்வமைப்பு தடை செய்யப்பட்டு முக்கிய தலைவர்கள் புலம்பெயர்ந்த பின்னும் கூட வேறு பெயர்களில் வெவ்வேறு மட்டங்களில் இது செயல்பட்டு வந்தது. இதன் மேல் தட்டினர் சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்டனர். எனினும் நாம் முன்பு குறிப்பிட்ட புதிய பொருளாதார மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள், கூடவே மேற்கொள்ளப்பட்ட கடும் அடக்குமுறைகள் ஆகியன மேலெழுந்து வருகிற புதிய தொழிலாளி வர்க்கத்துடன் இணைந்து இவற்றை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தின. புதிய வர்க்கத்தினர்,இடதுசாரி தொழிற்சங்கத்தினர், இஸ்லாமிய அமைப்பினர் எல்லோரும் ஒன்றாக வீதியில் திரண்டு அரச அடக்குமுறைகளை எதிர்கொள்வது 90 களின் இறுதியில் அன்றாட நிகழ்வாயின.இது வெறுமனே சந்தர்ப்பவாதக் கூட்டணியாக அமையாமல் இரு தரப்பினரும் தத்தம் இறுக்கமான நிலைப்பாடுகளிலிருந்து சற்றே கீழிறங்கி நேர்மையுடன் இணைந்து நிற்கும் செயற்பாடாக அமைந்தது. அரசியலில் பன்மைத்துவம், பெண்களின் பங்கேற்பு, கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளை எல்லாவிதமான அரசியல் பங்களிப்புகளுக்கும் பாத்திரமானவர்களாகக் கருதுதல் என்கிற நிலையை இஸ்லாமியவாதிகள் எடுத்தனர். சில ஆண்டுகள் முன்பு முஸ்லிம் சகோதரர்கள் அமைப்பிற்குள் நடந்த ஒரு விவாதத்தின் போது புதிய தலைமுறையினரான இப்ராஹிம் ஹொடெய்பி கூறினார். முஸ்லிம் சகோதரர் அமைப்பின் முழக்கமான இஸ்லாமே தீர்வு என்பதை எகிப்து எகிப்தியர்களுக்கே என்பதாக மாற்றியமைக்க வேண்டும். எகிப்திய வீதிகளில் தற்போது ஓங்கி ஒலித்த முழக்கம் இதுவே.

எனினும் முஸ்லிம் சகோதரர்கள் மத்தியிலிருந்த மேற்தட்டினரைத் தம்பக்கம் இழுக்கும் முயற்சியை முபாரக் போன்றோர் செய்யாமலில்லை. அவர்களில் சிலருக்குப் புதிய பொருளாதார மாற்றங்களினூடாக கார்ப்பரேட்களாவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. தேர்தலில் சுயேச்சையாக இவர்கள் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்டது. இஸ்லாமிய ஒழுக்கவாதப் பார்வைகளை முதன்மைப்படுத்தி, தனியே வாழும் பெண்கள், ஓரின வேட்கையுடையோர், பஹாய்/கிறிஸ்தவ/ஷியா சிபான்மையினர் ஆகியோர் மீதான வன்முறை புத்தகங்களைக் கொளுத்துதல், கருத்து மாறுபாடுடைய அறிவு ஜீவிகளைத் துன்புறத்தல் என்கிற வடிவங்களில் ஒருவகை சிவசேனைத்தனமான ஒழுக்க பொலிஸ் செயற்பாடுகளிலும் முபாரக் அமைப்பினர் இவர்களை ஒருங்கிணைத்தனர். எனினும் முஸ்லிம் அமைப்புகளிலிருந்த இளம் தலைமுறையினர் இவற்றிலிருந்து விலகியே இருந்தனர்.

இன்றைய எழுச்சியின் மத்தியில் சென்ற பெப்ரவரி 4 ஆம் திகதி அன்று முபாரக்கின் உதவிப் பிரமதர், உமர் சுலைமான் இந்த மேற்தட்டினரைச் சந்தித்துப் பேசினார். முஸ்லிம் சகோதரர்கள் அமைப்புடன் முபாரக் நிர்வாகம் சமாதானமாவதை உலகெங்கிலுமுள்ள மதவாதப் பிற்போக்கு சக்திகளும் அமெரிக்க ஆதரவாளர்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். ஆனால், முஸ்லிம் சகோதரர்கள் அமைப்பிலிருந்த இளைஞர்களும் பெண்களும் அமைப்பிலிருந்து விலகி மதச்சார்பற்ற ஏப்ரல் 6 மற்றும் கெபாயா இளைஞர் இயக்கங்களுடன் சேர்ந்து போராட்டத்தைத் தொடரப் போவதாக அறிவித்ததோடு ஆட்சியைத் தக்கவைப்பதற்கான முபாரக்கின் இறுதி முயற்சி பாதியில் சிதைந்தது.

அஸ்மா மொஹ்பூஸ் (36) போன்ற இளம் பெண்கள், இணையத்தளச் சமூகத்தினர் விடுத்த அழைப்பின் பேரில் மில்லியன் கணக்கில் மக்கள் சர்வாதிகாரத்தை எதிர்த்து வீதியிலிறங்கியதைப் பாராட்டி எழுதாத ஊடகங்கள் இல்லை. முகநூல் (ஊச்ஞிஞு ஆணிணிடு) புரட்சி,டுவிட்டர் புரட்சி என்றெல்லாம் இது அழைக்கப்படுகிறது. 1990 களில் இஸ்லாமியவாதிகள்,பெண்கள் இளைஞர்கள்,தொழிலாளிகள், இடதுசாரிகள் எல்லோரும் ஓரணியில் இணைந்து நிற்க வேண்டிய நிலையேற்பட்டதைப் பார்த்தோம். 2004 அடுத்த திருப்பு முனையாக அமைந்தது. இஸ்லாமியவாதிகள்,புதிய தொழிலாளி வர்க்கத்தினர், நுண் வணிகர்கள் எல்லோரும் இணைந்து “கெஃபாயக’ என்ற இயக்கத்தை உருவாக்கினர். “கெஃபாயா’ என்கிற எகிப்தியச் சொல்லுக்கு “மாற்றம்’ எனப் பொருள். முபாரக் ஆட்சிக்கு முடிவு, கமால் முபாரக்கின் வாரிசுத் தேர்விற்கு எதிர்ப்பு என்கிற இரு ஆகக் குறைந்தபட்சக் கோரிக்கைகளோடு இந்த இயக்கம் உருவாகியது. இதுகாறும் “வீதி’ என்பது அரச அடக்குமுறையின் களமாகவிருந்த நிலை மாற்றப்பட்டு அடக்கு முறைக்கு எதிராக மக்கள் ஒன்றுகூடும் வெளியாக மாற்றப்பட்டது. “கெஃபாயா’வின் ஆர்ப்பாட்டங்களில் பெரிய அளவில் வலைத்தளத்தினர் பங்கேற்கத் தொடங்கினர்.

இன்றைய தகவல் யுகத்தின் சகல சாத்தியப்பாடுகளையும் உணர்ந்து கெஃபாயா இயக்கம் “வலைப்பூ’,”டுவிட்டர்’,”முகநூல்’ ஆகியவற்றை வீதிப் போராட்டங்களுக்குப் பயன்படுத்தியது. சில வலைத்தளக் குழுமங்களில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைந்திருந்தனர். இப்படியானதொரு நிலையேற்படுவதற்கும் பின்புலமாக ஒரு சம்பவம் அமைந்தது. வேய்ல் அப்பாஸ் என்கிற இளைஞனின் “எகிப்திய விழிப்புணர்வு’ (அல்வாய் அல் மாஸீரி) என்கிற வலைப்பூவிற்கு ஒரு செல்போன் வீடியோ பதிவு வந்தது. காவல் நிலையமொன்றில் பாலியல் ரீதியாக ஒருவர் துன்புறுத்தப்படும் அக்காட்சி. அவ்வலைத்தளத்தில் வெளியான கையோடு அச்சு ஊடகங்கள் அதைச் செய்தியாக வெளியிட்டன. ஊடகங்கள் இதற்கு ஆதாரமாக வலைப்பூவைச் சுட்டிக்காட்டின.

எகிப்தில் ஆதாரமின்றி செய்தி வெளியிட இயலாது. மனித உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டவரை அடையாளம் கண்டு வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை வழக்கின் ஒவ்வொரு அசைவையும் “அல் மாஸீரி’ வலைப்பூ தொடர்ந்து கண்காணித்து வெளியிட்டது.மனித உரிமை மீறலுக்குக் காரணமாக காவற்றுறையினர் தண்டிக்கப்பட்ட வரலாறு காணாத இச்சம்பவம் மிகப்பெரிய உற்சாகத்தை வலைப்பூவினர் மத்தியில் ஏற்படுத்தியது. இணையத்தளங்களும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களும் ஒன்றாக இணைந்து பல்வேறு அநீதிகளைத் தொடர்ந்து இவ்வாறு வெளிக்கொணர்ந்தனர்.

பெரும்பாலான தமிழ் வலைப்பூக்களும் இணையத்தளங்களும் வெறும் அரட்டை மடங்களாகவும் அவதூறுக் களஞ்சியங்களாகவும் செயற்படும் இன்றைய சூழலில் அரபுலக இளைஞர்கள் வரலாற்றில் தமக்குரிய இடம் குறித்த மிகுந்த பொறுப்புடன் செயற்பட்ட இந்நிகழ்வு ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கது. இதே பொறுப்புடன் தொடர்ந்து அவர்களின் செயற்பாடுகள் அமைந்தன.

ஏப்ரல் 2008 இல் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு ஜவுளித் தொழிலாளர் போராட்டத்தில் முகநூல் குழுமத்தினர் தலையிட்டனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பொதுக் கோரிக்கைகளுடன் இணைத்து ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு எஸ்ரா அப்தல்ஃபதா என்கிற இளம்பெண் அழைப்பு விடுத்தார்.இரண்டே வாரத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகநூல் குழுமத்தினர் இந்த அழைப்பை ஏற்று ஆதரவுக் கையெழுத்திட்டனர். எல்லா அரசியல் கட்சிகளும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெற வேண்டிய நிலையேற்பட்டது. இவ்வாறு உருவான “ஏப்ரல் 6’ இயக்கம் தான் இன்றைய 2011 எழுச்சியில் முக்கிய பாத்திரம் வகித்தது.

வெளிவரவுள்ள எனது புதிய நூலில் (சோறு,சுதந்திரம்,சுயமரியாதை) என்ன நடக்குது மத்திய கிழக்கில்,முரண் வெளியீடு, தொடர்பு 950005795) இது குறித்து விரிவாக எழுதியுள்ளேன். மேற்குறித்த தகவல்களின் பின்னணியில் இன்றைய எழுச்சிகளில் சில தனித்துவங்களையும் சிறப்பு அம்சங்களையும் மட்டும் இங்கு தொகுத்துக் கொள்வோம்.

1. இன்றைய புரட்சியில் முன்னணி நிலை வகித்த இளைஞர்களும் பெண்களும் 1990 களுக்குப் பின் உருவான புதிய பொருளாதார மாற்றங்களில் முக்கிய பாத்திரம் வகிப்பவர்களாகவும் (நுண் வணிகத்தியர், கடைத் தொழிலாளிகள்) இருந்தனர். 2004 இற்கும் 2011 இற்குமிடையில் கிட்டத்தட்ட 10 இலட்சம் தொழிலாளிகள் பங்குபெற்ற ஏராளமான வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன.
2. தொழிலாளர் போராட்டங்கள்,பொதுமக்களின் கோரிக்கைகளோடு (ஆட்சிமாற்றம்,வாரிசு ஆட்சி ஒழிப்பு,ஜனநாயகமயமாக்கல், மனித உரிமை மீறல்கள் முடிவுக்குக் கொணர்தல்) இணைக்கப்பட்டு இஸ்லாமியவாதிகள்,தொழிலாளிகள்,இடதுசாரிகள்,இளைஞர்கள் என்பதான அகன்ற நிறமாலை எழுச்சிகளாக மாற்றப்பட்டன.

3. முஸ்லிம் பெண்கள் இதில் முக்கிய பங்கேற்றனர். முபாரக்கின் கூலிப் படையினர் பாலியல் அத்துமீறல்களை மேற்கொண்டபோது இவர்கள் கலங்கவில்லை. ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் பெண்களின் பாதுகாப்புக் கருதி வீட்டிற்குப் போகச் சொன்னபோது நாங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்களோ,பாதிக்கப்பட்டவர்களோ அல்ல. மாறாக போராட்டக்காரர்கள் என்று கூறி வீதிகளிலேயே தொடர்ந்தனர்.

4. இந்தப் போராட்டம் எந்தளவிற்கு மத அடையாளமின்றி நடத்தப்பட்டதோ, அந்த அளவிற்கு மத எதிர்ப்புப் போராட்டங்களாக இல்லாமலுமிருந்தன. “அவரவர்களின் நம்பிக்கை அவரவர்களுக்கு’ என்கிற உரிய முஸ்லிம் மதிப்பீடு இங்கே கோலோச்சியது. 5. இந்த எழுச்சிகளில் போராடும் மக்கள் தரப்பிலிருந்து வன்முறைகள் குறைவு இல்லை என்றே கூடச் சொல்லலாம்.(லிபியா சற்று விதிவிலக்கு) வன்முறையை ஒரு வழிமுறையாகக் கொள்ளாததாலேயே இவை வெறும் முன்னணிப் படையினர் அல்லது ஆயுதம் தாங்கிகளின் போராட்டமாக இல்லாமல் சகல தரப்பினரும் குறிப்பாகப் பொதுமக்கள் பெரியளவில் பங்குபெறுவதாக அமைந்தன.

எதிராகப் பெரியளவில் ஆயுதத் தாக்குதலை சர்வாதிகாரிகள் மேற்கொள்வதற்கும் அதை நியாயப்படுத்துவதற்கும் இயலாதவர்களாயினர். கடந்த 20 ஆண்டுகளில் வெற்றிகரமான ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்திய கிழக்கு ஐரோப்பிய மற்றும் அரபுலக எழுச்சிகள் எல்லாம் பெரியளவில் மக்கள் திரள் பங்கேற்ற வன்முறையற்ற எழுச்சிகள் என்பது சிந்திக்கத்தக்கது. வன்முறையைக் கையிலெடுக்கும்போது எதிரி தனது ஆகக் கொடூரமான ஆயுதத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்து விடுகிறோம் என்கிற ஜென் ஷார்ப்பின் கருத்துகள் இப்போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்களவு செல்வாக்கு வகித்துள்ளது குறித்துப் பத்திரிகைகள் எழுதுகின்றன. இவர் குறித்து வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

6. ஈரானியப் புரட்சியை மதவாதிகளும் டெஹ்ரான் பஸாரிகள் எனப்படும் நடுத்தர வர்க்கக் கடை முதலாளிகளும் கடத்திச் சென்றது போல இன்றைய புரட்சிகளும் ஆகிவிடலாம் என்கிற கருத்தை ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். இப்போராட்டங்களில் முன் நிற்கும் பெண்கள்,இளைஞர்கள், நுண்வணிக சக்திகள், பன்னாட்டு தொழில் மண்டலங்களில் பணியாற்றும் தொழிலாளிகள், சர்வாதிகாரத்தின் சட்ட மீறல்களைத் துணிச்சலுடன் எதிர்த்து நின்ற மனித உரிமைப் போராளிகள், பொறுப்பு மிக்க இளம் வலைப்பூவினர், அறம் சார்ந்த மத நம்பிக்கைகளோடு சமூகத்தில் பன்மைத் தன்மையிலும் நம்பிக்கையுடைய இஸ்லாமிய அமைப்பினர் ஆகியோரிடம் ஒரு தெளிவான சமூகப் போராட்டப் பார்வை உள்ளது. மதம் சார்ந்த ஒழுக்கவியல் பார்வையும் அரச ஒடுக்கு முறைமை இணைந்த ஒரு சர்வாதிகாரிகள் வலதுசாரிச் சாய்விற்கு எதிராகவே அவர்கள் நிற்பர். ஓடியதற்குப் பின்பும் ஓய்ந்துவிடாமல் அவர்கள் நடத்தி வருகிற போராட்டமும் புரட்சியைத் தக்கவைக்கும் செயற்பாடுகளும் இந்த நம்பிக்கையையளிக்கின்றன.

7. உறுதியான ஒரு கட்சி வழிகாட்டல், இறுக்கமான எதிர்காலக் கொள்கை வடிவம் ஆகியன இல்லாததைக் குறை என்பதா? இல்லை அதுவே இன்றைய காலகட்டத்தின் சிறப்பம்சம் என்பதா? இத்தகைய இறுக்கமாக அமைப்பு மற்றும் கொள்கை வழிகாட்டல்களில் நடைபெற்ற பல புரட்சிகள் முன்னிலும் கொடுமையான ஒற்றைக் கட்சி சர்வாதிகாரங்களுக்குத்தானே வழிவிட்டன. தொடர்ந்த உரையாடல்களுக்கான சாத்தியமும் பன்மைத்துவம் தக்க வைக்கப்படுதலுமே முக்கியம்.

8. போராட்டங்கள் தற்காலிகமாக ஒடுக்கப்பட்டாலுங்கூட இந்த நாடுகள் எதிலும் பழைய முறையில் ஆட்சிகள் தொடர்வதற்குச் சாத்தியமில்லை.

9. லிபியா,பஹ்ரெய்ன் குறித்துச் சற்றுப் பொறுத்து விவாதிப்போம். கடும் கண்டனத்துக்குரிய இந்திய அரசின் அணுகல் முறைகளையும் இங்கு பதிவு செய்வது அவசியம். அரபுலகப் புரட்சிகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளமாகவுள்ளன. திறந்த மனத்தோடு இவற்றை அணுகுதல் இதன் முக்கிய நிபந்தனை என்பதை மறந்துவிடலாகாது.

நன்றி தீராநதி

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum