ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கும் இமை நானுனக்கு

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

காக்கும் இமை நானுனக்கு - Page 4 Empty காக்கும் இமை நானுனக்கு

Post by சிவா Mon May 23, 2011 2:33 pm

First topic message reminder :

காக்கும் இமை நானுனக்கு - Page 4 Kakum

எப்போதும் போலவே அந்தப் பெரிய கடைக்குள் நுழையும் போது, நளினியின் மனதில் ஒரு பெருமிதம் எட்டிப் பார்த்தது.

'உன்னதம்.'

இந்தப் பெரிய பல்பொருள் அங்காடியில் அவள் வேலை செய்கிறாள்.

அகன்ற சலவைக் கல் படிக்கட்டுகளுடன் கம்பீரமாய் மூன்று மாடிக் கட்டடம். எத்தனை கோடி பெறுமோ?

படியேறும் போதே, ஓர் அரண்மனைக்குள் அடியெடுத்து வைக்கும் பிரமிப்பு.

எண்ணம் தொடரும் போதே, அவளது மனதுக்குள் நெருஞ்சியாய் உறுத்தலும் தொடங்கி விட்டது.

தோற்றத்தில் மட்டும் அந்தக் கட்டடம் அரண்மனையாக இருக்கவில்லை! உள்ளே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களும் அரண்மனைவாசிகளுக்கு ஏற்றவை தான். ஏன்? அவர்கள் மட்டும் தான் வாங்கக் கூடியவையும் கூட.

தரத்தால் மட்டும் அல்ல. விலையும் அப்படித்தான்.

துணிகளா? மீட்டர் எண்ணூறு ஆயிரம் எல்லாம் சர்வ சாதாரணம். ஐந்நூறுக்குக் குறைவாக ஒன்றுமே கிடையாது.

அதே போல, மரச் சாமான்கள் பகுதி ஒன்று உண்டு. சோஃபா செட் ஒரு லட்சம் என்பார்கள். என்ன? அங்கங்கே தந்தம் இழைத்திருக்கும்! நல்ல வைரம் பாய்ந்த தேக்காக இருக்கும்.

அசல் நவரத்தினங்கள் பதித்த நகைகள். வைரமிழைத்த கைக்கடிகாரங்கள். அவற்றிலும், செய்கூலியே ஆளைச் சாப்பிட்டுவிடும். கூலி எவ்வளவு, சேதாரம் எவ்வளவு என்று கணக்குப் பார்க்கிறவர்களால், இங்கே வாங்க முடியாது.

அதனாலேயே, சாதாரண மக்கள் இந்தக் கடையின் பக்கம் வருவதில்லை. அப்படியே வந்தாலும், இந்தப் பணக்காரச் சீமான்கள் வாங்கும் பொருட்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று பார்த்துப் போவதற்காகத்தான். அதுவும் அபூர்வமாகத்தான். ஏனெனில், வாங்க இயலாத பொருட்களைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட எத்தனை பேருக்குப் பிடிக்கும்?

யாரும் அறியாமல் தட்டிக் கொண்டு போய்விடும் திட்டத்துடன் வருவோரும் உண்டு. ஆனால் அங்கங்கே சாதாரண உடையில் காவலுக்கு ஆட்கள் இருந்ததால், அது பலித்தது இல்லை. அன்றுவரை!

அந்தக் காலத்தில், பெரிய பெரிய பிரபுக்கள், வெள்ளைக்காரத் துரைகள், ராஜ குடும்பத்தினர், ஜமீந்தாரர்கள் போன்றோருக்கு ஏற்ற பொருட்களை, ஒரே இடத்தில் வாங்குவதற்கு வசதி செய்யும் பொருட்டுச் சில மாதங்களுக்கு முன் வரை இதை நடத்திய பெரியம்மாவுடைய மாமனார், இந்த அங்காடியைத் தொடங்கியதாகச் சொல்லுவார்கள்.

இந்தத் தரம் குறையாமல் காப்பதுதான் முக்கியக் கொள்கையாக இருந்தது.

எனவே, அங்கொருவர், இங்கொருவர் தவிர, இந்தக் கடையில் வாடிக்கையாளர் அலைமோதி, நளினி பார்த்ததே கிடையாது.

குறைந்த பட்சமாக, அவள் இங்கே வேலைக்குச் சேர்ந்த இந்த மூன்று மாத காலமாக. அதைப் பற்றி, அங்கே யாரும் கவலைப்படுவதும் கிடையாது.

தளத்துக்கு ஒருவராக, மூன்று தளங்களுக்கும், மூன்று வயதான நிர்வாகிகள். ரொம்ப காலமாக இங்கேயே பணி புரிகிறார்களாம்.

விற்பனை, இருப்புக் கணக்கு எடுப்பதும், புதிய பொருட்களுக்கு ஆர்டர் கொடுப்பதும் அவர்களது பொறுப்பு.

அவர்களிடம் நளினி மோதிப் பார்த்திருக்கிறாள். அதை விடக் கற்பாறையில் மோதினால், ஏதோ பாறை கொஞ்சம் அசையக் கூடும் என்று புரிந்தும் இருக்கிறாள்.

புருவங்களைத் தூக்கி வைத்துக் கொண்டு, மூக்கு நுனியில் நிற்கும் கண்ணாடி வழியே, ஒரு தூசியைப் போலப் பார்த்து, "இந்தக் கடையின் பாரம்பரியம் பற்றிச் சின்னப் பெண் உனக்கு என்ன தெரியும்? எழுபது ஆண்டுகளாக, எனக்குத் தெரியவே நாற்பத்தைந்து வருஷங்களாக மதிப்பும் மரியாதையுமாக நடத்தப்படுகிற கடை! பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் காரில் வந்து இறங்கி, மறு விலை கேளாமல் வாங்கிப் போகிற இடம்! இதில் போய், உன் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்ப் பொருட்களைக் கொட்டிக் கேவலப்படுத்துவதா? பெரியம்மா மட்டும் இருந்து, அவர்கள் காதில் உன் பேச்சும் விழுந்திருக்கட்டும், உன்னை அப்போதே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருப்பார்கள். முதலில், வேலை பார்க்கக் கூட, நீ இங்கே உள்ளே நுழைந்திருக்க முடியுமா? இப்போதுதான் என்ன? உன்னை நாங்களே வெளியேற்றி விடுவோம்! என்னவோ புதுசாய் வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள் என்று விட்டு வைத்திருக்கிறோம்," என்று மிரட்டுவார் ஒருவர்.

"உன் வேலை என்ன? அங்கங்கே, தளத்துக்குத் தளம் பொருட்களைக் கவர்ச்சிகரமாகக் கண்ணுக்கு அழகாக அடுக்கி வைப்பதுதானே? அத்தோடு நிறுத்திக் கொள். அதற்கு மேல், அதிகப் பிரசங்கித்தனம் செய்யாமல், வாயை மூடிக் கொண்டிரு. மீறினால், வேலைக்கே வேட்டு வைத்து விடுவோம்," என்பார் அடுத்தவர்.

"பெரியம்மா பார்த்து வைத்த ஆட்கள் நாங்கள். எங்களுக்கு வேலை தெரியாது என்று, நீ வந்து சொல்கிறாயா? வயதுக்கு மரியாதை கொடுக்கக் கூடத் தெரியவில்லையே!" என்று ஆளாளுக்கு அவளை மிரட்டினார்களே தவிர, வளாகத்தில் உள்ள கடைப் பொருட்களின் விற்பனைப் பெருக்கத்துக்காக, உருப்படியாக எதையும் செய்யக் காணோம்.

இந்த அழகில், மதிய உணவுக்காக மூடுவது வேறு. பன்னிரண்டு மணிக்கு எடுத்து வைக்கத் தொடங்கினால், மீண்டும் கடை திறக்க நாலு மணி ஆகும்.

வாடிக்கையாளர்கள் வீட்டில் சாப்பிட்டுத் தூங்கி எழுந்து, கடை கண்ணிக்குக் கிளம்பி வர, அவ்வளவு நேரமேனும் ஆகாதா என்று கேள்வி வேறு.

தூக்கம் தேவைப்படுவது, கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு அல்ல, வளாகத்தின் முதிய நிர்வாகிகளுக்குத் தான் என்பது, நளினியின் அபிப்பிராயம்.

ஆனால், யாரிடம் முறையிடுவது?

அவளுக்கும் அலுத்து விட்டது.

எப்படியோ போகிறார்கள்.

இந்த வளாகத்துடைய உரிமையாளர்கள், பல தலைமுறைகளாகப் பெரிய பணக்காரர்கள். எங்கெங்கோ பங்களாக்கள், சொத்துக்கள், பெரிய வருமானங்கள் உண்டு என்று கேள்வி.

இந்தக் கடையிலிருந்து வந்து, நிறைய வேண்டியதில்லை. சும்மா ஒரு கௌரவத்துக்காக நடத்துகிறார்கள் என்றும்.

அப்புறமென்ன?

விற்பனைப் பகுதிப் பொறுப்பாளரிடமிருந்து, கணக்குச் சொல்லி எடுத்த பொருட்களுக்குக் கையெழுத்திட்டு விட்டுப் பொருட்களோடு வந்து, அவற்றை இயன்றவரை கவர்ச்சிகரமாகக் கண்ணாடித் தட்டுகளில் அடுக்கத் தொடங்கிய போது, வளாகத்துடைய காவல் பொறுப்பாளரான பூவலிங்கம் வந்தார்.

"என்னம்மா, நீ அடுக்கிறதைப் பார்த்து, கண்ணாடி அலமாரியோடு தந்துவிடுங்கள் என்று கேட்டு விடுவார்கள் போல இருக்கிறதே!" என்று கிண்டலடித்துவிட்டு, "ஜாக்கிரதை அம்மா! எந்தப் பொருளும் தவறிவிடாமல் பார்த்துக் கொள்," என்று எச்சரித்து விட்டுப் போனார்.

ஆமாம் என்று அவளுக்கும் அலுப்பாகத்தான் இருந்தது.

ஏதோ செய்வன திருந்தச் செய்வது என்ற பழக்கத்தில் செய்து கொண்டிருந்தாளே தவிர, நளினிக்கு, அவளது வேலையில் ஈடுபாடு கொஞ்சம் குறைந்து தான் போயிற்று எனலாம்!

கொஞ்சமென்ன? ரொம்பவே.


எவ்வளவு காலம்தான் இருப்பதையே மாற்றி அமைத்துக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது?

விற்க விற்க, விதம் விதமாகப் பொருட்களைப் புதிது புதிதாக அன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப வாங்கி வாங்கி வைத்தால், அவளும் புதிது புதிதாகக் கண்ணைக் கவரும்படி விதம் விதமாக அடுக்க முடியும்!

அதுவும், இன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப என்றால், எண்ணில் அடங்காத வகைகள் எத்தனையோ கிடைக்கும். அவைகளை வாங்கிக் கொடுத்தால்...

ஆனால், அதெங்கே இங்கே நடக்கும்? அப்புறம், மழை கொட்டோ கொட்டென்று கொட்டி, ஊரெல்லாம் வெள்ளத்தில் முழுகிப் போய்விடாதா?

எண்ணத்திற்கு ஏற்ப, சிறு ஏளனத்துடன் தோளைக் குலுக்கியவாறு திரும்பியபோது தான், நளினி முதலில் அவனைப் பார்த்தது!

நல்ல உயரம்! உயரத்துக்குச் சற்றே மெலிவுதான் என்றாலும், உடல் கட்டில், நடையில் உறுதி தெரிந்தது.

அவள் அடிக்கடி ஆசையாக ஏறி இறங்கும், அழகிய அரண்மனைப் படிக்கட்டுகளின் வழியே வராமல், லிஃப்டின் கதவைத் திறந்து வெளியே வந்து கொண்டிருந்தான்.

அவன் மட்டுமல்ல, அவனோடு இன்னும் சிலரும்... மொத்தம் மூன்று பேர்.

அவனுக்கு முன்னும் பின்னுமாக வந்த மற்ற இரண்டு பேரும், பந்தாவாகப் பாக்கெட்டுக்குள் ஒரு கையை விட்டபடி, இங்கும் அங்குமாகத் திருதிருவென்று விழித்துப் பார்த்தவிதம் அவளுக்குச் சிரிப்பூட்டியது.

பின்னே கடைக்கு வந்தால், என்னென்ன சாமான் இருக்கிறது என்று பாராமல், இங்கே யாரேனும் திருடன் இருக்கிறானா என்று கண்களை உருட்டி உருட்டித் தேடுவது போலப் பார்த்தால்...?

இவர்கள் தேடுவது, திருடனையா... அல்லது காவலாளியையா?

ஒருவேளை, இவர்களே திருடர்களாக இருந்தால்... இருந்தாலும், அப்படி ஒன்றும் பயப்படத் தேவையில்லை! இந்தக் கடை வளாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடு வலுவானது. பில் போட்டுப் பணம் தராத எதையும் எளிதில் வெளியே கொண்டு போய்விட முடியாது. அத்தோடு, அந்தத் தளத்தின் விற்பனை ஆட்களோடு, இவர்களோடு வந்த அந்த மனிதனும் இருக்கிறான்!

நேர் நடையுடன் வந்த அவன் உதவ மாட்டானா, என்ன? பார்த்துக் கொள்ளலாம்.

தன்னையறியாமல் ஓரப் பார்வை அந்தப் புதியவனிடம் ஓடவும், கட்டுப்படுத்திக் கொண்டு திரும்ப முயன்றவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

ஏனெனில், அவன் தனது பழைய கைக்கடிகாரத்தைக் கழற்றி வைத்துவிட்டு, அங்கிருந்த விலை உயர்ந்த ஒன்றை எடுத்துத் தன் கையில் கட்டிக் கொண்டிருந்தான்.

அதன் முள், எண்கள் எல்லாம் வைரங்கள்! விலை லட்சத்துக்கும் மேல்! அதைப் பார்த்ததும், தன் பழைய ஓட்டைக் கடிகாரம் பிடிக்காமல் போய் விட்டது போல!

ஆனால் அதற்காகத் திருடலாமா?

அதுவும் திருடர்களைப் பிடிக்க யார் உதவுவான் என்று நினைத்திருந்தாளோ, அவனே அல்லவா, அங்கே திருடிக் கொண்டிருந்தான். என்ன அநியாயம்!

இருந்திருந்து, அவனைப் போய் நல்லவன் என்று நினைத்தாளே.

நல்லவன் போல வேஷமிடும் அயோக்கியன்.

இவனது முகத்திரையைக் கிழித்து, இவனது உண்மைத் தோற்றத்தை ஊர் உலகத்துக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

அவன் கைக்கடிகாரம் திருடியதை அறியாதவள் போன்று, அவனை நெருங்கினாள் நளினி.

ஆனால், அந்த நெடியவனை அவள் நெருங்கு முன், மற்ற திருதிரு முழிக்காரர்களில் ஒருவன், குறுக்கே வந்து, அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சற்றே விலகி நின்றான்.

ஏன் குறுக்கே வந்தான்? ஏன் விலகிப் போனான்?

எப்படியோ போகட்டும். இவனைப் பார்த்துத் திருடனை விட்டுவிடக் கூடாது என்று எண்ணி, அவனை நெருங்கி, "இங்கிருப்பதை விட விலை உயர்ந்த வைரங்கள் அந்த அறையுள் இருக்கின்றன. பார்க்கிறீர்களா, சார்?" என்று கேட்டாள்.

"பரவாயில்லை. இந்த வளாகத்தில், விற்பனையில் அக்கறை உள்ளவள் நீ ஒருத்தியேனும் இருக்கிறாயே," என்றவன், அவளைப் பாராமல் எங்கோ நோக்க, அந்தத் 'திருதிருமுழி'களில் ஒருவன் வேகமாக அந்த அறையினுள் சென்றுவிட்டுத் திரும்பி வந்தான்.

இன்னொருவன் நெடியவனை ஒட்டிக் கொண்டே நின்றான்.

இவர்கள் மூவருமே கூட்டுக் கள்ளர்களாக இருக்கக் கூடுமோ என்று எண்ணிவிட்டு, இராது என்ற முடிவுக்கு வந்தாள் நளினி. ஏனெனில், மற்றவர்கள் யாரும் பொருட்களின் பக்கம் பார்க்கக் கூட இல்லையே.

அப்படியே கூட்டாக இருந்தால் சேர்ந்து மாட்டட்டும் என்று எண்ணியவளாய், "வாருங்கள் சார்!" என்று அழைத்துச் சென்றாள்.

உள்ளே சென்றதும், அவளையே நோக்கி, "என்னவோ விலை உயர்ந்த வைரங்கள் இங்கே இருப்பதாகச் சொன்னாயே. பார்த்தால், வெறும் பீரோக்கள் மட்டும் தானே இருப்பதாக அல்லவா காண்கிறது?" என்று கேட்டான் அவன்.

"இருக்கின்றன சார். ரொம்பவும் விலை உயர்ந்தனவா? பீரோவில் நன்றாகப் பூட்டி வைத்திருக்கிறார்கள். நான் போய்ச் சாவியை வாங்கி வந்து திறந்து காட்டுகிறேன் சார்!" என்று வேகமாக அறையிலிருந்து வெளியே வந்தவள், அதைவிட அதி விரைவாக அறைக்கதவை இழுத்துப் பூட்டினாள்.

மின்னலெனப் பாய்ந்து கீழிறங்கிச் சென்றவள், கீழ்த்தளத்தில் மூன்று தளத்து நிர்வாகிகளும் சேர்ந்து அமர்ந்து, நிறுவன விஷயமாகக் கலந்துரையாடும் - அவளது அபிப்பிராயப்படி, மூவருமாக வெற்று அரட்டையடிக்கும் - தனி அறைக்குள் வேகமாகச் சென்றாள்.

"அனுமதி கேட்காமல், நீ எப்படி..." என்று அதட்டலாகத் தொடங்கிய ஒருவரின் பேச்சை அலட்சியம் செய்து, "நம் கடை வளாகத்துள் ஒரு திருடன் புகுந்து விட்டான் சார். அவனைக் கூட்டாளிகளோடு, நம் ரிக்கார்டு அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு வந்தேன். வந்து, அவர்களைப் பிடித்துப் போலீஸில் ஒப்படையுங்கள்!" என்று மூச்சு விடாமல் கூறி முடித்து விட்டு, அதன் பின்னரே மூச்சு வாங்கினாள் நளினி.

பெரியவர்கள் மூவருமே திகைத்துத் திணறிப் போயினர்.

அவர்கள் அறிந்தவரையும், திருடர்கள் என்றால், பில் போட்டுப் பணம் கொடுக்காமல், ஒன்றிரண்டு பொருட்களைக் கொண்டு செல்ல முயல்வார்கள். உள் வாயிலைத் தாண்டும் போதே 'பீப்' சத்தம் வந்துவிடும். 'செக்யூரிட்டி' ஆட்கள் உடனே திருடனைப் பிடித்து விடுவார்கள். மரியாதையாகப் பணத்தைக் கேட்பார்கள். பணம் இல்லையென்றால், பொருளைப் பிடுங்கிக் கொண்டு, நாலு தர்ம அடி போட்டு விரட்டி விடுவார்கள்.

இப்போது, இவள் ஒருத்தியாக ஒன்றுக்கு மேற்பட்ட திருடர்களைப் பூட்டி வைத்தாளாமே! நம்புகிறாற் போலவா இருக்கிறது?

மூளை உள்ள எவனாவது அந்த அறைக்குள் வைர நகைகள் இருப்பதாக நம்பி உள்ளே செல்லுவானா?

அங்கே ஒன்றும் இல்லாததும் நல்லதுதான்.

ஆனால், எப்படிப்பட்ட முக்கியமான ரிக்கார்டுகள் அங்கே பத்திரமாய் வைக்கப்பட்டு இருக்கின்றன. சொத்துக் கணக்கு, சொத்துரிமைக் கணக்கு, இத்தனை ஆண்டு வரவு செலவுக் கணக்கு... அங்கே போய்த் திருட்டுப் பயல்களை விடுவதா?

ஆனால், இவள் சொன்னதை நம்பி, மூன்று தடிமாடுகள் வெறும் இரும்புப் பீரோக்கள் இருக்கும் அறைக்குள் போய் மாட்டிக் கொள்வார்களா?

கேழ்வரகில் நெய் வருகிறது என்று ஒரு புளுகிணி சொன்னால், அதை நம்புவதற்குக் கேட்கிற அவர்கள் என்ன, புத்தியில்லாதவர்களா?

அதுவும் பெரியம்மாவால் நியமிக்கப்பட்ட அவர்கள்!

மூவருமாகச் சேர்ந்து வெறும் கதை என்று முடிக்கையில், அந்தப் பக்கமாக வந்த நிறுவனப் பாதுகாப்பு அதிகாரியை, நளினி ஆத்திரத்தோடு கூப்பிட்டாள்.

"பூவலிங்கம் சார், நம் கடையில் வைர வாட்ச் திருடிய ஒருவனையும் அவனுடைய கூட்டாளிகளையும், மேல் தளத்து ரிக்கார்டு அறையில் பூட்டி வைத்திருக்கிறேன். கூடச் சில ஆட்களை அழைத்துப் போய், அவனைப் பிடித்துப் போலீஸில் ஒப்படைக்கிறீர்களா? அங்கே முக்கியமான பத்திரங்கள் இருக்கிறதாம்! அவை, அடுத்தவர் கண்ணில் பட்டாலும் ஆபத்து, என்று இந்தப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அதனால், சீக்கிரமாக ஏதாவது செய்யுங்கள்" என்று பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் கேட்டுக் கொண்டாள்.

"வை...ர வாட்ச்! ஐயோ ஒன்றரை லட்சம் விலையாயிற்றே. அப்படியானால், நீ நிஜமாகத்தான் சொல்லுகிறாயா? கடவுளே, அந்தச் சின்னப் பயலுக்குத் தெரிந்தால், நம்மைத் தொலைத்துக் கட்டி விடுவானே. சீக்கிரம் ஓடுங்கள், பூவு. நம் ஆட்களையே நாலைந்து பேரைக் கூட்டிக் கொண்டு, ஓடிப் போய், அவனைப் பிடியுங்கள். கைக்கடிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டு, அப்புறமாகப் போலீசில் ஒப்படைக்கலாம். ஜன்னல் கின்னலைத் திறந்து, கடிகாரத்தை வெளியே வீசி விட்டால், நமக்கு நட்டத்துக்கு நட்டம். அத்தோடு, அவனது திருட்டுக்கு ஆதாரமும் இராது. அப்புறம் அவன் நம் மேலேயே கேஸ் போட்டு விடுவான்."

மூவருமாக ஆளுக்கொன்றாகச் சொன்னதின் சாராம்சத்தைக் காதில் வாங்கிக் கொண்டு, பூவலிங்கம் தன் ஆட்களைத் திரட்டிக் கொண்டு, மேல் தளத்துக்கு விரைந்தார்.

அதற்குள் நிர்வாகிகள் மூவரும் லிஃப்ட் வழியே, அங்கே வந்து சேர்ந்து, முடிந்தவரை தூரமாய் ஒதுங்கி நின்றனர். கூட வந்த நால்வரையும், நாலு இடங்களில் நிற்கச் செய்துவிட்டு, பூவலிங்கம் கதவைத் தட்டி, "பாருங்கப்பா, கதவைத் திறந்தால், நாலைந்து இடங்களில் துப்பாக்கியோடு நிற்கிறார்கள். அதனால் மரியாதையாகக் கைகளைத் தூக்கிக் கொண்டு வெளியே வாருங்கள். அசட்டுத்தனம் எதுவும் செய்தால், உங்கள் உயிருக்குத் தான் ஆபத்து" என்று உரத்த குரலில் கூறிவிட்டு, மெல்லக் கதவைத் திறந்துவிட்டு ஒதுங்கி நின்றார்.

வாட்ச் திருடனுடைய கூட்டாளி, தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்து, உள்ளே ஏதோ சொல்ல, பூவலிங்கத்தின் எச்சரிக்கையைச் சற்றும் மதியாமல், வெகு அலட்சியமாக வெளியே வந்தான், அந்தத் திருடன்.

"என்ன பூவலிங்கம், என்னைச் சுட்டு விடுவீர்களா?" என்று கேட்ட அவனது ஏளனப் பார்வை, நளினியின் மீது ஒரு கணம் படிந்து மீண்டது.

சூழ இருந்தோரின் முகத்தில் இருந்த இறுக்கமும் பயமும் மறைந்து, ஒருவிதமான அசட்டுத் தனத்தோடு கூடிய பதற்றம் பரவியது.

மூன்று நிர்வாகிகளும், கூழைக் கும்பிடு போட்டபடி, "சா...ர் நீங்களா? உரிமைக்கார உங்களைப் போய், இந்த முட்டாள் பெண்..." என்று வழிந்தவாறு, அந்த நெடியவனிடம் ஓடினார்கள்.

திருடன் என்று தான் அறைக்குள் அடைத்து வைத்திருந்தது யார் என்று புரிபட, நளினியின் கால்களின் கீழிருந்த பூமி நழுவியது.


காக்கும் இமை நானுனக்கு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


காக்கும் இமை நானுனக்கு - Page 4 Empty Re: காக்கும் இமை நானுனக்கு

Post by சிவா Mon May 23, 2011 2:51 pm

இந்தப் பொல்லாத அரக்கர்களிடம் புவனேந்திரன் மாட்டிக் கொண்டு விட்டான் என்பது ஒன்று தவிர, நளினிக்கு வேறு எதுவுமே கண்ணிலோ கருத்திலோ படுவதாகவே இல்லை.

அவளை அணைத்துப் புவனேந்திரன் ஏதோ சொல்ல முயன்றதையும் கூட, அவளால் கவனிக்க முடியவில்லை.

அறைக்குள் இருந்த நால்வரும், எந்த வினாடியில் புவனேந்திரன் மீது பாய்வார்களோ என்ற ஒரே பயத்தில் அவர்கள் மீதே பார்வையைப் பதித்தபடி, "நீங்கள் ஓடிப் போய்விடுங்கள். உங்களைக் கொல்வதுதான் இவர்களது முக்கியத் திட்டம். நான் இவர்களைச் சில நிமிஷங்கள், எப்படியாவது தடுத்து நிறுத்துகிறேன். அதற்குள், நீங்கள் தப்பி ஓடி விடுங்கள். புவன்! ப்ளீஸ். எனக்காகப் பாராதீர்கள். போங்கள்! போங்கள்! தயவு பண்ணிப் போங்களேன்!" என்று, அவனது பிடியிலிருந்து விடுபடத் துடித்ததோடு, அவனைப் பின்புறமாகத் தள்ளவும் முயற்சித்தாள்.

"ஷ்! ஷ், நளினிமா, கண்மணி! கொஞ்சம் அமைதிப் படுத்திக் கொள். இனி ஒன்றும் பயமில்லை," என்று புவனேந்திரன் சொன்னது, அவள் காதுகளில் விழவே இல்லை.

ஆனால், அறையின் உள்ளே இருந்தவர்கள், கையில் அகப்பட்ட ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, அவனைத் தாக்குவதற்காக இன்னும் ஏன் ஓடி வரவில்லை?

மாறாக எல்லோரும், தடிக்கம்பை வைத்துக் கொண்டு இருந்தவன் கூட, அதையும் கீழே போட்டு விட்டு, ஏன் கைகளை உயர்த்திக் கொண்டு நிற்க வேண்டும்?

ஏன்?

ஒன்றும் புரியாமல் அவள் திகைப்புடன் விழித்த போது, அவளைத் தன்புறம் திருப்பி, லேசாக அணைத்தவாறு, வாயில் வழியிலிருந்து, ஒரு புறமாக ஒதுங்கி நின்றான் புவனேந்திரன்.

வழி கிடைத்ததும், போலீஸ் உடையில் நிறையப் பேர், அந்தக் குடிசைக்குள் செல்வதையும், வன்முறைக் கும்பலுக்கு விலங்கு மாட்டுவதையும், விழி விரியப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்குக் கண் சிமிட்டக் கூடத் தோன்றவில்லை.

அவ்வளவு பிரமிப்பு!

இதெல்லாம் எப்படி நடந்தது?

இன்ன இடத்துக்கு, இப்படி வா என்று புவனனிடம், அந்தக் கொலைகாரன் சொல்லவே இல்லையே.

புவனேந்திரனுடன், அவன் பேசிச் சில வினாடிகளுக்குள், இவன் இங்கே வந்தது எப்படிச் சாத்தியப்பட்டது? எப்படி முடிந்தது?

அத்தோடு, இத்தனை போலீஸ்காரர்கள் ஓசைப்படாமல் இங்கே எப்படி வந்தார்கள்?

நளினிக்கு எத்தனையோ கேள்விகள்.

ஆனால், புவனனுக்கு ஆபத்தில்லை என்பதே எல்லையற்ற ஆறுதலைத் தர, சூழ இருப்போரைப் பற்றிய நினைவே இல்லாமல், அவன் தோள் வளைவில் சாய்ந்தபடி நின்றாள்.

கடத்தல் கும்பல் நால்வரையும் கைது செய்து வெளியே கொண்டு வருகையில், போலீஸ் ஜீப் ஒன்று, உறுமிக் கொண்டு வந்து நின்றது.

ஜீப்பைத் தூர நிறுத்திவிட்டு, காவலர்கள் எல்லோரும் சத்தமின்றி வந்து, அந்தப் பாழடைந்த வீட்டைச் சூழ்ந்திருக்கிறார்கள்! கண்டபடி வளர்ந்திருந்த காட்டுச் செடி கொடிகளும், மரங்களும், அவர்கள் ஒளிந்து மறைந்து வர வழி வகுத்திருக்கின்றன.

ஆக, ஒரு விஷயம் - போலீஸ்காரர்கள் எப்படி வந்தார்கள் என்பது தெளிவாயிற்று.

ஆனால், மற்றது?

அவளைக் கூட, எச்சரிக்கையோடு கைப்பற்றியதாக, அந்தக் கடத்தல் குழுத் தலைவன் சொன்னானே! சக்திவேல், கண்ணன் போல யாரும் தன்னைப் பின் தொடர்ந்து, அவளும் பார்க்கவில்லையே!

பின்னே எப்படி?

ஆனால், எதைப் பற்றியும் தீவிரமாகக் கேட்டறியும் ஆர்வம் கூட அவளுக்கு வரவில்லை.

கடந்த சில மணி நேரமாக அனுபவித்த மன உளைச்சலுக்குப் பிறகு, புவனனின் அருகாமை தவிர, வேறு எதையும் நினைக்கக் கூட, அவளுக்குப் பிடிக்கவில்லை! தோன்றவுமில்லை!

பேசாமல், அவனையும், அவளையும் தனியே விட்டு விட்டு, எல்லோரும் இங்கிருந்து போய் விட்டால், எவ்வளவு நன்றாக இருக்கும்.

ஆனால், அவளது மனநிலை புரியாமல், போலீஸ் அதிகாரி ஒருவர் அவர்கள் அருகே வந்தார்.

"வாழ்த்துக்கள் புவனேந்திரன்! ஐந்து ஆண்டுகள் அயராது பாடுபட்டு, இந்த வன்முறைக் கும்பலைப் பிடித்து விட்டீர்கள். இனி, நிம்மதியாக இருங்கள். இவர்கள் தான் வருங்காலத் திருமதி புவனேந்திரனா? அதிர்ஷ்டக்காரர் நீங்கள். இப்போதே, உங்கள் மீது, உயிரை வைத்திருக்கிறார்களே! அருமையான மண வாழ்வுக்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!" என்று முறுவலித்தார்.

அதே போல, இன்னோர் அதிகாரியும் வந்து, ஆங்கிலத்தில் வாழ்த்துத் தெரிவித்தார். அவரும், 'இனி நிம்மதியாக இருங்கள்!' என்று முன்னவரைப் போலவே சொன்னார்.

"இவர் குஜராத்தில் பெரிய அதிகாரி. முதலிலிருந்து இந்தக் குழுவைப் பிடிப்பதில் உதவி செய்து வருகிறவர். அந்தக் குழு சென்னைக்கு வந்ததில் இருந்து, இந்த அதிகாரியும் சேர்ந்து முழு மூச்சாக உதவி செய்தார்," என்று அதிகாரிகள் இருவரையும் புவனேந்திரன் நளினிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

அவர்கள் மூவருமாகப் பேசியதைக் கவனிக்கையில், நளினிக்கு இன்னொரு முடிச்சு அவிழ்ந்தது.

புவனேந்திரன், அவ்வப்போது அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் வெளியூர் சென்ற விவகாரம்.

வேட்டை நாயாகத் துரத்தியதாக அந்த வில்லன் தலைவன் சொன்னானே, மோப்பம் பிடித்து, மோப்பம் பிடித்து, அவர்களைத் துரத்திப் பிடிக்கத்தான் சென்றிருக்கிறான்!

"அவர்களில் நாலு பேரை, நீங்கள்... உங்களால் அவர்கள் செத்ததாகச் சொன்னார்கள்..." என்றாள் அவள் மெல்லிய குரலில்.

யோசனையாகப் பார்த்துவிட்டு, குஜராத் அதிகாரி சொன்னார், "ஒரு வகையில், அவர்கள் சொன்னது நிஜம். ஆனால், அவர்களைச் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரவே, புவனேந்திரன் முயன்றார். தப்பிக்க முடியாதபோது, எட்டாம் மாடியிலிருந்து குதித்தும், சயனைட் கடித்தும், தங்களுக்குள்ளேயே சுட்டுக் கொண்டும், அவர்களாகவே செத்தார்கள்," என்று விளக்கினார்.

"எப்படியோ, பிரச்சனை சரியான விதமாக முடிந்தது. இனி, இந்தச் சள்ளையெல்லாம் மறந்து சந்தோஷமாக இருங்கள்," என்று கூறி, இரு அதிகாரிகளும் விடைபெற்றுச் சென்றனர்.

புவனனோடு காரில் திரும்பி வரும்போது, நளினி, தன் குழப்பத்தைச் சொன்னாள். "நீங்கள் எப்படி என்னைத் தொடர்ந்து வந்தீர்கள், புவனன்? அவர்கள் வெகு எச்சரிக்கையோடு என்னைக் கடத்தியதாகச் சொன்னார்களே! நீங்கள் சக்திவேல், கண்ணனையும் விலக்கி விட்டிருந்தீர்கள். பிறகெப்படி உங்களுக்கு விஷயம் தெரிந்தது?" என்று விவரம் கேட்டாள்.

"வெளிப்படையான பாதுகாப்பைத்தான் நான் விலக்கியிருந்தேனம்மா. ஆனால், உன்னைப் பாதுகாப்பின்றி, வினாடி கூட, நான் விடவே இல்லை. இவர்களை நான் விடாமல் தொடர்ந்ததால், பாதிப்பேரை அழித்து விட்டதால், இவர்கள் என்னை அழிக்க முயற்சிப்பார்கள் என்று எனக்கு நிச்சயம். இவர்களின் வழி என்ன? 'பிணைக்கைதி' பிடித்துக் காரியம் சாதிப்பதுதானே, கை வந்த கலை? இவர்களைப் பொறுத்தவரையில், இந்தப் பயம் எனக்கு எப்போதும் இருந்தது.

"கோகுலை அனுப்பி விட்டு ஒதுங்க முயன்றேனே, நினைவிருக்கிறதா? என் நெருக்கம் உனக்கு ஆபத்தாக முடியலாம் என்பதுதான், அப்போதே எனக்கு முக்கியக் காரணமாக இருந்தது.

"பிறகு, நாம் பிரிவது என்று முடிவு செய்தேனே, அன்று, இந்தக் குழுவினர் சென்னைக்கு வந்து விட்டதாக எனக்குத் தகவல் வந்திருந்தது. உனக்குப் பாதுகாப்பை அதிகரிக்கலாம் என்று வந்தால், உன்னை ஆளையே காணோம்," என்றவன். அவளது கையை இறுகப் பற்றி, "அன்று என்னமாகக் கலங்கித் தவித்துப் போனேன், தெரியுமா?" என்ற போது, அவனது குரல் கரகரத்துக் கனத்தது.

பற்றியிருந்த கையைத் தன் மறுகரத்தால் அவள் அழுத்தச் சட்டென, அவளை இறுக அணைத்துக் கொண்டான் அவன்.

"புவன்!" என்று அவன் காதுக்குள் கிசுகிசுத்தாள் நளினி.

"என்ன?"

"நாம் கொஞ்ச நேரம்... வந்து, இதையெல்லாம் தனியே இருந்து பேசுவோமா?"

அவளை விடுவித்து விட்டு, டிரைவரிடம், "வீட்டுக்குப் போப்பா!" என்றான் புவனேந்திரன்.


காக்கும் இமை நானுனக்கு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காக்கும் இமை நானுனக்கு - Page 4 Empty Re: காக்கும் இமை நானுனக்கு

Post by சிவா Mon May 23, 2011 2:52 pm

கூடவே, செல்லை எடுத்து நீட்ட, அதை வாங்கி, வீடு திரும்பச் சற்றுத் தாமதம் ஆகும் என்று தாயிடம் தெரிவித்தாள் நளினி.

அவன் முறுவலிக்கவும், வாய்ச் சொற்கள் அவசியமே படாமல், ஒருவர் மனதை ஒருவர் சரியாக உணர்ந்து செயல்படுவதை, உள்ளூர வியப்புடன் உணர்ந்தாள் அவள்.

புவனேந்திரனின் செல்லில் பேசுவதாகச் சொன்னபின், என்ன, எங்கே என்று சகுந்தலா எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

உயரமான சுற்று மதில், வாயில் காவலர்கள், நாய்கள், கிரில் அடைத்த சுற்று வராண்டா, காவலர் உடையையும், கிரில் அமைப்பையும் சற்று மாற்றி விட்டால், பழைய காலத்து அரண்மனைதான்!

இந்த மனநிலை எப்போதேனும் மாறக் கூடுமா?

கவனம் இருக்க வேண்டியதுதான். ஆனால்...

தனியறைக்குச் சென்றதும், "அப்புறம்?" என்று கேட்டாள் அவள்.

"அதை அவ்வளவு தூரத்தில் இருந்து கேட்டால் எப்படிச் சொல்வது?" என்று கண்ணில் சிரிப்புடன் கேட்டான் புவனன்.

பிகு பண்ணாமல் புன்னகையோடு அருகில் வந்தவளை உட்கார வைத்துத் தானும் அருகமர்ந்து, விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தான்.

"ஆனால், உனக்கு வரக்கூடிய ஆபத்து, அதற்குத் தேவையான பாதுகாப்பு பற்றிய முக்கியத்துவம் பற்றிச் சொன்னாலும் உனக்குப் புரியவில்லை. அடிப்படை புரிந்தால்தானே, அதற்கு மேல் விஷயத்தை விளக்கிப் புரிய வைக்க முடியும்? புரிந்து கொள்ளப் பிடிக்காததுதான் பெரும் அபாயமாக இருந்தது. நெருங்கி வந்துவிட்ட கொடியவர்களிடம் இருந்து, உன்னைக் காப்பது பெரிய பிரச்சனையாகக் கண் முன்னே நின்றது. அவர்கள் எப்பேர்ப்பட்ட கொடுமைக்காரர்கள் என்று நேரடியாக அறிந்திருந்ததால், பாதுகாப்பின்றி, உன்னை ஒரு வினாடிக் காலம் சும்மா விடவும் எனக்கு மனமில்லை. எனவே, செக்யூரிட்டி நிறுவனமும், நானும் சேர்ந்து, அதற்கு ஒரு வழி கண்டு பிடித்தோம்.

"உனக்குக் காவலாக, ஒருவரையோ, இருவரையோ மட்டுமாக வைக்கவில்லை! அங்கங்கே ஆட்கள், ஒருவர் கண்ணுக்கு நீ மறைகிற போது, செல்லில் அடுத்தவருக்குத் தகவல் போய்விடும். அங்கிருந்து அடுத்த ஆள்! அடுத்த வாகனம்! தொடர்வதாகத் தோன்றாதபடியே, முன்னும் பின்னுமாகத் தொடர்ந்து பாதுகாத்தார்கள்."

"ஆனால், செலவு நிறைய ஆகியிருக்குமே!"

அவளது முகத்தை ஏந்தி, அவன் சொன்னான், "எவ்வளவு ஆனாலும், அதைவிட, நீ முக்கியம் அல்லவா?"

விழிகளில் லேசாக நீர்த் திரையிட, "அப்புறம்?" என்று கேட்டாள் நளினி. "இந்தப் படையினர் இவ்வளவு கவனமாக இருந்ததால்தான், அந்தக் கடத்தல் கும்பலுக்கும், இவர்களைக் கண்டு கொள்ள முடியவில்லை போல!" என்றாள் அவள் வியப்புடன்.

"ஆனால், நாலே பேராகிவிட்டிருந்த அவர்களை, நம் ஆட்கள் கண்டு கொண்டனர். விஷயம் தெரிந்ததும், இன்னொரு திட்டம் போட்டோம். அவர்களைப் பிடித்து உள்ளே போடுவது மட்டும் தான் உன்னை நிரந்தரமாகப் பாதுகாக்கும் வழியாகத் தோன்றிற்று. எனவே, உன்னைக் கடத்திச் செல்லும் அளவுக்கு, அவர்களுக்கு இடம் கொடுத்தோம். அதே சமயம், உனக்கு ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக, 'முன்னைப் போல, நான் ஏமாற மாட்டேன்! பிணை, கிணை என்று எனக்கு வேண்டிய யாரையும் பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டினால், கடைசி வரை என் ஆட்களே என்னிடம் தொடர்பு கொண்டால் ஒழிய நம்ப மாட்டேன் என்று நான் சொன்னதாக, அவர்கள் காது கேட்கப் பேச வைத்தேன். கடத்தியதும், உடனே அறிந்து, அங்கங்கே ஒவ்வொரு திசையில் இருந்தும் ஆட்கள் சேர்ந்து, அங்கே வந்து சேர்ந்தோம்."

"அந்தக் கும்பலின் மனோபாவம் தெரிந்து செய்திருக்கிறீர்கள்," என்று மேலும் வியந்தாள் நளினி.

"பின்னே?" என்றான் அவன். "இந்த சுமார் ஐந்தரை ஆண்டுகளாக, அவர்களைத் துரத்துவதுதானே, தொழிலை விடவும், என் முக்கிய வேலையாக இருந்தது. துரத்திப் பிடித்து, ரதிக்குக் கடன் தீர்ப்பது! அவளது மரணக் கடனைத் தீர்த்து விட்டேன்! ஆனால்..." என்று வேதனையோடு பெருமூச்சு விட்டான் அவன்.

ரதியின் நினைவு!

இதில், நளினி என்ன வகையில் ஆறுதல் சொல்ல முடியும்?

பரிதாபத்துக்குரிய அந்தச் சிறு பெண்ணை நினைக்கையில், அவளுக்கே பரிதாபமாகத்தான் இருந்தது.

கூடவே, புவனேந்திரன் வேதனைப் படுவது பொறுக்க முடியாமல், அவன் முதுகை ஆறுதலாக மெல்ல வருடி விட்டாள் அவள்.

மீண்டும் ஒரு பெருமூச்சுடன், புவனனே தொடர்ந்து பேசினான். "என் குற்ற உணர்ச்சி. அதுதான் தாங்க முடியவில்லை. ஆசிரமத்தில் வளர்ந்த ஒரு சின்னப் பெண்! என்னவோ அவளைச் சிறப்பாக வாழ வைப்பதாக எண்ணிக் கொண்டு, அவளை மணந்து, அவளைப் பலி கொடுத்து விட்டேன். என்னை மணக்காமல் இருந்திருந்தால், இன்றைக்குக் கூட, எங்கோ அவள் உயிரோடு வாழ்ந்திருக்கக் கூடுமே என்று அதுதான் மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது! வாழ வேண்டிய ஒரு சின்னப் பெண்ணின் அகாலச் சாவுக்கு நான் காரணம் ஆனேனே!" என்று, தன் மனதை மறையாமல் சொன்னான் புவனன்.

"ஐயோ, அது அப்படியில்லை, புவனன்!" என்று தொடங்கி, கடத்தல் குழுத் தலைவன் கூறியதை, அப்படியே சொன்னாள் நளினி. "அவர்கள் செய்த கொலையை, ரதி பார்த்து விட்டாள் என்று அவளைக் கொல்வதற்காகத்தான், அவர்கள் அவளைக் கடத்திச் சென்றது. அதன்படி செய்தும் விட்டார்கள். ஆனால், உங்களிடம் பணம் பறிப்பதே, பிறகு தோன்றிய ஐடியாதான். சரியாகச் சொல்வதானால், ரதியின் வாழ்வு எப்படியும் முடிந்திருக்கும்! ஆனால், அவளது கடைசி நாட்களில், நீங்கள் அவளுக்குச் சொர்க்கத்தைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று தான் சொல்ல வேண்டும்!" என்று தெளிவாக விளக்கினாள்.

சற்று நேரம் புவனன் ஒன்றுமே பேசவில்லை.

பிறகு, நளினியின் கைகளைத் தன் கரங்களில் எடுத்து, "என் கண்மணி...!" என்று, அந்தக் கைகளில் முகம் புதைத்து, அப்படியே அமர்ந்திருந்தான்.

கைகளில் ஈரம் உணர்ந்த போதும், என்ன சொல்வது என்று புரியாமல், நளினியும் அசையாமலே உட்கார்ந்திருந்தாள்.

உடலை நடுக்கிச் சென்ற ஒரு மிக நீண்ட பெருமூச்சின் பின், புவனன் மெல்ல நிமிர்ந்தான்.

"பிணக் கிடங்கில் ரதியின் முகத்தைப் பார்த்த பிறகு, இத்தனை ஆண்டுகளாக, ஒரு நாள் கூட, அதை நினையாமல் நான் தூங்கியது இல்லை நளினிம்மா! அதன் காரணம் நான், நான் என்று, என்னமாய்த் தவித்திருக்கிறேன்... அப்படியில்லை என்று தெரியும் போது, கடவுளே, எப்பேர்ப்பட்ட விடுதலை உணர்ச்சியை எனக்குத் தந்திருக்கிறாய், தெரியுமா? வாழ வேண்டிய வயதில், ஒரு சின்னப் பெண் உயிரை இழந்தாளே என்று, இப்போதும் பரிதாபம் தான்! ஆனால், அதன் காரணம் நான் இல்லை என்று அறியும் போது... அவளது கடைசி நாட்களைச் சந்தோஷமாகக் கழிக்க உதவினேன் என்பது, எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது, தெரியுமா? நளினி, நீ இன்று என்னை மீண்டும் முழு மனிதன் ஆக்கி விட்டாய், கண்ணம்மா! அதற்காக உனக்கு நான் ஏதேனும் செய்தே ஆக வேண்டும். சொல்லு. உனக்கு என்ன வேண்டும்? ஒன்றும் வேண்டாம் என்று சொல்லக் கூடாது! ஏதாவது, கட்டாயம் நீ கேட்டே ஆக வேண்டும்."

சில கணங்கள் மௌனமாக இருந்தவளுக்கு, வீட்டினுள் வரும்போது எண்ணியது நினைவு வந்தது.

அவன் முகத்தைப் பார்த்து, "விஷயமே வேறு என்று ஆனதால், இந்தப் பாதுகாப்புப் பிரமை மாறக் கூடும் அல்லவா, புவனன்?" என்று கேட்டாள் அவள்.

"ஓ!" என்று எழுந்தான் புவனேந்திரன்.

இருமுறை குறுக்கும் நெடுக்குமாக நடந்துவிட்டு, "இப்படி யோசி, நளினி. அங்கங்கே ஆட்களைப் பிடித்துப் போய்ப் பணம் பறிப்பதாய்ப் பத்திரிகையில் படிக்கிறோம் தானே? இனிப் பயம் இல்லை என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அதன் பிறகு, அந்த மாதிரியான நிலை நமக்கு நேர்ந்தால், எப்படி இருக்கும், சொல்லு!" என்று கேட்டான் அவன்.

கண்ராவியாகத்தான் இருக்கும். ஆனால், இப்படிக் கூடவே வைத்துக் கொண்டு அலைவதும்... அதுவும் கண்ராவியாகத்தான் அவளுக்குத் தோன்றியது.

நளினி பேசாமல் அமர்ந்திருக்கவும், மேலும் இருதரம் அறையை அளந்துவிட்டு, அவள் அருகே வந்து அமர்ந்தான் அவன்.

"ஓகே! உன் எண்ணமும் எனக்குப் புரிகிறது. அதனால், ஒன்று செய்யலாம். வீடு, தொழில் இடங்களுக்குத் தேவையான அளவுக்கு மட்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கட்டும். அத்தோடு, எலக்ட்ரானிக் கருவிகளையும் பொருத்திக் கொள்வோம். இவை போக, நன்கு பழக்கப்பட்ட நாய்கள் வாங்கித் தருகிறேன், எப்போதும், ஒன்றை அருகே வைத்துக் கொள்வோம். இது கூட வேண்டாம் என்று சொல்லிவிடாதேம்மா! ப்ளீஸ்..." என்றான் புவனன் கெஞ்சுதலாக.

தன்னை மீறிச் சிரிப்பு வந்தது நளினிக்கு.

"ம்ம்ம்..." என்று புன்னகையோடு அவள் யோசிக்க, "புரிகிறது, புரிகிறது..." என்று அவசரமாகக் குறுக்கிட்டான் அவன்.

"அந்த ஓர் அறைக்குள் மட்டும், நம்மைத் தவிர வேறு எந்தப் பிராணியையும், காவலுக்காகக் கூட, நானே விட மாட்டேன், கண்மணி! இது உறுதி!" என்று அவன் சூளுரைக்க, அவள் முகம் செந்தாமரையாய்ச் சிவந்து மலர்ந்தது.

(முற்றும்)

ரமணி சந்திரன்
காக்கும் இமை நானுனக்கு - Page 4 Ramani+chandran


காக்கும் இமை நானுனக்கு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காக்கும் இமை நானுனக்கு - Page 4 Empty Re: காக்கும் இமை நானுனக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum