புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேப்பெண்ணெய்க் கலயம் I_vote_lcapவேப்பெண்ணெய்க் கலயம் I_voting_barவேப்பெண்ணெய்க் கலயம் I_vote_rcap 
62 Posts - 63%
heezulia
வேப்பெண்ணெய்க் கலயம் I_vote_lcapவேப்பெண்ணெய்க் கலயம் I_voting_barவேப்பெண்ணெய்க் கலயம் I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
வேப்பெண்ணெய்க் கலயம் I_vote_lcapவேப்பெண்ணெய்க் கலயம் I_voting_barவேப்பெண்ணெய்க் கலயம் I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
வேப்பெண்ணெய்க் கலயம் I_vote_lcapவேப்பெண்ணெய்க் கலயம் I_voting_barவேப்பெண்ணெய்க் கலயம் I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
வேப்பெண்ணெய்க் கலயம் I_vote_lcapவேப்பெண்ணெய்க் கலயம் I_voting_barவேப்பெண்ணெய்க் கலயம் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
வேப்பெண்ணெய்க் கலயம் I_vote_lcapவேப்பெண்ணெய்க் கலயம் I_voting_barவேப்பெண்ணெய்க் கலயம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேப்பெண்ணெய்க் கலயம் I_vote_lcapவேப்பெண்ணெய்க் கலயம் I_voting_barவேப்பெண்ணெய்க் கலயம் I_vote_rcap 
254 Posts - 44%
heezulia
வேப்பெண்ணெய்க் கலயம் I_vote_lcapவேப்பெண்ணெய்க் கலயம் I_voting_barவேப்பெண்ணெய்க் கலயம் I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
வேப்பெண்ணெய்க் கலயம் I_vote_lcapவேப்பெண்ணெய்க் கலயம் I_voting_barவேப்பெண்ணெய்க் கலயம் I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேப்பெண்ணெய்க் கலயம் I_vote_lcapவேப்பெண்ணெய்க் கலயம் I_voting_barவேப்பெண்ணெய்க் கலயம் I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வேப்பெண்ணெய்க் கலயம் I_vote_lcapவேப்பெண்ணெய்க் கலயம் I_voting_barவேப்பெண்ணெய்க் கலயம் I_vote_rcap 
15 Posts - 3%
prajai
வேப்பெண்ணெய்க் கலயம் I_vote_lcapவேப்பெண்ணெய்க் கலயம் I_voting_barவேப்பெண்ணெய்க் கலயம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வேப்பெண்ணெய்க் கலயம் I_vote_lcapவேப்பெண்ணெய்க் கலயம் I_voting_barவேப்பெண்ணெய்க் கலயம் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
வேப்பெண்ணெய்க் கலயம் I_vote_lcapவேப்பெண்ணெய்க் கலயம் I_voting_barவேப்பெண்ணெய்க் கலயம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வேப்பெண்ணெய்க் கலயம் I_vote_lcapவேப்பெண்ணெய்க் கலயம் I_voting_barவேப்பெண்ணெய்க் கலயம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வேப்பெண்ணெய்க் கலயம் I_vote_lcapவேப்பெண்ணெய்க் கலயம் I_voting_barவேப்பெண்ணெய்க் கலயம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேப்பெண்ணெய்க் கலயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 1:28 am

பெருமாள்முருகன்

பேரனைக் கையில் பிடித்துக்கொண்டு குள்ளப்பாட்டி வீட்டை விட்டுப் புறப்பட்டபோது பொழுது கிளம்பியிருக்கவில்லை. பேரன் முகத்தில் தூக்கம் படர்ந்திருந்தது. பாட்டி எங்கே கூட்டிப்போகிறாள் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் ஏதோ புது இடத்திற்காகத்தான் இருக்கும். பாட்டி வீட்டுக்கு வந்த இந்த இரண்டு வாரத்தில் அவன் கண்ட இடங்கள் எல்லாம் புதிதானவை. அவன் கனவுகளில்கூட நுழைந்திராத புத்தம்புதுப் பிரதேசங்கள். ‘எங்க ஆயா போறம்’ என்று சிணுங்கலோடு பலமுறை கேட்டு நச்சரித்தான். பாட்டி தன் குட்டைக் கையைத் தூக்கி முன்னால் காட்டி ‘அங்க போறம்’ என்றாள். ‘அங்கன்னா எங்காயா’ என்று கால்களை நிலத்தில் உதைத்துக்கொண்டு கேட்டான். ‘அங்கன்னா அங்கதான்’ என்று சொன்னாள் பாட்டி. இருவருக்கும் அது ஒரு விளையாட்டுப் போலவும் நடையை அலுப்பில்லாமல் தொடரவும் உதவியது.

எப்படியும் தெரியத்தானே போகிறது என்று அவன் பாட்டிக்கு முன்னும் பின்னுமாக ஓடி வேறு விளையாட்டுக்கு மாறினான். விளையாட்டு அலுக்கும்போதெல்லாம் ஓடி வந்து பாட்டியின் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுவது போல ‘எங்காயா போறம்’ என்பான். எங்கே போகிறோம் என்று தெரிந்து அதற்காகத் தயாரிப்புகள் எல்லாம் செய்து புறப்பட்டுத்தான் அவனுக்குப் பழக்கம். பாட்டி வீட்டுக்கு வரும் முன் அவன் மட்டுமல்லாமல் அவன் அப்பா அம்மாவும் சேர்ந்து எத்தனையோ தயாரிப்புகள் செய்தார்கள். எதுவுமே இல்லாமல் எங்காவது போவது இந்தப் பாட்டியால்தான் முடியும். அவனுக்கு ஏதாவது பதில் சொல்லிக் கொண்டும் பதில் சொல்லாமல் வெறும் பொக்கைச் சிரிப்பைத் தந்துகொண்டும் தன் கூனுடம்பை மெல்ல நகர்த்திக் காடுகளை இணைத்துச் செல்லும் கொடித்தடத்தில் ஊர்ந்தாள் பாட்டி.

அவனுடைய பெயர் பாட்டிக்கு வாயில் நுழையவில்லை. அதனால் அவள் ‘குஞ்சு’ என்று அழைத்தாள். ‘குள்ளப்பாட்டி பேரன் குஞ்சு’ என்று ஊர்ச் சிறுசுகளும் பெரிசுகளும் கேலி செய்தார்கள்.

குஞ்சு குஞ்சு
குட்டிக் குஞ்சு
கோழிக்குஞ்சு
காக்காக் குஞ்சு
கருவாட்டுக் குஞ்சு
டவுசர் போட்ட
டவுனுக் குஞ்சு


எனச் சிறுவர்கள் ராகம் போடும்போது மண்ணை அள்ளித் தூற்றிவிட்டு ஓடி வந்துவிடுவான். பதினைந்து நாள்களுக்குள் குஞ்சு இத்தனை தெரிந்துகொண்டிருக்கிறான் என்பதில் பாட்டியின் முகம் பூரிக்கும். கைகளால் வாரிக் கன்னத்தில் இருத்திக்கொள்வாள்.

பேரன் என்றால் நேரடிப் பேரன் இல்லை. கொள்ளுப் பேரன். பாட்டிக்குப் பேத்தி மகன். மகள் வயிற்றுப் பேத்தி. மகள் போயே சில வருசங்கள் ஆகிவிட்டன. பேத்தி எப்படியோ ஞாபகம் வைத்திருக்கிறாள். பாட்டியின் சொந்தங்கள் எல்லாம் இறக்கை முளைத்த குஞ்சுகளாய் இரை தேடி திக்காலுக் கொன்றாய்ப் பறந்து போயின. ஊரில் நல்லது கெட்டது என்று எதற்காவது யாராவது வரும்போது பாட்டியையும் பார்த்துப் போவார்கள். கையில் ரூபாய்த் தாள்களைத் திணிப்பார்கள். அதை வாங்கித்தான் அவள் சாப்பிட வேண்டும் என்பதில்லை. மாதாமாதம் வருமானம் வருகிற மாதிரியான ஏற்பாடு இருக்கிறது. ஒண்டிச் சீவனுக்கு அதுவே தாராளம். என்றாலும் வாங்கிக் கொள்வாள். கொடுப்பவருக்கு சந்தோஷம் கிடைக்குமானால் கெடுப்பானேன்? எல்லாரும் ஒருநாளைக்குச் சேர்ந்து வருவார்கள். பாட்டிக்கு இத்தனை சொந்தங்களா என்று ஊரே கண் விரியப் பார்க்கும். அப்போது எல்லாரையும் பார்க்கத் தன்னால் முடியாது என்று தோன்றும். தூக்கம் வராத இரவுகளில் வானத்தைப் பார்த்துக்கொண்டு தன் சொந்தங்களின் கிளைகளை எல்லாம் எண்ணிப் பார்ப்பாள். யாருடைய முகமாவது நினைவில் வராமல் போனால் வருத்தமாகிப் போகும். எப்படியாவது முயன்று அந்த முகத்தை மனத்திற்குக் கொண்டு வந்த பின்னால்தான் நிம்மதியாகும். பெயர்கள் நினைவிலிருந்து கழன்று வெகுகாலமாகி விட்டது.

பாட்டியின் உடல் குறுகிப் போய்விட்டது. ஆனால் அவளுடைய அன்றாட வேலைகளில் எந்தச் சுணக்கமும் இல்லை. வீடு வாசலைச் சுத்தம் செய்வது, சமைப்பது, சாப்பிடுவது, குளிப்பது என்று நாள் ஓடிவிடும். வாசல் திண்ணையில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தால் எத்தனையோ காட்சிகள். மனிதப் பேச்சுகளும் நடவடிக்கைகளும்தான் காணக் காணத் தீராத வேடிக்கைகளாய் விரிகின்றன. ஆகாத பண்டமாய் ஒதுங்கிக் கிடந்தாலும் பாட்டியை வம்புக்கிழுத்து யாராவது ஒன்றிரண்டு வார்த்தை பேசிப் போவார்கள். அதுவே அன்றைய நாளுக்குப் பெரிய ஆறுதலாகிவிடும். ‘யாரப் பாத்துக்கிட்டு உக்காந்திருக்கற பாட்டி’ என்று எவளாவது குமரியொருத்தி பாட்டியின் வாயைக் கிளறுவாள். முன்பெல்லாம் இப்படி யாராவது கேட்டால் பாட்டியும் பதிலுக்கு வம்பாகச் சொல்வாள் ‘உன்னூட்டுக்காரன் பொழுது மசங்க வர்றமுன்னான். அதான் பாத்துக்கிட்டு உக்காந்திருக்கறன்’. பதிலும் வரும், ‘பாட்டிக்கு இன்னம் கொழுப்பு அடங்கல பாத்துக்க’ என்கிற மாதிரி. ஆனால் இப்போதெல்லாம் பொக்கை வாய் விரியச் சிரித்துக்கொண்டு ‘அந்தக் கூத்துவந்தான் வருவான்னு பாக்கறன்’ என்கிறாள். ‘எல்லா ஊட்டுக்கும் கூத்துவன அனுப்பிட்டுக் கல்லாட்டம் உக்காந்திருக்கற. நீதான் கூத்துவன் போ’ என்று கேலி செய்கிறார்கள். அதில் உண்மையும் இருப்பதால் பாட்டியின் முகம் வாடிப் போகும். எத்தனையோ சாவுகளைப் பார்த்துவிட்டவள். ‘நானா மாட்டீங்கறன். ஏனோ கூத்துவனுக்கு என்னயப் புடிக்க மாட்டீங்குது’ என்று நினைத்துக் கலங்குவாள்.

அருகில் நெருங்காத கூற்றுவனின் கொடூர சிந்தை பற்றி எண்ணமோடி ‘இன்னம் என்னென்னத்தப் பாக்கோனுமின்னு எந்தலையில எழுதி வெச்சிருக்கற’ என்று தனக்குள்ளாகவே புலம்பியபடி திண்ணையில் தலைசாய்த்திருந்த நண்பகல் பொழுதில் அவளுக்கு முன்னால் மோட்டார் வண்டியில் பேத்தியும் அவள் புருசனும் இந்தக் குஞ்சுவோடு வந்து இறங்கினார்கள். வேறேதாவது வேலையாக வந்தவர்கள் அப்படியே பார்த்துப் போக வந்திருப்பார்கள் என்று நினைத்து வரவேற்றாள். உடனடியாக அடையாளம் கண்டுகொண்டதும் சில விஷயங்களை விசாரித்ததும் அவர்களுக்குப் பெருத்த மனநிறைவைக் கொடுத்தன. பாட்டி தண்ணீர் மொண்டுவர உள்ளே போனபோது ‘கெழ்டுக்கு வயசாவ வயசாவக் கண்ணு காதெல்லாம் நல்லாக் கூராகிக்கிட்டே வருது’ என்று பேத்தி பேசுவது காதில் விழுந்தது. குஞ்சு பாட்டியையே பார்த்துக்கொண்டு இறுகி நின்றான்.



வேப்பெண்ணெய்க் கலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 1:28 am

பேத்தி வந்த காரியம் கொஞ்ச நேரம் கழித்துத்தான் விளங்கியது. அவர்கள் இரண்டு பேருமே ‘ஆப்பீஸ் வேலை’யில் இருப்பவர்கள். இரண்டு பேருக்கும் ஒரே சமயத்தில் வெளியூர் போய்ச் சில நாட்கள் இருக்கும்படி நிர்ப்பந்தம். பையனுக்குக் கோடை விடுமுறை. அதனால் இந்தக் குஞ்சுப் பையனை பாட்டிதான் பார்த்துக்கொள்ள வேண்டும். வேறெங்கும்விட வழியில்லை. பாட்டியால் முடிகிறவரை பார்த்துக்கொண்டால் போதும். அதற்குள் வேறு ஏதாவது ஏற்பாடு செய்துகொள்வார்கள். இன்னும் இரண்டு மூன்று இடங்களையும் யோசித்து வைத்திருந்தார்கள். பாட்டி மறுத்து விடுவாளோ என்னும் பயத்தில் பேத்தி ரொம்பவும் கெஞ்சுகிற தொனியில் விஷயத்தைச் சொன்னாள். இன்னும்கூடத் தன்னால் ஏதோ பயன் இருக்கிறது என்று பாட்டி அப்போதுதான் உணர்ந்தாள். ‘தாராளமா உட்டுட்டுப் போம்மா. ஒரு மாசத்துக்குனாலும் குஞ்ச நா பாத்துக்கறன்’ என்று சொன்னாள். ஆறு வயதுப் பையன். இதுவரை அப்பா அம்மாவைப் பிரிந்து இருந்ததில்லை. நிர்ப்பந்தத்தால் இந்தக் கிழவியிடம் விடவேண்டியிருக்கிறதே என்னும் கவலை மிகுந்த அவர்கள் முகத்தைப் பார்த்ததும் சமாதானப்படுத்தி நம்பிக்கை கொடுக்கப் பாட்டி முயன்றாள். தன் ஈரம் மிகுந்த கைகளால் குஞ்சுவின் கன்னத்தை வாரிப் பிடித்துக்கொண்டாள். அவன் நெளிந்தான். காப்புக் காய்ச்சிய வடுக்கள் உரசின. ஆனால் அந்தத் தொடுதல் அவனால் விலக்க முடியாததாக இருந்தது.

‘குஞ்சு உனக்கு வேணுங்கறத இந்தப் பாட்டி வாங்கிக் குடுப்பன். இந்த வீதியெல்லாம் உன்னோடதுதான். ஓடி வெளையாடலாம். காட்டுக்குள்ள ஒரு மரத்துல கிளிக்குஞ்சு இருக்குது உனக்குப் புடிச்சுத் தருவன். என்ன குஞ்சு என்னோட இருந்துக்குவியா.’

பையனின் முகத்தில் தெளிவும் குழப்பமும் மாறிமாறித் தோன்றின. உடலெங்கும் சுருக்கங்களும் இடுங்கிய கண்களும் கூனிய முதுகும் கொண்ட கிழவியை அவன் கார்ட்டூன் படங்களில் கொடூர சூன்யக்காரிகளாகத் தான் பார்த்திருக்கிறான். இந்தக் கிழவியின் தோற்றம் அப்படி இருந்தாலும் பேச்சில் வழியும் பிரியமும் இதுவரைக்கும் அவனை யாரும் அழைக்காத விதத்தில் ‘குஞ்சு’ என்று அவள் கூப்பிடுவதும் குழப்பின. வாய்க்குள் அமுங்கிக்கிடக்கும் உதடுகளை வெளிப் பிதுக்கி அவள் பேசுவதும் பையனுக்கு அவ்வளவாகப் புரியவில்லை. அப்பாவும் அம்மாவும் அவனுக்கு எத்தனையோ சொல்லித்தான் கூட்டி வந்தார்கள். அடம் செய்தால் அழ அழ விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். கோடைகாலச் சிறப்பு வகுப்பு என்று சொல்லி எங்காவது விடுதியில் விட்டுவிடும் அவர்கள் யோசனையை அவன் முன்பே அழுது வன்மையாக நிராகரித்திருந்தான்.

பத்து நாட்களுக்கான தின்பண்டப் பைகளையும் சாக்கு போன்ற பெரிய பொம்மைப் பை ஒன்றையும் கொடுத்துவிட்டு நான்கைந்து பெரிய ரூபாய்த் தாள்களைப் பாட்டி கையில் வைத்தார்கள். பேத்தி முகத்தைக் கலவரமாக நோக்கி ‘எதுக்கும்மா’ என்றாள் பாட்டி. பையனைப் பார்த்துக்கொள்ளக் கூலியோ என்று விதிர்த்துப்போனாள். ‘பையன் அதையும் இதையும் கேப்பான். வாங்கிக் குடு. அதுக்குத்தான் அம்மாயி’ என்று பேத்தி சொல்லவும்தான் மனம் சமாதானப்பட்டது. பையனைப் பிரிய மனமே இல்லாமல் ஏதாவது சொல்லிக்கொண்டே இரண்டு பேரும் நின்றார்கள். ஏழெட்டுக் குழந்தைகளைப் பெற்று வளர்த்தவள் பாட்டி. பெற்றுச் சில மாதங்களிலேயே இறந்து போனது ஒன்று. தெருவெல்லாம் ஓடிப் புழுதி அடித்துக்கொண்டு வெண்ணிறமாய் மாறிவரும் குறும்பிராயத்தில் துள்ளத்துடிக்க ஒன்றை வாரிக்கொடுத்தாள். அந்தக் குழந்தைதான் இப்போதும் கண்களில் வந்து நின்று கொட்டிச் சிரிக்கும். அது வளரவே இல்லை. குழந்தையாகவே இத்தனை வருசங்களாகச் சிரித்தாடுகிறது. வளர்ந்து வேலைவெட்டி என்று ஓடிவிட்டவர்களின் குழந்தைத் தோற்றம் இப்போது நினைவில் இல்லை. தன் மனத்தில் அப்படியே இருக்கும் அந்தக் குழந்தைதான் குஞ்சுவாக வந்திருப்பதாகத் தோன்றியது. இல்லை என்றால் இத்தனை வருசம் கழித்துத் தன்னைத் தேடி ஒரு குழந்தை வருவானேன்? பாட்டியின் உடலிலும் மனத்திலும் புதுத்தெம்பு கூடியது.

இரண்டு வாரமாகப் பாட்டிக்கு நிற்க நேரமில்லை. குஞ்சுவின் தேவைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்தாள். மூன்று வேளையும் அவனுக்குச் சூடாக வேண்டும். ஒருவேளை செய்ததையே நாள் முழுதுக்கும் வைத்துக்கொண்டிருந்தவள் இப்போது மூன்று வேளையும் செய்ய வேண்டியதாயிற்று. அவனைக் குளிக்கவைக்கப் பெரும்பாடுபட வேண்டியிருந்தது. தன் கைச்சமையல் அவனுக்குப் பிடிக்குமோ என்னவோ என்று பாட்டிக்குக் கவலை. அவனும் விரும்பிச் சாப்பிட்டான். மசாலா போட்ட உணவு வகைகளைச் சாப்பிட்டுப் பழகியிருந்த அவன் நாக்கு இத்தகைய ருசிகளைக் கண்டதேயில்லை. இத்தனைக்கும் பாட்டி மிளகாயைக் கிள்ளிப் போட்டுப் பருப்பைப் பன்னீராட்டம் கடைவாள்; பீர்க்கங்காய், நக்கிரி, சுரைக்காய், கத்திரிக்காய் என்று எல்லாவற்றையும் கடைவாள். காய்களின் ருசி மாறாத அந்தக் குழம்புகளை ஆவலாகச் சாப்பிட்டான் குஞ்சு. சமைக்கும் வேலை எந்நேரமும் இருந்தது. கொஞ்ச நேரம் கால் நீட்டிப் படுக்கவோ கண்மூடவோ பகலில் நேரம் கிடைப்பது அரிதாயிற்று. ஆனால் பாட்டி அதை உணரவில்லை.

அவனுக்கென்று பால் வாங்கித் தயிர் போட்டாள். கெட்டித் தயிரை வழித்து நக்கிச் சாப்பிட்டான். காலை நேரத்தில் குஞ்சு வெகுநேரம் தூங்கினான். அவனை எழுப்பவே மனம் வராது. பத்து மணிக்கு மேலும் அவனும் அசந்து தூங்குவான். சமைத்து வைத்துவிட்டு அவன் எழுந்திருப்பானா என்று அவனையே பார்த்தபடி உட்கார்ந்திருப்பாள். தூங்குகிற பையனை இப்படிப் பார்த்துக்கொண்டிருந்தால் தன் கண்ணே பட்டுவிடும்; சாயங் காலம் அவனுக்குச் சுத்திப்போட வேண்டும் என்று நினைப்பாள். வெறும் வயிற்றோடு தூங்குகிறானே என்று மனமே இல்லாமல் எழுப்புவாள். அவசர அவசரமாக எழுப்பி வேகவேகமாகப் புறப்பட வைத்துப் பள்ளிப் பேருந்தில் திணித்து ஓட வேண்டிய தேவையில்லாததாலும் பாட்டி தன்னைத் திட்டி ஒரு வார்த்தையும் சொல்லாததாலும் அவனுக்கு அந்தப் பட்டிக்காடு ரொம்பவும் பிடித்திருந்தது. பாட்டி செய்துவைத்திருக்கும் உணவைத் தின்றுவிட்டு ஓடிவிடுவான்.



வேப்பெண்ணெய்க் கலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 1:29 am

தெருவில் ஏற்கனவே பலவிதமான விளையாட்டுகள் களை கட்டியிருக்கும். அதில் ஏதாவது ஒன்றுக்குள் அவனும் நுழைந்துவிடுவான். அப்புறம் மறுபடியும் சாப்பிடப் பாட்டி வந்து கூப்பிடும்போதுதான் அவனுக்கு நினைவே வரும். அவன் விளையாடும் இடத்திலேயே பாட்டி சுற்றிச் சுற்றி வந்து கூப்பிடுவாள். ராசா, குஞ்சு, கண்ணு, பொன்னு என்று எத்தனையோ இனிய வார்த்தைகளால் அவனை அழைப்பாள். ஆனால் காதிலேயே வாங்கிக்கொண்ட மாதிரி தெரியாது. உடனே விளையாட்டில் இருக்கும் மற்ற பையன்களிடம் கெஞ்சுவாள். அவர்களை இப்படிச் சாப்பிடச் சொல்லி அழைக்க யாரும் வருவதில்லை. அந்த ஏக்கம் கேலிச் சிரிப்பாய் மாற அவனை அனுப்பிவைப்பார்கள். சாப்பிட்ட உடனே வந்து விடுவேன் என்று அவர்களுக்கு உறுதி கொடுத்துவிட்டு ஓடி வருவான். வீட்டுக்குப் பாட்டி வந்து சேர்வதற்குள் அவன் சாப்பிட்டு முடித்திருப்பான். மீண்டும் விளையாட்டை நோக்கி ஓட்டம்தான். மாலையிலும் விளையாட்டு. பேத்தி கொடுத்துப் போன பொம்மைப் பை பிரிபடாமல் அப்படியே கிடந்தது.

முன்னிரவில் வீட்டு வாசலில் கட்டிலைப் போட்டுப் படுத்துக் கொள்வார்கள். அவன் கதை சொல்லச் சொல்வான். பாட்டிக்குக் கதைகள் எல்லாம் மறந்து போயிருந்தன. சொல்லிப் பல வருசங்கள் ஆனதால் இப்போது நினைவுக்குக் கொண்டுவர முயன்று பார்த்தாள். அப்புறம் தனிக்கதை எதற்கு என்று தன் வாழ்க்கைக் கதையையே சொல்ல ஆரம்பித்தாள். அது குஞ்சுவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனுக்காகப் பல சம்பவங்களை நினைவிலிருந்து மீட்டு அவற்றை உருக்கத்தோடும் ஏக்கத்தோடும் சொல்லிக்கொண்டிருந்தாள். அவளுக்குள் இறுகிக்கிடந்த எல்லாம் இளகிப் பாகுக் குழம்பாய் வெளியேறிக்கொண்டிருந்தன. எந்தச் சந்தேகம் கேட்டாலும் பாட்டி திட்டாமல் அவளுக்குத் தெரிந்த பதிலைச் சொன்னாள். அதனால் குஞ்சு நிறையக் கேள்வி கேட்டான். பாட்டிக்கு இப்போது கூத்துவன் மறந்துபோனான். எதிரில் அவன் வந்தால்கூட அவளுக்கு அடையாளம் தெரியாது. தெரிந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் கழித்து வா என்று விரட்டிவிடுவாள். பாட்டி தன்னுடைய இளவயதில் இருந்த சந்தோசத்தையும் களிப்பையும் இப்போது அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

தினந்தோறும் இரவில் எட்டுமணிக்குத் தவறாமல் பாட்டி வீட்டுக்குக் கொஞ்சம் தள்ளியிருந்த வீடு ஒன்றிற்குத் தொலைபேசி வரும். பாட்டியும் குஞ்சுவும் போய்க் காத்திருந்து பேசுவார்கள். பாட்டி இதுநாள்வரை தொலைபேசியில் பேசியதே இல்லை. குஞ்சுதான் சொல்லிக்கொடுத்தான். குஞ்சுவின் அப்பனும் அம்மாவும் மாறி மாறி அவனுக்குப் புத்தி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பாட்டிக்கும் புத்திதான். அவனை எப்படி எப்படி எல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்கள் பேச்சின் முழுமையாக இருக்கும். அவர்கள் என்ன சொன்னாலும் அவன் ‘ம்’ ‘சரி’ என்றுதான் சொல்லிக்கொண்டேயிருப்பான். அவனைப் பார்த்துப் பாட்டியும் அப்படிச் சொல்லக் கற்றுக்கொண்டாள். பாட்டி பேசி முடிக்கும்வரை வாங்கியைப் பாட்டியின் காதின்மேல் வைத்துப் பிடித்துக்கொண்டேயிருப்பான் குஞ்சு. அப்பனையும் அம்மாவையும் வரச் சொல்லி ஒருமுறைகூடக் குஞ்சு சொல்லவே இல்லை. அதுதான் பாட்டிக்குச் சந்தோசம் தருவதாக இருந்தது. ‘பேரன் வந்தொடனப் பாட்டியக் கைல புடிக்க முடியல’ என்று சொல்லி மற்றவர்கள் சிரித்துக் கேலி செய்வதையும் பாட்டி சந்தோசமாகவே எடுத்துக்கொண்டாள்.

குஞ்சுவின் உலகம் தெருவோடு நின்றுவிடவில்லை. பையன்களோடு சேர்ந்துகொண்டு அவன் காடுகளுக்குள் திரியப் போனான். சில பையன்கள் பனைகளில் ஏறி நுங்கு வெட்டிக்கொடுத்தார்கள். விரல்விட்டு நோண்டி அப்படியே வாயருகில் வைத்து நுங்கை உறிஞ்சத் தெரிந்துகொண்டான். மொட்டை மரங்களில் கிளிக்குஞ்சைத் தேடித் திரிந்தார்கள். கடும் கானல். ஆனால் குஞ்சு மற்ற பையன்களோடு சேர்ந்து திரிவதை நிறுத்தவில்லை. பாட்டிக்குக் காடுகளுக்குள் போய்த் தேடி அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மத்தியானச் சோற்றை ஆக்கி வைத்துவிட்டுத் தெருமுனையையே பார்த்த படி உட்கார்ந்திருந்தாள். சூடு பிடித்து அவன் மல்லவே சிரமப்பட்டுக் கத்தினான். அப்போதிலிருந்து பாட்டிக்குப் பயம் பிடித்துக்கொண்டது. கம்மஞ்சோற்று நீத்தண்ணியை வடித்துக் குண்டா நிறையக் குடிக்கக் கொடுத்தாள். கொஞ்ச நேரத்தில் சரியாகி விட்டதென்றாலும் மறுநாள் அவனை எங்கும் போக விடவில்லை பாட்டி. அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் பேத்திக்கு என்ன பதில் சொல்வது என்று பயந்தாள். சூடு பிடித்த விசயத்தைப் பேத்திக்குத் தொலைபேசியில் சொல்லவில்லை. பயந்து போய்விடக்கூடும் என்று பாட்டியும் குஞ்சுவும் சேர்ந்து மறைத்துவிட்டனர். குஞ்சுவின் துணையோடு பெரிய காரியம் ஒன்றைச் செய்துவிட்டதுபோலப் பாட்டி மகிழ்ந்தாள். மறைப்பில் இருக்கும் இன்பம் அவளுக்கு இந்த வயதிலும் விளங்கியது.

ஒருநாள் முழுக்க வீட்டருகிலேயே விளையாடிக்கொண்டிருந்தான். தன்னந் தனியாக விளையாடுவது அவனுக்குப் பழக்கம் தான் எனினும் பாட்டி வீட்டுக்கு வந்ததிலிருந்து அது விட்டுப்போயிருந்தது. தெருவையே ஏக்கத்தோடு பார்த்தபடி விளையாடினான். வழக்கத்திற்கு மாறாக மத்தியானத்தில் நல்ல தூக்கம் போட்டான். பையன்கள் சிலபேர் வந்து வந்து ‘குஞ்சு வெளையாட வர்லியா’ என்று கேட்டுப் போனார்கள். அடுத்த நாள் அவனால் வீட்டோடு இருக்க முடியவில்லை. ரொம்ப தூரம் போகமாட்டேன் என்று உறுதி கொடுத்துவிட்டுத் தெருவுக்குப் போனான். பாட்டியால் கறாராக மறுத்துச் சொல்ல முடியவில்லை. அவன் கொஞ்ச நேரத்தில் வழக்கம் போல மாறிவிட்டான். ஆனால் காட்டுப் பக்கம் போகவில்லை. அவன் விளையாடும் இடத்திற்குப் போய்ச் சாப்பிடக் கூட்டி வந்தாள். ஓரிரு நாட்கள் இப்படிக் கழிந்தது.

அடுத்தொரு நாள் யாரும் எதிர்பாராத வகையில் அவன் மற்ற பையன்களோடு சேர்ந்து கிணற்றுக்குப் போய்விட்டான். வெயில் காலத்துக் கிணறு வாய் திறந்து எல்லாரையும் வாவாவென்று கூப்பிட்டுக்கொண்டிருக்கும். பையன்கள் கிணற்றின் பல பக்கங்களிலிருந்தும் மாறி மாறிக் குதித்துக்கொண்டிருப்பார்கள். நீச்சல் பழகியவர்களின் ஆரவாரத்துக்கிடையே புதிதாகப் பழகுபவர்களின் அழுகைக் குரல்களும் ஓரளவு பழகியவர்கள் சுரைப் புருடையையோ முருங்கைக் கட்டையையோ முதுகில் கட்டிக்கொண்டு முழுக் கிணற்றையும் வட்டமடிக்கும் சந்தோசக் கூச்சலும் இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கும். குஞ்சு கிணற்று மேட்டின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து உள்ளேயே பார்த்துக் கொண்டிருந்தான். இறங்கி நீந்த வேண்டும் என்னும் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கிருந்த திளைப்பில் அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒரு சுரைப் புருடை இருந்தால் தானும் கிணற்றுக்குள் இறங்கலாம் என்று யோசித்தான்.



வேப்பெண்ணெய்க் கலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 1:29 am

அன்று இரவு பாட்டியிடம் சுரைப் புருடை கேட்டு நச்சரித்தான். அவன் கிணற்றுப் பக்கம் போனான் என்பதையே பாட்டியால் தாங்க முடியவில்லை. வெயில் காலக் கிணறு சந்தோசத்தை வெளிப்படுத்தும். குரூரத்தைத் தனக்குள் மறைத்துவைத்திருக்கும். சந்தர்ப்பம் பார்த்துக் குரூரம் வெளிப்பட அது எக்காளமிடும். இரண்டு மூன்று வருசத்திற்கு ஒருமுறை சின்னப் பையன்கள் யாரையாவது காவு வாங்கிவிடும். எல்லாரும் சந்தோசமாக நீந்திக்கொண்டிருக்கும்போது நீச்சல் தெரியாத யாரையாவது மெல்ல உள்ளிழுத்துக்கொள்ளும். பாட்டியின் ஆயுளில் அவள் எத்தனையோ முறை இத்தகைய சாவுகளைப் பார்த்துவிட்டாள். அப்போதெல்லாம் ‘சேவேறி முத்துன கட்ட கெடக்கறன். என்னய உட்டுட்டுச் சின்னக் கொழுந்தக் கிள்ளிப் போட்டுட்டயே அப்பா’ என்று கூத்துவனைப் பார்த்துப் புலம்புவாள். குஞ்சு அந்தப் பக்கம் போகிறான் என்பதை அவளால் செரித்துக்கொள்ள முடியவில்லை. கிணற்றின் இயல்பு அவளுக்குத் தெரியும். அது ஆசை காட்டிக்கொண்டேயிருக்கும். ஒருமுறை அந்தப் பக்கம் போனவர்களை மீண்டும் மீண்டும் வரச் சொல்லி மாயக்கரம் நீட்டி மயக்கும் குரல் கொண்டு அழைப்பு விடுத்தபடியே இருக்கும். அதை மீறுவது யாருக்கும் கடினம்தான்.

யாராவது பொறுப்பான பெரிய பையனைப் பார்த்துச் சொல்லிக் குஞ்சுவுக்கு நீச்சல் பழக்கிவிடலாம். பாட்டியும் போய்க் கிணற்று மேட்டின்மேல் காவலுக்கு உட்கார்ந்துகொள்ளலாம். கண்களை இடுக்கியபடி அவனையே பார்த்துக்கொண்டிருக்கலாம். அவனுக்கு ஏதாவது என்றால் உள்ளிறங்கிக் காப்பாற்ற முடியவில்லை என்றாலும் கத்திக் கூப்பாடு போட முடியும். கல்யாணம் ஆகிக் குழந்தை எல்லாம் பிறந்த பின்னும் பாட்டி கிணற்றுக்குள் குதித்து நீச்சல் போட்டிருக்கிறாள். ஆனால் இப்போது அந்த வலுவில்லை. உடல் தசைகள் இளகாமல் அங்கங்கே இறுகிப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. கை விரல்கள்கூடச் சிலசமயம் நீட்டினால் மடக்க முடிவதில்லை. மடக்கினால் நீட்ட முடிவதில்லை. நீச்சலுக்கு வலுவில்லை என்றாலும் குரல் இப்போதும் கூர்மையோடும் வலுவோடும் இருக்கிறது. குஞ்சுவுக்கு ஒன்றும் ஆகாமல் இருக்கக் குரல் பாதுகாப்பு போதும். ஆனால் பேத்தியை நினைத்துப் பயந்தாள். அம்மாயி என்று வாய் நிறைய அழைப்பவள் பையன் கிணற்றுக்குப் போனான் என்று தெரிந்தால் எப்படி ஆவாளோ? அதுவும் புரடை கட்டி நீச்சல் அடித்தான் என்றால் சந்தோசப்படுவாளா?

கிணற்றுப் பக்கம் போகக் கூடாது என்று குஞ்சுவுக்கு எவ்வளவோ சொன்னாள். கிணற்றுப் பக்கம் போகாத பையன்களோடு விளையாட வேண்டும் என்று கெஞ்சினாள். ஆனால் பொழுது நெற்றிக்கட்டுக்கு நேராக வந்துவிட்டால் போதும் எல்லாப் பையன்களும் கிணற்றில்தான் இருந்தார்கள். கிணறும் நிறைந்திருந்தது. கிணற்று மேடும் நிறைந்திருந்தது. குஞ்சு என்ன செய்வான்? அவனை இனிக் கட்டுப்படுத்த முடியாது என்பது தெரிந்ததும்தான் பாட்டி இந்த முடிவுக்கு வந்தாள். பாட்டியின் தேவை முடிந்துவிட்டது எனத் தோன்றியது. குஞ்சை உரிய இடத்தில் சேர்க்கும் நேரம் வந்துவிட்டது. ஏதோ இந்த வயதில் இப்படிக் கொஞ்ச நாள் பயன்படும்படி விதித்த சாமிக்குக் கைமாறாக என்ன செய்வது என்று தெரியவில்லை. வேப்பெண்ணெய்க் கலயமும் ஒரு வேலைக்கு ஆகும் என்று செலவாந்தரம் சொன்னது பொய்யாகுமா?

பேத்தி சொல்லியிருந்தது போலக் குஞ்சுவை மெல்ல அழைத்துக் கொண்டு போய் நகரத்துக்கு முன்னாலேயே இருக்கும் இன்னொரு பேத்தி வீட்டில் விட்டுவிட்டால் போதும். அவர்கள் குஞ்சுவை அவன் அப்பா அம்மாவிடம் பொறுப்பாகச் சேர்த்துவிடுவார்கள். கிழக்கே மலையின் பக்கவாட்டில் இருந்து பொழுது சிவப்புப் பந்தாய் எழும்புவதைக் குஞ்சு ஆர்வமாகப் பார்த்தான். உடலை லேசாகக் கூனியபடி பாட்டி மெல்ல நடந்தாள். அவள் வெகுதூரம் நடந்து பல நாட்களாகிவிட்டன. வீட்டைவிட்டு வெளியே போவது இரண்டு குடம் தண்ணீருக்காகவும் வாசல் தெளிக்கச் சாணம் எடுத்துவரவும்தான். உள்ளூரிலேயே நடக்கும் விசேசங்களுக்குக் கூடப் போவதில்லை. வீட்டில் என்றால் கால் நீட்டி உட்காரலாம். கொஞ்ச நேரம் படுக்கலாம். போகிற இடத்தில் எப்படி இருக்குமோ? விசேசப் பலகாரங்களை யாராவது வீடு தேடிக் கொண்டுவந்து கொடுத்தால் பாட்டி மறுப்பதில்லை.

சிவப்புப் பந்து மெல்ல நிறம் மாற மாறக் குஞ்சுவுக்குக் குதூகலம் பீறிட்டது. அறுவடை முடிந்த மேட்டாங்காடுகள் பரந்து கிடந்தன. யாரோ கழற்றி வீசி எறிந்திருந்த கிழிந்த நீளக் கோவணத்துணியெனக் கிடந்த ஒற்றையடித் தடத்தைவிட்டு விலகி அவன் குதித்துக் கொண்டோடினான். விடிகாலைப் பனி எங்கும் லேசான ஈரத்தைப் பரப்பியிருந்தது. ‘குஞ்சு குஞ்சு’ என்று பாட்டி கத்தக் கத்த அவன் காட்டுக்குள் சுழன்றோடினான். துவரங்கட்டைகளோ கொட்டக் கட்டைகளோ காலில் ஏறிவிடும் என்று பாட்டி பயந்தாள். ஆனால் குஞ்சுவின் உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காட்டுக்குள் இறங்கியிருந்த மைனாக் கூட்டம் ஒன்று கத்தியபடி மேலெழும்பிப் பறந்தது. அற்புதமான கோலம் ஒன்று வானில் விரிவதை அவன் கண்டான். அந்தக் கோலம் கணந்தோறும் மாறிக் கொண்டேயிருக்கும் விந்தையை அண்ணாந்து பார்த்தபடி நின்றான். பாட்டியும் அண்ணாந்து பார்த்தாள். கரும்புள்ளிகள் இணைந்து நகர்வதாய்த் தெரிந்தது. ‘எதப் பாத்தாலும் குஞ்சுக்கு அரிசயம்தான்’ என்று வாய்விட்டுச் சொல்லிக்கொண்டாள்.



வேப்பெண்ணெய்க் கலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 1:29 am

அவளுக்குச் சின்னஞ்சிறு பிள்ளையாய் அந்தக் காடுமேடுகளில் தான் திரிந்த காலங்கள் நினைவில் வந்தன. முகம் காலை மலராய்ப் பொலிந்தது. குஞ்சுவின் இருப்பு பாட்டியின் இத்தனை கால ஆயுளுக்கு மாபெரும் அர்த்தத்தைக் கொடுப்பது போலிருந்தது. இன்னும் சிலநாள் குஞ்சு இங்கேயே இருக்கலாம். அடுத்தடுத்த விடுமுறைகளுக்கு அவன் இங்கே வந்து தங்கிப் போகலாம். அவனை விடுவார்களா? ஒவ்வொரு விடுமுறையின் போதும் அவர்களுக்கு ஏதாவது வேலை வர வேண்டுமே. குஞ்சு இங்கிருந்தே பள்ளிக்குப் போனால் என்ன? அவனைக் கூடஇருந்து கவனித்துக்கொள்ளும் வலு பாட்டிக்கு இருக்கத்தான் செய்கிறது. அந்தப் புலர்பொழுது அவளுக்குள் ஏராளமான எண்ணங்களைக் கிளறிவிட்டன. சமீப காலத்தில் பாட்டி இத்தனை யோசித்திருக்கவில்லை.

ஏன் இவன் வந்திருக்க வேண்டும். இப்படிச் சீக்கிரத்தில் போக வேண்டும். அவன் போகக் கேட்கவில்லை. அவர்களும் வந்து அழைக்கவில்லை. ஆனாலும் அவனை வைத்திருக்கப் பயமாக இருக்கிறது. இன்னொரு பேத்தி வீட்டில் அவனை ஒப்படைத்துத் திரும்பிவிட்டால் பொறுப்பு முடிந்தது. ஒற்றையடிப் பாதை வேலியடிக்குப் போய் அதை ஒட்டி நீளப் போகும் மற்றொரு ஒற்றையடிப் பாதையில் முடிந்தது. பாட்டிக்கு மூச்சிரைத்தது. வெயிலேறிவிட்டால் நடப்பது இன்னும் சிரமமாகிவிடும். கல்லொன்றில் உட்கார்ந்தாள். குஞ்சு காட்டுக்குள் இருந்து ஓடி வந்தான். ‘இது என்ன ஆயா’ என்று கண்களை விரித்துக் கேட்டான். அவனுடைய இத்தனை நாள் இருப்பில் காட்டு வேலியை அவனுக்குக் காட்டியிருக்கவில்லை. ‘வேலி குஞ்சு’ என்றாள். ‘இது எங்கிருந்து வருது?’ என்றான் குஞ்சு. அதுதானே இது எங்கிருந்து வருகிறது? பாட்டி இத்தனை காலத்தில் யோசித்ததில்லை. கிளுவை, நொச்சி, வேம்பு, மின்ன மரங்கள் என்று எத்தனையோ மரங்களும் கொடிகள் ஏறிய அடம்பும் கொண்ட இந்த வேலி எங்கே தொடங்குகிறது? பாட்டி யோசித்தாள்.

அவளுக்கு வேலி போகும் பல காடுகள் நினைவுக்கு வந்தன. அவற்றைத் தாண்டியும் வேலி போய்க்கொண்டிருந்தது. அடுத்த ஊர், அதற்கடுத்த ஊர், அதற்கும் அடுத்தது என்று அவளுக்குத் தெரிந்த தூரம்வரைக்கும் வேலி போனபடியே இருந்தது. எங்கே தொடங்குகிறது என்று சொல்ல முடியவில்லை. ‘அங்கருந்து வருது’ என்று குருட்டாம் போக்கில் கை காட்டினாள். ‘எங்கருந்து?’ ‘ஊரத் தாண்டி’ ‘அதுக்கப்பறம் எங்கருந்து?’ ‘அடுத்த ஊரு’ ‘அப்பறம்’ பாட்டி பதில் சொல்லி ஓய்ந்துபோனாள். ‘ஒருநாளைக்கு நாம ரண்டு பேரும் நடந்து போயிக் கண்டுபுடிக்கலாம்’ ‘வானத்தத் தாண்டிப் போவுமா?’ என்றதும் ‘வாடா என் ராசு’ என்று அவனை அருகிழுத்து மடியமர்த்தி முத்தமிட்டாள். பற்களற்ற வாய்க்குள்ளிருந்து பிதுங்கிவந்த உதடுகள் மெத்தெனக் கன்னத்தில் பதிந்தன.

அவளிடமிருந்து விடுவித்துக்கொண்டு ‘இப்ப எங்க போறம். சொல்லு’ என்றான். ‘உங்க பெரியம்மா ஊட்டுக்குப் போறம்’ என்று ஆனந்தமான முக பாவனையோடு சொன்னாள் பாட்டி. பாட்டிக்கு முதுகைக் காட்டிக்கொண்டு திரும்பி நின்றான் குஞ்சு. அனேகமாகப் பாட்டியின் தந்திரம் அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும். ‘எந்தப் பெரியம்மா வீட்டுக்கு?’ என்றான். அந்தப் பேத்தியின் பெயர் பாட்டிக்கு மறந்துவிட்டது. அந்த ஊர்ப் பெயரைச் சொன்னாள். குஞ்சுவைப் பாட்டியிடம் ஒப்படைக்கும் போது அவன் அம்மா சொன்னது அவனுக்குள் பதிந்திருந்தது. ‘உன்னால முடியலீன்னா பக்கத்தூர்ல இருக்கறாளே எங்க பெரியம்மா பொண்ணு. அதான் உம்மவ ஆராயியோட பேத்தி . . . நெனப்பிருக்குதா அம்மாயி? அவுங்க ஊட்டுல கொண்டாந்து உட்ரு. அங்க டிவி இருக்குது. பாத்துக்கிட்டுக் கெடப்பான். ஒன்னு ரண்டு நாள்ல நான் எதாச்சும் ஏற்பாடு பண்ணிக்கறன்.’ அம்மா சொன்ன அந்த வீட்டுக்குத்தான் பாட்டி கூட்டிப் போகிறாள் என்பது முடிவாகிவிட்டது. குஞ்சுவை அங்கே விட்டுவிட்டுப் பாட்டி திரும்பிவிடுவாள். இனி இந்த ஊர் அவ்வளவுதான்.

திடுமென ‘நான் வர்ல’ என்று கத்திக்கொண்டே வேலிக்குள் ஓடினான் குஞ்சு. தடுமாறிப் பாட்டி எழுவதற்குள் வேலியின் தொக்கடவுக்குள் புகுந்துவிட்டான் குஞ்சு. ‘குஞ்சு குஞ்சூ’ என்று பதறி விளித்தாள் பாட்டி. வேலியில் பாம்புகள் நடமாடும். ஒடக்கான்களும் பல்லி, அரணைகளும் சாதாரணமாக உலவும். பெருக்கானுக்கும் எலிக்கும் வேலியைப் போல வசிப்பிடம் வாய்ப்பதில்லை. அடர்புதர் கொண்ட வேலிப் பகுதியில் முயல்கள் காது விறைத்து நிற்கும். கொஞ்சம் ஏமாந்தால் வேலிமுட்கள் துணிகளை மட்டுமல்ல உடம்புச் சதையையும் பதம் பார்க்கும். வேலிகளில் சில கொடிகள் உண்டு. அவை உடம்பைச் சுற்றி முறுக்கிக்கொண்டால் விடுபடுவது கடினம். பாட்டிக்கு அந்த வேலி சின்னஞ்சிறு வயது முதலே பழக்கமானதுதான். வீட்டிலிருந்து வெகுதூரம் நடந்த களைப்பால் பாட்டி சோர்ந்து போயிருந்தாள். கண் மசமசத்தது. குஞ்சு வேலிக்குள் மறைந்துவிட்டான்.

‘கண்ணூ குஞ்சூ ராசூ’ என்று பலவிதமாக அழைத்துப் பார்த்தாள். ‘பாட்டீ’ என்று அவன் குரல் வேலித் தொக்கடவு ஒன்றின் பக்கமிருந்து சிரிப்போடு வந்தது. மங்கலாக அவன் முகம் தெரிந்தது. ‘வா குஞ்சு’ என்று அவள் அழைக்க அழைக்க அவன் சிரித்தபடியே தொக்கடவுகளுக்குள் புகுந்து புகுந்து ஓடிக்கொண்டேயிருந்தான். அவன் முகம் எல்லாத் தொக்கடவுகளிலும் தெரிந்தது. இனி அவனை ஒன்றும் செய்ய முடியாது. ‘என்னயும் கூட்டிக்கிட்டுப் போ குஞ்சு. இந்த வேலி எங்க தொடங்குதுன்னு நானும் பாக்கறன்’ என்று கூவிக்கொண்டே உடலை நகர்த்தியபடி வேலியை ஒட்டிச் செல்லும் கொடித்தடத்தில் ஓடுவதுபோல நடந்தாள் பாட்டி. குஞ்சுவின் சிரிப்பொலி வழிநடத்தியது.



வேப்பெண்ணெய்க் கலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக