ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறப்பில் உயிர்க்கும் பண்பாடு

Go down

இறப்பில் உயிர்க்கும் பண்பாடு Empty இறப்பில் உயிர்க்கும் பண்பாடு

Post by சிவா Tue Mar 29, 2011 11:01 pm

நேற்றைய வெயிலுக்கு / ஆலமர நிழலில் / கதை பேசிக் கிடந்த செங்கோடம் பாளையத்து கவுண்டர் விழும் குடித்து செத்தார்.

என்று கடைசி இரண்டு வரிகளையும் இன்னும் பல வரிகளையும் கொண்ட ஒரு கவிதை நிகழில் 1994இல் வெளிவந்தது. அதை யதேச்சையாய்ப் படிக்க நேர்ந்த மேற்படி கவுண்டரின் மகன், கவிதையின் மற்ற வரிகளையோ பொருளையோ பற்றி எதுவும் சொல்லாமல்... "செத்தார்' என்பதை இறைவனடி சேர்ந்தார் என்று எழுதியிருக்கலாமே என்று கவிஞரிடம் வருத்தப்பட்டாராம். தந்தை செத்துப்போனதைவிட அவர் இறைவனடியில் சேராமல் போனதுதான் மகனுக்கு கவலை அளித்திருக்கிறது என்கிறார் கவிஞர் தேவிபாரதி.

டால்ஸ்டாய் மாஸ்கோவில் மரணம் அடைந்தார் என்ற வரியில் மரணத்தை அடித்துவிட்டு காலமானார் என்று செம்மையாக்கம் செய்தவரின் பேனா அவரை அறியாமல் திருத்தி மேல் செல்கிறது. மரணம் கொடூரமான த்வனியைத் தருவதாகப் பிழை திருத்துநருக்குத் தோன்றிவிட்டது. அதேபோல்தான், செத்தார் என்பதும் மரியாதைக்குறைவான பதிவாக அந்த மகனுக்குத் தோன்றியிருக்கிறது. "திரிமலம் செற்றார்' (திருமந்திரம், 1907) என்ற தொடரை ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அழித்தார் என்று விளக்குகிறார் உரையாசிரியர் வரதராஜன். செற்றார் என்பதன் பிந்தைய வடிவமே செத்தார் என்பதாக இருக்கலாம்.

இறைவனடி சேர்வதிலும் வேறுபாடுகள் இருக்கின்றன. சிவலோக பதவியைச் சைவர்களும் வைகுண்ட பதவியை வைணவர்களும் அடைகிறார்கள். இறந்தார், மறைந்தார் எனக் குறிப்போர் மத அடையாளங்களைத் தவிர்க்க நினைப்போர். பிறப்பின் முடிவு நிலை இறப்பு என்பது இறந்தார் என்போரின் கருத்து. பூவுலகில் தோற்றம் காட்டியவர் இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை என்பது மறைந்தார் என்று சொல்பவர்களின் எண்ணம்.

1925 ஜுன் 3ஆம் தேதி பாபநாசம் அருவியில் தவறி வீழ்ந்து இறந்துபோன வ.வே.சு.ஐயரின் மரணச் செய்தி "வ.வே.சு.ஐயர் தேக வியோகமானார்' என்று சுதேசமித்திரனில் (6 ஜுன் 1925) வெளியாகியிருந்தது. தேகத்தைத் துறந்தார் வ.வே.சு.ஐயர் என்பது அவ்வரி வெளிப்படுத்தும் கருத்து. வியோகம் என்னும் சம்ஸ்கிருதச் சொல்லுக்குப் பிரிதல், விடுதல் என்று பொருள்.

முக்தி அடைந்தார், சமாதி ஆனார் (ஐல சமாதி, ஜீவ சமாதி என இதிலும் பல வகை), சித்தி அடைந்தார் எனச் சமயப் பெரியவர்களின் இறப்பைக் குறிக்கிறார்கள். வள்ளலார் மறைவைச் "சித்தி' எனச் சிலர் குறிப்பிட, அவர் மறைவு சித்தியா மரணமா என்று ஒரு நூல் எழுதி அதை விவாதத்துக்குள்ளாக்கினார். நீதிபதி பலராமையா.

"சிவஞான முனிவர் சாலிவாகன சகாப்தம் 1708இல் (கி.பி.1985) இறைவன் மலரடி சேர்ந்தார் என்று நம்பப்படுகிறது' என்று சைவப் பெரும் புலவரின் மறைவைக் குறிக்கும் அ. தாமோதரன் (ப.39, அதே நூல்) இன்னொரு புலவரின் இறப்பைப் பதிவு செய்கிறார். இறக்கும்போது கூழங்கைத் தம்பிரான் சைவராக இல்லை என்பதால் மலரடி அவருக்குக் கிடைக்கவில்லை போலும். உயிர் நீத்தார், உயிர் துறந்தார் போலவே உயிர் பிரிந்தது, ஆவி பிரிந்தது என்பனவும் பயன்பாட்டில் உண்டு.

"கற்பனைக்கு அடங்காத அநியாயம்' என்று வ.ரா.வால் விவரி“க்கப்பட்ட புதுமைப்பித்தனின் இறப்பை, மஞ்சேரி எஸ். ஈஸ்வரன் புதுமைப்பித்தன் சிவ சாயு ஜ்யம் அடைந்தார் என்று (மென்மையும் மேன்மையும் ஏற்றி) சக்தி இதழில் எழுதிய இரங்கலுரையில் குறிப்பிட்டார். இறைவனது உலகத்தில் இருத்தல் "சாலோகம்', அவனது அருகில் உறைதல் "சாமீபம்' (அண்மையில் என்ற பொருளில் சமீபம் என்று இப்போது வழக்கில் வந்துவிட்டது), அவனது உருவத்தைப் பெறுதல் "சாரூபம்', அவனோடு இரண்டறக் கலந்து விடுதல் "சாயுஜ்யம்'. சைவப் பிள்ளைமாரான புதுமைப்பித்தனைச் சிவனோடு கலக்கச் செய்து மகிழ்ந்தார் மஞ்சேரியிலிருந்து வந்து ஈஸ்வரன். இறைவனை அடையும் மனித முயற்சியின் வெற்றி நிலைகளை இவ்விதம் விளக்கும் பாடலைத் திருமந்திரத்தில் (1509) நீங்கள் படித்துக்கொள்ள முடியும். (முதல் மூன்றும் பதமுக்தி, சாயுஜ்யம் பரமுக்தி). தெலுங்கில் பெரு வழக்காய் இருக்கும் சிவசாயுஜ்யம் தமிழில் பரவலாக இல்லை. லிங்க ஐக்கியமாயினாரு, பரம (பதம் போந்தாரு) பதிஞ்சாரு போன்ற பிரயோகங்களும் தெலுங்கில் மிகுதி.

"சபரிமலை விபத்தில் 64 பேர் பலி' என்பது அண்மைப் பத்திரிகைச் செய்தி. விபத்துகளில் இறப்போரைக் குறிப்பிடவும் நிவேதனமாகவோ வேறு காரணங்களுக்காகவோ திட்டமிட்டுச் செய்யப்படும் கொலைகளை குறிப்பிடவும் "பலி' பயன்படுத்தப்படுகிறது. மாண்டார் என்ற சொல்லாட்சியும் ஏறக்குறைய இதே சூழலில் பயன்பாட்டில் இருக்கிறது. தமிழ்ப் புலவன் ஒருவன் தன் நரையின்மைக்குச் சொன்ன காரணங்களுள் ஒன்று "மாண்ட மனைவி'. இத்தொடரில் வரும் மாட்சிமை கொண்ட எனப் பொருள்படும் மாண்ட என்னும் சொல்லை இறந்த என்று தவறாகவே புரிந்துகொள்ளுமளவு அச்சொல் புழக்கத்தில் பெருத்துவிட்டது.

"100 வீரர்கள் போரில் மடிந்த பிறகும் தலைமைக்குப் புத்திவரவில்லை' என்ற தொடரில் இடம்பெறும் மடிதலும் மரணத்தையே குறிக்கிறது. துணியை மடித்துவை, தாளை இரண்டாக மடி என்று நாம் சொல்கிறோம். நிலை மாறுதல் என்ற பொருளில் மடி, மடிதல் என்ற சொற்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. புதுச்சேரியில் நடந்த ஒரு சம்பவம். மேடும் பள்ளமுமான ஒரு சிறு வழியை இரண்டு பேருந்துகள் கடக்க நேர்ந்த வேளையில், மேடு பள்ளம் மிகுதியான பகுதியில் சென்ற பேருந்தின் ஓட்டுநர், "நான் இனியும் போக முடியாது போனால் பேருந்து மடியும், நீ கொஞ்சம் ஓரமாகப்போ' என்று இன்னொரு ஓட்டுநரைப் பார்த்துச் சொன்னார். இங்கே மடியும் என்ற சொல் பக்கவாட்டில் சாயும் அதாவது நிலை மாறும் என்ற பொருளில் கையாளப்பட்டதை அன்று (8 பிப்ரவரி 2009) நான் உணர்ந்தேன். நின்ற உடலின் நிலை மாற்றமான மரணத்தை மடிந்தார் என்ற சொல் குறிக்கிறது எனக் கருதலாமா? நின்றவர் கிடந்சொழிந்தாரோ!

வயதான மனித ஜீவனின் இயற்கையான இறப்பைக் குறிக்கப் பத்திரிகைகள் முன்பு பயன்படுத்தி வந்த சொல் காலகதி. "மாஜி ஜில்லா ஜட்ஜ் தினான் பகதூர் டி. வரதராஜிலு நாயுடு சென்னையில் அவரது பங்களாவில் 5ஆம் தேதி இரவு காலகதி அடைந்ததைப் பற்றி நாம் மிகவும் வருந்துகிறோம்'. (தேசபக்தன், 9 மே 1932). டாக்டர் நாயரின் இறப்பைப் பதிவு செய்த சுதேசமித்திரனின் விசன (?) வாசகம் பின்வருவது: "இங்கிலாந்தில் சென்ற வியாழக்கிழமையன்று டாக்டர் மாதவன் நாயர் காலகதி அடைந்துவிட்டதாகக் கேட்டு மிகவும் விசனப்படுகிறோம்' (சுதேசமித்திரன், 22 ஜூலை 1919). ஏறக்குறைய காலமானார் என்ற சொல்லின் முந்தைய வடிவமாகக்கூடக் "காலத்தினடை' என்ற பொருள் தரும் காலகதி என்ற சொல்லைக் கருதலாம். காலத்துக்கு முந்தைய இறப்பு அகால மரணம் எனப்பட்டது. புதுமைப்பித்தனும் பாரதியும் அகால மரணமடைந்த அமர இலக்கியவாதிகள்.


இறப்பில் உயிர்க்கும் பண்பாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இறப்பில் உயிர்க்கும் பண்பாடு Empty Re: இறப்பில் உயிர்க்கும் பண்பாடு

Post by சிவா Tue Mar 29, 2011 11:01 pm

அண்ணா காலமான காலத்தில் அமரரானார் என்ற சொல் பத்திரிகைகளுக்கு வந்துவிட்டது. அமரரானார் என்பதன் நேர்ப் பொருள் மேல்உலகவாசி ஆனார் என்பதே. (சாகாதவர் என்னும் பொருள் உடைய) "அமரர்' என்ற சொல்லுக்கு இறந்தவர் என்ற பொருள் வந்து (அமரர்) ஊர்தியிலும் ஏறி உட்கார்ந்துவிட்டது.

"துஞ்சல் பிறப்புஅறுப்பான் தூயபுகழ் பாடிப்
புஞ்சம்ஆர் வெள்வளையீர் பொன்ஊசல்
ஆடாமோ'
(திருப்பொன்னூசல் - திருவாசகம்)

என்ற வரியில் வரும் துஞ்சலைக் காண்க. இலக்கியத்தில் இறப்பு துஞ்சல் என்று வழங்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட கிள்ளிவளவனை அடையாளம் கண்டு கொள்ளக் குளமுற்றம் என்னும் ஊரில் இறந்துபட்டவன் என்ற பொருள்படும் குளமுற்றத் துஞ்சிய கிள்ளிவளவன் என்னும் அடைமொழியோடு வரலாறு அவனைப் பதிந்துகொண்டது. இளம் வழுதி ஒருவன் இனம்காணக் கடலுள் மாய்ந்த இளம் பெரும்வழுதியானான். மறைதல் என்னும் பொருள் கொண்ட மாய்தல் இறப்பைக் குறித்தது. இறந்து பட்ட இடங்களைக் கொண்டு வீர அரசர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இன்றைய நடைபிணங்களுக்கு வீரத்தலைமை வாய்க்காதுதானே?

"கண்மீடினார்' என்ற இலக்கிய வழக்கும் இப்போது அருகிவிட்டது. இதே பொருள்தரும் "கண் மூசினாரு' என்ற தொடர் தெலுங்கில் பெருவழக்காக உள்ளது. "புலிகண்டி கிருஷ்ணா ரெட்டிகாரு இரோஜ் உதயம் கண் மூசினாரு' என்றுதான் ராயலசீமா பகுதியில் பிரபலமான அந்தத் தெலுங்கு எழுத்தாளர் மறைந்தபோது (18 நவம்பர் 2007) பொதுமக்கள் ஊடகமான திருப்பதி வானொலி அறிவித்தது.

போய்ச் சேர்ந்தாரு, போய்ட்டாரு, நட்டுகிட்டார், நாண்டுகிட்டார், புட்டுகிட்டரு, மண்டயப் போட்டாரு, தவறிட்டாரு, பிக்கெட் வாங்கிட்டாரு ஆகியவையும் பெரிய காரியம் என்ற மங்கல வழக்குச் சொற்களும் இவை போன்ற இன்னும் பலவும் இறப்பைக் குறிக்க மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. பயன்படுத்தும் மக்களின் பண்பாட்டுத் தரத்தையும் ஒருவாறு உணர்த்திவிடுவன இவை. புட்டாரு என்பது பிறப்பையும் கிட்டாரு என்பது இறப்பையும் குறிக்கும் சொற்களாகத் தெலுங்கில் வழங்குகின்றன. தமிழில் இரண்டு சொற்களும் இணைந்து புட்டுகிட்டாரு என்று ஒலிக்கும்போது அது இறப்பையே குறிக்கிறது. ஆனால் அது கேவல வழக்காகக் கருதப்படுகிறது. சச்சி போயினாரு. சனி போயினாரு, மரணிச்சினாரு, முக்கி செஞ்சாரு, காலதர்மம் செஞ்சாரு போன்ற தெலுங்கு வழக்குகளைத் தமிழரும் ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் வருபவர்க்கு மண்ணில் இடமேது என்று மரணத்தை நியாயப்படுத்தினான் போகப் போகிற வந்தவன் ஒருவன். "நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை' என்னும் பெருமை கொண்ட உலகை ஆண்டாண்டு காலம் அழுது புரண்டு சாவித்திரிபோல மாண்டாரை மீட்க ஏன் போராட வேண்டும்? பெருமையோடு வாழட்டுமே உலகு. நிலச்சுமை என வாழ்தலும் புரிகுவையோ என்று கேட்டான் பாரதியும். மனித இறப்பால் பூமிக்குப் பயன்தானே! பாரம் குறைகிறது மற்றும் நிலம் வாழ் நுண் உயிர்க்கு இறந்த உடல் உணவாகப் பயன்படுகிறது. அதனால்தானோ என்னவோ "பூமி லாபம்' என்ற சொல்கூடப் பழந்தமிழில் மரணத்தையே குறித்தது.

நீண்ட தூக்கமாகவே மரணத்தைக் கலைஞர்கள் பார்த்திருக்கிறார்கள். "உறக்கமும் மறதியும் இன்றி இறப்பு என்பது வேறொன்றும் இல்லை' என்றார் கவிஞர். "உறங்குவது போலும் சாக்காடு...' (339) என்றார் வள்ளுவர். இரண்டிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. வெளிநாட்டு wordsworth மறதியைக் கூடச் சேர்த்திருக்கிறசர். அவ்வளவுதான்.

அகஸ்மாத் மரணம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தன் ஜாதகப் பலன்படி ஒருவருக்கு நேர்வது. சாதாரண மரணம். ஒருவரது ஜாதகத்தை மீறிக் கூடியிருப்பவர்களின் ஜாதகப் பலனின் மீசுர பலத்தால் ஏற்படும் இறப்பு அகஸ்மாத் மரணம். ரயில் பயணம், தீ விபத்து முதலியவற்றால் ஏற்படும் மொத்த மரணங்களை இவ்வகையில் சோதிடர்கள் குறிக்கின்றனர்.

மதப் பண்பாட்டில் பிறந்த மரணம் குறித்த இச்சொற்களையெல்லாம் தவிர்த்தார் பெரியார். உயிர் நீத்தார் (தங்கப் பெருமாள் பிள்ளை), பிரிந்து விட்டார் (பனகல் அரசர்), மறைந்துவிட்டார் (எஸ். ராமச்சந்திரன்), ஆவி நீத்தார் (நாகம்மாள்), முடிவெய்தினார் (சின்னத் தாயம்மாள், சி.டி. நாயகம், காந்தி பட்டுக்கோட்டை அழகிரிசாமி, ஸ்டாலின், திரு.வி.க., அம்பேத்கார், நேரு, அண்ணா, இராஜாஜி) இயற்கை எய்தினார் (ஜின்னா) என்னும் மதச் சார்பற்ற சொற்கள் மூலமாகவே இரங்கல் குறிப்புகளை எழுதினார் பெரியார். முடிவெய்தினார் என்ற தொடரையே மிகுதியும் பயன்படுத்தினார் என்ற சொல்லலாம். ஓர்மையோடுதான் பெரியார் இதைச் செய்தார் என்பது சொல்லித் தெரிய வேண்டிய தகவல் அல்ல.

இப்படியாக மரணத்தோடு வாழ்ந்து, அதன் உடனான அனுபவங்களை உட்செரித்தான் மனிதன். மரணத்தைப் பற்றிய அபிப்பிராயத்தை உட்கிடையாகக் கொண்ட, பண்பாடு தொனிக்கும் சொற்களால் மரணத்தை எதிர்கொண்டான். அவைதாம் இக்கட்டுரையின் இதுவரையிலான பாகத்தில் காணப்பட்ட சடல சல்லாபங்கள்.


இறப்பில் உயிர்க்கும் பண்பாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இறப்பில் உயிர்க்கும் பண்பாடு Empty Re: இறப்பில் உயிர்க்கும் பண்பாடு

Post by சிவா Tue Mar 29, 2011 11:02 pm

II

கண்ணுக்குப் புலப்படுகிற பரு உடலிலிருந்து நுட்பமான உடல் (அதை உயிர் என்றும் சொல்லலாம்) பிரிவதுதான் இறப்பு. மரணத்தை மனித வர்க்கம் எதிர்கொண்ட விதங்களே சமயமாயிருக்க வேண்டும் என்கிறார்கள் மரணத்தை ஆராய்ந்தவர்கள்.

"தனது தேகத்தைப் பிரேதமாக ஞானி கருதுகிறான்' என்று சொல்வது, அப்படிக் கருத வேண்டும் என்று அறிவுறுத்துவதற்காகவே. மரண பயத்திலிருந்து மீள விரும்பிய சிந்தனையாளர்கள் இப்படியெல்லாம் சொல்லி மரணத்தை வெல்ல முயன்றிருக்கிறார்கள். ஏசு கிறிஸ்து மரணத்தை வெல்ல முடியும் என்றார். "மரணமடைந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தசர். இறந்த லாசரஸை உயிர்ப்பித்தார்' என்கிறார்கள். இங்கேயும் மயிலாப்பூரில் பூம்பாவை எலும்புக் குவியலிலிருந்து எழுந்து நின்றாளாம். ஆனாலும் எல்லோரும் மரணத்தைக் கண்டு அஞ்சியிருக்கிறார்கள்.

"ஏந்தும் இவ்வுலகில் இறப்பெனில் எந்தாய் என்னுளம் நடுங்குவது இயல்பே' என்று வள்ளலார் பிள்ளைப் பெருவிண்ணப்பத்தில் (3428) புலம்புகிறார். மாந்தர்களின் இறப்பை நினைவுறுத்தும் பறையின் வல்லொலி கேட்டபோதெல்லாம் வருந்தி அவர் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள் அறிந்தது என்றும் சொல்கிறார் அவர். மரணமிலாப் பெருவாழ்வு அடைய ஒளி உடலானார் வள்ளலார். நுற்றாண்டு வாழ்வது எப்படி? நூல் எழுதிய சைவப் புலவர் மறைமலையடிகள் 74 வயதில் (மாரடைப்பால்) காலமானார். மரண பயம்தான் இவர்களை இவ்வாறு சிந்திக்கவும் செயல்படவும் பேசவும் எழுதவும் தூண்டியிருக்க வேண்டும். "காலா என்னருகே வாடா?' என்பதெல்லாம் பயந்தவன் பேசிய பேச்சுதான். தன் 76ஆம் வயது போலவே பெரியார் அடுத்த ஆண்டு மலரில் எழுத நான் இருப்பேனோ என்னவோ என்றே 93 வயது வரை சந்தேகப்பட்டுக்கொண்டே எழுதிவந்தார்.

மரண பயமும் மரணத்திற்குப் பின் என்ன? என்பது பற்றிய அச்சமும் மனிதனை ஆட்டிப்படைத்தன. சமயங்கள் அதற்குப் பதில் சொல்ல முயன்றன. சமயம் அளித்த விளக்கங்களைத்தான் புரிந்து கொண்ட அளவிலும் ஏற்றுக்கொண்ட அளவிலும் மரணத்தை ஒருவாறு எதிர்கொண்டான் மனிதன். அவன் பயன்படுத்திய மேற்கண்ட வார்த்தைகள் அதை நமக்குச் சொல்கின்றன.

"அஹோராத்ரான் ஸந்த தாமி' என்ற ரிக்வேத சுலோகத்துக்குப் பொருள் பகலையும் இரவையும் இணைப்பேன் என்பது. இதை விளக்கும் சித்பவானந்தர் இப்படிச் சொல்கிறார்: "பகலையும் இரவையும் இணைப்பது என்பது வீண் காலம் போக்காதிருப்பதாகும். காலத்தை நன்கு பயன்படுத்துவதும் கடவுள் வழிபாடாகிறது. ஏனென்றால் கடவுளே கால சொரூபமாயிருக்கிறான்' (ப. 793, திருவாசகம், சித்பவானந்தர் உரை). கால சொரூபியாக இருக்கும் கடவுளை அடைந்தார் என்பதைக் காலமாக ஆனார், காலமானார் என்ற சொற்களால் கடவுள் நம்பிக்கை கொண்ட மனிதன் சொல்லியிருக்கக்கூடும்.

காலத்திடம் ஒப்படைக்காமல் நேராகக் கடவுளிடமே ஒப்புக்கொடுத்துவிடுவதும் நல்லதுதானே. செங்கோடம் பாளையத்துக் கவுண்டரை அவர் மகன், இறைவன் அடியில் சேர்க்க விரும்பினார். மஞ்சேரி ஈச்வரனோ புதுமைப்பித்தனை இறைவனோடு இரண்டறக் கலக்கச்செய்தார். சைவர்கள் சிவலோகத்திற்கும் வைணவர்கள் வைகுண்ட லோகத்திற்கும் முறையே இறந்தவர்களை அனுப்பிவைத்தார்கள். உலகம் மாயை என்று கருதியோர், பிறப்பை தோற்றமாகக் கண்டதால் இறப்பை மறைவாகக் கருதி நினைப்பெழித்தார்கள். மலர்வதாகவும் உதிர்வதாகவும் பிறப்பு - இறப்பைக் குறித்தோர் இயற்கை நிகழ்வுகளில் ஒன்றாக மரணத்தைக் கலாபூர்வமாகக் காண்பவர்கள் போலும்.

உடல் வியோகமாகிறது. பாம்பு சட்டை உரிப்பது போல உயிர் தன் இந்தச் சட்டையைக் கழற்றிவிட்டு வேறு சட்டையைத் தேடிப் போகிறது என்ற சிந்தனையை ஒப்புக்கொண்டவர்கள் மரணத்தைத் தேக வியோகம் என்றனர். இரண்டரை நாழிகையில் ஒளி உடலாக மாறிய வள்ளலாரின் மறைவு சித்தி (வீடு பேறு) எனப்பட்டது. சமாதியும் முக்தியும் இவ்வகைப்பட்ட சமய நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்த சொற்களே.

இறப்பை நீண்ட தூக்கமாகக் கருதியதால் துயிலுதல் என்ற பொருளுடைய துஞ்சல் என்ற சொல்லாட்சி பிறந்திருக்கக்கூடும். கண் மூடினார் என்ற வழக்கும் ஏறக்குறைய தூக்கம் என்பதன் தொடர்பில் உருவாகியிருக்கக்கூடும். குழந்தை கண்மூடித் தூங்குகிறது என்று சொல்லவந்தவர் அதன் அமங்கலப் பொருள் உணர்ந்து குழந்தை கண் வளர்கிறது என்றனர். மாய்தல் என்பது மறைதல் என்பதனடியாகப் பிறந்தது.

போய்ச் சேர்ந்தாரு, போய்ட்டாரு போன்றவை சொர்க்கம், நரகம் போன்ற மத நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவான பண்பாட்டு உருவங்கள். கடவுள், மதம் போன்ற கற்பிதங்களை மறுத்த பெரியார், பிறப்பைத் தொடக்கமாகக் கொண்டு, இறப்பை மனித வாழ்வின் முடிவாகக் கருதினார். மரணத்திற்குப் பிறகான வாழ்வில் நம்பிக்கை அற்றவர் அவர். டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பெரியார், "எப்படியோ நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் டாக்டர் நாயுடு அவர்கள். இப்போது சும்மா அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பேசுவது வெறும் பேச்சாகும். ஆத்மா என்று ஒன்று இருந்தால் அது நாம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அது தானே சாந்தி அடையும். அதிலொன்றும் சந்தேகம் வேண்டியதில்லை' என்று பேசினார் (விடுதலை, 24 ஜூலை 1957).

மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்விக்கு மனிதன் புரிந்துகொண்ட பதில்களின் அடிப்படையில்தான் மரணம் குறித்த சொற்கள் அமைந்தன. அந்தப் புரிதலை அவனது சமய நம்பிக்கைகள் அல்லது அவநம்பிக்கைகள் உருவாக்கின. அது பண்பாட்டு உருவம் கொள்ளும்போது பல்கிப் பெருகும் இத்தகைய சொற்களாயின.


இறப்பில் உயிர்க்கும் பண்பாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இறப்பில் உயிர்க்கும் பண்பாடு Empty Re: இறப்பில் உயிர்க்கும் பண்பாடு

Post by சிவா Tue Mar 29, 2011 11:03 pm

III

இறப்பிற்கும் சமூகத்திற்குமான உறவு, வாழும் மனிதனுக்கும் சமூகத்திற்குமான உறவிற்கு எந்த விதத்திலும் குறைந்ததாகத் தெரியவில்லை. மாற்றத்திற்கு ஏற்பப் புதுப்புது உறவுகளைச் சமூகத்தோடு ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. சமீப காலத்தில் தோன்றிய உறவுகள் ஆயுள் காப்பீடு, இறப்பிற்கு அரது மரியாதை போன்றவை. சில இறப்புகள் சமூகத்தில் கொந்தளிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன. தற்கொலைகள், கருக்கலைப்பு, தண்டனையாகத் தரப்படும் மரணம் போன்ற இறப்புகள் குறித்த விவாதங்கள் இன்னும் முற்றுப்பெறாது நீடிக்கின்றன.

தனிமனிதனுக்கு நேர்ந்தாலும் இறத்தல் ஒரு சமூக செயல்பாடாகவே இருக்கிறது. இறுதி ஊர்வலங்கள், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நடவடிக்கைகள், உடலைக் கெடாமல் காத்துவைக்கும் பெட்டி உள்பட இது தொடர்பான தொழில் செய்யும் நிறுவனங்கள் எனப் பல அதன் தொடர்பில் வாழ்கின்றன. இறப்பிற்கும் சட்டத்திற்குமான உறவு, இறப்பை உறுதி மற்றும் பதிவுசெய்தல், வாரிசு எனப் பலவற்றில் நிலை கொள்ளுகிறது.

இறப்பிற்கும் பண்பாட்டுக்குமான உறவு இறப்பைக் குறிக்கும் சொற்கள், இறந்தவருக்கு எழுதப்படும் சரமகவிகள், இரங்கல் உரைகள், எழுப்பப்படும் நினைவகங்கள், ஏற்படுத்தப்படும் நினைவு அறக்கட்டளைகள் முதலியவற்றில் உயிர்க்கிறது. லெனின் உடல் பல்லாண்டு காலமாய்ப் பாதுகாக்கப்பட்டு வருவதும் அதைப் புகைப்படம் எடுக்க அனுமதியில்லாத நிலை சோவியத் உடையும்வரை இருந்ததையும் இங்கே நினைவுகூரலாம். கோவாவில் கிறித்துவப் புனிதர் (செயின்ட் ஜோஸப்?) ஒருவர் உடல் இவ்வாறு பாதுகாக்கப்பட்டுவருகிறது. அதை என் அப்பா 1970களில் பார்த்துவிட்டு வந்து பேசிக்கொண்டிருந்தது என் நினைவில் இருக்கிறது.

சமூக வாழ்வோடு, மேற்காணுமாறு பிணிக்கப்பட்டிருப்பினும், மனித குலம் தோன்றிய காலந்தொட்டு நிகழ்ந்து வந்தாலும் இறப்பு பற்றிய பேச்சுக்கு ஒரு சமூக அசூயை இருந்தேவருகிறது. ஆங்கிலத்தில்கூட அந்த ண்ணிஞிடிச்டூ tச்ஞணிணி உண்டு. அதனால்தான் ஆங்கிலத்திலும் மறைமுகப் பிரயோகங்கள் இருக்கின்றன. இந்த மாதிரியான இறப்பு குறித்த தமிழ் சொற்களுக்குப் பின்னால் இருக்கும் பண்பாட்டுக் காரணத்தைப் பற்றிச் சில குறிப்புகளை இக்கட்டுரை விட்டுச் செல்ல முயல்கிறது.

இறப்பிலும் இறப்புக்குப் பின்னும் நடந்துகொள்ளும் முறையில் மனிதனது சமூகப் பண்பாட்டு அம்சம் இணைந்திருக்கிறது. அது பெரும்பாலும் மதம் சார்ந்ததாகவே இருக்கிறது. மனித உடலின் மீது ஆட்சி செலுத்தும் மதம் இறப்பிற்குப் பிறகு முழுவதுமாக மனித உடலை எடுத்துக்கொள்கிறது. உடலில் பொறித்த மதச் சின்னங்களை அகற்றிய பிறகே அதைப் புதைக்கவோ எரிக்கவோ மதம் அனுமதிக்கும். பிறகு சடலத்தைச் சாதி வாரிக் கல்லறையில் வைத்து விட்டுப் போகும். கையறு நிலையில் எழுதப்படும் அஞ்சலிகள், நினைவகங்கள், கல்லறைகள், சுடுகாடுகள் என்ற இறப்பிற்குப் பின்னான நடவடிக்கைகள் காட்டும் பண்பாடுகள் இன்னும் வியக்கத்தக்கனவாய் இருக்கும்.

பழ. அதியமான்


இறப்பில் உயிர்க்கும் பண்பாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இறப்பில் உயிர்க்கும் பண்பாடு Empty Re: இறப்பில் உயிர்க்கும் பண்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum