ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்

3 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Empty ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்

Post by சிவா Sun Nov 28, 2010 9:23 pm

First topic message reminder :

முன்னுரை

நான் முதன் முதலாக VERSOS SENCILLOS எனப்படும் எளிய கவிதைகளப் படித்தது நினைவுக்கு வருகிறது.அப்போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். ஆனால் அந்தக் காலத்திலேயே உயர்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுமானால் ஒருவர் உயரத்தில் ஏறியாக வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எனவே சிரமப்பட்டு வண்டிக் கொட்டகையில் இருந்த ஏணியில் ஏறினேன். அதன் உச்சியில் உட்கார்ந்து கொண்டு எனக்கு அரிச்சுவடி போலிருந்த மார்த்தியின் கவிதைகளை வாய்விட்டு உரக்கப் படித்தேன்.

எனது பதின் மூன்றாவது வயதில் மார்த்தியை மொழி பெயர்ப்பதில் ஈடுபட்டேன். தொடர்ந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் இந்த முயற்சியில் உழைத்தேன். இறுதியாக நான் மொழி பெயர்ப்பினை முடித்த போது சற்றேறக்குறைய அவர் இந்தக் கவிதைகளை இயற்றிய வயதினை எட்டிவிட்டேன். ஆனால், நான் அது வரை இருந்ததை விட அவரை விட்டு மேலும் விலகியிருந்தேன். ஏனெனில் எந்த ஒரு ஏணியும் அவரை எட்டும் அளவுக்கு உயரம் வாய்ந்ததாக இல்லை– அவரது எல்லையற்ற புகழை எட்டும் அளவு இல்லை. இருந்த போதிலும் இந்த மொழி பெயர்ப்பு உலகின் முக்கியமானவர்களில் ஒருவராய் விளங்கும் ஹொசே மார்த்தியிடம், பலரை நெருக்கமாகக் கொண்டு செல்லும் ஏணியின் முதற்படியாக இருக்கும் என நம்புகிறேன்.

ஹொசே ஜுலியன் மார்த்தி பெரஸ் ( JOSE JULIAN MARTI PEREZ ) கியூபாவின் ஹவானா நகரில் ஜனவரி, 28, 1853ல் பிறந்தார். பின் ஒரு காலத்தில் கியூப தேசிய இனத்தின் வரலாற்று நாயகனாகவும், கலாச்சாரச் சின்னமாகவும் வரப்போகின்ற அவர் MARIANA MARTI NAVARO என்னும் இஸ்பானிய சிப்பாய்க்கு மகனாகப் பிறந்தார். ( எளிய கவிதைகள் : XLI ). கேனாரி தீவினைச் சேர்ந்த Leonar Perez Cabra ( கவிதை XXVII ) அத்தீவின் குடியேற்ற அலையின் கடைசித் தருணத்தில் அங்கு வந்தடைந்தார். எந்தவொரு மனிதரும் தனது சொந்த நாட்டோடு, பிறந்ததிலிருந்தே இந்த அளவு பிடிப்போடு இருந்ததில்லை ; அல்லது, தங்களது இலட்சியம் விடுவித்துக்கொள்ள இயலாத படிக்கு அந்நாட்டுடன் பிணைக்கப் பட்டிருக்கிறது என்பது பற்றி உறுதியாக இருந்ததில்லை. தனக்கென கியூப வேர்கள் இல்லாத போதிலும், இன ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் தனது நாட்டவர்களிடையே துலாம்பரமாகத் தெரிந்த மார்த்தி, கியூபர்களுக்கென பொது அடையாளம் ஒன்றினை வடித்து உருவாக்கினார். இரட்டிப்பு அடிமைத் தளை பூண்டிருந்த இனத்தின் முன்னணி வீரரானார். ( கவிதை (XXX) .
.
கியூபாவில் இஸ்பானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உறுதியான போராட்டங்களை நடத்தி வந்த முற்றிலும் வேறுபட்ட போராட்டங்களை ஒரணியில் திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டார். கியூபா சுதந்திரம் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்ததன் மூலம், கொலம்பசால் தொடங்கி வைக்கப்பட்ட காலனியாதிக்கத்தையும் – அதற்கு எதிராக பொலிவரால் தொடங்கி வைக்கப்பட்ட அரைக்கண்ட விடுதலைக்கான போராட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்தார்.

19, மே,1895 அன்று தனது 42 ஆவது வயதில் விடுதலைப் போரில் அவருக்கு ஏற்பட்ட வீர மரணமானது இலத்தீன் அமெரிக்காவின் புதுயுகத் தொடக்கம் என மதிக்கப்படுகிறது. மிகவும் மதிக்கப்பட்ட அரசியல் சிந்தனையாளரும், இலத்தீன் அமெரிக்க வரலாற்றில் ஜனநாயகத்தை எடுத்தியம்பினவருமான மார்த்தி உண்மையில் அந்நாட்டின் மகத்தான கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.

மார்த்தியின் நாட்டுப்பற்றும் இலக்கியப்பணியும் இரட்டைப் பிறவிகள். தனது பதினைந்தாவது வயதில், 1868 இல் கியூப சுதந்திரத்துக்கான பத்தாண்டுப்போருக்கு சற்று பின்னர், இஸ்பானிய கொடுங்கோன்மையினை முதன் முதலில் எதிர் கொண்டார்.

Volunteer என அழைக்கப்பட்ட உள்ளூர்க் காவலர்கள், Villanuea Theatre இல் சுதந்திர கோஷங்களுக்கு எதிராக, நிராயுதபானியான பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தார்கள் ( கவிதை XXXVII ) இந்த நிகழ்ச்சியின் பின் விளைவாக மார்த்தியின் ஆசிரியரும் வழிகாட்டியுமான கவிஞர் Rafael Maria de mendive புரட்சிகர லட்சியங்களுக்கு ஆதரவாளர் என அறியப்பட்ட அவர் கைது செய்யப்பட்டு இஸ்பெயினுக்கு நாடு கடத்தப் பட்டார். அந்தப் படுகொலைக்கு அடுத்த நாள் La patria libre என்ற தலைமறைவு ரகசியப் பத்திரிக்கையில், ஒரு விடலைக் கதாநாயகன் அந்நியப் படையெடுப்பை எதிர்த்து உயிர் துறப்பதான தனது Abdala என்ற நாடகத்தைப் பதிப்பித்தார். பின்னர் ஒரு மாதத்திற்குள்ளேயே“10 de octubre!”

அவரது பாடல் El Siboney என்ற மாணவர் பத்திரிக்கையில் வெளியாகியது. கியூப சுதந்திரத்துக்கு போராடியதாலும், தனது பள்ளியில் படித்த சக மாணவர் ஒருவர் கொலைகாரப் படையில் தொண்டராகச் சேர்ந்ததைக் கண்டித்து கடிதம் எழுதியதாலும் ,

தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு San Lazaro Quarry யில் கடும் உழைப்பில் ஈடுபட வேண்டும் என இராணுவ நீதி மன்றம் அவருக்குத் தண்டணை வழங்கியது. இடுப்பிலும், கால்களிலும் பூட்டப்பட்ட இரும்புச்சங்கிலித் தளையானது அவரது சிறைக்காலம் முழுமைக்கும் அகற்றப்படவில்லை. அந்த இரும்புத்தளை சதையில் பதிந்த இரத்தக் காயத்தினை அவர் வாழ்நாள் முழுவதும் சகித்துக்கொள்ள நேரிட்டது.

செல்வாக்குள்ள ஒரு நண்பர் மூலமாக மார்த்தியின் பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த தங்களது மகனை பைன்ஸ் தீவுக்கு இடமாற்றம் செய்வித்து இறுதியாக 1871 _ ல் அவரது தண்டனையை ஸ்பெயின் நாட்டுக்கு நாடு கடத்துவதாகக் குறைத்து விட்டனர். அங்கு மார்த்தி சரகோசா மற்றும் மாட்ரிட் பல்கலைக் கழகங்களில் படித்துக்கொண்டே El precidio politico en Cuba (1871) என்ற ,கியூபச் சிறைகளில் அரசியல் கைதிகளுக்கு இழைக்கப் படும் கொடுமைகளைக் கண்டித்து எழுதப்பட்ட நூலினையும், La Republica espanala ante la revolucion cubana (1873) என்ற, இஸ்பானியர்கள் புதிதாக உருவாக்கிய குடியரசில் உள்ளது போன்ற அதே சுய நிர்ணய உரிமை கியூபர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என வீணே வற்புறுத்திய நூலையும் பதிப்பித்தார். இஸ்பானிய காலனிய ஆதிக்கத்தின் எடுபிடிகளால் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் மீறி, இஸ்பெயினில் தான் கழித்த காலத்தை, தன்னை உருவாக்கிய காலம் அது என அன்புடன் நினைவு கூர்ந்தார். அத்தோடு மட்டுமின்றி இஸ்பானியர்களின் பாரம்பரியக் கொள்கையான மூடநம்பிக்கை மற்றும் சகிப்பின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக போராடி உயிர் துறந்த தியாகிகளின் நினைவையும் போற்றினார்.

சட்டம், தத்துவம், மற்றும் இலக்கியத்துறையில் பட்டம் பெறுவதற்காக பரீட்சிக்கப்பட்டு தேர்ச்சி பெற்ற பின்னரும், இன்னமும் நாடு கடத்தல் தண்டணைக் காலத்தில் இருந்த மார்த்தி இஸ்பானியக் கண்காணிப்பை மீறி ஏமாற்றி சிறிது காலம் பாரீசில் இருந்தார். அங்கு விக்டர் ஹ்யூகோவைச் சந்தித்ததுடன் அவரது Mes fils என்ற நூலினை மொழி பெயர்த்தார். பாரீசிலிருந்து சவுத் ஆம்ப்டன் மற்றும் நியூயார்க் வழியாக மெக்சிகோவுக்கு கடற்பயணம் மேற்கொண்ட அவர், இறுதியாக, 1875 இல் ஆதரவற்ற தனது குடும்பத்தினருடன் இணைந்தார். Revisita universal பணியாளராக சேர்ந்தார். அவரது Amor con amor se paga (1875) என்ற நாடகம் Teottro principal என்ற அரங்கில் நடத்தப் பட்டது. மெக்சிகோவில் தனது ஏழு சகோதரிகளில் மிகவும் பிரியமான Mariana Matilde வைப் பறிகொடுத்தார். (கவிதை VI) தனக்கு எதிர் காலத்தில் மனைவியாய் அமைந்த ஒரு பணக்காரக் குடியேற்றக்காரரின் மகளான Carmen zayar Bazan உடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. (கவிதை XVIII, XX, XXXV, மற்றும் XXXVII). அங்கு அவர் வழக்கறிஞரான Manuel Mercado வைச் சந்தித்தார். அவரது நெருங்கிய நண்பராகவும் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த அவருக்கும் சேர்த்து ‘எளிய கவிதைகள்’ சமர்ப்பனம் செய்யப்பட்டது.

“ எனது தாய் நாட்டுக்கு அடுத்த படியாக நான் மிகவும் நேசித்தது இந்த நாடுதான்” என்று மெக்சிகோ பற்றிப் பேசுகையில் மார்த்தி குறிப்பிட்டார். அங்கும் கூட தொடர்ந்து வசிக்க அவர் அனுமதிக்கப்படவில்லை. Porfrio Diaz இன் திடீர் எழுச்சி அவரது வெளியேற்றத்தைக் கட்டாயமாக்கியது. கண்டு பிடிக்கப்பட்டால் நிச்சயம் சிறைவாசம் தான் என்ற ஆபத்து இருந்த போதிலும் கூட, 1877 இல் திருட்டுத்தனமாகவும் திடீரெனவும் Julian Prez என்ற பொய்ப் பெயரில் அவர் ஹவானா வந்து சேர்ந்தார். வந்த இரண்டு மாதத்துக்குள்ளேயே அவர் கவுதமாலா சென்று Jose Maria Izaguirre என்ற கியூபர் நடத்திய பொதுப்பள்ளியில் ஆசிரியரானார். பின்னர் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். கவுதமாலாவில் அவர் இருந்த அந்த ஆண்டில் அரசின் வேண்டுகோளினை ஏற்று கவுதமாலாவின் பண்டைய வரலாற்றை எழுதிப் பதிப்பித்தார். ஆனால் அது பயனற்றதாக ஆகிவிட்டது. ஏனெனில் அவரது நண்பர் Iza Guirre பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது தானும் தனது பதவியை விட்டு தன்னிச்சையாக விலகி அந்த நாட்டை விட்டு வெளியேறினார்.

தான் கவுதமாலாவில் தங்கியிருந்தபோது Maria Garcia Granodos உடைய வெகுளித்தனமான காதலை உதறித் தள்ளியது பற்றி எப்போதுமே நினைந்து நினைந்து வாடினார். அவளது இறப்பிற்குப் பின்னர்தான் அவளும் தன்னை உண்மையாக நேசித்தது அவருக்குப் புரிய வந்தது. (கவிதை IX)

இஸ்பெயின் நாட்டில் 1878 இல் பத்தாண்டுப் போரின் முடிவில் வழங்கப்பட்ட பொது மன்னிப்பைப் பயன் படுத்திக்கொண்டு மார்த்தி ஹவானாவுக்குத் திரும்பினார். அவரது மனைவி கார்மெனும் உடன் வந்து நவம்பர், 22 அன்று அவரது ஒரே மகனான Jose Francisco Marti Zyaz Bazan ஐ ஈன்றெடுத்தார். (கவிதை 1:10 மற்றும்XXI )

வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்கான உரிமம் மறுக்கப்பட்ட நிலையில் நியூயார்க்கினைத் தளமாகக் கொண்டு செயல்பட்ட Comitee Revolucionario cuba என்ற அமைப்பின் வழிகாட்டுதலுக்கேற்ப ஒரு புதிய கிளர்ச்சியை உருவாக்குவதில் உதவிக்கொண்டே ஒரு வக்கீல் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். அந்தத் தீவில் மீண்டும் பகைமைகள் உருவானபோது தனக்கு எதிராக எந்த ஒரு குற்றமும் சாட்டப் படாத நிலையிலேயே, மீண்டும் ஒரு முறை இஸ்பெயினுக்கு நாடு கடத்தப் பட்டார். ஆனால் அவர் மீண்டும் தப்பித்து Pyreness ஐக் கடந்து, தான் மிகவும் நேசித்த மகனையும் ,குடும்பத்துக்கும் அப்பால் வியாபித்திதிருந்ததும் ஆனால் குடும்பத்தை விலக்காததுமான அவரது பரிவுணர்வை, :¢ல சமயங்களில் குடும்பத்தைத் தாண்டியது மட்டுமல்ல அதனை விலக்குவது எனத் தவறாகப் புரிந்து கொண்டு வீணே பிணங்கிய மனவியையும் பிரிந்து ஜனவரி 1880 இல் நியூயார்க் வந்தடைந்தார்.


ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Empty Re: ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்

Post by சிவா Sun Nov 28, 2010 9:33 pm


- IX -


65
மரமடர்ந்த சோலையின் விரிந்ததொரு சிறகில்
இரவின் நிழலில் மலர்கிறது ஒரு கதை. கவுதமாலா
ஈன்றெடுத்த கன்னி ஒருத்தியின் கதையேதான் அது
காதலுக்காக ஆவி துறந்த அற்புத மங்கை அல்லவோ அவள்!.

66
அல்லியும் மல்லியும் மருக்கொழுந்தும் விரவி
புனையப் பட்டன மலர் வளையங்கள் .
கிடத்தப் பட்டாள் அவள் – வெண் பட்டுத் துணியால்
வேயப்பட்ட சவப் பெட்டிக்குள்ளே !.

67
நறுமணம் பூசிய துவாலையை அளித்தாள்
தன்னை மறந்து விட்ட காதலனுக்கென _ அவனோ
வேறு ஒருத்தியை மணந்து நாடு திரும்பவே
வாடினாள் வஞ்சி காதலின் கல்லறையில் !

68
தூதுவர்களும் பாதிரியார்களும் புடை சூழ
கல்லறை நோக்கி கடந்தது அவள் பயணம்.
பின் தொடர்ந்தது ஏழைகள் கூட்டம்
அலை அலையாய் மலர்களைக் கையேந்தி !

69
ஜன்னலின் வலைக்கதவை மெல்லெனத் திறந்தாள்
மீண்டும் காதலனைக் காணும் ஏக்கம் பெருமூச்சாய் தகிக்க
கடந்து சென்றானவன் புது மண மகளோடு – மீண்டும் அவனைப்
பார்க்கும் வாய்ப்பு வரவே இல்லை அந்த மங்கைக்கு !

70
வெயில் பட்ட செம்பாய்க் கொதித்தது அவள் நெற்றி
விடை பெறக் கடைசியாய் நான் முத்தமிட்ட பொழுதில்.
வாழ்நாள் முழுவதும்வெறித்தனமாக
நான் நேசித்தது – அந்த நெற்றி ஒன்று தானே !

71
நதியில் இறங்கிணாள் அவள் ஓர் நாளிரவில்
மருத்துவர் கண்டார் சடலமாய் அவளை -
மரித்து விட்டாளாம் குளிரால் விரைத்து – அவளைக்
கொன்றது ‘காதலே’ என்பது எனக்குத் தெரியும் !

72
பனி படர்ந்த கல்லறை மீது கிடத்தி இருந்தனர் அவளை
பலகையின் மீது முத்தமிட்டேன் நான்
மெல்லிய கரத்திலும் மீண்டும்
வெண்ணிறக் காலுறை மீதும் !

73
நின்றிருந்தேன் அங்கு இருட்டு கவியும் வரை
‘சென்று விடுங்கள்’ என்றான் கல்லறைக் காவல் காரன்
மீண்டும் ஒரு முறை பார்க்கவா இயலும் …..
காதலுக்காகவே உயிர் விட்ட அவளை ?


ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Empty Re: ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்

Post by சிவா Sun Nov 28, 2010 9:33 pm

- X -

74
தனிமையில் நடுங்குதென் நெஞ்சம்
இரவு கூடக் கூடத் துயரம் வளரும்
நாடகம் ஒன்று நடக்கிறது செல்வோம்
இஸ்பானிய மங்கையின் இசைக்கோவை நடனமது .

75
முகப்பினில் இருந்த அந்தக் கொடியினை
அகற்றி விட்டனர் நன்மையாய்ப் போயிற்று
இன்னும் அந்தக் கொடி பறக்குதென்றால்
சென்று காணவே மனமிசையாது .

76
வெகு தோரணையோடும் வெண்ணிறம் பூண்டும்
இஸ்பானிய நங்கை அரங்கினுள் நுழைகிறாள்
காலீஷியாவிலிருந்தா வருகிறாள் அந்நங்கை ?
விண்ணிலிருந்தன்றோ இறங்கி வருகிறாள் !

77
காளைச் சண்டையின் சிவப்புத் துணியும்
செந்நிறம் வாய்ந்த கையிலாச் சட்டையும்
கிராம்பு மணக்கும் மயக்கச் சீலையும்
தொப்பியும் அணிந்து தோன்றினாள் முன்னே !

78
அடர்ந்த அவளின் புருவம் நோக்கின்
முரட்டுக் கலப்பினம் நினைவில் வந்தது
மூரரின் சாடையே முகத்தில் தெரிந்தது
காதின் அழகோ வெண்பனி தோற்றது !

79
விளக்கு ஓளி மங்க ஓளி அதிர
சால்வையும் சட்டையும் பகட்டாய் அணிந்து
கன்னி மேரி விண்னுலகம் மேவிய காட்சியாய்
அண்டாலுசியன் அடவில் அரங்கம் ஏறினாள்

80
சவால் விடும் பாணியில் நிமிர்ந்தது அவள் தலை
மேலாடை விசிற எழும்பின தோல்கள்
வளைந்த கரங்கள் தலையினைச் சுற்ற
ஆர்வமிகு காலுதைப்பில் அடவுகள் கொஞ்சும்

81
கத்திபோல் கிழிக்கும் நோய்கண்ட ரசனையை
பக்கமாய்ச் சாய்ந்த அத்தாளம் பிசகா காலடிக் கோலம்
ஆடரங்கம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டது
ஆடவர்களின் நொறுங்கிய நெஞ்சினால் !

82
கொண்டாட்ட உணர்வு கொழுந்து விட்டெரிகறது
கனல் கக்கும் அவளது கண்களின் கூர்மையில்
காற்றில் பறக்கிறது திரும்பும் போதெல்லாம்
சிவப்பு புள்ளிகள் தெரிந்திட்ட சால்வை !

83
துள்ளித் தாவுகிறாள் திடீர் திடீர்ரென
திரும்பி குதிக்கிறாள் தலைவணங்குகிறாள்
காஷ்மீரச் சால்வை பரக்க விரிகையில் – தன்
வெள்ளைக் கவுனைப் படைக்கிறாள் விருந்தாய்

84
ஊஞ்சலாடுகிறது அவளின் பொன்னுடல் முழுவதும்
மயக்கி இழுக்கிறது திறந்த அவள் வாய்
பூவாய் மலர் சிவந்த அவளது அதரம்
ஒய்வதே இல்லை அவளின் தொடரும் அடவுகள்

85
காற்றின் போக்கில் மெல்லென திரும்பி
புள்ளிச் சால்வையை நீள விரிக்கிறாள்
எல்லாருக்கும் கண்கள் மயங்க
விட்டுச் செல்கிறாள் ஏக்கப் பெருமூச்சை !

86
சிறப்பாக ஆடினால் இசுலாமிய நடனமாது
சிவப்பும் வெள்ளையும் கலந்தது அவளின் சால்வை
துடித்து நடுங்குகிறது தணிந்த அவளது ஆன்மா
உள்ளிழுத்துக் கொள்கிறது தன் தனிமைச் சிறைக்குள் !


ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Empty Re: ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்

Post by சிவா Sun Nov 28, 2010 9:37 pm



- XI -


87
நம்பிக்கை மிகுந்ததொரு பணியாள் எனக்குண்டு
எனதெல்லா விழைவுக்கும் இணங்கி ஒத்துழைப்பான்
ஓயாமல் கவனிப்பான் சோர்வுறவே மாட்டான்
எனது கிரீடத்தைத் துலக்கிப் பளக்க வைப்பான் !

88
வேலையிற் சிறந்த அப்பணியாளன்
உண்ணுவதில்லை உறங்குவதில்லை
எத்தனை நேரம் வேலை செய்தாலும்
துவளுவதில்லை முணகித் தேம்புவதில்லை !

89
வெளியே நான் போனால் ஓடி ஒளிகிறான்
என் பைகளுக்குள்ளேயே புகுந்து கொள்கிறான்
திரும்பி வருகையில் நெருங்கி வருகிறான்
சாம்பல் கிண்ணத்தை அளிக்கிறான் அறிவு கெட்டவன் !

90
பல்லென விழித்து ம் என் பணியாளனை
நடக்கும் போது அவன் நடுக்குற்ற போதிலும்
குளிரும் கதகதப்பும் தனக்குள்ளே கொண்டவன்
ஒரு எலும்புக்கூடுதான் எந்தன் பணியாளன் !

91
எப்போதும் நம்பலாம் என் பணியாளனை
நடக்கும் போது அவன் நடுக்குற்றபோதிலும்
குளிரும் கதகதப்பும் தனக்குள்ளே கொண்டவன்
ஒரு எலும்புக் கூடுதான் எந்தன் பணியாளன்.


ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Empty Re: ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்

Post by சிவா Sun Nov 28, 2010 9:38 pm

XII -

92
உல்லாசமாக ஒரு முறை படகு செலுத்தினேன்
உள்ளம் கவர்ந்து இழுக்குமோர் பெரிய ஏரியில்
தங்கம் போலச் சொலித்தனன் கதிரவன்
அதை விட அதிகமாய் மின்னியதென் ஆன்மா !

93
திடீரெனவோர் குமட்டும் நாற்றம்
காலுக்குக் கீழே குனிந்து பார்க்கையில்
வயிறு முட்டத் தின்று செத்த மீன்
தண்ணீருக்கு மேலே தப்பலடித்தது !


XIII -

94
எங்கு முட்புதர் செழித்து வளர்ந்துளதோ
எங்கு நேர்ப்பாதை வளைந்து மறைகிறதோ
தேவதை ஒருத்தியும் அவ்வழுக்கைத் தலையனும்
இணைந்து மறைந்தனர் அந்த திருப்பத்தில்.

95
புன்னை மரத்தோப்பின் அண்மையில்
கண்ணின்று மறைந்தது அந்தச் சோடி
பளபளத்தது வழுக்கைத் தலை மட்டும்
தங்க விளக்கின் கிரீடத்தைப் போல !

96
மரம் வெட்டும் ஓசை மிதந்தது காற்றில்
கண் முன் தாவியது உயர்ந்தெழும் பறவை
யாருக்குத் தெரியும் அந்த ஜோடிகள்
முதல் முத்தம் இட்டது எப்போது என்று ?

97
தேன் மணக்கும் அந்தத் தேவதைக் கூந்தல்
இளம் பொன்னிறம் கொஞ்சம் செந்நிறம்
பட்டுத் தெரித்தது வழுக்கை மண்டையில்
பட்ட மரத்தில் படர்ந்ததே பசுங்கொடி !


- XIV -

98
எப்போதுமே யான் மறக்க மாட்டேன்
எப்போதோ உதிர்ந்த அந்த இலையை
மொட்டையாஇ உதிர்ந்த அந்தக் கிளையில்
மொட்டவிழ் தளிர் ஒன்று முளைத்த அதிசயத்தை !

99
ஏதும் அற்றதோர் பஞ்சகாலத்தில்
அணைந்துபோன அந்த அடுப்படியில்
காதல் வயப்பட்ட கன்னி ஒருத்தின்
கைப்பற்றினானே அவ்வழுக்கைத் தலையன்.


ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Empty Re: ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்

Post by சிவா Sun Nov 28, 2010 9:40 pm

XV -

100
இன்னமும் வந்து கொண்டு இருக்கிறார் மஞ்சள் மருத்துவர்
தனது சிகிச்சையை எனக்குத் தொடர
மஞ்சள் பாரித்த ஒரு கரம் என் மேல்
மற்றொரு கரமோ சட்டைப் பையில் !

101
மெல்லெனத்தொடும் அந்த மருத்துவர் ஒரு
மூலையில் வசிக்கிறார் சற்றே தூரத்தில்
வெளிறி மெலிந்த ஒரு கரம் என்மேல்
மற்றொரு கரமோ அவரது நெஞ்சில் !

102
ஒரு மிட்டாய்க்காரன் வருகிறான் என்னிடம்
காகிதத் தொப்பியும் கவியும் மணமுமாய்
மலாக்கா அல்லது ஷெர்ரி மிட்டாயைச்
சுவைத்துப் பார்க்க பிசுக்குக் கேட்கவா ?

103
மிட்டய்க்காரா சொல்லு அவளிடம்
பார்க்க விரும்பியும் தவற விட்டுவிட்டாள்
எனக்கு ஒரு முத்தம் யத்தனிக்கவும்
வசந்த விடியலின் காட்சியைக் காணவும் !


XVI -

104
தாழிட்டிருந்த தடுப்பினைத் திறந்து
ஈரம் படிந்த ஜன்னலில் சாய்ந்து
நிலவைப் போல வெளுத்தும் நிலைத்தும்
விதியை நினைத்து வெம்புகிறான் காதலன் !

105
பசுமை படர்ந்த அவள், விதானத்தின் கீழ்
சிவந்த பட்டும் கருத்த புறாவுமாய்.
காதலைப் பற்றி ஏதும் பேசாத அந்தக் கன்னி
மாலையில் பறித்தாள் ஒரு ஊதா நிற மலரை !


XVII -

106
பொன்னிறக்கூந்தல் அலைகிறது காற்றில்
கபில நிறக் கண்களை உறுத்தியவாறு
கண்டதில் இருந்து எந்தன் இதயமோ
தங்கப் புயலில் சிக்கித் தவிக்கிறது !

107
வசந்த கால வாலிபத் தேனீ – பிளக்கும்
புத்தம் புது மலர் மொக்கினை – புனித முகமென்று
சொல்லுவதில்லை கடந்த காலம் போல்
கன்னி என்பதெல்லாம் மாலை மயக்கம் !

108
குழப்பத்துக்கிடையில் குறுக்கே புகுந்து
சொட்டு மருந்திடுவேன் புறை விழுந்த கண்ணுக்கு
கருமையினூடே வானவில் ஒளிரும்
வெள்ளி மரங்களின் உச்சிக்கு மேலாக !

109
முட்புதர் அடர்ந்த மலைகளின்
உச்சியில் பேரொளி கண்டு வியப்பினில் ஆழ்ந்தேன்
நீல வானம் போல் வசியம் செய் ஆன்மாவில்
மஞ்சள் மலரொன்று இளம் சிவப்பாய்ப் பூக்கிறது !

110
காட்டின் ஊடே தடம் தேடுகிறேன்
தூரத்தில் இருக்கும் கடற்குட்டைத் நாடி
கிளைகளின் ஊடே கூர்ந்து நோக்கையில்
நீர் மீது நடக்கும் அவளைக் கண்டேன் !

111
தோட்டத்து அரவம் சீறுகின்றது
வழுக்கிக் கொண்டு வளைக்குள் செல்கிறது நஞ்சினைக் கக்கி
சிறகை விரித்தென்னை வரவேற்க்கும் அந்த வானம்பாடி
ஆன்மா உருக சோக கீதம் சோம்பி இசைக்கிறது !

112
இசைக்கும் யாழாய் இசையமைப்பவனாய்
பிரபஞ்சம் முழுவதும் அதிரும் என்னுள்
சென்றதும் திரும்பியும் வருவேன் பகலவன் போல்
காதலும் நானே பாடலும் நானே !


ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Empty Re: ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்

Post by சிவா Sun Nov 28, 2010 9:41 pm

XVIII -

113
பேதை சூடிய பின்தலைச் சுட்டி
செதுக்கப் பட்டது கருத்த பொற் கனிமத்தில்
களங்கம் இல்லா மனிதன் ஒரு காலத்தில்
கல்லின் இதயத்துள் இருந்து தோண்டியது !

114
பறந்து சென்ற தோற் பறவை கடந்த இரவில்
கொத்திவந்தோர் சுட்டி மங்கைக்கெனத் தன் அலகில்
பளபளப்பான அந்தச் சுட்டி – அவள் அறிவாளா
பசையும் படிகமும் ஒட்டிச் செய்ததென ?

115
குறுகிய இடுப்பில் குமரி தரித்திருப்பதுவோ
பொய்யாய் மதிப்பிடப்பட்ட போலி வைரம்
அலச்சியமாய் அவள் தூக்கி எறிந்ததோ
சொக்க தங்கத்தின் கனிமத்தால் ஆனது !


XIX -

116
தீப்பிழம்பென உன் விழிகள் சிவந்தால்
கொண்டை ஊசிகள் கலைந்திருந்தால்
இரவு முழுவதும் ஆடினாய் ஆடாத
ஆட்டங்களை ஆடினாய் என்பதாக !

117
எரிந்து விழுந்ததாலும் மழுப்பி மறைத்ததாலும்
தாங்கொணா வெறுப்பில் சலித்துப் போனேன்
அருவருப்பாக வந்தது உன்னைப் பார்க்கவே
அழகுதான் எனினும் பாதகம் செய்பவள் நீ !

118
சங்கேதம் ஒன்று அம்பலம் ஆனதினால்
எங்கே போனாய் இரவில் என்பதும்
இழைத்த பிழை என்னவாய் இருக்கும்? அட
அழுது கொண்டிருந்திருக்கிறாய் அடியேனை நினைத்து !


- XX -

119
கலக்குகிறது காற்று எந்தன் காதலை
கன்னி பொன் நிறத்தாள் ஆனாலும்
மாலை மயக்கமோ உண்மையாய் இல்லை
காதற்கிழத்தியின் குலாவலைக் கொஞ்சலை
மேல் வானம் நோக்கி எடுத்துச் சென்றது
மிதக்கும் மேகம் !

120
கன்னியின் காதலைக் காற்று இழுப்பது போல்
கவர்ந்து சென்றது மறையும் மேகம்
மாலை என்ன புதிதாய் ஏமாற்ற ? மங்கைதான்
ஆறுதல் அளிக்கிறாள் பொய்யாய் !

121
கலைக்கண்காட்சியில் மாலையில் நேற்று நான்
கண்டேன் நங்கையை முதல் முதல் நேற்று தான்
இதயம் பறந்தது என்னிடமிருந்து
மங்கையின் காலடி கண் ஒற்றிக்கொண்டு !

122
ஓய்வெடுக்கின்றாள் உட்கார்ந்து தரையில்
ஓவியச்சீலையில் அவளது கண்ணும் கவனமும்
களைத்த கணவனோ காலடி நிழலில்
அம்மணக் குழவி அவளது மார்பில் !

123
துயரக்குவியலோ தலைக்கும் மேலே
கடைசிக் கறவையின் தெறிப்புகள் கீழே
உணர முடிகிறது மேலாடை நழுவுவதை
சவத்தின் மேல் போர்த்திய துகிலா என்ன அது ?

124
சலிப்படைந்து போனவரின் கனிவற்ற பூமியில்
வயலெட்டும் மலர்வதில்லை முட்களும் வளர்வதில்லை
நேசிக்கும் நெஞ்சத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள் அவர்கள்
வரண்டும் இருண்டும் கிடக்கிறது வானம் !

125
கவர்ந்து சென்ற கன்னியவள் விடுவிக்க மாட்டாள்
சுதந்திரமாக அடிமைப்பட்டதாம் எந்தனது இதயத்தை
பெருமை மிகு வரவேற்புக் கூடத்தின் சுவற்றில்
நேற்றைய ஆசான்களின் நெஞ்சினிக்கும் ஓவியங்கள்.!


ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Empty Re: ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்

Post by சிவா Sun Nov 28, 2010 9:43 pm


- XXII -


126
மேல் அங்கிகளும் காலுறைகளும் நிறைந்த
விசித்திர நடன அரங்கம் வந்துளேன் யான்
ஆண்டு முழுவதும் வேட்டையாடியவர்களில்
சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்கக் காத்துளது புத்தாண்டு !

127
சிவந்திருக்கும் மேலாடைக் கையொன்றில்
ஊதா நிறச் சாட்டின் உராய்கிறது
சுருதி சேர்க்கிறார் செண்டையில் கோமான் _அவரோ
பிரபலமான பிரமுகரில் ஒருவர் !

128
சிவப்பு சட்டை காற்றில் சுழல்வதில்
தீப்போலத் தெரிகிறது – பறக்கும் மென் பட்டு !
உதிர்ந்த சருகுகள் காற்றில் உழல்வது போல்
குருட்டு மனிதனின் கண்களின் முன்னே !


- XXIII -

129
ஏகுவன் யான் இந்த உலகினை விட்டு
இயற்கையின் கதவு திறந்திருக்கும் எந்தனுக்கு
எந்த வண்டி மேல் கிடத்த வேண்டுமோ
அந்த வண்டியை மூடும் பசுந்தழைகள் !

130
படுக்க வைக்காதீர் – என்னை இருட்டு வெளியினிலே
தீர்த்துக் கட்டுவதற்காய் வருவர் துரோகிகள்
நல்லவர் போலவே என்னுயிர் போகும்-ஆதவன் நோக்கி
நல்லவன் அல்லவோ நான் ?


- XXIV -

131
மகிழ்வாய்ச் சென்று தூரிகை ஏந்தும்
துணிவு மிக்கதோர் ஓவியன் எந்தன் நன்பன்
காற்றுப்ப் பரப்பெனும் ஓவியச் சீலையில்
விதைப்பானே அவன் குழப்பத்தின் குமிழிகளை !

132
தெய்வீக வண்ணம் கொண்டு ஓவியம் தீட்டும்
மகத்தான ஓவியன் ஒருவன் வசிக்கிறான் இங்கு
கட்டுப் பட வேண்டுமா அவனது உன்னதத் திறமை
கப்பலின் பக்கலில் மலர்களை வரைவதற்கு ?

133
தான் வரைகையில் மோதி இடரும்
கடலை நோக்கி எரிச்சலாய்ப் பார்க்கும்
ஏழை ஓவியனை எனக்குத் தெரியும்
கடல் போல் ஆழம் அவனது அன்பு !


- XXV -

134
வெகுளிப் பையனின் இளிப்பைப் போல
வியப்பு எனக்கு இன்னமும் இருக்கு
மஞ்சள் பாரித்த வானம்பாடிக்கு
கன்னங்கரிய கண்களா ! ஏன் ?

135
நாடற்றவனாக நான் மரிக்க மாட்டேன்
இன்னாரின் அடிமை என நான் சாக மாட்டேன்
எனது கல்லரை மீது ஓர் மலர் வளையமும்
எனது சவத்தின் மீது ஒரு கொடியும் வேண்டும் !


XXIV -

136
இறந்த பின்னரும் வாழ எனக்குத் தெரியும்
மகத்தானதொரு கண்டு பிடிப்பு ஒன்றினை
கடந்த இரவு சரி பார்த்துக் கொண்டேன்
காதல் ஒன்றேதான் சிறந்த சஞ்சீவி !

137
சிலுவையின் சுமை தன்னையே அழுத்தும் போதும்
உரிமைக்காகவே உயிர் துறப்பேன் என்பவன் மனிதன்
தன்னால் இயன்றவை அனைத்தும் செய்து
ஒளியில் நனைந்த அவன் மீண்டும் வருகிறான் !


- XXVII -

138
கடந்த இரவில் – நாங்கள் அயர்ந்து உறங்குகையில்
கொடிய எதிரிகள் கொளுத்தினர் எம் வீடுகளை
வெப்ப காலத்து வெண் நிலவொளியில்- அவரது
வாள் கொண்டு வாரப்பட்டன எம்மவர் தெருக்கள் !

139
இஸ்பானிய வாட்களின் சீற்றத்துக்கு எஞ்சிய
சிற்சில பேர்களே இருந்தனர் உயிருடன்
சூரிய உதயத்தில் யாவரும் கண்டது
குருதியும் சதையும் குவிந்த தெருக்கள் தான் !

140
தோட்டாக்கள் பறந்த அவ்விடை வெளியில்
மிரண்டோடிய வண்டிகள் ஒன்றனுள்
செத்துப்போன மாதொருவளின் சடலம்
இரவின் ஓட்டத்தில் எழுந்த களேபரத்தில்
உரத்துக் கேட்டது ஒரு குரல்- தவிர்க்கப்பட்டது
ஒரு கொலைச் சாவு !

141
துரித வேகத்தில் பறந்தன தோட்டாக்கள்
துளைக்கப் பட்டன மூடிய கதவுகள்
கூவியழைத்த மாது கொடுத்தாள் உயிர் எனக்கு
என்னை எடுத்தேக வந்து விட்டாள் அன்னை !

142
மரணத்தின் கோரைப் பற்களின் ஊடே
நுழைந்து வந்தனள் அவள்- வீரமிக்க ஹவானாவினர்
வியப்பினால் வாய் பிளக்க- இன்றும் கூட
மனத்திட்பம் நிறைந்த அம் மங்கையைக் கண்டால்
தொப்பியைக் கழற்றித் தாழ்ந்து வணங்குவர் !

143
உன்மத்தம் பிடித்ததைப் போல் ஒன்றி முத்தமிட்டோம் நாங்கள்
சுற்றிலும் இருந்த மக்கள் நடுநடுங்கி ஓடுகையில்
தனியே விட்டு வந்தேனே குழந்தையை
‘சீக்கிரம் சீக்கிரம்’- சீறியது அவள் கதறல் !


ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Empty Re: ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்

Post by சிவா Sun Nov 28, 2010 9:44 pm

- XXVIII -

144
பண்ணை வெளியில் பசும் புற்றரையில்
தந்தையின் கல்லறை இருக்கும் இடம் நோக்கி
‘மான்’ நடக்கின்றான் -அவனொரு சிப்பாய்- எனினும்
அவன் பணயாற்றுவதோ ஆக்கிரமிக்கும் அந்நியப் படையில் !

145
தந்தை பெயர் போனவர் தனது துணிவுக்கு
எந்தக் கொடியினை ஏந்திப் பிடித்தாரோ
அந்தக்கொடி போர்த்தி அணி செய்யப்பட்டவர்
கல்லறையிலிருந்து கடிது எழுந்த அவர்
விட்டார் ஒரு அறை! வீணப்பயலுக்கு
வீழ்ந்தான் அம்மகன்- மண்மகள் மார்பில் !

146
விண்ணின் மீது மின்னும் இடி முழக்கம்
பண்ணை வீட்டில் மோதும் சூறாவளி
தோல்வியில் துவண்டு விழுந்த மகனைக்
கிடத்தினார் தந்தை கல்லறை மீது !


- XXIX -

147
அச்சடிக்கப் பட்டிருக்கிறது அரசனின் முகம்
சட்டப்படியே எல்லா ஆவணத்திலும்
பையனின் சொந்தத் துவக்கால் விதியை முடித்தனர்-அரசனின்
சொந்த அடியாட்கள் தம்மிச்சையாக !

148
“போற்றப்பட வேண்டிய புனித சட்டம் இது”
அரசரின் புனிதப் பெயரால் போர்த்திக் கொண்டு
அந்தப் பையனின் சொந்தத் தமக்கை
பாடுகின்றாள் அரசனின் உரு முன்னர் நின்று !


- XXX -

149
சுவர்க்கத்தில் இருந்து எரிக்கிறது இடி மின்னல்
குருதி பூசிக்கொண்டு இருக்கிறது ஆங்காங்கு மேகம்- தன்
நூற்றுப் புழை வழியாய் வெளித்தள்ளும் நாவாய்
பிடிபட்ட கருப்பு அடிமைகளின் தொகுதியை !

150
புயற்காற்றும் பேய் மழையும் சுழன்றடிக்கும்
உயர்ந்த மலைக்குன்றின் அடர்ந்த தோட்டத்தில்
அடிமைகளின் அணி வகுப்பு ஆடையேதுமின்றி -
தராதரம் பிரிக்கப் பல் பிடித்துப் பார்ப்பதற்காய் !

151
சூறாவளிக் காற்றில் சின்னா பின்னமாய்
அடிமைகளால் நிரம்பி வழியும் கீற்றுக்கொட்டகைகள்
மிரண்டதோர் அன்னை அழுது புலம்புகிறாள்
மனிதக் கழிவை யார் பார்ப்பார் என்பதாக!

152
பாலை வனத்துப் பளிங்குச் சிவப்பென
ஆதவன் எழுந்தான் தொடுவானத் தொலைவில்
தூக்கிலிட்டுத் தொங்க விடப்பட்ட துயர் மிகு அடிமையின்
கருத்த உடல் மீது பட்டுத்தெரித்தன பகலவன் கதிர்கள் !

153
பார்த்த ஒரு சிறுவன் பதறினான் நடுங்கி
ஒடுக்கப் பட்டவர்கள் மீதான பாசத்தில்
ஏற்கப் பட்டதோர் சபதம் அந்த அடிமையின் காலடியில்
“கொடுமைக்கு எதிர்க் கொடுமை
இழைத்திடுவோம் நிச்சயமாய் ! “


ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Empty Re: ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்

Post by சிவா Sun Nov 28, 2010 9:44 pm

- XXXI -

154
கடவுள் போல் காட்சி தருவதற்காய்
தேடினான் ஒருவனை அந்த ஓவியன்
தனக்குப் பிறந்தான் என்பதால் அல்ல
தன்னுடன் இணையாய்ப் போருக்குச் செல்ல !

155
அங்கே குவிப்பான் ஆதாயங்களை
‘வென்று வருவாய்!’ என வாழ்த்துவேன் விழைவேன்
குன்றின் உச்சியில் இங்கேயே இப்பொதே
நேருக்கு நேராக மோதட்டும் எதிரியுடன் !

156
பொன் நிறத்தலையன் வலியவன் வளர்ந்தவன்
பெருங்குடிப் பிறப்பு அவன் இயற்கையிலேயே
எனக்குப் பிறந்தவன் என்பதால் அல்ல
தாய் நாட்டுகாகவே பிறந்தவன் என்பதால் !

157
வீர மகனே புறப்படு போருக்கு
முன்னம் மரணம் என்னைத்தழுவிடின்
முத்தமிடு எந்தனுக்கு -உன்னைத் தழுவிடின்
‘இழிமகன் அல்ல சான்றோன்’- எனக்கேட்ட தாயினும் மகிழ்வேன் !


XXXII -

158
கருக்கிருட்டு ஒழுங்கையில் நான் உலாப்போகும்
நிசிப் போதில் நிழல் வீழும் நீளமாய்
அண்ணார்ந்து பாக்கையில் ஆங்கோர் மூலையில்
விண் முட்டும் மாதாக் கோயில் மணிகூண்டு !

159
அற்புதமானதுவாய் இருக்குமோ அது ?
சக்தியாய் புனித வெளிப்பாடாய்………
அல்லது ஒரு சடங்குக் கடமையாய்…..
அது என்னை மண்டியிட வைக்கிறதே !

160
சல சலக்கிறது இரவு திராட்சைக் கொடி மீது
வயிறு நிறையப் புடைக்கிறது புழுக் கூட்டம்
கருத்த சுவர்க்கோழி ரீங்கரிக்கின்றது
இலையுதிர் காலத்தின் முதல் வரவுக்காய் !

161
ஊளைக்குரல் எழுப்பும் கூதிர் காலை
தலையை உயர்த்தி நான் பார்க்கும் வேளை
சந்தின் முனையில் மணிக்கோபுர ஆலயம்
தோற்றமளிக்கும் ஒரு ஆந்தையைப் போல !


- XXXIII -

162
தாங்கொணாத் துயரில் தவிக்கிறேன் தாரகைகாள்!
செத்துப் போய்விடுவேன் என்பதாகவே தோன்றுகிறது
வாழ விரும்புகிறேன் நான் – மங்கை ஒருத்தி என்
வாழ்வில் ஊடுறுவ விரும்புகிறேன் !

163
தலைக்கவசம் போன்று அவளது தலை அணி
வனப்பாய் வைக்கிறது அழகிய வதனத்தை
ஒளியை எதிரொளிக்கும் அவளது கருங்கூந்தல்
‘டமாஸ்கஸ்’ கத்தி போல் தொங்குகிறது தலையின் மேல் !

164
என்ன நினைக்கிறாய் அவளைப் பற்றி ?
எரிச்சல் படுவார்கள்- பின்னர் வலை வீசுவார்கள்
தசை மூடியிருக்கும் உந்தன் ஆன்மாவோ
நொடித்தே போனது பித்துப் பிடித்து !

165
என்ன நினைக்கிறாய் இவளைப் பற்றி ?
சே… அது ஒரு ஈன ஜன்மம் ! அணிவதைப் பார் சிவப்புக் காலணி
உதடு முழுக்க சிவப்புச் சாயம்- முகமோ
வெளுத்துப் பாரித்த வைக்கோல் போல !

166
பின்னர் கதறியது துயறுற்ற இதயம்
நாசமாய்ப் போனவளே நாசமாய்ப்- போனவளே!
அதிகம் சபிக்கப்பட்டது இருவருள் யாரெனத்
தெரியாதையா எந்தனுக்கு !


ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Empty Re: ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்

Post by சிவா Sun Nov 28, 2010 9:45 pm

XXXIV -

167
யாருக்குத் துணிச்சல் உண்டு ? நான்
துயரத்தில் உழல்வதாய் வாய் விட்டுச் சொல்ல!
இடியும் மின்னலும் முடியும் போது
துயரம் காக்க நேரம் வருமெனக்கு !

168
எனக்குத் தெரிந்த எல்லாத் துயர்களிலும்
மிகவும் உயர்ந்தது பேசப்படவில்லை
மனிதர்களைப் பிடித்து அடிமையாய் வைப்பதே
படு கேவலமான உலகத் துயரம் !

169
ஏற வேண்டிய குன்றுகள் எத்தனையோ உள்ளதின்னும்
உயரமான சிகரங்களில் நான் ஏறியாக வேண்டும்
பின்னர் யோசிப்போம் எனது ஆன்மாவே-இளமையிலேயே
சாக வேண்டும் நீயெனத் திட்டமிட்டது யார் என்று ?


- XXXV -

170
உனது வாள் எனது இதயத்தில் ஆழமாய்ப் பாய்ந்தால்
என்னதான் நேர்ந்து விடும்? போனால் போகட்டும்-
உனது வாளினைவிட வலிமையானதாம்
எனது கவிதைகள் என்னிடம் உண்டு !

171
வானினைக் கவிந்து விடும் எந்தன் சோகம்
கடலினை வற்ற வைக்கும் எந்தன் சோகம்
இருந்த போதிலுமென்ன ? வேதனையென்னும் சிறகுடன்
பிறந்த எந்தன் கவிதைகள் அளிக்கும் ஆறுதல் !

172
சதையின் பயன்கள் மேலோட்டமானவையானாலும்
சதையைக் கொண்டு ஒருவர் மலரை உருவாக்கலாம்
சதையும் காதலியின் நேசமும் இளமையும் ஆயின்
சுவர்க்கமும் கிட்டும் ஓர் மதலையும் பிறக்கும் !

173
சதையின் பயன்கள் அசிங்கமானவை
சதை கொண்டுதான் உருவாகிறது தேள்
ரோசாவை உதிர வைக்கும் புழுவும்
பயம் காட்டி மிரட்டும் ஆந்தையும் கூட ! ( தேள் :காமத்தின் குறியீடு )


XXXVII -

174
இங்கே பார் பெண்ணே எனது இதயத்தை
விசையூட்டு அதனை – உன்னால் முடியுமது
எவ்வளவு விசாலமாய் இருக்கிறதோ இதயம்
அவ்வளவு அதிகமாய் விசையூட்ட வேண்டும் !

175
நொந்து போன ஆன்மாவுக்கு……
.எந்தன் விந்தை இதயத்தில் , நான் கண்டு கொண்டேன்
காயத்தின் ஆழம் கூடக் கூட
கலையின் வெளிப்பாடும் கூடும் !


XXXVIII -

176
கொடுங்கோலர்கள் பற்றி ? நல்லது
நிறையவே சொல்வோம் கொடுங்கோலர் பற்றி
அடிமையின் சினமுற்ற கரங்களைக் கொண்டு
சூடு போடு அந்த அவமானத்தின் மீது !

177
தவறுகள் பற்றி ? நல்லது
தவறுகள் பற்றி நிறையவே சொல்வோம்
மலைக்குகைகளிலும் இருண்ட முட்டுகளிலும்
என்ன இருக்கிறது மிரள்வதற்கு ? எல்லாப் பயமும்
கொடுங்கோலர் பற்றியும் தவறுகள் பற்றியும் தான் !

178
பெண்கள் பற்றி ? பெண்கள் பற்றியா ?
அவர்கள் கடியால் நீ…சாவாயாயினும்- உன்
வாழ்நாள் முழுவதும் பாழானாலும்
அவதூறு பேசாதே பெண்கள் பற்றி !


XXXIX -

179
இருக்கிறது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு வெள்ளை ரோஜா
ஜூலையாயினும் சரி , ஜனவரி ஆயினும் சரி
உண்மையான நேசக்கரத்தை நீட்டுமது எந்தனுக்கு
நல்ல நண்பனுக்குத் தர வேண்டும் -நான் அந்த ரோஜாவை!

180
தாக்கும் அந்தக் கொடியவனுக்கு – நான்
வாழும் இதயத்தை உடைப்பவனுக்கு
நான் தர மாட்டேன் இலையையோ முட்களையோ
அவனுக்கும் கூட வைத்திருக்கிறேன் ஒரு வெள்ளை ரோஜா !

181
எனது நண்பனை வரைகிறான் அந்தக் கலைஞன்
பொன் நிறத்திலும் திடந்தோளுடனும் அவனது தேவதைகள்
சுட்டெரிக்கும் சூரியன் ஜொலிக்கிறது சுற்றிலும்
மேகங்களில் சாய்ந்து அவர்கள் தொழும் போது !

182
என்னைத் தீட்டு உனது உன்னதப் படைப்பாற்றல் கொண்டு
தேவதைகளின் மென்மையும் அச்சமும் கொண்டு
பரிசளிப்பேன் உனக்கு இரட்டை அடுக்கினிலோர்
செக்கச்சிவந்த சிவப்பு மலர்ச் செண்டு !


ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 2 Empty Re: ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum