ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசூர் வம்சம் (நாவல்)

Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

Go down

அரசூர் வம்சம் (நாவல்) Empty அரசூர் வம்சம் (நாவல்)

Post by சிவா Sat Jul 11, 2009 12:00 pm

[You must be registered and logged in to see this image.]
அரசூர் வம்சம் - இரா முருகன்


பாயிரம்

அரசூர் பற்றி எழுது.

முன்னோர்கள் சொன்னார்கள்.

அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.

அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.

அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.

அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.

குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.

எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.

வாசலில் செருப்புச் சத்தம்.

திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.

முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.

எழுது.

பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.

என்ன எழுதட்டும் ?

இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.

பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.

எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.

ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.

முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.

அரசூரும் இருக்கிறது.

ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.

இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.

எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.

நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.

பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.

அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.

கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.

வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.

மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.

இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?

இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசூர் வம்சம் (நாவல்) Empty Re: அரசூர் வம்சம் (நாவல்)

Post by சிவா Sat Jul 11, 2009 12:00 pm

அத்தியாயம் ஒன்று

குளிக்கும்போது எல்லோரும் பார்க்கிறார்கள்.

ராணி சொன்னாள்.

ராஜா பல்லாங்குழிப் பலகையில் சோழிகளை நிறைத்தபடி நிமிர்ந்து பார்த்தார்.

அழகான ராணி. இளவயசு கடந்து கொண்டிருக்கிறது. முலைகள் இறுக்கம் தளர்ந்து தொங்க ஆரம்பித்து விட்டன. அரைக்கட்டு பெருத்துக் கொண்டு வருகிறது.

ஆனாலும் ராணி. ஐம்பதுகளின் அந்தப் பக்கம் இருக்கும் தன்னோடு ஒப்பிட்டால் இன்னும் சின்னஞ் சிறிசு தான்.

அவள் குளிக்கும்போது ஏன் பார்க்க வேண்டும் ?

தான் இதுவரை அவளைக் குளியலறையில் கதவைத் திறந்து போய் ஒரு தடவை கூடப் பார்த்தது இல்லை என்பது நினைவுக்கு வரச் சோழிகளைத் தரையில் பரத்தி வைத்தார் ராஜா.

அதில் ஒன்று உருண்டு வாசலுக்கு ஓட ஆரம்பித்தது.

முன்னோர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சோழிக்குள் அவர்களில் யாரோதான்.

ராஜாவுக்கு இந்தக் குறுக்கீடு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அந்தரங்கமாகப் புருஷனும் பெண்சாதியும் கதைத்துக் கொண்டிருக்கும்போது முன்னோர்கள், பின்னோர்கள், அரண்மனை ஜோசியன், மிளகாய்மண்டிக்காரன், சேடிப்பெண் யாரும் வருவது முறையானதில்லை.

பின்னோர்கள் சொன்னால் கேட்பார்கள். உடனே புரிந்து கொண்டு அவர்கள் காலத்துக்குத் திரும்பிப் போய்விடுவார்கள்.

முன்னோர்கள் விஷயத்தில் இது எடுபடாது. அவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பவர்கள். எந்த நிமிடமும் எங்கேயும் நுழைந்து அதிகாரமாக ஆலோசனை சொல்லி, பயமுறுத்தி, நம்பிக்கை அளித்து வழி நடத்திப் போக வேண்டும் என்று நினைப்பவர்கள்.

ராணி குளிப்பதை யாரோ பார்த்தாலும் அவர்களுக்கு ஒன்றும் இல்லை. ஏதோ தலை போகிற விஷயம் இருப்பதாக வெள்ளைச் சோழியில் புகுந்துகொண்டு அறிவிக்கிறார்கள்.

ராணி வாசலுக்கு உருண்ட சோழியைக் காலால் தடுத்து நிறுத்தினாள். அதை அப்படியே வலது கால் கட்டை விரலுக்குக் கீழே மிதித்தபடி திரும்பவும் சொன்னாள்.

நான் அரண்மனைக் குளத்தில் குளிக்கும்போது தினமும் மேலே இருந்து பார்க்கிறார்கள்.

ராஜா அவள் காட்டிய திசையில் பார்த்தார்.

வடக்கில் பெரிதாக எழும்பியிருந்த கட்டிடம் ஜன்னல் வழியே தெரிந்தது.

கடல் கடந்து போய் புகையிலை விற்றுப் பிழைத்துக் கை நிறையப் பணத்தோடு திரும்பி வந்த யாரோ அங்கே மனையை வளைத்துப் போட்டுப் பெரிய வீடாக எழுப்பி இருக்கிறார்கள்.

நாலு மாடி. ஏகப்பட்ட அறைகள். தோட்டம். எப்போதும் ஒப்பாரிப் பாடல்களை மட்டும் பாடும் கிராமபோன் பெட்டி.

ராஜாவை விடப் பணத்தில் கொழுத்தவர்கள். செல்வாக்கும் கூடியிருப்பவர்கள். ராஜாவிடம் இல்லாத கிராமபோன் பெட்டி அவர்களிடம் உண்டு. அந்த ஒப்பாரிப் பாடல்கள் உள்ளத்தை உருக்குகிறவை. எத்தனையோ முறை ராஜாவே ஜன்னல் பக்கம் அவற்றில் மனதைப் பறிகொடுத்து நின்றிருக்கிறார்.

ஆனாலும் கிராமபோன் பெட்டி இருந்தால் ராஜாவுக்குச் சமானமாகி விடவோ ராஜாவை மிஞ்சிவிடவோ முடியுமா என்ன ?

ராணி சோழியைக் காதுக்கு அருகில் வைத்துக் கொண்டு கேட்டாள்.

முன்னோர்கள் அவளோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

காலில் போட்டு மிதித்தாலும், அவளிடம் ஏனோ அவர்கள் கோபப்படுவதில்லை. முன்னோர்களுக்கும் பிரியமானவள் ராணிதான். அவர்களும் அவள் குளிக்கும்போது பார்க்கிறார்களோ ?

இல்லை என்றாள் ராணி. அவர்கள் எல்லாம் என் முப்பாட்டன், அவனுக்கும் முந்திய தலைமுறைக்காரர்கள். என்னை ஒரு குழந்தையாகப் பாவிக்கிறவர்கள். பக்கத்து வீட்டு புகையிலைக் காரர்கள் போல் இளவயசில் அவர்களுக்குப் பிள்ளைகள் கிடையாது.

ஆக, புகையிலைக்கார வீட்டுப் பிள்ளைகள் ராணி குளிக்கும்போது மாடியில் ஏறிப் பார்க்கிறார்கள்.

பிள்ளைகள் தானே. கவலை எதற்குப் படுகிறாய் ? மேலே இருந்து கல்லை, மரத் துண்டை ஏதாவது மேலே விட்டெறிகிறார்களா ?

ராஜாவுக்குக் குழந்தைகள் இல்லாவிட்டாலும் குழந்தைகளின் குறும்பும் விளையாட்டும் புரியும்.

அவர் மாதம் ஒருதடவை வெள்ளைக் குதிரை சாரட்டில் நகர் வலம் போகிறபோது வீட்டு வாசலில் நின்று சிறுநீர் கழித்தபடி சிரிக்கும் சிறுவர்களை அறிவார்.

பெரியவர்களும் மதிப்பதில்லைதான். வெற்றிலை போட்டபடியோ, வீட்டுக்குள் மனைவியை இறுக்க அணைத்துக்கொண்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபடியோ, சமைக்க மீனை வாசலில் உட்கார்ந்து சுத்தம் செய்து கொடுத்தபடியோ, எண்ணெய்க் குளியலுக்குத் தயாராக கெளபீனம் அணிந்து திண்ணையில் உட்கார்ந்தபடியோ ஆண்பிரஜைகள் தட்டுப்படுவது வழக்கம்.

பெண்களோ, அழுக்குத் துணிகளைத் துவைக்க எடுத்து ஆற்றங்கரைக்கு நடந்தபடியும், தூரம் குளித்து வந்த சலிப்பான முகத்தோடு கையில் குழம்புக்குக் கரைக்க எடுத்த புளியுருண்டையுடனும், ஒருவருக்கு ஒருவர் தலையில் பேன் பார்த்துத் தரையில் நசுக்கியபடியும் இருப்பார்கள்.

தான் பிரஜைகளால் மதிக்கப்படுகிற ராஜா இல்லை என்பது ராஜாவுக்குத் தெரியும்.

ராஜா, ராணி எல்லாம் ஒரு வசதிக்கு வைத்துக் கொண்ட பட்டம் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

துரைத்தனத்தார் பார்த்துக் கொடுக்கிற பட்டங்கள் ஜமீந்தார், மிட்டாதார் என்று மட்டும் இருக்கும். சுற்றி இருப்பவர்கள் ராஜா என்று விளிக்க ஆரம்பித்து அது தலைமுறைக்கும் தொடரும்.

தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ராஜாவோடு அது நின்று போகலாம். சந்ததி இல்லாத ராஜா என்பதால் அது சாத்தியம் தான்.

ராணியைக் குளிக்கும்போது பார்த்தால் சந்ததி இல்லாமல் வம்சம் நின்று போகாது என்று ராஜாவுக்குப் பட்டது.

அதை அப்புறம் வைத்துக் கொள்ளலாம். புகையிலைக்கார வீட்டுப் பிள்ளைகள் விஷயத்தில் என்ன செய்யப் போகிறீர்கள் ? கட்டையாக மீசை வைத்த தடிதடியான ஆண்கள் எல்லோரும்.

ராணி கண்டிப்போடு சொன்னாள்.


Last edited by சிவா on Sat Jul 11, 2009 12:02 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசூர் வம்சம் (நாவல்) Empty Re: அரசூர் வம்சம் (நாவல்)

Post by சிவா Sat Jul 11, 2009 12:01 pm

அவள் கையில் இருந்து துள்ளி உருண்ட சோழி திரும்ப வாசல் பக்கம் நகர ஆரம்பித்தது. ஏதோ ஒப்பாரிப் பாடல் சன்னமாக அதில் இருந்து வந்தது. புகையிலைக்கார வீட்டு கிராமபோன் ரிக்கார்டுகள் முன்னோரையும் பாதித்திருக்க வேண்டும்.

நான் நாளைக்கு காரியஸ்தனை அனுப்பி விசாரிக்கிறேன். நீ நாளைக்குக் குளிக்க வேண்டாம்.

ராஜா முக்கியமான முடிவை அறிவித்த திருப்தி முகத்தில் தெரிய அவளைப் பார்த்துக் கனிவாகச் சிரித்தார்.

விசாரிப்பு. வெறும் விசாரிப்பு. அதுவும் கிழட்டுக் காரியஸ்தனை அனுப்பி.

ராணி எரிச்சல் அடங்காமல் பார்த்தாள்.

ஒரு ராஜாவாகக் கட்டளை போட்டு அந்த வீட்டை இடித்துப் போடச் சொல்லுங்கள் உடனே.

கோபத்தில் குரல் கிறீச்சிடக் கத்தினாள்.

ராஜா அவள் பக்கத்தில் போய் ஆதரவாக அவள் தலையைத் தடவினார்.

ஈரமான தலைமுடி. சிகைக்காயும் வாசனைப் பொடியுமாகத் தொடுவதற்கு இதமாக இருந்தது அவளுடைய முடி. இப்படியே இவளை உள்ளே அழைத்துப் போய்க் கூடினால் வம்சம் விருத்தியாகக் கூடும்.

காலை நேரத்தில் சம்போகத்தில் ஈடுபட்டால் முன்னோர்கள் குறைச்சல் பட்டுக் கொள்வார்கள். அததுக்கு நேரம் இருக்கு. நடுராத்திரியில் வெளிக்குப் போவாயா என்று கடிந்து கொள்வார்கள்.

காலைநேரக் கலவி சுகாதாரத்துக்குக் கேடு வரவழைக்கும் என்று துரைத்தனத்தாரும் சேர்ந்து சொல்வார்கள். மானியத்தை நிறுத்தி வைப்பார்கள்.

மனைவியோடு சுகிக்கக் கூட இன்னொருத்தரிடம் அனுமதி வாங்க வேண்டுமா என்ற சலிப்போடு ராஜா சோழியை ஓரமாக வீசினார். போகம் போகம் என்று சொல்லிக்கொண்டு அது உருண்டது. இதோ இப்பவே என்றார் ராஜா.

ஆனால் காலைச் சாப்பாடு இன்னும் முடிந்த பாடில்லை. வெறும் வயிற்றோடு அதெல்லாம் செய்ய முடியாது. சமையல்காரன் இன்றைக்குத் தாமதாமாகத்தான் வந்தான். கேப்பைக் கிளி கிண்ட ஆரம்பித்து இன்னும் முடித்த பாடாக இல்லை.

ராணி தலையில் சீயக்காய் இன்னும் போகாமல் நறநறத்தது. தலையில் இருந்து அவர் கையைத் தட்டி விட்டாள் அவள். கழுத்தின் ஊர்ந்த பேனை நசுக்கி அரண்மனைச் சுவரில் கோடு கிழித்தாள்.

காரியஸ்தன் வேண்டாம் என்றால் நானே போய் விசாரிக்கிறேன்.

ராஜா கேப்பைக் களி நினைவோடு நாவில் எச்சில் ஊறச் சொன்னார்.

தானே போய் விசாரிக்க, பக்கத்து வீட்டுப் படி ஏற ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த கிராமபோன் பெட்டியைப் பக்கத்தில் இருந்து பார்க்கலாம். அவர் போன நேரத்தில் ஏதாவது ஒப்பாரிப் பாடலை அண்டை வீட்டுக்காரர்கள் வைத்துக் கொண்டிருந்தால் அதையும் பக்கத்தில் இருந்து கேட்கலாம்.

நீங்கள் ராஜா. மகாராஜா. அவர்கள் வெறும் பிரஜைகள். ஒரு காசுக்கும் இரண்டு காசுக்கும் புகையிலை விற்றுச் செங்கல் செங்கலாகச் சேர்த்து வீடு கட்டி சீவித்துக் கிடப்பவர்கள். நீங்கள் அந்த வீட்டுப்படி எல்லாம் ஏற வேண்டாம். யாரையாவது அனுப்பி அந்த வீட்டு சொந்தக்காரனைச் சபைக்கு வரவழைத்து உடனே வீட்டைக் காலி செய்யச் சொல்லி உத்தரவு போடுங்கள்.

ராணி நிலைவாசலில் ஒரு காலும் உள்ளே ஒரு காலுமாக அறிவித்துக் கொண்டிருக்க, சமையல்காரன் கேப்பைக்களி நிறைத்த பித்தளைத் தட்டும், மண் சட்டியில் புளிக்குழம்புமாக உள்ளே நுழைந்தான்.

சபை கூட்டுவது, விசாரணை செய்வது போன்ற சமாச்சாரம் எல்லாம் அப்புறம் நடத்திக்கொள்ளலாம் என்று ராஜாவுக்குத் தோன்றியது. அதற்கெல்லாம் செலவு பிடிக்கும். துரைத்தனத்தார் அனுமதிப்பார்களோ என்னமோ.

இப்போதைக்குச் செய்யக் கூடியது, ராணி ஒரு நாளைக்குக் குளியலை ஒத்தி வைப்பது. மற்றும் கேப்பைக் களி சாப்பிடுவது. ராணியும் இங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

அவள் வேண்டாம் என்பது போல் தலையை அசைத்து திரும்ப நடந்து போனாள்.

சோழிகள் தாமே நகர்ந்து பல்லாங்குழிப் பலகையில் இரு வசத்துக் குழிகளையும் நிறைத்தன. நகர்ந்து வாசலுக்குப் போன சோழி தயங்கி நின்று திரும்பி அவசரமாக வந்தது.

முன்னோர்கள் பல்லாங்குழி விளையாட ஆரம்பித்து விட்டார்கள். ராணியும் போய் விட்டாள். எந்த இடையூறும் இல்லாமல் கம்பங்களி சாப்பிடலாம்.

ராஜாவுக்கு ஆசுவாசமாக இருந்தது.

இப்போது பக்கத்துப் புகையிலைக்கார வீட்டு கிராமபோனில் நல்ல ஒப்பாரிப் பாடலாகச் சுழல விட்டால் பரமானந்தமாக இருக்கும்.

ருசியாகச் சாப்பிட்டுக் கொண்டே துயரத்தைப் பொழியும் இசையைக் கேட்பது போல் சந்தோஷமான காரியம் எதுவும் கிடையாது.

புகையிலைக் காரவீட்டில் கட்டை மீசை வைத்த தடிதடியான ஆண்பிள்ளைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள். அவர்களில் கிராமபோன் பெட்டியை இயக்குகிறவர் யார் ?

உருக்கமான, காலத்தை உறைய வைக்கக் கூடிய ஒப்பாரிப் பாடல்களை விடவா இளமை கழிந்து கொண்டிருக்கும் ராணியில் சீயக்காய் வாடையடிக்கும் நிர்வாணம் மனதைக் கவரக் கூடியது ?

புகையிலைக்கார வீட்டில் கம்பங்களி செய்வார்களோ என்னமோ ? மூன்று வேளையும் அரிசிச் சோறு சாப்பிட்டால் மாடி ஏறி பக்கத்து வீட்டுக் குளியல் அறையில் கண்ணை ஓட்டச் சொல்லுமோ.

ராஜா புளிக்குழம்பை மண்சட்டியில் இருந்து எடுத்து ஊற்றிக் கொண்டிருந்தபோது வாசலில் யானை பிளிறும் சத்தம்.

பனியன் சகோதரர்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசூர் வம்சம் (நாவல்) Empty Re: அரசூர் வம்சம் (நாவல்)

Post by சிவா Sat Jul 11, 2009 12:03 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் இரண்டு



பனியன் சகோதரர்கள் புது மோஸ்தரில் குப்பாயம் உடுத்தி இருந்தார்கள். அரையில் நாலு முழ வேட்டி.

அது மட்டும் ராஜாவுக்குப் பழக்கமான ஒன்று. எல்லாப் பிரஜைகளும் வேட்டி தான் உடுத்தி இருக்கிறார்கள். அதாவது ஆண்கள். மலையாளக் கரையில் பெண்களும் அந்த வண்ணமே உடுத்தி நடந்து போவதாகப் பயணம் போய் வந்த காரியஸ்தன் ஒருதடவை சொன்னான்.

அதுமட்டுமில்லை. அவர்கள் மேலேயும் ஒன்றும் அணிவதில்லையாம். அதாவது பெரும்பான்மையான பெண் பிரஜைகள். உடுத்தினால் வரி கட்ட வேண்டுமாம்.

அநியாயம் என்று ராணி சொன்னபோது ராஜா உரக்க ஆமோதித்தாலும் மலையாளக் கரைக்கு ஒரு தடவையாவது போய்ப் பார்த்துவிட்டு வர உத்தேசித்திருந்தார்.

ஆனால் அவரால் நகர முடியாதபடிக்கு இடது கால் கொஞ்சம் பாரிச வாயு பாதித்துக் கிடக்கிறது.

ரதங்கள் எல்லாம் ராஜாவுக்கு இரண்டு தலைமுறைக்கு முன்னரே இல்லாமல் போய்விட்டன. குதிரை பூட்டிய வண்டிகளும் மாடு பூட்டிய வண்டிகளும் நிறையப் புழக்கத்தில் வந்திருக்கின்றன.

அதெல்லாம் சாமானியப் பிரஜைகள் போக வர. ராஜா மரியாதை நிமித்தம் அதிலெல்லாம் பிரயாணம் செய்ய முடியாது.

பல்லக்கில் போகலாம் தான். ஆனால் தொடர்ந்து தூக்கிக் கொண்டு போக வலுவாக நாலு பேர் வேண்டும். அவர்கள் களைப்பு அடைந்தால் நகரச் சொல்லி விட்டுச் சுமக்க இன்னம் கொஞ்சம் ஆள்படை கூடவே வரவேண்டும்.

எல்லாவற்றுக்கும் காசு செலவாகும். துரைத்தனத்தார் அனுமதித்த மானியத் தொகையில் ஊருக்குள் வேண்டுமானல் மாதத்துக்கு ஒருமுறை நவமிநாள் பகலிலோ பவுர்ணமி ராத்திரியிலோ பல்லக்கில் ஊர்வலம் போய்வரலாம்.

போயிருக்கிறார் ராஜா.

போனமாதம் நண்டுக் குழம்பும் வான்கோழிக் கறியும் வரகரிசியுமாகச் சாப்பிட்டுவிட்டு வயிறு நிறைந்த திருப்தியோடு பல்லக்கில் ஏறினார். பகலில் பவனி வருவதை விட இது வசதியாக இருந்தது. சுட்டெரிக்கும் வெய்யில் கிடையாது. உடம்பு முழுக்க எண்ணெய் தேய்த்து ஊற வைத்தபடி திண்ணையில் உட்கார்ந்திருக்கும் பிரஜைகள் கண்ணில் பட மாட்டார்கள் ராத்திரியில்.

பந்தம் கொளுத்திப் பிடித்துக் கொண்டு நாலு பேர் முன்னால் நடக்க, தண்டோராவோடு ஒருவன் ஓட்டமும் நடையுமாக அறிவித்துக் கொண்டே போக, நாலு மல்லர்கள் பல்லக்கைச் சுமந்து கொண்டு தடார் தடார் என்று அடி வைத்து நடந்தபோது ராஜாவுக்கு உண்மையிலேயே பெருமையாகத் தான் இருந்தது.

பக்கத்து வீட்டு கிராமபோனில் யாரோ உரக்க ஒப்பாரிப் பாடல் வைத்துக் கொண்டிருந்தார்கள். இதுவரை கேட்காத புது பாஷையில் இருந்தாலும் அந்த துக்கம் ராஜா மனதுக்கு இதமாக இருந்தது. நண்டுக் கறியோடு இதை ரசித்திருக்க வேண்டும். முடியாமல் போய்விட்டது.

எல்லாவற்றுக்கும் யோகம் வேணும். கிராமபோன் வாங்கக் கூடக் கஜானாவில் கூடுதல் பணம் இல்லை. துரைத்தனம் கொடுக்கும் பணத்தில் ஆட்களை வேண்டுமானால் அமர்த்தி ஒரு நாள் முழுக்க ஒப்பாரி வைக்கச் சொல்லலாம்.

என்ன இருந்தாலும் இயந்திரம் எத்தனை தடவை இயக்கினாலும் ஒரே தரத்தில் சோகத்தைப் பொழிவது போல், சொற்பமான காசும் வெற்றிலை பாக்கும் வைத்து அழைத்து வந்த ஒப்பாரிக்காரர்கள் செய்ய முடியாது. நடுவில் குரல் தளர்ந்து போகும். இருமுவார்கள். புகையிலை போட நிறுத்துவார்கள். ஒண்ணுக்குப் போய்விட்டு வந்து இடுப்பில் சொரிந்தபடி, விட்ட இடத்தில் தொடரும் போது உசிரில்லாத குரலாக வரும்.

மலையாளக் கரைபோல் மேல் துணி உடுத்த வரி போட்டால் என்ன என்று ராஜா யோசித்தார். எல்லோருக்கும் முன்னால் ராணியே மேல் துணியைக் களைந்துவிட்டு மேல் மாடியில் போய் நின்று வரியை ரத்து செய்யச் சொல்லிக் குரல் கொடுத்துப் போராட்டம் நடத்தலாம்.

அவள் துரைத்தனத்துக்கு எப்போதும் எதிரிடையான பாளையக்கார இனத்திலிருந்து வந்தவள் என்பதால் செய்யக்கூடியவள் தான்.

ராஜா இதையெல்லாம் யோசித்துப் பல்லக்கில் போகும்போது சாப்பாடும், கேட்ட சுகமான ஒப்பாரிப் பாட்டும், சாப்பிட்ட கடல் நண்டுமாக தூங்கு தூங்கு என்று கண்ணைச் சுழற்ற, அங்கங்கே கூடி நின்று சிறுநீர் கழித்துக் கொண்டும் ஊர் வம்பு பேசிக் கொண்டும் வறுத்த கடலை கொறித்துக் கொண்டும் இருந்த பிரஜைகளுக்குக் கைகாட்டக் கூட முடியாமல் அசதி ஏற்பட்டு, பல்லக்கிலேயே படுத்து நித்திரை போய்விட்டார்.

நாலு பேர் சுமக்க மல்லக்கப் படுத்தபடி ராஜாவை ஊர்வலமாகத் தொடர்ந்து கூட்டிப் போவது உசிதமானதில்லை என்று பட, காரியஸ்தன் பல்லக்குத் தூக்கிகளை விளித்து உடனே அரண்மனைக்கு ஓடச் சொன்னான்.

தீப்பந்தங்கள் பேயாட்டம் ஆடி அணைய, இருட்டில் இலுப்பெண்ணெய்ப் புகை வாடையும், பாதையில் மகிழம்பூ பூத்த வாசனையுமாக ராஜா அரண்மனைக்குத் திரும்பியபோது ராணி உரக்கக் கோபப்பட்டது இன்னமும் ராஜாவுக்கு நினைவு இருக்கிறது.

மலையாளக் கரைக்குப் பல்லக்கில் போய்வர முடியாவிட்டால் பரவாயில்லை. ஆஸ்டின் காரில் போய்வரலாம் என்று பனியன் சகோதரர்கள் தொடர்ந்து ஆசை காட்டுகிறார்கள்.

ராஜாவுக்குக் கிட்டத்தட்ட ஐம்பது வருடம் பிற்பட்டவர்கள். ராஜா காலத்திலேயே துரைத்தனத்தார் தேசத்தில் இந்தக் கார் என்ற நூதன வாகனம் வந்தாலும் அது இந்தப் பக்கம் புழக்கத்தில் வந்தது ராஜா காலத்துக்குப் பிறகுதான்.

யானை மாதிரிப் பிளிறிக் கொண்டு நாலு சக்கரத்தில் நகர்ந்து கொண்டு ஒரு ராட்சச இரும்பு யந்திரம். பக்கத்து வீட்டு ஒப்பாரிப் பாட்டுப் பெட்டியும் இது போல் தான் இருக்கும் என்று ராஜாவுக்குப் பட்டது.

அதன் பெயர் கிராமபோன் என்று சொன்னதும் பனியன் சகோதரர்கள் தான்.

கிராமபோனும் ராஜா காலத்துக்கு அப்புறம் தான் புழக்கத்தில் வந்தது. பனியன் சகோதரர்கள் தான் அதைப் பக்கத்து வீட்டுப் புகையிலைக் கடைக்காரர்களுக்கு வாங்கிக் கொடுத்ததாகச் சொன்னார்கள்.

ஆஸ்டின் காரில் எட்டில் ஒரு பங்கு இடத்தைக் கூட அடைத்துக் கொள்ளாத சாது யந்திரம் அது என்ற பனியன் சகோதரர்கள் ராஜாவுக்கும் ஒரு கிராமபோனும் கூடவே ஆஸ்டின் காரும் வாங்கித் தருவதாகச் சொன்னார்கள்.

பணம் ? பணம் இருந்தால் காலத்தில் முன்னாலும் பின்னாலும் போய் நினைத்ததை வாங்கி உபயோகித்துச் சுகித்து இருக்கலாம்.

பணத்துக்கு என்ன செய்யலாம் என்று முன்னோரை அழைத்துக் கேட்டபோது அவர்கள் அரண்மனை முற்றத்தில் ஒரு உச்சிவேளை நேரத்தில் புகைபோல் வந்து நிறைந்தார்கள்.

அது அவர்களுக்குத் திவசம் தரப் புரோகிதரை அழைத்து மந்திரம் ஓதவைத்த நேரம்.

அய்யரே நீர் தட்சிணை வாங்கிப் போய் அப்புறம் வாரும். நாங்கள் எங்கள் கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரனோடு பேசிக் கொண்டிருக்கிறோம்.

முன்னோர்கள் சொல்ல, அவர்கள் வேண்டாம் என்று மறுத்தாலும் பிண்டம் உருட்டி ராஜா கையில் கொடுத்து எள்ளோடு கலந்து முன்னோர்களுக்குப் போடச் சொன்னார் புரோகிதர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசூர் வம்சம் (நாவல்) Empty Re: அரசூர் வம்சம் (நாவல்)

Post by சிவா Sat Jul 11, 2009 12:04 pm

எள்ளு எல்லாம் ஒத்துக் கொள்கிறதில்லை. கோழியடித்து வைத்துக் கூப்பிட்டால் வேண்டாம் என்றா சொல்வோம் என்று முன்னோர்களில் ஒருத்தர் சொல்ல, அய்யருக்குக் கோபம் வந்து விட்டது.

நீங்கள் கடைத்தேற இதுதான் கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. வேண்டுமானால் வீட்டில் இருந்து புத்தகம் எடுத்து வந்து நிரூபிக்கிறேன்.

அய்யர் உணர்ச்சிவசப்பட, முன்னோர்கள் அவரைச் சமாதானப்படுத்தி, நாலு பூசணிக்காயும், வெங்காயமும், முட்டைக் கோஸும் உருளைக்கிழங்கும், புதுக் காய்கறியென்று பனியன் சகோதரகள் பின்னால் வரும் காலத்தில் இருந்து கொண்டு வந்து கொடுத்த நூர்க்கோலும் கூடவே நாலு பெரிய பணமுமாகக் கொடுத்து அனுப்பி வைக்கச் சொன்னார்கள் ராஜாவிடம்.

அய்யர் எள்ளும் தண்ணீரும் இரைத்துத் தருப்பையில் வைத்துப் பிண்டம் தருவதே முன்னோர்கள் கடைத்தேற உகந்தது என்று இன்னொரு முறை உரக்க அறிவித்துவிட்டு யாரும் ஏதும் பேசாமல் போகக் காய்கறிகளைச் சுமந்து கொண்டு போனதும் முன்னோர்கள் ராஜாவிடம் காசு விஷயத்தில் இன்னும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியதின் அவசியம் குறித்துப் பொறுமையாக எடுத்துச் சொன்னார்க்ள்.

கிராமபோனும் ஆஸ்டின் காரும் உனக்குத் தேவையில்லாத விஷயம். மலையாளக் கரையில் போய் முலை தெரியக் காட்டி நடக்கிற சுந்தரிகளைப் பார்ப்பதும் தான். அவர்கள் எல்லோருக்கும் கண்ணுக்குள்ளும் மனதிலும் உறைந்து கிடக்கும் அவமானமும் ஆத்திரமும் உனக்குத் தெரியாது. அது உன்னைச் சுட்டுப் போடும். உடம்பு பஸ்பமாகிப் போவாய்.

முன்னோர்கள் எச்சரிக்கை செய்தபோது பனியன் சகோதர்கள் பற்றி ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லியும் எச்சரிக்கை செய்தார்கள்.

அவர்கள் பின்னால் வரும் காலத்தில் இருந்து புறப்பட்டு வருகிறவர்கள் நம்ப வேண்டாம்.

எனக்கு முன்னால் ஏகப்பட்ட வருடம் முன் சுவாசித்து இருந்து இப்போது இல்லாமல் போன உங்களை நம்புகிறேனே. அதே போல் அவர்களையும் நம்பினால் என்ன ?

ராஜா எதிர்க் கேள்வி கேட்டார்.

கலி பெருகிக் கொண்டு போகிறது.

ஒற்றை வரியில் பதில் சொன்ன முன்னோர்கள் கலைந்து போனார்கள் அப்போது.

முன்னோர்களிடம் ரதம் கேட்கலாமா என்று ராஜா யோசித்தார். மலையாளக் கரைக்கே போகாதே என்று உத்தரவு போட்டவர்கள் ரதம் மட்டும் கொடுத்து விடுவார்களா என்ன என்று தோன்ற அந்த எண்ணத்தைக் கைவிட்டபோது பனியன் சகோதர்கள் மேல் திரும்ப நம்பிக்கை வந்தது.

அவர்களை அப்போதே அழைத்தார்.

அது எளிதான செயல். மனதில் நினைத்தால் போதும். செய்தி போய்ச் சேர்ந்து விடும் அவர்களுக்கு.

தூரம் தொலைவிலிருந்து கம்பி மூலம் சேதி அறிவிக்க ஒரு சாதனம் தங்கள் காலத்தில் இருப்பதாகவும் பனியன் சகோதரர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் ஊரெல்லாம் தோண்டி இரும்புக் கம்பம் நாட்ட வேண்டும் அது செயல்பட என்பதால் ராஜா அது வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

பணப் பற்றாக்குறைதான். வரிசையாகக் கம்பம் நாட்டிக் கம்பி இழுக்கப் பணம் கிடையாது. பிரஜைகளுக்கும் பணப் பற்றாக்குறை என்பதால் அப்படியே செய்து வைத்தாலும் கம்பத்தைப் பிடுங்கி விற்று அரிசி வாங்கி விடுவார்கள்.

அப்புறம்தான் பனியன் சகோதரர்கள் நினைத்த மாத்திரத்தில் அவர்களை அழைத்துப் பேச வழி சொன்னார்கள்.

ராஜா அழைத்தபோது அவர்கள் பூத்திருவிழாவுக்கு வசூல் செய்து கொண்டிருப்பதால் உடனே வரமுடியாது என்றார்கள்.

உள்ளூர் அம்மன் கோவிலில் ராஜா தான் பூத்திருவிழா வருடா வருடம் கொண்டாட ஏற்பாடு செய்கிறார். காளை வண்டிகளில் பெரிய மண் பானைகளில் மல்லிகைப் பூவும், சாமந்திப் பூவும், தாழம்பூவுமாக நிறைத்து எடுத்துப் போய் அம்மன் சிலைக்கு மேல் பூசாரி சொரியும் போது, ராஜாவும் ராணியும் சன்னிதானத்துக்கு வெளியே சேவித்தபடி நிற்க, வெளியே வேலிகாத்தான் செடிகளை வெட்டிக் களைந்த செம்மண் பொட்டலில் பிரஜைகள் கொண்டாட்டம் ஆரம்பமாக நிற்பார்கள்.

பூக் கொட்டிப் பூசை முடிந்த பிறகு ராஜா செலவில் பெரிய மண் குடங்களில் கள்ளு வந்து சேரும். ஒவ்வொரு பிரஜைக்கும் நாலு குவளைக்குக் குறையாமல் கிடைக்கும் அந்தக் கள்ளுக்கும் அதைத் தொடரும் ஆட்ட பாட்டத்துக்கும் கூட்டம் காத்துக் கிடக்கும்.

ராஜாவுக்கு அப்புறம் இன்னொரு ராஜா இல்லாமல் போனதால், தாங்கள் இரண்டு பேரும் ஊரில் முழுக்கத் திரிந்து பணம் வசூலித்துப் பூத்திருவிழா நடத்தி வருவதாகப் பனியன் சகோதரர்கள் சொன்னபோது ராஜாவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.

நாலு குடம் கள்ளு வேண்டுமானால் அனுப்பி வைக்கலாமா என்று கேட்டபோது அது நடக்கக் கூடிய காரியமில்லை என்று சொல்லி விட்டார்கள் பனியன் சகோதரகள்.

பனியன் சகோதரர்களை நம்பாதே என்று யாரும் கூப்பிடாமலே வந்து, ராணியோடு மதியம் பல்லாங்குழி விளையாடும்போது சோழியில் புகுந்துகொண்டு முன்னோர்கள் சொன்னதை ராணி ஆமோதித்தாள்.

இவர்கள் சூதுவாது மிகுந்த மனுஷர்கள். எச்சரிக்கையாக இருங்கள்.

அவளும் தான் சொன்னாள்.

ஆனாலும் பனியன் சகோதரர்கள் சொல்லியிருக்கிறார்கள். ராஜாவை மலையாளக் கரைக்கு ஆஸ்டின் கார் வாகனத்தில் அழைத்துப் போவதாக.

அதைப் பற்றிப் பேச இப்போது வந்திருக்கிறார்கள்.

ராஜா இடுப்பில் ஜரிகை வேட்டியை இறுக்கிக் கொண்டு எழுந்து முன்னறையைப் பார்த்தார்.

ராணி தூங்கிக் கொண்டிருக்க சேடிப்பெண் விசிறிக் கொண்டிருந்தாள்.

பனியன் சகோதரர்களோடு கதைத்து விட்டு சேடியோடு விளையாடலாம் என்று எண்ணம் வந்தது ராஜாவுக்கு.

இன்னும் கொஞ்ச நேரம் விசிறி ராணி சீக்கிரம் எழுந்துவிடாதபடி உறங்க வைக்கட்டும் அவள்.

அதற்குள் பனியன் சகோதரர்களோடு பேசி முடித்து விடலாம்.

ராஜா திருப்தியோடு வாயில் பாக்கை இட்டு மென்று கொண்டு வாசலுக்குப் போனார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசூர் வம்சம் (நாவல்) Empty Re: அரசூர் வம்சம் (நாவல்)

Post by சிவா Sat Jul 11, 2009 12:07 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் மூன்று

சுப்பிரமணிய அய்யர் வாசல் திண்ணைக்கு வந்தார்.

உள்ளே ஒரே புழுக்கம். வியர்வையும் மஞ்சளும் சந்தனமும் சிரிப்பும் கும்மாளமும் பாட்டுச் சத்தமுமாக இருக்கிறது.

பெண்டுகள். வீடு முழுக்க அவர்கள் தான்.

வீட்டில் விசேஷம் என்பதால் அல்லூர் அயலூரிரிலிருந்து உறவுக் காரப் பெண்களும் வந்திருக்கிறார்கள். எல்லா வயதிலும் பிராமண ஸ்திரிகள்.

அய்யர் மாடியை நிமிர்ந்து பார்த்தார். உள்ளே இருபது சிப்பம் புகையிலை அடைத்து வைத்திருக்கிறது. தனுஷ்கோடிக்கு காளை வண்டியில் எடுத்துப்போய் அங்கே இருந்து படகில் அனுப்ப வேண்டும். போன வாரமே சபேசய்யர் யாழ்ப்பாணத்திலிருந்து லிகிதம் அனுப்பி இருந்தார்.

ஒரு அறை தவிர மாடி முழுவதையும் காலையிலேயே பூட்டி மறைப்பாக பவானி ஜமுக்காளத்தையும் தொங்கவிட்டாகி விட்டது. இருந்தாலும் இழை போல் புகையிவை வாடை அதையும் கடந்து இறங்கி வருகிறது போல் சுப்பிரமணிய அய்யருக்குத் தோன்றியது.

பிராமணனுக்கு விதிக்கப்பட்ட தொழில் இல்லைதான் புகையிலை விற்பது. தர்ப்பைக் கட்டை நீர்க்காவி ஏறிய அங்கவஸ்திரத்தில் இடுக்கிக் கொண்டு அவன் வைதீகனாகத் வேகு வேகு என்று ஊரெல்லாம் நடந்து கணபதி ஹோமமும், அமாவாசை தர்ப்பணமும், ஆயுட்ஷேம ஹோமமும், ஹிரண்ய திவசமும் செய்துவைக்கக் கடமைப் பட்டவன். அதன்மூலம் லெளகீகர்களான கிரகஸ்தர்களை ஆசாரமாக ஜீவிக்கவும் அப்புறம் ரெளராவாதி நரகங்களில் போய் அடையாமல், வைதாரணி நதி வழியே பித்ருலோகம் பத்திரமாகப் போய்ச்சேர ஒத்தாசை பண்ண வேண்டியவன். இதற்கு என்று விதிக்கப்பட்ட தட்சணையை வைத்துத் தானும் கிரகஸ்தனாக ஜீவித்து, வம்சவிருத்தி பண்ணி, பித்ருக்களுக்கு எள்ளும் நீரும் இறைத்து இவனும் வைதாரணிக் கரைக்கு ஒதுங்க வேண்டியவன்.

ஒரு சின்னக் குடும்பத்தைச் சம்ரட்சிக்கத் தோதாக வைதீகத்துக்குத் தட்சணை வரும். குடுமியில் எள் இரைபட்டு மிச்சம் இருக்கும். திவசம் முடிந்து இடுப்புத் துண்டைத் தரையில் விரித்து கிரகஸ்தன் கும்பிட அந்தத் துண்டில் கால்பதித்து அசதியோடு நடக்கலாம். உங்களுக்கு ரொம்ப சிரமம் என்று அவன் உபசாரமாகச் சொல்வதை அப்பம் வடை அதிகம் சாப்பிட்ட ஏப்பத்தோடு ஏற்றுக் கொள்ளலாம். வாழைக்காயையும் பூசணிக்காயையும் தலையிலும், தானமாக வந்த அரிசியை மேல்துண்டில் தர்ப்பையோடு கட்டித் தோளிலும் தொங்கவிட்டுக் கொண்டு மத்தியானத் தூக்கத்துக்கு வீட்டுக்கு நடக்கலாம்.

அரிசியைக் கலைத்துப் பரத்தி எள்ளை எடுத்து விட்டோ, குழந்தைகள் பசியென்றால் அப்படியே எள் மணக்கவோ சாதம் வட்டித்து ரசத்தோடு இலை இலையாக வார்க்க சோனியான ஒரு பிராமண ஸ்திரி நூல் புடவையும் எண்ணெய் ஏறிய மூக்குத்தியுமாக அகத்தில் காத்திருப்பாள்.

அரிசியும் வாழைக்காயும் சுமக்கிற காரியம் ஜன்மத்துக்குத் தொடரும் புரோகித ஜீவிதம் தான் உனக்கு விதிக்கப்பட்டது என்று சுப்பிரமணிய அய்யரிடம் பித்ருக்கள் கூடச் சொன்னது கிடையாது. வாசித்த கிரந்தங்களில் இருந்து மேலோட்டமாகக் கிரகித்துக் கொண்டது அது.

பித்ருக்கள் கூட மூன்று தலைமுறையாகத் தர்ப்பைக் கட்டைப் பிடிக்கவில்லை. அவர்கள் சத்திரத்தில் சமையல் கரண்டி பிடித்து பெரிய கோடியடுப்புக்களில் சாதம் வட்டித்தார்கள். கிராமக் கணக்கு வழக்கை நிர்வகித்தார்கள். சிலர் படிக்கப் போனார்கள்.

சுப்பிரமணிய அய்யரின் தகப்பனார் சஙகர அய்யர் புகையிலை விற்கப் போனார்.

படகேறி யாழ்ப்பாணத்துக்கும் அப்புறம் அங்கே இருந்து தேயிலைத் தோட்டங்கள் இருந்த மலைப்பகுதிக்கும்.

தர்ப்பைக் கட்டில் வராத பணம் புகையிலையில் கொட்டியது. எண்ணெய் காயவைத்த இருப்புச் சட்டிப் பக்கம் வியர்த்து விறுத்துக் கரண்டி பிடிப்பதில் இருக்கும் சிரமம் இல்லை. இலை போட நேரமாச்சு என்று கத்தரிக்காய் வதக்கும்போது யாரும் உக்கிராணத் தரைப் பிசுபிசுப்பில் கால் மாற்றியபடி பின்னாலேயே நின்று கழுத்தறுக்க மாட்டார்கள். கை தளராமல் திரட்டுப்பால் கிண்டி எடுத்து ஓலைப்பாயில் பரத்தி சுடச்சுட இலையில் வார்க்க ஓட வேண்டியதில்லை.

காறுபாறு வேலையின் ஜாக்கிரதையும் பயமும் கூட இல்லை தான். மூணே முக்கால் பணம் கிஸ்தி பாக்கி என்று யார் வீட்டு முன்னாலும் விடிகாலையில் போய் நிற்க வேண்டாம். கண்மாய்க் கரையில் குந்தி இருந்து வெளிக்குப் போகிறவனின் பக்கத்தில் போய் சகஜமாக வரிபபாக்கி கேட்க வேண்டாம். அய்யரே சொம்பைப் பிடிச்சு அப்படியே தூக்கினாப்பலே விடும். கழுவிக்கிட்டு வந்து எடுத்துத் தரேன் என்று மேற்படியான் கேட்டுக்கொண்டபடி குண்டி கழுவ ஒத்தாசை செய்து கஜானாவுக்குக் காசு சேர்க்க வேண்டாம்.

மூக்கில் ஏறி வயிற்றைப் புரட்டும் புகையிலை வாசத்துக்கு நடுவே நாள் முழுக்க இருக்கப் பழகி விட்டால் அது பிடித்துப் போகும். காசு கொடுக்கிற தெய்வமாக அந்தக் கருப்புச் சிப்பங்களைத் தலைக்கு மேல் வைத்து ஸ்தோத்திரம் சொல்லி சந்தியாவந்தனம் பண்ணும்போது துதிக்கலாம்.

புகையிலை தங்கம் மாதிரி. லட்சுமி அவதாரம். அது சுபிட்சத்தைக் கொடுக்கிற மங்கள வஸ்து. பெரிய வீடு. வீட்டுக்காரி காதில் வைரத்தோடு. ஊரூராகச் சிப்பம் அனுப்பவும், ரெண்டு காசுக்கும் மூணு காசுக்கும் கிள்ளி எடுத்து வாழைமட்டைய்ில் பொதிந்து கொடுத்து விற்கவும் கடை. எல்லாம் அந்தப் புண்ணிய சமாச்சாரம் கொடுத்ததுதான்.

அது துர்தேவதையும் கூட.

மாடியில் ஓர் அறையில் சாமிநாதனைப் பூட்டி வைத்திருக்கிறது. சுப்பிரமணிய அய்யரின் சீமந்த புத்திரன். அதிபுத்திசாலி. சித்தப்பிரமை என்று எல்லோரும் சொல்வதால் அவன் மாடியை விட்டு இறங்குவதே இல்லை. பிராமணன் புகையிலை விற்பதால் பிரம்மசாபம் இது என்று ஊரில் சொல்வது சுப்பிரமணிய அய்யர் காதில் விழுந்திருக்கிறது.

பனியன் சகோதரர்கள், அங்கவஸ்திரமாக இல்லாமல் அதிலும் கால்வாசித் தரத்தில் ரத்தச் சிவப்பில் துண்டு போட்டவர்கள், புரியாத மொழியில் பேசுகிற கறுப்பர்கள் என்று யாரெல்லாமோ மாடிக்குச் சாமிநாதனைத் தேடி வருகிறார்கள். அய்யருக்கு ரொம்பக் காலத்தால் பின்னால் இருக்கப்பட்டவர்கள் அவர்கள் என்று பித்ருக்கள் சொன்னார்கள்.

அவர்கள் வராத நேரத்தில் காளான் போலக் குடைவிரித்தபடி இருக்கும் ஒரு விநோதப் பெட்டியில் உண்டியல்கடை சொக்கநாதன் செட்டியார் வீட்டுப் பழுக்காத்தட்டு போல் எதையோ சுழல விட்டு சங்கீதம் என்று சாமிநாதன் கேட்டுக் கொண்டு இருக்கிறான். உலகத்தில் இருந்தவர்கள். இப்போது மூச்சுவிட்டு நாளைக்கு அடங்கப் போகிறவர்கள், இன்னும் பிறக்காமலே போய்ச்சேர நாள் குறிக்கப் பட்டவர்கள் எல்லோருக்கும் துக்கப்படப் போதுமான சாவோலமும் அழுகையும் அந்தப் பழுக்காத்தட்டுக்களில் இருந்து வெளிப்பட்டு சுப்பிரமணிய அய்யர் மாத்தியானம் செய்யும் போதும், சந்தியாகால ஜபத்தின் போதும் உபத்திரவப்படுத்துகின்றன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசூர் வம்சம் (நாவல்) Empty Re: அரசூர் வம்சம் (நாவல்)

Post by சிவா Sat Jul 11, 2009 12:07 pm

பூணூலைக் காதில் இடுக்கிக் கொண்டு அவர் தோட்டட்த்தில் விசர்ஜனம் செய்ய உட்காரும்போது கிளர்ச்சி ஏற்படுத்தி ஸ்கலிதத்தை உண்டாக்குகிறது அந்த சங்கீதம்.

நாலு வராகன் கொடுத்து அந்தச் சனியன் பிடித்த பெட்டியை அவர்தான் பனியன் சகோதரர்களிடம் வாங்கிக் கொடுத்தார். அவ்வப்போது புதுசுபுதுசாகப் பழுக்காத்தட்டில் இன்னும் சோகத்தைப் பதித்து எடுத்து வந்து அந்தக் களவாணித் தேவடியாள் மகன்கள் காலும் அரையுமாக வெள்ளிப்பணம் கறந்து கொண்டு போய்விடுகிறார்கள். கொடுக்காவிட்டால் சாமிநாதன் மாடியில் இருந்து இறங்கி கிரஹத்தில் செய்கிற களேபரம் சகிக்கக் கூடியதாக இல்லை.

சுப்பிரமணிய அய்யர் மாடிப்பக்கம் தன்னிச்சையாக நிமிர்ந்து பார்த்தார். நல்ல நிசப்தம். சாம்ிநாதன் நித்திரை போயிருப்பான். இல்லாவிட்டால் முன்னோர்களில் யாரையாவது வரவழைத்து அங்குலி யோகம் பற்றியோ முகரதம் பற்றியோ விவாதித்துக் கொண்டிருப்பான்.

அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் சரியாகி விடுவான் என்றார்கள் பித்ருக்கள். அங்குலி யோகத்தையும் முகரதத்தையும் சம்போக வித்தையையும் விவாதிக்க முன்னோர்களைக் கூப்பிட்டுத் தொல்லைப்படுத்தத் தேவையில்லாமல் பக்கத்திலேயே மடிசாரில் ஒருத்தி இருப்பாள்.

கிறுக்கனுக்குப் பொண்ணு கொடுக்க மாட்டோம் என்று சுப்பிரமணிய அய்யரின் மச்சினர்கள் முகத்தில் அடித்ததுபோல் சொல்லிவிட்டார்கள். சின்னப்பிள்ளை சஙகரனுக்கு ஒன்றுக்கு மூன்றாக முறைப்பெண்களைப் பாணிக்கிரஹணம் செய்து கொடுக்க அவர்கள் குடுமியை முடிந்து கொண்டு வந்தார்கள். வேண்டாம், வெளியில் பெண் எடுத்துக்கறேன் என்று வைராக்கியமாகச் சொல்லிவிட்டார் அய்யர்.

சங்கரன் சுப்பிரமணிய அய்யரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரப் பொறுப்பை எடுத்துக் கொண்டு நேர்த்தியாக நிர்வகிக்கிறான். கடை முழுக்க அவன் அதிகாரத்தில் தான். பகல் நேரத்தில் தூங்கி எழுந்த அப்புறமோ சாயந்திரம் வெய்யில் தாழ்ந்தபிறகோ சுப்பிரமணிய அய்யரும் கடைக்குப் போய்க் கொஞ்ச நேரம் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்துவிட்டுக் கணக்கு வழக்குகளில் இங்கொரு நறுக்கும் அங்கொன்றுமாகப் பார்த்துவிட்டு ஏதாவது ஆலோசனை சொல்லி விட்டு வருவதுண்டு. சங்கரன் அதையெல்லாம் கேட்டு செயல்படுகிறானா என்று தெரியாவிட்டாலும் வருஷாவருஷம் தனம் வர்த்தித்துக் கொண்டுதான் போகிறது என்பதில் அய்யருக்கு சந்தோஷம்தான்.

கடைக்குப் போக வேண்டும். வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை என்பதால் இன்னும் கடை திறக்கவில்லை. சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும் என்று சொல்லித் தடுத்து விட்டார்கள் பெண்டுகள்.

சுமங்கலிப் பிரார்த்தனை என்பதால் பெண்டுகள் முழுக்கச் சாப்பிட்டு முடிந்த பிறகுதான் புருஷர்கள் சாப்பிடுவது.

அவர்கள் மிச்சம் வைத்த வடையும், தணுத்த சாதமும், புளிக்குழம்பும், அவியலும், பருப்புக் கரைசலான ரசமும், நமத்துப் போய்க் கொண்டிருக்கும் பப்படமும், உப்பேறியுமாக ஈரம் உலராத தரையில் பரிமாறக் காத்திருக்க வேண்டும்.

சுப்பிரமணிய அய்யர் காத்திருக்கிறார்.

சங்கரா ஏய் சங்கரா

அவர் குறிப்பில்லாமல் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.

சங்கரனுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது. அம்பலப்புழையில் பெண் எடுக்கிறார்கள். அடுத்த மாதம் நிச்சயதார்த்தம். அதற்கு முன் வீட்டில் செளபாக்கியம் செழிக்க சுமங்கலிப் பிரார்த்தனை வைக்கவேண்டும் என்று சொன்னாள் கல்யாணியம்மா. அய்யரின் அகத்துக்காரி.

சங்கரன் எங்கே ? கடைக்குப் புறப்பட்டுப் போயிருப்பானோ ?

தனுஷ்கோடிக்குப் புகையிலைச் சிப்பம் அனுப்பி வைக்கவேண்டும் என்பது நினைவு வந்திருக்கும். தாக்கோலை எடுத்துக்கொண்டு கடை திறக்க ஓடியிருப்பான்.

உள்ளே பெருங்குரல் எடுத்த்து பாடுகிற சத்தம். சுப்பம்மாக் கிழவிதான்.

சுமங்கலிப் பிரார்த்தனையின் போது குடும்பத்தில் மஞ்சளும் குங்குமமுமாகப் போய்ச் சேர்ந்த முந்திய தலைமுறைப் பெண்டுகளைக் கூப்பிட்டு வாழ்த்தச் சொல்லிக் கேட்கிற வழக்கம். சுப்பம்மாக் கிழவி கூப்பிட்ட குரலுக்கு அவர்கள் இறங்கி வருவார்கள்.

அவளுக்கு நாலு தலைமுறைப் பெண்டுகளைத் தெரியும். அவர்களோடு சதா சம்பந்தம் இருப்பதாலோ என்னமோ அவர்கள் ஆசீர்வாதத்தில், நினைத்த மாத்திரத்தில் பாட்டுக் கட்டிப் பாட வரும். அது பக்தி கானமாகவோ, சிரிப்பை வரவழைக்கும் விஷயம் பற்றியதாகவோ, பெண்டுகள் மட்டும் பகிர்ந்து கொள்ளும் பரிபாஷை ரகசியங்களாகவோ இருக்கும்.

சுப்பம்மாள் பாடிக்கொண்டிருக்கிறாள். பழைய சரித்திரங்களை.

போகிற இடத்தில் என்ன பாஷை புழக்கத்தில் இருக்கிறதோ அதை உடனே கிரகித்துப் பேசவும் அவளுக்கு மூத்தகுடிப் பெண்டுகள் வரம் கொடுத்திருக்கிறார்கள்.

இருபது வருடம் முன்னால் கூட்டமாகப் புறப்பட்டு அய்யரின் மாமனாரும் இன்னும் பத்துக் குடும்பமுமாகக் காசிக்குப் புறப்பட்டார்கள். காளை வண்டிகளில் பிரயாணம். அங்கங்கே மாட்டையும் வண்டியையும் விற்றுவிட்டு வேறே வாங்கிக் கொண்டு தொடந்து போய் ஆறேழு மாதம் கழித்து வாரணாசி போய்ச் சேர்ந்தார்கள்.

திரும்பி வரவும் அதேபோல் மாசக்கணக்கில் ஆனது. வழியில் வைத்து சிவலோகப் பிராப்தி அடைந்தவர்கள் ஏழெட்டுப் பேர் தவிர மற்ற எல்லோரும் பத்திரமாகத் திரும்பினாலும் கழுத்தெலும்பு தெரிய இளைத்துப் போய் முகத்திலும் தளர்ச்சி அப்பியிருந்தது. சுப்பம்மாக் கிழவி முகம் மட்டும் தெளிவாக இருந்தது மட்டுமில்லாமல் முன்னைக்கிப்போது ஒரு சுற்றுப் பெருத்தும் இருந்தாள்.

சுப்பம்மா காசியில் விசுவநாதசாமி தரிசனத்தை உத்தேசித்தோ கங்காஸ்நானத்தால் கடையேறவோ கிளம்பவில்லை. கல்யாணமான மறுவருஷமே அவளை நிர்க்கதியாக விட்டுவிட்டு வேதாந்தப் பித்தோடு வடக்கே ஓடிய புருஷனையும் தேடித்தான் போனாள்.

காசியில் கோசாயிகளின் கூட்டத்தில் அவன் இருக்கிறானாம். ஒற்றைக் காலையும் நீண்டு தரையைத் தொடும் ஆண்குறியையும் ஊன்றியபடி வளைந்த நகங்களோடு நாள்க்கணக்கில் அசையாமல் அவன் தீர்த்தக்கட்டத்தில் நிற்பதைக் கண்டதாக முன்னால் காசி போய்த் திரும்பி வந்த யாரோ சொன்னார்கள்.

பக்கத்து மாயானத்தில் பாதி எரித்து வாயில் கொள்ளியோடு கங்கையில் மிதக்கும் பிணங்களைத் தடுத்து எடுத்து நடுராத்திரியில் சிதைச்சூட்டில் வாட்டிச் சாப்பிடுவதாகவும் தகவல் வந்த மணியமாக இருந்தது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசூர் வம்சம் (நாவல்) Empty Re: அரசூர் வம்சம் (நாவல்)

Post by சிவா Sat Jul 11, 2009 12:08 pm

பிராமணன் மாமிசம் சாப்பிட மாட்டான். கோசாயியாகப் போனாலும் தான்.

சுப்பிரமணிய அய்யரின் தகப்பனார் தீர்மானமாக அறிவித்தாலும் அவருக்கும் காசிக்கே நேரே போய் இப்படிப் பிணம் தின்னும் பிராமணர்கள் இருக்கிறார்களா என்று தெரிந்து கொண்டுவர ஆர்வமாக இருந்தது.

ஆனாலும் புகையிலைக் கடை அவரைக் கட்டிப்போட்டு விட்டது. போதாக்குறைக்கு ஷயரோகமும்.

அவர் ரோகத்தில் இறந்த அடுத்த மாதம் சுப்பிரமணிய அய்யரின் மாமனாரும் பத்துக் குடும்பமும் காசிக்குக் கிளம்பியபோது சுப்பம்மாக் கிழவியும் சேர்ந்து கொண்டாள்.

நெற்றி நிறையக் குங்குமமும் சதா சுமங்கலி என்ற பெயருமாக அவள் காசிக்குக் கிளம்பியபோது மூத்தகுடி முன்னோரான பெண்டுகள் ஊர் எல்லை வரை பட்சிகளாகப் பறந்தும், சர்ப்பமாக ஊர்ந்தும் வார்த்தை சொல்லிக் கொண்டு கூடவே வந்தார்கள்.

அவர்கள் சுப்பம்மாள் வாயில் இருந்து எல்லாக் குரலிலும் பாடினார்கள். அவளுக்குக் களைப்பானபோது மற்றவர்கள் குரலில் ஏறிக்கொண்டு தொடர்ந்தார்கள்.

சுப்பிரமணிய அய்யரின் மாமனார் பெண்குரலில் நலுங்குப் பாடல் பாடும்போது, அய்யரின் அகத்துக்காரி கல்யாணியம்மா சொன்னாள்.

இது எங்க அத்தைப்பாட்டி. நன்னிலத்திலே வாக்கப்பட்டுப் போனா. சாலாட்சின்னு பேரு.

மூத்தகுடிப் பெண்டுகள் சுப்பம்மாள் கூடவே இருந்ததால் அவள் போகிற வழியில் தெலுங்கு, கன்னடம் என்று எல்லா பாஷையையும் பேசி அங்கங்கே ஜனங்களிடம் பழகி வழி விசாரிக்கவும், சத்திரம் சாவடியில் ஒதுங்கிச் சாப்பாடு வாங்கவும், காளைவண்டி பேரம் பேசவும் ரொம்பவே ஒத்தாசையாக இருந்ததாகச் சுப்பிரமணிய அய்யரின் மாமனார் சொன்னார்.

காசியில் அவள் இந்துஸ்தானியில் கடல்மடை திறந்ததுபோல் பொழிய ஆரம்பித்தது மட்டுமில்லாமல் அந்த பாஷையிலேயே பாடவும் ஆரம்பித்து விட்டாளாம்.

கங்கைக் கரையில் ஏதேதோ தீர்த்தக் கட்டங்களில் அவள் நிலாக்கால ராத்திரிகளில் குரலெடுத்துப் பாடியபோது சன்னியாசிகளும் கிரகஸ்தர்களும் கூட்டமாகக் கூடிப்போனதாகச் சொன்னார் ஐயரின் மாமனார். சங்கீத சாம்ராட்டான அந்த ஊர்த் துருக்கர் ஒருத்தர் வந்து கேட்டு இது ஆண்டவனுக்கு உரிமையான சங்கீதம் என்றாராம். அதையும் சுப்பம்மாள் தான் மொழிபெயர்த்தாள்.

சுப்பம்மாக் கிழவி காசியில் புருஷன் எங்கும் தட்டுப்படாமலே போக அவனை விட்டுவிட்டு வர, மற்றவர்கள் புடலங்காய், கொத்தவரங்காய், பலாப்பழம் என்று விட்டுவிட்டு வீடு வந்தார்கள்.

இனி ஆயுசுக்கும் அந்தந்தக் காய்கறி சாப்பிடக் கூடாது என்ற வருத்தம் அவர்களுக்கு என்றாலும் சுப்பம்மாக் கிழவிக்கு ஒரு வருத்தமும் இல்லை. அவள் புருஷன் அவள் முலைகளைக் கவ்விச் சுகித்தது ஏதோ கனவில் நடந்த சமாச்சாரமாகத் தோன்ற அவை சுருங்கி மார்க்கூட்டோடு ஒட்டிப் பல காலம் ஆகிவிட்டன.

உடல் தளர்ந்தாலும் குரல் தளராத வரத்தை அவளுக்கு மூத்தகுடிப் பெண்டுகள் கொடுத்திருக்கும் காரணத்தால் சுப்பம்மாக் கிழவி தொங்கத் தொங்க வளர்ந்த காதில் எண்ணெய் ஏறிய தோடும், வியர்வையில் கலைந்த குங்குமமும், வற்றிப்போன ஸ்தனங்களை மூடிய பருத்திப் புடவையுமாகப் பாடிக் கொண்டிருக்கிறாள்.

பெண்டுகள் சாப்பிட்டு முடியும்போது சுப்பம்மாக் கிழவியின் பாட்டு முடியும். அவர்களும் நிதானமாகத் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நாலு தலைமுறையில் பூவோடும் பொட்டோடும் போன பெண்டுகள் பத்திருபது பேராவது தேறுவார்கள். ஒவ்வொருத்தரைப் பற்றிச் சுப்பம்மா பாடும்போதும் அவர்கள் தங்களுக்கு முந்திய யாரையோ பற்றிய நினைவுகளையும் தன்னோடு அழைத்துக் கொண்டு வருவதால் பாட்டு முடியாமல் போய்க் கொண்டிருந்தது.

நாம சித்தெ சீக்கிரம் முடிச்சு எடத்தைக் காலி பண்ணினா புருஷா சாப்பிடலாம். பாவம். காலம்பற இருந்து அவாளும் மடியா பட்டினியா இருக்கா. அவாவா சாப்பிட்டு ஸ்வகாரியத்தைக் கவனிக்கப் போக வேண்டாமா ?

சுப்பிரமணிய அய்யரின் மாமியார் தான் சொன்னது.

அய்யர் அவள் இருந்த திசைக்கு நமஸ்காரம் செய்து கொண்டார்.

மாடியில் இருந்து யாரோ இறங்கி வரும் சத்தம்.

சங்கரன் தான்.

கடைக்குப் போயிருப்பேன்னு நினைச்சேன்.

அய்யர் அவனிடம் சொன்னார். சங்கரன் வெறுமனே சிரித்தான்.

அள்ளிச் செருகிய குடுமியும், பெரிய மீசையும் கருகருவென்று முகத்தை ஒட்டி வளரும் தாடியுமாக அவன் ஷத்திரியன் போல் இருந்ததாக அய்யருக்குத் தோன்றியது.

மீசையையும் தாடியையும் மழித்துவிட்டுக் குடுமி மட்டும் வைத்துக் கொண்டு பிராமணனாக லட்சணமாக இருக்கலாம் அவன்.

பிராமணன் புகையிலை விற்கும்போது அவன் தாடி மீசையோடு இருந்தால் என்ன தப்பு ?

கேளுங்கோ எல்லோரும்.

சுப்பம்மாக் கிழவி திடாரென்று சத்தமாகச் சொன்னாள். அதுவரை அவள் பாடியதை நடுவில் நிறுத்தி அவள் குரலில் ஏறிய மூத்தகுடிப் பெண்டு அலறினாள்.

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ.

குனிந்து பார்க்கலாமோ.

பாதி மறைத்த ஸ்தனமும்

பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்

வாழைத் தொடையும்

வடிவான தோளுமாய்க்

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ.

குனிந்து பார்க்கலாமோ.

வாயில் சாதத்தோடு எல்லாப் பெண்களும் பாட ஆரம்பித்தார்கள். மஞ்சளும் குங்குமமும் ஸ்நாநப்பொடி வாசனையுமாக மூத்தகுடிப் பெண்டுகள் எல்லோர் குரலிலும் ஏறியிருந்தார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசூர் வம்சம் (நாவல்) Empty Re: அரசூர் வம்சம் (நாவல்)

Post by சிவா Sat Jul 11, 2009 12:13 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் நான்கு



சங்கரன் கடைவீதிக்குள் நுழைந்தபோது உச்சிப் பொழுதாகி இருந்தது.

காரியஸ்தனைக் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவன் புகையிலை நிறைத்த ஓலைக் கொட்டான்களுக்கு நடுவே தலைக்குசரக் கட்டையில் தலையைச் சாய்த்துச் சின்னதாக நித்திரை போகும் நேரம் அது.

இன்றைக்கு ஏகமாக வேலை காத்துக் கிடக்கிறது. முடிந்து தலையைச் சாய்ப்பதற்குள் சாயங்காலமாகி விடும். அப்போது தூங்கினால் மூதேவி வந்து என்ன என்று விசாரிப்பாள்.

ஒண்ணுமில்லே. நீயும் வந்து பக்கத்துலே படுத்துக்கோ.

மாரிலும் முதுகிலுமாக பிடிக்கு அடங்காமல் நாலு முலை. உடம்பு முழுக்க ஊர்ந்து கெளபீனத்தை உருவ நான்கைந்து கைகள். ஒட்டியாணம் மூடிய அரைக்கட்டு. மூதேவிக்கும் யோனி ஒன்றுதான் இருக்கும்.

தாயோளி மாட்டுக்கு எப்படி வாச்சிருக்கு பாருடா.

கொல்லன் இடத்தில் வண்டி மாட்டைக் குப்புறத் தள்ளி லாடம் அடித்துக் கொண்டிருந்தவர்கள் கீழே கை காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கங்கே வண்டிகள் முன்னோக்கிச் சாய்ந்து வைத்திருக்க, மாடுகள் பக்கத்தில் வைக்கோலை அசைபோட்டபடி நின்றிருந்தன. வெய்யிலில் சாயம் காய்கிற வாடை.

துணி விற்கும் கடைகளில் சின்னதாகக் கூட்டம். பெருத்த வயிறோடு எண்ணெய் வாணியர் எண்ணைய்க் குடத்தருகில் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தார். கடையின் பின்வசத்தில் அவர் வீடு என்பதால் அடிக்கொரு தடவை உள்ளே இருந்து யாராவது வாசலுக்கு வந்து எண்ணெய்க்குடத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பப் போய்க் கொண்டிருந்தார்கள்.

கொட்டகுடி தாசிக்கு இதுக்கு மேலேயும் ஒரு கஜம் வேண்டி இருக்கும்.

லாடத்தை மாட்டுக் குளம்பில் இறக்கிக் கொண்டே சொன்னவன் சங்கரனைப் பார்த்தவுடன் மரியாதையோடு நிறுத்தினான். அவன் கடந்து போனதும் தொடர்ந்த சிரிப்பு.

சங்கரனுக்கும் நின்று பார்க்க ஆசைதான். கொட்டகுடி தாசியைப் பற்றிய வர்த்தமானங்கள் அவனுக்கும் இஷ்டமானவை.

பேசவும் பார்க்கவும் தான் இதெல்லாம். அம்பலப்புழை சம்பந்தம் குதிர்கிற வரைக்கும் பார்த்ததை வைத்தும் கேட்டதை வைத்தும் மேலே மேலே கற்பனை பண்ணி ராத்திரியில் கெளபீனம் நனையக் காத்திருக்க வேண்டும்.

பகல் நேரம் அற்பமான ஒரு ஐந்து நிமிஷ சந்தோஷம் போக மற்றப் பொழுது கணக்கு எழுத. புகையிலைச் சிப்பம் எண்ண. பக்கத்து ஊர்களுக்கும் தூரதேசத்துக்கும் புகையிலை அனுப்பச் சித்தம் செய்ய. கொட்டைப்பாக்கை நறுக்க எடுத்துப் போட்டு வாங்கி வைக்க. கால் காசும் அரைக்காசும் வாங்கிப் போட்டுக் கொண்டு புகையிலையும், பாக்கும் நிறுத்து வாழை மட்டையில் கட்டிக் கொடுக்க உத்தரவு கொடுத்துக் கொண்டு கடைவீதியில் கண்ணோட்டிக் கொண்டிருக்க.

அபூர்வமாகக் கொட்டகுடித் தாசி வருவாள். வயதான ஸ்திரீகளோடு ஒட்டிப் படர்ந்தபடி தட்டான் கடையில் கைவளையல் செய்யக் கொடுக்கவோ, மூக்குத்தித் திருகு பொருத்தவோ சின்ன வயது ஸ்திரிகள் வருவார்கள்.

கொட்டகுடித் தாசி தரையில் பதித்த பார்வையை மேலே எடுப்பதே இல்லை. ஆனாலும் அவள் கடந்து போனதும் வைத்த கண் வாங்காமல் பின்னசைவில் லயித்துச் சங்கரன் பார்த்தபடியே இருப்பான்.

தட்டான் கடைக்கு வரும் பெண்களின் கண்ணை ஒரு வினாடி சந்திக்கும்போதும், மாடியில் இருந்து எவ்விப் பார்க்கும்போதும் சங்கரனுக்கும் அந்த அழகு தவறாமல் நினைவு வரும்.

கொட்டகுடித் தாச்ி இப்போது கடந்து போனால் ? கடைத்தெருவில் கண்ணுக்கெட்டியவரை பார்த்தான் சங்கரன்.

வெறுமையாகக் கிடந்தது தெரு.

கழுத்து வியர்வையை உத்தரியத்தில் துடைத்துக் கொண்டு குடுமியை அவிழ்த்து விட்டபடி கடையோரமாக நின்றான். வேனல் சூடு தாங்க முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது இந்த வருஷமும்.

கையில் எடுத்து வந்திருந்த செம்பு கூஜாவைத் திருகித் திறந்து உதட்டில் படாமல் பாத்திரத்தை உயர்த்தினான். உரைப்பும் இனிப்புமாக வெல்லப் பானகம் நாக்குக்கு இதமாக இருந்தது.

சாதாரணமாகச் சுக்குவெள்ளம் தான் கொண்டு வரும் பழக்கம். வீட்டில் பெண்டுகள் விசேஷம் என்பதால் பானகம் கொடுத்தனுப்பியிருந்தார்கள்.

சங்கரனுக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. மதிய விருந்து கொடுத்த அசதி அது. எண்ணைய்ப் பலகாரங்கள் சாப்பிடச் சாப்பிட இன்னும் இன்னும் என்று நாக்கு கேட்கிறது. வகை தொகை இல்லாமல் சாப்பிட்டு முடித்ததும் எட்டு ஊருக்கு ஏப்பமும் வயிற்றில் வாயு சேருகிற தொந்தரவுமாக உபத்திரவப் படுத்துகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசூர் வம்சம் (நாவல்) Empty Re: அரசூர் வம்சம் (நாவல்)

Post by சிவா Sat Jul 11, 2009 12:16 pm

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ.

குனிந்து பார்க்கலாமோ.

பாதி மறைத்த ஸ்தனமும்

பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்

வாழைத் தொடையும்

வடிவான தோளுமாய்க்

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ.

குனிந்து பார்க்கலாமோ.

சுண்ணாம்புக் கட்டியால் ஒன்று, இரண்டு என்று இலக்கம் எழுதிய பலகைகளை ஒவ்வொன்றாகப் பிரித்து வாசலில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கொண்டிருந்தபோது அவன் வாய் முணுமுணுத்தது.

வாயில் சாதத்தோடு பாட ஆரம்பித்து மூக்கில் புரை ஏறச் சிரித்த பெண்டுகள். சுப்பம்மாக் கிழவி ஏதோ மந்திரம் செய்து ஒரு நிமிடம் எல்லோரையும் அசங்கியமாக எதையோ பாடச் செய்துவிட்டாள் என்று தோன்றக் கூட்டமாக அலைபாய்ந்து போன சிரிப்பு.

சுப்பம்மாக் கிழவியும் அந்த நிமிஷப் பெருமையை தனக்கே ஆக்கிக் கொண்டு சிரித்துவிட்டு இன்னும் கொஞ்சம் ரசாபாசமாகப் பாட ஆரம்பித்தாள்.

உச்சிப் பொழுதிலே

உள்ளே வரச் கூப்பிட்டுக்

காசுமாலைக்கு

கழுத்து அளவு பார்க்க

தாழ்வாரத்திலே தட்டானோடே

தையூ போனாளாம்.

உறவுக்காரப் பெண்டுகளில் யாரோ கையைக் காட்டி அவசரமாக நிறுத்தினாள்.

போறும். புருஷா வாசல்லே தான் இருக்கா. அம்பி வேறே வரலாமா போகலாமான்னு வாசல்லேயே நிக்கறான். நிறுத்துங்கோ அத்தை.

பாட்டு நின்றபோதுதான் சங்கரனுக்குச் சட்டென்று உறைத்தது.

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ.

குனிந்து பார்க்கலாமோ.

அது அவனுக்காகப் பாடினது மாதிரி இருக்கிறது.

சுப்பம்மாக் கிழவிக்கு எப்படித் தெரியும் ?

ஊரில் யாராவது சொல்லி இருக்கலாம்.

யாருக்குத் தெரியும் ?

சுப்பம்மாக் கிழவியிடம் சுவாதீனமாக வந்து பழகும் மூத்தகுடிப் பெண்டுகள் யாராவது இருக்குமோ ?

இருக்கட்டுமே. இப்ப என்ன ?

சங்கரன் உதட்டைப் பிதுக்கினான்.

பாதி மறைத்த ஸ்தனமும்

பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்

வாழைத் தொடையும்

வடிவான தோளுமாய்க்

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ.

அவன் கடைக்குள் நுழைந்தபோது சுற்றிலும் பாட்டுக் குரல்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசூர் வம்சம் (நாவல்) Empty Re: அரசூர் வம்சம் (நாவல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum