ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும்

Page 2 of 2 Previous  1, 2

Go down

தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் - Page 2 Empty தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும்

Post by சிவா Tue Jun 01, 2010 11:28 pm

First topic message reminder :

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குக் குறையாத, தொடர்ச்சி குன்றாத தமிழ் இலக்கிய வரலாற்றுப் பின்னணியிலே ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது, ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறு மிகவும் தொய்ந்து காணப்படுகிறது. பொதுவான தமிழிலக்கிய வரலாறு பற்றிய நூல்கள் பல வெளிவந்துள்ளன. இலங்கைத் தமிழிலக்கிய வரலாறு என்று ஒரு நூல் இன்னும் வெளிவரவில்லை. இலங்கைத் தமிழிலக்கிய வரலாறு என்பது ஒரு தனிப்பாடநெறியாக அண்மைக் காலத்திலிருந்தே இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளில் இடம்பெற்று வருகின்றது. ஈழத்துத் தமிழிலக்கியம் பற்றி இதுவரை வெளிவந்துள்ள நூல்களிலே விதந்து குறிப்பிடக்கூடிய ஆக்கம் கலாநிதி க. செ. நடராசா வெளியிட்டுள்ள ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சி (1982) என்பதாகும். இந்தநூல் 14ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரையிலான வளர்ச்சியை எடுத்துக் காட்டுமுகத்தால், ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றின் தொடக்க காலத்தைக் கூறுவதாக ஆசிரியர் கூறியுள்ளார். வரலாற்றுப் பின்னணியின் அடிப்படையிலே நூலாசிரியர் நடராசாவின் கருத்துக்கள் சிலவற்றை ஆராய்வதே இவ் விரிவுரையின் நோக்கமாகும்.

நடராசா சோதிட, வைத்திய நூல்களின் தோற்றம் பற்றிக்கொண்ட பார்வை ஆழம்பெறவேண்டும். 14ஆம் நூற்றாண்டு வரையிலே தமிழ்க்கல்வெட்டுச் சான்று கொண்டு தமிழர் குடியிருப்புப் பற்றியும் தமிழ்ச் செய்யுள் மரபின் வழக்காறு பற்றியும் ஆசிரியர் கொண்ட கருத்து விரிவுபெறணேடும். ஈழத்துப் பூதந்தேவனாரை ஒதுக்கியமை கைவிடப்படவேண்டும்.

சோதிட, வைத்திய நூல்களின் தோற்றம்

நூலின் முடிவுரையிலே நடராசா தெரிவிக்கும் கருத்து வருமாறு:-

"ஆரம்பகால ஈழத் தமிழிலக்கியங்களை நோக்குமிடத்து, அவை வடக்குத் தெற்கு என்ற பாகுபாடின்றி, ஆங்காங்குள்ள அரசர்களின் ஆதரவிலேயே வளர்ந்திருக்கின்றன என்று காணலாம். அத்தகைய நூல்கள் சில, அவற்றைச் செய்வித்த அரசர் பெயராலே வழங்கிவருவதும் அதற்குச் சான்றாகும். அக்கால இலங்கை அரசர்கள் சோதிடத்திலும் வைத்தியத்திலும் முக்கிய கவனஞ் செலுத்தியிருக்கிறார்களென்பது அவர்கள் செய்வித்த ஆதிநூல்களைக் கொண்டு அறியலாம். அப்பொழுதிருந்த நிலைபேறற்ற அரசியல் நிலைமை அதற்குக் காரணமாயிருந்திருக்கலாம். எவ்வாறாயினும், சோதிடத்திலே ஈழத்தமிழ் மன்னருக்கும் சிங்கள அரசர்களுக்கும் 14ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டிருந்த பெருநம்பிக்கையை அவர்கள் செய்வித்த சோதிட நூல்கள் பிரதிபலிக்கின்றன".

14ஆம் நூற்றாண்டு அரசியல் வரலாற்றை நுணுகி நோக்கும்போது, மேற்படி பந்தியிலுள்ள கருத்துக்கள் சில தெளிவுறும். சிங்கள அரசின் வீழ்ச்சிக்காலம் 13ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டது. சோழப்பேரரசருக்குப் பயந்த காலம் போய், கலிங்கமாகனுக்கும் மலாய்ச் சந்திரபானுவுக்கும் பாண்டியப் பேரரசருக்கும் பயப்பட்டு வாழவேண்டிய நிலையிலே தம்பதேனியாவிலிருந்த சிங்கள அரசு இருந்தது. வடஇலங்கை, பாண்டியப் பேரரசரின் தளபதியாக வந்த ஆரியச்சக்கரவர்த்தியினாலும் அவர் பரம்பரையாலும் ஆளப்பட்டு வந்தது (Pathmanathan, 1978). இந்தச் சூழ்நிலையிலே தம்பதேனியாவில் ஆட்சிபுரிந்த நான்காம் பராக்கிரமபாகுவுக்குச் சோதிடத்தில் அலாதி நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. சோதிடராக வந்து சேர்ந்த தமிழ்ப்புலவர் இலங்கையின் தென்முனையான தேவிநுவரையில் இருந்த பிரபல விஷ்ணு கோவிலின் அர்ச்சகரான போசராசர் என்பவர். தேவிநுவரை என்பதே தேனுவரையென்று மருவியிருக்கிறது. தேவனுடைய நகர் என்று பொருள்படும் தேவிநுவரைக்கு, அப்பெயர் ஏற்படக் காரணம் அங்கிருந்த விஷ்ணு கோவிலே. அக்கோவிற் பிராமணருக்கு நிலதானம் செய்ததைக் குறிக்கும் பராக்கிரமபாகுவின் "நாய்மன"த் தமிழ்க் கல்வெட்டு வெளிவந்துள்ளது. போர்த்துக்கேயர் காலத்திலே இக்கோயில் தரைமட்டமாகியது. பெருமாள் என்பது திருமாலுக்கு ஒரு நாமம். தேனுவரைப்பெருமாள் எனப்பட்ட போசராச பண்டிதர் ஒரு வீரவைணவர் என்பது சரசோதிமாலையின் கண்ணுள்ள அகச்சான்றுகளாற் புலப்படுகிறது. விநாயகருக்கும் விஷ்ணுவிற்கும் மட்டுமே கடவுள் வாழ்த்துப்பாடியுள்ளார்! விநாயகரைத் திருமாலின் மருமகனென்றே வணங்குகிறார்! சோதிடப்புலமை எய்தத் திருமாலை வணங்கவேண்டுமென்கிறார்.

சிங்களப் பௌத்த மன்னனாகக் கணிக்கப்படும் பராக்கிரமபாகுவின் அரசவையிலே சரசோதிமாலை எப்படி அரங்கேறியது என்ற வினா எழுகிறது. பாண்டியர்களோடு போராடி வந்த பராக்கிரமபாகு தமிழின விரோதியாகச் செயற்படவில்லை! தன்னைச் சோழமரபினன் என்று கருதியிருக்கிறான். சரசோதிமாலைப் பாயிரம் மேருமலையிலே புலி இலச்சினையைப் பொறித்தவனெனவும் ஆத்திமாலையைச் சூடியவனெனவும் சூரியவம்சத்தவனெனவும் சோழர் குலப்பெருமைகளுக்கு உரிமையுடையவனாக பராக்கிரமபாகுவைப் பாராட்டுகிறது. பாயிரம் அரங்கேறியபோது இதைக்கேட்டு மகிழும் நிலையிலே சிங்கள மன்னனுடைய அரசவை இருந்திருக்கிறது போசராசர் சிங்களமொழி தெரியாதவராக இருந்திருக்கக் கூடும். அவருடைய சோதிடப்புலமையை நூலுருவாக்கி வைக்க அரசன் விரும்பியிருந்திருக்கக்கூடும். இவர் தேனுவரையில் வாழ்ந்தமையால், அங்கும் அக்காலத்திலே தமிழ்க்குடிகள் இருந்தன என்று நடராசா முடிவு கட்டியுள்ளார். இன்று அப்பகுதியிலே தமிழ்க்குடிகள் இல்லை. திக்குவெலை என்ற முஸ்லீம் கிராமம் இருக்கிறது. தமிழில் ஆக்க இலக்கியம் படைக்கும் முஸ்லீம்கள் அங்கு வாழ்கின்றனர்.

சரசோதிமாலை அரங்கேறிய காலம் கி.பி.1310. இந்த ஆண்டு பாண்டியப்பேரரசு திடீரென வீழ்ச்சியடைகிறது. அரசுரிமைக்காக இரண்டு இளவரசர்களிடையே பாண்டிய நாட்டில் உள்நாட்டுப்போர் தொடங்குகிறது. வடஇந்தியாவிலிருந்து முஸ்லிம்களின் படையெடுப்பு தொடங்குகிறது. தமிழ்நாடெங்கும் பேரழிவு ஏற்படுகிறது. தமிழரசர்களால் தலைதூக்கவே முடியவில்லை. சில ஆண்டுகளுக்குள் மதுரையில் முஸ்லிம் ஆட்சி ஏற்படுகிறது. 14ஆம் நூற்றாண்டு இறுதிக்குள் தமிழ்நாடு விசயநகரப் பேரரசுக்குள் அடங்குகிறது. தமிழ்நாட்டிலே குழப்பம் மிகுந்தது! அன்னியர் கெடுபிடிகள் அதிகரித்தன. கோவில்கள் எரிக்கப்பட்டன. அல்லது கொள்ளையடிக்கப்பட்டன! நிலங்கள் பறிபோகின (Nilakanta Sastri, 1955). இந்தக்காலத்திலே, தமிழ்மக்கள், சிறப்பாக மேல்மட்டத்திலிருந்த தமிழ்மக்கள, நாட்டிலிருந்து வெளியேறி இலங்கையிலே குடிபுகுந்திருக்க வேண்டும். வடஇலங்கையிலிருந்த ஆரியச்சக்கரவர்த்தி பாண்டியப் பேரரசின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி தனியரசு செய்யத் தொடங்கியிருக்க வேண்டும.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் - Page 2 Empty Re: தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும்

Post by சிவா Tue Jun 01, 2010 11:35 pm

பூதந்தேவனார் செய்யுள்களின் காலமுறை



ஈழத்துப் பூதந்தேவனார் தாம் பாடிய ஏழு செய்யுள்களையும் காலமுறையில் (Chronology) என்ன ஒழுங்கிற் பாடினாரென்பது அடுத்து ஆராயத்தக்கது. ஈழத்துப் பூதந்தேவனார, சங்ககாலம் என்று இன்றைய அறிஞர்கள் கொள்கிற காலத்தின் எப்பகுதிக்குரியவரென்ற ஆராய்ச்சி இதுவரை தெளிவான கருத்துத் தரவில்லை. சங்ககாலத்தின் முன்னெல்லை பற்றி இன்றும் கருத்து வேறுபாடுகளுள. சங்ககாலத்தின் பின்னெல்லை கி.பி. 3ஆம் நூற்றாண்டு என்பது அறிஞர் பலருக்கு உடன்பாடு. பூதந்தேவனார் பாடிய பசும்பூட்பாண்டியனைப் பரணர், நக்கீரர், மதுரைக் கணக்காயனார் ஆகியோரும் பாடியுள்ளனர். நக்கீரர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும் பாடியுள்ளார். அந்த நெடுஞ்செழியன் கி.பி. 210இல் அரசுகட்டிலேறினான் (Nilakanta Sastri, 1955). தோழிகூற்றிலே தலைவனைக் குறிக்க மரியாதையொருமையை வழங்கிய பூதந்தேவனார், சங்ககாலத்தின் பின்னெல்லையான கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்குரியவரென்றே கொள்ளலாம். பூதந்தேவனார் தமிழ்நாட்டுக்குப் போனதும் ஈழத்துப் பூதந்தேவனாரெனப்பட்டாரெனவும்இ மதுரையிலே நீண்ட காலம் வாழ்ந்து வந்தபோது மதுரை ஈழத்துப் பூதந்தேவனாரெனப்பட்டாரெனவும் கொள்ளலாம். தாம் பிறந்து வளர்ந்த ஈழத்தை மறக்கமுடியாமல், அப்பின்னணியையே இலக்கியப் பொருளாகக் கொண்டிருந்தமையால், "ஈழத்து" அடையை அவர் கைவிடவில்லை. மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் என்ற பெயர் அமைய முன்பு, அவர் பாடியனவாக, இரண்டு செய்யுள்கள் - குறுந்தொகை 343! அகநானூறு 88 - காணப்படுகின்றன. இவ்விரு செய்யுள்களுள் எது முந்தியது என்பது முதலில் நோக்கத்தக்கது.

இச்செய்யுள்களை நுணுகி நோக்கும்போது, குறிஞ்சித்திணைச் செய்யுள் தூய குறிஞ்சிப்பாவாகக் காணப்படுகிறது! பாலைத்திணைச் செய்யுள் பாலைக்குச் சிறப்பாக உரிய பிரிதலைப் பாடவில்லை! பாலைக்குரிய துணை ஒழுக்கமான உடன்போக்கையே பாடுகிறது! உரிப்பொருள் உடன்போக்காக அமைவதனால், இச்செய்யுள் பாலைத்திணையென வகுக்கப்பட்டுள்ளபோதும் இந்தச் செய்யுளிலும் குறிஞ்சிநிலப் பின்னணியே காணப்படுகிறதென்ற உண்மைகள் தெரியவருகின்றன. இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியதென்பது அகநானூற்றுப் பாடலின் துறை. இச்செய்யுளிற் கூறப்பட்டுள்ள இரவுக்குறி குறிஞ்சிக்குச் சிறப்பாக உரிய கூதிர்யாமத்தில் இடம்பெற்றிருக்கிறது. கருப்பொருள்களும் குறிஞ்சிக்குரியன:- உணா - செந்தினை! மா - புலி, யானை, பன்றி, கரடி! மரம் - மூங்கில்! செய்தி - தினைப்புனங்காவல், குறுந்தொகையிலுள்ள பாலைச் செய்யுள் தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக்கூறியதென்ற துறையில் அமைந்துள்ளது. தலைவன் குறிஞ்சிநிலத் தலைவனாகிய வரைநாடனெனப்படுகிறான். செய்யுளில் இடம்பெறும் குறிஞ்சிநிலக் கருப்பொருள்களாவன: மா - யானை, புலி! மரம் - வேங்கை! பூ - வேங்கை. இவ்விரு செய்யுள்களிலே, அகநானூற்றுப் பாடலை முதலிலும் குறுந்தொகைப் பாடலை அடுத்தும் பாடியிருக்கலாம் போலத் தோன்றுகிறது.

மதுரை ஈழத்துப் பூதந்தேவனாராக மாறியபின்பு, அவர் பாடிய பாடல்களின் காலமுறையாக, குறுந்தொகை 360, குறுந்தொகை 189, அகநானூறு 307, நற்றிணை 366, அகநானூறு 231 என்பனவற்றைக் கொள்ள இடமுண்டு. தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியதென்ற துறையில், குறுந்தொகை 360 அமைந்துள்ளது. பூதந்தேவனாரின் முந்திய செய்யுள்கள் தோழிகூற்றாக அமைய, இது தலைவி கூற்றாக அமைந்துள்ளபோதும், இதுவும் குறிஞ்சித்திணைச் செய்யுளாகக் காணப்படுகிறது. குறிஞ்சியின் முதற்பொருளான மலைநாடு குறிப்பிடப்பட்டுத் தலைவனும் மலைநாடனெனப்படுகிறான். குறிஞ்சிநிலக் கருப்பொருளாக, தினைப்புனங்காவல் என்ற செய்தியும், வேலன் வெறியாட்டு என்ற தெய்வம் பராவலும் பாடப்பட்டுள்ளன. குறுந்தொகை 189 பாலைத்திணையென வகுக்கப்பட்டுள்ளபோதும், பாலைநிலத்துக்குரிய பின்னணி அங்கு இடம் பெறவேயில்லை. வினைதலைவைக்கப்பட்ட இடத்துத் தலைமகன் பாகற்கு உரைத்ததென்ற துறையையுடைய இச்செய்யுள் குறிஞ்சி நிலத்துக்குன்றிழி அருவியைப்பாடுகிறது. முன்பே குறுந்தொகை 343ஆம் செய்யுளிலே பூதந்தேவனார் காட்டிய நிறப்பெயரடைகளிலுள்ள ஈடுபாட்டை, இச்செய்யுளிலும் புலப்படுத்தியுள்ளார்.

பூதந்தேவனார் பாடிய ஐந்தாவது செய்யுளாக, அகநானூறு 307 இருக்கலாம். இப்பாலைத்திணைச் செய்யுள், பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவுவிலக்கியது என்ற துறையில் அமைந்துள்ளது. செய்யுளின் பின்னணி பெரும்பாலும் குறிஞ்சியாகவும் சிறுபான்மை பாலையாகவுங் காணப்படுகிறது. குறிஞ்சிக் கருப்பொருள்கள்: மா - யானை, புலி, கரடி! "பெருங்கல் வைப்பின்மலை முதலா"றான பாதை குறிஞ்சிக்குரியது. பாலைக்கருப்பொருள்கள்: புள் - புறா! தெய்வம் பராவல் - கடவுள் போகிய கருந்தாட்கந்து. பூதந்தேவனாரின் ஆறாவது செய்யுளாக, நற்றிணை 366 கொள்ளப்படலாம். இப்பாலைத்திணைச் செய்யுள் உலகியல் கூறிப் பொருள்வயிற்பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியதென்ற துறையில் அமைந்துள்ளது. குறிஞ்சியொழுக்கத்திற்குச் சிறப்பாக உரிய கூதிர்காலத்துக்கு இங்கே பாலைக்குரிய பிரிவு சொல்லப்படுகிறது. மூங்கிலும் குறிஞ்சிக்குரியதெனலாம். முல்லைப்பூ முல்லைநிலக் கருப்பொருள். வெப்பமிகுதியாற் பாதிக்கப்படும் குறிஞ்சிநிலமும் முல்லைநிலமுமே பாலைநிலமெனப்படுகின்றன என்ற சிலப்பதிகாரத்திற் காணப்படும் கருத்து இத்தகைய செய்யுள்களின் அடியாகவே தோன்றியிருக்க வேண்டும்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் - Page 2 Empty Re: தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும்

Post by சிவா Tue Jun 01, 2010 11:35 pm

ஐந்தாவது செய்யுளிலே தலைவியின் அங்க வருணனையிலே பூதந்தேவனார் ஈடுபாடு கொள்வதைக் காணலாம்:-

"சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய்

அகலெழில் அல்குல் அவ்வரி வாட"

(அகநானூறு 307)

ஆறாவது செய்யுளிலே, இந்த இயல்பு வளர்ந்து காணப்படுகிறது.

"அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல்காழ்

வீடுறு நுண்டுகிலூடு வந்தி மைக்குந்

திருந்திழை யல்குற் பெருந்தோட் குறுமகள்

மணியே ரைம்பான் மாசறக் கழீஇ

கூதிர் முல்லைக் குறுங்கா லலரி

மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த

விரும்பன் மெல்லணை யொழிய"

(நற்றிணை 366)

வருணிக்கப்பட்ட அங்கங்களிலே, இரண்டு செய்யுட் பகுதிகளுக்கும் ஒற்றுமை காணப்படுகிறது. முன்புள்ள செய்யுட் பகுதியில் இடம்பெற்ற நெற்றி வருணனை பின்புள்ள செய்யுட் பகுதியில் இடம் பெறாமையும், முன்புள்ள செய்யுட் பகுதியிலே குறிப்பிடப்படாத கூந்தலின் வருணனை பின்புள்ள செய்யுட் பகுதியிலே விரிவாக இடம்பெறுகின்றமையுமே குறிப்படக் கூடிய வேற்றுமையாகும். முன்புள்ள செய்யுட் பகுதி காலத்தால் முந்தியதெனவும், முந்தியதை அடுத்துப் பிந்தியது பாடப்பட்டிருக்க வேண்டுமெனவுங் கொள்ளலாம்.



பூதந்தேவனார் முதலிற் பாடியதாகக் கொள்ளப்படும் அகநானூறு 88 எவ்வாறு பிறதிணை விரவாது பல செய்திகளையும் தொகுத்துக் கூறுந் தூய குறுஞ்சிப் பாட்டாக அமைந்துள்ளதோ, அவ்வாறே அகநானூறு 231 பிறதிணை விரவாது பல செய்திகளையும் தொகுத்துக் கூறுந் தூய பாலைப் பாட்டாக அமைந்துள்ளது. தலைமகன் பிரிவின் கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியதென்பது இதன் துறை. நற்றிணை 366இல் தலைவி கூந்தலை விரிவாக வருணித்து மகிழ்ந்த புலவர், இச்செய்யுளிலே சுருக்கமாகக் கூறுகிறார்:-

"ஆடுவண்டரற்று முச்சித்

தோடார் கூந்தன் மரீஇயோரே"

தெய்வம் பராவல் பற்றியும் குறிப்புகள் வைத்துச் செய்யுள் செய்வது பூதந்தேவனாரின் இயல்பு என்று கூறலாம். பூதந்தேவனாரின் மூன்றாவது பாட்டாகக் கொள்ளப்படும் குறுந்தொகை 360 வேலன்வெறியாட்டுப் பற்றிக் கூறுகிறது:-

"வெறியென உணரந்த வேலன் நோய் மருந்து

அறியானாகுதல் அன்னை காணிய"

தமிழ்த்தெய்வம் என்று போற்றப்படும் முருகனுடைய வழிபாட்டின் ஒரு கூறாகிய வெறியாட்டு குறிஞ்சி நிலத்தில் நிலவிய ஆதிவழிபாட்டு முறையாகும். களவொழுக்கத்தில் தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி முருகன் குறையால் நோய்வாய்ப் பட்டுள்ளாள் என்று அறியாமையால் எண்ணும் செவிலித்தாய் வேலன் என்ற பூசாரி மூலம் வழிபாடு நிகழ்த்தி அவள் நோயைத் தீர்க்க முயலுதல் சங்ககாலக் குறிஞ்சித்திணைச் செய்யுள்களிலே பரவலாகக் கேட்கப்படும் ஒரு செய்தி. அகநானூறு 307, "கடவுள் போகிய கருந்தாட்கந்தத்து" என்று குறிப்பிடுவது திராவிடப் பெருங்கற்பண்பாட்டுக் காலத்துக்குச் சிறப்பாக உரிய நடுகல் வழிபாட்டைச் சுட்டுகிறதெனலாம்.



அகநானூறு 231 இல் காணப்படும் பகுதியும் நடுகல் வழிபாட்டோடு தொடர்புடையது:-

"கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர்

படுகளத் துயர்த்த மயிர்த்தலைப் பதுக்கை

கள்ளியம் பறந்தலைக் களர்தொறும் குழீ,

யுள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கருங் கடத்திடை".

பெருங்கற் பண்பாட்டிலே, பாலைநிலத்திற் பிணங்கள் அடக்கஞ் செய்யப்பட்ட முறை இங்கே கூறப்பட்டுள்ளது. பாலை நிலத்தில் ஆறலைத்தற்போது கொல்லப்பட்டவர்களின் பிணங்கள் அடுக்கப்பட்டு அவற்றுக்கு மேலே கற்குவியல் வைக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் தலைமயிர் வெளியே தெரிவது, அக்காட்சியை நினைத்துப் பார்ப்பவர்களை நடுங்க வைக்கிறது. இந்தக்காட்சி சங்கப் புலவர்பிறர் பாடல்களில் இடம்பெறவில்லை. இது ஈழநாட்டுக் காட்சி ஒன்றைச் சுட்டுவதாக இருக்கக்கூடும். இப்பாடலிலே, கள்ளியம் பறந்தலை பற்றிப் பேசப்படுகிறது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய நகரங்களுக்கு அண்மையிலுள்ள கள்ளியங்காடு என்ற ஊர்ப்பெயர்களை, இத்தொடர் நினைவூட்டுகிறது. இவ்விடங்களிலே பிரபலமான மயானங்கள் அமைந்திருத்தலுங் கவனிக்கத்தக்கது.



பூதந்தேவனார் பாடிய செய்யுள்களிலே கடைசியாகப் பாடப்பட்டதெனக் கொள்ளப்படும் அகநானூறு 231, பிற்கால மொழிநடையின் இயல்பொன்றையும் பிரதிபலிக்கிறது. தலைவனைக் குறிக்கும்போது ஆண்பால் ஒருமையை வழங்குவது சங்க இலக்கியங்களிற் பயின்று காணும் பழைய வழக்கு. இதே வழக்குப் பூகந்தேவனாரின் செய்யுள்கள் பலவற்றிலே காணப்படுகிறது அகநானூறு 231இல் மட்டும் தலைவன் மரியாதை ஒருமையில் நான்கு இடங்களிலே குறிக்கப்பட்டுள்ளான். மேற்படி அகப்பாட்டு காலத்தாற் பிந்தியதாகலாமென்பதற்கு, இதுவும் சான்று.



இதே செய்யுள் பொருள்வயிற் பிரிவுக்கான காரணத்தைக் கூறுவதிலும் ஒரு தனித்தன்மை காணப்படுகிறது. உளவியல் அணுகுமுறையில்(Psychological approach), இதனை நோக்கலாம். சங்ககாலப் புலவர்களுள் மிகச் சிலரே பொருள்வயிற் பிரிவுக்கான காரணத்தைச் செய்யுளிலே சுட்டிக்காட்டியுள்ளனர். தலைவன் வரைவோடு வரும்போது தலைவியின் பெற்றோருக்குக் கொடுப்பதற்கும் குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கும் பொருள் வேண்டிப் பிரிகிறான் என்பதே அக்கால இலக்கியத்தின் பொதுவான கருத்து. பூதந்தேவனாரின் தலைவன்,

"செறுவோர் செம்மல் வாட்டலுஞ் சேர்ந்தோர்க்கு

உறுமிடத் துய்க்கும் உதவி யாண்மையும்

இல்லிருந் தமைவோர்க்கு இல்லென் றெண்ணி

நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்."

தலைவன் நல்ல புகழை விரும்பியே பிரிந்துள்ளான். பொருள் சேர்த்து வந்தால், தன்னை எதிரிகள் மதித்து நடக்கவேண்டி வருமென்றும், தான் நண்பர்களுக்கு அவர்கள் வேண்டும்போது உதவலாமென்றும் உயர்ந்த நோக்கங் கொண்டவன் தலைவன். ஈழத்தை விட்டு மதுரைக்கு வந்து குடியேறியுள்ள பூதந்தேவனார் தலைவன் என்ற பாத்திரத்திலே தம்மையே காண்கிறார் போலத் தெரிகிறது! பிறந்தகத்துப் பெருமையை விட்டுக் கொடுக்காதுஇ ஈழத்து என்ற அடைமொழியைப் பேணிய அவர், தலைவியைப் பிரியக்கூடாது என்பதற்காகஇ பொருள்வயிற் பிரியாது வீட்டினுள்ளே அடங்கி வாழ்வதற்கு வெட்கப்பட்ட, "நாணுடை மனத்தர்" போலத் தெரிகிறது.



நாடுபற்றியோ, மன்னவன் பற்றியோ எதுவுங் குறியாமல் ஆறு அகப்பாடல்கள் பாடிய பூதந்தேவனார் ஏழாவது செய்யுளில் மட்டும் மதுரையையும் பசும்பூட்பாண்டியனையும் பாடியுள்ளார். பூதந்தேவனார் தாம் வாழ்ந்த மதுரையைச் செய்யுளில் அமைத்துப் போற்றச் சந்தர்ப்பங் கிடைத்ததும், மதுரையின் தனித்தமிழ்ப் பெயராகிய கூடல் என்பதனையே கையாளுகின்றார். பூதந்தேவனாரின் பெயர்க் கூறுகளான பூதன், தேவன் என்பன வடமொழி வழி வந்த, தமிழ் ஆண்பால் ஈறுகள் கொண்ட வடிவங்களாகக் காணப்படுகின்றன. ஈழத்துப் பூதந்தேவனார் காலத்துக்குச் சிறிது முன்னதாக, இலங்கையிலே வடவாரிய மொழியினர் செல்வாக்குப் பெருகிவந்திருக்க வேண்டும். அக்காலத்துச் சூழலுக்கு ஈடுகொடுப்பதற்காக, நாட்டிலிருந்த மக்கள் "வளைந்து கொடுத்ததை" இப்பெயர் மாற்றம் உணர்த்துவதாகக் கொள்ளலாம். சங்ககாலத் தமிழ்நாட்டிலே வடவாரியச் செல்வாக்கு ஓரளவு இடம்பெற்றதனால், வடமொழிப் பெயர்களைத் தாங்கிய சங்ககாலப் புலவர்கள் வேறு சிலரும் உளர்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் - Page 2 Empty Re: தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும்

Post by சிவா Tue Jun 01, 2010 11:36 pm

பூதந்தேவனார் சிறப்பு

சங்ககாலச் செய்யுள்களின் இலக்கிய ரசனை (Literary appreciation) அவற்றில் இடம்பெறும் குறிப்புப் பொருளைக் கொண்டும் அளவிடப்படுதல் உண்டு. குறிப்புப் பொருள் உள்ளுறையுவமை, இறைச்சிப்பொருள் என இரண்டாக அமையும். உள்ளுறையுவமையைப் பற்றி அகத்திணையியலிலும் பொருளியலிலுங் கூறிய தொல்காப்பியர் இறைச்சிப் பொருளைப் பற்றிப் பொருளியலில் மட்டுங் கூறியுள்ளார். அகத்திணையியலிலே இரண்டு சூத்திரங்கள் உள்ளுறை பற்றிக் கூறுவதால், உள்ளுறையுவமை அகத்திணைச் செய்யுளுக்கு மிகவும் உகந்ததென்பது புலனாகும். பூதந்தேவனார் தாம் பாடிய முதன்மூன்று செய்யுள்களிலும் உள்ளுறையுவமையைக் கையாண்டிருக்கிறார். அகநானூறு 88ஆம் செய்யுளில், தினைநுகர்தற்குப் பன்றி நிமித்தம் பார்த்தே வருகையைச் செய்தேயும் கானவன் அது வருதிறமறிந்து சுடர் கொளுத்தினாற் போல தலைவனும் பேணி வந்தானேயாயினும், அவன் வரவு வெளிப்படும் என்பது உள்ளுறை - குறுந்தொகை 343ஆம் செய்யுளில், தன்மேற் பாய்ந்த புலியை யானை தாக்கிக் கொன்றபோது, யானையின் வெண்கோடு செம்மறுக் கொண்டதென்னும்போது, தலைவனுக்கு வெற்றிப்புகழையுண்டாக்கி என்னும் உள்ளுறை தோன்றியது. குறுந்தொகை 360ஆம் செய்யுளில், கொடிச்சி கைக்குளிரினின்றும் எழும் ஒலி சிலம்பினின்று எழும் ஒலி போலத் தோன்றும் நாடனென்றது தமது மார்பு தர வந்தநோய் தெய்வந் தர வந்ததெனப் பிறர் கருதுவதற்குக் காரணமான தலைவனென்னும் உள்ளுறைப் பொருளைத் தருகிறது.

பிரிவுப் பாலைக்கு இறைச்சிப்பொருள் சிறந்தது. அன்புறுவதற்குத் தகுவன இறைச்சிப்பொருட்கண் சுட்டப்படுதல், பிரிவால் வருந்தியபோது, வற்புறுத்தலாக முடியும். அகநானூறு 307ஆம் செய்யுளில், அஃறிணை உயிர்களாகிய புறாக்கள் கூடப் பழக்கங்காரணமாக உறையும் இடத்தினின்றும் போவதில்லை! தன் பெடையோடு அவ்விடத்திலேயே வாழும்! உன்னிடம் அக்கெழுதகைமையும் இல்லை என்பது இறைச்சிப் பொருள். நற்றிணை 366இல் இறைச்சிப் பொருள் இரண்டிடங்களிலே அமைந்துள்ளது. மணமில்லாத கரும்பின் மலரை வாடை தீண்டும் என்பது, நெஞ்சே, நிலையில்லாத பொருளை நீ விரும்பி உலாவுகின்றனை என்ற இறைச்சிப் பொருளையுடையது. வாடை வீசுதலாலே குருவியின் கூடு அசைந்து வருமாறு மூங்கில் சென்று மோதும் எனபதுஇ பொருள் விருப்பம் உன்னைத் தூண்டுதலாலே, யான் வருந்துமாறு நீ என்னைத் துன்புறுத்துகின்றனை என்ற இறைச்சிப் பொருளையுடையது.

இலக்கியங்கள் மற்றவர்களால் எடுத்தாளப்படும்போது, அவற்றின் சிறப்பினை அவர்கள் உணர்ந்துள்ளனரென்பதற்கு, அது அறிகுறியாகக் கொள்ளப்படுகிறது. பண்டைக்கால, இடைக்காலப் புலவர்களின் செய்யுள்கள் இடைக்கால உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்டதற்குச் சான்று கிடைத்தால், அப்புலவர்களின் பெருமைக்குஅங்கீகாரங் கிடைத்திருப்பததாகக் கொள்ளலாம். பூதந்தேவனார் நான்காவதாகப் பாடிய குறுந்தொகை 189ஆம் செய்யுள் உரைக்காரர்களாலே குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்காப்பிய முதல் உரைக்காரராகிய இயம்பூரணர், "நெட்டாறு சேறலின்றி, அணிமைக்கண் பிரியும் பிரிவு" எனத் தொல்காப்பியம் களவியல் 17இன் உரையிற் குறிப்பர். "நீடேன் என்ற தலைவன் நீங்கியது" என்பர் நம்பியகப் பொருள் உரைகாரர். உரைகாரர் இருவரும் சமணசமயத்தவர். பூதந்தேவனாரின் சமயம் தெளிவுபடவில்லை. புலவர் ஈழத்தவர் என்ற முறையிலே பௌத்தராக இருந்திருக்கக் கூடுமென்று சமணர் கருதியிருக்கலாம். வைதிக சமயத்தவரைப் பொது எதிரிகளாகக் கொண்ட சமணரும் பௌத்தரும் சில இடங்களிலே ஒத்தியங்கியுள்ளனர்.

ஈழத்துத் தமிழ் இலக்கிய மரபு பூதந்தேவனாரிலே தொடங்கித் தொடர்ந்து வருகின்றதெனக் கூறலாமா என்பது ஒரு முக்கியமான வினா. தொடக்கம் ஈழத்துப் பூதந்தேவனாரிலே காணப்படுகின்றதென்பது மறுக்கமுடியாத உண்மை. பூதந்தேவனார் சங்ககால இறுதியிலே, கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிலேயே வாழந்தவரெனக் கொண்டாலும் அறுநூறாண்டுகள் கால இடைவெளியிலே வேறு சான்றுகள் எதுவும் இதுவரை கிடையாமையாலே, இன்று ஆராய்ச்சியுள்ள நிலையிலே, தொடர்ச்சி கூற இயலாதென்று கூறியமைவதே பொருத்தமாகும். "ஈழத்து" என்ற அடைமொழி பெற்றிராத வேறு இலங்கைப் புலவர்களின் செய்யுள்கள் அடையாளங் காணமுடியாமற் போயிருக்கலாம். ஈழத்துப் பூதந்தேவனாரின் செய்யுள்களும் தொகை நூல்களிலே இடம்பெறாமல் இருந்திருந்தால் மறைந்திருக்கும் என்றே கொள்ளலாம். இருண்ட காலமாகக் காட்சியளிக்கும் முன்பு குறிப்பிட்டுள்ள அறுநூறாண்டுகளின் இலக்கிய வரலாறு ஒளி பெறத்தக்க சான்றுகளைத் தேடுவோமாக.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் - Page 2 Empty Re: தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும்

Post by சிவா Tue Jun 01, 2010 11:37 pm

பயன்பட்ட நூல்கள், கட்டுரைகளுட் தெரிவு செய்யப்பட்டவை.



தமிழ்



அம்பலவாணபிள்ளை, கு. (1932) (பதிப்பு) அகப்பொருள் விளக்கம், நாற்கவிராசநம்பி, யாழ்ப்பாணம்.

இந்திரபாலா, கா. (1970) யாழ்ப்பாண இராச்சியத்தின் தொன்மை, சிந்தனை, மலர் 3, இதழ் ! பேராதனை. (1968)

(1968) அனுராதபுரத்திலுள்ள நான்கு நாட்டார் கல்வெட்டு, சிந்தனை, மலர் 1, இதழ் 4, பேராதனை.

இராகவஐயங்கார், மு. (1961) சாசனத் தமிழ்க்கவி சரிதம், மூன்றாம் பதிப்பு, மானாமதுரை.

(1964) ஆராய்ச்சித் தொகுதி. இரண்டாம் பதிப்பு, சென்னை.

இராசநாயகம், செ. (1933) யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாணம்

இரகுநாதையர், இ.சி. (1942) (பதிப்பு) செகராசசேகரமாலை, இரண்டாம் பதிப்பு, யாழ்ப்பாணம்.

இராசு, செ. (1983) (பதிப்பு) தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் - 50, தஞ்சாவூர்

ராஜம், எஸ் (1958) (பதிப்பு) அகநானூறு, சென்னை.

கந்தையா, வி. சீ. (1964) மட்டக்களப்புத் தமிழகம், யாழ்ப்பாணம்.

கணபதிப்பிள்ளை, பண்டிதமணி, சி. (1964) இலக்கியவழி, யாழ்ப்பாணம்.

கணபதிப்பிள்ளை, தென்புலோலியூர், மு. (1967) ஈழநாட்டின் தமிழ்ச்சுடர் மணிகள், சென்னை.

கணேசையர், சி. (1939) ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், சென்னை.

கவிராசர் (1968) கோணேசர் கல்வெட்டு, வை. சோமாஸ்கந்தர் (பதிப்பு), திருகோணமலை.

குணசிங்கம், சி. (1973) கோணேஸ்வரம், பேராதனை.

குறுந்தொகை (1937) சாமிநாதையர் பதிப்பு, சென்னை.

சதாசிவம், ஆ. (1966) (தொகுப்பு) ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், யாழ்ப்பாணம்.

சபாநாதன், முதலியார், குல. (1947) ஈழநாட்டின் பெயர்கள், ஈழமணி மலர் 1, இதழ் 1! தென்புலோலியூர் க. க. முருகேசபிள்ளை, கொழும்பு.

சாமிநாதையர், உ. வே. (1953) பெருங்கதை, கொங்குவேளிர், மூன்றாம் பதிப்பு, சென்னை.

சிவத்தம்பி, கா. (1978) ஈழத்தில் தமிழ் இலக்கியம், சென்னை.

(1971) திணைக்கோட்பாட்டின் சமூக அடிப்படைகள், ஆராய்ச்சி, மலர் 3, இதழ் 2, திருநெல்வேலி.

செகராசசேகரம் (1932 ஞானப்பிரகாசயந்திரசாலை, அச்சுவேலி, யாழ்ப்பாணம்.

செந்திநாதன், கனக. (1964) ஈழத்து இலக்கிய வளர்ச்சி, கொழும்பு.

தஞ்சை மகாராசா சரபோஜி சரஸ்வதி மகால் (1963) சரபேந்திர வைத்திய முறைகள், தஞ்சாவூர்.

தொல்காப்பியர் (1954) தொல்காப்பியம் மூலம், கழக வெளியீடு, சென்னை.

(1952) தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையருரை, கழகவெளியீடு, சென்னை.

(1952) தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியருரை, கணேசையர் பதிப்பு, சுன்னாகம், யாழ்ப்பாணம்.

நடராசா, க.செ. (1982) ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி, கொழும்புத் தமிழ்ச்சங்கம்.

நடராசா, கு.ஓ.ஊ. (1970) ஈழத்துத் தமிழ்நூல் வரலாறு, கொழும்பு.

(1962) (பதிப்பு) மட்டக்களப்புமான்மியம், கொழும்பு.

நற்றிணைநானூறு (1962) கழகவெளியீடு, சென்னை.

பத்மநாதன், சி. (1985) இலங்கையில் இந்துமதம் - ஆரியச்சக்கரவர்த்திகள் காலம், சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள, யாழ்ப்பாணம்.

பூலோகசிங்கம், பொ. (1974) ஈழத்துத் தம்ழ் இலக்கியம் (பதினெட்டாம் நூற்றாண்டுவரை).

நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நினைவுமலர், அனைத்துலகத் தம்ழாராய்ச்சி மன்றம் (இலங்கைக்கிளை), யாழ்ப்பாணம்.

பொன்னையா, ஐ. (1931) - 36) (பதிப்பு) பரராசசேகரம், பாகங்கள் 1 - 7, யாழ்ப்பாணம்.

மயில்வாகனப்புலவர் (மாதகல்) (1953) யாழ்ப்பாணவைபவமாலை, குல. சபாநாதன் பதிப்பு, கொழும்பு.

முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. (1922) ஈழமண்டலப்புலவர் சரித்திரம், யாழ்ப்பாணம்.

முத்துராசகவிராயர் (19 9) கைலாயமாலை, சே. வே. ஜம்புலிங்கம்பிள்ளை பதிப்பு, சென்னை.

வெங்கடேசஐயர், இ. (1985) சரசோதிமாலை, மூன்றாம்பதிப்பு, யாழ்ப்பாணம்.

வேலுப்பிள்ளை, ஆ. (1985) கோணேசர் கல்வெட்டுப்பற்றி நுண்ணாய்வு, சிவத்தமிழ் ஆராய்ச்சிக்கட்டுரைகள, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்..

வையாபுரிஐயர் (1980) வையாபாடல், க. செ. நடராசா பதிப்பு, கொழும்புத் தமிழ்ச் சங்கம்.

வையாபுரிப்பிள்ளை, எஸ். (1955) இலக்கிய தீபம், சென்னை.



ஆங்கிலம்

Archaeological Survey of Ceylon Annual report for 1956, 1957.

Ceylon Journal of Science (G) I (2) II

Dikshit, K. N. (1973) Prehistoric Civilization of the Indus Valley, University of Madras.

Indrapala, K. (1971) (Editor) Epigraphia Tamilica, Part I, Jaffna Archaeological society.

Kanapathippillai, K. (1960) A Tamil Inscription from Panduwasnuwara, University of Ceylon Review, vol. XVIII, No.s 3 & 4, Peradeniya.

Krishnsn, K.G. (1962) Notes of the Tamil Inscription from Panduwasnuwara, University of Ceylon Review, Vol. XX, Peradeniya.

Mahavamsa (1960) Ed. and translated by W. Geiger

Navaratnam, K. (1969) Tamil Elements in Ceylon Culture, Tellipalai, Jaffna.

Nilakanta Sastri (1955) A History of South India, Madras.

Pathmanathan, S. (1978) The Kingdom of Jaffna, Colombo.

Paranavitana, S.(1961) The Aryan Kingdom in North Ceylon, Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, New Series, Vol. 7, Part II.

Raghavan, M.D. (1968) Tamil Culture in Ceylon, Colombo.

Rasanayagam, C. (1926) Ancient Jaffna, Everyman"s Publishers, Madras.

Scott, Wilbur. S. (1962) (Compilation) Five approaches of Literary Criticism, New York.

Social Scientists Association of Sri Lanka (1984) Ethnicity and Social Change in Sri Lanka, Colombo.

Subramaniam, S. V. & Madhavan, V. R. (1984) Heritage of the Tamil Siddha Medicine, I.I.T.S. Madras.

Subramoniam, V. I. (1974) Dialect Survey of Malayalam (Ezhava-Tiiya), Trivandrum.

University of Ceylon (1960) History of Ceylon, Clombo.

Veluppillai, A. (1981) Commonness in Early Old Palaeography of Tamilnadu and Sri Lanka, Proceedings of the Vth I.A.T.R. Conference Seminar, Madurai.

(1981) Tamils in Ancient Jaffna and Vallipuram Gold Plate, Journal of Tamil Studies, Vol.19, Madras.

(1980) Epigraphical Evidences for Tamil Studies, I.I.T.S., Madras.

(1979, 1980) Tamil Influence in Ancient in Sri Lanka with Special Refernce to Early Brahmi Inscriptions, Journal of Tamil Studies, Vol. 16 & 17, Madras.

(1976) Study of the Dialects in Inscriptional Tamil, D.L.A., Trivandrum.

(1971, 1972) (Editor) Ceylon Tamil Inscriptions, Part I & II, Perdeniya.

(1978) Language Variations in Sri Lanka Tamil Inscriptions, Journal of Tamil Studies, Vol. 14, Madras.


(1986ம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வெளியீடாக வந்த இக்கட்டுரை, சில மாற்றங்களுடன் தரப்படுகிறது. - 2009)


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் - Page 2 Empty Re: தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum