ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோகினித் தீவு

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மோகினித் தீவு - Page 3 Empty மோகினித் தீவு

Post by சிவா Sat Apr 18, 2009 10:07 pm

First topic message reminder :

இரங்கூனியிலிருந்து புறப்பட்ட கப்பலில் இடம் கிடைத்த வரையில் நான் பாக்கியசாலிதான் சந்தேகம் இல்லை. ஆனால், அந்தக் கப்பலில் பிரயானம் செய்ய நேர்ந்ததை ஒரு பாக்கியம் என்று சொல்ல முடியாது. நரகம் என்பதாக ஒன்று இருந்தால் அது கிட்டத்தட்ட அந்தக் கப்பலைப் போலத்தான் இருக்க வேண்டும். அது ஒரு பழைய கப்பல். சாமான் ஏற்றும் கப்பல். அந்தக் கப்பலில் இந்தத் தடவை நிறையச் சாமான்களை ஏற்றியிருந்ததோடு 'ஐயா! போகட்டும்!' என்று சுமார் ஆயிரம் ஜனங்களையும் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். பாரம் தாங்க மாட்டாமல் அந்தக் கப்பல் திணறியது. கப்பல் நகர்ந்த போது பழைய பலகைகளும் கீல்களும் வலி பொறுக்கமாட்டாமல் அழுந்தின. அதன் மீது பலமான காற்று அடித்தபோது ஆயிரங்கட்டை வண்டிகள் நகரும் போது உண்டாகும் சத்தம் எழுந்தது. அந்தக் கப்பலில் குடிகொண்டிருந்த அசுத்தத்தையும் துர்நாற்றத்தையும் சொல்ல முடியாது. இப்போது நினைத்தாலும் குடலைப் பிடுங்கிக்கொண்டு வருகிறது. ஆயிரம் ஜனங்கள், பலநாள் குளிக்காதவர்கள், உடம்பு வியர்வையின் நாற்றமும், தலை மயிர் சிக்குப் பிடித்த நாற்றமும், குழந்தைகள் அசுத்தம் செய்த நாற்றமும், பழைய ரொட்டிகள், ஊசிப்போன தின்பண்டங்களின் நாற்றமும் "கடவுளே! எதற்காக மூக்கைப் படைத்தாய்!" என்று கதறும்படி செய்தன.

கப்பலில் ஏறியிருந்த ஜனங்களின் பீதி நிறைந்த கூச்சலையும் ஸ்திரீகளின் சோகப் புலம்பலையும் குழந்தைகளின் காரணமில்லாத ஓலத்தையும் இப்போது நினைத்தாலும் உடம்பு நடுங்குகிறது. ஒவ்வொரு சமயம், 'இந்த மாதிரி ஜனங்கள் உயிர் பிழைத்து இந்தியா போய்ச் சேருவதிலே யாருக்கு என்ன நன்மை? இந்தக் கப்பல் கடலில் முழுகிப் போய் விட்டால் கூட நல்லது தான்!' என்ற படுபாதகமான எண்ணம் கூட என் மனத்தில் தோன்றியது. உலகமெங்கும் பரவியிருந்த ராட்சத யுத்தத்தின் விஷக்காற்று இப்படி எல்லாம் அப்போது மனிதர்களின் உள்ளத்தில் கிராதக எண்ணங்களை உண்டு பண்ணியிருந்தது.

இவ்விதம் அந்த அழகான கப்பலில் ஒரு நாள் பிரயாணம் முடிந்தது. மறுநாள் பிற்பகலில் கம்பி இல்லாத தந்தி மூலம் பயங்கரமான செய்தி ஒன்று வந்தது. ஒரு ஜப்பானிய 'குருஸர்' அந்தப் பக்கமாக வந்து கொண்டிருக்கிறது என்பது தான் அந்தச் செய்தி. கப்பலின் காப்டனுக்கு இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறது என்பது எப்படியோ அந்தக் கப்பலிலிருந்த அவ்வளவு பேருக்கும் சிறிது நேரத்துக்கெல்லாம் தெரிந்து போய் விட்டது. கப்பல் நாயகனுக்கு வந்த செய்தி ஒரே 'குரூஸர்' கப்பலைப் பற்றியதுதான். கப்பல் பிரயாணிகளுக்குள் அந்தச் செய்தி பரவிய போது ஒரு 'குரூஸர்' ஒரு பெரிய ஜப்பானியக் கப்பற்படை ஆகிவிட்டது! ஸப்மரின் என்னும் நீர்முழ்கிகளும், டிஸ்ட்ராயர் என்னும் நாசகாரிகளும், டிரெட்நாட் கப்பல்களும் விமானதளக் கப்பல்களுமாகப் பேச்சு வாக்கில் பெருகிக் கொண்டே போயின. ஏற்கெனவே பயப் பிராந்தி கொண்டிருந்த ஜனங்களின் நிலைமையை இப்போது சொல்ல வேண்டியதில்லை. இராவணன் மாண்டு விழுந்த செய்தியைக் கேட்ட இலங்காபுரி வாசிகளைப் போல் அவர்கள் அழுது புலம்பினார்கள்.



இதுகாறும் சென்னைத் துறைமுகத்தை நோக்கிச் சென்ற கப்பல், இப்போது திசையை மாற்றிக் கொண்டு தெற்கு நோக்கிச் சென்றது. ஓர் இரவும் ஒரு பகலும் பிரயாணம் செய்த பிறகு சற்றுத் தூரத்தில் ஒரு தீவு தென்பட்டது. பசுமை போர்த்த குன்றுகளும், பாறைகளும் வானளாவிய சோலைகளும் அந்தத் தீவில் காணப்பட்டன. திருமாலின் விசாலமான மார்பில் அணிந்த மரகதப் பதக்கத்தைப் போல் நீலக் கடலின் மத்தியில் அந்தப் பச்சை வர்ணத் தீவு விளங்கியது; மாலை நேரத்துச் சூரியனின் பசும்பொன் கிரணங்கள் அந்த மரகதத் தீவின் விருட்சங்களின் உச்சியைத் தழுவி விளையாடிய அழகைக் கம்பனையும் காளிதாசனையும் போன்ற மகாகவிகள் தான் வர்ணிக்க வேண்டும். எந்த நிமிஷத்தில் கப்பலின் மீது ஜப்பானியக் குண்டு விழுந்து கூண்டோ டு கைலாசமாகக் கடலில் முழுகப் போகிறோமோ என்று பீதி கொண்டிருந்த நிலைமையிலே கூட அந்தத் தீவின் அழகைப் பார்த்த உடனே பிரயாணிகள் 'ஆஹா' காரம் செய்தார்கள்.

கப்பல், தீவை நெருங்கிச் செல்லச் செல்ல பிரயாணிகளுக்கு மறுபடியும் கவலை உண்டாயிற்று; அந்தத் தீவின் மேலே கப்பல் மோதி விடப் போகிறதே என்றுதான். ஆனால், அந்தப் பயம் சடுதியில் நீங்கிற்று. தீவின் ஒரு பக்கத்தில் கடல் நீர் உள்ளே புகுந்து சென்று ஓர் இயற்கை ஹார்பரைச் சிருஷ்டித்திருந்தது. அந்தக் கடல் நீர் ஓடைக்குள்ளே கப்பல் புகுந்து சென்றது. சிறிது நேரத்துக்கெல்லாம் கப்பல் நின்றது. நங்கூரமும் பாய்ச்சியாயிற்று. கப்பல் நின்ற இடத்திலிருந்து பார்த்தால் நாலாபுறமும் பச்சைப் போர்வை போர்த்திய குன்றுகள் சூழ்ந்திருந்தன. வெளியிலே அகண்ட சமுத்திரத்தில் பிரயாணம் செய்யும் கப்பல்களுக்கு அந்த இயற்கை ஹார்பருக்குள்ளே கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிற்பது தெரிய முடியாது.

கப்பல் நின்று, சிறிது நேரம் ஆனதும் நானும் இன்னும் சிலரும் கப்பல் நாயகரிடம் போனோம். நிலைமை எப்படி என்று விசாரித்தோம். "இனி அபாயம் ஒன்றுமில்லை; கம்பியில்லாத் தந்தியில் மறுபடி செய்தி வரும் வரையில் இங்கேயே நிம்மதியாயிருக்கலாம்" என்றார் காப்டன். பிறகு அந்தத் தீவைப் பற்றி விசாரித்தோம். அதற்குப் பெயர் 'மோகினித் தீவு' என்று காப்டன் கூறி, இன்னும் சில விவரங்களையும் தெரிவித்தார். இலங்கைக்குத் தென்கிழக்கே மூன்று நாள் பிரயான தூரத்தில் அந்தத் தீவு இருக்கிறது. அநேகருக்கு அத்தகைய தீவு ஒன்று இருப்பதே தெரியாது. தெரிந்தவர்களிலும் ஒரு சிலருக்குத் தான் இம்மாதிரி அதற்குள்ளே கடல் புகுந்து சென்று இரகசிய இயற்கை ஹார்பர் ஒன்றைச் சிருஷ்டித்திருக்கிறது என்று தெரியும். அது சின்னஞ் சிறிய தீவுதான். ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு மூன்று காத தூரத்துக்கு மேல் இராது. தற்சமயம் அந்தத் தீவில் மனிதர்கள் யாரும் இல்லை. ஒரு காலத்தில் நாகரிகத்தில் சிறந்த மக்கள் அங்கே வாழ்ந்திருக்க வேண்டுமென்பதற்கான சின்னங்கள் பல இருக்கின்றன. அஜந்தா, எல்லோரா, மாமல்லபுரம் முதலிய இடங்களில் உள்ளவை போன்ற பழைய காலத்துச் சிற்பங்களும், பாழடைந்த கோயில்களும் மண்டபங்களும் அத் தீவில் இருக்கின்றன. வளம் நிறைந்த அத்தீவில் மக்களைக் குடியேற்றுவதற்குச் சிற்சில முயற்சிகள் செய்யப்பட்டன. அவை ஒன்றும் பலன் தரவில்லை. சில நாளைக்கு மேல் அந்தத் தீவில் வசிப்பதற்கு எவரும் இஷ்டப்படுவதில்லை. ஏதேதோ கதைகள் பல அத்தீவைப் பற்றிச் சொல்லப்படுகின்றன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மோகினித் தீவு - Page 3 Empty Re: மோகினித் தீவு

Post by சிவா Sat Apr 18, 2009 10:15 pm

புவனமோகினி அழுதாள்; அலறினாள்; கண்ணீரை அருவியாகப் பெருக்கினாள். என்ன தான் அழுதாலும் இறந்தவர்கள் திரும்பி வர மாட்டார்கள் அல்லவா? தகனக்கிரியைகள் ஆனவுடனே பாண்டிய குமாரி மறுபடியும் போர் முனைக்குச் சென்றாள். ஆனால், முன்னைப் போல் அவளுக்கு உற்சாகம் இருக்கவில்லை. சோகத்தில், மூழ்கியிருந்த புவனமோகினியினால், பாண்டிய வீரர்களுக்கு ஊக்கம் ஊட்டவும் முடியவில்லை. 'உன் மனதுக்கு உகந்த மணாளனை மணந்து கொள்' என்று தந்தை மரணத் தறுவாயில் கூறியது, அவள் மனதில் பதிந்திருந்தது. மனதுக்கு உகந்த மணாளனை மணப்பதென்றால், ஒருவரைத்தான் அவள் மணக்க முடியும். ஆனால், அவரோ தன்னை வஞ்சித்துவிட்டுத் தான் கொடுத்த முத்திரை மோதிரத்தையும் எடுத்துக் கொண்டு ஓடிப் போனவர். தான் அவரிடம் காட்டிய அன்புக்குப் பிரதியாகத் தன் ராஜ்யத்தின் மீது படையெடுத்து வந்திருப்பவர். அவரைப்பற்றி நினைப்பதில் பயன் என்ன? அடடா! அவர் உண்மையாகவே ஒரு சிற்ப மாணாக்கராக இருந்திருக்கக் கூடாதா? கடைசியில் சுகுமார சோழர், புவனமோகினி இருந்த இடத்துக்குத் தாமே நேரில் விஜயம் செய்து, பிரமாதமான வீரப்போர் புரிந்து, அவளைச் சிறைப் பிடித்துவிட்டார்! பாண்டியகுமாரி சிறைப்பட்டதும், பாண்டிய சேனையும் சின்னாபின்னமடைந்து சிதறி ஓடிவிட்டது. தமிழ் நாட்டு மன்னர்களின் வீரதீரங்களைப் பற்றி நீங்கள் எவ்வளவோ கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இந்த மாதிரி ஓர் அபலைப் பெண்ணுடன், ஒரு ராஜகுமாரன் போர் புரிந்து, அவளைச் சிறைப்படுத்திய அபாரமான வீரத்தைப் பற்றி நீர் கேள்விப்பட்டதுண்டா?"

இவ்விதம் கூறிவிட்டு அந்தப் பெண்ணரசி கடைக்கண்ணால் தன் நாயகனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் அளவிலாக் காதல் புலப்பட்டது. ஆனால், அவளுடைய குரலில் ஏளனம் தொனித்தது.







அந்த யுவதியின் ஏளன வார்த்தைகளைக் கேட்ட அவளுடைய நாயகன் சிரித்தான். என்னைப் பார்த்து, "பெண்களுடைய போக்கே விசித்திரமானது. அவர்களை மகிழ்விப்பது பிரம்மப் பிரயத்தனமான காரியம். நாம் நல்லது செய்தால் அவர்களுக்குக் கெடுதலாகப்படும். நம்முடைய நோக்கத்தைத் திரித்துக் கூறுவதிலேயே அவர்களுக்கு ஒரு தனி ஆனந்தம்!" என்று கூறி மேலும் சொன்னான்:-

"சோழ ராஜகுமாரன் போர்க்களத்தில் முன்னால் வந்து நின்று, பாண்டிய குமாரியைத் தோற்கடித்து அவளைச் சிறைப் பிடித்தது உண்மைதான். ஆனால், அதற்குக் காரணம் என்ன தெரியுமா? புவனமோகினி தற்கொலை செய்து கொண்டு சாகாமல் அவள் உயிரைக் காப்பாற்றும் பொருட்டுத்தான். புவனமோகினியின் மனதில் தந்தை இறந்த காரணத்தினால் சோர்வு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அந்த மனச்சோர்வை அவள் போர்க்களத்தில் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. முன்னைக் காட்டிலும் பத்துமடங்கு வீராவேசத்தோடு போர் புரிந்தாள். கத்தியை சுழற்றிக் கொண்டு போர்க்களத்தில் தன்னந் தனியாக அங்குமிங்கும் ஓடினாள். பாண்டிய குமாரியை யாரும் காயப்படுத்தி விடக்கூடாதென்றும், சுகுமாரன் சோழ வீரர்களுக்குக் கண்டிப்பான கட்டளையிட்டிருந்தான். ஆனால், அவர்கள் அந்தக் கட்டளையை நிறைவேற்றுவது இயலாமற் போகும்படி புவனமோகினி நடந்து கொண்டாள். எப்படியாவது போர்க்களத்தில் உயிரை விட்டு விடுவது என்றும், சோழர் குலத்துக்கு அழியாத பழியை உண்டு பண்ணுவது என்றும் அவள் தீர்மானம் செய்திருந்ததாகக் காணப்பட்டது. 'சண்டையை நிறுத்தி விட்டுச் சமாதானமாகப் போகலாம்' என்று தந்தை சொல்லியனுப்பியதை அவள் சட்டை செய்யவில்லை. அதன் பேரில் சுகுமாரன், தானே அவளுக்கு எதிரே வந்து நிற்க வேண்டியதாயிற்று. சுகுமாரனைத் திடீரென்று பார்த்ததும், பாண்டிய குமாரியின் கையிலிருந்து கத்தி நழுவி விழுந்தது. உடனே பக்கத்திலிருந்த சோழ வீரர்கள் அவளைப் பிடித்துக் கொண்டார்கள். கயிறு கொண்டு அவளுடைய கைகளைக் கட்டிச் சுகுமாரன் எதிரில் கொண்டு போய் நிறுத்தினார்கள். சுகுமாரன் உடனே குதிரை மீதிருந்து கீழே இறங்கினான். பாண்டிய குமாரிக்கு ஆறுதலான மொழிகளைச் சொல்லவேண்டும் என்று கருதினான். ஆனால், மனதில் தோன்றிய ஆறுதல் மொழிகள் வாய் வழியாக வருவதற்கு மறுத்தன. புவனமோகினியின் கோலத்தைக் கண்டு, அவன் கண்களில் கண்ணீர் ததும்பியது. அவள் தந்தையை இழந்து நிராதரவான நிலையில் இருப்பதை எண்ணி அவன் உள்ளம் உருகியது. ஆனால், ஆண்மக்களை விடப் பெண் மக்கள் பொதுவாகக் கல்நெஞ்சு படைத்தவர்கள் என்பதை அப்போது புவனமோகினி நிரூபித்தாள். சுகுமாரனை அவள் ஏறிட்டுப் பார்த்து, "ஐயா, மதிவாணரே! செப்புச் சிலை செய்யும் வித்தையைச் சோழ மன்னரிடமிருந்து கற்றுக் கொண்டுவிட்டீரோ?" என்று கேட்டாள். அதற்கு மறுமொழி சொல்லச் சுகுமாரனால் முடியவில்லை. தான் அவளை ஏமாற்றிவிட்டு வந்ததற்காக, அவளிடம் வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள்ள அவன் விரும்பினான். ஆனால், அத்தனை வீரர்களுக்கு மத்தியில், ஒரு பெண்ணுக்குப் பணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளச் சுகுமாரனுக்குத் தைரியம் வரவில்லை. ஆகையால், புவனமோகினியைப் பத்திரமாய்க் கொண்டு போய்த் தக்க பாதுகாப்பில் வைக்கும்படி கட்டளை பிறப்பித்து விட்டுத் தன்னுடைய தந்தையைத் தேடிப் போனான்.

உத்தம சோழர் அப்போது வெகு உற்சாகமாக இருந்தார். மதுரையின் வீதிகளில், அவரைத் தேர்க்காலில் கட்டிப் பராக்கிரம பாண்டியன் இழுத்துச் சென்றதை உத்தம சோழர் மறக்கவே இல்லை. அதற்குப் பழிக்குப் பழி வாங்குவதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்து விட்டது என்று, அவர் எண்ணிச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்; பராக்கிரம பாண்டியன் இறந்துவிட்டபடியால் அவனுக்குப் பதிலாக அவனுடைய மகளைப் பழி வாங்குவதற்கு அவர் திட்டங்கள் போட்டுக் கொண்டிருந்தார். அவனுடைய இதயம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. உரலுக்கு ஒரு பக்கத்தில் இடி, மத்தளத்துக்கு இரு பக்கத்திலும் இடி என்ற பழமொழி தெரியுமல்லவா? சுகுமாரன் மத்தளத்தின் நிலையில் இருந்தான். ஒரு பக்கம் அவனுடைய காதலைக் கொள்ளை கொண்ட புவனமோகினி அவனை வஞ்சகன் என்று நிந்தனை செய்தாள். இன்னொரு பக்கத்தில் அவனுடைய தந்தை ஒரே மூர்க்க ஆவேசங்கொண்டு, பாண்டிய குமாரி மீது வஞ்சந்தீர்த்துக் கொள்ள வழிகளைத் தேடிக் கொண்டிருந்தார். சுகுமாரன் அவரிடம் மெள்ள மெள்ளத் தன் மன நிலையை வெளியிட முயன்றான். முதலில் அரச தர்மத்தைத் தந்தைக்கு நினைப்பூட்டினான், "புவனமோகினி பாண்டிய ராஜனின் மகள் அல்லவா? அவளை மரியாதையாக நடத்த வேண்டாமா?" என்றான். அதற்கு உத்தம சோழர், "அவர்கள் பரம்பரை பாண்டியர்கள் அல்லர்; நடுவில் வந்து மதுரைச் சிம்மாசனத்தைக் கவர்ந்தவர்கள்; அவர்களுக்கு ராஜகுலத்துக்குரிய மரியாதை செய்ய வேண்டியதில்லை," என்று சொன்னார்.

பிறகு சுகுமாரன், "பாண்டியகுமாரியின் உதவியில்லா விட்டால் நான் தங்களை விடுவித்திருக்க முடியாது. அவள் கொடுத்த முத்திரை மோதிரத்தை எடுத்துக் கொண்டுதான் சிறைக்குள்ளே வர முடிந்தது. அந்த மோதிரத்தைக் காட்டித் தானே நாம் தப்பித்து வந்தோம்?" என்றான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோகினித் தீவு - Page 3 Empty Re: மோகினித் தீவு

Post by சிவா Sat Apr 18, 2009 10:16 pm

அதற்கு உத்தம சோழர், "யுத்த முறைகள் நான்கு உண்டு; சாம, தான, பேத, தண்டம் என்று. நீ பேத முறையைக் கையாண்டு எதிரியை ஏமாற்றினாய். அது நியாயமான யுத்த முறைதான். அதற்காக நீ வருத்தப்பட வேண்டியதில்லை! உலகம் தோன்றின நாள் தொட்டு, அரச குலத்தினர் பகைவர்களை வெல்வதற்காகத் தந்திரோபாயங்களைக் கைக்கொண்டிருக்கின்றனர். சாணக்கியர் அர்த்த சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்று உனக்குத் தெரியாதா?" என்றார். சுகுமாரன் கடைசியாகத் தன்னுடைய உள்ளத்தின் நிலையை உள்ளபடியே வெளியிட்டான். பாண்டிய குமாரியிடம் தான் காதல் கொண்டு விட்டதையும், அவளைத் தவிர வேறு யாரையும் கலியாணம் செய்து கொள்ளத் தன் மனம் இடம் கொடாது என்பதையும் சொன்னான். இதை அவன் சொன்னானோ இல்லையோ, உத்தம சோழர் பொங்கி எழுந்தார். துர்வாச முனிவரும் விசுவாமித்திரரும் பரசுராமரும் ஓருருக் கொண்டது போலானார். "என்ன வார்த்தை சொன்னாய்? அந்தக் கிராதகனுடைய மகள் பேரில் காதல் கொண்டாயா? என்னைத் தேர்க்காலில் கட்டி, மதுரையின் வீதிகளில் இழுத்த பாதகனின் குமாரியை மணந்து கொள்வாயா? என்னைச் சிறையில் அடைத்துச் சங்கிலி மாட்டி, விலங்கினத்தைப் போலக் கட்டி வைத்திருந்த சண்டாளனுடைய மகள், சோழ சிங்காதனத்தில் வீற்றிருப்பதை நான் அனுமதிப்பேனா? ஒரு நாளும் இல்லை! அப்பனைப் போலவே மகளும் சூழ்ச்சி செய்திருக்கிறாள். உன்னை வலை போட்டுப் பிடிக்கத் தந்திரம் செய்திருக்கிறாள். அதில் நீயும் வீழ்ந்துவிட்டாய். புவனமோகினியை நீ கலியாணம் செய்து கொள்வதாயிருந்தால், என்னைக் கொன்று விட்டுச் செய்து கொள்! நான் உயிரோடிருக்கும் வரை அதற்குச் சம்மதியேன்! அவளைப் பற்றி இனி என்னிடம் ஒரு வார்த்தையும் பேசாதே! அவளைக் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கழுதைமேல் ஏற்றி வைத்து, அதே மதுரை நகர் வீதிகளில் ஊர்வலம் நடத்தப் போகிறேன். அப்படிச் செய்தால் ஒழிய, என் மனத்தில் உள்ள புண் ஆறாது!" என்று, இப்படியெல்லாம் உத்தம சோழர் ஆத்திரத்தைக் கொட்டினார்.

இந்த மனோநிலையில் அவருடன் பேசுவதில் பயனில்லையென்று சுகுமாரன் தீர்மானித்தான். கொஞ்ச காலம் கழித்து, அவருடைய கோபம் தணிந்த பிறகு முயற்சி செய்து பார்க்க வேண்டும். அதற்குள்ளே கோபவெறி காரணமாகப் புவனமோகினியை ஏதாவது அவமானப்படுத்தி விட்டால் என்ன செய்கிறது? அந்த நினைவையே சுகுமாரனால் பொறுக்க முடியவில்லை. காதலும் கல்யாணமும் ஒரு புறம் இருக்க, அவள் தனக்குச் செய்த உதவிக்கு பிரதி நன்றி செலுத்த வேண்டாமா? - இவ்விதம் யோசித்ததில், கடைசியாக ஒரு வழி அவன் மனதில் தோன்றியது. சிறையிலிருந்து அவள் தப்பிப் போகும்படி செய்வது முதல் காரியம். நேரில் அவளிடம் போய் எதுவும் பேசுவதற்கு அவனுக்கு வெட்கமாயிருந்தது. தன்னைப் பார்த்ததும் "செப்பு விக்கிரகம் செய்யும் வித்தையைக் கற்றுக் கொண்டீரா?" என்று தான் மீண்டும் அவள் கேட்பாள்! அதற்கு என்ன மறுமொழி கூறுவது? அதைக் காட்டிலும் வேறொருவர் மூலம் காரியம் நடத்துவது நல்லது. எனவே நம்பிக்கையான தாதிப் பெண் ஒருத்தியைச் சுகுமாரன் அழைத்தான். அவளிடம் சோழ நாட்டு மோதிரத்தைக் கொடுத்தான். அவளைப் பாண்டிய குமாரியின் சிறைக்குள்ளே சென்று, அவளைப் பார்த்து, 'உன்னிடம் ஒரு சமயம் பாண்டிய ராஜாங்கத்தின் முத்திரை மோதிரத்தை வாங்கிக் கொண்டவர், இந்த மாற்று மோதிரத்தை உனக்கு அனுப்பியிருக்கிறார். அவர் அந்த மோதிரத்தை உபயோகித்ததுபோல் இதை நீயும் உபயோகிக்கலாம்' என்று சொல்லிவிட்டு, மோதிரத்தைக் கொடுத்துவிட்டு வரும்படி அனுப்பினான். தாதி சென்ற பிற்பாடு, சுகுமாரனுக்குச் சும்மா இருக்க முடியவில்லை. புவனமோகினி மோதிரத்தை வாங்கிக் கொண்டு என்ன செய்கிறாள், என்ன சொல்லுகிறாள் என்று, தெரிந்து கொள்ள விரும்பினான். ஆகவே, தாதியின் பின்னோடு சுகுமாரனும் சென்று ஒரு மறைவான இடத்தில் இருந்து ஒட்டுக் கேட்டான். அவன் சொன்ன மாதிரியே தாதி மோதிரத்தைக் கொடுத்த போது, பாண்டிய குமாரி கூறிய மறுமொழி, அவனை மறுபடியும் திகைப்படையச் செய்து விட்டது."

இவ்விதம் சொல்லி மோகினித் தீவின் சுந்தர புருஷன் கதையை நிறுத்தினான். மேலே நடந்ததைத் தெரிந்து கொள்ள என்னுடைய ஆவல் உச்ச நிலையை அடைந்தது.


மோகினித் தீவில், பூரணச் சந்திரனின் போதை தரும் வெண்ணிலவில், குன்றின் உச்சியில் உட்கார்ந்து, அத்தம்பதிகள் எனக்கு அந்த விசித்திரமான கதையைச் சொல்லி வந்தார்கள். ஒருவரோடொருவர் மோதி அடித்துக் கொண்டு சொன்னார்கள். குழந்தைகள் எங்கேயாவது போய்விட்டு வந்தால், "நான் சொல்கிறேன்" என்று போட்டியிட்டுக் கொண்டு சொல்லும் அல்லவா? அந்த ரீதியில் சொன்னார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோகினித் தீவு - Page 3 Empty Re: மோகினித் தீவு

Post by சிவா Sat Apr 18, 2009 10:16 pm

அழகே வடிவமான அந்த மங்கை கூறினாள்:-

"பாண்டிய குமாரி சிறையில் தன்னந் தனியாக இருந்த போது, அவளுக்குச் சிந்தனை செய்யச் சாவகாசம் கிடைத்தது. இராஜரீக விவகாரங்களும், அவற்றிலிருந்து எழும் போர்களும் எவ்வளவு தீமைகளுக்குக் காரணமாகின்றன என்பதை உணர்ந்தாள். தன்னுடைய கலியாணப் பேச்சுக் காரணமாக எழுந்த விபரீதங்களை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்து வருத்தப்பட்டாள்; தான் ராஜகுமாரியாகப் பிறந்திராமல் சாதாரணக் குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்திருந்தால், இவ்வளவு துன்பங்களும் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டிராதல்லவா என்று எண்ணி ஏங்கினாள். தன் காரணமாக எத்தனையோ பேர் உயிர் துறந்திருக்கத் தான் மட்டும் யுத்த களத்தில் உயிர் விட எவ்வளவு முயன்றும், முடியாமற் போன விதியை நொந்து கொண்டாள். இப்படிப் பட்ட நிலைமையிலே தான் தாதி வந்து சோழ குமாரன் கொடுத்த முத்திரை மோதிரத்தைக் கொடுத்தாள். புவன மோகினிக்கு உடனே சுகுமாரன் செய்த வஞ்சனை நினைவுக்கு வந்து, அளவில்லா ஆத்திரத்தை மூட்டியது. அந்த ஆத்திரத்தைத் தாதியிடம் காட்டினாள். "இந்த மோதிரத்தைக் கொடுத்தவரிடமே திரும்பிக் கொண்டுபோய்க் கொடுத்துவிடு! அவரைப் போன்ற வஞ்சகம்மிக்க ராஜகுமாரனின் உதவி பெற்றுக் கொண்டு உயிர் தப்பிப் பிழைக்க விரும்பவில்லை என்று சொல்லு! அதைக் காட்டிலும் இந்தச் சிறையிலேயே இருந்து உயிரை விடுவேன் என்று சொல்லு! அந்த மனிதர் முத்திரை மோதிரத்தை ஒரு காரியத்துக்காக வாங்கிக் கொண்டு, அதைத் துர் உபயோகப்படுத்தி மோசம் செய்து விட்டு ஓடிப் போனார். அது சோழ குலத்தின் பழக்கமாயிருக்கலாம். ஆனால், பாண்டிய குலப் பெண் அப்படிச் செய்ய மாட்டாள் என்று சொல்லு! வஞ்சனைக்கும் பாண்டிய குலத்தினருக்கும் வெகுதூரம்!" என்று சொன்னாள்.

இவ்விதம் கூறியவுடனே, சுகுமாரனுடைய குரலைக் கேட்டுத் திடுக்கிட்டாள். "தாதி! அந்த வஞ்சக ராஜகுமாரனைப் பாண்டிய குமாரி ஒரு சமயம் காதலித்தாள். அந்தக் காதலின் மேல் ஆணையாக அவளைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாகச் சொல்லு! முத்திரை மோதிரத்தை உபயோகித்துத் தப்பித்துக் கொண்டு போனால், பிறிதொரு சமயம் நல்ல காலம் பிறக்கலாம்; இருவருடைய மனோரதமும் நிறைவேறக் கூடும் என்று சொல்லு!" என்பதாக அந்தக் குரல் கூறியது. அந்தக் குரல் புவனமோகினியின் மனதை உருகச் செய்தது. அவளுடைய உறுதியைக் குலையச் செய்தது. தேவேந்திர சிற்பியின் சிற்பமண்டபத்தில் கேட்ட குரல் அல்லவா அது? பழைய நினைவுகள் எல்லாம் குமுறிக்கொண்டு வந்தன. தழதழத்த குரலில், பாண்டிய குமாரி கூறினாள்:- "தாதி! நான் இந்த வஞ்சக ராஜகுமாரனை என்றைக்கும் காதலித்ததில்லை என்று சொல்லு! சோழநாட்டிலிருந்து தேவேந்திர சிற்பியிடம் சிற்பக்கலை கற்றுக் கொள்ள வந்த ஏழை சிற்பியையே நான் காதலித்தேன் என்று சொல்லு!" என்றாள். அடுத்த கணத்தில், சோழ ராஜகுமாரன் புவனமோகினியின் எதிரில் வந்து நின்றான். அவன் கூறிய விஷயம், பாண்டிய குமாரியைத் திகைக்கும்படி செய்து விட்டது."
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோகினித் தீவு - Page 3 Empty Re: மோகினித் தீவு

Post by சிவா Sat Apr 18, 2009 10:16 pm

அந்த மங்கையின் நாயகன் இப்போது கூறினான்:- "பாண்டிய குமாரி, தான் சோழ ராஜகுமாரனைக் காதலிக்கவில்லை யென்றும், இளஞ் சிற்பியையே காதலித்ததாகவும் கூறிய தட்சணமே, சுகுமாரனுடைய மனத்தில், தான் செய்ய வேண்டியது என்ன என்பது உதித்து விட்டது. அதுவரையில் புவன மோகினியை நேருக்கு நேர் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டிருந்தவனுக்கு, இப்போது அவளைப் பார்க்கும் தைரியமும் வந்துவிட்டது. ஆகையினால், மறைவிடத்திலிருந்து அவள் முன்னால் வந்தான். "கண்மணி! என்னைப் பார்த்து இந்தக் கேள்விக்கு மறுமொழி சொல்லு! நான் ராஜகுமாரனாயில்லாமல், ஏழைச் சிற்பியாக மாறிவிட்டால், நான் உனக்குச் செய்த வஞ்சனையை மன்னித்து விடுவாயா? என்னை மணந்து கொள்ளவும் சம்மதிப்பாயா?" என்றான். பாண்டியகுமாரி உடனே மறுமொழி சொல்லவில்லை. மறுமொழி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவள் முகமும் கண்களும் அவள் மனதிலிருந்ததை வெளிட்டன. சற்றுப் பொறுத்து, அவள், "நடக்காத காரியத்தை ஏன் சொல்லுகிறீர்கள்? ஏன் வீணாசை காட்டுகிறீர்கள்? போரிலே முழுத்தோல்வியடைந்து அடிமையாகிச் சிறைப்பட்டிருக்கும் ஒரு பெண்ணுக்காக, யார் பரம்பரையாக வந்த அரசைக் கைவிடுவார்கள்? சோழ ராஜ்யத்தோடு இப்போது பாண்டிய ராஜ்யமும் சேர்ந்திருக்கிறதே? விடுவதற்கு மனம் வருமா?" என்றாள். "என் கண்மணி! உனக்காக ஏழு உலகம் ஆளும் பதவியையும் நான் தியாகம் செய்வேன். ஆனால் உனக்கு ராணியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லையே!" என்று சுகுமாரன் கேட்டான். "ராணியாக வேண்டும் என்ற ஆசையிருந்தால், தேவேந்திர சிற்பியின் சீடனுக்கு என் இருதயத்தைக் கொடுத்திருப்பேனா?" என்றாள் பாண்டியகுமாரி. உடனே சுகுமாரன் தன் அரையில் செருகியிருந்த உடை வாளை எடுத்துக் காட்டி, "இதோ இந்தக் கொலைக் கருவியை, ராஜகுல சின்னத்தை, பயங்கர யுத்தங்களின் அடையாளத்தை, உன் கண் முன்னால் முறித்து எறிகிறேன், பார்!" என்று சொல்லி, அதைத் தன்னுடைய பலம் முழுவதையும் பிரயோகித்து முறித்தான். உடைவாள் படீரென்று முறிந்து தரையிலே விழுந்தது!

பின்னர் சுகுமாரன் தன் தந்தையிடம் சென்றான். அரசாட்சியில் தனக்கு விருப்பம் இல்லையென்றும், ராஜயத்தைத் தன் சகோதரன் ஆதித்யனுக்குக் கொடுத்து விடுவதாகவும், ராஜ்யத்துக்கு ஈடாகப் புவனமோகினியைத் தனக்குத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். முதலில் உத்தம சோழர் இணங்கவில்லை. எவ்வளவோ விதமாகத் தடை சொல்லிப் பார்த்தார். சுகுமாரன் ஒரே உறுதியாக இருந்தான். "அப்பா! தாங்கள் நீண்ட பரம்பரையில் வந்த சோழநாட்டுச் சிம்மாசனத்தில், பராக்கிரம் பாண்டியர் மகள் ஏறச் சம்மதிக்க முடியாது என்றுதானே சொன்னீர்கள்? உங்களுடைய அந்த விருப்பத்துக்கு நான் விரோதம் செய்யவில்லை. வேறு என்ன உங்களுக்கு ஆட்சேபம்? இந்த தேசத்திலேயே நாங்கள் இருக்கவில்லை. கப்பலேறிக் கடல் கடந்து போய் விடுகிறோம்! தங்களைப் பாண்டியனுடைய சிறையிலிருந்து மீட்டு வந்ததற்காக, எனக்கு இந்த வரம் கொடுங்கள்!" என்று கெஞ்சினான். அவனுடைய மன உறுதி மாறாது என்று தெரிந்து கொண்டு, உத்தம சோழர் கடைசியில் சம்மதம் கொடுத்தார். "ஒரு விதத்தில் உன் முடிவும் நல்லதுதான். மகனே! சோழ குலத்தில் நம் முன்னோர்கள் கப்பலேறிக் கடல் கடந்து போய், அயல் நாடுகளில் எல்லாம் நம்முடைய புலிக்கொடியை நாட்டினார்கள். சோழ சாம்ராஜ்யம் வெகு தூரம் பரந்திருந்தது. அந்தப் பரம்பரையை அனுசரித்து, நீயும் காரியம் செய்தால், அதைப் பாராட்ட வேண்டியது தானே! மூன்று கப்பல்கள் நிறைய ஆயுதங்களையும் ஏற்றிக் கொண்டு போர் வீரர்களையும் அழைத்துக் கொண்டு போ! இன்னும் பிரயாணத்துக்கு வேண்டிய பொருள்களையெல்லாம் சேகரித்துக் கொள்!" என்றார். சுகுமாரன் அவ்விதமே பிரயாண ஆயத்தங்கள் செய்தான். போருக்குரிய ஆயுதங்களோடு கூடச் சிற்ப வேலைக்கு வேண்டிய கல்லுளிகள், சுத்திகள் முதலியவற்றையும் ஏராளமாகச் சேகரித்துக் கொண்டான். வீரர்களைக் காட்டிலும் அதிகமாகவே சிற்பக் கலை வல்லுநர்களையும் திரட்டினான். தேவேந்திரச் சிற்பியாரையும் மிகவும் வேண்டிக் கொண்டு தங்களுடன், புறப்படுவதற்கு இணங்கச் செய்தான். தேசத்தில் பிரஜைகள் எல்லாரும், இளவரசர் வெளிநாடுகளில் யுத்தம் செய்து வெற்றிமாலை சூடுவதற்காகப் புறப்படுகிறார் என்று எண்ணினார்கள். உத்தம சோழரும் புதல்வனுக்கு மனம் உவந்து விடை கொடுத்தார். ஆனால், இறுதிவரை புவனமோகினி விஷயத்தில் மட்டும் அவர் கல்நெஞ்சராகவே இருந்தார். அந்தப் பெண்ணின் உதவியால் தாம் மதுரை நகர்ச் சிறையிலிருந்து வெளிவர நேர்ந்த அவமானத்தை அவரால் மறக்கவே முடியவில்லை."
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோகினித் தீவு - Page 3 Empty Re: மோகினித் தீவு

Post by சிவா Sat Apr 18, 2009 10:17 pm

இப்போது மறுபடியும் அந்நங்கை குறுக்கிட்டுக் கதையைப் பிடிங்கிக் கொண்டு கூறினாள்.

"ஆனாலும், புவனமோகினி புறப்படும்போது உத்தம சோழரிடம் போய் நமஸ்கரித்து விடை பெற்றுக் கொண்டாள். தன்னால் அவருக்கு நேர்ந்த கஷ்டங்களையெல்லாம் மறந்து, தன்னை மன்னிக்க வேண்டும் என்று மன்றாடினாள். அந்தக் கிழவரும் சிறிது மனங்கனிந்து தான் விட்டார். "பெண்ணே இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் நான் ஆரம்பத்திலேயே உன் கலியாணத்துக்கு ஆட்சேபம் சொல்லியிருக்க மாட்டேன். குலத்தைப் பற்றி விளையாட்டாக ஏதோ நான் சொல்லப்போக, என்னவெல்லாமோ, விபரீதங்கள் நிகழ்ந்துவிட்டான். போனது போகட்டும்; எப்படியாவது என் மகனும் நீயும் ஆனந்தமாக வாழ்க்கை நடத்தினால் சரி" என்றார். "தங்கள் வாக்குப் பலித்து விட்டது இல்லையா? நீங்களே சொல்லுங்கள்!" என்று சொல்லி அந்தச் சுந்தர வனிதை தன் நாயகன் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தாள்.

தம்பதிகள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் புன்னகை புரிந்தவண்ணம் இருந்தார்கள். நேர உணர்ச்சியேயன்றி, அப்படியே அவர்கள் இருந்துவிடுவார்களென்று தோன்றிற்று. நானும் காதலர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன்; கதைகளில் படித்திருக்கிறேன். ஆனால் இந்தத் தம்பதிகளின் காதல் மிக அபூர்வமானதாக எனக்குத் தோன்றியது. அப்படி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு என்னதான் இருக்கும்? என்னதான் வசீகரம் இருந்தாலும், என்ன தான் மனதில் அன்பு இருந்தாலும், இப்படி அலுக்காமல் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதென்றால், அது விந்தையான விஷயந்தான் அல்லவா!

ஆனால், நான் பொறுமை இழந்துவிட்டேன். அவர்களிடம் பொறாமையும் கொண்டேன் என்றால், அது உண்மையாகவே இருக்கும். கதையின் முடிவைத் தெரிந்து கொள்ளும் ஆவலும் அதிகமாயிருந்தது.

"என்ன திடீரென்று இருவரும் மௌனம் சாதித்துவிட்டீர்களே! பிற்பாடு என்ன நடந்தது? கதையை முடியுங்கள்!" என்றேன்.

"அப்புறம் என்ன? ஆயிரம் வருடமாக, கரிகால் சோழன் காலத்திலிருந்து பரம்பரைப் பெருமையுடன் வந்திருந்த சோழ சாம்ராஜ்யத்தைத் துறந்து, சுகுமாரன் நாகப்பட்டினம் துறைமுகத்தில் கப்பல் ஏறினான். கடலில் சிறிது தூரம் கப்பல்கள் சென்றதும், மூன்று கப்பல்களிலும் இருந்த வேல், வாள் முதலிய ஆயுதங்களையெல்லாம் எடுத்து, நடுக்கடலில் போடும்படி செய்தான். கல்லுளிகளையும் சுத்திகளையும் தவிர வேறு ஆயுதமே கப்பலில் இல்லாமல் செய்து விட்டான். பிறகு பல தேசங்களுக்குச் சென்று பல இடங்களைப் பார்த்து விட்டுக் கடைசியாக இந்த ஜனசஞ்சாரமில்லாத தீவுக்கு வந்து இறங்கினோம். எல்லாம் இந்தப் பெண்ணாய்ப் பிறந்தவளின் பிடிவாதம் காரணமாகத் தான்!" என்று ஆடவன் சொல்லி நிறுத்தினான்.

கடைசியில் அவன் கூறியது எனக்கு அளவில்லாத திகைப்பை அளித்தது. இத்தனை நேரமும் சுகுமாரன் புவனமோகினியைப் பற்றிப் பேசி வந்தவன், இப்போது திடீரென்று, 'வந்து இறங்கினோம்' என்று சொல்லுகிறானே? இவன் தான் ஏதாவது தவறாகப் பிதற்றுகிறானோ? அல்லது என் காதிலேதான் பிசகாக விழுந்ததோ என்று சந்தேகப்பட்டு அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தேன். அவள் கூறினாள், "நீங்களே சொல்லுங்கள் ஐயா! அந்த உளுத்துப் போன பழைய சோழ ராஜ்யத்தைக் கைவிட்டு வந்ததினால் இவருக்கு நஷ்டம் ரொம்ப நேர்ந்து விட்டதா? நாங்கள் இந்தத் தீவுக்கு வந்து ஸ்தாபித்த புதிய சாம்ராஜ்யத்தை இதோ பாருங்கள்! ஒரு தடவை நன்றாகப் பார்த்துவிட்டு மறுமொழி சொல்லுங்கள்!"

இவ்விதம் கூறி, அந்த மோகினித் தீவின் சுந்தரி தீவின் உட்புறத்தை நோக்கித் தன் அழகிய கரத்தை நீட்டி விரல்களை அசைத்துச் சுட்டிக் காட்டினாள். அவள் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தேன். மாடமாளிகைகளும், கூட கோபுரங்களும், மணி மண்டபங்களும், அழகிய விமானங்களும், விஹாரங்களும் வரிசை வரிசையாகத் தென்பட்டன. பால் போன்ற வெண்ணிலவில் அக்கட்டிடங்கள் அப்போதுதான் கட்டி முடிக்கப்பட்ட புத்தம் புதிய கட்டிடங்களாகத் தோன்றின. தந்தத்தினாலும் பளிங்கினாலும் பல வண்ணச் சலவைக் கற்களினாலும் கட்டப்பட்டவைபோல ஜொலித்தன. பாறை முகப்புகளில் செதுக்கப்பட்டிருந்த சிற்ப உருவங்களெல்லாம் உயிர்க்களை பெற்று விளங்கின. சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால், அந்த வடிவங்கள் உண்மையாகவே உயிர் அடைந்து, பாறை முகங்களிலிருந்து வெளிக் கிளம்பி என்னை நோக்கி நடந்து வரத் தொடங்கிவிடும் போலக் காணப்பட்டன. கடைசியாகத் தோன்றிய இந்த எண்ணம் எனக்கு ஒரு விதப் பயத்தை உண்டாக்கியது. கண்களை அந்தப் பக்கமிருந்து திருப்பி, கதை சொல்லி வந்த அதிசயத் தம்பதிகளை நோக்கினேன். திடீரென்று பனிபெய்ய ஆரம்பித்தது. அவர்களை இலேசான பனிப்படலம் மூடியிருந்தது. பனியினால் என் உடம்பு சில்லிட்டது.

அவர்களை உற்றுப் பார்த்த வண்ணம், தழதழத்த குரலில், "கதை நன்றாகத்தான் இருந்தது. ஆனால், நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லையே? நீங்கள் யார்? இந்தத் தீவுக்கு எப்போது எப்படி வந்தீர்கள்?" என்றேன்.

இருவருடைய குரலும், இனிய சிரிப்பின் ஒலியில் கலந்து தொனித்தன.

"விடிய விடியக் கதைக் கேட்டு விட்டுச் சீதைக்கு இராமன் என்ன உறவு என்று கேட்பது போலிருக்கிறதே?" என்றான் அந்தச் சுந்தர புருஷன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோகினித் தீவு - Page 3 Empty Re: மோகினித் தீவு

Post by சிவா Sat Apr 18, 2009 10:17 pm

தமிழ் மொழியில் மற்றப் பாஷைகளுக்கு இல்லாத ஒரு விசேஷம் உண்டு என்று அறிஞர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டிருந்தேன். அதாவது ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தமிழ் மொழி ஏறக்குறைய ஒரே விதமாகப் பேசப்பட்டு வந்திருக்கிறது என்பது தான். இது எனக்கு நினைவு வந்தது. இன்றைக்கும் தமிழ் நாட்டில் வழங்கும் பழமொழியைச் சொல்லி என்னைப் பரிகசித்தது, சோழ இளவரசன் சுகுமாரன் தான் என்பதை ஊகித்துத் தெரிந்து கொண்டேன். அதை வெளியிட்டுக் கூறினேன்.

"தாங்கள் தான் சுகுமார சோழர் என்று தோன்றுகிறது. உண்மைதானே? அப்படியானால் இந்தப் பெண்மணி...?" என்று சொல்லி, உயிர் பெற்ற அழகிய சிற்ப வடிவம் போலத் தோன்றிய அந்த மங்கையின் முகத்தை நோக்கினேன்.

அவள் மூன்று உலகங்களும் பெறக்கூடிய ஒரு புன்னகை புரிந்தாள். அந்தப் புன்னகையுடனே என்னைப் பார்த்து, "ஏன் ஐயா! என்னைப் பார்த்தால், பாண்டிய ராஜகுமாரியாக தோன்றவில்லையா?" என்றாள்.

நான் உடனே விரைந்து, "அம்மணி! தங்களைப் பார்த்தால் பாண்டிய ராஜகுமாரியாகத் தோன்றவில்லைதான். மூன்று உலகங்களையும் ஒரே குடையின் கீழ் ஆளக்கூடிய சக்கரவர்த்தியின் திருக்குமாரியாகவே தோன்றுகிறீர்களே!" என்றேன்.

அப்போது அந்தச் சுந்தரி நாயகனைப் பார்த்து, "கேட்டீர்களா? முன்னைக்கு இப்போது தமிழ்நாட்டு ஆடவர்கள் புகழ்ச்சி கூறுவதில் அதிக முன்னேற்றம் அடைந்திருப்பதாகத் தோன்றவில்லை? தாங்கள், அந்த நாளில் என்னைப் பார்த்து, 'ஈரேழுப் பதினாழு புவனங்களுக்கும் சக்கரவர்த்தினியாயிருக்க வேண்டியவளை, இந்தச் சின்னஞ்சிறு தீவின் அரசியாக்கி விட்டேனே!' என்று சொன்னது ஞாபகமிருக்கிறதா?" என்றாள்.

அதைக் கேட்ட சுகுமார சோழர் சிரித்தார். அதுவரையில் மலைப்பாறையிலே உட்கார்ந்திருந்த அந்தத் தம்பதிகள் அப்பொழுது எழுந்தார்கள். ஒருவர் தோள்களை ஒருவர் தழுவிய வண்ணமாக இருவரும் நின்றார்கள். அப்போது ஓர் அதிசயமான விஷயத்தை நான் கவனித்தேன்.

மேற்குத் திசையில் சந்திரன் வெகுதூரம் கீழே இறங்கியிருந்தான். அஸ்தமனச் சந்திரனின் நிலவொளியில் குன்றுகளின் சிகரங்களும், மொட்டைப் பாறைகளும் கரிய நிழல் திரைகளைக் கிழக்கு நோக்கி வீசியிருந்தன. சிற்ப வடிவங்களின் நிழல்கள் பிரமாண்ட ராட்சத வடிவங்களாகக் காட்சி தந்தன. நெடிதுயர்ந்த மரங்களின் நிழல்கள் பன்மடங்கு நீண்டு, கடலோரம் வரையில் சென்றிருந்தன. என்னுடைய நிழல் கூட அந்த வெள்ளிய பாறையில் இருள் வடிவாகக் காணப்பட்டது.

ஆனால்...ஆனால்... அந்த அதிசயக் காதலர்கள் என் முன்னாலே, கண்ணெதிரே நின்றார்களாயினும், அவர்களுடைய நிழல்கள் பாறையில் விழுந்திருக்கக் காணவில்லை.

இதைக் கவனித்ததினால் ஏற்பட்ட பிரமிப்புடன் அந்தத் தம்பதிகளை மீண்டும் ஒரு முறை பார்த்தேன். விந்தை! விந்தை! அவர்களையும் காணவில்லை!

அந்த அழகிய தம்பதிகள் இருந்த இடம் வெறுமையாய், சூனியமாய் வெறிச்சென்று இருந்தது.

திடீரென்று நிலவொளி மங்கியது. சுற்றிலும் இருள் சூழ்ந்து வந்தது. என் கண்களும் இருண்டன. தலை சுற்றியது. நினைவிழந்து கீழே விழுந்தேன்.

மறுநாள் உதய சூரியனின் கிரணங்கள் என் முகத்தில் பட்டு என்னைத் துயிலெழுப்பின. திடுக்கிட்டு விழித்தெழுந்தேன். நாலாபுறமும் பார்த்தேன். முதல் நாளிரவு அனுபவங்களெல்லாம் நினைவு வந்தன. அவையெல்லாம் கனவில் கண்டவையா, உண்மையில் நிகழ்ந்தவையா என்று விளங்கவில்லை. அந்தப் பிரச்சனையைப் பற்றி யோசிக்கவும் நேரம் இல்லை. ஏனெனில் நீலக்கடல் ஓடையில் நடுவே நின்ற கப்பல், அதன் பயங்கரமான ஊதுகுழாய்ச் சப்தத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது. படகு ஒன்று இந்தக் கரையோரமாக வந்து நின்று கொண்டிருந்தது. அந்தப் படகு மறுபடியும் என்னை ஏற்றிக் கொள்ளாமல் போய்விடப் போகிறதே என்ற பயத்தினால், ஒரு பெரும் ஊளைச் சப்தத்தைக் கிளப்பிக் கொண்டு, நான் அந்தப் படகை நோக்கி விரைந்தோடினேன். நல்ல வேளையாகப் படகைப் பிடித்துக் கப்பலையும் பிடித்து ஏறி, இந்தியா தேசம் வந்து சேர்ந்தேன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோகினித் தீவு - Page 3 Empty Re: மோகினித் தீவு

Post by Guest Wed Jun 17, 2009 9:30 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
Guest
Guest


Back to top Go down

மோகினித் தீவு - Page 3 Empty Re: மோகினித் தீவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum