புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_lcapநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_voting_barநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_rcap 
65 Posts - 63%
heezulia
நாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_lcapநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_voting_barநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_rcap 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
நாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_lcapநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_voting_barநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
நாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_lcapநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_voting_barநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
நாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_lcapநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_voting_barநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
நாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_lcapநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_voting_barநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_lcapநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_voting_barநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
நாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_lcapநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_voting_barநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
நாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_lcapநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_voting_barநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_lcapநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_voting_barநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_lcapநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_voting_barநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_rcap 
17 Posts - 3%
prajai
நாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_lcapநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_voting_barநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_lcapநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_voting_barநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_lcapநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_voting_barநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_lcapநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_voting_barநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_lcapநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_voting_barநாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டியப் பேரொளி பத்மினி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 2:56 am

First topic message reminder :

நாட்டியப் பேரொளி பத்மினி - Page 2 Padmin11

அழகு, ஆற்றல், இளமை, ஈடுபாடு, உழைப்பு, உற்சாகம், ஊக்கம், எளிமை, ஏற்றம், ஓய்வறியா அர்ப்பணிப்பு, ஓங்கு புகழ் போன்ற தமிழ்ச் சொற்களின் ஒரே உருவம் பத்மினி. தாய்நாட்டின் விடுதலையோடு வேர் விடத் தொடங்கிய, நர்த்தன நந்தவனம்.

திரும்பத் திரும்பத் திரையில் வெவ்வேறு வயதுகளில் தோன்றினாலும், இந்திய ரசிகர்கள் பத்மினியை மட்டும் மனத்துக்குள் பாசப்பதியம் போட்டு வைத்துக்கொண்டார்கள். அவரது பாதச் சதங்கைகளின் ரீங்காரம் இன்னமும் சின்னத்திரைகளில் இந்தியா முழுதும் கேட்கிறது. மற்ற எந்த நடிகைக்கும் கிடைக்காத வரவேற்பு பத்மினிக்கு மாத்திரம் நிலைத்து நின்றது. பத்மினியின் நடிப்பு உயரத்தை அவ்வளவு எளிதில் வேறு யாரும் தொட்டுவிட முடியாது

மேடைகளில் கொண்ட பற்று காரணமாக பாடசாலைகளைத் துரிதமாகத் துறந்தவர் பத்மினி. பால்யத்தில் சமஸ்க்ருதம் கற்றுக்கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் நீடித்த அவரது தொடர் பங்களிப்பு உன்னதமானது. நடித்த அத்தனை படங்களிலும் சொந்தக் குரலில் பேசியது அன்றைக்கு அபூர்வம். அவரது சாதனைகளின் பிள்ளையார் சுழி அது!

அதனாலேயே, தமிழில் பத்மினி நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால், அவர் ஏற்று ஜொலித்த பாத்திரங்கள் தந்த மன நிறைவில், யாரும் அதை உணர்ந்ததே கிடையாது. அவரது படப் பட்டியலை சற்றே எண்ணிப் பார்த்தபோது வியப்பு தோன்றியது. ஆண்டுக்கு நான்கு ஐந்து படங்களில் நடித்திருந்தார். 1970-களில் அவர் இந்தியாவை விட்டு அமெரிக்காவுக்குக் குடும்பம் நடத்தச் சென்றார். அப்போது, ஏறக்குறைய எட்டுப் படங்கள் (1971-ல்) பத்மினி நடிப்பில் ஒரு சேரத் தமிழில் வெளிவந்தன. அவற்றில் அன்னை வேளாங்கன்னி, ஆதிபராசக்தி போன்ற பக்திச் சித்திரங்களும் அடங்கும்

வண்ணத்திரையில் பத்மினியின் ஒட்டுமொத்த சாதனைகளுக்கும் இந்தியர்கள் நன்றி சொல்ல வேண்டியது இருவருக்கு மட்டுமே. முதலாமவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இரண்டாமவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கலைவாணர் வற்புறுத்தி பத்மினியை நாயகியாக்கியவர். கணேசனோ, பத்மினியின் பரவசமூட்டும் நடிப்புக்குப் பாதை வகுத்துத் தந்தவர்.

தமிழில் பத்மினி பங்கேற்ற நூற்றுச் சொச்சம் படங்களில், அவர் கணேசனோடு நடித்ததே அதிகம். பணம் படத்தில் தொடங்கி லட்சுமி வந்தாச்சு (சூப்பர் டைட்டில் பொருத்தம் இயல்பாகவே அமைந்துவிட்டது. திரையில் அவர்களது முதலுக்கும் நிறைவுக்கும்) கடந்தும், கடைசி வரையில் நட்போடு நீடித்தது அவர்களின் மிக நீண்ட கலைப்பயணம், தோழமை யாவும்.

85 ஆண்டு காலத் தமிழ் சினிமா சரித்திரத்தில், இட்லியும் சாம்பாருமாக இணை சேர்ந்த ஒப்பற்ற ஜோடி அவர்கள். நிஜ வாழ்வில் (1960-களில்) தாலி கட்டி முடித்ததும், கால் கட்டு போட்டதும், தமிழர்களின் கல்யாணங்களில் சிவாஜி - பத்மினிபோல் சேர்ந்து வாழ திருமண வீட்டார் வாழ்த்தியது காலத்தின் கல்வெட்டு.

திருவனந்தபுரம் அரண்மனையில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் குரு கோபிநாத். அவரிடம் நாலு வயது பத்மினியும் (பப்பி) அக்கா லலிதாவும் நடனம் கற்றுக்கொள்ளத் தொடங்கினர். கடைக்குட்டி ராகினி அப்போது குழந்தை. பப்பியின் எட்டு வயசுக்கெல்லாம் அரங்கேற்றம் ஆனது. ஒன்பது கெஜம் சேலையில் பாலகி பத்மினி ஆடிய ஆட்டத்துக்கு, சிறப்பு விருந்தினர் ஜோத்பூர் மகாராஜா ஜோராகக் கை தட்டினார்.

அக்கா லலிதாவோடு ஏழு வயது பத்மினி இணைந்து தர்பார் நாட்டியங்களில் பங்கேற்றார். அன்றைக்குப் 'பாரிஜாத புஷ்பகரணம்' நாடகம். அதில், பத்மினிக்கு நாரதர் வேடம். தலைமை கலைவாணர்.

'தேவலோகத்தில் எல்லாரும் அழகாக இருப்பாங்கன்னு இப்பத்தான் தெரியுது. நாரதர்கூட ரொம்ப அழகாக இருக்கிறார்'. என்.எஸ்.கே.யின் பாராட்டில் த்வனித்த கிண்டலுக்கும் கேலிக்கும் எல்லாரும் சிரித்தார்கள். ஆனால் பப்பிக்கோ, வெட்கச் சிறகுகள் முளைத்தன. தம்பூராவால் தன் தாழம்பூ முகத்தை மூடிக்கொண்டார்.

பரம்பரையான கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல லலிதாவும் பத்மினியும். அவர்களுக்குள் அந்த ஆசை விதையை ஆழமாக ஊன்றியவர் மிஸஸ் பிள்ளை. பப்பியின் அம்மாவுக்கு அக்கா. பெரியம்மாவுக்கு, ஆறுமுகங்கள்போல் அத்தனையும் ஆண் பிள்ளைகள். எனவே, தங்கை மகள்களின் மீது தனிப் பிரியம்! பெரியம்மாவுக்கு, மலேசியாவில் நாலாயிரம் ஏக்கரில் ரப்பர் எஸ்டேட் இருந்தது. வசதியான வாழ்க்கை. பணம் லட்சியமில்லை. தங்கை பெற்ற செல்வங்களுக்குத் தங்கத்தில் உருத்திராட்சம் கட்டிப் போட்டார்.

பப்பியின் மாமா, பம்பாயில் கடற்படையில் கமாண்டர். உலகப் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் உதயசங்கரின் பக்கத்து வீட்டுக்காரர். விடுமுறைக்கு வந்திருந்த சகோதரியின் பெண்களை அவரிடம் அறிமுகப்படுத்தினார். சலங்கைகள் பேசின. இளம் தளிர்களின் அங்க அசைவுகளில், ஜதிக்குப் பதில் சொல்லும் நயண பாஷைகளில், நான்கு பாதங்களின் அதிவேகப் பாய்ச்சலில், கலா மேதை கண் கலங்கினார். ஏற்கெனவே திருவிடைமருதூர் மகாலிங்கம் பிள்ளையிடம் தேர்ச்சி பெற்றவர்களை சினிமாவில் ஆட அழைத்தார்.

'ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆதரவில் கல்பனா என்ற பெயரில் முழுநீள நாட்டியச் சித்திரம் தயாரிக்கப்போகிறேன். அதில் நீங்களும் ஆடுகிறீர்களா' என்றார். நிஜத்தில் மெய்சிலிர்த்துப் போனது இருமலர்களுக்கும். கலைச் சமூகத்தின் மேட்டுக்குடிகளிடம் வாசம் பரப்ப வந்திருக்கும் வசந்த அழைப்பைத் தவறவிடலாமா? எல்லோருக்கும் கிடைக்கிற வாய்ப்பா அது!

அரண்மனை அந்தப்புரங்களில் ஆடியவர்கள், சினிமா ஸ்டுடியோவில் தடம் பதித்தார்கள். சந்திரலேகா ஷூட்டிங்கும், கல்பனாவுக்கான நடனப் பயிற்சிகளும் வருடங்களை விழுங்கியபடி நடந்தன. ராஜ வம்சத்து யவன ராணிகளை, வாசனின் ஊழியர்கள் பிரியத்தோடு கவனித்தார்கள். அவர்களில் நல்ல பெர்சனாலிடியும் சுறுசுறுப்பும் உடையவராக, பத்மினியின் கண்களுக்குத் தட்டுப்பட்டவர் ஜெமினி கணேசன்!

கல்பனா ரிலீஸுக்கு பிறகு காலத்தை விரயம் செய்யாமல் 'டான்ஸ் ஆஃப் இந்தியா'வைத் தொடங்கினார்கள். எட்டுப் பேர் கொண்ட சொந்தக் குழு அமைந்தது. பாம்பாட்டி நடனம், சிவாபார்வதி, ராதாகிருஷ்ணன் போன்றச் சின்னச் சின்ன அயிட்டங்களைத் தாங்களே உருவாக்கி ஆடினர்.

சென்னைக்கு வந்தால், பட அதிபர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் கவனத்தில் நின்றவை, லலிதா - பத்மினியின் நாட்டிய நிகழ்ச்சி விளம்பரங்கள். ஒரு நாள் எழும்பூர் மியூசியம் தியேட்டரில் அவர்களது நடனத்தைப் பார்த்தார்.

'ஆஹா, எவ்வளவு களையான முகம் இருவருக்கும். அவர்கள் தன் சொந்த மண்ணான காரைக்குடியில் வந்து ஆடமாட்டார்களா. வேதாள உலகத்தில் நடிக்கவைத்தால் வசூல் கூடுதலாக இருக்குமே...' இதய வீணை மீட்டிய இனிய ராகத்துக்கு விடை தேடிப் புறப்பட்டார்.

'நாங்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டியம் மட்டுமே ஆடுவோம். படங்களில் நடிக்கமாட்டோம்'. கலை உலகம் தேடிச் சென்று கேட்டபோதெல்லாம் ஏமாற்றத்தோடு திருப்பி அனுப்பினார்கள் ஆடல் அரசிகள் இருவரும்.

சொல் புதிது. பொருள் புதிது என்று புதுமை விரும்பியாக வாழ்ந்தவர் மெய்யப்பன். நினைத்ததை முடிக்கும் திறமைசாலி. பலமுறை தீர யோசித்துத் தொண்டைக்குழிக்குள் ஒத்திகை பார்க்காமல் ஒரு வார்த்தை பேசமாட்டார்.

'உங்களுக்கு இஷ்டம் இல்லையென்றால் நீங்கள் கேரக்டர் ரோலில் நடிக்க வேண்டாம். ஆடினால் போதும்'. உடனடியாக, நான்கு நடனங்களுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு ஊருக்குத் திரும்பினார் செட்டியார்.

வேதாள உலகம், 1948 ஆகஸ்டு 11-ல் வெளியானது. லலிதா - பத்மினி ஆடிய பவளக்கொடி, பாம்பாட்டி நடனக் காட்சிகளுக்கு தடபுடலாகப் பிரமாதமாக விளம்பரம் செய்திருந்தார் ஏவிஎம். ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தின் பார்வையும் பத்மினி மீது பதிந்தது. விளைவு, திருவிதாங்கூர் சகோதரிகளின் பங்களிப்பு இல்லாமல் எந்தப் படமும் போணி ஆகாது என்ற நிலை விரைவில் வந்தது. சுமார் நூற்றைம்பது சினிமாக்களில் வெறும் நடனம் மாத்திரம் ஆடினர்

எல்லோரையும் போலவா கிருஷ்ணன். குடும்ப நண்பர் ஆயிற்றே! தேவதைகளின் தாயாரை நேரடியாகவே அணுகினார், நாயகி வாய்ப்போடு.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:06 am


மன்னாதி மன்னனில் கவனம் ஈர்க்கும் இன்னொரு புதிய அம்சம், க்ளைமாக்ஸ். பத்மினியை பி.எஸ்.வீரப்பா தன் ஆசைக்கு இணங்கச் செய்யும் கட்டம். அவரிடம் அகப்பட்டுவிடக்கூடாது என்கிற தவிப்பில், அவஸ்தையான சூழலில் எம்.எல்.வசந்தகுமாரியின் போராடும் குரலில், வீரப் பெண் சித்ராவின் (பத்மினி) தன்மானத்தைப் பெருமிதத்துடன் கம்பீரமாக இசைக்கும்…

‘கலையோடு கலந்தது உண்மை கற்புக் கனலோடு பிறந்தது என் தமிழ் ஆளும் பெண்மை…’

பத்மினியின் நாட்டியத் திறமையை வெளிப்படுத்த கிடைத்த மாறுபட்டக் கதைக் களம். 25 ஆண்டுகளுக்குப் பின், டி.ராஜேந்தர் அதே போன்ற பாடல் காட்சியை தனது ‘மைதிலி என்னைக் காதலி’ படத்தில் பயன்படுத்திக்கொண்டார். அமலா ஆட ஆட ‘நானும் உந்தன் உறவை நாடுகின்ற பறவை…’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் நெஞ்சைத் தொடும்.

எம்.ஜி.ஆருடன் குறைவாக நடித்தவர் பத்மினி. எல்லாரையும்போல் மக்கள் திலகத்தின் மனிதநேயம், அவரது உள்ளத்திலும் உரிமையோடு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டது. பத்மினியின் திருமணத்துக்கு முன்னே உருவான படம் ‘ராணி சம்யுக்தா’.

பிருதிவிராஜன், குதிரை மீதேறி விரைந்து வந்து சம்யுக்தாவைக் கவர்ந்து செல்ல வேண்டும். அந்தக் காட்சி எடுக்கப்படாமல் இருந்தது. பத்மினி அதை முடித்துத் தர வந்தபோது நிறை மாதக் கர்ப்பிணி. திரையில் அது தெரியாதபடி மறைத்துப் படமாக்குவது முக்கியம். எம்.ஜி.ஆர். அப்போது எப்படி நடந்துகொண்டார் என்பதை பத்மினியின் வார்த்தைகளில் வாசிக்கலாம்.

‘எம்.ஜி.ஆர். என்னை எப்போதும் ‘என்னம்மா தங்கச்சி, நல்லா இருக்கியா’ என்பார். நான் துணிச்சலாக குதிரை சவாரிக்குத் தயாரானேன். பிறகுதான் எம்.ஜி.ஆருக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. என்னைக் கடுமையாகக் கோபித்துக்கொண்டார். ‘உன் வயித்துல உள்ள பிள்ளைக்கு ஏதாவது ஆச்சுன்னா, என்னம்மா நீ...?’ என்றார்.

கர்ப்பிணியை குதிரையில் எப்படி அழைத்துச் செல்வது, ஏதாவது பிசகாகிவிடுமோ என்று எம்.ஜி.ஆருக்கு ஒரே கவலை. தலையணையெல்லாம் வைத்து, பயப்படாதீங்க என்று எனக்கு தைரியம் சொல்லி, என்னை அந்த நிலையில் நடிக்கவைத்ததற்காக பட அதிபரைத் திட்டினார். புரொடியூசருக்கு வேறு வழியிருக்கவில்லை. ‘பாவம்! வயிற்றில் குழந்தையோடு இருக்கிறார். கஷ்டப்படுத்தாமல் காட்சியை எடுங்கள்’ என எச்சரிக்கை செய்தவாறே உடன் நடித்தார்’.

ராணி சம்யுக்தாவில் மட்டுமல்ல, ரிக்ஷாகாரனில் நடித்தபோதும் பத்மினியைப் புதிய சங்கடம் வாட்டியது. அப்போது, தனது ‘உலகம் சுற்றும் வாலிபனு’க்காக எம்.ஜி.ஆர். அயல்நாட்டுப் பயணத்தில் இருந்தார். கழக இடைத்தேர்தல்கள் என அனைத்து நொடிகளிலும் நேரம்போல் இயங்கினார். இடையில், பத்மினிக்கு அவருடைய கணவரிடமிருந்து குடித்தனம் நடத்த அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்து விட்டது.

பத்மினிக்குப் பதற்றம் அதிகரித்தது. எம்.ஜி.ஆர். இருக்கிற பிஸியில், அவர் ஒத்துழைக்க நினைத்தாலும் அரசியல் குறுக்கிடுமே என்கிற தவிப்பு கூடியது. குறித்த காலத்தில், பத்மினி அவரது கணவரைச் சென்று சேர வேண்டும் என்பதற்காக, எம்.ஜி.ஆர். தன் மற்ற இயக்கங்களை ஒத்திவைத்துவிட்டு, இரவு பகலாகத் தொடர்ந்து பத்மினியோடு நடித்துத் தீர்த்தார். அதோடு மட்டுமல்ல, பத்மினி முன்னிலையில் வாத்தியாராகி மஞ்சுளாவுக்கும் மகிழ்ச்சியோடு பாடம் நடத்தினார்.

‘எங்க தங்கச்சியைப் பார்! ஒத்திகைன்னாலும்கூட, டேக் மாதிரி எவ்வளவு கரெக்டா செய்யறாங்க பார். இதைப்போல நடிக்க நீயும் கத்துக்கணும்’.

பத்மினிக்கு 27 வருடங்களுக்கு மேலாக அரிதாரம் பூசியவர் மேக்அப்மேன் தனகோடி. அவரை அம்போ என்று விட்டுவிட்டு அமெரிக்காவுக்குப் போவதில் பத்மினிக்கு சம்மதம் கிடையாது. எம்.ஜி.ஆரிடம் சொன்னால் ஏதாவது அதிசயம் நடக்கும் என்ற நம்பிக்கை. தனகோடியின் எதிர்காலப் பிழைப்பு குறித்து தன் வருத்தத்தை வெளியிட்டார்.

சினிமா எஜமானர்களை எதிரிகளாகப் பாவிப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம். தொழிலாளிகளிடம் தனிப் பிரியம் காட்டுவதே தலைவரின் ஸ்டைல். பத்மினி விஷயத்திலும் அது நிரூபணமானது. தன்னுடைய புதிய ஜோடியான லதாவுக்கு தனகோடியை மேக்அப்மேனாக எம்.ஜி.ஆர். நியமித்தார்.

எவ்வளவுதான் தோண்டித் துருவினாலும், எம்.ஜி.ஆர். - பத்மினி சமாசாரம் இவ்வளவுதான். அதற்காக, வாத்தியாருடைய ரத்தத்தின் ரத்தங்கள் வருத்தப்பட வேண்டாம். சரோவைப் பற்றி எழுதும்போது எம்.ஜி.ஆர். புராணம் சரளமாக நீளும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:06 am


அடுத்து, காதல் மன்னனை கவனிக்கலாம்.


எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு முன்னரே பத்மினியோடு அதிக அன்யோன்யம் கொண்டவர் ஜெமினி கணேசன். பத்மினி - ஜெமினியின் நட்புக்குக் களம் அமைத்துத் தந்தவை, வாசனின் ஜெமினி ஸ்டுடியோவும், பத்மினியின் மயிலாப்பூர் வீடும்.

ஜெமினி - பத்மினி இருவரும் நட்சத்திரங்களாக ஆவோமா எனச் சிந்திக்காத அறியாப் பருவம். தோழமை அவர்களைத் துரத்தியது. லல்லி, பப்பி இருவரையும் ஏற்றிக்கொண்டு சைக்கிளில் ட்ரிபிள்ஸ் போவதென்றால் ஜெமினிக்கு இரட்டிப்பு சந்தோஷம். திருவிதாங்கூர் சகோதரிகளுக்கு மிதிவண்டி பழகக் கற்றுத்தந்தவர் ஜெமினி கணேசன்.

பத்மினி, உலக நாட்டியப் பேரொளியாக வருவார் என்கிற பகல் கனவெல்லாம் அன்று ஜெமினிக்குக் கிடையாது. அவர் நேசம் பாராட்டிய பப்பி, சின்னப் பெண். அவரோடு சேர்ந்து சினிமாவில் டூயட் பாடுவோம் என்றெல்லாம் காதல் மன்னன் நினைக்கவே இல்லை. ஜெமினியின் வசீகர வாலிபம், விரைவில் அவரை ஹீரோவாக்கிவிடும் என்று சிறுமி பத்மினி எண்ணியது நடந்தது.

ஜெமினிக்கு இயல்பாகவே கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டு. ஐம்பது அறுபதுகளில், வட இந்தியக் கலைஞர்களுடன் சென்னையில் ஸ்டார் கிரிக்கெட் மேட்ச் நடக்கும். ஜெமினி கேப்டனாகி வழிகாட்டுவார். பத்மினியின் வீட்டில் நெட் ப்ராக்டீஸ் நடைபெறும். பத்மினி உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு கிரிக்கெட் கெய்டு ‘சாம்பார்’தான்.

ஜெமினியோடு பத்மினி முதன்முதலாக நடித்தது ஆசா தீபம் என்கிற மலையாளப் படம். தமிழிலும் ஆசைமகன் என்ற பெயரில் வெளியானது. நிஜ வாழ்வின் பிரியமான தோழி, அதில் வில்லியாகத் தோன்றினார். ஆசை மகன் படத்தில் பப்பி மீது கத்தி வீச வேண்டிய துர்ப்பாக்கியம் ஜெமினிக்கு. ரிகர்சல் பார்த்தார்கள். ஜெமினி கத்தியை வீச, யாரும் எதிர்பாராத நிலையில் கதவைத் திறந்துகொண்டு பத்மினி வந்துவிட்டார். ஜெமினி வீசிய கத்தியை தன் கையாலேயே பத்மினி பிடித்ததில், பப்பியின் கையில் வெட்டுப்பட்டு குருதி வழிந்தது.

ரத்தப்பூக்களின் வாசத்தில் அவர்களின் கலைப்பயணம் தொடங்கியது. சிவாஜி - பத்மினியை வைத்து அன்பு என்ற படத்தைத் தயாரித்து இயக்கியவர் நடேசன். அவரது நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ், 1956-ல் ஜெமினி - பத்மினியை ஆசை படத்தில் முதன்முதலாகக் காதல் ஜோடியாக்கியது. ஜெமினி தன் ‘ஆசை’நாயகியை பாப்ஸ் என்று அழைக்கத் தொடங்கினார்.

ஆசையைவிட, 1957-ல் சிட்டாடல் நிறுவனத்தில் உருவான ‘மல்லிகா’, ஜெமினி - பத்மினி இணைக்கு முதல் வெற்றிச்சித்திரம்! மங்கையர்திலகத்துக்குப் பின் மதுரைவீரனைவிட, மல்லிகாவில் பத்மினியின் நடிப்பு பர்ஸ்ட் க்ளாஸ் எனப் பத்திரிகைகள் ஒரே குரலில் உரத்துக் கூறின. அதில் இடம் பெற்ற ‘நீலவண்ணக் கண்ணனே உனது எண்ணமெல்லாம்…’, ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே…’ ஆகியவை சூப்பர் ஹிட் பாடல்கள்.

ஜெமினி ஸ்டுடியோவின் பிரம்மாண்டமான கருப்பு வெள்ளைச் சித்திரம் வஞ்சிக்கோட்டை வாலிபன். எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரிக்க வாசன் முடிவு செய்தார். நாடோடி மன்னனில் எம்.ஜி.ஆர். தீவிர கவனம் செலுத்திய நேரம். வாசனுக்கு அவரது கால்ஷீட் கிடைக்காமல் போனது. பின்னர் ஜெமினி கணேசன் அதில் ஹீரோ ஆனார். அப்படியும் பாஸ் திருப்தி அடையவில்லை. ரொமான்டிக் காதலன், ஆக்ஷன் ஹீரோவானால் ஜனங்கள் படம் பார்க்க வர வேண்டுமே.

தன் படத்துக்கு ஒரு தனித்தன்மையை வேண்டி அன்றைய மிகப்பெரிய நாட்டியத்தாரகைகளாகவும், அகில இந்திய நட்சத்திரங்களாகவும் இருந்த பத்மினி, வைஜெயந்திமாலா இருவரையும் நாயகிகளாக நடனமாடவிட்டார். ஒரே சமயத்தில் தமிழ், ஹிந்தி (ராஜ் திலக்) இரண்டிலும் அதே கலைஞர்களுடன், செலவைப் பார்க்காமல் உருவாக்கினார். ரசிகர்களின் ஆர்வத்தீ கொழுந்துவிட்டு எரிந்தது. கூடுதலாக, எல்லோரையும் வாயைப் பிளக்கச் செய்யும் வகையில், பாதங்களால் அனைவரின் நெஞ்சங்களிலும் என்றுமே அழியாத பரவச கோலத்தை அள்ளித் தெளித்தார்.

வஞ்சிக்கோட்டை வாலிபனின் ‘கண்ணும் கண்ணும் கலந்து...’ என்கிற போட்டி நடனம், பத்மினியின் கலைவாழ்வில் நிச்சயம் ஒரு காலப் பெட்டகம்! ஏறக்குறைய, ஒன்பது நிமிடங்கள் பத்மினியும் - வைஜெயந்தியும் ஆடிய ‘சாதூர்யம் பேசாதடி என் சதங்கைக்குப் பதில் சொல்லடி…’ நூற்றாண்டுகள் கடந்தும் ஜீவிக்கும். அப்பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது, பத்மினியின் முட்டி பெயர்ந்துவிட்டது. குருதி கொப்பளிக்கும் பத்மினியின் அனுபவத் தடம் இது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:07 am


‘படப்பிடிப்புத் தளம், காலை நான்கு மணிக்கே விளக்குகள் அமைத்துத் தயாராகிவிடும். எப்போதும் ஆடத் தயாராக இருக்க வேண்டும். அதனால் மேக்கப்பை கலைக்காமல் ஜரிகைப் புடைவையும் நகைகளுமாக நாள் முழுதும் அமர்ந்திருப்போம். சற்று நீளமான பாடல். உண்மையிலேயே சவாலாக இருந்தது. காட்சிகள் வேகவேகமாக மாறும். ‘பார்க்கும் ரசிகர்கள், சலித்துக்கொள்ளவே கூடாது. ஒவ்வொரு இடத்திலும் டெம்போ கொஞ்சமும் குறையாமல் ஆட வேண்டும்’ என்று வாசன் சொல்லிவிட்டார்.

‘எஸ்.எஸ்.வாசன் மிகப்பெரிய டைரக்டர். சமயோசிதம் தெரிந்தவர். திருப்தி ஏற்படுகிற வரையில் ஷாட் முடியாது. ஷாட் எடுத்து முடிந்ததும், தன்னுடைய உணர்ச்சிகளை வெளியே காட்டமாட்டார். அவரிடமிருந்து கட், ஓகே என்று எந்த வார்த்தையும் வராது. ‘இதை மறுபடியும் ஒரு தரம் எடுத்துப் பார்க்கலாமே’ என்பார். முழுத் திருப்தி ஏற்படுகிறவரையில் என்னையும், வைஜெயந்தியையும் வைத்துத் தொடர்ந்து வேலை வாங்கினார்.

‘நீங்கள் பார்க்கும்போது நானும் வைஜெயந்தியும் சேர்ந்து ஆடுவதுபோலக் காட்சிகள் வரும். நிஜத்தில், பெரும்பகுதி காட்சிகளைத் தனித்தனியே எடுத்தார்கள். சிலவற்றை மட்டும், ஒன்றாக ஆடுவதுபோல் படமாக்கினார்கள். அவர் எப்படி ஆடினார் என்று எனக்குத் தெரியாது. நான் எப்படி ஆடினேன் என்பதையும் வைஜெயந்தி அறியவில்லை.

‘சாதூர்யம் பேசாதடி என்கிற வரிகள் ஒலிப்பதற்கு முன் நான் முட்டி போட்டு ஆடுவேன். அவ்வாறு தரையில் அங்கும் இங்கும் ஆடியபோது, முழங்காலில் இருந்து ரத்தம் தெரித்தது. இடையில் நிறுத்தினால், மீண்டும் அத்தகைய வேகமான அங்க அசைவுகள் அமையாமல் போகலாம். எனவே, வலியைப் பொறுத்துக்கொண்டு சுழன்று சுழன்று ஆடி முடித்தேன். ஆர்வக்கோளாறில், ரத்தம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

‘மொத்தக் காட்சியையும் எடுத்து முடிந்ததும் அப்பாடா என்றிருந்தது. படத்தில் பார்த்தபோது ஒரே பிரமிப்பாகத் தோன்றியது. அத்தனை ஜோராக அமைந்துவிட்டது.

‘இந்தக் காட்சியையொட்டி எங்கள் இருவருக்குமே ஒரு போட்டி இருந்தது. பிரமாதமாக ஆட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. செட், ஜோடனை, எங்களது உடை, நகைகள், மேக்கப் எல்லாவகையிலும் ஒரு சவால் பரவியிருந்தது. ஒருவருக்கொருவர் தோல்வி – வெற்றி இல்லாமல் ஈடு கொடுத்தோம்.

‘படம் வெளிவந்தபோது, அந்த நடனத்தை மக்கள் எனக்கும் வைஜெயந்திக்குமான உண்மையான போட்டியாகவே எண்ணிக்கொண்டார்கள். யார் முந்திக்கொள்வார்கள் என்று நாற்காலியின் நுனிக்கே ரசிகர்கள் வந்து விடுவார்கள்’.

ஏறக்குறைய ஆட்டம் பூர்த்தியாகும் தருணம். பத்திரிகையாளர் நாரதர் ஸ்ரீனிவாசராவிடம் நயமாகக் கூறப்பட்ட விஷயம், ‘போட்டியின் முடிவில் பத்மினி தோற்பதாகக் காட்டக்கூடாது. நாரதர் ஸார்! உங்க பாஸ்கிட்ட கண்டிப்பா சொல்லிடுங்க. எங்க பப்பி எவ்வளவு பெரிய டான்ஸர் என்பது உங்களுக்கே தெரியும்.அவள் தோல்வி அடைவதாகக் காட்டினால், அவளுடைய பெயர் கெட்டுப்போகும் ஆமா! அவள் ஜெயிக்காமல் போவதாக நீங்கள் எடுப்பதானால், பப்பி ஷூட்டிங் வரமாட்டாள்’ - தாயார் சரஸ்வதி அம்மாள், சர்ச்சையைக் கிளப்பினார்.

சரஸ்வதி அம்மாளுக்குக் கொஞ்சமும் சளைத்தவரில்லை, வைஜெயந்தியின் வளர்ப்புப் பாட்டி யதுகிரி. ‘எங்க பாப்பா தோற்பதாகக் காட்டக்கூடாது’.

நாரதர், நடந்ததை முதலாளியிடம் விளக்கினார். இரண்டு நாள்கள் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார் வாசன். திரைக்கதையில் லேசான மாற்றம். பத்மினியும் வைஜெயந்தியும் ஆக்ரோஷமாக ஆடிடும் நிலையில், சபாஷ் சரியான போட்டி என்பார் பி.எஸ்.வீரப்பா. சில நிமிடங்களில் யாருக்கு வெற்றி என்பது தெரிவதற்குள், ஜெமினி விளக்கை அணைத்துவிடுவதாகக் காட்சி முடியும்.

தென் இந்தியாவில் வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினியின் பெயரும், வடக்கில் ராஜ்திலக்கில் வைஜெயந்தியின் பெயரும் டைட்டிலில் முதல் இடம் பிடித்தன.

1959-ல் வீரபாண்டிய கட்டபொம்மன். அதில் பப்பியின் அறிமுகக் காட்சி ஏக அமர்க்களம். ‘அஞ்சாத சிங்கம் என் காளை…’ என ஆடல் பாடலுடன் களை கட்டும். பத்மினியின் தலை அலங்காரமும், காஸ்ட்யூம்களும் மகளிரால் மறக்கமுடியாது. பத்மினி, ஜெமினியின் மனைவியாக, அவரைப் போருக்கு அனுப்ப அஞ்சி, ‘போகாதே போகாதே என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்…’ என்று காண்பவர்களையும் அழவைப்பார். ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா’வுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஜெமினிக்காக பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய முதல் டூயட் அது.

1960-ல், ஸ்ரீதரின் மீண்ட சொர்க்கத்தை யாரால் மறக்க முடியும்! அதில், பரதக்கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் அதி அற்புதமான நிர்மலா என்கிற வேடம் பத்மினிக்கு. திரையில் பத்மினி தெரியவில்லை. நிர்மலாவே யாதுமாகி நின்றாள். ஜெமினி அவரை நாட்டியத்தில் நெறிப்படுத்தும் காதலனாக நடிப்பில் சிகரம் தொட்டார். தொழில்நுட்ப ரீதியில் மிகச்சிறந்த படமாக உருவான மீண்ட சொர்க்கம், வர்த்தக ரீதியில் தோல்வி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:09 am


‘மன நாட்டிய மேடையில் ஆடினேன்
கலை காட்டிய பாதையில் வாடுகிறேன்…’

என்கிற கண்ணதாசனின் காவிய சோகமும், டி.சலபதிராவின் தனிமை ஏக்கம் த்வனிக்கும் மெல்லிய சிற்றோடை இசையும், பி.சுசிலாவின் உருக்கமான குரலில் இழையோடும் பிரிவின் தேய்மானமும், பத்மினியின் சித்திரப்பாவை நடிப்பும்... மீண்ட சொர்க்கத்தில் காலக் கரையான் அரிக்காமல் இன்னமும் மிச்சம் இருக்கின்றன. கோடிக்கணக்கான உலகத் தமிழச்சிகளது நெருக்கடியான இரவுகளில், துன்பத்தின் நீளத்தைக் குறைக்கும் இதமான மயிலிறகு ஸ்பரிசம் அப்பாடல்!

1966 சித்தியில், பத்மினியின் கண்ணியமான காதலனாக வந்தவர் ஜெமினி. அதற்குப் பிறகு ஜெமினி - பத்மினி ஜோடி நடித்த படங்கள், எதிர்காலம், திருமகள், தேரோட்டம், அப்பா டாட்டா ஆகியவை. அவை ஒவ்வொன்றும் மாறுபட்ட கதைகளைச் சொன்னபோதும், மக்களின் வரவேற்பைப் பெறவில்லை.

அவற்றில், மல்லியம் ராஜகோபாலின் படைப்பான ‘அப்பா டாட்டா’, மிக வித்தியாசமானது. பெற்ற குழந்தையை மனைவி சரியாகக் கவனிப்பதில்லையோ என்கிற சஞ்சலத்தில் உழலும் கணவனாக ஜெமினியும், அதனால் ஏற்படும் கோபதாபங்களால் நிஜமாகவே பிள்ளையைத் தொலைத்துவிடும் மனைவியாக பத்மினியும் வருவதாகக் காட்சிகள் பின்னப்பட்டிருக்கும். மிக காலதாமதமாக வெளிவந்து மக்கள் மனத்தில் பதியாமல் போனது.

அதில், பி.சுசிலாவின் குரலில் ஒலித்த தாலாட்டு -

‘கிண்ணத்தில் தேன் எடுத்து எண்ணத்தால் மூடி வைத்தேன்
என்னவோ இறைவனுக்கு என்னிடத்தில் கருணை இல்லை…’

என்கிற கண்ணதாசனின் சூப்பர்ஹிட் பாடல், எத்தனை பேருக்கு இன்று நினைவில் நிற்கும்!

பீம்சிங்கின் காலத்தை வென்ற பா வரிசைப் படங்களின் கதை ஆசிரியர் எம்.எஸ்.சோலைமலை. அவர் முதன்முதலாகத் தயாரித்து இயக்கிய படம், எதிர்காலம். அதில், பத்மினிக்கு சேரியில் வசிக்கும் ரவுடிப் பெண் வேடம். அதற்காக ரிக்ஷா ஓட்டவும், மெட்ராஸ் பாஷை பேசவும் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

விமரிசனம் எழுதிய தமிழகத்தின் பிரபல முன்னணி வார இதழ் -

‘பத்மினியைப் பற்றி உயர்வாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் இந்தப் படத்துக்குப் போனால், மிகுந்த மனக்கஷ்டத்துக்கு உள்ளாகக்கூடும்’ என்று எழுதியது.

மெர்ரிலாண்ட் சுப்ரமணியத்தின் குமாரசம்பவம் என்ற மலையாளப் படத்திலும் பரமசிவனாக ஜெமினியும், பார்வதியாக பத்மினியும் நடித்திருக்கிறார்கள். பாலமுருகனாக நின்றவர் ஸ்ரீதேவி.

***

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:11 am

சிவாஜியுடன் நீங்கள் அதிகம் இணைந்து நடித்ததற்குக் காரணம், உங்களுக்கும் அவருக்கும் இருந்த நட்பா, இல்லை உங்கள் இருவரின் நடிப்பாற்றலா?

இந்தக் கேள்விக்கான பதிலை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல நேர்காணல்களில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பத்மினி. இனி வருவது அவற்றின் தொகுப்பு. இதில் ஒவ்வொரு சொல்லும் பப்பிக்கே சொந்தம்.

‘நான் மறக்கமுடியாத ஒருவர் சிவாஜி. கணேஷ் நடிகராக மட்டுமின்றி என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரொம்பவே அக்கறையானவர். பப்பியம்மா என்றுதான் என்னை அழைப்பார். உற்சாகமான மூடில் இருந்தால், பேப் என்று அழைப்பார். நான் நன்றாகத் தமிழ் பேச ஆரம்பித்ததே சிவாஜியால்தான்.

1959-ல் நெப்டியூன் ஸ்டுடியோவில் தங்கப்பதுமை படம் எடுத்தார்கள். ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்டர். அதில் வரும் ‘ஈடற்றப் பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்...’ என்ற பாடல், அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் பாட்டினூடே நான் கண் பறிக்கப்பட்ட நிலையில் இருக்கும் என் கணவரைப் பார்த்து, ‘அத்தான் உங்கள் கண்கள் எங்கே அத்தான்?’ என்று வீறிட வேண்டும்.

காட்சி விளக்கப்பட்டதும், நான் ரிகர்சல் எதுவுமின்றி கதறி அழுது நடித்தேன். அப்படி ஒரு சம்பவம் எனக்கே நேர்ந்தது போலான நடிப்புக்குள் நான் ஆழ்ந்துபோனேன். யதார்த்த நிலைக்கு வர சில விநாடிகள் பிடித்தது. சீன் முடிந்ததும், ‘நடிச்ச மாதிரியே தெரியல. ரொம்ப இயல்பா இருந்தது பப்பி’ என்று சிவாஜி பாராட்டினார்.

சிவாஜியிடமிருந்து இலேசில் பாராட்டு வாங்கிவிட முடியாது. அவரே பாராட்டிய பிறகு அதற்கு ஈடான பாராட்டு வேறு எதுவும் இருக்கமுடியாது.

அவருடன் நடிப்பதே ஒரு தனியான அனுபவம். சிவாஜி ஒரு பிறவி நடிகர். கணேஷைப்போல ஒரு நொடியில் முகபாவங்களை மாற்றிக்கொள்ளவோ, உணர்ச்சியைப் பொழிந்து வசனம் பேசவோ யாராலும் முடியாது. நான் ஒரு நல்ல நடிகை என்று பெயர் வாங்கியதற்கு, சிவாஜியுடன் நடித்த படங்களில் பெற்ற பயிற்சியே காரணம்.

‘நான் நாடகத்தில் நடித்துத் தேர்ச்சியுற்று முன்னுக்கு வந்தவன். நீ மேடையில் பாவனைகளைக் காட்டக் கற்று பெயர் பெற்றவள். உனக்குச் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு என்ன சிரமம்?’ என்பார். நான் நடிக்க வேண்டியவற்றை அவரே நடித்தும் காட்டுவார். எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டிகூட இருக்கும். என்னால் முடிந்தவரையில் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறேன்.

பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள், சிவாஜி படங்களில் அதிகம் இருந்தது. மேலும் நடிப்புத் தொழிலில் என் தாயார் சொன்னபடிதான் பட ஒப்பந்தங்கள் அமையும். நடிகர் திலகத்தோடு நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் எனக்குப் பழக்கமானவர். இந்த இரண்டையுமே பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் நினைத்துக்கொள்வேன்.

சம்பூர்ண இராமாயணம் ஷூட்டிங்குக்காக நாங்கள் ஒகேனக்கல் போயிருந்தோம். இதில் சிவாஜி பரதனாக நடித்ததை ராஜாஜியே பார்த்துப் பாராட்டி இருக்கிறார். கணேஷுக்கு வேட்டை என்றால் ரொம்பப் பிரியம். எங்கேயாவது ஒரு சிறு சான்ஸ் கிடைத்தால் கிளம்பிவிடுவார். காடுகள் நிறைந்த மலைப்பாங்கான இடமான ஒகேனக்கல்லில் நாங்கள் விடுதியில் தங்கி இருந்தோம்.

இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. எனக்குப் பயமாகப் போயிற்று. எழுந்து மெதுவாகக் கதவைத் திறந்தேன். வெளியே சிவாஜி நின்றுகொண்டிருந்தார்.

‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன். ‘பப்பி! உனக்கு ஒரு ப்ரஸண்ட்’ என்று தன் கையில் இருந்த பையில் கையை விட்டார். வெளியே வந்தது ஒரு அழகான சிறு முயல் குட்டி!

சிவாஜியோடு நடிப்பதற்கு அவர் மீது செலுத்தும் அன்பும் நட்பும் மட்டும் போதாது. அவரோடு ஈடுகொடுத்து நடிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. ‘இதைவிடச் சிறப்பாக உன்னால் நடிக்க முடியும். உன்னுடைய திறமை எனக்கு நன்றாகத் தெரியும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, பிரமாதமாக நடிக்க வைப்பார்.

நான் எப்படி நடித்தால் நன்றாக வரும். இன்னும் அதை எவ்விதம் வளர்த்துக்கொள்வது என்பதெல்லாம் அவர்தான் சொல்லித் தருவார். இல்லாவிட்டால், அன்று என் வயதுக்கு மீறிய வேடங்களில் என்னால் நடிகர் திலகத்தோடு நடித்திருக்க முடியுமா?

சிவாஜி ரொம்ப பங்க்சுவலாக, காலை ஏழு மணிக்கெல்லாம் செட்டில் நடிக்க வந்துவிடுவார். என்னைப் போன்ற ஹீரோயின்கள், மேக் அப் செய்துகொண்டு வர நேரமாகும். சில சமயம், நான் பத்து மணிக்குத்தான் தயாராக முடியும். அதுவரைக்கும் கணேஷ் பொறுமையாக இருப்பார். இதுவே எனக்கு வெட்கமாகக்கூடப் போய்விடும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:12 am


சிவாஜி, சேர்ந்தாற்போல் ஒரு டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருப்பார். அவற்றில் அதிகமாக அவரோடு நானும் பங்கு பெறுவேன். ஒரு சினிமாவுக்கும் இன்னொரு சினிமாவுக்கும் கொஞ்சமும் குழப்பம் இல்லாமல், கணேசன் வசனம் பேசுவதையும், நடிப்பை மாற்றிக்கொள்வதையும் பார்க்கும்போது எனக்குப் பிரமிப்பாக இருக்கும்! உலகத்திலேயே மிகச்சிறந்த கலைஞர் நடிகர் திலகம். அதைப்பற்றி இரண்டு கருத்துகள் இருக்கமுடியாது.

கெய்ரோவில் நடந்த ஆசிய-ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் அனுப்பிவைக்கப்பட்டது. அதையொட்டி, சிவாஜியுடன் நானும் ராகினியும் அம்மாவும் போயிருந்தோம்.

‘புகழ் பெற்ற நடிகர்கள் ஒமர் ஷெரீப்போல் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். சிறந்த நடிகர் என்ற மரியாதை யாருக்குக் கிடைக்கப்போகிறதோ...? என எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். பரிசு, சிவாஜி கணேசனுக்குத்தான் என்று அறிவிக்கப்பட்டபோது, எங்களுக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி கணேசன் அந்த சந்தோஷத்தைத் தாங்கமுடியாமல் உருகிப்போனார். என்னால் இந்தியாவுக்கு இவ்வளவு பெரிய கௌரவமா... என் உடம்பெல்லாம் சிலிர்க்குது’ என்று உணர்ச்சிவசப்பட்டார்’.

சிவாஜியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல. பொறுமையுடன் அதிக தடவை சொல்லிக் கொடுப்பார். அதில் திருப்தி அடையும்வரையில் விடமாட்டார். நடிப்பு நன்றாக இருந்தால் உடனே பாராட்டுவார். சரியாக இல்லையென்றால் டைரக்டரிடம் சொல்லி, மீண்டும் எடுக்கச் சொல்வார். சிவாஜியால் நடிக்க முடியாத ரோல் எதுவும் கிடையாது. ஆனால் அதைச் செய்வதற்கு முன் அவர் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்துக்கொள்வார்.

சென்னைக்கு எப்போது வந்தாலும், நான் சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். ஒரு நாளாவது அவர் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவேன். 1979-ல், டிசம்பர் சீசனில் மியூசிக் அகாடமியில் என்னுடைய ராமாயணம் நாட்டிய நாடகம் இரண்டு நாள்கள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மனைவி கமலா அம்மாளோடு அவர் வந்திருந்தார்.

ஒரு ஆள் உயரத்துக்கு ரொம்பப் பெரிய மாலை ஒன்றைத் தூக்க முடியாமல் எடுத்துக்கொண்டு வந்து, ஸ்டேஜில் என்னை கௌரவித்துப் போட்டார். அவர் வரப்போவது எனக்குகூடத் தெரியாது. ப்ளசன்ட் சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என்று யாருக்கும் சொல்லாமலே வந்தாராம். பத்மினி இப்ப நடிக்கிறதுகூட இல்லையே என சிலர் கேட்டபோது, ‘நடிக்காவிட்டால் என்ன? பப்பி ஒரு கிரேட் ஆக்ட்ரஸ். அதுக்காகவே மரியாதை செய்யணும்’ என்று சிவாஜி சொன்னதாகக் கூறினார்கள்.

ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிட சிவாஜி அமெரிக்கா வந்தபோது, விமான நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்றேன். என் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹார்ட் ஆபரேஷனுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த சமயம். என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. கமலா அம்மாள் என்னைப் பார்த்துக் கண் கலங்கிவிட சிவாஜி சோகமானாலும், ‘ஷீ ஈஸ் சச் எ பியூட்டிஃபுல் லேடி’ என என்னைத் தட்டிக் கொடுத்தார். அழுதுவிடக்கூடாது என்று தன்னையும் கட்டுப்படுத்திக்கொண்டார்.

அமெரிக்காவில் இருந்தாலும் சிவாஜியின் பிறந்த தினம், திருமண நாள் ஆகிய விசேஷத் தருணங்களில் மறக்காமல் கணேஷூக்கு ஃபோனில் வாழ்த்து சொல்லுவேன். ஆனால், சிவாஜிக்கு எனது பிறந்த நாள்கூடத் தெரியாது.’ - பத்மினி.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:13 am


கணேசனின் முதல் காமெடி சித்திரம், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி…

முதல் பட விநியோகம், அமரதீபம்…

முதல் புராணப் படம், சம்பூர்ண இராமாயணம்…

இரட்டை வேட நடிப்பு, உத்தமபுத்திரன்…

தமிழில் முதல் சரித்திரம் மற்றும் சிவாஜியின் முதல் வண்ணப்படம், வீரபாண்டிய கட்டபொம்மன்.

ஆசிய அளவில் முதல் அயல்நாட்டு விருது, வீரபாண்டிய கட்டபொம்மன்…

சிவாஜி புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பு, வியட்நாம் வீடு...

என, சிவாஜியின் பல முதல்களில் பத்மினிக்கும் அதிகப் பங்கு உண்டு. சிவாஜியின் மிக ராசியான நட்சத்திரம் அவர்.

‘தில்லானா மோகனாம்பாள்’ பற்றிச் சொல்லாமல், பத்மினியின் சினிமா வாழ்வு பூர்த்தி பெறாது.

ஏறக்குறைய, இளமையைத் தொலைத்துவிட்ட நிலையில், தில்லானா மோகனாம்பாள், பத்மினியின் திரை உலகப் பயணத்தில் மாபெரும் பாக்கியம். என்றைக்கும் பத்மினியை இளைய தலைமுறை மறந்துவிடாமல் இருக்க, கலைத்தாய் சூட்டிய மகுடம்! கொத்தமங்கலம் சுப்புவின் காலத்தை வென்ற படைப்பான மோகனாம்பாள், பத்மினிக்குக் கிடைக்கக் காரணமானவர் ஏ.பி.நாகராஜன்.

ஏ.பி.நாகராஜன் நீண்ட வருடங்களாக, அக்கதையைப் படம் எடுக்க வேண்டும் என்று வாசனிடம் கேட்டு வந்தார். வாசன் அதற்குச் சம்மதிக்கவில்லை. மோகனாம்பாளாக வைஜெயந்திமாலா நடிக்க, ஜெமினி ஸ்டுடியோஸ் சார்பில் தானே தயாரிக்கப்போவதாக வாசன் சொல்லி அனுப்பிவிடுவார்.

1965-ல், ஏ.பி.நாகராஜன் உருவாக்கிய ‘திருவிளையாடல்’, வாசனைக் கவர்ந்தது. மீண்டும் நாகராஜன் வந்து கேட்டபோது, தில்லானா மோகனாம்பாள் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார்.

‘எனக்கு மணமான பிறகு நான் நடித்த படங்களில் முக்கியமானது தில்லானா மோகனாம்பாள். என்னால் மறக்க முடியாத ஓர் அனுபவம்! நாட்டியமாடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம் அது. அதன் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அனுபவித்து நடித்தேன்.

‘தில்லானா மோகனாம்பாள் படத்தைத் தயாரிக்கணும்னு முடிவு பண்ணினதுமே, நீதாம்மா மோகனா. சிவாஜி சிக்கல் ஷண்முகசுந்தரம்னு முடிவு பண்ணிட்டேன். உங்க ரெண்டு பேர்ல யார் ஒருத்தர் நடிக்கலைன்னாலும் படத்தை எடுக்கிறதா இல்லை என்றார் ஏ.பி.என். எப்பேர்ப்பட்ட வார்த்தை! சிலிர்த்துப் போனேன்.

நான் அன்று அடைந்த சந்தோஷம், எவ்வளவுன்னு சொல்ல முடியாது. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே, இந்தக் கதை படமானால் மோகனாம்பாள் கேரக்டர் எனக்கே கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். கதையோடு பத்திரிகையில் கோபுலு வரைந்த சித்திரங்கள் பற்றியும் பரபரப்பாக பேசப்பட்டது. கோபுலுவின் ஓவியங்களைப் போலவே, எங்களுக்கான மேக் அப்பும் காஸ்ட்யூமும் அமைந்தன.

18 வயசுப் பெண் ரோல் அது. எனக்கு அப்போ 38. என் மகன் பிரேம், சிறுவனாக இருந்த நேரம். மோகனாம்பாளின் யவ்வன பருவத்தை நினைத்துக்கொண்டு நடிக்கவேண்டி இருந்தது. உடம்பை ஒல்லியாக்கிக்கொள்ள நேர்ந்தது. அந்த மாதிரி சமயத்தில், நமக்கு நம்ம வாழ்வே சொந்தமில்லே. சினிமா தொழிலுக்கும் ஜனங்களுக்கும்தான் அது சொந்தம்.

எனக்கும் சிவாஜிக்கும் கதைக்கு ஏற்ற மாதிரி நிஜமான போட்டி உணர்வு ஏற்படணும்னு நாகராஜன், சாரதா ஸ்டுடியோல இரண்டு தனித்தனி காட்டேஜ் அமைச்சார். சிவாஜி க்ரூப் ஒரு காட்டேஜ். என் குழுவினர் ஒரு காட்டேஜ். யாரை யார் மிஞ்சறாங்க பார்க்கலாம் என்கிற போட்டியை உருவாக்கினார். அதனால்தான் மோகனாம்பாள் வெற்றிப் படமாச்சு.

வாத்தியக் கோஷ்டியுடன் நான் ஜரூராக ஒத்திகை பார்த்துக்கொண்டிருப்பேன். சிக்கலாரின் செட்டில் தவில் வாசிப்பவர், நாயணக்காரர், ஒத்து ஊதுபவர், தாளம் போடுபவர் என்று அங்கேயும் தீவிரமான ரிகர்ஸல் நடக்கும். அவர்கள் மிஞ்சிவிடுவார்கள்போல... என்று எனக்கு இங்கே தகவல் வரும். நாங்கள் இன்னும் மும்முரம் காட்டுவோம்.

பப்பி முந்திக்கொண்டுவிடுவார் என சிவாஜிக்கு செய்தி போகும். கணேஷ் பார்ட்டியின் வேகம் கூடும். ஏ.பி.என்., இரண்டு தரப்பினரையும் வந்து பார்த்து உற்சாகப்படுத்திவிட்டுப் போவார். இரண்டு கோஷ்டியை வைத்தும் ஃபைனல் பார்ப்பார். இந்தக் காட்சி சிறப்பா அமையணும்னா, எல்லாரும் உடம்பு பலவீனம் இல்லாம நடிக்கணும்னுவார்.

என் முகத்தில் கொஞ்சம் அலுப்புத் தட்டினாலும், ‘உடம்பு சரியில்லயாம்மா... ஷூட்டிங்கை கேன்சல் செய்துடவா’ என்று அக்கறையுடன் கேட்பார்.

கடைசியில் இந்தப் போட்டிக் காட்சி பிரமாதமாகவே அமைந்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டோம்’ - பத்மினி.

*


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:13 am


தில்லானா மோகனாம்பாளுக்காக, பத்மினியை 1968-ம் ஆண்டின் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்தது தமிழக அரசு. விருது வழங்கியவர், அன்றைய முதல்வர் மு.கருணாநிதி.

சில விசேஷத் தகவல்கள் -


கலைஞர் மு.கருணாநிதிக்கும், இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்கும் மிகவும் பிடித்த படம் தில்லானா மோகனாம்பாள். அதிலும், ‘நலந்தானா…’ பாடலுக்கு பாலசந்தர் பரம ரசிகர்!

சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் படம் தில்லானா மோகனாம்பாள்! இன்றளவும் (சமீபத்தில் 2015 ஏப்ரல் 5-ம் தேதி மாலை 6.30 மணிக்கு) ப்ரைம் டைமில், சன் டிவி போன்ற தனியார் சேனல்கள், தில்லானா மோகனாம்பாளைத் ஒளிபரப்புகின்றன. ஒவ்வொரு பிரேக்கும் 10 நிமிஷம் இருந்தாலும், ஜனங்கள் 1968-ன் உற்சாகத்தோடு மீண்டும் மீண்டும் பார்க்கும் ஒரே படம்!

மோகனாம்பாளில் ஒட்டுமொத்தமாகக் கொட்டிய கடும் உழைப்பை மிஞ்சுகிற மாதிரி, ஒரே ஒரு நாட்டியத்துக்காகவும் பத்மினி ஆடவேண்டி வந்தது. திருவருட்செல்வரில் இடம் பெற்ற ‘மன்னவன் வந்தானடி…’ பாடல் காட்சி, திரையில் ஏறக்குறைய ஏழு நிமிடங்கள் வரக்கூடியது.

இன்றளவும் சின்னத்திரையில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட உச்சக்கட்டப் போட்டிகளில், கல்யாணி ராகத்தில் அமைந்த அப்பாடலை பாலகர்கள் பிரமாதமாகப் பாடி, லட்சக்கணக்கான மதிப்புள்ள வீட்டை பரிசாகப் பெற முடிகிறது.

‘மன்னவன் வந்தானடி…’ பாடல் பற்றி பத்மினி மனம் திறந்தவை.

‘இந்தப் பாட்டில் நீங்கள் ஒன்பது உருவங்களுக்கு முன்னால் நடனம் ஆடுகிறீர்கள் என்று ஏ.பி.என். சொன்னதும் உற்சாகமாக இருந்தது. ஷூட்டிங்கின்போது அதன் சிக்கல் புரிந்தது. வண்ணச்சித்திரமான திருவருட்செல்வரில், ஒவ்வொரு பதுமை முன்பும் நான் வெவ்வேறு ஆடைகளில் ஆட வேண்டும். கேட்பானேன்?

சரியான சோதனை. பத்து நாள்கள் இடைவிடாமல் உடை மாற்றி மாற்றி ஆடியதில், நான் அல்லாடிப் போனேன். சிக்கலான மேக் அப் வேறு. பாட்டில் சில அடிகள் படமானதும், நான் புதிய காஸ்ட்யூமில் வருவேன். அடுத்த வரிகளுக்குத் தொடர்ந்து ஆடுவேன். அதுபோல் ஒன்பது தடவைகள் நடந்தது.

இனிமையான கர்நாடக இசை நாதமும், அதற்கேற்ப எனது ஆடலும் பிரம்மாண்ட தர்பாரில் நடிகர் திலகம் வந்து நிற்கும் கம்பீரமான தோற்றமும், என்றும் என் மனத்தை விட்டு அகலாது. அதற்காக நான் பட்ட பாடு அம்மாடி! அந்த மாதிரி வேறு எந்தப் பாட்டுக்காவது நான் கஷ்டப்பட்டிருப்பேனா... சந்தேகம்தான்’.

யார் ஹீரோ என்றபோதிலும், ஏராளமான படங்களில் டைட்டில் ரோல் பத்மினிக்கே சொந்தம். பெண்மைக்கு உயர்வளிக்கும் உயர்ந்த நோக்கமோ அல்லது வணிக உத்தியில் பத்மினிக்கு இருந்த நட்சத்திர அந்தஸ்தோ இரண்டில் ஏதோ ஒன்று.

நடிப்பில் மணமகள் தொடங்கி, தொடர்ந்து மருமகள் (ஹீரோ என்.டி.ஆர்.), காவேரி, மங்கையர்திலகம், மல்லிகா (நாயகன் ஜெமினி), அமரதீபம், பாக்யவதி, தங்கப்பதுமை, தெய்வப்பிறவி, மரகதம், சித்தி, தில்லானா மோகனாம்பாள், பெண் தெய்வம் என தாய்க்கு ஒரு தாலாட்டு வரை பத்மினியின் நடிப்பில் வெளிவந்தவை, அவரது அற்புத நடிப்புக்காகவே ஓடியவை.

‘பத்மினிக்குக் கிடைத்த வெற்றியில், பெரும்பாலும் கணேசன் குளிர் காய்ந்தார். சிவாஜிக்காகவேண்டி படங்கள் விழா கொண்டாடவில்லை’ என நடிகர் திலகத்துக்கு வேண்டாதவர்கள் விஷமப் பிரசாரத்தில் ஈடுபட்டதும் உண்டு.

அமெரிக்காவுக்குப் போனாலும், ஆண்டுதோறும் மார்கழி மஹோத்சவத்துக்கு சென்னையில் இருப்பதை, கடைசி வரை தன் வழக்கமாக பத்மினி கடைப்பிடித்தார். அவ்வாறு, 1976-ல் சென்னை வந்த பத்மினி, ‘சிவாஜி வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க வேண்டும்’ என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. அந்த ஆண்டில் கடைசி சிவாஜி படம் ரோஜாவின் ராஜா. அதில் அவர் கல்லூரி மாணவராக நடித்திருந்தார். அதையொட்டி எழுந்த கேள்விக்கான பதில், சிக்கலை ஏற்படுத்தியது.

‘கணேஷுக்குக் குழந்தை மாதிரி சுபாவம். கோபம் வந்தாலும் உடனே தணிந்து போகும்’ என்கிற பத்மினியின் வாசகத்தை, சிவாஜி நிரூபித்துவிட்டார். பத்மினி தன்னைக் குறித்து சொன்னதை அவர் பொருள்படுத்தவே இல்லை. எப்போதும்போல் தோழமை தொடர்ந்தது. அதன் விளைவு, 1977-ல் கே.பாலாஜியின் ‘தீபம்’ படத்தில் பத்மினி கௌரவ வேடத்தில் ப்ளாஷ்பேக்கில், ஒரு காட்சியில் தாயாராக நடித்திருப்பார். அதில் பத்மினி தோன்றும் புகைப்படம். தொலைந்துபோன தம்பி விஜயகுமார்தான், நாயகி சுஜாதாவுடைய காதலன் என சிவாஜிக்கு உணர்த்தும்.

பத்மினி பற்றி, கணேசனும் நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

‘உங்களுக்கு ஜோடியாக நடித்தவர்களில் உங்களுக்கு இணையான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர் யார்?’

நிச்சயமாக பப்பிதான். பப்பி சிறந்த நாட்டியக்காரி மட்டுமல்ல. சிறந்த அழகியும்கூட. குணச்சித்திரம், காமெடி, நடனம்... வாட் நாட்…?

எல்லாப் பாத்திரங்களிலும் ஜொலித்த நடிகை. ஷீ ஈஸ் ஆன் ஆல்ரவுண்டர். சின்ன வயதிலிருந்தே நானும் பப்பியும் பழகி வருகிறோம். வீ ஆர் ஆல் இன்டெலக்சுவல் ஃப்ரண்ட்ஸ். எங்களிடையே தெய்வீக நட்பு உண்டு’.

***

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:15 am

சாமர்த்தியமே உன் பெயர் மெய்யப்பனா என மெச்சும்படியாக இருந்தது செட்டியாரின் ஒவ்வொரு நகர்வும். ஏவிஎம் உருவாக்கிய வாழ்க்கை, ‘பஹார்’ என்ற பெயரில் ஹிந்தி பேசியது. தமிழில் நடித்த வைஜெயந்தியே ஹிந்தியிலும் ஹீரோயின். கையோடு, லலிதா பத்மினிக்கும் வடநாட்டில் புதிய வாசலைத் திறந்துவைத்தார் செட்டியார். வேதாள உலகம் படத்தில் இடம்பெற்ற பாம்பாட்டி நடனக் காட்சியை பஹாரில் புகுத்தினார்.

டெல்லியில் பஹாரைத் திரையில் பார்த்தவர்கள், பப்பி மீது நாலணா, எட்டணா நாணயங்களை வீசி எறிந்து புதுப் பூவைக் கொண்டாடினர். நேரில் அதை ரசித்த ஹிந்தி சினிமாக்காரர்கள் சென்னைக்கு விரைந்தனர். உடனடியாக பத்மினிக்கு லட்ச ரூபாய்க்கு சம்பளம் பேசி, 50,000 ரூபாயை அட்வான்ஸாக கொடுத்த பின்னரே நிம்மதியாக ஜிலேபியும் சமோசாவும் சாப்பிட்டார்கள்.

பத்மினி நாயகியாக நடித்த முதல் ஹிந்திப் படம், ஜெமினியின் ‘மிஸ்டர் சம்பத்’. (தமிழில் மிஸ் மாலினி). ஏவிஎம், ஜெமினி என தென்னகத்தின் இரண்டு மெகா ஸ்டுடியோக்களின் அறிமுகம் பத்மினி. தமிழைப் போலவே வடக்கிலும் வெற்றிக்கொடியை மிகச் சுலபமாகப் பறக்கவிட்டார். பத்மினியின் சூப்பர் ஹிட் தமிழ்ச் சித்திரங்கள், ஹிந்தியில் அதிகம் தயாரானது. அவற்றில், பத்மினியைத் தவிர வேறு யாரும் அந்த வேடங்களில் உச்சம் தொட முடியாது என்கிற முதல் மரியாதையைப் பெற்றார்.

திலீப்குமார் தவிர, அநேக மும்பை சிகரங்களான அசோக் குமார், ராஜ் கபூர், தேவ் ஆனந்த், சஞ்சீவ் குமார், ஷம்மி கபூர், தர்மேந்திரா ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழில், காஷ்மீர் அவுட்டோர் ஷூட்டிங் போக வாய்ப்பில்லை. அக்குறையைப் போக்கியவை, அசோக்குமாரின் கல்பனா, ராகினி உள்ளிட்ட தயாரிப்புகள். பத்மினிக்கு காஷ்மீரை கையோடு சென்னைக்குக் கொண்டுவரும் அளவு, அத்தனை பிடித்துப்போனது. குளிரின் ரோஜாவனத்தில் ஆப்பிள் மெத்தையாக ரசிகர்களின் கண்களுக்கு சுகமாகக் காட்சியளித்தார்.

மீண்டும் தர்மேந்திரா - மீனாகுமாரி ஜோடியுடன், காஜல் சினிமாவின் அவுட்டோருக்காக, பத்மினியும் ஆசை ஆசையாக காஷ்மீர் சென்றார். ஆனால் பகைவர்கள் படையெடுத்து வந்ததால், இடத்தை காலி செய்ய வேண்டியதாயிற்று. ‘வேலைக்காரன்’ அமலாபோல் உருகும் பனியில் பத்மினி ஆட வேண்டிய நடனம், பாதியில் நின்றது. மிச்சம், மும்பை ஸ்டியோவில் தொடர்ந்தது. அங்கு, பனிக்கட்டிகளுக்குப் பதிலாக உப்பைக்கொண்டு தளத்தை நிரப்பினர். புழுக்கத்தின் உச்சகட்டத்தில் ஆடி முடித்தார் பத்மினி. என்னே ஓர் உப்பான அனுபவம்!

ஆஷா ஃபரேக் தவிர, வடக்கில் யாரும் உருப்படியாக நாட்டியம் கற்றவர்கள் கிடையாது. பப்பியுடைய அசாத்திய அசைவுகளில் ஆச்சரியம் அடைவது, ஹிந்தி கனவுக்கன்னிகளின் அன்றாட இயல்பானது. மீனா குமாரி போன்ற நடிப்பின் இமயங்கள்கூட, பத்மினியின் சிஷ்யையாகப் பாதங்கள் தூக்கி ஆடி உள்ளனர்.

நர்கீஸ், பிருத்விராஜ், ஜெயராஜ் போன்ற பிரபலங்களுடன் பத்மினி இணைந்து நடித்த பர்தேஸி, இந்திய - ரஷிய கூட்டுத் தயாரிப்பு. கலரில் சினிமாஸ்கோப்பில் பிரம்மாண்டமாக மூன்றே மாதங்களில் தயாரானது. பர்தேஸி ஷூட்டிங்குக்காக 1957-ல், பத்மினி ரஷ்யாவுக்குச் சென்றார். லைட்பாய்ஸூக்கு பதிலாக லைட் கேர்ள்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் நட்சத்திரங்களும் அங்கு சமமாகவே நடத்தப்பட்டதில், பத்மினிக்கு ஆச்சரியம். நடிப்பதற்காகக் கொஞ்சம் ரஷிய மொழியைக்கூட பத்மினி கற்றுக்கொண்டார்.

ஷம்மி கபூருடன் பத்மினி ஜோடியாக நடித்த வெற்றிச் சித்திரம் ‘சிங்கப்பூர்’. முழுக்க முழுக்க சிங்கப்பூரிலேயே உருவானது. தமிழில் சிவாஜி, பத்மினியின் பிதாமகன் என்றால், ஹிந்தியில் ராஜ் கபூர். ஒரே நேரத்தில், கணேசன் – ராஜ் கபூர் என்று இரு தண்டவாளங்களில் இந்தியாவெங்கும் புகழின் திசைகளில் தடையின்றி ஓடியது பத்மினியின் நட்சத்திர ரயில்.

நர்கீஸ் மூலம் ராஜ் கபூர், பத்மினியின் நிழல் காதலன் ஆனார். வடக்கில், 1946 முதல் 1957 வரையில் ஆடிக்களித்தது ‘ஆவாரா’ புகழ், ராஜ் கபூர் - நர்கீஸ் ஜோடி. ராஜ் கபூரின் மனைவி என்கிற சட்டரீதியான அந்தஸ்து தனக்குக் கிடைக்காது எனத் தெரிந்ததும், நர்கீஸ் தன் காதலுக்கு முற்றும் போடவேண்டி வந்தது. ராஜ் கபூரின் வசம் அன்பின் ஐஸ்கிரீமாக உருகி நின்ற நர்கீஸ், ‘மதர் இந்தியா’ செய்த மாயத்தால், சுனில் தத்தை மணந்துகொண்டார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:16 am


‘சோரி – சோரி’ ஏவிஎம் தயாரிப்பு. சென்னையின் செல்வ மகள்கள், ராஜ்கபூர் - நர்கீஸ் ஜோடி நடிப்பதை நேரில் காண ஏவிஎம்முக்கு செல்வது வாடிக்கையானது. பத்மினியும் அவ்வகையில் முதன்முதலாக நர்கீஸை சந்தித்தார். அதுமுதல், நர்கீஸும் பப்பியும் நல்ல தோழிகள். பப்பியைவிட ராகினிக்கு நர்கீஸ் என்றால் அத்தனை உயிர்.

நட்சத்திர ஓட்டலில் நர்கீஸ் ஓய்வு எடுத்தாலும், வீட்டுக்கு அழைத்துவந்து, தங்களின் அபிமான நடிகைக்கு ஒரு வாய் உப்புமாவாவது ஊட்டிவிடுவது திருவாங்கூர் சகோதரிகளின் உற்சாக விருந்தோம்பல். நட்புக்கும் உப்புக்கும் நேரடித் தொடர்பு எக்கச்சக்கம். செஞ்சோற்றுக் கடன்போல், பப்பி வீட்டு உப்புமாவுக்காக நர்கீஸ் செய்த நற்பணி, மும்பை சென்றிருந்த பத்மினிக்கு ராஜ் கபூரை அறிமுகம் செய்தது.

நர்கீஸ் இல்லாமல் சுவரில் முட்டி மோதி நாளெல்லாம் அழுது, நட்சத்திரத் துணைக்கு என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்த ராஜ் கபூருக்கு பத்மினியைப் பிடித்துவிட்டது. நர்கீஸுக்குப் பிறகு ராஜ் கபூருடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் நம்ம ஊர் பத்மினி! ராஜ் கபூர் குறித்து தென்னிந்தியர்களுக்கு ஆதி முதல் அந்தம் வரை விரிவாகச் சொல்வது பத்மினிக்குப் பிடித்தமானது.

ராஜ் கபூர் பற்றி பத்மினி சொன்னது.


(உங்களுக்காக அவரது உற்சாகமூட்டும் உதட்டுப்பூக்களில் இருந்து அமுத மழையாகப் பொழிகிறது! பெரிசுகள் நிதானமாகப் பருகிச் சுவையுங்கள்! உறங்கும் உங்களின் இளமை மீண்டும் வீறிட்டு விழித்தெழலாம், ஜாக்கிரதை!)

‘1953-ல் இருந்து ராஜ் கபூர் ரொம்ப நெருக்கமானவராக இருந்தார். ராஜ் கபூருக்கு என்னுடைய நடிப்பாற்றலிலும் நாட்டியத் திறமையிலும் மிகுந்த நம்பிக்கை இருந்தது. எனது அழகையும் அவர் பாராட்டியது உண்டு. ’தன்னுடன் நடித்த நாயகிகளில் பத்மினி தலைசிறந்த அழகி!’ என்று பத்திரிகைகளில் பெருமையாக பேட்டி அளித்திருக்கிறார்.

‘ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹ்தி ஹை’ படத்தில் என்னை நாயகியாக நடிக்க ராஜ் கபூர் அழைத்ததும், அதற்கு எவ்வளவோ எதிர்ப்பு இருந்தது. முதல் முறையாக அவருடன் ஹீரோயினாக நடித்தேன். என்னாலே அந்த ரோலை செய்ய முடியுமான்னு ரொம்ப யோசனையாயிருந்தது. நீதான் நடிக்கணும்னு அவர் பிடிவாதம் பிடித்தார். மூன்று வருடங்கள் தொடர்ந்து அதன் ஷூட்டிங் நடந்தது. என்னால் மறக்க முடியாத அனுபவம்.

ராஜ் கபூருடன் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்தபோதும், அவற்றை ஏற்க முடியவில்லை. எனக்குத் திருமணமாகிவிட்டது. தொடர்ந்து ராஜ் கபூரின் ஆஷிக்கில் மட்டும் நடித்தேன். அதில் விறுவிறுப்பான நடனம் வேறு. ஐந்து மாத கர்ப்பவதியான நான், மருத்துவ ஆலோசனையைக் கேட்டு ஆடவேண்டியதாயிற்று. அயர்வு சோர்வு இல்லாமல் வேலை செய்வார். ஷாட்டில் முழு திருப்தி கிடைக்கும் வரையில் விடமாட்டார். அதனால், அவருடன் நடிக்கிறவர்களுக்கு மிகுந்த பொறுமை வேண்டும்.

அவர் எப்போது கூப்பிட்டாலும், நடிக்கத் தயாராக செட்டில் எல்லோரும் காத்திருப்போம். அந்த வரிசையில், அவருடைய தந்தை பிருத்விராஜ் கபூரும் உட்கார்ந்திருப்பார்! பார்க்கப் பரிதாபமாக இருக்கும். ‘என்ன செய்வது? அவன் எப்போது என்னை அழைப்பானோ தெரியவில்லையே...’ எனப் புன்னகை செய்வார். சில சமயம், நாட்டியக் காட்சிகள் நாள் முழுதும் படமாகும். அதில் வரும் ‘ஓ வசந்தி’ என்ற பாடல், இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது.

ஷூட்டிங்கில் சிடுசிடுவென்று தோன்றினாலும் மற்ற சமயங்களில் கலகலப்பாக வேடிக்கையாகப் பேசுவார். விளையாட்டுக்காக, நிறைய குறும்புகள் செய்வார். மணமான பிறகு, ராஜ் கபூருடன் நான் நடித்த கடைசி ஹிந்திப் படம் ‘மேரா நாம் ஜோக்கர்’. இந்தக் கடைசியும் ஒரு ரெக்கார்டு! மிக நீளமான சினிமாவானதால், இரண்டு தடவை இடைவேளை விட்டார்கள்.

ஃபிலிம் ஸ்டார் கிரிக்கெட் என்றால் ராஜ் கபூர் முன்னணியில் வந்து நிற்பார். அவரே வடக்கின் கேப்டன். ஒரு குழுவுக்குப் பதினோரு பேர் என்கிற கணக்கெல்லாம் கிடையாது. இருபது பேர் வரையில் இருப்போம்.

உடல் நலம் சரியில்லை என பத்மினியிடம் இருந்து ஒரு நாளும் தகவல் வராது. பொய் வயிற்று வலி, தலை வலி, காய்ச்சல், மாதவிலக்குக் கோளாறு என்று ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டதாக வரலாறு கிடையாது. மேரா நாம் ஜோக்கரில் நடித்த நேரம். பிஞ்சுகளை மாத்திரம் பாதிக்கும் டிப்திரியா என்கிற தொண்டைப்புண் ஜுரம் நிஜமாகவே பாதித்தது. முதலும் கடைசியுமாக, படப்பிடிப்பு ரத்தானது. பத்து நாள்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார் பத்மினி. அனைவருக்கும் ஆச்சரியம். அதிர்ச்சி! மிகப்பெரிய சர்க்கஸ் அரங்கம். பத்மினி பார் ஆடவேண்டி போடப்பட்டது. ராஜ் கபூர், ஹீரோயினுக்கு முதலில் குணமாகட்டும் என்று செட்டை கலைத்துவிட்டார்.

பத்மினி – ராஜ் கபூர் இணைக்கு, ஆபாசத்தின் எல்லைகள் தெரியாது என்கிற புகாரும் எழுந்தது.


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக