ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொல்காப்பிய இலக்கணம் (619)

2 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 3 Empty தொல்காப்பிய இலக்கணம் (619)

Post by Dr.S.Soundarapandian Wed Feb 09, 2022 10:14 am

First topic message reminder :

தொல்காப்பிய இலக்கணம் (570)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்ததாகத் தொல்காப்பியர் இடைச்சொற்களைப் பாகுபடுத்திக் காட்டுகிறார்:-

அவைதாம்
புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதவுநவும்
வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
அசைநிலைக் கிளவி யாகி வருநவும்
இசைநிறைக் கிளவி யாகி வருநவும்
தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்
ஒப்பில் வழியாற் பொருசெய் குநவுமென்று
அப்பண் பினவே நுவலுங் காலை (இடையியல் 2)

‘புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக் குதவுநவும்’ – இரு சொற்கள் புணரும்போது, இடையே ஏதேனும் ஒரு பொருளுக்காக வருவனவும்,
‘வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்’ – வினைச் சொல்லில் காலம் , பால்,இடம் காட்டுபவைகளும்,
‘வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்’- வேற்றுமைப் பொருளைத் தரும் உருபுகளாக நிற்பவையும்,
‘அசைநிலைக் கிளவி யாகி வருநவும்’ – தனக்கெனப் பொருள் இலாது, தான் சார்ந்த பெயர் வினைகளோடு ஒட்டிநின்று அவற்றைச் சிறப்பிக்க உதவுவனவும்,
‘இசைநிறைக் கிளவி யாகி வருநவும்’ – செய்யுளில் இசையை நிறைக்க வருபவைகளும்,
‘தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்’ – கூறுபவர்களின் குறிப்புப் பொருளை வெளிப்படுத்த நிற்பவைகளும்,
‘ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவும் என்று’ – வெவ்வேறு பொருட்களாக இருந்தாலும், ஏதோ ஒரு ஒப்புமையால் ஒன்றுபட்டு நிற்க உதவுபவைகளும்,
‘அப்பண் பினவே நுவலுங் காலை’ – ஆகத் திகழ்வதே இடைச்சொற்களாம்,உரைக்கப் புகின்!

இப்படி நடக்கும் இடைச்சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

1 . ’ புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதவுந’

பாட்டு +இன் + இனிமை = பாட்டின் இனிமை
இதில், ‘இன்’ எனும் சாரியை இடைச்சொல் , நடுவே வந்து , பொருளைத் தருகிறது; ‘பாட்டு’, ‘இனிமை’ என்று தனித் தனியாக நின்றால் பொருள் திரளாது என்பதைக் கவனிக்க!

2 . ‘வினைசெயன் மருங்கிற் காலமொடு வருந’
வாழ்+ வ்+ஆன் = வாழ்வான்
இங்கே, ’வ்’எனும் இடைச்சொல்லாகிய எதிர்கால இடைநிலை வந்ததால்தான் ‘வாழ்வான்’ என்ற வினைச்சொல்லுக்குப் பொருளே ஏற்படுவதைக் காண்கிறோம்.

3 . ‘வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுந’

குமணனை வாழ்த்தினான் – இங்கே, ‘ஐ’ எனும் இடைச்சொல்லாகிய வேற்றுமை உருபுதான் தொடர்ப் பொருளையே நல்குவதைக் காணலாம்; இல்லையேல், ‘குமணன் வாழ்த்தினான’ என நின்று , வாழ்த்தியவன் குமணன் எனும் தவறான பொருள் அல்லவா ஏற்படும்?

4 . ‘அசைநிலைக் கிளவி யாகி வருந’
சேனாவரையரின் விளக்கம்- “அசைத்தல் – சார்த்துதல். பொருளுணர்த்தாது பெயரொடும் வினையொடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்றலின் அசைநிலை யாயிற்று.அவை ‘அந்தில்’ முதலாயின. ‘புகழ்ந்திகு மல்லரோ பெரிதே’, ‘உரைத்திசினோரே’ எனச் சார்ந்த மொழியை வேறுபடுத்து நிற்றலின்,அசைநிலைச் சொல்லாயின என்பாரு முளர்”

இங்கே ஒன்றை நான் தெளிவுபடுத்த வேண்டும்!

‘அசைநிலை’ வேறு, ‘அசைச் சொல்’ வேறா?
உரையாசிரியர் சிலரின் நடை இந்த ஐயத்தை நமக்குத் தோற்றுவிக்கிறது!

அசைநிலை வேறு, அசைச் சொல் வேறு எனத் தொல்காப்பியர் கருதியிருந்தால், இடைச் சொற்களைப் பாகுபடுத்திக் கூறும் அவரின் பட்டியலில், இரண்டும் அல்லவா இடம் பெற்றிருக்க வேண்டும்?பட்டியலில் ‘அசைநிலைக் கிளவி’ என்ற ஒன்று மட்டும்தானே உள்ளது?

‘மா’ எனும் சொல், வியங்கோளை அடுத்துவரும் ‘அசைச் சொல்’ எனத் தொல்காப்பியர்(இடை.25) கூறச் ,சேனாவரையர், “அது வியங்கோளைச் சார்ந்து, ‘அசைநிலையாய் வரும்’’என்றார்.
இதனால், அசைநிலையும் அசைச் சொல்லும் ஒன்றுதான் என்பது தெளிவாகிற தல்லவா?
ஆகவே,
அசைநிலைக் கிளவி =அசைநிலைச் சொல் = அசைநிலை= அசைச் சொல் !

மேற் சேனாவரையர் உரையிற் கண்ட இரு அசைநிலைகளை வருமாறு பார்க்கலாம்-

புகழ்ந்திகு மல்லரோ பெரிதே – இதில், ‘இகும்’ என்ற அசைநிலை இடைச்சொல் உள்ளது.
உரைத்திசினோரே - இதில், ‘இசின்’ என்ற அசைநிலை இடைச்சொல் உள்ளது.

5 . ‘ இசைநிறைக் கிளவி யாகி வருந ’

இசையை நிறைக்க வரும் சொல் , இசைநிறை இடைச்சொல் எனப்படும்.
இசையை நிறைக்க – யாப்புக் குறையைப் போக்க
‘கடாஅக் களிற்றின்மேல்’ – இந்த இரு சீர்களில், முதற்சீரிலுள்ள ‘அ’வை எடுத்துவிட்டால், ‘கடாக்’ என்று ஒரே ஒரு நிரைஅசையாக மட்டும் நிற்கும்; சீர் கிடைக்காது;யாப்பிலக்கணம் பிழையாகும். ஆகவே சீர் ஏற்பட்டு, யாப்பிலக்கணம் செம்மையாக, ‘அ’ சேர்க்கப்படுகிறது; இதுவே இசை நிறைக்கப்படுதல்.
இங்கே ‘அ’ , இசைநிறைக்கும் இடைச்சொல்.

இன்னோர் எடுத்துக்காட்டு:
‘காடிறந் தோரே’ – இதில், இரண்டாம் சீரின் ஈற்றில் உள்ள ஏகாரமே இசைநிறைக்க வந்த இடைச்சொல். ஏன்?
ஈற்று ஏகாரத்தை எடுத்துவிட்டால், ‘தோர்’ என்பது மட்டுமே மிஞ்சும்; இஃது ஓர் அசைதானே தவிரச் சீர் ஆகாது; சீர் ஆக்கவேண்டும் என்பதற்காகவே ஈற்றில், ‘ஏ’ சேர்க்கப்படுகிறது; அஃதாவது, யாப்பியல் நோக்கில் சேர்க்கப்படுகிறது; இதனால்தான் ‘இசை நிறை’ எனப்படுகிறது.
6 . தத்தங் குறிப்பிற் பொருள்செய்குந

‘சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே’ (புறம்235)- இதில், ‘மன்’ எனும் இடைச்சொல் வந்துள்ளது. ‘சிறு அளவிலான கள் இருந்தால் அவன் எனக்குத் தந்துவிடுவான்! அப்படிப்பட்ட அரசன் அவன் ! அது ஒரு காலம்!’ எனக் கடந்துபோன (கழிந்துபோன) செயலைக் குறிப்பது எது? ‘மன்’அல்லவா? இதனால், ‘மன்’ எனும் இடைச்சொல், கழிவுப் பொருளைக் குறிப்பால் தருகிறது என்கிறோம்!

7 . ‘ஒப்பில் வழியாற் பொருசெய்குந’

இதற்கும் உரையாசிரியரிடையே வேறுபட்டு கருத்துகள் உண்டு!

நம் விளக்கத்தை வருமாறு வைக்கலாம்.

காளை மாடும் மணி என்ற மனிதனும் ஒன்றா?
வேறு வேறுதானே?
இரண்டையும் ஒன்று எனக் கூற முடியாது என்பதே , ‘ஒப்பில் வழி’!
ஆனால், இப்படிப்பட்ட ‘ஒப்பில்வழி’யாக இருப்பினும் , சில உருபுகளைப் போட்டுப் நாம் விரும்பிய பொருளை வெளிப்படுத்துகிறோம்! இந்த உருபுகளை நாம் உவம உருபுகள் என்கிறோம்! இவைகள் இடைச்சொற்களே!

காளை அன்ன மணி – இங்கே , ‘காளை’ , ‘மணி’ ஆகியன ஒப்பில்வழிச் சொற்கள்; ஆனால், ‘அன்ன’ எனும் இடைச்சொல்லால், நம்மால் ஓர் ஒப்பீட்டைத் தர முடிந்துள்ளது!இதைத்தான் தொல்காப்பியர் தன் நூற்பாவில் குறித்துள்ளார்!
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 3 Empty தொல்காப்பிய இலக்கணம் (590)

Post by Dr.S.Soundarapandian Wed Feb 23, 2022 8:20 pm


தொல்காப்பிய இலக்கணம் (590)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இடையியலில் அடுத்த நூற்பா ‘உம்’ பற்றியது:

எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும்
தத்தமுள் மயங்கும் உடனிலை யிலவே (இடையியல் 35)

ஒரே தொடரில், எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும் வரக்கூடாது!

சேனாவரையரின் எடுத்துக்காட்டுத் தொடர் – ‘சாத்தனும் வந்தான் கொற்றனும் வரலும் உரியன்’ ; இத் தொடரில் பொருள் இயைபு இல்லை என அவர் காட்டுகிறார்.
சாத்தனும் வந்தான் – இங்கு வந்த உம்மை , எச்ச உம்மை. ‘இன்னொருவனும் வந்தான்’ என்பதைத் தெரிவிக்கும் உம்மை.
கொற்றனும் வரலும் உரியன் – ’வரலும்’ என்பதில் உள்ள உம்மை எதிர்மறை உம்மை; ‘கொற்றன் வராமலும் இருப்பான்’ என்ற எதிர்மறைப் பொருளைச் சுட்டுவது.
இன்னொருவனாகிய கொற்றன் வந்தானா என்ற தெளிவு தொடரில் இலது! ஆகவேதான் தொடரானது பொருள் இயைபு அற்றது என்றார் சேனாவரையர்.

அடுத்த நூற்பாவில் என்ன வருகிறது எனப் பார்ப்போம்!:
எஞ்சுபொருட் கிளவி செஞ்சொல் ஆயின்
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல் (இடையியல் 36)

‘எஞ்சுபொருட் கிளவி செஞ்சொல் ஆயின்’ – எச்ச உம்மையால் தழுவப்படும் எஞ்சுபொருட் கிளவி, உம்மை இல்லாத சொல்லானால்,
‘பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்’ – அவ் வும்மை இல்லாத சொல்லை அவ் வும்மைத் தொடர்க்குப் பின்னே சொல்லாது, முன்னே சொல்லுக!

சேனாவரையர் எடுத்துக்காட்டை வருமாறு விளக்கினால் புரிந்துவிடும்:

சாத்தன் வந்தான் கொற்றனும் வந்தான் √
கொற்றனும் வந்தான் சாத்தன் வந்தான் ×

செஞ்சொல்- ‘உம்மை அடாதே’ தானே நிற்கும் சொல்; உம்மை சேராது தானே நிற்கும் சொல்; இங்கே , ‘சாத்தன் வந்தான்’; இது, சரியான தொடரின் முற் பகுதியில் வந்துள்ளதைக் காண்க.

காளையன் பேசினான் ஆதவனும் பேசினான் √
ஆதவனும் பேசினான் காளையன் பேசினான் ×
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 3 Empty தொல்காப்பிய இலக்கணம் (591)

Post by Dr.S.Soundarapandian Thu Feb 24, 2022 11:02 am


தொல்காப்பிய இலக்கணம் (591)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தொல்காப்பியரிடத்திலிருந்து அடுத்து என்ன வருகிறது எனக் காண்போம்!:

முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின்
எச்சக் கிளவி யுரித்தும் ஆகும் (இடையியல் 37 )

‘முற்றிய உம்மைத் தொகைச்சொல்’- ‘உம்’எனும் முற்றும்மை பெற்றுவந்த தொகைச்சொல்,
‘மருங்கின்’ – உடன்,
‘எச்சக் கிளவி யுரித்தும் ஆகும்’- எச்சச் சொல் உரித்தும் ஆகும்!

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் விளக்கம் காணலாம்.

‘பத்தும் கொடால்’- பத்தையும் கொடுக்காதே
- இத் தொடரில் உள்ள ‘உம்’ மையே முற்றும்மை; ‘பத்தையும்’ என்ற பொருளில் வந்துள்ளதைக் கவனிக்க.
’பத்தையும் கொடுக்காதே’ என்று சொன்னால், ‘கொஞ்சம் வைத்துக்கொண்டு மீதியைக் கொடு’ என்பதுதானே பொருள்? இதைத்தான் தொல்காப்பியமும் மேல் நூற்பாவிலும் நுவல்கிறது!
‘பத்தையும்’ என ‘முற்றும்மை’ வந்துள்ளதே , அப்படியானால், பத்தையும்தானே கொடுக்கவேண்டும்? - என்று நினைத்துவிடாதீர்கள் என்று தொல்காப்பியம் எச்சரிக்கிறது!அவ்வளவுதான்!
‘பத்தும்’ என்பது முற்றும்மைச் சொல்லானாலும் , அதுவே ‘எச்சச்சொல்லாக ஆகி’ , ‘வைத்துக்கொண்டது போக மீதி’ என்பதை உணர்த்தக்கூடிய ஓர் எச்சச் சொல்லாக நிற்றலும் உண்டு என்பதே தொல்காப்பியம் கூறவந்தது.

ஏகார இடைச்சொல் பற்றி முன்பே பார்த்துள்ளோம்; இப்போது அதற்கு மேலும் ஒரு முடிபைத் தருகிறார் தொல்காப்பியர்:

ஈற்றுநின் றிசைக்கும் ஏயென் இறுதி
கூற்றுவயின் ஓரளபு ஆகலும் உரித்தே (இடையியல் 38)

‘ஈற்றுநின் றிசைக்கும் ஏயென் இறுதி’ – செய்யுளின் கடைசிச் சீரின் இறுதியில் நிற்கும் ‘ஏ’,
‘கூற்றுவயின்’ – பாடலின் பிற பகுதிகளில் வந்த செய்யுள் உறுப்புகளோடு பொருந்தக் கூறுகையில்,
‘ஓரளபு ஆகலும் உரித்தே’ – ஒரு மாத்திரையாக ஆதலும் உண்டு!

‘காடிறந் தோரே’ (அகம் 1) – இதில், ஈற்று ஏகாரத்திற்கு என்ன மாத்திரை எனக் கேட்டால், “ஏன்? நெடிலுக்கு இரண்டு மாத்திரைதானே? ‘ஏ’ நெடில்தானே? அப்படியானால் , இங்கும் ‘ஏ’வுக்கு இரண்டு மாத்திரைதான்” என்போம்.
ஆனால், சில இடங்களில் அப்படி வராமல், ஒரு மாத்திரையானது குறைந்து, மீதி ஒரு மாத்திரை மட்டும் பெறுவதும் உண்டு என்கிறார் தொல்காப்பியர். இதற்கு எடுத்துக்காட்டாகச் சேனாவரையம் கண்டதுதான் ‘காடிறந் தோரே’. இவர் காட்டிய ஒலியை எழுத்தில் காட்டுவதானால், ‘காடிறந்தோரெ’ என எழுதிக்காட்டலாம்.
ஏன் ஈற்று ‘ஏ’யானது, ‘எ’ எனக் குறைவாக ஒலிக்க வேண்டும்?

பொதுவாக அகவல் ஓசையில், ஈற்றில் நீள் ஒலியே வரும்; ஆனால், பாடல் முடிப்பில் ஒரு சோகக் கருத்து வரும்போது நீள் ஒலி அவ்வளவாகப் பொருந்தாது! குற்றொலியே சோகம் தாங்கி வர ஏற்றது; இதன் தேவையே தொல்காப்பியரை நூற்பா எழுத வைத்துள்ளது என மதிக்க இடம் உள்ளது.
மேல் சேனாவரையர் எடுத்துக்காட்டில் , ஈற்றில் சோக ஒலியே வந்துள்ளதைக் கேட்கலாம்.
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 3 Empty தொல்காப்பிய இலக்கணம் (592)

Post by Dr.S.Soundarapandian Sun Feb 27, 2022 7:03 pm


தொல்காப்பிய இலக்கணம் (592)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்து எண்ணிடைச் சொற்களைக் கையில் எடுக்கிறார் தொல்காப்பியர்!:

உம்மை எண்ணும் எனவென் எண்ணும்
தம்வயின் தொகுதி கடப்பா டிலவே (இடையியல் 39)

‘உம்மை எண்ணும்’ – எண்ணிடைச் சொல்லாக வரும் ‘உம்’ பெற்று அடுக்கி வரினும்,
‘எனவென் எண்ணும்’ – எண்ணிடைச் சொல்லாக வரும் ‘என்’ பெற்று அடுக்கி வரினும்,
‘தம் வயின்’- தொடரின்கண்,
‘தொகுதி’ – மொத்தம் இத்தனை எனக் குறிப்பது,
‘கடப்பா டிலவே’ – கட்டாயம் இல்லை.

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளை கீழே விளக்கி உணரலாம்:

1 . ‘இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி’ (உரியியல் 1)
இதில், வரிசையாக மூன்று சொற்களின் ஈற்றில் ‘உம்’மை இடைச்சொல் வந்துள்ளது. ஆனால் , இவற்றைத் தொகுத்து ‘நான்கினும்’ தோன்றி என மொத்தம் குறிப்பிட்டு வரவில்லை; இதைத்தான் ‘தொகுதி கடப்பாடிலவே’ என்றார் தொல்காப்பியர்.

2 . ‘நிலனென நீரெனத் தீயென வளியென நான்கும்’
இங்கே, ‘என’ எனும் எண்ணிடைச்சொல் முதல் நான்கு இடங்களில் வந்து, ஐந்தாவதாக, ‘நான்கும்’ என்று மொத்தம் இவ்வளவு எனவும் தெரிவிக்கப்படுகிறது.

3 . ‘உயிரென உடலென இன்றி அமையா’
இதில், ‘என’ எனும் எண்ணிடைச்சொல் முதல் இரு இடங்களில் வந்து, பிறகு மொத்தம் இவ்வளவு எனத் தெரிவிக்கப்படவில்லை.

ஆக, ‘உம்’ , ‘என’ ஆகிய எண்ணிடைச் சொற்கள், தொடரிற் பயின்றால், அதே தொடரில் மொத்தம் இத்தனை எனக் குறிக்கவும் செய்யலாம்; குறிக்காமலும் இருக்கலாம் .

எண்ணேகாரம் பற்றி , இடையியலில் முன்பே (நூ.9) பார்த்துள்ளோம். அது பற்றி மேலும் ஒரு விளக்கத்தை வரும் நூற்பாவிற் பேசுகிறார் தொல்காப்பியர்:

எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும்
எண்ணுக்குறித் தியலும் என்மனார் புலவர் (இடையியல் 40)

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் –

1 . ‘மலைநிலம் பூவே துலாக்கோலென் றின்னர்’
இங்கே, ‘மலையே நிலமே பூவே துலாக்கோலே என்று இன்னர்’
என ஒவ்வொரு சொல்லின் ஈற்றிலும் ‘ஏ’இடைச்சொல் சேர்க்கப்படவில்லை என்பதைக் கவனிக்க; இப்படிச் சில சொற்களில் மட்டும் எண்ணேகாரம் வந்து ,வேறு சில சொற்களில் வராமலும் இருக்கலாம் என்பதே மேல் நூற்பாவின் (இடை.40)கருத்து.

2 . ‘தோற்ற மிசையே நாற்றஞ் சுவையே’
இது, ‘தோற்றமே இசையே நாற்றமே சுவையே ’ என வரவில்லை பாருங்கள்; மாறாக , இரண்டாம் சீரும் நான்காம் சீரும் மட்டுமே ‘ஏ’ பெற்றுள்ளதை நோக்கலாம்; இதற்கு அனுமதியே நாம் பார்த்துவரும் நூற்பா.
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 3 Empty தொல்காப்பிய இலக்கணம் (593)

Post by Dr.S.Soundarapandian Tue Mar 01, 2022 6:52 pm


தொல்காப்பிய இலக்கணம் (593)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்து, ‘எனா’ , ‘என்றா’ ஆகிய இரு இடைச்சொற்களைப் பேசுகிறார் :

உம்மை தொக்க எனாவென் கிளவியும்
ஆவீ றாகிய என்றென் கிளவியும்
ஆயிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன (இடையியல் 41)

‘உம்மை தொக்க எனாவென் கிளவியும்’ – ‘எனாவும்’ என்பதன் ஈற்று ‘உம்’ மறைந்தால் கிடைக்கும் ‘எனா’ எனும் சொல்லும்,
‘ஆ ஈறாகிய என்றென் கிளவியும்’ – ‘என்று’ எனும் சொல்லோடு ‘ஆ’ சேர்த்தால் வரக்கூடிய ‘என்றா’ எனும் சொல்லும்,
‘ஆ இரு கிளவியும்’- அந்த இரண்டு சொற்களும்,
‘எண்ணுவழிப் பட்டன’ – எண்ணுவதற்கு வருவதற்கு ஆனவைகளாம்.

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள்-
1 . நிலனெனா நீரெனா
நிலன் + எனா = நிலனெனா ; நீர் + எனா = நீரெனா
‘எனா’ எனும் இடைச்சொல்லானது இரு சீர்களின் ஒட்டுகளாக வந்துள்ளதைப் பார்க்கலாம். இது வரிசையாக எண்ணுவதற்குப் பயன்பட்டுள்ளதால், இந்த இடைச்சொல்லை ‘எண்ணுவழிப் பட்டது’ என்கிறார் தொல்காப்பியர்.

2 . நிலனென்றா நீரென்றா

நிலன் + என்றா = நிலனென்றா; நீர் + என்றா = நீரென்றா
‘என்றா’ எனும் இடைச்சொல்லானது இரு சீர்களின் ஒட்டுகளாக வந்துள்ளதைப் பார்க்கலாம். இது வரிசையாக எண்ணுவதற்குப் பயன்பட்டுள்ளதால், இந்த இடைச்சொல்லையும் ‘எண்ணுவழிப் பட்டது’ என்கிறார் தொல்காப்பியர்.

தொடரின் ஒவ்வொரு சொல்லின் பின்னேயும் இந்த எண்ணும் இடைச்சொற்கள் வரவேண்டு மென்பதில்லை; ஆங்காங்கே வந்தாலும் போதும் என்பது சேனாவரையரின் விளக்கம்; இது சென்ற நூற்பாவில் (இடை. 40) சுட்டப்பட்டதன் நீட்சி; இவ்வாறு வருவதற்குச் சேனாவரையர் காட்டிய தொல்காப்பிய நூற்பா எடுத்துக்காட்டுகள்-
1. பின்சா ரயல்புடை தேவகை எனா (வேற்றுமையியல் 21)
‘எனா’ என்ற இடைச்சொல் ஒன்று மட்டுமே அடி ஈற்றில் வந்து, அதற்கு முன் வந்தவற்றுக்கு எண்ணுப் பொருண்மை தந்துள்ளதை நோக்கலாம்.

2 . ஒப்பிற் புகழிற் பழியி னென்றா (வேற்றுமையியல் 11)
‘என்றா’ எனும் இடைச்சொல் ஒன்று மட்டுமே அடி ஈற்றில் வந்து, அதற்கு முன் வந்தவற்றுக்கு எண்ணுப் பொருண்மை தந்துள்ளதைக் காண்க.

மேலே ‘எனா’ , ‘என்றா’ ஆகிய இடைச்சொற்களைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா? தொடர்ந்து அவற்றின் பயன்பாட்டில் கடைப்பிடிக்க வேண்டிய வெறொன்றையும் கற்பிக்கிறார் ஆசிரியர்:

அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும்
பெயர்க்குரி மரபிற் செவ்வெண் இறுதியும்
ஏயி னாகிய எண்ணின் இறுதியும்
யாவயின் வரினுந் தொகையின் றியலா (இடையியல் 42)

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் கொண்டு இதனை விளக்கலாம்:

1. நிலனெனா நீரெனா இரண்டும்

நூற்பாவில் ‘அவற்றின்’ என்றாரல்லவா, அவற்றில் ஒன்று, நாம் சென்ற நூற்பாவிற் (இடை.41)பார்த்த ’எனா’.
இந்த இடைசொல்லாகிய ‘எனா’வானது சொற்களின் ஈறுகளிற் பயின்று வந்து எண்ணுப் பொருண்மை தரும்போது, தொடரின் கடைசியில், எண்ணிவந்த மொத்தத் தொகையைக் குறிக்க வேண்டும்.
நாம் பார்த்துவரும் இந்த எடுத்துக்காட்டில், ‘இரண்டும்’ என வந்துள்ளதல்லவா? இதுவே ‘தொகை குறிப்பிடல்’.

3 . நிலனென்றா நீரென்றா இரண்டும்

மேலே ‘அவற்றின்’ என்பதில் அடங்கிய ‘எனா’ எனும் இடைச்சொல்லை இப்போது பார்த்தோம்; தொடர்ந்து, ‘அவற்றின்’ என்பதில் அடங்கிய ‘என்றா’ எனும் மற்றொரு இடைச்சொல்லைப் பற்றிக் காட்டுகிறார் ஆசிரியர். ‘நிலனென்றா…’ என்ற இந்த எடுத்துக்காட்டுத் தொடரில், ‘என்றா என்றா ’ என அடுக்கி வந்து, மூன்றாம் சீரில் முடியும் போது, ‘இரண்டும்’ என்ற தொகை குறிக்கப்பட்டுள்ளதைக் காண்க.

4 . நிலம் நீர் என இரண்டும்

‘நிலமும் நீரும்’ என வராததைக் கவனிக்க; ‘நிலனென நீரென’ என்றோ ‘நிலனென்றா நீரென்றா’ என்றும் வராததையும் நோக்குக. இவ்வாறு ஒட்டுகள் இல்லாது, பெயர்ச்சொற்கள் மட்டும் அடுக்கி வருவதையே ‘செவ்வெண்’ என்கின்றனர்.இப்படிப்பட்ட செவ்வெண் வந்தாலும் , கடைசியில் தொகை குறிப்பிடவேண்டும். இந்த எடுத்துக்காட்டில் ‘இரண்டும்’ எனத் தொகை உள்ளதைக் கவனிக்கலாம்.

4 . நிலனே நீரே என இரண்டும்

‘நிலனே நீரே’ என எண்ணேகார இடைசொல் வந்துள்ளதைக் காணலாம்;இறுதியில், ‘இரண்டும்’ என மொத்தக் கணக்கு உள்ளதைக் கவனிக்க. இந்த மொத்தக் கணக்கையே தொல்காப்பியர் ‘தொகை’ என்றார்; இது தேவையானது என்கிறார் அவர்.

இந்த மொத்தக் கணக்கு வேண்டும் என்பதை முதலிலேயே, எண்ணேகாரம் கூறும்போதே சொல்லியிருக்கக் கூடாதா?
நல்ல கேள்வி!
தொல்காப்பியம், அந்தக் காலத்து மாணவர்களுக்காக எழுதப்பட்டது; இப்போது போல விருதைக் குறிவைத்து எழுதப்பட்ட தல்ல! ஆதலால், இலக்கணத்தைக் குவியலாகக் கொட்டாமல் , நேர்த்தியாகக், காரண காரியத்தோடு, அளவாக, எதை எடுத்த எடுப்பில் கூறுவது, மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை முதலில் சொல்லிவிட்டுப், பிறகு மீதியைச் சொல்வது என்றெல்லாம் ஆயிரம் கணக்கு தொல்காப்பியரிடம் இருந்தது! இதுவே தொல்காப்பிய நூற்பா வரிசைக்கு அடிப்படை!
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 3 Empty தொல்காப்பிய இலக்கணம் (594)

Post by Dr.S.Soundarapandian Wed Mar 02, 2022 11:05 am


தொல்காப்பிய இலக்கணம் (594)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எண்ணும்மை இன்னும் நம்மை விடவில்லை! இப்போது:

உம்மை எண்ணின் உருபுதொகல் வரையார் (இடையியல் 43)

‘உம்மை எண்ணின்’ – எண்ணும்மையின்,
‘உருபு தொகல்’ – வேற்றுமை உருபு மறைந்து வரலை,
‘வரையார்’ – நீக்க மாட்டார்கள்.

தமிழண்ணல் எடுத்துக்காட்டு –
‘யாழும் குழலும் முழவும் இசைத்தனர்’
இதனை, ‘யாழையும் குழலையும் முழவையும் இசைத்தனர்’ என்றுதானே நாம் பொருள் கொள்கிறோம்? அஃதாவது,
யாழையும் = யாழ் +ஐ +உம்; ஐ – வேற்றுமை உருபு; உம் – எண்ணும்மை; ‘யாழும்’ என்பதில், ‘ஐ’ மறைந்து வருவதைக் கவனிக்க. ‘உருபு தொகல் வரையார்’ என்று ஆசிரியர் சொன்னது இதையே. ‘குழலும்’ , ‘முழவும்’ என்பதற்கும் இதனையே கொள்ளவேண்டும்.

யாழும் குழலும் முழவும் இசைத்தனர் √ (ஐ உருபு தொக்கது)
யாழையும் குழலையும் முழவையும் இசைத்தனர் √(ஐ உருபு தொகாதது)

இவற்றின் பின்னே, இடையியலில் , சில புறனடைச் சூத்திரங்களை எழுதுகிறார் தொல்காப்பியர்.
இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

‘உம்’ எனும் இடைச்சொல்லை முன்பே பார்த்தோம்(இடையியல் 7,41,43).
இப்போது புதிதாக என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம்:

உம்உந் தாகும் இடனுமார் உண்டே (இடையியல் 44)

‘உம்’ எனும் இடைச்சொல்லானது பாடல்களில் ‘உந்து’ எனத் திரிபு அடைதலும் உண்டு.
அஃதாவது, பாட்டில், ‘உந்து’ என வந்தால், எச்சரிக்கையாக வேண்டும்; அது ‘உம்’மின் திரிபா எனப் பார்க்கவேண்டும் .

பல இடங்களிலும் வரும் ‘உம்’ எல்லாமே, ‘உந்து’ ஆகாது!

சேனாவரையர் இதற்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார்; ‘வினைசெயல் மருங்கிற் காலமொடு வருவனவற்றுள் உம்மீறு உந்தாய்த் திரிதலும் உடைத்து ’ என்பதே அது.

காலத்தைக் காட்டி வரக்கூடிய வினைச்சொற்களின் ஈற்றில்தான் ‘உம்’மானது, ‘உந்து’ என ஆகும்.

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள்-
1 . நீர்க்கோழி கூப்பெயர்க் குந்து (புறம்.395:11)
நீர்க்கோழி (waterfowl) கூப்பிடுதலைச் செய்யும் - இதுவே பொருள்.
‘பெயர்க்கும்’ என்பதே பாடலில் ‘பெயர்க்குந்து’ !
‘உம்’ என்பது, ‘உந்து’ ஆகியுள்ளதை நோக்கலாம்.

2 . நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து (புறம். 400:14)
‘மகிழ்தூங்கும்’ என்பதே ‘மகிழ்தூங்குந்து’ ஆகியுள்ளது.
மகிழ்தூங்குந்து = மகிழ்ச்சி மிகும் ( அரசன்) ; ‘உம்’, பெயர் எச்சமாக உள்ளதைக் கவனிக்க.
இங்கும் ‘உம்’ என்பது, ‘உந்து’ ஆகியுள்ளதைக் காணலாம்.
(நார் – பன்னாடை; நறவு- கள்)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 3 Empty தொல்காப்பிய இலக்கணம் (595)

Post by Dr.S.Soundarapandian Thu Mar 03, 2022 2:00 pm

தொல்காப்பிய இலக்கணம் (595)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இதுவரை பார்த்தவற்றின் அடிப்படையில், ‘யானை குதிரை புலிகள் வந்தன ’ என்பதை , எளிதாக, ‘யானையும் குதிரையும் புலிகளும்’ என்று , ‘உம்’மை விரித்துப் பொருள் கொள்வோம்.
இங்கே ஓர் ஐயம்!
மேல் ‘யானை’ முதலான மூன்றும் பெயர்ச்சொற்கள்; இப்படிப் பெயர்ச்சொற்கள் அடுக்கி வந்தால்தான் ‘உம்’மை இடைச்சொல்லைப் போட முடியுமா?
இதற்குத் தொல்கப்பிய விடை:

வினையொடு நிலையினும் எண்ணுநிலை திரியா
நினையல் வேண்டும் அவற்றவற் றியல்பே (இடையியல் 45)

அஃதாவது, அடுக்கி வரக்கூடிய சொற்கள் வினையெச்சச் சொற்களாக இருந்தாலும், அச் சொற்கள் எண்ணிடைசொல் பெறலாம் என்பது கருத்து.

’உண்டும் தின்றும் பாடியும் வந்தான்’ – இதில், ‘உம்’ எனும் எண்ணிடைச்சொல் பயின்றதைக் காண்கிறோம்.
‘உண்ணவெனத் தின்னவெனப் பாடவென வந்தான்’- இங்கே ‘என’ என்னும் எண்ணிடைச்சொல் மூன்று சொற்களில் வந்துள்ளதைக் காணலாம்.
‘நினையல் வேண்டும் அவற்றவற் றியல்பே’ என்பதைக் கொண்டு, வினைமுற்றுகள் அடுக்கி வந்தாலும், பெயரெச்சங்கள் அடுக்கி வந்தாலும் எண்ணிடைச்சொல் இடம்பெறாது என்ற கருத்தைச் சேனாவரையர் வெளிப்படுத்துகிறார்.

இதன்படி,
1 . உண்டானும் தின்றானும் பாடினானும் வந்தான் ×
‘உம்’ என்பது எண்ணிடைச்சொல்தான் என்றாலும், இக் குறிப்பிட்ட தொடரில், ‘உண்டான்’, ‘தின்றான்’, ‘பாடினான்’ எனும் வினைமுற்றுகளின் ஈறுகளில் வந்துள்ளதால் , இது பிழையான தொடர்.

2 . வந்தவே ஆடினவே சினந்தவே குமரன் ×
‘ஏ’ என்பது எண்ணிடைச்சொல்தான் என்றாலும், இத் தொடரில், ‘வந்த’, ‘ஆடின’, ‘சினந்த’ எனும் பெயரெச்சங்களின் ஈறுகளில் வந்துள்ளதால் , இதுவும் பிழையான தொடர்.
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 3 Empty தொல்காப்பிய இலக்கணம் (596)

Post by Dr.S.Soundarapandian Fri Mar 04, 2022 9:17 pm


தொல்காப்பிய இலக்கணம் (596)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது, ‘எண்ணிடைச் சொற்கள் பிரிந்து சென்று ஒன்றுதல்’ என்ற கிரியை பற்றிக் கூறலுறுகிறார் தொல்காப்பியர். அக் கிரியை:

என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி
ஒன்றுவழி உடைய எண்ணினுட் பிரிந்தே (இடையியல் 46)

‘என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி’ – ‘என்று’, ‘என’, ‘ஒடு’ ஆகியன ஓரிடத்தில் வந்து,
‘ஒன்றுவழி உடைய எண்ணினுட் பிரிந்தே’ – எண்ணலுறும் எல்லா இடங்களுக்கும் தனித் தனியாகச் சென்று பொருளை நல்கும்.

சேனாவரையரின் காட்டுகள்-
1 . வினைபகை என்றிரண்டின் எச்சம் (குறள் 874)

மேல் அடியில், ‘வினை’ , ‘பகை’ ஆகிய சொற்களின் ஈற்றில் எந்த இடைச்சொல்லும் ஒட்டிநிற்கவில்லை ; அஃதாவது ‘வினையென்று’, ‘பகையென்று’ என் வரவில்லை; ‘வினை பகை’ என்ற இரு சொற்களை அடுத்தே ‘என்று’ எனும் இடைச்சொல் வந்துள்ளது;ஓர் இடத்தில் உள்ள ‘என்று’, வினை, பகை என எண்ணிவரும் இரு சொற்களோடும் சென்று சேர்ந்து, எண்ணிடைச் சொல்லாகப் பணி செய்கிறது.

2 . கண்ணிமை நொடியென (நூன் மரபு 7)

இங்கு, ‘என’ எனும் இடைச்சொல்லானது, மேல் ‘என்று’ செய்த அதே பணியையே , அதே முறையிலேயே செய்யக் காணலாம்.

3 . பொருள் கருவிகாலம் வினையினொடு ஐந்தும் (குறள் 375)

மேல் அடியில், ‘பொருள்’ , ‘கருவி’, ‘காலம்’, ‘வினை’ ஆகிய சொற்களின் ஈற்றில் எந்த இடைச்சொல்லும் சேர்ந்து நிற்கவில்லை ; அஃதாவது ‘பொருளொடு’, ‘கருவியொடு’, ‘காலமொடு’, ‘வினையினொடு’ என வரவில்லை; ‘பொருள் கருவி காலம் வினை’ என்ற நான்கு சொற்களை அடுத்தே ‘ஒடு’ எனும் இடைச்சொல் வந்துள்ளது;ஓர் இடத்தில் உள்ள ‘ஒடு’வானது, பொருள், கருவி, காலம், வினை என எண்ணிவரும் நன்கு சொற்களோடும் சென்று சேர்ந்து, எண்ணிடைச் சொல்லாகப் பணி ஆற்றுகிறது.

இடையியலின் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளோம்.

இதில், இடைச்சொற்களின் பொருள் பற்றிய சில ஐயங்களைக் களைகிறார் தொல்காப்பியர்:

அவ்வச் சொல்லிற்கு அவையவை பொருளென
மெய்பெறக் கிளந்த இயல ஆயினும்
வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித்
திரிந்துவேறு படினுந் தெரிந்தனர் கொளலே (இடையியல் 47)

இதில் என்ன சொல்கிறார் தொல்காப்பியர்?
‘அப்பா! இதுவரை இன்ன இடைச்சொல்லுக்கு இன்ன பொருள் எனப் பார்த்தீர்கள்;ஆனால் உடன்வரும் சொல் , கருத்துகளால் நாம் பார்த்துள்ளதற்கு மாறுபட்டும் வரும்; பொருள் ஏதுமின்றியும் வரும்; திரிபு அடைந்தும் வரும்; இவற்றை ஆராய்ந்து நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்!’ என்கிறார்!
நல்ல இலக்கண ஆசிரியர் தொல்காப்பியர்!
தமிழ் வளர்ச்சிக்கு இதுதான் தேவை!
எவ்வளவு திறந்த மனத்துடனும் , தன்முனைப்பற்ற பெருந்தன்மையுடனும் தொல்காப்பியர் இருந்துள்ளார்!
இவ் வகையில், தற்கால ஆசிரியர்களுக்கு எல்லாம் ஒரு முன்னோடி யார் என்று கேட்டால், தொல்காப்பியரே எனல்வேண்டும்!

நூற்பாவுக்குச் சேனாவரையர் என்ன எடுத்துக்காட்டுகள் தருகிறார் பார்ப்போம்.

1 . ஓ – ஈற்றசையாக வருதல்

ஏ – ஈற்றசையையே நாம் கண்டோம்; ‘ஓ’வும் ஈற்றசையாக வந்துள்ளதைக் காட்டுபவர் சேனாவரையர்- ‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ (அகம். 49); இங்கு, ‘ஓ’ , ஈற்றில் வந்துள்ளதைக் காண்கிறோம்.

2 . ஓ – எண்ணுப் பொருளில்

‘ஏ’ , ‘உம்’, ‘எனா’, ‘என்றா’ முதலியவற்றை என்ணிடைச் சொற்களாக நாம் அறிந்தோம்; ஆனால், ‘ஓ’வும் எண்ணிடைச் சொல்லாக வந்துள்ளதைக் காட்டினார் சேனாவரையர் – ‘கலக்கொண்டன கள்ளென்கோ காழ்க்கொண்டன சூடென்கோ’ ; இதில், ‘ஓ’, எண்ணிடைச் சொல்லாதல் தெளிவு.

3 . மா – முன்னிலை அசையாதல்

‘மியா’ , ‘இக’, ‘மோ’, ‘மதி’ முதலியன முன்னிலை அசைச்சொல் ஆதலைப் படித்தோம்;’மா’வும் முன்னிலை அசையாதலைச் சுட்டுகிறார் சேனாவரையர் – ‘ஓர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே’ (அகம் 273); இதில், ‘மா’ முன்னிலை அசைச் சொல்லாதலைப் பார்க்கிறோம்; தோழியை முன்னிலைப் படுத்தித்தானே கூற்று உள்ளது?

4 . மன் – அசைநிலை ஆதல்
‘மன்’ எனும் இடைச்சொல்லுக்குரிய பொருள்களை நாம் முன்பே (இடையியல் 4) பார்த்தோம்; இங்கே அது , அசைநிலையாக வரும் அழகைச் சேனாவரையர் காட்டுகிறார்- ‘அதுமன் கொண்கன் தேரே’ (கொண்கன் – நெய்தல் நிலத் தலைவன்).
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 3 Empty தொல்காப்பிய இலக்கணம் (597)

Post by Dr.S.Soundarapandian Sat Mar 05, 2022 2:48 pm


தொல்காப்பிய இலக்கணம் (597)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது, இடையியலின் கடைசி நூற்பா! :

கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும்
கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே (இடையியல் 48)

என்ன கூறுகிறார் கடைசியில்?

நாம் மேலே இதுவரை பார்த்தவை போக , அதே முறையில் பிற இடைச்சொற்கள் வந்தாலும், அவற்றை எல்லாம் நாம் பார்த்த அதே வழிச் சென்று உணர்ந்துகொள்வீர்! – இதுவே நூற்பாக் கருத்து.

இந் நூற்பா உரையில், சேனாவரையர் சில இடைச்சொற்களைத் தந்து, ‘இவற்றையெல்லாம் வருமுறை நோக்கி அறிக’ என்று சொல்கிறார்.அவை:

1 . ‘மாள’ இடைச்சொல், அசைநிலையாக
‘சிறிது தவிர்ந்தீக மாளநின் பரிசிலர் உய்ம்மார்’ – இங்கு ‘மாள’ , வெறும் அசைநிலையாகவே வந்துள்ளதைக் காண்கிறோம்.

2 . ‘தெய்ய’இடைச்சொல், அசைநிலையாக
‘சொல்லென் தெய்ய நின்னொடு பெயர்ந்தே’ - இங்கும் ‘தெய்ய’ அசையாகவே பயிலுகிறது.

3 . ‘என’ இடைச்சொல், அசைநிலையாக
‘அறிவார் யாரஃ திறுவழி யிறுகென’- இவண் ‘என’வென் இடைச்சொல்லானது அசைநிலையாக வந்துள்ளது.

4 . ‘ஆம்’ இடைச்சொல், அசைநிலையாக
‘பணியுமாம் என்றும் பெருமை’ (குறள் 978)- இதில், ‘ஆம்’ இடைச்சொல்லானது, அசையாகவே வந்து இன்பம் பயக்கிறது.

5 . ‘ஆல்’ இடைச்சொல் அசைநிலையாக
‘ஈங்கா யினவா லென்றிசின் யானே’ (நற்.55) ; ‘ஈங்காயின’என்பதே கூறவந்த கருத்து; செய்யுள் இன்பத்திற்காக ‘ஆல்’ சேர்க்கப்பட்டு ‘ஈங்காயினவால்’ எழுதப்பட்டுள்ளது.

6 . ‘தொறு’ இடைச்சொல் , பொருள் உணர்த்தல்
‘தொறு ’ இடைசொல்லைப் பொறுத்தவரை, மயிலைநாதர் உரையை நான் இங்கு தரவேண்டும் – “தான் புணர்ந்த மொழியின் பொருண்மையினைப் பலவாக்கி அடுத்தடுத்து ஆங்காங்கு என்பனபட நிற்கும் ஓரிடைச்சொல்” . நவிறொறும் நூணயம் போலும்(குறள் 783).
மயிலைநாதருக்கு முன்பு இதே கருத்தை எழுதியவர் சேனாவரையர் – “குன்றுதோ றாடலு நின்றதன் பண்பே” (திருமுருகா. 217). ‘தொறு’ வே, ‘தோறு’வாக ஆதிநீழலாக வந்துள்ளது.

’தொறு’ , இங்கே அசைநிலை அல்ல என்பதைக் கவனிக்க.

இவற்றின் பின்னே சேனாவரையர் வரைந்துள்ளது அய்வுக் களம் அமைப்பது - “ ஆனம் , ஏனம்,ஓனம் என்பன எழுத்துச் சாரியை”.

எழுத்துச் சாரியை என்றால் என்ன?

‘அ’ வை, ‘அகரம்’ என்று சுட்டுகிறோம்; இங்கே வந்த ‘கரம்’தான் எழுத்துச் சாரியை.

எழுத்தை உச்சரித்துச் சொல்வதற்குப் பயன்படும் சாரியை எழுத்துச் சாரியை; இத் தொடரில் முன்பே இதுபற்றிப் பார்த்துவிட்டோம்.

இப்போது , ஆனம்,ஏனம்,ஓனம்!
1 . ஆனம்
‘ஆனம்’ எங்ஙனம் எழுத்துச் சாரியையாக வரும் என ஒருவரும் காட்டவில்லை.
தி.வே.கோபாலையர்,ந.அரணமுறுவல் பதிப்பான சொல்லதிகார நச்சினார்க்கினியர் உரைப் பதிப்பில்(தமிழ்மண் பதிப்பகம்,முதற் பதிப்பு 2003, ப. 255), ‘ஆனம்(தேவாரம் 6537)’ எனக் குறிக்கப்பட்டுள்ளது.
அத் தேவாரப் பாடல் அடி – “ஆனத்து முன்னெழுத்தாய் நின்றார் போலும்” என்பதாகும் (அப்பரின் திருவாரூர்த் திருத்தாண்டகம், பாடல் 5).
ஆனால் , இத் தேவாரத்தில் வந்த ‘ஆனம்’ என்பதைச் சைவ நூற்கள் ‘ஆன்+ அம்’ எனப் பிரித்து, ஆன்= எருது என்றே பொருள் கூறுகின்றன. எழுத்துச் சாரியை பற்றி எதுவும் கூறவில்லை. ‘முன்னெழுத்தாய்’ என்பதற்கும் ‘எழுத்துக்களுக்கு முதலாகிய அகரம் போன்றாய்’ என்றே பொருள் எழுதப்படுகிறது.
ஆகவே, எழுத்துச் சாரியையான ‘ஆனம்’ என்பதற்கும் தேவாரப் பாடலுக்கும் தொடர்பு இல்லை எனத் தெரிகிறது.
இதுபற்றிச் சிந்திக்கையில், ‘ஐயானம்’ என ‘ஐ’ எனும் எழுத்தை, ‘ஆனம்’ எனும் எழுத்துச் சரியையுடன் கூறியிருக்கலாமா? – எனக் கருத இடம் ஏற்படுகிறது.
ஐ + ய் + ஆனம் = ஐயானம்; ய் – இன எழுத்துச் சந்தி; ஆனம் – எழுத்துச் சாரியை. ‘ஐகாரம்’ என்பதுபோல , ‘ஐயானம்’ எனவும் ஒருபகுதித் தமிழகத்தில் வழங்கியிருக்கலாமா?

2 . ஏனம்

‘அஃகேனம்’ என்பதிலிருந்து, ‘அக்கேனம்’ வந்தது எனவும், இது ஆய்த (ஃ) எழுத்தைக் குறிக்கும் என்றும் லெக்சிகன் () தெரிவிக்கிறது; இங்கு வந்த ‘ஏனம்’தான் எழுத்துச் சரியை.
‘அக்கன்னா’ , ‘அஃகேனம்’, ‘அக்கேனம்’ – மூன்றும் ஆய்த எழுத்தையே சுட்டும்.

3 . ஓனம்

‘ஔ’வைக் குறிக்க , ‘ஓனம்’ எனும் எழுத்துச் சாரியையைப் பயன்படுத்தி, ‘ஔவோனம்’ என்று கூறியிருக்கலாமா?
ஔ + வ்+ ஓனம் = ஔவோனம்; ‘ஔவன்னா’ என்பதன் ஒலிக்கு அருகில் ‘ஔவோனம்’ உள்ளதைக் காண்கிறோம்.

மேல் நூற்பாவுக்கு நச்சர் மேலும் சில இடைச்சொற்களை எடுத்துக்காட்டுகளாகச் சேர்த்துத் தருகிறார்:

1. என – விரைவு உணர்த்தும் இடைச்சொல்
பொள்ளென, பொம்மென, கதுமென – என்பனவற்றை நச்சர் காட்டுகிறார்.

2. என – பெருக்கக் குறிப்பு இடைச்சொல்
“ கொம்மென என்பது பெருக்கம் என்னுங் குறிப்பு உணர்த்திற்று” என்பது நச்சர் தொடர். இற்றை நாளில் ‘கொம்மென’ என்று கூறும் ,எழுதும் பழக்கம் இல்லை. இதுபோன்ற இடங்கள் எல்லாம் தமிழின் தொன்மையை நமக்குத் தெரிவிப்பன.

3 . எ – வினாப் பொருள் இடைச்சொல்
‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும்’ (குறள் 355) என நச்சர் காட்டும் அடியில், ‘எ’ , வினாப் பொருளில் நிற்கிறது.

4 . அ, இ, உ, எ – இடப்பொருள் தரும் இடைச்சொற்கள்
அங்கு – இடப்பொருள் சுட்டும் இடைச்சொல், ‘அ’
ஆங்கு – இடப்பொருள் சுட்டும் இடைச்சொல், ‘ஆ’
இங்கு – இடப்பொருள் சுட்டும் இடைச்சொல், ‘இ’
ஈங்கு – இடப்பொருள் சுட்டும் இடைச்சொல், ‘ஈ’
உங்கு – இடப்பொருள் சுட்டும் இடைச்சொல், ‘உ’
ஊங்கு – இடப்பொருள் சுட்டும் இடைச்சொல், ‘ஊ’

இத்துடன் இடையியல் முடிவுறுகிறது.
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 3 Empty தொல்காப்பிய இலக்கணம் (598)

Post by Dr.S.Soundarapandian Wed Mar 09, 2022 12:50 pm

தொல்காப்பிய இலக்கணம் (598)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இடையியலை அடுத்து நாம் பார்க்கப்போவது, உரியியல்!

உரியியலை இப்படி அமைக்கிறார் தொல்காப்பியர்:
1 . உரிச்சொல்லின் பொது இலக்கணம் … (நூ.1) …… 1
2 .கூறவுள்ள உரிச்சொற்களின் வகை (நூ.2)…… 1
3. உரிச்சொற்களின் பொருள் … (நூ.3-92)……90
4 . தொடரில், உரிச்சொல் பிற சொற்களுடன்
ஒத்திசைவு … (நூ.93-99)……7
5 . புறனடை … (நூ.100) …… 1
…………………
100
………………….

முதலாம் நூற்பாவில், உரிச்சொல்லின் இயல்புகளைக் கூறி, உரிச்சொல் இன்னது என நிலைப்படுத்துகிறார் தொல்காப்பியர்:

உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை
இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப்
பெயரினும் வினையினும் மெய்தடு மாறி
ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும்
பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும்
பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தித்
தத்த மரபிற் சென்றுநிலை மருங்கின்
எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல் (உரியியல் 1)

‘உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை’ – உரிச்சொல்லை விளக்கும் போது,
‘இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றி’ – ஓசை கொண்டும், குறிப்பு கொண்டும், பண்பு கொண்டும் உருவாகி,
‘பெயரினும் வினையினும் மெய்தடு மாறி’ – பெயர்ச்சொல்லோடும் , வினைச்சொல்லோடும் தான் சேர்வதாகிய தடுமாற்றம் அடையும் சொல்லானடு,
‘ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும்’ – ஒரு சொல்லுக்குப் பல பொருட்கள் காணப்பட்டாலும்,
‘பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும்’ – பல சொற்கள் ஒரே ஒரு பொருளுக்கு ஆகி வந்தாலும்,
‘பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தி’ – பயிற்சி இல்லாதவற்றைப், பயிற்சி உள்ள பிற சொற்களோடு தொடர்புபடுத்தி,
‘தத்த மரபிற் சென்றுநிலை மருங்கின்’ – தத்தமக்கு உரிய முறைமையாற் சென்று நிற்கும் இடங்களால்,
‘எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்’- எப்படிப்பட்ட சொல்லாக இருப்பினும் அதற்கு வேறு பொருளைக் கொள்க.
விளக்கத்தை நிரலே காண்போம்.
1. ‘இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப்’
இசை – ஓசை
‘கம்பலை மூதூர்’ – இதில், ‘கம்பலை’ உரிச்சொல்;கம்பலை – அரவம்; ‘கம்பலை’ , ஓசைக்காகத் தோன்றிய சொல். ‘உரிச்சொல்’ என்ற தனிவகைச் சொல் உருவானதற்கான காரணங்களில் ‘இசை’யும் ஒன்று.

குறிப்பு – மனக் குறிப்பு ; மனத்தில் தோன்றும் எண்ணம் ; சொல்லைச் சொல்பவன் என்ன நினைக்கிறானோ அது.

‘உறுபுகழ்’ – இதில் உள்ள ‘உறு’ , உரிச்சொல்’; உறு – மிகுதி; இந்த ‘மிகுதி’யைக் காட்டுங்கள் என்றால் காட்ட முடியாது! சொல்வான் மனத்தில் புகழின் அளவு, மற்றவர் மனங்களில் உள்ள புகழின் அளவு ஆகியவற்றைக் குறிப்பால் தெரிவிப்பது எது? ‘உறு’ என்ற உரிச்சொல்!

பண்பு – புலன்களால் உணரத்தக்கது
‘குருமணி’ – இதில் உள்ள ‘குரு’வானது, மணியின் நிறத்திற்கு அடையாக (Adjective) நிற்கிறது. அந்த நிறத்தை, நாம் சிவப்பு என்றோ, கறுப்பு என்றோ கூற முடியும்; அந் நிறத்தைக் கண் எனும் புலனால் (பொறியால்)பார்க்கவும் முடியும்; பிறருக்குக் காட்டவும் முடியும். உரிச்சொல் தோன்றும் முறைகளில் இதுவும் ஒன்று.

2 . ‘பெயரினும் வினையினும் மெய்தடு மாறி’

உரிச்சொல்லானது, பெயரோடு சேர்ந்துவரும் ;அல்லது, வினையோடு சேர்ந்துவரும்; அல்லது பெயர்ச்சொல்லுக்கு உறுப்பாய் வரும் ; அல்லது வினைச்சொல்லுக்கு உறுப்பாய் வரும்.
மெய் – உரு ; உருபு;வடிவம் ; அஃதாவது உரிச்சொல்.
தெய்வச்சிலையார் எடுத்துக்காட்டுகள் இதனை சிறப்பாக வெளிப்படுத்துகின்றன-

உறுவளி – இங்கு, ‘உறு’ எனும் உரிச்சொல்லானது, ‘வளி’ எனும் பெயர்ச்சொல்லை அடுத்து வந்துள்ளது. வளி - காற்று
உறக்கொண்டான் – இங்கு, ‘உறு’ எனும் உரிச்சொல்லானது, ‘கொண்டான்’ எனும் வினைச்சொல்லை அடுத்து வந்துள்ளது.
உறுவன் – இங்கு, ‘உறு’ எனும் உரிச்சொல்லானது, ‘அன்’ ஈற்றுப் பெயர்ச்சொல்லுக்கு உறுப்பாக வந்துள்ளது.
உற்றான் – இங்கு, ‘உறு’ எனும் உரிச்சொல்லானது, ‘ஆன்’ எனும் வினைசொல்லுக்கு உறுப்பய் வந்துள்ளது.

தடுமாற்றம் இல்லாமல் பாருங்கள், உரிச்சொல்லின் இடம் தடுமாற்றம் கொள்வதைக் காணலாம்!
3 . ‘ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும்’
ஒரு சொல் – ஓர் உரிச்சொல்
‘கடி’ என்ற ஓர் உரிச்சொல்லை எடுத்துக்கொள்வோம்; இது தரும் பொருளை நல்கும் பல சொற்கள் – நன்கு அறியப்பட்ட சொற்கள்: காவல்,நீக்கு, புதுமை, பயம், கூர்மை
,விளக்கம். ஓர் உரிச்சொல்லானது, பல பொருட்கு உரிமையாதல் என்பது இதுதான். உரிச்சொல்லின் இயல்புகளில் இதுவும் ஒன்று.

4. ‘பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும்’ -
பல சொல் – பல உரிச்சொற்கள்
உறு , தவ,நனி,கூர்,கழி – ஆகிய உரிச்சொற்களை எடுத்துக்கொள்வோம்; இவை அனைத்துக்குமே பொருள் ‘மிகுதி’ என்ற் ஒன்றுதான்.
ஒரே பொருளுக்குப் பல உரிச்சொற்கள் உரிமை கொள்வதைக் காண்கிறோம்.

இப்படிப் பொருள் உரிமை கொள்வதால் ‘உரிச்சொல்’ என்று பெயராயிற்று!

5 . ‘பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தி’
பயிலாதவை = பொருள் அறியப்படாத உரிச்சொற்கள்
பயின்றவை = பொருள் அறியப்பட்ட சொற்கள்
சார்த்தி = ஒப்பிட்டு

‘பொருள் அறியப்படாத உரிச்சொல் ஒன்றை எடுத்துக்கொண்டு, பொருள் அறியப்பட்ட அதே உருவுள்ள (வடிவுள்ள) இன்னொரு சொல் ஒன்றோடு ஒப்பிட்டு’ என்பது பொருள்.

ஆதித்தர் உரையிற் காணப்படும் ஒப்பீட்டுச் சொற்களை இங்கு வருமாறு விளக்கலாம்:

‘கருவி’ என்ற சொல்லுக்கு ‘ஆயுதம்’ என்பது பொருள்; இதுவே ‘அறியப்பட்ட பொருள்’; இங்கே ‘கருவி’ பெயர்ச்சொல். ஆனால் இதனினும் வேறான ‘தொகுதி’ என்ற பொருளிலும் இது ஆளப்படும்போதுதான், இஃது ‘உரிச்சொல்’ ஆகிறது.

‘மாதர்’ எனும் சொல்லுக்குப் ‘பெண்’ என்பது பொருள்; இது ‘அறியப்பட்ட பொருள்’; இங்கு ‘மாதர்’ பெயர்ச்சொல். ஆயின் இதனினும் வேறான ‘காதல்’ எனும் பொருளிலும் இதே சொல் பயிலுகிறது தமிழில்; இந்த நிலையில்தான் இதனை ‘உரிச்சொல்’ என்கிறோம்.

“சரி! இருக்கட்டுமே! ஒரு பெயர்ச்சொல்லுக்குப் பல பொருட்கள் இருக்கலாமே? அப்படி ‘மற்றொரு பெயர்ச்சொல்’ என்று சொல்லாமல் ஏன் ‘உரிச்சொல்’ எனச் சொல்லவேண்டும்?”
நல்ல வினா!
‘மற்றொரு பெயர்ச்சொல்’ என்று ஒதுக்க முடியாததற்குக் காரணங்கள்தாம், மேல் நூற்பாவில் நாம் பார்த்தவை! அஃதாவது, பெயருக்கும் அடையாதல், வினைக்கும் அடையாதல், பெயருக்கும் உறுப்பாதல், வினைக்கும் உறுப்பாதல், பெயரின் உள் உறுப்பாதல், வினையின் உள் உறுப்பாதல், வேர்ச்சொல் அறியப்படாமை,பெரும்பாலும் செய்யுளில் மட்டும் பயிலுதல் முதலிய வலுவான காரணங்களால் ‘உரிச்சொல்’ என்ற பிரிவை ஏற்படுத்தும் நிலையைச் சொன்னது தமிழின் அமைப்புதானே அல்லாமல் வேறில்லை!
6 . ‘ தத்த மரபிற் சென்றுநிலை மருங்கின்’
உரிச்சொல்லின் பொது மரபுக்கு ஏற்பத், அது சென்று அமரப்போகும் இடத்தைக் கருத்திற் கொண்டு,

7 . ‘எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்’
முன்பு ஒப்பிட்ட அப் பிற சொல்லின் பொருள் அல்லாத வேறு பொருளைக் கொள்ளவேண்டும்.

தொல்காப்பியர் நவின்ற உரிச்சொல் இயல்புகளில், ‘செய்யுளுக்கு உரிமை பூண்டதால் உரிச்சொல்’ என்பது போன்ற இலக்கணம் இல்லை.
ஆனால், நன்னூலில், ‘செய்யுட் குரியன உரிச்சொல்’ (442) என்ற விதி காணப்படுகிறது. மாணவர்களுக்கு விளங்குவதற்காகப் ,பெரும்பான்மை பற்றி இப்படிக் கூறினார் போலும்.
உரிச்சொல்லுக்குக் ‘குறைச்சொல்’ என்ற பெயரும் உளது.
இங்கு, ஆ. சிவலிங்கனார் கருத்து காணத் தக்கது – “பெயரிலும் வினையிலும் சேராக் குறைபாடு அவற்றுக்கு உண்டு. எனவேதான் உரிச்சொல் , குறைச்சொல் எனப்பட்டது.”
தொல்காப்பியக் குற்றுயலுகரப் புணரியல் நூற்பா77இல், ‘நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவி’ என்றது இங்கு சுட்டத் தக்கது.
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 3 Empty தொல்காப்பிய இலக்கணம் (599)

Post by Dr.S.Soundarapandian Thu Mar 10, 2022 12:29 pm

தொல்காப்பிய இலக்கணம் (599)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உரியியலில் நாம் காணும் இரண்டாம் நூற்பா:

வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன (உரியியல் 2)

தொல்காப்பியர் , இந்த நூற்பாவின் பின்னே பல உரிச்சொற்களுக்குப் பொருள் எழுதப் போகிறார்; அப்படி எழுதுமுன், ‘நான் எல்லோருக்கும் தெரிந்த உரிச்சொற்களுக்குப் பொருள் எழுதப்போவதில்லை; எல்லோருக்கும் அரிதான உரிச்சொற்களுக்கே பொருள் எழுதவுள்ளேன்” என்று ஒரு சிறு முன்னுரையே இந்த நூற்பா!
தொல்காப்பியக் கட்டமைப்பு என்பது எண்ணி மகிழத் தக்கது!
‘வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா’ – வெளிப்பட்டு நிற்கும் உரிச்சொற்களையே மீண்டும் சொல்லவேண்டாம்;
‘வெளிப்பட வாரா உரிச்சொல் மேன’ - வெளிப்படையாகத் தெரியவராத உரிச்சொற்களைப் பற்றியே கூறப்படும்.
‘மேல’ என்பதே ‘மேன’ என்று வந்ததாகக் காட்டுபவர் சேனாவரையர்.
மேல,மேன – குறிப்பு வினைமுற்றுகள் (Appellative Finite Verbs)

வெளிப்பட வந்த உரிச்சொற்கள் யாவை?

தெய்வச்சிலையார் கூறுகிறார் – “வெளிப்படு சொல்லாவன, உண்டல் என்பதற்கு அயிறல், மிசைதல் எனவும், உறங்குதல் என்பதற்குத் துஞ்சல் எனவும், இணைவிழைச்சு என்பதற்குப் புணர்தல், கலத்தல், கூடல் எனவும், அச்சம் என்பதற்கு வெரூஉதல் எனவும் இவ்வாறு வருவன.”

ஆதித்தர் சில வெளிப்படையான உரிச்சொற்களைக் கூறுகிறார்; அவற்றைப் பட்டியலாக வருமாறு விளக்கத்துடன் தரலாம்:

1 . புலி அறப்பசித்தும் புல் தின்னாது - இங்கு உரிச்சொல், ‘அற’; அற – முற்றும்
2 . அவள் இறை நாணி நின்றாள் – இங்கு உரிச்சொல்,’இறை’; இறை – சிறிது
3 . துவரப் பசித்தாலும் – இங்கு உரிச்சொல், ‘துவர’; துவர – முற்றும்
5 . வான்கோழி – இங்கு உரிச்சொல், ‘வான்’; வான் - பெரிய
6 . வால்எயிறு – இங்கு உரிச்சொல், ‘வால்’; வால்- வெண்ணிற
7 . கோடித் துணி – இங்கு உரிச்சொல், ‘கோடி’; கோடி- புதிய
8 . மட அன்னம் – இங்கு உரிச்சொல், ‘மட’; மட- இளமை
9 . ஆற்றவும் கற்றார் – இங்கு உரிச்சொல், ‘ஆற்ற’; ஆற்ற - முற்றும்
10 . படுகுழி – இங்கு உரிச்சொல், ‘படு’; படு- பெரிய

வாருங்கள், அடுத்த நூற்பாவில் தொல்காப்பியர் கூறப்போகும் உரிச்சொற்களைப் பார்ப்போம்!
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 3 Empty Re: தொல்காப்பிய இலக்கணம் (619)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum