Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
3 posters
Page 17 of 19
Page 17 of 19 • 1 ... 10 ... 16, 17, 18, 19
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
First topic message reminder :
தெய்வத்தின் குரல் - இரண்டாம் பகுதி - விரைவில்
தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - ஐந்தாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - ஏழாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - இரண்டாம் பகுதி - விரைவில்
தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - ஐந்தாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - ஏழாம் பகுதி- விரைவில்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
அன்னைத் தெய்வம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று ஒளவைப் பாட்டி சொல்லியிருக்கிறாள். இரண்டு முன்னறி தெய்வங்களிலும் முன்னதாக ‘அன்னை’யைச் சொல்லியிருக்கிறாள். தைத்திரீயோபநிஷதமும், ‘மாதாவைத் தெய்வமாகக் கொள்வாயாக; பிதாவைத் தெய்வமாகக் கொள்வாயாக’ என்கிறது. இங்கேயும் முதலில் அம்மாவைத்தான் சொல்லியிருக்கிறது.
தாயாரைத் தெய்வமாக நினைக்க முடியுமானால் இதையே திருப்பி வைத்துப் பார்க்கும்போது தெய்வத்தைத் தாயாராக நினைக்க முடியும். சர்வ லோகங்களையும் படைத்துக் காத்துக் கொண்டிருக்கிற மகாசக்தியைத் தாயாராக நினைக்கும்போது ‘அம்பாள்’ என்கிறோம்.
எல்லாமாக ஆகியிருக்கிற பரமாத்மா, நாம் எப்படி நினைத்தாலும் அப்படி வந்து அருள் செய்கிறது. எந்த ரூபமாகத் தியானித்தாலும், அப்படியே வந்து அநுக்கிரகம் செய்கிற கருணை பரமாத்மாவுக்கு உண்டு. அப்படி சாக்ஷாத் பரப் பிரம்மமே தாயாகி, அம்பிகையாய் இருந்துகொண்டு, நமக்கு அநுக்கிரகம் செய்யவேண்டுமென்று நாம் பிரார்த்தித்தால் அவ்விதமே வருகிறது.
பரமாத்மாவை அன்னைத் தெய்வமாக பாவிப்பதில் தனியான விசேஷம் உண்டு. அம்மாவிடம் நமக்குள்ள அன்பும் அம்மாவுக்கு நம்மிடம் உள்ள அன்பும் அலாதியானவை அல்லவா? எனவே, ‘அம்மா’ என்று நினைத்து பக்தி செய்தால் ஒரே அன்பு மயமாக இருக்கிறது. ஆனந்த மயமாக இருக்கிறது. நாம் குழந்தையாகி விடுவதால், தானாகவே காமக் குரோதாதிகள் நம்மை விட்டு விலகுகின்றன. வயசேறிப் போவதால் ஏற்படும் விகாரங்களை, அவளுடைய குழந்தை என்ற உணர்வினால் போக்கிக் கொள்கிறோம்.
பரமாத்மாவை ‘அம்மா’ என்பது நாமாக உபசாரத்துக்கு செய்கிற பாவனை அல்ல. வாஸ்தவத்திலேயே பரமாத்மா ஒரு தாயாரின் அன்போடு கூடவே சமஸ்தப் பிராணிகளுக்கும் அநுக்கிரகம் செய்து கொண்டிருக்கிறது.
இந்த ஜன்மத்துக்கு ஏற்பட்ட தாயையே தெய்வமாக வழிபட வேண்டுமானால், எந்தெந்த ஜென்மத்துக்கும் துணையாக இருக்கிற பரமாத்மாவையும் தாயாக வைத்து வணங்கத்தான் வேண்டும். நம்வீட்டு அம்மா, இந்த ஒரு ஜன்மாவில், நாலைந்து குழந்தைகளுக்கு மட்டும் தாய் ஆவாள். அம்பிகையோ எல்லா ஜன்மங்களுக்கும் எல்லா ஜந்துக்களுக்கும் தாயாக இருக்கிறவள். அவள் ஜகன் மாதா, அணு முதல் மனிதன் வரை, பசு, பட்சி, புழு, பூச்சி, புல், செடி, கொடி, மரம் எல்லாம் ஒரே சக்தியிலிருந்துதானே பிறந்திருக்கின்றன? ஒரே ஜகன்மாதாவிடமிருந்துதான் நாம் இத்தனை பேரும், இத்தனை வஸ்துக்களும் வந்திருக்கிறோம். பரமாத்மாவை அம்பிகையாகப் பூஜிப்பதால், அவள் ஒருத்திதான் அம்மா, நாம் அனைவரும் அவளுக்குப் பிறந்த குழந்தைகள்; அதாவது எல்லாரும், எல்லாமும் சகோதரர்கள் என்ற அநுபவம் உண்டாகும். எல்லாரையும் தழுவும் பரம மதுரமான அன்பு நமக்கு வரும்.
தெய்வங்களும், அவதார புருஷர்களும், மகான்களும்கூட அம்பாளை உபாஸித்து அநுக்கிரகம் பெற்றிருக்கிறார்கள். ஆதிசங்கர பகவத்பாதர்களும், காளிதாஸனும் அவளுடைய அநுக்கிரகத்தாலேயே விசேஷ வாக்குச் சக்தி பெற்றார்கள். திருஞானசம்பந்தருக்கு, அவளது க்ஷீரமே திவ்வியப் புலமை தந்தது.
எல்லாவித இகபர நலன்களும் தருகிற அம்பிகை, விசேஷமாக வாக்குவன்மையை அருளுகிறாள். ஏனெனில், அவளே அக்ஷர ஸ்வரூபமானவள். நம் உடலின் மேல் சதையைச் சிறிது கீறிவிட்டால் – வெளியில் நாம் எத்தனை அழகாக இருந்தாலும் – உள்ளே அருவருப்புத் தருகிற வஸ்துக்களையே பார்க்கிறோம். பரமாத்மா அம்பாளாக வருகிறபோது, தரித்த சரீரமோ கருணா மயமானது. அம்பிகையாக வரும்போது, பரமாத்மா ஐம்பத்தொரு அக்ஷரங்களையே சரீரமாகத் தரித்துக் கொண்டு வருகிறது. அதனால்தான் தேவீ உபாஸகர்கள் விசேஷ வாக்கு வன்மை பெறுகிறார்கள்.
லோகம் முழுவதற்கும், காலம் முழுவதற்கும் தாயாக இருந்து அநுக்கிரகம் செய்கிற பராசக்தியின் கடாக்ஷம் எப்படிப்பட்டவனையும் கைதூக்கி ரக்ஷிக்கும். அந்த அம்பிகையை நாம் அன்போடு தியானம் செய்ய வேண்டும். அக்ஷர மயமானவளை வாக்கால் துதிக்க வேண்டும். அம்மாவின் சரீரவாகு, மனப்பான்மை எல்லாம் குழந்தைக்கும் வருவதுபோல், அம்பாளே நம் சரீரம், மனஸ் எல்லாமாயிருக்கிறாள் என்ற உணர்ச்சியோடு – அவள் வேறு நாம் வேறு அல்ல என்ற அனன்ய பாவத்தோடு – அபேதமாக அம்பாளை உபாஸிக்க வேண்டும். அப்படி உபாஸித்துக்கொண்டேயிருந்தால், அவளைப்போலவே நாமும் அன்பே உருவமாகி லோகம் முழுவதற்கும் ஆனந்தத்தைக் கொடுக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
தேவியின் திருவடித் தியானம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
படைப்பு, காத்தல், அழித்தல் என்ற மூன்று கிருத்தியங்களைச் செய்வதற்காக ஒரே பரமாத்மாதான் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்று மூன்று ரூபம் கொள்கிறது. கிருத்யங்களுக்கு ஏற்றபடி அந்தந்த மூர்த்திக்கு குணம், வர்ணம், ரூபம் எல்லாம் இருக்கின்றன. இந்த மூன்று என்ற வட்டத்தைத் தாண்டும்போது இம்மூன்றுக்கும் காரணமான ஒரே பராசக்தி எஞ்சி நிற்கிறது. அந்த பராசக்தியான துரீய (நான்காம்) நிலையில் நம் மனத்தை முழுக்கினால் சம்ஸாரத் துயரிலிருந்து விடுபடுவோம்.
இப்போது இருக்கும்படியான லோக வழியில் இதைப் பற்றி யோசிக்கச் சாவகாசம் இல்லை; மந்திரத் தியானமோ, ரூபத் தியானமோ பண்ணுவதற்கான பக்குவம் இல்லை. ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபிப்பது, ஒரு உருவத்தைத் தியானிப்பது என்ற பழக்கம் மனசுக்கு வருவது கொஞ்சம் சிரமம்தான். ஆனாலும் முதலடி எடுத்து வைக்கத்தான் வேண்டும். நம் மனசுக்கு ஹிதமாக, ரஞ்சகமாக இருந்தால்தான் முதலடியே வைப்போம். அப்படி அத்யாத்ம மார்க்கத்தில் ஹிதமான ஒரு முதலடி இருக்கிறது. அதுவே அம்பிகையின் திருவடி. எவ்வித சிரமுமின்றி எவரும் தேவியினுடைய சரண கமலத்தைத் தியானிக்கத் தொடங்கலாம். அந்தச் சரணார விந்தத்தின் அழகையும் குளிர்ச்சியையும் நினைத்து விட்டால் அதில் தானாக மனசு நிலைத்து நிற்கப் பழகும். இப்படி எப்போதும் உபாஸித்தால் அவளுடைய கடாக்ஷத்தால் ஜனன நிவிருத்தி ஏற்படும். அல்லது முதலில் அவளது மகிமையைச் சொல்லும் துதிகளைப் படிக்கலாம். முதல்படி பாராயணம்; அதற்கப்புறம் ஜபம்; பின்பு தியானம் பண்ணுவது. அப்படி தியானம் பண்ணும் போது, ‘பராசக்தி! இந்த உடம்பிலிருந்து உயிர் போகும் தருணத்தில் நான் உன்னையே தியானம் பண்ணிக்கொண்டு உன்னிடமே மீண்டும் சேர்ந்து விடும்படியாக அநுக்கிரகம் செய்ய வேண்டும்’ என்று பிரார்த்தித்துக்கொள்ளவேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் அவளுடைய சரணாரவிந்தத்தைப் பிரார்த்தித்து வேண்டிக்கொண்டால், உயிர் போகும் தருணத்திலும் அவனுடைய கடாக்ஷத்தினால் அவளுடைய தியானம் வரும். இந்த உடல் போனபின் இன்னோர் உடல் வராமல் அவளிடம் இரண்டறக் கலந்து சம்ஸாரத்திலிருந்து விடுபட்டுப் பேரானந்த மயமாகி விடலாம்.
தேவியும் குருவும் ஒன்றே. எனவே இருவரது திருவடியும் ஒன்றே. குரு பாதுகையும் தேவி பாதுகையும் ஒன்றே. குரு பாதுகையை சந்திர மண்டலத்தில் தியானம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம். அமிருதம் சந்திரனிலிருந்தே பொழிவதாக சாஸ்திரம்.
சூரியன் சுயமான பிரகாசத்தை உடையவனாக இருக்கலாம். நமக்கு அவன் ஒளி கொடுக்கிறான். என்றாலும், அவனால் தாபம் உண்டாகிறது. வேர்க்கிறது; தாகம் எடுக்கிறது. அம்பாளுடைய பிரகாசம் நமக்கு ஒளியும் கொடுக்கிறது. தாபத்தையும் நீக்குகிறது. எனவே அது சந்திரிகையின் ஒளி போல் இருக்கிறது. தாபசாந்தி பண்ணுவது அமிருதம்; அமிருதமாக நமக்குத் தாபத்தை நீக்கி சாந்தியைக் கொடுத்துக் கொண்டு பிரகாசிக்கிறது அம்பிகையின் கடாக்ஷமும் சரணார விந்தமும்.
உஷ்ணப் பிராந்தியத்தில் (Tropics) உள்ள நமது தேசத்தில் இருக்கிறவர்களுக்கு குளிர்ச்சியில் ஒரு பிரீதி. ‘அவன் குளுமையாக இருக்கிறான். குளுமையாகப் பேசினான், இப்போதுதான் என் வயிறு குளிர்ந்தது’ என்று சந்தோஷ விஷயங்களுக்குச் சொல்வோம். மேல் நாட்டவர்களுக்கு இது நேர் மாறாக இருக்கிறது. அவர்களுடைய பிரதேசம் ஒரே குளிர்ச்சியானதால் அவர்களுக்கு உஷ்ணம்தான் ( Warmth) இன்பம் அளிக்கும். அவர்களுக்கு கோல்டு (Cold) என்றால் நம்முடைய எண்ணத்திற்கு நேர் விபரீதமான அர்த்தம். சரியாக வரவேற்காவிட்டால் cold reception என்பார்கள். நிர்த்தாக்ஷண்யமானவனை cold-hearted என்பார்கள்.
நமக்குச் சந்திர கிரணம் மாதிரி தாபத்தை நீக்கிக் குளுமையைக் கொடுத்து ஆனந்தத்தை அளிப்பவள் அம்பிகை. அம்பிகை சந்திர மண்டலத்தில் வாஸம் செய்வதாகப் பல இடங்களில் சொல்லியிருக்கிறது. நமக்கு இன்பம் கொடுக்கிற பெருநிதி அவள்தான். அந்த சாக்ஷாத் பரதேவதையின் சரணத்தைத் தியானம் பண்ணிப் பண்ணி சுத்தமாகி நித்திய க்ஷேமத்தை, ஆனந்தத்தை அடைவோமாக.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
இயற்கை ஏமாற்றுகிறது! அம்பாள் ஏமாற்றுகிறாள்! : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
மனிதனுக்கு பலவிதமான இச்சைகள், பாசங்கள், ஆசைகள். தன் இச்சையைப் பூர்த்தி செய்து கொள்கிறான்; அதில் பூரித்துப் போகிறான்; ஆனால் இது சாசுவதமான பூர்த்தியா, பூரிப்பா என்றால் இல்லவே இல்லை. இன்னோர் இச்சை அப்புறமும் இன்னொன்று என்று பிரவாகமாக வந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும் இந்த ஓயாத அலைச்சலுக்கு நடுவில் அவ்வப்போது இப்படி ஒரு பூரிப்பும் பெறுகிறான். இது ஒரு விதத்தில் அம்பாள் செய்கிற கிருபை! இன்னொரு விதத்தில் அவளே செய்கிற ஏமாற்று வித்தை!
தான் ஆசையும் பாசமும் வைப்பவர்கள், திருப்பித் தன்னிடம் ஆசையும் பாசமும் வைத்தால் ஒரேடியாகச் சந்தோஷப்படுகிறான். கல்யாணம் பண்ணிக்கொண்டு குழந்தை குட்டிகள் பெற்று இவ்வாறு தன் இச்சை பூர்த்தியானதாக சந்தோஷப்படுகிறான். குழந்தையை இவன் ஆசையோடு தூக்கிக் கொஞ்சும்போது அது ‘களுக்’ என்று சிரித்தால், ‘அடடா என்னிடம் குழந்தை எத்தனை ஆசையாக இருக்கிறது?’ என்று ஒரே ஆனந்தம் அடைகிறான். அதை மேலும் அன்போடு கவனத்தோடு வளர்க்கிறான்.
மனிதன், இந்த காம இச்சை, வாத்ஸல்யம் எல்லாம் தன் சுகத்துக்காக என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். அதுதான் இல்லை. பல ஜீவர்கள் மறுபடி பிறவி எடுத்துத் தங்கள் கர்மத்தை அநுபவித்தாக வேண்டும். முடிவாகக் கர்மத்தைக் கழித்துக்கொண்டு மோக்ஷநிலையைப் பெற வேண்டும். அதற்காகத்தான் இவனுக்குக் காமமும் கலியாணமும் சந்ததியும். ஆனால், இவன் தன் இன்பத்துக்கென்று நினைத்து ஆனந்தப் படுகிறான். இப்படியாக மனுஷ்யனை இயற்கை ஏமாற்றுகிறது. இயற்கை என்றால் என்ன? அம்பாள் ஏமாற்றுகிறாள்.
இப்படி மநுஷ்யனை பலவிதத்தில் ஏமாற்றியாகிறது! பலவித வியஞ்சனங்களை ருசித்துச் சாப்பிட்டுவிட்டு இவன் சந்தோஷப்படுகிறானே; உணவு இவனது நாவின் சந்தோஷத்துக்காகவா ஏற்பட்டது? இல்லை. இவன் தன் கர்மாவை அநுபவிப்பதற்கு உடம்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். உடம்பு வளருவதற்கு ஆகாரம் வேண்டும். ஒரே ருசியில் ஆகாரம் இருந்தால் சாப்பிட அலுத்துப் போகும். அதனால் – இயற்கை – அம்பாள் – பலவித ருசிகளைக் காட்டி இவனைச் சாப்பிட வைத்து, இவனை, ‘ருசியாகச் சாப்பிட்டோம்’ என்று சந்தோஷப்படவும் செய்து, இவன் கர்மாவை அநுபவிக்க வசதியாக உடம்பை வளர்க்கிறாள்.
தன் குழந்தையிடம் உள்ள அபிமானம் பக்கத்து வீட்டுக் குழந்தையிடம் இவனுக்கு இல்லை. ‘எனது’; ‘எனது’ என்று இந்தக் குழந்தையிடமே அலாதி வாஞ்சை காட்டிப் பூரித்துப் போகிறான். எல்லாக் குழந்தைகளிடம் இவனுக்கு ஒரே மாதிரியான அபிமானம் இருந்தால், இந்தக் குழந்தையைப் பார்த்துப் பார்த்து குளிப்பாட்டி, உணவூட்டி தூங்க வைத்து, அதற்காகவே உடல், பொருள், ஆவியைச் செலவு செய்து வளர்ப்பானா? அந்த குழந்தை வளர வேண்டும் என்பதற்காகவே அதனிடத்தில் இவனுக்கு விசேஷ அபிமானம் உண்டாகச் செய்திருக்கிறாள் அம்பாள்.
‘ஒரு சரீரம் பிறந்து வளருவதற்காக இவனிடம் கர்மத்தை வைத்து, பிறகு வாத்ஸல்யத்தைத் தந்திருக்கிறாள் அம்பாள். இவனுடைய சரீரம் வளருவதற்காகவே இவனுக்கு ருசி, பசி முதலியனவற்றை அம்பாள் வைத்திருக்கிறாள்’ என்று சொன்னேன். ‘சரி, இப்படி இவன் வாழ்வதாலோ, இவனால் இன்னொரு ஜீவன் பிறந்து வளர்வதாலோ என்ன பிரயோஜனம்? பழைய கர்மத்தை அநுபவிப்பது தவிர இதில் என்ன பயன்? இவனும் ஆத்ம க்ஷேமம் அடையக்காணோம்.பொதுவாக நாம் பார்க்கிற எல்லா ஜன்மாவும் வீணாகத்தானே போகின்றன? ஒவ்வொரு ஜன்மாவும் காம, குரோத, லோப, மோக, மத, மாத்சரியங்களை அதிகப்படுத்தி பாபத்தைப் பெருக்கிக் கொள்வதாகத்தானே ஆகிறது; கர்மத்தைக் கழித்துக்கொண்டு மோக்ஷத்துக்கும் போகிறவர்களாகக் கோடியில் ஒருத்தர் கூடத் தோன்றக் காணோமே!’ என்று சந்தேகம் வரலாம்.
இப்படிச் சந்தேகப்பட வேண்டாம். ஒரு மாமரத்தில் நிறையப் பழங்கள் உண்டாகின்றன. பழம் உண்டாவதன் பயன் அதன் கொட்டையிலிருந்து மீண்டும் ஒரு மரம் தோன்றுவதற்குத்தான். ஆனால் ஒவ்வொரு மாமரத்திலும் உண்டாகிற அத்தனை பழங்களில் உள்ள வித்துக்களும் மரமானால் உலகிலே வேறெதற்குமே இடம் இராதே. ஒரு மரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பழங்களில் ஒரே ஒரு வித்து மரமானால் நாம் திருப்திப்படவில்லையா! பாக்கியெல்லாம் வியர்த்தமாயிற்றே என்றா வருத்தப்படுகிறோம்?
அப்படித்தான் லக்ஷக்கணக்கில், கோடிக்கணக்கில் நாம் இத்தனை பேரும், ஆத்ம க்ஷேமம் பெறாமல் வீணாகப் போனாலும் பரவாயில்லை. நம்மில் யாராவது ஒரு ஆத்மா பூரணத்துவம் பெற்றுவிட்டால் போதும். சிருஷ்டியின் பயன் அதுவே! அந்த ஒரு பூரண ஆத்மா நம் அனைவருக்கும் சக்தி தரும். அப்படிக் கோடானு கோடி ஜீவர்களில் ஒன்று தோன்றவே, இத்தனை காமமும், சஞ்சலமும் இன்ப துன்பமும் வைத்திருக்கிறது. நாம் இத்தனை பேரும் வாழ்வதன் பயனும் அந்த ஒருத்தன் தோன்றுவதுதான்.
உறியடி உத்ஸவத்தில் வழுக்கு மரத்தில் பலர் ஏறி ஏறிச் சறுக்கி விழுவார்கள். கடைசியில் ஒரே ஒருவன் ஏறி விடுகிறான்! அவன் ஒருவன் ஏறுவதற்காகத்தான், அத்தனை பேரையும் அத்தனை பிரயாசைப்படுத்தி விளையாட்டு நடக்கிறது! உலக விளையாட்டும் அப்படியே! நம்மில் பலர் சறுக்கி விழுந்தாலும் ஒருவன் பூரணத்தைப் பிடித்து விட்டால் போதும். எத்தனை முறை சறுக்கினாலும் உறியடியில் திரும்ப திரும்ப முயற்சி செய்தவனைப்போல், நாமும் பூரணத்துவத்தை அடைய முயன்று கொண்டேயிருப்போம். அம்பாள் நம்மில் யாருக்குக் கை கொடுத்து ஏற்ற வேண்டுமா, அவனை ஏற்றி வைப்பாள். அவன் ஒருத்தன் அதற்குப் பிற்பாடு இந்த ஏமாற்று வித்தையிலிருந்து தப்புவதே நம் இத்தனை பேருக்கும் போதும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
காமாக்ஷி : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
ஒரு காரியமும் இல்லாமல், தன்னைத்தானே அநுபவித்துக் கொண்டிருக்கிற பிரம்மத்தையே சிவன், சிவம் என்று சொல்கிறோம். காரியமில்லாமல், ரூபமில்லாமல், வருணமில்லாமல், குணமில்லாமல் இருக்கிற அந்த சாந்த மயமான பிரம்மத்திலிருந்தான் இத்தனை காரியங்கள், ரூபங்கள், வர்ணங்கள், குணங்கள் எல்லாம் உண்டாகியிருக்கின்றன. மாயா சக்தியினால் ஒரே பிரம்மம் இத்தனை உருவங்களும் குணங்களும் உள்ள பிரபஞ்சங்களாகவும், ஜீவராசிகளாகவும் தோன்றியிருக்கிறது. ஒன்றான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகக் காட்டுகிற அந்த மாயாசக்தியைதான் அம்பாள், அம்பாள் என்று சொல்லுகிறோம். இந்தச் சக்தியினால்தான், நாம் எல்லாம் தோன்றியிருக்கிறோம். உண்மையில் நாமும் பிரம்மத்தைத் தவிர வேறு இல்லை. ஆனால், வேறாக நினைக்கிறோம். இதற்குக் காரணம், பிரம்ம சக்தியான அம்பாளின் மாயைதான். இப்படி நம்மை மாயையில் போட்டு எடுப்பது அவளுடைய லீலை.
அவள் மாயையில் நம்மைக் கட்டிப்போடுகிறவள் மட்டும் அல்ல. மனமுருகி அவளை எந்நாளும் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தால், அவளே இந்த மாயை முழுவதையும் நீக்கி நமக்கு பிரம்ம ஞானத்தை அநுக்கிரகம் செய்வாள்.
ஞானம் பெறுவதற்கு சாக்ஷாத் அம்பாளைத் தவிர வேறுகதி இல்லை. அவள்தான் மாயையால் ஒரே பிரம்மத்தை மறைத்துப் பல வேறான பிரபஞ்சமாகக் காட்டுகிறாள். இந்தப் பிரபஞ்ச ஆட்டத்திலிருந்து விடுதலை பெற்று, ஸம்ஸாரத்திலிருந்து – ஜனன மரணச் சூழலிலிருந்து – விமோசனம் அடைந்து பிரம்மமாகவே நாம் ஆக வேண்டும் என்றால், எவள் இந்த மாயையைச் செய்தாளோ, அவளுடைய அநுக்கிரகம் ஒன்றினால்தான் முடியும். மாயா சக்தியாக இருக்கிற அம்பாளேதான் ஞானாம்பிகையாக வந்து நமக்கு மோக்ஷத்தையே அநுக்கிரகம் செய்கிறவளும் ஆவாள்.
‘மாயா’ என்றால் ‘எது இல்லையோ அது’ என்று அர்த்தம். இல்லாத வஸ்து எப்படி இத்தனை ஆட்டம் ஆட்டி வைக்கிறது. அது எப்போதுமே இல்லாதது அல்ல; எப்போதுமே இருக்கிறதும் அல்ல. ஞானம் வருகிற வரையில் மாயை இருக்கிறது. அதுவரையில் நானாவிதமான வஸ்துக்களைப் பார்த்து, எல்லாம் தனித்தனியாக உண்மையாக இருப்பதாக நினைக்கிறோம். அவற்றிடம் ஆசை – துவேஷம் முதலியவற்றை உண்டாக்கிக்கொண்டு பல விதங்களில் கர்மம் செய்கிறோம். இந்தக் கர்மத்தை அநுபவிக்க மறுபடியும் மறுபடியும் செத்து செத்துப் பிறக்கிறோம். அம்பாளை உபாஸித்து ஞானம் வந்துவிட்டாலும் நானாவிதமான இத்தனையும் ஒரே பேரறிவான அவளுடைய வேறு வேறு தோற்றங்கள்தான் என்று அனுபவ பூர்வமாகத் தெரியும். நாமும் அப்படி ஒன்றே; தோற்றங்கள் (appearances) இத்தனை இருந்தாலும், இவ்வளவும் உள்ளே ஒன்றுதான் என்று தெரியும். உள்ளே ஒன்றாக இருப்பதைத் தெரிந்து கொண்டபின், வெளியே மாற்றிக் கொண்டும், அழிந்துக் கொண்டும் இருக்கும் இந்தத் தோற்றங்களில் ஆசை, துவேஷம் எதுவும் ஏற்படாது; இதற்கெல்லாம் ஆதாரமாக எப்போதும் மாறாமலே இருக்கிற பேரறிவோடு அறிவாக நம் மனத்தைக் கரைத்து விடுவோம். அப்போது பிரபஞ்சமே நம் பார்வைக்கு இல்லாமல் போகிறது. மாயையும் அப்போது இல்லாமலே போகும். அந்த ஞான தசையில் எது இல்லாமல் போகிறதோ அது – அதாவது மாயைதான், அதுவரை நம்மை ஆட்டி வைத்தது.
மாயைக்குக் காரணமாக பிரம்ம சக்தியான அம்பாள்தான் ஞானமும் தருகிறாள். அவளுடைய கருணையே இதற்குக் காரணம். இத்தனை மாயையைச் செய்தாலும், அதிலிருந்து விடுவிக்கிற கருணையும், அவளுக்கே பூரணமாக இருக்கிறது. மாயா லோகத்தில் நாம் உண்டாக்கிக் கொள்ளும் கஷ்டங்களுக்கும், துக்கங்களுக்கும் காரணம் நம்முடைய இந்திரியங்களும், மனசும்தான். இந்திரிய சுகங்களின் வழியிலேயே மனத்தை செலுத்தி நம்முடைய ஸ்வபாவமான ஆத்ம சுகத்தை மறந்திருக்கிறோம். ஐம்புலன்களும் மனசும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இவற்றைச் செய்தவள் மாயை. அவளே இவற்றைச் சுத்தப்படுத்தி, இந்திரிய விவகாரங்களிலிருந்தும், மனஸின் ஓயாத சஞ்சலங்களிலிருந்தும் ஜீவனை விடுவிப்பதற்காக சாக்ஷாத் காமாக்ஷியாகவே வருகிறாள்.
காமாக்ஷியின் நாலு கைகளில் ஒன்றில் ஒரு வில்லும், இன்னொன்றில் ஐந்து அம்புகளும் இருக்கும். அந்த வில் கரும்பினால் ஆனது. அம்புகள் புஷ்பங்களால் ஆனவை. சாதாரணமாக கெட்டியான இரும்பினால் வில் அமைந்திருக்கும்; இங்கோ மதுரமான கரும்பு அம்பாளுக்கு வில்லாக இருக்கிறது. கூரான அம்புகளுக்குப் பதில் மிகவும் மிருதுவான மலர்களைப் பாணங்களாக வைத்திருக்கிறாள். அந்தக் கரும்பு வில் மனஸ் என்ற தத்துவத்தைக் குறிப்பதாகும். மதுரமான மனம் படைத்த அம்பாள் நம் மனங்களையெல்லாம் இந்த வில்லைக் காட்டி வஸப்படுத்திக்கொண்டு விடுகிறாள். அவளுடைய ஐந்து புஷ்ப பாணங்களும் நம் ஐம்புலன்களை ஆகர்ஷித்துச் செயலற்றுப் போகும்படி செய்வதற்காக ஏற்பட்டவை. ‘மனோ ரூபேக்ஷூ கோதண்டா – பஞ்ச தன்மாத்ர ஸாயகா’ என்று, இதையே “லலிதா ஸஹஸ்ர நாமம்” கூறுகிறது. நம்முடைய மனோவிருத்தியும், இந்திரிய விவகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷியாகி கரும்பு வில்லும் மலர்ப் பாணமும் தாங்கிவந்திருக்கிறாள்.
மீதி இரண்டு கைகளில் பாசமும் அங்குசமும் வைத்திருக்கிறாள். பாசமானது நம் பாசங்களை, ஆசையை நீக்கி அவளோடு நம்மைக் கட்டிப்போடுகிற கயிறு. அங்குசம், நாம் துவேஷத்தில் கோபிக்கிறபோது, நம்மைக் குத்தி அடக்குவதற்காக, ஃபிஸிக்ஸில் பிரபஞ்ச இயக்கங்களின் அடிப்படைத் தத்துவங்களாகச் சொல்கிற கவர்ச்சி (attraction) , விலக்கல் (repulsion) என்பனதான், மநுஷ்ய வாழ்வில் முறையே ஆசையும் துவேஷமும் ஆகின்றன. இவற்றை அடக்கி நம்மை ஸம்ஸாரத்திலிருந்து மீட்கவே, அம்பாள் காமாக்ஷியாகி பாசாங்குசங்களைத் தரித்திருக்கிறாள். ‘ராக ஸ்வரூப பாசாட்யா’, ‘க்ரோதாகாராங்குசோஜ்வலா’ என்பதாக லலிதா ஸகஸ்ரநாமத்தில், பாசத்தை ஆசையாகவும், (ராகம்) அங்குசத்தை துவேஷமாகவும் (க்ரோதம்) சொன்னபோது இவற்றை அவை அடக்கி அழிக்கின்றன என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். இப்படியாக, நாலு கைகளில் கரும்பு வில், புஷ்ப பாணம், பாசம், அங்குசம், இவற்றை தரித்துக்கொண்டு, நிறமே இல்லாத பிரம்மத்திலிருந்து செக்கச் செவேல் என்ற பரம கருணையின் நிறத்தோடு, உதய சூரியன் மாதிரி, மாதுளம்பூ மாதிரி, குங்குமப்பூ மாதிரி, செம்பருத்தி மாதிரி, காமேசுவரியான காமாக்ஷி அநுக்கிரக நிமித்தம் தோன்றியிருக்கிறாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
காமாக்ஷியின் சிவப்பு : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
கரும்பு வில்லும் புஷ்ப பாணமும் தரித்து, ஸமஸ்த லோகத்துக்கும் அநுக்கிரகம் செய்கிற திவ்ய மாதாதான் காமாக்ஷி. சகல ஜீவராசிகளையும் இந்திரிய சேஷ்டையிலிருந்து விடுவிப்பதற்காக மலர் அம்பும், மனஸின் ஆட்டங்களிலிருந்து விடுவிப்பதற்காக கரும்பாலான தனுஸையும் தாங்கியிருக்கிறாள். இதில் வேடிக்கை என்னவென்றால், மன்மதனும் இதேபோல் கரும்பு வில்லையும், புஷ்பத்தாலான ஐந்து பாணங்களையும்தான் வைத்திருக்கிறான். அவனுடைய காரியமோ அம்பாளுடைய காரியத்துக்கு நேர் விரோதமானது. அவன் இந்த வில்லையும் அம்பையும் வைத்துக்கொண்டுதான் ஸமஸ்தப் பிராணிகளுக்கும் இந்திரிய விகாரத்தை – அடங்காத காம வேகத்தை – உண்டாக்கி வருகிறான்.
அதுவும் பராசக்தியான அம்பாளுடைய லீலைதான். அவள்தான் மன்மதனுக்கு இப்படிப்பட்ட சக்தியை அநுக்கிரஹம் செய்திருக்கிறாள். பிஞ்சு கசப்பாக இருந்து, பிறகு துவர்ப்பாகி, அப்புறம் புளிப்பாகி, கடைசியில் பரம மதுரமாக பழுக்கிற மாதிரி, ஜீவர்களும் படிப்படியாக பலவித அநுபவங்களில் முன்னேறி முன்னேறி கடைசியில் பழமாகப் பக்குவம் பெற வேண்டும் என்றே அம்பாள் பிரகிருதி நியதிகளை – இயற்கை வேகங்களை உண்டாக்கியிருக்கிறாள். ஒரேயடியாக இவை நம்மை அடித்துச் செல்வதற்கு, நாம் இடம் தந்துவிடக்கூடாது. ஒரேயடியாக எடுத்த எடுப்பில் இந்த வேகங்களிலிருந்து தப்ப முடியாவிட்டால், அதற்காக வருத்தப்பட்டு மனமுடைந்து விடவும் கூடாது. அம்பாளைத் தஞ்சம் புகுந்தால், படிப்படியாக அவள் வழிகாட்டி விடுதலை தருவாள் என்ற நம்பிக்கையோடு, வேகங்களைக் குறைத்துக் கொள்ள அவளைப் பிராத்திக்க வேண்டும். சம்ஸாரம் என்பதில் ஈடுபட்டிருக்கும்போதே இதில் ஏதாவது ஸாரம் இருக்கிறதா என்றும் அடிக்கடி சிந்தித்து வரவேண்டும். இப்படிச் சிந்திப்பதே ஒரு ஸாரம்தான். அதனால்தான் சம்ஸாரத்திலிருந்து விடுபடுகிற விரக்தி உண்டாகிறது. அந்தந்தக் காலத்தில் அந்தந்தப் பிரகிருதி வேகங்கள் – இயற்கை உந்தல்கள் – ஏற்பட்டாலும், அதனால், மனம் கலங்காமல், பராசக்தியைப் பிரார்த்திக் கொண்டேயிருந்தால் பிஞ்சுகாயாகி, காய் கனியாகி, கனி தானே முற்றி மரத்திலிருந்து இற்று விழுந்துவிடுவதுபோல், கடைசியில் சம்ஸார விருக்ஷத்திலிருந்து விடுபட்டு அம்பாளின் சரணார விந்தத்தில் விழுந்து அதோடேயே சேர்ந்து விடுவோம்.
நம்மைப்போல் எத்தனையோ பிராணிகள் ஏகப்பட்ட பூர்வ கர்மாவைச் செய்து குவித்திருக்கின்றன. இந்த கர்மாவைக் கழித்துக்கொள்ள அவையெல்லாம் ஜன்மா எடுத்துத்தானாக வேண்டும். எடுக்கிற ஜன்மாவில் கர்ம மூட்டையைத் ஜாஸ்தியாக்கிக் கொள்ளலாம், அல்லது குறைத்துக் கொள்ளலாம். அது எப்படியானாலும் கர்மாவைக் கழித்துக்கொள்ள வேண்டுமானால் ஜன்மா எடுத்து அதைத் தர்ம வழியில் பிரயோஜனப்படுத்திக் கொள்வது தவிர, வேறு வழியில்லை. கடைசியில் கர்மம் முழுவதும் அழிந்தால் பிறப்பே இல்லாத நிலை அடைவோம். ஜீவர்களுக்கு ஜனன நிவிருத்தி உண்டாவதற்கே ஒரு பயிற்சிக் கூடமாக அவர்கள் ஜன்மம் எடுத்தாக வேண்டியிருக்கிறது. இவ்வாறு ஜீவர்களுக்கு ஜன்மம் ஏற்படுவதற்காகத்தான் அம்பாள் காமத்தை வைத்திருக்கிறாள். அதற்கு அதிகாரியாக மன்மதனை நியமித்திருக்கிறாள்.
ஆனால், எதுவும் தன் எல்லையறிந்து அடங்கி நிற்க வேண்டும். மன்மதன் பக்தர்களிடமும் ஞானிகளிடமும் தன் கைவரிசையைக் காட்ட அம்பாள் விடமாட்டாள். இவள் தான் மகா ஞானியான பரமேசுவரனை மட்டும் தன்னிடம் பிரேமை கொள்ளுமாறும் செய்தவள். மன்மதன் அவரிடம் தன் கை வரிசையைக் காட்டப் பார்த்தான். அவர் நெற்றிக்கண்ணைத் திறந்து அவனை பஸ்மீகரமாக்கி விட்டார். அப்புறம் ஆடாமல், அசங்காமல் பிரம்மமாக அமர்ந்துவிட்டார். அவர் அப்படியிருந்தால் அம்பாளுடைய பிரபஞ்ச லீலை எப்படி நடக்கும்? எனவே, அவள் மன்மதனுடைய கரும்புவில்லையும், புஷ்ப தனுஸையும் தானே தன் கைகளில் எடுத்துக் கொண்டு பரமேசுவரன் முன் வந்தாள். மன்மதனைப் போல், ‘அவரை ஜயிப்பேன்’ என்று அகங்காரத்தோடு வரவில்லை. அன்போடு அடக்கத்தோடு வந்தாள். உடனே, பரம ஞானியான பரமேசுவரனும் காமேசுவரனாக மாறிவிட்டான். இவள் அன்பு பொங்குகிற கண்களால் காமாக்ஷியாகி, காமேசுவரியாகி, அவரைப் பார்க்க அவரும் அன்பு மயமாகிக் காமேசுவரனாகிவிட்டார்.
பிரம்மமாகச் செயலற்று இருந்த வஸ்துவுக்கு லோகாநுக்கிரகம் என்ற பரம கருணை உதிப்பதைத்தான் காமாக்ஷி என்று சொல்கிறோம். சுத்த ஸ்படிக ஸங்காசமாக நிறமில்லாதிருந்த பிரம்மம், அப்போது சிவப்பு நிறத்தை அடைகிறது.
அன்பு, கருணை இவற்றைச் சிறப்பாகவே சொல்வது வழக்கம். ராகம் (அன்பு) , அநுராகம் என்பதிலிருந்தே ரக்தம் (ரத்தம்) என்ற பதம் வந்தது. தமிழிலும் மனச்செம்மை, செவ்விய உள்ளம் என்றெல்லாம் சொல்கிறோம். இதுவே காமாக்ஷியின் சிவப்பு:கருணையின் வர்ணம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
கறுப்பும் சிவப்புமான காமாக்ஷி : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
அம்பாளைப் பற்றிய பல ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. இவற்றில், ஆதி சங்கர பகவத் பாதர்கள் செய்த சௌந்தரிய லஹரியும் மூக கவி செய்த ‘பஞ்ச சதீயும்’ ஈடு இணை இல்லாமல் இருக்கின்றன. தேர்ந்த சைத்திரிகன் ஒருவன் அம்பாளின் ஸ்வரூபத்தை எழுதிக்காட்டுகிற மாதிரி, இவை அம்பிகையின் திவ்விய வடிவத்தை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடும்; அவளுடைய மகிமையினால் நம் மனசு மூழ்கிக் கிடக்கும்படி செய்யும்.
கண்ணுக்கும் மனசுக்கும் எட்டாத பராசக்தியைக் கண்ணால் காணவும், மனஸால் அநுபவிக்கவும் செய்கிற வாக்சக்தி ‘சௌந்தரிய லஹரி’க்கும், ‘மூக பஞ்ச சதீ’க்கும் உள்ளது. கம்பீரம் அத்தனையும் ‘சௌந்தர்ய லஹரி’யில் அடங்கியிருக்கிறது; மார்த்தவம் (மிருதுத் தன்மை) முழுவதும் மூக பஞ்சசதீயில் உள்ளது.
‘மூகன்’ என்றால் ஊமை என்று அர்த்தம். ஊமையாக இருந்த ஒரு பரம பக்தர், காஞ்சீபுரத்தில் குடிகொண்டுள்ள ஜகன்மாதா காமாக்ஷியின் கிருபா கடாக்ஷத்தையும், அவளுடைய தாம்பூல உச்சிஷ்டத்தையும் பெற்று, உடனே அமிருத சாகரம் மாதிரி ஐந்நூறு சுலோகங்களைப் பொழிந்து தள்ளி விட்டார். அதைத்தான் மூக பஞ்ச சதீ என்கிறோம். ‘பஞ்ச’ என்றால் ஐந்து; ‘சத’ என்பது நூறு.
அதிலே காமாக்ஷியின் நிறத்தைச் சொல்லுகிறபோது செக்கச் சிவந்தவள் என்றும் பல இடங்களில் கூறியிருக்கிறார். கருநிறம் படைத்தவள் என்றும் சில ஸ்லோகங்களில் சொல்கிறார். ‘காச்மீர ஸ்தபக கோமாளாங்க லதா’ (குங்குமப் பூங்கொத்து போன்ற கோமளகக் கொடி) ‘பந்து ஜீவகாந்தி முஷா’ (செம்பருத்தியின் ஒளி படைத்தவள்) என்று சொல்கிறார். ‘தாபிஞ்ச ஸதபகத்விஷா’ (கருநீலக் காயாம்பூப்போல் ஒளிருகிறவள்) என்று கூறிகிறார்.
ஏன் இப்படி இரண்டு நிறங்களாகச் சொல்கிறார்? நமக்கு இப்படி ஒருத்தியையே இரண்டு நிறத்தில் சொல்வது புரியவில்லை. சரி, சங்கர பகவத் பாதர்கள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் இதைப் பற்றி என்ன சொல்கிறார்?
“ஜயதி கருணா காசித் அருணா” என்கிறது ஸெளந்தர்ய லஹரி. நல்லதெற்கெல்லாம் உற்பத்தி ஸ்தானமாக சம்பு என்று ஒன்று இருக்கிறது. அது பரப்பிரம்ம வஸ்து. பரப்பிரம்மமாகச் செயலின்றி இருந்தால் போதாது என்று அது லோகத்துக்கு நல்லது செய்வதற்காக ஒரு ஸ்வரூபம் எடுக்கிறது. அதற்குத்தான் அம்பாள் என்று பெயர். நிறமில்லாத சம்பு உலகைக் காக்கும் கருணையினால் அருண வர்ணம் கொண்டு வெற்றியோடு பிரகாசிக்கிறது – ‘ஜகத் த்ராதும் சம்போ:ஜயதி கருணா காசித் அருணா’ என்கிறார் ஸ்ரீ ஆசாரியாள். சூரியோதயத்துக்கு முன்னால் கிழக்கில் பரவுகிற பிரகாசச் சிவப்புத்தான் அருணநிறம். ‘அருண நிறம்தான் கருணை நிறம்; அதுவே அம்பிகையின் நிறம்’ என்கிறார் ஆசாரியாள்.
கறுப்போ அழிவின் நிறம். தமோ குணத்துக்குக் கறுப்பை அடையாளமாகச் சொல்வார்கள். தூக்கம், மரணம், சம்ஹாரம் எல்லாம் கறுப்பு.
காருண்ய மூர்த்தியாக காமாக்ஷியைச் சிவப்பானவளாக மூகர் சொல்வதுதான் நியாயமாக்கப்படுகிறது. ராஜ ராஜேசுவரி, லலிதா மஹா திரிபுரசுந்தரி, ஸ்ரீவித்யா என்றெல்லாம் சொல்லப்படுகிற அம்பாளை மந்திர சாஸ்திரங்களும் செக்கச் செவந்த ஜோதிப்பிரவாகமாகவே சொல்கின்றன. அந்த ஸ்ரீ வித்யா அதிஷ்டான தேவதையின் ஸ்வரூப லக்ஷணங்களையே பூரணமாகக் கொண்டவள் காமாக்ஷி. எனவே, பரம்பொருளின் கருணை வடிவான அவளைச் சிவப்பாகச் சொல்வதுதான் பொருத்தம்.
‘ஸயன்ஸ்’ படிகூட இதுவே பொருத்தமாக இருக்கிறது. VIBGYOR – ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு சிவப்பு என்று ஏழு வர்ணங்களை ஸ்பெக்ட்ராஸ்கோப்பில் பிரித்திருக்கிறார்கள். நிறமில்லாத வெறும் சூரிய ஒளிதான் இப்படி ஏழு நிறங்களாகச் சிதறுகிறது. இதில் வெள்ளை, கறுப்பு – இரண்டும் இல்லை. ஒரு கோடியில் ஊதாவைக் கடந்தால் கறுப்பு. மறுகோடியில் சிவப்பைத் தாண்டினால் வெள்ளை. அதாவது வெளுப்புக்கு ரொம்ப ரொம்ப கிட்டே இருப்பது சிவப்புதான். நம் கண்ணுக்குப் பரம ஹிதமானது வெள்ளைதான். கொஞ்சம்கூட உறுத்தாது. ஆனால் அது நிறமே இல்லை. நிறம் என்று ஏற்பட்டபின் ரொம்பவும் ஹிதமாக, மிகக் குறைவாக உறுத்துவது (least disturbing colour) சிவப்புதான். இதனால்தான் போட்டோ எடுத்த ஃபிலிமைக் கழுவும்போது, அதில் வெறெந்த நிறத்தின் கிரணம் பட்டாலும் படம் அழிந்து விடும் என்று சிவப்பு விளக்கையே போட்டுக்கொள்கிறார்கள். நாம் சிவப்பு கண்ணைக் குத்துவதாக நினைத்தாலும் அதிலிருந்தே infra red என்கிற மிருதுவான நிறத்துக்குப் போகிறார்கள். இந்த infra வுக்கு மாறாக மறு கோடியில் உக்ரமான ultra violet (ஆழ்ந்த ஊதா) இருக்கிறது. அதற்கப்புறம் கறுப்பு. அம்பாளைக் கறுப்பு என்றும் கருநீலம் என்றும் மூகர் சொல்கிறார்; சிவப்பு என்றும் சொல்கிறார். வெள்ளையான சுத்தப் பிரம்மத்துக்கு மிகமிக நெருங்கியுள்ள சக்தி என்பதாலும், ‘கருணாமூர்த்தி’ என்பதாலும் சிவப்பு என்பதே பொருத்தமாயிருக்கிறது.
அம்பாள் கிருபையால் அவளைப் பிரத்தியக்ஷமாக செய்த மூகர் ஏன் கறுப்பு என்றும் சொல்கிறார்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
காமாக்ஷியின் கருமை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
எந்த நிறமும் இல்லாத சூரிய ஒளியிலிருந்து ஒளிச்சிதறல் (Refraction) மூலம் ஒரு நிறத்தைப் பிரித்தால், உடனே மற்ற ஆறு நிறங்களும் பிரிந்து, ‘நானும் போகிறேன், நானும் போகிறேன்’ என்று வெளிப்படத் தொடங்குகின்றன. இது ஒரு வேடிக்கை: எல்லா வர்ணங்களும் சேர்ந்தால் வர்ணமே இல்லாமற் போகிறது; அந்த வர்ணமில்லாத ஒளியிலிருந்து ஒன்று குறைந்து பிரிந்தாலும், மற்ற வர்ணங்களும், ‘நானும் போகிறேன் நானும் போகிறேன்’ என்று பிரிந்து வெளிப்படுகின்றன!
பிரம்மம் என்பது நிறமே இல்லாத சுத்த சூரிய ஒளி மாதிரி. அதில் காரியமே இல்லை. ஆனாலும் சகல காரியங்களுக்கும் ஆதாரமான சகல சக்திகளும் அதில்தான் உள்ளன. எல்லா நிறங்களும் சுத்த ஒளிக்குள் இருக்கிற மாதிரி! காரியம் இல்லாத பிரம்மம் தன்னைத்தானே உணர்ந்து கொண்டதுதான் அதன் முதல் காரியம். இதுவே சாந்தமான பிரம்மத்தில் ஒரு சலனம்தான் ஒளிச்சிதறல் மாதிரி. இந்த ஒளிச் சிதறலில் முதலில் சிவப்பு பிரிகிறது. உதய காலத்தில் சுத்த சூரிய ஒளி முதலில் சிவப்பாகத்தானே வருகிறது? அருணோதயம் என்கிறோமே, ‘அருண’ என்றாலே சிவப்புதான். இப்படிச் சுத்தப் பிரம்மம் சிவப்பாக்கி காரியத்துக்கு வருகிறபோது பிரம்மம் அம்பாளாகிறது. காரியமற்ற பிரம்மம் காரியமயமான சக்தியாகிறது. காமேசுவரி தோன்றுகிறாள். பிரம்மத்துக்குத் தன்னை அறிகிற ஆசை தோன்றியதல்லவா? இந்த ஆசையின் – காமத்தின் – வடிவமே காமேசுவரி. அவளே உலகத்தின் சிருஷ்டி, பரிபாலனம், சம்ஹாரம் எல்லாவற்றுக்கும் மூலம். உண்மையில் இந்த மூன்று தொழில்களும் மாயையில் உண்டானவைதான். மாயாசக்தியால் பிரம்மத்தை மறைத்து, அதனிடத்தில் உலகம் என்ற கற்பனையைக் காட்டுகிறாள். இம்மாதிரி மாயாசக்தியினால் பிரம்மத்தை மறைத்துப் பிரபஞ்சத்தை காட்டுவதை நாலாவது தொழிலாக, திரோதானம் அல்லது திரோபவம் என்று சொல்லுவார்கள். படைத்தல் – காத்தல் – அழித்தல் – மறைத்தல் இவற்றுக்கு மேலாக அநுக்கிரகம் (அருள்) என்கிற ஐந்தாவது தொழிலும் இருக்கிறது. பக்தர்களை மாயையிலிருந்து விடுவித்துத் தன்மயமாக்கிக் கொள்ளுகிறாளே அதுதான் அநுக்கிரகம். இப்படி ஐந்தொழிலைச் செய்வதால் அம்பாள் ‘பஞ்ச க்ருத்ய பராயணா’ எனப்படுகிறாள்.
சிருஷ்டி செய்கிற பிரம்மா, பரிபாலிக்கிற விஷ்ணு, சம்ஹார ருத்ரன், மாயையின் அதிபதியான ஈசுவரன் இவர்களை நாலு கால்களாக் கொண்ட மஞ்சத்தில், சாக்ஷாத் பரப்பிரம்ம சக்தியான காமேசுவரி வீற்றிருக்கிறாள்; பரப் பிரம்மமான காமேசுவரியின் இடப்புறத்தில் அநுக்கிரஹ மூர்த்தியாக அமர்ந்திருக்கிறாள். காமேசுவரன் பிரம்மம், காமேசுவரி பிரம்மசக்தி; இவர்கள் ஸதிபதிகள்.
காமேசுவர – காமேசுவரி என்கிற சிவப்பு பிரிந்தவுடன் மற்ற வர்ணங்களும் வெளியே ஒடிவர வேண்டுமல்லவா? இந்த நியாயப்படி செம்மஞ்சளான பிரம்மாவும் லக்ஷ்மியும் வெளிப்பட்டார்கள். நீலமான மகாவிஷ்ணுவும் பார்வதியும் ஆவிர்பவித்தார்கள். வெள்ளையான ருத்திரனும் ஸரஸ்வதியும் தோன்றிவிட்டார்கள். பிரம்ம சக்தியிலிருந்து இரட்டை இரட்டையாகத் தோன்றிய இந்த மூன்று ஜோடியில் ஒவ்வொரு ஜோடியும் சகோதர சகோதரிகள். அதாவது பிரம்மாவும் லக்ஷ்மியும் உடன் பிறப்புகள்; விஷ்ணுவும் பார்வதியும் உடன் பிறப்புகள்; ருத்திரனும் ஸரஸ்வதியும் உடன் பிறப்புகள். பிரம்மாவுக்கும் லக்ஷ்மிக்கும் தங்க நிறம்; தாமரை ஆசனம். பிரம்மம் ஜீவராசிகளைப் பெருக்கினார்; லக்ஷ்மி, அவர்களின் அநுபோகத்துக்கான ஐசுவரியத்தைப் பெருக்கினாள். நீலமேக சியாமள வர்ணம் கொண்ட விஷ்ணுவும் பார்வதியும் இப்படியே உடன் பிறந்தவர்கள். பரிபாலனமும் மாயா விலாஸமும் முக்கியமாக இருக்கிற நிலை அது. சிவன் கோவில் வடக்குப் பிரகாரத்தில் உள்ள துர்க்கையைப் பாருங்கள். அவள் பதியோடு இல்லாமல் தனித்து இருக்கிற அம்பாள். அவள் விஷ்ணு மாதிரியே சங்கு சக்கரம் வைத்துக் கொண்டிருப்பாள். நாராயணி, சியாம கிருஷ்ண சகோதரி என்றெல்லாம் இதனால்தான் பார்வதியைச் சொல்வது. சிவனும் ஸரஸ்வதியும் சகோதர சகோதரிகள். சிவன் கோயில் தெற்குப் பிரகாரத்தில் துர்க்கைக்கு எதிர்வெட்டாக, பத்தினி சம்பந்தம் இன்றி, அதாவது பார்வதியின் கலப்பில்லாமல் தனித்து ஸ்வச்சமாக இருக்கிற தக்ஷிணாமூர்த்தியைப் பார்த்தால், அவர் ஸரஸ்வதியின் உடன் பிறப்பு என்று தெரியும். ஸரஸ்வதி மாதிரியே அவர் புஸ்தகமும் ஜப மாலையும் வைத்திருப்பார். இருவரும் ஞான மூர்த்திகள். இருவரும் வெளுப்பு.
பிரம்ம சக்தியிலிருந்த மூன்று ஜோடிகள் தோன்றியதற்குக் காரணம் உண்டு. இவர்களுக்குள் ஒவ்வோர் ஆணும் ஒரு பெண்ணை மணந்தாக வேண்டும். இரண்டே ஜோடி இருந்தால் பெண் கொடுத்து பெண் வாங்கினதாகும். அது யுக்தமில்லை. அதனால்தான் மூன்று சகோதர ஜோடிகள் பராசக்தியில் தோன்றின. பிரம்மா சிவனின் சகோதரியான சரஸ்வதியை மணந்தார். சிவன் மகாவிஷ்ணுவின் சகோதரியான பார்வதியை மணந்தார். மகாவிஷ்ணு பிரம்மாவின் சகோதரியான லக்ஷ்மியை மணந்தார். வெள்ளை என்பது சத்வ குணம்; செம்மஞ்சள் ரஜோ குணம். நீலம் அல்லது கறுப்பு தமோ குணம். பிரம்மவிஷ்ணு, ருத்திரர்களை அப்படி அடியோடு தனித்தனியாக்கி முக்குணங்களாகப் பிரித்ததோடு நின்று விடாமல், சமரசத்தைக் காட்டவே அவர்களுடைய சக்திகளான ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி ஆகியோர் அவர்களது நிறங்களுக்கு மாறுபட்ட நிறமாக இருக்கிறார்கள்.
பராசக்தியேதான் இத்தனையும் ஆகி, முத்தொழிலும் செய்கிறாள். இருந்தாலும் அவளை ‘மாயை, மாயை’ என்று நாலாம் தொழிலான திரோதானத்தோடுதான் ரொம்பவும் இணைத்துப் பேசுகிறோம்.
மூக கவி சம்ஹார ருத்ரனின் சக்தியான பார்வதியின் கருநீல நிறத்தைச் சிவப்புப் பராசக்தியின் வர்ணமாககச் சொல்கிறார். மாயையாக இருப்பவளும், மாயையைப் போக்கி ஐந்தாம் தொழிலான (மோக்ஷஅநுக்கிரகத்தைச் செய்பவளுமான பராசக்தியே காமாக்ஷி என்று சொல்லி, அந்தச் சிவப்புக் காமாக்ஷியை ஓரொரு இடங்களில் கறுப்பானவளாகவும் (சியாமாவாகவும்) வர்ணிக்கிறார். சியாமள வர்ணம் கொண்ட பார்வதியைச் சக்தியாகப் பெற்றே வெள்ளைச் சிவன் சம்ஹாரத்தில் இறங்குகிறார். அம்பாளையே சம்ஹார மூர்த்தியாகச் சொல்கிற போதும், அவளைக் காளி என்கிறோம். காளி என்றாலே கருத்தவள் என்று அர்த்தம். அநுக்கிரஹ மூர்த்தியான காமாக்ஷியை ஏன் கருப்பானவளாகவும் அதாவது அழிக்கும் தொழில் செய்கிறவளாகவும் மூகர் சொன்னார்?
வேலை எல்லாம் செய்கிறோம். பிறகு அலுத்துப் போய்த் தூங்குகிறோம். தூக்கம் தமஸின் செயல். அங்கே ஒரே இருட்டு – கறுப்புதான் இருக்கிறது. ஆனாலும் இந்தத் தூக்கத்தில்தான் மநுஷ்யனுக்குக் கொஞ்சமேனும் சாந்தி இருக்கிறது. நாளெல்லாம் அலைந்து திரிந்து கஷ்டப்படுகிற ஜீவராசிகளுக்கு ஆறுதலாகப் பராசக்தி அன்றன்றும் தூக்கத்தை வைத்து கொஞ்சம் அமைதி தருகிறாள். எனவே தமஸிலேயே ரொம்பவும் அநுக்கிரகம் இருப்பதாகத் தெரிகிறது.
சம்ஹாரம் என்பது பெரிய தூக்கம். தூக்கத்தில் எப்படித் துக்கக் கலப்பே இல்லாத அமைதி நிலையில் இருக்கிறோமோ, அப்படியே சம்ஹரிக்கப்பட்ட ஜீவன் மறுபடியும் ஜன்மா எடுக்கிற வரையில் நானாவித கர்ம அநுபவங்களின் சிக்கலிலிருந்து தப்பி அமைதியில் அமிழ்ந்திருக்கிறது. நமக்குக் கர்மக் கட்டிலிருந்து தற்காலிகமாக விடுதலைதந்து விச்ராந்தி தரவே சம்ஹாரத் தொழிலைப் புரிகிறார் சிவபெருமான். ‘நான் கர்மா செய்கிறேன்’ என்ற அகங்காரத்தை இழந்துவிட்ட ஞானிகளே கர்மச் சூழலிலிருந்து நிரந்தரமாகத் தப்ப முடியும். ஆனால் பாபியும்கூடத் தற்காலிகமாகவேனும் இந்தக் கர்மாநுபவத் தொந்தரவிலிருந்து விடுபட்டு விச்ராந்தி பெறுவதற்குப் பராசக்தி மகாகருணையுடன் சம்ஹாரத்தை அமைத்திருக்கிறாள். விஷ்ணுவின் பரம பக்தரான நம்மாழ்வார், ‘முனியே நான்முகனே, முக்கண்ணப்பா’ என்று மும்மூர்த்திகளையும் அழைக்கும்போது, சம்ஹார மூர்த்தியான ருத்திரனைத்தான் ‘அப்பா’ போட்டு அருமையுடன் கூப்பிடுகிறார். பரம தயாளுவான ஒரு தகப்பனார், தப்புச் செய்கிற குழந்தையையும், ‘அடக் குழந்தே! ரொம்ப அலைந்து திரிந்து களைத்துவிட்டாயப்பா, கொஞ்சம் ஒய்வு எடுத்துக் கொள்’ என்று சொல்கிற மாதிரி, பரமேசுவரன் சம்ஹார காலத்தில் நமக்கெல்லாம் ஓய்வு தந்து ஆறுதல் அருளுகிறான். இதையே, “முக்கண்ணப்பா!” என்று வாய்விட்டுக் கூப்பிட்டுக் காட்டுகிறார் ஆழ்வார். இப்படி ஸம்ஹரிக்கிற ருத்திரனின் சக்தியான பார்வதியின் நிறம்தான் கறுப்பு.
லோகத்தை விட்டால்தான் சஞ்சலங்களிலிருந்து விடுபட்டு மோக்ஷம் என்கிற நிரந்தர சாந்தியைப் பெற முடியும். சாந்தியோடு இருக்கிறோம் என்று உணர்ந்து அமைதியில் இருப்பதே ஸமாதி நிலை. என்றும் கலையாத சாசுவத நிலை அது. இதுவே பராசக்தியின் ‘அநுக்கிரகம்’ என்கிற தொழிலால் அருளப்படும் நிலை. இதற்கடுத்த நிலை சாந்தியோடு இருக்கிறோம் என்ற பிரக்ஞையில்லாமலே அப்படியிருக்கிற தூக்க நிலை, சம்ஹார நிலை. எனவே அநுக்கிரஹத்துக்கு அடுத்தபடியாக ஜீவராசிகளுக்கு மிகவும் ஹிதமான நிலை சம்ஹாரம்தான்.
பொது வழக்கிலும் நம்மை ஏன் பிரம்மா சிருஷ்டித்தார் என்ற வருத்தத்தாலோ என்னவோ பிரம்மாவை விசேஷமாக வழிபடுவதே இல்லை. மஹாவிஷ்ணுவுக்கு நிறைய வழிபாடு இருந்தாலும் ஜகத் பரிபாலகரான அவரை மனுஷ்ய லோகத்தோடு ரொம்பவும் சம்பந்தப்படுத்தியிருக்கிறது. ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசாமிகளை, “ஸ்வாமி”, “ஸ்வாமி” என்று பரஸ்பரம் கூப்பிட்டுக்கொண்டாலும், தங்கள் ஸ்வாமியைப் பெரும் ஆள் (பெருமாள்) என்றே சொல்கிறார்கள். வேதத்தைப் பார்த்தாலும் விஷ்ணுபரமான மந்திரங்களுக்குப் “புருஷ ஸூக்தம்” என்றே பெயர் இருக்கிறது. ‘புருஷ’ என்றால் முப்புரங்களான ஸ்தூல – சூக்ஷ்ம – காரண சரீரங்களுக்கு உள்ளே இருக்கிற ஆத்மா என்பது தத்வார்த்தமானாலும், பொதுவில் ‘புருஷ’ என்றால் மநுஷ்யன், ஆசாமி என்றே பொருள் கொள்கிறோம். பராசக்தியிடமிருந்து இந்த லோகமெல்லாம் எப்படி வந்தது என்பதைத்தான் புருஷ ஸூக்தம் சொல்கிறது. லோகத்தோடு, மநுஷ்யனோடு இப்படி விஷ்ணுவுக்கு நெருக்கமான தொடர்பு காணப்படுகிறது. சம்ஹார மூர்த்தியான சிவனே லோகத்தை விட்டபின் இருக்கிற வைராக்கியத்திற்கு முக்கியமாகச் சொல்லப்படுகிறார். விஷ்ணு ஆலயத்தைப் பெருமாள் கோவில் என்றும் சிவாலயத்தையே ஈசுவரன் கோவில் என்றும் சொல்கிற வழக்கமும் இருக்கிறது. விஷ்ணு தாழ்த்தி – சிவன் உயர்த்தி என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. அப்படி சொன்னால் அது அடியோடு தப்பு. இரண்டும் முழுக்க முழுக்க ஒரே வஸ்துதான். ஆனால் அவரவர் செய்கிற கிருத்யத்தைப் பொறுத்து, லோக ரீதியில் அவர்கள் எப்படி நினைக்கப்படுகிறார்கள் என்று காட்டுவதற்காகச் சொன்னேன்.
சிவப்புக் காமாக்ஷியைக் கறுப்பானவள் என்று மூகர் ஏன் சொன்னார் என்று யோசிக்கும்போது, இத்தனை அபிப்பிராயமும் வந்தது. சாசுவத சாந்தி என்கிற மோக்ஷநிலைக்குத் தற்காலிக சாந்த நிலையான ஸம்ஹாரமே மிகவும் கிட்டத்தில் இருக்கிறது. அதனால்தான், சம்ஹார சக்தியான பார்வதியின் கறுப்பு வர்ணத்தையே மோக்ஷம் அநுக்கிரகிக்கும் காமேசுவரியின் வர்ணமாகவும், மூகர் கூறியிருக்கிறார் என்று சொல்ல வந்தேன். ‘பரம ஞானிக்கு அவர் சாசுவத சாந்தம் தருவது பெரிய கருணையில்லை; பாபாத்மாவுக்கு சம்ஹாரத்திலே தற்காலிக அனுமதி தருவதுதான் மகா கருணை’ என்று நினைத்து, சம்ஹார சக்தியின் கறுப்பு நிறத்தையே சிவப்புக் காமாக்ஷியின் இன்னொரு நிறமாக ஸ்துதி செய்தார் போலிருக்கிறது.
பராசக்தியின் ஸத்வகுணம் மகாவிஷ்ணுவாக உலகைப் பரிபாலிக்கிறது; அவளுடைய ரஜோ குணம் பிரம்மாவாக உலகைப் படைக்கிறது; அவளுடைய தமோ குணம் ருத்திரனாக லோகத்தை சம்ஹரிக்கிறது. இந்த ஸம்ஹாரத்தில் எந்த யோக்கியதையும் இல்லாத ஜீவர்களும் சாந்தி அநுபவிக்க அருள் செய்கிறாள். இதனால்தான், அவளது வர்ணத்தைச் சொல்லும்போது ஸம்ஹார சக்தியின் கறுப்பை விசேஷித்துக் சொல்கிறார் மூககவி. ஸத்வம், ரஜஸ் என்ற இரண்டைவிடத் தமஸ் தாழ்ந்தது என்று ஒரு கோணத்தில் ( angle ) தோன்றினாலும், இன்னொரு கோணத்தில் பார்த்தால் தமஸே “அநுக்கிரகம்” என்ற பரம உச்சமான ஐந்தாம் தொழிலுக்குக் கிட்டத்தில் இருப்பதால்தான், நிறமாலையில், கறுப்பும் சிவப்பும் இரு வேறு கோடிகளில் இருந்தாலும், அம்பாள் விஷயத்தில் இந்த இரண்டு வர்ணமுமே ரொம்பக் கிட்டத்தட்ட இருப்பதாக மூகர் பாடியிருக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
காமாக்ஷியின் கருணை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் முறையே பராசக்தியின் ரஜோ குணம், ஸத்வ குணம், தமோ குணம் இவற்றில் தோன்றிப் படைப்பு, காப்பு, அழிப்பு ஆகிய முத்தொழில்களைச் செய்கின்றனர் என்றேன். ஜீவர்களான நமக்கும் இந்த மூன்று குணங்களும் இருக்கின்றன. நாமும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் மூன்று அவஸ்தை (நிலை) களில் செய்கிறோம்.
தூங்குகிறபோது ஸ்வப்னம் உண்டாகிறதே, அப்போது நாம் சிருஷ்டித் தொழிலைச் செய்கிறோம். கனவில் எத்தனை எத்தனையோ இடங்களையும், ஜனங்களையும் படைத்து விடுகிறோம். அம்பாள் அவளுடைய லீலைக்கு ஒரு பெரிய திருஷ்டாந்தமாகவே ஸ்வப்னத்தை உண்டாக்கியிருக்கிறாள் என்று தோன்றுகிறது. மனிதன் வேலை செய்வதற்காக விழித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். வேலை செய்து களைத்த போது தூங்கவேண்டியதுதான். ஆகையால் ஜாக்ரத் (விழிப்பு) ஸுஷுப்தி (தூக்கம்) என்ற இந்த இரண்டு அவஸ்தைகள் (நிலைகள்) போதாதா? ஸ்வப்னம் (கனவு) என்கிற மூன்றாவது அவஸ்தை எதற்காக இருக்க வேண்டும்? யோசித்துப் பார்த்தால் பராசக்தி பரம கருணையினாலேயே ஸ்வப்னாவஸ்தையை ஒரு பெரிய உதாரணமாக நமக்குத் தந்திருக்கிறாள் என்று தெரிகிறது. லோகத்தில் “வேறு வேறாகக் காண்கிற சமஸ்த ஜீவராசிகளும் ஒரே பராசக்தியின் கற்பனைதான்; வாஸ்தவத்தில் அவளைத் தவிர வேறொன்றும் இல்லை” என்று ஞானிகள் சொல்கிறார்கள். இதை எப்படி நம்புவது? ‘இத்தனை ஜீவராசிகளும் பிரத்யக்ஷமாகக் காணப்படுகிறார்களே, காரியங்களைச் செய்கிறார்களே, இவர்களை எப்படிக் கற்பனை என்று சொல்வது?” என்று தோன்றுகிறது. இந்தச் சந்தேகத்தைப் போக்கவே விழிப்பு, தூக்கம் இரண்டு மட்டுமே போதாது என்று ஸ்வப்னா அவஸ்தையை ஒவ்வொரு ஜீவனுக்கும் அம்பாள் தந்திருக்கிறாள். பராசக்தி ஒருத்தியின் கற்பனையில் நாம் அனைவரும் உண்டானதுபோல், நம் ஒருத்தரின் கற்பனையிலேயே கனவில் பல ஊர்களை, ஜனங்களை, நிகழ்ச்சிகளை ஒவ்வொருவரும் உண்டாக்கி விடுகிறோம். கனவு காண்கிறபோது, இதெல்லாம் கற்பனை என்று தெரிகிறதோ? இல்லை. சத்தியமாகவே தோன்றுகிறது. கனவில் அழுகிறோம்; சிரிக்கிறோம்; என்னன்னவோ செய்கிறோம். ஆனால் ஜாக்ரத் (விழிப்பு) நிலைக்கு வந்தவுடன் என்ன ஆகிறது? அத்தனை காட்சியும், ஊர்களும், ஜனங்களும், சம்பவங்களும் வெறும் கற்பிதமே என்று தெரிகிறது. ஆனால் இந்தக் கற்பனைக்கு ஆதாரமாக ஒருத்தன் இருந்தானே, அந்த ஜீவன் மட்டும் ஸ்வப்னாவஸ்தையிலும் இருந்தான்; இப்போது விழித்த பின்பும் இருக்கிறான். இப்படியே உலகமும் பராசக்தியின் கற்பனையின்றி வேறில்லை; அவள் ஒருத்தியே எக்காலமும் சத்தியமாக இருப்பவள் என்று தெரிகிறது. கனவு காண்கிறபோது, அது கனவு என்று தெரியாததுபோல், இந்த உலக வாழ்க்கையில் நாம் மாட்டிக் கொண்டிருக்கிற வரையில் இந்த வாழ்வு மாயம் என்பதும் தெரியாமலே இருக்கிறது.
ஸ்வப்னத்தை ஆத்ம சோதனை செய்து கொள்வதற்கு ஒரு பரிட்சையாகவும் அம்பாள் வைத்திருக்கிறாள். உள்மனத்தில் அமுக்கி வைத்த எண்ணங்களும், நம்முடைய பூர்வ ஸம்ஸ்காரங்களால் உள்ளுக்குள்ளே தடிப்பேறிப் போயிருக்கிற வாஸனைகளுமே ஸ்வப்னத்தில் ஓரளவுக்கு வெளியாகின்றன. உள்ளுக்குள்ளே நாம் எப்படி இருக்கிறோம், எத்தனை தூரம் பரிசுத்தமாயிருக்கிறோம் என்பது நமக்கே தெரியவில்லை. ஸாது ஜனங்களோடு கோவிலுக்குப் போனால், அப்போது மனசுக்கு ரொம்பவும் சாந்தமாக இருக்கிறது; நாம் மிகவும் சுத்தமாகியிட்டோம் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு விடுகிறோம். உடனேயே இந்திரியங்களைத் தூண்டுகிற சினிமா, இல்லாவிட்டால் நாவலைப் படிக்க நேர்ந்தால், அதிலும் சந்தோஷம் ஏற்படுகிறது. இதைப் பற்றி யோசிக்கிறபோது, ‘அடடா கடைசியில் நாம் இவ்வளவுதானா?’ என்று துக்கம் உண்டாகிறது. வாஸ்தவமாகவே நம் பக்குவத்தின் நிலை என்ன என்று உரைத்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளவே அம்பாள் ஸ்வப்னத்தை ஓர் உரைக்கல்லாகத் தந்திருக்கிறாள். கனவில் நாம் காமாதி அநுபவங்களில் மகிழ்கிறோமா, அல்லது காமாக்ஷியின் தரிசனம் கிடைத்தாற்போல் ஸ்வப்னம் வருகிறதோ என்று பார்த்தால் நம் அந்தரங்கம் நமக்கே தெரியும். பூஜை, தியானம், ஜபம் என்று வெளிப்பட நாம் அமர்க்களம் பண்ணலாம். ஆனாலும் ஸ்வப்னத்தில் காமாக்ஷியைத் தரிசிப்பதாக வந்தால்தான் உண்மையாகவே பக்குவமானதாக அர்த்தம். நம் குறை நிறைகளை அறியப் பரீட்சையாகக் கனவை வைத்திருக்கிறாள். குறையிருக்கிறதே என்று புலம்ப வேண்டியதில்லை. நமக்கு உள்ள குறையை உணர்ந்தால்தானே நிறைவை நோக்கிப் போகலாம்? “அம்மா! நான் இன்னமும் இப்படித்தான் இருக்கிறேனா? என்னை மேலும் கை தூக்கி விடு. உன்னை நிஜமாக பக்தி செய்ய அநுக்கிரஹம் பண்ணு” என்று அவளையே நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ள வேண்டும். நம் பக்குவக் குறையை உணர்ந்து நம்மைத் திருத்திக் கொள்ளவே, அல்லது நிறைவை அறிந்து நிம்மதி பெறவே, கருணையோடு ஸ்வப்னாவஸ்தையை வைத்திருக்கிறாள்.
ஸ்வப்னம் என்பது படைப்புத் தொழிலைக் காட்டுகிறது. அப்போது நாம் பிரம்மா மாதிரி சிருஷ்டி செய்கிறோம். ஜாக்ரத் என்கிற விழிப்பு நிலையில், நம்மையும் நம்மைச் சேர்ந்தவர்களும் ரக்ஷித்துக் கொள்வதற்காக காரியங்களைச் செய்கிறோம். இது விஷ்ணுவின் பரிபாலனம் மாதிரி, ஸுஷுப்தி எனப்படும் தூக்கத்தில் நம் இந்திரியங்கள், மனசு எல்லாம் அழிந்து போனதுபோல், எந்த வேலையும் செய்யாமல் ஒய்ந்து போய்விடுகின்றன. இது ருத்திரனின் கிருத்தியமான சம்ஹாரம் போன்ற நிலை. அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு என்பார்கள். அம்பாளுடைய சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஆகியன ஒவ்வொரு ஜீவனிடத்திலும் இருக்கின்றன. ஆனால், அவள் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் செய்பவள் மட்டுமல்ல. இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டிருக்கிற நாலாவதான துரீய வஸ்துவே அவள். அந்த நிலை எப்படி இருக்கும். ஒரு கற்கண்டு கட்டியை உடைத்து எந்தப் பொடியை வாயில் போட்டுக் கொண்டாலும் எப்படித் தித்திக்குமோ, அதுபோல் ஆனந்தத்தைத் தவிர வேறெதுவுமே இல்லாத நிலைதான் அந்தத் துரீயம். ஆனந்தாநுபவம் என்கிற ரஸமொன்றே இறுகி இருக்கிற அந்த நிலையை ரஸனம் என்று சொல்வார்கள்.
சிருஷ்டியிலும் ஸ்திதியிலும் நிறைவான, நிரந்தரமான ஆனந்தம் இல்லை. சம்ஹாரத்தில் எந்த அலைச்சலும் இல்லாத ஆனந்தம் இருந்தாலும், ‘ஆனந்தமாக இருக்கிறோம்’ என்ற பிரக்ஞை இல்லை – இதுவும் பிரயோஜனமில்லை. துரீயத்தில்தான் இந்த மூன்றுமே அடிபட்டுப்போய் இவற்றுக்கு ஆதாரமான ஒரே சத்தியம் மட்டும் ஆனந்த ஸ்வரூபமாகப் பூரணப் பிரக்ஞையுடன் பிரகாசிக்கிறது. அந்த ஒன்றுதான் மாயையால் இந்த மூன்றாகவும் தெரிந்தது. மாயை போனால், மூன்றும் போய்விடும். துரீயமான ஒன்று மட்டுமே நிற்கும். ஜீவனை இந்த மூன்றின் கட்டிலிருந்து, மாயா பந்தத்திலிருந்து அம்பாள் விடுவித்தால் அந்த ஆனந்தத்தை அநுபவிக்கலாம். இந்த உலக மாயையில் அகப்பட்டுக் கொண்டிருக்கும்போதே பரீட்சையில் பாஸ் பண்ணுவது, உத்தியோகத்தில் பிரமோஷன் பெறுவது, வியாதி வந்தால் குணமாவது இதற்கெல்லாம் பிரார்த்தனை செய்கிறோம். நம் பிரார்த்தனை நிறைவேறி விட்டால் “ஸ்வாமி அநுக்கிரஹம் செய்து விட்டார்” என்று சொல்கிறோம். ஆனால், பராசக்தியின் பஞ்ச கிருத்தியங்களை (ஐந்தொழில்கள்) எடுத்துக் கொள்ளும்போது ‘அநுக்கிரம்’ என்றால், அது மாயா லோகத்திலிருந்து நம்மை விடுவித்து நம்முடைய ஆத்ம ஸ்வரூபமான மோக்ஷ நிலையில் சேர்ப்பிக்கிறதைத்தான் குறிக்கும். லலிதா ஸஹஸ்ரநாமமும் “பிரம்மாவாக உலகைப் படைக்கிறாய், விஷ்ணுவாகக் காக்கிறாய், ருத்திரனாக ஸம்ஹரிக்கிறாய், மஹேஷ்வர சக்தியாக மாயை ஆகிறாய், ஸதாசிவ ஸ்வரூபமாக அநுக்கிரஹத்தை செய்கிறாய்’ என்று ஐந்தொழில்களைச் சொல்கிறது:
ஸ்ருஷ்டிகர்திரீ – ப்ரம்மரூபா; கோப்த்ரீ – கோவிந்த ரூபிணீ; ஸம்ஹாரிணி – ருத்ரரூபா; திரோதானகரி – ஈச்வரி; ஸதாசிவா – அநுக்ரஹதா; பஞ்ச க்ருத்ய பராயணா.
ஜீவன் விஷயத்தில் கனவு, விழிப்பு, உறக்கம் இவையே சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்றேன். இங்கேயும் துரீயம் இருக்கிறது. குடை ராட்டினத்தில் சுற்றுகிற மாதிரி விழிப்பிலும், கனவிலும், தூக்கத்திலும், மாயைக்குள் சுற்றி சுற்றி வருகிறோம். சிலர் இந்த குடை ராட்டினத்தில் யானை மேல் இருக்கிறோம்; சிலர் குதிரை மேல் இருக்கிறோம்; சிலர் சிங்கத்தின் மேல் இருக்கிறோம்; ஆனால், எதுவானாலும் இந்தக் குடை ராட்டின வட்டத்தை விட்டு அப்பால் சவாரி செய்ய முடியாது. அதாவது, மாயைக்குள்ளேயேதான் நம் பெருமை, சிறுமை எல்லாம் சுழன்று சுழன்று வருகின்றன. அதைக் கடந்து போக முடியவில்லை. குடைராட்டினத்துக்கு அப்பால் அதில் உள்ள மிருக மொம்மைகள் போக முடியாதே; இருக்கிற இடத்திலேயே சுற்ற வேண்டியதுதான். சுற்றி வரும்போது எத்தனை சந்தோஷமாக இருந்தாலும், அது பிறகு அலுத்துத்தான் போகிறது. இந்தச் சலிப்புத் தீரத் தூக்கத்தை ஒரு மருந்தாகத் தந்து ஒய்வு கொடுக்கிறாள் அம்பிகை. இதுவும் மாயை வட்டத்துக்குட்பட்டதுதான். குடை ராட்டினப் பொம்மை மீதே தலை சுற்றி மயங்கிச் சாய்கிற மாதிரிதான் தூக்கம். ராட்டினத்தை விட்டு இப்போதும் இறங்கினபாடாக இல்லை. இந்தத் தூக்கத்துக்கு அப்பால்தான் மூன்று நிலைகளுக்கும் ஆதாரமான துரீயம் இருக்கிறது. நாம் தூங்குகிறபோதும், எதுவோ ஒன்று நமக்குள் தூங்காமல் விழித்துக் கொண்டு உயிரை இயக்குகிறது அல்லவா? அதுதான் துரீயம். குடை ராட்டின வட்டத்துக்கு அப்பாற்பட்ட சத்தியம் அதுவே. அதுவே அம்பாள்.
அம்பிகையை மாயை, மாயை என்றே பொதுவாகச் சொல்வார்கள். மூகரும், காமாக்ஷியிடம், “ஹே மகா மாயையே! உன் துளிர்போல் சிவந்த பாதங்களில் லயித்துப் போகிறேன்” என்கிறார்.
“லீயே புரஹரஜாயே மாயே தவ தருண பல்லவச் சாயே சரணே”
மாயையில் லயிப்பதாகச் சொன்னாலும், மாயைக்கு அதீதமான துரீயானந்தத்தில் இரண்டறக் கலப்பதாகத்தான் இங்கே அர்த்தம். மாயையாகிற காமாக்ஷிதான் அதை நீக்குகிற அநுக்கிரஹ மூர்த்தியும் ஆவாள். எவள் மறைக்கிறாளோ அவள்தானே மறைப்பை எடுக்கவும் முடியும்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
காமாக்ஷியின் பெருமை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
படைப்பு, காப்பு, அழிப்பு மூன்றுக்கும் ஆதாரமாக இருப்பது ஒரு பராசக்தி. இம் மூன்றைக் கடந்தபின் நாலாவதாக உள்ள துரீயத்தையே சதுர்த்தம் என்றும், சிவம் என்றும் அத்வைதம் என்றும் சாந்தம் என்றும் மாண்டூக்ய உபநிஷத் சொல்கிறது. அதையே பிரம்மம் என்கிறோம்.
அதைத் தவிர இரண்டாவதாக வேறெதுவும் இல்லாததால் அது அத்வைதம். அப்போது அதற்கு நிறமும் இல்லை; சுத்த ஸ்படிகமாக இருக்கிறது. ஸ்படிகமான இந்தச் சிவ ஸ்வரூபம்தான் செக்கச் சிவந்த காமேசுவரியாக, காமாக்ஷியாக இருக்கிறது. ஏகமாக இருந்த ஒன்று பலவாகத் தோன்றுகிற சக்தியாகும்போது காமேசுவரியாகிறது. பலவாகத் தோன்றுவதோடு, அவற்றை எல்லாம் ரக்ஷிக்கிற பரமகாருண்யமுள்ள மாதாவாகவும் அது இருக்கிறது. பலவாகத் தோன்றுகிற ஜகத்தையே ஜீவர்கள் சத்தியமாக நினைத்து மயங்க வைக்கிற மாயையும் அதுதான். இந்த மாயையிலிருந்து ஜீவர்களை விடுவித்து ஏகமான அத்வைத ஸ்வரூபத்தில் கரைக்கிற ஞானாம்பிகையாகவும் அதுவே இருக்கிறது. அதன் மகிமை இப்படி நம்மால் புரிந்து கொள்ள முடியாதபடி பல தினுசாக இருக்கிறது.
பிரம்மம் துரீயம் என்றால், சாக்ஷாத் அந்த பிரம்மத்தின் சக்தியான காமாக்ஷியும் துரீய வஸ்துவாகத்தான் இருக்கிறாள். ‘துரீயா காபித்வம்’ என்று ஆதி சங்கராச்சாரியாள் அவளையே ‘ஸெளந்தர்ய லஹரி’யில் சொல்கிறார். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் இவற்றுக்கு அப்பாற்பட்டு செயலற்று இருப்பது பிரம்மமான சிவஸ்வரூபம். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் இவை மூன்றையுமே செய்வித்துக் கொண்டும், அவற்றால் பாதிக்கப்படாமல், அவற்றைக் கடந்து அதீதமாக நிற்பது பராசக்தியான காமேசுவரி. இந்த மூன்று தொழிலும் அவளுடைய மாயை. இந்த மாயையால்தான் அகில சராசரங்களையும் ஆட்டி வைக்கிறாள். மஹா மாயா விச்வம் ப்ரமயஸி’ என்கிறார் ஸெளந்தர்ய லஹரியில். மஹா மாயையானாலும் உண்மையில் அவளே
‘பரப்ரம்ம மஹிஷி’
சாக்ஷாத் பிரம்மத்தின் பட்டமகிஷி என்கிறார்.
தன்னைத் தவிர, வேறில்லாத பிரம்மத்துக்கு எப்படிப் பத்தினி இருக்க முடியும் என்று தோன்றுகிறது. பிரம்மத்திலிருந்துதானே இத்தனை தோற்றங்களும் வந்திருக்கின்றன? ஏதோ ஒரு சக்தியால்தானே அசலமான பிரம்மம் அசைந்து கொடுத்தது மாதிரி இத்தனையும் தோன்றிவிட்டன? அந்தச் சக்திதான் பிரம்மத்தின் பத்தினியான ‘காமேசுவரி’ எனப்படுகிறது. அன்பே உருவான, ஒரு பெற்ற தாயாருக்கு மேலாக அந்தப் பராசக்தி அநுக்கிரஹம் செய்வதைப் பிரத்தியக்ஷமாக அநுபவித்த மகான்கள் அதைக் காமேசுவரியாக வர்ணிக்கிறார்கள்.
பிரம்மாவின் பத்தினி என்று வாக்தேவியைச் சொல்கிறார்கள். பிரம்மா உலகைச் சிருஷ்டிப்பதுபோல், கவிகளுக்குக் கற்பனா சிருஷ்டி சக்தியைத் தருகிறவள் ஸரஸ்வதி. செல்வத்தைத் தருகிற மஹாலக்ஷ்மியை லோகபாலகனான மஹாவிஷ்ணுவின் சக்தியாகச் சொல்வதும் சரி. சம்ஹார மூர்த்தியான ருத்திரனின் சக்தியாக இருக்கிறாள் பார்வதி. இந்த மூன்று காரியங்களுக்கும் மேலே இருக்கிறாளே, பராசக்தியான காமாக்ஷி! இவளை யாருடைய பத்தினி என்று சொல்வது? பரப்பிரம்ம பத்தினி என்றே சொல்ல வேண்டும். குணமும் கிரியையும் இல்லாத சாந்த மயமான பிரம்ம பத்தினியாகவும் இருக்கிறாள் – லோகத்தை எல்லாக் குணங்களிலும், பல கிரியைகளிலும் புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிற மஹா மாயையாகவும் இருக்கிறாள். “இந்த மஹிமைக்கு எல்லை காட்ட முடியாது (நிஸ்ஸீமம்) அது இன்னதென்று புரிந்து கொள்ளவும் முடியாது (துரதிகமம்)” என்று ஆசாரியாள் ஸெளந்தர்ய லஹரியயில் அம்பாளுடைய பெருமையைச் சொல்கிறார்.
எல்லாவற்றையும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிற அந்தச் சக்தியில் கரைந்தால் எப்படி ஆட்டமே இல்லாத ஆனந்தமும், சாந்தமும் உண்டாக முடியும் என்று தோன்றுகிறது. யோசித்துப் பார்த்தால் அது எப்போதும் சாந்தமாகவும், ஆனந்த ஸ்வரூபமாகவும் இருப்பதால்தான் எல்லாவற்றையும் ஆட்டிப் படைத்திருக்கிறது என்று தெரியும். ஜீவனும் கனவு, விழிப்பு, தூக்கம் இவற்றில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றைச் செய்கிறான் என்று முன்னே சொன்னேன் அல்லவா? இவன் தூங்குகிற போதும் தூங்காமல் இவனுக்குள்ளேயே ஒரு சக்தி இருக்கிறதல்லவா? அது இருப்பதால்தானே இவன் மறுநாள் காலை விழித்துக் கொள்கிறான்? இந்த நான்காவதான துரீய வஸ்து ஒரே அமைதி மயமாகத்தானே இருக்கிறது? தூங்குகிற போது துக்கக் கலப்பே இல்லாத சாந்தம் தானே இருக்கிறது? ஆனால் இத்தனை சாந்தமான அந்த வஸ்து உடம்பை விட்டுப் போய் விட்டால் இவனுடைய ஆட்டபாட்டம் எல்லாம் ஓய்ந்து போகின்றனவே! எனவே ஆட்டபாட்டங்களுக்கெல்லாம் ஆதாரமாக எந்த ஒன்று இருக்கிறதோ, அது ஆடாமலே சாந்தமாகத்தான் இருக்கிறது என்று தெரிகிறதல்லவா?
இப்படியே பிராணாதாரமாகவும், லோகங்களுக்கெல்லாம் ஆதாரமாகவும் இருக்கிற பராசக்தி பரம சாந்தமாகவே இருக்கிறாள். அவளிடம் பக்திவைத்து நம்மை அவளுக்குள் கரைத்துக் கொண்டால் பரம சாந்தியைப் பெறுவோம்.
காலத்தின் போக்கில் மனிதன் மாறுகிறான்; ஜீவராசிகள் மாறுகின்றன; மரம் செடி, கொடி எல்லாம் மாறுகின்றன; லோகங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாம் மாறுகின்றன. இத்தனைக்கும், ஆதாரமான பிரம்மம்தான் மாறாமலே இருக்கிறது. எக்காலமும் ஒரேபோல் இருக்கிற பிரம்மமாகிற சத்தியத்தையே ‘ஸத்’ என்கிறோம்.
ஒன்று இருந்தால் மட்டும் பிரயோஜனம் இல்லை. தான் இருக்கிறோம் என்று அறிந்தால்தான் பிரயோஜனம் உண்டு. தான் உள்ளதாகவே உணராத ஒன்று இருந்தும் இல்லாதது மாதிரிதான். ‘ஸத்’ தாகிய பிரம்மத்துக்கு, தான் இருப்பதாக அறிவு இருப்பதால்தான் தன் சக்தியை இத்தனை தோற்றங்களாகக் காட்ட முடிகிறது. இப்படியாக ‘ஸத்’ தன்னைத்தானே அறிந்துகொள்வதைத்தான் ‘சித்’ என்கிறோம். ஞானம் என்றும் அறிவு என்றும் சொல்வது அதைத்தான். ‘ஸத்’ என்பது ஈசுவரன். ‘சித்’என்பதே அம்பிகை. தன்னையே அறிந்து கொள்ளும்போதுதான் ஆனந்தம் என்கிற உணர்வு உண்டாகிறது. ஈசுவரனும் அம்பாளும் – காமேசுவரனும் காமாக்ஷியும் சேர்ந்து – ‘ஸத்சித்’ஆனந்த பிரம்மமாக இருக்கிறார்கள்.
பிரம்மத்தையும் பிரம்ம சக்தியையும் பிரிக்க முடியாது. பாலும் வெண்மையும், புஷ்பமும் அதன் சுகந்தமும், தேனும் மாதுரியமும், அக்னியும் பிரகாசமும் போல் ஈசுவரனும் அம்பாளும் பிரிக்கவொண்ணாமல் அபின்னமாக இருப்பவர்கள். இதனால்தான், அர்த்தநாரீசுவரராகச் சொல்கிறோம். ஒரே ஸ்வரூபத்தில் ஈசுவரன் ஒரு பாதி, அம்பாள் மறு பாதி.
‘ஆனால் இதுவும்கூட முழுக்கச் சரியில்லை போலிருக்கிறதே!’ என்கிற மாதிரி ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர்கள் ‘ஸெளந்தர்ய லஹரி’ஸ்லோகம் ஒன்றில் (த்வயா ஹ்ருத்வா வாமம்) என்று சொல்கிறார்:
“அம்பிகே! நிர்குணப் பிரம்மம் தனக்கென்று எந்த வர்ணமும் இல்லாத ஸ்படிக ஈசுவரனாக இருக்கிறது. அதில் இடப்பக்கத்தை நீ திருடிக் கொண்டாயாம். அப்படிப் பார்த்தாலும் உனக்கு ஒரு பாதி உடம்புதானே இருக்க வேண்டும்? ஆனால் பதியின் பாதி சரீரத்தைதத் திருடிக் கொண்டதிலும் உனக்குத் திருப்தி உண்டாவில்லை. பாக்கி பாதி தேகத்தையும் நீயே ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதாகக் காண்கிறது. அதனால்தான் பூரண ஸ்வரூபமாகச் செக்கச் செவேலென்று காமேசுவரியாக இருக்கிறாய். பரமேசுவரனுக்கு உரிய நெற்றிக்கண், சந்திர கலை எல்லாவற்றையும் நீயே ச்வீகாரம் செய்து கொண்டு விட்டாய்!” என்கிறார்.
செயலற்ற பிரம்மம் அநுக்கிரஹம் செய்வதற்கென்றே பூரண ரூபமும் கொண்டுவிட்டது என்பதை இப்படிச் சொல்கிறார் போலிருக்கிறது.
‘கதாஸ்தே மஞ்சத்வம்’ என்று ஆரம்பமாகும் சுலோகத்தில், அம்பாள் ஐந்தொழிலும் செய்வதாகச் சொல்லும்போது, “பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் (மாயைக்கு அதிபதியான) ஈசுவரன் இவர்களைக் கட்டில் கால்களாகக் கொண்ட மஞ்சத்தின் மீது நீ பிரம்ம ஸ்வரூபமான காமேசுவரனோடு அநுக்கிரஹ ரூபிணியாக, காமேசுவரியாக விளங்குகிறாய். ஆனாலும் அந்தக் காமேசுவரன் ஒருத்தன் தனியாக இருப்பதே தெரியவில்லை. உன்னுடைய ஜோதிச் சிவப்பு அவனுடைய ஸ்படிக நிறத்திலும் பளீரென்று வீசி, அவனையும் ஒரே சிவப்பாக்கி சிருங்கார ரஸத்தின் வடிவமாக்கிவிட்டது” என்கிறார். காமாக்ஷியின் அநுக்கிரஹ சக்தி அத்தனை வலுவானது!
முதலில் சொன்ன சுலோகப்படி அம்பாளுக்கும் முக்கண் உண்டு; சிரஸில் சந்திரகலை உண்டு; நெற்றிக் கண் அக்னி வடிவானது; வலக்கண் சூரிய வடிவம்; இடக்கண் சந்திர வடிவம். உலகத்தை வாழ்விக்கிற மூன்று ஜோதிகளும் பராசக்தியிடமிருந்து வந்தவை. இதைக் கவித்வ அழகோடு ஸெளந்தர்ய லஹரியின் இன்னொரு சுலோகம் சொல்கிறது. அது, ‘உன் வலது கண் பகலைப் படைக்கிறது. இடது கண் இரவைப் படைக்கிறது. இரண்டுக்கும் நடுவே உள்ள நெற்றிக் கண் சந்தியா காலத்தைப் படைக்கிறது. அதனால்தான் அது சிவந்து விளங்குகிறது’ என்கிறது. காலஸ்வரூபிணி அவளே என்பது இதன் தாத்பரியம்.
காமாக்ஷி தன் சிரஸில் சந்திரகலை வைத்துக்கொண்டிருப்பதை மூகரும் தமது ‘பஞ்ச சதீ’யில் சொல்கிறார். மூகபஞ்சதீயில் முதலில், ‘ஆர்யா சதகம்’ என்று நூறு சுலோகங்கள் இருக்கின்றன. இந்த சுலோகங்களின் விருத்தத்துக்கு ‘ஆர்யா’ என்று பேர். ஸ்தோத்திரிக்கப்படும் அம்பாளும் ஆர்யா. அதாவது, பரம உத்தமமானவள். இரண்டு விதத்திலும் இதற்கு ‘ஆர்யா சதகம்’ என்ற பெயர் பொருந்தியிருக்கிறது. இதில் ‘ஐசுவரியம் இந்துமௌளே’ என்கிற ஸ்லோகத்தில் இவ்விஷயத்தை சொல்லுகிறார். ‘இந்துமௌளி எனப்படும் சந்திரசேகரின் ஐசுவரியமே நீதான் அம்மா’ என்கிறார். ஈசுவரனின் தன்மை எதுவோ அதுவே ‘ஐச்வரியம்’. ஈசுவரனுக்கே ஈசுவரத் தன்மை பராசக்தியால்தான் வந்தது என்கிறார். ஸெளந்தர்ய லஹரியில் முதல் சுலோகமும் இதையேதான், ‘அம்பிகையின் சக்தி இல்லாவிட்டால் சிவன் அசைந்து கொடுக்கக்கூட முடியாது’ என்கிறது. பரமேசுவரன் தன்னைத் தானே அறிந்து கொள்கிற அறிவாகிய அசைவு அவள்தான். எங்கும் நிறைந்திருக்கிற அந்தப் பரமேசுவர தத்துவம் அவள் கிருபை இருந்தால்தான் நமக்கும் தெரியும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
இவளால்தான் அவனை அவனே அறிய முடியும். அதே சமயத்தில் அவன்தான் அவளுக்கு ஆதாரமாக இருக்கிறான். ‘பிரகிருதி’ என்கிற இவள் இயற்கையாக இருக்கிறாள்; அது ஜடம்போலத் தோன்றுகிறது; அதற்கு உயிராக அவனே புருஷனாக இருக்கிறான். பிரகிருதியை மாயை என்றும், ஈசுவரனை மாயி என்றும் சொல்வார்கள். ஈசுவரனின் செல்வமான காமாக்ஷி, ‘பிரகிருதியோடு ஒன்றாகக் கரைந்து காஞ்சிபுரத்தின் மத்தியில் சந்திரப் பிஞ்சைச் சிரஸில் சூட்டிக்கொண்டு, வேதங்களின் பரம தாத்பரியமாகப் பிரகாசிக்கிறது’ என்கிறார் ஸ்ரீ மூகர். “ஐந்தவ கிசோர சேகரம்” – குழந்தையான பிறைமதியைச் சிரஸில் உடையது – என்று வெகு லலிதமான வாக்கினால் சொல்கிறார். ‘முற்றா வெண்திங்கள்’ என்று ஞானசம்பந்தக் குழந்தை சொன்னது போலவே!
அம்பாளைப் பிரகிருதி, மாயை என்று சொன்னதோடு நிற்கவில்லை. புருஷன் அல்லது மாயையின் சக்தியும் இதே காமாக்ஷிதான். அவனோடு அபேதமாக, அபின்னமாக இருக்கப்பட்ட வஸ்து இவள். இருவரும் ஒன்றே; அத்வைதமாக இருக்கிறார்கள். வேதங்களின் பரம தாத்பரியம் அத்வைதம். அந்த அத்வைதத்தின் ரூபமாகவே காஞ்சிபுரத்தில் காமாக்ஷி பிரகாசிக்கிறாளாம்! ‘ஐதம்பரியம் சகாஸ்தி நிகமானாம்’ என்கிறார் மூகர்.
மாதா ஸ்வரூபம் என்று அருகில் போகிறோம். பார்த்தால் பிதாவுக்கு உண்டான நெற்றிக்கண், சந்திரகலை எல்லாமும் இங்கே இருக்கின்றன. சிறந்த பதிவிரதையாக இருந்து, அந்தப் பதிவிரத்தியத்தாலேயே ஈசுவரனின் பாதி சரீரத்தை இவள் பெற்றதாகச் சொன்னாலும், இப்போது பார்க்கும் போது, இவள் சிவஸ்ரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி, முழுவதும் தானே ஆகிவிட்டாள் என்று, ஸெளந்தர்ய லஹரி சொல்கிறது.
பக்தியின் ஸ்வாதீனமும், கவித்த கல்பனா சுதந்திரமும் கொண்டு இப்படியெல்லாம் ஆசார்யாள், மூகர் போன்றவர்கள் துதிக்கிறார்கள். மொத்தத்தில் தாத்பரியம் அவள் பூரண பிரம்மசக்தி, அவளுக்கும் பரமாத்மாவான பரமேசுவரனுக்கும் லவலேசம்கூட பேதம் இல்லை என்பதே.
பரமேசுவரனின் சரீரத்தை இவள் திருடியதாக ஆசார்யார் சொல்கிறார் என்றால், அப்பைய தீக்ஷிதர் வம்சத்தில் வந்த மகனாகிய நீலகண்டதீக்ஷிதரோ அம்பாளுடைய கீர்த்தியைத்தான் ஈசுவரன் தஸ்கரம் செய்து கொண்டுவிட்டான் (திருடிவிட்டான்) என்று குற்றப் பத்திரிக்கை படிக்கிறார்! பரமேசுவரன், ‘காமனைக் கண்ணால் எரித்தவராம்; காலனைக் காலால் உதைத்தவராம்’ என்று லோகம் முழுக்கப் பிரக்யாதி பெற்றுவிட்டார். “ஆனால் அம்மா, காமனை எரித்த நெற்றிக் கண்ணில் பாதி உன்னுடையதல்லவா? அதுவாவது தொலையட்டும். இந்த வெற்றியில் பாதி சிவனுக்குச் சேரும். ஆனால் காலனைக் காலால் உதைத்து வதைத்த புகழ் அவரை அடியோடு சேரவே கூடாது. ஏனென்றால் இடது காலல்லவா அவனை உதைத்தது. அது முழுக்க உன்னுடையதுதானே?” என்கிறார். காமாக்ஷியின் கடாக்ஷம் துளி விழுந்துவிட்டால் நாம் காமத்தை வென்று விடலாம். காலத்தையும் வென்று அமர நிலையை அடைந்து விடலாம் என்று அர்த்தம்.
அவளுடைய பெருமை நம் புத்திக்கும் வாக்குக்கும் எட்டாதது. அசலமான சிவத்தையே சலனம் செய்விக்கிற சக்தி அது. அவளுடைய க்ஷணநேரப் புருவ அசைப்பை அக்ஞையாகக் கொண்டு பிரம்மாவும், விஷ்ணுவும், ருத்திரனும், ஈசுவரனும், ஸதாசிவனும் பஞ்சகிருத்தியங்களைச் செய்கிறார்கள் என்கிறது “ஸெளந்தர்ய லஹரி” (ஜகத் ஸுதேதாதா). பிரம்ம, விஷ்ணு, ருத்திரர்கள்தான் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் செய்பவர்கள் என்று உங்களுக்குத் தெரியும். இந்த முத்தொழிலோடு மாயை என்கிற மறைப்பு மாயையைப் போக்குகிற ஞானம் என்ற அநுக்கிரகம் இவற்றைச் சேர்த்துக் கொண்டு பஞ்சகிருத்யம் என்னும்போது, மறைப்பான திரோதானத்தைச் செய்கிறவன் ஈசுவரன்; அநுக்கிரகம் செய்பவன் ஸதாசிவன். இந்த தொழில்கள் எல்லாமே பராசக்தியின் ஏவலின்படி நடக்கிறவைதான். இந்த ஐந்து மூர்த்திகளை ஐந்து ஆபீஸர்களாக வைத்துக் காரியம் நடத்தும் எஜமானி அம்பாள்தான். அவர்கள் தங்கள் இஷ்டப்படி தொழிலாற்ற முடியாது. அவர்களுடைய சக்தி எல்லாமும் பராசக்தியான இவளிடமிருந்து பெற்றதுதான். “உன் பாதத்தில் அர்ச்சித்து விட்டால்போதும். அதுவே மும்மூர்த்திகளின் சிரசிலும் அர்ச்சனை செய்ததாகும்; ஏனென்றால் திரிமூர்த்திகளின் சிரசங்களும் எப்போதும் உன் பாதத்திலேயே வணங்கிக் கிடக்கின்றன” என்கிறது ஸெளந்தர்ய லஹரியில் இன்னொரு ஸ்லோகம் (த்ரயாணாம் தேவானாம்). மும்மூர்த்திகளும் அந்த சரணார விந்தங்களில் தங்கள் தலையை வைத்து, தலை மீது கைகளை மொட்டுக்கள் மாதிரி குவித்து அஞ்சலி செய்கிறார்கள். நாம் புஷ்பம் போடுவது அம்பாளின் பாதமலர்களிலிருந்து மட்டுமல்லாமல் திரிமூர்த்திகளின் கரங்களான மொட்டுகளுக்கும் அர்ச்சனை ஆகிறது. சகல தேவ சக்திகளையும் பிறப்பித்த பராசக்தி ஒருத்திக்குச் செய்கிற ஆராதனையே, எல்லாத் தெய்வங்களுக்கும் செய்ததாகிறது என்கிறது உட்பொருள்.
அம்பாளின் மகிமையை ஸெளந்தர்ய லஹரியில் ஆசாரியாள் சொல்கிறார்: “அம்மா, ஒன்பது சுற்றுப் பிரகாரங்களை உடைய வாஸஸ்தானத்தில் உள்ளுக்குள்ளே அந்தப்புரத்தில் பரப்பிரம்ம ஸ்வரூபமான பரமேசுவரனுடன் நீ சேர்ந்திருக்கிறாய். அந்தப்புரத்துக்கு அருகில் வரவே எவருக்கும் யோக்யதை இல்லை. வெளியிலே ஒன்பது சுற்றுகளையும் தாண்டியிருக்கிற வாசலில்தான் மகா பெரிய இந்திராதி தேவர்களும் காத்துக்கிடக்கிறார்கள். அந்த வெளி வாசலில் காவல் செய்கிற அணிமா முதலிய ஸித்திகளே இந்த இந்திராதி தேவர்களுக்கு அஷ்டமகா ஸித்திகளைக் கொடுத்து விடுகிறார்கள் என்கிறார் (புராராதே: அந்த: புரமஸி)
இந்த ஒன்பது கட்டு அரண்மனைதான் ஸ்ரீ சக்கரம் என்கிற அம்பாள் இயந்திரம். ரூபமே இல்லாத பராசக்தி திவ்விய மங்கள் ஸ்வரூபத்துடன் அவயங்களோடு காமேசுவரியாக வந்த மாதிரி இந்த எந்திர ரூபத்திலும் இருக்கிறாள். பார்த்தால் ஏதோ கோடுகளும், கோணங்களுமாகத் தெரியும். ஆனால் இது அம்பாள் உருவமே. சில சப்தங்களுக்குத் தெய்வீக சக்தி இருப்பதால் அவற்றை ‘மந்திரம்’ என்கிறோம். இப்படியே சிலவிதமான கோடுகள் கோணங்களைக் கொண்ட சித்திரங்களுக்கு (DIAGRAM) தெய்வீகமான சக்தி உண்டு. இவற்றை ‘யந்திரம்’ என்கிறோம். அம்பாளின் பலரூபங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மந்திரம் உண்டு; காமேசுவரி அல்லது காமாக்ஷி என்கிற லலிதையாக உள்ளபோது, அவளுடைய மந்திரம் ஸ்ரீ வித்யா; யந்திரம் ஸ்ரீ சக்கரம். ஸ்ரீ சக்கரத்தில் ஆவரணங்கள் என்கிற ஒன்பது சுற்றுகள் இருக்கின்றன. அவற்றின் நடு மையத்தில், திரிகோணத்தில் மத்ய ஸ்தானமாக உள்ள பிந்து என்கிற புள்ளி ஸாக்ஷாத் பராசக்தி. மற்ற ஆவரணங்கள் இதைச் சுற்றி சுற்றி உள்ள கோட்டைகள் மாதிரி. சிருஷ்டி முழுவதும் பிறந்த மூல முக்கோணமான அந்தப்புரத்தில் பரப்பிரம்மமாகிற காமேசுவரனோடு சேர்ந்து காமோசுவரியாக இருக்கிறாள் பராசக்தியான காமாக்ஷி. அவளே பூரண சக்தி. வெளியில் ஒன்பது ஆவரணங்களிலும் சுற்றி சுற்றிப் பல்வேறு தேவதைகள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் பராசக்தியின் அம்சங்கள். இவர்களுக்கும் ஒவ்வொருவித சக்தி உண்டு. எல்லாவற்றுக்கும் வெளியே உள்ள ஆவரணத்தில் அணிமா முதலிய எட்டு தேவதைகள் காவல் இருக்கிறார்கள்.
ஸித்தர்கள் என்று சிலரைச் சொல்கிறோம். அவர்கள் இயற்கைக்கு அதீதமான அற்புதங்களைச் செய்கிறார்கள். இப்படி அற்புதம் செய்கிற ஸித்திகளை அணிமா முதலிய எட்டு தேவதைகள் அநுக்கிரகம் செய்கிறார்கள். இவற்றை “அணிமாதி ஸித்தி” என்பார்கள். தன் சரீரத்தை அணு மாதிரி சின்னதாக்கிக் கொள்கிற ஸித்தி ‘அணிமா’: எத்தனை மகா பெரிய ரூபமும் எடுப்பது ‘மஹிமா ஸித்தி’: பஞ்சைவிட லேசாகி லகுவாகப் பறப்பதற்கு ‘லகிமா’ என்று பேர். ‘ப்ராப்தி’ என்கிற ஸித்தி ஒருத்தருக்கு ‘ப்ராப்தி’யானால் அவர்தான் நினைத்த எதையும் சென்றடைய முடியும். ‘ப்ராகாம்யம்’ என்பது எவருக்கும் வெல்லமுடியாத இச்சா சக்தியைத் தருகிற ஸித்தி; ‘ஈசித்வம்’ என்பது ஈசுவரத்வம் – அதாவது அடக்கி ஆளுகிற ஆற்றலைக் கொடுக்கும் ஸித்தி; ‘வஸித்வம்’ என்பது எவரையும் வசப்படுத்துகிற சக்தியைத் தரும் ஸித்தி. இந்த ஏழு ஸித்திகளுக்கும் மேலே உள்ளது, தன் மனசையே வசப்படுத்தி அடக்குவது. மற்ற ஸித்திகளால் நல்லதும் செய்யலாம்; கெட்டதும் செய்யலாம். ஆனால், நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் மேலே போய் பரம சாந்தமாக இருப்பதே மற்ற எந்த ஸித்தியாலும் சாதிக்க முடியாத பேரானந்தத்தைத் தருவது. மனசு அடங்கினால்தான் இதைப் பெற முடியும். இதற்கு ஆசைகள் அடங்க வேண்டும். இப்படி ஆசைகளை அடக்குவது ‘காமாவஸாயனம்’ என்ற கடைசி ஸித்தியாகச் சொல்லப்படுகிறது. தாயுமானவர்கூட, ‘மற்ற இந்திர ஜால வித்தை எல்லாம் செய்துவிடலாம்: ஆனால் சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கும் திறம் அரிது’ என்று இதைத்தான் மிகவும் பிரமிப்பான ஸித்தியாகச் சொல்கிறார். இப்படித் தங்களுக்கென்று ஆசையில்லாமல் வைராக்கியத்தைப் பெற்றுவிட்ட மகான்களும்கூட, லோகோபகாரமாக மற்ற ஸித்திகளை உபயோகப் படுத்தலாம். இப்படிப் பல ஸித்தர்கள் – பதினெண் சித்தர்கள் என்றுகூட ஒரு கணக்குச் சொல்வதுண்டு – இருந்திருக்கிறார்கள். அவர்கள் செய்த அநேக காரியங்கள் பைத்தியம் மாதிரி இருக்கும். ஆனால் வாஸ்தவத்தில் ஸர்வ ஜனங்களிடமும் பிரியத்தோடு லோக க்ஷேமத்துக்காகவே சித்து விளையாட்டுச் செய்துகொண்டிருந்தார்கள்.
இப்படிப்பட்ட பிரம்மிப்பூட்டுகிற ஸித்திகளைத் தருகிற தேவதைகள்கூட, சாக்ஷாத் பராசக்தியின் அந்தப்புரத்துக்கு வெகு தூரத்திற்கு வெளியே நிற்கிற காவலாளிகள்தாம் என்று சொல்வதிலிருந்து அவளுடைய மகிமையை ஊகிக்கலாம்.
இப்படிப்பட்ட அம்பாளின் சக்தி, சில சமயங்களில் சில இடங்களில் ஜனங்கள் தாங்க முடியாதபடி பொங்கிக் கொண்டு வெளிப்படுகிறது. ஆதியில் திருவானைக்காவலில் அகிலாண்டேசுவரியின் சக்தி இப்படித்தான் ரொம்பவும் உக்கிரமாக இருந்தது. அப்போது சாக்ஷாத் பரமேசுவர அவதாரமான ஆசாரியார் ஸ்ரீ சக்கரமாகவும் சிவ சக்கரமாகவும் இரண்டு தாடங்கங்ளைச் செய்து, அவற்றிலேயே அம்பாளின் அதீதமான சக்தியை இழுத்து வைத்து சமனப்படுத்தி அவற்றை அம்பாளுக்கே அணிவித்தார். காஞ்சிபுரத்தில் ராஜராஜேசுவரியான காமாக்ஷியின் சக்தி உக்கிரமாக இருந்தபோது அதே ஆசாரியாள் அந்த உக்ர கலையை அவளுடைய எதிரிலேயே ஒரு ஸ்ரீ சக்கரம் ஸ்தாபித்து, அதில் ஆகர்ஷித்து வைத்து அடக்கினார். அன்றிலிருந்து அம்பிகையும் பரம ஸெளம்ய மூர்த்தியாகிவிட்டாள். எல்லோருக்கும் கருணா கடாக்ஷம் செய்து வருகிறாள்.
அம்பாளைப் பிரகிருதி, மாயை என்று சொன்னதோடு நிற்கவில்லை. புருஷன் அல்லது மாயையின் சக்தியும் இதே காமாக்ஷிதான். அவனோடு அபேதமாக, அபின்னமாக இருக்கப்பட்ட வஸ்து இவள். இருவரும் ஒன்றே; அத்வைதமாக இருக்கிறார்கள். வேதங்களின் பரம தாத்பரியம் அத்வைதம். அந்த அத்வைதத்தின் ரூபமாகவே காஞ்சிபுரத்தில் காமாக்ஷி பிரகாசிக்கிறாளாம்! ‘ஐதம்பரியம் சகாஸ்தி நிகமானாம்’ என்கிறார் மூகர்.
மாதா ஸ்வரூபம் என்று அருகில் போகிறோம். பார்த்தால் பிதாவுக்கு உண்டான நெற்றிக்கண், சந்திரகலை எல்லாமும் இங்கே இருக்கின்றன. சிறந்த பதிவிரதையாக இருந்து, அந்தப் பதிவிரத்தியத்தாலேயே ஈசுவரனின் பாதி சரீரத்தை இவள் பெற்றதாகச் சொன்னாலும், இப்போது பார்க்கும் போது, இவள் சிவஸ்ரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி, முழுவதும் தானே ஆகிவிட்டாள் என்று, ஸெளந்தர்ய லஹரி சொல்கிறது.
பக்தியின் ஸ்வாதீனமும், கவித்த கல்பனா சுதந்திரமும் கொண்டு இப்படியெல்லாம் ஆசார்யாள், மூகர் போன்றவர்கள் துதிக்கிறார்கள். மொத்தத்தில் தாத்பரியம் அவள் பூரண பிரம்மசக்தி, அவளுக்கும் பரமாத்மாவான பரமேசுவரனுக்கும் லவலேசம்கூட பேதம் இல்லை என்பதே.
பரமேசுவரனின் சரீரத்தை இவள் திருடியதாக ஆசார்யார் சொல்கிறார் என்றால், அப்பைய தீக்ஷிதர் வம்சத்தில் வந்த மகனாகிய நீலகண்டதீக்ஷிதரோ அம்பாளுடைய கீர்த்தியைத்தான் ஈசுவரன் தஸ்கரம் செய்து கொண்டுவிட்டான் (திருடிவிட்டான்) என்று குற்றப் பத்திரிக்கை படிக்கிறார்! பரமேசுவரன், ‘காமனைக் கண்ணால் எரித்தவராம்; காலனைக் காலால் உதைத்தவராம்’ என்று லோகம் முழுக்கப் பிரக்யாதி பெற்றுவிட்டார். “ஆனால் அம்மா, காமனை எரித்த நெற்றிக் கண்ணில் பாதி உன்னுடையதல்லவா? அதுவாவது தொலையட்டும். இந்த வெற்றியில் பாதி சிவனுக்குச் சேரும். ஆனால் காலனைக் காலால் உதைத்து வதைத்த புகழ் அவரை அடியோடு சேரவே கூடாது. ஏனென்றால் இடது காலல்லவா அவனை உதைத்தது. அது முழுக்க உன்னுடையதுதானே?” என்கிறார். காமாக்ஷியின் கடாக்ஷம் துளி விழுந்துவிட்டால் நாம் காமத்தை வென்று விடலாம். காலத்தையும் வென்று அமர நிலையை அடைந்து விடலாம் என்று அர்த்தம்.
அவளுடைய பெருமை நம் புத்திக்கும் வாக்குக்கும் எட்டாதது. அசலமான சிவத்தையே சலனம் செய்விக்கிற சக்தி அது. அவளுடைய க்ஷணநேரப் புருவ அசைப்பை அக்ஞையாகக் கொண்டு பிரம்மாவும், விஷ்ணுவும், ருத்திரனும், ஈசுவரனும், ஸதாசிவனும் பஞ்சகிருத்தியங்களைச் செய்கிறார்கள் என்கிறது “ஸெளந்தர்ய லஹரி” (ஜகத் ஸுதேதாதா). பிரம்ம, விஷ்ணு, ருத்திரர்கள்தான் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் செய்பவர்கள் என்று உங்களுக்குத் தெரியும். இந்த முத்தொழிலோடு மாயை என்கிற மறைப்பு மாயையைப் போக்குகிற ஞானம் என்ற அநுக்கிரகம் இவற்றைச் சேர்த்துக் கொண்டு பஞ்சகிருத்யம் என்னும்போது, மறைப்பான திரோதானத்தைச் செய்கிறவன் ஈசுவரன்; அநுக்கிரகம் செய்பவன் ஸதாசிவன். இந்த தொழில்கள் எல்லாமே பராசக்தியின் ஏவலின்படி நடக்கிறவைதான். இந்த ஐந்து மூர்த்திகளை ஐந்து ஆபீஸர்களாக வைத்துக் காரியம் நடத்தும் எஜமானி அம்பாள்தான். அவர்கள் தங்கள் இஷ்டப்படி தொழிலாற்ற முடியாது. அவர்களுடைய சக்தி எல்லாமும் பராசக்தியான இவளிடமிருந்து பெற்றதுதான். “உன் பாதத்தில் அர்ச்சித்து விட்டால்போதும். அதுவே மும்மூர்த்திகளின் சிரசிலும் அர்ச்சனை செய்ததாகும்; ஏனென்றால் திரிமூர்த்திகளின் சிரசங்களும் எப்போதும் உன் பாதத்திலேயே வணங்கிக் கிடக்கின்றன” என்கிறது ஸெளந்தர்ய லஹரியில் இன்னொரு ஸ்லோகம் (த்ரயாணாம் தேவானாம்). மும்மூர்த்திகளும் அந்த சரணார விந்தங்களில் தங்கள் தலையை வைத்து, தலை மீது கைகளை மொட்டுக்கள் மாதிரி குவித்து அஞ்சலி செய்கிறார்கள். நாம் புஷ்பம் போடுவது அம்பாளின் பாதமலர்களிலிருந்து மட்டுமல்லாமல் திரிமூர்த்திகளின் கரங்களான மொட்டுகளுக்கும் அர்ச்சனை ஆகிறது. சகல தேவ சக்திகளையும் பிறப்பித்த பராசக்தி ஒருத்திக்குச் செய்கிற ஆராதனையே, எல்லாத் தெய்வங்களுக்கும் செய்ததாகிறது என்கிறது உட்பொருள்.
அம்பாளின் மகிமையை ஸெளந்தர்ய லஹரியில் ஆசாரியாள் சொல்கிறார்: “அம்மா, ஒன்பது சுற்றுப் பிரகாரங்களை உடைய வாஸஸ்தானத்தில் உள்ளுக்குள்ளே அந்தப்புரத்தில் பரப்பிரம்ம ஸ்வரூபமான பரமேசுவரனுடன் நீ சேர்ந்திருக்கிறாய். அந்தப்புரத்துக்கு அருகில் வரவே எவருக்கும் யோக்யதை இல்லை. வெளியிலே ஒன்பது சுற்றுகளையும் தாண்டியிருக்கிற வாசலில்தான் மகா பெரிய இந்திராதி தேவர்களும் காத்துக்கிடக்கிறார்கள். அந்த வெளி வாசலில் காவல் செய்கிற அணிமா முதலிய ஸித்திகளே இந்த இந்திராதி தேவர்களுக்கு அஷ்டமகா ஸித்திகளைக் கொடுத்து விடுகிறார்கள் என்கிறார் (புராராதே: அந்த: புரமஸி)
இந்த ஒன்பது கட்டு அரண்மனைதான் ஸ்ரீ சக்கரம் என்கிற அம்பாள் இயந்திரம். ரூபமே இல்லாத பராசக்தி திவ்விய மங்கள் ஸ்வரூபத்துடன் அவயங்களோடு காமேசுவரியாக வந்த மாதிரி இந்த எந்திர ரூபத்திலும் இருக்கிறாள். பார்த்தால் ஏதோ கோடுகளும், கோணங்களுமாகத் தெரியும். ஆனால் இது அம்பாள் உருவமே. சில சப்தங்களுக்குத் தெய்வீக சக்தி இருப்பதால் அவற்றை ‘மந்திரம்’ என்கிறோம். இப்படியே சிலவிதமான கோடுகள் கோணங்களைக் கொண்ட சித்திரங்களுக்கு (DIAGRAM) தெய்வீகமான சக்தி உண்டு. இவற்றை ‘யந்திரம்’ என்கிறோம். அம்பாளின் பலரூபங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மந்திரம் உண்டு; காமேசுவரி அல்லது காமாக்ஷி என்கிற லலிதையாக உள்ளபோது, அவளுடைய மந்திரம் ஸ்ரீ வித்யா; யந்திரம் ஸ்ரீ சக்கரம். ஸ்ரீ சக்கரத்தில் ஆவரணங்கள் என்கிற ஒன்பது சுற்றுகள் இருக்கின்றன. அவற்றின் நடு மையத்தில், திரிகோணத்தில் மத்ய ஸ்தானமாக உள்ள பிந்து என்கிற புள்ளி ஸாக்ஷாத் பராசக்தி. மற்ற ஆவரணங்கள் இதைச் சுற்றி சுற்றி உள்ள கோட்டைகள் மாதிரி. சிருஷ்டி முழுவதும் பிறந்த மூல முக்கோணமான அந்தப்புரத்தில் பரப்பிரம்மமாகிற காமேசுவரனோடு சேர்ந்து காமோசுவரியாக இருக்கிறாள் பராசக்தியான காமாக்ஷி. அவளே பூரண சக்தி. வெளியில் ஒன்பது ஆவரணங்களிலும் சுற்றி சுற்றிப் பல்வேறு தேவதைகள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் பராசக்தியின் அம்சங்கள். இவர்களுக்கும் ஒவ்வொருவித சக்தி உண்டு. எல்லாவற்றுக்கும் வெளியே உள்ள ஆவரணத்தில் அணிமா முதலிய எட்டு தேவதைகள் காவல் இருக்கிறார்கள்.
ஸித்தர்கள் என்று சிலரைச் சொல்கிறோம். அவர்கள் இயற்கைக்கு அதீதமான அற்புதங்களைச் செய்கிறார்கள். இப்படி அற்புதம் செய்கிற ஸித்திகளை அணிமா முதலிய எட்டு தேவதைகள் அநுக்கிரகம் செய்கிறார்கள். இவற்றை “அணிமாதி ஸித்தி” என்பார்கள். தன் சரீரத்தை அணு மாதிரி சின்னதாக்கிக் கொள்கிற ஸித்தி ‘அணிமா’: எத்தனை மகா பெரிய ரூபமும் எடுப்பது ‘மஹிமா ஸித்தி’: பஞ்சைவிட லேசாகி லகுவாகப் பறப்பதற்கு ‘லகிமா’ என்று பேர். ‘ப்ராப்தி’ என்கிற ஸித்தி ஒருத்தருக்கு ‘ப்ராப்தி’யானால் அவர்தான் நினைத்த எதையும் சென்றடைய முடியும். ‘ப்ராகாம்யம்’ என்பது எவருக்கும் வெல்லமுடியாத இச்சா சக்தியைத் தருகிற ஸித்தி; ‘ஈசித்வம்’ என்பது ஈசுவரத்வம் – அதாவது அடக்கி ஆளுகிற ஆற்றலைக் கொடுக்கும் ஸித்தி; ‘வஸித்வம்’ என்பது எவரையும் வசப்படுத்துகிற சக்தியைத் தரும் ஸித்தி. இந்த ஏழு ஸித்திகளுக்கும் மேலே உள்ளது, தன் மனசையே வசப்படுத்தி அடக்குவது. மற்ற ஸித்திகளால் நல்லதும் செய்யலாம்; கெட்டதும் செய்யலாம். ஆனால், நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் மேலே போய் பரம சாந்தமாக இருப்பதே மற்ற எந்த ஸித்தியாலும் சாதிக்க முடியாத பேரானந்தத்தைத் தருவது. மனசு அடங்கினால்தான் இதைப் பெற முடியும். இதற்கு ஆசைகள் அடங்க வேண்டும். இப்படி ஆசைகளை அடக்குவது ‘காமாவஸாயனம்’ என்ற கடைசி ஸித்தியாகச் சொல்லப்படுகிறது. தாயுமானவர்கூட, ‘மற்ற இந்திர ஜால வித்தை எல்லாம் செய்துவிடலாம்: ஆனால் சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கும் திறம் அரிது’ என்று இதைத்தான் மிகவும் பிரமிப்பான ஸித்தியாகச் சொல்கிறார். இப்படித் தங்களுக்கென்று ஆசையில்லாமல் வைராக்கியத்தைப் பெற்றுவிட்ட மகான்களும்கூட, லோகோபகாரமாக மற்ற ஸித்திகளை உபயோகப் படுத்தலாம். இப்படிப் பல ஸித்தர்கள் – பதினெண் சித்தர்கள் என்றுகூட ஒரு கணக்குச் சொல்வதுண்டு – இருந்திருக்கிறார்கள். அவர்கள் செய்த அநேக காரியங்கள் பைத்தியம் மாதிரி இருக்கும். ஆனால் வாஸ்தவத்தில் ஸர்வ ஜனங்களிடமும் பிரியத்தோடு லோக க்ஷேமத்துக்காகவே சித்து விளையாட்டுச் செய்துகொண்டிருந்தார்கள்.
இப்படிப்பட்ட பிரம்மிப்பூட்டுகிற ஸித்திகளைத் தருகிற தேவதைகள்கூட, சாக்ஷாத் பராசக்தியின் அந்தப்புரத்துக்கு வெகு தூரத்திற்கு வெளியே நிற்கிற காவலாளிகள்தாம் என்று சொல்வதிலிருந்து அவளுடைய மகிமையை ஊகிக்கலாம்.
இப்படிப்பட்ட அம்பாளின் சக்தி, சில சமயங்களில் சில இடங்களில் ஜனங்கள் தாங்க முடியாதபடி பொங்கிக் கொண்டு வெளிப்படுகிறது. ஆதியில் திருவானைக்காவலில் அகிலாண்டேசுவரியின் சக்தி இப்படித்தான் ரொம்பவும் உக்கிரமாக இருந்தது. அப்போது சாக்ஷாத் பரமேசுவர அவதாரமான ஆசாரியார் ஸ்ரீ சக்கரமாகவும் சிவ சக்கரமாகவும் இரண்டு தாடங்கங்ளைச் செய்து, அவற்றிலேயே அம்பாளின் அதீதமான சக்தியை இழுத்து வைத்து சமனப்படுத்தி அவற்றை அம்பாளுக்கே அணிவித்தார். காஞ்சிபுரத்தில் ராஜராஜேசுவரியான காமாக்ஷியின் சக்தி உக்கிரமாக இருந்தபோது அதே ஆசாரியாள் அந்த உக்ர கலையை அவளுடைய எதிரிலேயே ஒரு ஸ்ரீ சக்கரம் ஸ்தாபித்து, அதில் ஆகர்ஷித்து வைத்து அடக்கினார். அன்றிலிருந்து அம்பிகையும் பரம ஸெளம்ய மூர்த்தியாகிவிட்டாள். எல்லோருக்கும் கருணா கடாக்ஷம் செய்து வருகிறாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 17 of 19 • 1 ... 10 ... 16, 17, 18, 19
Similar topics
» அங்கே துக்கமும் இல்லை, சுகமும் இல்லை தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
» தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்....
» தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம்
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
» தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை
» தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்....
» தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம்
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
» தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை
Page 17 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|