Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
3 posters
Page 2 of 19
Page 2 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
First topic message reminder :
தெய்வத்தின் குரல் - இரண்டாம் பகுதி - விரைவில்
தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - ஐந்தாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - ஏழாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - இரண்டாம் பகுதி - விரைவில்
தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - ஐந்தாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - ஏழாம் பகுதி- விரைவில்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
நிறைந்த ஆனந்தம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
கிருதா யுகத்தில் பிருகு என்பவர் தம்முடைய பிதாவான வருணனிடத்தில் போய் “நிறைந்த வஸ்து எதுவோ அதை அப்படி அறிவது?” என்று கேட்டாராம். “நிறைந்த வஸ்து எதுவோ அது காலத்தாலும் நிறைந்து இருக்க வேண்டும். தேகத்தாலும் நிறைந்து இருக்க வேண்டும். வஸ்துவிலும் நிறைந்து ஒரு குறை என்பதே இல்லாமல் இருக்க வேண்டும். அத்தகைய நிறைந்த வஸ்துவை எனக்குச் சொல்ல வேண்டும்” என்று பிதாவான வருணனிடத்தில் கேட்டாராம்.
“நீ போய் தபஸ் பண்ணு. அது உனக்கே தெரியும்” என்று வருணன் சொல்லிவிட்டாராம்.
“அப்படியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு பிருகு போய்த் தபஸ் பண்ண ஆரம்பித்தார். முதலில் அதனால் அவருக்கு ஒன்று தெரிந்தது. ‘இந்தச் சரீரந்தான் உயர்ந்த வஸ்து. இதுதான் எல்லாவற்றையும் உணருகிறது. உணரப்படுகிற பொருளைக் காட்டிலும் உணர்ந்து கொள்கிற பொருள் உயர்ந்தது. அது இந்தத் தேகந்தான்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு, அப்பாவிடம் போய், “இந்தச் சரீரம்தான் உயர்ந்த, நிறைந்த வஸ்து” என்று சொன்னாராம்.
அப்பா திரும்பவும், “இன்னும் கொஞ்சம் தபஸ் பண்ணு” என்று சொல்லிவிட்டாராம்.
இப்படியே கொஞ்சம் ‘தபஸ்’ பண்ணுவது, உடனே தமக்குக் தோன்றியதைப் போய்ச் சொல்வது என்று ஐந்து தடவைகள் பிருகு செய்தாராம். முதலில் உடம்பு நிறைந்த வஸ்துவாகத் தோன்றிற்று. இந்த உடம்பு ஒருநாள் பிரேதமாகிப் போவதுதானேயென்று யோசித்தபின், உடம்பு நிறைந்த வஸ்து இல்லை என்றும், பிராணன்தான் நிறைந்த வஸ்துவாகவும் தோன்றிற்று. அதன்பின் மனமே நிறைந்த வஸ்து என்று தோன்றியது. பிற்பாடு அறிவே நிறைந்த வஸ்துவாகத் தோன்றியது. ஐந்தாம் முறை போனபோது ஆனந்தாநுபவம்தான் நிறைவாகத் தோன்றியது.
“நீங்கள் சொன்னபடி நான் இத்தனை நாட்களாகத் தபஸ் பண்ணினேன். இப்போதெல்லாம் நடுநடுவே ஏதோ ஒரு விதமான ஆனந்தம் ஸ்புரிக்கிறதே. இது என்ன?” என்று தந்தையைக் கேட்டாராம் பிருகு.
“உனக்கு ஒவ்வொரு சமயத்தில் கொஞ்சம் ஸ்புரிக்கிறது என்று சொல்கிறாயே அந்த ஆனந்தம்தான் வஸ்து. இது உனக்குத் துளித்துளி உண்டாகிறது. இதுவே நிறைந்து விட்டதானால் அதைத்தான் பேரானந்தம் என்கிறோம். அந்தப் பேரானந்தம் எப்போதும் குறைவு இல்லாமல் காலத்தாலும் தேகத்தாலும் நிறைந்து இருக்கும்படியான ஒரே வஸ்து. சரீரம், பிராணன், மனசு, அறிவு எல்லாவற்றிற்கும் ஆதாரமாக, இவை எல்லாவற்றையும் கடந்த ஒன்று ‘ஆத்மா’ என்று இருக்கிறது. அது தன்னைத்தானே அறிந்து அநுபவிப்பதில்தான் இந்த ஆனந்தம் உண்டாகிறது” என்று பிதா சொன்னாராம். இப்படி உபநிஷக் கதை இருக்கிறது.
அந்தப் பேரானந்த சமுத்திரத்தின் ஏதோ ஒரு திவலை தான் நமக்கு எப்போதாவது உண்டாகிறது. கிளைகள், இலைகள் எல்லாம் அடர்ந்து இருக்கும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தால் கீழே கொஞ்சம்கூட வெயில் படாமல் நிழல் இருக்கிறது. காற்று அடிக்கும்போது, இலைகள், கிளைகள் நகர்ந்து விலகுகிற சமயத்தில் சூரியனுடைய வெயில் கீழே அந்த இடைவெளி அளவுக்கு விழுகிறது. அப்புறம் மறுபடியும் கிளைகள் மூடி, அது மறைந்து விடுகிறது. அந்த மாதிரியாகத் தான் நமக்கு ஆனந்தம் அவ்வப்போது வந்து வந்து மறைந்து போகிறது. ஆனந்தம் என்பது எங்கும் பரிபூரணமாக நிறைந்திருக்கும்படியான வஸ்து. ஆனால் நம்முடைய கெட்ட கர்மா, மனம், புத்தி இவற்றினால் அது நம்மிடம் படாமல் மறைந்திருக்கிறது. ஒரு க்ஷணம் நாம் பண்ணியிருக்கிற புண்ணிய கர்மாக்களினாலே அவை விலகும்போது, காற்று அடித்து இலைகள் விலகும்போது, சூரிய ஒளி அதன் வழியாக வருவது போல், நம்முடைய கர்மாக்கள் விலகியதால், எங்கும் பரவிய ஆனந்தத்தின் திவலை நமக்கு உண்டாகிறது. இதுவே வளர்ந்து விட்டால் பேரானந்தமாகிறது. அந்த ஆனந்த சமுத்திரத்தின் லவலேசத்தைத்தான் நாம் எப்போதாவது அடைந்தவுடன் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்கிறோம். தபஸ் பண்ணிப் பண்ணி விசாரம் செய்தால் எப்போதும் ஆனந்த மயமாக இருக்கும் சமுத்திரத்திலேயே கலந்து அதாகவே இருக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
கண்ணன் சொன்னான், கம்பனும் சொன்னான்! : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
ஆத்மாதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஆனால் அதுவே அவற்றைக் கடந்திருக்கிறது என்றால், அதெப்படி என்று தோன்றுகிறது; குழப்பமாயிருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் இம்மாதிரி பல தினுசாகக் குழப்பிக் குழப்பி, பிறகு ஒரேயடியாகத் தெள்ளத் தெளிவாகப் பண்ணிவிடுவார்.
‘நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின்றன’ என்று கீதையில் ஓரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார். (யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் ச மயி பச்யதி) எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால், இவர்தான் அவற்றுக்கெல்லாம் ஆதாரமான ஆத்மா என்றாகும். ஆனால் எல்லாப் பொருட்களிலும் இவர் இருக்கிறார் என்றால் அவைதான் இவருக்கு ஆதாரம் என்று ஆகுமே? இதில் எது சரி என்ற குழப்பம் ஏற்படலாம்.
ஸ்வாமி அல்லது ஆத்மாவே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதுதான் சரி. அவர் எல்லாவற்றுள்ளும் இருக்கிறார் என்பதால் அவை இவரைத் தாங்குகின்றன என்று ஆகாது. இவரால் தான் அவற்றுக்கு உருவமும் உயிரும். இவர் இல்லாமல் அவை இல்லை. எனவே, அவை இவருக்கு ஆதாரமல்ல. இவர்தான் சகலத்தையும் ஆட்டிப் படைப்பவர், இதை ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
‘பொம்மலாட்டப் பொம்மை மாதிரிதான் சகல பிராணிகளும்; உள்ளே இருந்து ஈச்வரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான்.’ [ஈச்வர: ஸர்வ பூதானாம் ஹருத் தேசே (அ) ர்ஜுன திஷ்டதி ப்ராமயன் ஸர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா] என்கிறார்.
இப்படிக் குழப்பத்தைத் தெளிவு செய்கிற பகவான் அதே கீதையில் மறுபடியும் குழப்பம் செய்கிறார். ‘எல்லாப் பொருட்களிலும் நான் இருக்கிறேன்; எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் உள்ளன’ என்று கூறுபவரே, ‘என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை; நானும் ஒரு பொருளும் இல்லை’ என்கிறார். (ந ச மத் ஸ்தானி பூதானி, ந சாஹம் தேஷு அவஸ்தித. இங்கே ஆத்மா எல்லாவற்றையும் கடந்தது என்ற தத்துவம் பேசப்படுகிறது.
‘இது என்ன குழப்புகிறாயே’ என்றால், ‘நான் எல்லாருக்கும் விளங்குவதில்லை ( ந அஹம் ப்ரகாச: ஸர்வஸ்ய அதுதான் என் யோகமாயை (யோக மாயா ஸமாவ்ருத’ என்று ஒரு போடு போடுகிறார்.
‘இது என்ன உபதேசம் வேண்டிக்கிடக்கிறது? ஒன்றும் புரியவில்லையே!’ என்று தோன்றுகிறதா?
நன்கு ஆலோசித்துப் பார்த்தால் குழப்பத்துக்குத் தெளிவு காணலாம். ‘நான் ஒருவருக்கும் விளங்க மாட்டேன்’ என்று பகவான் சொல்லியிருந்தால், ‘ஆயிரம்பேர் இருந்தால், ஆயிரம்பேருக்கும் விளங்க மாட்டேன்’ என்று அர்த்தமாகும். ஆனால் அப்படியின்றி, ‘நான் எல்லோருக்கும் விளங்க மாட்டேன்’ என்றால், ‘ஆயிரம் பேரில் 999 பேருக்கும் விளங்காமல் இருந்தாலும் இருக்கலாம்; ஒருவனுக்காவது விளங்குவேன்’ என்றுதான் பொருள். பகவான் ‘எல்லாருக்கும் (ஸர்வஸ்ய) விளங்க மாட்டேன்’ என்றாரேயன்றி ஒருவருக்கும் (கஸ்யாபி) விளங்க மாட்டேன்’ என்று சொல்லவில்லை. அப்படியானால் அவரும் சிலருக்கு விளங்குகிறார் என்றாகிறது.
அந்தச் சிலர் யார்? இவர் சொன்ன யோக மாயையால் பாதிக்கப்படாத ஞானிகள். ‘நான் எல்லாப் பொருளிலும் இருக்கிறேன்: ஒரு பொருளும் என்னிடம் இல்லை’ என்று பகவான் முரண்பாடாகப் பேசியது போலத் தோன்றுவதற்கு இத்தகைய ஞானிகளே விளக்கம் தந்து தெளிவு செய்வார்கள்.
தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு. எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு, “ஐயோ, பாம்பு, பாம்பு!” என்று பயத்தால் கத்துகிறான். மாலையாக இருப்பதும் பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன், அவனுக்குப் பாம்பு இல்லை என்று தெரிந்து விடுகிறது. அதனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.
மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரம்மம்தான்.
“இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன்; பிரபஞ்சம் என்னிடத்தில் இருக்கிறது” என்று சொன்னால் என்ன அர்த்தம்? மாலைக்குள் தான் பாம்பு இருக்கிறது; பாம்புக்குள்தான் மாலை இருக்கிறது என்பது எப்படியோ அப்படித்தான். இரண்டும் உண்மைதானே?
பாம்பு என்று அலறுபவனுக்குப் பாம்பு மாலையைத் தனக்குள் ‘விழுங்கி’ விட்டது. அவன் பார்வையில் ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி ‘இது மாலைதான்’ என்று உணர்ந்து கொண்டவனுக்கு மாலை பாம்பை தன்னுள் மறைத்து விடுகிறது. மாலைதான் ஆதாரமாகத் தெரிகிறது.
மாயையினால் மூடப்பட்டவன் பிரபஞ்சத்தை சத்தியம் என்று பார்த்தாலும், வாஸ்தவத்தில் பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருந்து தாங்குபவன் ஈசுவரன்தான்.
பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விலக்கியவனுக்கு ஈசுவரனே எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான். ஈஸ்வரனைத் தவிர வெறும் தோற்றமாகக்கூடப் பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப ஸமாதியில் தெரியாது. ப்ரபஞ்சம் என்றே ஒன்று இல்லாதபோது அது ஈசுவரனிடத்தில் இருப்பதாகவோ, அல்லது ஈசுவரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும் அபத்தம்தானே? அஞ்ஞான தசையில் உடம்பு, பிராணன், மனசு, அறிவு என்றெல்லாம் தெரிகின்றன. ஞானம் வந்தால் ஆத்மானந்தம் ஸ்புரிக்கிறபோது இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று, ‘என்னிடத்திலும் பொருட்கள் இல்லை; நானும் பொருட்களிடத்தில் இல்லை’ என்று கூறிவிட்டார். எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக நினைத்தான் என்பதால், உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள் இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள் மாலை இருந்ததாகவோ சொல்லலாமா?
கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்லுகிறார்:
‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறு பாடுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவி லேந்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்.’
அலங்கல் என்றால் மாலை. அரவு என்றால் பாம்பு. ‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு’ – மாலையில் தோன்றும் பாம்பு என்ற பொய்யான எண்ணம். இதுபோலப் பஞ்ச பூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம் என்ற வீக்கமாகி மயக்குகிறதே. அது யாரைக் கண்டால் விலகிப்போய் மாலையான ஈசுவரன் மட்டும் தெரியுமோ, அந்த மாயா நாசகனான பரமாத்மாதான் ராமசந்திர மூர்த்தி என்றார்.
நம்மாழ்வாரைப் பற்றி சடகோபரந்தாதி பாடின பரம வைஷ்ணவரான கம்பர், பரமாத்ம ஸ்வரூபத்தை இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷையில் சொல்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
ஆனந்தம் எங்கே? : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒரு நாள் நாம் ஆசைப்படும் வஸ்துக்கள் நம்மை விட்டுப் பிரிவது அல்லது நாம் அவற்றைவிட்டுப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜினாமா செய்து விட்டுவிட்டால், அத்தனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை முளைகளை துக்கத்துக்கு அடித்துக்கொண்டு நம்மைக் கட்டிப்போட்டுக் கொள்கிறோம். ஆசைகளைக் குறைக்கக் குறைக்க துக்கஹேதுவுங் குறையும். இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படவே வேண்டாம்; அப்படியே பரமாத்மாவில் கரைந்து ஆனந்தமாகி விடலாம்.
மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமைப்படுகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விசேஷமாக என்ன செய்து விடுகிறான்? நாயும், நரியும், கரப்பான் பூச்சிகளும்கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன. சாகின்றன. பொதுவாக மனிதனும் இதற்குமேல் ஏதும் செய்வதாகக் தெரியவில்லை. அப்பொழுது இவனது விசேஷ ஞானத்தில் பெருமைப்பட என்ன இருக்கிறது? எல்லாவற்றிலும் பெரிய ஞானம் நிலைத்த ஆனந்தத்துக்கு வழிகண்டு கொள்வதுதான். மனிதன் இப்படிப்பட்ட நிலைத்த ஆனந்தத்தைப் பெறுகிறானா?
யோசித்துப் பார்த்தால், பரம தாத்பரியமாகத் தெரிவது, இந்த ‘ஞானம்’, ‘ஆனந்தம்’, ‘நாம்’, என்பதெல்லாம் ஒன்றுதான். நாம் உண்மையில் யார் என்பதை உணரும் ஞானம் வரும்போது, நாமே ஞான மயமான ஆனந்தம் என்று கண்டுகொள்வோம்.
வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தேதான் ஆனந்தம் பிறக்கிறது. நமது உண்மை ஸ்வரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில்கூட ‘நம்முடையது’ என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும்போதுதான் அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம். அந்த சம்பந்தம் போய் விட்டால் ஆனந்தம் போய் விடுகிறது. உதாரணம் சொல்கிறேன்; ஒருவருக்குச் சொந்தமாக கொஞ்சம் நிலம் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் வருஷத்துக்கு வருஷம் விளைச்சல் அதிகமாவதாக வைத்துக் கொள்ளுங்கள். ‘இந்த வயல் என்னுடையது’ என்பதால், விளைச்சல் அதிகமாகும்போதெல்லாம் அவருக்கு மனம் குளிருகிறது. ஆனந்தம் உண்டாகிறது. அப்புறம் விளைச்சல் குறையத் தொடங்குகிறது. வயலை வேறு ஒருவருக்கு விற்று சாஸனம் பண்ணி விடுகிறார். மறுபடி அடுத்த வருஷம் அதே வயலில் ஏகமாக விளைச்சல் கூடியிருக்கிறது. இப்போது அதைப் பார்க்கும்போது இவர் மனம் குளிரவா செய்கிறது? “அடடா, போன வருஷம் நம் கையில் இருந்தபோது தரிசு மாதிரிப் பொட்டலாக இருந்தது; இப்போது எவனோ ஒருவனுக்கு அதிருஷ்டம் அடிக்கிறதே!” என்று வயிற்றெரிச்சல்தான் உண்டாகிறது. ‘எனது’ என்ற சம்பந்தம் இருந்த மட்டுந்தான் அமோக விளைச்சலில் சந்தோஷம் இருந்தது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது.
இன்னோர் உதாரணம் சொல்கிறேன். என்னிடம் பல பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்து, அவற்றுக்கு சித்தப்பிரமை இருக்கிறது. அது நிவிருத்தியாக வேண்டும் என்று கேட்டுக் கொள்வதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு நேர்மாறாக ஒரு தகப்பனார் நடந்து கொண்டார்! அவர் இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டவர். இளையாளுக்கு மூத்தாள் பிள்ளையோடு ஒத்துவரவில்லை. ஏகச் சண்டை போட்டுக் குடும்பம் பிரிந்தது. இவர் இளையாள் தரப்பிலேயே இருந்தார். பிள்ளையைக் கைவிட்டுவிட்டார். அவர் ஒரு நாள் என்னிடம் வந்து, ‘மூத்தாள் பிள்ளை இளையாளுக்குப் பில்லி சூன்யம் வைத்தான். நல்ல வேளையாக அது அவனையே திருப்பி அடித்துவிட்டது’ என்றார். எல்லாத் தகப்பனார்களும் பிள்ளைக்குச் சித்தப்பிரமை ஏற்படும்போது கவலைப்படுகிறார்களென்றால், இவரோ அதிலேயே சந்தோஷப்படுகிறார். ஏன்? இவருக்கு அவனிடம் ‘நம்முடையவன்’ என்ற சம்பந்தம் போய் விட்டது. இளையாளிடம் மட்டும் ‘நம்முடையவள்’ என்ற எண்ணம் இருக்கிறது. அதனால்தான் அவளுக்கு ஹானி இல்லை என்றால் இவர் ஆனந்தப்படுகிறார்.
மாயைக்கு ஆளான ‘நான்’ என்பதன் சம்பந்தத்துக்கே இத்தனை ஆனந்தம் இருக்கிறது என்றால், எதிலும் சம்பந்தப்படாமல் பூரண ஞானமாக இருக்கின்ற அந்த வெறும் ‘நான்’ எத்தனை ஆனந்தமயமாக இருக்கும்! வெல்லம் போட்டால் கசப்பு பாகற்காய்க் கறியிலும் சிறிது தித்திப்பு இருப்பதை உணர்கிறோம். வெல்லத்தின் சம்பந்தத்துக்கே தித்திப்பு இருப்பதால், அசல் வெல்லம் தித்திப்பு மட்டுமே என்பதில் சந்தேகம் என்ன! கசப்பான துக்க உலகத்தின் ‘நான்’ என்பதின் மாயக் கிரணங்கள் சம்பந்தப்படுகிறபோதே அதில் தித்திப்பு ஆனந்தத்தைப் பெறுகிறோம் என்றால், அந்த ‘நான்’ மட்டுமே ஸ்வச்சமாக நிற்கின்றபோது எத்தனை தித்திப்பாக ஆனந்த மயமாக இருக்கவேண்டும்? சிறிய பொத்தல்கள் கொண்ட ஒரு சட்டியால் ஒரு தீபத்தை மூடிவைத்தால் துவாரங்கள் வழியாக மெல்லிய ஒளிக்கிரணங்கள் வெளிவரும். மாயையால் மூடப்பட்ட ஆத்ம தீபத்திலும் இந்திரிய துவாரங்கள் வழியாகக் கொஞ்சம் கொஞ்சம் ஆனந்த ஒளியைப் பார்க்கிறோம். மாயச்சட்டியை உடைத்து விட்டால் ஆனந்த ஜோதிர் மயமாகவே ஆகிவிடலாம். துவாரங்களின் அளவைப் பொறுத்துப் பல வேறு அளவுகளில் ஒளி வெளி வந்தாலும் உள்ளேயிருப்பது ஏகஜோதிதான். நாம் மாயச்சட்டியை உடைத்து விட்டால் உலகத்தில் பார்க்கும் வித்தியாசங்கள் எல்லாம் மறைந்து எல்லாம் ஒன்றான ஆனந்தரூபமாகவே தெரியும்.
மாயையை எப்படி உடைப்பது என்றால் ஆசைகளை அடக்குவதுதான் வழி. மனம் இருக்கும் வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனத்தை அடக்கிவிட வேண்டும். மனம் அடங்கி விட்டால் மரண நிலையில் இருப்பதுபோல் ஒரு சக்தியுமின்றி ஜடம் மாதிரி ஆவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, இதுதான் சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை. சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீக்ஷண்யம் இருக்கும். பல வாய்க்கால்களில் ஒன்றில் ஜலத்தை அடைத்துத் திருப்பினால் இன்னொன்றில் அதிகம் நீர் பெருகுவது போல், ஓர் அங்கத்தில் ஊனம் இருப்பதே இன்னொன்றில் தீக்ஷண்யத்தைத் தருகிறது. ஆத்ம சக்தியைப் பலவாறாகச் சிதறச் செய்யும் எல்லாம் இந்திரியங்களையும் அடைத்துக் கொண்டு விட்டால், அப்போது சகல சக்திகளும் ஒரே இடத்தில் அமைதியாக, ஆனந்தமாகக் கூடி நிற்கும். மிகுந்த சக்தியுடன் உலகுக்கு நல்லது செய்யலாம்.
ஆத்ம ஞானம் பெற்ற ரிஷிகள் சக்தியே இதற்கு திருஷ்டாந்தம். சகல லோகங்களுக்கும், சகல காலங்களுக்கும் சென்று அவர்கள் விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். நம் காதுக்குக் கேட்காத சப்தங்களை ஆகாயத்தில் கேட்டு வேத மந்திரங்களைக் கொடுத்தார்கள். எப்படி ஆசையை அடக்குவது? எப்படி மனத்தை நிறுத்துவது? எப்படி நிலைத்த ஆனந்தத்தை அடைவது என்று கேட்கிறவர்கள் அந்த வேதங்கள் சொன்னபடி நடந்தாலே போதும்; முடிவில் பேரானந்தம் அடையலாம். இதற்குப் பரமேசுவரன் அநுக்கிரகம் செய்வாராக.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
எதிர்கொண்டு அழைப்பான்! : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
சமுத்திரம் ஆடாமல் அசையாமல் இருக்கிறபோது ஒரு காற்று அடித்தால் உடனே அதில் ஜலத்துளிகள் குமிழ்களாகத் தோன்றுகின்றன. இன்னோரு காற்று அடிக்கிறபோது அந்தக் குமிழ்கள் உடைந்து போகின்றன. பரமாத்மா ஆடாத அசங்காத சமுத்திரம் மாதிரி. மாயை என்கிற காற்றினால் அதிலே ஜீவாத்மாக்கள் என்கிற நாமெல்லாம் குமிழ் மாதிரி தோன்றியிருக்கிறோம். ஆசாரியாருடைய கடாக்ஷம் என்கிற நல்ல காற்று நம்மேல் பட்டால் குமிழ் உடைந்து ஜலத்துளி சமுத்திரத்தோடு ஐக்கியமாகி விடுவதுபோல், நாமும் பரமாத்மாவிடம் இரண்டறக் கலந்து விடுவோம்.
சமுத்திர ஜலம் என்றென்றும் அளவு குறையாமலேதான் இருக்கிறது. அதிலிருந்து ஆவி பிரிந்து சென்று மழையாகி, உலகத்தில் பலவிதங்களில் நதி, ஓடை, வாய்க்கால், ஏரி, குளம், கிணறு என்று ஜலாசயங்களாக ஆகின்றன. சமுத்திரம் வற்றுவதில்லை. அதில் புதிதாக வெள்ளம் வருவதுமில்லை. அதிலிருந்து வந்த ஆறு குளங்கள் வற்றலாம்; அல்லது இவற்றில் வெள்ளம் வரலாம். வெயில் நாளானால் வீட்டுக் குழாய்களில் ஜலம் இல்லை; ரெட்ஹில்சில் ஜலம் இல்லை என்கிறோம். மழைக்காலத்தில் கோதாவரியில் வெள்ளம், காவேரியில் உடைப்பு என்று பேசுகிறோம். ஆனால் சிருஷ்டி காலத்தில் இந்த உலகத்தில் எத்தனை ஜலம் இருந்ததோ அதில் ஓர் இம்மிகூட – க்ரெயின் கூட – இன்றுவரை குறையவில்லை, கூடவும் இல்லை. பணக்காரர்கள் சிலர் நிலத்தை விற்று வீடு வாங்குவார்கள்; வீடுகளை விற்று பாங்கில் போடுவார்கள்; பாங்குப் பணத்தை ‘ஷேர்’களாக மாற்றுவார்கள். மொத்தச் சொத்து மாறாது. அவற்றின் ரூபம் தான் பல விதங்களில் மாறும். எல்லாவற்றையும் கூட்டினால் கணக்கு சரியாக இருக்கும். அப்படியேதான் லோகத்தில் உள்ள மொத்த ஜலம் சமுத்திரத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மேகத்தில் இருக்க வேண்டும். அல்லது நதியாக, ஏரி, குளங்களாக இருக்க வேண்டும்.
பரமாத்மா பலவாகத் தோன்றியிருக்கிறார். தோன்றிய பின்னும் சமுத்திரம் மாதிரி கூடாமல், குறையாமல் இருக்கிறார். நமக்குக் கூடுதல், குறைவு எல்லாம் உண்டாகிறதாகத் தோன்றுகிறது. ஆனால் உள்ளது ஒன்றேதான் என்ற ஞானம் வந்தால், எங்குமே கூடுதலும் இல்லை, குறைவும் இல்லை.
ஜலத்தை திருஷ்டாந்தமாக வைத்துப் பரமாத்ம ஜீவாத்ம ஸம்பந்தத்தைச் சொல்லும்போது நதிகளைப் பற்றி விசேஷமாகச் சொல்ல வேண்டும். சமுத்திர ஜலம் மழையாகி அதிலிருந்து ஏரியும், குளமும், குட்டையும், கிணறும் உண்டாகின்றன. இவை மறுபடியும் சமுத்திரத்தில் கலப்பதில்லை. ஆனால், எல்லா நதிகளும் சமுத்திரத்தையே தேடி வந்து கலந்து விடுகின்றன. வடக்கே ஒரு நதிக்கு ‘ஸோன்’ என்று பெயர். ‘சோணம்’ என்றால் சிவப்பு. இந்த நதி சிவப்பான மண் வழியே ஓடுகிறது. ஆந்திராவில் கிருஷ்ணா நதி இருக்கிறது. ‘கிருஷ்ண’ என்றால் கறுப்பு. இந்த நதி கறுப்பு மண் மீது ஓடுகிறது. ‘கங்கை’ என்றால் வெளுப்பு. இதுவும் அது ஓடிவருகிற பிரதேசத்தைப் பொறுத்து ஏற்பட்ட பெயர்தான். மூன்றும் ஒரே சமுத்திரத்தில்தான் கலக்கின்றன. சிகப்பு ரஜோ குணம், கறுப்பு தமோ குணம், வெள்ளை ஸத்வ குணம். மனசானது முக்குணங்களில் எதில் பாய்கிறதோ, அதை ஒட்டி ஜீவாத்மாவின் சுபாவம் அமைகிறது. எப்படியானாலும், கடைசியில் பரமாத்ம சமுத்திரத்தில்தான் கலந்தாக வேண்டும்.
Water finds its level—`தொடர்புடைய நீர்ப்போக்கு ஒரே மட்டத்தில் இருக்க முயலும்’ என்பார்கள். மலை உச்சியில் மழை பொழிந்து நதி உண்டாகிறது. அங்கிருந்து கீழே கனவேகமாக, ஒரே இரைச்சலோடு நதி விழுகிறது. பூமியில் ஓடும்போது அத்தனை சத்தம் இல்லை. முடிவில் சமுத்திரத்தில் கலந்தபின் சத்தமே இல்லை. அப்போதுதான் நதி தன் லெவலுக்கு வருகிறது. அதாவது லெவலுக்கு வந்தவுடன் பரம சாந்தமாகிறது. எதிலுமே சரி, லெவல்—அதாவது அளவு அறிந்து, அந்த மட்டத்தோடு நிற்கிற மனோபாவம்—வந்தால்தான் சாந்தம் உண்டாகும். லெவலுக்கு மீறிச் செய்கிற ‘தாட்பூட்’ காரியங்கள் பிறருக்குப் பிரமிப்பூட்டலாம். ஆனால் இதனால் நாமே நம் சாந்தியைக் குலைத்துக் கொள்வதுதான் பலன். உருட்டல், புரட்டல், இரைச்சல் எல்லாவற்றையும் குறைத்து அடக்கமாக வருகிற நதியை சமுத்திரம் எதிர் கொண்டு சென்று வாங்கிச் செல்கிறது. இதனால்தான் நதியின் சங்கம ஸ்தானங்களுக்குச் சிறிது தூரம் முன்னாலிருந்தே உப்புக் கரிக்கிறது. நாம் லெவலை மீறாமல், அடக்கமாகச் சென்றால், பரமாத்ம சமுத்திரமும் நம்மை எதிர் கொண்டு அழைத்துப்போய் தனக்குள் அடக்கம் செய்து கொண்டு விடும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
மாயை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
‘எல்லாம் மாயை, சத்தியமாக எதுவும் இல்லை’ என்று பௌத்தம் சொல்கிற மாதிரி அத்வைதம் சொல்லவில்லை. ‘பிரபஞ்சமெல்லாம் மாயைதான்; ஆனால் இதற்கு, ஆதாரமாக பிரம்மம் என்பது பரம சத்தியமாயிருக்கிறது’ என்கிறது அத்வைதம்.
“உலகத்தை மாயை என்று சொல்கிறீர்களே, இந்த உலகத்தில் இத்தனை காரியங்கள் கண்கூடாக நடந்து கொண்டிருக்கும்போது இதை எப்படி மாயை என்று சொல்லலாம்?” என்று கேட்கிறார்கள்.
மாயை என்றால் அடியோடு இல்லாத வஸ்து என்று நினைத்துக் கொண்டு இப்படிக் கேட்கிறார்கள். ஆனால் மாயை என்பது அடியோடு இல்லாத வஸ்து (அத்யந்த அஸத்) அல்ல. முயல் கொம்பு அல்லது மலடி மகன் என்று சொன்னால் உடனே அது அடியோடு இல்லாத வஸ்து என்று தள்ளி விடுகிறோம். மாயை அப்படி இல்லை. அது இருப்பதாக நினைக்கிற மட்டில் இருப்பதாகவே தோன்றும். அது முயல் கொம்பு மாதிரி இல்லை. கானல் நீர் மாதிரியானது. கானல் நீர் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அதில் ஜலம் இல்லை. அதைக் குடித்து நாம் தாக சாந்தி செய்து கொள்ள முடியாது. கானல் நீர் உண்மையான ஜலம் இல்லை என்று அறிந்தவர்களுக்கும்கூடக் கானல் நீர் தெரியத்தான் செய்கிறது. அவ்விதமே உலகை மாயம் என உணர்த்த ஞானிகளுக்குக் கூட லோகம் தெரியத்தான் செய்கிறது என்று சொல்வதுண்டு. ஆனால் அது நிரந்தர சத்தியமல்ல என்று அவர்கள் அறிவார்கள்.
ஒரு பழுதையைப் பாம்பென்று தவறாக எண்ணுகிறோம். பழுதையில் பாம்பு இல்லை என்பது உண்மை. இருந்தாலும்கூட அதைப் பாம்பாக எண்ணியமட்டும், வாஸ்தவத்தில் இல்லாத பாம்பே நிஜமான பாம்பு உண்டாக்குகிற அத்தனை பயத்தையும், பதற்றத்தையும் நம்மிடம் உண்டாக்கி விடுகிறது. பாம்பு மெய்யாக இல்லாத போதிலும் நமக்கு வியர்த்து விறுவிறுத்ததும், நாம் பயப்பிராந்தி அடைந்ததும் உண்மையே. உலகம் உண்மையில் நிரந்தர சத்தியமாக இல்லாதபோதிலும் அதையே நாம் சத்தியமாக எண்ணுகிற மட்டில் இவ்விதமே சகல காரியங்களும் நடக்கின்றன. பழுதையைப் பழுதை என்று தெரிந்து கொண்டவுடன் பயம் ஓடிப்போவதுபோல், உலகமும் பிரம்மத்தைச் சார்ந்த ஒரு தோற்றமே, அதற்கும் ஆதாரமான பிரம்மம் ஒன்றே நிரந்தர உண்மை என்று அறிகிறபோது, காரியங்கள் எல்லாம் நின்றுபோகின்றன.
அடியோடு இல்லாத வஸ்துவல்ல உலகம். ஞானம் வருகிற வரையில் உள்ள தோற்றம் அது. கனவு காண்கிற வரையில் கனவு மெய்யாக இருந்து, நாம் விழித்துக் கொண்டபின் கனவு நசித்துப்போவது போல், நாம் அஞ்ஞானத்தில் தூங்கிக் கொண்டிருக்கிற வரையில் உலகம் மெய்யாக இருந்து, நாம் ஞான நிலையில் விழித்துக் கொண்டவுடன் மறைந்து போகிறது. இவ்வாறு, அப்பட்டப் பொய்யாக இல்லாமல், தோன்றி மறைகிற தாற்காலிக உண்மையாக உள்ள உலகத்தை ‘அத்யந்த அஸத்’ என்று சொல்லாமல், ‘பிராதி பாஸிக ஸத்தியம்’ என்பார்கள். கிளிஞ்சலில் வெயில் வெள்ளி மாதிரி மினுமினுப்பதுபோல் பிரம்மத்தில் மாயையால் உலகம் தாற்காலிகமாக மினுமினுக்கிறது!
மாயை என்பது ஞானிக்குப் பூஜியம் (Zero) தான். ஆனால் ஞானம் வராத நிலையில் உள்ள ஜீவன் தன்னை ஒரு தனி எண்ணாக வைத்துக்கொண்டு பக்கத்தில் இந்தப் பூஜ்ஜியத்தைச் சேர்த்துக் கொள்கிறான். ஓர் இலக்கத்துக்குப் பக்கத்தில் வருகிற பூஜ்யம் அதைப் பத்து, இருபது, நூறு, ஆயிரம் என்று ஆக்குவதுபோல் இந்த அஞ்ஞானிக்கு மாயையே பலவாக விரிந்து சத்திய வஸ்துக்களாக—உலகமாக—தோன்றுகிறது.
ஞானியே உள்ளது உள்ள படி பார்க்கிறான்.ஒரே சர்க்கரையினால் பல பொம்மைகள் செய்திருக்கிறதுபோல் ஒரே பிரம்மம் இத்தனையையும் ஆகியிருக்கிறது. சர்க்கரையினால் பாகற்காய் பொம்மை செய்து வைத்திருந்தால், விஷயம் தெரியாத குழந்தை அது கசக்கும் என்று ஓடிப்போயிருக்கும். கசப்பு வஸ்துவாகத் தோன்றுகின்ற அதுவும் உண்மையில் மதுரமான சர்க்கரைதான். உலகம் எல்லாம் ஆனந்த மயமான பிரம்மம் ஒன்றே என்று ஞானி அறிவான். நமக்குக் கசப்பு அவனுக்கு இனிப்பு. ‘நமக்குக் கறுப்பு அவனுக்கு வெளுப்பு; நமக்குப் பகல் அவனுக்கு இருட்டு’ என்று கிருஷ்ண பகவான் சொல்கிறார். பிரம்மம் என்கிற வெளிச்சமே நமக்கு இருட்டாக இருக்கிறது. இருட்டான மாயைதான் நமக்கு வெளிச்சமாக தெரிகிறது. இதெப்படி முடியும் என்று கேட்கலாம். மாயையும் பிரம்மத்தைச் சார்ந்து அதனிடமிருந்து சிறிது பிரதிபலிப்பான ஒளி பெறுகிறது. இந்தக் குறைந்த ஒளிதான் நம் குறைந்த அறிவுக்கு எட்டுகிறது. சுமாரான வெளிச்சத்தில்தான் புஸ்தகத்தின் கறுப்பு எழுத்துக்கள் தெரியும். ஜொலிக்கிற சூரிய வெளிச்சத்தில் நேரே புஸ்தகத்தைப் பிரித்தால் எழுத்தே தெரியாது. நமக்கு மாயையின் அற்பப் பிரகாசத்தில் உலக காரியங்கள் தெரிகின்றன. ஞானியின் ஆத்ம பிரகாசத்தில் அவை மறைந்து போகின்றன. ஞானியின் பகல் நமக்கு இரவு என்பதன் அர்த்தம் இதுவே.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
அகமும் புறமும் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
மநுஷ்யனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை. அவற்றைப் பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்து விட்டாலும் போதவில்லை. அதனால் வருகிற சுகம் தீர்ந்து போகிறது. இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.
வெளியில் இருக்கிற வஸ்து வந்தால்தான் சந்தோஷம், ஆனந்தம் என்று துரத்திக்கொண்டே இருப்பவனுக்கு சாந்தி எப்படி வரும்? வெளியில் இருப்பது நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும் வரும், போனாலும் போகும். அதை நம் வசப்படுத்திக் கொண்டதாக நினைத்தபோதே கைவிட்டுப் போகக்கூடும். நமக்கு அன்னியமான வெளி விஷயங்களிலிருந்து ஆனந்தத்தைச் சாசுவதமாகச் சம்பாதித்துக் கொள்வது நடக்காத காரியம். அது சாந்தியைக் கெடுக்கிற பிரயத்தனம் தான்.
மநுஷ்யன் புறத்தில் ஆனந்தத்தைத் தேடிக் கொண்டு போவதற்குக் காரணம், அவன் உள்ளுக்குள் தானே ஆனந்த ஸ்வரூபமாக இருப்பதுதான். இவன் உள்ளூற ஆனந்த ஸ்வரூபமாய் இருப்பதாலேயே ஆனந்தத்தை எப்போது பார்த்தாலும் தேடிக்கொண்டு இருக்கிறான். மாயையால், தானே ஆனந்த ஸ்வரூபம் என்பதை மறந்துவிட்டிருக்கிறான். இருந்தாலும் இவனுடைய ஸ்வபாவமே ஆனந்தமான படியால் இவனுக்கு ஆனந்தம் அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. மநுஷ்யர்களில் எவராவது ஆனந்தத்தைத் தேடாமல் துக்கத்தைத் தேடிப் போகிறவர்கள் உண்டா? ஆனாலும், அந்த ஆனந்தம் உள்ளே இருப்பதை அறிந்து சாந்தத்தில் அதை அநுபவிக்காமல், வெளியே ஆனந்தத்தைத் தேடித் துரத்திக் கொண்டே போய் சாந்தியை ஓயாமல் கெடுத்துக் கொள்கிறார்கள். தன் நிஜ ஸ்வரூபம் என்ன என்று ஒருவன் அம்பாளின் கிருபையால் பிரார்த்தித்து ஆத்ம விசாரம், தியானம் செய்து பார்த்தால், தானே பூரண ஆனந்த வஸ்து என்று தெரிந்து கொள்வான்.
இவனுடைய இயல்பான உள் ஆனந்தம் மகா சமுத்திரம் மாதிரி இருக்கிறதென்றால், இவன் இப்போது புறத்தில் தேடி ஓடுகிற வஸ்துக்களிடமிருந்து கிடைக்கிற ஆனந்தமெல்லாம் ஒரு திவலை மாதிரிதான். இதை ஒருத்தன் உணர்ந்து விட்டால் அப்புறம் வெளி இன்பத்தைக் தேடவே மாட்டான். தன்னைத்தானே அநுபவித்துக்கொண்டு ஆனந்த சமுத்திரமாக இருப்பான். சமுத்திரம் இருக்கிற இடத்திலேயே கரையைவிட்டு வராமல் இருந்தாலும் அதனிடம் நதிகள் போய் விழுகின்றன அல்லவா? அப்படியே ஆசைகள் இவனிடம் வந்து விழுந்து சமுத்திரத்தில் நதிகள் விழுந்து மறைவதுபோல் மறைந்தே போய்விடும். ‘ஆபூர்ய மாணம் அசலப்ரதிஷ்டம் சமுத்ரம்’ என்று கீதை சொன்ன மாதிரி, பேரின்பக் கடலாக நிறைந்து, அசைவதற்கு இடமே இல்லாத அளவுக்கு எங்கும் நிறைந்து, அசையாமல் பரம சாந்தமாக நிற்பான். தேவேந்திர பதவியின் ஆனந்தம்கூட இந்த ஆத்மானந்தக் கடலில் ஒரு துளிதான் என்கிறார் ஸ்ரீ பகவத் பாதர்கள்: ‘யத்ஸெளக்யாம்புதி லேச லேசதஇமே சக்ராதயோ நிர்விருதா:’ (மனீஷா பஞ்சகம்).
பதவி, பணம், ஸ்திரீ புருஷாள், கௌரவம், பப்ளிஸிட்டி—என்றிப்படி வெளியிலிருந்து நமக்கு ஆனந்தம் கிடைப்பதாக எண்ணிக்கொண்டு ஓயாமல் யத்தனம் செய்வது அத்தனையும் சமுத்திரமாக இருக்கிற நாம் அதையறியாமல் ஒரு சொட்டு ஜலத்துக்காக தவிக்கிற மாதிரிதான். வெளிப்பொருள் எதுவோ கிடைக்காததால் நமக்குக் குறை வந்து விட்டதாகக் துக்கப்படுவது சுத்தத் தப்பு. நமக்குக் குறையே இல்லை. நமக்குள் நாமே பூரண வஸ்து. நமக்கு அன்னியமாக வெளி என்றே ஒன்று இல்லை. வெளியிலே இருக்கிற அத்தனை ஆனந்தமும் நமக்குள்ளேயே அடக்கம். ‘வெளி மாதிரி இருப்பதிலிருந்து தானாக எது வந்தாலும் வரட்டும். சமுத்திரம் நதிகளை அடக்கிக் கொள்வதுபோல் அவற்றையும் உள்ளே இருப்பதோடு சேர்த்துக் கொள்வோம். எதுவும் வரவில்லையா? அதனால் பாதகமில்லை. எதும் வராததால் நமக்கு என்ன குறை? நமக்கு உள்ளேயே இருக்கிற பரமாத்ம வஸ்துவின் லேசந்தானே வெளியில் இருப்பதெல்லாம்?’ என்கிற தெளிவோடு எப்போதும் இருக்க முயல வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
துக்கச் சுமை குறைய வழி : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
நாம் எல்லோரும் பரம்பொருளை பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயல வேண்டும். இந்த ஞானம் என்பது என்ன? பரம்பொருளைத் தவிர, வேறெதுவுமே இல்லை என்பதுதான். அந்த ஒன்று இத்தனை யாகவும் தோன்றுகிறது. இத்தனையான தோற்றங்களிலேயே மனஸைச் செலுத்திக் கொண்டிருந்தால் சஞ்சலம், ஏற்றத்தாழ்வு, இவற்றால் உண்டாகும் கஷ்டங்கள் எல்லாம் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும். இத்தனை தோற்றத்திலிருந்தும் மனஸைத் திருப்பி, இவற்றுக்குக் காரணமான ஒன்றையே அறியத் தொடங்கினால் எண்ணமும் பலவாக ஓடி அவதிப் படாமல், சஞ்சலங்கள் ஓயும். ஒரே வஸ்து என்றபின் சஞ்சலிக்கவோ ஏற்றத்தாழ்வுக்கோ இடம் ஏது? அந்த நிலையிலேயே நித்திய சுகத்தைப் பெறலாம். இந்த நிலையைத்தான் ஞானம் என்கிறோம்.
உலக வாழ்வில்கூட சுகம் வருவது போலிருக்கிறது. ஆனால் அது நித்தியமாக நிலைத்து நிற்பதில்லை. வெளியிலிருந்து வருகிற சுகத்தை நாம் எப்படி சாசுவதமாக்கிக் கொள்ள முடியும்? வெளியிலிருந்து வருவது நமக்கு ஸ்வாதீனப்படாமல் நம் கைவிட்டு ஓடியும் விடும். அப்போது அதனால் கிடைக்கிற சுகமும் போகத்தான் செய்யும். இப்படித்தான் இந்த நிமிஷம் சுகமாக இருப்பது அடுத்த நிமிஷமே மறைகிறது. அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்துவிட்டு, அடுத்த நிமிஷமே நிழல் வந்து மூடிக்கொள்வது போலத்தான், உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப் பார்த்துவிட்டு ஓடிவிடுகிறது. நிரந்தர சுகம் என்பது உலகத்துக்குக் காரணமான ஒன்றை அறிவது தான்.
உலக வாழ்வில் சகல மனிதர்களுக்கும் அளவில்லாத கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். பணக்காரன், பெரிய பதவியில் இருப்பவன் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். அப்படி நினைத்துத் தாங்களும் அவர்களைப் போலப் பணமும் பதவியும் பெறப் பாடுபடலாம். ஆனால், பணக்காரனை, பதவியில் உள்ளவனைக் கேட்டால் தெரியும், அவனுக்கு எத்தனை கஷ்டங்களென்று. நாம் திண்ணையில் இருக்கிறோம்; விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ, சுளுக்காவதோடோ போய்விடும். பணக்காரனும், பதவிக்காரனும் மாடிமேல் இருக்கிறான். எனவே, அவன் விழுந்தால் எலும்பெல்லாம் முறிந்து விடும். பிராணாபத்து உண்டாகும். ஒருவனுக்கு பணமும் பதவியும் உள்ளபோதே அதனால் உண்டாகிற சிறிது சுகத்தோடு, தன் பணம், பதவி போகக்கூடாது என்ற கவலை, சுகத்தைவிட அதிகமாக இருக்கிறது. இதனால்தான் உலகத்தில் எவனுமே, தான் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்லக் காணோம்! ஒவ்வொருவனும் தானே மகா புத்திசாலி, தானே மிகவும் யோக்கியன், தானே ரொம்பவும் அழகு என்று நினைத்துக் கொண்டிருப்பதுபோல், அதிக துக்கமுள்ளவனும் தானே என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.
துக்கம் நம் உடன் பிறப்பு. நம் பூர்வ கர்மாவின் பயனாக இந்தத் துக்கங்களுக்கு நாம் முன்னமேயே விதை போட்டிருக்கிறோம். இதிலிருந்து தப்ப வழி இல்லை.
ஆனால் கர்மத்தினால் ஏற்படும் கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு சாந்தமாக இருக்க வழி உண்டு. புதிதாக கர்ம மூட்டையைப் பெருக்கிக் கொண்டு எதிர் காலத்தில் கஷ்டத்தை அதிகமாக்கிக் கொள்ளாமலிருக்க வழி உண்டு. முதலில் சொன்ன ஞானம்தான் அந்த வழி.
சித்தப் பிரமை பிடித்து, ஜடமாகி விட்டால் கஷ்டம் தெரிவதில்லை. பைத்தியத்தின் கஷ்டம் வேரூன்றி நிற்பதில்லை; ஆனால், சித்தப் பிரமையில் நித்திய ஆனந்தமும் இல்லை. தூக்கத்தில் துக்கமில்லை. ஆனால் தூக்கத்தில் சுகமாக இருக்கிறோம் என்கிற அறிவு இல்லை. ஞானிதான் எப்போதும் விழிப்பிலேயே இருந்து கொண்டும் சாசுவத ஸுகியாக இருக்கிறான். அவனது தேகத்தில் சிரமங்கள் இரா என்பதில்லை. ஆனால் அவனுடைய மனத்தில் கிலேசமே இராது. வெளியிலிருக்கிற சிரமம் அவன் உள்ளே பாதிப்பதே இல்லை.
கிணற்று ஜலத்துக்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால் தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது. எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்துக்கு அடியாகத்தான் புரட்டி எடுப்பது வழக்கம். அதே மாதிரி நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி விடவேண்டும். அப்போதும் துக்க ஹேதுவான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஜலத்துக்குள் இழுக்கிற குடம் மாதிரி அப்போது துக்கம் பரம லேசாகிவிடும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
யோகி : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
துக்கம் என்பது தன்னைத் தொடாமல் எவன் ஒருத்தன் இருக்கிறானோ அவனே யோகி. பாவம், அதாவது மனஸின் அசுத்தம்தான், துக்கத்துக்குக் காரணம். மனசில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் நீங்கினால், அது தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும். ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் தான் மனஸில் அசுத்தங்களை அகற்ற முடியும். இந்தச் சரீரக் கூட்டிலிருந்து ஆத்மா பிரிந்து போவதற்கு முன்பு, சரியான கல்வியின் மூலமும், அப்பியாசத்தின் முலமும், கட்டுப்பட்டு ஒழுங்காக வாழ்ந்து, அசுத்தங்களைப் போக்கிக்கொண்டு விட வேண்டும். அப்படிச் செய்து ஜயித்தால், கடைசியில் தேகவியோகமே பரமாத்மாவுடன் பிரியாமல் சேர்ந்து விடுகிற யோகமாகிவிடும்.
யோகிக்கு அடையாளம் என்ன? பரமாத்மாவைச் சேர்ந்துவிட்ட அவனது மனசு, வேறு எதையுமே சேர்த்துக் கொள்ள நினைக்காது.
மனசு அதற்கப்புறம் ஓடவே முடியக் கூடாது. அப்படி ஓடாமல் ஆகிவிட்டதால்தான், அதற்கப்புறம் இப்போது இந்த மனசினால் நமக்கு உண்டாகியிருக்கிற இத்தனை தொந்தரவுகளும் தொலைந்து போதும். அந்த நிலையைப் பெறுவதற்கு எதைச் சேர வேண்டும்? மனசு எதிலிருந்து உற்பத்தியாயிற்றோ அதைத்தான் சேரவேண்டும். மனசு அதன் மூலத்தில் சேர்ந்துவிட்டால், அங்கே அப்படியே கரைந்து போய்விடும். அப்புறம் ஓடாது. அதுவே சகல தொந்தரவுகளிலிருந்தும் விடுபட்ட நிலை.
நதி இருக்கிறது. அதன் மூலம்—உண்டான இடம்—என்ன? சமுத்திரம். சமுத்திர ஜலம் தான் ஆவியாகப் போய் வேறொரு இடத்திலிருந்து நதியாக ரூபம் எடுக்கிறது. அந்த ஆறு ஓடாத ஓட்டமில்லை. இப்படி ஓடி ஓடிக் கடைசியில் தன் மூலமான சமுத்திரத்தில் வந்து விழுகிறது. அப்புறம் அதற்குத் தனி ரூபம் உண்டா? ஓட்டம் உண்டா? ஒன்றும் இல்லை. இப்படி நதிகளுக்கெல்லாம் மூலமாக இருந்து, முடிவில் இவற்றைத் தன்னிலேயே சேர்த்துக் கொள்கிற சமுத்திரம் மாதிரி, நம் மனசுகளை எல்லாம் முடிவான சேர்க்கையில், யோகத்தில் தன்னோடு கரைத்துக் கொள்கிற ஒன்று இருக்கிறதா என்றால் இருக்கிறது. சமாதி நிலையில் ஞானிகள், யோகிகள் தங்கள் தனி மனசைக் கரைத்துவிட்டு வெளிப் பிரக்ஞையே இல்லாமல் இருக்கும்போதே, இந்த வஸ்துவிடம்தான் சேர்ந்திருக்கிறார்கள். சமாதி நிலைக்கு அப்புறம் ஒரு யோகி அந்த வஸ்துவை விட்டு விட்ட மாதிரி நமக்குத் தோன்றினால்கூட உண்மையில் இது நீங்காத சேர்க்கைதான். உள்ளூர அவருக்கு அந்தச் சேர்க்கையின் அநுபவமேதான் இருந்து கொண்டிருக்கும். அதனால்தான் அவர் வெளிப் பிரக்ஞையோடு இருக்கிற மாதிரி நமக்குக் தோன்றுகிற போதுகூட, அதை அடைய வேண்டும், இது அடைய வேண்டும் என்கிற ஆசை எதுவுமே அவருக்கு இல்லை. ஏதாவது ஒன்று தனக்கு வேண்டுமென்று கொஞ்சம் கொஞ்சம் ஒருத்தனுக்குத் தோன்றிவிட்டாலும்கூட அவன் யோகி இல்லை, அவன் ஸ்வாமியைச் சேரவில்லை என்றுதான் அர்த்தம்.
யோகியின் அடையாளத்தை வேறுவிதமாகவும் சொல்லலாம். அதாவது அவனுடைய சித்தம் பரமாத்மாவிடமே நிலைத்துவிட்டது என்றால், அதற்கப்புறம் எந்தப் பெரிய துக்கம் வந்தாலும் அது துளிக்கூட ஆடக் கூடாது, அசையக் கூடாது, அழக்கூடாது. இப்படியில்லாமல், சித்தம் துளித்துளி சலித்து விட்டால்கூட அவன் பரமாத்மாவை அடையவில்லை என்றே அர்த்தம்.
யோகிக்கு அநேக துக்கம் வரும்; அதாவது ஊர் உலகத்துக்கெல்லாம் அது துக்கமாகத் தோன்றும். ஆனால் அவனுக்குத் துக்கம் லவேசமும் தெரியாது. பட்ட கட்டை மாதிரி இருப்பான். பட்ட கட்டை என்பதுக்கூடச் சரியில்லை. அது உணர்ச்சியே இல்லாத நிலை அல்லவா? யோகி ஒருத்தன் தான் பூரணப் பிரக்ஞையோடு இருக்கிறவன். அவன் ஸதானந்தமாக இருக்கிறவன். அது வேண்டும், இது வேண்டும் என்பதேயில்லாமல் சதா ஆனந்தமாக உட்கார்ந்து கொண்டிருந்து விட்டால் அதுதான் யோகம்.
அவனுக்கு ஸ்வபாவமாகவே கருணை மாத்திரம் சுரந்து கொண்டிருக்கும். யாரிடத்திலும் கோபம், வெறுப்பு வராது. இன்னொரு பிராணிக்கு தன்னால் இம்மியும் ஹிம்ஸை வரக்கூடாது என்கிற எண்ணம் மட்டும் இருக்கும். வெளி உலகத்தின் பார்வைக்கு அவன் என்னென்ன காரியம் செய்தாலும், அதிலெல்லாம் அவனுக்குத் ‘தான் செய்கிறோம்’ என்ற அகங்கார எண்ணமே இராது. சொந்தப் பற்றே இல்லாமல், பரம காருண்யம் மட்டுமே அவனுடைய காரியங்களில் இருக்கும். சில சமயங்களில் வெளியிலே பார்க்கிற காரியம் நமக்குக் கடுமையாக இருந்தாலும்கூட, உள்ளுக்குள்ளே அதுவும் பரம காருண்யம் தவிர வேறாக இராது. மஹா யோகியான பரமேசுவரன் இப்படித்தான் சம்ஹாரம் செய்கிறார். நமக்கு அது கொடுமையாகத் தெரியலாம். ஆனால் ஒவ்வொரு ஜீவனும்—எத்தனை பாப ஜீவனாக இருந்தாலும்—சிறிய காலமாவது கர்ம கதியிலிருந்து விடுதலை அடைந்து தன்னிடம் லயித்திருப்பதற்காகவே அவர் சம்ஹாரம் செய்கிறார். தினமும் நமக்குத் தூக்கத்தைக் கொடுத்து அந்த வேளையில் சுக துக்கங்களிலிருந்து நமக்கு விடுதலை தருகிற மாதிரி. இந்தச் சரீரம் விழுந்த பின்னும் கொஞ்ச காலம் சிரம பரிகாரம் தருகிறார். தினம் தூங்கிவிட்டு மறுநாள் விழித்துக் கொண்டு பழையபடி நல்லது கெட்டதுகளில் விழுகிற மாதிரி, இச்சரீரம் போய்ச் சிரம பரிகாரம் ஆனபின், இன்னொரு சரீரத்தில் விழித்துக் கொள்கிறோம். இந்த அலைச்சல்—புனரபி ஜனனம், புனரபி மரணம்—கூடாது. இந்தச் சரீரம் போனால் இன்னொரு முறை சரீரம் வரக்கூடாது. அப்படிச் செய்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடு, ஒழுங்கு, பரம கருணை, தபஸ், பூஜை, யக்ஞம், தானம் எல்லாம் அதற்குத்தான். குழந்தையாக இருக்கிற காலத்திலிருந்தே இவற்றில் எல்லாம் பழக்க வேண்டும். அப்படிப் பழக்கினால்தான், கோடாநு கோடி ஜனங்களை இந்தமாதிரி படிப்படியாக உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுதான் இத்தனை மநுஷ்ய சிருஷ்டிக்கும் பலன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
துக்க பரிகாரம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
ஒருவனுக்கு வியாதி வந்தால், அதற்குப் பலர் பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். தாது வித்தியாசத்தால் நோய் வந்தது என்பார் ஆயுர்வேத வைத்தியர். இங்கிலீஷ் டாக்டர் வேறு காரணம் சொல்வார். இதற்கும் மாறாக இன்னொறு ‘ஸைகலாஜிகல்’ காரணத்தை இந்நாட்களில் பிரபலமாகி வரும் மனோதத்வ நிபுணர் கூறுவார். மந்திர சாஸ்திரக்காரர், குறிப்பிட்ட தெய்வக் கோளாற்றால் இந்த வியாதி உண்டாயிற்று என்பார். ஜோதிஷர் இன்ன கிரகம் இன்ன இடத்தில் இருப்பதே நோய்க்குக் காரணம் என்பார். தர்ம சாஸ்திரம் அறிந்தவர்களோ பூர்வ கர்ம பலனாகத்தான் வியாதி ஏற்பட்டிருக்கிறது என்பார்கள்.
வியாதிக்கு மட்டுமின்றி நம் வாழ்வின் எல்லா விதமான சுக துக்கங்களுக்கும் இவ்வாறு பலவிதக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒரே விஷயத்துக்கு இப்படிப் பல காரணங்கள் சொன்னால் நமக்குக் குழப்பமாயிருக்கிறது. நம் சுக துக்கங்களுக்கு கிரகங்களின் போக்குத்தான் காரணமா? ஜோதிஷர் சொல்கிறபடி கிரகப் பிரீதி செய்வதா? அல்லது மாந்திரீகர் சொல்கிறபடி குலதெய்வத்துக்கோ அல்லது வேறு தெய்வத்துக்கோ கிராம தேவதைக்கோ செய்த அபசாரம் காரணமா? அந்தத் தெய்வத்துக்கு சாந்தி பரிகாரம் செய்வதா? நோய்நொடி என்றால் வைத்தியமும் செய்யத்தானே வேண்டும்? கடைசியில் எல்லாம் கர்ம பலன் என்றால், அது தீருகிறபோதுதான் தீரும் என்று வெறுமே, இருந்துவிட வேண்டியதுதானா? இப்படியாகக் குழப்பம் ஏற்படுகிறது.
பல காரணங்களில் எது சத்தியம் என்று யோசித்தால் எல்லாமே சத்தியமாக இருக்கும். ஆதி காரணம் நம் கர்மம்தான் என்பது நிச்சயம். அந்தக் கர்மம் ஒன்றே பலவிதமான விளைவுகளை உண்டாக்குகிறது; மழை ஒன்றுதான் – ஆனால் அதிலிருந்தே எத்தனை விளைவுகள் உண்டாகின்றன? பூமி முழுவதும் ஈரம் உண்டாகிறது; ஈசல் உண்டாகிறது; தவளை கத்துகிறது; சில செடிகள் பச்சென்று தழைக்கின்றன; வேறு சில அழுகுகின்றன. இத்தனையும் ஒரே மழைக்கு அடையாளங்கள். அதே மாதிரி மாந்திரீகமாகவும் ஜ்யோதிஷ ரீதியிலும் வைத்திய சாஸ்திரப்படியும் நாம் குணம் பெற வேண்டிய வியாதிக்கும் ஒரு கர்மாவே காரணம். இன்னும் வாழ்க்கையில் வியாதியைத் தவிர, பலவிதமான பிரச்னைகள்! பணத்தால், உத்தியோகத்தால், தேக பலத்தால், அறிவுசக்தியால் கவனிக்க வேண்டிய பிரச்னைகள் (Problems) எல்லையில்லாமல் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகள், கஷ்டங்கள் எல்லாவற்றுக்கும் காரணம் கர்மம்தான். ஸயன்ஸ்படி விளைவு (Effect) இருந்தால் காரணம் (Cause) இருந்தேயாக வேண்டும்.
ஜகத் முழுதும் காரணம்—விளைவு, செயல்—பிரதிச் செயல் (Action and Reaction) என்ற துவந்தத்துக்குள்தான் கட்டுண்டிருக்கிறது. பௌதிக சாஸ்திரம் (Physics) முழுதும் இந்த உண்மையைத்தான் விளக்குகிறது. ஜடப் பிரபஞ்சம் ஜீவப் பிரபஞ்சம் இரண்டும் ஒரே மூலத்திலிருந்தே வந்ததால் ஜகத்துக்கு உள்ள இந்த விதி மனித வாழ்விலும் உண்டு. நம் செயலுக்கெல்லாம் நிச்சயமாகப் பிரதி உண்டு. இன்று நாம் அநுபவிக்கின்ற சுகங்களுக்கும் கஷ்டங்களுக்கும் காரணம் நாம் முன்னமே இந்த ஜன்மாவிலோ, பூர்வ ஜன்மாவிலோ செய்த நல்லது கெட்டதுகள்தான். சில சமயங்களில் நம் சொந்த பாப புண்ணிய விளைவோடு, குறிப்பிட்ட வேறு சிலரது பாப புண்ணிய பலனும் நம்மைச் சேருவதாகச் சொல்வதுண்டு. உதாரணமாக, குழந்தைக்கு வியாதி வந்தால், மாதா பிதாவின் பாப பலன் என்பார்கள். அவர்கள் குழந்தைக்கு ஸதா சிசுருஷை செய்வதையும், மனத்தால் அந்தக் குழந்தைக்காக அவர்கள் வேதனைப்படுவதையும் பார்க்கும்போது இதுவும் நியாயம் என்றே தெரியும். எனக்கு இன்னொன்றுகூடத் தோன்றுகிறது. அதாவது, நமக்கு ஒரு கெடுதல் வந்தால் அது நம் சத்துருவின் புண்ணிய பலன் என்றும் சொல்லலாம்.
பிரபஞ்சத்தின் சகல ஆட்டத்துக்கும் காரணம் ஒரே ஒரு பராசக்திதான். அந்த ஒரே ஈசுவரனுடைய ஆக்ஞைப்படிதான் உலக இயக்கம் முழுதும் நடக்கிறது. அவன் பல விஷயங்களைச் சம்பந்தப்படுத்தி விடுகிறான். இந்த உலகத்தில் எதுவுமே தொடர்பில்லாமல் நடக்கவில்லை. நமக்குச் சம்பந்தமில்லாதவையாகத் தோன்றுவதை எல்லாம் உள்ளூறச் சம்பந்தப்படுத்தி வேடிக்கை பார்க்கிறான் ஸர்வேச்வரன்.
ஒருவர் செய்கிற கர்மம், அதன் பலன் இவையே மனித வாழ்வின் சுக துக்கங்களுக்கு முதற் காரணம். இதற்கே துணைக்காரணமாக—அல்லது அடையாளமாக—கிரகசாரம், தெய்வ குற்றம், ஆரோக்கியக்குறைவு முதலியன அமைகின்றன.
ஜாதக ரீதியில், வைத்திய ரீதியில், மாந்திரீக ரீதியில் எப்படி வேண்டுமானாலும் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். நம் கர்மா தீருகிறபோது அவை பலன் தரும். பகவான் விட்டவழி என்று பக்தியோடு நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடக்கிற பக்குவம் இருந்தால், எல்லாவற்றையும்விட அது சிலாக்கியம். அதுவே பெரிய பரிகாரம்; உண்மையான பரிகாரம்.
பூர்வ கர்ம சமாசாரம் எப்படிப் போனாலும் இனிமேலாவது கர்ம பாரம் ஏறாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம். பழையதற்குப் பரிகாரம் தேடுவதைவிட, புதிய சுமை சேராமல், பாபம் பண்ணாமல் வாழ்வதற்கு ஈசுவரனைத் துணைகொள்வதே முக்கியம்.
பூர்வ கர்மத்தால் இப்போது ஏற்பட்டுள்ள துக்கத்துக்கும் உண்மைப் பரிகாரம் ஈசுவர தியானம்தான்; இனிமேல் துக்கத்துக்கு விதை போட்டுக் கொள்ளாமல் இருக்கிற உபாயமும் ஈசுவர தியானம்தான். துக்கம் தருவதாக இன்னொரு வஸ்துவே இல்லை என்ற அத்வைத அநுபவம் சித்திப்பதே இதன் முடிந்த முடிவான துக்க பரிகார நிலை. அங்கே துக்கமும் இல்லை; சுகமும் இல்லை; இரண்டுக்கும் ஆதாரமான சத்தியம் மட்டும் ஸ்வயம் பிரகாசமாக இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
த்வைதம் ÷ பெளத்தம் = அத்வைதம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
“பிரம்மம் பூரணமானது; உலகமும் பூரணமானது; பிரம்மம் என்ற பூரண வஸ்துவில் உலகம் என்ற பூரணம் உதயமாயிற்று; இந்த உலகம் என்ற பூரணத்தைப் பிரம்மம் பூரணத்திலிருந்து எடுத்துவிட்ட போதிலும் பிரம்மம் பூரணமாகவே இருக்கிறது” என்று ஓர் உபநிஷத மந்திரம் சொல்லுகிறது. பூரணம் என்றால் எல்லாம் என்று அர்த்தம். எப்படி இரண்டு வஸ்து எல்லாமாக முடியும்? பூரணத்திலிருந்து பூரணத்தைக் கழித்த பின்னும் எப்படிப் பூரணம் மிஞ்ச முடியும் என்ற கேள்வி எழுகிறது.
இந்த மந்திரத்தின் வாஸ்தவமான தாத்பரியம் என்ன? உலகம் உண்மையில் பிரம்மத்திலிருந்து வேறாகப் பிரிந்து வெளியே வந்துவிட்ட வஸ்து அல்ல. பிரம்மமேதான் உலகமாகத் தோன்றுகிறது. பிரம்மம் வேறேதோ பொருள்களைக் கொண்டு உலகை சிருஷ்டிக்க (Create) வில்லை. பிரம்மம் உலகமாக மாறிவிடவும் (Transform) இல்லை. பிரம்மம் உலகமாகத் தோன்றுகிறது (Appearance). அவ்வளவுதான். இருட்டிலே ஒரு மாலையைப் பார்த்துவிட்டுப் பாம்பு என்று நினைக்கிறோம். இப்போது மாலையே பாம்பாகத் தோன்றுகிறது. மாலை பாம்பாக மாறவில்லை. மாலை பாம்பைச் சிருஷ்டிக்கவும் இல்லை. பாம்பாக எண்ணியபோது அது முற்றிலும் (பூரணமாக) பாம்பாகத்தான் தெரிகிறது. மாலை என்று தெரிந்து கொண்டால் பூரணமாக மாலையாகவே இருக்கிறது. மாலை என்ற பூரணத்தில் பாம்பு என்ற பூரணம் உதயமானாற்போல், பிரம்ம பூரணத்தில் உலக பூரணம் தோன்றுகிறது. அதாவது ஒரு நிலையில் மாலையே பூரணம்; இன்னொரு நிலையில் பாம்பே பூரணம். ஆக, இரண்டு பூரணமில்லை. ஒரே பூரணம் இரண்டு சமயங்களில் இரு விதங்களில் பூரணமாகத் தெரிகிறது. மாலையில் பாம்பு என்ற தோற்றம் ஏற்பட்டதால் அப்போது அதன் எடை கூடிற்றா என்ன? இல்லை. பாம்பு என்ற தோற்றம் அழிந்து, இது மாலைதான் என்ற தெளிவு ஏற்பட்டபோது மாலையின் எடை குறைந்ததா? அதுவும் இல்லை. அப்படியே பிரம்மத்தில் உலகத்தைக் கூட்டினாலும் குறைத்தாலும் அது மாறாமல் பூரணமாகவே இருக்கிறது. மாலையில் தோன்றும் மாயப்பாம்பாக, “அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவாக” இருப்பதே உலகம் என்றார் கம்பர். அரவை (பாம்பை) அலங்கலிலிருந்து (மாலையிலிருந்து) கழித்த பின்னும் அது பூரண அலங்கலாகவே இருக்கிறது. இதுதான் உபநிஷத் சொன்னபடி பூரணத்திலிருந்து பூரணத்தைக் கழித்த பின்னும் பூரணம் மீதி இருப்பது.
மாலை ஏன் பாம்பாகத் தெரிந்தது? இருட்டினால் அப்படித் தெரிந்தது. மாயை என்கிற இருட்டில்தான் பிரம்மம் உலகமாகத் தெரிகிறது. ‘மாயா’ என்றால் “எது இல்லையோ அது” என்று அர்த்தம். இல்லாத வஸ்துவான மாயைதான் இருக்கிற ஒரே வஸ்துவான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பெருக்கிக் காட்டுகிறது. இல்லாத வஸ்துவால் இப்படிச் செய்ய முடியுமா என்று கேட்பீர்கள். கணித சாஸ்திரப்படி பதில் சொல்கிறேன்.
பிரம்மத்தின் விஷயத்தில் கூட்டல், கழித்தல், கணித நியதி மேலே பார்த்தோம். கூட்டினாலும் ஜாஸ்தி ஆகாது. கழித்தாலும் பூரணமாகவே இருக்கும் என்ற விசித்திரத்தைப் பார்த்தோம். இப்போது பெருக்கல், வகுத்தல் கணக்கு ஒன்றும் சொல்கிறேன்.
ஓர் எண்ணை இன்னோர் எண்ணால் வகுக்கிறோம். வகுக்கிற எண் சிறியதாக சிறியதாக ஈவு அதிகமாகிக் கொண்டே போதும். பதினாறைப் பதினாறால் வகுத்தால் ஈவு ஒன்று; எட்டால் வகுத்தால் ஈவு இரண்டு; நாலால் வகுத்தால் நாலு; ஒன்றால் வகுத்தால் ஈவு பதினாறு. வகுக்கிற எண் சிறியதானால் ஈவு அதிகமாகிறது. வகுக்கிற எண் மிக மிகச் சிறியதாகி பூஜ்யமே (0) ஆகிவிட்டால் அப்போது ஈவு மிக மிகப் பெரியதான, எண்ணிக்கையிலேயே அடங்காத அனந்தமாகிறது (Infinity). பூஜ்யத்தால் எந்த எண்ணை வகுத்தாலும் கிடைக்கிற ஈவு அனந்தம்.
1/0 =அனந்தம்; 2/0 =அனந்தம்; 3/0 =அனந்தம்; கோடியைப் பூஜ்யத்தால் வகுத்தாலும் இதே அனந்தம்தான் ஈவு.
வகுக்கிற எண்ணால் ஈவைப் பெருக்கினால் வகுக்கப்படும் எண் கிடைக்கவேண்டும் என்பது கணித நியதி. 16/2 = 8; அதாவது 8 × 2 = 16 இந்த நியதிப்படி,
அனந்தம் × 0 = 1
அனந்தம் × 0 = 2
அனந்தம் × 0 = 3
இப்படி முடிவே இல்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது. ஒரே அனந்தமானது பூஜ்யத்தால் தன்னை ஒன்று, இரண்டு, மூன்று, கோடி, பத்துகோடி, என்று முடிவில்லாமல் பெருக்கிக் கொண்டே போகிறது.
இந்த ஒரே அனந்தம்தான் பிரம்மம். இல்லாத வஸ்துவான மாயைதான் பூஜ்யம். எது இல்லையோ அதுதானே ஸைஃபர்? மாயை என்றாலே அந்தச் சொல்லுக்கு ‘எது இல்லையோ அது’ என்றுதான் அர்த்தம். எனவே மாயைதான் ஸைஃபர், பூஜ்யம். அனந்தம் பூஜ்யத்தால் தன்னைப் பெருக்கிக் கொண்டு பலவாகக் காட்டிக் கொள்வதுபோல், பிரம்மம் மாயா சக்தியால் தன்னை எல்லையில்லாத பல வஸ்துக்களாகத் தோன்றுகிற இந்தப் பிரபஞ்சமாகக் காட்டிக் கொள்கிறது. வகுக்கப்படும் பிரபஞ்சத்துக்கு என்ன எண்ணிக்கை வேண்டுமானாலும் தரலாம். எந்த எண்ணிக்கை தந்தாலும் அதை வகுப்பது பூஜ்யமான மாயையாகையால் மாறாது. அனந்தப் பிரம்மமே ஈவு ஆகிறது. பிரபஞ்சம் என்பது இவ்விதம் எந்த எண்ணிக்கையை வேண்டுமானாலும் பெறலாம் என்கிற முறையில் எல்லையற்றிருப்பதால் அதுவும் அனந்தமாகிறது. சிருஷ்டியில் எத்தனை தினுசு? நம் மனசும் எத்தனை தினுசுகளில் ஓடுகிறது? இவற்றிற்கு முடிவே இல்லை. அனந்தம் தான். முதலில் சொன்ன உபநிஷத் மந்த்ரங்களில் பிரம்மத்தைப் பூரணம் என்று சொன்னபோது, அது மாறாத அனந்தம் என்றும், பிரபஞ்சத்தைப் பூரணம் என்கிறபோது அது மாறிக் கொண்டேயிருப்பதில் அனந்தம் என்றும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.
மாறிக் கொண்டேயிருக்கிற வஸ்து சத்தியமாக இருக்கமுடியாது. ஒன்று, இரண்டு, மூன்று, கோடி, பத்துகோடி என்று அதற்கு நாம் மதிப்புத் தந்தாலும், உண்மையில் அது அசத்தியம்தான்—இல்லாத வஸ்துதான்—அதாவது பூஜ்யம்தான். ‘எந்த எண்ணைப் பூஜ்யத்தால் பெருக்கினாலும் வருகிற விடை பூஜ்யம்தான்’ என்ற கணித நியதியை இங்கே எடுத்துக் கொள்ள வேண்டும். அனந்தம் (பிரம்மம்) × மாயை (0) = 1; 2; 3… என்றெல்லாம் மேலே உபசாரமாகச் சொன்னாலும், உண்மையில் அனந்தத்தை மாயையால் பெருக்கிக் கிடைக்கிற பிரபஞ்சமும் மாயா மயமான பூஜ்யம்தான் எனலாம்.
அனந்தமாக இருக்கிற பிரம்மம் ஒன்றே சத்தியம் என்கிறது அத்வைதம்; அனந்தமாகத் தெரிகிற பிரபஞ்சமும் சத்தியம் என்கிறது துவைதம்; பிரம்மம், பிரபஞ்சம் என்ற பேதமில்லாமல் எல்லாமே சூனியம், பூஜ்யம், மாயை என்கிறது பெளத்தம். அதாவது, பிரம்மம் என்பது சத்தியம் என்று சொல்வது அத்வைதம்; எல்லாம் மாயை என்பதோடு நிற்கிறது பெளத்தம்; பிரபஞ்சத்தை சத்தியமாகச் சொல்கிறது த்வைதம்.
பிரம்மம் × மாயை = பிரபஞ்சம் என்று நாம் மேலேகண்ட equation சூத்திரத்தை,
அத்வைதம் × பெளத்தம் = த்வைதம் என்று சொல்லலாம். அல்லது,
த்வைதம் ÷ பெளத்தம் = அத்வைதம் எனலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
Similar topics
» அங்கே துக்கமும் இல்லை, சுகமும் இல்லை தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
» தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்....
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
» தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம்
» தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை
» தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்....
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
» தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம்
» தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை
Page 2 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|