ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Empty குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி

Post by சிவா Sat 15 Sep 2018 - 4:25

First topic message reminder :

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 1-809810
சிறப்புரை (மு. வரதராசன்)


அரவிந்தன், பூரணி என்னும் இருவரையும் நூலைப் படித்து முடித்துப் பல நாட்கள் ஆன பிறகும் மறக்க முடியவில்லை. கற்பனையில் படைக்கும் மாந்தர்கள் இவ்வாறு கற்பவரின் நெஞ்சில் நெடுங்காலம் நிற்குமாறு செய்ய வல்லவர்களே கற்பனைத் திறன்மிக்க கலைஞர்கள்.

அரவிந்தனும் பூரணியும் எய்தும் இன்ப துன்பங்கள் பல. அவை வீணில் உண்டு உறங்கி வாழும் மக்கள் எய்தும் எளிய இன்ப துன்பங்கள் அல்ல. ஆகவே அவை நம் நெஞ்சை நெக்குருகச் செய்து ஆழ்ந்து நிற்கின்றன.

நாவல் என்பது பொழுதுபோக்குக்கான வெறும் நூலாகவும் அமையலாம். வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்திக் கற்பவரின் உள்ளங்களை உயர்த்தவல்ல இலக்கியமாகவும் அமையலாம். அவ்வாறு விருப்பம் உடையதாக அமையும் போது, அது பழங்காலத்துக் காவியத்துக்கு நிகர் ஆகின்றது. காவியம் என்பது உரைநடை வளராத காலத்தில் செய்யும் வடிவில் அமைந்த கலைச் செல்வம்; நாவல் என்பது உரைநடை வளர்ச்சியால் இவ்வடிவில் அமையும் கலைச் செல்வம். இதுதான் வேறுபாடு.

புலவர் திரு. நா. பார்த்தசாரதி பழந்தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றுணர்ந்தவர். புதுத் தமிழ் இலக்கிய வளர்ச்சியையும் நன்கு அறிந்தவர். ஆதலின் இந்த நாவலை மரபு பிறழாத கலைத் திறனுடன் இயற்றியுள்ளார். குறிஞ்சி மலர் என்ற பெயர் அமைப்பிலும் இந்தத் திறன் புலனாகிறது.

இடையிடையே உள்ள இயற்கை வருணனைகளும், நகரப் பகுதிகளின் விளக்கங்களும் நன்கு அமைந்துள்ளன. இந்த நாவலாசிரியரின் கற்பனைக் கண் பண்பட்டு வளர்ந்துள்ளது. உள்ளத்து உணர்ச்சிகளையும் போராட்டங்களையும் விடாமல் விளக்கியுள்ளதோடு உயர்ந்த மாந்தரின் விழுமிய நோக்கங்களுக்கு ஏற்ப பண்பாடு குன்றாமல் காத்துள்ளார் என்பதும் பாராட்டத்தக்கது. தேர்தல் காலத்தில் நிகழும் காட்டுமிராண்டித் தன்மையான கொடுஞ்செயல்களை இவர் தக்க இடத்தில் எடுத்துக் காட்டியிருப்பது காலத்துக்கு ஏற்ற நல்ல தொண்டு ஆகும்.

'குறிஞ்சி மலர்' வெல்க!

மு. வரதராசன்



குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Empty Re: குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி

Post by சிவா Sat 15 Sep 2018 - 5:01

30



அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் பசுமண்
கலத்துள் நீர்பெய்து இரீஇ யற்று.
-- திருவள்ளுவர்


மதுரைக்கே ஒரு புதிய சுறுசுறுப்புக்களை உண்டாகியிருந்தது. நகரம் முழுவதும் ஏதோ பெரிய போருக்குத் தயாராகிற மாதிரித் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. பழைய காலத்து அரசியல் வெள்ளாற்றுப் போர், தலையாலங்கானத்துப் போர் என்றெல்லாம் போர்கள் நடந்த மாதிரி அடிக்கடி போர்கள் ஏற்பட இன்றைய அரசியலில் வாய்ப்பும் இல்லை; வீரமும் இல்லை. இன்றைய அரசியலில் நாகரிகமாகவும் அழுக்குப் படாமலும் நடக்கிற மௌனமான போராட்டத்துக்குத்தான் தேர்தல் என்று பெயர். மக்களுக்காக அரசர்கள் போட்டியிட்டுப் பகைத்து அடித்துக் கொண்ட போர், பழைய காலத்துப் போர். எவரோ சிலர் தேர்தலுக்கு நிற்க அவர்களுக்காக மக்கள் போட்டியிட்டுப் போரிடும் நாள் இது. பழைய போரில் இருந்ததைக் காட்டிலும் இந்த நாகரிகப் போரில் சூழ்ச்சிகளும், சூதுகளும், வஞ்சனைகளும், புதியனவாகவும், அதிகமானவையாகவும்தான் இருக்கின்றன.

திரைப்படங்களில் சில முகங்களைப் பெரிதாக நெருங்கிய தோற்றத்தில் காட்டும் போது அதிலுள்ள வடுக்களும், பருக்களும் விவரமாகத் தெரிவதுபோல், தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் தொடர்புடையவர்களின் அந்தரங்கமான வடுக்களும், புண்களும் அரவிந்தனுக்கு ஒவ்வொன்றாகத் தெரியத் தொடங்கின. மனிதர்களின் சிறுமைகளும் அற்பத்தனமான ஆசைகளும் புரியப் புரியத் திடீரென்று உலகமும் அதிலுள்ளவர்களும் உள்ளவைகளும் கேலிக்கும் கேவலத்துக்கும் உரிய பொருட்களாக மாறிக் கொண்டு வருவது போல் அச்சம் உண்டாயிற்று அவனுக்கு. ஆனால் நல்லதில் நம்பிக்கையும் நியாயமான முயற்சியும் உள்ளவனுக்கு இந்த அச்சம் தேவையற்றது என அவன் மனச் சான்று அவனுக்கு உரைத்தது. சிறுமைகளையும் சூழ்ச்சிகளையும் கண்டு ஏளனமாகச் சிரித்துவிடுவதோடு சமாளித்துக் கொண்டு போகத் தெரியாவிட்டாலும் உலகம் பகற்பொழுதிலும் இருண்டிருப்பதாகத்தான் தோன்றும்.

முருகானந்தத்தை உதவிக்கு வைத்துக் கொண்டு தேர்தல் ஏற்பாடுகளைத் தொடங்கியபோது அரவிந்தனுக்குப் பலவிதமான அனுபவங்கள் ஏற்படலாயின. இரவு பகல் பாராமல் தேர்தலுக்கு அலைந்து உழைக்க வேண்டியிருந்தது. பர்மாக்காரர் அங்கேயே தேர்தல் அலுவலகங்கள் திறந்து வெளிச்சமாகவும் ஆடம்பரமாகவும் புதுமண்டபத்து மனிதருக்காக விளம்பரங்கள் செய்து கொண்டிருந்தார். தேர்தல் அடையாளங்களாகப் பூரணிக்குத் தாமரைப்பூச் சின்னமும் புது மண்டபத்து மனிதருக்குக் கழுகுச் சின்னமும் அமைந்திருந்தன.

தேர்தல் விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டுவதில்தான் முதன் முதலாகத் தகராறு ஆரம்பமாயிற்று. அரவிந்தன் மனம் கொதித்துக் குமுறும்படியான நிகழ்ச்சி அப்போதுதான் நடந்தது.

மதுரையைப் போன்ற பெரிய நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்குப் பெரும்பாலும் பகல் நேரங்களில் வசதிப்படாது. அதனால் ஒரு நாள் அதிகாலை மூன்று மணிக்கு வாடகைக்குப் பேசின குதிரை வண்டியொன்றில் சுவரொட்டிகளை நிரப்பி, பசை, ஏணி முதலிய கருவிகளோடு பூரணியின் தம்பி திருநாவுக்கரசையும் வேறு சில கூலிக்காரப் பையன்களையும் உடன் அனுப்பினான் அரவிந்தன். பொழுது நன்றாக விடிவதற்குள் முடிந்தவரை சுவரொட்டிகளை ஒட்டி விட்டுத் திரும்பிவிட வேண்டுமென்றும், எஞ்சிய இடங்களில் மறுநாள் இதே நேரத்துக்குப் போய் ஒட்ட வேண்டுமென்றும் ஏற்பாடு. கூலிக்காரப் பையன்களுக்கு முக்கியமான இடங்களைக் காட்டி ஒட்டச் செய்யவும் அவர்கள் சுவரொட்டிகளைத் திருடிக் கொண்டு போய் வீசைக் கணக்கில் விலைக்கு நிறுத்துவிடாமல் கவனித்துக் கொள்ளவுமே திருநாவுக்கரசை உடன் அனுப்பியிருந்தான் அரவிந்தன்.

அரவிந்தன் இரவில் அதிக நேரம் கண் விழிக்க நேரும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இருள் புலருமுன்பே எழுந்திருந்து நீராடிக் காலை வழக்கங்களை முடித்துக் கொண்டு தூய்மையடைந்து விடுவான். நீராடி உடை மாற்றிக் கொண்டு அச்சகத்து முன் அறையில் ஊதுவத்திகளைப் பொருத்திவிட்டு அந்த நறுமணச் சூழலில் அமர்ந்து எப்போதும் தன்னை விட்டுப் பிரியாமலிருக்கும் சின்னஞ்சிறு திருக்குறள் புத்தகத்தை எடுத்துச் சிறிது நேரம் ஆழ்ந்து படிப்பான். குறள் படித்து மனத்தில் தூய எண்ணங்களை வளர்த்துக் கொண்டபின் தன்னுடைய கவிதை நோட்டுப் புத்தகத்தையும், டைரியையும் எடுத்து அப்போதுள்ள துறுதுறுப்பான எண்ணங்களில், எழுச்சியில் எவையேனும் கவிதைகளோ, புதிய சிந்தனைகளோ தோன்றினால் அவற்றை எழுதுவான். ஒவ்வொரு நாளும் இந்த விடியல் நேரத்துக்கு அவன் வாழ்வில் தனிச்சிறப்பு உண்டு. காலை நாலரை மணியிலிருந்து ஏழு மணி வரை உள்ள நேரம் தான் மனிதனுடைய இதயத்தில் மங்கலமும் தூய்மையும், இறைமையும் கனிவிக்கின்ற நேரமாகும் என்று கருதினான் அரவிந்தன். அந்த வைகறையில் தான் பூக்கள் இதழ் விரிக்கின்றன. கோவில்களுக்குள்ளிருந்து வைகறை மேளமும், மணியும் ஒலிக்கின்றன. உலகத்துக்கு எல்லாம் அமைந்து அடங்கிய சாந்தமே தேவை என்று நினைவூட்டுவது போல் வெம்மை சிறிது மற்றதொரு பூங்குளிர் பொலியும் நேரமும் இந்த வைகறைதான். தன்னுடைய வாழ்க்கையைப் பண்படுத்தி ஒழுங்காக்கிய பழக்கங்களுள் வைகறைத் துயிலெழும் பழக்கமும் ஒன்று என்பதை அரவிந்தன் நன்கு உணர்ந்திருந்தான்.

விடிகிற நேரமாகாவிடினும் அன்று சுவரொட்டிகளை வண்டியில் ஏற்றி அனுப்பியவுடனேயே பல் விளக்கிவிட்டு நீராடச் சென்றுவிட்டான் அரவிந்தன். குறள் படித்துவிட்டு அவன் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தபோதே எதிர்புறத்து சுவரில் அட்டையில் ஒட்டித் தொங்கவிடப்பட்டிருந்த பூரணியின் தேர்தல் சின்னமான தாமரைப்பூ அவன் கண்களில் தென்பட்டது. 'இந்த நேரத்துக்கு இலங்கையின் எந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறாளோ?' என்று பூரணியைப் பற்றி நினைத்தான் அவன். எதிரே தெரிந்த வண்ணச் சுவரொட்டியில் இருந்த பெரிய தாமரைப் பூச்சின்னம் அப்படியே அந்தப் புலர்காலை மெல்லிருளில் சிறிது சிறிதாய் மாறி மறைந்து பூரணியின் முகமாகத் தோன்றிப் பேரின்பப் புன்னகை புரிவது போல் அரவிந்தன் கண்களுக்குக் காட்சியளித்தது. முழுமதியில் கருநாவற்கனி பதித்தாற் போன்ற அந்த முகமும் கண்களும் நினைவுக்கு வந்தபோது முன்னும் பின்னும் தொடர்பு இன்றி ஒரே ஒரு கவித்தொடர் மட்டும் அவனுடைய நாவில் சொற்களாகத் துடித்தது. 'நீலங்குழைத்து நீட்டிப் பின் நிலவிற் பதித்த நாவற்பழம்' என்ற இந்த அழகிய தொடரை அவன் எழுதிக் கொண்டான். திடீரென்று கற்பனைக் கதவு திறந்து கொண்டு தானாக வந்து குதித்த இந்த ஒரு வரியை முழுக் கவிதையாக நிறைவு செய்யும் சிந்தனையில் கவிதா ஆவேசத்தை வரவழைத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தான் அரவிந்தன். மனத்தில் மண்ணுலகின் பாமர நினைவுகளே இல்லாத நிலை. அப்போது "ஐயா! பாவிப்பயலுக அடிச்சுப் போட்டுட்டு ஓடிவிட்டானுங்க..." என்று அலறிக்கொண்டே உள்ளே ஓடி வந்த குதிரை வண்டிக்காரன், அவனுடைய கவிதா வேகத்தைக் கலைத்து மண்ணுலகத்து நினைவுக்குக் கொண்டு வந்தான். திகைப்போடு வாயிற்புறம் எழுந்து ஓடிப்போய் அங்கு நின்றுகொண்டிருந்த குதிரை வண்டிக்குள் எட்டிப் பார்த்தான் அரவிந்தன். அடிப்பட்டு மயங்கிய நிலையில் துவண்டு வண்டிக்குள் கிடந்தான் திருநாவுக்கரசு. கொண்டு போன சுவரொட்டிகளில் ஒன்று கூட வண்டிக்குள் இல்லை. ஏணியும் இல்லை. பசையும் இல்லை.

"ஐயா! வைகைப் பாலத்துப் பக்கம் ஓர் இடத்திலே நம்ம ஆளுங்க சுவரில் ஒட்டிக்கிட்டிருந்தப்போ தற்செயலா வருகிறாப்போலக் கழுகுப்பெட்டி ஆளுங்க நம்ம பையன்கள் ஒட்டின நோட்டீசு மேலேயே கழுகுப்பெட்டி நோட்டீசை ஒட்டினாங்க. நம்ம பையன்களும் இந்தத் தம்பியும், 'நீங்களும் ஒட்டனுமுன்னாப் பக்கத்தில் ஒட்டுங்க, மேலே ஒட்டி எங்க நோட்டீசை மறைக்கிறது நியாயமில்லே'ன்னு அந்த ஆளுங்களோட வாதாடினாங்க. 'மகா நியாயத்தை கண்டவங்க தாண்டா! மரியாதையா ஓடிப்போறீங்களா? உதை வேணுமா'ன்னு கழுகுப்பெட்டி ஆளுங்க நம்ம பையன்களை மூக்கு முகம் பாராமே அடிக்கத் தொடங்கினாங்க. அடி தாங்க முடியாமல் கூலிக்கு வந்த பையன்க மூலைக்கு ஒருத்தனா பிச்சுக்கிட்டு ஓடிட்டாங்க. இந்தத் தம்பிதான் கடைசிவரை நின்று அவர்களை எதிர்த்தது. அவங்க அத்தனை பேரும் முரடங்க. செம்மையா அடிச்சுப் போட்டுட்டுப் பசை, நோட்டீசு, ஏணி எல்லாம் பிடுங்கிக்கிட்டு ஓடிப்போயிட்டாங்க. நடுவிலே புகுந்து தடுத்ததிலே எனக்குக்கூட நாலஞ்சு அடிங்க. ஊரே கெட்டுப் போய்க் கிடக்குதுங்க. நல்லவனுக்கே காலமில்லே" என்று மூச்சுவிட இடைவெளியின்றிக் கூறி முடித்தான் குதிரை வண்டிக்காரன். ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றாண்மையும், சாந்த குணமும் உள்ளவனான அரவிந்தனுக்கே அதைக் கேட்டதும் இரத்தம் கொதித்தது. உடனே ஓடிப்போய் என்னென்னவோ செய்துவிட வேண்டும் போல நரம்புகள் முறுக்கேறித் துடித்தன. உணர்ச்சி வசப்பட்டால் காரியம் கெட்டுவிடும் என்று தன்னடக்கமாக நடந்து கொண்டான். குதிரை வண்டிக்காரன் உதவியுடன் திருநாவுக்கரசை வண்டியிலிருந்து உள்ளே தூக்கிக் கொண்டு போய்க் கிடத்தினான். திருநாவுக்கரசுக்கு முதலுதவி செய்து பிரக்ஞை வரவழைத்துச் சிறுசிறு காயங்களுக்கு மருந்து போட்டு முடிக்க ஒரு மணி நேரம் கழிந்தது. அதற்குள் ஏறக்குறையப் பொழுது நன்றாக விடிந்து தெருவில் ஆள் நடமாட்டம் ஆகியிருந்தது. அதுவரையில் குதிரை வண்டிக்காரனை இருக்கச் சொல்லியிருந்தான் அரவிந்தன். அடிப்பதற்கு வந்த ஆட்களில் எவரையாவது அடையாளம் சொல்லச் சொன்னான். அவன் கூறிய அடையாளங்களிலிருந்து அந்த மனிதன் அன்று பர்மாக்காரர் மாளிகையில் அவருடைய ஏவுதல் பெற்றுத் தன்னை அடிக்க வந்த முரடனாகத்தான் இருக்க வேண்டும் என்று அனுமானம் செய்து கொள்ள முடிந்தது அரவிந்தனால். அவன் உள்ளம் அவரைப் பற்றி எண்ணிக் குமுறியது.

'இந்தப் பர்மாக்கார மனிதர் தம்முடைய மனத்தில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். கெடுதல் செய்வதற்கும் ஒரு எல்லை கிடையாதா என்ன! எவ்வளவு தான் பொறுத்துக் கொள்ள முடியும்! பச்சை மண் குடத்தில் தண்ணீர் நிரப்பி ஏமாற்ற முயல்கிற மாதிரி சூழ்ச்சியில் வளர்ந்த செல்வம் எத்தனை நாள் உடையாமல் இவர் திமிரை வளர்க்கப் போகிறது?'

'துணிவாக அவருக்கு முன்னால் போய் நின்று கொண்டு நீங்கள் மனத்தில் என்ன நினைத்துக் கொண்டு இதெல்லாம் செய்கிறீர்கள்? அடி உதைகளுக்கு ஆட்களை ஏவிப் பயமுறுத்தினால் நாங்கள் தைரியம் இழந்து விடுவோம் என்றுதானே? அப்படி பயந்து கொண்டு பூரணியின் தேர்தல் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்று உங்களுக்குப் போட்டியின்றி விட்டுவிடுவோம் என்று சொப்பனத்தில் கூட நீங்கள் நினைக்க வேண்டாம். நீங்கள் போடுகிற விளம்பர வெளிச்சங்கள் எல்லாம் இல்லாமல் சத்தியத்தின் பலத்திலேயே வெற்றி பெற எங்களால் முடியும். தயவு செய்து இனிமேலாவது அந்த மாதிரியான அசட்டுத்தனங்களை நிறுத்திவிட்டுப் பெருந்தன்மையாக நடந்து கொள்ளப் பாருங்கள்' என்று சொல்லிச் சாடிவிட்டு வந்துவிட வேண்டும் போல் துடிப்பு உண்டாயிற்று. 'ஊரிலுள்ள நல்ல மனிதர்கள் எல்லாம் ஏழையாகிக் கொண்டிருக்கும் போது கெட்ட மனம் படைத்த இந்த மனிதர்கள் செல்வம் மட்டும் குன்றாமல் பெருகித் தீமைகளை குன்று போல் வளர்க்கிறதே என்றும் அரவிந்தன் மனம் வருந்தியது. அப்போது, திடீரென்று ஒரு தீர்மானத்துக்கு வந்தது போல் அவன் முகபாவம் மாறியது. அச்சகத்தைப் பார்த்துக் கொள்ளும்படி ஊழியர்களிடம் கூறிவிட்டுப் புறப்பட்டான்.


குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Empty Re: குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி

Post by சிவா Sat 15 Sep 2018 - 5:02


"பர்மாக்காரர் எஸ்டேட் வரையில் வருவாயா?" என்று வண்டிக்காரனிடம் வினவினான்.

"அவ்வளவு தூரம் வண்டியில் போய்த் திரும்ப நேரம் ஆகுங்களே?" என்று வண்டிக்காரன் இழுத்தான்.

"பரவாயில்லை. போய் வரலாம் புறப்படு!" என்று கூறிவிட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்தான் அரவிந்தன். வண்டி புறப்பட்டு விட்டது.

அன்று மங்களேசுவரி அம்மாளின் இளைய பெண் செல்லத்துக்குப் பிறந்தநாள். அதற்காக அரவிந்தனை விருந்துச் சாப்பாட்டுக்கு அழைத்துக் கொண்டு போகலாம் என்று வசந்தாவும் முருகானந்தமும் அச்சகத்துக்குத் தேடிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் தேடிக்கொண்டு வரும்போது பகல் பதினொரு மணிக்குமேல் இருக்கும். அப்போதும் அரவிந்தன் திரும்பி வந்து சேரவில்லை. முதல் நாள் இரவு பன்னிரண்டு மணிவரை அரவிந்தனுடன் முருகானந்தமும் அச்சகத்தில் தான் இருந்தான். அப்போதே மறுநாள் 'செல்லத்தின் பிறந்த தின விருந்துக்கு வர வேண்டும்' என்று அரவிந்தனிடம் சொல்லியிருந்தான். அப்படிக் கூறியிருந்தும், அரவிந்தன் அதை மறந்து எங்கே போயிருப்பான்? என்று முருகானந்தமும் திகைத்தான். அந்தச் சமயத்தில் அச்சகத்து ஊழியன் வந்து உள்ளே திருநாவுக்கரசு படுத்திருப்பதைச் சொன்னான். பிளாஸ்திரி ஒட்டும் துணிக்கட்டுமாகப் பரிதாபப்படத்தக்க நிலையில் படுத்துக் கிடந்த திருநாவுக்கரசைக் கண்டதும் முருகானந்தத்துக்கே முக்கால் பகுதி என்ன நடந்திருக்க வேண்டும் என்று புரிந்து விட்டது. மீதிக் கால் பகுதி விவரம் திருநாவுக்கரசு கூறிவிட்டான்.

"வசந்தா! நீ வீட்டுக்குப் போ. இங்கே ஏதோ கோளாறு நடந்திருக்கிறது. அரவிந்தன் வந்ததும் நான் சாப்பிடுவதற்கு அழைத்துக் கொண்டு வருகிறேன்" என்று கூறி மனைவியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அச்சகத்தில் தங்கிக் காத்திருந்தான் முருகானந்தம். 'நேற்றிரவே சொன்னேன். இந்த அரவிந்தன் கேட்டால்தானே? நானே அச்சகத்தில் படுத்திருந்து காலையில் சுவரொட்டி ஏற்பாடுகளைக் கவனித்துவிட்டு அப்புறம் வீட்டுக்குப் போகிறேன்' என்று மன்றாடினேன். 'கல்யாணம் ஆவதற்கு முன் அதெல்லாம் சரி, நீ பாட்டுக்கு எங்கேயாவது பொதுக் கூட்டத்தில் பேசி விட்டு அதே மேடையில் கூட்டம் கலைந்ததும் மேல் துண்டை விரித்துப் படுத்துத் தூங்கி விட்டுக் காலையில் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து வருவாய்? இனிமேல் அதெல்லாம் பலிக்காது, தம்பி! மரியாதையாக வீட்டுக்குப் போய்ச் சேர். வசந்தாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதே!' என்று வாயால் அடித்து என்னை வீட்டுக்குத் துரத்தி விட்டான் என்று முதல் நாள் நடந்ததையெல்லாம் எண்ணி முருகானந்தம் வருந்தினான்.

சின்னப் பையன்களாகப் போனதினால்தானே ஏணியையும் பசையையும் பறித்துக் கொண்டு அடித்துத் துரத்தி விட்டார்கள். நான் போயிருந்தால் தெரியும்? அத்தனை 'கழுகுகளையும் கையை முறித்து அனுப்பியிருப்பேன்!' என்று எண்ணிக் கொதித்தான்.

பகல் மணி பன்னிரண்டு. அரவிந்தன் இன்னும் திரும்பி வந்து சேரவில்லை. வீட்டிலிருந்து செல்லம், மங்கையர்க்கரசி, சம்பந்தன் மூன்று பேரையும் துரத்தியிருந்தாள் வசந்தா. "அக்கா உங்களையும் அரவிந்தன் மாமாவையும் சாப்பிடக் கூட்டி வரச் சொன்னாங்க" என்று அவர்கள் வந்து கூப்பிட்ட போது, 'அரவிந்தன் வந்ததும் கூட்டிக் கொண்டு வருகிறேன். பசித்தால் நீங்கள் எல்லாரும் முதலில் சாப்பிடுங்கள்' என்று பதில் கூறி அனுப்பினான் முருகானந்தம். ஒரு மணி சுமாருக்கு அச்சகத்து வாயிலில் குதிரை வண்டி வந்து நின்றது. முருகானந்தம் ஆவலோடு எழுந்து ஓடினான். அதே வண்டிதான். அவர்களுக்கெல்லாம் பழக்கமான அதே வண்டிக்காரன் தான். முகமலர்ச்சியோடு போய்ப் பார்த்தான் முருகானந்தம்.

ஆனால் என்ன ஏமாற்றம்! வண்டிதான் வந்திருக்கிறது. வண்டிக்குள் யாரும் வரவில்லை. வண்டிக்காரன் முகம் கெட்ட சொப்பனம் கண்டு பயந்தது போல் இருந்தது. "ஐயா! ஒன்பது மணிக்கு வண்டியிலிருந்து இறங்கிப் போனவரு. பத்து நிமிஷத்திலே திரும்பி விடுவேன். நீ இருன்னுட்டு போனாரு. நானும் பதினொண்ணரை வரை காத்துப் பார்த்தேன். இவரு திரும்பவில்லை. எனக்கு என்னென்னமோ சந்தேகமாயிடிச்சி. வண்டியிலேயிருந்து இறங்கி உள்ளே போறப்போ கோபமாய் போனாரு. எனக்கு அந்தத் தோட்டத்தையும் பேய் குடியிருக்கிறாற் போலத் தனியாகப் பெரிய அரண்மனை மாதிரி மாளிகையும் பார்க்கவே நல்லாப் படலீங்க. பயந்துக்கிட்டே உள்ளே போய், 'வண்டியிலே சவாரி வந்தவரு இன்னும் திரும்பவில்லை. திரும்பி வருவேன், இருன்னாரு. நான் போவலாமான்னு கேட்கணும்'னேன். அங்கு நிற்கவே விடாம துரத்தியடிச்சாங்க. அந்தப் பங்களா வாசல்லே ஒரு தடி ஆளு நின்னான். அவனைப் பார்த்தா நேத்து ராத்திரி நம்ம ஆளுகளை அடிக்க வந்தவன் மாதிரி இருந்ததுங்க" என்று ஒடுங்கிய குரலில் முருகானந்தத்திடம் கூறினான் வண்டிக்காரன்.

அதைக் கேட்கக் கேட்க முருகானந்தத்தின் முகம் கடுமையாகிக் கொண்டு வந்தது. அவனது கைவிரல்கள் குவித்து யாரையோ பலமாகக் குத்தப் போகிற மாதிரி முட்டி எலும்புகளும் மணிக்கட்டும் நரம்புகளும் புடைத்துத் தோன்றின. "அப்படியா சேதி! பர்மாக்காரப் பயலுக்கு அத்தனை துணிச்சலா! பார்க்கிறேன் ஒரு கை" என்று கூறி விட்டு மடக்கிக் குவித்த வலது கையை இடது உள்ளங்கையில் ஓங்கிக் குத்திக் கொண்டான் முருகானந்தம். அப்போது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் சினத்தோடு வசந்தா காரில் வந்து இறங்கினாள். "நீங்க இருவரும் சாப்பிட வரப் போகிறீர்களா இல்லையா?" என்று அரவிந்தனும் அங்கே இருப்பதாகவே நினைத்துக் கொண்டு கேட்டாள் வசந்தா.

"சாப்பிடுவதைவிட முக்கியமான காரியம் எல்லாம் இருக்கிறது இப்போது! தொந்தரவு செய்யாமல் வீட்டுக்குப் போய்ச் சேர்!" அவளிடம் எரிந்து விழுந்தான் அவன். அவள் பதில் பேசாமல் திரும்பிவிட்டாள். முருகானந்தம் தன்னுடைய தையற்கடைக்கு விரைந்தான். பொன்னகரம், அழகரடி ஆகிய பகுதிகளில் உள்ள குஸ்திப் பள்ளிக்கூடங்களையும் பயில்வான்களையும் முருகானந்தத்துக்குத் தெரியும். அவனுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள் அவர்கள். தனது தையற்கடையிலுள்ள நம்பிக்கையான பையன் ஒருவனைக் கூப்பிட்டு அழகரடிக்கும், பொன்னகரத்துக்கும் சொல்லி அனுப்பினான் முருகானந்தம். அடி உதைகளில் இறங்கிக் கலவரம் விளைவிப்பது அரவிந்தனுக்குப் பிடிக்காத காரியம் என்பதை முருகானந்தம் அறிவான். ஆனால் அறத்தையும் நேர்மையையும் பற்றி வாய் ஓயாது பிதற்றிக் கொண்டிருக்கும் அரவிந்தனே கொடுமையின் வஞ்சகக் கூண்டில் மாட்டிக் கொண்டு கிடக்கும் போது வேறென்ன செய்ய முடியும்? 'முற்றிலும் கருணையாலேயே வாழ்வதற்கு இன்றைய உலகில் முடியாது. கருணை காட்ட வேண்டிய இடத்தில் தான் கருணை காண்பிக்க வேண்டும். இல்லாத இடத்தில் கன்னத்தில் அறைந்துதான் ஆக வேண்டும்' எனத் தனது வழக்கமான உணர்ச்சித் துடிப்பே முருகானந்தத்தின் மனத்தில் அப்போது விஞ்சி நின்றது. அரவிந்தன் பர்மாக்காரரிடம் அகப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதைச் சந்தேகமில்லாமல் நம்பினான் அவன். ஆளையே எங்காவது கடத்திக் கொண்டு போய்ச் சிறை வைத்துக் கொண்டு தேர்தல் முடிகிற வரை வெளியே விடாமல் இருக்கவும் பர்மாக்காரர் தயங்க மாட்டார் என்பது அவனுக்குப் புரிந்தது. அவருடைய கடந்த கால அரசியல் வரலாறுகளில் அப்படி நடந்த சூழ்ச்சிகள் ஏராளமாயிற்றே!

மாலை மூன்று மணிக்குள் மல்யுத்தத்துக்காகக் கூடினவர்கள் போல ஐந்தாறு முரட்டு ஆட்கள் முருகானந்தத்தின் தையல் கடையில் கூடிவிட்டார்கள்.

"நம்ப பையன் மேலே எவண்டா கை வைச்சான்? சொல்லு! அப்படியே 'எலும்பு மார்க் பல்பொடி' தயார் பண்ணி விடுகிறேன்" என்று முண்டாவை மடக்கிக் கொண்டு முருகானந்தத்திடம் கேட்டான் பெரிய பயில்வான். உடல் வலிமைமிக்க அந்தத் தோழர்களையெல்லாம் சுற்றி உட்கார வைத்துக் கொண்டு நடந்ததை விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்தான் முருகானந்தம்.

அந்த நேரத்தில் தொள தொளவென ஜிப்பா அணிந்து கொண்ட தோற்றத்தோடு கையில் தோல்பை ஏந்திய நெட்டை மனிதர் ஒருவர் தையற்கடைக்குள் படியேறி நுழைந்தார். தோல் பையின் நடுவில் மைக்கா உறையில் ஆர்.எஸ். பாண்டியன், நிருபர், 'தினச்சுடர்' என்று பளிச்சென்று அச்சிட்ட அட்டை வைத்திருந்தது. "என்னப்பா முருகானந்தம்! ஜிப்பா தைக்கத் துணி வாங்கிக் கொடுத்து ஒரு வாரம் ஆகிறது? உன் ஆட்கள் இன்னும் தைத்துக் கொடுத்த பாடில்லை! கல்யாணம் ஆனபின் உன்னைப் பார்ப்பதே அத்திப் பூத்த மாதிரி இருக்கிறதே!" வெற்றிலைச் சாறு வாயில் நிறைந்திருந்ததனால் குழறிக் கொண்டே பேசினார் நிருபர். முருகானந்தம் அவரை வரவேற்றான்.

"வாருங்கள் பாண்டியன் சார். ஜிப்பா சாயங்காலம் ஆறு மணிக்குள் தயாராகிவிடும்.

"உள்ளே வருவதற்கே பயமாயிருக்கிறது அப்பா! ஒரே பயில்வான்களாகக் கூட்டி வைத்துக் கொண்டு ஏதோ மல்லர்கள் மகாநாடு நடத்துகிறாய் போலிருக்கிறது!"

"அதெல்லாம் ஒன்றும் பயப்பட வேண்டிய விஷயமில்லை. வந்து உட்காருங்கள் நிருபர் சார்! உங்களுக்குத் தெரிய வேண்டிய சமாச்சாரம் தான்."

நிருபர் பாண்டியன் சட்டைப் பையிலிருந்து புகையிலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்து ஒரு கொத்து அள்ளி உள்ளே தள்ளிவிட்டு முருகானந்தத்துக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டார். எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

"சும்மா விட்டுவிட மாட்டேன், நிருபர் சார். இந்தப் பயல்கள் வாலை ஒட்ட நறுக்கப் போகிறேன்" என்று முத்தாய்ப்புடன் முடித்தான் முருகானந்தம். நிருபர் பாண்டியன் சிரித்தார். "கொஞ்சம் இப்படித் தனியே வா முருகானந்தம். உனக்கு நான் ஒன்று சொல்ல வேண்டும்" என்று அவனைக் கைப்பற்றி எழுப்பி தையற்கடையில் ஒரு மூலைக்கு அழைத்துக் கொண்டு போனார்.

"சுத்த அசட்டுப் பிள்ளையாக இருக்கிறாயே அப்பா? தும்பை விட்டு வாலை பிடிப்பதால் பலன் கிடையாது. பர்மாக்காரர் எந்த முரட்டுத்தனத்தைத் துணிந்து கடைப்பிடித்ததனால் குற்றவாளியாகிறாரோ அதே முரட்டுத்தனத்தைத் தானே நீயும் பதிலுக்குக் கையாள முற்படுகிறாய். நீயும் அதையே செய்வதால் உன் பக்கம் எப்படி நியாயம் இருக்கும்! பெரிய மனிதர்கள் எது செய்தாலும் போலீசில் மாட்டிக் கொள்ள இடமின்றிப் பத்திரமாகச் செய்வார்கள். நீ முரட்டுத்தனமாக எதையாவது செய்தால் மாட்டிக் கொள்வாய். அதனால் அரவிந்தனுக்கும் பூரணிக்கும் பேர் கெட்டுப் போகும். தொடர்ந்து கெடுதல்களாகவே செய்து கொண்டிருப்பவர்கள் செய்யும் வஞ்சக வினைகள் விளம்பரம் பெறாது. நீங்கள் என்றும் இதுமாதிரி வம்பு வழிகளுக்குப் போகாதவர்கள், திடீரென்று இன்று போனால் பெரிதாக விளம்பரமாகிவிடும். பத்திரிகையில் பெரிதாக வரும். இதையே துஷ்பிரச்சாரம் செய்வார் பர்மாக்காரர். பரம சாதுவான அரவிந்தனையும் தூய்மையே உருவான பூரணியையும், உன் செயல்களால் மக்கள் சந்தேகமுறும்படி செய்து விடாதே! இந்த நல்ல நேரத்தில் சிறிது இழிவு வந்தாலும் தேர்தலில் பூரணியைப் பாதிக்கும். அரவிந்தனை மீட்க நான் ஒரு வழி சொல்கிறேன். அது படி செய்" என்றார் பாண்டியன்.

"என்ன வழி சொல்லுங்க" என்று கேட்டான் முருகானந்தம்.

"எங்கள் பத்திரிகையில் மதுரைச் செய்திகள் என்ற பகுதிக்கு நியூஸ் சேகரிக்க வேண்டியது என் பொறுப்பு என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? நாளை பேப்பரில் என் பகுதியில் ஒரு கால் பகுதிக்கு நியூஸே இதுவரை கிடைக்கவில்லை. பேசாமல் ஓடிப்போய் போலீசில் கம்ப்ளெய்ண்ட் செய்துவிட்டு, என்னிடம் ஒரு செய்தி அறிக்கை மாதிரி எழுதிக் கொடு. பர்மாக்காரர் போன்ற பெரிய மனிதர்கள் தங்களைப் பற்றிப் பேப்பரில் தாறுமாறாக வரக்கூடாதே என்பதற்காகச் சதாகாலமும் பயந்து கொண்டிருப்பார்களே ஒழிய, அடி, உதை, கலவரங்களுக்கு அவ்வளவாக அயர மாட்டார்கள். அயோக்கியத்தனங்கள் செய்யப் பயப்பட மாட்டார். இந்த நியூஸ் வந்த மறு நாழிகை அரவிந்தன் திரும்பிவராவிட்டால் என்னை ஏனென்று கேள். கால் பத்தி இடத்திலும் பிரமாதமாகத் தலைப்புக் கட்டிப் போட்டு விடுகிறேன். நான் சொல்லுகிறபடி செய்!" என்றார் நிருபர் பாண்டியன்.

அவர் கூறுவதில் நியாயம் இருப்பதாகவே முருகானந்தத்துக்குத் தோன்றியது. அப்படியே செய்தான். ஆனால் மீண்டும் அன்றிரவே பழைய மாதிரி வம்பு வந்து


குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Empty Re: குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி

Post by சிவா Sat 15 Sep 2018 - 5:02

31



யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ என்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலவே...
-- புறநானூறு


இரவு மூன்று மணி ஆவதற்கு இருந்தது. மதுரை நகரத்து வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. எப்போதாவது ஓசையெழுப்பிக் கொண்டு போகும் லாரி அல்லது வேறு வாகங்கள் தவிர ஒலியவிந்து கிடந்தன பெரிய வீதிகள். அந்த நேரத்தில் மீனாட்சி அச்சகத்தில் விளக்கு எரிந்தது. வாயிலில் இரண்டு குதிரை வண்டிகள் நின்றன.

ஒரு குதிரை வண்டியில் சுவரொட்டிகள், பசை, ஏணி ஆகிய பொருட்களை நிரப்பிவிட்டு முருகானந்தமும் உடன் ஏறிக் கொண்டான். மற்றொரு குதிரை வண்டியில் முருகானந்தத்தின் பயில்வான் நண்பர்கள் ஏறிக்கொண்டார்கள். முந்திய நாளிரவு எந்த இடத்தில் சுவரொட்டிகள் ஒட்டும் போது திருநாவுக்கரசையும் அவனோடு சென்ற கூலிக்கார பையன்களையும் பர்மாக்காரரின் ஆட்கள் வம்பு செய்து அடித்துத் துரத்தினார்களோ, அதே இடத்துக்குத்தான் இன்றும் வண்டிகளைச் செலுத்தச் சொல்லிப் புறப்பட்டிருந்தான் முருகானந்தம் பர்மாக்காரரைச் சந்தித்து நியாயம் கேட்கப் போன அரவிந்தன் திரும்பவில்லை என்று தெரிந்ததுமே, உடல் வலிமை மிக்க தனது முரட்டு நண்பர்களோடு நேருக்கு நேர் அவரிடம் போய் வம்போ, கலவரமோ அடிதடியோ எது நேர்ந்தாலும் சமாளித்து வென்று அரவிந்தனை மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்றுதான் அவன் துணிந்தான். ஆனால் அந்தத் துணிவையும் வேகத்தையும் நெருங்கிய நண்பரான நிருபர் பாண்டியன் வேறுவிதமாக மாற்றிவிட்டார். பாண்டியன் கூறிய காரணங்களுக்காகத் தன் ஆத்திரத்தைத் தணித்துக் கொண்டாலும் சுவரொட்டிகள் ஒட்டுவது பற்றி எதிரிகள் தொடர்ந்து வம்புக்கு வருகிறார்களா? என்பதைச் சோதனை செய்து தெரிந்து கொள்ள விரும்பினான். அதனால் தான் சம்பவம் நடந்த அதே பகுதியில் சுவரொட்டியை ஒட்டிப் பார்க்கலாம் என்ற திட்டத்துடனும், முன்னேற்பாட்டுடனும் கிளம்பியிருந்தான்.

குறிப்பிட்ட பகுதியை அடைந்ததும் நண்பர்கள் இருந்த வண்டியைத் தெருத் திருப்பத்தில் இருள் மறைவில் மிக அருகே நிறுத்திவிட்டுத் தான் இருந்த வண்டியை மட்டும் தெருவுக்குள் விட்டுக் கொண்டு சென்றான். பர்மாக்காரரின் அடி ஆளான முரடனும் அவனைச் சேர்ந்த கைக்கூலிப் பட்டாளமும் வாழ்கிற தெரு அது. நள்ளிரவில் அமைதி பயங்கரமாகக் கவிழ்ந்திருந்தது. தெரு நடுவில் மின்விளக்கு வெளிச்சம் சிறிது பரவியிருந்த ஓரிடத்தில் சுவரருகே வண்டியை நிறுத்தச் சொன்னான் முருகானந்தம். வண்டி நின்றதும் ஏணியை எடுத்துக் ஒண்டு கீழே இறங்கிச் சுவரில் சாத்தினான். சுவரொட்டியில் பசை தடவி எடுத்துக் கொடுக்க வேண்டுமென்று வண்டிக்காரனிடம் சொல்லிவிட்டு ஏணியில் ஏறினான்.

ஒரு தடையும் இல்லாமல் நான்கு ஐந்து இடங்களில் பூரணியின் தாமரைப் பூச்சின்னம் மின்னும் சுவரொட்டிகளை ஒட்டியாயிற்று. ஆறாவது சுவரொட்டியை ஒட்டுவதற்காக அவன் ஏணியில் ஏறிக் கொண்டிருந்த போதுதான் "டேய்! எவன்டா அது! ஏணியோட கீழே தள்ளிக் காலை முறியடா, சொல்கிறேன்" என்று கலகக் குரல் எழுப்பிக் கொண்டு வந்து சேர்ந்தது கழுகுச் சின்னத்துக் கைக்கூலிப்படை. முருகானந்தம் சிறிதும் அதிர்ச்சியடையாத குரலில் "இருங்கப்பா, இதை ஒட்டிவிட்டு வருகிறேன். அதற்கப்புறம் நீங்கள் காலை முறிக்கலாம்!" என்று சிரித்துக் கொண்டே கூறியவாறு கையில் வாங்கிய சுவரொட்டியை நிதானமாக ஒட்டிவிட்டு வாயிதழ்களைக் குவித்துப் பெரியதாகச் சீழ்க்கை ஒலி எழுப்பினான். அந்த இரவின் அமைதியில் முருகானந்தத்தின் சீழ்க்கை ஒலி அடங்கி ஓய்வதற்குள் பாய்ந்து வந்தது, தெருத்திருப்பத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு குதிரை வண்டி.

அதன் பின் நிகழ்ந்ததை இங்கு விவரிக்க வேண்டாம். கழுகுச் சின்னம் ஆட்களுக்குச் செம்மையாக வேண்டிய மட்டும் குறைவின்றிப் பூசைக் காப்புக் கொடுத்து அனுப்பினார்கள். அந்த கும்பலில் ஓர் ஆள் மட்டும் தப்பி ஓட முடியாமல் முருகானந்தத்திடம் சிக்கிக் கொண்டான். "வன்முறைச் செயல்களில் தான் இறங்கினால் அரவிந்தனுக்கோ பூரணிக்கோ அதனால் பெருமை குறை நேரிடலாம்" என்று நிருபர் பாண்டியன் எச்சரித்திருந்ததெல்லாம் உணர்வு மயமான அந்த நேரத்தில் முருகானந்தத்துக்கு மறந்தே போய்விட்டது. கழுகுச் சின்னம் ஆட்களில் தப்பி ஓடினவர்களைத் தவிர அகப்பட்டுக் கொண்ட ஒருவனை நான்கு மணியிலிருந்து ஐந்து மணி வரை கசக்கிப் பிழிந்து பயமுறுத்தியும் துன்புறுத்தியும் பார்த்ததில் அவன் அவர்களுக்கு ஒரு முக்கியமான ரகசிய உண்மையைச் சொல்லிவிட்டான். சொல்லும் நிலைமைக்கு அவனைக் கொண்டு வந்துவிட்டார்கள் அவர்கள். விடிந்தால் நிருபர் பாண்டியன் கேட்டு வாங்கிச் சென்றிருந்த செய்தி பத்திரிகையில் வந்துவிடும். அந்தச் செய்தியைப் பார்த்தே தன் குட்டு வெளியாகிவிடுமோ என்று பயந்து பர்மாக்காரர் தாமாகவே அரவிந்தனை அனுப்பிவிடுவார் என்று பாண்டியன் கூறியிருந்தார்.

ஆனால் விடியுமுன்பே அரவிந்தனைக் கண்டுபிடித்து அழைத்துச் செல்லும் நல்வாய்ப்பை அவர்களுக்கு உண்டாக்கித் தந்துவிட்டான் அகப்பட்டுக்கொண்ட கோழை மனிதன்.

வைகை நதியின் கரையில் செல்லூர் திருவாய்ப்புடையார் கோவில் தெருவில் புது மண்டபத்து மனிதர் புத்தகங்களை 'ஸ்டாக்' வைத்திருந்த கிடங்கு ஒன்று உண்டு. பெரிய மாடி வீடு அது. புது மண்டபத்துக் கடை சிறிதாதலால் ஏராளமான அச்சடித்த பழைய புதிய புத்தகங்களை ஸ்டாக் வைக்கத் தமது செல்லூர் வீட்டைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். புது மண்டபத்து மனிதர் வீடும் தனியாக ஆளரவமற்ற பகுதியில், கோடியில் அமைந்திருந்தது. அதனால் இந்த செல்லூர் வீடு புத்தகங்களுக்கு மட்டும் அல்லாமல் புது மண்டபத்து மனிதரின் அக்கிரமங்களுக்கும் 'ஸ்டாக் ஹவுஸாக' இருந்து வந்தது. அரவிந்தன், பர்மாக்காரர் மாளிகையில் அவரைச் சந்திக்கச் சென்று காணாமற் போன அன்றே காரில் வைத்துக் கொண்டு வந்து இந்த வீட்டில் ஓர் அறையில் தள்ளிப் பூட்டியிருப்பதாக உண்மையைச் சொல்லிவிட்டான் முருகானந்தத்திடம் அகப்பட்டுக் கொண்ட ஆள்.

"நீயே நேரில் வந்து வீட்டைக் காட்டு அப்பனே. நீ சொல்வது பொய்யாயிருந்தால் உன் முதுகுத் தோலை உரித்து வைத்துவிடுவேன்" என்று அவனையும் கூப்பிட்டுக் கொண்டு இரண்டு வண்டிகளையும் அங்கிருந்து அப்படியே செல்லூர் திருவாய்ப்புடையார் கோவில் பகுதிக்குச் செலுத்தச் செய்தான் முருகானந்தம்.

அவர்கள் இருந்த அந்த இடத்திலிருந்து செல்லூர் மிகவும் பக்கமாதலால் வண்டிகள் மிக விரைவில் சென்றுவிட்டன. முருகானந்தத்திடம் அகப்பட்டுக் கொண்ட ஆள் இறங்கி வீட்டைக் காண்பித்தான். பிசாசு குடியிருக்கிற இடம் மாதிரிப் பெரிய வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. ஆள் அரவமே இல்லை. முன்புறம் வாயிற்கதவில் பெரிய இரும்புப் பூட்டுத் தொங்கியது.

"ஏண்டா நீ கூறியது மெய்தானா? அல்லது புளுகுகிறாயா?" என்று மீண்டும் அந்த ஆளை மிரட்டினான் முருகானந்தம். அந்த ஆள் அதே வீட்டில் தான் அரவிந்தன் சிறை வைக்கப்பட்டிருப்பதாகச் சத்தியமே செய்தான். வேறு வழியில்லாமற் போகவே அந்த வீட்டைப் பூட்டியிருந்த இரும்புப் பூட்டு கதவுக் கொக்கியோடு தனியே பேர்த்து எடுக்கப்பட்டது. அகப்பட்ட ஆள் வழிகாட்டிக் கொண்டு முன்னால் சென்றான். உள்ளே ஒரே இருள். நிறைய மின்விளக்குகள் இருந்தும் விசையை அமுக்கினால் எரியவில்லை. 'மெயின் விசை'யில் வேண்டுமென்றே கோளாறு செய்துவிட்டுப் போயிருக்கிற மாதிரித் தோன்றியது. உள்ளே போவதற்கு ஒற்றையடிப் பாதை போல் வழிமட்டும் வீட்டு இருபுறமும் மேலே உத்திரத்தைத் தொடுகிற உயரம் வரை புத்தகங்களும், புத்தகங்களுக்காக அச்சிட்டு அடுக்கிய பாரங்களும் நிறைந்திருந்தன. பிள்ளை இல்லாத வீட்டுக்குச் செல்லப் பிள்ளைகள் போல் எலிகள் ஓடித்திரிந்தன. பழைய காலத்துப் பாணியில் கட்டப்பட்ட பெரிய வீடாதலால் சுற்றி அறைகளும் கூடமுமாக இடம் மிகுந்திருந்தது. கூட்டிக் கொண்டு வந்தவன் முன்னால் செல்ல முருகானந்தமும் நண்பர்களும் பின் தொடர்ந்து மௌனமாக இருளில் சென்று கொண்டிருந்தார்கள். நண்பர்களில் ஒருவனிடம் இருந்த கைவிளக்கை (டார்ச் லைட்) முருகானந்தம் வாங்கிக் கொண்டான். அந்த வீட்டுக்குள்ளிருந்து மாடிக்கு ஏறுகிற மரப்படிக்கு அருகில் வெளியே பூட்டியிருந்த ஓர் அறையைக் காண்பித்தான் அந்த ஆள். வாயிற் கதவும் பூட்டும் பெயர்க்கப்பட்டது போலவே இங்கேயும் பெயர்க்கப்பட்டது.

அந்த ஆள் கூறியது மெய்தான்! இரண்டு மூன்று அழுக்குக் காகிதங்களையே விரிப்பாக விரித்து வலது கையைத் தலையணை போல் மடித்து வைத்துக் கொண்டு அறைக்குள் சுருண்டு துவண்டு படுத்துக் கொண்டிருந்தான் அரவிந்தன். கைவிளக்கின் ஒளி வட்டத்தில் இந்தப் பரிதாபக் காட்சியைக் கண்டபோது முருகானந்தத்துக்கும் நண்பர்களுக்கும் வேதனையாக இருந்தது. அருகில் சென்று அரவிந்தனை மெல்லத் தொட்டு எழுப்பினான். "பாவம்! பட்டினி போட்டிருப்பார்கள் பாவிகள், கதவுப் பூட்டைப் பெயர்த்துத் திறக்கிற ஓசை கேட்டுக்கூட எழுந்திருக்கவில்லை!" என்றான் முருகானந்தத்துடன் வந்திருந்த பெரிய பயில்வான்.

கண் விழித்து எழுந்த அரவிந்தனுக்கு, அந்த நேரத்தில் திடீரென்று அங்கே அவர்களைச் சந்தித்ததும் ஒன்றுமே விளங்கவில்லை. முருகானந்தம் அவசர அவசரமாகத் தன்னால் முடிந்த மட்டும் சுருக்கமாய் விளக்கிவிட்டு, "இப்போது முதலில் இங்கிருந்து தப்பிச் சென்றாக வேண்டும். விடிந்து வெளிச்சம் பரவுகிற நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது. மற்றவற்றை அச்சகத்துக்குப் போய்ப் பேசிக்கொள்ளலாம். முதலில் புறப்படு! உடனே இங்கிருந்து வெளியேறாவிட்டால் வம்பு" என்று அரவிந்தனை அவசரப்படுத்தினான்.


குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Empty Re: குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி

Post by சிவா Sat 15 Sep 2018 - 5:03


"நீ செய்கிற காரியம் நியாயமில்லை, முருகானந்தம். என்னை இவ்வளவு பத்திரமாக இங்கே கொண்டு வந்து வைத்திருப்பவர்களிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் இப்படி ரகசியமாக மீட்டுக் கொண்டு போக முயல்கிறாயே அப்பா!" என்று சிரித்துக் கொண்டே கேலியாகக் கூறியபடி அவர்களோடு புறப்பட்டான் அரவிந்தன். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பது போன்ற சாயலும் அழகும், பொலிவும், ஒளியும் நிறைந்த அரவிந்தனின் முகம் சோர்ந்து வாடியிருந்தது. அப்போது நண்பர்களைச் சந்தித்ததும் சிரிக்கிற சிரிப்பாக ஏதோ சிரித்துப் பேசினானே ஒழியச் சோர்வு நன்றாகத் தெரிந்தது. தளர்ச்சி தெளிவாகப் புலப்பட்டது.

வண்டிகள் அச்சகத்து வாயிலில் திரும்பி வந்து நின்ற போது விடிந்து ஒளி பரவிக் கொண்டிருந்தது. பக்கத்து வெற்றிலைப் பாக்குக் கடைகளின் முன் அன்றைய தினச்சுடர் செய்தித்தாளில் தலைப்பு விளம்பரத் (போஸ்டர்) தாளிலேயே 'தேர்தல் பகையினால் இளைஞர் கடத்தப்பட்டார்' என்று வெளியாகி இருந்தது. ஒரு தினச்சுடர் வாங்கிப் படித்துப் பார்த்தான் முருகானந்தம். நிருபர் பாண்டியன் தாம் சொல்லிவிட்டுப் போனபடியே மதுரைச் செய்திகள் என்ற தலைப்பின் கீழ் பார்வையில் படத்தக்க இடத்தில் நன்றாக அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தார். முருகானந்தம் அதை அரவிந்தனிடம் படித்துக் காட்டினான்.

"'இளைஞர் மீட்கப்பட்டார்' என்று மறுபடியும் வேண்டுமானால் நிருபர் பாண்டியனை அழைத்து இன்னொரு செய்தி நாளைக்கு வெளியிடச் சொல்லேன்" என்று முருகானந்தத்தைக் கேலி செய்தான் அரவிந்தன். அழகரடியிலிருந்தும் பொன்னகரத்திலிருந்தும் வந்திருந்த தன் நண்பர்களையெல்லாம் ஓட்டலுக்கு அழைத்துப் போய்ச் சிற்றுண்டு காப்பி உபசாரம் செய்து நன்றி சொல்லி அனுப்பி வைத்தான் முருகானந்தம்.

பர்மாக்காரர் மாளிகையில் அரவிந்தன் மிகவும் துன்புறுத்தப்பட்டிருக்கிறான் என்பதும், அவ்வாறு நெடுநேரம் துன்புறுத்தப்பட்ட பின்பே பர்மாக்காரராலும் புது மண்டபத்து மனிதராலும் செல்லூர் வீட்டுக்குக் கொண்டு போய் அடைக்கப்பட்டான் என்பதும் முருகானந்தத்துக்கு ஓரளவு தெரிந்து தான் இருந்தது. பர்மாக்காரரின் கைக் கூலிப்படையிலிருந்து அவனிடம் பிடிபட்ட ஆள் ஓரளவு அவற்றைக் கூறியிருந்தான். இருந்தும் அரவிந்தன் தன்னடக்கம் காரணமாக அத்துன்பங்களைப் பற்றி அதிகம் சொல்லாமல் இருப்பதை முருகானந்தம் உணர முடிந்தது. அவன் சிரிப்பதும் கேலி செய்வதும் கூடக் கயவர்களிடம் பட்ட அந்த வேதனைகளை மறந்துவிடவும் மறைத்து விடவும் செய்கிற முயற்சிதான் என்பதும் முருகானந்தத்துக்குப் புரிந்தது.

அரவிந்தன் எப்போதுமே இப்படித்தான் பிறருடைய துன்பங்களையும் வேதனைகளையும் தூண்டித் தூண்டிக் கேட்டு உதவுவான்; வழி செய்வான். அனுதாபப்படுவான். தன்னுடைய துன்பங்களையும், வேதனைகளையும் கூடியவரை பிறர் தெரிந்து கொள்ள விடமாட்டான். தூண்டிக் கேட்டாலும் சிரித்து மழுப்பிவிடுவான். 'மகா நெஞ்சழுத்தக்காரன் அப்பா நீ?' என்று முருகானந்தம் எத்தனையோ முறை அரவிந்தனைக் கடிந்து கொள்ள நேர்ந்ததுண்டு. பணம் சேர்த்து வைத்துக் கொண்டு செலவழிக்காத கருமிபோல் தன்னுடைய துன்பங்களைப் பிறரிடம் கலந்து கொண்டு கொடுத்து அனுதாபம் சேர்க்கத் தெரியாத கருமி அவன். தன்னுடைய சுகங்களை எல்லோரும் பங்கிட்டுக் கொள்ள விடுகிற வள்ளல் அவன். துன்பங்களைப் பிறர் கேட்டு அறிந்து கொள்ள வரும்போது மட்டும் கருமியாக மாறிவிடுவான். அவனுக்குச் சிறு வயதிலிருந்தே பழக்கமான பண்பு அது.

அரவிந்தனை அச்சகத்தில் இருக்கச் சொல்லிவிட்டுச் சிறிது நேரத்தில் திரும்பி வந்து சந்திப்பதாகக் கூறி வெளியேறினான் முருகானந்தம். அரவிந்தனின் மனம் அப்போது தீவிரமான சிந்தனையில் இருந்தது. நியாயம் கேட்பதற்காக அமைதியான முறையில் சென்ற தன்னைப் பர்மாக்காரரும் புது மண்டபத்து மனிதரும் என்னென்ன விதமாக வேதனைப்படுத்தினார்கள் என்பதை நினைத்துப் பார்த்தபோது, 'உலகத்தில் இனிமேல் சத்தியத்துக்கும் நேர்மைக்கும் இடமே இல்லையோ?' என்கிற அளவு இதயம் புண்பட்டு வருந்தினான் அவன். தன்னை வெளியேற விடாமல் வீட்டுக்குள் அடைத்துப் போட்டுக் கொண்டு நான்கைந்து பேர்களாகச் சேர்ந்து அவர்கள் படுத்திய கொடுமைகளையெல்லாம் முருகானந்தத்திடமோ மற்றவர்களிடமோ சொல்ல விரும்பவிலை அவன். ஆனால் நீறுபூத்த கனலைப் போல் உள்ளேயே குமுறினான்; எண்ணி எண்ணிப் புழுங்கலானான்.

'கொள்ளைக் கூட்டத்து நடைமுறைகளைப் போல் அரசியல் எவ்வளவு ஒழுங்கற்றதாக இருக்கிறது இங்கே? யாதும் ஊரே யாவரும் நண்பரே! தீமையும் நன்மையும் பிறரால் இல்லை. துயரமும் இன்பமும் பிறர் காரணமாக ஏற்படுவதில்லை. வாழ்வும் சாவும் நியதிகள். இன்பக் காலத்தில் துள்ளித் திரிவதும், துயரக் காலத்தில் துவண்டு கிடப்பதும் அற்ற ஒருமை நிலைதான் சிறந்த வாழ்வு' என்று தத்துவம் கண்டு வாழ்ந்த தமிழகத்திலா இன்று இப்படி வாழ்கிறோம். எத்தனை பொறாமைகள்! எத்தனை காழ்ப்புகள்! அடுத்தவர்களைக் கவிழ்க்க முயல்வதில் எவ்வளவு இன்பம் இவர்களுக்கு? பண்பாட்டையும் ஒழுக்க நேர்மைகளையும் வளர்ப்பதற்குப் பதிலாக அரசியல் கட்சிகள் இந்த நாட்டு மக்களை எவ்வளவு கெட்ட வழிகளுக்கு இழுத்துப் போகின்றன? பிழைத்துக் கிடந்தால் பூரணி, சத்தியத்தின் பலத்தால் ஆடம்பர விளம்பரங்களும் ஆவேசப் பேச்சுக்களும் இல்லாமலே தேர்தலில் வெற்றி பெறுமாறு செய்து மற்றவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். பேசுவதையும் எழுதுவதையும் விட வாழ்ந்து காட்டிவிடுவது தான் இன்றைய நிலையில் மற்றவர்களைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டுவரச் சரியான கருவி. பூரணியின் விளம்பரத்துக்காகச் சுவரொட்டிகள் அச்சடித்ததே பேதமை. எல்லோரையும் போல் தன்னைப் பற்றி விளம்பரம் செய்து தன் புகழையும், பெருமையையும் பறைசாற்றி ஏலம் போட்டுத்தான் இந்தப் பதவியை அடைய வேண்டுமானால் பூரணிக்கு என்ன பெருமை? 'ஏழைகளுக்கு ஒரு வேளை கஞ்சி வார்க்காதவர்கள், பள்ளிக்கூடத்துக்குப் பந்துக்காக நன்கொடை தர பஞ்சப் பாட்டுப் பாடுகிறவர்கள், தேர்தலுக்குப் போட்டியிடும்போது அவசியம் அனாவசியம் பாராமல் லட்ச லட்சமாக வாரி இறைக்கிறார்களே! எளிமையில் நிறைவு கண்டு தூய்மையில் பெருமை பேணும் உயரிய பண்பு காந்தியடிகளோடு இந்த நாட்டை விட்டுப் போய்விட்டதா?' என்று எண்ணி மனம் தவித்த அரவிந்தன் ஏதோ தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்தவன் போல் அச்சிட்டுக் குவித்திருந்த சுவரொட்டிகளையெல்லாம் கொல்லைப் பக்கம் திறந்த வெளியில் அள்ளிக்கொண்டு போய்க் கொட்டினான். இது நடந்த கால் மணி நேரத்துக்குப் பின் வெளியே சென்றிருந்த முருகானந்தம் அச்சகத்துக்குத் திரும்பி வந்தான். முன்பக்கத்து அறையில் அரவிந்தன் காணப்படவில்லை. கொல்லைப் பக்கமிருந்து பெரிதாக புகைப்படலங்கள் தெரிந்தன. அரவிந்தனைத் தேடிப் பின் பக்கம் திறந்த வெளிக்கு வந்த முருகானந்தம் அங்கே அவன் பூரணியின் தேர்தல் சின்னம் அச்சிட்ட சுவரொட்டிகளுக்கு நெருப்பு வைத்துக் கொண்டிருப்பது கண்டு திடுக்கிட்டான்.

"என்ன அரவிந்தன்? உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? எவ்வளவு பணம் செலவழித்து அச்சிட்ட சுவரொட்டிகள் இவை? எதற்காக இப்போது இவற்றைக் கொளுத்துகிறாய்?" என்று கேட்டான்.

"இந்தச் சுவரொட்டிகளில் இல்லை பூரணியின் பெருமை. சத்தியத்தின் பலத்தில் அவள் வெற்றி பெற வேண்டும். நேர்மையின் துணையால் அவள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்! உண்மையான காந்தீயத்தை அவள் மூலம் நாட்டுக்குக் கற்பிக்க வேண்டும்! அதற்கு இவை தேவை இல்லை."

"சுத்த அசட்டுத்தனம்!"

"இருக்கலாம்! ஆனால் இப்படி ஒரு அசட்டுத்தனத்தைத் தொடர்ந்து செய்யும் மகாத்மாக்கள் காந்திக்குப் பின் இல்லாததால் தான் இந்த நாடு எப்படியோ போய்க் கொண்டிருக்கிறது."

"என்னதான் லட்சியம் இருந்தாலும் நடைமுறையை ஒத்துக் கொண்டு அதன்படிப் போக வேண்டும் அரவிந்தன்! விளம்பரம் செய்யாமல் தேர்தலுக்கு நின்று பயனே இல்லை!"

"நேர்மையாகவும் சத்தியமாகவும் தகுதியுடனும் நாம் இருப்பதே நமக்குப் பெரிய விளம்பரம்தான் முருகானந்தம்!"

"பேச்சுக்கு இதெல்லாம் சரி. ஆனால் உலகியல் தெரிந்து செய்யாமலிருந்தால் ஒன்றும் நம்ப முடியாது."

"நீ முன் அறையில் இரு முருகானந்தம்! நான் குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்" என்று கூறிக் கொண்டே ஜிப்பாவைக் கழற்றிய அரவிந்தனின் முதுகைப் பார்த்த முருகானந்தம் திகைத்தான். சட்டையைக் கழற்றிவிட்டு அரவிந்தன் உட்கார்ந்திருக்கும் போது பார்த்தால் நெருப்புச் சோதி போல் வளமாக மின்னும் அவனது சிவந்த மேனி. எலுமிச்சம்பழத்தின் மஞ்சள் நிறத் தளதளப்புள்ள மேனி அது. அத்தகைய அழகிய நிறத்துக்கு நடுவே முதுகில் இரண்டு கரிய கோடுகள் கன்றிச் சிவந்து தெரிந்தன.

"என்னப்பா இது?" என்று கேட்டவாறு அந்த இடத்தைத் தொட்டுக்காட்டி வினவினான் முருகானந்தம். அவன் குரல் கொதிப்பின் எல்லையைக் காட்டியது.

"ஒன்றுமில்லை! சவுக்கடியப்பா, சவுக்கு அடி. நியாயத்தை எடுத்துச்சொல்லி வாதிட்டதற்காக ஒரு பெரிய மனிதர் கொடுத்த பரிசுகள் இவை!" என்று நிதானமாகப் பதில் சொன்னான் அரவிந்தன். முருகானந்தத்துக்குக் கண்கள் சிவந்தன. இரத்தம் கொதித்தது. அவன் உதடுகள் ஏதோ ஆவேசமாகக் கூறத் துடித்தன! அப்போது கவலையைக் காட்டும் முகபாவத்துடன் அங்கே நிருபர் பாண்டியன் வந்து நின்றார்.


குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Empty Re: குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி

Post by சிவா Sat 15 Sep 2018 - 5:03

32



பெருத்திடும் செல்வமாம் பிணிவந்துற்றிடில்
உருத்தெரியாமலே ஒளிமழுங்கிடும்
மருத்துளதோ எனில் வாகடத்திலை
தரித்திரம் என்னுமோர் மருந்தில் தீருமே.


கவலை நிறைந்த முகச்சாயலோடு வந்த நண்பர் பாண்டியன், அரவிந்தனை அங்கே கண்டதும் வலிந்து சிரிப்பை வரவழைத்த மாதிரி இருந்தது. நிருபர் பாண்டியன், அரவிந்தனை அன்புடன் நலம் விசாரித்தார். அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு "நீங்களும் முருகானந்தமும் முன்புறத்து அறையில் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருங்கள், அதற்குள் நான் குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்" என்று கூறி அவரையும் முருகானந்தத்தையும் முன்புறத்துக்கு அனுப்பிய பின் அரவிந்தன் குளிக்கும் அறைக்குள் புகுந்தான்.

அரவிந்தன் பொன்னிற மேனியில் கண்ட புண்களைப் பற்றிய அதிர்ச்சியிலிருந்து முருகானந்தம் இன்னும் விடுபடவில்லை. தங்கத்தட்டில் கரிக்கோடு விழுந்ததுபோல் நண்பனின் அழகிய மேனியில் தெரிந்த சவுக்கடிக் கோடுகள் அவன் உள்ளத்தைக் கொதிக்கச் செய்தன. குமுறச் செய்தன. முன்புறத்து அறையில் வந்து அமர்ந்ததும், நிருபர் பாண்டியன் தம் பேச்சில் அவன் கவனத்தைத் திருப்பினார்.

"முருகானந்தம் உனக்கு நான் எவ்வளவு சொல்லியிருந்தும், நீ உணர்ச்சிவசப்பட்டுப் பெரிய தப்பு பண்ணிவிட்டாய் அப்பா"

"எதைச் சொல்கிறீர்கள், பாண்டியன்?" என்று கேட்டான் முருகானந்தம்.

"இதோ இந்தச் செய்தியைப் படித்துப் பார் தெரியும். சிறிது நேரத்துக்கு முன் பர்மாக்காரரும், புதுமண்டபத்து மனிதரும் அவசரமாகக் காரில் வந்து இறங்கி எங்கள் ஆசிரியரிடம் இந்தச் செய்தியைப் பிரசுரிக்கும்படி சொல்லிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இந்தச் செய்தி உண்மையா, பொய்யா என்று உறுதிப்படுத்திக் கொள்ளத் தயங்கினாலும் ஆசிரியர் பர்மாக்காரரின் செல்வாக்குக்கு முன் அஞ்சுகிறார்" என்று கூறி நாலைந்து முழுத்தாளில் துப்புரவாக டைப் செய்திருந்த அந்தச் செய்தியை முருகானந்தத்திடம் கொடுத்தார் பாண்டியன்.

அதை ஒவ்வொரு வரியாகக் கருத்தூன்றிப் படித்தான் அவன். 'பூரணியின் தாமரைப்பூ சின்னத்துச் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு வந்த ஆட்கள் ஏற்கெனவே ஒட்டப்பட்டிருந்த தமது கழுகுச்சின்னம் சுவரொட்டிகளை மறைத்தும் கிழித்தும் வம்பு செய்ததாகவும், அப்படிச் செய்ததைக் கண்டிக்க வந்த தம் ஆட்களை அடித்தும் உதைத்தும் காயப்படுத்தியதாகவும் அறிக்கையில் கூறியிருந்தார் புதுமண்டபத்து மனிதர். மேலும், செல்லூர் திருவாய்ப்புடையார் கோயில் தெருவிலுள்ள தமது 'ஸ்டாக் ஹவுசை' பூரணியின் ஆட்கள் வன்முறைச் செயல்களால் பூட்டை உடைத்துத் திறந்து புத்தகங்களையும், பிற பொருட்களையும் கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டதாகவும்' அந்தச் செய்தியில் அவர் விவரித்திருந்தார். வன்முறைச் செயல்களைச் செய்தவர்களின் பெயர்களாக அவர் கொடுத்திருந்த பட்டியலில் வேண்டுமென்றே முருகானந்தத்தின் பெயர் பெரிதுபடுத்தப்பட்டிருந்தது. 'ஸ்டாக் ஹவுஸ்' கொள்ளையிடப்பட்டதற்கு முதல் நாள் காலை அரவிந்தன் பர்மாக்காரர் எஸ்டேட்டுக்கு வந்து தன்னைச் சந்தித்துக் 'கன்னா பின்னா'வென்று பேசிப் பயமுறுத்தியதாகவும் ஒரு பொய்ச் செய்தி திரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது.

இதைப் படித்துவிட்டு முகத்தில் சினம் துடிக்க நிமிர்ந்தான் முருகானந்தம். அவன் பார்வையில் ஆத்திரமும் படபடப்பும் தெரிந்தன. நிருபர் பாண்டியனை நோக்கிக் கேட்கலானான்.

"இந்தச் செய்தி அறிக்கையை இப்படியே நீங்கள் வெளியிடப் போகிறீர்களா பாண்டியன்?"

"என்னைக் கேட்டால் நான் என்னப்பா பதில் சொல்ல முடியும்? நேற்றைக்குத் 'தேர்தல் பகை காரணமாக இளைஞர் கடத்தப்பட்டார்' என்று நீ எழுதிக் கொடுத்த செய்தி அறிக்கையை நான் வெளியிடவில்லையா? நீ கொடுத்த செய்தி மெய் என்று எனக்கு தெரிந்து, நானே உன்னிடம் கேட்டு வாங்கிக் கொண்டது. இப்போது இவர் கொடுத்திருகும் செய்தி 'பொய்' என்று எனக்குத் தெரிகிறது. தெரிந்தும் நான் ஒன்றும் செய்வதற்கில்லையே? நாங்கள் பத்திரிகைக்காரர்கள், எல்லோருக்கும் வேண்டியவர்கள். நான் எங்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டவன். எங்கள் ஆசிரியர் ஊரிலுள்ள பெரிய மனிதர்களுக்கெல்லாம் கட்டுப்பட்டவர். பெரிய மனிதர்கள் எல்லோரும் பர்மாக்காரருக்குக் கட்டுப்பட்டவர்கள். பயப்படுகிறவர்கள். தினப்பத்திரிகை என்பது ஊர்ப்புறத்தில் இருக்கிற குட்டை; அதில் நல்ல தண்ணீர்தான் வந்து நிறையும் என்று சொல்ல முடியாது. இந்த மாதிரி எல்லாம் வம்பு வரும் என்று தெரிந்துதான் நேற்று உனக்கு நிதானமாக நடந்து கொள்ள வேண்டும், என்பதை வற்புறுத்திச் சொல்லியிருந்தேன்."

"நீங்கள் சொல்லியிருந்தீர்கள் பாண்டியன். ஆனால் அவர்கள் என்னை நிதானமாக நடந்து கொள்ள விடவில்லையே!" என்று தொடங்கிச் சுவரொட்டி ஒட்டுவதற்குச் சென்றதிலிருந்து செல்லூருக்குப் போய் அரவிந்தனை மீட்டு வந்ததுவரை உண்மையாக என்னென்ன நடந்தனவோ அவற்றை அவரிடம் விவரித்துச் சொன்னான். முருகானந்தம் சற்றுமுன் அரவிந்தனின் முதுகில் தான் கண்ட சவுக்கடிக் காயத்தைப் பற்றியும் சொன்னான்.

"அநியாயமும் கொடுமையும் செய்திருக்கிறார்களென்று நமக்கு நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது முருகானந்தம். ஆனால் சமூகத்துக்கு இவைகளைப் புரிய வைக்கிறவரை நிதானமாகத்தான் போகவேண்டும். பூரணி இப்போது இந்த நாட்டுக்குள்ளேயே இல்லை. இலங்கையில் இருக்கிறாள். புது மண்டபத்து மனிதர் கொடுத்துள்ள இந்த செய்தி அறிக்கை வெளியானால் அவளுடைய நல்ல பெயரும் கெடத்தான் செய்யும். அரவிந்தனை சாது, நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் சந்தேகப்படுவார்கள், உன்னைப் பற்றி..."

"ஏற்கெனவே கெட்டவன், முரடன், தடியன் என்று எல்லோருக்கும் தெரியுமாக்கும்? ஏன் நிறுத்திவிட்டீர்கள், பாண்டியன்? நன்றாகச் சொல்லுங்களேன். எனக்கும் என்னைப் பற்றி வெளியில் என்ன நினைக்கிறார்களென்று தெரிந்து கொள்ள ஆசையாயிருக்கும் அல்லவா? பூரணி-அரவிந்தன் இவர்களுக்கு நான் உதவியிருக்கிறேன் பாருங்கள்! ஏதாவது பெரிய குற்றம்சாட்டி என்னை ஓர் ஆறு மாதம் உள்ளே தள்ளிவிட்டால் தேர்தல் முடிகிற வரை என்னுடைய தொந்தரவு இருக்காதென்று நினைக்கிறார் பர்மாக்காரர். இல்லாவிட்டால் செல்லூர் வீட்டுக்குள் நுழைந்து அடைபட்டுக் கிடந்த அரவிந்தனை மீட்டு வந்த நிகழ்ச்சியைத் திரித்து நான் என் ஆட்களோடு கொள்ளையிட வந்தேனென்று வல்வழக்குத் தயார் செய்வாரா?"

"பதற்றமடையாதே முருகானந்தம். பர்மாக்காரனின் இந்தச் சூழ்ச்சி பலிக்காமல் போகும்படி செய்வதற்கும் ஒரு வழி இருக்கிறது. பத்திரிகையில் அறிக்கை விடுகிற தகுதி அவர்களுக்குத்தான் உண்டு என்பதில்லையே? உன்னுடைய தகுதி என்ன குறைவு? நீயும் தொழிற்சங்கங்களின் தலைவன், தொழிலாளர்களின் மதிப்புக்குரியவன். பர்மாக்காரர் அரவிந்தனைக் கடத்திக் கொண்டு போய் துன்புறுத்தியதையும், செல்லூர் வீட்டில் சிறை வைத்ததையும் பற்றி நீயும் விரிவாக ஓர் அறிக்கை எழுதிக் கொடு; உன் அறிக்கையை அவர்களிடம் எடுத்துச் சென்று காண்பித்து வெளியிடப் போவதாகச் சொல்லி மெல்ல மிரட்டிப் பார்க்கிறேன். அப்படிச் செய்தால், 'இரண்டு அறிக்கைகளையுமே வெளியிட வேண்டாம். பேசாமல் விஷயத்தை அப்படியே அமுக்கிவிடுங்கள்' என்று அவர்களே எங்கள் ஆசிரியருக்கு 'டெலிபோன்' செய்து தடுத்து விடுவார்கள்.

"நீங்கள் எதிர்பார்க்கிறபடி நடைபெறாமல் பர்மாக்காரரின் செல்வாக்குக்குப் பயந்து உங்கள் ஆசிரியர் அவர்களுடைய அறிக்கையை மட்டும் வெளியிட்டுவிட்டால்?"

"வெளியிடமாட்டார்! அதற்கானதை எடுத்துச் சொல்வது என் பொறுப்பு!"

முன்புறத்து அறையில் அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது நீராடி உடை மாற்றிக்கொண்டு தூய தோற்றத்தோடு அரவிந்தன் வந்தான். "அரவிந்தன் ஏற்கெனவே மிகவும் மன வேதனைப்பட்டுப் போயிருக்கிறான். இதில் ஒன்றையும் அவன் காதில் போட வேண்டாம்" என்று பின்புறமிருந்து அரவிந்தன் காலடி ஓசை கேட்டதுமே, பாண்டியனிடம் மெதுவான குரலில் கூறி எச்சரித்திருந்தான் முருகானந்தம். உள்ளே வந்த அரவிந்தன் அவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டான்.

"பூரணி எப்போது இலங்கையிலிருந்து திரும்புகிறாள்?" என்று அரவிந்தனை நோக்கிக் கேட்டான் பாண்டியன்.

"திரும்புகிற சமயம் தான். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவள் திரும்பிவிடுவாள்."

"நீங்கள் எது நடந்தாலும் கவலையோ, சோர்வோ அடையக் கூடாது அரவிந்தன்! தேர்தல், அரசியல் போட்டி என்று வரும் போது இந்தநாளில் இவையெல்லாம் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. பூரணி திரும்பி வந்து நான்கு கூட்டங்களில் பேசினால் போதும்; இந்தத் தொகுதியில் அவளுக்குத்தான் வெற்றி என்பதில் சந்தேகமே இல்லை."

"நியாயத்திலும் நேர்மையிலும் நம்பிக்கையிருந்தால் பூரணியைத் தேர்ந்தெடுக்கட்டும். அதற்காக 'என்னைத் தேர்ந்தெடுங்கள், எனக்கே வாக்களியுங்கள்' என்று இனிப்பு மிட்டாய்க்கு அடித்துக் கொண்டு பறக்கிற சிறுபிள்ளை மாதிரி அவள் கூட்டம் கூட்டமாக, மேடை மேடையாக வந்து கதறமாட்டாள். இலங்கையிலிருந்து திரும்பி வந்ததுமே சில நாட்களில் கல்கத்தாவில் நடைபெறவிருக்கும் கிழக்கு ஆசிய பெண்கள் மாநாட்டுக்கு அவள் போக வேண்டும். கல்கத்தாவிலிருந்து திரும்பியதும் மலேசியாவில் சில வாரங்கள் சுற்றுப் பயணம் செய்யப் போகவேண்டும். தேர்தலை ஒரு வியாபாரமாகக் கருதி அதற்காக முதல்போட்டு செலவழித்து அலைய அவளுக்கு நேரமில்லை. நானும் அதை வியாபாரமாக நடத்த விரும்பவில்லை" என்று நிருபர் பாண்டியனிடம் சுடச்சுட பதில் கூறினான் அரவிந்தன்.

"நீங்கள் சொல்வதெல்லாம் உயர்ந்த இலட்சியம்தான். ஆனால் உங்களை எதிர்த்து நிற்பவர் பணபலமும், ஆள் பலமும் சூழ்ச்சிகளும் உள்ளவராயிற்றே!"

"மனித உரிமைகளும், சமத்துவமும் உருவாகிற சமுதாயத்திலே பணத்துக்கென்று தனிப்பலமே இருக்கக்கூடாது. அதிக ஏழ்மையைப் போல, தனித்தனி மனிதர்களிடம் அதிகச் செலவம் தேங்கிவிடுவதும் நாட்டுக்கு ஒரு பெரிய நோய்; மனித உடம்பு முழுவதும் சதைப்பற்று இருந்தால், வளமான உடல் என்கிறோம். உடலில் பல பகுதிகள் இளைத்து எங்காவது சில இடங்களில் மட்டும் சதை வைத்திருந்தால் அது கட்டி, நோய். செல்வமும் நமது சமுதாயத்தில் கட்டி விழுந்து விகாரமான உடல் மாதிரி சில இடங்களிலேயே தேங்கி நாறுகிறது. உலகத்து நோய்களையெல்லாம் மருந்தால் தீர்க்கலாம். ஆனால் செல்வக் கொழுப்பு என்கிற நோய்க்கு மட்டும் எந்த மருத்துவ நூலிலும் மருந்து இல்லை. ஏழ்மை என்ற இன்னொரு நோய்தான் முன்னைய நோய் தீர ஏற்ற மருந்து. சமூக நோய்களுக்கு மருந்து கிடைக்கிற வரை அரசியல் போட்டிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டம் தான்" என்று ஏக்கத்துடன் நிருபர் பாண்டியனை நோக்கிக் கூறினான் அரவிந்தன்.

அங்கே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தபின் முருகானந்தத்தையும் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார் பாண்டியன். அரவிந்தன் தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான். முருகானந்தத்தைத் தினச்சுடர் அலுவலகத்துக்கு அழைத்துக் கொண்டு போனார் நிருபர் பாண்டியன். அரவிந்தன் செல்லூர் வீட்டில் அடைத்து வைக்கப் பெற்றிருந்தது பற்றியும், கொடுமைப் படுத்தப்பட்டது பற்றியும் முருகானந்தத்தின் கைப்பட ஒரு விரிவான அறிக்கை எழுதி வாங்கி அதை ஆசிரியரிடம் கொண்டுபோய்க் காட்டினான் பாண்டியன்.


குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Empty Re: குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி

Post by சிவா Sat 15 Sep 2018 - 5:04


'தினச்சுடர் ஆசிரியர்' இரண்டு அறிக்கைகளிலும் எது மெய்யென்று கண்டுகொள்ள முடியாமல் திணறினார்.

"சார்! பர்மாக்காரரும், புதுமண்டபத்து மனிதரும் கொண்டு வந்து கொடுத்த அறிக்கையில் உண்மையே இருப்பதாக தெரியவில்லை. 'அரவிந்தனை அவர்கள் கடத்திக் கொண்டு போய் கொடுமைப்படுத்தினார்கள்' என்பதுதான் உண்மை. ஊரெல்லாம் இந்த உண்மை தெரிந்திருக்கிறது! அப்படியிருக்கும் போது பொய்யும் புரட்டுத்தனமுமான அவர்கள் அறிக்கையை வெளியிட்டால் நமது பத்திரிகையின் பேர்தான் கெடும். இரண்டு பக்கத்தாருடைய அறிக்கைகளையுமே வெளியிடாமல் விட்டு விடலாம். இப்போது முருகானந்தம் எழுதிக் கொடுத்திருக்கும் இந்த அறிக்கையைப் பற்றி நீங்களே அவர்களிடம் டெலிபோனில் கூறுங்கள். அவர்களே தம் அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று கூறி விடுவார்கள்" என்று சமயம் பார்த்து ஆசிரியருக்கு வழி கூறினான் பாண்டியன். ஆசிரியர் உடனே பர்மாக்காரருக்கு டெலிபோன் செய்து கூறினார். பாண்டியன் அனுமானம் சரியாயிருந்தது. 'எங்கள் அறிக்கை, அவன் அறிக்கை, ஒரு மண்ணாங்கட்டியும் வெளியிட வேண்டாம். இந்தச் செய்தி பற்றி மூச்சுக் காட்டக்கூடாது!' என்று டெலிபோனில் பதில் கூறிவிட்டாராம் பர்மாக்காரர். ஆசிரியருக்கும் பாண்டியனுக்கும் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து வீட்டுக்குப் புறப்பட்டான் முருகானந்தம்.

கொழும்பிலிருந்து புறப்பட்ட விமானத்தில் சென்னை சென்று அங்கிருந்து ரயில் மூலம் மறுநாள் காலை மதுரையை அடைந்து விடுவதென்ற திட்டத்தோடுதான் மங்களேசுவரி அம்மாளும் பூரணியும் கிளம்பியிருந்தார்கள். விமானத்தில் கிடைத்த செய்தித்தாளில் 'அரவிந்தன் கடத்திக்கொண்டு போகப்பட்டான்' என்ற திடுக்கிடும் செய்தியைப் படித்தவுடன் இருவருக்குமே பொறுத்துக் கொள்ள முடியாத வேதனையும் தவிப்பும் ஏற்பட்டன. பூரணியின் முகம் அழுவதுபோல் களை குன்றித் துயரச் சாயலுடன் தோன்றியது. கண்களில் நீர் கோர்த்தது. மங்களேசுவரி அம்மாள் கூறலானாள்:

"வர வர அரசியல் நேர்மை குன்றிய துறையாக மாறிவிட்டது பூரணி. கருத்துக்கள் பிடிக்காவிட்டால் கருத்துக்களோடு மட்டும் பகைத்துக் கொண்டு அவற்றை எதிர்த்துப் போரிட வேண்டும். கருத்துக்களுக்குப் பதிலாக ஆட்களை எதிர்க்கிற அநாகரிகத்தைத் தான் இங்கே காண்கிறோம்."

"தவறு என்னுடையதுதான் அம்மா! நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று முதலிலேயே கண்டிப்பாக மறுத்திருக்க வேண்டும். தேர்தல் வேதனைகளால் தான் மீனாட்சிசுந்தரம் இறந்தார். தேர்தல் பகையினால்தான் இவர் காணாமல் தலைமறைவாகக் கடத்திக் கொண்டு போகப்பட்டிருக்கிறார். இதனால் இன்னும் என்னென்ன துன்பங்களும் தொல்லைகளும் வருமோ!"

"கவலைப்படாதே அம்மா! அரவிந்தனுக்கு ஒரு கெடுதலும் நேராது. அவரைப் போல் நல்லவர்களுக்கு இறைவனுடைய அருள் துணை எப்போதும் கெடுதல் நேராமல் அருகிலிருந்து காக்கும். விமானம் சென்னைக்குப் போய்ச் சேர்ந்ததும் இறங்கி (டிரங்க் டெலிபோனில்) வெளியூர்த் தொலைபேசி மூலம் மதுரைக்குப் பேசுவோம். விவரம் தெரிந்துவிடும். இது நாளு நாளைக்கு முந்திய செய்தித்தாள். ஒருவேளை இதற்குள் அரவிந்தன் மீண்டு வந்தாலும் வந்திருக்கலாம். என் மாப்பிள்ளை ஒரு விநாடி கூடச் சும்மா இருக்க மாட்டார். ஏதாவது செய்து இதற்குள் அரவிந்தனை மீட்டுக் கொண்டு வந்திருப்பார்" என்று மங்களேசுவரி அம்மாள் பூரணிக்கு ஆறுதல் கூறினாள்.

கொழும்பிலிருந்து புறப்படும் முன்பே சென்னையிலிருந்த தன் உறவினர்க்குத் தந்தி மூலம் தங்களது வரவு பற்றி அறிவித்திருந்தாள் மங்களேசுவரி அம்மாள். அதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அந்த அம்மாளின் உறவினர்கள் காருடன் வந்து காத்திருந்தனர். சுங்கப் பரிசோதனை முடிந்து உறவினர்களுடன் பூரணியையும் அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றாள் மங்களேசுவரி அம்மாள். உறவினர்கள் வீட்டில் தொலைபேசி இருந்தது. அங்கிருந்து மதுரையில் தன் வீட்டுத் தொலைபேசி எண்ணுக்கு அவசரமாகப் பேசுவதற்கு முயன்றாள் அந்த அம்மாள். பூரணி துடிப்பும் தவிப்புமாக விவரம் அறிந்து கொள்ளும் ஆவலோடு மங்களேசுவரி அம்மாளின் அருகிலேயே நின்று கொண்டிருந்தாள். கால்மணி நேரத்தில் மதுரை எண்ணுடன் தொலைபேசித் தொடர்பு கிடைத்துவிட்டது. மதுரையிலிருந்து வசந்தா பேசினாள். கொழும்பிலிருந்து விமானத்தில் வரும்போது செய்தித்தாளில் படித்த செய்தியைப் பற்றி கூறி விவரம் கேட்டாள் மங்களேசுவரி அம்மாள். வசந்தாவிடமிருந்து கேட்ட மறுமொழியால் மங்களேசுவரி அம்மாளின் முகம் மலர்ந்தது. அருகில் இருந்த பூரணியின் மனத்தில் அதைக் கண்டதும் நம்பிக்கை மலர்ந்தது. வசந்தா சிறிது நேரம் பேசிவிட்டு "இதோ பக்கத்தில் உங்கள் மாப்பிள்ளையே வந்து நிற்கிறார் அம்மா! அவரிடம் விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!" என்று தொலைபேசியை முருகானந்தத்தின் கையில் கொடுத்துவிட்டாள். முருகானந்தம் நடந்தவற்றை மிகச் சுருக்கமாக மாமியாருக்கு தெரிவித்தான். "நீங்கள்தான் நாளைக்குக் காலையில் இங்கே மதுரைக்கு வந்துவிடப் போவதாகக் கூறினீர்களே. மற்றவற்றை நேரில் பேசிக் கொள்ளலாம். காலையில் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸுக்கு நானும் அரவிந்தனும் இரயில் நிலையத்துக்கு வருகிறோம்... அவ்வளவுதானே? வைத்துவிடட்டுமா?" என்று முருகானந்தம் பேச்சை முடித்துவிட்டுத் தொலைபேசியை வைக்க இருந்தபோது, "இதோ பூரணி பக்கத்தில் கவலையோடு நிற்கிறாள். நான் சொன்னால் நம்புவாளோ மாட்டாளோ? 'அரவிந்தன் திரும்பி வந்துவிட்டான்' என்று நீங்களே அவளிடம் போனில் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் மாப்பிள்ளை" என்றாள் மங்களேசுவரி அம்மாள். பூரணி தொலைபேசியைக் கையில் வாங்கிக் கொண்டாள். பூரணியிடம், "அக்காவுக்கு வணக்கம். இலங்கைப் பயணம் எல்லாம் சுகமாயிருந்ததோ? இங்கே வசந்தா மிகவும் பொல்லாதவள் ஆகிக் கொண்டு வருகிறாள். திருமணத்துக்குப் பின் ஒரே அடக்குமுறை ஆட்சியாக இருக்கிறது அக்கா! எனக்குச் சுதந்திரமே இல்லை" என்று சிரித்துக் கொண்டே முருகானந்தம் பேசியபோது இடையில் ஒரு கணம் 'போன்' அவன் கையிலிருந்து மாறி "இவர் சொல்வதெல்லாம் சுத்தப் பொய் அக்கா, கிண்டல் செய்கிறார்" என்று வசந்தாவின் நாணம் விரவிய மென்குரல் ஒலித்தது. மீண்டும் முருகானந்தம் பேசினான். "அரவிந்தன் சுகமாக இருக்கிறான். உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம். காலை எக்ஸ்பிரஸில் உங்களை எதிர்பார்க்கிறோம். புறப்பட்டு வந்து சேருங்கள்" என்று அவன் உறுதி கூறிய பின்பே பூரணியின் மனம் நிம்மதியை முழுமையாக அடைந்தது. தவிப்பும் கவலைகளும் குறைந்தன.

சென்னையில் அவர்கள் தங்கியிருந்த உறவினர் வீடு மயிலாப்பூர் பகுதியில் இருந்தது. 'அரவிந்தன் திரும்பி வந்து விட்டான். சுகமாக இருக்கிறான்' என்ற செய்தி தெரிந்ததும் மங்களேசுவரி அம்மாளையும் அழைத்துக் கொண்டு மயிலைக் கபாலீசுவரர் கோயிலுக்குச் சென்று கற்பகாம்பிகைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டுவிட்டு வந்தாள் பூரணி. அன்று மாலை திருவனந்தபுரம் விரைவு வண்டியிலேயே அவர்கள் சென்னையிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டுவிட்டார்கள். இரயிலில் வரும்போது அரசியல் நிலைகளையும் அதிலுள்ள வம்புகளையும் பற்றிக் கதை கதையாகச் சொல்லிக் கொண்டு வந்தாள் மங்களேசுவரி அம்மாள். "இன்று இந்த தேசத்தில் ஆன்மிக எழுச்சி இல்லை. கவிதைகளும் காவியமும் உருவாகிற இலக்கிய எழுச்சியும் இல்லை. மூடப்பழக்க வழக்கங்களைப் போக்கித் துணிவான வாழ்க்கையைக் காட்டும் சமுதாய எழுச்சியும் இல்லை. தேள் கொட்டினவனுக்கு மற்றைய உணர்வுகளெல்லாம் மறந்து மறைந்து வலி ஒன்று மட்டுமே உறைப்பதுபோல், பள்ளிக்கூடச் சிறுவனிலிருந்து பல்போன கிழவர்கள் வரை அரசியல் எழுச்சி ஒன்றே இருக்கிறது. முழங்காலுக்குக் கீழே சதைபோட்டுப் பருத்துவிடுகிற யானைக்கால் வியாதி போல அரசியல் ஒன்றே கதி என்று ஆகிவிட்டது!" என்று அந்த அம்மாள் கூறியதை பூரணி கவனித்துக் கேட்டாள். விழுப்புரம் கடந்த பின் தான் இரண்டு பேருக்கும் நல்ல தூக்கம் வந்தது.

காலையில் இரயில் சரியான நேரத்துக்கு மதுரையை அடைந்துவிட்டது. மங்கையர்க்கழகத்துப் பெண்கள் முதல் பிளாட்பாரத்தை நிறைத்துக் கொண்டு பூரணியை வரவேற்கக் கூடியிருந்தார்கள். முதல்நாள் சென்னையிலிருந்து டெலிபோனில் செய்தி வந்ததுமே, வசந்தா மங்கையர் கழகத்துக்குத் தகவல் தெரிவித்து, இந்த ஏற்பாடு செய்திருந்தாள். பிளாட்பாரம் பல வண்ண மலர்கள் குலுங்கும் வண்ண மலர்ச்சோலையாக காட்சியளித்தது. அரவிந்தனும் முருகானந்தமும் நிருபர் பாண்டியன் முதலிய மற்ற நண்பர்களும் ஒருபுறம் நின்று கொண்டிருந்தார்கள்.

பூரணி இரயிலிலிருந்து இறங்கும்போதே அவளுடைய கண்கள் அரவிந்தனைத் தேடிச் சுழன்றன. யாருடைய சிரிப்பில் அமுதத்தின் ஆற்றல் இருந்ததாக உணர்ந்து வியந்தாளோ, அவனுடைய சிரிப்பையும் மலர்ந்த முகத்தையும் பருகிவிடுவது போல் காணும் ஆவலில் அவள் கண்களும் மனமும் விரைந்தன. ஆனால் வசந்தா, மங்கையர் கழகத்துக் காரியதரிசி முதலிய பெண்கள், மாலைகளோடு வந்து அவளைச் சூழ்ந்து கொண்டு பார்வையை மறைத்துவிட்டனர். ஆனால் அரவிந்தனுடைய கண்கள் இரயிலிலிருந்து இறங்கும் போதே அவளை நன்றாகப் பார்த்துவிட்டன. புதிய பெருமிதமும் புதிய அழகும் அப்போது அவள் முகத்தில் தோன்றுவது போலிருந்தது அவனுக்கு. தன்னைப் பற்றிப் புகழும் பெருமையும் நிலவும் சூழலில் போய்க் கலந்து பழகிவிட்டு மீளும்போது மனிதருக்கு முகத்தில் உண்டாகிற அபூர்வமான எழில் ஒளியைத்தான் அப்போது பூரணியின் முகத்திலும் காண முடிகிறதென நினைத்தான் அவன். இரயில் பயணத்தினால் கலைந்து சுருள் சுருளாகக் காதோரத்தில் சரிந்து சுழன்ற இணைந்த ஒளிவட்டமாய்த் தெரிந்த அந்த முகம் அவன் உள்ளத்துக்கு அழகிய சிந்தனைகள் அளித்தது.

பெண்கள் கூட்டத்திலிருந்து விடுவித்துக் கொண்டு பூரணியும் மங்களேசுவரி அம்மாளும் அரவிந்தன் முதலியவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு வந்தார்கள். "கொழும்பிலிருந்து விமானத்தில் புறப்பட்ட போது பேப்பரில் அந்தச் செய்தியைப் பார்த்தோம். இரண்டு பேருக்கும் ஒரே தவிப்பு. மனம் ஒரு நிலையில் இல்லை" என்று மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனிடம் விசாரிக்க ஆரம்பித்தாள்.

பேசுவதற்கே ஒன்றும் தோன்றாத மனப்பூரிப்போடு நின்ற பூரணி, அரவிந்தனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். "இரயில் நிலையத்தில் நின்று இதையெல்லாம் பேசுவானேன்? வீட்டுக்குப் போய் எல்லாம் பேசிக் கொள்ளலாம்" என்று முருகானந்தம் கூறினான். மங்களேசுவரி அம்மாளின் பெரிய கார் வெளியே காத்திருந்தது. எல்லோரும் புறப்பட்டார்கள். தானப்ப முதலி தெரு வீட்டுக்குப் போனதும், சில மணி நேரம் விசாரிப்புகளிலும் கலகலப்பான பேச்சுக்களிலும் கழிந்துவிட்டது. தேர்தல் சுவரொட்டி ஒட்டப்போன இடத்தில் விளைந்த கலவரத்தில் அடிபட்டுப் படுக்கையில் கிடந்த தம்பி திருநாவுக்கரசைப் பூரணியும் மங்களேசுவரி அம்மாளும் அச்சகத்துக்குச் சென்று பார்த்து வந்தனர்.

வசந்தா, வீட்டில் அன்றைக்குப் பெரிய விருந்துச் சாப்பாட்டுக்கே ஏற்பாடு செய்திருந்தாள். பகல் உணவு முடிந்ததும் நடுக்கூடத்தில் டேப்ரிகார்டரை வைத்து பூரணி இலங்கையில் பேசிய சொற்பொழிவுகளை ஒலிபரப்பத் தொடங்கினாள் செல்லம். அரவிந்தன், முருகானந்தம், வசந்தா எல்லோரும் சூழ அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது பூரணி மாடி அறையில் இருந்தாள். டேப்ரிகார்டு போட்ட சிறிது நேரத்துக்குப் பின் பூரணியின் தங்கை மங்கையர்க்கரசி வந்து, "அக்கா உங்களைக் கூப்பிட்டாங்க, ஏதோ தனியா பேசணுமாம்" என்று அரவிந்தனை மாடிக்கு அழைத்துப் போனாள். பூரணி மாடியில் முன் வராந்தாவிலேயே இருந்தாள். அவள் கைகள் பின்புறம் எதையோ ஒளித்து வைத்துக் கொண்டிருந்தன.

"கூப்பிட்டாயாமே?" என்று சிரித்துக் கொண்டே அவள் முன் போய் நின்றான் அரவிந்தன். அவளும் சிரித்தாள்.

"தயவு செய்து உங்கள் கையை நீட்டுங்கள்" என்றாள் பூரணி.

"எதற்காக?"

"நீட்டுங்களேன் சொல்கிறேன்."

அரவிந்தன் கையை நீட்டியவாறே சிரித்தபடி நின்றான். அவள் அவனுடைய பொன் நிறமுள்ள கையில் புதிய தங்கக் கடிகாரத்தைக் கட்டினாள்.

"காலத்தை உங்கள் கையில் கட்டி ஓடச் செய்துவிட்டேன்."

"தவறு பூரணி. நாம் மனிதர்கள்! காலத்தின் கையில் கட்டுண்டு ஓடுபவர்கள்" என மறுமொழி கூறி அழகாக நகைத்துக் கொண்டே அவள் முகத்தைப் பார்த்தான் அரவிந்தன்.


குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Empty Re: குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி

Post by சிவா Sat 15 Sep 2018 - 5:04

33



மாட்சியிற்... பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்(க) இதன் இயல்புணர்ந்தோரே!
-- புறநானூறு - 192 - 193


மதுரை திரும்பியதும் ஒரு வாரம் பூரணிக்கு ஓய்வே இல்லை. விருந்துகளும், பாராட்டுக் கூட்டங்களும் ஒன்றன்பின் ஒன்றாக இருந்தன. இலங்கைப் பயண அனுபவங்கள் பற்றி மங்கையர் கழகத்தில் அவள் சில சொற்பொழிவுகள் செய்தாள். ஒரு திங்கட்கிழமை மாலையில் மங்களேசுவரி அம்மாள் முதலிய எல்லோருடனும் திருப்பரங்குன்றம் போனாள் பூரணி. கோயிலில் சோமவார தரிசனம் முடித்த பின் ஓதுவார்க் கிழவர் வீட்டுக்குப் போய்ச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஓதுவார் வீட்டுப் பாட்டி பூரணியிடம் பலமுறை கேட்டுக் கேட்டு அலுத்துப் போன அந்தக் கேள்வியை இம்முறை மங்களேசுவரி அம்மாளிடம் கேட்டாள்.

"நான் சொல்லியதைத்தான் இவள் கேட்கவில்லை. நெருங்கிப் பழகுகிற நீங்களாவது காலாகாலத்தில் கல்யாணத்தைப் பற்றி இந்தப் பெண்ணுக்கு நினைவு படுத்த வேண்டாமோ அம்மா! இவளுக்கு வயதென்ன, கொஞ்சமாகவா ஆகிறது? மனத்துக்குள் என்னதான் நினைத்துக் கொண்டு பேசாமல் இருக்கிறாளோ? இவள் பேசாமல் இருந்தாலும் விவரம் தெரிந்த நீங்களெல்லாம் பேசாமல் இருக்கலாம் அம்மா?"

"எல்லாம் தானே நடக்கும் பாட்டி! அது அதற்குக் காலம் வரவேண்டாமோ?" என்று பொதுவாகப் பதில் கூறி பாட்டியின் கேள்வியைச் சமாளித்தாள் மங்களேசுவரி அம்மாள். அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு பூரணியின் பழைய தோழி கமலாவின் வீட்டுக்குப் போய் சிறிது நேரம் இருந்தார்கள். கமலாவுக்குப் பெண் குழந்தை பிறந்து இரண்டு மூன்று நாட்களாகியிருந்தன. கமலாவின் தாய் வெள்ளித்தட்டு நிறையச் சர்க்கரையும் தாம்பூலமும், பூவும் வைத்து பேத்தி பிறந்த மகிழ்ச்சியில் கொண்டாட்டத்தோடு அவர்களுக்கு உபசாரம் செய்தாள்.

பிள்ளைப்பேறு நிகழ்ந்த அறைக்குள் தாய்மைக் கோலத்தின் பெருமிதப் பொலிவோடு படுத்திருந்த கமலாவையும், அருகில் சண்பகப் பூங்குவியல் போல் மஞ்சள் பொன் நிறத்துக்குத் தவழ்ந்த குழந்தையையும் பார்த்தாள் பூரணி. அந்த அறைக்குள் உலகத்திலேயே இணையற்றதும் பெரியதுமான புனித அழகு ஒன்றைக் கண்டுகொண்டிருக்கிற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. கலைந்த கூந்தலும், கருவளையமிட்ட கண்களும், தாயாகிப் பெற்ற எழிலும் குலவ உயிருள்ள தெய்வச்சிலை தளர்ந்து துவண்டு கிடப்பது போல் படுத்திருந்தாள் கமலா.

"வா பூரணி! அப்படியே உட்கார்ந்து கொள். இலங்கைக்கெல்லாம் போய்ச் சுற்றிவிட்டு வந்தாயாமே? பிரயாணம் சுகமாக இருந்ததா?" என்று கமலா அன்புடன் விசாரித்தாள். அவளிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள் பூரணி.

"போய்விட்டு வருகிறேன், கமலா. அடுத்த வாரம் கல்கத்தாவுக்குப் போகிறேன். திரும்பி வந்ததும் மறுபடியும் உன்னைப் பார்க்க வ்ருகிறேன். உடம்பை நன்றாகக் கவனித்துக் கொள்" என்று விடைபெற்றுக் கொண்டு பூரணி எழுந்திருந்த போது...

"உனக்கென்ன அம்மா! கல்கத்தாவுக்குப் போவாய், அமெரிக்காவுக்குப் போவாய். எங்களையெல்லாம் போலவா நீ! தேர்தலுக்குக்கூட நிற்கிறாய் என்று கேள்விப்பட்டேன். தேர்தலில் வெற்றி பெற்று மந்திரியாக வந்தாலும் வருவாய். அப்படியெல்லாம் வந்தால் எங்களை மறந்துபோய் விடாதேயம்மா" என்று சிரித்துக் கொண்டே கூறினாள் கமலா.

சாதாரணமாகச் சிரித்துக் கொண்டுதான் அவள் இப்படிக் கூறினாள். ஆனால் பூரணியின் செவிகளில் சிந்தனையைக் கிளறும் விதத்தில் ஒலித்து உள்ளத்தில் பதிந்து கொண்டன இந்தச் சொற்கள். 'எல்லா பெண்களையும் போல் சர்வ சாதாரணமாக வாழாத காரணத்தாலேயே தன்னையறியாமலே தான் பலருடைய உள்ளங்களில் பெருமையையும் பெருமையோடு கலந்த பொறாமையையும் உண்டாக்கிக் கொண்டு வருகிறோமோ?' என்று ஒரு கணம் பொறுத்துக் கொள்ள முடியாத சந்தேகம் பூரணியின் மனத்தை வாட்டியது. 'உயரத்தில் இருப்பவர்கள் தகுதியுடையவர்களாக நல்லவர்களாக இருந்த போதிலும் அவர்கள் உயரத்தில் இருக்கிறார்களென்ற ஒரே காரணத்தால் கீழேயிருக்கிற அத்தனை பேருடைய கண்களும் அவர்கள் மேல் பட்டுக் கொண்டிருக்கிறதென்பதை உணர்கிற நிலை பூரணிக்கும் அப்போது ஏற்பட்டது. இரண்டு உயிர்கள் சேர்ந்து மூன்றாவது உயிரை உண்டாக்குகிற வாழ்வுக்குத்தான் உலகம் முழுவதும் அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவசரப்படுத்துகிறது. ஓதுவார் வீட்டிலும் கமலாவின் வீட்டிலும் தன்னைச் சந்தித்த கண்களில் தன்னோடு பேசிய வாய்களில் தன்னை நினைத்த உள்ளங்களில் இந்த அவசரம் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் வற்புறுத்தப்படுவதை அவள் புரிந்து கொள்ளத்தான் வேண்டியிருந்தது. எப்படியெல்லாமோ இலட்சிய வாழ்வு வாழத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது அவள் மணம். 'அப்படியெல்லாம் கனவுகள் காணாதே. இப்படித்தான் வாழவேண்டும். இப்படி வாழ்வது தான் வழக்கம். இப்படித்தான் எல்லோரும் வாழ்கிறார்கள்' என்று உலகம் சமயம் வாய்க்கும்போதெல்லாம் அவளுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. அவளுடைய அரவிந்தனோ, 'உடம்பால் வாழ்கிற வாழ்வுக்கு இப்போது அவசரமில்லை இன்னும் சிறிது காலத்துக்கு எங்களை மனங்களிலே வாழவிடுங்கள்' என்று மங்களேசுவரியம்மாளிடம் தத்துவம் பேசுகிறான். அவள் மட்டும் என்னவாம்? குறிஞ்சிப் பூப்பது போல் அபூர்வமாக தன் மனத்தில் அந்தக் கம்பீரம் பூக்கும் போது, ஆசைகளும் பாசங்களும் நிறைந்த சிறிய வாழ்வை மறந்து ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் முதியவர்களுமாக உறங்கித் தளர்ந்து இருளில் மூழ்கியிருக்கும் தமிழினத்து மக்களின் நடுவே ஒளிவிளக்கேற்றி அருள் நடை நடக்கும் வாழ்வையல்லவா அவள் உணர்கிறாள். அந்த வாழ்வின் நினைவு குறிஞ்சி போல் அரிதாய் மனத்துள் உயரமான இடத்தினதாய்ப் பூக்கும் போது அவள் கண்களில் நீர் மல்கி விடுகிறதே. கருத்தில் தெய்வீகம் மணக்கிறதே! தான் மட்டுமே உணர முடிந்தது, பிறர்க்கு உணர்த்த முடியாததுமான இந்த உணர்வுக்கு என்ன பெயர்?

திருப்பரங்குன்றத்தில் கமலாவின் வீட்டில் அந்த அனுபவம் ஏற்பட்ட சிறிது நாழிகை நேரத்தில் இத்தனையும் எண்ணித் தவித்தது பூரணியின் உள்ளம். அவள் குடியிருந்த வீட்டின் சாவியும் கமலாவின் தாய் வசம்தான் கொடுத்து வைக்கப்பட்டிருந்தது. வெகுநாட்களாக வீடு பூட்டிக் கிடந்ததனால் சாவியை வாங்கிக் கொண்டு போய்த் திறந்து பார்த்துவிட்டு வந்தாள் பூரணி.

"எதற்காக இங்கு ஒரு வீட்டைப் பூட்டிப் போட்டுக் கொண்டு தண்டத்துக்கு வாடகை கொடுக்கிறாய்? பேசாமல் எல்லாவற்றையும் ஒழித்துக் கொண்டு மதுரைக்கே வந்துவிடு. நம் வீட்டு மாடி முழுவதும் உனக்கு விட்டுவிடுகிறேன்" என்றாள் மங்களேசுவரி அம்மாள். பூரணி அதற்கு உடனடியாக இணங்கிவிடவில்லை. "பார்க்கலாம் அம்மா. இப்போது அவசரமில்லை" என்று கூறினாள்.

தம்பி சம்பந்தனும் தங்கை மங்கையர்க்கரசியும் மங்களேசுவரி அம்மாள் வீட்டிலேயே தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். செல்லத்தைப் போல் ஏறக்குறைய அவ்வீட்டுக் குழந்தைகளாகவே ஆகியிருந்தார்கள். மூத்த தம்பி திருநாவுக்கரசு அச்சகத்திலேயே அரவிந்தனோடு இருந்து வந்தான். இவற்றையெல்லாம் சிந்தித்துத் தீர்மானமாய் முடிவு செய்து கொண்ட பின்புதான் அந்த அம்மாள் பூரணியிடம் அக்கேள்வியைக் கேட்டாள்.

"நீ மட்டும் தனியாக இங்கே வீடு வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய் பெண்ணே? ஒரே குடும்பமாகப் பழகிக் கொண்டிருக்கிற நாம், ஒரே குடும்பமாக வசிக்க ஆசைப்படுவதிலே என்ன தவறு?" என்று மீண்டும் இரண்டொருமுறை வற்புறுத்திச் சொல்லிப் பார்த்தாள் மங்களேசுவரி அம்மாள். பூரணி இதற்குச் சரியாக மறுமொழி கூறவில்லை.

அன்றைக்கு மாலையில் திருப்பரங்குன்றம் சென்ற அவர்கள் மதுரை திரும்பும்போது எட்டு மணிக்கு மேலாகிவிட்டது. அங்கிருந்து காரில் திரும்பிப் புறப்படும்போது காரின் பின்புறத்துக் கண்ணாடி வழியாக ஏக்கத்தோடு திரும்பிப் பார்த்தாள் பூரணி. குன்றின் உச்சியில் நீல ஒளி உமிழ்ந்து சிரித்துக் கொண்டிருந்தது ஓம். காரின் ஓட்டத்தில் விரைவாகப் பின்னுக்கு நகர்ந்து கொண்டு போகும் அந்த ஊரிலும், குன்றின் உச்சியில் ஒளி மலராய் மலர்ந்து வெண்நீலச் சுடர் திகழும் 'ஓமி'லும் தான் எத்தனை அழகு. 'இந்த அழகில்தானே அப்பாவின் மனம் தோய்ந்து நின்றது. இந்த அழகில் தானே அப்பாவின் சிந்தனைகளும் தத்துவங்களும் மலர்ந்தன. அந்த அழகில்தானே அப்பா என்னை வளர்த்து அறிவாக்கி ஆளாக்கி விட்டார்' என்று பழையனவும் புதியனவுமாகிய நினைவுகளை நினைத்து நினைத்து நெட்டுயிர்த்தாள் அவள். அன்று இரவு நெடுநேரம் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் பூரணி. சிந்தனைகளின் தவிப்பில் புழுங்கியது அவள் உள்ளம்.

திருப்பரங்குன்றத்தில் சிறிய தெருக்களில் மதுரை நகரத்தின் அகன்ற வீதிகளில் தான் நடந்தும், காரிலும் சென்றபோது சில ஆண்டுகளுக்கு முன் பழகியவர்களும், பழகாதவர்களும், தன்னை எப்படிப் பார்த்தார்களோ அதைவிட அதிகமான பயத்துடனும் மரியாதையுடனும் இப்போது பார்ப்பதை அவள் தெரிந்து கொண்டிருந்தாள். மேடை, பிறர் புகழ்ச்சி, வெளிநாட்டுப் பயணம், தேர்தல் எல்லாமாகச் சேர்ந்து சாதாரண மக்கள் அருகில் நெருங்கக் கூசியும் தயங்கியும் ஒதுங்குகிற கௌரவத்தைத் தன்னிடம் சேர்த்து விடத் தொடங்கியிருப்பதும் அவளுக்கு விளங்கிற்று. செல்வமும், செல்வாக்கும், புகழும் சேரச் சேர அதைக் கண்டு சாதாரண மக்கள் பயப்படத் தொடங்கி மதித்து நிற்கிறார்கள். ஆனால் அவற்றுக்குரியவர் மேல் அன்பை நெகிழவிடக் கூசுகிறார்கள். அன்பால் நெகிழாமல் பயத்தால் நெகிழும் இந்தக் கௌரவம் என்னவோ போல், ஏற்றுக் கொள்ள அருவருக்கும் விதத்தினதாகப் பட்டது பூரணிக்கு. இப்போது அவளை எங்கே சந்தித்தாலும் யார் சந்தித்தாலும், தேர்தலைப் பற்றியும் அரசியலைப் பற்றியுமே பேசினார்கள். சந்திக்கிறவர்கள் தேர்தலையும் அரசியலையும் விட்டு வேறு ஏதாவது நெகிழ்ந்து பேசமாட்டார்களா என்று அவளே ஏங்கும் படியாகிவிட்டது.


குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Empty Re: குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி

Post by சிவா Sat 15 Sep 2018 - 5:05


ஒன்று அரசியலைப் பற்றிப் பேசினார்கள். அல்லது திருமணத்தைப் பற்றி நினைவு மூட்டினார்கள். உறக்கம் வந்துவிட்டாலும் இந்த நினைவுகளை மறக்கலாம். ஆனால் உறக்கம் கண் இமைகளில் வந்து கலக்கவில்லை. மனிதர்களின் நினைவுகள் தான் கண் இமைகளுக்கு முன்னே வந்து அவளைக் கலக்கியது. அரவிந்தன் தோன்றி, 'எண்ணங்களில் வாழும் வாழ்வுக்கு அழிவில்லை. இன்னும் சிறிது காலத்துக்கு எண்ணங்களிலேயே வாழலாம்' என்கிறான். ஓதுவார் வீட்டுப் பாட்டியும், கமலாவின் தாயும், மங்களேசுவரி அம்மாளும் தோன்றி 'எண்ணங்களால் வாழ்வதெல்லம் உலகத்துக்குத் தெரியாது. உலகம் ஒப்புக்கொள்கிற மாதிரி வாழுங்கள்' என்று அழுத்திச் சொல்கிறார்கள். அவள் கண்களில் இருபுறமும் உருவெளியில் தோற்றங்கள். நீண்ட நாழிகைத் தவிப்புக்குப் பின் மெல்லத் தளர்ந்து உறங்கிய போது, அவள் ஒரு கனவு கண்டாள்.

மேக மண்டலத்தின் உயரத்துக்கு வளர்ந்து வீறெய்தி நிற்கும் ஒரு பெரிய மலைச்சிகரத்தில் அவள் நிற்கிறாள். தூய பஞ்சுப் பொதிகள் போல் குவிந்திருந்த மேகங்களையே எட்டுகிறவரை கொய்தெடுத்து இடையில் சுற்றி உடுத்துக் கொண்டது போல் வெண்துகில் உடுத்து நிற்கிறாள். சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை அந்த மலைமேனியெல்லாம் நீலநிறப் பூக்கள் தேன் துளி சிலிர்க்கப் புது மலர்ச்சி கொண்டு இலங்குகின்றன. அந்தப் பூக்களை எங்கோ எப்போதோ பலமுறை பார்த்திருப்பது போல் ஒரு ஞாபகம் நெஞ்சடியில் முறிமுள்ளாய் உறுத்துகிறது. அந்த உயரத்திலிருந்து காணும் போது கீழே மண்ணுலகம் சிறியதாய் இருண்டதாய்ச் சீவனற்றுத் தெரிகிறது. மேலிருந்தபடியே அந்த உயரத்தில் நின்று கொண்டு பூக்களைத் தூவுவதுபோல கீழே இருண்டிருக்கும் உலகத்துக்கு இரண்டு கைகளும் நிறைய ஒளியை அள்ளித் தூவ வேண்டும் போல் அவளுக்கு ஆசையாக இருக்கிறது. கைகளில் ஒளிப் பூக்களைப் போல் அவள் எவற்றையோ அள்ளுகிறாள். கீழே அவற்றைத் தூவுவதற்காக மேலெழுந்த இரண்டு கைகளின் பத்து விரல்களிலிருந்தும் பொன்னொளிக் கதிர்க்கோடுகள் சுடரிட்டு பாய்கின்றன! இப்படி இன்னும் என்னென்னவோ அற்புதமாய்த் தோற்றங்கள் தொடர்கின்றன. தொடர்புடனும் தொடர்பின்றியும் தொடர்கின்றன. கனவு கலைந்து விழித்துக் கொண்டபோது தலையணை நனைந்திருந்தது. கன்னங்களில் ஈரக்கரை. கண்களில் நீர் பெருகித் தணிந்திருந்தது. கனவின் போது தானாக அழுதிருப்பதும் புரிந்தது பூரணிக்கு.

அடுத்த சில நாட்களில் கல்கத்தாவுக்குப் புறப்படுவதற்காக உற்சாகமான ஏற்பாடுகள் தொடங்கவே சிறிது நிம்மதியடைந்தாள் பூரணி. தேர்தலுக்கான ஆடம்பர ஏற்பாடுகளை அறவே கைவிட்டு விட்டான் அரவிந்தன். 'பூரணியும் தேர்தலுக்கு நிற்கிறாள்' என்று மக்களுக்குத் தெரிவதை விட அதிகமாக எந்த விளம்பர ஏற்பாடும் செய்யக்கூடாதென்று முருகானந்தத்திடம் வாக்கு வாங்கிக் கொண்டிருந்தான் அவன். ஆனால் முருகானந்தம் உலகியல் தெரிந்தவனாக நடந்துகொண்டான். அரவிந்தனுக்கு வாக்குக் கொடுத்த கண்டிப்புக்காகத் தான் ஒன்றும் செய்யாமலிருந்தாலும் பொது மக்களாகவே கூட்டம் போட்டு விளம்பரம் செய்கிற மாதிரி அங்கங்கே நண்பர்களிடம் இரகசியமாகச் சொல்லி ஏற்பாடு செய்திருந்தான் முருகானந்தம். அவனுடைய ஏற்பாட்டால் ஆடம்பரமின்றித் தாமாகவே பூரணியை ஆதரிக்கும் தேர்தல் கூட்டங்கள் சில இடங்களில் நடந்தன. இதே சமயத்தில் புது மண்டபத்து மனிதரும் பர்மாக்காரரும் விளம்பரத்துக்குப் பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தார்கள்.

பூரணிக்குத் துணையாக மங்களேசுவரி அம்மாளும் கல்கத்தாவுக்குப் போய்வர வேண்டுமென்று ஏற்பாடாகியிருந்தது. அவர்கள் கல்கத்தாவுக்குப் புறப்படுவதற்காகப் பயணம் தொடங்க இருந்த தினத்துக்கு முதல்நாள் காலை அரவிந்தனுடைய வாழ்க்கையில் இமயமலை சரிந்ததுபோல் ஒரு மாபெரும் மாறுதலை உண்டாக்கியது பர்மாக்காரரின் புதுவிதமான சூழ்ச்சி ஒன்று. தனது நிகரற்ற தன்னடக்கப் பண்பினால் அந்த மாறுதலையும் சிரித்துக் கொண்டே சர்வ சாதாரணமாகத் தாங்கிக் கொண்டான் அரவிந்தன். ஆயினும் அதனால் அவன் மனம் எல்லையற்றுப் புண்பட்டது. வருந்தி வாடியது. பொறுக்க இயலாமல் உள்ளுக்குள்ளேயே தவித்தான் அவன்.

அன்று காலை வழக்கம் போல் அச்சக வேலைகள் தொடங்கி நடந்து கொண்டிருந்தன. அரவிந்தன் அறையில் ஊரிலிருந்து சிற்றப்பாவின் நிலங்களை விற்று அவன் கொணர்ந்திருந்த தொகையில் தேர்தலுக்காக முதலில் செலவழித்த சிறிய பகுதி தவிர எஞ்சியதெல்லாம் அச்சகக் கடன்களை அடைக்கவும் புதிய எந்திரங்கள் வாங்கவும் செலவிடப்பட்டிருந்தது. அவன் அப்படித் தன் பணத்தைச் செலவிட்டு நிலைமையைச் சரிக்கட்டியிருக்கா விட்டால் அச்சக நிர்வாகம் கடனில் மூழ்க நேரிட்டிருக்கும். அது நேரிடாமல் காப்பாற்றிவிட்ட பெருமிதத்தோடு வரவு செலவுக் கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அப்போது மீனாட்சிசுந்தரத்தின் வீட்டிலிருந்து வேலையாள் வந்து கூப்பிட்டான். "பெரியம்மா உங்களை கூட்டிக் கொண்டு வரச்சொன்னாங்க." பெரியம்மா என்றுதான் திருமதி மீனாட்சிசுந்தரத்தை வேலைக்காரர்கள் அனைவரும் மரியாதையாக அழைப்பார்கள்.

'கடைசிப் பெண்ணின் திருமண ஏற்பாடு பற்றி ஏதாவது நம்மைக் கலந்து பேசவேண்டியிருக்கும். அல்லது சிறிய பையனின் படிப்பைப் பற்றி இருக்கும். இரண்டும் இல்லாவிட்டால் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி எனக்கு அறிவுரை கூறுவதற்காக இருக்கும்' என்று நினைத்துக் கொண்டு புறப்பட்டுப் போனான் அரவிந்தன். ஆனால் முற்றிலும் வேறான நிகழ்ச்சி அங்கே அவனை எதிர்கொண்டது.

திருநெல்வேலியிலிருந்தும், திருச்சியிலிருந்தும் மீனாட்சிசுந்தரத்தின் இரண்டு மாப்பிள்ளைகளும் வந்திருந்தார்கள். மீனாட்சிசுந்தரத்தின் இறுதிச் சடங்குகளுக்கு வந்துவிட்டுச் சென்ற பின்பு இப்போதுதான் அவர்களை மீண்டும் பார்க்கிறான் அரவிந்தன்.

"வாருங்கள்! ஏது இரண்டு மாப்பிள்ளைகளும் கட்சி சேர்ந்து கொண்டு வந்திருக்கிறார் போலிருக்கிறதே?" என்று கலகலப்பாக வரவேற்ற அரவிந்தன், பதிலுக்கு அவர்களிடம் கலகலப்பைக் காணாமல் மருண்டான். உட்புறம் கதவருகில் திருமதி மீனாட்சிசுந்தரம் தென்பட்டாள்.

"என்னம்மா? கூப்பிட்டனுப்பினீர்களாமே" என்று அந்த பெரியம்மாவிடம் கேட்டான் அரவிந்தன். அந்த அம்மாள் முகத்திலும் வழக்கமாக இருக்கும் ஏதோ ஓர் ஒளி குறைந்திருக்கிறதாகப்பட்டது அவனுக்கு. உடனடியாக அந்த அம்மாளும் அவனுக்குப் பதில் சொல்லத் தயங்கி நின்றாள்.

"இப்போது நீங்கள் எல்லோரும் ஏதோ மனத் துன்பத்தோடு இருக்கிறார் போலத் தோன்றுகிறது. நான் வேண்டுமானால் போய்விட்டு அப்புறம் வருகிறேன்" என்று அரவிந்தன் திரும்பிப் புறப்பட முயன்ற போதுதான் அந்த அம்மாளிடமிருந்து பேச்சுப் பிறந்தது. "இல்லை! உட்காரு தம்பி! உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும். அதற்காகத்தான் கூப்பிட்டனுப்பினேன்."

அரவிந்தன் உட்கார்ந்தான். அந்த அம்மாள் தொடங்கினாள்.

"மாப்பிள்ளை இரண்டு பேரும் வேலையை விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். 'பிரஸ்' நிர்வாகத்தை எடுத்துக் கொண்டு புதிதாக என்னென்னவோ மாறுதல் எல்லாம் செய்து வியாபாரத்தைப் பெரிதாய் வளர்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். பெரிதாக முதலீடு செய்து இன்னும் புது மெஷின்கள் எல்லாம் வாங்கிப் பிரஸ்ஸை விரிவாக்க இந்த ஊரிலேயே தெரிந்தவர்கள் யாரோ பணம் புரட்டித் தருவதற்கு இணங்கியிருக்கிறார்களாம்." அந்த அம்மாள் தயங்கித் தயங்கி ஒருவிதமாகக் கூறி முடித்தாள். அதுவரை பேசாமலே இருந்த இரண்டு மாப்பிள்ளைகளில் மூத்த மாப்பிள்ளை அரவிந்தனை நோக்கிச் சிறிது கடுமையாகவே இரைந்தான்.

"யாரோ ஒரு தமிழ்ப் பண்டிதருடைய பொண்ணுக்குத் தேர்தல் விளம்பரம் அடிக்கவும், மனம் போன போக்கில் நீயும் உன் நண்பர்களும் குடியிருக்கவும் அரட்டையடிக்கவும் மாமா பிரஸ் வைத்துக் கொடுத்துவிட்டுப் போகவில்லை உன்னிடம். பிரஸ் ஆகவா இருக்கிறது அது? சந்தை மடமாக அல்லவா ஆக்கியிருக்கிறாய்."

"கொள்ளை போவதற்கு இது ஒன்றும் பிள்ளையில்லாச் சொத்து இல்லை தம்பி" என்று சேர்ந்து கொண்டான் இளைய மாப்பிள்ளை. உட்புறம் திருமதி மீனாட்சிசுந்தரம் தலையைக் குனிந்து கொண்டு நின்றாள். அரவிந்தனுக்குக் நெஞ்சம் கொதித்தது. வாய் ஏதேதோ பேசிவிடத் துடித்தது. அந்தப் பெரியம்மாளின் பெருந்தன்மையில் நம்பிக்கை வைத்து ஏதோ கூறுவதற்காக "அம்மா!" என்று அந்தம்மாளை நோக்கிப் பேச வாயெடுத்தான். 'நீ சொல்ல ஒன்றுமில்லை, நான் கேட்கவும் ஒன்றுமில்லை' என்று கூறாமல் கூறுவது போல் விருட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்புறம் போய் மறைந்துவிட்டாள் திருமதி மீனாட்சிசுந்தரம்.

மாற்ற முடியாத விதத்தில் யாரோ வேண்டுமென்றே முயன்று அவர்கள் மனங்களில் வஞ்சக வித்துக்களைத் தூவியிருக்க வேண்டுமென்று அரவிந்தன் அனுமானித்துக் கொண்டான். யார் விதைத்த வஞ்சனையென்று அவனுக்குப் புரிந்தது. புரிந்து என்ன செய்ய? பெருந்தன்மை நிறைந்த திருமதி மீனாட்சிசுந்தரம் தான் சொல்ல முயன்றதைக் கேட்கவே தயாரில்லாதபோது செய்ய என்ன இருக்கிறது? முரட்டுத்தனமாகத் தன்னைத் தூக்கியெறிந்த மாப்பிள்ளைகளைப் பதிலுக்கு ஏதாவது பேசியிருக்கலாம் அவன். அப்படியும் பேசவில்லை. உயர்ந்தவர்களைப் புகழவும், இழிந்தவர்களை இகழவும் செய்யாத அவன் நடுநிலை பழகிய நாவுக்கு இறைந்து கூச்சலிடத் தெரியவில்லை. ஏசி வம்புக்கு இழுக்கத் துணிவில்லை. 'இன்னாது அம்மா இவ்வுலகம்' - என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துணிந்து இந்த உலகத்துக்கு முட்டாள் பட்டம் கட்டிவிட்டுப் போன கவிஞன் அகப்பட்டால் அவன் வாயில் பிடி சர்க்கரையைப் போடவேண்டும் போல் இருந்தது. உள்ளேபோய் "இந்தாருங்கள் சாவிக்கொத்து" என்று அந்த அம்மாளின் காலடியில் சாவிக்கொத்தை வைத்து வணங்கிவிட்டு மௌனமாகத் தலைகுனிந்து வெளியேறினான் அரவிந்தன்.

பல ஆண்டுகளுக்கு முன் அநாதைச் சிறுவனாக இரயில் பாதையிலே நடந்து கிராமத்திலிருந்து வெளியேறிய பழைய சம்பவம் இன்று நினைவு வந்தது அவனுக்கு. தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த இந்தச் சரிவை யாரிடமும் வெளியிடவில்லை.

ஒன்றுமே நிகழாததுபோல் பழைய கலகலப்புடன் அன்று மாலையே பூரணியோடும் மங்களேசுவரி அம்மாளோடும் சென்னைக்குப் புறப்பட்டுப்போய் மறுநாள் மாலை சென்ட்ரல் நிலையத்தில் ஹௌரா மெயிலில் அவர்களைக் கல்கத்தாவுக்கு இரயிலேற்றிவிட்டு மதுரை திரும்பினான். பூரணி, முருகானந்தம் எவருக்கும் தன் வாயால் அந்தச் செய்தியைத் தெரியவிடவில்லை அவன்.


குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Empty Re: குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி

Post by சிவா Sat 15 Sep 2018 - 5:05

34



கரையா எனது மனக்கல்லும் கரைந்தது
கலந்து கொளற்கு என் கருத்தும் விரைந்து
புரையா நிலையில் என் புந்தியும் தங்கிற்று
பொய்படாக் காதல் ததும்பிமேற் பொங்கிற்று.
-- இராமலிங்க அடிகள்


பூரணியையும் மங்களேசுவரி அம்மாளையும் கல்கத்தா மெயிலில் ஏற்றிவிட்டுச் சென்னையிலிருந்து மதுரை திரும்பிய அரவிந்தன் வாழ்க்கையிலேயே அதுவரை உணர்ந்திருக்க முடியாத வேதனையையும் தனிமையையும் முதல் முதலாக உணர்ந்தான். மீனாட்சி அச்சகத்திலிருந்து தன்னுடைய வாழ்வு பிரியும் என்றோ, பிரிக்கப்படும் என்றோ கனவில் கூட எண்ணியிருக்கவில்லை அவன். எண்ணியிருந்தால் என்ன? எண்ணியிருக்காவிட்டால் என்ன? திடீரென்று கண்ட பயங்கரக் கனவுபோல் அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது. மீனாட்சிசுந்தரம் உயிரோடிருந்தால் இப்படி நடந்திருக்குமா? கேட்பார் பேச்சைக் கெட்டுக்கொண்டு மனிதர்கள் எவ்வளவுக்கு நன்றி கெட்டவர்களாகவும், நன்மையற்றவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். அந்த அச்சகமும் அதன் பொருள் வளமும் சிறப்படைவதற்கு இரவு - பகல் பாராமல் துன்புற்று உழைத்ததெல்லாம் ஒவ்வொன்றாக நினைத்து நினைத்து நொந்தான் அரவிந்தன். தகப்பனுக்கு மூத்தபிள்ளை உழைப்பதை விட அதிகமாக உழைத்தானே அவருக்கு? அந்த உழைப்புக்கு உண்மைக்கு செலுத்தப்பட வேண்டிய நன்றியுணர்வெல்லாம் அவரோடு அவரைப் போலவே மாய்ந்துபோய் விட்டனவா? மறக்கப்பட்டு விட்டனவா?

கல்கத்தாவுக்குப் புறப்படுகிற நேரத்தில் பூரணிக்கோ மங்களேசுவரி அம்மாளுக்கோ இந்த நிகழ்ச்சி தெரிந்திருந்தால் பயணத்தைக்கூட நிறுத்தியிருப்பார்கள். அவ்வளவுக்கு வருந்தத்தக்க செய்தி இது. அது தெரிந்து அவர்கள் பயணம் தடைப்பட நேராமல் தன் துயரத்தைத் தன்னோடு மறைத்துக் கொண்டு விட்டதில் அவனுக்கு மகிழ்ச்சியே. திருமதி மீனாட்சிசுந்தரத்தின் காலடியில் அச்சகத்தின் சாவிக்கொத்தை வைத்து வணங்கிவிட்டு வானமே நிழலாய்ப் பூமியே நிலையாய் ஒரு பற்றுக்கோடும் இன்றி அவன் கிளம்பிய பின்புதான் பூரணியோடும் மங்களேசுவரி அம்மாளுடனும் சென்னைக்கு இரயிலேறினான். எவ்வளவோ தன்னடக்கத்தோடு தன் வேதனையை மறைத்துக் கொண்டு அவன் கலகலப்பாகத்தான் இருக்க முயன்றான். ஆயினும் "இன்று உங்கள் முகம் ஏதோ களை குன்றிக் காணப்படுகிறது. உங்களுக்கு உடல் நலமில்லை போல் தோன்றுகிறது. இவ்வளவு சிரமப்பட்டு நீங்கள் எங்களை வழியனுப்பச் சென்னை வரை வருவானேன்? நாங்கள் பார்த்துப் போய்க் கொள்ளமாட்டோமா?" என்று இரயிலில் போகும் போது பூரணி அவனைக் கேட்டுவிட்டாள். 'மெய்த் திருப்பதம் மேவு என்ற போதிலும் இத்திருத் துறந்து ஏகு என்ற போதிலும், சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை' போல இராமன் இருந்ததாகப் பள்ளிப் பருவத்தில் கம்பராமாயணம் படித்திருந்தானே, அப்படி இருந்துவிட வேண்டுமென்றுதான் முயன்றான் அரவிந்தன். ஆனால் நுணுக்கமான நோக்குள்ள பூரணி அவன் முகத்தையும் சிரிப்பையும் கடந்து உண்மையைக் கண்டு விட்டாள். அவளைக் கல்கத்தா மெயிலில் ஏற்றியனுப்புகிற வரையில் ஏதேதோ சொல்லி உண்மையை மறைத்துவிட்டு வந்திருந்தான் அவன்.

சென்னையிலிருந்து திரும்பிய அன்று காலையில் தன் பெட்டிப் படுக்கை முதலிய பொருள்களை எடுத்துக் கொண்டு வருவதற்காகக் கடைசியாய் அச்சகத்துக்குச் சென்றான். பெட்டி படுக்கைகளையும், வேட்டி துணிமணிகளையும் எடுத்துக் கொண்டு அவன் கிளம்பின போது அவற்றில் சிலவற்றைக் கையில் வாங்கிக் கொண்டு பூரணியின் தம்பி திருநாவுக்கரசும் உடன் வெளியேறி விட்டான். விசாரித்ததில், "எனக்கு நேற்றோடு கணக்குத் தீர்த்து வெளியே போகச் சொல்லிவிட்டார்கள். இனிமேல் இங்கென்ன வேலை" என்றான் திருநாவுக்கரசு. அச்சகத்திலிருந்து ஒழித்துக் கொண்டு வெளியேறும்போது, கூடியவரை எவருடைய கண்களிலும் படாமல் வெளியேற வேண்டும் என்றுதான் அரவிந்தன் எண்ணியிருந்தான்.

ஆனால் அப்படி முடியவில்லை. அவன் வெளியேறுகிற நேரம் பார்த்தா அவனைத் தேடிக் கொண்டு வசந்தாவும் முருகானந்தமும் அச்சக வாயிலில் காரில் வந்து இறங்க வேண்டும்? முருகானந்தம் புன்னகையோடு கேட்கலானன்.

"என்ன கோலம் இது. எங்காவது வெளியூருக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறாயா அரவிந்தன்? அவர்களை இரயிலேற்றிவிட்டு நீ இன்று திரும்பியிருப்பாயென எதிர்பார்த்துதான் உன்னை இங்கே காண வந்தோம். நீ என்னடா என்றால் மறுபடியும் எங்கோ பயணம் கிளம்பிக் கொண்டிருக்கிறாய்?"

"முருகானந்தம்! இது வெளியூர்ப் பயணம் அல்ல! என்னுடைய வாழ்க்கைப் பயணம்" என்று சொல்லி மெல்லச் சிரித்தான் அரவிந்தன். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று தானே அவனுடைய திருக்குறள் சொல்லுகிறது. ஆனாலும் தான் சிரித்த சிரிப்பு அப்போது முழுமையாக இருந்திருக்க முடியுமென்பதில் அவனுக்கே நம்பிக்கை ஏற்படவில்லை.

"விளங்கும்படியாகச் சொல் அரவிந்தன். எனக்குப் புரியவில்லை" என்றான் முருகானந்தம். அதற்கு மேலும் உண்மையை மறைக்க முடியவில்லை அரவிந்தனுக்கு.

"இன்னும் எப்படியப்பா விளக்குவது? பதவுரை, பொழிப்புரை சொல்ல வேண்டுமா என்ன? இந்த மீனாட்சி அச்சகத்தை மீனாட்சிசுந்தரத்தின் மாப்பிள்ளை இருவரிடமும் ஒப்படைத்தாயிற்று. எனக்கும் இதற்கும் இனியொரு தொடர்பும் இல்லை. எனக்கும் இந்தப் பயல் திருநாவுக்கரசுக்கும் தங்கிக் கொள்ள இடம் தேடிப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நான். மங்கம்மாள் சத்திரத்திலோ அல்லது வேறு ஏதாவது ஒரு விடுதியிலோ இரண்டு மூன்று நாட்கள் தங்கிக் கொண்டு அப்புறம் வேறு இடம் பார்க்கலாமென நினைக்கிறேன்."

"நன்றி கெட்ட உலகம்" என்று கருவினான் முருகானந்தம். அரவிந்தனுக்கு இப்படி நடக்குமென்று நினைத்துப் பார்க்கவே முருகானந்தத்துக்கு வேதனையாயிருந்தது.

"ஒரு சத்திரத்துக்கும் போக வேண்டாம். நம் வீடு எங்கே போயிற்று? மாடியில் எல்லா அறையும் காலிதான். நீங்கள் நம் வீட்டுக்குத்தான் வரவேண்டும். பூரணியக்காவிடமே திருப்பரங்குன்றம் வீட்டை ஒழித்துக் கொண்டு நம் வீட்டோடு வந்துவிடும்படி அம்மா வற்புறுத்திக் கொண்டிருக்கிறாள். உங்களுக்கு இது மாதிரி ஏற்பட்டு வெளியிடத்தில் போய் நீங்கள் தங்குவதை நாங்கள் பார்த்துக் கொண்டு பேசாமலிருந்தோமென்றால் அம்மா திரும்பி வந்ததும் கோபித்துக் கொள்வாள். கண்டிப்பாக நீங்கள் வேறு இடத்துக்குப் போகக்கூடாது" என்று அரவிந்தனிடமும் திருநாவுக்கரசிடமும் இருந்த பெட்டி படுக்கைகளை வாங்கி காருக்குள் திணிக்கலானாள் வசந்தா. முருகானந்தம் உள்ளம் துடித்துப் பேசினான். "என்ன இருந்தாலும் மற்றவர்களை மன்னிக்கிற பண்பு உனக்கு இத்தனை அதிகமாக இருக்கக்கூடாது அரவிந்தன். உன்னுடைய சாது குணத்தாலும், மன்னிக்கிற சுபாவத்தாலும் பலரைக் கெடுதல் செய்ய துணியும்படி ஆக்கியிருக்கிறாய் நீ. கொட்டினால் தேள். கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி என்று தான் உலகம் கணக்கிடுகிறது. ஒரு தரமாவது கொட்டிக் காண்பிக்க வேண்டுமப்பா நீ."

"மன்னிக்கவும், பதிலுக்குக் கெடுதல் செய்யவும் இது என்ன பெரிய விரோதமா! ஏதோ அந்த அம்மாள் கூப்பிட்டு அனுப்பினார்கள். மாப்பிள்ளைகள் அச்சகத்தை எடுத்துக் கொண்டு புதிய முதலீட்டுடன் பெரிய அளவில் என்னென்னவெல்லாமோ விரிவாகச் செய்யப் போகிறார்களென்றும் கூறினார்கள். 'நன்றாகச் செய்யட்டும் எனக்கும் மகிழ்ச்சிதான்' என்று சாவியைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன், அவ்வளவுதான்."

"அப்படிச் சாதாரணமாக இருக்க முடியாது அரவிந்தன். யாரோ பின்னால் நின்று கொண்டு திட்டமிட்டுக் கெடுதல் செய்திருக்கிறார்கள். நீ என்னிடம் மறைக்கிறாய்! ஆனாலும் என்னால் இந்தச் சூழ்ச்சி நாடகத்துக்குக் காரணம் யார் என்று அறிந்து சொல்ல முடியும். இன்று மாலைக்குள் கண்டுபிடித்துச் சொல்லவில்லையானால் என் பெயர் முருகானந்தம் இல்லை. நீ என்னவோ ஒன்றும் பெரிதாக நடந்துவிடவில்லை போல் சிரித்துப் பேசினாலும் மனம் வேதனைப்படுகிறது என்று உன் முகம் காட்டுகிறதே அப்பா."

"அதெல்லாம் ஒன்றுமில்லை முருகானந்தம்! இந்த விநாடியோடு நீ இதை மறந்துவிடுவதுதான் நல்லது" என்று அமைதியாகக் கூறி முருகானந்தத்தைச் சமாதானப்படுத்தினான் அரவிந்தன். அவன் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் வசந்தாவும் முருகானந்தமும் வற்புறுத்தி தானப்ப முதலித் தெரு வீட்டுக்கே அவனை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

"ஆனாலும் நீ கெட்டிக்காரன் தானப்பா. இவ்வளவு பெரிய காரியம் நடந்தும் அன்று அவர்களோடு சென்னை புறப்படும்போது கூட என்னிடமோ அவர்களிடமோ ஒரு வார்த்தை சொல்லவில்லையே நீ" என்று வீட்டுக்கு அழைத்துச் சென்றபின் மறுபடியும் அரவிந்தனைக் கடிந்து கொண்டான் முருகானந்தம். "தம்பி! கவலைப்படாதே! வேறு ஓர் அச்சகத்தில் உனக்கு வேலை தேடித்தருவது என் பொறுப்பு. ஒரு வேலையுமே கிடைக்கவில்லையானால் என்னுடைய தையல் கடைக்கு வந்துவிடு. தொழில்களில் எதுவுமே குறைவுடையதில்லை. தொழிலையும் சொல்லிக் கொடுத்து மீனாட்சி அச்சகத்தில் கொடுத்ததை விடப் பத்து ரூபாய் கூடவே சம்பளம் தருகிறேன் நான்" என்று பூரணியின் தம்பி திருநாவுக்கரசை முதுகில் தட்டிக் கொடுத்து முருகானந்தம் உற்சாகப்படுத்தினான். தனக்கு வேண்டியவர்கள் சோர்வடைந்து கிடப்பதை ஒரு கணமும் பொறுக்காதவன் அவன்.

மங்களேசுவரி அம்மாள் வீட்டு மாடியில் வசதியான அறை ஒன்றில் அரவிந்தனைத் தங்கச் செய்திருந்தாள் வசந்தா. குளியலறையும் இணைந்த வசதியான இடம் அது. "கூச்சமோ தயக்கமோ இல்லாமல் இங்கேயே பழகலாம். இது உங்களுக்கு புது இடம் இல்லை அண்ணா. உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ள வேண்டும். இங்கேயே மாடியில் அலமாரி நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன" என்றாள் வசந்தா. மரியாதையோடும் அன்புடனும் அரவிந்தனுக்கு ஓடியாடி உபசாரங்கள் செய்தாள் அவள்.

"எனக்காக நீங்கள் எல்லோரும் அதிகமான சிரமம் எடுத்துக் கொள்கிறீர்கள். இதற்கு நான் எப்படி நன்றி செலுத்தப் போகிறேனோ? நிம்மதியாக எங்கள் கிராமத்துப் பக்கம் போய் பத்து பன்னிரண்டு நாட்கள் சுற்றிவிட்டு வரலாமென நினைக்கிறேன்" என்று முருகானந்தத்தையும் வசந்தாவையும் நோக்கி அரவிந்தன் கூறினான்.

"அதெல்லாம் எங்கும் போகக்கூடாது. உங்களுக்கு இப்போது ஓய்வு தேவை. பல வகையிலும் மன வேதனைப்பட்டுப் போயிருக்கிறீர்கள். அக்கா கல்கத்தாவிலிருந்து திரும்புகிறவரை எங்கும் நகரக் கூடாது" என்று இருவருமே அவனைத் தடுத்துவிட்டார்கள். காப்பி, சிற்றுண்டி, உணவு என்று வேளை தவறாமல் வாராது வந்த விருந்தாளியைப் போற்றி உபசரிப்பது போல் அரவிந்தனைக் கவனித்துக் கொண்டாள் வசந்தா.

அன்று தையற்கடையைப் பூட்டிக் கொண்டு இரவு வீட்டுக்கு வந்த போது முருகானந்தம் அரவிந்தனுக்கு அந்தச் செய்தியைச் சொன்னான்.


குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Empty Re: குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி

Post by சிவா Sat 15 Sep 2018 - 5:06


"நான் விசாரித்து உண்மையைத் தெரிந்து கொண்டுவிட்டேன் அரவிந்தன். எல்லாம் பர்மாக்காரர் செய்த வினைதானப்பா. திருச்சியிலும் திருநெல்வேலியிலும் மீனாட்சிசுந்தரத்தின் மாப்பிள்ளைகள் வேலை பார்த்த கம்பெனிகளின் முதலாளிகள் பர்மாக்காரருக்கு வேண்டியவர்கள்; அவரே முயன்று தகவல் கூறி அவர்களை அங்கிருந்து நீக்கச் செய்ததுடன் மாமனாரின் அச்சகத்தை எடுத்து நடத்தலாம் என்று யோசனையும் கூறி வேறோர் ஆள் மூலம் முதலீடு செய்வதற்கு நிறைய பண உதவியும் அளித்திருக்கிறாராம். அசுர வேலைகள் செய்கிறார் அப்பா அவர். அவருடைய ஆட்கள் நாம் எங்கே போகிறோம், என்ன செய்கிறோம் என்று ஒவ்வொரு வினாடியும் கவனித்துக் கொண்டிருக்கிறார்களாமே. நீ கல்கத்தா மெயிலில் அவர்களை ஏற்றிவிடப் போனது, திரும்பியது, அச்சகத்திலிருந்து எல்லாவற்றையும் ஒழித்துக் கொண்டு இங்கே வந்தது எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்களே அவர் ஆட்கள்! இந்த அசுர சாமர்த்தியம் தான் இன்றைய அரசியலில் வெற்றி பெறும் கருவி அரவிந்தன். நீ என்னவோ நேர்மையையும் உண்மையையும் முதலாக வைத்துத் தேர்தலில் வெற்றியை எதிர்பார்க்கிறாய். இந்தக் காலத்தில் பிழை செய்யத் தெரிந்தவனுக்குத் தான் பிழைக்கத் தெரிகிறதப்பா" என்று முருகானந்தம் வந்து கூறிய போது 'பர்மாக்காரர்தான் இதை செய்திருக்க வேண்டும்' என முன்பே, தான் புரிந்து கொண்டிருந்த கருத்து அரவிந்தன் மனத்தில் இப்போது தெளிவாக உறுதியாயிற்று. அதை இன்னும் உறுதிப்படுத்துவது போல் அன்றிரவு பத்து மணிக்கு மேல் அந்த வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

தனக்கு விடப்பட்டிருந்த மாடியறையில் உட்கார்ந்து தன் மனத்தின் வேதனைகளையும் எண்ணங்களையும், பித்தன் போல் டைரியில் கிறுக்கிக் கொண்டிருந்தான் அரவிந்தன். மணி பத்தேகால் ஆகியிருந்தது. கீழ் வீட்டில் எல்லோரும் உறங்கிப் போயிருந்தார்கள். இரவு விளக்கு நீல ஒளி பரப்பிக் கொண்டிருந்தது. கீழ் வீட்டில் அந்த நேரத்தில் டெலிபோன் மணி அடித்தது. கீழே யாராவது விழித்துக் கொண்டு எடுத்துப் பேசுவார்கள் என்று அரவிந்தன் சிறிது நேரம் சும்மாயிருந்தான். கீழே எல்லோரும் ஆழ்ந்து தூங்கிப் போயிருந்ததனால் யாருமே டெலிபோனை எடுக்கவில்லை. மணியடிக்கிற ஒலி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. அரவிந்தன் மாடியிலிருந்து இறங்கிப் போய் டெலிபோனை எடுத்தான். 'யாருக்கு ஃபோன்' வந்திருக்கிறதென்று தெரிந்து கொண்டு அப்புறம் உரியவர்களை எழுப்பிப் பேசச் செய்யலாம் என்று எண்ணிக்கொண்டே அதை எடுத்த அரவிந்தன், 'மிஸ்டர் அரவிந்தன் இருக்கிறாரா?' என்று தன் பெயரே டெலிபோனில் விசாரிக்கப்படுவது கேட்டுத் திகைத்தான். ஒரு கணம் தயங்கிவிட்டு, "ஏன்? அரவிந்தன் தான் பேசுகிறேன். நீங்கள் யார்?" என்று அவன் பதிலுக்கு விசாரித்த போது, "இதோ கொஞ்சம் இருங்கள்" என்று எதிர்பக்கம் ஃபோன் யாரிடமோ மாற்றிக் கொடுக்கப்பட்டது. அடுத்த வினாடி, பர்மாக்காரரின் கடுமையான கட்டைக்குரல் அவன் செவிகளில் நாராசமாக ஒலித்தது. "நான் தான் பேசுகிறேன் தம்பி. குரலிலிருந்தே உனக்குப் புரியுமென்று நினைக்கிறேன். இந்த நிமிஷம் கூட எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கிறது. இப்போதும் குடி முழுகி விடவில்லை. கடைசியாக உன்னை கேட்கிறேன். தேர்தல் அபேட்சை மனுவை வாபஸ் வாங்க இன்னும் ஒரு வாரம் தவணை இருக்கிறது. நீ மட்டும் அந்தப் பெண்ணை வாபஸ் வாங்கச் செய்வதாயிருந்தால், மீனாட்சிசுந்தரத்தின் மாப்பிள்ளைகள் அச்சக நிர்வாகத்தை மறுபடியும் உன்னை அழைத்து ஒப்படைத்துவிட்டுப் போவார்கள். இன்னும் உனக்கு என்னென்ன வேணுமோ, அத்தனையும் நான் செய்து தரத் தயாராயிருக்கிறேன். அபேட்சை மனுவைத் திரும்பப் பெற அந்தப் பெண் கல்கத்தாவிலிருந்து வந்து போவதற்குத் தனி விமானம் (ஸ்பெஷல் ப்ளேன்) என்னுடைய செலவில் ஏற்பாடு செய்கிறேன். தயவு செய்து..."

"தயவு செய்வதற்கில்லை. முடியாது" என்று சுருக்கமாகக் கூறிவிட்டு டெலிபோனைக் கீழே வைத்தான் அரவிந்தன். தனது பதிலைக் கேட்டு பர்மாக்காரரின் புலி முகம் எவ்வளவு கொடிய மாற்றம் அடைந்திருக்கும் என்று கற்பனை செய்துகொண்டே மாடிப்படியேறித் தன் அறைக்குச் சென்றான் அரவிந்தன். 'நான் பூரணிக்காக விளம்பரங்கள் செய்வதை நிறுத்தியாயிற்று. ஆடம்பரமான கூட்டங்களையும், ஆதரவு திரட்டும் ஏற்பாடுகளையும் நிறுத்திவிட்டேன். பர்மாக்காரர் விளம்பரங்களுக்கும், ஆதரவு திரட்டும் ஏற்பாடுகளுக்கும் ஆயிரமாயிரமாகச் செலவழிக்கிறார். அப்படியிருந்தும் அவர் ஏன் என்னைக் கெஞ்சுகிறார்? ஏன் என்னைக் கண்டுப் பயப்படுகிறார்? பயமுறுத்துகிறார்? உண்மையின் ஒளியைக் கண்டு பொய்க்கு ஏற்படும் பயமா இது?' என்று எண்ணி வியந்தான் அவன். பூரணிக்காக முருகானந்தம் தொகுதியின் எல்லா இடங்களிலும் நம்பிக்கை வாய்ந்த மனிதர்கள் மூலம் ஆதரவு திரட்டிக் கொண்டிருப்பது அரவிந்தனுக்குத் தெரியாது. இரண்டு மூன்று நாட்கள் வெளியே செல்வதற்குக் கூசிக் கொண்டு மங்களேசுவரி அம்மாள் வீட்டு மாடியிலேயே படிப்பதிலும் எழுதுவதிலும் நேரத்தைக் கழித்தான் அரவிந்தன். பூரணியின் இலங்கைச் சொற்பொழிவுகளை 'டேப்ரிக்கார்டரி'லிருந்து மீண்டும் மீண்டும் வைக்கச் சொல்லிக் கேட்டான். அந்தக் குரல் அவன் உள்ளத்தை குழப்பங்களிலிருந்து விடுவித்து சாந்தியளித்தது. பேராசிரியர் அழகியசிற்றம்பலத்தின் நூல்களை உள்ளம் தோய்ந்து திரும்பத் திரும்பப் படித்தான். சோர்வு தோன்றிய போதெல்லாம் பூரணியின் முகத்தையும் சிரிப்பையும் நினைத்துக் கொண்டான். ஆழ்ந்த கருத்துக்கள் ஒலிக்கும் அமுதக் குரலைக் கேட்டு மகிழ்ந்தான். இலங்கையில் சைவ மங்கையர் கழகத்தில் பூரணி பேசியிருந்த ஒரு பேச்சு மிக அற்புதமாயிருந்தது. டேப்ரிக்கார்டரில் அந்தப் பேச்சை வைத்துக் கேட்கும் போதெல்லாம் அரவிந்தனுக்குக் கண்களில் ஈரம் கசிந்தது. உணர்ச்சிமயமான உயிரோட்டமுள்ள சிறந்த சொற்பொழிவு அது. 'திருவாரூர் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்டு பரவை நாச்சியார் காதல் கொண்ட' பகுதியைப் பற்றிய பெரிய புராணப் பேச்சு. அந்தப் பேச்சின்போது பரவை நாச்சியாருக்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் ஏற்பட்ட தெய்வீகக் காதலுக்கு விளக்கமாகக் 'கரையா எனது மனக்கல்லும் கரைந்தது' என்று இராமலிங்க அடிகள் வள்ளலார் பாடலைத் தேனொழுகப் பாடுகிறாள். 'பொய்படாக் காதல் தும்பி மேற்பொங்கிற்று' என்ற கடைசி வரியை அவள் பாடும்போது அவளுடைய உள்ளமே பொங்குவதைக் கேட்கிறான் அரவிந்தன்.

இலங்கையில் அந்தச் சொற்பொழிவின் நடுவே இந்தப் பகுதியைப் பேசும்போது பூரணிக்குத் தன்னைப் பற்றிய நினைவு வந்திருக்க வேண்டுமென்று அரவிந்தனுக்குச் சந்தேகமற விளங்கிற்று. எத்தனை முறை கேட்டும் இந்தப் பேச்சு அரவிந்தனுக்கு அலுக்கவில்லை. 'பொய்படா காதல் ததும்பி மேற்பொங்கிற்று' என்று அந்தப் பாடலில் இறுதி வரியை அவள் மேற்கோளாகப் பாடிக் கூவும் போது நெஞ்சைப் பிழிந்து அன்பாய் நெகிழவிட்டு அவனையே கூவியழைக்கிற மாதிரி இருந்தது. திரும்பத் திரும்ப அந்தப் பகுதியைக் கேட்டு அவளுடைய இலங்கைச் சொற்பொழிவுகள் அரவிந்தனுக்கு மனப்பாடமே ஆகிவிட்டன. அவற்றின் கருத்தையும் கம்பீரத்தையும் உணர்ந்த போது அவள் தன்னைக் கீழே தள்ளிவிட்டு தொடர முடியாத உயரத்துக்குப் போய்விட்டதாகத்தான் அவனுக்குத் தோன்றியது. அவளுடைய பேச்சுக்களில் மிகவும் கவனம் கரைந்து பொய்படாக் காதல் ததும்பி மேற்பொங்கிய சமயத்தில் அரவிந்தன் தன் டைரியை எடுத்துக் கீழ்க்கண்டபடி எழுதினான்.

"பூரணி! நீ குறிஞ்சிப் பூவைப் போலச் சூடிக்கொள்ள முடியாத உயரத்தில் எட்ட இயலாத அருமையோடு பூத்திருக்கிறாய். தரையில் பூக்கும் எல்லாப் பூக்களையும் போல் அல்லாமல், மானிடக் கைகளால் எட்டிப் பறிக்க முடியாத மலைச்சிகரத்தில் எப்போதும் பறிக்க முடியாத கால அருமையோடு அலர்ந்திருப்பவள் நீ. குறிஞ்சிப்பூ மதிப்பதற்கும் வியப்பதற்கும் உரியது! சூடிக்கொள்ள முடியுமா! உயரத்தில் பூத்திருப்பதைக் கீழிருப்பவன் எட்டிப் பறிக்கலாமா? பறிக்க முடியுமா?"

பூரணியும் மங்களேசுவரி அம்மாளும் கல்கத்தா போய்ச் சேர்ந்த தினத்தன்று நலமாக வந்து சேர்ந்த விவரத்தை அறிவிப்பதற்காக அங்கிருந்து டெலிபோனில் பேசினார்கள். டெலிபோன் வந்த போது அரவிந்தன் அருகில்தான் இருந்தான். வசந்தா பேசினாள். "உங்கள் செய்தி பற்றிச் சொல்லவா அண்ணா? நீங்கள் பேசுங்களேன்" என்று வசந்தா வேண்டிக் கொண்டபோது அரவிந்தன் மறுத்துவிட்டான். "இங்கு நடந்திருப்பதை எல்லாம் அவர்களுக்குச் சொல்லிப் போன இடத்தில் வீண் மனக்குழப்பத்தோடு இருக்கும்படி செய்து விடாதே. 'எல்லோரும் நலம்' என்று சொல்லி டெலிபோனை வைத்துவிடு, நான் ஒன்றும் பேசவேண்டாம்" என்றான் அவன்.

பூரணியின் தம்பி திருநாவுக்கரசுக்கு வேறு இடங்களில் சரியான வேலை கிடைக்காததனால் முருகானந்தம் தன் தையற்கடையிலேயே அவனை வைத்துக் கொண்டுவிட்டான். நாலைந்து நாட்களில் அரவிந்தனும் மனம் தேறி வெளியே நடமாடத் தொடங்கியிருந்தான். பொதுத் தொண்டுகளில் பழைய ஆர்வத்தோடும் துடிதுடிப்போடும் ஈடுபட்டு வேதனைகளை மறக்கலானான் அவன். மணி நகரத்திலிருந்த ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவிச் சங்கத்திலிருந்து திருமணம் செய்ய பணமில்லாமல் வயது வந்த பெண்களை வைத்துக் கொண்டு திண்டாடும் பல ஏழைப் பெற்றோருக்கு உதவி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தான். பஸ் நிலையத்துக்குப் பக்கத்திலும் இரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் வழியிலும் உள்ள நடைபாதைவாசிகளாகிய அநாதைகளுக்கு விடிவு உண்டாக ஏதாவது நல்ல காரியம் செய்ய முடியுமா என்று நண்பர்களைக் கலந்து ஆலோசனை செய்தான். 'நாகரிகப் பெண்களும், குழந்தைகளும் பிச்சையெடுக்க வருகிற இழிநிலையைப் போக்க உடனே ஏதாவது வழி செய்தாக வேண்டும்' என்று முனிசிபல் கவுன்சிலராகிய தன் நண்பர் ஒருவரைக் கொண்டு நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றச் செய்தான். பொன்னகரத்து உழைப்பாளி மக்களின் சிறுவர்களுக்கு மாலை நேரங்களில் இலவசத் திருக்குறள் வகுப்புகள் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அவனுக்கு இருந்தது. அரவிந்தனுக்கே தெரியாமல் தேர்தல் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்ததனால் முருகானந்தம் அவனுடன் அதிகம் அலைய முடியாமல் இருந்தது. "எங்கே அலைகிறாய் முருகானந்தம்? ஆளையே பார்க்க முடியவில்லையே?" என்று அரவிந்தன் கேட்டதற்குத் தையல் கடையைப் பெரிதாக்கி விரிவு செய்யும் காரியங்களுக்காக அலைவதாகப் பொய் சொல்லி வைத்திருந்தான் முருகானந்தம். எப்பாடு பட்டாவது தேர்தலில் பர்மாக்காரரின் ஆளுக்குத் தோல்வியும் பூரணிக்கு வெற்றியும் கிடைக்கச் செய்துவிட வேண்டுமென்ற வைராக்கிய வெறியுடன் திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தான் அவன். பொய்யின் முகத்தில் கரி பூசிவிட வேண்டுமென்று அவன் சபதம் செய்து கொண்டிருந்தான்.

கல்கத்தாவுக்குப் போய்ச் சேர்ந்த மூன்றாம் நாளோ நாலாம் நாளோ, பூரணி அங்கிருந்து விமானத் தபாலில் அரவிந்தன் அச்சக முகவரிக்கு ஒரு விரிவான கடிதம் எழுதியிருந்தாள். அச்சக ஊழியன் அந்தக் கடிதத்தை முருகானந்தத்திடம் தையல் கடையில் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனான். அன்று அரவிந்தன் தன்னுடைய கிராமத்துக்குப் போயிருந்ததனால் மறுநாள் மாலை அவன் திரும்பிய பின்பே பூரணியின் கடிதத்தை முருகானந்தம் அவனிடம் சேர்க்க முடிந்தது.

கடிதத்தின் உறையைப் பிரித்ததும், உள்ளே கம்மென்று சண்பகப்பூ மணம் எழுந்து பரவியது. ஆறேழு பக்கம், எழுதி மடித்து வைக்கப்பட்டிருந்த கடித மடிப்பின் நடுவே இருந்து உலர்ந்து பாடமாகிப் படிந்த சண்பகப் பூக்கள் இரண்டும் உதிர்ந்தன. பூரணியே தலைநிறையச் சண்பகப் பூ வைத்துக் கொண்டு மணக்க மணக்க பக்கத்தில் வந்து நிற்பது போல் அரவிந்தனுக்கு அப்போது ஒரு பிரமை உண்டாயிற்று. வாடி ஒட்டிச் சப்பட்டையாய்ச் செப்புத் தகடு போல் படிந்திருந்த அந்தப் பூக்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு சட்டைப் பையில் போட்டுக் கொண்டபின் கடிதத்தைப் படிக்கலானான்.

அன்பிற்கினியவருக்கு,

பூரணியின் வணக்கங்கள். இப்படி ஒரு பெரிய கடிதத்தை இலங்கைக்குப் போயிருந்த போதே உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அங்கு ஓய்வே இல்லாமற் போய்விட்டதனால் அதற்கு வாய்க்கவில்லை. இப்போது இங்கே வாய்க்கிறது. மனத்தில் நிறைந்திருக்கும் உற்சாகமான அனுபவங்களையும் புதுமைகளையும் இந்தக் கடிதத்தின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இந்தக் கடிதத்தின் உறையைப் பிரித்தவுடன் உங்களுக்குப் பிரியமான சண்பக மணத்தை நுகர்ந்திருப்பீர்கள். நேற்று இங்கே ஒரு கூட்டத்தில் அபூர்வமானச் சண்பகப் பூமாலை போட்டார்கள் எனக்கு. அப்பப்பா...! என்ன மணம்! என்ன மணம்! அந்த மாலையை அப்படியே தூக்கிக் கொண்டு ஓடிவந்து உங்கள் மேசையில் வைத்து நுகர்ந்து பார்க்கச் சொல்லி மகிழவேண்டும் போல் ஆசையிருந்தது எனக்கு. இரண்டு முழுப்பூக்களை மாலையிலிருந்து எடுத்து இந்தக் கடிதத்தில் வைத்து எழுதி முழு மாலையையும் வைக்க முடியாத குறையை நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறேன். பேலூர் இராமகிருஷ்ணா மடத்தின் வடபுறம் ஹுக்ளியாற்றின் கரையில் பசும்புல் தரையில் அமர்ந்து கொண்டு இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். என் அருகில் மங்களேசுவரி அம்மாள் உட்கார்ந்து தம் மக்களுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பார்வைக்கு எட்டின தொலைவு வரை ஹுக்ளியின் அக்கரையில் தட்சிணேசுவரத்துக் காளி கோயிலும் அப்பால் எல்லையற்ற கல்கத்தா நகரமும் மங்கிய ஓவியம் போல் தெரிகின்றன. கல்கத்தாவைப் போல் இத்தனை பெரிய நகரத்தை இதற்கு முன்னால் நான் பார்த்ததே இல்லை. எவ்வளவு அழகான நகரம்.

தனியாக அரவிந்தன் மாடியறையில் உட்கார்ந்து கடிதத்தின் இந்த இடத்தைப் படித்துக் கொண்டிருந்த போது கீழேயிருந்து வசந்தாவின் குரல் அவனை அழைத்தது.

"அண்ணா! உங்களை யாரோ டெலிபோனில் கூப்பிடுகிறார்கள்."

அரவிந்தன் கடிதத்தை மடித்துப் பையில் போட்டுக் கொண்டு கீழே இறங்கி வந்தான். தனியாய் மேசையில் எடுத்து வைத்திருந்த டெலிபோனைக் கையில் எடுத்தான்.

"கடைசித் தடவையாகக் கேட்கிறேன். வாபஸ் வாங்க நாளைக்கு ஒரே நாள் தான் மீதமிருக்கிறது. மரியாதையாக வாபஸ் வாங்கச் செய்! என்னை மிகவும் பொல்லாதவன் ஆக்காதே. நான் கெட்ட கோபக்காரன்" என்று பர்மாக்காரரின் குரல் சீறியது. பதில் சொல்லாமல் ஓசை எழும்படி 'ணங்'கென்று டெலிபோனை வைத்தான் அரவிந்தன். அவன் முகம் சிவந்தது. பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வசந்தா, "என்ன அண்ணா, யார் அது? ஏதாவது நியூஸென்ஸா?" என்று வினவினாள்.

"இல்லை வேறு ஒரு வம்பு" என்று ஏதோ சொல்லி மழுப்பினான் அரவிந்தன். அப்போது வெளியிலிருந்து முருகானந்தமும் வந்து சேர்ந்தான். "கொஞ்சம் மாடிக்கு வா அரவிந்தன்! உன்னிடம் தனியாக ஒன்று சொல்லவேண்டும்" என்று முருகானந்தம் வந்ததும் வராததுமாகக் கூறியது அரவிந்தனின் கலக்கத்தை அதிகமாக்கியது.


குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 7 Empty Re: குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum