புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
4 Posts - 4%
prajai
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
2 Posts - 2%
Rutu
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
1 Post - 1%
bala_t
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
1 Post - 1%
Pradepa
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
28 Posts - 3%
sugumaran
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
18 Posts - 2%
prajai
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
5 Posts - 0%
Rutu
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 2:55 am

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி 1-809810
சிறப்புரை (மு. வரதராசன்)


அரவிந்தன், பூரணி என்னும் இருவரையும் நூலைப் படித்து முடித்துப் பல நாட்கள் ஆன பிறகும் மறக்க முடியவில்லை. கற்பனையில் படைக்கும் மாந்தர்கள் இவ்வாறு கற்பவரின் நெஞ்சில் நெடுங்காலம் நிற்குமாறு செய்ய வல்லவர்களே கற்பனைத் திறன்மிக்க கலைஞர்கள்.

அரவிந்தனும் பூரணியும் எய்தும் இன்ப துன்பங்கள் பல. அவை வீணில் உண்டு உறங்கி வாழும் மக்கள் எய்தும் எளிய இன்ப துன்பங்கள் அல்ல. ஆகவே அவை நம் நெஞ்சை நெக்குருகச் செய்து ஆழ்ந்து நிற்கின்றன.

நாவல் என்பது பொழுதுபோக்குக்கான வெறும் நூலாகவும் அமையலாம். வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்திக் கற்பவரின் உள்ளங்களை உயர்த்தவல்ல இலக்கியமாகவும் அமையலாம். அவ்வாறு விருப்பம் உடையதாக அமையும் போது, அது பழங்காலத்துக் காவியத்துக்கு நிகர் ஆகின்றது. காவியம் என்பது உரைநடை வளராத காலத்தில் செய்யும் வடிவில் அமைந்த கலைச் செல்வம்; நாவல் என்பது உரைநடை வளர்ச்சியால் இவ்வடிவில் அமையும் கலைச் செல்வம். இதுதான் வேறுபாடு.

புலவர் திரு. நா. பார்த்தசாரதி பழந்தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றுணர்ந்தவர். புதுத் தமிழ் இலக்கிய வளர்ச்சியையும் நன்கு அறிந்தவர். ஆதலின் இந்த நாவலை மரபு பிறழாத கலைத் திறனுடன் இயற்றியுள்ளார். குறிஞ்சி மலர் என்ற பெயர் அமைப்பிலும் இந்தத் திறன் புலனாகிறது.

இடையிடையே உள்ள இயற்கை வருணனைகளும், நகரப் பகுதிகளின் விளக்கங்களும் நன்கு அமைந்துள்ளன. இந்த நாவலாசிரியரின் கற்பனைக் கண் பண்பட்டு வளர்ந்துள்ளது. உள்ளத்து உணர்ச்சிகளையும் போராட்டங்களையும் விடாமல் விளக்கியுள்ளதோடு உயர்ந்த மாந்தரின் விழுமிய நோக்கங்களுக்கு ஏற்ப பண்பாடு குன்றாமல் காத்துள்ளார் என்பதும் பாராட்டத்தக்கது. தேர்தல் காலத்தில் நிகழும் காட்டுமிராண்டித் தன்மையான கொடுஞ்செயல்களை இவர் தக்க இடத்தில் எடுத்துக் காட்டியிருப்பது காலத்துக்கு ஏற்ற நல்ல தொண்டு ஆகும்.

'குறிஞ்சி மலர்' வெல்க!

மு. வரதராசன்





குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 2:58 am

முன்னுரை

என்னுடைய வாழ்வில் பயன்நிறைந்த செயல்களைத் தொடங்கிய நாட்களுள் குறிஞ்சி மலர் நாவலை எழுதப் புகுந்த நாள் மிகச் சிறந்தது. இந்த நாவலுக்கான சிந்தனையும், நிகழ்ச்சிகளும், முகிழ்ந்துக் கிளைத்து உருப்பெற்ற காலம் எனது உள்ளத்துள் வளமார்ந்த பொற்காலம். 'இந்தக் கதை தமிழ் மண்ணில் பிறந்தது. தமிழ்ப் பண்பாட்டை உணர்த்துவது. தமிழ் மணம் கமழ்வது' என்று பெருமையாகப் பேசுவதற்கேற்ற மொழி, நாடு, இனப்பண்புகள் ஒவ்வொரு தமிழ்க் கதையிலும் அழுத்தமாகத் தெரியச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறவன் நான். இந்த ஆசை எனது குறிக்கோள்.

சிறந்த பெருமையும் பழமையும் வாய்ந்த தமிழ் இனமும் மொழியும், நாடும், பண்பாடும் சிறப்படைய மறுமலர்ச்சி இலக்கியம் உதவ வேண்டுமென்று கருதி வருகிறவர்களில் நானும் ஒருவன். இப்படிக் கருதிப் பணிபுரிவதில் பெருமைப்படுகிறேன்.

தமிழ் நாவல் எழுதுகிறவர்களில் பெரும்பாலோர் சென்னையையும் அதன் சுற்றுப்புறங்களையுமே கதை நிகழும் களமாகக் கொண்டு விடுவதனால் சென்னைக்குத் தெற்கே உள்ள தமிழ் நிலப்பரப்பின் விதவிதமான வாழ்க்கை வடிவங்கள், விதவிதமான வாழ்க்கைச் சாயல்கள் தெரிவிக்கப்படாமலே போய்விடுகின்றன. இதை மனதிற் கொண்டு மதுரையையும் தென் தமிழ் நாட்டுச் சுற்றுப்புறங்களையும் குறிஞ்சி மலர் நாவலுக்குக் களமாக அமைத்துக் கதை எழுதினேன். தலைப்பிலிருந்து முடிவு வரை தமிழ் மணம் கமழும் நாவலாகப் படைக்க வேண்டுமென்று விரும்பினேன்! அப்படியே படைத்திருப்பதாகவும் நம்புகிறேன்.

தமிழ்நாட்டின் வார இதலாகிய 'கல்கி'யில் 'மணிவண்ணன்' என்ற பெயரோடு இந்தக் கதையை எழுதத் தொடங்கிய போது 'நல்ல காரியத்தை எந்தப் பெயரில் செய்தாலும் நல்ல காரியந்தானே?' என்பதுதான், என் எண்ணமாக இருந்தது. நான் செய்து கொண்டிருந்தது நல்ல காரியம் என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் வாசகர்களோ 'மிக மிக நல்ல காரியம்' என்று ஆவலோடு நிமிர்ந்து நின்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். மருக்கொழுந்துச் செடியில் வேரிலிருந்து நுனித் தளிர் வரை எங்கே கிள்ளி மோந்தாலும் மணப்பது போல, என்னுடைய இந்த நாவலின் எப்பகுதியிலும் பண்பும் ஒழுக்கமும் வற்புறுத்தப்படுகிற குரல் ஒலிக்க வேண்டுமென்று நினைத்து நான் எழுதினேன். அந்தக் குரல் ஒலிப்பதாகப் படித்தவர்கள் கூறினார்கள். 'நல்லது செய்தோம்' என்று பெருமைப்பட்டேன். கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் இன்று வளர்ந்து வரும் தமிழ் நம்பியரும் நங்கையரும் எதிர்காலத் தமிழ்ச் சமுதாயப் பண்ணையின் நாற்றங்கால் என்று நினைவூட்ட விரும்பினேன். அந்தப் பணியையும் இந்த நாவல் நிறைவேற்றியிருப்பதை எனக்கு வந்த பல கடிதங்கள் விளக்கின, சான்று கூறின.

சைவ சமயக் குரவர் திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதி - கலிப்பகையார் ஆகியவர்களின் நிறைவடையாத உறவு - இவற்றைச் சற்றே நினைவுபடுத்திக் கொண்டு இந்த நாவலைப் படித்தால் இதன் இலக்கிய நயம் விளங்க முடியும்.

இந்த நாவலில் பூரணி, அரவிந்தன் இருவரையும் தமிழகத்துப் பெண்மை, ஆண்மைகளுக்கு விளக்கமாகும் அழகிய தத்துவங்களாக நிலைக்கும்படி அமைத்திருக்கிறேன். தமிழக அரசியல் எழுச்சிகள் வாழ்வில் ஊடுருவுவதை அங்கங்கே காட்டியிருக்கிறேன். நாவல் முடிந்த போது, பூரணி, அரவிந்தன் என்று முறையே தங்கள் ஆண் பெண் குழந்தைகளுக்குப் பெயர் வைத்து விட்டதாகவும், ஆசிரியரின் ஆசியைக் கோருவதாகவும் 'மணிவண்ண'னுக்குப் பலர் கடிதங்கள் எழுதினார்கள். இந்த நாவலுடன் வாசகர்கள் கொண்டிருந்த உறவு எத்தகைய உயர்ந்த உறவு என்பது, இதன் ஆசிரியருக்கு அப்போது மிக நன்றாகத் தெளிவாயிற்று.

தமிழ் இலக்கிய அறிவை ஓரளவு பரப்ப வேண்டுமென்பதற்காகக் கதை நிகழ்ச்சியோடு ஒட்டிய பாடல் வரிகள் சிலவற்றை வாரா வாரம் தொடக்கத்தில் தந்தேன். இவற்றில் சில நானே எழுதியவையும் உண்டு. வாசகர்கள் இதைப் பெரிதும் விரும்பி வரவேற்றார்கள் என்று தெரிந்து மகிழ்ந்தேன்.

குறிஞ்சி நிலமாகிய திருப்பரங்குன்றத்தில் தொடங்கிய கதையைக் குறிஞ்சி நிலமாகிய கோடைக்கானலில் முடித்தேன். கதை நிகழ்ச்சியில் முதல் முறை குறிஞ்சி மலர்ந்த போது என் கதைத் தலைவியும் மனம் மலர்ந்து அரவிந்தனைக் கண்டு, பேசி நிற்கிறாள்; கதை முடிவில் இரண்டாம் முறை குறிஞ்சி மலரும் போது என் கதைத் தலைவி பூரணியின் கண்களில் சோக நீரரும்பித் துயரோடு நிற்கிறாள். இந்தக் கதையில் குறிஞ்சி மலர் போல் அரிதின் மலர்ந்த பெண் அவள்; குறிஞ்சியைப் போல் உயர்ந்த இடத்தில் பூத்தவள் அவள். அவளுக்கு அழிவே இல்லை. நித்திய வாழ்வு வாழ்பவள் அவள்.

அரவிந்தனைப் போல் எளிமை விரும்பும் பண்பும், தூய தொண்டுள்ளமும் ஒவ்வொரு தமிழ் இளைஞனுக்கும் இருக்க வேண்டுமென்பது மணிவண்ணனின் அவா. பூரணியைப் போல் குறிஞ்சி மலராகப் பூக்கும் பெரும் பெண்கள் பலர் தமிழ் நிலத்தே தோன்ற வேண்டும் என்பது மணிவண்ணனின் அவா. பூரணியைப் போல் குறிஞ்சி மலராகப் பூக்கும் பெரும் பெண்கள் பலர் தமிழ் நிலத்தே தோன்ற வேண்டும் என்பது மணிவண்ணனின் கனவு.

நமது தமிழ்நாட்டின் சான்றாண்மைக்கும் இருப்பிடமான பேராசிரியர் மு.வ. அவர்கள் எக்காலத்துக்கும் என் உள்ளத்தே பேருருவாக நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் இந்நாவலுக்குச் சிறப்புரை அளித்திருக்கிறார்கள் என்பது அடியேனுக்குப் பெரும் பேறு ஆகும்.

குறிஞ்சி மலர் முடிந்த சில நாட்களில் என் முதன் மகளாய் வந்து பிறந்து எனது இல்லத்தில் ஒளிபரப்பி நான் கனவில் கண்ட பூரணியாக நிகழ்வில் தோன்றும் என் செல்விக்கு இந்த நாவலை நூல் வடிவில் படைக்கிறேன்.

அன்பன்,
நா. பார்த்தசாரதி
(மணிவண்ணன்)




குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 2:59 am

1




மெய்யாய் இருந்தது நாட்செல வெட்ட வெறும்

பொய்யாய்ப் பழங்கதையாய்க் கற்பனையாய்

மெல்லப் போனதுவே!



பிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒருநாள் மலர் பூத்துக் கொண்டிருந்தது. மார்கழி மாதத்து வைகறை! உலகம் முழுவதுமே பனித்துளி நீங்காத ரோஜாப் பூக்களால் கட்டிய பூ மண்டபம் போல் புனிதமானதொரு குளிர் பரவியிருந்தது. மலரின் மென்மையில் கலந்து இழையோடும் மணம் போல் அந்தக் குளிரோடு கலந்து வீசும் இதமான மண்காற்று புலர்ந்தும் புலராமலும் இருக்கிற பேரரும்பு போல் விடிந்தும் விடியாத பேதைப் பருவத்து இளம்காலை நேரம். கீழ்வானத்து ஒளிக் குளத்தில் வைகறை நங்கை இன்னும் மஞ்சள் பூசிக் குளிக்கத் தொடங்கவில்லை.



பூரணி, கண்களைக் கசக்கிக் கொண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். கண்களை விழித்ததும் ஜன்னல் வழியாக எதிர்வீட்டுக் கோலம், மங்கிய ஓவியம்போல் அந்த மெல்லிருளிலும் தெரிந்தது. பெரிதாக வெள்ளைக் கோலம் போட்டு நடுவில் அங்கங்கே பறங்கிப் பூக்கள் பறித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த விடிகாலை நேரத்தில் வெள்ளைக் கோலத்தின் இடையிடையே பொன் வண்ணம் காட்டிய அப்பூக்கள் தங்கம் நிறைத்துத் தழல் பெருக்கி எங்கும் உருக்கி வார்த்த இங்கிதங்களைப்போல் இலங்கின. அந்தக் கோலத்தையும் அதன் அழகையும் நினைத்த போது, பூரணிக்குத் துக்கமாய்ப் பொங்கும் உணர்வின் சுமையொன்று மனத்தை அழுத்தியது. கண்கள் கலங்கி ஈரம் கசிந்தன.



அப்படி ஒரு கோலத்தை இன்னும் ஓர் ஆண்டுக்காலத்துக்கு அவள் தன் வீட்டு வாசலில் போடமுடியாது. கொல்லையில் அவள் வீட்டிலும் தான் பறங்கிப் பூக்கள் வண்டி வண்டியாய்ப் பூக்கின்றன. அவைகளை எங்கே பறித்து வைப்பது? யார் வைப்பது? துக்கத்தைக்கூட வரன் முறையாகவும் ஒழுங்காகவும் கொண்டாடுகிற அளவுக்கு வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொண்டு பழகிவிட்ட நாடு இது. விழுதுகளைப்போல் ஊன்றிக் கொண்டிருக்கும் பழமையான பழக்கங்கள் ஆலமரம் போன்ற தமிழ்நாட்டின் படர்ந்த வாழ்க்கையைத் தாங்கிக் கொண்டிருக்கின்றனவே!



கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்து விளக்கைப் போட்டாள் பூரணி. 'அப்பா இருந்தால் வீடு இப்படி ஓசையின்றி இருண்டு கிடக்குமா, இந்தக் காலை நேரத்தில்? நாலரை மணிக்கே எழுந்திருந்து பச்சைத் தண்ணீரில் நீராடி விட்டுத் திருவாசகத்தையும் திருவெம்பாவையையும் பாடிக் கொண்டிருப்பாரே. மார்கழி மாதத்தில் விடிவதற்கு முன்னரே வீடு முழுவதும் சாம்பிராணி மணக்கும். அப்பாவின் தமிழ் மணக்கும். அந்தத் தமிழில் இனிமை மணக்கும்!'



இன்று எங்கே அந்தத் தமிழ்? எங்கேயந்த அறிவின் மலை? பல்லாயிரக்கணக்கான மாணவர்களை அன்பாலும் அறிவுத் திறனாலும், ஆண்டு புகழ் குவித்த அந்த பூத உடல் போய் விட்டதே! அதோ, அப்பாவின் நீண்ட பெரிய புத்தக அலமாரி. அதையும் துக்கத்தையும்தான் போகும்போது பெண்ணுக்காக அவர் வைத்துவிட்டுப் போனாரா? இல்லை... அதைவிடப் பெரிய பொறுப்புகளை அந்த இருபத்தொரு வயது மெல்லியலாளின் பூந்தோளுக்குச் சுமையாக விட்டுப் போயிருக்கிறார்.



குளிர் தாங்காமல் மரவட்டைகளைப் போல் சுருண்டு படுத்துக்கொண்டு தூங்கும் தம்பிகளையும் தங்கைகளையும் பார்த்தாள் பூரணி. தலையணை போனது தெரியாமல், விரிப்புகளும் போர்வைகளும் விலகிய நிலையில் தரையில் சுருண்டு கிடந்த உடன்பிறப்புகளைப் பார்த்தபோது திருமணமாகாத அந்தக் கன்னிப் பருவத்திலேயே ஒரு தாயின் பொறுப்பைத் தான் சுமக்க வேண்டியிருப்பதை அவள் உணர்ந்தாள்.



உடன்பிறப்புகளை நேரே விரிப்பில் படுக்கச் செய்து போர்வையைப் போர்த்திவிட்டு நிமிர்ந்தபோது எதிர்ச் சுவரில் அப்பாவின் பெரிய படம் பூரணியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. அவள் அப்படியே அந்தப் படத்தைப் பார்த்தவாறே நின்றுவிட்டாள். அவர் தன்னையே பார்ப்பது போல் அவளுக்கு ஒரு பிரமை உண்டாயிற்று.



இயற்கையாகவே அவருக்கு அழகாக மலர்ந்த முகம். ஆழமான படிப்பும் மனத்தில் ஏற்பட்ட அறிவின் வளர்ச்சியும் அந்த அழகை வளர்த்துவிட்டிருந்தன. அவருக்கென்றே அமைந்தாற்போல அற்புதமான கண்கள். அன்பின் கனிவும், எல்லோரையும் எப்போதும் தழுவிக் கொள்ளக் காத்திருக்கிறார் போல் ஒரு பரந்த தாய்மை உணர்வும் அமைந்த கண்கள் அவை. எடுப்பாக நீண்டு அழகாக விளங்கும் நாசி. சும்மா இருந்தாலும் புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தாற் போலவே எப்போதும் தோன்றும் வாயிதழ்கள். அந்தக் கண்களும், அந்த முகமும், அந்தச் சிரிப்பும் தான் மாணவர்களைக் கொள்ளை கொண்டவை. எவ்வளவு பெரிய நிலையில் எத்தனை சிறந்த பதவியில் இருந்தாலும் நான் தமிழ்ப் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் அவர்களின் மாணவன் என்று பிற்கால வாழ்விலும் சொல்லிச் சொல்லி மாணவர்களைப் பெருமை கொள்ளச் செய்த திறமை அது.



பூரணி பெருமூச்சு விட்டாள்! அப்படியே விளக்கை அணைத்துவிட்டு, மறுபடியும் இருட்டில் உட்கார்ந்து அப்பா காலமான துக்கத்தை நினைத்துக் குமுறிக் குமுறி அழவேண்டும் போல் இருந்தது. கண்ணீரில் துக்கம் கரைகிறது. அழுகையில் மனம் இலேசாகிறது.



பூரணி மெல்ல நடந்து சென்று அப்பாவின் படத்தை மிக அருகில் நின்று பார்த்தாள். கோயில் கர்ப்பக்கிருகத்தில் உள்ள தெய்வ விக்கிரகத்தின் அருகில் நின்று நேர்ந்தால் உண்மை பக்தனுக்கு மெய்சிலிர்க்கும் அல்லவா! அப்படி மெய்சிலிர்த்தது பூரணிக்கு. நீர்ப்படலங்கள் கண் பார்வையை மூடி மறைக்க முயன்றன.



அப்பாவின் முகத்தில் தெரிகிற சிறிது முதுமைகூட அம்மாவின் மரணத்துக்குப் பின் படிந்த முதுமைதான். அம்மா இறந்தபோது கூட அவர் வாய்விட்டு அழவில்லையே! நாங்களெல்லாம் மூன்று நாட்கள் சாப்பிடமாட்டோம் என்று பிடிவாதமாகக் குமுறி அழுதோம். படிப்பும், அனுபவங்களும் அவர் மனத்தை எவ்வளவுக்குக் கல்லாக்கியிருந்தன அப்போது.



குழந்தைபோல் என்னை அணைத்துத் தலையைக் கோதிக் கொண்டே, "பூரணி! நீ பச்சைக் குழந்தைபோல இப்படி அழுது கொண்டிருந்தால் தம்பிகளையும் புதிதாகப் பிறந்திருக்கும் தங்கைப் பாப்பாவையும் யார் சமாதானப்படுத்துவது? துக்கத்தை மறந்துவிடப் பழகிக்கொள், அம்மா! இனிமேல் இந்தத் தம்பிகளுக்கும் அம்மா விட்டுப்போன தங்கைப் பாப்பாவுக்கும், நீ அக்கா மட்டுமில்லை, அம்மா மாதிரியும் இருந்து வளர்க்க வேண்டும். நீதான் எனக்கு விவரம் தெரிந்த பெண் என்று பேர். நீயும் இப்படி அழுது முரண்டு பிடித்தால் நான் தனியாக யாரையென்று சமாதானப்படுத்துவேன் அம்மா?" என்று அறிவுரை கூறினாரே! தம்முடைய துன்பங்களையும் துக்கங்களையும் மட்டுமல்ல - சுகங்களையும் இன்பங்களையும் கூடப் பொருட்படுத்தாமல் மறந்துவிடுகிற சுபாவம் அவருக்கு. கல்லூரி வகுப்பு அறைகளிலும், வீட்டில் புத்தக அலமாரிக்கு அருகிலுமே வாழ்க்கையின் பெரும்பான்மையான நேரத்தைக் கழித்துவிட்டு மற்றவற்றை மறந்து கொண்டிருந்தவர் அவர். முறையாகப் பழுத்து உதிரும் கனியைப் போல் அறிவினால் காய்த்தன்மை வாய்ந்த சாதாரண உணர்ச்சிகளைச் சிறிது சிறிதாகத் தம்மைவிட்டு நீக்கி விட்டவர், அவர். ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு விநாடியும் ஒழுங்காகவும் முறையாகவும் கழிப்பதற்குப் பழகிக்கொண்டிருந்த வாழ்க்கை அவருடையது.



"அப்பா போய்விட்டார்" என்பதற்கு ஒப்புக்கொண்டு நம்புவது மனத்துக்குக் கடுமையானதாகத்தான் இருந்தது. அந்த அழகு, அந்தத் தமிழ்க்கடல், அந்த ஒழுக்கம், அந்தப் பண்பாடு, அத்தனையும் மாய்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகிப் பொய்யாய்ப் பழங்கதையாகக் கற்பனையாய் மெல்லப் போய்விட்டன. நமக்கு வேண்டியவர்களின் மரணத்தை நம்பவோ ஒப்புக்கொள்ளவோ முடிவதில்லைதான். "நின்றான், இருந்தான், கிடந்தான், தன்கேள் அலறச் சென்றான்" என்று வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிய ஒரு செய்யுள் வரியை அப்பா அடிக்கடி சொல்லுவார். அந்தச் செய்யுள் வரி மாதிரி தான் அப்பாவும் கல்லூரிக்குப் போனார். புத்தக அலமாரிக்கு அருகில் நின்றார். இருந்தார். திடீரென்று எல்லோரையும் தவிக்க விட்டுப் போய்விட்டார்.



மரணத்தைக் கூட ஆர்ப்பாட்டமில்லாமல், நோய் நொடி தொல்லைகள் இல்லாமல் எவ்வளவு எளிமையாக அடைய முடிந்தது அவரால்! செத்துப்போவது போலவா அவர் போனார்? யாரோ எங்கோ இரகசியமாகக் கூப்பிட்டு அனுப்பியதற்காகப் புறப்பட்டுப் போவது போலல்லவா போய்விட்டார்.



சாயங்காலம் கோயிலுக்குப் போய்விட்டு வந்தவர் ஒரு நாளுமில்லாத வழக்கமாகச் சோர்ந்து போனவர் போல் கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டார். நான் பதறிப்போய் அருகில் சென்று, "என்னப்பா உங்களுக்கு? ஒரு மாதிரி சோர்ந்து காணப்படுகிறீர்களே?" என்று கேட்டேன்.



"ஒன்றுமில்லை பூரணி; கொஞ்சம் வெந்நீரில் சுக்கைத் தட்டிப் போட்டுக் கொண்டு வா. இலேசாக நெஞ்சை வலிக்கிற மாதிரி இருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.



நான் வெந்நீர் கொண்டுவரப் போனேன். தம்பி திருநாவுக்கரசு கூடத்தில் உட்கார்ந்து பள்ளிக்கூடத்துப் பாடம் படித்துக் கொண்டிருந்தான். சின்னத்தம்பி சம்பந்தனும் குழந்தை மங்கையர்க்கரசியும் வீட்டு வாயிலுக்கு முன்னால் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.



நான் வெந்நீரில் சுக்கைத் தட்டிப் போட்டுக் கொண்டிருந்த போது, "திருநாவுக்கரசு இருந்தால் இங்கே வரச்சொல், அம்மா" என்று அப்பா கட்டிலிலிருந்தவாறே குரல் கொடுத்தார்.



அதைக் கேட்டு, "இதோ வந்துவிட்டேன், அப்பா" என்று தம்பி கூடத்திலிருந்து சென்றான்.



அப்பா தம்பியிடம் திருவாசகத்தை எடுத்துத் தமக்குப் பக்கத்தில் உட்கார்ந்து படிக்குமாறு கூறியதும், தம்பி படிக்கத் தொடங்கியதும், சமையலறையில் எனக்குக் கேட்டன. நான் வெந்நீரோடு சென்றேன். அப்பாவின் இரண்டு கைகளும் நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தன. வலியை உணர்ந்த வேதனை முகத்தில் தெரிந்தது. தம்பி திருவாசகத்தின் திருவண்டப் பகுதியைப் படித்துக் கொண்டிருந்தான்.

"பூவில் நாற்றம் போன்று உயர்ந்தோங்கும்

ஒழிவு அற நிமிர்ந்து மேவிய பெருமை

இன்று எனக்கு எளிவந் தருளி

அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்!"



தம்பியின் சிறிய இனிய குரல் அழகாக ஒலித்துக் கொண்டிருந்தது. "அப்பா உங்கள் முகத்தைப் பார்த்தால் அதிகமாக வேதனைப்படுகிறீர்கள் போல் தோன்றுகிறது. நான் போய் டாக்டரைக் கூட்டிக்கொண்டு வரட்டுமா?" என்று கவலையோடு கேட்டேன்.



அப்பா மறுமொழி கூறாமல் சிரித்தார். "நான் போய் கூட்டிக் கொண்டு வருகிறேன், அப்பா!" என்று அவர் பதிலை எதிர்பாராமலே நான் புறப்பட்டேன்.



நான் டாக்டரோடு திரும்பியபோது தம்பி 'ஓ'வென்று அலறியழும் குரல் தான் என்னை வரவேற்றது. அப்பாவின் பதில் பேசாத அந்தப் புன்னகைதான் நான் இறுதியாக அவரிடம் பார்த்த உயிர்த்தோற்றம்.



அப்பா போய்விட்டார். துக்கத்தையும் பொறுப்பையும் பிஞ்சுப் பருவத்து உடன்பிறப்புகளையும் என் தலையில் சுமத்தி விட்டுப் போய்விட்டார். ஊரே துக்கம் கொண்டாடியது. ஆயிரக் கணக்கான கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்கள் பலரும், பழைய மாணவர்களும் அப்பாவின் அந்திம ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். உள்ளூரிலுள்ள எல்லா கல்லூரிகளும் துக்கத்துக்கு அடையாளமாக விடுமுறைவிட்டன. அனுதாபத் தந்திகளும், கடிதங்களும் எங்கெங்கோ இருக்கிற பழைய மாணவர்களிடமிருந்து இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.



அப்பா போய் பதினைந்து நாட்கள் பொய்கள் போல் மறைந்துவிட்டன. தினம் பொழுது விடிந்தால் அனுதாபத்தைச் சொல்ல வரும் கடிதங்கள், அனுதாபத்தைக் கொடுக்க வரும் மனிதர்கள், உணர்வுகளும் எண்ணங்களும் ஆற்றலும் அந்தப் பெரிய துக்கத்தில் தேங்கிவிட்டதுபோல் தோன்றியது பூரணிக்கு.



வாசலில் மாட்டின் கழுத்துமணி ஓசையை அடுத்து, பால்காரனின் குரல் கேட்டது. பூரணி துக்கத்தையும் கலங்கிய கண்களையும் தற்காலிகமாகத் துடைத்துக் கொண்டு பால் வாங்குவதற்குப் புறப்பட்டாள்.



"நெற்றி நிறைய திருநீரும் வாய்நிறையத் திருவாசகமுமாகப் பெரியவர் பால் வாங்க வரும்போதே எனக்குச் சாமி தரிசனம் இங்கே ஆகிறாற்போல் இருக்குமே அம்மா" என்று பாலை ஊற்றி விட்டுப் போகும் போது சொல்லிச் சென்றான் பால்காரன். அவள் மனதில் துக்கத்தைக் கிளறின அந்தச் சொற்கள். அப்பா இருக்கும் போது காலையில் முதலில் எழுந்திருக்கிறவர் அவரே. கையால் தாமே பால் வாங்கி வைத்துவிடுவார். பால்காரனிலிருந்து வாசல் பெருக்குகிற வேலைக்காரி வரை அத்தனை பேருக்கும், அப்பாவிடம் தனி அன்பு, தனி மரியாதை. பெரியவர், பெரியவர் என்கிறதைத் தவிர அப்பாவைப் பேர் சொல்லி அழைத்தவர்களைப் பூரணி கண்டதில்லை. அப்பாவோடு ஒத்த அறிவுள்ள இரண்டொரு பெரிய ஆசிரியர்கள் மட்டுமே அவரைப் பேர் சொல்லியழைப்பார்கள்.



அப்பா எல்லா வகையிலும் எல்லாருக்கும் பெரியவர். அறிவைக் கொடுப்பதில் மட்டுமல்ல... ஏழைப்பட்ட மாணவர்களுக்குப் பணத்தைக் கொடுத்தவர் என்று மாணவர்களிடையே பெருமையும், நன்றியும் பெற்றவர். பணத்தைப் பொறுத்தவரையில் பிறருக்கு உதவத் துணிந்த அளவு பிறரிடம் உதவி பெறத் துணியாத தன்மானமுள்ளவர் அப்பா. அவருடைய வலதுகை கொடுப்பதற்காக உயருவதுண்டு! வாங்குவதற்காகக் கீழ் நோக்கித் தாழ்ந்ததே இல்லை. கீழான எதையும் தேடத் துணியாத கைகள்; கீழான எவற்றையும் நினைக்க விரும்பாத நெஞ்சம். அப்பா நினைப்பிலும், நோக்கிலும், பேச்சிலும், செயலிலும் ஒழுங்கான வரையறைகளை வைத்துக் கொண்டு வாழ்ந்தவர்.



ஒரு சமயம், தமிழ் மொழியில் பிழையாகப் பேசுவதையும் பிழையாக எழுதுவதையும் தவிர்க்க ஓர் இயக்கம் நடத்த வேண்டும் என்று அப்பாவின் மதிப்புக்குரிய தமிழாசிரியர்கள் சிலர் யோசனை கேட்டார்கள்.



'எழுத்திலும் பேச்சிலும் மட்டுமல்ல, வேங்கடம் முதல் குமரி வரை தமிழ்வாழும் நிலமெல்லாம் வாழ்க்கையிலேயே பிழையில்லாத ஒழுங்கும், அறமும் அமைய முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று புன்னகையோடு பெருமிதம் ஒலிக்கும் குரலில் அப்போது அப்பா - அவர்களுக்கு மறுமொழி சொன்னார். அதைக் கேட்ட போது அன்று எனக்கு மெய் சிலிர்த்ததே! ஒழுங்கிலும், நேர்மையிலும் அவருக்கு அவ்வளவு பற்று; நம்பிக்கை.



பொழுது நன்றாக விடிந்துவிட்டது. சரியான மீட்டரில் வைக்கப்பெறாத வானொலிப் பெட்டி மாதிரி வீதியின் பல்வேறு ஒலிகள் கலந்து எழுந்து விழிப்பைப் புலப்படுத்தின. மானிடத்தின் இதயத்தில் அடி மூலையிலிருந்து மெல்லக் கேட்கும் சத்தியத்தின் குரலைப் போல் தொலைவில் கோயில் மேளம் ஒலித்தது. பூரணி எழுந்து நீராடிவரக் கிணற்றடிக்குச் சென்றாள்.




குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 2:59 am




பக்கத்துப் பெருஞ்சாலையில் நகரத்திலிருந்து திருப்பரங்குன்றத்துக்கும், திருநகருக்கும் வந்து திரும்புகிற டவுன் பஸ்களில் கலகலப்பு எழுந்தது. நகரத்துக்கு அருகில் கிராமத்தின் அழகோட தெய்வீகச் சிறப்பையும் பெற்றுத் திகழ்ந்து கொண்டிருந்தது திருப்பரங்குன்றம். மதுரை நகரத்தின் ஆடம்பர அழகும், கம்பீரமும் இல்லாவிட்டாலும், அதற்கு அருகே அமைந்த எளிமையின் எழில் திருப்பரங்குன்றத்துக்கு இருந்தது. என்றும் இளையனாய், ஏற்றோருக்கு எளியனாய்க் குன்றுதோறாடும் குமரன் கோயில் கொண்டிருந்து ஊருக்குப் பெருமையளித்தான்.



எந்தக் காலத்திலோ வளம் மிகுந்ததாக இருந்துவிட்டு இப்போது மொட்டைப் பாறையாய் வழுக்கை விழுந்த மண்டை போல் தோன்றும் ஒரு குன்று. அதன் வடப்புறம் கீழே குன்றைத் தழுவினாற்போல் சிறியதாய் சீரியதாய் ஒரு கோபுரம் படிப்படியாய்க் கீழ்நோக்கி இறங்குமுகமாகத் தளவரிசை அமைந்த பெரிய கோயில். அதன் முன்புறம் அதற்காகவே அதை வணங்கியும், வணங்கவும், வாழ்ந்தும், வாழவும் எழுந்தது போல பரந்து விரிந்திருந்த ஊர். குன்றின் மேற்குப்புறம் சிறிய ரயில்வே நிலையம். அதையடுத்து ஒழுங்காய், வரிசையாய் ஒரே மாதிரியாகத் தோன்றும் மில் தொழிலாளர்கள் குடியிருப்பு வீடுகள். அதற்கும் மேற்கே திருநகர்.



திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதிந்து வைத்த இரண்டு பெரிய நிலைக் கண்ணாடிகளைப் போல் வடப்புறமும், தென்புறமும் நீர் நிறைந்த பெரிய கண்மாய்கள். சுற்றிலும் வயல்கள், வாழைத் தோட்டம், கரும்புக் கொல்லை, தென்னை மரங்கள், சோலைகள் அங்கங்கே தென்படும்.



அந்த அழகும் அமைப்பும் பல நூறு ஆண்டுகளாகக் கனிந்து கனிந்து உருவாகியவை போன்று ஒரு தோற்றத்தை உண்டாக்கின. அந்தத் தோற்றத்தில் பல்லாயிரம் காலமாகத் தமிழன் வாழ்ந்து பழகிப் பயின்று ஒப்புக்கொண்ட சூழ்நிலை போன்று ஏதோ ஒரு பழமை தெரிந்தது! தாம் தமிழ்ப் பணிபுரியும் கல்லூரியும், தம்முடைய நெருங்கிய நண்பர்களும், பிற வாழ்க்கை வசதிகளும், நகரத்துக்குள் இருந்த போதிலும் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் திருப்பரங்குன்றத்தை வாழும் இடமாகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் மனதுக்குப் பழகிப் போனது போல் தோன்றிய அந்தப் பண்பட்ட சூழ்நிலைதான். உடம்புக்கு நல்ல காற்று, சுற்றிலும் கண்களுக்கு நிறைந்த பசுமை, மனதுக்கு நிறைவு தரும் தமிழ்முருகன் கோயில் - என்ற ஆவலோடுதான் பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் பேராசிரியராக வேலைக்கு நுழைந்த போது அவர் அங்கே குடியேறினார். அமைதியும் சமயப் பற்றும், சிந்தனையும் தேவையான அவருக்கு, அந்த இடத்தில் அவை போதுமான அளவு கிடைத்தன. அவருடைய வாழ்க்கையையே அங்கேதான் தொடங்கினார். அங்கேதான் பூரணியின் அன்னை அவரோடு இல்லறம் வளர்த்து வாழ்ந்தாள். அங்கேதான் பூரணி பிறந்தாள். தம்பிகள் திருநாவுக்கரசும், சம்பந்தனும், குழந்தை மங்கையர்க்கரசியையும் பெற்றுவிட்டுப் பூரணியின் அன்னை கண்மூடியதும் அங்கேதான்.



இப்போது கடைசியாக அவரும் அங்கேயே கண்மூடி விட்டார். நல்ல ஓவியன் முடிக்காமல் அரைகுறையாக வைத்துச் சென்ற நல்ல ஓவியத்தைப் போல் அந்தக் குடும்பத்தை விட்டுச் சென்றுவிட்டார். அழகிய சிற்றம்பலம் பேரையும், புகழையும், ஒழுக்கத்தையும், பண்பையும், தேடிச் சேர்த்துப் பாதுகாத்தது போல் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் கொஞ்சம் செல்வத்தையும் சேர்த்துப் பாதுகாத்திருக்கலாம் அவர்! ஆனால் அப்படிச் செய்யவில்லையே! ஏழ்மை நிறைந்த கைகளும் வள்ளன்மை நிறைந்த மனமுமாக இருந்துவிட்ட காரணத்தால் அவரால் அப்படிச் சேர்த்து வைக்க முடியவில்லை.



பின் பிஞ்சும், பூவுமாக இருக்கும் அந்தக் குடும்பத்துக்கு அவர் எதைச் சேர்த்து வைத்துவிட்டுப் போனார்? யாரைத் துணைக்கு வைத்துவிட்டுப் போனார்? தமிழ்ப் பண்பையும் தாம் சேர்த்த புகழையும் - அவற்றிற்குத் துணையாகப் பூரணியையும் தான் வைத்துவிட்டுப் போக முடிந்தது அவரால். பூரணிக்கு இருபத்தொரு வயதின் வளர்ச்சியும் வனப்பும் மட்டும் அவர் தந்து செல்லவில்லை. அறிவை அடிப்படையாகக் கொண்ட தன்னம்பிக்கை; தம்மோடு பழகிப் பழகிக் கற்றுக்கொண்ட உயரிய குறிக்கோள்கள்; எதையும் தாங்கிக்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் இவைகளைப் பூரணிக்கும் பழக்கிவிட்டுப் போயிருந்தார். வளை சுமக்கும் கைகளில் வாழ்க்கையைச் சுமத்தியிருந்தார்.



அவருக்கும் அவருடைய மனைவிக்கும் நல்ல இளமையில் பிறந்தவள் பூரணி. அந்தக் காலத்தில் தமிழ்க் காவியங்களில் வருகிற பெண் பாத்திரங்களைப் பற்றிய திறனாய்வு நூலுக்காக ஓய்வு ஒழிவின்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார் அவர். அந்த ஆராய்ச்சி முடிந்து புத்தகம் வெளிவந்த அன்று தான் பூரணி பிறந்தாள். தமிழ்க் காவியங்களில் தாம் கண்டு திளைத்த பூரண எழில் எதுவோ அது அந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் நினைவு வந்தது அவருக்கு. குழந்தையின் நிறைந்த அழகுக்குப் பொருத்தமாகப் பூரணி என்று வாய் நிறையப் பெயரிட்டு அழைத்தார் அவர்.



அந்தப் புத்தகம் வெளிவந்த ஏழெட்டு மாதங்களுக்குப் பின் அதன் சிறப்பைப் பாராட்டிப் பல்கலைக்கழகத்தார் அவருக்குக் கௌரவ 'டாக்டர்' பட்டம் அளித்தார்கள். ஆனால் அதைவிட அவருக்கு இன்பமளித்த பட்டம், தட்டுத் தடுமாறிய மழலையில் பூரணி 'அப்பா' என்று அவரை அழைக்கத் தொடங்கிய குதலைச் சொல்தான்.



பூரணி வளரும் போதே தன்னுடைய பெயருக்குப் பொருத்தமாக அறிவையும் அழகையும் நிறைத்துக் கொண்டு வளர்ந்தாள். அறிவில் அப்பாவையும் அழகில் அம்மாவையும் கொண்டு வளர்ந்தாள் அவள். உயரமும் நளினமும் வஞ்சிக்கொடி போல் வளர்ச்சி.



மஞ்சள் கொன்றைப் பூவைப் போன்று அவளுடைய அழகுக்கே வாய்ந்ததோ என ஒரு நிறம். திறமையும் அழகுணர்ச்சியும் மிக்க ஓவியன், தன் இளம் பருவத்தில் அனுராகக் கனவுகள் மிதக்கும் மனநிலையோடு தீட்டியது போன்ற முகம் பூரணிக்கு. நீண்டு குறுகுறுத்து, மலர்ந்து, அகன்று, முகத்துக்கு முழுமை தரும் கண்கள் அவளுக்கு. எந்நேரமும் எங்கோ எதையோ எட்டாத உயர்ந்த பெரிய இலட்சியத்தைத் தேடிக் கொண்டிருப்பதுபோல் ஏக்கமும் அழகும் கலந்ததொரு வனப்பை அந்தக் கண்களில் காணமுடியும். வாழ்க்கை முழுவதும் நிறைவேற்றி முடிப்பதற்காக மகோன்னதமான பொறுப்புகளை மனதுக்குள் அங்கீகரித்துக் கொண்டிருப்பதுபோல் முகத்தில் ஒரு சாயல், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, இந்த நாட்டுப் பெண்மையின் குணங்களாகப் பண்பட்ட யாவும் தெரியும் கண்ணாடிபோல் நீண்டகன்ற நளின நெற்றி.



பூரணியைப் போல் பூரணியால்தான் இருக்கமுடியும் என்று நினைக்கும்படி விளங்கினாள் அவள். பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் பூரணியை வெறும் பள்ளியிறுதி வகுப்புவரைதான் படிக்க வைத்திருந்தார். வீட்டில் தமக்கு ஓய்வு இருந்த போதெல்லாம் குழந்தைப் பருவத்திலிருந்து முறையாக இலக்கண இலக்கியங்களைப் பூரணிக்குக் கற்பித்திருந்தார். எவ்வளவோ முற்போக்குக் கொள்கையுடையவராக இருந்தும் பெண்களின் படிப்பைப் பற்றி ஒரு திட்டமான கொள்கை இருந்தது அவருக்கு. கற்பூரம் காற்றுப் படப்படக் கரைந்து போவதுபோல் அதிகப் படிப்பிலும் வெளிப்பழக்கங்களிலும் பெண்மையின் மென்மை கரைந்து பெண்ணின் உடலோடும் ஆணின் மனத்தோடும் வாழுகின்ற செயற்கை நிலை பெண்களுக்கு வந்துவிடுகிறதென்று நினைப்பவர் அவர். பூரணியை அவர் கல்லூரிப் படிப்புக்கு அனுப்பாததற்கு அவருடைய இந்த எண்ணமே காரணம். கல்லூரிப் படிப்புத் தரமுடிந்த அறிவு வளர்ச்சியைப் போல் நான்கு மடங்கு அறிவுச் செழிப்பை வீட்டிலேயே தம் பெண்ணுக்கு அளித்திருந்தார் அவர். உண்மைப் பற்றும் ஆர்வமும் கொண்டு தமிழ் மொழியைப் பேச்சாலும் எழுத்தாலும் வளர்த்துவிட்டுப் போயிருந்தது போலவே தம் அருமைப் பெண்ணையும் வளர்த்துவிட்டுப் போயிருந்தார்.



மணி ஒன்பதரை, சாப்பாட்டை முடித்துக்கொண்டு புத்தகப் பையும் கையுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட திருநாவுக்கரசனும், சம்பந்தனும் ஏதோ நினைவு வந்ததுபோல் வாயிற் படியருகே தயங்கி நின்றனர். கடைசித் தங்கை குழந்தை மங்கையர்க்கரசிக்குக் கைகழுவி விடுவதற்காக வாயிற்புறம் அழைத்துக் கொண்டு வந்த பூரணி, அவர்கள் நிற்பதைப் பார்த்து விட்டாள்.



"ஏண்டா இன்னும் நிற்கிறீர்கள்? பள்ளிக்கூடத்துக்கு உங்களுக்கு நேரமாகவில்லையா?"



மூத்தவன் எதையோ சொல்ல விரும்புவது போலவும், சொல்லத் தயங்குவது போலவும் நின்றான். அதற்குள் பூரணியே புரிந்து கொண்டுவிட்டாள்.



"ஓ! பள்ளிக்கூடச் சம்பளத்துக்குக் கடைசி நாளா? இரு பார்க்கிறேன்." குழந்தைக்குக் கைகழுவி விட்டு உள்ளே போய்ப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். இருந்ததைக் கொட்டி எண்ணியதில் ஏழரை ரூபாய் தேறியது. பாங்குப் புத்தகத்தை விரித்துப் பார்த்தாள். எடுப்பதற்கு அதில் மேலும் ஒன்றுமில்லை எனத் தெரிந்தது. தம்பியைக் கூப்பிட்டு ஏழு ரூபாயை அவனிடம் கொடுத்து "சம்பளத்தை இன்றைக்கே கட்டிவிடு" என்று சொல்லி அனுப்பினாள். அவர்கள் "வருகிறோம் அக்கா" என்று சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். அந்த வீட்டின் எல்லையில் தங்கிய கடைசி நாணயமான அந்த எட்டணாவைப் பெட்டிக்குள்ளே போட்டபோது, பூரணிக்குச் சிரிப்புத்தான் வந்தது. துன்பத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று நினைக்கிறபோது உண்டாகிற வறண்ட சிரிப்புதான் அது.



வாசலில் தபால்காரன் வந்து நின்றான். கூடத்தில் உட்கார்ந்து அம்புலிமாமா பத்திரிகையில் பொம்மை பார்த்துக் கொண்டிருந்த மங்கையர்க்கரசி துள்ளிக் குதித்தோடிப் போய் தபால்களை வாங்கிக் கொண்டு வந்தாள். பெரிய ரோஜாப்பூ ஒன்று கையும் காலும் முளைத்து வருவதுபோல் அந்தச் சிறுமி அக்காவை நோக்கி ஓடி வந்தாள். தங்கை துள்ளிக் குதித்து ஓடிவந்த அழகில் பூரணியின் கண்கள் சற்றே மகிழ்ச்சியும் மலர்ச்சியும் காட்டின.



வழக்கம்போல் பெரும்பாலான கடிதங்கள் அப்பாவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வந்தவைதான். இரண்டொரு கடிதங்கள் இலங்கையிலிருந்தும் மலேயாவிலிருந்தும் கூட வந்திருந்தன. கடல் கடந்து போயும் அப்பாவின் நினைவை மறக்காத அந்தப் பழைய மாணவர்கள் செய்தித்தாள்கள் மூலம் விபரமறிந்து எழுதியிருந்தார்கள். அவ்வளவு புகழும் பெருமையும் வாய்ந்த ஒருவருடைய பெண்ணாக இருப்பதை நினைப்பதே பெருமையாக இருந்தது அவளுக்கு.



கடைசியாகப் பிரிக்கப்படாமல் இருந்த இரண்டு உறைகளில் ஒன்றைப் பிரித்தாள். தலைப்பில் இருந்த பெயரைப் படித்ததும் அவள் முகம் சிறுத்தது. அப்பாவிடம் வீட்டில் வந்து தனியாகத் தமிழ்ப் படித்தவரும் பெருஞ் செல்வரும் ஆகிய ஒரு வியாபாரி எழுதியிருந்த கடிதம் அது. தமிழ் சொல்லிக் கொடுத்தாலும் அந்த வியாபாரியின் குணமும் முறையற்ற அரசியல் பித்தலாட்டங்களும் அப்பாவுக்குப் பிடிக்காது. கடைசிவரையில் பிடிவாதமாக அந்த மனிதனிடம் கால்காசு கூட வாங்கிக் கொள்ள மறுத்துக் கொண்டே அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து அனுப்பி விட்டார் அவள் அப்பா.



'ஏழைகளின் இரத்தத்தைப் பிழிந்து பணம் சேர்த்தவன் அம்மா இவன். மனதில் நாணயமில்லாமல் கைகளில் நாணயத்தைக் குவித்துவிட்டான். தமிழைக் கேட்டு வருகிற யாருக்கும் இல்லையென்று மறுப்பது பாவம் என்று நம்புகிறவன் நான். அந்த ஒரே நம்பிக்கைக்காகத்தான் இவனைக் கட்டிக் கொண்டு அழுகிறேன்' என்று பலமுறை வெறுப்போடு அந்த மனிதரைப் பற்றி பூரணியிடம் சொல்லியிருக்கிறார் அவர். உலகத்தில் எந்த மூலையில் எவ்வளவு பெரிய மனிதனிடத்தில் நாணயக்குறைவும் ஒழுக்கக் குறைவும் இருந்தாலும் அந்த மனிதனைத் துச்சமாக நினைக்கிற துணிவு அப்பாவுக்கு உண்டு. பண்புக்குத்தான் அவரிடம் மதிப்பும் மரியாதையும் உண்டு. வெறும் பணத்திற்கு அதை அவர் தரவே மாட்டார்.



இத்தனை நினைவுகளும், வெறுப்பும் பொங்க அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் பூரணி.



"இதனுடன் தொகை போடாமல் என் கையெழுத்து மட்டும் போட்டு ஒரு செக் இணைத்திருக்கிறேன். தங்களுக்கு எவ்வளவு தொகை தேவையானாலும் எழுதி எடுத்துக் கொள்ளலாம். தந்தை காலமான பின் தங்கள் வீட்டு நிலையை என்னால் உணர முடிகிறது. தயவு செய்து இதை மறுக்கக்கூடாது."



பூரணியின் முகம் இன்னும் சிறுத்தது. கடிதத்தின் பின்னால் இருந்த கனமான அந்த வர்ணக் காகிதத்தைப் பார்த்தாள். அந்த சிவப்பு நிற எழுத்துக்கள் எல்லாம் ஏழைகள் சிந்திய கண்ணீர்த் துளிகளில் அச்சடிக்கப்பட்டனவா? உலகத்திலேயே மிகவும் இழிந்த ஒன்றைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பது போல் ஒரு அருவருப்பு உண்டாயிற்று பூரணிக்கு.



அந்தக் கடிதத்தையும் செக்கையும் வெறுப்போடு கீழே வீசியெறிந்துவிட்டு நிமிர்ந்தாள். எதிரே அதற்காக அவளைப் பாராட்டுவதுபோல் அப்பாவின் படம் சிரித்துக் கொண்டிருந்தது. எப்போது சிரிக்கிற சிரிப்புதான் அப்போது அப்படித் தோன்றியது.



பூரணி உள்ளே போய் பேனாவை எடுத்து வந்தாள். கீழே கிடந்த அந்த செக்கை எடுத்து அதன் பின்புறம் 'அப்பாதான் செத்துப் போய்விட்டார். அவருடைய தன்மானம் இன்னும் இந்தக் குடும்பத்திலிருந்து சாகவில்லை. சாகாது. உங்கள் உதவிக்கு நன்றி! தேவையானவர்களுக்கு அதைச் செய்யுங்கள். இதோடு உங்கள் செக் திரும்பி வருகிறது' என்று எழுதி வேறு உறைக்குள் வைத்தாள். வீட்டில் எப்போதோ வாங்கி உபயோகப்படுத்தப்படாமல் தபால் தலைகள் கொஞ்சம் இருந்தன. அவற்றை ஒட்டி முகவரி எழுதினாள். முதல் வேலையாக அதை எதிர்ச்சாரியில் தெருவோரத்தில் இருந்த தபால் பெட்டியில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்தாள். அதைச் செய்ததும்தான் கையிலிருந்து ஏதோ பெரிய அழுக்கைக் கழுவித் தூய்மைப்படுத்திக் கொண்ட மாதிரி இருந்தது அவளுக்கு. மனதில் நிம்மதியும் பிறந்தது.



திரும்பி வந்ததும், பிரிக்கப்படாமல் இருந்த மற்றோர் உறை அவள் கண்களில் தென்பட்டது. குழந்தை மறுபடியும் 'அம்புலிமாமா'வைப் பொம்மை பார்க்கத் தொடங்கியிருந்தாள். பூரணி அதுவும் ஒரு அனுதாபக் கடிதமாக இருக்கும் என்று பிரித்தாள். திருப்பரங்குன்றத்தில் அவர்கள் குடியிருக்கும் அந்த வீட்டின் சொந்தக்காரர் மதுரையில் குடியிருந்தார். அவர் எழுதியிருந்த கடிதம்தான் அது.



"வீட்டை அடுத்த மாதம் விற்கப் போகிறேன். அதற்குள் தாங்கள் தரவேண்டிய ஆறு மாதத்து வாடகைப் பாக்கியைச் செலுத்திவிட்டு வேறு இடம் பார்த்துக் கொள்ள வேண்டியது."



கடிதம் அவள் கையிலிருந்து நழுவிக் குழந்தை வைத்திருந்த அம்புலிமாமாவுக்குப் பக்கத்தில் விழுந்தது.



"அக்கா இந்தாங்க" என்று மழலையில் மிழற்றிக் கொண்டே குழந்தை மங்கையர்க்கரசி அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். பூரணி அப்பாவின் படத்தை அந்த அற்புதக் கண்களைப் பார்த்துக் கொண்டு சிலையாக நின்றாள்.



'பெண்ணே! வாழ்க்கையில் முதல் துயர அம்பு உன்னை நோக்கிப் பாய்கிறது. நான் இறந்தபின் நீ சந்திக்கிற முதல் துன்பம் இது. கலங்காதே. துன்பங்களை வெல்லுகிற முயற்சிதான் வாழ்க்கை.'



அப்பாவின் படம் பேசுவதுபோல் ஒரு பிரமையை உண்டாக்கிக் கொண்டாள் அவள். அவருடைய அற்புதக் கண்களிலிருந்து ஏதோ ஓர் ஒளி மெல்ல பாய்ந்து பரவி அவளிடம் வந்து கலக்கிறதா? அவள் மனதில் துணிவின் நம்பிக்கை ஒளி பூத்தது.



குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 3:00 am

2


கல்லினுள் மணிநீ சொல்லினுள் வாய்மைநீ

அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ

அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ"

-பரிபாடல்

குழந்தை மங்கையர்க்"தீயினுள் தென்றல்நீ பூவினுள் நாற்றம்நீ

கரசி புத்தகம் பார்த்துக் கொண்டிருந்த இடத்திலேயே படுத்துத் தூங்கிப் போயிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரர் எழுதியிருந்த கடிதத்தோடு மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் பூரணி. மங்கையர்க்கரசியைப் போல் நானும் குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிய போது மனமெல்லாம் ஏக்கம் நிறைந்து தளும்பியது அவளுக்கு. படைப்புக் கடவுளைப் போல் கஞ்சத்தனம் உள்ளவர் வேறு யாரும் இருக்க முடியாது. சுக துக்கங்களை அங்கீகரித்துக் கொள்ளாமல் நினைத்தபோது உண்டு, நினைத்தபோது உறங்கி, அந்த வினாடிகளை அந்தந்த வினாடிகளோடு மறந்துபோகும் குழந்தைப் பருவத்தை மனிதனுக்கு மிகவும் குறைவாக அல்லவா கொடுத்திருக்கிறார் அவர். அறிவு, அனுபவம், மூப்பு எல்லாம் துக்கத்தைப் புரிந்து கொள்கிற கருவிகள்தாமா!

பூரணி நெட்டுயிர்த்தாள். எதிரே தெருவாசல் வெறிச்சோடிக் கிடந்தது. பகல் ஏறிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் ஏதோ ஒரு தனி அமைதியில் மூழ்கிப் போயிருந்தது தெரு. காலம் என்ற பெரிய இயந்திரத்தை யாரோ சொல்லாமல் இரகசியமாக ஒடித்துப் போட்டுவிட்டுப் போய்விட்ட மாதிரி தெருவெங்கும், வெறுமை நிழலாடும் நேரம் அது. உச்சி வேளைக்கு மேல் கோயிலும் மூடி விடுவார்கள். எனவே தரிசனத்துக்காகப் போகிற ஆட்கள் கூட திருப்பரங்குன்றம் சந்நிதித் தெருவில் இல்லை அப்போது.

பூரணி வாயிற்புறம் வந்தாள். கம்பிக் கதவைச் சாத்தி உட்புறம் தாழிட்டுக்கொண்டு திரும்பினாள். எங்கோ கோயில் வாயிலில் பூக்கடைப் பக்கமிருந்து வெட்டிவேர் மணம் வந்து பரவியது. அந்த ஊருக்கு மட்டுமே அத்தகையதொரு மணம் சொந்தம். கோயிலுக்கு அருகில் நான்கு தெருக்கள் வரையில் வெட்டிவேர் மணம் கமகமத்துக் கொண்டே இருக்கும்.

'முருகனுடைய அருள் மணம்போல் இது எங்க ஊருக்குத் தனிச்சிறப்பு அம்மா!' என்று அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அந்த மணம் பூரணிக்கு இதை நினைவுபடுத்தியது.

வீட்டுக்காரருக்கு ஆறுமாத வாடகைக் கடனை அடைக்கப் பணம் வேண்டும். அடுத்தபடி குடியிருக்கக் குறைந்த வாடகையில் ஓர் இடமும் பார்த்தாக வேண்டும். இந்த இரண்டுக்கும் மேலாகத் தனக்கு ஒரு வேலையும் பார்த்துக் கொள்ள வேண்டும். சீரும் சிறப்புமாக வாழாவிட்டாலும் மானமாகப் பிழைக்க வேண்டுமே. அப்பா போய்விட்டாலும் அவருடைய புகழும், பெருமையும் இந்த வீட்டைச் சுற்றிலும் ஒளிபரப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் புகழினால் மணம்தான் நிரம்பும். வயிறு நிரம்புமா? புகழ் சோறு போடாது. புகழ் குடும்பத்தைக் காப்பாற்றிவிடாது. புகழ் தம்பிகளையும் தங்கையையும் வளர்த்து, படிக்க வைக்காது, வாயால் புகழுகிற மனிதர்களெல்லாம் கைகளால் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறு. அப்படியே செய்கிறவர் முன்வந்தாலும் அவர் காலையில் 'செக்' அனுப்பியிருந்த வியாபாரி மாதிரி நேர்மையற்றவராக இருப்பார். தவறான வழியில் பிறரிடம் உதவிபெற்று நன்றாக வாழ்வதைக் காட்டிலும் முறையான வழியில் உழைத்துச் சுமாராக வாழ்ந்தாலே போதும். வறுமையாக வாழ்ந்தாலும் செம்மையாக வாழ வேண்டும். அப்பாவுக்குப் பிடித்த வாழ்வு அதுதான்.

'பூரணி! குற்றங்களை மறைவாகச் செய்துகொண்டு வெளியார் மெச்சும்படி செல்வனாக வாழ்வதைவிடக் கேவலமான உழைப்பாலும் வெளிப்படையாக உழைத்து வெளிப்படையான ஏழையாக வாழ்ந்து விடுவது எவ்வளவோ சிறந்தது அம்மா!' என்று அப்பா வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டே இருப்பார். அப்பாவுக்கு அறத்தில் நம்பிக்கை அதிகம். கடவுள் பற்றும் அதிகம். 'அறத்தின் வெற்றிக்கு அன்பு காரணமாக இருக்கிறது. அந்த அன்பில் இறைவன் இருக்கிறான்'. அதேபோல் மறத்தின் நடுவே அது நிகழக் காரணமான வலிமையில் நின்று அதை அழிக்கவும் இறைவன் ஆணை காத்திருக்கிறது. 'அனைத்தும் அனைத்தின் உட்பொருளும் இறைவன் மயம்' என்ற பரிபாடல் தத்துவத்தைத் தம்முடைய மேடை சொற்பொழிவுகளில் எல்லாம் தவறாமல் சொல்வார் அப்பா. அவருடைய வாழ்க்கை அறிவுத் துறையில் வெற்றி பெற்றதற்கு இந்த நம்பிக்கையும் ஒரு காரணம். 'தீயில் சூடும், பூவில் மணமும், கல்லில் வைரமும், சொல்லில் வாய்மையும், அறத்தில் அன்பும், கொடுமையில் வலிமையும் நீயே' என வரும் பொருளுள்ள பரிபாடலின் நான்கு வரிகளைத் தம்முடைய படிப்பறையில் புத்தக அலமாரிக்கு மேலே பெரிதாக எழுதித் தொங்கவிட்டிருந்தார் அவர்.

இதை நினைத்ததும் அப்போதே அப்பாவின் புத்தக அலமாரிக்குப் பக்கத்தில் போய் நிற்க வேண்டும் போல் இருந்தது பூரணிக்கு. அவருடைய படிப்பறைக்குச் சென்றாள். அறையின் நான்கு புறமும் அடுக்கடுக்காகப் புத்தகங்கள் தெரியும். கண்ணாடி பீரோக்களும் அவை காணாததற்குச் சுவரில் அமைந்திருந்த அலமாரிகளும் இருந்தன. வாயிற்கதவுக்கு நேர் எதிரேயிருந்த அலமாரிக்கு மேல், உள்ளே நுழைகிறவர் கண்களில் உடனே படுகிறார் போல் அவருக்குப் பிடித்த அந்தப் பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்தன. அதை ஒருமுறை கண்ணால் பார்த்ததும் தூய்மையில் மூழ்கி எழுந்தது போல் புத்துணர்வு பெற்றாள் அவள்.

அப்பாவின் வருவாயில் பெரும் பகுதி புத்தகங்கள் வாங்குவதிலேயே செலவழித்துக் கழிந்தது. அவர் ஆயிரக்கணக்கில் பணம் சேர்த்து வைத்துவிட்டுப் போகாவிட்டாலும் புத்தகங்கள் சேர்த்து வைத்துவிட்டுப் போயிருந்தார். பதினைந்து நாட்களாக ஆள் நடமாடாது தூசி படிந்திருந்தது அந்தப் படிப்பறை. அதோ அந்த நாற்காலியில் உட்கார்ந்துதான் அவர் தமிழ் ஆட்சி புரிந்தார். மேஜை மேல் கிடக்கிறதே கறுப்புப் பேனா, அதுதான் அவர் எழுதியது. அதோ மேஜைக்கு அடியில் ஊதுவத்திக் கிண்ணம், கடைசி நாளன்று காலையில் அவர் கொளுத்திய வத்தியின் சாம்பற்கரி இழைகள் கூட இன்னும் அழியவில்லை. மணத்தைப் பரப்பிக் கொண்டே தான் கரைந்து வருகிற ஊதுவத்தி போல்தான் அவரும் வாழ்ந்து போய்விட்டார்.

அந்த அறையில் ஒவ்வொரு பொருளாகப் பார்க்கப் பார்க்க பூரணிக்கு துக்கம் மேலெழுந்தது. இன்னும் சிறிது நேரம் அங்கு இருந்தால் இதயமே வெடித்துக் கொண்டு அழுகை பீறிட்டு வரும்போல் தோன்றியது. அவள் துக்கத்தை மறைக்க முயல்கிறாள். துக்கம் அவளைத் தன்னுள் மறைக்க முயல்கிறது. மரணத்தை எண்ணிக் கலங்கும் துக்கத்துக்கு முன் துணிவும் நம்பிக்கையும் எம்மாத்திரம்?

குறைந்த வாடகையில் குடியிருக்க இடம் மாறினால் அவ்வளவு புத்தகங்களையும் எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வது? என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது. மாதம் ஐம்பது ரூபாய் வீதம் ஆறுமாத வாடகைப் பணம் முந்நூறு ரூபாயைக் கொடுத்து முடித்துவிட்டால் அல்லவா வேறு இடம் பற்றிச் சிந்திக்க வேண்டும். கல்லூரியிலிருந்து அப்பாவின் 'சேமநிதி' (பிராவிடண்ட் பண்டு) கொஞ்சம் வரும். அது அவ்வளவு விரைவில் கிடைக்காது. புதிதாகப் பார்க்கிற வீட்டையும் இவ்வளவு பெரிதாக இவ்வளவு வாடகையில் பார்க்க முடியாது. கையில் எட்டணாக் காசையும் மனத்தில் வேலை தேடும் நோக்கத்தையும் வைத்துக் கொண்டுதான் தன் வாழ்க்கையைத் தொடங்கப் போகிறாள் அவள்.

மூத்த தம்பி ஐந்தாம் பாரமும், அடுத்தவன் மூன்றாம் பாரமும் படிக்கிறார்கள். குறைந்த பட்சம் அவர்களுடைய உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிகிற வரையாவது அவள்தான் வளர்த்துக் காப்பாற்றியாக வேண்டும். மங்கையர்க்கரசியையும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட வேண்டும். வருகிற தையோடு அவளுக்கு ஆறு வயது நிறைகிறது. ஆரம்பப் பள்ளிக்கூடம் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறது.

அப்பாவின் மறைவுக்குப் பின் தன்னை நம்பியிருக்கும் பொறுப்புகளை மனதில் ஒழுங்குபடுத்தி வரிசையாக நினைத்துப் பார்த்துக் கொண்டாள் பூரணி. இவற்றுக்கெல்லாம் உடனே ஏதாவதொரு வழி செய்தாக வேண்டும். பிரச்சினைகள் வாயிற்படியில் வந்து நின்றும் கதவை அடைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து இருக்க முடியாது. தைரியத்தோடும், நம்பிக்கையோடும் அவள் தெருவில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனிமேல் கால்களில் அழுக்குப்படுமே என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது! மனத்தில் மட்டும் அழுக்குப் படாமல் பார்த்துக் கொண்டால் போதும்.

நாவுக்கரசனுக்கும் சம்பந்தனுக்கும் பசுமலையில் பள்ளிக்கூடம். இரண்டுபேரும் நடந்து போய்விட்டு நடந்தே திரும்பி வருவார்கள். அதனால் இடைவேளைக்கு வீட்டுக்குச் சாப்பிட வருவதில்லை. காலையில் போகும்போதே ஏதாவது கையோடு கட்டிக் கொடுத்து அனுப்பிவிடுவாள் பூரணி. மாலையில் அவர்கள் வீடு திரும்ப நாலரை மணிக்கு மேலாவது ஆகும்.

அதுவரை அவள் வீட்டில் காத்திருக்க முடியாது. மூன்று மணி சுமாருக்காவது புறப்பட்டுப் போனால்தான் மதுரையில் ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்துக் கொண்டு திரும்பலாம். 'பிராவிடண்டு பண்டு' பற்றி நினைவுறுத்தி விரைவாகக் கிடைக்கச் செய்வதற்கு அப்பா வேலை பார்த்த கல்லூரி முதல்வரைப் பார்க்க வேண்டும். வீட்டுக்காரரைச் சந்தித்து வாடகை பாக்கியைக் கொடுத்துவிட்டு 'வீட்டை விரைவில் காலி செய்துவிடுவதாக'த் தெரிவிக்க வேண்டும். அப்பாவின் புத்தகங்களை வெளியிட்ட பதிப்பாளர் ஒருவர் புதுமண்டபத்தில் இருக்கிறார். அவரைப் பார்ப்பதிலும் ஒரு பயனும் இல்லை. வழக்கம் போல் பஞ்சப் பாட்டு தான் பாடுவார்கள். ஆனாலும் பார்த்துக் கண்டிப்பு செய்ய வேண்டும். வேலைக்காக யாராவது இரண்டு மூன்று பேரை பார்க்க வேண்டும். வீடு கூட மதுரையில் எங்காவது நாலைந்து ஒண்டுக் குடித்தனங்கள் சேர்ந்திருக்கின்ற இடத்தில் பார்க்கலாம். ஆனால் திருப்பரங்குன்றத்தில் அவ்வளவு பெரிய வீட்டுக்குக் கொடுத்த வாடகையை மதுரையில் இரண்டு அறைகள் ஒண்டுக் குடியிருப்புக்குக் கொடுக்க வேண்டியிருக்குமே. தம்பிகளை வேறு நடு ஆண்டில் பசுமலைப் பள்ளிக்கூடத்தில் இருந்து மாற்றி மதுரையில் சேர்க்க வேண்டும். எனவே மதுரைக்கே குடிபோவது சாத்தியமில்லை என்று அவள் நினைத்தாள். மதுரையில் வீட்டு வாடகையை அவளால் கொடுத்துக் கட்டுப்படியாக முடியுமா?

மதுரையில் மிக உயரமானவை கோபுரங்களும் வீட்டு வாடகையும் தான். அந்த நான்கு கோபுரங்களையும் சுற்றி வீடுகள் மலிவாகக் கிடைக்கமாட்டா. பிச்சைக்காரர்களும், சைக்கிள் ரிக்ஷாக்களும் தான் மலிவாகக் கிடைக்கிற அம்சங்கள். இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குச் செலவும் நிம்மதிக் குறைவும் அதிகமாக இருப்பதுபோல் மதுரை என்கிற அழகு இரண்டு மாவட்டங்களுக்குத் தலைநகராக இருந்து தொல்லைப்படுற நிலை வெள்ளைக்காரன் காலத்துக்குப் பின்னும் போன பாடில்லை.

மணி இரண்டரை ஆகியிருந்தது. பூரணி கிணற்றடிக்குப் போய் முகம் கழுவிக் கொண்டு வந்தாள். புடவை மாற்றிக் கொண்டு திலகம் வைத்துக் கொள்வதற்காகக் கண்ணாடி முன் நின்றபோது குழந்தை தூக்கத்திலிருந்து எழுந்து வந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றாள்.

சந்தனச் சோப்பில் குளித்த முகம் அப்போதுதான் மலர்ந்த செந்தாமரைப் பூப்போல் புதிய மலர்ச்சி காட்டியது. சித்திரக்காரன் தூரிகையால் அநாகரிகமாக இழுத்துவிட்ட கறுப்புக் கோடுகள் போல் காதுகளின் ஓரத்தில் இரண்டு கரும்பட்டுச் சுருள் மயிரிழைகள் சிவப்பு நிறத்தின் நடுவே எடுப்பாகத் தெரியும் பூரணிக்கு. அழகிய குமிழம்பூ மூக்கு மேலே முடிகிற இடத்தில் புருவங்களின் கூடுவாயில் பெரிதாக ஒரு குங்குமப்பொட்டு வைத்து அதற்கு மேலே சிறிதாக ஒரு கருஞ்சாந்துப் பொட்டு வைத்துக் கொள்வாள் அவள். அப்பா சேர்த்து வைத்துவிட்டுப் போகாவிட்டாலும் அவளுடைய உடம்பை மூளியாக வைத்துவிட்டுப் போய்விடவில்லை. புன்னகையோடு சில பொன்னகைகளும் இருந்தன அவளுக்கு. பொன் வளையல்கள் இருந்தாலும் கை நிறைய கருப்பு வளையல்கள் அணிந்து கொள்வதில் அவளுக்கு மிகவும் பிரியம். இழைத்த தங்கத்தில் வரி வரியாகக் கரும்பட்டுக் கயிறு சுற்றின மாதிரிச் செழிப்பான அவளுடைய வெண்சிகப்புக் கைகளில் அந்தக் கரிய வளையல்கள் தனிக்கவர்ச்சி தரும்.

நகைப்பெட்டிக்குள் கிடந்த பொன் வளையல்கள் இரண்டையும் ஓர் அட்டைப் பெட்டிக்குள் வைத்துக் கையோடு எடுத்துக் கொண்டாள். புத்தகக் கடைக்காரரும் கையை விரித்து விட்டால், பணத்துக்கு எங்கே போவது? வாடகை பாக்கி கொடுப்பதற்கும், வேலை கிடைக்கிறவரை வீட்டுப்பாட்டை சமாளித்துக் கொள்வதற்கும் கையில் ஏதாவது வேண்டுமே. வளையல்களைப் போட்டுப் பணமாக மாற்றிக் கொள்ள நினைத்தாள் அவள்.

"அக்கா! உனக்கு இந்தப் பொட்டு ரொம்ப நல்லாயிருக்கு. இனிமேல் தினம் இது மாதிரி வச்சுக்கணும்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் மங்கையர்க்கரசி. அப்பா போன துக்கத்தைக் கொண்டாட வீட்டிலேயே அடைந்து கிடந்த நாட்களில் பூரணி குளிப்பதற்கு அதிகமாகத் தன்னை எந்த அலங்காரமும் செய்து கொண்டதில்லை. இன்று திடீரென்று அக்காவின் திலகம் குழந்தைக்கு மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது போலும்!

"ஆகட்டும் மங்கை! தினம் இதுமாதிரி பொட்டு வைச்சுப்பேன். நான் சொல்கிறபடி நீ இப்போது கேட்க வேண்டும். நான் அவசரமாக மதுரைக்குப் போய்விட்டு வரவேண்டியிருக்கிறது. உன்னை ஓதுவார் தாத்தா வீட்டிலே விட்டுவிட்டுச் சாவியையும் கொடுத்துவிட்டுப் போகிறேன். நீ அண்ணன் பள்ளிக்கூடத்திலேர்ந்து வரவரைக்கும் அங்கே சமர்த்தாக இருக்க வேண்டும். முரண்டு பிடிக்கக்கூடாது; அழவும் கூடாது."

"நானும் உங்ககூட மதுரைக்கு வரேனக்கா?" சொல்லிவிட்டு குழந்தை கண்களை அகல விழித்துக் கெஞ்சுகிற பாவனையில் பூரணியின் முகத்தைப் பார்த்தாள்.

"நீ வேண்டாம் கண்ணு. உன்னால என்னோடு அலைய முடியாது. நான் போயிட்டு சுருக்க ஓடி வந்துவிடுவேன். கேட்டுக்கிட்டு அவங்க வீட்டிலே இரு." குழந்தை ஒருவழியாக இருக்க ஒப்புக் கொண்டுவிட்டது போல் அடங்கிவிட்டாள். பூரணிக்குத் தலை பின்னிக் கொள்ளக்கூட நேரம் இல்லை. அப்படியே எண்ணெய் தடவி வாரி முடிந்து கொண்டாள். கருகருவென்று முழங்கால் வரை தொங்குகிற பெரிய கூந்தல் அவளுக்கு. இரட்டைச் சவுரி வைத்தும் போதாமல் நாய் வால்போலச் சிறிய பின்னல் போட்டுக்கொள்ளும் எதிர்வீட்டுக் காமாட்சிக்குப் பூரணியிடம் ஒரே பொறாமை. காமாட்சி ஓதுவார் தாத்தாவின் பேத்தி. அவளுக்குப் பூரணியைவிட இரண்டு மூன்று வயது குறைவு. சிறு வயதிலேயே இருவரும் நெருங்கிப் பழகின தோழிகள். இரண்டு வீடுகளும் ஒரே ஊரில் ஒரே தெருவில் எதிர் எதிரே இருக்கிற உறவில் பிறந்த ஒரு நெருக்கமும் - அந்த குடும்பங்களுக்கு இடையே உண்டு.




குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 3:00 am


பூரணி, வீட்டுக் கதவைப் பூட்டிச் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு குழந்தை மங்கையர்க்கரசியோடு எதிர் வீட்டுக்குப் போய் நுழைந்தாள்.

வாசல் திண்ணையில் சிவப்பழமாக உட்கார்ந்துகொண்டு அந்த வயதிலும் மூக்குக் கண்ணாடி இல்லாமல் தேவாரப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த கிழவர் நிமிர்ந்தார். இந்தக் கிழவர் மேல், அழகிய சிற்றம்பலம் வாழ்ந்த காலத்தில் பெரு மதிப்பு வைத்திருந்தார்.

"அடடே! பூரணியா... வா, அம்மா! எங்கேயோ புறப்பட்டுக் கொண்டிருக்கிறாய் போலிருக்கிறதே! மதுரைக்கா?" கிழவருக்குக் கணீரென்று வெண்கல மணியை நிறுத்தி நிறுத்தி அடிப்பது போன்ற குரல்.

"ஆமாம் தாத்தா! குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். தம்பிகள் வந்தால் சாவியைக் கொடுத்துவிட வேண்டும். அவ்வளவுதான்." பூரணி சாவியை அவருக்குப் பக்கத்தில் வைத்தாள். குழந்தை தானாகவே உரிமையோடு கிழவரின் மடியின்மேல் போய் உட்கார்ந்துகொண்டு "இன்னிக்கு நெறையப் புது கதையாய்ச் சொல்லணும் தாத்தா... பழைய கதையாகச் சொல்லி, 'அம்மையார்க் கிழவி', 'குருவி காக்காய்னு' ஏமாத்தப் படாது" என்று தொணதொணக்கத் தொடங்கிவிட்டாள். வாசலுக்கு நேரே உள்ள கூடத்தில் காமாட்சியும் அவள் பாட்டியும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

"பூரணி! இப்படிக் கொஞ்சம் உள்ளே வந்துவிட்டுப் போயேன்" என்று குரல் கொடுத்தாள் காமாட்சி.

"அப்புறம் வருகிறேன் காமு, இப்போது நான் அவசரமாகப் போகவேண்டும்" என்று கிளம்பினாள் பூரணி.

"அப்படி என்ன அவசரம் அம்மா?" என்று கிழவர் குறுக்கிட்டார்.

தந்தைக்கு ஒப்பான அந்தக் கிழவரிடம் தன் துன்பங்களைச் சொல்வதில் தவறில்லை என்று எண்ணினாள் பூரணி. வீட்டுக்காரர் காலி செய்துவிட்டுப் போகச் சொல்வதையும் அவரிடம் கடன்பட்டிருப்பதையும் வீட்டின் ஏழ்மையையும் உடைத்துச் சொல்லிவிடலாமென்று நினைத்தாள். ஆனால் அவளுக்கு நா எழவில்லை. மனமும் நாவும் நெகிழ்ந்துவிட இருந்த அந்தச் சமயத்தில் தந்தையின் இரத்தத்தில் ஊறிவந்த பண்பு காப்பாற்றியது. நம்முடைய ஏழ்மையையும் துன்பங்களையும் கூடுமானவரை நம்மைக் காட்டிலும் ஏழ்மையும் துன்பமும் உள்ளவர்களிடம் சொல்லாமல் இருப்பதே நல்லது. குறைந்த வருவாயும் நிறைந்த மனிதர்களும், செலவுகளும் உள்ள ஓதுவார் குடும்பத்துக்கு நம்முடைய துன்பங்களும் தெரிய வேண்டியது அநாவசியம் என்று அவளுக்குப்பட்டது. தனக்கு வந்த துன்பங்களையும் பிரச்சினைகளையும் தாமே ஏற்றுக்கொண்டு சமாளிப்பதுதான் நாகரிகம் என்பது அப்பாவின் கருத்து.

அவற்றை அடுத்தவர்களுக்குத் தெரியும்படி நெகிழவிட்டு அனுதாபம் சம்பாதிப்பது கூட அநாகரிகம் என்கிற அளவு தன்மானமுள்ளவர் அப்பா.

பூரணி அப்பாவின் பெண். அதே தன்மானமுள்ள இரத்தம் தான் அவளுடைய உடலிலும் ஓடுகிறது. "ஒன்றுமில்லை தாத்தா, அப்பாவின் 'பிராவிடண்டு பண்டு' விஷயமாக கல்லூரி முதல்வரைப் பார்த்துச் சொல்ல வேண்டும். வேறு ஒன்றும் இல்லை" என்று நல்லதை மட்டும் அவரிடம் சொல்லி முடித்தாள்.

ஒளியும் எழிலும் நிறைந்த செங்கமலப்பூ உயரமான கொடியோடு ஒல்கி, ஒல்கித் தென்றலில் அசைந்தாடிக் கொண்டு நடப்பதுபோல் பூரணி தெருவில் செல்லும்போதுதான் எத்தனை கண்கள் அவளைப் பார்க்கின்றன! சந்நிதித் தெருவின் வடக்கில் வந்து, மயில் மண்டபத்தைக் கடந்து போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாப்பில் அவள் பஸ்ஸுக்காக நின்றாள். எதிர்ப்புறம் தென்கால் கண்மாயின் கரையில் துணி வெளுப்போர் கும்பல் கூடியிருந்தது. சலவை செய்வோர் உலர்த்திய பலநிறத் துணிகள் உயர்ந்த மண்கரை மேல் நிறங்களின் கலவைகளைக் காண்பித்துக் கொண்டிருந்தன. கண்மாயின் நீர்ப்பரப்புக்கு அப்பால் வடமேற்கே நெல் வயல்களும், கரும்புத்தோட்டங்களும், கொடிக்கால்களும், தென்னைக் கூட்டமுமாக அழகு, திரைகட்டி எழுதியிருந்தது. அந்த நேரத்தில் அந்த 'ஸ்டாப்'பில் பூரணி ஒருத்திதான் தனியாக நின்று கொண்டு பஸ்ஸை எதிர்பார்த்தாள். தெற்கேயிருந்து சென்ட்ரல்-திருப்பரங்குன்றம் ஐந்தாம் நம்பர் பஸ் வந்து நின்றது. அவள் ஏறிக்கொண்டாள். கண்டக்டர் 'வாங்க அம்மா!' என்று முகம் மலர வணக்கம் தெரிவித்தார். அப்பாவுக்கு இப்படி எத்தனையோ பழைய மாணவர்கள். அடிக்கடி அப்பாவோடு அவளையும் பார்த்திருக்கிற காரணத்தால் எல்லோரும் அவளை இன்னாரென்று தெரிந்துகொண்டிருந்தனர். முழுமையாக இருப்பு என்ற பேரில் கைவசம் இருந்த அந்த எட்டணாவைக் கொடுத்துக் கல்லூரி நிலையத்துக்கு ஒரு டிக்கெட்டும், பாக்கியும் வாங்கிக் கொண்டாள். கண்டக்டர் அருகில் வந்து நின்று அவளிடம் அப்பாவின் மரணத்துக்குத் துக்கம் விசாரித்தார். அவளும் ஏதோ பதில் சொன்னாள்.

கல்லூரியின் முதல்வர் அவளை அன்போடு வரவேற்று ஆதரவாக மறுமொழி அளித்து அனுப்பினார். அப்பாவின் பிராவிடண்ட் பண்டு பணம் இயன்ற அளவு விரைவில் கிடைக்க உதவுவதாகவும் கூறி அனுப்பினார். அங்கிருந்து புது மண்டபம் வரை நடந்தே போனாள். தெருவில் போவோரும் வருவோரும் முறைத்துத்தான் பார்க்கிறார்கள். மனிதர்களுக்குத்தான் எத்தனை விதமான பார்வை! வண்டியிலோ ரிக்ஷாவிலோ போனால் இப்படி யாரும் விழுங்குவதுபோல் பார்க்க மாட்டார்கள். ஆனால் வண்டிக்காரனும் ரிக்ஷாக்காரனும் சும்மாவா ஏற்றிக் கொண்டு போகிறான்? கையில் இருக்கிற மொத்த ஆஸ்தி ஐந்து அணா. திரும்பிப் போகப் பஸ் சார்ஜ் மூன்றணா ஆகுமே! ஏழ்மையை வெளிக்காட்டி விடுவது தப்பே இல்லை. பொய்யாக நடிப்பது தான் தப்பு.

ஆயிரமாயிரம் சின்னத்தனமான மனிதர்களின் கண்களில் மிதந்து கொண்டு, பூரணி என்கிற அழகு - பழமை வாய்ந்த மதுரை நகரின் தெருக்களில் பூம்பாதங்கள் கொப்பளித்துக் கன்றிப் போகும்படி வெறுங்கால்களால் நடந்து கொண்டிருந்தது.

புது மண்டபத்தின் தெருக்கோடியில் புகுந்து கவனமின்றியோ அல்லது வேண்டுமென்றோ இடிப்பதுபோல் வரும் ஆண்கள் கூட்டத்துக்குத் தப்பி மெல்ல விலகி நடந்து அப்பாவின் பதிப்பாளர் முன் போய் நின்றாள் பூரணி.

"வாங்க தங்கச்சி; ஒரு வார்த்தை சொல்லியனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேன். நீங்க எதுக்கு சிரமப்படணும்" என்று தம்முடைய வயதின் உரிமையை நிலைநாட்டுவதுபோல் விளித்து வரவேற்றார் அவர்.

பூரணி நெருப்புப் பிழம்புபோல் அந்தக் கும்பலின் நடுவே நின்றுகொண்டு அவரை உறுத்துப் பார்த்தாள். அந்தப் பார்வைக்குக் கடைக்காரனிடம் பதில் இல்லை. அவளுடைய கண்கள் அபூர்வமானவை; கூர்மையானவை. அவற்றுக்குத் தூய்மை அதிகம்.

"தங்கச்சிக்கு கோபம் போலிருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே கழுத்தறுக்க முயன்றார் அவர்.

"எனக்கு வேண்டியது இந்தச் சிரிப்பும் இந்த மழுப்பல் வார்த்தைகளும் இல்லை. வியாபாரியின் சிரிப்பில் குற்றம் மறைக்கப்படுகிறது. மறைந்து கொள்கிறது. அப்பாவின் புத்தகங்களுக்கு மூன்று வருட இராயல்டித் தொகை உங்களிடம் பாக்கி நிற்கிறது. கேட்டால் புத்தகம் போதுமான அளவு விற்கவில்லை என்று பொய் சொல்கிறீர்கள். உங்களிடமிருந்து நியாயமான பதில் கிடைக்கவில்லையானால் நான் சட்டப்படி ஏதாவது செய்துதான் ஆகவேண்டும்!" என்று பூரணி கொதிப்போடு முறையிட்டாள்.

அவ்வளவு பெரிய கும்பலுக்கு நடுவில் ஒரு பெண் பேசி மானத்தை வாங்கிவிட்டதே என்ற உறைப்பு இருந்தாலும் விநயமாகச் சமாளித்தார் பதிப்பாளர். "இந்த மாத முடிவுக்குள் கணக்கெல்லாம் பார்த்து ஏதாவது செய்கிறேன் அம்மா!" என்று விடை கொடுத்ததுபோல் கைகூப்பினார். அந்த கைகூப்புதலுக்கு 'இனிமேலும் நின்று, பேசிக்கொண்டிருக்கக்கூடாது, போய்விடு' என்பது அர்த்தம்போலும்!

பூரணி அங்கிருந்து வெளியேறினாள். அப்பாவே மனம் வெறுத்துச் சலித்துப்போய், "அவன் பணம் தந்தாலும் சரி, தராவிட்டாலும் சரி" என்று கைவிட்ட ஆள் அந்தப் பதிப்பாளர். "அறிவைப் பெருக்குகிற புத்தக வெளியீட்டுத் தொழிலில், பணத்தைப் பெருக்குகிற மனமுள்ள வியாபாரிகள் ஈடுபட்டு, எழுதுகிறவன் வாயில் மண் போடுகிறார்களே" என்று வேதனையோடு கூறுவார் அப்பா.

புதுமண்டபத்துக்கு எதிரே மீனாட்சி கோயில் கிழக்கு கோபுரம் அழுக்குப் படாத உண்மையாய் மனித உயரத்தைச் சிறிதாக்கிக் கொண்டு பெரிதாய் நின்றது. அதே இடத்தில் தெருவில் இரண்டு ஓரமும் பழைய பூட்டுச் சாவி குடை ரிப்பேர்க் கடைகள் தெருவை அடைத்துக் கொண்டிருந்தன. மாலை நேரமாகிவிட்டாலே அந்த இடத்துக்குத் தனிக் கலகலப்பும் அழகும் வந்துவிடும். பழைய காலத்தில் அதற்கு 'அந்திக்கடை வீதி' என்றே பெயர் இருந்ததாக அப்பா சொல்லுவார்.

அந்தக் கோபுரத்தையும் பெரிய கோயிலையும் ஆரவாரமும் நறுமணங்களும் மிகுந்த அம்மன் சந்நிதி முகப்பையும் கடந்து நடந்தாள் பூரணி. இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் ஆயிரம் செயற்கைகள் வந்து கலந்தாலும், மதுரையின் தெய்வீகப் பழமையை யாராலும் மாற்றிவிட முடியாதென்று தோன்றியது பூரணிக்கு. அம்மன் சந்நிதிக்குள் நுழைந்தாள். பூக்கடைகளும் சந்தனமும் மணத்தன. வளையல் கடைகள் ஒலித்தன. ஜீவகோடிகள் நுழைந்து புறப்படும் பிரகிருதி வாசலைப் போல் அந்த வாசலில் புனிதமான ஆரவாரம் குறையாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. பொற்றாமரைக் குளத்தைக் கடந்து அம்மன் சந்நிதிக்குள் போய் தரிசனத்தை முடித்துக் கொண்டு தெற்குக் கோபுரவாயில் வழியாகத் தெற்காவணி மூலவீதியை அடைந்தாள் பூரணி. தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் ஒரு தடவை பார்த்துக் கொண்டு கூட்டமில்லாத ஒரு நகைக்கடைக்குள் நுழைந்தாள்.

நான்கு பவுன் வளையல்கள். ஏறக்குறைய முந்நூறு ரூபாய்க்கும் அதிகமாகப் பழைய விலைப் பொருளாக எடுத்துக் கொண்டு பணத்தை எண்ணிக் கொடுத்தார்கள். பேசாமல் பணத்தை எண்ணி வாங்கிக் கொண்டு வீட்டுக்காரர் வீட்டுக்குப் போனாள். ஆறுமாத வாடகைப் பாக்கியைக் கொடுத்து ரசீது வாங்கிக் கொண்டு, "இந்த மாத முடிவுக்குள் காலி செய்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு வந்தாள். வளையல் போட்ட பணத்தில் ஏழு ரூபாயும் பழைய ஐந்து அணாவும் மடியில் இருந்தன.

அப்பாவுக்கு வேண்டியவரும் நகரத்தில் செல்வமும் செல்வாக்கும் உள்ளவருமான பிரமுகர் ஒருவருடைய வீடு பக்கத்துத் தெருவிலே இருந்தது. அவர் நேர்மையானவர். போய்ப் பார்த்துத் தன் நிலையைச் சொன்னால் ஏதாவது வேலைக்கு வழி செய்வார் என்று நம்பினாள் பூரணி. ஆனால் அங்கேபோய் விசாரித்ததில் அவர் வெளியூர் போயிருப்பதாகவும், வர இரண்டு நாட்களாகுமென்றும் தெரிந்தது. வந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பினாள்.

மறுபடியும் சென்ட்ரலுக்குப் போய் பஸ் ஏறி அவள் திருப்பரங்குன்றத்தை அடைந்தபோது இருள் மயங்கும் போதாகிவிட்டது. குன்றின் உச்சியிலிருந்து மசூதிக்கருகில் நீல மின்விளக்கு ஒளியுமிழ்ந்து கொண்டிருந்தது. தெருவில் கோயிலுக்குப் போகும் கூட்டம் மிகுந்திருந்தது. தெருவில் தன் வீட்டு வாசலில் புத்தகமும் கையுமாக நிறையப் பள்ளிக்கூடத்துப் பையன்கள் கூடி நிற்பதைப் பூரணி கண்டாள். குதிரை வண்டி ஒன்று நின்றிருந்தது. ஓதுவார் தாத்தாவும் இருந்தார்.

பூரணி வீட்டை நெருங்கியதும் ஓதுவார்த் தாத்தா, கவலையும் பரபரப்பும் நிறைந்த முகத்தோடு அவளை எதிர்கொண்டு வந்து சொன்னார். "உனக்கு இருக்கிற கவலையும் துக்கமும் போதாதென்று சின்னத்தம்பி சம்பந்தன் பள்ளிக்கூடத்தில் மரமேறி விழுந்து கையை வேறு ஒடித்துக் கொண்டு வந்திருக்கிறான் அம்மா..."

பூரணி பையன்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே வேகமாக ஓடினாள்.



குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 3:01 am

3




"ஓடுகின்றனன் கதிரவன் அவன்பின்

ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய்

வீடுகின்றன என்செய்வோம் இனி அவ்

வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே"

-நற்றிணை விளக்கம்



துன்பங்களையும் தொல்லைகளையும் சந்திக்கும்போதெல்லாம், பூரணியின் உள்ளத்தில் ஆற்றல் வாய்ந்த தெளிவான குரல் ஒன்று ஒலித்தது. "தோற்று விடாதே? வாழ்க்கையை வென்று வாகை சூடப் பிறந்தவள் நீ. துன்பங்கள் உன் சக்தியை அதிகமாக்கப் போகின்றன. மனிதர்களின் சிறுமைகளையும் தொல்லைகளையும் பார்த்துப் பார்த்து உன் ஞானக் கண்கள் மலரப் போகின்றன. குப்பைகளையும் இழிவும் தாழ்வுமான நாற்றக் கழிவுப் பொருள்களையும் உரமாக எடுத்துக்கொண்டு மணமிக்கப் பூவாகப் பூத்து தெய்வச் சிலையின் தோளில் மாலையாக விழும் உயர்ந்த பூச்செடி போல் ஏழ்மையும் துன்பமும் உனக்கு உரம் கொடுத்து உன்னை மணம் கமழ வைக்கப் போகின்றன. நீ வாழ்க்கை வெள்ளத்தோடு இழுபட்டுக் கொண்டு போகும் கோடி கோடிப் பெண்களில் ஒருத்தி அல்லள். பெண்ணில் ஒரு தனி வாழ்க்கை நீ; வாழ்க்கையில் ஒரு தனிப் பெண் நீ. வாழ்க்கை வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடப் போகிறவள் நீ.



துன்பங்களை மிக அருகில் சந்திக்கும் போதெல்லாம் பூரணியின் இதயத்தில் இந்தக் குரல் ஒலித்தது. இது யாருடைய குரல்? எதற்காக ஒலிக்கிற குரல் என்பதை யாரால் அறிய முடியும்? விட்டகுறை தொட்டகுறை என்பதுபோல் ஆன்மாவோடு ஒட்டி வந்த தொனி அது. வாழ்க்கை மலர மலர அதுவும் மலரலாமோ என்னவோ? மருக்கொழுந்துச் செடியும் துளசிச் செடியும் எப்படி மணக்கும் என்பதை அவை வளர்ந்து பெரிதான பின்பு கண்டு பிடிக்கலாமென்று காத்திருக்க வேண்டாமே! முளைத்து வேர்விடும் போதிலேயே தத்தமக்குரிய மணத்தையும் பரப்பும் சிறப்பும் வாய்ந்த அந்தச் செடிகளைப் போல் சில பேருக்கு உருவாகும் போதே இலட்சியம் தானாக அமைந்துவிடுகிறது.



பூரணி துளசிச் செடி போன்றவள். முளைக்கும் போதே மணந்தவள். துளசியைப் போல அகமும் புறமும் தூய்மையானவள், புனிதமானவள். உள்ளும் புறமும் தமிழ்ப் பண்பு என்னும் மணம் கமழுகிறவள். துன்பங்களை வரவேற்று ஆள்கிற ஆற்றல் அவளுக்கு உண்டு.



பூரணி உள்ளே ஓடிச்சென்று பார்த்தபோது தம்பி சம்பந்தனைக் கூடத்தில் பாய் விரித்துப் படுக்கவிட்டிருந்தார்கள். சுற்றிலும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் கூட்டம். பெரிய தம்பி திருநாவுக்கரசு என்ன செய்வது என்று தோன்றாமல் சம்பந்தனின் தலைப் பக்கம் நின்று விழித்துக் கொண்டிருந்தான். ஏதோ பெரிய தவறைச் செய்து, தவற்றில் சிக்கிக் கொண்டு படுத்துவிட்டது போல் சம்பந்தன் விக்கலும் விசும்பலுமாக அழுதுகொண்டிருந்தான். குழந்தை மங்கையர்க்கரசியும் சேர்ந்து அழுது கொண்டிருந்தாள்.



பூரணி பக்கத்தில் உட்கார்ந்து, பாயில் துவண்டு கிடந்த தம்பியின் இடது கையைத் தூக்கித் தாங்கினாற்போல் நிறுத்த முயன்றாள். கை நிற்கவில்லை. நடுவில் முறித்த இளம் வாழைக் குருத்து வெயிலில் வாடி விழுகிற மாதிரி துவண்டு விழுந்தது. அக்காவைப் பார்த்ததும் சம்பந்தனின் அழுகை அதிகமாகிவிட்டது.



"சிறுபிள்ளைக் கைதானே அம்மா! மட்டை வைத்துக் கட்டினால் ஒன்றுகூடிவிடும். நாலு வீடு தள்ளி ஒரு நாட்டு வைத்தியர் இருக்கிறார். அவரைக் கூட்டிக் கொண்டு வரச் சொல்லு" என்று ஓதுவார் தாத்தா பூரணிக்குப் பின்புறம் வந்து நின்று கொண்டு சொன்னார். பூரணி, திருநாவுக்கரசின் முகத்தைப் பார்த்தாள். திருநாவுக்கரசு நாட்டு வைத்தியரை அழைத்துக் கொண்டுவர வேக வேகமாக ஓடினான்.



"அக்கா, நான் ஒண்ணுமே செய்யல அக்கா. பாலுங்கிற முரட்டுப் பையன் ஒருத்தன் எங்ககூடப் படிக்கிறான். அவன் மாடியிலிருந்து என் கணக்கு நோட்டைப் பிடுங்கி கீழே வீசியெறிந்துவிட்டான். மாடிக்கு நேரே கீழே ஒரு பெரிய மாமரம் இருக்கு. அந்த மரத்துக் கிளைக்கு நடுவே நோட்டு விழுந்து சிக்கிடுச்சு. அதை எடுக்கிறதுக்காக ஏறினேன். ஏறுகிறப்போ கால் இடறி விழுந்துவிட்டேன்" என்று அழுகைக்கிடையே நடந்ததைச் சொல்லி குற்றமின்மையை அக்காவுக்கு புலப்படுத்தினான் சம்பந்தன். மற்ற மாணவர்களை விசாரித்தாலும் 'பாலு' என்கிற முரட்டுப் பையனைப் பற்றி கடுமையாகத்தான் சொன்னார்கள். நோவும் வேதனையுமாகக் கை எலும்பு பிசகி விழுந்து கிடக்கும் அந்தச் சமயத்தில்கூடத் 'தவறு தன்னுடையதில்லை' என்று அக்காவுக்கு விளக்கிவிட வேண்டுமென அவன் துடித்துக் கொண்டிருந்த ஆர்வத்தைப் பூரணி குறிப்பாகக் கவனித்துக் கொண்டாள்.



திருநாவுக்கரசு நாட்டு வைத்தியரோடு வந்தான். பூரணி சற்று விலகினாற்போல் எழுந்து நின்றுகொண்டாள். வைத்தியர் அருகில் அமர்ந்து முழங்கையை எடுத்துத் தொட்டு அமுக்கிப் பார்த்தார். ஓதுவார்க் கிழவர் அவருக்குப் பக்கத்தில் இருந்தார்.



"ஒன்றும் பயமில்லை. விரைவில் சரியாகிவிடும்" என்று சொல்லிவிட்டு மூங்கில் பட்டைகளைக் கொடுத்துக் கையை நிமிர்த்திக் கட்டிக் கோழி முட்டைச் சாறு நனைந்த துணியால் இறுகிச் சுற்றுப் போட்டு முடித்தார் வைத்தியர். "கையை ஆட்டாமல் அசையாமல் வைத்துக் கொண்டிரு தம்பி, கொஞ்ச நாட்களில் எலும்பு ஒன்று கூடிக் கை முன் போல ஆகிவிடும்" என்று சம்பந்தனிடம் அன்போடு சொல்லிவிட்டு எழுந்திருந்தார் வைத்தியர். ஓதுவார்க்கிழவர் பூரணியின் காதருகில் ஏதோ சொன்னார். அவள் ஓடிப்போய் ஒரு தட்டில் நான்கு ரூபாய்களை வைத்து வைத்தியரிடம் மரியாதையாக நீட்டினாள்.



வைத்தியர் சிரித்தார். "உன்னிடம் வாங்கி எனக்கு நிறைந்துவிடாது அம்மா. அழகியசிற்றம்பலத்துக்கு நான் எவ்வளவோ செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். இதை நீயே வைத்துக்கொள். பையனுக்கு கை சரியான பின் அவசியமானால் ஏதாவது கேட்டு வாங்கிக் கொள்கிறேன்" என்று அவள் கொடுத்ததை வாங்க மறுத்துவிட்டார் அவர்.



அப்பாவின் பெருமை அந்த வீட்டை ஆண்டுகொண்டு இருப்பதை பூரணி உணர்ந்தாள். காசையும் பணத்தையும் சேர்த்து வைத்துவிட்டுப் போகாவிட்டாலும் அந்தக் குடும்பத்திற்கு உதவி செய்து பெருமைப்பட விரும்பும் மனிதர்களையும் உறவையும் நான்குபுறத்தும் தேடி வைத்துப் போயிருக்கிறார் அவர். பணம் வாங்க மறுக்கும் வைத்தியர், தன் குடும்பம் போல் எண்ணிச் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் ஓதுவார், தனி அனுதாபத்தோடும் அன்போடும் உதவக் காத்திருக்கும் அண்டை அயலார்கள், இவையெல்லாம் அப்பாவின் நினைவாக எஞ்சியிருக்கிற பெருமைகளல்லவா?



பள்ளிக்கூடத்துப் பையன்கள் கூட்டம் போகிற வழியாயில்லை. "உங்களுக்கெல்லாம் வேடிக்கையாயிருக்கிறதா? அவன் கையை ஒடித்துக்கொண்டு வந்து விழுந்து கிடக்கிறான். கூட்டம் போடாமல் வீட்டுக்குப் போய்ச் சேருங்கள்" என்று ஓதுவார்க் கிழவர் கூப்பாடு போட்ட பின்பே பிள்ளைகள் கூட்டம் குறைந்தது. குழந்தை மங்கையர்க்கரசிக்கு நடந்தது என்னவென்று தெரியாவிட்டாலும் "அண்ணன் சம்பந்தனுக்கு ஏதோ பெரிய துன்பம் வந்திருக்கிறது. இல்லாவிடில் பாயில் படுக்கவிட்டு வைத்தியரெல்லாம் கட்டுப்போடமாட்டார். இத்தனை பேர் கூடமாட்டார்கள்" என்று மொத்தமாக ஏதோ துக்கம் புரிந்தது. அதனால் அந்தக் குழந்தையின் அழுகை இன்னும் ஓயவில்லை. எதிர்வீட்டு ஓதுவார்க் கிழவர் விடைபெற்றுப் புறப்பட்டார். "நான் வீட்டுக்குப் போகிறேன் பூரணி. தம்பியைக் கவனமாய்ப் பார்த்துக்கொள்; ஏதாவது வேண்டுமானால் என்னைக் கூப்பிடு; வாசல் திண்ணையில்தான் படுத்துக் கொண்டிருப்பேன். எதை நினைத்தும் துக்கப்படாதே அம்மா! இன்னாருடைய பெண் எனச் சொன்னாலே மற்றவர்கள் போட்டி போட்டுக்கொண்டு உதவ முன் வருகிற அத்தனைப் பெருமையை அப்பா தனக்குத் தேடி வைத்துப் போயிருக்கிறார். நீ ஏன் அம்மா கலங்க வேண்டும்?" என்று போகும்போது சொல்லிவிட்டுத் தான் போனார் அவர்.



'எல்லோரும் இப்படித்தான் சொல்லுகிறார்கள். அப்பாவின் பெருமை இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடுபோல் மரணத்துக்குப் பின் இலாபம் சம்பாதிக்கிற உயில் வியாபாரமா என்ன? பண்புள்ளவன் அடைந்த புகழைப்போல் பொதிந்து வைத்துப் போற்ற வேண்டிய பெருமையல்லவா அது? நான் வசதிகளை அடைவதற்காக அப்பாவின் பெருமையை செலவழித்து வீணாக்க வேண்டிய அவசியமில்லையே! என்னுடைய கைகளால் உழைத்து நான் வாழ முடியும். என் உடன்பிறப்புகளையும் வாழ வைத்து இந்தக் குடியை உயர்த்த முடியும். சிறிய ஆசைகளை முடித்துக்கொள்வதற்காக அப்பாவின் பெருமையைச் செலவழிக்க நான் ஒரு போதும் முற்படமாட்டேன். அப்பாவின் பெருமையில் மண்ணுலகத்து அழுக்குகள் படிய விடமாட்டேன்' என்று எண்ணி நெட்டுயிர்த்தாள் பூரணி. இவற்றை நினைக்கும்போது அவளுடைய முகத்திலும் கண்களிலும் ஒளியும் உறுதியும் தோன்றின.



"அக்கா! இனிமேல் அண்ணனுக்குக் கை நேரே வராம போயிடுமா?" அழுகையின் விசும்பலோடு சிறிய ஆரஞ்சு சுளைகளைப் போன்ற உதடுகள் துடிக்க பூரணிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு இப்படிக் கேட்டாள் குழந்தை. அப்போது அகன்று மலர்ந்த அவள் குழந்தைமை தவழும் கண்களில் பயமும் கவலையும் தெரிந்தன.



"இல்லை கண்ணே! அண்ணனுக்குக் கை சீக்கிரமே நல்லாப் போயிடும்" என்று சொல்லி குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் பூரணி. பூக்களின் மென்மைகளையும் பன்னீரின் குளிர்ந்த மணத்தையும் கொண்டு செய்தது போன்ற உடம்பு குழந்தை மங்கையர்க்கரசிக்கு. குழந்தையின் உடலைத் தீண்டும் போதும், சிரிப்பைக் காணும்போதும் சின்னஞ்சிறு பூக்கண்களை அருகிலே பார்க்கும்போதும் வாழ்க்கையில் சத்தியத்துக்கு இன்னும் இடமிருக்கிறது என்கிற மாதிரி ஒரு தூய நம்பிக்கை உண்டாகிறது. அப்பா இருந்தால் கோயிலிலிருந்து வீடு திரும்புகிற நேரம் இது. மாலையில் தென்புறம் திருமங்கலம் சாலையில் நெடுந்தூரம் காலார நடையாகப் போய்விட்டுத் திரும்பும்போது, கோயிலில் முருகனையும் வணங்கிவிட்டு ஏழு ஏழரை மணி சுமாருக்கு வீடு திரும்புவார் அவர். இரவில் கன உணவாகச் சோறு சாப்பிடுவது அவருக்குப் பிடிக்காது. சோறு உண்டால் விரைவில் உறக்கம் வந்து விடுமென்று கோதுமை தோசை, இட்லி மாதிரி குறைந்த உணவாக சிறிது உண்பார். அதிக நேரம் உறக்கம் விழித்தும் படித்துக் கொண்டிருப்பார். அப்பாவின் பழக்கமே வீட்டில் எல்லோருக்கும் அமைந்து விட்டது.



பூரணி அடுப்பு மூட்டி இட்லிக் கொப்பரையை வைத்தாள். அந்த வீட்டில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு மூலையிலும் மறந்துவிடாமல், மறைத்து விடாமல், அப்பாவின் ஞாபகம் இருந்தது. பழக்கத்தில் உறைந்துவிட்ட உயிரின் உறவான நினைவுகளை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? மனிதர்களைப் போல் அவர்களைப் பற்றிய நினைவுகளுமா விரைவில் அழிகின்றன. அப்படி அழியுமானால் பின்பு இந்த உலகத்தில் என்ன இருக்கிறது?



காலம் எதைத்தான் அழிக்காமல் நிலைக்கவிடப் போகிறது? நிற்காமல் ஓடுகிற சூரியனும், அவனைத் துரத்திக் கொண்டு ஒவ்வொன்றாய் பின் தொடரும் நாட்களும் உலகில் எதையோ ஓடி ஓடி தேய்த்துக் கொண்டிருக்கின்றனவே! அல்லது தேய்ந்து கொண்டிருக்கின்றனவே!



ஒரு தட்டில் நாலைந்து இட்லிகளை எடுத்துக் கொண்டு போய் சின்னத்தம்பி சம்பந்தனுக்கு அவன் படுத்துக் கொண்டிருந்த இடத்திலேயே எழுந்து உட்கார்ந்து சாப்பிடுமாறு கொடுத்துவிட்டு வந்தாள் பூரணி. திருநாவுக்கரசையும் குழந்தை மங்கையர்க்கரசியையும் கூப்பிட்டுச் சமையலறையில் தனக்குப் பக்கத்தில் உட்காரச் செய்து கொண்டு பரிமாறினாள். அவ்வளவு இளமையில் தாயின் முதிர்ச்சியும் அன்பின் கனிவும் அவள் எவ்வாறுதான் பெற்றாளோ? பெரிய மீன்கள் தம் குஞ்சுகளைக் கண் பார்வையிலேயே வளர்த்துப் பழக்கிப் பெரிதாக்குமாம். பூரணி தன் தம்பிகளையும் தங்கையையும், அன்பாலும் கனிவாலுமே வளர்த்தாள். கூடியவரை வீட்டையும், தன்னையும் தேடிவரும் துன்பங்களை அவர்கள் தெரிந்து கொள்ள விடுவதில்லை. அவள் மூத்த தம்பி திருநாவுக்கரசுதான் நினைவு தெரிந்த விவரமுள்ள பையன். அவனிடம் கூட வீட்டுத் துன்பங்களைச் சொல்ல விரும்புவதில்லை அவள்.



வீட்டுக்காரரிடம் ஒப்புக்கொண்டு வந்துவிட்டபடி மாத முடிவுக்குள் இந்த வீட்டைக் காலி செய்து கொடுத்தாக வேண்டும். திருப்பரங்குன்றம் கிராமமுமில்லை; நகரமுமில்லை. கிராமத்தின் தனிமையும் நகரத்தின் வசதிகளும் இணைந்த இடம் அது. சுற்று வட்டாரத்தில் சில மில்களும் தொழிற்சாலைகளும், பள்ளிக் கூடங்களும், கல்லூரிகளும் இருந்த காரணத்தினால் வீட்டு நெருக்கடி இருக்கத்தான் செய்தது. மதுரை நகருக்குள் வாடகை கொடுக்க இயலாத மத்தியதரக் குடும்பங்களும், கூலிகளும், அமைதியான வாழ்வை முருகன் அருள் நிழலில் கழிக்க விரும்புபவர்களும் நெருங்கிக்கூடும் இடம் ஆகையால் அங்கும் வீட்டுப் பஞ்சம் அதிகமாகிவிட்டது. கிழக்குப் பக்கம் செம்மண் குன்றைத் தழுவினாற்போல் பிருமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் பொறியியல் தொழிற்கல்லூரி திடீரென்று ஊரையே பெரிதாக்கி விட்டதுபோல் தோன்றுகிறது.



வீட்டுக்காக அப்போதே போய் நாலு தெருவில் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாமென்று தோன்றியது பூரணிக்கு. இரவானாலும் அதிக நேரமாகிவிடவில்லை. ஊரிலும் தெருக்களிலும் கலகலப்பு இருந்தது. நாலு இடத்தில் நாலு தெரிந்த மனிதர்களிடம் சொல்லிவிட்டு வந்தால் காலியிருக்கிற வீடுகளைப் பற்றி ஏதாவது துப்புக் கிடைக்கும். ஏழைக் குடும்பத்துப் பெண்களுக்கு வரன் கிடைப்பது போல வாடகை வீடும் இன்றைய சமுதாயத்தில் எளிதாகக் கிடைத்துவிடாத ஒன்றாயிற்றே.




குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 3:01 am




"அரசு! வீட்டைப் பார்த்துக்கொள். மங்கைக்குத் தூக்கம் வந்தால் படுக்கையை விரித்துத் தூங்கச் செய். நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன். ஒன்பது, ஒன்பதரை மணிக்குள் வந்துவிடுவேன். கதவைத் தாழ்போட்டுக் கொண்டு தூங்கி விடாதே" என்று திருநாவுக்கரசிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள் பூரணி.



பனி பரவத் தொடங்கியிருந்த அந்த முன்னிரவு நேரத்தில் மங்கிய நிலவொளியில் கீழ் சந்நிதித் தெருவில் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஓர் அழகு தென்பட்டது. வரிசையாக இரு புறமும் வீடுகள், விளக்கு ஒளி தெரியும் ஜன்னல்கள், பூக்களின் பலவித வாசனை, சந்தனம், ஊதுவத்தி மணம், மனிதர்களின் குரல்கள், வானொலி இசை, வாயரட்டைப் பேச்சுக்கள், மாட்டுக் கழுத்து மணி ஓசை, பிரபஞ்சம் என்ற முடிவில்லாப் புத்தகத்தின் முதற்பக்கம் போல் ஓர் எடுப்பு, ஒரு கம்பீரம், ஒரு கலை அந்த வீதியின் அமைப்பில் விளங்கியது. வீதி தொடங்கும் இடத்தில் நிலவில் குளித்தெழுந்தது போல் நீள நிமிர்ந்து தோன்றும் மலைசார்ந்த கோபுரம், கோபுரம் சார்ந்த குமரன் கோயில், கோயில் முகப்பாகிய அகன்ற மேடையை இழுத்துக் கொண்டு பாய்கிறார் போல் யாளிச் சிற்பங்களும், குதிரைகளும், கீழ்ப்புறமும் மேல்புறமும் பிரிந்து படரும் கொடிகள் போல் இரத வீதி.



கோபுரத்துக்கும் மேலே குன்றில் எட்டாத உயரத்தில் மின்விளக்கில் நீல ஒளி உமிழும் 'ஓம்' என்ற பெரிய எழுத்துக்கள் குன்றிலுள்ள ஒரு கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருக்கும். அந்த 'ஓம்' இருளில் தனியாக அந்தரத்தில் தொங்குவது போல் பெரிதாய் உயர்ந்து எங்கிருந்து பார்த்தாலும் தெரியும். அந்த 'ஓமை' உற்று மேலே பார்த்துக் கொண்டே பூரணி சந்நிதித் தெருவில் நடந்தாள். இருளில் அந்த 'ஓம்' மின்விளக்கை எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுக்காது அவளுக்கு. கீழும் மேலும் எங்கும் எதனோடும் தொடர்பின்றி உயர்ந்த வானவிதானத்தில் 'ஓம்' என்ற சக்தியே ஒளிப்பூவாய்ப் பூத்துத் திருப்பரங்குன்றம் முழுவதும் மணம் பரப்பி நிற்பது போல அழகாய்த் தோன்றும் அந்த 'ஓம்'.



வீட்டு மொட்டை மாடியில் நின்று இதைப் பார்த்து மகிழ்வது அவளுக்கு வழக்கமான அனுபவம். இரத வீதிகளிலும், வெள்ளியங்கிரிச் சந்து, திருக்குளச் சந்து, முதலிய சந்துகளிலும் ஒண்டுக் குடித்தனத்துக்கு ஏற்ற சிறிய இடங்கள் இருந்தாலும் இருக்கலாம். சரவண பொய்கைக் கரையிலும் இரயில் நிலையத்துக்குத் தென்கிழக்காகக் கிரி வீதியிலும் பெரிய ஒண்டுக் குடித்தன ஸ்டோர்கள் சில உண்டு. பகல் நேரத்தை விட்டு இரவில் அவள் புறப்பட்டதற்குக் காரணம் இருந்தது. பழகிய மனிதர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் அப்பாவின் துக்க சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகுமுன் சுற்றித் திரிவது அவமானமாகத் தோன்றியது. அவளுக்கு உடனடியாகப் பெரிய வீட்டைக் காலி செய்துவிட்டு ஒண்டுக் குடித்தனம் வர முயல்வது பற்றித் தெரிந்தவர்கள் தூண்டித் துருவிக் கேள்விகள் கேட்பார்கள். அதிகம் பேர் கண்களில் படாமல் இடம் விசாரிக்க அந்த நேரமே ஏற்றதென்று அவள் நினைத்தாள்.



தேரடியிலும், கோயில் வாயிலிலுள்ள கடைகளிலும் கூட்டமும், கலகலப்பும் இருந்தன. சந்நிதி முகப்பில் ஒரு கணம் நின்று வணங்கிவிட்டு கிழக்கே பெரிய இரத வீதியில் திரும்பினாள் பூரணி. இரவு மூன்று மணி வரை அரவம் குறையாத தெரு அது. தெருக்கோடியில் மேட்டில் இருந்த டூரிங் சினிமாக் கொட்டகைதான் அந்த மாதிரி ஆள் புழக்கத்திற்குக் காரணம்.



வெளியூரிலிருந்தெல்லாம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனைச் சுற்றிக்கொண்டிருந்தார்கள் என்றால் முருகனைச் சுற்றிக் குடியிருந்த உள்ளூர்க்காரர்கள் டூரிங் சினிமா கொட்டகையைச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். திருக்குளத்து முதல் சந்தில் தன்னோடு படித்த கமலா என்ற பெண்ணின் வீடு இருப்பது அவளுக்கு நினைவு வந்தது. திரும்பியவுடன் முதல் வீடு கமலாவுடையது.



கமலா - அவள் தாயார், இன்னொரு பாட்டியம்மாள் - மூன்று பேராக வீட்டு வாயிலில் திண்ணையிலேயே உட்கார்ந்து ஏதோ வம்புப் பேச்சு பேசிக் கொண்டிருந்தார்கள். போகலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடனேயே நடந்துபோய் அந்த வீட்டு வாசலில் நின்றாள் பூரணி. பேச்சில் ஈடுபட்டிருந்த கமலாவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக 'கமலா' என்று பூரணி மெல்லக் கூப்பிட்டாள். எத்தனை குரலின் ஒலிகளுக்கு நடுவே ஒலித்தாலும் தனியே ஒரு தனித்தன்மை பூரணியின் குரலுக்கு உண்டு. அந்தக் குரலிலேயே அவளை அடையாளம் கண்டு கொண்டு 'பூரணியா?' என்று கேட்டவாறு கமலா எழுந்து வந்தாள்.



"உனக்கு வருவதற்கு இப்போதுதான் ஒழிந்ததோ, அம்மா? பகலில் வந்து என்னோடு கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தால் பிடித்துக்கொண்டு விடுவேன் என்ற பயமா?"



"அதற்காக இப்போது வரவில்லையடி கமலா? இப்படி வா உன்னிடம் சொல்கிறேன்" என்று கமலாவை அருகில் வரச்செய்து காதோடு மெல்லத் தான் வந்த வேலையைச் சொன்னாள் பூரணி.



"வசதியான சந்நிதித் தெருவை விட்டுவிட்டு இங்கே இந்த சந்துக்கா வரவேண்டும் என்கிறாய்? மதுரைக்குப் போக வர சந்நிதித் தெருவுக்குப் பக்கத்தில் நினைத்த நேரம் பஸ் ஏறலாம். இங்கே வந்துவிட்டால் அவ்வளவு தூரம் நடந்து போய்த்தான் ஆகவேண்டும். உன் தம்பிகளுக்குப் பள்ளிக்கூடம் போக இன்னும் நடை அதிகமாகுமே. எல்லாம் யோசனை பண்ணிக்கொண்டு செய்."



"வசதிகளை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் மேலும் சில வசதிகளுக்கு ஆசைப்பட முடியும் கமலா. ஒரு வசதியும் இல்லாதவர்களுக்கு எல்லாம் வசதி குறைவுகளுமே வசதிகளாகத்தான் தோன்றும்" பூரணி ஏக்கத்தோடு சொன்னாள். கமலா இதற்குச் சமாதானம் சொல்ல முடியவில்லை.



"உன்னிடம் பேசி வெற்றி கொள்ள என்னால் முடியாது அம்மா. ஒரு தடவை பள்ளிக்கூடத்துப் பேச்சுப் போட்டியில் உனக்கு எதிராகப் பேசித் தோற்றது போதும். தமிழ், தத்துவம் எல்லாம் உனக்குத் தண்ணீர் பட்டபாடு. நான் என்ன உன்னைப் போல் தமிழ் அறிஞரின் மகளா? சாதாரண விவசாயியின் பெண். என்னை விட்டுவிடு. கரையில் ஒரு ஸ்டோர் இருக்கிறது. இப்போதே போய்ப் பார்த்துவிட்டு வரலாம். நிலா வெளிச்சத்தில் உலாவி வந்தாற் போலவும் இருக்கும். பள்ளிக்கூட நாட்களுக்குப் பின் நாம் சேர்ந்தாற்போல் நடந்து செல்ல சமயமே வாய்த்ததில்லை."



"நான் வரத்தயார். உன்னைத்தான் உன் அம்மா இந்த நேரத்தில் என்னுடன் அனுப்புவார்களா என்று எனக்குச் சந்தேகமாயிருக்கிறது."



"தாராளமாய் அனுப்புவார்கள். இப்போதெல்லாம் இந்தப் பக்கம் எவ்வளவு நேரமானாலும் ஒரு பயமுமில்லை. சினிமாக் கொட்டகையும், பொறியியல் தொழிற் கல்லூரியும் வந்த பிறகே ஊரே பெரிதாகப் போய்விட்டது. இதோ அம்மாவிடம் சொல்லிக் கொண்டு ஒரு நொடியில் வந்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு கமலா தன் தாயிடம் சொல்லி வரச் சென்றாள். கமலாவுக்குப் பூரணியை விட நாலைந்து வயது குறைவு. இருவரும் பல ஆண்டுகள் சேர்ந்து படித்தவர்கள். படிப்பு முடிந்த பிறகும் அந்த நட்பு நிலைத்தது என்றால் அதற்குக் காரணம் பூரணிதான். மிக சில விநாடிகளே தன்னோடு பழகியவர்களும் தன்னை தன் முகத்தை தன் கண்களை தன் பேச்சை மறக்க முடியாதபடி செய்து அனுப்பி விடுகிற ஓர் அரிய கம்பீரம் அவளிடம் இருந்தது. சில் விநாடிகள் பழகியவர்களே இப்படியானால் பூரணியுடன் பல ஆண்டுகள் சிறு வயதிலிருந்து சேர்ந்து படித்த கமலாவுக்கு அவளிடம் ஒரு பற்றும் பாசமும் இருந்ததில் வியப்பென்ன?



கமலா வந்தாள். பூரணியோடு கிழக்கு நோக்கி நடந்தாள். "சீக்கிரம் வந்துவிடு, பெண்ணே" என்று கமலாவின் தாயார் தெரு திரும்பும் போது வீட்டு வாயிலில் வந்து நின்று சொல்லிவிட்டுப் போனாள். கிழக்கே போகப் போக வீதி அகன்றது. வீடுகள் குறைந்தன. தோட்டங்களும் வெளிகளும் தாமரை இலைகளும் மொட்டுகளும் மண்டிக்கிடக்கும் சரவணப் பொய்கை நீர்ப் பரப்பும் மலையையொட்டிக் காட்சியளித்தன. வடப்புறம் 'கூடை தட்டிப் பறம்பு' என்னும் மொட்டைச் செம்மண் குன்று சமீபத்து மழையினால் விளைந்த சிறிது பசுமையை நிலவுக்குக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தது போலும். இருவரும் நடந்து வந்து அறை அறையாகப் பிரிந்த ஒரு கட்டிடத்தின் முன் நின்றார்கள்.



"இதுதான் அந்த ஸ்டோர். ஊரைவிட்டு விலகி இருக்கிறது. மின்சார விளக்குகள் கிடையாது. இனிமேல் தான் விளக்குத் தொடர்பு கிடைக்க வேண்டும். வீட்டுக்காரர் மின்சாரத் தொடர்புக்கு முயன்றுகொண்டிருக்கிறார். இன்னும் பல அறைகளுக்கு ஆட்கள் குடிவரவில்லை. வாடகை மிகவும் குறைவு. ஒரு சமையல் கட்டு, சிறு கூடம், முன்புறம் வராந்தா மூன்றும் கொண்ட ஓர் அறைக்கு வாடகை பன்னிரண்டு ரூபாய்தான்" கமலா சொல்லி முடித்தாள்.



வாடகை மிகவும் குறைவாக இருந்தாலும் அந்த இடம் ஊரிலிருந்து அதிகம் தள்ளியிருப்பதாக நினைத்தாள் பூரணி. சினிமாக் கொட்டகையையும் கடந்து சிறிதளவு தொலைவு அப்பால் இருந்தது அந்த ஸ்டோர். அந்த நேரத்திலேயே அந்த ஸ்டோர், அதைச் சுற்றியிருந்த இடங்களிலும் ஊர் அடங்கினாற் போன்று சில்வண்டு கீச்சிடும் அமைதி படர்ந்துவிட்டிருந்தது. ஸ்டோர் வாசலில் வேப்ப மரத்தின் கீழே பீடிப் புகையை இழுத்துவாறு உட்கார்ந்திருந்த ஒரு ஆள் அவர்கள் கூப்பிடாமலே எழுந்து வந்து தானாகச் சில விவரங்களை அன்போடு அவளுக்குச் சொன்னான்.



"செட்டியாரு விளக்குக் கனெக்ஷன் வாங்கிட்டாரு அம்மா! இன்னும் ஒரு வாரத்துக்குள்ளாற விளக்கு வந்து விடும். நீங்க சொன்னாப்போல் நாலஞ்சி ரூம் காலியில்லை. இப்போ எல்லாம் வந்து அட்வான்ஸ் கொடுத்திட்டுப் போயிட்டாங்க. ஒரே ரூம் தான் இருந்திச்சு; நானும் ஸ்டோர்காரச் செட்டியாரும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த மரத்தடியிலேதான் பேசிக்கிட்டிருந்தோம். இப்பதான் ஒரு ஆளு அட்வான்ஸோட வந்து கெஞ்சினாரு. செட்டியாரும் அவருமாப் பேசிக்கிட்டே சரவணப் பொய்கை ஓரமா நடந்து போனாங்க. அவருக்கிட்ட இருந்து செட்டியார் முன்பணம் வாங்குறதுக்குள்ள நீங்க பார்த்துட்டீங்கன்னா ஒரு வேளை பெண் பிள்ளைன்னு இரக்கப்பட்டு ரூமை உங்களுக்கு விட்டாலும் விடுவாரு". நரைத்த மீசையும் பூனைக் கண்களுமாகத் தோன்றும் அந்த நோஞ்சான் கிழவன் சமயத்தில் வந்து கூறியிராவிட்டால் 'நாளைக்கு வந்து பார்த்துப் பேசிக் கொள்ளலாம்' என்று பூரணியும் கமலாவும் திரும்பிப் போயிருப்பார்கள்.



"இப்போது இருக்கிற ஏழ்மையில் பன்னிரண்டு ரூபாய்க்கு வீடு கிடைத்தால் எனக்கு எவ்வளவோ நல்லது கமலா? இதையே பார்த்துவிடலாம் என்று நினைக்கிறேன். தம்பிகளுக்கும் எனக்கும் நடை முன்னைவிடக் கூடும். அதைப் பார்த்தால் முடியாது" என்று கமலாவின் காதில் மெல்லச் சொன்னாள் பூரணி. கமலாவுக்கு பூரணியின் அவசியம் புரிந்தது.



"எனக்கு இந்த ஸ்டோர்காரச் செட்டியாரை நன்றாகத் தெரியும் பெரியவரே! நான் சொன்னால் அவர் தட்டமாட்டார். என் தந்தைக்கு மிகவும் வேண்டியவர் அவர். நீங்கள் கொஞ்சம் எங்களுக்கு அவர் இருக்கிற இடத்தைக் காட்டி உதவினால் நன்றி உள்ளவர்களாக இருப்போம்" என்று கமலா அந்தப் பூனைக்கண் கிழவனைக் கேட்டாள்.



"இடத்தைக் காட்டறதாவது, நான் உங்ககூட துணைக்கு வரேன் அம்மா! சரவணப் பொய்கை கரையிலே அந்த நாவல் மரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்பாரு செட்டியாரு. பார்த்து ஒரு வார்த்தை காதிலே போட்டுட்டா வேற யாருக்கும் விடமாட்டாரு. நமக்கு உறுதி சொன்னது போலத் திருப்தியாயிடும்..." என்று உற்சாகமாகக் கூறித் தானும் உடன் புறப்பட்டான் கிழவன். முன்னால் கிழவனும், அடுத்தாற்போல் கமலாவும், கடைசியாக பூரணியும் ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். தண்ணீர் பாயும் ஒலி, வயல்களில் தவளைக் கூச்சல், மலையில் காற்று மோதிச் சுளிக்கும் 'சுர்ர்' ஓசை, இவை தவிர, இரவின் அமைதி சூழ்ந்திருந்த அத்துவானமாக இருந்தது அந்த இடம். தூரத்திலிருந்து டூரிங் சினிமா ஒலி நைந்து வந்தது.



மர நிழல்களின் ஊடே சிவந்த மேனியில் தேமல் போல் நிலவொளியும் நிழலும் கலந்து பூமியில் படரும் அழகைப் பார்த்துக் கொண்டே பூரணி தரைநோக்கி நடந்துகொண்டிருந்தாள்.



திடீரென்று, "ஐயோ! சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுகிறானே" என்று கமலாவின் அலறலும் திடுதிடுவென்று ஓடும் ஒலியும் அவளைத் தூக்கிவாரிப் போடச் செய்தன. எதிரே பார்த்தாள். கமலாவும் அந்த ஆளும் தனக்கு மிகவும் முன்னால் போயிருந்தது தெரிந்தது. கமலா பதறி நின்றாள். அந்தப் பூனைக் கண் கிழவன் தான் முன்புறம் ஓடிக் கொண்டிருந்தான். பூரணியின் உடம்பில் எங்கிருந்துதான் அந்தப் பலம் வந்து புகுந்ததுவோ, அவனைத் துரத்தி ஓடலானாள். கீழே கிடந்த ஒரு குச்சுக்கல்லை எடுத்து ஓடுகிறவன் பிடறியைக் குறிவைத்து வீசினாள். அடுத்த கணம் குரூரமாக அலறி விழுந்து மறுபடியும் எழுந்து ஓடினான். பூரணி விடவில்லை. அருகில் நெருங்கி அவனைப் பிடித்துவிட்டாள். நாயைச் சங்கிலியால் பிணைக்கிற மாதிரி அவனுடைய அழுக்குத் துண்டாலேயே அவன் கைகளைக் கட்டினாள்.



குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 3:02 am

4




"என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே

உன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊன் எடுத்த

பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு

முன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே!"



ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற கொதிப்பினால் ஏற்பட்ட துணிவு வெறியில் பூரணி அந்தத் திருட்டுக் கிழவனைப் பிடித்து, அவன் மேல் துண்டாலேயே கைகளைக் கட்டிப் போட முயன்றாள். சங்கிலியைப் பறிகொடுத்த கமலாவோ பயந்தோடி வந்து அவன் பூரணியால் பிடிக்கப்பட்ட இடத்தில் நழுவி விழுந்திருந்த சங்கிலியின் மூன்றாய் அறுந்துபோன துணுக்குகளைத் தேடி எடுத்துக் கொண்டாள்.



இந்தக் கலவரத்திலும் கூக்குரல்களிலும் சரவணப் பொய்கைக் கரை மண்டபங்களில் படுத்துக் கிடந்த இரண்டு மூன்று பரதேசிப் பண்டாரங்கள் எழுந்து ஓடி வந்தனர்.



மூப்பினாலும், முதுகில் பிடரி மேல் விழுந்த கல் எறியினாலும் சோர்ந்து பூரணியிடம் மாட்டிக் கொண்ட அந்த நோஞ்சான் கிழவன், ஆட்கள் ஓடி வருவதைக் கண்டதும் திமிறிக் கொண்டு மறுபடியும் ஓட முயன்றான். திருட்டு முகத்தை நாலு மனிதர்களின் கண்களுக்கு முன் காட்ட வேண்டும் என்ற அவசியம் வரும்போது திருடனுக்குக் கூட வெட்கம் வருகிறது. என்ன இருந்தாலும் பூரணி பெண்தானே? திமிறி உதறிக் கொண்டு அவன் ஓட முயலும் முயற்சியில் பூரணியின் கைகள் தளர்ந்தன. குரூரமும், 'அகப்பட்டுக் கொள்வோமோ' என்ற பயமும் கலந்த அந்தக் கிழட்டு முகத்தில் கோலிக்குண்டுகள் போல் கண்விழிகள் பிதுங்கிப் பயங்கரமாகத் தோன்றின.



பூரணியின் மனத்தில் என்ன தோன்றியதோ? கைப்பிடியைத் தானாகவே மேலும் தளரவிட்டாள். அந்தக் கிழவன் விடுவித்துக் கொண்டு ஓடிவிட்டான். "சங்கிலி கிடைத்துவிட்டது. அந்தக் கிழவனைப் பிடித்துக் காட்டிக் கொடுப்பதில் என்ன புதுப் பெருமை வந்துவிடப் போகிறது?" என்று எண்ணியே பூரணி அவனைப் போகவிட்டாள்.



அருகில் நெருங்குவதற்கே அஞ்சி அரண்டு நின்று கொண்டிருந்த கமலா, பூரணிக்குப் பக்கத்தில் வந்தாள்.



"காலம் எவ்வளவு கெட்டுப் போய்விட்டது? முகத்தையும் பேச்சையும் பார்த்து எந்த மனிதர்களையும் நம்பி விட முடியாது போலிருக்கிறதே! மிகவும் நல்லவனைப் போலப் பேசிக் கொண்டு வந்தவன் ஒரே கணத்தில் கழுத்தில் கைவைத்து சங்கிலியை அறுத்தானே பார்த்தியா பூரணி! உன்னைப் போல் ஒரு துணிச்சல்காரி மட்டும் உடன் வந்திருக்காவிட்டால் சங்கிலியைத் திருட்டுக் கொடுத்துவிட்டுக் கண்களைக் கசக்கிக் கொண்டு வீட்டில் போய் நிற்பேன்" என்று பூரணியின் துணிவை வியந்து பேசத் தொடங்கினாள் கமலா. பூரணியின் வலது கையால் அவள் வாயைப் பொத்தினாள்.



"போதும் கமலா! ஏதோ கெட்ட சொப்பனம் கண்டு விழித்துக் கொண்ட மாதிரி இதை மறந்துவிடு. இருவருமே முன் யோசனையின்றி இந் நேரத்துக்கு இங்கு வீடு தேடிக் கொண்டு வந்ததே தப்பு. வா, மாற்றவர்கள் வந்து இந்த வெட்கக் கேட்டை விசாரிப்பதற்கு முன் இங்கிருந்து போய்விடலாம்" என்று கமலாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாகத் திரும்பி நடக்கத் தொடங்கினாள் பூரணி.



கீழ இரத வீதி திருப்பத்தில் வந்ததும், தெருவிளக்கின் ஒளியில் பூரணியின் கைகள் தற்செயலாகக் கமலாவின் பார்வையில் பட்டன.



வளையல் உடைந்து நகங்களால் கீறிய காயங்களோடு கன்றிச் சிவந்து போயிருந்த அந்தப் பூக்கரங்களை விளக்கொளியில் தூக்கிப் பிடித்துப் பார்த்தாள் கமலா.



வெண்ணிறக் காகிதத்தில் தாறுமாறாக விழுந்த சிவப்பு மைக் கீறல் மாதிரி அந்த அழகிய முன்கையில் நகக்கீறல்கள் குருதிக்கோடு இழுத்திருந்தன. கமலாவின் கண்களில் அதைக் கண்டதும் நீர் மல்கி விட்டது. பூரணியின் முகத்தைப் பார்த்தாள். அவள் துன்பத்தையும் உணராதது போல் முகம் மலரச் சிரித்தாள்.



"அடி அசடே! இதற்கெல்லாமா அழுவார்கள்? பேசாமல் அந்தச் சங்கிலித் துணுக்குகளை இப்படிக் கொடு. எங்கள் தெருவில் ஒரு பத்தர், பொற்பட்டறை வைத்திருக்கிறார். நாளைக்கு சாயங்காலத்துக்குள் சரிப்படுத்திக் கொண்டு வந்து தந்து விடுகிறேன். அதுவரையில் உன் அம்மாவுக்குத் தெரிந்து விடாமல் பார்த்துக்கொள். நடந்ததைப் பற்றி யாரிடமும் மூச்சுவிடக் கூடாது" என்று அந்தச் சங்கிலித் துணுக்குகளை வாங்கிக் கொண்டாள் பூரணி.



"சங்கிலி போயிருந்தாலும் பரவாயில்லை பூரணி. அதற்காக உன் கைகளை இப்படி இரணமாக்கிக் கொண்டு வந்திருக்க வேண்டாம்."



"கைகளில் இரணம் படாமல் தான் எதையும் செய்து விட ஆசைப்படுகிறோம். ஆனால் கைகளிலும் மனத்திலும் எண்ணங்களிலும் படுகிற புண்களைச் சுமக்காமல் வாழ முடிவதில்லை."



இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு வயதுக்கு அதிகமான முதுமையை வரவழைத்துக் கொண்டாற்போலச் சிரித்தாள் பூரணி. அப்படிச் சிரிப்பதற்கு அவளால்தான் முடியும்.



கமலாவை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு பூரணி சந்நிதித் தெருவில் திரும்பி நடந்தபோது ஏறக்குறையத் தெரு அடங்கிப் போயிருந்தது. நெடுநேரம் கதவைத் தட்டியபின் திருநாவுக்கரசு விழித்தெழுந்து வந்து கதவைத் திறந்தான். கதவைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே போய் அப்பாவின் படிப்பறையில் விளக்கைப் போட்டாள். காலையில் நினைவாகப் பத்தரிடம் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் சங்கிலித் துண்டுகளை ஒரு காகிதத்தில் சுற்றி மேஜை மேல் வைத்தாள். சிறிது நேரம் எதையாவது படித்துவிட்டு உறங்கப் போகலாம் என்று அப்பாவின் புத்தகத்தை உருவினாள்.



கவியரசர் பாரதியாரின் பாடல் தொகுதி அது. தானாகப் பிரிந்த பக்கத்தில் மேலாகத் தெரிந்த அந்தப் பாட்டு பூரணியின் அப்போதைய மனநிலைக்கு இதமாக இருந்தது.

"தேடிச்சோறும் நிதம்தின்று - பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்

வாடித்துன்பம் மிகவுழன்று - பிறர்

வாடப்பல செயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவம் எய்திக்கொடுங்

கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ?"



அப்பா போன துக்கம், குடும்பத்தைத் தாங்கிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, விட்டைக் காலி செய்துவிட்டுப் புதிய இடம் பார்க்கும் கவலை, கையை ஒடித்துக் கொண்டு வீழ்ந்து கிடக்கும் தம்பி, இருட்டில் வீடு தேடப்போன இடத்தில் திருட்டுக்கு ஆளாகித் தப்பின வம்பு - இத்தனை எண்ணங்களும் சுமையாகிக் கனத்து ஏங்கும் அவள் மனத்தில் பாரதியின் இந்தப் பாட்டு ஏதோ ஓர் உணர்ச்சிப் பொறியைத் தூண்டியது.



நீர்க்கரைத் தவளைகள் விட்டு விட்டு ஒலிக்கும் குரலும், தென்னை மட்டைகள் காற்றில் ஆடிச் சரசரக்கும் ஓசையும் தவிர, இரவு அமைதியில் இணைந்திருந்தது. இடையிடையே பெரிய சாலையில் லாரிகள் போகும் சத்தம் அதிர்ந்து ஓயும். ஊர் உறங்கும் சூழலில் தானும் தன் மனமும் உறங்காமல் விழித்திருந்து அந்தப் பாட்டில் மூழ்கி எண்ணங்களில் திளைப்பது, குளிருக்குப் போர்வை போல் சுகமாக இருந்தது பூரணிக்கு இப்படி எண்ணத்தில் திளைப்பது அவளுக்குப் பழக்கம். "சோற்றை இரையாகத் தின்று காலத்துக்கு இரையாவது தான் வாழ்க்கையா? துன்பத்தில் உழன்றுகொண்டும் பிறரை துன்பத்தில் உழல வைத்துக்கொண்டும் வாழ்வதுதான் வாழ்க்கையா? பிறரைத் தானும், தன்னைப் பிறரும் வம்பு பேசிக் கழிவதுதான் வாழ்க்கையா? இதையெல்லாம் விட பெரிதாக ஏதோ ஒன்று வாழ்க்கையில் இருக்கிறது அல்லது வாழ்க்கைக்காக இருக்கிறது." குளிர்ந்த தண்ணீரைத் தெளித்த மாதிரி இவற்றை நினைத்தபோது அவளுடைய உடம்பும் மனமும் மலர்ந்து சிலிர்த்தாற்போல் ஒரு புல்லரிப்பு ஏற்பட்டது. பனிக்கட்டிகளில் உடம்பு சிலிர்த்தாற் போல் ஒரு புல்லரிப்பு ஏற்பட்டது. பனிக்கட்டிகளில் உடம்பு உரசுகிறார் போலப் பரிசுத்தமான நினைவுகளுக்கு இப்படி ஒரு சிலிர்ப்பு எப்போதும் உண்டு. நினைவு தெரிந்த வயதிலிருந்து இத்தகைய சிலிர்ப்பை அவள் பலமுறை உணர்ந்திருக்கிறாள். பவளமல்லிகைப் பூ மலர்கிறபோது தோட்டம் முழுவதும் ஒரு தெய்வீக நறுமணம் பரவி நிறைவதுண்டு. அபூர்வமான சில மனிதர்களுக்கு மனமும் எண்ணங்களும் வளர்ந்து விகசிக்கிற பருவத்தில் அந்த எண்ணங்களின் மலர்ச்சியால் எண்ணுகிறவர்களைச் சுற்றி ஒருவகை ஞானமணமோ எனத்தக்க புனிதமான சூழ்நிலை நிலவும்.



கண்ணிமைகள் சோர்ந்து விழிகளில் சாய்ந்தன. புத்தகம் இரண்டொரு முறை கை நழுவியது. பூரணி விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்டாள். உடலே கனம் குறைந்து இலவம் பஞ்சாகிப் போய்விட்ட மாதிரி சுகமான உறக்கம் அவளைத் தழுவியது.



காலையில் நாட்டு வைத்தியர் வந்து சம்பந்தனின் கையைப் பார்த்துவிட்டுப் போனார். அன்று சனிக்கிழமை திருநாவுக்கரசுக்குப் பள்ளிக்கூடம் விடுமுறை. பால்காரனுக்கு மாதம் முடிகிறவரை கணக்கு இருப்பதால் பால் ஊற்றிவிட்டுப் போயிருந்தான். காப்பியைப் போட்டுக் கொடுத்துவிட்டு முதல் நாள் இரவு வாங்கிக் கொண்டு வந்திருந்த கமலாவின் அறுத்த சங்கிலியைச் செம்மைப்படுத்திக் கொண்டு வருவதற்குப் புறப்பட்டாள் பூரணி.



பத்தர் மிகவும் வேண்டியவர் தான். ஆனால் ஏழைகளாயிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் வேண்டியவராயிருப்பதால் என்ன பயன்? உதவவும் முடியாது. உதவும்படி வேண்டவும் முடியாது. சங்கிலிப் பழைய சங்கிலியாவதற்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. வேலையை முடித்துச் சங்கிலியைக் காகிதத்தில் வைத்துக் கொடுத்த பத்தரை நோக்கி, "இதற்கு நான் என்ன தரவேண்டும்?" என்று கேட்டாள் பூரணி.



"ஐந்து ரூபாய் கொடு, குழந்தை". பத்தருக்கு எத்தனை வயதுப் பெண்ணாயிருந்தாலும் எல்லாரும் குழந்தைதான். கொஞ்சம் வம்பு பேசி வழக்காடியிருந்தால் பத்தர் இரண்டொரு ரூபாய்கள் குறைத்திருப்பாரோ என்னவோ? பண்பட்ட குடிப்பிறப்பைத் தாங்கிய நாக்குப் பேரம் பேச எழவில்லை. ஐந்து ரூபாயை மறு பேச்சின்றிக் கொடுத்து விட்டாள். சங்கிலியை வாங்கிக் கொண்டு கமலாவின் வீட்டுக்குப் போனாள். மணி பதினொன்று ஆகியிருந்தது. நல்ல வெய்யில், ரத வீதியில் மலைப்பாறைகளின் வெப்பமும் சேர்ந்து கொண்டால் சுண்ணாம்புக் காளவாய் மாதிரி ஒரு சூடு கிளம்பும்.



நல்லவேளை, கமலாவின் கூட வேறு யாருமில்லை. வீட்டு முன் அறையில் தனியாக உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் அவள். பூரணியைப் பார்த்ததும் ஆவலோடு எதிர் கொண்டு எழுந்து வந்து வியப்பான செய்தி ஒன்றைத் தெரிவித்தாள் கமலா.



"பூரணி உனக்குத் தெரியுமா செய்தி! உன்னிடம் திமிறிக் கொண்டு தப்பி ஓடினானே, அந்தத் திருட்டுக் கிழவன் பாம்பு கடித்துச் செத்துப் போனான். காலையில் நானும் அம்மாவும் சரவணப் பொய்கைக்குக் குளிக்கப் போயிருந்தோம். அவன் உடலை அந்த நாவல் மரத்தடியில் கொண்டு வந்து போட்டிருந்தார்கள். அந்த இடத்துக்குச் சிறிது தொலைவில் வயல் வரப்பின் மேல் செத்து விழுந்து கிடந்தானாம். விடிந்ததும் தண்ணீர் பாய்ச்சப்போன ஆட்கள் யாரோ பார்த்துத் தூக்கிக்கொண்டு வந்து மரத்தடியில் கிடத்தியிருக்கிறார்கள். அவன் விழுந்திருந்த வரப்பின் மேல் பாம்புப் புற்று இருந்ததாம். பாவம் திருடினதுதான் கிடைக்கவில்லை, உயிரையும் கொடுத்து விட்டானா பாவிப்பயல்!"



இதைக்கேட்டதும் பூரணியின் உடம்பில் எலும்புக் குருத்துக்களெல்லாம் நெக்குருகி நெகிழ்ந்தாற்போல் ஒரு நடுக்கம் பரவியது. கண்கள் பயந்தாற்போல் பராக்குப் பார்த்து விழித்தன. கைவிரல்களில் கொலை நடுக்கம் போல் ஒரு உதறலை அவள் உணர்ந்தாள். "நான் கொலை செய்துவிட்டேனா?" என்று அவள் உள்மனம் அவளையே கேட்டது. இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. முகத்தில் வேர்த்துவிட்டது.



பூரணியின் நிலையைப் பார்த்து கமலா பயந்து போனாள். "இதென்ன பூரணி! உனக்கு ஏன் இப்படி வேர்த்துக் கொட்டுகிறது? அவன் சாகவேண்டியது விதி. பாம்புக் கடித்துச் செத்தான். அதற்கு நீ ஏன் நடுங்குகிறாய்?"



"நேற்று இரவு நடந்ததைப் பற்றி யாரிடமாவது சொன்னாயா கமலா?"




குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 3:02 am




"மூச்சுவிடுவேனா நான்? உன்னையும் என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. சரவணப் பொய்கைக் கரையில் ஒரே கூட்டம். இரவு அவனுடைய விதி என் சங்கிலியில் இருந்திருக்கிறது, பாவம்."



"மனித நப்பாசை எத்தனை வேடிக்கையாக இருக்கிறது பார் கமலா. தன் முதுகுக்குப் பின்னால் உயிரைத் திருடிக்கொண்டு போக எமன் வந்து கொண்டிருப்பது தெரியாமல் உன் முதுகுக்குப் பின்னால் சங்கிலியைத் திருட ஓடி வந்திருக்கிறானே இந்தக் கிழவன். மனிதன் பொருளைத் திருடினாலே அகப்பட்டு அவமானமும் தண்டனையும் அடைய வேண்டியிருக்கிறது. எமன் இத்தனை உரிமையோடு உயிர்களைத் திருடிவிட்டு இந்தத் திருட்டு உரிமையால் தெய்வமாகவும் வாழ்கிறானே?"



"திருடனாயிருந்தாலும் அவன் செத்த விதத்தை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது, பூரணி!"



"மரணத்துக்கே இந்த ஆற்றல் உண்டு. பக்கத்து வீட்டில் சுவரை இடித்தால் நம் வீடு அதிர்கிற மாதிரிச் சாகின்றவர்கள் வாழ்கின்றவர்கள் மனத்திலுள்ள உயிர் நம்பிக்கையில் அதிர்ச்சியை உண்டாக்குகிறார்கள்."



"அதிருக்கட்டும்! மேலே உன் திட்டம் என்ன? எங்கேயாவது வேறு வீடு பார்த்தாயா? உன் தம்பி ஏதோ மரமேறி விழுந்து கையை ஒடித்துக் கொண்டானாமே, நீ என்னிடம் சொல்லவே இல்லையே?"



"சொல்லவில்லைதான். எனக்கு எத்தனையோ கவலைகள் கமலா. அத்தனையையும் உன்னிடம் சொல்லி உன்னைக் கவலைப்படுத்த வேண்டுமா? முள்ளோடு பிறக்கிற செடிக்கு அந்த முள்ளே பாதுகாப்பாகிற மாதிரி இப்போது எனக்கு இருக்கிற ஆதரவு என் கவலைகள் மட்டும்தான். இந்தா, உன் சங்கிலி இதைச் சரிப்படுத்திவிட்டேன். எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. முடிந்தால் சாயங்காலம் நீ கொஞ்சம் விட்டுப் பக்கம் வந்து போ! நான் வரட்டுமா?"



கமலாவிடம் சங்கிலியைக் கொடுத்துவிட்டுப் பூரணி வீடு திரும்பினாள். தேரடியில் ஓதுவார்க் கிழவர் எதிர்ப்பட்டார்.



"மூஞ்சி முகரையெல்லாம் கறுத்துப் போகிறார்போல் இப்படி வெய்யிலில் அலைவாளா ஒரு பெண்? அப்படி என்ன அம்மா தலைபோகிற காரியம்?"



"ஒன்றுமில்லை தாத்தா! இங்கே பக்கத்துத் தெருவில் கமலா என்று ஒரு பழைய சிநேகிதி இருக்கிறாள். அவளைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று கிழவரின் அனுதாப விசாரிப்புக்குப் பதில் சொல்லிவிட்டு மேலே நடந்தாள் பூரணி. தெரு நடுவிலிருந்த கல்மண்டபத்தருகே தயிர்க்காரி எதிரே வந்து பிடித்துக் கொண்டாள்.



"நான் காசு பணம் சேர்த்து வைத்துக் கொண்டு பிழைக்கிறவள் இல்லை அம்மா! அப்பப்போ நீங்க கொடுக்கிறதை வாங்கித் தான் தவிடு, பிண்ணாக்கு என்று வாங்கணும். பூராப் பாக்கியும் தர முடியாவிட்டாலும் ஏதாவது ஒண்ணு ரெண்டு கொடுங்கம்மா."



கையில் மீதமிருந்த இரண்டு ரூபாய் இரண்டரை அணாவில் ஒன்றரை ரூபாயை அவளிடம் கொடுத்து அவளுக்கு நல்லவளானாள் பூரணி. அந்தப் பதினொண்ணே முக்கால் மணி வெய்யிலில் திருப்பரங்குன்றம் சந்நிதித் தெருவில் சுறுசுறுப்பும் இல்லை, கலகலப்பும் இல்லை. வெற்றிலைப் பாக்குக் கடைக்காரர்கள் கூட பொழுது போகாமல் ஈயோட்டிக் கொண்டிருந்தார்கள். தெருவும், கோபுரமும், மலையும் பரம சுகத்தோடு வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்தன. மேற்கே ரயில்வே லயனில் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ஓடிச்சென்று நின்றது. அந்த வழியாகச் செல்லுகிற மூன்று எக்ஸ்பிரஸ்களில் அதற்கு மட்டும் தான் முருகன் மேல் பற்று. மூன்று விநாடிகள் நின்று கரும்புகையை மலை நோக்கி அள்ளி வீசிவிட்டுப் பின் போய்விடும். வேறு எக்ஸ்பிரஸ்களுக்கு அந்தப் பற்றும் இல்லை.



வீட்டில் காலையில் குடித்த ஒரு வாய் காப்பியோடு தம்பி, தங்கைகள் பட்டினிக் கிடப்பார்களென்ற நினைவு பூரணிக்கு வந்தது. ஓட்டலில் நுழைந்து எட்டணாவிற்குச் சிற்றுண்டி வாங்கிக் கொண்டு சென்றாள். குழந்தை மங்கையர்க்கரசி, "அக்கா ரொம்பப் பசிக்கிறது" என்று ஓடிவந்து வாயிற்படியிலேயே பூரணியின் காலைக் கட்டிக் கொண்டாள். வாடிப்போன சூரியகாந்திப் பூ மாதிரி குழந்தையின் முகத்தில் பசிச் சோர்வு தென்பட்டது. நாவுக்கரசும் சிறிய தம்பி சம்பந்தனின் படுக்கையருகே துவண்டு களைத்துப் போய் உட்கார்ந்திருந்தான். நன்றாக இரசம் பூசிய கண்ணாடியில் எதுவும் தெளிவாகத் தெரிகிற மாதிரி இளம் முகங்களில் பசிதான் எவ்வளவு விளக்கமாகத் தெரிகிறது. மூப்பில் அவஸ்தைகள் பயின்று பழகி மரத்துப் போவதால் உணர்வைத் தெரியாமல் மறைத்துக் கொள்ள முடிகிறது. இளமையில் அப்படி மறைக்க முடிவதில்லை.



ஓட்டலில் வாங்கி வந்த சிற்றுண்டிப் பொட்டலத்தைப் பிரித்து மூன்று பேருக்கும் தனித்தனி இலைகளில் வைத்தாள்.



"நீ சாப்பிடலையா அக்கா?" என்று நாவுக்கரசு தனக்கு முன் இலையிலிருந்ததைத் தொடாமல் பூரணியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கேட்டான்.



"சாப்பிட்டாயிற்று. கமலா வீட்டுக்குப் போயிருந்தேன். விடமாட்டேன் என்று பிடிவாதமாக வற்புறுத்தினாள். அங்கே சாப்பிடும்படி நேர்ந்துவிட்டது; நீங்கள் சாப்பிடுங்கள்."



பொய்யைப் போல சமயத்தில் உதவி செய்கிற நண்பன் உலகில் வேறு யாருமே இல்லை.



"உன் முகத்தைப் பார்த்தால் சாப்பிட்ட மாதிரி தெரியலையே அக்கா."



"போடா அதிகப் பிரசங்கி, சாப்பிட்ட மாதிரி தெரியறதுக்கு முகத்தில் 'சாப்பிட்டாயிற்று' என்று எழுதி ஒட்டியிருக்க வேண்டுமோ?"



-இப்படிக் கேட்டுவிட்டுச் சிரித்தாள் பூரணி. அந்தச் சிரிப்பினால் அக்காவின் மேல் அவர்களுக்குச் சிறிது நம்பிக்கை உண்டாயிற்று. இலையில் இருந்ததை சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்களுடைய இலையில் உணவுப் பொருள் குறையக் குறைய பூரணியின் மனத்திலும் முகத்திலும் ஏதோ நிறைந்து மலர்ந்தது.



"அக்கா! தபால்காரர் கொடுத்துவிட்டுப் போனார்" என்று சில கடிதங்களைக் கொண்டு வந்து கொடுத்தான் திருநாவுக்கரசு.



வழக்கம்போல் அனுதாபக் கடிதங்கள்தான். அந்த மாபெரும் தமிழறிஞருக்கு திருப்பரங்குன்றத்திலேயே ஒரு நினைவு மண்டபம் எழுப்பியாக வேண்டும் என்று ஆவேசத்தோடு வரிந்து எழுதியிருந்தார் உணர்ச்சிமிக்க இளைஞர் ஒருவர். பூரணி தனக்குள் நகைத்துக் கொண்டாள்.



"நினைவு மண்டபமாம்; நினைவு மண்டபம்! மனிதனை மறந்துவிட்டு மண்டபத்தைக் கட்டி நினைவு வைத்துக் கொள்ளப் பார்க்கிறார்களே! அந்த மண்டபத்துக்குத் தோண்டுகிற அஸ்திவாரத்தில் எங்களையும் தள்ளிவிட்டால் கவலை தீர்ந்தது. இன்னும் நெடுங்காலம் வாழ்ந்து பசியோடும் பண்புகளோடும் போராட வேண்டியிராது" என்று வெறுப்போடு வாய்க்குள் மெல்ல இப்படிச் சொல்லிக் கொண்டாள்.



சிறுகுடலைப் பெருங்குடல் விழுங்குவது போல் பசி வயிற்றைக் கிள்ளியது. குளித்துவிட்டால் சோர்வு குறையுமென்று குளிக்கப் போனாள்.



கிணற்றில் நீர் இறைக்கும் கயிறு பாதியில் நைந்திருந்தது. எப்போது அறுந்து விழுமோ? எதற்கென்று தனியாகக் கவலைப் படுவது? வாழ்க்கையே அப்படிப் பாதியில் நைந்த கயிறு போல்தான் இருக்கிறது.



பானையில் அரிசி இல்லை; பரணில் விறகு இல்லை. கையில் இரண்டரை அணாவுக்கு மேல் காசு இல்லை. அவற்றைப் பிறரிடம் சொல்லிக் கடன் கேட்க விருப்பமும் இல்லை. பூரணி அழுதுகொண்டே குளித்தாள். குளிக்கும் போது அழுதால் யாரும் கண்டுகொள்ள முடியாதல்லவா? அழுகையும் குளிப்பு தானே? துக்கத்தில் குளிப்பதுதானே அழுகை! நீரில் குளித்துக் கொண்டே துக்கத்திலும் குளித்தாள் அவள். அநாதையாக விட்டுப்போன அம்மாவின் இலட்சுமிகரமான முகத்தை மனக்கண்களுக்கு முன் நினைவுக்கு கொணர முயன்றாள். அப்பாவின் முகமோ முயற்சியில்லாமல் நினைவில் வந்தது. குடம் குடமாகத் தண்ணீரை ஊற்றியும் உடம்பு குளிர்ந்ததே யொழிய நெஞ்சின் சூடு தணியவில்லை.



அம்மாவின் முகம் நினைவில் சிக்கிய போது நெஞ்சில் கனல் பிழம்பு போல் ஒரு சுடர் எழுந்தது. மீனாட்சியம்மனின் முகம் போல் தமிழ்ப் பண்பில் வந்த தாய்மை கனியும் அந்த முகம். 'பெண்ணே! நீ வாழு! வாழச்செய்!' என்று சொல்வதுபோல் உறுதியை உமிழ்ந்தது.



குளித்து முடித்ததும் பூரணி வெளியே புறப்படுவதற்குத் தயாரானாள். அழுகையின் காரணமாகக் கெண்டை மீனுக்குச் செந்நிறம் தீட்டினாற்போல் அவள் எழில் நயனங்கள் சிவந்திருந்தன. விரிந்து மலரும் செவியைத் தொடுவதுபோல் அகலும் அழகு அந்தக் கண்களுக்கு உண்டு.



"சாயங்காலம் வைத்தியர் வந்தால் தம்பியைப் பார்க்கச் சொல்லு. குழந்தை வெய்யிலில் தெருவில் அலையாமல் பார்த்துக் கொள். நான் வருவதற்கு அதிக நேரமாகும்" என்று திருநாவுக்கரசிடம் சொல்லிக் கொண்டு குடையை எடுத்துக் கொண்டுப் புறப்பட்டாள் பூரணி. நகரத்தில் எங்காவது ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டுதான் வீடு திரும்புவது என்று அப்போது அவள் உள்ளத்தில் ஒரு வைராக்கியம் பற்றியிருந்தது. வயிற்றில் பசி, மனதில் வைராக்கியம், கண்களில் ஒளி, கையில் சிறியதாய் நளினமாய்ப் பெண்கள் பிடித்துக் கொள்கிற மாதிரிக் குடை. மண்ணையும் வெப்பத்தையும் அதிகமாக உணர்ந்தறியா அந்த அனிச்சப்பூ கால்கள் நொந்தன. நோவை அவள் பொருட்படுத்தவில்லை.



கையிலிருந்த காசுக்கு எவ்வளவு தூரம் பஸ்ஸில் போக முடியுமோ, அவ்வளவு தூரம் போய் இறங்கிக் கொண்டு நடந்தாள். மனத்தில் தெம்பும், நடையில் வேகமும் கொண்டிருந்தாள் பூரணி. அவளுக்கு இப்போது வாழும் வெறி வந்திருந்தது.



நியாயமான வாழ்வைத்தேடி ஓர் இளம்பெண் இந்தப் பெரிய நகரத்தின் தெருக்களில் இப்படி அலைவதில் வெட்கமும் வேதனையும் படவேண்டியதில்லை. இதே மதுரையின் தெருக்களில்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஒற்றைச் சிலம்பும் கையுமாக ஒரு சோழ நாட்டுப் பெண் நியாயம் தேடினாள். பூரணி நியாயமான வாழ்வைத் தேடுகிறாள்.



அவளுடைய கண்கள் அந்த நான்கு கோபுரங்களையும் சுற்றி வாழ்வைத் தேடின. உதவி செய்து உழைப்பை வாங்கிக் கொள்ளும் கண்ணியமான மனிதர்களைத் தேடின. கண்ணோட்டமுள்ள (தாட்சண்யம்) நல்ல மனிதர்களைத் தேடின. வயிற்றுப் பசிக்கு வழி தேடின.



ஆனால் அங்கே கோபுரங்கள் தான் பெரிதாகத் தெரிந்தன. அதைச் சுற்றி மனிதர்கள் எல்லாம் மனங்கள் உட்படச் சிறியவர்களாகத்தான் இருந்தார்கள். எங்கும் வேலை காலியில்லை. வேலை காலியிருந்தாலும் அதைக் கொடுக்க மனமில்லை. அப்படியே கொடுத்தாலும் அதை ஒரு பெண்ணுக்கு கொடுக்க மனம் இல்லை. "நீ கோபித்துக் கொள்ளாதே அம்மா! நீ என் பெண் மாதிரி நினைத்துக் கொண்டு சொல்கிறேன். உன்னைப் போல் இலட்சணமாக இருக்கிறவர்கள் இந்த மாதிரி நாலு பேர் நாலுவிதமா இருக்கிற இடத்தில் வேலை பார்க்க வரக்கூடாது. அதனால் வரும் உபத்திரவங்களை என்னால் தாங்க முடியாது" என்று உபதேசம் செய்து அனுப்பினார் ஒரு வயதான மானேஜர். இலட்சணமாயில்லா விட்டால் அதுவும் குறை; இலட்சணமாக இருப்பதும் குறை. அதிகத் திறமையும் குறை; அதிகச் சோம்பலும் குறை. நாக்கும் அதில் நரம்பும் இல்லாத விவஸ்தை கெட்ட உலகம் இது. நியாயத்தை யார் யாரிடம் இங்கே விசாரிப்பது? நியாயம் என்று ஒன்று இருந்தால்தானே விசாரிப்பதற்கு?



ஏமாற்றமும் பசியும் சோர்வுமாக மேலக்கோபுர வாசலும் டவுன் ஹால் ரோடும் சந்திக்கிற இடத்தில் வீதியைக் கடந்து கோபுர வாசலுக்காக நடந்து கொண்டிருந்தாள் பூரணி.



அந்த இடத்தில் - அது ஒரு நாற்சந்தி. தெற்கேயிருந்து ஒரு லாரியும் வடக்கேயிருந்து இன்னொரு லாரியும் மற்ற இரு புறமும் கார்களுமாகத் திடீரென்று பாய்ந்தன. மின்வெட்டும் நேரத்தில் அப்படி ஒரு நெருக்கடி அங்கே நேர்ந்தது. பூரணிக்கு எங்கே விலகுவது என்றே தெரியவில்லை. கண்கள் இருண்டன. தலை சுற்றியது. அப்படியே கையில் குடையோடு நடுவீதியில் அறுந்து விழும் முல்லைக்கொடி போல் சாய்ந்துவிட்டாள்.



இதே நகரத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்படி ஓர் இளம்பெண் நடு வீதியில் தடுமாறி விழுந்திருந்தால் எத்தனை மகாகவிகளின் உள்ளங்கள் துடித்துக் கொதித்துப் பாட முனைந்திருக்கும்? ஒரு பெண்ணுக்குத் துன்பம் வந்தால் ஓராயிரம் கவிகளுக்கு உள்ளம் துடிக்குமே? கண்ணகிக்கும் சகுந்தலைக்கும் துன்பம் வந்ததை இளங்கோவும், காளிதாசனும் காவியமாக்கினார்களே! அதற்கென்ன செய்யலாம்? பூரணி கவிகள் வாழும் தலை முறையில் பிறக்கவில்லையே? வெறும் மனிதர்கள் வாழ்கின்ற தலைமுறையில் அல்லவா அந்தப் பேதைப்பெண் வந்துவிட்டாள்.



குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக