ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருதி ஆட்டம்(12-15) - வேல ராமமூர்த்தி

Go down

குருதி ஆட்டம்(12-15) - வேல ராமமூர்த்தி Empty குருதி ஆட்டம்(12-15) - வேல ராமமூர்த்தி

Post by kumarv Tue May 16, 2017 1:48 pm

வேல ராமமூர்த்தி தமிழ் ஹிந்து நாளிதழில் தொடராக எழுதிய " குருதி ஆட்டம் " நாவல் 27 வார தொடரில்( 12 - 15 )தொடர்

12
வன ஓவியம்!

“அப்பா!”
மகள் செவ்வந்தியின் அலறல், தவசியாண்டியை உலுக்கியது. குடிசைக்கு வடக்கே, வெகுதூரக் காட்டுக்குள் இருந்தான். உயிரோடு பிடிபட்ட ஓர் உடும்பு, தவசியாண்டியின் கைப் பிடியில் இருந்து விடுபட முறுக்கிக் கொண்டிருந்தபோது தான், செவ்வந்தியின் அலறல் சத்தம் கேட்டது.
“அப்பா…!” ஒரே சத்தம்தான். மறு சத்தமில்லை.
சிறு குழந்தையாய் காட்டுக்குள் வந்ததில் இருந்து, எதைக் கண்டும் செவ்வந்தி இப்படி கத்தியதில்லை. மலை இறங்கி வரும் யானைகளும் சிறுத்தைப் புலிகளும் காட்டுப் பன்றி களும் செவ்வந்தியைக் கண்டதும் தலை கவிழ்ந்து, தடம் மாறி கடந்து போகும். படுக்கை விரிப்புக்குள் சுருண்டு கிடக்கும் நாகங்கள் கூட, புரண்டு படுக்கும் செவ்வந்தியின் திரேக பார அழுத்தத்தில் சினம் பொறுத்து, மெல்லச் சுருள் அவிழ்ந்து, ஊர்ந்து வெளியேறும். அப்படி ஓர் அபூர்வ இழை, செவ்வந்திக்கும் வனஜீவராசிகளுக்கும் இடையே ஊடாடிக் கிடக்கும். விஷம் கக்கும் நாகங்களையும் அடித்துக் கொல் லும் விலங்குகளையும் விட கொடூரமான எதைக் கண்டு அவள் கத்துகிறாள்?
இடது கையில் உடும்போடும் வலது கையில் சூரிக் கத்தியோடும் குடிசையை நோக்கி ஓடக் கிளம்பினான். தார்ப் பாய்ச்சி இறுக்கிக் கட்டியிருந்த வேட்டி அவிழ்ந்தது. உடும்பை தூர எறிந்தான். சூரிக் கத்தியைக் குறுக்கு வசமாய் வாயில் கவ்வினான். அவிழ்ந்த வேட்டியைத் தார்ப் பாய்ச்சி இறுக்கிக் கட்டினான். காட்டுச் செடிகள் முறிபட ஓட்டம் எடுத்தான்.
“ஹாய்… கஜா!”
“சொல்லு அனு.” பிடறியின் பின்புறம் நிற்பவளை திரும்பிப் பார்க்காமலே பேசினான் கஜேந்திரன்.
“ஏய்… திரும்பிப் பாரேன்!” கஜேந்திர னின் தோளைத் தொடப் போனாள்.
“ஏய்ய்…” திரும்பாமலே எச்சரித்தான்.
தோளைத் தொட நீட்டிய கையை, அரைபாதி சுருக்கி கஜேந்திரனின் சுருள்முடி அழகை ரசித்தபடி நின்றாள்.
சட்டகமிட்ட அரை ஆள் உயர துணிப் பதாகையில், வலதுகைத் தூரிகையால் வண்ணம் குழைத்து, அருங்காட்சி ஒன்றை ஓவியமாக்கிக் கொண்டிருந்தான். கஜேந்திர மயக்கத்தில் நின்ற அனு, அவன் தலை தாண்டி ஓவியத்தைக் கண்ணளந்தாள். தூரிகைத் தொடும் இடமெல்லாம் உயிர் முளைத்தது.
வெண்மையும் இளஞ்சிவப்பும் கரும்பச்சையும் கலந்து அடர்ந்த மலைவனம். பஞ்சாய் நுரை பொங்க, வனம் கீறிப் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். இரு பக்க மலை முகடு தொட்டுச் சிறகு விரித்து, வெள்ளப் பெருக்கை எதிர்த்துப் பறக்கும் ஓர் ராட்சச வினோதப் பறவை. பறவையின் தலை, மனிதத் தலை.
அருகில் இருந்து அடிக்கடி பார்த்த தலை போல் இருக்க, அனு இடது புறமாக நகர்ந்து முன்னே வந்து, கஜேந்திரனின் முகம் பார்த்தாள். மாறி, பறவையின் முகம் பார்த்தாள். அசப்பில், கஜேந்திர முகம். உற்று விழி நோக்கினாள். கஜேந்திரனின் இமை ஆடாத கருவிழி, தூரிகைப் போக் குக்கு அசைந்து கொண்டிருந்தது. உயிர் மறந்து ஓவியத்துக்குள் உருகிக் கொண்டிருந்த முகம், இதழ் விரியும் பூவைப் போல் மெல்ல மெல்ல மலர்ந்து கொண்டிருந்தது.
அனு, தூரிகையின் நுனி பார்த்தாள். சிகரம் தொட்டுப் பறக்கும் கஜேந்திரப் பறவையின் முதுகில், பளிங்குப் பச்சை நிறப் பொன்வண்டு ஒன்று அமர்ந்திருந்தது. பொன்வண்டின் முகம், சாந்தி தவழும் பெண்முகம்.
வண்டின் முகத்தில் தன் முகம் தெரிகிறதா? என உற்று உற்றுப் பார்த் தாள். தன்னோடு உள்ளதுதான், தன் முகமா? அல்லது வண்டின் முகம், தன் முகமா? அறை முழுக்க சுற்றும் முற்றும் பார்த்தாள். கஜேந்திரனின் தாய் பொம்மியும் பாட்டி வெள்ளையம்மாவும் தூரிகை ஓவியங்களாக சுவரில் தொங்கிக் கொண்டிருந்தார் கள். கதவை திறந்து அடுத்த அறைக்கு ஓடினாள். ஆளுயர நிலைக் கண்ணாடி முன் போய் நின்றவள், முகத்தை திருப்பித் திருப்பிப் பார்த்தாள். வண்டின் முகம் போல் தன் முகம் இல்லையே! வெளிறிப் போனாள்.
திரும்ப ஓவிய அறைக்குள் ஓடி வந்தாள்.
கஜேந்திரன், ஓவியத்தை வரைந்து முடித்திருந்தான். அருகில் வந்து நின்ற அனுவை இப்போதுதான் பார்த்தவ னாய், “ஹாய்… அனு! எப்போ வந்தே?” என்றான்.
அனுவுக்கு ‘சுரீர்’ என்றது.
“ஓவியம் எப்படி இருக்கிறது அனு?”
அனு பேசாமல் நின்றாள்.
“அடுத்த மாதம் லண்டன் கிங்ஸ்டன் யுனிவேர்சிட்டியில் எனக்குப் பதிலாக… இந்த ஓவியம்தான் பேசும்.” இரண்டு கைகளாலும் ஓவியச் சட்டகங்களைப் பற்றிக் கொண்டு கம்பீரமாக நின்றான் கஜேந்திரன்.
“சொல்லு அனு. எப்படி இருக்கு?”
“நல்லா இருக்கு.”
“உன் ரசனை இவ்வளவுதானா?”
“உன் ஓவியங்களுக்கு நான் ஒரு ‘மாடலிங் கேர்ள், என் ரசனை இவ்வளவுதான்.”
“ஏய்… என்னாச்சு உனக்கு?”
“பின்னே என்ன? அந்தப் பறவை யாரு… நீதானே?”
ஓவியப் பறவையை உற்றுப் பார்த் தவன், “என்னை மாதிரியா இருக்கு?” என்றான்.
“உன் மேல் உட்கார்ந்திருக்கிற பொண்ணு யாரு?”
அறையின் முகடு நோக்கி பலக்கச் சிரித்தான்.
“அது… பொண்ணு இல்ல. பொன்வண்டு!”
“பொன் வண்டா… பெண் வண்டா?”
“சரி… பெண் வண்டு!”
“யார் அந்தப் பெண்?”
“என் காதலி!”
“காதலியா… அப்போ நான்?”
அனுவை ஏற இறங்க பார்த்த கஜேந்திரன், “ஏய்… அனு! இதென்ன விபரீத ஆசை. நீ என்னோட ‘மாடலிங் கேர்ள், அவ்வளவுதான். தப்பு… அனு. தப்பு!” ஜன்னலோர வானம் பார்த்துப் பேசினான்.
“சரீரம் சார்ந்த காதல், யாரோடும் எனக்கு இதுவரை இல்லை. ஓவியம் தான் என் காதலி. ஓவியமே ஒரு பெண்ணாய் பிறந்திருந்தால், அவளை நான் காதலிப்பேன் - என்னை அவள் காதலிக்காவிட்டாலும்!” திரும்பினான்.
அறையை விட்டு வெளியேறிப் போயிருந்தாள் ‘மாடலிங் கேர்ள்’அனு.
வன ஓவியமாய் குடிசை வாசலில் நின்றாள் செவ்வந்தி.
கையில் கம்புகளோடு ஓடைக்கரை ஏறியவர்கள், அலறல் சத்தம் கேட்டதும் அடுத்த அடி எடுத்து வைக்காமல் திகைத்து நின்றார்கள். நல்லாண்டி எல்லோரையும் கை அமர்த்தினார்.
வடக்கே இருந்து ஓடி வந்து கொண்டி ருந்தான் தவசியாண்டி. “யார்ரா… நீங்க?”
“தவசியாண்டி… நாங்க வேற யாருமில்லை. பெருங்குடி ஆளுகதான்… வந்திருக்கோம்.” நின்ற இடத்தில் இருந்து கத்தினார் நல்லாண்டி.



13

வட காட்டுப் பக்கமிருந்து கையில் சூரிக் கத்தியோடு, ஓடி வந்தான் தவசியாண்டி.
“யார்ரா... நீங்க?”
“ஏப்பா தவசியாண்டி! நாங்க வேற யாருமில்லை. பெருங்குடி ஆளுகதான் வந்திருக்கோம்.”
ஓடைக் கரையில் நின்று பெரியவர் நல்லாண்டி கத்தினார்.
நல்லாண்டி நின்ற இடத்துக்கும் குடிசைக்கும் ஓங்கி கத்தினால் மட்டும் காது கேட்கும் தூரம்.
தவசியாண்டி, குடிசைக்கும் வடக்கே வெகுதூரத்தில் ஓடி வந்து கொண்டிருந்தான். காதுகளில் நல்லாண்டியின் சத்தம் விழவில்லை.
நல்லாண்டியைத் தவிர்த்து, பெருங்குடி ஆட்கள் யாருக்கும் தவசியாண்டியை அடையாளம் தெரியவில்லை. செவ்வந்தியின் ஒற்றை அலறல் சத்தத்திலேயே அரண்டு போய் நின்றவர்கள், கையில் கத்தியோடு காட்டுவாக்கில் ஓடி வரும் தவசியாண்டியைக் கண்டதும் அவரவர் கைவாக்கில் நின்ற மரத்தடி, புதர்களுக்குள் பதுங்கினார்கள்.
ஒரு கனத்த மரத்தடியில் பதுங்கிய கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகத்துக்கு பாதி உயிர் போயிருச்சு. ‘வர்றவன்... கோட்டித்தனமா வர்றானே! காட்டுக் குள்ள வந்தது தப்பாப் போச்சே...’ வாய்க்குள் அரற்றினார்.
பதுங்க இடம் பிடிப்பதில் ‘லோட்டா’வுக்கும் முனியாண்டிக்கும் தள்ளுமுள்ளு. ‘லோட்டா’வைவிட பலசாலியான முனியாண்டி, “அங்கிட்டு போடா...” என, ‘லோட்டா’வின் தோளைப் பிடித்து நெட்டித் தள்ளிவிட்டார். செடி மறைப்புக்கு வெளியே வந்து விழுந்த ‘லோட்டா’, நெடுஞ்சாண்கிடையாக செடிகளுக்குள் பாய்ந்து, கையெடுத்துக் கும்பிட்டவாறு, “சித்தப்பூ... என்னை காப்பாத்துங்க சித்தப்பூ...!” என, முனியாண்டியின் கால்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.
‘லோட்டா’வின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து செடிகளுக்கு உள்ளே இழுத்துப் போட்டார் முனியாண்டி.
“டேய்...! எவன்டா என் காட்டுக்குள்ளே...?” முன்னிலும் ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டே ஓடி வந்த தவசியாண்டி, புதிதாக வேய்ந்த குடிசைக்குள் நுழைந்தான்.
எதிர் குடிசை வாசலில் செவ்வந்தி நின்றாள்.
கையில் இருந்த சூரிக் கத்தியைக் கீழே எறிந்தான். மூலையில் சார்த்தி வைத்திருந்த வேல்க் கம்பை கையில் எடுத்தான். குடிசையை விட்டு வெளியேறி, ஓடைக் கரை நோக்கி புயலாக வந்தான்.
பதுங்கிக் கிடந்தவர்களின் கண் களுக்கு, ரத்தப் பசி எடுத்த காட்டு மிருகம் போல் தெரிந்தான்.
‘லோட்டா’வைத் தவிர எல்லோரும் தவசியாண்டியின் வயதை ஒத்த ஆட்கள்தான். 20 வருட இடைவெளியில் தவசியாண்டியின் முகம் அருந்தலாய் ஞாபகம் இருந்தது. அந்த முகத்துக்கும் இந்த முகத்துக்கும் ஒட்டலே.
‘இன்னாரென தெரிந்துமா... ஆளைக் கொல்லுவான்? சொல்ல முடியாது. ஊரை வெறுத்து வெளியேறி வந்தவன் கோபம்... யாரு மேலேயோ! நம்ம கையிலே ஆயுதமும் இல்லே.கணக்குப் பிள்ளை பேச்சைக் கேட்டு, தேளு, பூரானை அடிக்கிற கம்போட காட்டுக்குள்ளே வந்தது... தப்பாப் போச்சே!’ முண்டியடித்து முனி யாண்டிக்குள் நுழைந்தான் ‘லோட்டா’. “அடேய்... லோட்டாப் பயலே! எங்கே வந்து நுழையிறே. தவசியாண்டியோட வேல்க் கம்புக் குத்துக்கு தலைப் பலி, நீதான்டா!” எட்டி மிதித்தார்.
“சித்தப்பூ...” கண்ணீர் ஓட, கையெடுத்துக் கும்பிட்டான்.
எழ மறுத்து, கப்பலின் முதல் வகுப்பு அறை வாசலில் கால் பரப்பி அமர்ந்திருந்தான் துரைசிங்கம்.
“ஏய் துரைசிங்கம்... என்ன இது பிடிவாதம்? எந்திரி.”
அரியநாச்சி சொல்வதைக் காதி லேயே வாங்காமல், பித்துப் பிடித்தவன் போல் இருந்தான்.
கண்கள் இரண்டும், அகல விரித்திருந்த கால்களுக்கு இடையே நிலை குத்தி இருந்தன.
சிவந்திருந்த வானம், சாம்பல் பூத்து, இருளத் தொடங்கி இருந்தது. பயணி கள் பலர், கடல் காற்றோடு அந்தி மயக்கத்தை அனுபவிக்க, தனித்தும் சேர்ந்தும் கப்பலின் மேல் தளத்தில் நடமாடத் தொடங்கினார்கள். காலனிய நாடுகளின் கருந்தோல் மனிதர்களைக் கண்டாலே அருவருக்கும் வெள்ளைத் தோல் அதிகாரிகளே, பயணிகளில் அதிகம் பேர் இருந்தனர்.
கப்பலில் பயணிக்கும் கீழைத் தேசத்தவரின் திரேக நெடி, பிரித்தானி யர்களை முகம் சுழிக்க வைத்தது. ‘ஜாக்’ கொடியை இறக்கிவிட்டு, சமீபத்தில் விடுதலையான அடிமை தேசத்தவர்களும் கோட்டு, சூட்டை மாட்டிக் கொண்டு, வெள்ளையர்களுக் குச் சமமாக கப்பலிலும் விமானங்களிலும் ஏறிவிடுகிறார்கள். எல்லாம் சுதந்திரம் கொடுத்து தொலைத்ததின் விளைவு.
இந்தியக் கரை கிடக்கும் மேற்குத் திசை நோக்கி, சன்னமான அதிர்வோடு, கடல் கீறிப் போய்க் கொண்டிருந்தது கப்பல். கப்பலின் மேல் தளத்து விளக்குகள் அனைத்தும் அடுத்தடுத்து ஒளிர்ந்தன.
துரைசிங்கத்தின் முரண்டும் பிடிவாத மும் அரியநாச்சியை அச்சுறுத்தியது.
பயண ஒழுங்கை மீறும் குற்றத்துக் காக, கப்பல் நிர்வாகிகள் எப்படி வேண்டுமானாலும் தண்டிக்கலாம். இவை எதையும் அறியாத துரைசிங்கம், கால் பரப்பி அமர்ந்து சண்டித்தனம் பண்ணிக் கொண்டிருந்தான். அரிய நாச்சி, நெஞ்சில் நெருப்பைச் சுமந்து நின்றாள்.
“துரைசிங்கம்... இந்தக் கப்பல்லே நாம் மட்டும் இல்லே. நம்மளைப் பிடிக் காத எத்தனையோ பேர் இருக்காங்க. நிலைமை புரியாம அடம் பிடிச்சா, எல் லாம் கெட்டுப் போயிடும். 20 வருஷ விரதம் வீணாப் போயிடும். நாடு திரும்பி, முடிக்க வேண்டிய காரியங்கள் நமக்கு நிறைய இருக்கு. எதுவானாலும் நம்ம கமராவு(கப்பல் அறை)க்குப் போயி பேசுவோம்.”
தலை நிமிராமல், கண்களை மட்டும் உயர்த்தி, அரியநாச்சியைப் பார்த்தான். குனிந்து, துரைசிங்கத்தின் தோள்களைத் தொட்டாள்.
தலை நிமிர்த்தி திருப்பி, முதல் வகுப்பு அறைக் கதவைப் பார்த்தான். மூக்கு விடைத்து, நீர் கோத்த விழிகளின் இமைகள் ஆடின. உதடுகளுக்குள் பற்கள் நறநறத்தன.
“எந்திரி.”
கையூன்றி எழுந்தான்.
“வா...” தோள் தொட்டு முன் நகர்த்தினாள். தளர்ந்து நடந்தான். மனதில் உள்ளதை வெளியே சொல்ல முடியாமல், வாய்ப் பேச்சு இழந்து போன ஒரு வல்லவனின் தள்ளாட்டத்தைக் காண, அரியநாச்சிக்கு சகிக்கவில்லை.
‘ஏதோ... ஒண்ணு இருக்குது. அது என்ன?’ன்னு தெரியலையே!’ மனசு குமைந்தவாறு நடந்தாள்.
அங்கங்கு நின்ற வெள்ளையர்கள், மழிக்கப்படாத தாடியுடனும் கழுத்து வரை தொங்கும் சிகையுடனும் இருந்த துரைசிங்கத்தையும் மலேசிய உடை தரித்த தமிழ்ப் பெண் அரியநாச்சியையும் காட்சிப் பொருட்களாகப் பார்த்தார்கள்.
கப்பலின் உள் மைய அறைகளுக்குச் செல்லும் இரும்பு ஏணி வழியாக, முதலில் துரைசிங்கம் இறங்கினான். அடுத்து, அரியநாச்சி இறங்கினாள். இரண்டு படிகள் இறங்கியவள், தற்செய லாக முதல் வகுப்பு அறைக் கதவுப் பக்கம் திரும்பினாள். கதவு திறந்தது. அடுத்த படி இறங்காமல், இரண்டாம் படியிலேயே நின்றவாறு பார்த்தாள்.
திறந்த கதவு வழியே, டி.எஸ்.பி. ஸ்காட் வெளியே வந்தான்.
14
கடல் பிணம்!

பொந்துக்குள் இருந்து வெளியே தலை நீட்டி, கண் உருட்டும் நாகப்பாம்பு போல், கழுத்தளவு உடல் மறைய இரும்பு ஏணிப் படியில் நின்று, கப்பல் மேல் தளத்தை நோட்டமிட்டாள் அரியநாச்சி. தன் கண்ணையே நம்ப முடியவில்லை.
முதல் வகுப்பு அறைக் கதவைத் திறந்து வெளியேறி வருபவன் டி.எஸ்.பி.
ஸ்காட்தானா? ஸ்காட் எப்படி இந்தக் கப்பலில்? இது நிஜமா… நிழலா? மலேசியக் காடுகளில் 20 வருஷ விரதம் காத்து, சபதம் நிறைவேற்றக் கப்பலேறிப் புறப்பட்டதும்… கண் முன்னாலேயே இரையா! இப்படியும் நடக்குமா?!
ஸ்காட் நடந்தான். கடைசியாக தனுஷ்கோடி தீவில் ஸ்காட் நடந்த அதே நடை. சந்தேகமே இல்லை, இவன் ஸ்காட் தான்!
அண்ணன் ரணசிங்கத்தையும் குடும்பத்தையும் சின்னா பின்னமாக்கி சிதறடித்தவன். சின்ன அண்ணன் தங்கச்சாமியைச் சிதையில் ஏற்றியவன். கல்யாண மாப்பிள்ளை ஆப்பனூர் திருக்கண்ணனை, எருமைக்குளம் கருவக் காட்டுக்குள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாக்கி, மணவறையிலேயே தன் தாலி அறுத்தவன். நாலு வயது சிறுவன் துரைசிங்கத்தை ஊமை ஆக்கியவன். ரணசிங்கத்தின் கருஞ்சேனையை நிர்மூலமாக்கியவன். இவ்வளவுக்குப் பின்னும் அடங்காது, தன்னையும் பச்சிளம் பாலகன் துரைசிங்கத்தையும் தனுஷ்கோடி தீவில் கப்பலேற்றி, மலேசியக் காடுக்கு நாடு கடத்தியவன்.
வெள்ளைத் திமிர் ஏறி விளையாடிய அந்த ஸ்காட், இதோ… கப்பலில் கண் முன்னே கடற்காற்று வாங்குகிறான்! இவனைக் கண்டுதான் கொந்தளித்திருக்கிறான் துரைசிங்கம். கண்டதும் கொல்லாமல் எப்படிவிட்டான்?
கீழிறங்கும் ஏணிப் படிகளைப் பார்த்தாள். படிகளை விட்டிறங்கி, தளர நடந்து, அறை நோக்கி போனான் துரைசிங்கம். கூப்பிட வாய்த் திறந்தவளுக்குள் ஒரு பொறி தட்டியது.
‘சர்வதேசக் கடல் எல்லைக்குள் சென்று கொண்டிருக்கும் கப்பல், இந்தியக் கரையைத் தொட, இன்னும் மூன்று நாட்கள் ஆகும். ஸ்காட்டைக் கரை இறங்க விடக் கூடாது. தடயமே இல்லாமல் கடலுக்குள்ளேயே ‘காணா’ப் பிணமாக்க வேண்டும். துரைசிங்கத்தின் கண்ணுக்கு இப்போதே ஸ்காட்டைக் காட்டினால், இதம் பதம் தெரியாமல், எல்லோர் முன்னிலையிலும் கொன்று தீர்த்து மாட்டிக் கொள்வான். கூடாது. அவனை ஏவக் கூடாது.’
திரும்பினாள். ஸ்காட்டைக் காணோம். இரண்டு படி ஏறித் தேடினாள்.
உடன் வந்தவர்கள் எல்லாம் மரம், செடிகளுக்குள் பதுங்கி விட, ஒத்தையில் நின்றார் நல்லாண்டி. கையில் வேல் கம்போடு, கண்ணு மண்ணுத் தெரியாமல் ஓடி வரும் தவசியாண்டியைக் கண்டு, நெஞ்சுக்குள் கொஞ்சம் அச்சம் கொடுத்தது.
‘தான் ‘இன்னார்’ என்பதை மறந்திருப்பானா? ஏற்கெனவே இரண்டு முறை காட்டுக்குள் வந்து தவசியாண்டியைப் பார்த்திருக்கிறோமே. ஒருவேளை, தான் மட்டும் தனித்து வந்திருந்தால்… உபசரித்திருப்பானோ! அவனுக்குப் பிடிக்காத பெருங்குடி ஆட்களோடு வந்தது தப்புதான். சரி… அதுக்கு மேலே ஆனது ஆகட்டும்.’ தவசியாண்டியை எதிர் கொண்டு, நிமிர்ந்த வாக்கில் நின்றார் நல்லாண்டி.
நல்லாண்டியின் முகம் தெரிய நெருங்கிவிட்ட தவசியாண்டி, வேல் கம்பை வீசும் தூரத்தில் நின்றான். நல்லாண்டியைத் தவிர பிறர் எவரும் தவசியாண்டியின் கண்ணில் படாமல் பதுங்கிக் கிடந்தார்கள்.
“தவசியாண்டி! நான்தான்… நல்லாண்டி வந்திருக்கேன்.”
“நீங்க… சரி! உங்கக் கூட வந்து பதுங்கி இருக்கிறானுங்களே… அவனுங்கள்லாம் யாரு?” என்றவன், பதிலுக்குக் காத்திராமல், செடிப் புதர்களுக்குள் வேல் கம்பை நுழைத்து துழாவினான். ஓங்கி ஓங்கி குத்தினான். குத்துப்பட்ட புதருக்குள் முனியாண்டியும் ‘லோட்டா’வும் பதுங்கி இருந்தார்கள். வேல் கம்பு குத்து, ‘லோட்டா’வின் முகத்துக்கு நேராக வந்தது. ‘லோட்டா’ பதுங்கியவாறு முன்னும் பின்னும் கெலித்தான். அலற, வாய் திறந்தான். முனியாண்டி, ‘லோட்டா’வின் வாயை தன் இடது கையால் இறுக்கி பொத்தி, தலையைத் தரையோடு அமுக்கினார்.
வேல் கம்பு, கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம் பதுங்கி இருந்த மரத்துப் பக்கம் திரும்பி துழாவியது. பிள்ளையின் வேட்டி கிழிபட்டது. கத்தி கொஞ்சம் நீண்டிருந்தால் ‘பிட்டம்’ கிழிந்திருக்கும்.
‘இதுக்கு மேலே பதுங்க முடியாதுடா சாமி! தவசியாண்டி நம்மள கொன்றாலும் பரவாயில்லை’ என்கிற முடிவுக்கு வந்தவராய்… தலைக்கு மேல் கை கூப்பியவாறு, “தவசியாண்டி.. நான் அரண்மனை கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம் வந்திருக்கேன். என்னை ஒண்ணும் பண்ணிறாதேப்பா…” மரத்தூரை விட்டு, கண் கலங்கத் தள்ளாடி வெளியேறினார்.
‘அரண்மனை’ என்ற சொல், தவசியாண்டியின் செவிகளில் தீக்குழம்பாய் இறங்கியது. ரத்னாபிஷேகம் பிள்ளையைக் கண் இடுக்கிப் பார்த்தான். பதுங்கி கிடந்தவர்கள் ஒவ்வொருவராக தலை நீட்டி, கைக்கூப்பி வெளியேறினார்கள். எல்லா முகங்களிலும் தவசியாண்டியின் குத்துக் கண் பதிந்தது. ரெண்டு எட்டு நெருங்கினான்.
நல்லாண்டி, ஒரு எட்டு முன்னே வந்தார்.
“தவசியாண்டி… ஊரு மேல உனக்கு என்ன கோபமோ? யாருக்கும் தெரியாது. வந்திருக்கிற நாங்க யாரும் உன் பாவத்திலே விழுந்த ஆளுக இல்லே. இப்போ… நாங்க வந்த விவரம் என்னன்னா… ” நல்லாண்டி தொடர்ந்து பேசினார்.
கப்பலின் முகப்போரம் தன்னந்தனியே ஒரு கருப்பின இளம்பெண் நின்றாள். ஸ்காட், கையில் மதுக்குவளையுடன் அவளை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தான்.
அரியநாச்சி, கப்பலின் மேல்தளத்தில் முழுதாய் ஏறி நின்று ஸ்காட்டை அவதானித்தாள்.
கருப்பினப் பெண்ணின் பின்னால் போய் மிக நெருங்கி நின்ற ஸ்காட், கைப்பிடிமானம் இல்லாமல் தடுமாறினான். மூக்கு முட்ட குடித்திருந்தான். வேற்று ஆள் ஒருவன் தன் பின்னால் வந்து நிற்பதை அறியாத அந்தப் பெண், எதிர்க் காற்று முகத்தில் அடிக்க, கடல் பார்த்து நின்றாள்.
போதைக் கண்களால் பின்னழகை ரசித்தவன், அக்கம் பக்கம் அரை பாதி பார்த்துவிட்டு, பெண்ணின் பிட்டத்தில் ஒரு தட்டு தட்டினான். பதறி திரும்பியவள், ஒற்றை விரல் உயர்த்தி, “நறுக்கி விடுவேன்!” என எச்சரித்துவிட்டு, விறுவிறுவென நடந்தாள். உறைந்து நிற்கும் அரியநாச்சியின் பக்கமாக வந்தவள், “வெறி பிடித்த அந்த வெள்ளை நாயைத் தூக்கி கடலில் எறிய வேண்டும்” என்றவாறு கடந்து போனாள்.
அரியநாச்சி சுற்றுமுற்றும் பார்த்தாள். நெருக்கத்தில் ஆட்களைக் காணோம். கப்பல் முகப்போரம் தன்னந்தனியே ஸ்காட் நின்றான். நடந்தாள். நெருங்கி வருபவளைக் கண்டதும் பல்லிளித்தான். ஒட்டிக் கடந்தவள், உதட்டோரம் சிரிப்பை இழையவிட்டாள். நம்ப முடியாத சந்தோஷத்தில் ஸ்காட், மதுவை ஒரே மடக்கில் விழுங்கி, காலிக் குவளையைக் கடலில் விட்டெறிந்தான்.
கப்பலோரக் கைபிடியில் சாய்ந்து நின்றவளை நெருங்கினான்.
15
விஷ முத்தம்

‘ஒட்ட நறுக்கிவிடுவேன்’என ஒற்றை விரல் உயர்த்தி அந்தக் கருப்பினப் பெண் எச்சரித்துவிட்டுப் போன வேகத்தில், தன்னை நாடி இன்னொருத்தியா? ஒருவேளை… போதை மயக்கத்தில் உண்டாகும் பிரமையா?’
டி.எஸ்.பி. ஸ்காட், தன் கண்களை நம்ப முடியாமல் தவித்தான். இரு கைகளாலும் கண்களைக் கசக்கிவிட்டு உற்றுப் பார்த்தான். எதிரே நிற்பவள் பெண்தான்!
‘விரல் சொடுக்கி மிரட்டிய கருப்பழகி யைக் காட்டிலும் இவள் நளினமாகவும் இளமையாகவும் இருக்கிறாள். சிலம்புக் கம்பாய் செதுக்கிய திரேகம். அச்சு வார்ப்பாய் மூக்கு, முழி, உதடுகள். தொடை வரை தொங்கும் கருமுடி. அதிகமாய் போனால்… முப்பத்தைந்து வயதிருக்கலாம். கப்பல் மேல்தளத்து மங்கிய வெளிச்சத்தில் மேனி நிறம் புலப்படவில்லை. என்றாலும் பொது நிறம்தான். இந்த வகைப் பெண்களை இருபது வருஷங்களுக்கு முன்னால் எங்கோ… பார்த்த ஞாபகம். எங்கே?’
எத்தனையோ நாட்டுப் பெண்களைப் பார்த்து வந்த ஸ்காட்டுக்கு, புலப்படத் தாமதமானது. அரியநாச்சியை நோக்கி ஓரடி முன்னே போனான். ‘ஹ்… ஹாம்ம்… ஞாபகம் வந்துவிட்டது. இவள் ஆப்பநாட்டுக்காரிதான். ஆப்பநாட்டில் தான் இந்தத் திரேகக் கட்டைப் பார்க்க முடியும். அங்கிருந்து இவள் எப்படி இங்கே? ஹ்ஹா… பினாங்கு தீவுக்குப் பிழைக்க வந்தவளாய் இருக்கலாம்.’
தன்னையே நோக்கி வந்தவளாய், இளஞ்சிரிப்போடு நிற்கும் அரியநாச்சியை நெருக்கத்தில் கண்டதும் ஸ்காட்டுக்கு வாய் ஊறியது. கப்பலின் மேல்தளத்தை நோட்டமிட்டான். அங்கங்கு இருந்தாலும் கிட்டத்தில் எவரும் இல்லை. கடலை கிழித்துக் கொண்டு போகும் கப்பலின் எதிர்க் காற்று இரைச்சல் வேறு. இங்கு… யாரோடு எவர் கொஞ்சிக் குழாவினாலும், ஏன்… யாரை யார் கொலை செய்தாலும் யாருக்கும் தெரியாது. இரவும் பகலும் கத்திக் கொண்டிருக்கும் கடல்தான் பார்க்கும். காட்டிக் கொடுக்காது.
‘இதை எல்லாம் தெரிந்துதான் அவள் இங்கே ஒதுங்கி இருக்கிறாள். இந்தக் கடல் பயணத்தில் நமக்கு இப்படி ஓர் அதிர்ஷ்டமா!’ பல்லை இளித்துக் கொண்டு இன்னும் ஓரடி முன்னே போனான் ஸ்காட்.
கப்பல் முகப்போர கைப்பிடியில் சாய்ந்திருந்த அரியநாச்சியின் கருங் கூந்தல், கடற்காற்று வேகத்துக்கு பறந்து, ஸ்காட்டின் முகத்தை வருடியது.
‘நன்றி இறைவா!’ அரியநாச்சியைத் தொடும் தூரத்தில் நின்றான்.
‘லோட்டா’வைத் தவிர எல்லா முகங்களும் தவசியாண்டிக்குத் தெரிந்த முகங்கள்தான். பயம் அற்றுப் போன கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம், தயங்காமல் பேசினார்.
“தவசியாண்டி… நீ ஊரை விட்டு வந்ததோடு, நம்ம ஊரு இருளப்பசாமி கோயில் கொடை நின்னுப் போச்சு. அரண்மனையை ஏதோ ஆவி புடிச்சு ஆட்டுது. நீ இந்தக் காட்டுக்குள்ளே அடிக்கிற கோடாங்கிச் சத்தம்தான் ஆவியா நுழைஞ்சு அரண்மனையை ஆட்டுதுன்னு ஊருக்குள்ளே பேச்சு. நீ வெளியேறி வந்ததுலதான் அந்த மர்மம் அடங்கி இருக்குங்கிறது மட்டும் தெரியும். அதுக்கு மேலே எதுவும் தெரியாத பெருங்குடி சனம், சாபம் சுமக்குது!”
நல்லாண்டி தொடர்ந்தார். “பெருங்குடியிலே பொண்ணு எடுக் கவோ, பொண்ணு குடுக்கவோ வெளியூர்க்காரன் எவனும் வர மாட்டேங்கிறான். ஊருக்குள்ளேயே ஒண்ணுக்குள்ளே ஒண்ணு சம்பந்தம் பண்ணி பிறக்கிற, நெறைய குழந்தைகள் ஊனமாப் பொறக்குது.”
எங்கோ பார்த்தவாறு நின்ற தவசியாண்டி, திரும்பி ரத்னாபிஷேகம் பிள்ளையைப் பார்த்தான்.
“ஒரு தலைமுறைச் சனம் குலசாமி கோயில் திருவிழாவையே பார்க்கல. சாமியாடி இல்லாம நடக்கிற கொடை, தாலி இல்லாம நடக்கிற கல்யாணத்துக்குச் சமம். ஊர் பிழைக்கணும்னா இந்த வருஷம் கோயில் திருவிழாவை நடத்தணும். எங்கக் காலம் எப்படியோ ஓடிருச்சு. சின்னஞ்சிறுசுகள் சேதாரமில்லாம இருக்கணும். ஊரைப் பிடிச்ச இந்த சாபம் தீர்றது உன் கையிலதான் இருக்கு தவசியாண்டி. உனக்கு, யார் மேல என்ன கோபம் இருந்தாலும் குலதெய்வம் இருளப்பசாமிக்காக நீ வந்து திருவிழாவை நடத்திக் கொடுக்கணும்.”
தவசியாண்டி, ஏதோ யோசனையில் இருப்பதை கவனித்த கணக்குப்பிள்ளை, “தவசியாண்டி… நீ என்ன நிபந்தனை விதிச்சாலும் நாங்க சம்மதப்படுறோம்.” என்றார்.
“ரெண்டே ரெண்டு நிபந்தனைதான். இனிமே எக்காரணம் கொண்டும் நீங்க யாரும் இந்தக் காட்டுக்குள்ள வரக் கூடாது. ரெண்டாவது, நான் அரண்மனைக்குள்ள வர மாட்டேன்.” தீர்க்கமாய் சொன்னான் தவசியாண்டி.
நல்லாண்டி முந்தினார். “சம் மதம்ப்பா… சம்மதம்! இனிமே நாங்க யாரும் இந்தக் காட்டுப் பக்கம் தலை வெச்சுக் கூட படுக்க மாட்டோம். நீ கோயிலுக்கு வந்து கொடையை நடத்தி கொடுத்தாப் போதும். அரண்மனைக்குள்ள வரவே வேண்டாம்.”
இரும்பு ஏணிப்படிகளை விட்டு இறங்கி, அறை நோக்கி நடந்த துரைசிங்கம், பூட்டிக் கிடந்த வாசலில் நின்றான். அறைச் சாவி அரியநாச்சியிடம் இருந்தது. தன் பின்னால் அத்தை அரியநாச்சியும் நடந்து வருவதாக நினைத்திருந்தான். உணர்ச்சியற்று நின்று கொண்டிருந்தவன், திரும்பிப் பார்த்தான். அரியநாச்சியைக் காண வில்லை. இங்கிருந்தே ஏணிப்படி வரைப் பார்த்தான்.
காணோம். துணுக் குற்றவன் ஓடினான். ஏணிப்படிகளில் விறுவிறுவென ஏறினான். கப்பல் மேல்தளத்துக்கு வந்து சுற்றுமுற்றும் பார்த்தான். வெளிச்சம் படர்ந்த இடங்களில் யார் யாரோ நின்றார்கள். அரியநாச்சியைக் காணோம். பேதலித்தவனாக முன்னும் பின்னும் நடந்தான்.
தவசியாண்டி குடிசை நோக்கி நடந்தான். கணக்குப்பிள்ளை நல்லாண்டி வகையறாக்கள் பெருங்குடி நோக்கி காட்டுக்குள் நடந்தார்கள்.
கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகத் துக்கு ஏதோ உறைத்தது. ‘அரண் மனைக்குள்ளே நுழைய மாட்டேன்’ என்கிற இதே வார்த்தையைத்தானே, சென்னைப் பட்டணத்திலே வெள்ளை யம்மா கிழவியும் சொன்னாங்க. தவசியாண்டியும் சொல்றானே!’ நினைப்பை முழுங்கிக் கொண்டார்.
தவசியாண்டியின் நடையில் துள்ளாட்டம் தெரிந்தது. ‘இரை சிக்கிருச்சு! நம்ம கோடாங்கிக்கு மனுசத் தோல் மாட்டிற வேண்டியதுதான்!’
துரைசிங்கம் கொதித்துப் போய் நின்றான். ‘கப்பல் முகப்போரம், நம் கண் முன் நிற்பவள் அத்தை அரியநாச்சியா! ஸ்காட்டைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டுக் கொண்டு…’ கூசும் கண்களை மூடினான். தகப்பன் ரணசிங்கத்தை நினைத்து குமுறி குமுறி அழுதான். ‘அப்பா… உங்க தியாகம் எல்லாம் வீணாப் போச்சே அப்பா! நான் இருந்த இருபது வருஷ வனவாசம்… இதைப் பார்க்கத்தானா? உங்க தங்கச்சி இவ்வளவு கேடு கெட்டவளா? ச்சேய்…!’ கண்களைத் திறந்தான்.
தன்னை முத்தமிடும் மயக்கத்தில் மதி கிறங்கிய ஸ்காட்டை இரண்டு கைகளாலும் தலைக்கு மேல் தூக்கி, இடது கைவாக்கில் கடலுக்குள் விட்டெறிந்த அரியநாச்சி, காற்றில் ஆடிய கூந்தலை வளைத்து, கோடாலிக் கொண்டை இட்டாள்.
kumarv
kumarv
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 17/04/2017

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum