ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  Empty மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்

Post by Ramalingam K Sun Sep 18, 2016 11:37 pm

அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள்

(பரஞ்சோதி முனிவரின் சீடரும்  சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய
திருவெண்ணைநல்லூர் மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய   சிவஞான போதம்)

உலகில் சதாசர்வ காலமும் பிறப்பு -  இருப்பு -  இறப்பு என்னும் சுழலில் சிக்கி, இருப்பிற்காக ஆயுள் முழுவதும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியனவற்றையே  வழிகாட்டும் துணையாகக் கொண்டு அவற்றின் பொருட்டே உழைத்து வாழ்வின் துயரக் கடலினின்று மீளாமல்  அவதியுற்றுக் கொண்டும், எப்படியும் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டும் வாழும் அநேக மானுடர் தினமும்  பசிதீர உண்பதும் உறங்குவதுமாகவே நாளைப் போக்குகின்றனர்.

மனிதப் பிறவியின் நோக்கம் என்ன என்பதை அவர்கள் சிந்தித்து,  அந்நோக்கம் மீண்டும் பிறவா நிலை எனப்படும் ஆன்ம முக்தியே எனத் தெளிவடைந்து, இங்கு இருப்பன அனைத்தும் பரம்பொருளின் வெளிப்பாடுகளே என்பதைப் புரிந்துகொண்டு, பிறரிடம் அன்பும் கருணையும் பூண்டு எண்ணம், சொல், செயல் ஆகியன மூன்றாலும்  உண்மையோடும் பற்றற்றும்  வாழ்ந்து, இங்கேயே இப்போதே  சொர்க்க சுகத்தை அனுபவிப்பதே  சரியான மானுட வாழ்வு என்பதை மானுடத்திற்குப் புகட்டவே நமது ஞானிகளும்,தவசிகளும்  மானுட வாழ்வுக்கு வழிகாட்டியும் அவர்களே வாழ்ந்துகாட்டியும் உள்ளனர்.

அவ்வாறான ஒருவர்தான் நம் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில்  இருக்கும் பெண்ணாடம் என்னும் இடத்தில் பிறந்து  திருவெண்ணைநல்லூரில்  வாழ்ந்த மெய்கண்டார். இவர் இயற்றிய நூல்களுள் ஒன்றுதான் சிவஞான போதம் என்பதாகும். இந்நூல் சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்றாக்கப்பெற்று சைவ சமய நூலாகச் சித்தரிக்கப் பட்டுவிட்டமையால் அதன் மேன்மையும் சிறப்பும் மானுடம் யாவைக்கும் மறுக்கப்பட்டு விட்டன.  

சைவ பக்தி ததும்ப நமது திருவாவடுதுறை  ஆதீனத்தால்  வெளிபிடப்பட்டுள்ள இந்நூலை அடியனும் படித்தேன். உண்மையில் அடியனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்காக அடியனுக்கு இறைபக்தி இல்லை என்பதாகாது. என்னில் இருந்து, என்னில் உறைந்து, என்னை நானாய் ஆக்கும் பரம்பொருளை என்னால் எப்படி மறுக்க முடியும் !  

ஆனால், சிவஞான போதம்  - உலக மனுடம் யாவைக்கும் பொதுவான ஒரு நூல் - சாதி, மதம், இனம், மொழி,கலாச்சாரம் ஆகிய அத்தனையும் புறந்தள்ளி, மானுட த்திற்காவது -  ஒவ்வொருவருக்குள்ளும் நின்று உறையும் ஆன்மாவைத்  தெளிவிப்பது. ஆன்மாவைப்பற்றி அறிந்து கொள்ளுதல் ஆத்மவித்யா என்பதாகும். ஆகையால் நாமும் இன்நூலைச் சிந்திக்கலாம்.  

சிவம் என்றால் மங்களம், நன்மை, முக்தி (பற்றின்மை),அருவம், களங்கமற்றது,நிறைதல்,மகிழ்தல், களித்தல்,யோகம், சுபம், உயர்வு என அநேக பொருள்கள் கொண்ட பல்பொருள் கொண்ட  ஒரு மொழி.

ஞானம் என்றால் தெளிந்த அறிவு, கல்வி , தன்மை, தகுதி என்று பற்பல பொருள்கள் உள்ளன.

போதம் என்றால்  உபதேசிக்கப்படும் இலக்கணம் என்றும் பொருள்.

ஆக சிவஞான போதம் என்றால் மங்களத்தைத் தரக்கூடிய தன்மையதானதின் இலக்கணம் என்றுபொருள்.

ஒவ்வொரு உருவமுள்ள உடலுக்குள்ளும் அருவமாக இருந்துகொண்டு இயங்கும் ஜீவாத்மா என்பதே அந்த மங்களத்தைத் தரக்கூடிய தன்மையதானது என்பதும் அதன் இலக்கணமும் இந்நூலில் மெய்கண்டாரால் உபதேசிக்கப்படுகிறது என்பதையும்   நூலில் தெளியவாகக் காணலம்.  ஆகையால் இந்நூல் மானுடம் யாவைக்கும்  -   உலகம் முழுமைக்கும் பொதுவானது என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமும் வாய்ப்பும் இல்லை.

இந்த நூல் அறிமுகத்தோடு சிவஞானபோதத்தைச் சிந்திப்போமே!


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  Empty Re: மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்

Post by Ramalingam K Mon Sep 19, 2016 7:03 am

அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் (சேர்ந்தே கற்போம் சிவஞான போதம்)

மங்கல வாழ்த்து (குரு வாழ்த்து)

கல்லா னிழன்மலை
வில்லா ரருளிய
பொல்லா ரிணைமலர்
நல்லார் புனைவரே.

பதம் பிரித்த பாடல் :

கல் ஆல் நிழல் மலைவு
இல்லார் அருளிய
பொல்லார் இணை மலர்
நல்லார் புனைவர் ஏ

பதப் பொருள்:

கல் – பயின்று அறிதல்;
கல்ஆல் -  இச்சிலால், கல்லால், குறுவால், சிற்றால் என்னும் பற்பல ஆலமரங்களில் ஒருவகை ஆலமரம்.
நிழல் - சாயை;  குளிர்ச்சி;   ஒளி;   புகலிடம்.
மலைவு -  காலம் ;மயக்கம்.
பொல்லா – நன்மை; கற்றவர்.
இணைமலர் – திருவடி மலர்கள்
நல்லார் – நற்குணமுடையோர்
புனைதல் –தரித்தல்; சூடுதல்;போற்றுதல், வணங்குதல்.
ஏ- செய்யுள் அசை.

அடிதோறும் பொருள்:

கல் ஆல் நிழல்  - ஞானம் பயின்று பழகுதற்கு ஏதுவான கல்லால மரத்தையே புகலிடமாகக் கொண்டு ஆத்மஞானக் கல்வி புகட்டுவிக்கும் ;
மலைவு இல்லார் -  காலங்களைக் கடந்தவரும் மாயை என்னும் மயக்கத்தை அகற்றியவருமாகும் ஸ்ரீகுருதேவர்;
அருளிய -  கருணை மேலீட்டால் உலகமக்கள் யாவரும் ஆத்ம வித்தையைக் கற்கும் பொருட்டு நன்மை அளிக்கக் கூடியவகையில் உண்டாக்கித் தந்து  
பொல்லா இணை மலர் – நன்மை அளிக்கக் கூடிய   அவரது திருவடி மலர்களை
நல்லார் புனைவர் -  நற்குணமுடையவர்  வணங்குவார்கள்

தெளிவுரை:

ஞானம் பயின்று பழகுதற்கு ஏதுவான கல்லால மரத்தையே புகலிடமாகக் கொண்டு ஆத்மஞானக் கல்வி புகட்டுவிக்கும் , காலங்களைக் கடந்தவரும் மாயை என்னும் மயக்கத்தை அகற்றியவருமாகும் ஸ்ரீகுருதேவர், தம் கருணை மேலீட்டால் உலகமக்கள் யாவரும் ஆத்ம வித்தையைக் கற்கும் பொருட்டு  அதனை  உண்டாக்கித் தந்து  நன்மை அளிக்கக் கூடிய  அவரது திருவடி மலர்களை நற்குணமுடையவர் வணங்குவார்கள்.

அதாவது ஆத்ம ஞானத்தை விழைபவர்கள் ஸ்ரீகுருதேவரைச் சரணடைவார்கள் என்பது பொருள்.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  Empty Re: மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்

Post by Ramalingam K Tue Sep 20, 2016 1:41 pm

அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் (சேர்ந்தே கற்போம் சிவஞான போதம்)

பரஞ்சோதி முனிவரின் சீடரும்  சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய
மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய சிவஞான போதம்.

அவையடக்கம்

தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்  
ரெம்மை யுடைமை யெமையிகழார்- தம்மை      
யுணரா ருணரா ருடங்கியைந்து தம்மிற்              
புணராமை கேளாம் புறன்.                                  

பதம் பிரித்த பாடல் :

தம்மை உணர்ந்து தமை உடைய தன் உணர்வார்
எம்மை உடைமை எமை இகழார் – தம்மை
உணரார் உணரார் உடங்கு இயைந்து தம்மின்
புணராமை கேளாம் புறன்.

பதப் பொருள்:

உணர்தல் - அறிதல்; நினைத்தல், கருதுதல்; ஆராய்தல்; தெளிதல்; பகுத்தறிதல்; பாவித்தல்.
தமை - ஆசை; புலன்களையடக்குதல்.
உடங்கு - கூடி நிற்றல்; பக்கம்; ஒத்து; ஒருபடியாக; சேர; உடனே.
புணர்தல் – தர்க்கவிதிசெய்தல்; பொருந்துதல்;  ஏற்புடையதாதல்; விளங்குதல்;
கேள் - செவிக்குப் புலனாக்குதல்.
புறன் – புறம்; பழிச்சொல்; காணாத போது.

அடிதோறும் பொருளுரை:

தம்மை உணர்ந்து -  தான் இந்த உடம்பு என்பதல்ல –ஆயினும் இந்த உடம்பில் இருப்பதும் உடம்பை இயக்குவதும் ஆகும் ஆத்மன் (ஜீவாத்மன்)  என்னும் உண்மையை  ஆராய்ந்து அறிந்து கொண்டு;

தமை உடைய தன் உணர்வார் -  ஐம்புலங்களையும் நெறிப்படுத்தும் வகையில் தன் புத்தியைத் தன் கட்டுப்பட்டில் வைத்திருக்கும் திறன்படைத்தவர்கள்( அதாவது அறிவுத் தெளிவுள்ளவர்கள்)

எம்மை உடைமை எமை இகழார் – நான் எழுதப்போகும் எனது உடைமையாகிய சிவஞானபோதம் என்னும் இந்த ஆத்மவித்யா நூலை அதன் பொருள் விளக்கம் கண்டு இந்த நூலையும் அதனை இயற்றும் என்னையும்  குறைவாக மதிப்பிட்டுப் பேசமாட்டார்கள்.

உடங்கு இயைந்து உணரார்  தம்மை உணரார் -  இந்த நூலில் நான் கூறியுள்ள ஆத்மவித்யா பற்றிய ஞானத்துடன்  அதன் உண்மைத் தன்மையை உணர்ந்து தன்னை இந்நூலுடன் ஐக்கியப்படுத்திகொண்டு நூலை ஆராய்த்த பின்னும் தான் ஜீவாத்மனேதான் என்பதை உணராமல் போகும் அஞ்ஞானிகள் இந்நூலின் மேன்மையை அறியமாட்டார்கள் என்பது மட்டுமல்லாது அத்தகையவர்கள் தன்னை அறியாத ஜடங்களே ஆவார்கள்.

தம்மின் புணராமை கேளாம் புறன் – அத்தகையவர்கள் தன்னை அறியும் அறிவினின்று விலகி இந்நூலையும்  நூலில் சொல்லப்போகும் உண்மையைப் பற்றியும் வீண்தர்க்கம் செய்து கொண்டு பழிச்சொல் கூறுவர்களானல் நான் என் செவிகளுக்கு  அப்பழிச்சொற்கள் கேட்கும்படியாக  என்னை அனுமதிக்கமாட்டேன்.

தெளிவுரை:

தான் இந்த உடம்பு என்பதல்ல –ஆயினும் இந்த உடம்பில் இருப்பதும் உடம்பை இயக்குவதும் ஆகும் ஆத்மன் (ஜீவாத்மன்)  என்னும் உண்மையை  ஆராய்ந்து அறிந்து கொண்டு;

ஐம்புலங்களையும் நெறிப்படுத்தும் வகையில் தன் புத்தியைத் தன் கட்டுப்பட்டில் வைத்திருக்கும் திறன்படைத்தவர்கள்( அதாவது அறிவுத் தெளிவுள்ளவர்கள்);

நான் எழுதப்போகும் எனது உடைமையாகிய சிவஞானபோதம் என்னும் இந்த ஆத்மவித்யா நூலை அதன் பொருள் விளக்கம் கண்டு , இந்த நூலையும் அதனை இயற்றும் என்னையும்  குறைவாக மதிப்பிட்டுப் பேசமாட்டார்கள்.
இந்த நூலில் நான் கூறியுள்ள ஆத்மவித்யா பற்றிய ஞானத்துடன்  அதன் உண்மைத் தன்மையை உணர்ந்து தன்னை இந்நூலுடன் ஐக்கியப்படுத்திகொண்டு நூலை ஆராய்த்த பின்னும் தான் ஜீவாத்மனேதான் என்பதை உணராமல் போகும் அஞ்ஞானிகள் இந்நூலின் மேன்மையை அறியமாட்டார்கள் என்பது மட்டுமல்லாது அத்தகையவர்கள் தன்னை அறியாத ஜடங்களே ஆவார்கள்.

அத்தகையவர்கள் தன்னை அறியும் அறிவினின்று விலகி இந்நூலையும்  நூலில் சொல்லப்போகும் உண்மையைப் பற்றியும் வீண்தர்க்கம் செய்து கொண்டு பழிச்சொல் கூறுவர்களானல் நான் என் செவிகளுக்கு  அப்பழிசொற்கள் கேட்கும்படியாக  என்னை அனுமதிக்கமாட்டேன்.

கருத்துரை :

இந்த நூலில் சொல்லப்படுவனவற்றைத் தெளிந்த அறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அஞ்ஞானிகள் தர்க்கவாதம் செய்து இந்நூலையும் அதனைச் செய்த என்னையும் பழிப்பார்களேயானால் அப்பழிச் சொற்களை நான் காதில் போட்டுக்கொள்ளமாட்டேன். அஞ்ஞானிகளைப் பற்றி எனக்குக் கவலை இல்லை  என்று மெய்கண்டார் தன் உறுதிப்பாட்டை இந்த அவையடக்கப் பாடலில் தெளிவுபடக் கூறுகிறார்.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  Empty Re: மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்

Post by Ramalingam K Wed Sep 21, 2016 8:37 pm

அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் (சேர்ந்தே கற்போம் சிவஞான போதம்)

பரஞ்சோதி முனிவரின் சீடரும் சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய
மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய சிவஞான போதம்.

இந்நூல் குருவணக்கம், அவையடக்கம் என இரு பாடல்களுடன் பன்னிரண்டு சூத்திரங்கள்(நூற்பாக்கள்) கொண்ட படைப்பாகும் . முன்பு மங்களவாழ்த்து என்னும் குருவணக்கப் பாடலைப் பார்த்தோம் பின்பு அவையடக்கப் பாடலையும் பார்த்தோம். இனி நூல்:

முதல் சூத்திரம் (நூற்பா -1 )

அவனவ ளதுவெனு மவைமூ வினைமையிற்
றோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதா
மந்த மாதி யென்மனார் புலவர்.

பதம் பிரித்த பாடல் :

அவன் அவள் அது எனும் அவைமூ வினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்.

பதப் பொருள்:

அவன் - உலக உயிர்களில் ஆண்பால் - உயர்திணை
அவள் - உலக உயிர்களில் பெண்பால் – உயர்திணை
அது - உலக உயிர்களில் பொதுப்பால் – அஃறிணை
மூவினைமை – சஞ்சிதம், ப்ராரப்தம், ஆகாமியம் என்னும் மூன்று வகையாகும் வினைப்பதிவுகள்.
தோற்றுதல் - பொருள் விளக்கமாதல்.
திதி – இருப்பு; வளர்ச்சி; நாள்; கூறு.
ஒடுங்குதல் -அடங்குதல் ; குறைதல் ; சுருங்குதல் ; குவிதல் ; பதுங்கல் ; ஒதுங்குதல் ; ஒளி மங்குதல் .
மலம் - மும்மலம் ; ஆணவம், கன்மம், மாயை
அந்தம் – முடிவு ; அழகு, தன்மை.
ஆதி - தொடக்கம்; தொடக்கமுள்ளது ; காரணம் .
என்மனார் - என்ப, என்றுசொல்வர்.
புலவர் - ஞானிகள்

அடிதோறும் பொருளுரை:

அவன் அவள் அது எனும் - உலக உயிர்களில் ஆண்பால், பெண்பால் என்னும் உயர்திணையாகவும், பொதுப்பால் என்னும் அஃறிணையாகவும் விளங்கக்கூடிய;

அவைமூ வினைமையின் – அவைகள் தத்தம் பறபல பிறவிகளின் சேகரித்துக் கொண்டுள்ள சஞ்சித வினைப்பதிவு, இப்பிறவியில் அனுபவிக்கக் கொண்டுவந்துள்ள ப்ராரப்த வினைப்பதிவு , மற்றும் ப்ராரப்த வினைப்பதிவுகளை அனுபவிக்கும்போது புதியதாக உண்டாகும் ஆகாமிய வினைப்பதிவு ஆகிய மூன்று வினைப்பதிவுகளுக்குள் ஆட்பட்டு;

தோற்றிய திதியே – ஜீவாத்மா ஒரு உடல் தாங்கி தனக்கு என ஒரு உருவம் பூண்டு இப்பூமியில் பிறர் கண்களுக்கு விளக்கமாகிய நாள் முதற்கொண்டு;

ஒடுங்கி மலத்து உளதாம் – அவ்வாறான பல்வேறுபட்ட உருவங்களில் பதுங்கி - தான் எடுத்த உடலை ஆளும் தன் மனமும் பிறரும் அறிந்து கொள்ள இயலாத வகையில் இருந்துகொண்டு - தான் பரமாத்மா என்னும் தன் சுய ஒளியையும் மங்குதலுக்கு உட்படுத்திக் கொண்டு ஆணவம், கன்மம், மாயை
ஆகிய மூன்று குறைபாடுகளை உடையதாக அமைத்திருக்கும்;

ஆதி அந்தம் என்மனார் புலவர் – அனைத்துப் பிறவிகளுக்கும் காரணமாகும் தன்மை படைத்தது ஜீவாத்மனே என்று ஞானிகள் கூறுகிறார்கள்.

தெளிவுரை:

உலக உயிர்களில் ஆண்பால், பெண்பால் என்னும் உயர்திணையாகவும், பொதுப்பால் என்னும் அஃறிணையாகவும் விளங்கக்கூடிய;

அவைகள் தத்தம் பற்பல பிறவிகளில் சேகரித்துக் கொண்டுள்ள சஞ்சித வினைப்பதிவு, இப்பிறவியில் அனுபவிக்கக் கொண்டுவந்துள்ள ப்ராரப்த வினைப்பதிவு , மற்றும் ப்ராரப்த வினைப்பதிவுகளை அனுபவிக்கும்போது புதியதாக உண்டாகும் ஆகாமிய வினைப்பதிவு ஆகிய மூன்று வினைப்பதிவுகளுக்குள் ஆட்பட்டு;

ஜீவாத்மா ஒரு உடல் தாங்கி தனக்கு என ஒரு உருவம் பூண்டு இப்பூமியில் பிறர் கண்களுக்கு விளக்கமாகிய நாள் முதற்கொண்டு;

அவ்வாறான பல்வேறுபட்ட உருவங்களில் பதுங்கி - தான் எடுத்த உடலை ஆளும் தன் மனமும் பிறரும் அறிந்து கொள்ள இயலாத வகையில் இருந்துகொண்டு - தான் பரமாத்மா என்னும் தன் சுய ஒளியையும் மங்குதலுக்கு உட்படுத்திக் கொண்டு அமைத்திருக்கும்;

அனைத்துப் பிறவிகளுக்கும் காரணமாகும் தன்மை படைத்தது ஜீவாத்மனே என்று ஞானிகள் கூறுகிறார்கள்.

கருத்துரை :

பரம்பொருளின் அம்சமாகும் ஜீவாத்மா - ஆண்பால், பெண்பால் மற்றும் பொதுப்பால் என்னும் அனைத்து - உயர்திணை, அஃறிணை உயிர்களாக உருவம் தாங்கி, தன்னை உலகில் வெளிப்படுத்திக் கொண்ட நாள் தொடங்கி, தன்னுடடைய சஞ்சித கர்மா, ப்ராரப்த கர்மா, மற்றும் ஆகாமிய கர்மா என்னும் மூவகை வினைப்பதிவுகளை அனுபவித்துத் தொலைக்க வேண்டி, அவ்வாறாகும் பல்வேறுபட்ட உருவங்களில் பதுங்கி அருவமாக இருந்து, தான் பரமாத்மாவே என்னும் தன் சுய ஒளியை இழந்து ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று குறைபாடுகளை உடையதாக மீண்டும் மீண்டும் பிறவியை எடுத்துக் கொள்ளும் தன்மை கொண்டது என்று ஞானிகள் கூறுகிறார்கள் .


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  Empty Re: மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்

Post by Ramalingam K Fri Sep 23, 2016 9:57 pm

அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் (சேர்ந்தே கற்போம் சிவஞான போதம்)

பரஞ்சோதி முனிவரின் சீடரும் சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய
மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய சிவஞான போதம்.

இரண்டாம் சூத்திரம் (நூற்பா -2 )

அவையே தானே யாயிரு வினையிற்
போக்கு வரவு புரிய வாணையி
னீக்க மின்றி நிற்கு மன்றே. (02) .

பதம் பிரித்த நூற்பா:

அவையே தானேயாய் இரு வினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.

பதப்பொருள் :

அவையே - முதல் நூற்பாவில் ( முதல் சூத்திரம்) சொல்லப்பட்ட சஞ்சிதகர்மா, ப்ராரப்த கர்மா, ஆகாமிய கர்மா ஆகிய மூன்று வினைப்பதிவுகளும்,
தானேயாய் – தத்தமக்குள்ளேயே தனித்தனியாக;
இரு வினையின் – சுகம் என்னும் விளைவைக் கொடுக்க வல்ல புண்ணியங்கள் என்றும் - துக்கம் என்னும் விளைவைக் கொடுக்க வல்ல பாவங்கள் என்றும் இருகூறு பட்டு;
போக்கு வரவு புரிய – உடல் என்னும் உருவத்தை ஏற்றுக் கொண்ட ஜீவாத்மா என்னும் ஜீவிக்க வந்த ஆத்மா , இறத்தல் என்ற வகையில் பூமியையும் தான் எடுத்துக் கொண்டுவந்த உடலையும் விட்டு வெளியேறுவதும் பின்பு , பிறத்தல் என்ற வகையில் மீண்டும் பூமிக்கு வேறு ஒரு உடலைப் புதியதாய்த் தாங்கி வருவதுமாக செயலாற்றிக்கொண்டு;
ஆணையின் நீக்கம் இன்றி – விதி என்னும் முடிவு செய்யப்பட்ட பிரபஞ்சப்பேராற்றலில் பதிவாகிய கட்டளையின் படி, அக்கட்டளையை மீறாமலும் ;
நிற்கும் அன்றே – அக்கட்டளையில் இருந்து மாறுபாடு என்னும் தவறுதல் இல்லாமலும் செயல் படும் நிலைப்பாட்டினை உடையது

தெளிவுரை :

முதல் நூற்பாவில் ( முதல் சூத்திரம்) சொல்லப்பட்ட சஞ்சிதகர்மா, ப்ராரப்த கர்மா, ஆகாமிய கர்மா ஆகிய மூன்று வினைப்பதிவுகளும், தத்தமக்குள்ளேயே தனித்தனியாக , சுகம் என்னும் விளைவைக் கொடுக்க வல்ல புண்ணியங்கள் என்றும் - துக்கம் என்னும் விளைவைக் கொடுக்க வல்ல பாவங்கள் என்றும் இருகூறு பட்டு, உடல் என்னும் உருவத்தை ஏற்றுக் கொண்ட ஜீவாத்மா என்னும் ஜீவிக்க வந்த ஆத்மா இறத்தல் என்ற வகையில் பூமியையும் தான் எடுத்துக் கொண்டுவந்த உடலையும் விட்டு வெளியேறுவதும் பின்பு, பிறத்தல் என்ற வகையில் மீண்டும் பூமிக்கு வேறு ஒரு உடலைப் புதியதாய்த் தாங்கி வருவதுமாக செயலாற்றிக்கொண்டு, விதி என்னும் முடிவு செய்யப்பட்ட பிரபஞ்சப்பேராற்றலில் பதிவாகிய கட்டளையின் படி, அக்கட்டளையை மீறாமலும், அக்கட்டளையில் இருந்து மாறுபாடு என்னும் தவறுதல் இல்லாமலும் செயல் படும் நிலைப்பாட்டினை உடையது.

கருத்துரை:

முதல் நூற்பாவில் பரம்பொருளின் அம்சமாகும் ஜீவாத்மா தன் அருவமான நிலையில் இருந்து உருவம் தாங்கி, தன்னை உலகில் வெளிப்படுத்திக் கொண்ட நாள் தொடங்கி, தன்னுடடைய சஞ்சித கர்மா, ப்ராரப்த கர்மா, மற்றும் ஆகாமிய கர்மா என்னும் மூவகை வினைப்பதிவுகளை அனுபவித்துத் தொலைக்க வேண்டி, பல்வேறுபட்ட உருவங்களில் அருவமாக மறைந்து இருந்து, தான் பரமாத்மாவே என்னும் தன் சுய ஒளியை இழந்து ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று குறைபாடுகளை உடையதாக மீண்டும் மீண்டும் பிறவியை எடுத்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டது என்று ஞானிகள் கூறுகிறார்கள் என்று சொல்லிய மெய்கண்டார் ,
இந்த நூற்பாவில், “ முன் சொல்லப்பட்ட மூவகை வினைகளும் தத்தமக்குள்ளேயே புண்ணியம் – பாவம் என இரு கூறுபட்டு புண்ணியங்களால் சுகத்தையும் பவங்களால் துக்கத்தையும், தான் தாங்கி வந்த உடலால் ஜீவாத்மா அனுபவித்துக் கொண்டு இருக்கின்றது. அந்த மாதிரியான வகையில் பல்வேறு வகைப்பட்ட சுக துக்கங்களை அனுபவிப்பதற்கு ஏற்ற வகையில் தகுந்த வெவ்வேறு உடல்கள் தேவைப்படுவதால் அந்த ஆத்மா இறத்தல் என்ற முறையில் பூமியையும் தான் எடுத்துக் கொண்டுவந்த உடலையும் விட்டு வெளியேறுவதும் பின்பு, பிறத்தல் என்ற முறையில் மீண்டும் பூமிக்கு வேறு ஒரு உடலைப் புதியதாய்த் தாங்கி வருவதுமாக செயலாற்றிக் கொண்டே இருக்கின்றது.

ஆக இறத்தல் என்பது இந்த உடம்பு என்னும் ஜடப்பொருளுக்குத் தானே தவிற ஆத்மாவிற்கு அல்ல. அதுபோலவே பிறத்தல் என்பதும் புதியதாய் ஆத்மா வேறு ஒரு உடலை ஏற்பதுதானே தவிற ஆத்மா பிறப்பதில்லை.

மேலும் இது போன்ற பிறப்பும் இறப்பும் ஆன்மா தனக்குத் தானே அமைத்துக் கொள்வதும் இல்லை. ஆன்மாவின் பிறப்பு – இருப்பு - இறப்பு என்பனவும் அதன் ஒவ்வொரு உடல் தாங்கிய நிலையின் இருப்பின்போதும் அது அனுபவிக்கும் சுக துக்கங்களும் ஆன்மாவின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்படாது பிரபஞ்சப் பேராற்றல் வகுத்து வைக்கும் விதி என்னும் கட்டளைப்படியே நிகழ்கிறது.

ஆகவே விதி என்னும் முடிவு செய்யப்பட்ட பிரபஞ்சப்பேராற்றலில் பதிவாகிய கட்டளையின் படி, அக்கட்டளையை மீறாமலும், அக்கட்டளையில் இருந்து மாறுபாடு என்னும் தவறுதல் இல்லாமலும் செயல் படும் நிலைப்பாட்டினை ஆத்மா உடையது.

ஆகையால் மானுட வாழ்வின் பிறப்பு – இறப்பு , உயர்வு-தாழ்வு, புகழ்ச்சி- இகழ்ச்சி, சுக-துக்கம் ஆகிய எதனையும் யாராலும் மாற்ற இயலாது” என்கிறார் நம் மெய்கண்டார்.

இந்த விதியைத் திருவள்ளுவர் ஊழ் என்கிறார்.
“ஊழிற் பெருவளி யாவுள மற்றெவை
சூழினும் தான்முந் துறும் ”
என்கிறது குறள்.

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை . . . . . . (1) ;
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா . . . . (5) ;

ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் . . . . (8) ;

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் . . . (27)

என்னும் ஔவையின் நல்வழி மொழிகள் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  Empty Re: மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்

Post by Ramalingam K Sat Sep 24, 2016 10:43 am

அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் (சேர்ந்தே கற்போம் சிவஞான போதம்)

பரஞ்சோதி முனிவரின் சீடரும் சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய
மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய சிவஞான போதம்.

மூன்றாம் சூத்திரம் (நூற்பா -3)
உளதில தென்றலி னெனதுட லென்றலி
னைம்புல னொடுக்க மறிதலின் கண்படி
னுண்டிவினை யின்மையி னுணர்த்த வுணர்தலின் மாயா வியந்திர தநுவினு ளான்மா. (03)

பதம் பிரித்த நூற்பா

உளது இலது என்றலின் எனது உடல் என்றலின்
ஐம் புலன் ஒடுக்கம் அறிதலின் கண் படில்
உண்டி வினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திர தநுவினுள் ஆன்மா.

பதவுரை:

கண்படுதல் - உறக்கம்
ஒடுக்கம் – மறைவு படுதல்; அடக்கம்
உண்டி – நுகர்ச்சி
தனு – உடல் (தனுவொடுந் துறக்க மெய்த - கம்பரா. மிதி. 108)
இயந்திரம் - கொள்கலம்; பாத்திரம் ;ஆலை; தேர்.

அடிதோறும் பொருள்:

உளது என்றலின் - உடல் என்னும் உருவம் கொண்டிருப்பதால் ஆன்மா உள்ளது என்பதாலும்;

இலது என்றலின் – உடலுக்குள் அதன் இயக்கம் முகக்கண்களுக்குத் தெரியாதலால் ஆன்மா இல்லை என்பதாலும்;

எனது உடல் என்றலின் – என்னுடைய உடல் என்று சொல்லும்போது இந்த உடல் ஆன்மாவின் உடைமையாகிறது என்பதால் உடல் என்பது வேறு ஆன்மா என்பது வேறு என்பதாலும்;

கண்படின் – உறங்கும் நிலையில்

ஐம் புலன் ஒடுக்கம் அறிதலின் – மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து செயற்புலன்களும்( பஞ்ச கர்மேந்திரியங்கள்) தத்தம் செயல்களில் செயல்படாமல் அடங்கி இருந்ததை உறக்கத்திலிருந்து விழித்தபின் அறிய முடிவதாலும்;

உண்டி வினை இன்மையின் – உறங்கும் நிலையில் புலன் நுகர்வுகளாகிய ஊறு (ஸ்பர்சம்), சுவை(ரசம்), ஒளி( ரூபம்), நாற்றம்(கந்தம்), ஓசை(சப்தம்) ஆகிய அறிவுப் புலன்கள்(பஞ்ச ஞானேந்திரியங்கள்) செயலாற்றாமல் இருப்பதாலும்; ஆனாலும் அவையாவும் செயற்புலங்களின் செயல்பாடு இல்லமலேயே கனவில் அனுபவிக்கப் படுவதாலும்;

உணர்த்த உணர்தலின் – உறக்கத்திலிருந்து விழித்தபின் செயற்புலன்களின் வினையாற்றாதபோதும் ஞானேந்திரியங்கள் தாமாகவே செயல் படத் துவங்குவதோடு உறக்கநிலையில் அனுபவித்தவை யாவும் உண்மை நிகழ்வு அல்ல என்பது அறியப்படுவதாலும்;

மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா – மாயைஎன்னும் இந்த உடலாகிய பாத்திரத்தில் இருந்துகொண்டு ஆன்மா இயங்குகிறது.

மொத்தத்தில் உடல் தோறும் ஆத்மா இருந்தும் இயங்கியும் உருவமாகவும் அருவமாகவும் விளங்குகின்றது. விழிப்பு நிலையில் ஆன்மா , புலன் நுகர்வுகளாகிய ஊறு (ஸ்பர்சம்), சுவை(ரசம்), ஒளி( ரூபம்), நாற்றம்(கந்தம்), ஓசை(சப்தம்) ஆகியனவற்றால் கர்மேந்திரியங்கள் என்னும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றின் துணையோடு இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றது. உறங்கும் நிலையில் கர்மேந்திரியங்கள் செயற்படாதபோதும் அதே வகையில் கனவில் புலன் நுகர்வுகளாகிய ஊறு (ஸ்பர்சம்), சுவை(ரசம்), ஒளி( ரூபம்), நாற்றம்(கந்தம்), ஓசை(சப்தம்) ஆகியன வற்றை ஆன்மா நுகர்ந்து சுகதுக்கங்களை அனுபவித்து முடித்து விடுகிறது. இவ்வாறாக மாயைஎன்னும் இந்த உடலாகிய பாத்திரத்தில் இருந்துகொண்டு ஆன்மா இயங்குகிறது எனப்படுகிறது.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  Empty Re: மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்

Post by Ramalingam K Sat Oct 01, 2016 4:57 pm

அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் (சேர்ந்தே கற்போம் சிவஞான போதம்)

பரஞ்சோதி முனிவரின் சீடரும் சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய
மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய சிவஞான போதம்.

நாங்காம் சூத்திரம் (நூற்பா -4)

அந்தக் கரண மவற்றினொன் றன்றவை
சந்தித்த மான்மாச் சகசமலத் துணரா
தமைச்சர சேய்ப்பநின் றஞ்சவத் தைத்தே.

பதம் பிரித்த பாடல்:

அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று அவை
சந்தித்தது ஆன்மாச் சகச மலத்து உணராது
அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்து ஏ.

பதப்பொருள் :

அந்தக் கரணம் - உடம்பினுக்குள் வினைப்படும் மனம், புத்தி, சித்தம், மற்றும் நான் – எனது என்னும் ஆணவம்;

அவற்றினுள் ஒன்று ஆன்மா – அந்த நான்கினுள் ஒன்றாக விளங்கும் புத்தி என்னும் ஆன்மா;

சகச மலத்து உணராது - தான் பிறவிதோறும் சம்பாதித்துக் கொண்டுள்ள சஞ்சிதம், ப்ராரப்தம், ஆகாமியம் என்னும் வினைப்பதிவுகள் தன் கூடவே பிறவிதோறும் உடனிருந்து அவற்றின் பயனாய்ப் புண்ணியத்தால் சுகத்தையும், பாவத்தால் துக்கத்தையும் கொடுப்பன என்பதை உணராமல்;

அரசு அமைச்சு ஏய்ப்ப – அரசனாவன் தான் இருந்த இடத்திலேயே தன்னுடைய அமைச்சர்களைக் கொண்டு நாட்டை அரசாட்சி செய்வது போல – மெய்,வாய், கண், மூக்கு, செவி ஆகிய கர்மேந்திரியங்களை ஏவி ஆத்மாவானது

நின்றே அஞ்சு அவத்தைத்து ( நின்று ஏ ) - விழிப்புநிலை (ஜாக்ரம்), கனவுநிலை( ஸ்வப்னம்),விழிப்பும் கனவும் அற்ற நிலை ( சுசூப்தி) , தியானம் (துரியம்), சமாதி(துரியாதீதம்) என்னும் ஐந்து நிலைகளில் நிலையாக இருந்துகொண்டு

அவை அன்று சந்தித்தது - சுகதுக்கங்களை அந்தந்த நிலைகளில் மனம் மற்றும் சித்தத்தால் சந்திக்கின்றது.

தெளிவுரை :

உடம்பினுக்குள் வினைப்படும் மனம், புத்தி, சித்தம், மற்றும் நான் – எனது என்னும் ஆணவம்;
ஆகிய அந்த நான்கினுள் ஒன்றாக விளங்கும் புத்தி என்னும் ஆன்மா;

தான் பிறவிதோறும் சம்பாதித்துக் கொண்டுள்ள சஞ்சிதம், ப்ராரப்தம், ஆகாமியம் என்னும் வினைப்பதிவுகள் தன் கூடவே பிறவிதோறும் உடனிருந்து அவற்றின் பயனாய்ப் புண்ணியத்தால் சுகத்தையும், பாவத்தால் துக்கத்தையும் கொடுப்பன என்பதை உணராமல்;

அரசனாவன் தான் இருந்த இடத்திலேயே தன்னுடைய அமைச்சர்களைக் கொண்டு நாட்டை அரசாட்சி செய்வது போல – மெய்,வாய், கண், மூக்கு, செவி ஆகிய கர்மேந்திரியங்களை ஏவி ஆத்மாவானது
விழிப்புநிலை (ஜாக்ரம்), கனவுநிலை( ஸ்வப்னம்),விழிப்பும் கனவும் அற்ற நிலை ( சுசூப்தி) , தியானம் (துரியம்), சமாதி(துரியாதீதம்) என்னும் ஐந்து நிலைகளில் நிலையாக இருந்துகொண்டு

சுகதுக்கங்களை அந்தந்த நிலைகளில் மனம் மற்றும் சித்தத்தால் சந்திக்கின்றது.

அதாவது ஆத்மாவே பெருமூளையின் இயக்கமாகிய புத்தி என்னும் வடிவில் உடம்பில் இருந்து கொண்டு பஞ்ச கர்மேந்திரியங்களை ஏவி தான் பிறவிதோறும் ஏற்றுக் கொண்ட புண்ணிய பாவ வினப்பதிவுகளால் உண்டாகும் சுக துக்கங்களை உடலின் ஐந்து நிலைகளில் மனம் மற்றும் சித்தத்துடன் இணைந்து அனுபவிக்கின்றது என்பது பொருள்.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  Empty Re: மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்

Post by Ramalingam K Wed Oct 05, 2016 7:43 pm

அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள்

பரஞ்சோதி முனிவரின் சீடரும் சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய
மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய சிவஞான போதம்.

ஐந்தாம் சூத்திரம் (நூற்பா -5)

விளம்பிய வுள்ளத்து மெய்வாய் கண்மூக்
களந்தறிந் தறியா வாங்கவை போலத்
தாந்த முணர்வின் றமியருள்
காந்தங் கண்ட பசாசத் தவையே. (05)

பதம் பிரித்த பாடல்:

விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு
அளந்து அறிந்து அறியா ஆங்கு அவை போலத்
தாம் தம் உணர்வின் தமியர் உள்
காந்தம் கண்ட பசாசத்து அவை ஏ.

பதப் பொருள்:

தமியர்- ஒப்பிலாதவர்; தனிமையில் இருப்பவர்
காந்தம் - ஆற்றல்
காண் – உணர், கண்டறி, வெளிப்படு, தோன்று, ஒத்திரு.
பசாசம் – இரும்பு.

பதவுரை:

விளம்பிய உள்ளத்து - முற்பாவில்(நான்காம் சூத்திரத்தில்) இருப்பதாகச் சொல்லப்பட்ட ( புத்தி என்னும் ஆத்மா நீங்கலாக) மனம், சித்தம், மற்றும் நான் – எனது என்னும் ஆணவம் ஆகியவையும்
மெய் வாய் கண் மூக்கு – உடம்பு, வாய், கண், மூக்கு மற்றும் காது போன்ற கர்மேந்திரியங்களும்,
அவை அளந்து அறிந்து அறியா – ஆகிய அனைத்தும் தத்தம் செயல்பாடுகளை இன்னது என்று பிரித்து உணர மாட்டாதவை.
தமியர் தாம் தம் உணர்வின் உள்- அவ்வாறு அவைகள் ஒவ்வொன்றின் செயல்பாடுகளை இன்னது என்று பிரித்து உணர்ந்து தனித்தே சுவைக்கவல்லது புத்தி என்னும் ஆத்மாவே.
ஆங்கு அவை காந்தம் கண்ட பசாசத்து போலே (போல ஏ) – அவ்வாறான ஆன்மாவின் இன்ப துன்ப நுகர்வுகளுக்கு முன்சொன்ன கர்மேந்திரியங்களும், மனம், சித்தம் மற்றும் ஆணவம் ஆகிய அனைத்தும் காந்த ஆற்றலால் இழுக்கப்படும் இரும்பைப்போல தம் வயமின்றி ஆன்மாவோடு ஒன்றி செயல்படுத்தப்படுகின்றன.

தெளிவுரை :

முற்பாவில் (நான்காம் சூத்திரத்தில்) இருப்பதாகச் சொல்லப்பட்ட ( புத்தி என்னும் ஆத்மா நீங்கலாக) மனம், சித்தம், மற்றும் நான் – எனது என்னும் ஆணவம் ஆகியவையும் , உடம்பு, வாய், கண், மூக்கு மற்றும் காது போன்ற கர்மேந்திரியங்களும் ஆகிய அனைத்தும் தத்தம் செயல்பாடுகளின் பயன்களை இன்னது என்று பிரித்து உணர மாட்டாதவை.
அவ்வாறு அவைகள் ஒவ்வொன்றின் செயல்பாடுகளை இன்னது என்று பிரித்து உணர்ந்து தனித்தே சுவைக்கவல்லது புத்தி என்னும் ஆத்மாவே. அந்தவகையில் அவ்வாறான ஆன்மாவின் இன்ப துன்ப நுகர்வுகளுக்கு முன்சொன்ன கர்மேந்திரியங்களும், மனம், சித்தம் மற்றும் ஆணவம் ஆகிய அனைத்தும் காந்த ஆற்றலால் இழுக்கப்படும் இரும்பைப்போல தம் வயமின்றி ஆன்மாவோடு ஒன்றி செயல்படுத்தப்படுகின்றன.

கருத்துரை:

இப்பாவில் நூலாசிரியர் , உடலின் இயக்கங்கள் அனைத்தும் ஆத்மாவாலேயே நிகழ்விக்கப்படுகின்றன, அவ்வியக்கத்தால் விளையும் சுகதுக்கங்களை அனுபவிப்பதும் ஆத்மாவே. அது ஒவ்வொரு உடலுக்குள் இருந்தும் இயங்கியும் இயக்க விளைவுகளை சுக துக்கப் பயன்களாகஅனுபவிப்பதுமாகவும் விளங்குகின்றது. மற்றபடி மனம், சித்தம், மற்றும் நான் – எனது என்னும் ஆணவம் ஆகியவையும் , உடம்பு, வாய், கண், மூக்கு மற்றும் காது போன்ற கர்மேந்திரியங்களும் ஆகிய அனைத்தும் ஆத்மாவோடு தன் வயம் இன்றி செயல்படுகின்றன. அவைகளுக்கென்று தனித்தன்மை எதுவும் இல்லை. அவை கருவிகளாக மட்டுமே விளங்குகின்றன. கர்த்தாவும், போக்தாவும்(சுகிப்போனும்) ஆத்மாவே. ஆத்மா காந்தமாகவும் மற்றவையாவும் இரும்பாகவும் உவமை காட்டப்படுகின்றது. காந்தத்தின் அருகில் இருக்கும் இரும்பிற்கு தன் சுயத்தன்மை அற்றதாகி காந்தமாகவே மாறுவதுபோல் அவைகள் செயலைச் செய்வதும் அனுபவிப்பதும்போல் தோன்றுகின்றனவே தவிற எல்லாமும் ஆத்மாவினாலேயே செய்விக்கப்படுகின்றன –அனுபவிக்கப்படுகின்றன என்பது கருத்து.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  Empty Re: மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்

Post by Ramalingam K Fri Oct 14, 2016 5:43 pm

அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள்

பரஞ்சோதி முனிவரின் சீடரும் சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய
மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய சிவஞான போதம்.

ஆறாம் சூத்திரம் (நூற்பா -6)

உணருரு வசத்தெனி னுணரா தின்மையி
னிருதிற னல்லது சிவசத் தாமென
விரண்டு வகையி னிசைக்குமன் னுலகே. (06)

பதம் பிரித்த பாடல்:

உணர் உரு அசத்து எனின் உணராது இன்மையின்
இரு திறன் அல்லது சிவ சத்து ஆம் என
இரண்டு வகையின் இசைக்கும் மன் உலகே.

பதப் பொருள்:

உணர்வு – ஐம்புலன்களால் அறியப்படுதல்.
உருதல் - உருவமுடையதாதல்.
அசத்து –மாற்றத்திற்கு உள்ளாகும் மாயை.
உணராது - ஐம்புலன்களால் அறியப்பட முடியாதது.
இன்மையின் – இல்லாதது ஆகிவிடுதல்.
இரு திறன் அல்லது – இவ்விரண்டு வகையிலும் அல்லாமல்.
சிவம் – அசத்து ; மாற்றத்திற்கு உள்ளாவது.
சத் – என்றும் மாற்றத்திற்கு உள்ளாகாத வகையில் நிலைத்து இருப்பது.
இசைத்தல் – புகழ்பாடுதல் ; பெருமை பாராட்டுதல்.
மன்னுதல் – முக்காலத்திலும் நிலையாக இருத்தல்.
உலகு – உலகில் வாழும் ஞானிகள்.

பதவுரை:

உணர் உரு எனின் அசத்து:- ஆன்மா என்று அழைக்கப்படுவது, மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து செயற்புலன்களாலும் அதன் பயனாகும் ஊறு, சுவை, ஒளி, நாற்றம். ஓசை ஆகிய ஐந்து அறிவுப்புலன்களாலும் அறியப்படும் உருவமுடையது என்றால் அது மாற்றத்திற்கு உள்ளாகும் அசத்து என்னும் மாயை என்றாகி விடும். ஏனென்றால் உருவம் உடையவை எல்லாம் தோன்றுதல் – இருத்தல் – மறைதல் என்னும் மாற்றங்களுக்கு உள்ளாகு பவை.
உணராது எனின் இன்மையின் – அவ்வாறு செயற்புலன்களாலும் அறிவுப்புலன்களாலும் அறியப்படாதது என்றால் ஆன்மா என்பதே இல்லை என்றாகிவிடும்.
இரு திறன் அல்லது சிவ சத்து ஆம் என - இவ்விரண்டு வகையிலும் அல்லாமல் மாற்றத்திற்கு உள்ளாகும் அசத்து என்றும் மாற்றத்திற்கு உள்ளாகாத வகையில் முக்காலத்திலும் நிலைத்து இருக்கும் சத் என்றும் ஆகி ஒரே சமயத்தில்.
இரண்டு வகையின் இசைக்கும் மன் உலகே - சத் என்றும் அசத் என்றும் இரண்டு தன்மைகளை உடையதாய் உலகப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் நிலைத்து இருப்பது என்று உலகில் வாழும் ஞானிகள் ஆத்மாவைப் பெருமைப்படுத்திப் புகழ்வார்கள்.

தெளிவுரை :
ஆன்மா - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து செயற்புலன்களாலும் அதன் பயனாகும் ஊறு, சுவை, ஒளி, நாற்றம். ஓசை ஆகிய ஐந்து அறிவுப்புலன்களாலும் - அறியப்படும் உருவமுடையது என்றால் அது மாற்றத்திற்கு உள்ளாகும் அசத்து என்னும் மாயை என்றாகி விடும். ஏனென்றால் உருவம் உடையவை எல்லாம் தோன்றுதல் – இருத்தல் – மறைதல் என்னும் மாற்றங்களுக்கு உள்ளாகுபவை.
அவ்வாறு செயற்புலன்களாலும் அறிவுப்புலன்களாலும் அறியப்படாதது என்றால் ஆன்மா என்பதே இல்லை என்றாகிவிடும்.
ஆனாலும் இவ்விரண்டு வகையிலும் அல்லாமல் மாற்றத்திற்கு உள்ளாகும் அசத்து என்றும், மாற்றத்திற்கு உள்ளாகாத வகையில் முக்காலத்திலும் நிலைத்து இருக்கும் சத் என்றும், ஆகி ஒரே சமயத்தில்
சத் என்றும் அசத் என்றும் இரண்டு தன்மைகளை உடையதாய் உலகப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் நிலைத்து இருப்பது என்று உலகில் வாழும் ஞானிகள் ஆத்மாவைப் பெருமைப்படுத்திப் புகழ்வார்கள்.

கருத்துரை :

ஆன்மா என்பது புலன்களால் காணப்படும் உருவம் உடையது மட்டும் அல்ல. அதுபோலவே புலன்களால் அறியப்படாததாய் இல்லாமல் இருப்பதும் இல்லை. அது உலகப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் உருவமும் அருவமும் ஆகும் இரண்டு தன்மைகளை ஒரே சமயத்தில் ஒவ்வொன்றிலுமாக கடந்த காலம்- நிகழ்காலம் – எதிர்காலம் என முக்காலத்திலும் இருக்கும் நிலைத்தன்மையை உடையது என்பதை ஞானிகள் அறிகிறார்கள் என்பது கருத்து. இதிலிருந்து உலகப் பொருட்கள் அழிவதால் அதில் இருந்து இயங்கும் ஆன்மா ( அது நிலையானது என்னும் அதன் தன்மையால்) அழிவதில்லை. அப்பொருள் அழிந்த பின்பும் அதிலிருந்த ஆத்மா வேறு ஒரு பொருளின் உருவம் தாங்கி உலகில் வாழ்கிறது என்பது விளங்கும். ஆகையால் ஆன்மா, பரம்பொருள் என்னும் என்றும் அழியாத ப்ரம்மம் என்பதின் அம்சம் என்பதும் புரியும்.
பிரபஞ்சப் பேராற்றலாகும் ப்ரம்மத்தை ஹிரண்யகர்பன் என்றும் அதன் அம்சமாக உலகில் வாழும் இயற்கையாக விளங்கும் ( அசைவன-அசையாதன வாகவும் உள்ள ) உலகப் பொருட்கள் அனைத்தையும் விராட்புருஷன் என்றும் சம்ஸ்க்ருதத்தில் கூறுவர். இவ்வாறு தான் பிரபஞ்சப்பேராற்றலாகும் ப்ரம்மத்தையும், உலக இருப்புகளாகும் ஜீவாத்மாவையும் வேதங்களும் உபநிஷதங்களும் போற்றித் துதிக்கின்றன.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  Empty Re: மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்

Post by Ramalingam K Wed Oct 19, 2016 8:12 pm

அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள்

பரஞ்சோதி முனிவரின் சீடரும் சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய
மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய சிவஞான போதம்.

ஏழாம் சூத்திரம் (நூற்பா -7)

யாவையுஞ் சூனியஞ் சத்தெதிராகலிற்
சத்தே யறியா தசத்தில தறியா
திருதிற னறிவுள திரண்டலா வான்மா. (07)

பதம் பிரித்த பாடல்:

யாவையும் சூனியம் சத்து எதிர் ஆகலில்
சத்தே அயறியாது அசத்து இலது அறியாது
இருதிறம் அறிவுளது இரண்டு அலாது ஆன்மா.

பதவுரை:

யாவையும் – அசைவன அசையாதன ஆகிய உலகப்பொருட்கள் எல்லாமும்.

சூனியம் – இல்லாததாகிவிடும்.

சத் எதிர் ஆதலில் – அப்பொருள்களில் அருவமாக இருக்கும் ஆன்மா அவற்றிலிருந்து விலகி தான் தனித்து அப்பொருட்களின் எதிரில் நிற்குமானால்.

சத்தே அறியாது – உருவமும் புலன்களும் இருந்தால்தான் ஒன்று, பிறிதொன்றை அறிந்து கொள்ள முடியும்.

சத் என்பது பிரபஞ்சப் பேராற்றல் – உருவமில்லாதது . ஆகையால் அதற்குத் தன்னைத்தானே, தான் யார் என்பதை அறிந்து கொள்ள இயலாது.

அசத்து இலது அறியாது – அசத்து என்பது மாயை. அது ஆற்றல்லில்லாத உருவ அமைப்பு. அதனிடம் ஆற்றல் இல்லாததால் அதனால் அசத்தும் தன்னைத்தானேயும் அறிந்து கொள்ள இயலாது. ஏனெனில் அது இல்லாமை என்னும் தன்மையது. இல்லாத ஒன்று, தானே இல்லாதபோது அதனால் ஆன்மாவையோ பிற ஜடப் பொருள்களையோ அறிந்துகொள்ள முடியாது.

இரண்டு அலாது - ஆன்மா தனித்து அருவமாக இருந்தாலோ அல்லது அசத்து தனித்து இருந்தாலோ அவற்றால் தம்மையும் அறிந்துகொள்ள இயலாது- பிறவற்றையும் அறிந்துகொள்ள இயலாது.

இருதிறம் ஆன்மா அறிவுளது - ஆனால் அசத்து என்னும் உருவமும் சத்து என்னும் அருவமும் ஆகியே இரண்டும் ஒன்றினிடத்தில் இருந்தால் மட்டுமே ஆன்மாவால் எதையும் அறிய முடியும்.

தெளிவுரை :

அசைவன அசையாதன ஆகிய உலகப்பொருட்கள் எல்லாமும்.
அப்பொருள்களில் அருவமாக இருக்கும் ஆன்மா அவற்றிலிருந்து விலகி, ஆன்மா தனித்து தான் வேறு அப்பொருட்களின் உருவம் வேறு என்று அவற்றின் எதிரில் இருக்குமானால்,
எல்லாமே இல்லாததாகிவிடும் (ஏனெனில் உருவமும் புலன்களும் இருந்தால்தான் ஒன்று பிறிதொன்றை அறிந்து கொள்ள முடியும்).
சத் என்பது பிரபஞ்சப் பேராற்றல். ஆற்றல்(energy) உருவமில்லாதது . ஆகையால் அதற்குத் தன்னைத்தானே, தான் யார் என்பதை அறிந்து கொள்ள இயலாது.
அசத்து என்பது மாயை. அது ஆற்றலில்லாத உருவ அமைப்பு. அதனிடம் ஆற்றல் இல்லாததால் அசத்தும் தன்னைத்தானேயும் அறிந்து கொள்ள இயலாது. ஏனெனில் அது இல்லாமை என்னும் தன்மையது. இல்லாத ஒன்று தானே இல்லாதபோது அதனால் ஆன்மாவையோ பிறஜடப் பொருள்களையோ அறிந்துகொள்ள முடியாது.
ஆன்மா தனித்து அருவமாக இருந்தாலோ அல்லது அசத்து தனித்து உருவமாக இருந்தாலோ அவற்றால் தம்மையும் அறிந்துகொள்ள இயலாது- பிறவற்றையும் அறிந்துகொள்ள இயலாது.
ஆனால் அசத்து என்னும் உருவமும் சத்து என்னும் அருவமும் ஆகியே இரண்டும் ஒன்றினிடத்தில் இருந்தால் மட்டுமே ஆன்மாவால் எதையும் அறிய முடியும்.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  Empty Re: மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum