புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_c10டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_m10டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_c10 
10 Posts - 56%
heezulia
டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_c10டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_m10டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_c10டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_m10டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_c10டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_m10டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_c10டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_m10டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_c10 
10 Posts - 56%
heezulia
டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_c10டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_m10டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_c10டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_m10டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_c10டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_m10டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு  பதிவு  Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி.எம். எஸ்.100 -டி.எம்.சௌந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு பதிவு


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Mar 24, 2016 8:24 am

தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் நான்கு தலைமுறைகளாகக் கட்டிப் போட்டு வைத்திருந்த எழிலிசை வேந்தன்; தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்; ராகத்தோடு உணர்ச்சியையும் குழைத்துப் பாடல் வரிகளுக்கு உயிரூட்டிய இசை பிரம்மா!



1. டி.எம்.எஸ். என்பதில் உள்ள 'எஸ்' சௌந்தரராஜனையும், 'எம்' என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்காரையும் குறிக்கும். 'டி' என்பது அவரின் குடும்பப் பெயர் 'தொகுளுவா' என்பதைக் குறிக்கும். கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு உடம்பில் பலம் உண்டாக்கக்கூடிய சத்து மாவு தயாரித்துத் தருவதில் அந்தக் குடும்பம் பேர் பெற்றது.



2. பிறந்தது மதுரையில். ஒரு அக்கா, ஒரு அண்ணன் உண்டு. டி.எம்.எஸ். மூன்றாவது குழந்தை. இவருக்கு அடுத்துப் பிறந்த ஒரு தம்பி கிருஷ்ணமூர்த்தி ஐயங்கார் மட்டும் இப்போது மதுரை, ஆனைமலையில் மிருதங்க வித்வானாக இருக்கிறார்.



3. எஸ்.எஸ்.எல்.சி படித்துள்ளார். ஆறாம் வகுப்பு வரை மதுரை செயின்ட் மேரிஸ் ஸ்கூலிலும், மேல்நிலைப் படிப்பை சௌராஷ்டிரா பள்ளியிலும் முடித்தார்.



4. டி.எம்.எஸ்-ஸுக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு (எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி), முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார் டி.எம்.எஸ்.



5. 1946-ல் வெளியான 'கிருஷ்ண விஜயம்' படத்தில் நரசிம்ம பாரதிக்குப் பாடிய 'ராதே என்னை விட்டு ஓடாதேடி' பாடல்தான் டி.எம்.எஸ் முதன்முதலாக பின்னணி பாடிய பாடல்.



6. டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோ. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, 'இமயத்துடன்' என்னும் தன்னைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுத் தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக் கிடந்த அந்த இடங்களில், அதே பழைய ஒலிப்பதிவு அறையைக் கண்டுபிடித்து, அங்கே நின்று மீண்டும் அதே பாடலைப் பாடி மகிழ்ந்து, பழைய நினைவுகளில் ஊறித் திளைத்த பாக்கியம் அநேகமாக வேறு எந்தப் பாடகருக்குமே கிடைத்திராத ஒன்று!



7. டி.எம்.எஸ். வறுமையில் வாடிய ஆரம்பக் காலத்தில், கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்த எம்.கே.டி. பாகவதருக்கு உதவியாளராகச் சேரும் வாய்ப்பு ஒன்று வந்தது. அவரைப் போல் தானே ஒரு நாள் பேரும் புகழும் அடைய முடியும் என்ற நம்பிக்கையில், உறுதியோடு அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் டி.எம்.எஸ்.



8. மதுரை வரதராஜ பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார். நல்ல குரலெடுத்து பஜனைப் பாடல்கள் பாடுவதிலும் அவர் வல்லவர். அந்தத் திறமை இயல்பிலேயே டி.எம்.எஸ்ஸிடமும் இருந்தது.



9. டி.எம்.எஸ்ஸும் மதுரை வரதராஜ பெருமாளுக்குச் சேவை செய்துள்ளார். மேல் வருமானத்துக்காக, அந்தக் கோயில் மண்டபத்திலேயே, 'தெற்குப் பெருமாள் மேஸ்திரி தெரு இந்திப் பிரசார சபா' என்னும் பெயரில் ஒரு இந்திப் பள்ளியையும் தொடங்கி, மாணவர்களுக்கு இந்தி சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.



10. இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்ததில்லை டி.எம்.எஸ். மற்றபடி எல்லாக் கோயில் விசேஷங்களுக்கும் சென்று, பஜனைப் பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், வெற்றிலை, பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஓடியது.



11. டி.எம்.எஸ்ஸுக்குச் சரளமாக இந்தி பேசவும், படிக்கவும், எழுதவும் தெரியும். அவரது அபிமான இந்திப் பாடகர் முகம்மது ரஃபியிடம் அவர் பாடிய பாடல்களை, அவரைப் போலவே அச்சு அசலாகப் பாடிக் காண்பித்து அசத்தியிருக்கிறார்.



12. டி.எம்.எஸ்ஸுக்கு முதன்முதலில் பாடும் வாய்ப்பை அளித்தவர், அந்நாளில் பிரபல திரைப்பட இயக்குநராக இருந்த சுந்தர்லால் நட்கர்னி. அவரிடம் எப்படியும் பின்னணி பாடும் வாய்ப்பு பெற்றுவிடும் உத்தேசத்தில், அவரது வீட்டில் பணியாளராகவே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் டி.எம்.எஸ்.



13. தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். (அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.)



14. டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்..., உள்ளம் உருகுதய்யா முருகா, சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா, மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப் பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியது டி.எம்.எஸ்தான்!





15. டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடலாகத் திகழ்கிறது.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Mar 24, 2016 8:29 am

15. டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடலாகத் திகழ்கிறது. இந்தப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்திருப்பார் டி.எம்.எஸ். கர்னாடக இசை மேதை செம்மங்குடியே இதைச் சிலாகித்துப் பாராட்டியிருக்கிறார்.



16. சென்னை, நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சர்வராகப் பணி செய்து வந்தவர் குழந்தைவேலன். நெற்றியில் திருநீறு, குங்குமம், சுத்தமான உடை, நடவடிக்கைகளில் பணிவு என இருந்த அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க, அவர் தங்கியிருந்த அறைக்கே சென்றார் டி.எம்.எஸ். ஒரு நோட்டுப் புத்தகத்தில் தான் எழுதி வைத்திருந்த பக்திப் பாடல்களைக் காட்டினார் அவர். அதில் ஒரு பாட்டு டி.எம்.எஸ்ஸுக்கு மிகவும் பிடித்துப்போக, அதற்குத் தானே இசையமைத்துப் பாடினார். பாட்டு ஹிட்! அந்தப் பாடல்தான்... 'உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை...'



17. 'அடிமைப் பெண்' படத்தின்போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். படத்துக்கான பாடலைப் பாடிக்கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட, மகள் திருமணத்தைவிட சினிமா பெரிதல்ல என்று கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு, அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி.பாலசுப்பிர மணியனுக்குக் கிடைத்து, அவருக்குப் புகழை அள்ளிக் கொடுத்தது. அந்தப் பாடல்தான், 'ஆயிரம் நிலவே வா...'.



18. மகள் திருமணம் முடிந்து வந்த பின்பு, டி.எம்.எஸ்ஸை அழைத்து, மீண்டும் தனக்குப் பின்னணி பாடுமாறு கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். டி.எம்.எஸ்ஸும் கோபத்தையும் வருத்தத்தையும் மறந்து, தொடர்ந்து எம்.ஜி.ஆருக்குப் பாடத் தொடங்கினார்.



19. 'அடிமைப் பெண்' படம் வரையில், ஒரு பாடலுக்கு டி.எம்.எஸ். வாங்கிய தொகை வெறும்500 ரூபாய்தான். (அதன்பின்பு, குறைந்தது ஆயிரம் ரூபாயாவது தரவேண்டும் என்று கேட்டுப் பெற்றார்.) என்னதான் டி.எம்.எஸ். ஒரே டேக்கில் சரியாகப் பாடினாலும், மற்ற பாடகர்கள் உச்சரிப்பில் செய்கிற தவறு, இசைக் குழுவினரில் யாரோ ஒருவர் செய்கிற தவறு போன்ற பல காரணங்களால், அந்தக் காலத்தில் ஒரே பாட்டை மீண்டும் மீண்டும் பத்துப் பன்னிரண்டு தடவைக்கு மேல் பாடவேண்டியிருக்கும். அத்தனைக்கும் சேர்த்துத்தான் அந்தத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.



20. 'சிந்தனை செய் மனமே' பாடலின் இரண்டாவது பகுதியாகத் தொடரும் 'வடிவேலும் மயிலும் துணை' என்கிற பாடலில் மூச்சு விடாமல் தொடர்ந்து பாடிச் சாதனை செய்திருப்பார் டி.எம்.எஸ்.



21. எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு மட்டுமல்ல; ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ் என ஒவ்வொரு நடிகருக்கேற்பவும் குரல் மாற்றிப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். அவரது பாடல்களை உன்னிப்பாகக் கேட்டு ரசிக்கும் நேயர்களுக்கு இது புரியும்.



22. 'உயர்ந்த மனிதன்' பாடல்களை அதன் தயாரிப்பாளர் ஏவி.எம்-முக்குப் போட்டுக் காண்பித்தார்கள். 'வெள்ளிக்கிண்ணம்தான்...', 'என் கேள்விக்கென்ன பதில்...' இரண்டையும் கேட்டுவிட்டு ஏவி.எம். கேட்ட முதல் கேள்வி, "என் கேள்விக்கென்ன பாடல், இளம் நடிகர் சிவகுமாருக்கானது என்று டி.எம்.எஸ்ஸிடம் சொன்னீர்களா?" என்பதுதான். அவர் நினைத்ததுபோல் டி.எம்.எஸ்ஸுக்கு இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கவில்லை. சொல்லியிருந்தால், சிவகுமாருக்கேற்ப தன் குரலைக் குழைத்து மென்மையாக்கிக்கொண்டு பாடியிருப்பார் டி.எம்.எஸ். என்பதில் ஏவி.எம்முக்கு அத்தனை நம்பிக்கை. பின்னர், இந்தத் தகவல் டி.எம்.எஸ்ஸுக்குத் தெரிவிக்கப்பட்டு, சிவகுமாருக்கேற்ப மீண்டும் அதே பாடலை குழைவும் நெகிழ்வுமாகப் பாடித் தந்தார் டி.எம்.எஸ்.



23. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். முதன்முதல் பாடிய பாடல், 'மலைக்கள்ளன்' படத்தில் இடம்பெறும் 'எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'.



24. அதற்கு முன்பே எம்.ஜி.ஆரின் 'மந்திரிகுமாரி' படத்தில் 'அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே' என்ற பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ். (எம்.ஜி.ஆருக்கு அல்ல!) ஆனால், அந்த சினிமா டைட்டிலில் டி.எம்.எஸ். பெயர் இடம்பெறவில்லை. அதேபோல், 'பல்லாண்டு வாழ்க' படத்திலும் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்கிற பாரதிதாசன் பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ். அந்தப் பட டைட்டிலிலும் டி.எம்.எஸ். பெயர் இடம்பெறவில்லை.



25. 'அன்னம் இட்ட வீட்டிலே...' பாடலை முதன்முதலாக ஒலிபரப்பியது இலங்கை வானொலி. டி.எம்.எஸ்ஸுக்கு முதல் பாராட்டுக் கடிதம் வந்தது இலங்கை, மட்டக்கிளப்பிலிருந்து. டி.எம்.எஸ்ஸுக்குக் கடிதம் எழுதிய முதல் ரசிகர் ஓர் இலங்கைத் தமிழர்.



26. மலையாளத் திரைப்படமான 'ராக சங்கமம்' படத்தில், கிஷோர் இசையில், 'படைச்சோன்தன்னை ரட்சிக்கணும்...' என்ற பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ்.







எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Mar 24, 2016 8:32 am

27. சமையல் செய்வதில் நிபுணர் டி.எம்.எஸ். முன்னெல்லாம் ஓய்வு கிடைத்தால், இவரது பொழுதுபோக்கே வீட்டில் சமையல் செய்வதில் ஈடுபடுவதுதான். டி.எம்.எஸ். ரசம் வைத்தால், வீடு முழுக்க அந்த வாசனை கமகமக்கும்.



28. பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள், செயின்களை அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர் டி.எம்.எஸ். "இல்லாட்டா ஒருத்தனும் மதிக்கமாட்டான்யா! 'பாவம், டி.எம்.எஸ்ஸுக்கு என்ன கஷ்டமோ!'ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளிவேஷம் தேவையா இருக்கு" என்பார். வீட்டுக்கு வந்ததும் முதல் காரியமாக அத்தனை நகைகளையும் கழற்றி வைத்துவிடுவார்.



29. சாண்டோ சின்னப்பா தேவருக்கு டி.எம்.எஸ். மீது அளவற்ற அன்பு உண்டு. எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்கள் தயாரித்துள்ளவர் தேவர். 'நல்ல நேரம்' படத்தின்போது, டி.எம்.எஸ். மீது அப்போது எழுந்த ஒரு கோபத்தில், அவரைத் தவிர வேறு யாரையாவது பாட வைக்கும்படி எம்.ஜி.ஆர். சொல்ல, உறுதியாக மறுத்துவிட்டார் தேவர். "அப்படின்னா இந்தப் படத்தை நான் தயாரிக்கவே இல்லே! கேன்ஸல்!" என்று அவர் தீர்மானமாகச் சொன்னதைக் கண்டு, எம்.ஜி.ஆரே வியந்துபோனார். தன் பிடிவாதத்தைக் கைவிட்டார். 'நல்ல நேரம்' படத்தில் டி.எம்.எஸ். பாடிய அத்தனைப் பாடல்களும் சூப்பர்டூப்பர் ஹிட்!



30. ‘ஜெயபேரி’ என்னும் படத்தில் நாகேஸ்வரராவுக்கு ஒரு பாடல். ‘தெய்வம் நீ வேணா... தர்மம் நீ வேணா...’ என்கிற கிளைமாக்ஸ் பாடலான இதை ஹை-பிட்ச்சில் பாடவேண்டும். பாடகர் கண்டசாலா, இசையமைப்பாளர் பென்டியாலா நாகேஸ்வரராவைக் (இவர் நடிகர் நாகேஸ்வரராவ் அல்ல!) கையெடுத்துக் கும்பிட்டு, “இது நம்மால ஆகாதுங்க. டி.எம்.எஸ்ஸைக் கூப்பிட்டுப் பாட வைங்க. அற்புதமா பாடித் தருவார்” என்று சிபாரிசு செய்ய, தமிழைத் தவிர வேறு மொழிகளில் பாட அதிகம் விருப்பம் காட்டாத டி.எம்.எஸ்ஸை வற்புறுத்தி அழைத்துப் போய்ப் பாட வைத்தார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர் என யாருக்கும் பாடாத ஒரு புதுக் குரலில், நடிகர் நாகேஸ்வரராவுக்குக் கச்சிதமாகப் பாடித் தந்து அசத்திவிட்டார் டி.எம்.எஸ்.



31. சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர, தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரம் என்று டி.எம்.எஸ்ஸுக்கு எதுவும் இல்லை. பாடல்... பாடல்... பாடல்... இதைத் தவிர, வேறு பொழுதுபோக்கோ, அரட்டையோ இல்லாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர் டி.எம்.எஸ்.



32. கவிஞர் வாலியைத் திரையுலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ்தான். அது மட்டுமல்ல, அவரை எம்.ஜி.ஆர். உள்பட பல திரையுலகப் பிரபலங்களிடம் அழைத்துப்போய் அறிமுகப்படுத்தி வைத்து, சான்ஸ் வாங்கித் தந்தவர் டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்றுவரையிலும் மறவாமல், 'இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ். போட்டது' என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்ச்சியுடன் கூறுவார் வாலி.



33. ஜெயலலிதாவுடன் இணைந்து, 'சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்...', 'ஓ... மேரி தில்ரூபா...', 'கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம்ஸ்' என மூன்று பாடல்களைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ்.



34. 'மரியாதைராமன் கதா' என்னும் தெலுங்குப் படத்தில் டி.எம்.எஸ். பாடியுள்ளார். இந்தப் படத்தில்தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிமுகமானார்.



35. சிவாஜிகணேசனுக்கு பிரபல பாடகர் சி.எஸ்.ஜெயராமனைத்தான் தனக்குப் பின்னணி பாட வைக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால், சி.எஸ்.ஜெயராமன் தனக்குக் கொடுக்கும் சம்பளம் போதாது என்று பாட மறுத்துவிட்டதால், அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் பாடும் வாய்ப்பு டி.எம்.எஸ்ஸுக்குக் கிடைத்தது. அவரும் பாடிக்கொடுக்க, அத்தனைப் பாடல்களும் பயங்கர ஹிட்! சிவாஜிகணேசன் மகிழ்ந்துபோய், அன்றிலிருந்து தனக்கு டி.எம்.எஸ்ஸே பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்தப் படம்தான் 'தூக்குத் தூக்கி'.



36. 'தூக்குத் தூக்கி' படத்துக்கு முன்பே சிவாஜிக்கு 'கொஞ்சும் கிளியான பெண்ணை கூண்டுக்கிளி ஆக்கிவிட்டு...' என்ற பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ். எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படமான 'கூண்டுக்கிளி'யில் இடம்பெற்ற பாடல் அது. அதைக் கேட்டுவிட்டுத்தான் 'மலைக்கள்ளன்' படத்தில் தனக்கு டி.எம்.எஸ்ஸைப் பின்னணி பாட வைக்கும்படி சிபாரிசு செய்தார் எம்.ஜி.ஆர்.



37. பல காதல் டூயட்டுகளைப் பாடிய டி.எம்.எஸ்ஸுக்கும் காதல் தோல்வி உண்டு. தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், வறுமைக் கோட்டில் இருந்த டி.எம்.எஸ்ஸுக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக்கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்.



38. பெண் கவிஞர் ரோஷனாரா பேகம் எழுதிய ஒரே ஒரு சினிமா பாடல்... 'குங்குமப் பொட்டின் மங்கலம்'. அதைப் பாடியவர் டி.எம்.எஸ்.







எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Mar 24, 2016 8:34 am

39. பாடலை வாங்கிப் படித்து, இசையமைப்பாளர் சொன்ன ராகத்தில் பாடிக் கொடுப்பது மட்டுமே தன் கடமை என்று நினைக்காமல், அதை மேலும் சிறப்பாகச் செய்வதற்கான தனது யோசனைகளையும் சொல்வது டி.எம்.எஸ்ஸின் வழக்கம். இப்படித்தான், 'வசந்தமாளிகை' படத்தில் வரும் 'யாருக்காக' பாடலைப் பாடும்போது, அதற்கு ‘எக்கோ எஃபெக்ட்’ (எதிரொலி) வைக்கச் சொன்னார். 'அதெல்லாம் வீண் வேலை' என்று தயாரிப்பாளர் மறுத்துவிட, 'எக்கோ எஃபெக்ட்' வைத்தால்தான் பாடுவேன் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் டி.எம்.எஸ். அதன்படியே வைக்கப்பட்டது. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு, டி.எம்.எஸ். சொன்ன யோசனை எத்தனை புத்திசாலித்தனமானது என்று உணர்ந்து வியந்தார் தயாரிப்பாளர்.



40. மு.க.முத்து நடித்த பட விழா ஒன்றில், "மந்திரிகுமாரிக்குப் பாடிய டி.எம்.எஸ். இந்த மந்திரி குமாரனுக்கும் பாடியிருக்கிறார்" என்று சிலேடையாகப் புகழ்ந்தார் முதல்வர் மு.கருணாநிதி.



41. 'நாடோ டி மன்னன்' படத்தில் இடம்பெறும் 'தூங்காதே தம்பி தூங்காதே' பாடலுக்குப் பரம ரசிகர் இந்திப் பாடகர் முகம்மது ரஃபி. அந்தப் பாடலில், 'விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்' என்கிற வரியில் 'ஓ...' என்று ராகம் இழுப்பார் டி.எம்.எஸ். இந்தப் படம் இந்தியில் தயாரானபோது, இந்தப் பாடல் வரியைக் கேட்ட முகம்மது ரஃபி, "ஹம் மர் ஜாயேங்கே" (இதைப் பாடினா என் உயிர் போயிடும்" என்றாராம். பின்னர், அவருக்கேற்ப டியூனை மாற்றிக் கொடுத்தார் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. அதேபோல், 'ஓராயிரம் பாடலிலே' பாடலைக் கேட்டு உருகிய ரஃபி, டி.எம்.எஸ்ஸின் தொண்டைப் பகுதியை வருடி, "ஆஹா... இங்கிருந்துதானா அந்தக் குரல் வருது" என்று வியந்திருக்கிறார்.



42. வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் 'யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு'. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்ததைவிட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ். இந்தப் பாடலைக் கேட்டு மயங்கிய சிவாஜி, இந்தக் காட்சியில் தன் பங்களிப்பும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகப் படப்பிடிப்பையே பல நாள் தள்ளிப் போட்டு, வெவ்வேறு விதமாக நடித்து ரிகர்சல் பார்த்தார்.





43. காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாயிபாபா இருவரிடமும் மிகுந்த பக்தி கொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாயிபாபா ஒருமுறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை 'கற்பகவல்லி' பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார் டி.எம்.எஸ்.



44. கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். இதனால் ஒருமுறை அவர், எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்காகக் கண்ணதாசன் எழுதிய 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்; அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்' என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் அந்த வரியை 'வாட வேண்டும்' என்று மாற்றித் தந்த பிறகே பாடித் தந்தார்.



45. பாடல் வரிகளில் உள்ள தமிழ் வார்த்தைகளைச் சரியாக உச்சரித்துப் பாடுவதில் தேர்ந்தவர் டி.எம்.எஸ். இதை டாக்டர் மு.வரதராசனாரே குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்.



46. பாடலின் பொருளை முழுமையாக உணர்ந்து, உள்வாங்கிக்கொண்டால்தான், அதை உயிர்ப்போடு பாடமுடியும் என்பதில் நம்பிக்கை உள்ளவர் டி.எம்.எஸ். அருணகிரிநாதரின் திருப்புகழான 'முத்தைத்தரு பத்தித் திருநகை' பாடலைப் பாட வேண்டி வந்தபோது, அதன் பொருள் அங்கிருந்த ஒருவருக்கும் தெரியவில்லை. எனவே, டி.எம்.எஸ். நேரே கிருபானந்தவாரியாரிடம் சென்று, அந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் தெளிவாக அர்த்தம் தெரிந்துகொண்டு வந்த பின்பே, அதைப் பாடினார்.



47. தான் பாடுகின்ற பாடல், அந்தக் கதைச் சூழ்நிலைக்கேற்பப் பக்காவாகப் பொருந்த வேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கிடுபவர் டி.எம்.எஸ். 'உயர்ந்த மனிதன்' படத்தில் சிவாஜி ஓடிக்கொண்டே பாடுகிற காட்சி என்பதால், தானே ஒலிப்பதிவுக் கூடத்தை மூச்சுவாங்க இரண்டு சுற்று ஓடிவந்து டி.எம்.எஸ். மூச்சு வாங்கிப் பாடிய பாடல்தான் 'அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே...'



48. கவிஞர் வாலி முதன்முதல் எழுதியது, 'கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...' என்ற பக்திப் பாடல். ஒரு தபால் கார்டில் இந்தப் பாடலை எழுதி டி.எம்.எஸ்ஸுக்கு அனுப்பினார் வாலி. அதற்கு இசையமைத்து ஹிட் ஆக்கினார் டி.எம்.எஸ். வாலிக்குத் திரையுலக வாசலைத் திறந்து வைத்த பாடல் இது என்றால் மிகையாகாது.



49. நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும்பொருட்டு கோயமுத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டுவிட்டு, பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண்டார் டி.எம்.எஸ். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போதுதான



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Mar 24, 2016 8:37 am

50. டி.எம்.எஸ். - சுமித்ரா திருமணப் பத்திரிகையில் ஒரு வேடிக்கையான அடிக் குறிப்பு போடப்பட்டது. 'தங்கள் பங்கான ரேஷன் அரிசியை திருமணத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகவே கிடைக்குமாறு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்பதுதான் அந்தக் குறிப்பு. திருமணத்தில் கலந்துகொள்கிறவர்கள் நிஜமாகவே அரிசி அனுப்பவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அரிசித் தட்டுப்பாடு கடுமையாக நிலவிய காலகட்டம் அது. எனவே, 'இத்தனை பேருக்கு உணவளிக்க எங்கிருந்து உங்களுக்கு அரிசி கிடைத்தது?' என்று அதிகாரிகள் கேட்டால், அவர்களுக்குப் பதில் சொல்வதற்காகப் போடப்பட்ட ஒரு கண்துடைப்பு வாசகம்தான் அது.



51. வசதியிலும் அந்தஸ்திலும் தங்களுக்குக் குறைந்தவர் என்பதால், டி.எம்.எஸ்ஸுக்குத் தன் தங்கை சுமித்ராவைத் திருமணம் செய்து தர மறுத்துவிட்டார் அண்ணன். சுமித்ராவுக்கோ டி.எம்.எஸ்ஸை மணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், அண்ணனோ தங்கையின் விருப்பத்தையும் மீறி, வேறு வசதியான இடத்தில் சம்பந்தம் பேசி முடித்துவிட்டார். ஆனால், திருமணத்துக்கு முந்தைய நாள் அந்தக் குறிப்பிட்ட வரன் எதிர்பாராத விதமாக இறந்துவிட, தான் விரும்பிய டி.எம்.எஸ்ஸையே கரம் பிடித்தார் சுமித்ரா.



52. எம்.ஜி.ஆர்., சிவாஜி, மு.கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர் என்ற பெருமைக்குரியவர் டி.எம்.எஸ்.



53. டி.எம்.எஸ். வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்த ஆரம்ப நாளில், கோவை, சென்ட்ரல் ஸ்டூடியோ முன்னால் பெட்டிக்கடை வைத்திருந்தவர் சாண்டோ சின்னப்பா தேவர். அப்போது உண்டான நட்புதான், பின்னாளில் அவர் தன் படங்கள் அனைத்திலும் டி.எம்.எஸ்ஸைப் பாட வைக்கக் காரணமாக இருந்தது. 'தாயில்லாமல் நானில்லை' படத்தில் கமல்ஹாசனுக்கும், 'தாய் மீது சத்தியம்' படத்தில் ரஜினிகாந்துக்கும் டி.எம்.எஸ்ஸைப் பாட வைத்தார் தேவர்.



54. இசைஞானி இளையராஜாவுக்கு டி.எம்.எஸ். குரலில் ஒரு ஈர்ப்பு உண்டு. 'திரையுலகில் உள்ள ஒரே ஒரு ஆம்பிளைக் குரல்' என்று புகழ்வார். அவர் இசையமைத்த முதல் படமான 'அன்னக்கிளி'யில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு ஆண் குரல் டி.எம்.எஸ்ஸின் குரலே!



55. 'அன்னக்கிளி'க்கு முன்பே 'தீபம்' என்ற படத்துக்காக (பின்னாளில் சிவாஜி நடித்து வெளியான 'தீபம்' இல்லை இது.) கங்கை அமரன் எழுதிய 'சித்தங்கள் தெளிவடைய' என்கிற பாடலை, இளையராஜாவின் இசையமைப்பில் பாடியுள்ளார் டி.எம்.எஸ். அந்தப் படம் வெளியாகவே இல்லை.



56. 'பாகப் பிரிவினை' படத்தின் நூறாவது நாள் விழா, சென்னை, எழும்பூரில் உள்ள ஹோட்டல் 'அசோகா'வில் நடந்தது. அதில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட்டது. பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை என்பது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ்., விழாவில் 'கடவுள் வாழ்த்து' பாட அழைத்தபோது மறுத்துவிட்டார். அவரது கோபத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.



57. சென்னைக்கு வந்ததும் முதலில் ஆழ்வார்பேட்டை பிள்ளையார் தெருவில் தனியாக வீடு எடுத்துத் தங்கினார். சொந்த சமையல். பின்பு, திருமணம் ஆனதும் மயிலாப்பூர் புதுத் தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். படங்களில் பாடி, கொஞ்சம் வசதி ஏற்பட்ட பின்பு, இப்போது உள்ள மந்தைவெளி வீட்டை விலைக்கு வாங்கிக் குடியேறினார்.



58. “என் வயிற்றைக் குளிர வைத்தது ஏவி.எம். ஸ்டுடியோ; என் மனத்தைக் குளிர வைத்தது மருதகாசி” என்று, ஆரம்பக் காலத்தில் தனக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இருவரையும் இப்போதும் நன்றியுடன் குறிப்பிடுவார் டி.எம்.எஸ்.



59. டி.எம்.எஸ்ஸின் வாரிசுகள் ஏழு பேரில் இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இறந்துவிட, பால்ராஜ், செல்வகுமார் ஆகிய இரண்டு மகன்களும், மல்லிகா என்ற ஒரு மகளும் மட்டுமே இப்போது இருக்கிறார்கள்.



60. ‘அண்ணன் என்னடா, தம்பி என்னடா’ என்ற படத்தில், ஆபாவாணன் இசையில் பாடியுள்ளார் பால்ராஜ். ‘சில நேரங்களில்...’ என்னும் படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் அசோகன் மகன் வின்சென்ட் அசோகனுக்கும் ஒரு பாடல் பாடியுள்ளார். அப்பா டி.எம்.எஸ். நடிகர் அசோகனுக்குப் பாட, மகன் அசோகனின் மகனுக்குப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Mar 24, 2016 8:40 am

61.தன் பிள்ளைகளுக்கு சான்ஸ் கேட்டு இன்று வரை எந்த இசையமைப்பாளரிடமும், தயாரிப்பாளரிடமும், இயக்குநரிடமும், யாரிடமும் போய் நின்றதில்லை டி.எம்.எஸ்.



62. 2006-ல், டி.எம்.எஸ். ரசிகர் மன்றத்தார் டி.எம்.எஸ் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ஒரு விழா எடுத்தார்கள். ஒரு சிறிய ஹாலில், 200, 300 பேர் மட்டுமே கலந்துகொண்ட அந்த விழாவுக்கு வந்திருந்த மு.க.அழகிரி, ரொம்பவும் வருத்தப்பட்டு, “என்னய்யா... ஒரு இசை மேதைக்கு இப்படியா சின்னதா விழா எடுக்கிறது! ஐயா! உங்க அடுத்த பிறந்த நாளைக்கு நான் எடுக்கறேன் பாருங்க ஒரு விழா!” என்று சொல்லி, சொன்னபடியே 2007-ல் டி.எம்.எஸ்ஸுக்கு மதுரையில் ஒரு பிரமாண்ட விழா எடுத்து, மதுரையையே அதிர வைத்தார்.



63. செம்மொழி மாநாட்டுக்கான பாடல் வெளியீட்டு விழாவில், முன் வரிசையில் அமர்ந்திருந்தார் டி.எம்.எஸ். மேடை ஏறுவதற்காக வந்த கலைஞர், டி.எம்.எஸ்ஸைப் பார்த்துவிட்டு, அவரைக் கையைப் பிடித்து, தானே மேடைக்கு அழைத்துச் சென்று, அவருக்கு ஒரு நாற்காலி போடச் சொல்லி அமர வைத்துக் கௌரவப்படுத்தினார். ‘மந்திரி குமாரி’ காலத்திலிருந்து தொடர்ந்து வரும் நட்பல்லவா!



64. மதுரைப் பல்கலைக் கழகம் டி.எம்.எஸ்ஸுக்கு 'பேரவைச் செம்மல்' விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. 'கலைமாமணி' பட்டம் பெற்றுள்ளார். பெல்ஜியம் நாட்டுப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ 'டாக்டர்' பட்டம் அளித்துள்ளது. 2000-வது ஆண்டு, ஜனாதிபதி அப்துல்கலாம் இவருக்கு 'பத்மஸ்ரீ' விருது அளித்துக் கௌரவித்தார்.



65. தனக்கு அதிகம் பாடிய டி.எம்.எஸ்ஸை அரசவைக் கவிஞர் ஆக்காமல், சீர்காழி கோவிந்தராஜனை நியமித்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சியில் அவர் டி.எம்.எஸ்ஸை அரசவைக் கவிஞராக ஆக்கினார். இயல், இசை, நாடக மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார் டி.எம்.எஸ்.



66. டி.எம்.எஸ். பாடத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதை முன்னிட்டு, 1972-ல் அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தார் ஏவி.எம். அதில், 'எழிலிசை மன்னர்' என்ற பட்டத்தை டி.எம்.எஸ்ஸுக்கு வழங்கிச் சிறப்பித்தார் கலைஞர் மு.கருணாநிதி.



67. "டி.எம்.எஸ் எனக்குப் பின்னணி பாட வந்தது, எனக்குக் கிடைத்த வரப் பிரசாதம்" என்று தன் நெருங்கிய சிநேகிதியான இந்திப் பாடகி லதாமங்கேஷ்கரிடம் மனம் விட்டுப் பாராட்டியுள்ளார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.



68. ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகள் சாப்பிட்டிருக்கிறார் டி.எம்.எஸ். ஆனால், கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக முழுச் சைவம். முன்பெல்லாம் எப்போதும் வெற்றிலை, பாக்கு போட்டுக்கொண்டு இருந்தார். இப்போது இல்லை. மற்றபடி, புகைத்தல் போன்ற கெட்டப் பழக்கம் எப்போதும் இல்லை.



69. டி.எம்.எஸ்ஸுக்கு எம்.கே.டி. பாகவதரின் பாடல்கள் என்றால் உயிர். அவர் அடிக்கடி விரும்பிக் கேட்பது, பாகவதரின் 'ஸத்வ குண போதன்...' என்ற பாடல். "அதை முழுமையாக உள்வாங்கிக்கொண்டுதான், அதே பாணியில் 'எங்கே நிம்மதி...' பாடலைப் பாடினேன்" என்று சொல்வார்.



70. எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ். என்பது ஓர் ஆச்சரியம்! சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடியபின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார் டி.எம்.எஸ்.



71. இவரை "சௌந்தர்" என்று அழைப்பார் எம்.ஜி.ஆர். "வாங்க டி.எம்.எஸ்!" என்பார் சிவாஜி. (டி.எம்.எஸ் இல்லாத நேரங்களில் மற்றவர்களிடம் சிவாஜி, "என்ன, பாகவதர் வந்து பாடிட்டுப் போயிட்டாரா?" என்று டி.எம்.எஸ். பற்றி விசாரிப்பதுண்டு. கேலியாக அல்ல; டி.எம்.எஸ்ஸை பாகவதருக்குச் சமமாக மதித்ததால்!) வெறுமே "சார்" என்று மரியாதையாக அழைப்பார் ரஜினி. கே.வி.மகாதேவனுக்கு டி.எம்.எஸ். "மாப்ளே..!". இயக்குநர் பி.ஆர்.பந்துலு டி.எம்.எஸ்ஸை "வாங்க ஹீரோ!" என்பார்.



72. டி.எம்.எஸ்ஸுக்குப் பிடித்த பாடகர் மலேசியா வாசுதேவன்.



73. ஜேசுதாஸின் 'தெய்வம் தந்த வீடு...', பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்...' ஆகிய பாடல்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறார் டி.எம்.எஸ் .



74. மதுரையில் அரச மரத்துப் பிள்ளையார் கோயில் என்று ஒரு கோயில் இருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அந்தக் கோயில் விழாவில், ரொம்ப பிஸியாக இருந்த காலத்திலும், தனக்கு எத்தனை நெருக்கடியான வேலைகள் இருந்தாலும் தள்ளி வைத்துவிட்டு, மதுரை சென்று அந்த விழாவில் கலந்துகொண்டு, கச்சேரி செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். டி.எம்.எஸ்.



75. ஆரம்ப காலத்தில் டி.எம்.எஸ்ஸின் வீட்டில் குடியிருந்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். பல நாடுகளுக்கும் அவரை அழைத்துச் சென்று, பல கச்சேரிகளில் தனக்கு வயலின் வாசிக்க வைத்திருக்கிறார் டி.எம்.எஸ்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Mar 24, 2016 8:42 am

76. டி.எம்.எஸ் பாடிய பாடல்களிலேயே, அவரின் துணைவியாருக்கு மிகவும் பிடித்த பாடல்... ‘உள்ளம் உருகுதய்யா முருகா...’



77. டி.எம்.எஸ்ஸின் ஒரு மகன், பதினான்கு வயதில் உடல் நிலை கெட்டு, மரணம் அடைந்ததுதான் டி.எம்.எஸ்ஸின் மனத்தை ரணமாக்கிய நிகழ்ச்சி. மரணத் தறுவாயில் அந்தப் பிள்ளை, தன் தந்தையை முருகன் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டபடியே உயிர் துறந்தான்.



78. டி.எம்.எஸ் கச்சேரிகளில் அவருக்கு கீ-போர்டு வாசித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா; கிட்டார் வாசித்திருக்கிறார் கங்கை அமரன்.



79. ‘நீராரும் கடலுடுத்த...’ என்னும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும், ‘ஜனகண மன’ என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன்வராத நிலையில், டி.எம்.எஸ்ஸும் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தி!



80. டி.எம்.எஸ். அருமையாக ஹார்மோனியம் வாசிப்பார். அவரோடு ஒருமுறை யாராவது பேசினால், உடனே அவரைப் போலவே குரலை மாற்றி மிமிக்ரி செய்து பேசிக் காட்டுவதில் வல்லவர்.



81. பெரிய பெரிய வி.ஐ.பி-க்கள் விரும்பி அழைத்தும், அவர்கள் வீட்டுத் திருமணத்துக்குச் செல்லாமல் தவிர்த்த சம்பவங்கள் உண்டு; ஆனால், ரசிகர் என்று சொல்லிக்கொண்டு யாரேனும் வந்து அழைப்பு வைத்தால், அவரது இல்லத் திருமணத்துக்குச் சென்று அவசியம் கலந்துகொள்வார் டி.எம்.எஸ்.



82. இந்தி இசையமைப்பாளர் நௌஷாத், டி.எம்.எஸ்ஸைப் பலமுறை இந்திப் படங்களில் பாடுவதற்கு அழைத்திருக்கிறார். “வேண்டாம். எனக்குத் தமிழ் மட்டுமே போதும்” என்று தீர்மானமாக மறுத்துவிடுவார் டி.எம்.எஸ். ஒருமுறை, சென்னையில் பிரபல பாடகர்கள் பலரும் கலந்துகொண்ட ஒரு விழாவில், ‘நான் ஆணையிட்டால்...’, ‘ஆடு பார்க்கலாம் ஆடு...’ ஆகிய டி.எம்.எஸ்ஸின் பாடல்கள் ஒலிக்கக் கேட்டு அசந்துபோன நௌஷாத், டி.எம்.எஸ்ஸிடம், “எத்தனை முறை உங்களைக் கூப்பிட்டிருப்பேன்! வரவேயில்லையே நீங்க! இந்தி சினிமாவுக்குப் பெரிய நஷ்டம்!” என்று வருத்தப்பட்டிருக்கிறார்.



83. 'நவராத்திரி' படத்தில் ஒன்பது வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார் சிவாஜி கணேசன். அதற்கேற்ப குடிகாரன், விவசாயி, கூத்துக்காரன் என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு ஏற்பவும் தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். அதே போல், 'கௌரவம்' படத்தில் அப்பா சிவாஜிக்கு கம்பீரமான குரலிலும் (கண்ணா... நீயும் நானுமா), மகன் சிவாஜிக்கு மென்மையான குரலிலும் (மெழுகுவத்தி எரிகின்றது) பாடியிருப்பார்.



84. பாடல் பதிவாகி, பின்பு அதற்கேற்ப நடிகர் வாயசைத்துப் பாடுவதுதான் வழக்கம். ஆனால், 'கௌரவம்' படத்தில் ஒரு புதுமை நடந்தது. எம்.எஸ்.விஸ்வ நாதனே பாடிப் பதிவு செய்திருந்த ஒரு பாட்டுக்கு சிவாஜிகணேசன் வாயசைத்து நடித்துப் படமாக்கப்பட்டுவிட்டது. எம்.எஸ்.வி-க்கு அதில் திருப்தி இல்லை. எனவே, வெளிநாடு சென்றிருந்த டி.எம்.எஸ். வந்த பின்பு, சிவாஜி நடித்த அந்தப் படக் காட்சியை அவருக்குப் போட்டுக் காண்பித்தார். அதைத் திரையில் பார்த்தபடியே டி.எம்.எஸ். உணர்ச்சிகரமாகப் பாடிப் பதிவானதுதான்... 'பாலூட்டி வளர்த்த கிளி' பாடல்.



85. பட்டினத்தார், அருணகிரிநாதர், கவிராஜ காளமேகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘அகத்தியர்’ உள்ளிட்ட பல படங்களில் பாடகராகவே தோன்றியுள்ளார். பாடகர் ஏ.எல்.ராகவனுடன் இணைந்து இவர் தயாரித்த ‘கல்லும் கனியாகும்’ படத்தில் இவரும் ராகவனும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.



86. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'டாக்டர்' என்கிற சிங்களப் படத்தில், சிங்கள மொழியிலும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.



87. 'நள தமயந்தி' என்னும் தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்திருக்கிறார் டி.எம்.எஸ். 1992-ல், மணிகண்டன் இயக்கத்தில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்த நாடகத்தில் 'ராஜகுரு' வேடம் ஏற்றிருந்தார் டி.எம்.எஸ்.



88. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ். பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும். டி.எம்.எஸ்ஸுக்காக இவர் எடுத்த பிரமாண்ட விழா மதுரை நகரையே ஒரு கலக்குக் கலக்கியது. “எந்தத் தமுக்கம் மைதானத்தில் முதன்முதலாக நான் எம்.கே.டி. பாகவதரைப் பார்த்து வியந்தேனோ... எனக்கும் ஒருநாள் இவ்வளவு பெரிய கூட்டம் கூடவேண்டும் என்று கனவு கண்டேனோ... அதே மைதானத்தில் எனக்குப் பெரிய விழா எடுத்து என் கனவை நனவாக்கிவிட்டார் அழகிரி” என்று நெகிழ்கிறார் டி.எம்.எஸ்.



89. டி.எம்.எஸ்ஸுக்குப் பிடிக்காத வார்த்தை 'வயசாயிடுச்சு!'. அயர்ச்சி, தளர்ச்சி, சோம்பல் எதுவும் இல்லாமல், இந்த 88 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார் டி.எம்.எஸ். அதற்குக் காரணம், தான் தினமும் தவறாமல் மேற்கொண்டு வரும் யோகாவும், ஆல்ஃபா மெடிட்டேஷனும், உடற்பயிற்சிகளும்தான் என்கிறார்.



90. 'பாமா விஜயம்' படத்தில், 'வரவு எட்டணா, செலவு பத்தணா' பாடலில் பாலையா, மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், நாகேஷ் என நால்வருக்கும் இவரே குரலை வித்தியாசப்படுத்திப் பாடியுள்ளார்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Mar 24, 2016 8:45 am

91. இதுவரை எந்தப் பாடகருக்கும் இல்லாத அளவில் டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாறு 'இமயத்துடன்' என்னும் தலைப்பில் ஒரு பிரமாண்ட மெகா சீரியலாகத் தயாராகியுள்ளது. விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த சீரியலை இயக்கியிருப்பவர் பிலிம் இன்ஸ்டிட்யூட்டின் முன்னாள் மாணவரான விஜயராஜ்.



92. ஒரு பாடல் காட்சியில் சிவாஜி எப்படி நடிப்பார் என்று யூகித்து, அதற்கேற்பப் பாடுவதில் கெட்டிக்காரர் டி.எம்.எஸ். 'அவன்தான் மனிதன்' படத்தில் இடம்பெறும் 'மனிதன் நினைப்பதுண்டு, வாழ்வு நிலைக்குமென்று' பாடல் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின்போது, டி.எம்.எஸ். பாடிய அந்தப் பாடல் கேஸட் கொண்டு வரப்படவில்லை என்பது தெரியவர, "கவலையே வேண்டாம். பாடல் வரிகள் எனக்குத் தெரியும். டி.எம்.எஸ். எந்த உணர்ச்சியில் பாடியிருப்பார் என்பதும் எனக்குத் தெரியும். நான் வாயசைத்து நடிக்கிறேன். பிறகு சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிப் பாடலே ஒலிக்காமல் நடித்தார் சிவாஜி. படத்தில் இரண்டும் அத்தனை அற்புதமாகப் பொருந்தின.



93. இத்தனை வயதிலும் பாடல் பதிவென்றால், உற்சாகமாகத் தயாராகிவிடுவார் டி.எம்.எஸ். ஆரம்ப நாளில் கடைப்பிடித்த அதே அர்ப்பணிப்பு உணர்வோடு, பாடல் வரிகளைத் தினம் தினம் வெவ்வேறு விதமாகப் பாடிப் பாடிப் பழகிக் கொள்வார். சில ஆண்டுகளுக்கு முன், 'வாலிபன் சுற்றும் உலகம்' என்னும் படத்துக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் பி.சுசீலாவோடு இணைந்து டி.எம்.எஸ். ஒரு பாடல் பாடினார். அந்தப் படம் வெளியாகவில்லை.



94. இந்த ஆண்டு, மார்ச் மாதம் 24-ம் தேதி, டி.எம்.எஸ்ஸுக்கு 88-வது பிறந்த நாள். அன்றைய தினம், அவர் மலேசியாவில் தயாராகி வரும் ஒரு தமிழ்ப்படத்தில், மலேசிய இசையமைப்பாளர் லாரன்ஸின் இசையில், கதாநாயகனின் அப்பாவுக்காகப் பின்னணி பாடிவிட்டு வந்திருக்கிறார்.



95. 'எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பெரிய நடிகர்களுக்குப் பாடிய டி.எம்.எஸ் தனக்குப் பாட மாட்டாரா' என்று ஏங்கிய ரஜினிகாந்த், 'பைரவி' படத்தில் 'நண்டூருது, நரியூருது' பாடலைத் தனக்காகத்தான் பாடுகிறார் என்று அறிந்தபோது, மிகவும் மகிழ்ந்து அந்தப் பாடல் பதிவு முழுக்க அங்கேயே இருந்து ரசித்திருக்கிறார்.



96. கோவையில் நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டில் வெளியிடுவதற்காக, ஒரு இசை ஆல்பத்தில் டி.எம்.எஸ்ஸைப் பாட வைத்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.



97. முன்பெல்லாம் சஃபாரி சூட் அணிவதில் விருப்பம் உள்ளவராக இருந்தார் டி.எம்.எஸ். இப்போது சந்தன நிற பைஜாமா, ஜிப்பாதான்! ஒருமுறை எம்.ஜி.ஆர். இவருக்கு அளித்த தங்கச் சங்கிலியை பல வருடங்கள் ஆசையோடு அணிந்திருந்தார். இப்போது இல்லை.



98. அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கெல்லாம் பலமுறை சென்று கச்சேரிகள் செய்துள்ளார்.



99. மந்தைவெளி வீட்டின் வாசலில் ஒரு பள்ளிச் சிறுவன் தயங்கி நிற்பதைக் கண்டு, அவனை அழைத்து விசாரித்தார் டி.எம்.எஸ். அவன் கையில் ஒரு துண்டுச் சீட்டு. “ஐயா! நான் உங்கள் ரசிகன். உங்களின் இந்தப் பாடல்களை எனக்கு கேஸட்டில் பதிந்து தர முடியுமா?” என்று கேட்டான் அவன். மாடியில் இருந்த அறைக்கு அவனை அழைத்துச் சென்று, அவன் கேட்ட பாடல்களைப் பதிந்து தந்தார் டி.எம்.எஸ். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல... மு.க.அழகிரி.



100. சென்னை- திருவள்ளூரில் ஒரு கச்சேரி. தனக்கு கீ-போர்ட் வாசிக்க வந்திருந்த ஒரு குட்டிப் பையனைப் பார்த்ததும், “என்ன இது, பச்சைக் குழந்தையைப் போய்க் கூட்டிட்டு வந்திருக்கீங்க..? இவன் சரியா வாசிப்பானா?” என்று கேட்டார் டி.எம்.எஸ். “அருமையா வாசிப்பான் சார்! நம்ம சேகருடைய பையன்தான் இவன்!” என்று அறிமுகப்படுத்தினார் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. ‘உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக...’ என டி.எம்.எஸ். பாட, அந்தப் பையன் கீ-போர்டு வாசிக்க, அதில் அசந்துபோன டி.எம்.எஸ். அந்தச் சிறுவனை அருகே அழைத்து, அவன் தலையில் செல்லமாகக் குட்டி, “மோதிரக் கையால் குட்டியிருக்கேன். நீ பெரிய ஆளா வரப்போறே பாரு!” என்று அன்போடு வாழ்த்தினார். அந்தப் பையன்... ஏ.ஆர்.ரஹ்மான்.


நன்றி வேடந்தாங்கல்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக