ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்க மனம் கூடுதில்லையே !

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மறக்க மனம் கூடுதில்லையே ! Empty மறக்க மனம் கூடுதில்லையே !

Post by M.M.SENTHIL Sat Jan 17, 2015 1:18 pm

மெரினா கடற்கரை. நானும் என் மனைவியும் கடற்கரையில் காத்திருக்கிறோம். கடல் அலைகள் மிகுந்த ஆரவாரத்துடன் பாய்ந்து வந்து எங்கள் பாதங்களை ஜில்லென முத்தமிட்டு வெண்மையான நுரைகளுடன் திரும்புகின்றன.

இன்பம் ஒருபுறமும், பயம் ஒருபுறமுமாக இருவரும் ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொள்கிறோம், அலை எங்களை அடித்துச் செல்லாது என்ற எண்ணத்திலோ, ஒருவேளை அடித்துச்சென்றாலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியக்கூடாது என்ற எண்ணத்திலோ.

தூரத்தில் மிகப்பெரிய கார் ஒன்று பார்க் செய்யப்பட்டு, ஒரு பெண்ணும் அவளின் தந்தையும் இறங்கி வருவது தெரிகிறது. அந்தக்காரைத்தொடர்ந்து எங்கள் காரிலிருந்து எங்கள் மகன் இறங்கி வருவதும் தெரிகிறது. காத்திருந்த நாங்கள் அவர்களை நோக்கிப் புறப்படுகிறோம்.

நெருக்கத்தில் அந்தப்பெண்ணைப்பார்த்ததும் நான் ஸ்தம்பித்துப்போய் நின்று விட்டேன். கடல் அலைகளை விட என் எண்ண அலைகள் ஆகாய விமான வேகத்தில் என்னை என் சொந்த ஊரான திருச்சிக்கு அழைத்துப்போகிறது.

40 ஆண்டுகளுக்கு முந்திய சொந்தக்கதை; இன்று நினைத்தாலும் உடலும் உள்ளமும் உவகை கொள்கிறது.

அப்போது எனக்கு அலைபாயும் 21 வயது. மணி, ராம்கி, மாது, ரத்தினம், சேகர், பாபு, வெங்கிட்டு என பல நண்பர்கள். தெரு விளக்கடியில் இரவு 10 மணிக்குமேல் கூடி பல்வேறு விஷயங்களை விவாதித்துவிட்டு பிறகே படுக்கச்செல்வோம்.

டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் என்ற எந்த விதமான குறுக்கீடுகளும் இல்லாத காலம். வாசக சாலையில் வாங்கி வரும் புத்தகங்கள், மைதானம் சென்று விளையாட்டு, ரேடியோ, சினிமா, சிலசமயம் சீட்டுக்கச்சேரி தவிர, இது போன்ற ஆருயிர் நண்பர்களின் நேருக்கு நேர் சந்திப்பு தான் மிகச்சிறந்த பொழுதுபோக்கு.

அவரவர் வீட்டின் ஆயிரம் சமூக, பொருளாதார பிரச்சனைகள் பற்றி அலசுதல், நடிகர்திலகம் சிவாஜி, மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., படங்கள் பற்றிய விமர்சனங்கள், இடையிடையே கட்டிளம் காளை வயதில் தானே வந்துபோகும் எங்களின் ஏக்கங்களும், ஒரு சிலரின் காதல் அனுபவங்களும் எனப்பேசப்பேச நள்ளிரவு வெகு நேரம் ஆகி பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்று அவரவர் கூட்டை அடைவோம்.
.
எல்லோருமே படித்து, ஏதோ ஒரு கிடைத்த வேலையில் இருந்துகொண்டு, நிரந்தர வருவாய்க்கான வேலை வாய்ப்பைத்தேடி அலைந்த நேரம் அது. எல்லோருமே வறுமைக்கோட்டுக்கு கீழேயுமில்லாமல், மேலேயும் இல்லாமல் கோட்டை ஒட்டியேயுள்ள, ஓட்டு வீடுகளில் ஒண்டிக்குடித்தனமாக இருந்த நேரம் அது.

எங்கள் குடியிருப்பில் மிகச்சிறியதாக சுமார் ஐம்பது ஓட்டு வீடுகள். அவ்வாறான குடியிருப்புப் பகுதிகள் ஸ்டோர் என்று அழைக்கப்படும். எங்கள் வீட்டின் உட்புறத்தை விட அதிகமான புழங்கும் இடங்கள் எங்கள் வீடுகளைச்சுற்றி இருக்கும்.

நிம்மதியாகப் படிக்கவும், படுக்கவும், குளிக்கவும் பிரைவசி இல்லாத அந்தக்குடியிருப்பில் காதலில் கசிந்துருக வாய்ப்புகள் மிகவும் குறைவு. பள்ளிக்கூடம், கடைத்தெரு, கோயில்கள், பொதுக்குழாயடி, பொதுக்கிணற்றடி, பொதுக்கழிப்பிடம் செல்லும் பாதை என பொதுவான இடங்களிலே தான், ஒருவரை ஒருவர் மின்னல் போல் பார்த்து மறைவோம்.

அதற்குள் பல பொதுமக்களின் கழுகுப்பார்வைகள் எங்களை நோட்டமிடும். இருப்பினும் அதில் ஒரு நொடிப்பொழுது, மின் அதிர்வுபோல ஒருவித சுகானுபவமும் ஏற்படுவது உண்டு.

பலர் வீடுகளில் மின் விளக்கே கிடையாது. கேஸ் அடுப்பும் வராத காலம் அது. சிம்னி, அரிக்கேன் லைட், திரி ஸ்டவ், பம்ப் ஸ்டவ், குமுட்டி, கரி அடுப்பு, விறகு அடுப்பு, ரம்பத்தூள் அடுப்பு என்று அவரவர் ஏதேதோ உபயோகிப்பார்கள்.

ஒரு பழைய பாடாவதி சைக்கிளோ, ஒரு கயிற்றுக்கட்டிலோ, ஒரு மர பீரோவோ இவற்றில் ஏதாவது ஒன்று வைத்திருப்பவர் அந்தக்குடியிருப்பில் சற்று வசதியானவர் என்பதை வெளிப்படுத்தும் அளவுகோலாக இருந்தது.

அந்த ஸ்டோரில் இறைக்க இறைக்க நீர் ஊறக்கூடிய, என்றுமே வற்றாத ஒரு பெரிய பொதுக்கிணறு உண்டு. அந்தக்கிணற்றைசுற்றி பாறாங்கற்கள் பதிக்கப்பட்ட ஜில்லென்ற சமதரை. இரவுப்பொழிதில் கிணற்றடியிலும், கிணற்றைச்சுற்றியுள்ள சிமெண்ட் தரையிலுமாக, நிறைய ஆண்கள் கையில் ஒரு விசிறியுடன், துண்டை விரித்துப்படுத்திருப்பார்கள்.

இவ்வாறு படுத்திருப்பவர் பலரின் இருமல், தும்மல், ஏப்பம், கொட்டாவி, குறட்டை முதலியவற்றால், அந்தக்குடியிருப்பில் திருட்டு பயமே கிடையாது. திருடிச்செல்லும் அளவுக்கு விலை உயர்ந்த பொருட்கள் என்று எதுவும் யாரிடமும் கிடையாது. நிம்மதியான வாழ்க்கை.

இரவு நேரத்தில் கடும் குளிரோ, மழையோ வந்தால் மட்டுமே வீட்டுலுள்ள பெண்களுடன் ஆண்களும் கோழிக்குஞ்சுகள் போல அட்ஜஸ்ட் செய்து தங்கும்படியாக நேரிடும்.

இவ்வாறு கிணற்றடி போன்ற பொது இடங்களில் படுப்பவர்கள், விடிவதற்கு முன்பாக அனைவரும் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து விடுவார்கள். அவர்களில் பலரும், அதிகாலையில் கிணற்று நீரில் குளித்துவிட்டு அவரவர்கள் பிழைப்புக்குச் செல்ல வேண்டும்.

பால்காரர்கள் வருகையும், கீரை, காய்கறிகள், மண் சட்டிகளில் தயிர் என விற்பவர்கள் வருகையும், வாசல் தெளித்துக்கோலம் போடும் பெண்களுமாக அந்த மிகப்பெரிய குடியிருப்பே குதூகலமாகத் துவங்கும்.

மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள வீதியாகையால் கோயில் மணி சப்தங்களும், தேவாரம், திருவாசகம் என ஒலிபரப்பப்படும் மங்கல ஒலிகளும் அனைவர் உள்ளத்தையுமே உற்சாகப்படுத்தும்.

இன்று அந்தக்கலகலப்பான, நாட்டு ஓடுகள் வேய்ந்த, ஏழைகளின் குடியிருப்பையே அங்கு காணோம். அந்த மிகப்பெரிய கிணற்றையும் காணோம். அடுக்குமாடிக் குடியிருப்பாக மாறிவிட்டது. யார் யாரோ புதுமுகங்கள் பயத்துடன் கதவைச் சாத்திக்கொண்டு, இன்று அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

ஓட்டு வீடுகளில் அன்று ஒண்டிக்குடுத்தனம் செய்தவர்கள் இன்று எந்த எந்த வெளியூர்களிலும், வெளி நாடுகளிலும் இருக்கிறார்களோ, எப்படி எப்படி வாழ்கிறார்களோ? அந்த உச்சிப்பிள்ளையாருக்கே வெளிச்சம். சரி என் கதைக்கு வருவோம்.

பள்ளிப்படிப்பை முடித்த என் நண்பர்களில் எனக்கே வெறும் ஐந்தாண்டுகளுக்குள் ஒரு நிரந்தர வேலை உள்ளூரிலேயே கிடைத்தது. மாதச்சம்பளம் வெறும் முன்னூறு ரூபாய்க்குள் தான். இன்றைய முப்பதாயிரம் ரூபாய்க்குச்சமம். ஒரு பவுன் [8 கிராம்] தங்கம் விலை ரூபாய் 200க்குள் விற்ற காலம் அது.

நான் உண்டு என் வேலையுண்டு என்று மிகவும் சங்கோஜியான என் வாழ்க்கையில் குறுக்கிட்டவர்கள் இரண்டு பெண்கள்.

ஒருத்தி ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள். மற்றொருத்தி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மறக்க மனம் கூடுதில்லையே ! Empty Re: மறக்க மனம் கூடுதில்லையே !

Post by M.M.SENTHIL Sat Jan 17, 2015 1:18 pm

என்னை விரும்பியவள் சராசரி அழகென்றோ, சுமாரான நிறமென்றோ கூட சொல்லமுடியாதவள். இருப்பினும் பருவ வயதிற்கேற்ற பதமான பக்குவத்தில் பளபளப்பாகவே தோற்றம் அளித்தவள்.

எப்போதும் சிரித்த முகம் அவளுக்கு. அவள் சிரிக்கும் போது மேல் வரிசைப்பற்கள் அனைத்தும் சற்று தூக்கலாகத் தெரியும். எல்லோரிடமும் மிகவும் கலகலப்பாகப்பழகும் பெண் அவள்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், வலுவில் வந்து பேசிப்பழகி, என் கூச்ச சுபாவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, எப்படிப்பழக வேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி மிடுக்காக இருக்க வேண்டும் என எனக்கு நாகரீகம் சொல்லிக் கொடுத்தவளும் கூட..

என் வாலிப வயதில், முதன்முதலாக என்னுடன் மிகவும் உரிமையுடன் பழக ஆரம்பித்தவள் என்பதால், அவளுடன் கடைசிவரை நல்லதொரு நட்புடன் பழகவே, நானும் ஆசைப்பட்டேன் என்பதையும் மறுப்பதற்கில்லை.

அன்று ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்தவர்களுடன் ஆறு மாத குழந்தையொன்று கொழுகொழுவென்று வந்திருந்தது. நான் என் மடியில் வைத்து அதைக்கொஞ்சிக் கொண்டிருந்த போது, அவள் அதை என்னிடமிருந்து வெடுக்கென்று தூக்கிச்சென்று கொஞ்சுவதும், அதை என் எதிரிலேயே பலவிதமாக முத்தம் கொடுப்பதும், பிறகு அந்தக்குழந்தையை என்னிடம் திரும்பத்தருவது போல என்னையே உரசுவதுமாக ஏதேதோ கிளுகிளுப்பை ஏற்படுத்தி வந்தாள்.

நான் என் உணர்ச்சிகளை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டு, அவளிடம் மிகவும் உஷாராகவே பழகி வந்தேன். அவள் ஒரு வெகுளிப்பெண் என்று நினைத்து அவள் செயல்களை கண்டுகொள்ளாமலும், கண்டிக்காமலும் விட்டு வரலானேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மறக்க மனம் கூடுதில்லையே ! Empty Re: மறக்க மனம் கூடுதில்லையே !

Post by M.M.SENTHIL Sat Jan 17, 2015 1:19 pm

நான் என் கற்பனையில் விரும்பிய பெண் பக்கத்துத் தெருவிலிருந்து, என் பக்கத்து வீட்டுக்கு ஏதோ உறவென்று சொல்லி அவ்வப்போது வந்து செல்பவள்.

கால்களில் கொலுசுகளும், காதுகளில் ஜிமிக்கிகளுமாக வயது 16 அல்லது 17 இருக்கும் தேவதை. அழகோ அழகு. பளிச்சென்று வசீகரத் தோற்றம். பலாச்சுளை நிறம்.

அவளைப் பார்க்கும் யாருக்குமே பார்த்துக் கொண்டே இருக்கணும் போலத்தோன்றும். ஆனால் அவள் யாரையும் லட்சியம் செய்து பார்க்கவோ, பேசவோ நேரமற்றவள் போல அலட்சியமாகத்தோன்றி கொடிமின்னல் போல மறைந்து விடுவாள். அவள் நன்றாக சைக்கிள் ஓட்டுவாள்.

ஒரு நாள் அவள் ஸ்கூட்டர் ஓட்டியும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக்கிட்டியது. மற்றொரு நாள் ‘L' போர்டு போட்ட ஹெரால்ட் காரை ரோட்டில் மிகவும் மெதுவாக ஓட்டிச்சென்று கொண்டிருந்தாள். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவே அவள் எனக்குக் காட்சி அளித்து வந்தாள்.

தினமும் ஒரு கார் வீதம் ஓட்டிப்பழகிய அவள், கார் புரோக்கர் ஒருவரின் மகள் என்று, பிறகு தான் நான் தெரிந்து கொண்டேன்.

இத்தகைய அழகான, அறிவாளியான, துணிச்சலான பெண் மனைவியாக அமைந்தால் எப்படி இருக்கும் என அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பேன்.

இந்தக்காலம் போல அவளிடம் நேரிடையாகவே பேசவோ அல்லது நண்பர்கள் உறவினர்கள் மூலம் முயற்சிசெய்து பார்க்கவோ, அன்று எனக்கு ஏதோ ஒருவிதத்தயக்கம்.

எனக்கு மட்டுமல்ல, அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்த இளம் வயதினர் எல்லோருக்குமே அநேகமாக இப்படித்தான். சமூகக் கட்டுப்பாடுகள் அதிகம். நம் இஷ்டப்படியெல்லாம் சுதந்திரமாக செயல்பட்டு விட முடியாது.

பெரும்பாலும் பெரியோர்களாகப் பார்த்து செய்து வைக்கும் ARRANGED MARRIAGES மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. நம் விருப்பத்தைக் கேட்கவும் மாட்டார்கள். சொல்லவும் நமக்கு மிகவும் கூச்சமாக இருக்கும்.

ஒரு ஆணும் பெண்ணும் தனியாக சந்திப்பது, பேசுவது, நட்புடன் பழகுவது என்பதெல்லாம் நடக்காத காரியங்கள். அவை ஏதோ கொலைக்குற்றம் போல கருதப்பட்ட காலம் அது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மறக்க மனம் கூடுதில்லையே ! Empty Re: மறக்க மனம் கூடுதில்லையே !

Post by M.M.SENTHIL Sat Jan 17, 2015 1:19 pm

ஒரு நாள் தீபாவளிப் பண்டிகையன்று, கோயிலுக்குச்சென்று நான் திரும்பி வரும்போது, தெருவில் சிறுவர்கள், தொடர்ச்சியாக நிறைய பட்டாசுச்சரத்தை கொளுத்தியிருந்ததால், அங்கு அருகிலேயே கதவு திறந்திருந்த ஒரு வீட்டு வாசலில் சற்றே ஒதுங்கி நின்றேன். அந்த வீட்டின் உள்ளிருந்து, என்னை உள்ளே வரச்சொல்லி அழைப்பு வந்தது.

உள்ளே போன பிறகு தான் தெரிந்தது, அது அந்த அழகுப்பதுமையின் [கொலுசு + ஜிமிக்கியின்] வீடு என்பது. என்னை உள்ளே அழைத்தது அவளின் அப்பாவும், அம்மாவும் தான்.

என் வீட்டுக்கு பக்கத்து வீட்டின் உறவினர் என்பதால் எனக்கு அவர்களையும், அவர்களுக்கு என்னையும் ஒருவரையொருவர் ஏற்கனவே பார்த்துள்ள அனுபவம் உண்டு. ஆனால் அதிகம் பேசிக்கொண்டது மட்டும் இல்லை.

உள்ளிருந்து எட்டிப்பார்த்த அழகுப் பதுமையிடம், அவள் அம்மா தன் கையை உருட்டி ஏதோ ஜாடை காட்ட, அந்த அழகுப்பதுமை காலில் கொலுசு ஒலிக்க, காதில் எனக்கு மிகவும் பிடித்த ஜிமிக்கி தொங்க, என்னிடம் நெருங்கி வந்து, ரவாலாடு ஒன்றை என் கையில் கொடுத்துப்போனது.

இருகரங்களையும் ஒன்றாகக்குவித்து நீட்டி மிகவும் பெளவ்யமாக கோவில் பிரஸாதம் போல வாங்கிக்கொண்டேன்.

எப்போதும் அவளை பாவாடை, சட்டை, தாவணியில் மட்டுமே பார்த்திருந்த நான், இன்று தீபாவளிக்காக அணிந்திருக்கும் புத்தம் புதிய புடவையில் பார்க்க நேர்ந்தது.

கிளிப்பச்சைக்கலரில், உடலெங்கும் மின்னும் ஏதொவொரு புது டிசைனில், 'டிவிங்கிள் நைலான்' என்ற பெயரில் அந்தக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புடவையில் ஜொலிக்கக்கண்டேன்.

பைங்கிளி ஒன்றை அதன் கூட்டுக்குள் நானும் புகுந்து பார்த்தப் பரவசம் எனக்குள் ஏற்பட்டது.

சுடச்சுட உருக்கிய நல்ல நெய்யில் அப்போதுதான் உருண்டை பிடித்திருக்கிறார்கள் என்பது, அதன் மிதமான சூடு, நெய் மணம், வெளியே சற்றே எட்டிப்பார்க்கும் முந்திரிப்பருப்பின் மூக்கு முதலியவற்றால் என்னால் உணர முடிந்தது.

அவள் கைப்பட்ட அந்த ரவாலாடை, அவளின் பெற்றோர்களுக்கு எதிரில், அப்படியே முழுவதுமாக வாயில் போட்டு, அசைபோடுவது அநாகரீகமாக இருக்கும் என்று எனக்குப்பட்டது. எதையும் கையில் வைத்துக்கொண்டு, வாயால் கடித்து எச்சில் செய்து சாப்பிடும் பழக்கமும் எனக்குக் கிடையாது.

துளித்துளியாகப்புட்டு, ரஸித்து, ருசித்து கீழே சிந்தாமல் சிதறாமல் டேஸ்ட் செய்ய வேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, அந்த அழகுச்சிலை மீண்டும் என்னருகில் வந்து ஒரு எவர்சில்வர் தட்டில் மிக்ஸரும், அருகேயிருந்த ஸ்டூலில் குடிக்கத் தண்ணீரும், வைத்து விட்டு நகர்ந்த போது, நான் “ரொம்ப தாங்க்ஸ்” என்று கூட்டிமுழுங்கி வார்த்தைகளை வெளிக்கொணர்ந்து, மென்மையாகச் சொன்னேன்.

நான் அவளுடன் முதன் முதலாகப்பேசிய “ரொம்ப தாங்க்ஸ்” என்ற இரண்டே இரண்டு வார்த்தைகள் அவள் காதில் விழுந்ததோ விழவில்லையோ என சந்தேகம் ஏற்படும்படி, வாசலில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட பயங்கர சப்தம் என்னை மிகவும் வெறுப்பேற்றியது.

தின்ன ரவாலாடும், மிக்ஸரும், குடிக்கத்தண்ணீர் ஒரு மாம்பழச்சொம்பில் கொடுத்ததுடன், தன் கடமை முடிந்து விட்டதாக நினைத்த, அந்த தங்கப்பதுமை எங்கோ உள்ளே போய் மறைந்து விட்டது.

என்னுடைய உத்யோகம், சம்பள விபரங்கள், ஆபீஸ் வேலைகள், வேலை நேரங்கள், கேண்டீன் வசதிகள், போக்குவரத்து பஸ் வசதிகள் முதலியனவற்றை பற்றிய பல கேள்விகளை எழுப்பி, அந்த அவளின் தாய் தந்தையர்கள் என்னிடம் ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தனர். எதற்காக இதெல்லாம் என்னிடம் இவர்கள் கேட்டுத்தெரிந்து கொள்கிறார்கள் என்று எனக்குத் தோன்றியது.

ஒரு வேளை என் வீட்டுக்கு சம்பந்தம் பேச வரலாம் என்று நினைக்கிறார்களோ என்ற சபலமும் ஏற்பட்டது. என் மனதில் தோன்றும் இந்தச் சபலத்தையும், ஆவலையும், இனிய கனவுகளையும் தூள் தூளாக உடைப்பது போல வாசலில் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருந்தன.

அன்று தீபாவளிப் பண்டிகையாகவும், நான் அணிந்திருப்பது புது பேண்ட், சட்டை என்பதாலும், வயதில் பெரியவர்களான அவர்களை நமஸ்கரித்தேன். (தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் இதுபோல பெரியோர்கள் காலில் விழுந்து கும்பிட்டு நமஸ்கரிப்பது அப்போதெல்லாம் மிகச்சாதாரண வழக்கம் தான்)

“அதி சீக்ரமேவ விவாஹப் ப்ராப்திரஸ்து”

(கூடிய சீக்கரத்தில் உனக்கு கல்யாணம் ஆகும்படியான சந்தர்ப்பம் அமையட்டும்) என்று அவரும்,

“அடுத்த தீபாவளி தலைதீபாவளியாக இருக்கட்டும்”

என்று அந்த அம்மாவும் என்னை ஆசீர்வதித்தனர்.

இதைக்கேட்ட என் மனதில் மீண்டும் ஒரு ஜிலுஜிலுப்பும், பரவசமும் ஏற்பட்டது.

பதிலுக்கு நீயும் அவர்களிடம் “அதி சீக்கரமேவ நீங்களே எனக்கு மாமனார் மாமியாராகப் பிராப்திரஸ்து” என்று சொல்லச்சொல்லி என் உள்மனம் என்னை நச்சரித்தது.

அவர்களிடம் விடைபெற்று, ஒரு வழியாக என் வீட்டுக்குப் புறப்படலானேன். நான் அவர்கள் வீட்டை விட்டுப் புறப்படும் வரை அந்த என் கற்பனைக் கதாநாயகி, கொஞ்சமும் காட்சி தரவே இல்லை.

அதன் பிறகும், பல மாதங்களுக்கு, அந்த தங்கச்சிலையை நான் அதிகமாகப் பார்க்கும் வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லை.

அவள் கையால் அன்று என் கையில் கொடுத்த ரவாலாடு மட்டும், என் நினைவுகளில் எப்போதும் இருந்து வந்து, மனதுக்கு இதமான இனிமையைக் கொடுத்து வந்தது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மறக்க மனம் கூடுதில்லையே ! Empty Re: மறக்க மனம் கூடுதில்லையே !

Post by M.M.SENTHIL Sat Jan 17, 2015 1:20 pm

இதற்கிடையில், தூரத்துச் சொந்தம் என்று சொல்லி, எனக்குப் பெண் கொடுக்க பலரும் என் தந்தையை முற்றுகையிட்டு வந்தனர். எனக்கும் என் குடும்பத்திற்கும் ஏற்ற பெண்ணாகப் பார்த்து, எனக்கு 21 முடிந்து 22 வயதாகும் போதே அவசரமாக மணம் முடித்து வைத்தனர் என் பெற்றோர்கள்.

நாம் என்ன அழகில் பெரிய மன்மதனா! அல்லது செல்வச்செழுப்பில் தான் பெரிய குபேரனா! நம் இஷ்டம் போல பெண் தேட! என்று என் மனதை நானே சமாதானம் செய்து கொள்ள மட்டுமே முடிந்தது அன்று.

”இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” என்ற பாடல் ஒலிக்கும் போதெல்லாம் என்னை அந்த வரிகள் என்னென்னவோ சிந்திக்க வைக்கும்.

எனக்கு மனைவியாக அமைந்தவள் என்னை விட சற்று கூடுதல் நிறம் என்றும், குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு என்றும், கை நிறைய காரியம், வாய் நிறையப் பாட்டு, தலை நிறைய நீண்ட முடி, கிராமத்தில் வளர்ந்த பெண், தூரத்து சொந்தம் வேறு என, என் வீட்டார் பாராட்டி மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

இன்று வரை எந்தக்குறையுமின்றி, எங்கள் இல்வாழ்க்கையும் இன்பமாகவே ஓடி வருகிறது.

ஓரிரு வருடங்கள் முன்பு திருச்சி மலைவாசல் கடைவீதியில், அந்த நாட்களில் ஓயாமல் என்னைச் சுற்றிச்சுற்றி வந்தவளை, நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மறக்க மனம் கூடுதில்லையே ! Empty Re: மறக்க மனம் கூடுதில்லையே !

Post by M.M.SENTHIL Sat Jan 17, 2015 1:20 pm

முதுமையால் தலையில் ஆங்காங்கே சற்றே வெள்ளி முடிகளுடன் காணப்பட்டாள். வறுமைத் தோற்றம் உடுத்தியிருந்த ஆடைகளில் பிரதிபலித்தது. சற்றே உடம்பு குண்டாகவும் ஆகியிருந்தாள்.

என்னைக்கண்டதும் முக மலர்ச்சியுடன் ஒரு சிரிப்பு. அதே சிரிப்பு. முத்துப்பற்களின் மேல் வரிசை வெளியே வந்து, "நான் தான், நானே தான், அன்று இளமையில் உன்னைச் சுற்றிச்சுற்றி வந்தவள்" என்று நினைவூட்டியது, அந்த அவளின் சிரிப்பு.

என்னை உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை மிகவும் அதிசயமாக நோட்டமிட்டாள். ”பெரிய ஆபீஸர் ஆகி, கார், பங்களா எல்லாம் வாங்கியிருப்பாயே!” என்றாள்.

நடு ரோட்டில் நாங்கள் நின்று கொண்டிருந்ததாலும், போக்குவரத்து நெருக்கடிகள் அதிகம் உள்ள சாலை என்பதாலும் ”அருகில் இருந்த உணவு விடுதிக்குள் சென்று உட்கார்ந்து பேசலாமா” என்றேன் .

“ஆஹா...... நீயே அதிசயமாகவும், ஆசையாகவும், இவ்வளவு வருஷம் கழித்தாவது கூப்பிடுகிறாய்; வருவதற்கு என்ன, எனக்கு வலிக்குமா” என்று சொல்லி என்னுடன் உள்ளே வந்தாள்.

குளிரூட்டப்பட்ட தனிமைப் பிரிவுக்குச்சென்று, அமைதியான சூழலில் வசதியாக அமர்ந்து கொண்டோம்.

என்னிடமிருந்து உரிமையுடன் என் மணிபர்ஸ் மற்றும் பேனா இரண்டையும் என் சட்டைப்பையிலிருந்து அவளாகவே எடுத்து நோட்டமிட்டாள். அதில் கத்தை கத்தையாக இருந்த ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை ஆசையுடன் வெளியில் எடுத்து எண்ணிப்பார்க்க ஆரம்பித்தாள்.

“இவற்றை எண்ணி முடிப்பதற்குள் என் விரல்களுக்கு வலி எடுத்துவிடும் போலிருக்கு” என்று சொல்லி என்னைப்பார்த்து சிரித்தபடியே, திரும்ப அவற்றை எண்ணி முடிக்காமலேயே என் பர்ஸுக்குள் திணித்தாள்.

அதிலிருந்த ஒரு புதுப்பத்து ரூபாய் சலவை நோட்டை மட்டும் எடுத்து பேனாவால் என் பெயரை அழகாக எழுதி, அன்றைய தேதியையும் குறிப்பிட்டு அதை முத்தமிட்டு தன் கண்களில் ஒத்திக்கொண்டு பர்ஸின் தனி அறையில் வைத்தாள்.

“இந்த ஒரே ஒரு நோட்டை மட்டும் செலவு செய்யாமல் என் ஞாபகார்த்தமாக பத்திரமாக வைத்துக்கொள்” என்றாள்.

பர்ஸிலிருந்த என் விஸிட்டிங் கார்டுகளில், இரண்டே இரண்டு மட்டும் எடுத்துக்கொண்டு, அதைப்படித்துப்பார்த்து, வியப்பில் தன் புருவங்களை சற்றே உயர்த்தி, என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே, அவற்றை அவள் தன் முன்கழுத்துக்கு கீழ்ப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் பத்திரப்படுத்திக் கொண்டாள்.

“அந்த என் விஸிடிங் கார்டுகளை, பத்திரமாக வைத்துக்கொள்ள வேறு இடமே உனக்கு கிடைக்கவில்லையா? என்றேன்.

“எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் தான், நான் உன்னை பத்திரமாக வைத்திருக்கிறேன்; உனக்குத்தான் எப்போதுமே ஒரு எழவும் புரிய மாட்டேங்குது; சரி அதை விடு; இப்போ என்ன சாப்பிடலாம்?" என்று சிரித்துக்கொண்டே பேச்சை மாற்றினாள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மறக்க மனம் கூடுதில்லையே ! Empty Re: மறக்க மனம் கூடுதில்லையே !

Post by M.M.SENTHIL Sat Jan 17, 2015 1:21 pm

”நீ பார்த்து எது ஆர்டர் கொடுத்தாலும், எனக்கு ஓ.கே” என்றேன்.

ஸ்வீட் முதல் கூல்ட்ரிங்க்ஸ் ஐஸ்கிரீம் வரை அவளே அனைத்தையும் அழகாக ஆர்டர் செய்தாள். அந்த 40 நிமிடங்களுக்குள் கடந்த 40 வருட சமாசாரங்களையும் சரமாரியாக எடுத்துரைத்தாள்.

ஏதேதோ தனது வருத்தங்களையும் பகிர்ந்து கொண்டாள். அவற்றை உன்னிப்பாகக் கேட்டு வந்த நான், அவ்வப்போது அவளுக்கு சற்றே ஆறுதல் வார்த்தைகளும் கூறி வந்தேன்.

பல ஊர்கள் சுற்றி தற்சமயம் ஈரோட்டில் வசிப்பதாகவும், தனக்கு இரண்டே இரண்டு பெண்கள் மட்டுமே என்றும், இருவரும் காலேஜ் படிப்பதாகவும், தன்னைப்போல் இல்லாமல் நல்ல கலராகவும் அழகாகவும் இருப்பதாகவும் கூறியவாறே, மீண்டும் சிரித்தாள்.

இவளுடன் பேசிக்கொண்டே இருந்தால், நாமும் எல்லாக் கவலைகளையும் மறந்து, எப்போதுமே சிரித்துக்கொண்டே இருக்கலாம் போல உள்ளதே, என்று நினைத்துக்கொண்டேன்.

“நிறைய அடர்த்தியான தலைமுடியுடன், அழகாக கர்லிங் ஹேர் நெற்றியில் விழும்படி ஜோராக இருப்பாயே! ஏன் இப்படி உன் பின்மண்டையில் கொஞ்சூண்டு ரெளண்டாக வழுக்கை விழுந்துள்ளது?” என்று கேட்டுச் சிரித்தாள்.

“வயதுக்கேற்ற வழுக்கை; என்ன செய்வது” என்றேன்.

“விக் வைத்துக்கொண்டு எப்போதும் இளமைத் தோற்றத்துடன் இரு” என்றாள்.

என்னைப்பற்றி அடிக்கடி நினைத்துக் கொள்வாளாம். தனக்கு ஒரு பிள்ளைக்குழந்தை பிறந்தால் என் பெயரையே சூட்ட வேண்டும் என்று நினைத்திருந்தாளாம்.

நல்ல வேளையாக நான் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளாததும் நல்லது தானாம். அவளின் துரதிஷ்டம் என்னையும் சுகப்பட வைக்காமல் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்குமாம். ஏதேதோ கற்பனைகள் செய்து பார்த்திருக்கிறாள்...பாவம்.

உருவத்தில் அவள் முழுப் பலாப்பழம் போலத்தோன்றினாலும், உள்ளத்தில் நல்ல இனிய பலாச்சுளை தான் என்று நினைத்துக் கொண்டேன்.

ஒருவருக்கொருவர் விடைபெறும் முன், என் பர்ஸிலிருந்து பணம் எடுத்து ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கித் தன் தலையில் சூடிக்கொண்டாள். எதிர்புற ரோட்டுக்கடையில் ஒரு ஜோடி லேடீஸ் செருப்பு வாங்கி அணிந்து பார்த்தாள்.

“நல்ல பெரிய செருப்புக்கடைக்குப்போய் நல்ல தரமானதாக, லேடீஸ் சப்பலாக வாங்கிக்கொள்ளலாமே” என்றேன்.

“இது போதும்; ஒரு ஆறு மாதம் உழைத்தால் போதும்; விலையும் மலிவு; அடிக்கடி அறுந்து போகும்; அல்லது தொலைந்து போகும்; பெரிய கடைக்கெல்லாம் போய் வாங்கினால் எனக்குக் கட்டுப்படியாகாது” என்று சொல்லி செருப்புக்கும் என் பர்ஸிலிருந்து பணம் எடுத்துக்கொடுத்தாள்.

என்னுடன் ஒரு மணி நேரம் இன்று மனம் விட்டுப்பேசி, உச்சி முதல் உள்ளங்கால் வரை [தலைக்கு மல்லிகைப்பூ, வயிற்றுக்கு ஆகாரம், கால்களுக்கு செருப்பு என ] திருப்தியாக அனைத்தையும் அனுபவத்ததில், தான் ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டதாகச்சொல்லி சிரித்தாள்.

அன்று முதல் இன்று வரை அவள் என் மீது பிரேமபக்தி கொண்டிருப்பதை என்னால் நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது.

“உன் பர்ஸ் மிகவும் கனமாக உள்ளது. பத்திரமாக வைத்துக்கொள்” என்று சொல்லி, என்னிடம் திரும்ப ஒப்படைக்கப் பார்த்தாள்.

“நீயே அந்தப்பர்ஸில் உள்ள முழுப்பணத்தையும் எடுத்துக்கொள்; உன் அவசர அவசிய செலவுகளுக்கு வைத்துக்கொள்; கடவுள் புண்ணியத்தில் எனக்குப்பணத்துக்கு இப்போதெல்லாம் பஞ்சமே இருப்பதில்லை” என்று மிகவும் வற்புருத்திக்கூறினேன்.

ஒரே ஒரு நிமிடம் தயங்கினாள். ஏதோ பலமாக யோசித்தாள். ஆனாலும் பிறகு வாங்கிக்கொள்ள மறுத்து விட்டாள். பர்ஸை என்னிடம் ஒப்படைத்தபடியே, கண்ணில் ஏதோ தூசி விழுந்து விட்டதாகக்கூறி, தன் புடவைத்தலைப்பால் துடைத்துக்கொண்டாள்.

மீண்டும் தன் முத்துப்பற்களைக்காட்டி ஒரு சிரிப்பு சிரித்தபடியே என்னிடம் விடைபெற்றுச் சென்றாள். அவள் என் கண்பார்வையிலிருந்து மறையும் வரை அவள் நடந்து சென்ற பாதையையே நோக்கிக்கொண்டிருந்தேன்.

என்னை ஜன்ம ஜன்மமாக, ஆத்மார்த்த அன்புடன் தொடர்ந்து வந்துள்ள, ஏதோவொரு மிக நெருங்கிய உண்மையான உன்னதமான உறவு, என்னை விட்டு இப்போது, எங்கோ, வெகுதூரம் விலகிச் செல்வதுபோல உணர்ந்தேன்.

அதன் பிறகு இன்று வரை நான் அவளை சந்திக்கவே இல்லை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மறக்க மனம் கூடுதில்லையே ! Empty Re: மறக்க மனம் கூடுதில்லையே !

Post by M.M.SENTHIL Sat Jan 17, 2015 1:21 pm

என் கற்பனைக்காதலியான அந்த பாரதி கண்ட புதுமைப்பெண்ணின் அசல் அச்சில் இருந்த இந்தப்பெண்ணை கடற்கரையில் கண்டு சிலையாகிப்போன என்னை, என் மகன் “என்னப்பா...ஏதோ யோசனையில் இருக்கிறீர்கள்! “மீட் மிஸ்டர் கோபிநாத், மிகப்பெரிய தொழிலதிபர், அவரின் ஒரே பெண் இவள்” என்றான்.

தொழிலதிபருடன் கை குலுக்கினேன். அந்த அழகு தேவதையைக் கைகூப்பி வணங்கினேன். அந்தப்பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் என் மனைவிக்குப் பிடித்துப்போய் விட்டது.

சம்ப்ரதாயத்திற்காகவும், மேற்கொண்டு பேசி முடிவெடுக்க நாங்கள் காரில் ஏறி பெண் வீட்டுக்குப்போனோம். ஏற்கனவே என் பையனும் அந்தப்பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசி முடிவெடுத்துவிட்ட விஷயம் தான்.

அந்தப்பெண்ணின் வீட்டை அடைந்த நாங்கள், அவர்களின் செல்வச்செழிப்பைக்கண்டு வியந்து போனோம். பெண்ணின் தாயாரைப்பார்க்க வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தைத் தெரிவித்தோம்.

சற்றே தயங்கியவாறு அழைத்துச்சென்றனர். பெண்ணின் தாயாரைப்பார்த்த நானும் என் மனைவியும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.

ஒரு தனி அறையில் சங்கிலியால் கட்டிப்போட்டிருந்தனர். தலை முழுவதும் ஆங்காங்கே புண்ணுடன் கூடிய வீக்கங்கள். சம்மர் க்ராப் அடித்த தலைபோல முடிகள் ஆங்காங்கே வெட்டப்பட்டிருந்தன.

எங்களைக்கண்டதும் ஒரு புன்சிரிப்பு, ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும். பிறகு கேவிக்கேவி அழுகை. எங்கேயோ வெறித்த ஓர் பார்வை. சற்று நேரத்தில் நைட்டியில் சுருண்டு படுத்துக்கொண்டாள்.

சிவந்த முகம் வெளிறிப்போய் இருந்தது. கைகளிலும் ஆங்காங்கே காயங்கள். ஒருசில வருடங்களாக ஏதோ ஒருவித மனோவியாதியாம். உடுத்தும் உடைகளையே உருவி விட்டெறிந்து விடுகிறாளாம்.

பணக்காரக்கணவர், எடுபிடியாக எக்கச்சக்க வேலையாட்கள், விலையுயர்ந்த கார்கள், அழகிய தோட்டங்களுடன் மிகப்பெரிய பங்களா வீடு, அழகு தேவதையாக ஒரே மகள். அனைத்து சுகங்கள் இருந்தும் அனுபவிக்கக்கொடுத்து வைக்காத ஜன்மம். என்ன கொடுமை இது. என் மனது மிகவும் நடுங்கியது.

எப்படி அழகாகவும், மிடுக்காகவும் இருந்த என் அன்றைய கற்பனைக் கதாநாயகி, அழகு தேவதை, தங்கப்பதுமை, தங்கச்சிலை, பைங்கிளி என்றெல்லாம் என்னால் வர்ணிக்கப்பட்டவள் இன்று இப்படி அலங்கோலமாக ஆகிவிட்டாளே! என நினைத்து என் மனம் கண்ணீர் வடித்தது. அங்கு நிற்கவோ அவளைத்தொடர்ந்து பார்க்கவோ என் மனம் சகிக்காமல், வேறு பக்கமாக என் பார்வையைத் திருப்பிக்கொண்டேன்.

இளமையும் அழகும் ஆரோக்கியமும் என்றும் நிரந்தரமல்ல என்பதை இந்த என் அனுபவத்தில் புரிந்து கொண்டேன்.

என் எண்ணங்களையும், உணர்வுகளையும், அந்த நாள் ஞாபகங்களையும் அங்கு யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத பரிதாப நிலையில் நான் இருந்தேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மறக்க மனம் கூடுதில்லையே ! Empty Re: மறக்க மனம் கூடுதில்லையே !

Post by M.M.SENTHIL Sat Jan 17, 2015 1:22 pm

ஈ என்று எப்போதும் என்னிடம் இளித்துப் பேசிவந்த அந்த ஈரோட்டுக்காரியையும், மனநலம் குன்றிய நிலையில் உள்ள இந்த மதராஸ்காரியையும் மாறிமாறி நினைத்துக்கொண்டே, என் மனைவியைத் திரும்பிப்பார்த்தேன்.

இந்த வயதிலும் அவள் மிகவும் அழகாக, லட்சணமாக, ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றியது. என் தாய் தந்தையர் பார்த்து, எனக்குப் பொருத்தமானவளாகத் தேர்ந்தெடுத்து, கட்டிவைத்து ஆசீர்வதிக்கப்பட்டவள் அல்லவா என் மனைவி என்று, என் பெற்றோர்களை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.

“எது எப்படியிருந்தாலும் நம் மகன் அந்தப்பெண்ணையும், அந்தப்பெண் நம் மகனையும் மனதாரக் காதலிப்பதாக வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்கள். பிறகு என்ன! கல்யாண ஏற்பாடுகளைச் செய்துவிடுவோம்” என்று ரகசியமாக என் மனைவியிடம் தெரிவித்தேன்.

என் மகன் என்னை நெருங்கி “அவளின் அம்மாவை மட்டும் மறந்து விட்டுப்பார்த்தால், இந்த சம்பந்தம் எல்லாவிதத்திலும் ஓ.கே. தானே அப்பா” என்றான்.

“அவளின் அம்மாவை ஏன் மறக்கணும்? அவர்களும் நன்றாக அழகாக இருந்தவர்கள் தானே ஒரு காலத்தில்!

நடுவில் வந்துள்ள ஏதோ ஒரு சோதனை - கண் திருஷ்டிபோல இப்படி ஆகியுள்ளது - தகுந்த சிகிச்சை அளித்து வருவதால் கூடிய சீக்கரம் குணமாகி விடுவார்கள்” என்று அவனுக்கு சமாதானம் சொல்வதுபோல எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

சிறுகதை, By வை. கோபாலகிருஷ்ணன்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மறக்க மனம் கூடுதில்லையே ! Empty Re: மறக்க மனம் கூடுதில்லையே !

Post by T.N.Balasubramanian Sat Jan 17, 2015 2:00 pm

அன்பு மலர்  அன்பு மலர் , வை .கோ .அருமையான நடை .

மிக்க நன்றி, செந்தில்  அன்பு மலர்  அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மறக்க மனம் கூடுதில்லையே ! Empty Re: மறக்க மனம் கூடுதில்லையே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum