ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

3 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 Empty சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 2:00 pm

First topic message reminder :

சேதி சொல்லும் சிற்பங்கள்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P40b


சைவர்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரத்தையும் (தில்லை), வைணவர்களுக்கான கோயில் என்றால் ஸ்ரீரங்கம் ஸ்ரீஅரங்கநாதர் ஆலயத்தையும் சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் பெரியகோயில் என்றால் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்று சொல்லப்படும் ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம்தான்!

சுமார் ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கிற பிரமாண்டமான ஆலயம். சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜசோழன், தன்னை சிவபாதசேகரன் என அழைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி கொண்டான். இவனின் மகன் ராஜேந்திர சோழன், தன் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாக 'சிவசரணசேகரன்’ எனும் பெயரைப் பெருமையுடன் ஏற்றுக்கொண்டான். சைவத்தின் மீதும் சிவபெருமானின் மீதும் மாறாப் பற்றுக் கொண்ட தந்தையும் மகனும் கட்டிய ஆலயங்கள் ஏராளம்.

தாங்கள் அடைந்த பெருவெற்றியின் அடையாளமாகவோ அல்லது தங்கள் பெருமித வெற்றி தந்த ஆணவத்தின் வெளிப்பாடாகவோ அவர்கள் கோயில்களைக் கட்டவில்லை. கடவுளின் முன்னே அனைவரும் சமம் எனும் உயர்ந்த நெறியை உலகுக்கு உணர்த்தும் விதமாகவே ஆலயங்களை அமைத்தார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு பெரியகோயிலில், திருமாளிகைப் பத்தி எனும் திருவூற்று மண்டபத் தின் ஒரு பகுதியைக் கடைக்கால் வரை தோண்டி, அடித்தளமாக விளங்கும் முண்டுக் கற்களை வெளியே எடுத்துவிட்டு, மீண்டும் அந்தப் பகுதியை முழுவதுமாகச் சீரமைத்தனர். அப்போது உள்ளிருந்து எடுக்கப்பட்ட முண்டுக் கற்களில் மாமன்னன் ராஜராஜசோழனின் படைவீரர்களின் பெயர்கள் மற்றும் தனி நபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. எதற்காக அங்கே பெயர் பொறித்தான் மன்னன்? கற்களை எவர் வழங்கினாரோ, அவர்களின் பெயரைக் கல்வெட்டுகளாகப் பொறித்து, அவர்களுக்குப் பெருமைச் சேர்த்த உயர்ந்த குணம் கொண்ட மன்னன் அவன்.

இதையெல்லாம் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், ஓர் உண்மை புலப்படும் நமக்கு. இந்த அழகிய, பிரமாண்டமான பெரியகோயிலின் அடித்தளக் கற்களில் ஓர் இடத்தில்கூட மன்னனின் பெயர் பொறிக்கப்படவில்லை. சாதாரணக் குடிமக்களின் பெயர்களும் படைவீரர்களின் பெயர்களும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, இந்தக் கோயிலை நிலையாகத் தாங்கி ஆராதிப்பவர்கள் எளிய அடியார்களும் தொழிலாளர் களும்தான் என்பதை நமக்கு உணர்த்த, ராஜராஜசோழன் செய்திருக்கிற விஷயமாகத்தான் இது எனக்குத் தோன்றுகிறது.

அதேபோல், கோயிலின் திருச் சுற்று மாளிகையைப் பார்த்திருக் கிறீர்கள்தானே! அதன் அழகில் அசந்து போய்விடுவோம். அத்தனை அழகு; அத்தனை பிரமாண்டம்! அவன் நினைத்திருந்தால், அக்கா குந்தவை நாச்சியார் பெயரில், தன் மனைவியர் பெயரில், மகன் பெயரில், ஏன்... தன் பெயரில்கூட இந்தத் திருச்சுற்று மாளிகையைச் சொல்லியிருக்கலாம். ஆனால், தன் சேனாதிபதி கிருஷ்ணன் ராமன் என்பவர் பெயரில் திருச்சுற்று மாளிகையை அமைக்கச் செய்தான். இந்தத் தகவலை கோயிலில் உள்ள தூண் ஒன்றில் கல்வெட்டாகவும் பொறித்துள்ளான். அதாவது, சோழ தேசத்தின் மிக முக்கியமான கோயிலாக மட்டுமின்றி, உலகமே வியந்து பார்க்கும் ஆலயத்தின் கட்டுமானத்தில், அதன் பெருமை யில் அனைவரின் பங்களிப்பும் பெயர்களும் இருக்கவேண்டும் என்று பரந்த மனத்துடன் யோசித்துச் செயல்பட்டிருக்கிறான், மன்னன்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P40
அதேபோல், இன்னொரு சிலிர்ப்பான விஷயம்... கோயிலில் உள்ள எல்லாத் தெய்வங்களுக்குமான பூஜைகளுக்கு நிவந்தம் அளித்துள்ளார்கள், பலரும். தனிநபர்கள், வணிகர்கள், ஊர்ச்சபையினர் என நிவந்தம் அளித்தவர்களின் பெயர்களை யெல்லாம் கல்வெட்டுக்களில் பொறித்து, அவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறான் ராஜராஜசோழன்.

கோயில் விமானத்தின் வடக்குப் புறத்தில், சண்டீசர் சந்நிதிக்கு எதிரில், வாய்மொழி ஆணையாகச் சொன்னதை அப்படியே பதித்திருக்கிறான் மன்னன். 'தஞ்சாவூரில் தான் எடுப்பித்த கற்கோயிலான ராஜராஜச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பரசாமிக்கு, தான் கொடுத்தது, தன் அக்கன் (சகோதரி) குந்தவைதேவியார் கொடுத்தது, தன் தேவிமார்கள் கொடுத்தது ஆகியோருடன் சிவனார்க்கு யார் யாரெல்லாம் எது எதெல்லாம் கொடுத்தார்களோ அந்தக் கொடை விவரங்களை தன் கொடை விவரத்துடன் சேர்த்துப் பொறிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப் பித்துள்ளான். அத்துடன், அருகிலேயே மிகப் பெரிய பட்டியலையும் குறித்துள்ளான். அந்தக் கல்வெட்டை இன்றைக்கும் பார்க்கலாம்.

அதுமட்டுமா? தஞ்சைப் பெரிய கோயிலுக்கென 400 ஆடல்மகளிரை நியமித்துள்ளான் மன்னன். இசைக்கவும் பக்கவாத்தியம் முழங்கவும் 220 பேரையும், தேவாரம் பாடுவதற்கு 50 ஓதுவாரையும், நூற்றுக்கும் மேற்பட்ட மெய்க்காவலர்களையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளர்களையும் நியமித்திருக்கிறான் ராஜராஜசோழன். அவர்களின் பெயர், ஊர், ஊதியம், வேலை எனப் பலவற்றையும் கல்லில் பதித்திருக்கிறான்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P40c
கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சரமல்லன். அவனைக் கௌரவிக்கும் பொருட்டு, அவன் பெயருடன் தன் பெயரையும் இணைத்து ராஜராஜப் பெருந்தச்சன் எனப் பட்டம் அளித்துச் சந்தோஷப்படுத்தியிருக்கிறான். அதுமட்டுமா? ஆயிரத்துக்கும் மேலான கோயில் பணியாளர்களின் வசதிக்காக ஈரங்கொல்லிகள் (துணி வெளுப்பாளர் கள்), சிகை அலங்காரம் செய்யும் நாவிதர் கள் எனப் பலரையும் நியமித்து, சிகை அலங்காரக் கலைஞன் ஒருவனுக்கு, ராஜராஜ நாவிதன் எனப் பட்டமளித்தான் மன்னன். இறைப் பணியில் எல்லா வேலையும் போற்றத்தக்கதே என்பதை வலியுறுத்திய பெரிய மனம் கொண்ட மன்னன், ராஜராஜ சோழன். இன்னொரு முக்கியமான விஷயம்... கலைகள் அனைத்தும் வளர்ந்த இடம் ஆலயம். கலைஞர்களுக்கு எஜமானன், பெருங்கோயில் ஈசனே! இதை உலகத்தார் உணரும் வகையில், ஈசனின் பண்டாரத்தில் இருந்து கலைஞர்களுக்கு ஊதியமும், கோயில் நிர்வாகிகளுக்கு அரசு பண்டாரத்தில் இருந்து ஊதியமும் அளித்து, கலைஞர்கள் இறைவனின் அடிமை என்பதையும், அரசனுக்கு ஒருபோதும் அவர்கள் அடிமை இல்லை என்பதையும் நிலைநாட்டி, அதனைக் கல்வெட்டுகளிலும் பொறித்து வைத்துள்ளான் மன்னன்.

பஞ்சபூதங்களால் இயங்குகிற உலகம் இது. தஞ்சைப் பெரியகோயிலின் கட்டுமான அமைப்புகளும் பஞ்சபூதங்களின் வடிவமாகக் கட்டப்பட்டுள்ளன. இயற்கையையும் இறைவனையும், குறிப்பாக மக்களையும் ஒரு வரிசையில் கோத்து, சமமாகப் பாவித்து, பொற்கால ஆட்சியையே நடத்திச் சென்றான், ராஜராஜசோழன் என்பதை இன்னமும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன, கோயிலில் உள்ள கல்வெட்டுகள்.

- புரட்டுவோம்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down


சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 Empty Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 2:52 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 10
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P22a
காஞ்சிபுரத்துக் கயிலாசமான ராஜசிம்மேச்சரத்தில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் மணற்கற்கள் என்று கூறப்படும் ஒருவகைக் கல்லால் உருவாக்கப் பெற்றவை. அவை கருங்கற் சிற்பங்களின் உறுதித்தன்மையைவிட சற்றுக் குறைவு உடையவைதான்.

அந்த மணற் கற்சிற்பங்களை வழுவழுப்பாகச் செய்ய இயலாது. அதனால்தான் ராஜசிம்ம பல்லவன், கச்சிப்பேட்டுப் பெரிய தளியில் எடுத்த மணற் கற்சிற்பங்களின் மீது சுண்ணாம்புக் காரையைப் பூசி, அதன் மேல் வண்ணங்களைத் தீட்டச் செய்தான். இன்றைக்கும் ஸ்ரீகயிலாசநாதர் கோயில் சிற்பங்கள் சிலவற்றில் பழைய சுண்ணாம்புக் காரையையும், அதன் மேல் வண்ணங்கள் தீட்டப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த திருப்பணிகளின்போது, மணற் கற்சிற்பங்கள்மீது அளவுக்கு அதிகமான சுண்ணாம்புக் காரையைப் பூசி, பல்லவ சிற்பங்களின் அழகைக் குறைத்து விட்டார்கள். ஆனாலும், அவர்கள் பூசிய பூச்சு கால வெள்ளத்தில் சிதைந்து விழுந்து விட்டதால், பல்லவச் சிற்பிகள் படைத்த நுட்பத்தையும் எழிலையும் இப்போது நம்மால் பார்க்கமுடிகிறது.

திருச்சுற்றில் உள்ள சிற்றாலயம் ஒன்றில் கிராதார்ஜுனர் புராணக் காட்சி இடம்பெற்றுள்ளதைக் காணலாம். மூகாசுரன் பன்றி வடிவில் காட்டில் திரிந்தபோது, அங்கு தவம் புரிய வந்த அர்ஜுனன் தனக்கு இன்னல் தந்த பன்றியைக் கொல்ல அம்பு தொடுத்தான். அதே நேரத்தில், அங்கு வேடுவனாக வந்த சிவபெருமான் அதே பன்றி மீது அம்பு எய்ய, பன்றி வீழ்ந்தது. இருவரும் தான்தான் பன்றியை வீழ்த்தியதாக ஒருவருக்கொருவர் பூசல் கொண்டு சண்டையிட்டார்கள். இந்தக் காட்சியை விளக்குகிற சிற்பப் படைப்பை இங்கே கண்டு பிரமிக்கலாம்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P22v
பின்புலத்தில் பன்றி நிற்க, வேடுவனாக வந்த ஈசனை தன் வில்லால் அர்ஜுனன் தாக்க முற்படுகிறான். ஒருவருக்கொருவர் எதிரெதிர் நின்று மோதும் அந்தக் காட்சியை பல்லவச் சிற்பி அப்படியே சிற்பமாக கல்லில் வடித்துள்ள நுட்பம் நம்மை வியக்கச் செய்கிறது.

கருவறைச் சுவரில் எழிலார்ந்த சிம்மத் தூண்கள் அழகு செய்ய, கோஷ்ட மாடம் ஒன்றில் கங்காளத்தைத் தோளில் சுமந்தவாறு பிட்சாடனர் செல்கிறார். அந்தக் கோலத்துக்கே உரிய பாதரட்சைகள், அதேவிதமாக அவரின் திருவடியை அலங்கரிக்கின்றன.

தாருகாவனத்து ரிஷிப் பெண்கள் மண்டியிட்டு அமர்ந்தவாறு பணி செய்கின்றனர். பின்புலத்தில் ரிஷி ஒருவர், தலைக்கு மேல் கையுயர்த்தி தங்கள் மனைவியர் ஏமாறும் அவலத்தைக் காட்டி நிற்கிறார். பிறை மாடத்தின் கீழே யானை ஒன்று படுத்துள்ளது. மேலே, சிவபெருமான் காலை மடித்தும் உயர்த்தியும் சம்ஹாரத் தாண்டவம் ஆடி நிற்கிறார்.

திருச்சுற்றின் மேற்புறம் சப்தமாதர் ஏழு பேரும் நீண்ட ஆசனம் ஒன்றில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். கருவறை கோஷ்டத்தில் மார்கண்டேயனுக்காக காலனை (எமன்) தன் காலால் உதைத்து உருட்டுகிற காலகால தேவரின் சிற்பம் காணப்பெறுகிறது. நான்கு திருக்கரங்களோடு இந்தத் தேவதேவன் கையில் திரிசூலமும் பாசமும் கொண்டு, ஒரு கரத்தால் தர்ஜனி முத்திரையும் மற்றொரு கையால் விஸ்மய முத்திரையும் காட்டியவாறு, விழுந்து கிடக்கிற எமன் மீது தன் வலக்காலை வைத்து, இடக் காலால் அவன் தலையை அழுத்த முற்படுகிறார். அழுத்தம் தாங்க இயலாத எமன் வாய் பிளந்து அலறுகிறான். ஈசனாரின் முகத்தில் கோபமும், எமன் முகத்தில் வேதனையும் வெளிப்படுவதை அப்படியே தத்ரூபமாகத் தரிசிக்கலாம்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P22b
மற்றொரு கோஷ்டத்தில், திரிபுராந்தகராக சிவபெருமான் தேர் மீது எழுந்தருளும் காட்சியும் இங்கே வடிக்கப்பட்டுள்ளது. எட்டுக் கரங்களுடன் திகழும் பரமனுக்கு மேலே குடை திகழ, சிவனார் வில்லேந்தியவாறு கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

அவருக்கு அருகே திருமால் நிற்க, கீழே பூத கணங்கள் வாள், கதை போன்ற ஆயுதங்களை ஏந்திப் போரிடுகின்றனர். திரிபுர அசுரர்களைத் தன் புன்முறுவலால் எரித்த திரிபுராந்தகரின் எழிற் கோலத்தைச் சிற்பிகள் கல்லில் அழகுற வடித்துவிட்டார்கள். ஆனால், வார்த்தைகளில் அதனை வடிப்பது கடினமாக உள்ளது.

ஒரு மாடத்தில், பாய்ந்து வரும் சிம்மத்தின் முதுகில் அமர்ந்தவாறு ஸ்ரீதுர்கா தேவியின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. ஒரு கையால் வில்லை ஏந்தியவாறு அம்பறாத்துணியிலிருந்து அம்பை எடுக்க முயற்சி செய்கிறாள் தேவி. மற்ற திருக்கரங்களில் தேவியின் ஆயுதங்கள் உள்ளன. இந்தச் சிற்பத்தின் ஒரு சில பகுதிகள் சிதைவுற்றிருப்பினும், தேவியின் முகத்தில் காணப்பெறும் கருணையின் வெளிப்பாட்டுக்கு ஈடாக எதையும் சொல்லமுடியாது.

மற்றொரு மாடத்தில், தேவி திரிபுரபைரவியாக ஆசனத்தின் மீது ஒரு காலை மடித்த நிலையில் அமர்ந்துள்ளாள். திரிசூலம், பரசு, கபாலம், அக்கமாலை ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். முகத்தில் ரௌத்திரத்தின் முழு வெளிப்பாட்டையும் நாம் கண்டு உணரலாம்.

இப்படியாக... எண்ணிலடங்காத சிற்பங்கள் பலவற்றைத் தாங்கி நிற்கும் காஞ்சிபுரம் ஸ்ரீகயிலாசநாதர் ஆலயத்துக்குள் சென்று சிற்ப நுட்பங்களைப் பார்த்தால், உன்னதங்கள் பலவற்றைக் கண்ட புதிய மனிதனாகவே மாறி வெளியே வருவோம்.

- புரட்டுவோம்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 Empty Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 2:59 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 11
ஆலயம் ஆயிரம்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P56(1)
தஞ்சையில், கி.பி.1014-ஆம் வருடம், சோழச் சக்கரவர்த்தியாக முடிசூடிக்கொண்ட முதலாம் ராஜேந்திரசோழன், முதல் பத்து வருடங்கள் வரை தஞ்சை அரண்மனையிலேயே தங்கி, ஆட்சி புரிந்து வந்தான். மலேசியா, இந்தோனேஷியா, பாலித்தீவுகள், அந்தமான் நிக்கோபர் தீவுகள், போர்னியோ போன்ற கிழக்காசிய நாடுகளை வெற்றி கண்டு, அங்கெல்லாம் புலிக்கொடியை பறக்கச் செய்த மாபெரும் வெற்றியாளன் அவன்.

பின்னர், ராஜேந்திர சோழன் புதியதொரு தலைநகரை நிர்மாணித்தான். அங்கே, பெருவுடையார் கோயிலைப் போலவே, அதாவது தஞ்சாவூரில் உள்ள பெரியகோயிலைப் போலவே சிவாலயம் ஒன்றை எடுப்பித்தான். அந்த நகரத்துக்கு நீராதாரம் வேண்டும் என்பதால், மிகப்பெரிய ஏரி ஒன்றையும் வெட்டுவித்தான்.

அந்தக் காலகட்டத்தில், அவனின் போர்த்தளபதிகளும் வீரர்களும் வங்கதேசம் வரை படையெடுத்து வென்றனர். கங்கையில் இருந்து ஆயிரக்கணக்கான பொற்குடங்களில் புனிதநீரை எடுத்து வந்தனர். அந்தப் புண்ணிய நீரால், தான் நிர்மாணித்த புதிய நகரத்தைப் புனிதப்படுத்தினான். அங்கே, தான் கட்டிய கோயிலில் குடிகொண்டிருக்கும் சிவலிங்கத் திருமேனிக்கும் கங்கை நீரால் அபிஷேகம் செய்து, வணங்கினான்.

அந்த மிகப் பெரிய ஏரியில் கங்கை நீரைக் கலந்து, ஏரியைப் புனிதப்படுத்தினான். அதற்குச் சோழகங்கம் எனப் பெயரிட்டு மகிழ்ந்தான். சிவாலயத்துக்கு 'கங்கை கொண்ட சோழீச்சரம்’ எனப் பெயர் சூட்டினான்.

இன்றைக்கும் பார்த்துப் பிரமிக்கத்தக்க அளவில் பிரமாண்டமாகத் திகழ்கிறது கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயில். ஆனால் என்ன.... ராஜேந்திர சோழன் நிர்மாணித்த கோயில், இன்றைக்குப் பாதியளவு மட்டுமே எஞ்சியிருக்கிறது. அந்நியப் படையெடுப்புகள், கிழக்கிந்திய- ஆங்கிலேயக் கம்பெனியாரின் தாக்குதல்கள், பிரெஞ்சுப் படையினரின் அட்டூழியம், கீழணை கட்டுவதற்காக ஆங்கிலேயப் பொதுப்பணித் துறையினர் வெடி வைத்துத் தகர்த்தது எனப் பல காரணங்களால், கோயிலின் கட்டடப் பகுதிகளும் சிற்பங்களும் அழிந்துபோயின. ஆனாலும், எஞ்சியிருப்பவையே மாபெரும் பொக்கிஷங்களாக, பிரமிப்பின் உச்சகட்டமாகத் திகழ்கின்றன.

கோயில் விமானத்தின் தென்புறம் தேவகோஷ்டத்தில் திருமகளின் சிற்பம், சிற்பியின் அதிஅற்புதப் படைப்புக்குச் சான்று! திருமகள் என்பவள், பண்டைய காலத்தில் தாய்தெய்வமாகப் போற்றி வணங்கப்பட்டதாகச் சொல்கின்றன, கல்வெட்டுகள். மலர்ந்த தாமரைப் பூவின்மீது தாயார் அமர்ந்திருக்கிறாள்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P56b
கருத்த சூல் கொண்ட மேகங்கள் மழையைப் பொழியும். அதனால், அங்கே வளமையும் செழுமையும் அதிகரிக்கும். இதைச் சுட்டிக்காட்டுவதற்காக, தாமரை மீது திருமகள் அமர்ந்திருக்க, மேலே உள்ள இரண்டு யானைகளும் நீரைச் சொரியும்படி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. யானைகள், சூல் கொண்ட கருமேகங்களின் குறியீடு. இரண்டு யானைகளின் உடலானது பாதியாகவும், மீதியாக மேகங்களின் தோற்றமும் வடிக்கப்பட்டுள்ள சிற்பத்தைப் பார்த்தால், அந்த இடத்தை விட்டு நகரவே தோன்றாது, நமக்கு.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P56e
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P56c
ஸ்ரீகஜலட்சுமிக்கு அருகில் உள்ள வாயிலையட்டி இரண்டு பிரமாண்ட துவாரபாலகர்களின் சிற்பங்கள் உள்ளன. துவாரபாலகரின் காலடியில், புழுவைப் போலத் திகழும் பாம்பு ஒன்று, தன் வாயில் யானை ஒன்றைக் கவ்வி விழுங்குவது போன்ற காட்சியைப் பார்க்கலாம். சுமார் 15 அடி உயரம் உள்ள துவாரபாலகர் சிற்பம், மிரட்டலான வேலைப்பாடு! இப்போது உண்மையான யானையின் அளவிலேயே அந்த யானைச் சிற்பத்தையும் கணித்தபடி பார்த்தால், மிரண்டே போவோம் நாம். அந்த துவாரபாலகர் தன் கையை உயர்த்தி, விரல் சுட்டி, ஈசனே மிகப் பெரியவன், அவன் ஆகாசமூர்த்தி என்பதைச் சொல்லாமல் சொல்கிற அழகே அழகு!

விமானத்தின் தென்புற தேவகோஷ்டத்தில் இன்னுமொரு சிற்பம்... ரிஷபத்தின் மீது ஒய்யாரமாகச் சாய்ந்தபடி உமையருபாகன் நிற்கும் சிற்பம், சிற்பக்கலையின் மேன்மையை எடுத்துரைக்கிறது. அந்தக் கோஷ்டத்தை அடுத்து இருக்கிற மாடத்தில், கையில் மழுவையும் சங்கையும் ஏந்தியபடி சிவ-விஷ்ணு... அதாவது ஹரிஹரனின் திருவுருவத்தைத் தரிசிக்கலாம். இந்தச் சிற்பத்தில், ஹரிஹரனின் வலதுபுற திருமுகத்தையும் இடதுபுற திருமுகத்தையும் உற்றுக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா?
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P56d
கங்கைகொண்ட சோழபுரம் எனும் அற்புதமான தலத்துக்கு வந்து, அந்தக் கோயிலில் உள்ள இந்தச் சிற்பத்தைத் தனித்தனியே கூர்ந்து பாருங்கள். இரண்டு வேறுபட்ட முகபாவங்களும் அந்த ஒருமுகத்தில் தெரிவது போன்று வடித்திருப்பதைப் பார்த்து ரசிக்கலாம்; வியக்கலாம்!

ஸ்ரீவிமானத்தின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் ஸ்ரீஆடல்வல்லானின் திருவடிவம், ஈடு இணை இல்லாத சிற்ப அழகு! திருவாலங்காட்டுத் திருத்தலத்தில் ஈசன் நடனமாடுகிறான் என்பதைக் காட்ட, ஆலமரக்கிளை ஒன்று, மேலே காட்டப்பட்டுள்ளது. அங்கே, திருநடனம் புரியும் ஈசனின் முத்துப்பற்கள் அப்படியே ஜ்வலிக்கின்றன.

ஆனந்தத்தின் உச்சத்தில், மகிழ்ச்சி முழுதும் பரவியபடி அந்த அருட்பார்வையும் திருமுகமும் வெளிப்படுத்துகிற உணர்ச்சிப் பெருக்கினைச் சொல்லில் வடிக்க வார்த்தைகளே இல்லை.

சிவனார் மகிழ்ச்சியும் சிரிப்புமாக இருக்கிறார் என்றால், ஸ்ரீகாளிதேவியோ தன் முகத்தில் மொத்தக் கோபத்தையும் குவித்தபடி இருக்கிறாள்.

- புரட்டுவோம்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 Empty Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 3:01 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 12
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P26b
கங்கைப் பேராற்றில் இருந்து பொற்குடங்களில் நீரை எடுத்து வந்தார்கள், சோழநாட்டு வீரர்கள். இங்கே, கங்கைகொண்ட சோழீச்சரத்து விமானத்தில் அந்தப் புனிதநீர் வார்க்கப்பட்டது. அத்தகைய புண்ணியம் மிக்க திருத்தலம், கங்கை கொண்ட சோழபுரம்.

கங்கைகொண்ட சோழீச்சரத்து ஸ்ரீவிமானத்தின் வடபுற கோஷ்டங்களில் ஸ்ரீதுர்கை, ஸ்ரீபைரவர், ஸ்ரீகாமதகனமூர்த்தி, ஸ்ரீசரஸ்வதி - ஸ்ரீசாவித்திரி எனும் இரண்டு தேவியருடன் பிரம்மதேவர், ஸ்ரீகாலகால மூர்த்தி ஆகியோரின் திருவுருவங்கள் அழகுற இடம்பெற்றுள்ளன. அர்த்த மண்டபத்துக்குச் செல்லும் வடபுறத் திருவாயிலில், இரண்டு பிரமாண்டமான துவாரபாலகர்களின் சிற்பங்களும், அவர்களுக்கு அருகே மேற்கு திசையில் ஸ்ரீசண்டீச அநுக்கிரக மூர்த்தியும், கிழக்கு திசையில் ஸ்ரீசரஸ்வதியும் திருத்தமான திருமேனியராகக் காட்சி தருகின்றனர்.

கீழே சிங்கம் உறுமியவாறு நிற்க, எட்டுக் கரங்களுடன் ஸ்ரீதுர்காதேவி நின்றவாறு காட்சி தருகிறாள். வலக்கரம் அபயம் காட்ட, அதேபுறம் உள்ள மற்ற மூன்று திருக்கரங்களில் முறையே வாள், அம்பு, சக்கரம் ஆகியவையும், இடது கரம் தொடைமேல் இருத்தியபடியும் திகழ, இடதுபுறம் உள்ள மற்ற கரங்களில் கேடயம், வில், சங்கு ஆகியவை காணப்பெறுகின்றன. கருணை பொழியும் திருமுகத்தோடு அன்னை பராசக்தி அற்புதமே உருவெனக் கொண்டு காட்சி தருகிறாள்.

இங்கு காணப்பெறும் மற்றொரு கோஷ்டத்தில், எண்கரங்களோடு ஸ்ரீபைரவர் திகழ்கிறார். திருமுடியில் தீச்சுடர்கள் ஒளிர, பிதுங்கும் விழிகளுடன் ரௌத்திரமும், கருணையும் கலந்த திருமுகத்துடன் நின்ற கோலத்தில் திகழும் இந்த தேவதேவனின் திருக்கரங்களில் திரிசூலம், மழு, வாள், பாசம், நெருப்பு, கபாலம், வில், மணி ஆகியவை காணப்படுகின்றன. மார்பில் கபாலங்கள் கோக்கப் பெற்ற புரிநூலும், இடுப்பில் பாம்பும் திகழ்கின்றன. இத்திருமேனியின் திருமுக அழகை ஏட்டில் வடிப்பது இயலாத ஒன்று!

இங்கு திகழும் ஸ்ரீபிரம்மதேவன், தாடி மீசையுடன் நான்கு திருமுகங்களும் கொண்டு, வேள்வியின் அதிபதியாக நின்ற கோலத்தில் காணப்படுகிறார். எங்கும் காண இயலாத வகையில் இங்கு ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீசாவித்திரி எனும் இரண்டு தேவியர் அவருக்கு இருமருங்கிலும் நின்ற கோலத்தில் காணப்பெறுகின்றனர். பிரம்மனோ மேலிரு கரங்களில் ஸ்ருவம் ஸ்ருக் எனும் வேள்விக் கரண்டிகளையும், தர்ப்பை கட்டையையும் ஏந்தியுள்ளார். வலக்கரத்தில் உருத்திராட்ச மாலையும் இடது கரத்தில் நீர்ச் சொம்பும் உள்ளன. இப்படியரு திருக்கோலக் காட்சியை, வேறு சிவாலயங்களில் காண்பது அரிது என்றே சொல்லலாம்!
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P26c
காம தகனமும், எரிந்த காமனுக்காக ரதிதேவி இறைஞ்ச, காம தகன மூர்த்தி அவனை மீண்டும் உயிர்ப்பித்ததுமான காட்சியை மிக அற்புதமான சிற்ப வடிவில், இங்கே உள்ள கோஷ்டத்தில் வடித்துள்ளனர். ஒரு காலை மடித்து, ஒரு காலைத் தொங்கவிட்ட நிலையில், நான்கு திருக்கரங் களுடன் சிவபெருமான் அமர்ந்தவாறு, தன் நெற்றிக் கண்ணால் காமதேவனை நோக்குகிறார். அவன் தீயின் தகிப்பு தாளமல், இரு கரங்களையும் உயர்த்தித் தடுக்க முற்படுகிறான். எரியும் அவன் திருவுடலை ரதிதேவி பின்புறம் அமர்ந்தவாறு தாங்கிப் பிடித்தபடி, ஒரு கரத்தை தலைக்குமேல் உயர்த்தி ஈசனை வேண்டுகிறாள். அற்புதமான இந்தக் காட்சியை மிக நுட்பமாக வடித்திருக்கிறார்கள் சிற்பிகள்.

வடபுற படிக்கட்டை ஒட்டித் திகழும் கோஷ்டத்தில், ஈசனார் தேவியுடன் அமர்ந்தவாறு, தரையில் அமர்ந்துள்ள விசார சர்மருக்கு தலையில் தான் தரித்திருந்த கொன்றை மாலையை எடுத்துச் சூட்டுகிறார். இந்தக் காட்சியை ஸ்ரீசண்டீச அநுக்கிரக மூர்த்தி அருளும் காட்சி என்பர். இந்தக் கோஷ்டத்துக்கு இருமருங்கும் ஸ்ரீசண்டீசர் புராண வரலாறு சிற்றுருவ சிற்பங்களாகச் சித்திரிக்கப்பெற்றுள்ளன.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P26

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P26d
மண்ணியாற்றில் சிவலிங்க பூஜை செய்யும் விசார சர்மர், குரா மரத்தில் மறைந்து அவரை கண்காணிக்கும் தந்தை எச்சதத்தன், திருமஞ்சனக் குடத்தைக் காலால் இடறும் தந்தை, தந்தையின் கால்களை மழுப்படையால் வெட்டும் தனயன், பசுக்கூட்டங்கள் என சிற்பங்களெல்லாம் அழகு செய்ய, நடுவே ஸ்ரீசண்டேச அநுக்கிரக மூர்த்தியின் கோலக் காட்சி இடம்பெற்றுள்ளது. உண்பன, உடுப்பன, சூடுவன என மூன்றையும் தந்து ஸ்ரீசண்டீச பெரும்பதம் அருளும் திருக்கோலம், இங்கு வெகு அற்புதம்!

அர்த்த மண்டப வாயிற் படிக்கட்டின் எதிர்ப்புறம், அமர்ந்த கோலத்தில் ஸ்ரீஞான சரஸ்வதியின் அழகிய திருவுருவம் காட்சி தருகிறது. வாயிலின் இருமருங்கும் பிரமாண்டமான துவாரபாலகர் சிற்பங்கள் யானையை விழுங்கும் பாம்புடன் காணப் பெறுகின்றன. திருக்கோயில் வளாகத்தின் வடகிழக்கில் உள்ள சிற்றாலயத்தில், இருபது கரங்களுடன் திகழும் துர்கா தேவி(மகிஷாசுர மர்த்தனியின் சிற்பம் இடம்பெற்றுள்ளது.

மூலவர் திருக்கோயில் மகாமண்டபத்தின் வடகிழக்கில் சௌரபீடம் எனும் சூரிய பீடம் உள்ளது. இதனை நவக்கிரகம் எனக் கூறி வழிபடுகின்றனர், பக்தர்கள். தேவியின் திருவுருவமும் சௌரபீடமும் மேலைச் சாளுக்கிய நாட்டிலிருந்து எடுத்து வரப் பெற்ற திருமேனிகள். இப்படியாக, ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் தலம், பல அற்புதங்களையும் ஆச்சரியங்களையும் கொண்டு, அழகுறத் திகழ்கிறது.

- புரட்டுவோம்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 Empty Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 3:07 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! 13
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரான் திருக்கோயில் வெகு பிரசித்தம். இதை, ஸ்ரீவைகுண்டநாதர் ஆலயம் என்றும் சொல்வார்கள். நவதிருப்பதிகள் எனப்படும் வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது இந்தக் கோயில்.

திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில், தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள எழிலார்ந்த சிறுநகரம், ஸ்ரீவைகுண்டம். நம்மாழ்வாரின் இரண்டு பாசுரங்களில் போற்றப்படுகிற இந்தத் தலத்து நாயகனாம் ஸ்ரீவைகுண்டநாத பெருமாளும் கோயிலும், கோயிலில் உள்ள சிற்பங்களும் மனத்தைக் கொள்ளை கொள்ளச் செய்யும் பேரழகு கொண்டவை!

இந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள், விஜயநகரப் பேரரசு காலத்தில் தென்பாண்டி நாட்டு ஆட்சியாளர்களால் தோற்றுவிக்கப்பட்டன. ஒன்பதுநிலை ராஜகோபுரத்தின் கல்ஹாரப் பகுதிச் சுவரிலும் (பித்தி), வடக்குப் பிராகாரத்தில் உள்ள திருவேங்கடமுடையான் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் முன்மண்டபத்திலும் காணப்படுகிற சிற்பங்கள், சொல்லில் அடங்காத அழகுடன் மிளிர்கின்றன.

அதுமட்டுமா..? கோபுரத்தின் கீழ்ப்பகுதியிலும் உட்பகுதியிலும் திருமாலின் திருக்கோலங்கள் பல உள்ளன. வாயிற்காவலர்களான ஜயன், விஜயன் மற்றும் பெண்கள், யானை மற்றும் குதிரைகள், பறவைகள், தவிர அழகும் நுணுக்கங்களும் கொண்டு திகழ்கிற கும்ப பஞ்சரங்கள் என, சிற்பப் படைப்புகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P36a(1)
இந்த வரிசையில் ஸ்ரீதேவி- ஸ்ரீபூதேவி ஆகியோர் பெருமாளுக்கு இருபுறமும் அமர்ந்திருக்க, படமெடுத்தாடும் பாம்பின் கீழ் அமர்ந்திருக்கிறார் பெருமாள்.

கோபுரச் சுவரின் வெளிப்புறம், கீழ்த்திசை நோக்கியபடி திகழ்கிறது திரிவிக்கிரம மூர்த்தியின் சிற்பம். வாமனனுக்கு, ஸ்ரீமகாபலிச் சக்கரவர்த்தி கையில் நீர்ச்சொம்பை வைத்துக்கொண்டு நீர் வார்த்துக் கொடுக்கும் காட்சி ஒருபக்கம் அமைந்துள்ளது. குள்ளனாக வந்த வாமனர் திரிவிக்கிரம உருவம் காட்டி, ஓரடியால் பூமியை அளந்து, இரண்டாவதாக மற்றொரு காலை தலைக்கு மேல் உயர்த்தி, வானத்தை அளக்கிறார். இந்தச் சிற்பத்தில், எட்டுத் திருக்கரங்களுடன் திகழும் அழகே அழகு!

வானத்தை அளந்த திருவடியை பிரம்மன் விண்ணக கங்கையால் அபிஷேகிக்கும் காட்சி சிலிர்க்கவைக்கிறது. அருகில் இரண்டு தூண்கள்; அவற்றில் தத்ரூபமாக வடிக்கப் பட்ட இரண்டு புறாக்கள். அதேபோல் கோபுரம் முழுவதும் உள்ள தூண்களில், ஆங்காங்கே புறாச் சிற்பங்கள்!

திருவேங்கடமுடையான் சந்நிதி திகழும் திருமண்டபத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள நான்கு தூண்கள் மற்றும் அதிஷ்டானத்து விளிம்புகளிலும் அழகுப் பதுமைகளாகப் பல சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. வாயிற் காவலர்களாகத் இரண்டு வீரர்களின் சிற்பங்கள் இரண்டு பக்கமும் திகழ, இடையேயுள்ள இரண்டு தூண்களில் வில்லேந்திய ஸ்ரீராமனின் திருவுருவங்கள் காணப்பெறுகின்றன. ஒரு வீரன் தன் ஒரு காலை உயர்த்தியவாறு வாளும் கேடயமும் ஏந்திக்கொண்டு, இன்னொருவனைத் தாக்கியவாறு நிற்கின்றான். அவன் தலை அலங்காரமும் மீசையும், அணிந்துள்ள ஆபரணங்களும், கோபம் காட்டும் விழிகளும் இந்தப் படைப்பைத் தத்ரூபமாக்கியுள்ளன. எதிர்ப்புறம் நிற்கும் மற்றொரு வீரன் அழகிய கொண்டை அலங்காரத்துடன் கைகளில் வாளும் வளைதடியும் ஏந்தியபடி உடல் முழுவதும் ஆபரணங்களுடன் திகழ்கிறான்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P36
அதேபோல் ஒரு கையில் வில்லும், மறு கரத்தில் ராம பாணமும் ஏந்தியபடி ஸ்ரீராமன், ஸ்ரீஅனுமனின் தோள்களை அணைத்துக் கொண்டு நிற்பதைப் பார்க்கும்போது, அந்தச் சிற்பத்திலேயே அவர்களின் நெருக்கமும் அணுக்கமும், வாஞ்சையும் தோழமையும் பளிச்சிடுகின்றன. மறுபுறம் சுக்ரீவன் கரம் கூப்பித் தொழுகிறான். அனுமனோ வாய் பொத்திய நிலையில் பணிவுடன் நிற்கிறான். கீழே மூன்று வானரங்கள் வாளும் கேடயமும் ஏந்திப் போருக்குச் செல்கின்றன. இத்தனையும் ஒரு தூணாகவே விளங்குவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P36b


இதேபோன்று, மற்றொரு தூணில் வில்லேந்திய ராமன் நிற்க, அருகே சீதா. ஸ்ரீராமனோ வில்லேந்திய திருக்கரத்துடன் அனுமனின் தோள்களைப் பிடித்தபடி திகழ்கிறார். சில தூண்களில் இசைக்கருவிகளை இசைக்கும் பாவனையில் இசைக்கலைஞர்களின் உருவங்கள் உள்ளன.

மண்டப அதிஷ்டானத்து விளிம்புகளில் உள்ள சிற்பத் தொகுதிகளில் அற்புதமானவை குறப்பெண்களின் சிற்பம். இரண்டு குறப் பெண்கள் கைகளில் பிரம்புக் கூடைகளை இறுக்கிப் பிடித்தபடி, உணவுக் கலங்களை ஏந்திச் செல்கின்றனர். அவர்கள் தோளில் அமர்ந்திருக்கும் சிறுவர்கள், அந்த உணவை எடுத்துச் சாப்பிடுகின்றனர். இரண்டு பெண்களும் இரு குழந்தைகளின் தலைமீது தங்கள் கரங்களை வைத்திருப்பது அழகு!

இந்தக் கோயிலின் வடபுற திருச்சுற்று மண்டபத்தின் கூரை விளிம்புகளாகிய கொடுங்கைப் பகுதிகளில் அமைந்துள்ள சிற்பங்களும் தனிச்சிறப்பு கொண்டவையே!

இரண்டு பூனைகள் சேவலையும், பெட்டைக் கோழியையும் வாயால் கவ்விப் பிடித்துச் செல்ல, இடையே இரண்டு கோழிக் குஞ்சுகள் பயந்து ஓடுகின்றன. அதேபோல், படமெடுத்தாடும் பாம்பின் முன் மகுடி வாசிக்கும் பாம்பாட்டி, சேட்டைகள் பல செய்யும் குரங்குகள் என அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் தலத்துக்கு வருவோரைக் கவர்ந்திழுக்கும் கலைநயமிகுந்த காலம் கடந்த படைப்புக்கள் என்பதில் துளியும் ஐயம் இல்லை.

- புரட்டுவோம்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 Empty Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 3:11 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! 14
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P36b
திருச்சிராப்பள்ளி என்றாலே, அந்த நகரத்தின் அடையாளச் சின்னமாக நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது... மலைக்கோட்டைதான்!

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, குறுங்குடி மருதனார் எனும் புலவர் அகநானூறு எனும் அருந்தமிழ் இலக்கியத்தில், 'உறைந்தைக் குணாது நெடும்பெருங்குன்றத்து அமன்ற காந்தட் போதவிழ்’ என்று குறிப்பிட்டுள்ளார். உறையூர் நகருக்குக் கிழக்கே அமைந்த குன்றாகிய மலையில் காந்தள் மலர்கள் மலர்ந்திருந்த காட்சியைத்தான் அந்தப் புலவர் அப்படிப் பாடியுள்ளார்.

இந்த மலையை, 'சிராமலை’ என்றார்கள் அந்தக் காலத்தில். இந்தச் சிராமலையில் ஐந்து முக்கியமான கோயில்கள் உள்ளன என்பது தெரியும்தானே உங்களுக்கு?!
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P36d
மலையடிவாரத்து ஸ்ரீவிநாயகர் கோயில், மலையின் தென் பாரிசத்தில் உள்ள பெரிய குடைவரைக் கோயில், மலையின் நடுவே உள்ள ஸ்ரீதாயுமானவ ஸ்வாமி கோயில், அதற்கு மேலாக லலிதாங்குர பல்லவ ஈஸ்வர கிருஹம் எனப்படும் சிறிதான குடைவரைக் கோயில், மலை உச்சியில் ஸ்ரீஉச்சிப் பிள்ளையார் கோயில் என ஐந்து ஆலயங்கள் இந்த மலையில் அமைந்துள்ளன. மலையடிவாரத்தில் உள்ள விநாயகர், ஸ்ரீமாணிக்க விநாயகர் என அழைக்கப்படுகிறார். இவரை வணங்கிவிட்டு, சில படிகள் ஏறிச் சென்றால், யானை நிற்கும் இடத்தை அடையலாம். அங்கே, நீண்ட தெரு ஒன்று, மலையையட்டி இருக்கிறது.

அந்தத் தெருவில், மேற்கு நோக்கி சிறிது தொலைவு சென்றால், மலைக்கோட்டை மலையின் அடிவாரத்தில், குடைவரைக் கோயில் ஒன்று இருப்பதைக் காணலாம். உள்ளே நுழைந்தால், மிகப் பெரிய மண்டபம். அங்கே, கிழக்கு நோக்கியபடி ஒரு சிறிய கோயிலும், மேற்கு நோக்கியபடி ஒரு சிறிய கோயிலும் அமைந்துள்ளன. காண்பதற்கு அரிதான, அழகான அமைப்பை அங்கே கண்ணாரத் தரிசிக்கலாம். கோயிலும், அங்கே இருக்கிற துவார பாலகர்களும் கொள்ளை அழகு!

கருவறைக்கு முன்னே, நான்கு நான்கு தூண்களுடன் சிறிய முகமண்டபங்கள், படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளன. கோயிலுக்குப் பக்கவாட்டில், குகைச் சுவரில் இரண்டு அடியார்கள் ஒரு கரத்தை இடுப்பில் வைத்தபடி, இன்னொரு கரத்தை உயர்த்திக்கொண்டு, அங்கே குடிகொண்டிருக்கும் சிவனாரைப் போற்றிய நிலையில் இருப்பார்கள். பார்த்தால் சிலிர்த்துப் போவீர்கள். மேற்குப் புறத்தில் உள்ள சிறிய கோயிலின் கருவறைக்கு உட்புறச் சுவரில், சங்கு - சக்கரம் ஏந்தியபடி அமைந்துள்ள திருமாலின் திருவுருவமும், அடியவர்கள் இரண்டு பேர் விண்ணில் இருந்தபடி போற்றி வணங்குகிற நிலையிலான சிற்பமும் இடம் பெற்றுள்ளது. இந்தக் கோயில், திருமாலுக்காக அமைக்கப்பட்ட கோயில்.

எதிர்த்திசையில், கீழ்ப்புறம் இருக்கும் சிறிய கோயில். கயிலைநாதன் சிவபெருமானுக்காகக் கட்டப்பட்ட கோயில். ஆனால், உள்ளே இருந்த சிவபெருமானை பிற்காலத்தில் அகற்றிவிட்டார்கள். உட்புற மண்டபச் சுவரின் வடக்குப் புறத்தில், மிக பிரமாண்டமான ஐந்து தெய்வ உருவங்கள் அணி செய்து நிற்கின்றன. நடுவே, நான்கு முகங்களுடன் பிரம்மதேவர் காட்சி தருகிறார்.

அவருக்கு இரண்டு பக்கத்திலும் இரண்டு அடியார்கள் அமர்ந்துள்ளனர். தலைக்கு மேலாக இரண்டு பக்கமும் இரண்டு கணங்கள், விண்ணில் பறந்தவாறு ஸ்ரீபிரம்மாவை வணங்கும் சிற்பம் வெகு அழகு!
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P36a

ஸ்ரீபிரம்மாவுக்கு வலது பக்கத்தில், முருகப் பெருமான் நான்கு திருக்கரங்களுடன் நின்றவாறு அருளுகிறார். அவருக்கு இருபுறமும் இரண்டு குள்ள பூதங்கள் நிற்கின்றன. விண்ணிலே இரண்டு கந்தர்வர்கள் பறந்தபடி, அவரது திருமுடியைப் போற்றுகின்றன.

முருகப் பெருமானுக்கு வலதுபுறம், ஸ்ரீபிள்ளையார் நின்றவாறு அருள்பாலிக்கிறார். காலடியில் இரண்டு பூதகணங்களும், விண்ணில் கந்தவர்கள் இரண்டு பேருமாக வணங்குகின்றனர்.

பிரம்மதேவனுக்கு இடப்புறம் சூரிய தேவன் நின்றவாறு அருள்பாலிக்கிறார். தலைக்குப் பின்புறம் சூரிய வட்டம் திகழ, மேலிரு கரங்களில் உருத்திராட்ச மாலையும் தாமரையும் ஏந்தியவாறு, ஒரு கரத்தை இடுப்பில் அணைத்தபடி, மறு கரத்தால் வரத முத்திரை காட்டுகிறார், சூரிய பகவான். அவரின் திருவடியில் இரண்டு பேர் குத்திட்டு அமர்ந்தவாறு, ஆதவனைப் போற்றுகின்றனர். விண்ணிலே கந்தர்வர் இருவர் மிதந்தவாறு கையுயர்த்தி வாழ்த்துகின்றனர்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P36
சூரிய தேவனுக்கு இடப்புறம் ஆழியும் சங்கும் ஏந்திய கொற்றவை தேவி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அவளின் காலடியில் அமர்ந்துள்ள ஒருவர் மலர் கொண்டு வணங்க, மற்றொருவர் தன் சிகையை இடக்கரத்தால் பற்றியவாறு வலக்கரத்தில் ஏந்தியுள்ள வாளால் தன் கழுத்தை அரிகிறார். இதனை நவகண்டம் என்பர். கொற்றவைக்கு பலியாக உறுப்பரிந்து தரும் வீரர்கள் பற்றி சயங்கொண்டாரும், ஒட்டக்கூத்தரும் தம் பரணி நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கோயிலுக்கு இன்னுமொரு தனிச்சிறப்பு உண்டு. வேதங்களும் திருமுறைகளும் வைதீக சமயத்தின் அறுவகைச் சமயப் பிரிவுகள் பற்றி விவரிக்கின்றன. சிவபெருமானைப் போற்றும் சைவம், திருமாலைத் துதிக்கும் வைணவம், கணபதியைப் பரவும் காணாபத்தியம், முருகனை ஏற்றும் கௌமாரம், சூரியனைப் போற்றும் சௌரம், தேவியைத் துதிக்கும் சாக்தம் என்பவையே அந்த அறுவகைச் சமயங்கள்.

இந்தச் சமயக் கோட்பாடுகள் அடிப்படையில் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பெற்றதே திருச்சிராப்பள்ளி குடைவரைக் கோயிலும், அங்கே திகழும் அரிய சிற்பத் திருமேனிகளும் எனும்போது வியக்காமல் இருக்கமுடியவில்லை.

- புரட்டுவோம்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 Empty Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 3:14 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! 15
ஆலயம் ஆயிரம்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


கொங்கு நாட்டில், ஈரோட்டில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில், காவிரியாறும் பவானியாறும் சங்கமிக்கும் கூடுதுறையில் அமைந்துள்ளது ஸ்ரீசங்கமேஸ்வரர் திருக்கோயில். 'திருநணா’ என்பது இந்த ஊரின் தேவார காலப் பழம்பெயராகும். திருஞான சம்பந்தர் இந்தத் தலத்துக்கு வந்து, பதிகம் பாடியுள்ளார்.

தேவாரத் தலம்தான் என்றாலும், சிவா- விஷ்ணு மூர்த்திகளின் தனித்தனிக் கோயில்களை ஒரே வளாகத்தில் பெற்ற, சைவமும் வைஷ்ணவமும் இணைந்த தலம் இது!

ஸ்ரீசங்கமேஸ்வரர் சந்நிதியில் இருந்து கிழக்கு வாசல் வழியே பார்த்தால், எழில் கொஞ்சும் காவிரியின் பேரழகைக் காணலாம். கோட்டை விநாயகர், ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி, ஸ்ரீவேதாம்பிகை எனும் அம்பாள் கோயில் ஆகியவை மூலவர் திருக்கோயிலுக்குரிய பரிவார ஆலயங்களாகத் திகழ்கின்றன.

அம்பாள் திருக்கோயிலுக்கு வடக்காக ஸ்ரீஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீசௌந்தரநாயகித் தாயார், ஸ்ரீநரசிம்மர் ஆகிய தெய்வங்கள் உறையும் மூன்று தனித்தனி சந்நிதிகள். கூடுதுறை எனும் புண்ணிய தீர்த்தமே, ஸ்தல தீர்த்தம்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P44
பல்லவ, சோழ, பாண்டிய மரபு மன்னர்கள் விட்டுச் சென்றுள்ள சிற்பப் படைப்புகள் குறித்து தமிழகத் திருக்கோயில்களில் பார்த்துச் சிலாகிப்போம். விஜய நகர அரசர்களின் கலைப் படைப்புகளும் பலராலும் போற்றப்படுபவையே! ஆனால், சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, சிற்றரசர்களாக விளங்கிய தமிழ் மரபு மன்னர்கள் எடுத்த கோயில்களும், அவர்தம் கலைப்படைப்புகளும் அவ்வளவாகத் தமிழ் மக்களால் அறியப்படாமலேயே இருக்கின்றன. அந்த வரிசையில், கொங்கு நாட்டில், குறிப்பாக பூவாணி நாட்டில் அரசர்களாகத் திகழ்ந்த கட்டிமுதலிகள் எடுத்த கோயில்களும், அங்கே காணப்படும் கலைப்படைப்புகளும், தமிழ்நாட்டுக் கலை இயல் வரலாற்றில் தனி இடம்பெற்றுத் திகழ்கின்றன.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வேளிர் அரசர்களில் ஒரு பிரிவினரான 'கட்டி’ என்ற அரச மரபைச் சார்ந்தவர்களாக கட்டிமுதலிகள் இருத்தல் கூடும் என அறிஞர்கள் கருதுகின்றனர். பிற்கால கட்டிமுதலிகள் மரபில் இம்முடி கட்டிமுதலி, வணங்காமுடி கட்டிமுதலி என்ற இரண்டு பேர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆத்தூர், பவானி, ஈரோடு, திருச்செங்கோடு, மோகனூர் சேந்தமங்கலம், அமரகுந்தி, சங்ககிரி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய இடங்களில் கட்டிமுதலிகளின் கலைப் படைப்புகளை ஆலயங்களில் காணலாம்.

தற்போது நாம் பார்க்கிற ஸ்ரீபவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் திருப்பணிகள் அனைத்தும் இம்முடி கட்டிமுதலியின் பணிகளே என்பதை, திருக்கோயில் வளாகத்தில் புலி உருவத்துடன் திகழும் கற்பலகைக் கல்வெட்டுக்களாலும், அம்பாள் திருக்கோயில் வசந்த மண்டப விதானத்துக் கல்வெட்டுக்களாலும் அறியமுடிகிறது.

பவானி ஆலயத்தில் உள்ள கட்டிமுதலி கலைப்படைப்புக்கள் வரிசையில் தலையாய இடம் பெறுவது, விஷ்ணு ஆலயத்தில் உள்ள ஸ்ரீநரசிம்மர் சந்நிதியின் முகப்பு மண்டபத்துத் தூண்களும், அதில் உள்ள சிற்பங்களும்! ஒரு தூணில் ஸ்ரீராமன் வில்லும் அம்பும் தரித்தவராக நிற்கும் திருக்கோலம்; அடுத்த தூணில், ஸ்ரீராமனின் பட்டாபிஷேகக் கோலம். ஒரு காலை மடித்தும், ஒரு காலை தொங்கவிட்ட நிலையிலும் மகுடம் சூடிய ஸ்ரீராமர் அமர்ந்துள்ளார். சீதா பிராட்டியோ ஒரு காலை மடித்தும், ஒரு காலை குத்திட்டவாறும் அமர்ந்துள்ளார். ராமபிரான் தன் வலக்கரத்தால் அபயம் காட்டி, இடக்கரத்தால் ஜானகித் தாயை அணைத்தவாறு காட்சி தருகிறார். தேவியின் வலக் கரம் மலர் பிடிக்க, இடக்கரம் தரை யில் ஊன்றியபடியான காட்சியை அப்படியே சிற்பமாக நம் கண் முன்னே நிறுத்தி உள்ளனர் சிற்பிகள்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P44a
இருவரின் திருப்பாதங்களையும் இரண்டு தாமரை மலர்கள் தாங்கி நிற்கின்றன. அமர்ந்திருக்கும் இருவருக்குக் கீழாக மலர்ந்த தாமரை மீது ஸ்ரீஅனுமன், பத்மாசனக் கோலத்தில் அமர்ந்துள்ளார். மேல் நோக்கும் அவர் திருமுகம் ஸ்ரீராமபிரானின் பாத கமலங்களைத் தரிசித்த சிலிர்ப்பில் அமைந்துள்ளது. ஸ்ரீஅனுமன், தன் வலக்கரத்தில் வீணையையும், இடக்கரத்தில் ராமாயணச் சுவடியையும் ஏந்தியுள்ளார். இத்தகைய காட்சியை, வேறு எங்கும் காண்பது அரிது!

அம்பாள் கோயிலின் வசந்த மண்டபம் அற்புதக் கலைக் கூடம்! குதிரை வீரர்களின் சிற்பங்களோடு திகழும் இந்த மண்டபத்துத் தூண் ஒன்றில், இம்முடி கட்டிமுதலி, அடியார் ஒருவருக்குப் பொருள் வழங்கும் காட்சியும், அவர் மனைவி எதிர் தூணில் இருந்து வணங்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளன. இந்த மண்டபத்து மேல் விதானத்தில் (உட்கூரைப் பகுதியில்) உள்ள சிற்பப் படைப்புகள் பேரழகு வாய்ந்தவை! மூன்று அடுக்குகளுடன் உள்ள தாமரை மலர்; நடுவிருந்து அதன் இதழ்களைச் சுற்றியுள்ள கிளிகள் கொத்துகின்றன. மலரைச் சுற்றி உள்ள சட்டப் பகுதியில் 18 நடனக் கலைஞர்கள் ஆடியும் பாடியும் நிற்கின்றனர். இந்தக் காட்சிக்கு வெளியே 16 தெய்வத் திருவுருவங்கள் உள்ளன. ஸ்ரீஊர்த்துவ தாண்டவர், ஸ்ரீகாளி, ஸ்ரீஉமை, ஸ்ரீபிரம்மன், மத்தளம் இசைக்கும் இடபதேவர், அதிகார நந்தி, கொடிப்பெண்கள் இருவர், அறுமுகன், இந்திரன், கிங்கரர், நாரதர், தும்புரு, திருமால் என தெய்வ உருவங்கள் திகழ... வெளிப்புறம் வில், அம்பு, வண்ணத் தடுக்கு, வாடாத மாலை, புலி, மகரம் ஆகிய கட்டிமுதலிகளின் அரச சின்னங்களும் உள்ளன. அருகே இந்த மண்டபத் திருப்பணி பற்றிய கட்டிமுதலியின் கல்வெட்டும் உள்ளது. இவை தவிர, லிங்கத்துக்குப் பால் சொரியும் பசு உள்ளிட்ட பல சிற்பங்கள் திருக்கோயில் முழுவதும் உள்ளன.

கட்டிமுதலியின் தாரமங்கலம் கல்வெட்டு, இலக்கியச் சுவை மிக்கது. 12 சூரியர்கள், 11 உருத்திரர், 10 திக்குகள், 9 கங்கைகள் (ஆறுகள்) 8 மலைகள், 7 கடல்கள், 6 கார்த்திகைப் பெண்கள், 5 மலர் அம்புகள் (மன்மதன்), 4 வேதங்கள், 3 தீச்சுடர்கள், 2 சாதிகள் என்பன போன்று, கட்டிமுதலியின் வாக்கு ஒன்றே என்கிறது அக்கவிதை.

'செங்கதிர் பன்னிரண்டீசன்
பதினொன்று திக்குபத்து
கங்கையும் ஒன்பது வெற்பு எட்டு, ஏழு
கடல் கார்த்திகை ஆறு
ஐயங்களை நான் மறை மூச்சுடர் சாதி
இவை இரண்டு
மங்கை வரோதையன் கட்டிமுதலி
வார்த்தை ஒன்றே!’

பவானி கூடுதுறையில் நீராடி, ஸ்ரீசங்கமேஸ்வரர் பாதம் பணிந்து, அனைத்து கலைச் செல்வங்களையும் கண்டு மகிழ்ந்து ஈசனின் பேரருளைப் பெறுவோம்!

- புரட்டுவோம்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 Empty Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by M.Saranya Wed Sep 03, 2014 4:01 pm

சிறப்பான பதிவு


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 Empty Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:09 pm


சேதி சொல்லும் சிற்பங்கள்! 16
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களின் வரிசையில், வரலாற்றுப் பெருமைகளாலும் பேரழகு வாய்ந்த சிற்பங்களைப் பெற்றுள்ளமையாலும் முதல் நிலையில் திகழ்வது 'மேலப்பழுவூர் அவனி கந்தர்ப்ப ஈசுவர கிருகம்’ என்னும் பழுவேட்டரையர்கள் எடுத்த சிவாலயம்.

தஞ்சாவூர்- அரியலூர் சாலையில் உள்ள கீழப்பழுவூரிலிருந்து மேற்கு நோக்கி செல்லும் திருச்சி சாலையில் உள்ளது மேலப் பழுவூர். இந்த ஊர்தான், பழுவேட்டரையர்களின் தலைநகரமாக விளங்கியது. 'மன்னு பெரும் பழுவூர்’ எனக் கல்வெட்டுகள் இதைக் குறிப்பிடுகின்றன.

இந்த ஊரின் மேல் பாரிசத்தில் ஒரு சிவாலயமும், கிழக்குப் பகுதியான கீழையூர் எனும் இடத்தில்... ஒரே வளாகத்தில் இரண்டு சிவாலயங்களையும் பரிவார ஆலயங்களையும் கொண்ட 'அவனி கந்தர்ப்ப ஈசுவர கிருகம்’ எனும் திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தின் சிற்பக் கருவூலம் எனக் கீழையூர் கோயிலைக் குறிப்பிடலாம்.

மேற்கு நோக்கியவாறு திகழும் கீழையூர் சிவாலயத்துக்கு மேற்கு வாயிலாக மூன்று நிலைகளையுடைய கோபுரம் அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோபுரங்களிலேயே மிகவும் பழைமையானது, இந்தக் கோபுரம். நுழைவாயிலில், கதையன்றைத் தாங்கியபடி இரண்டு திருக்கரங்களுடன், இரண்டு துவாரபாலகர்களின் சிற்பங்கள் உள்ளன. அவற்றின் அழகே, அந்தக் கோயில் சிற்பங்களின் தன்மையை நமக்குப் பறைசாற்றிவிடுகிறது.

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P58a

திருக்கோபுரத்துக்கு நேராக உட்பிராகாரத்தில், தென் வாயில் ஸ்ரீகோயில் எனப்படும் ஸ்ரீஅகஸ்தீஸ்வரம் உள்ளது. இதன் வாயிலில் (திருமுற்றத்தில்) படுத்திருக்கும் ரிஷபத்தைப் பார்த்தால், 'அட... இங்கே காளை ஒன்று படுத்திருக்கிறதே..!’ என்று ஒரு கணம் திகைப்போம். அந்த அளவுக்கு உயிர்த்துடிப்புடன் திகழ்கிறது ரிஷபம்! அங்கே உள்ள வாயில் வழியே கோயிலின் உள்ளே சென்றால், அங்கே மற்றொரு காளை படுத்திருப்பதைக் கண்டு நாம் மிரண்டுவிடுவோம். அந்த மண்டபத்தின் தூண்கள் அத்தனையும் பாயும் சிங்கங்களுடன் இருப்பது, பேரழகு! இந்தத் தூண்கள் பல்லவர் காலப் பாணியிலிருந்து பிறந்த பழுவேட்டரையர்களின் தனிக் கலைப் பாணியைக் கொண்டவையாகத் திகழ்கின்றன.

சிம்மத் தூண்களுக்கு இடையே நின்றவாறு அகஸ்தீஸ்வரரான மகாலிங்கத்தைத் தரிசிக்கும் நேர்த்தி அற்புதம்! அங்கு திகழும் துவாரபாலகர் உருவங்களும், ஸ்ரீகங்காதர மூர்த்தியின் சிற்பமும் கொள்ளை அழகு! இரண்டு கரங்களுடன் திகழும் வாயிற்காவலர், அழகிய மலர்களுடன் உள்ள கிரீடத்தை அணிந்திருப்பார்; தலையின் பக்கவாட்டிலிருந்து ஒரு நாகம் படமெடுத்துச் சீறும்; அவர் அணிந்துள்ள காது குண்டலம் ஒன்றின் உள்ளே ஆந்தை அமர்ந்திருக்கும்; ஒரு கரத்தில் கதையைத் தாங்கியவாறும், ஒரு கரத்தைத் தூக்கியவாறும் அவர் நிற்கும் கம்பீரத்தைப் பார்த்துச் சொக்கிப் போவோம்.

தென் வாயில் ஸ்ரீகோயிலின் விமானம் சதுர வடிவில் மூன்று தளங்களையுடையதாக விளங்குகிறது. சிகரத்தில் காணப்படும் வீணை வாசிக்கும் சிவனாரின் திருக்கோலம், தனி அழகு! ஸ்ரீவிமானத்தின் மூன்று பக்கங்களிலும் காணப்படும் கோஷ்ட மாடங்களை அழகிய மகர தோரணங்கள் அலங்கரிக்கின்றன. தென் கோஷ்டத்தில் மானையும் மழுவையும் ஏந்திய நிலையில், நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் சிவனார். இங்கு ஸ்ரீதட்சிணாமூர்த்தி காணப்

படவில்லை. மேலுள்ள மகர தோரணத்தில், நடனமாடும் சிவனாரின் திருவுருவம் உள்ளது. வடக்கு கோஷ்டத்தில் ஸ்ரீபிரம்மா காட்சி தருகிறார். அவருக்கு மேலே உள்ள மகர தோரணத்தில், யானையின் உடலைப் பிளந்து கொண்டு வெளிவரும் ஸ்ரீகஜசம்ஹார மூர்த்தியின் திருவடிவமும், அவர்தம் கோலம் கண்டு அஞ்சி, முருகப் பெருமானை இடுப்பில் அணைத்தவண்ணம் ஒதுங்கும் ஸ்ரீஉமாதேவியின் வடிவமும் இடம் பெற்றுள்ளன.

கிழக்கு திசையில் அமைந்த தேவ கோஷ்டத் தில், நின்ற திருக்கோலத்தில் உள்ள முருகப் பெருமானின் திருவுருவத்தைத் தரிசிக்கலாம்.

பொதுவாக, சிவாலயங்களின் ஸ்ரீவிமானத்து பின்புற கோஷ்டத்தில் லிங்கோத்பவர் அல்லது அர்த்தநாரீஸ்வரர் அல்லது திருமால் என திருவுருவச் சிற்பத்தைக் காணலாம். இங்கு இரண்டு கோயில்களிலும் முருகப்பெருமானே இடம் பெற்றிருப்பது, கோயிலின் சிறப்பு அம்சம் என்கின்றனர் பக்தர்கள்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P58b
மேலும், சப்தமாதர் கோயிலில் உள்ள அமர்ந்த கோல யோக மூர்த்தியின் சிற்ப வடிவம் குறிப்பிடத்தக்க ஒன்று. ஜடாபாரத்துடன் திருமுகம் விளங்க, மேலிரு கரங்களில் திரிசூல மும் அக்கமாலையும் திகழ, முன் வலக்கரம் அபயம் காட்ட, இடது கரத்தைத் தொடை மீது வைத்தபடி கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

இரண்டு சிவாலயங்களில், ஸ்ரீஅகஸ்தீஸ்வரத்தில் மட்டுமே இத்தனைச் சிறப்புகள் என்றால், அருகில் உள்ள மற்றொரு கோயிலையும் சிற்பங்களையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அந்தக் கோயிலின் பெயர் சோழீஸ்வரம்!

- புரட்டுவோம்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 Empty Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:11 pm


சேதி சொல்லும் சிற்பங்கள்! 17
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


பொதுவாக, சோழர் காலக் கோயில்களின் கட்டட அமைப்பு மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றை மூன்று பிரிவாகப் பிரிப்பார்கள். விஜயாலயச் சோழன் காலம் (கி.பி.846) வரை உள்ள படைப்புகளை, முற்காலச் சோழர்களின் கலை என்பார்கள். இந்தக் காலகட்டத்தில் படைக்கப்பட்ட சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும் கலைச் சிறப்பால் முதலிடத்தில் திகழ்கின்றன.

முற்காலச் சோழர்களின் கலைப் படைப்புக்கு, அவர்களுடன் இணைந்து ஆட்சி புரிந்த சிற்றரசர்களான கொடும்பாளூர் வேளிர்களான இருங்கோளர்களின் பங்களிப்பும், பழுவூர் பகுதியை ஆட்சி புரிந்த பழுவேட்டரையர்களின் பங்களிப்பும் பெரிதும் துணை புரிந்தன. கீழையூரில் உள்ள அவனி கந்தர்ப்ப ஈஸ்வரகிருகம் எனும் இரட்டைச் சிவாலயங்களில், கோயில் வளாகத்தின் வடபுறம் உள்ளது, வடவாயில் ஸ்ரீகோயில்!

இந்தக் கோயிலும் தென்புறக்கோயில் போன்றே மேற்கு திசை நோக்கியே அமைந்துள்ள ஆலயம். தற்காலத்தில் இந்த ஆலயத்தை அருணாசலேஸ்வரம் என்றும் சோழீஸ்வரம் என்றும் அழைக்கின்றனர். இந்தக் கோயிலின் ஸ்ரீவிமானம் இரண்டு தளங்களுடன் விருத்த (வட்ட வடிவ) சிகரம் பெற்றுக் கற்றளியாகவே விளங்குகிறது.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P42a
கருவறைச் சுவரில் உள்ள தேவ கோஷ்டங்களில் வடக்கில் ஸ்ரீபிரம்மாவும், தெற்கில் ஸ்ரீதட்சிணாமூர்த்தியும், கிழக்கில் அமர்ந்த கோலத்தில் முருகப் பெருமானின் திருவுருவங்களும் இடம் பெற்றுள்ளன.

திருச்சுற்றில் எட்டு பரிவார ஆலயங்கள் உள்ளன. ஸ்ரீகணபதியார், ஸ்ரீமுருகன், ஸ்ரீசூரியன், ஸ்ரீபைரவர், ஸ்ரீசப்தமாதர், ஸ்ரீசண்டீசர் போன்ற பரிவார தெய்வங்கள் மிகப் பழைமையானவை.

ஸ்ரீகணபதியாரின் திருமேனி தனித்தன்மையுடன் திகழ்கிறது. மேல் வலக்கரத்தில் ருத்திராட்ச மாலையும், மேல் இடக்கரத்தில் அங்குசமும் உள்ளன. கீழ் வலக்கரத்தில் ஒரு பழமும், கீழ் இடக் கரத்தில் ஒரு பழமும் இருக்க, மற்றொரு பழத்தை துதிக்கையால் எடுத்து வாயில் இடும் காட்சியை இந்தக் கோயிலைத் தவிர, வேறு ஆலயங்களில் காண்பது மிகவும் அரிது எனப் போற்றுகின்றனர் சரித்திர ஆர்வலர்கள். வயிற்றில் உதரபந்தம், மணிகள் கோக்கப்பெற்ற முப்புரிநூல், அழகிய மகுடம் ஆகியவை கணபதியை அலங்கரிக்கின்றன.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P42b
சப்தமாதர் கோயிலில் ஒருபுறம் கணபதியும், மற்றொருபுறம் யோக மூர்த்தியாக சிவபெருமானும் அமர்ந்திருக்க, இடையே ஸ்ரீபிராம்மி, ஸ்ரீவைஷ்ணவி, ஸ்ரீமகேஸ்வரி, ஸ்ரீகௌமாரி, ஸ்ரீவராகி, ஸ்ரீஇந்திராணி, ஸ்ரீசாமுண்டி ஆகிய அன்னையர் ஏழு பேரும் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு மரபு கலைப் படைப்புக்களாகத் திகழும் சப்தமாதர் சிற்பங்கள் வரிசையில் முதலிடம் பெற்றுத் திகழ்பவை இவை என்றால், மிகையில்லை!

தென்வாயில் ஸ்ரீகோயிலின் தென்புற கோஷ்டத்தில் ஸ்ரீசந்திரசேகரரான சிவவடிவமும் குறிப்பிடத்தக்க சிறப்புக்குரியது என்பார்கள். அவருக்கு மேல் காணப்படும் மகரதோரண வேலைப்பாடுகள், செம்பில் வார்த்தெடுக்கப்பட்டவைதானோ எனும் அளவுக்கு அத்தனை நேர்த்தியுடன் தத்ரூபமாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ள விதம் போற்றுதலுக்கு உரியது.

அந்த மாடத்தில் திகழும் ஸ்ரீசந்திரசேகரர், மான்- மழு ஆகியவற்றை ஏந்தியவராக, ஒரு கரத்தால் அபய முத்திரை காட்டி, மறு கரத்தைத் தன் தொடை மீது இருத்தியுள்ளார்.

இந்தச் சிற்பத்தைப் போன்றே ஸ்ரீகந்தபிரானின் வடிவமும் அற்புத மாகக் காணப்படுகிறது. நெருங்கித் தொடுக்கப்பட்ட சிறிய மாலையுடன் மகுடம் சூடிய கந்தவேள், சன்ன வீரம், உதர பந்தம், அழகிய இடுப்பாடை ஆகிய வற்றைத் தரித்துள்ளார். மேலிரு கரங்களில் வஜ்ராயுதமும் சக்தி ஆயுதமும் திகழ, வலக்கரத்தால் அபயம் காட்டி, இடக்கரத்தைத் தொடை மீது இருத்தியுள்ளார்.

மேலப் பழுவூர் செல்வோர், கீழையூரில் உள்ள இரட்டைக் கோயில் களான அவனி கந்தர்ப்ப ஈஸ்வர கிருகத்தைக் கண்டு தரிசித்து, சிற்பப் பேரழகை ரசித்துவிட்டு, அதையடுத்து சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று, அங்கே உள்ள கலைப் பொக்கிஷத் தையும் கண்ணாரக் கண்டு களியுங்கள்! விலை மதிக்கமுடியாத அற்புதங்கள் பலவற்றையும் அங்கே சிற்பங்களாகத் தரிசிக்கலாம்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P42c
குறிப்பாக, அழகு ததும்பக் காட்சி தரும் ரிஷபத்தைப் பார்த்தால், 'அட..!’ என்று வியந்து போவீர்கள். கீழப்பழுவூருக்குச் சென்று, திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய திருவாலந்துறையார் கோயிலையும், அருகில் இடிபாடுகளுக்கு இடையே உள்ள கோயில் சிற்பங்களையும் காணலாம்.

இவை அனைத்தும் பழுவேட்டரையர்கள் என்ற அரச மரபினர் தமிழகத்துக்குத் தந்த பெருங்கொடை!

- புரட்டுவோம்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 Empty Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:15 pm


சேதி சொல்லும் சிற்பங்கள்! 18
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


கங்கைகொண்ட சோழபுரத்து கங்கை கொண்ட சோழீச்சரம் எனும் பெரிய கோயிலிலும், திருவையாற்று ஐயாறப்பர் திருக் கோயிலிலும் மூலவர் திருக்கோயிலைத் தவிர, தெற்குப் பிராகாரத்தில் தென்கயிலாயம் (தக்ஷிண கைலாசம்) எனும் ஒரு சிவாலயமும், வடக்குப் பிராகாரத்தில் வடகயிலாயம் (உத்ர கைலாசம்) எனும் தனித்த சிவாலயம் ஒன்றும் இருப்பதைக் காணலாம்.

கங்கைகொண்ட சோழபுரத்து தென்கயிலாயக் கோயிலின் கருவறையில் தற்போது மூலவர் லிங்கம் காணப்பெறவில்லை. வட கயிலாயமோ பின்னாளில் அம்மன் கோயிலாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், திருவையாற்று தென் கயிலாயமும் வடகயிலாயமும் தற்போது வழிபாட்டில் திகழும் சிவாலயங்களாகவே விளங்குகின்றன.

தென்கயிலாயத்தை முதலாம் ராஜேந்திர சோழனின் தேவி பஞ்சவன் மாதேவியார் கற்கோயிலாக எடுத்தார் என்பதை அந்த ஆலயத்திலுள்ள ராஜேந்திர சோழனின் 31-ம் ஆட்சியாண்டு (கி.பி.1143) கல்வெட்டு எடுத்துக் கூறுகிறது. வடகயிலாயத்தை ராஜராஜ சோழனின் தேவி தந்தி சக்தி விடங்கி எனும் லோகமாதேவியார் எடுப்பித்தார் என்பதை அந்த ஆலயத்துக் கல்வெட்டு கூறுகின்றது.

பஞ்சவன் மாதேவியாரால் கற்கோயிலாகப் புதுப்பிக்கப்பெற்ற தென் கயிலாயம், திருநாவுக்கரசர் எனும் அப்பர் அடிகளின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடைய திருக்கோயிலாகும். 'திருக்கயிலையை கண்டல்லால் மீளேன்’ - என ஈசனிடமே சபதம் உரைத்து, வடபுலம் நோக்கிச் சென்ற அப்பரடிகள், இறுதியில் பரமேஸ்வரன் தன் கையில்

கொண்டு வந்த புனல் தடமொன்றில் (குளத்தில்) மூழ்கியதும் சுவடு படாமல் திருவையாற்றுக் குளத்திலிருந்து எழுந்தார். உடன் அவருக்குக் கயிலை தரிசனம் கிடைத்தது. இணை இணையாக வந்த விலங்கு களையும் பறவைகளையும் சிவசக்தியாகவே கண்டார்.

'மாதர் பிறைக் கண்ணியானை’ எனத் தொடங்கும் பாடலோடு பதினொரு பாடல்கள் உடைய திருப்பதிகம் (தேவாரம்) பாடியருளினார். அவர் கயிலை தரிசனம் செய்த இடமே தென் கயிலாயம் எனும் திருவையாற்றுத் திருக்கோயிலாகும்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P42a
கருவறையுடன் கூடிய ஸ்ரீவிமானம், அர்த்த மண்டபம், முகமண்டபம், திருச்சுற்று மாளிகை எனும் சுற்றுப்பிராகார மண்டபம், திருக்கோபுரம் ஆகியவற்றுடன் தென் கயிலாயம் எனும் இத்திருக் கோயில் திகழ்கின்றது. வடதிசை நோக்கியுள்ள இத்திருக்கோயிலில் தென்கயிலாய நாதர் சிவலிங்க வடிவில் காணப்பெறுகிறார். முகமண்டபத்தில் அப்பர் அடிகளார் உழவாரம் ஏந்திய நிலையில் ஈசனைத் தொழுகின்றவராகக் காணப்பெறுகின்றார்.

ஸ்ரீவிமானத்தின் கீழ் திசையில் மூன்று தேவ கோஷ்டங்களும், தென்திசையில் ஒரு தேவ கோஷ்டமும், மேற்கு திசையில் மூன்று தேவ கோஷ்டங்களும் உள்ளன. கீழ்த்திசை கோஷ்டங்களில் முறையே பைரவர், கணபதியார், அமர்ந்த கோல சிவபெருமான் திருவுருவங்களும், தென் திசையில் அமர்ந்த கோல கயிலைநாதனின் வடிவமும், மேற்குத்திசையில் அமர்ந்த கோல ஈசனின் வடிவத்தோடு துர்கை, முருகப்பெருமான் திருவடிவங்களும் இடம் பெற்றுள்ளன.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 P42b
பொதுவாக கருவறையின் மூன்று புற கோஷ்டங்களில் முறையே தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன் ஆகிய திருவுருவங் களே காணப்பெறும். ஆனால் இவ்வாலயத்தில் அந்த திருவுருவங்கள் இடம் பெறாமல், அமர்ந்த கோல சிவனாரின் மாறுபட்ட வடிவங்களே காணப்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

மதில் சுவருடன் இணைந்து திகழும் தென் கயிலாயத்துத் திருசுற்றுமாளிகையை 46 தூண்கள் தாங்கி நிற்கின்றன. இவற்றில் 45 தூண்கள் தமிழ்நாட்டுக் கலைப்பாணியில் அமையாது, நுளம்பர் கலைப்பாணியில் காட்சி தருகின்றன.

நுளம்பபாடி என்பது மைசூர் ராஜ்ஜியத்தின் கீழ்ப்பகுதியையும் பல்லாரி மாவட்டத்தையும் தன்பாற் கொண்ட நாடாகும். அந்த நாட்டை ராஜேந்திர சோழனின் படை வெற்றி கண்டது. அப்போது, அவர்களின் கலையில் மயங்கிய சோழர் படை அந்த நாட்டிலிருந்த அழகிய கலைப்படைப்புகளில் சிலவற்றை எடுத்து வந்து சோழநாட்டுக் கோயில்களில் இடம்பெறச் செய்தது. அவ்வாறு மைசூர் பகுதியிலிருந்து திருவையாற்றுக்கு எடுத்து வரப்பெற்றவையே இந்த 45 தூண்களுமாகும். மரத்தை கடைசல் செய்து அமைத்தது போலவே கல்லில் மிக நேர்த்தியாக இத்தூண்களை வடிவமைத்துள்ளனர்.

இங்குக் காணப்பெறும் நுளம்பர் தூண்கள் சிலவற்றின் நடுப்பகுதியில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் காணப்பெறுகின்றன. நாட்டியக் கலைஞர்கள், சூரியன், சந்திரன், ராம-லக்குவன் காண வாலியும் சுக்ரீவனும் சண்டையிடுதல், கஜசம்ஹார மூர்த்தி, பூரண கும்பம் எனப் பல நுட்பமிகு வேலைப் பாடுகளைக் காணமுடிகின்றது.

பஞ்சநதீஸ்வரர் என்னும் ஐயாறப்பர் திருக்கோயிலுக்குச் செல்வோர் மறக்காமல் பார்க்க வேண்டிய திருக்கோயில் தென் கயிலாயமாகும்.

- புரட்டுவோம்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 2 Empty Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum