ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஞ்ஞானத்தில் மட்டும்தான் புதுமை செய்ய முடியுமா?

3 posters

Go down

 விஞ்ஞானத்தில் மட்டும்தான்  புதுமை செய்ய முடியுமா? Empty விஞ்ஞானத்தில் மட்டும்தான் புதுமை செய்ய முடியுமா?

Post by சிவா Mon Aug 18, 2014 11:33 pm


எப்படி இவர்கள் கண்டுபிடிக்கிறார்கள், எதனால் கண்டுபிடிக்கிறார்கள் என்பதைக் குறித்து நீங்கள் பார்த்தால், இந்தக் கண்டுபிடிப்புகள் எங்கே தொடங்குகின்றன? மைக்ராஸ்கோப்பில் தொடங்குகின்றனவா? பரிசோதனைக்கூடத்தில் தொடங்குகின்றனவா என்று கெவின் டேன்பர் என்பவர் கண்டுபிடிப்புகளைக் குறித்து ஆய்வு செய்து, அதைப்பற்றி புத்தகம் ஒன்றை எழுதினார். அந்தப் புத்தகத்தில் அவர் சொல்லுகிறார், ‘இவை என்றுமே தொலைநோக்கியில் உருவாகவில்லை. பரிசோதனைக் கூடத்தில் உருவாகவில்லை. இவை அனைத்துமே ஒரு கருத்தரங்க மேடையில்தான் உருவாகிறது. ஏனென்றால், ஒரு கருத்தரங்கைச் சுற்றி பல்வேறு தகவல்கள் பரிமாறிக்கொள்கிற போதுதான், அதிலிருந்து ஏதோ ஒரு பொறி, ஒருவருக்குத் தோன்றி, அதை ஏன் நாம் முன்னெடுத்துச் செல்லக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு, அதை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். உலகத்திற்குத் தருகிறார்கள்’ என்று சொன்னார். நீங்கள் எதை வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம். நீங்கள் விஞ்ஞானத்தில்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பது இல்லை. விளையாட்டிலும் கண்டுபிடிக்கலாம்.

ஃபாஸ்பெரி ஃபிளாப் (Fosbury Flop) என்று ஒன்று இருக்கிறது. எல்லோருமே உயரம் தாண்டுதலை சின்ன வயதிலேயே செய்வார்கள். உயரம் தாண்டுகிறபோது ஓரளவிற்குத்தான் தாண்டமுடியும். ஃபாஸ்பெரி என்பவர், ஓடி வந்து காலை வைத்து, உயரம் தாண்டினார். அப்போது, 1.61 மீட்டர் உயரம்தான் அவரால் தாண்ட முடிந்தது. அடுத்து அவர் யோசித்தார், காலை முன்னால் நீட்டி தாண்டுவதற்குப் பதிலாக, தலையை முன்னால் நீட்டி தாண்டினால் என்ன ஆகும் என்று யோசித்தார். அதன்படி, வேகமாக ஓடிவந்து எம்பியதும், தலையை முன்னால் நீட்டி உயரத்தைத் தாண்டினார். இப்போது 1.91 மீட்டர் உயரத்தை அவரால் தாண்ட முடிந்தது. ஏனென்றால் காலை நாம் முன்னால் நீட்டித் தாண்டும்போது, நமது உடலின் சென்டர் ஆஃப் மாஸ் வயிற்றில் இருக்கிறது. தலையை முன்னால் நீட்டித் தாண்டும்போது சென்டர் ஆப் மாஸ் தாண்டுகிற Bar-க்குக் கீழே வந்துவிடுகிறது. அதனால் அதிக உயரத்தை எளிதாகத் தாண்டலாம். இதுதான் ஃபாஸ்பெரி ஃபிளாப். ஒலிம்பிக்ஸில் இந்த முறையைப் பயன்படுத்தி 2.24 மீட்டர் உயரத்தைத் தாண்டி, தங்கப்பதக்கத்தையும் வென்றார். ஆக, இப்படி ஒரு விளையாட்டிலே கூட நீங்கள் புதியனவற்றைச் செய்யமுடியும்.

விஞ்ஞானத்தில் மட்டும்தான் புதுமையைச் செய்யமுடியும் என்று நினைக்காதீர்கள். இலக்கியத்தில் புதுமையைச் செய்யமுடியாதா? செய்ய முடியும். தமிழகத்திலேயே இலக்கியத்தில் புதுமையைச் செய்தவர் திருவள்ளுவர். இரண்டே வரிகளில் அற்புதமான கருத்துக்களை எழுதி, அது அனைவரின் மனத்திலும் இன்னும் பதியம் போடுகிற அளவுக்கு சுருக்கமாக சொல்வதுதான் நிற்கும் என்று எடுத்துச் சொன்னவர் திருவள்ளுவர்.

அதைப்போலவே ஆங்கில இலக்கியத்தை எடுத்துக்கொண்டால், ஷேக்ஸ்பியர் புதுமைக்குப் பெயர் போனவர். ஷேக்ஸ்பியருக்கு முன்னால் பலர் எழுதியதை நாம் பார்க்கிறோம். ஷேக்ஸ்பியர் ஒன்றும் பல்கலைக்கழகத்தில் படித்தவர் அல்லர். ஆனால் ஷேக்ஸ்பியருடைய காலத்திலே, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலே, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலே படித்த சிட்னி, கிரீன், மார்லோ போன்ற மகத்தான அறிஞர்கள் இருந்தார்கள். ஆனால், அவர் எல்லோரும் ஷேக்ஸ்பியர் எழுதியதைப் பார்த்து கிண்டல் கூட செய்தார்கள். ஜார்ஜ் என்பவர்,‘ஒரு காகம், மயிலின் இறகுகளை எல்லாம் எடுத்துப் போர்த்திக்கொண்டு, தன்னை அழகி என்று காட்டுகிறது’ என்று சொன்னார். ஆனால், அப்படிச் சொல்லப்பட்ட ஷேக்ஸ்பியர்தான் ஆங்கில இலக்கியத்தில் புகழோடு இருக்கிறார். ஏனென்று கேட்டால், அதற்கு முக்கியமான காரணம், அவர் புதுமைகளை இலக்கியத்தில் புகுத்தினார். அதுவரை மூன்று முக்கியமானவற்றை இலக்கியத்தில் கடைபிடித்தார்கள். ஒன்று Classical unity என்ற மூன்றில் ஒன்று Time unity. நாடகம் என்பது 24 மணி நேரத்தில் நடக்கிற நிகழ்வுகளோடு முடிந்துவிட வேண்டும். உதாரணமாக, நாம் ஒரு நாடகம் எழுதுகிறோமென்றால், 21 மார்ச் 2014-இல் நடக்கிறதை வைத்துதான் எழுத வேண்டும். இரண்டாவது Place unity. அதாவது, காட்சி ஒரே இடத்தில்தான் நடக்க வேண்டும். முதல் காட்சி குருநானக் கல்லூரியிலும், இரண்டாவது காட்சி எத்திராஜ் கல்லூரியிலும், மூன்றாவது காட்சி பச்சையப்பன் கல்லூரியிலும் நடப்பது போல் அமைத்தால், பார்ப்பதற்கு உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும். ஆனால், நாடகத்தின் விதியாக இல்லை. அது ஒரே இடத்தில்தான் நடக்க வேண்டும். சென்னையில் நடப்பதாக இருந்தால் சென்னையில்தான் நடக்க வேண்டும். சென்னையிலிருந்து அடுத்ததாக லண்டனுக்குப் போகக்கூடாது. மூன்றாவது Theme Unity. அதாவது சோகமான கதை என்றால் சோகமாகவே இருக்க வேண்டும் அல்லது நகைச்சுவை என்றால் நகைச்சுவையாகவே இருக்க வேண்டும். சோக நாடகத்தில் நகைச்சுவைக் காட்சி இடம்பெறக்கூடாது.

இந்த மூன்று விதிகளையும் ஷேக்ஸ்பியர் மீறினார். முதன்முதலாக three verse எழுதினார். அப்படி எழுதியதால்தான் ஷேக்ஸ்பியர் இன்றும் நிலைத்து நிற்கிறார். அவருக்கு முன்னால் எழுதியவர்களின் எழுத்துக்களை நீங்கள் படித்தால் அது உங்களுக்குப் புரியாது. ஏன் என்றால், அதற்குப் பொழிப்புரை தேவைப்படும். ஆனால் ஷேக்ஸ்பியர் எழுதியதை அப்படியே உங்களால் வாசிக்க முடியும். சாமானியர்களின் மொழியிலேயே சொல்வதென்றால், ஆங்கில மொழியின் மாற்றத்திற்கே ஒரு பிரேக் போட்டவர் ஷேக்ஸ்பியர்தான் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு அவர் ஆங்கில இலக்கியத்திலே புதியனவற்றை நுட்பமாகப் புகுத்தினார். ஆகவே, அவரைப் போன்று நீங்களும் இலக்கியத்திலே புதுமையைப் புகுத்தலாம்.

நாம் ஏன் பாரதியாரைப் படிக்கிறோம், பாரதியைப் பற்றிப் பேசுகிறோம். பாரதியைப் போல இலக்கியத்திலே புதுமைகளைப் படைத்தவர் தமிழிலே வேறு யாரும் இல்லை. அவருடைய எல்லா வரிகளுமே ஏதேனும் ஒரு காலகட்டத்தில் மேற்கோளாக எடுத்துக் காட்டப்படுகின்றன. திடீரென்று ஒருநாள், எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே’ என்று யார் சொன்னது என்று கேட்டார். யார் எழுதியது என்று தெரியவில்லை என்றால், அது பாரதியின் வரிகளாகத்தான் இருக்கும். ஏனென்றால், அவருடைய வரிகள்தான் சொன்னவர் யார் என்று தெரியாமலேயே நம் ஆழ்மனதிற்குள் சென்று நங்கூரமிட்டு விடுகின்றன’ என்று நான் கூறினேன்.

அப்படிப்பட்ட பாரதி, பாஞ்சாலி சபதத்தில் எழுதிய பாடலை இங்கே உதாரணமாக குறிப்பிடலாம். சகுனியும் யுதிராஷ்டிரனும் சூதாடுகிறார்கள். தாயக்கட்டைகளை உருட்டுகிறார்கள். அப்படி உருட்டும்போது, யுதிராஷ்டிரன் வேகமாக அவன் சொத்துக்களை எல்லாம் இழக்கிறான். அதைப்பற்றி குறிப்பிட்டு எழுதுகிறார். அதுவரை விருத்தப்பாவிலே எழுதியவர். வேகத்தைக் கூட்டுகிறார்,

‘மாடிழந்து விட்டான் - தருமன் மந்தை மந்தையாக;

ஆடிழந்து விட்டான்-தருமன் ஆளிழந்து விட்டான்

பீடிழந்த சகுனி - ‘அங்கு பின்னுச் சொல்லுகின்றான்’

‘நா டிழக்க வில்லை,-தருமா!நாட்டை வைத்தி’டென்றான்” எப்படி வேகத்தைக் கூட்டுகிறார் பாருங்கள்.

இப்படி புதுமைகளைச் செய்தவர் பாரதி. ஆக இலக்கியத்திலே நீங்கள் புதுமைகளைச் செய்யலாம். கணிதத்திலே புதுமையைச் செய்ய முடியுமா?

கணிதம்தான் அறிவியலிலே மிகவும் தூய்மையான பகுதி. கணிதம் இல்லாமல் இலக்கியம் இல்லை. கணிதம் இல்லையென்றால் இசை எதுவும் இல்லை. ஏழு ஸ்வரங்கள் என்றால் அங்கே கணிதம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. கணிதம் இல்லாமல் இந்த அறை இல்லை. இந்த அறையே தங்க விகிதத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இதனுடைய அகலத்தைப் போல நீளம் 1.6 மடங்காக இருப்பதால்தான் இது சிறந்த அரங்கமாக இருக்கிறது. நம்முடைய உடலே தங்க விகிதத்தில்தான் அமைந்திருக்கிறது. இடுப்பு வரை ஒரு மடங்கு, இடுப்புக்கு கீழே 1.6 மடங்கு. ஆகவே, நாம் அனைவருமே தங்க மனிதர்கள்தான்.

அப்படி தங்க விகிதத்தால் எது அமைக்கப்படுகிறதோ, அதுதான் மகத்தானது என்று சொன்னால், கணிதம் என்பது ஓவியத்திலும் இருக்கிறது. லியானர்டோ டாவின்சியின் ஓவியங்களை இன்னும் ஏன் உலகம் புகழ்ந்து, பாராட்டுகிறது. ஏனெனில், அவருடைய ஓவியங்கள் அனைத்திலுமே தங்க விகிதம் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. அகலம் ஒரு மடங்கு என்றால், நீளம் 1.6 மடங்காக இருப்பதால்தான், இன்றும் அந்த ஓவியங்கள் பார்த்து, ரசிக்கும்படி இருக்கின்றன. இப்படி கணிதம் ஓவியத்தில் இருக்கிறது. கணிதம் சிற்பத்திலே இருக்கிறது. கணிதம் உடையிலே இருக்கிறது. கணிதம் நடையிலே இருக்கிறது. கணிதம் கோலத்திலே இருக்கிறது. கணிதம் சமையலிலே இருக்கிறது. இப்படி, கணிதம் எல்லாவற்றிலும் இருக்கிறது.

அந்தக் கணிதத்திலே புதுமையைப் புகுத்த முடியுமா என்றால் புகுத்தியவர்கள் இருக்கிறார்கள். ஆர்க்கிமிடிஸ், நியூட்டன், காஸ் என்கிற மூவரைத்தான் கணித உலகத்தின் வேலிமுனைகள் என்று சொல்லுகிறோம். ஏனென்றால் ஆர்க்கிமிடிஸ் கணிதத்தை வெறும் சூத்திரங்களாகச் சொல்லவில்லை. வாழ்க்கையோடு தொடர்புபடுத்தினார். அவருடைய காலகட்டத்திலே, கணிதம் என்பது வெறுமனே படிக்கிற ஒன்றாக இருந்ததை மாற்றி, வாழ்க்கையோடு தொடர்புபடுத்தினால், எதிரி நாடுகளை வெல்லலாம் என்று, சிராக்கஸ் மன்னனை, அவருடைய கண்டுபிடிப்புகளால் கவண் கற்களை எறிந்து, கப்பல்களைத் தாக்கி, வெற்றி பெற்று காண்பித்தார். அடுத்ததாக நியூட்டன். நியூட்டன் கால்குலஸை கண்டுபிடித்தார். அடுத்ததாக காஸ். அப்பா கொண்டு வருகிற மளிகைக் கணக்குகளில் வரும் தவறுகளை சின்ன வயதிலேயே சுட்டிக்காட்டியவர் அவர். ஒருநாள் காஸ், வகுப்பிலே அமர்ந்து கொண்டிருக்கிறார். ஆசிரியர் வரவில்லை.

நீங்கள் எப்போதும் பார்க்கலாம். ஒரு மாணவன் வீட்டிற்கு மகிழ்ச்சியாக வருகிறானென்றால், அன்று அவன் வகுப்பிற்கு ஆசிரியர் வரவில்லை என்று அர்த்தம். கல்லூரி மாணவன் மகிழ்ச்சியாக வருகிறானென்றால், பேராசிரியர் வரவில்லை என்று அர்த்தம். பேராசிரியர் மகிழ்ச்சியாக வருகிறார் என்றால், கல்லூரி முதல்வர் வரவில்லை என்று அர்த்தம். கல்லூரி முதல்வர் மகிழ்ச்சியாக வகுப்புக்கு வருகிறார் என்றால் அவருடைய மனைவி ஊருக்குப் போயிருக்கிறார் என்று அர்த்தம். நம்முடைய மகிழ்ச்சி என்பது தப்பிப்பதில்தான் இருக்கிறது.

காஸின் வகுப்பிற்கு அவருடைய ஆசிரியர் வரவில்லை. வேறொரு ஆசிரியர் வருகிறார். வகுப்பு எடுப்பதற்காக அல்ல. மாணவர்கள் யாரும் சத்தம்போடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக. எதற்காக மாண்டிசோரி கல்விமுறையைப் புகுத்த வேண்டும்? எல்லா வகுப்புகளுமே அமைதியான வகுப்புகள்தான், ஆசிரியர்கள் இருக்கும் வரை. ஒரு வகுப்பு நல்ல வகுப்பா? கட்டுப்பாடு உள்ள வகுப்பா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு ஆசிரியர் இல்லாத போது போய்ப்பார்க்க வேண்டும். ஆனால் மாண்டிசோரி, சொன்னார், ‘ஆசிரியர்கள் இருக்கும்போதே, ஆசிரியர்கள் இல்லாததைப் போல மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டும். அதுதான் என்னுடைய கல்வித் திட்டம்’ என்று சொன்னார். அப்படி ஒரு திட்டம்தானே மிகப்பெரிய திட்டமாக இருக்க முடியும். மாணவர்கள் விரும்புவதும் அப்படிப்பட்ட கல்வித்திட்டத்தைத்தானே.

அப்படிப்பட்ட சூழலிலே வேறொரு ஆசிரியர் வகுப்பிற்கு வருகிறார். மாணவர்கள் தொல்லை செய்யக்கூடாது. அவர் எதையோ திருத்த வேண்டி இருக்கிறது. எனவே அவர் சொன்னார், ‘எல்லோரும் ஒன்றிலிருந்து நூறுவரை கூட்டி கணக்குப் போடுங்கள்’ என்று. இதனால் நிறைய நேரமாகும். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என நூறு வரை கூட்ட வேண்டுமே. இதனால் நேரமாகும். இதில் ஒருமணி நேரத்தைக் கழித்துவிடலாமே என்று நினைத்தார். அடுத்த நிமிடமே ஒரு மாணவன் விடையோடு வந்து நின்றான். அவனைப் பார்த்து, ‘எப்படி உன்னால் முடிந்தது?’ என்று கேட்டார். ‘மிகவும் எளிது, ஒன்றும் நூறும் நூற்றி ஒன்று. இரண்டும் தொண்ணூற்றி ஒன்பதும் நூற்றி ஒன்று, மூன்றும் தொண்ணூற்றி எட்டும் நூற்றி ஒன்று, நான்கும் தொண்ணுற்றி ஏழும் நூற்றி ஒன்று, (n) X (n+1) / 2 என்று கணக்கிட்டால் விடை வந்து விட்டது’ என்றான் அந்த மாணவன். அந்த மாணவன்தான் முன்பு சொன்ன காஸ்.

மற்றொரு சம்பவத்தை உதாரணமாக குறிப்பிடலாம். மாணவன் ஒருவன் பேராசிரியரின் வகுப்பிற்கு மிகவும் தாமதமாக வந்தான். அவன் வருவதற்கு முன்னரே அப்பேராசிரியர் போர்டிலே, தீர்க்கப்படாத இரண்டு பெரிய கணக்குகள் எழுதிப் போட்டுவிட்டுச் சென்றிருந்தார். அவன் அதை வீட்டுப் பாடம் என நினைத்துக்கொண்டு, எழுதி வைத்துக் கொண்டான். கடினமான கணக்குகள். இரவு, பகலாக முயற்சி செய்கிறான், முடியவில்லை. வீட்டுப்பாடம் என்று கொடுக்கப்பட்ட கணக்கை, தன்னால் தீர்க்க முடிந்தால்தானே அது வீட்டுப்பாடம் என நினைத்துக் கொண்டு அதிலேயே மூழ்கினான். பசியை மறந்தான். தூக்கத்தை மறந்தான். ஏன், தண்ணீர் குடிக்கக்கூட அவன் மறந்தான். அதிலேயே அமிழ்ந்து அமிழ்ந்து அதிலேயே கரைந்து போனான். மூன்று நாட்கள் கழித்து அதற்கான விடைகளைக் கண்டுபிடித்து நோட்டில் எழுதிக்கொண்டு போய், பேராசிரியரின் மேசை மேல் வைத்து விட்டு வந்துவிட்டான். மூன்று நாட்கள் கழித்து, நள்ளிரவு 2 மணி அளவில் அந்த மாணவனது வீட்டின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அந்த மாணவன் கதவைத் திறந்து பார்த்தபோது, அந்தக் கணிதப் பேராசிரியர், அப்படியே ஓடிவந்து அவனை ஆரக்கட்டித் தழுவிக்கொண்டார். மனதாரப் பாரட்டவும் செய்தார்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘எதற்காக ஐயா என்னைப் பாராட்டுகிறீர்கள்?’ என்று கேட்டான். அக்காலத்தில் அவ்வளவு எளிதில் மாணவர்களை பேராசிரியர்கள் பாராட்டிவிட மாட்டார்கள். அதனால்தான் அந்த மாணவனிடமிருந்து அப்படிப்பட்ட கேள்வி வெளிவந்தது. ‘இந்த இரண்டு கணக்குகளையும் இதுவரை யாருமே தீர்க்கவில்லை என்று போர்டிலே எழுதிப்போட்டிருந்தேன். நீ எப்படித் தீர்த்தாய்?’ என்று பேராசிரியர் கேட்டார். ‘ஐயோ, வீட்டுப்பாடம் என்று நினைத்து கணக்கைப் போட்டு முடித்துவிட்டேன். இந்தத் தவறுக்கு என்னை மன்னித்து விடுங்கள்’ என்றான் அந்த மாணவன். பிரபல அமெரிக்க கணிதவியலாளரான ஜார்ஜ் டாண்ட்சிக்தான் அந்த மாணவன். அவன் கண்டுபிடித்ததைத் தீர்ப்பதற்கும், அதைப் புரிந்துகொள்வதற்குமே நீண்ட காலமாயின.

நான் எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், இப்படி கணிதத்தில் கூட உங்களால் புதுமையைப் புகுத்த முடியும். அன்று பிதாகரஸ் கண்டுபிடித்த தியரத்தைத்தான் நாங்கள் இன்று பயிர்ப் பரிசோதனை முறையில் பயன்படுத்துகிறோம். அறிவியலில் புதுமையைப் புகுத்த முடியும் என்று ஏற்கெனவே சொன்னேன். ஏன் உயிரியலிலே படைக்க முடியாதா? நிச்சயமாக முடியும். அதற்கு ஓர் உதாரணத்தைச் சொல்லுகிறேன். ஸ்டீபன் டர்னியர் 1820-ஆம் ஆண்டு, நமது வண்டலூர் உயிரியல் பூங்காவைப்போல் ஓர் உயிரியல் பூங்காவிற்குச் சென்றிருந்தார். அங்கு நெருப்புக்கோழியின் முட்டைகளைப் பொறிப்பதற்கு ஒரு பொறிப்பகம் இருப்பதைப் பார்த்தார். அதைப் பார்த்தபோது, அவருக்கு ஒரு பொறி தட்டியது. அப்போது மேலைநாடுகளிலும் கூட குழந்தைகள் எல்லாம் பிறந்து, முன்கூட்டியே இறந்து கொண்டிருந்தன. அங்கு பொறிப்பகம் இருப்பதைப் பார்த்தபோது, இதைப்போன்று ஒரு பொறிப்பகத்தைச் செய்தால் குழந்தைகளைக் காப்பாற்றலாமே என்று நினைத்தார். அப்படி அவர் வடிவமைத்ததுதான் இன்குபேட்டர். 2004-இல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலால் இந்தோனேஷியா கடுமையான பேரழிவை சந்தித்தது. அந்த நாட்டிற்கு, பல வளர்ந்த நாடுகள் நிறைய இன்குபேட்டர்களை அனுப்பி வைத்தன. இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு, அங்கு சென்று பார்த்தபோது அனைத்து இன்குபேட்டர்களும் வீணாகிப்போயிருந்தன. காரணம், அவ்வப்போது ஏற்பட்ட மின்சாரக் கோளாறுகளும் அவற்றை எப்படி சரிசெய்வது என்ற நுணுக்கம் அவர்களுக்குத் தெரியமல் போனதும்தான். அப்போது ஒருவர் சொன்னார், ‘மக்கள் எதைப் பயன்படுத்துகிறார்களோ, அதைக்கொண்டு இதுபோன்ற கருவிகளைத் தயாரிக்க வேண்டும்’ என்று.

எல்லா ஊரிலும் கார் இருக்கிறது. வேன் இருக்கிறது. பேருந்து இருக்கிறது. இதுபோன்ற ஆட்டோ மொபைல் பார்ட்ஸ்களை வைத்து, ‘நியோ நர்ச்சர்’ என்ற, புதிய வகை இன்குபேட்டர் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அது வளரும் நாடுகளிலும் கூட வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆக உயிரியலிலும் கூட புதுமையைப் புகுத்த முடியும். நாம் பார்க்கிற எல்லாப் பொருள்களிலுமே அவற்றை பயன்படுத்த முடியும். ஆக, உங்களுடைய ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைக் கொண்டு எதில் வேண்டுமானாலும் புதுமையைச் செய்யலாம்.

[thanks]வெ.இறையன்பு[/thanks]


 விஞ்ஞானத்தில் மட்டும்தான்  புதுமை செய்ய முடியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விஞ்ஞானத்தில் மட்டும்தான்  புதுமை செய்ய முடியுமா? Empty Re: விஞ்ஞானத்தில் மட்டும்தான் புதுமை செய்ய முடியுமா?

Post by T.N.Balasubramanian Tue Aug 19, 2014 3:38 am

படிக்க படிக்க ஆச்சர்யமாக இருக்கிறது .
தகவல்கள் கொடுத்துள்ள இறையன்பிற்கும் / சிவாவிற்கும்  நன்றி நன்றி 
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 விஞ்ஞானத்தில் மட்டும்தான்  புதுமை செய்ய முடியுமா? Empty Re: விஞ்ஞானத்தில் மட்டும்தான் புதுமை செய்ய முடியுமா?

Post by ayyasamy ram Tue Aug 19, 2014 7:44 am

சாப்பிடத் தெரிந்தவன் சமைக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்..1
-
அவ்வளவுதான்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 விஞ்ஞானத்தில் மட்டும்தான்  புதுமை செய்ய முடியுமா? Empty Re: விஞ்ஞானத்தில் மட்டும்தான் புதுமை செய்ய முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum