ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்

Go down

 ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன் Empty ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்

Post by சிவா Thu May 01, 2014 3:54 am

கைலாசம் கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டு. அவர் பரபரப்படைந்தார்.

தாகமில்லாமலிருந்தும்கூட மேஜை மேலிருந்த தம்ளரை எடுத்து ஒரு வாய் நீரைப் பருகி, அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக அறையின் மறு பக்கத்தை நோக்கி ஒரு கணம் - ஒரே கணம் - பார்வையை ஓட விட்டார். அகர்வால் மேஜை மீது குனிந்து ஏதோ ஃபைலை கவனமாகப் படித்துக் கொண்டிருந்தான். கைலாசம் தம்ளரை மறுபடி மேஜை மேல் வைத்தார். ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். நீலவானம், ஓரிரு மேகங்கள், மரங்களின் உச்சிகள், அடுக்கு மாடிக் கட்டிடத்தின் உச்சிகள்.... திடீரென்று இவ்வாறு பார்த்துக் கொண்டிருப்பது பற்றிய தன்னுணர்வினால் அவர் பீடிக்கப்பட்டார். அகர்வால் இந்தப் பார்வையைக் கவனித்து, ‘என்ன, அடுத்த கதையைப் பற்றி யோசனையா?’ என்றோ, ‘என்ஜாயிங் தி சீனரி, கைலாஷ் சாப்?’ என்றோ பேசத் தொடங்கப் போகிறான் என்ற பயம்..

அவர் அவசரமாக ஒரு ஃபைலை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டார். அது அவர் ஏற்கனவே பார்த்து முடித்து, பியூன் எடுத்துச் செல்வதற்காக டிரேயில் வைத்திருந்த ஃபைல், இருந்தாலும் அதை மறுபடி எடுத்துப் பிரித்து வைத்துக்கொண்டு, பேனாவைத் திறந்து வலது கையில் பிடித்துக்கொண்டு, சற்று முன் தான் எழுதிய நோட்டை அணுஅணுவாகச் சரிபார்த்தார். தெளிவில்லாதனவாகத் தோன்றிய i-க்கள் மேலுள்ள புள்ளிகள், t-க்களின் மேல் குறுக்காகக் கிழிக்கப்படும் கோடுகள், ஃபுல் ஸ்டாப்புகள், கமாக்கள், எல்லாவற்றிலும் பேனாவை மறுபடி பிரயோகித்து ஸ்பஷ்டமாக்கினார். ஆங்காங்கே சில புதிய கமாக்களைச் சேர்த்தார். ஒரு o, a போல இருந்தது. அதையும் சரிபார்க்கத் தொடங்கினார். அப்போதுதான் திடுமென அகர்வாலின் குரல் ஒலித்தது.

‘ரொம்ப பிசியா?’

அவர் எதிர்பார்த்திருந்த, பயந்திருந்த, தாக்குதல்! நல்லவேலை, இப்போது மட்டும் அவர் வெளியே பார்த்துக் கொண்டிருந்தால்!

’ம்ம்’ என்றவாறு அவர் வேறு ஏதாவது 'a' 'o' போலவோ அல்லது 'o' 'a' போலவோ, 'u' 'v' போலவே, 'n' 'r' போலவோ, எழுதப்பட்டிருக்கிறதா என்றுத் தேடத்தொடங்கினார்.

அகர்வாலின் நாற்காலி கிரீச்சென்று பின்புறம் நகரும் ஓசையும் இழுப்பறை மூடப்படும் ஓசையும் கேட்டன. ‘ஃபைவ் மினிட்ஸில் வருகிறேன்’ என்று அவரிடம் சொல்லி விட்டு, அவன் அறைக்கு வெளியே சென்றான்.

கைலாசம் ஓர் ஆறுதல் பெருமூச்சுடன் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார். மிக இயல்பாகவும் சுதந்தரமாகவும் உணர்ந்தவராக, ஜன்னல் வழியே வானத்தைப் பார்க்கத் தொடங்கினார். ஒரு கிளிக்கூட்டம் பறந்து சென்றது. அக்காட்சி திடீரென்று மனத்தைப் பல வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் சென்றது. கிராமத்தில், ஆற்றங்கரை மணலில் உட்கார்ந்திருந்த மாலைகள். பக்கத்தில் நண்பன் ராஜூ. பேசாமலேயே ஒருவரையொருவர் புரிந்து கொண்ட அன்னியோன்யம்.

ஆனால் இப்போது அவர் கிராமத்தில் இல்லை. தில்லியில், மத்திய சர்க்கார் அலுவலகம் ஒன்றின் பிரம்மாண்டமானதொரு சிறை போன்ற கட்டடத்தின் ஓர் அறையில் அமர்ந்திருக்கிறார். அருகில் இருப்பது ராஜூ இல்லை, அகர்வால். இவன் அவரைப் பேசாமல் புரிந்து கொள்கிறவன் இல்லை, பேசினாலும் புரிந்து கொள்கிறவன் இல்லை.

மணி பன்னிரண்டு பத்து. அகர்வால் இதோ வந்துவிடுவான். கைலாசம் சீக்கிரமாக அவனிடம் கூறுவதற்கேற்ற ஒரு காரணத்தை சிருஷ்டி செய்தாக வேண்டும். அவனுடன் தான் ஏன் டிபன் சாப்பிட வரமுடியாது என்பதற்கான காரணம். பேங்குக்குப் போவதாகவோ, இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டப் போவதாகவோ, கடிகார ரிப்பேர் கடைக்குப் போவதாகவோ ஆஸ்பத்திரியில் இருக்கும் ஷட்டகரைப் பார்க்கப் போவதாகவோ (அவருக்கு அப்படி ஒரு ஷட்டகர் இல்லவே இல்லை) இன்று கூற முடியாது. இந்தக் காரணங்களைச் சென்ற சில தினங்களில் அவர் பயன்படுத்தியாயிற்று. வயிற்று வலியாயிருக்கிறதென்று சொன்னாலோ, அவனுடைய அனுதாபத்தை எதிர்கொள்ள வேண்டிவரும். அதையும் வெறுத்தார். லைப்ரரிக்குப் போவதாகச் சொல்லலாமா?

சொல்லலாம். ஆனால் அதில் ஓர் அபாயம் இருக்கிறது. அகர்வால் தானும் வருகிறேனென்று கிளம்பி விடலாம்.

ஈசுவரா! என்னைக் காப்பாற்று.

கைலாசம் தன்னையுமறியாமல் கண்களை மூடிக்கொண்டு விட்டிருக்க வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு மறுபடி கண்களைத் திறந்தபோது, எதிரே அவருடைய நண்பன் ராமு புன்னகையுடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். ‘ஹலோ! நீ எப்படா வந்தே?’ என்றா ஆச்சரியத்துடன். ராமு பம்பாயில் வேலையிருந்தான்.

‘ரூமுக்குள்ளே வந்ததைக் கேக்கறியா, இல்லை தில்லிக்கு வந்ததையா?’ என்றான் ராமு.

‘ரூமுக்குள்ளே இப்பத்தான் வந்தே, தெரியும்..’

‘ஷ்யூர்? யூ மீன், நீ இப்பத்தான் தூங்க ஆரம்பிச்சியா?’

’நான் தூங்கிண்டு இருக்கலை...’

‘பரவாயில்லையடா, தூங்கிண்டிருந்தாலும்தான் என்ன? தட்ஸ் யுவர் ஜாப், இல்லையா? அரசாங்கத்திலே இனிஷியேட்டிவ் எடுத்துக் கொள்பவன் அல்ல, எடுத்துக் கொள்ளாதவன்தான் விரும்பப்படுகிறான்...’

கைலாசம் கரகோஷம் செய்வது போலக் கேலியாகக் கை தட்டினார். அவருக்கு ராமுவைப் பார்த்தது மிகவும் உற்சாகமாக இருந்தது.

அறைக் கதவு திறந்தது, அகர்வால் உள்ளே வந்தான்.

‘அகர்வால்ஜி! மீட் மை ஃபிரண்ட்.. மிஸ்டர் ராமச்சந்திரன் ஆஃப் கமானீஸ்...”

ராமுவும் அகர்வாலும் கைகுலுக்கிக் கொண்டார்கள். ‘ஆஸஃப் அலி ரோடிலேயோ எங்கேயோ இருக்கிறதல்லவா, உங்கள் அலுவலகம்?’ என்றான் அகர்வால்.

‘ஓ, நோ! ஹீ இஸ் இன் பாம்பே’ என்ற கைலாசம், தொடர்ந்து அவசரமாக, ‘அச்சா அகர்வால், இவருக்கு ரிசர்வ் பேங்கில் இருக்கிற என்னுடைய ஒரு நண்பரைப் பார்க்கணுமாம்.... சோ இவரை அங்கே அழைத்துப் போகிறேன்... எக்ஸ்க்யூஸ் மீ ஃபார் லஞ்ச்’ என்றார்.

அகர்வாலில் முகத்தில் ஏமாற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது. ‘அச்சா...’ என்றான்.

ராமுவும் கைலாசமும் வெளியே வந்தார்கள்.

‘இது என்னடாது, ரிசர்வ் பேங்க், அது இதுன்னு?’ என்றான் ராமு.

‘வேடிக்கையிருக்கு, இல்லையா?’ என்று கைலாசம் சிரித்தார். ‘என்ன பண்றது... இவன்கிட்டே மாட்டிண்டு அவஸ்தைப் படறேன் நான். சொன்னால்கூடப் புரியுமோ என்னவோ..’

‘போரா?’

‘ஆமாம்’ என்றார் கைலாசம். அவர் முகத்தில் குதூகலமும் நன்றியுணர்வும் ஏற்பட்டது. எவ்வளவு கரெக்டாக இவன் புரிந்து கொண்டு விட்டானென்று. ராமுவின் அண்மையினால் தனக்கு ஏற்பட்ட மனநிறைவும் மகிழ்ச்சியும் அவருக்கு இதமாக இருந்தன.

அகர்வாலுடன் அதிருப்தியும் சலிப்பும் கொள்ளும்போது, ஒருவேளை தன்னை ஓர் எழுத்தாளனாக இவன் புரிந்து கொள்ளாததுதான் தன் அதிருப்திக்குக் காரணமோ, ஒரு வேளை நட்பு என்பது என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனென்ற என் அகந்தையைத் திருப்தி செய்து கொள்ளும் சாதனம்தானோ என்று ஏதேதோ விபரீத சந்தேகங்கள் அவருக்கு ஏற்படத் தொடங்கியிருந்தன. இந்த அகந்தைக்காகத் தான் பெறும் ஒரு நியாயமான தண்டனையாக அகர்வால் ஏற்படுத்தும் சலிப்பைக் கருதி அதைக் கூடிய வரை சகித்துக் கொள்ளவும் அவர் முயன்று வந்தார். தன்னை நன்னெறிப்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சியாக அதைக் கண்டார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன் Empty ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்

Post by சிவா Thu May 01, 2014 3:54 am



இப்போது ராமு அவருக்குத் தன் மீதே ஏற்பட்டு வந்த சந்தேகங்களை அறவே போக்கினான். ராமுவுக்கு அவர் கதைகள் எழுதுவது தெரியும். ஆனால் அவன் அவற்றை வாசிப்பது கிடையாது. அவர் கதைகளே எழுதாதவராக இருந்தாலும்கூட அவனைப் பொறுத்தவரையில் எந்த வித்தியாசமும் ஏற்பட்டிருக்க முடியாது, பார்க்கப் போனால் ‘கதையெழுதும் வீண் வேலையெல்லாம் எதற்கு வைத்துக் கொள்கிறாய், அது ஒரு கால விரயம்’ என்கிற ரீதியில்தான் அவன் பேசுவான். ‘நீயெல்லாம் என்னத்தை எழுதுகிறாய், ஹெரால்ட் ராபின்ஸ், இர்விங் வாலஸ் இவங்களெல்லாம் எவ்வளவு ஜோராக எழுதுகிறான்கள், அப்படியல்லவா எழுத வேண்டும்’ என்பான். அவருடைய எழுத்து முயற்சிகள் பற்றிய அவனுடைய இந்த அலட்சிய பாவத்துக்கு அப்பாற்பட்டும் அவர்களிடையே அரியதொரு நட்பு நிலவியது. தம் சின்னஞ்சிறு அங்க அசைவுகளையும் முகச் சுளிப்புகளையும்கூட அவர்கள் பரஸ்பரம் மிகச் சரியாகப் புரிந்து கொண்டு இன்பமயமானதொரு அன்னியோன்யத்தில் திளைத்தார்கள். இல்லை, அவருடைய எழுத்துக்கும் இந்த நட்புக்கும் சம்பந்தமே இல்லை. கைலாசத்துக்கு ராமுவை அப்படியே இறுகத் தழுவிக் கொள்ளலாம் போலிருந்தது.

‘எனக்கு ஒரே பசி’ என்றான் ராமு.

‘டிபன் சாப்பிடத்தான் போகிறோம்.’

‘போன தடவை வந்திருந்தபோது ஒரு இடத்துக்குப் போனோமே யூ.என்.ஐ.யா அதற்குப் பேரு? - அங்கேயே போகலாம்.’

‘இல்லை, அங்கே இப்பக் கூட்டமாக இருக்கும்’ என்றார் கைலாசம், உண்மையில் அங்கே அகர்வால் வந்துவிடப் போகிறானேயென்று அவருக்குப் பயமாக இருந்தது.

அந்த வட்டாரத்திலிருந்த இன்னொரு காரியாலயத்துக்குள் நுழைந்த அவர்கள், அங்கிருந்த கேண்டீனில் போய் உட்கார்ந்தார்கள்.

‘ஆமாம், போன தடவை நான் வந்தபோது நீ மட்டும் தானே ரூமிலே தனியா இருந்தே?’ என்றான் ராமு.

‘அதையேன் கேக்கிறே, எங்க மினிஸ்ட்ரியிலே ஆபீசர்கள் எண்ணிக்கை ஒரேயடியாகப் பெருகிப் போச்சு. ஸோ டெபுடி செக்ரெட்டரி ராங்குக்கு உள்ளவர்களுக்கும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும்தான் தனி ரூம்னு சொல்லிட்டான். நான் ஒரு ராங்க் கீழே இருக்கிறவன் ஆனதினாலே, இந்த அகர்வாலோட ஒரு ரூமை ஷேர் பண்ணிக்கும்படி ஆயிடுத்து.’

‘அகர்வாலா?’

‘ஆமாம் யு.பி.க்காரன்...’

‘என்ன பண்றான்? எப்பவும் தொண தொணங்கிறானா>’

‘தொண தொணன்னா.. என்ன சொல்றது? இதெல்லாம் சப்ஜெக்டிவ்தான் இல்லையா? எனக்கு அவனுடைய கம்பெனி ரசமாக இல்லை. அவ்வளவுதான்.’

‘புரிகிறது.’

‘இவன் அவன் வேறே பாஷைக்காரன்கிறதினாலேயோ, இலக்கிய அறிவு அதிகம் படைத்தவனாயில்லாததினாலோயோ, வேறு விதமான சாப்பாடும் பழக்கங்களும் உள்ளவன்கிறதினாலேயோ ஏற்படுகிற முரண்பாடு இல்லை. இன்ஃபாக்ட், இதே யு.பி.யைச் சேர்ந்த இன்னொருத்தனுடன் நான் மிகவும் சிநேகமாக இருக்கக் கூடும்...’

’உம்ம்...’ ராமு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.

‘இது அவாவா இயல்பைப் பொறுத்த விஷயம், இல்லையா? மனப்பக்குவத்தைப் பொறுத்த விஷயம்.. இரண்டு மனிதர்கள் ஒத்துப் போகிறார்கள். வேறு இரண்டு மனிதர்கள் ஒத்துப் போவதில்லை. இதை தர்க்க ரீதியாக விளக்குவது ரொம்பக் கஷ்டம்...’

ஆனாலும்கூட உன் மனம் இதைப் பற்றி மிகவும் தர்க்கம் செய்தவாறே இருக்கிறது போலிருக்கிறதே!’

‘ஐ ஆம் சாரி.... நான் உன்னை போர் அடிக்கிறேன், ரொம்ப.’

’நோ நோ - ப்ளீஸ் ப்ரொஸீட், இட்ஸ் வெரி இன்ட்ரஸ்டிங்.’

‘யார் மனசையும் புண்படுத்தக்கூடாது, எல்லாரிடமும் அன்பாக நடந்து கொள்ளணும், கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளணும் என்று நம்புகிறவன் நான்... ஆனால் அதை ஒரு மூட நம்பிக்கையாக இவன் நிரூபித்து விட்டான். இவனுடனிருக்கும்போது என்னை நான் இயல்பாக வெளிப்படுத்திக் கொள்ளவே முடிவதில்லை. எவ்வளவு வார்த்தைகளை செலவழித்தாலும் இவன் என்னைப் புரிந்து கொள்வதில்லை. அதை விட மோசம், புரிந்து கொண்டு விட்டதாக நினைக்கிறான். ஆனால் அவன் புரிந்து கொள்ளவில்லை என்பதை நான் அதிர்ச்சியுடன் உணருகிறேன்.’
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன் Empty ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்

Post by சிவா Thu May 01, 2014 3:55 am



‘அவ்வாறு நேர்வதுண்டு’ என்று ராமு அனுதாபப் புன்னகையுடன் தலையை ஆட்டினான்.

‘இவ்வளவுக்கும் அவன் என்னிடம் மிகவும் மதிப்பு வைத்திருக்கிறான், தெரியுமா?

ஆனால் மதிப்பு நேசத்தின் ஆதரவாகிவிட முடிகிறதில்லை.... சில சமயங்களிலே காலை நேரத்தில் அவன் என்னைப் பார்த்து முதல் புன்னகை செய்யும்போது, குட் மார்னிங் சொல்லும்போது, அவற்றை அங்கீகரிக்கவும் எதிரொலிக்கவும் கூட எனக்குத் தயக்கமாக இருக்கும். இவன் புன்னகை செய்வதும் வணக்கம் தெரிவிப்பதும் அவன் மனத்தில் என்னைப் பற்றிக் கொண்டுள்ள ஒரு தவறான உருவத்தை நோக்கி, அவற்றை அங்கீகரிப்பது இந்த மோசடிக்கு உடந்தையாயிருப்பது போல் ஆகும். எனவே அவனுடைய சிநேக பாவத்தை ஊக்குவிக்கக் கூடாது என்றெல்லாம் நினைப்பேன். ஆனால் நாள் முழுவதும் நம்முடன் ஒரே அறையில் உட்கார்ந்திருப்பவனுடன் இவ்வாறிருப்பது எப்படிச் சாத்தியமாகும்?

நானும் புன்னகை செய்கிறேன். நாங்கள் பேசத் தொடங்குகிறோம். எங்களுடைய பரஸ்பர மோசடி தொடங்குகிறது. இந்த ரீதியில் போனால் நான் விரைவில் அவன் மனத்தில் உருவாகியுள்ள அவனுடைய தோற்றப் பிரகாரமே மாறிவிடப் போகிறேனோவென்று எனக்குப் பயமாயிருக்கிறது.’

ராமு சிரித்தான்.

’இது சிரிக்கும் விஷயமல்ல’ என்று கைலாசம் ஒரு கணம் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டிருந்துவிட்டு, பிறகு தானும் சிரித்தார்.

டிபன் வந்தது. இருவரும் சாப்பிடத் தொடங்கினார்கள்.

‘உனக்கு இந்த மாதிரியான அனுபவம் ஒன்றும் ஏற்பட்டதில்லையா?’ என்றார் கைலாசம்’

ராமு தோள்களைக் குலுக்கியவாறு, ‘நாமெல்லாம் ரொம்பச் சாதாரணமான ஆசாமி’ என்றான். ‘நீ ஒரு கிரேட் ரைட்டர்... எனவே பலதரப்பட்டவர்கள் உன்பால் ஈர்க்கப்படுகிறார்கள்’

கைலாசம் ராமுவைக் குத்தப் போவது போலப் பாசாங்கு செய்தார்.

‘எனவே, எனக்கு மனித சகோதரத்துவத்தைப் பற்றிய இல்யூஷன்கள் எதுவும் கிடையாது. ஸோ எனக்கு எப்போதும் ஏமாற்றம் உண்டாவதில்லை’ என்றான் ராமு தொடர்ந்து.

‘இல்யூஷன்கள் எனக்கும்தான் இல்லை. ஆனால்..’ என்று கைலாசம் கூறி நிறுத்தினார். தன் மனத்தில் குமிழிட்ட உணர்வுகளுக்கு எவ்வாறு சரியாக வடிவம் கொடுப்பதென்று யோசித்தவராக, அவர் மனத்தில் அகர்வாலின் உருவம் தோன்றியது. அவன் தனக்கு நகைச்சுவையாகப்படும் ஏதாவது ஒன்றைக் கூறி சிரிப்பை யாசித்தவாறு அவர் பக்கம் பார்ப்பது. குதுப் மினார், இந்தியா கேட் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டும் பாணியில் ‘ கைலாசம் - கிரேட் டாமில் ரைட்டர்’ என்று தன் நண்பர்களுக்கு அவரை அறிமுகப்படுத்துதல், ஏதாவது ஒரு வார்த்தையையோ சொற்றொடரையோ சொல்லி அதற்குத் தமிழில் என்னவென்று கேட்பது, தமிழ்நாட்டு அரசியல் நிலை, அங்கு நடைபெறும் ஏதாவது நிகழ்ச்சி அல்லது அதிகமாக அடிபடும் பிரபலமான பெயர் பற்றி அவரை விசாரிப்பது. அவனுடைய இத்தகைய சிரத்தைப் பிரதியாகத் தானும் அவனுடைய மாநிலத்தின் அரசியல், பிரமுகர்கள், மொழி ஆகியவற்றில் சிரத்தை கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது, தன் குடும்ப சமாசாரங்களை அனாவசியமாக அவரிடம் சொல்வது, அவருக்கு அந்தக் காரியாலயத்தில் நெருக்கமாக இருந்த வேறு சிலர் பற்றி அனாவசியக் கேள்விகளைக் கேட்பது, அபிப்ராயங்கள் சொல்வது (ஒரு பொறாமைமிக்க மனைவி போல).... பலவிதமான நிலைகளிலும் காட்சிகளிலும் அவர் அவனைக் கண்டார். வழக்கமான சோர்வும் குழப்பமும்தான் உண்டாயிற்று. எத்தகைய தெளிவும் ஏற்படவில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன் Empty ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்

Post by சிவா Thu May 01, 2014 3:55 am



உன்னிடம் என்ன சிரமமென்றால், நீ ஒரு வழவழா கொழகொழா’ என்றான் ராமு. சர்வர் கொண்டு வந்து வைத்த காப்பியை ஒரு வாய் உறிஞ்சியவாறு, ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று நீ இருப்பதில்லை.’

‘வாஸ்தவம்.’

‘ஒருத்தனுடன் ஒத்துப்போக முடியவில்லையென்றால் நிர்த்தாட்சண்யமாக அவனை ஒதுக்கிவிட வேண்டியதுதான். இட்ஸ் வெரி சிம்பிள். அவன் உன்னுடைய நட்புக்காக ஏங்குவதாக உனக்குத் தோன்றியது. நீ அவனுடைய முயற்சிகளுக்கு வளைந்து கொடுத்தாய், ஓ.கே. ஆனால் சீக்கிரமே அத்தகைய ஒரு நட்பு ஏற்படுவதற்குத் தேவையான அடிப்படைகள் இல்லையென்று தெரிந்து போயிற்று. ஸோ, அப்படித் தெரிந்த உடனேயே அவனை அவாய்ட் பண்ண வேண்டியதுதானே, இதிலே என்ன பிரச்னைன்னு எனக்குப் புரியலை.’

‘அப்படி அவனை நான் அவாய்ட் பண்ணிண்ண்டுதான் இருக்கேன். ஆனால் இது ஒரு குற்ற உணர்ச்சியைத் தருகிறது...’

‘குற்ற உணர்ச்சி எதற்காக?’

‘என் முடிவுகள் தவறாயிருக்குமோன்னு எனக்கே என் மேலே எப்பவும் ஒரு சந்தேகம். ஒரு வேளை என்னிடமிருந்த ஏதோ குறைபாடுகள் காரணமாகவும் எங்கள் நட்பு தோல்வியடைந்திருக்கலாமோ, அப்படியானால் அந்தக் குறைபாடுகளைத் தெரிந்து கொள்ள வேண்டாமா என்று ஓர் ஆர்வம்..”

ராமு, தான் சற்றுமுன் சொன்னது நிரூபணமாகி விட்டது என்பதுபோலத் தலையில் அடித்துக்கொண்டான்.

‘நான் ஓர் எழுத்தாளன் என்கிற கவர்ச்சியினாலே அவன் என்பால் ஈர்க்கப்பட்டிருக்கலாம்னு சொன்னே... ஆனால், உண்மையில், நான் ஒரு எழுத்தாளனாக இல்லாமல் சாதாரண மனிதனாக இருந்திருக்கக் கூடாதா என்று அவன் ஏங்குவதாக எனக்குப் படுகிறது.’

ரமு ஓர் அடம்பிடிக்கும் குழந்தையைப் பார்ப்பது போல அவரை ஆயாசத்துடன் பார்த்தான்.

‘நீ ஒரு தமிழனாக இல்லாமல் வடக்கத்தியானாக இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குவது போலப் படவில்லையா?’

‘ஆமாம், அப்படியும்தான் தோன்றுகிறது’ என்றார் கைலாசம் ஆச்சரியத்துடன்.

‘நீ இந்தியில் ஏதாவது பேச முயன்றால் அவனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்திப்படம் ஏதாவதொன்றைப் பார்த்து அதைப் பற்றி அவனிடம் சர்ச்சை செய்தாலோ, சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள முயன்றாலோ, அவன் ஜன்ம சாபல்யமடைந்தது போலப் பரவசமடைந்து போகிறான்’

’ஆமாம், ஆமாம்.’

’இந்திப் புத்தகங்கள், பத்திரிகைகள் எல்லாம் உனக்கு சப்ளை பண்ணவும், உன்னுடைய இந்தி அறிவை விருத்தி செய்யத் தன்னாலான உதவிகளைச் செய்யவும் கூடத் தயாராக இருப்பானே’

கைலாசம் சந்தேகத்துடன் ராமுவை உற்றுப் பார்த்தார். ‘ஏண்டா, கேலி பண்றயோ?’ என்றார்.

‘கேலியோ, நிஜமோ, எனக்கு இந்த மாதிரி ஆளெல்லாம் ரொம்பப் பரிச்சயமானவர்கள், அப்படின்னு சொல்ல வந்தேன்.’

‘சொல்லு, சொல்லு.’

‘நான் மாசத்திலே இருபது நாள் இந்தியா முழுவதிலும் சுற்றியபடி இருக்கிறவன். எனக்கு இங்குள்ள எல்லாவிதமான டைப்பும் அத்துப்படி.’

‘விஷயத்துக்கு வா’

‘இதுவெல்லாம் ரொம்ப அடிப்படையான எலிமெண்டரி டைப். கொச்சையான மாயைகளிலே தஞ்சமடைகிற ரகம். தனக்கென்று ஒரு ஹோதாவில்லாததினாலே, ஒரு தனித்த ஐடென்டிடி இல்லாததினாலோ, எதன் மீதாவது சாய்ந்து கொள்வதன் மூலமாகத்தான் அவன் தன்னை உணர முடிகிறது. நிரூபித்துக் கொள்ள முடிகிறது. பலம் வாய்ந்த, மகத்துவம் வாந்த ஏதாவது ஒன்றுடன் தன்னை ஐடென்டிஃபை பண்ணிக் கொள்வதன் மூலம், அதன் ஒரு பகுதியாக ஆவதன் மூலம்.’

’யூ மீன்...’
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன் Empty ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்

Post by சிவா Thu May 01, 2014 3:55 am


‘’ஆமாம், நீ அவன் போன்றவர்கள் இகழ்ச்சியாகக் கருதும் ஒரு சராசரி மதராஸி இல்லை. நல்ல அறிவும் பண்பும் உடையவனாயிருக்கிறாய். கதை வேறு எழுதுகிறாய். சப்பாத்தியோ சமோசாவோ சாப்பிடுவதில் உனக்கு ஆட்சேபணையில்லை. இதெல்லாம் அவனை மிகவும் பாதுகாப்பற்றவனாக உணரச் செய்திறது போலும். மதராஸிகளை ரசனையற்ற மூடர்களாக, பணிவற்ற காட்டுமிராண்டிகளாக, குறுகிய நோக்கும் அசட்டுக் கர்வமும் உள்ளவர்களாக, சண்டைக்காரர்களாக - எப்படி எல்லாமோ அவன் கற்பனை செய்து கொண்டிருக்கலாம், உன்னைச் சந்திப்பதற்கு முன்பு. அவன் ஒரு உயர்ந்த இனத்தவனென்ற மாயையின் பகுதி இதெல்லாம். ஆலாம் நீ இந்த மாயையைச் சிதைத்து விட்டாய். அவனைச் சிறுமைப்படுத்தும் உத்தேசம் இல்லாமலிருந்தும்கூட நீ அவனை தாழ்வு மனப்பான்மை கொள்ளச் செய்து விடுகிறாய். சரி, எப்படி யிருந்தால் என்ன? என் மொழிதான் ஆட்சிமொழி, என் சகோதரர்களே ஆட்சி புரிபவர்கள் என்பன போன்ற எண்ணங்களில் தஞ்சமடைந்து அவன் ஆசுவாசம் பெற வேண்டியிருக்கிறது. அதே சமயத்தில் இந்த எண்ணங்கள் அவனைக் குற்ற உணர்ச்சி கொள்ள வைக்கின்றன. இவரும் என்னைப் போன்ற ஒரு யு.பி.வாலாவாக அல்லது குறைந்தபட்சம் ஒரு வடக்கத்தியானாக இருந்தால் தேவலையே என்று அவனுக்குத் தோன்றுகிறது...’

‘பலே, பேஷ்.’

‘என்ன, நான் சொன்னது சரியில்லையா?’

‘நூற்றுக்கு நூறு சரி. ஐ திங்க். இனிமேல் கதையெழுத வேண்டியது நானில்லை, நீதான்.’

‘போதும், போதும். நீ கதையெழுதிவிட்டுப் படுகிற அவஸ்தை போதாதா?’

இருவரும் சிரித்தவாறே மைஜையை விட்டு எழுந்தனர்.

கேண்டீனுக்கு வெளியே ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை இருந்தது. ஆளுக்கொரு பீடா வாங்கி வாயில் போட்டுக் கொண்டு, சற்று நேரம் சுற்றுப்புற உலகை வேடிக்கை பார்த்த அமைதி. அகர்வாலுடன் இப்படி ஒரு நிமிஷமாவது அமைதியாக உணர்ந்திருக்கிறாரா? சதா அனாவசியச் சர்ச்சைகள், தனக்காக அவன் அணியும் வேஷங்களை உணராதது போன்ற பாசாங்கு, அவனுக்காகத் தானும் வேஷமணிய வேண்டிய பரிதாபம். அவர்களிடையே இல்லாத பொதுவான இழைகளுக்காக வீண் தேடல்... இந்த ராமு ஒரு யு.பி.வாலாவாக இருந்திருக்கக் கூடாதா? அப்போது அவர் அவன்பால் எழும் நேச உணர்வுகள் குறித்து இந்த அளவு குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டியதில்லை.

உடல் வனப்பு நன்கு தெரியும்படியாக உடையணிந்த மூன்று நடுத்தர வயதுப் பெண்மணிகள் அவர்களைக கடந்து நடந்து சென்றார்கள். ‘தில்லிப் பொம்மனாட்டிகள் பம்பாயிலே இருக்கிறவாளையும் தூக்கியடிச்சுடுவா போலிருக்கே வரவர!’ என்றான் ராமு.

‘ம், ம்’ என்று கைலாசம் தலையைப் பலமாக ஆட்டி ஆமோதித்தார். வாய்க்குள் வெற்றிலை எச்சில் ஊறத் தொடங்கியிருந்ததால் பேச முடியவில்லை.

எதிர்ச்சாரியில் ஒருத்தி விசுக் விசுக்கென்று நடந்து சென்றாள். ராமுவின் கவனம் அங்கே சென்றது. கைலாசம் வெற்றிலையைத் துப்பிவிட்டு வந்தார். ராமுவின் முதுகில் தட்டிக் கொடுத்தார். ‘ ஸோ - போன விசிட்டுக்கு இப்ப இங்கே சீனரி இம்ப்ரூவ் ஆகியிருக்கா?’ என்றார்.

‘டெரிஃபிக் இம்ப்ரூவ்மெண்ட்!’ என்று ராமு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். புகையை ஊதினான். ‘ஒரு சந்தேகம்’ என்றான்.

‘என்ன?’

‘அகர்வாலுடன் பெண்களைப் பற்றியும் பேசுவியா?’

கைலாசம் அசந்து போனார். ‘நீ நான் நினைத்ததை விடவும் ஆழமானவன்’ என்றார்.

‘இது சாதாரணப் பொது அறிவு’ என்றான் ராமு. ‘பெரும்பாலும் இந்த டாபிக்கைப் பற்றி ஃப்ரீயாகப் பேச முடியாத ஒரு நிர்ப்பந்தமே உறவுகளை இறுக்கமானதாகச் செய்கிறது. ஏன், ஒரு அப்பாவுக்கும் பிள்ளைக்குமிடையே கூட...’

’நாங்கள் பெண்களைப் பற்றியும் பேசாமலில்லை. ‘ கைலாசம். உதட்டைப் பிதுக்கினார். ‘ ஒரு பயனுமில்லை.’

‘வேடிக்கைதான்.’

‘வேடிக்கையென்ன இதிலே? செக்ஸ் எல்லோருக்கும் பொதுவான, அடிப்படையான விஷயம். எனவே எந்த இரு மனிதர்களும் இதைப் பற்றிப் பேசுவதன் மூலம் நெருக்கமாக உணரலாம் என்று நினைக்கிறாயா? இல்லை. அது அப்படியல்ல. நெருக்கம் முதலில் வருகிறது. இந்தப் பேச்செல்லாம் பின்பு வருகிறது. அந்த நெருக்கம் எப்படி உண்டாகிறதென்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். அது சிலருக்கிடையில் ஏற்படுகிறது. சிலருக்கிடையில் ஏற்படுவதில்லை. அவ்வளவுதான்.’

‘எத்தகைய ஒரு வீழ்ச்சி! உன் போன்ற ஒரு பகுத்தறிவுவாதி, சமத்துவவாதி...!’

“எல்லா மனிதர்களும் சமமானவர்களாயிருக்கலாம், சகோதரர்களாயிருக்கலாம். ஆனால் எல்லா மனிதர்களுடனும் ஓர் அறையைப் பகிர்ந்து கொள்ளவோ, சேர்ந்து அமர்ந்து டிபன் சாப்பிடவோ என்னால் முடியாது’ என்று கூறிய கைலாசம், ஒரு கணம் யோசித்து, ‘சமத்துவத்தையும் தனி மனித உரிமைகளையும் குழப்பாதே’ என்றார்.

‘நீதான் குழப்புகிறாய்.’

‘இருக்கலாம். நான் குழம்பித்தான் இருக்கிறேன்.’

‘சரி, நீங்கள் செக்ஸைப் பற்றிப் பேச முயன்றால் என்ன ஆகிறது?’

‘என்னத்தைச் சொல்ல, நானாக அவனிடம் இந்த டாபிக்கை எடுத்தாலும் அவன் சந்தேகப்படுகிறான். இத்தகைய டாபிக்குகளைப் பேசத்தான் லாயக்கானவென்ற ஒரு மூன்றாம் தரப் பிரஜை உரிமையை அவனுக்கு என் உலகத்தில் வழங்குகிறானோ, என்று. அதே சமயத்தில் அவன் இதைப் பற்றிப் பேச்செடுக்கும்போது அவனுடைய ருசிகளுக்கும் அலைவரிசைக்கும் தக்கபடி என்னால் ரெஸ்பாண்ட் பண்ணவும் முடியவில்லை. நான் ஒரு பியூரிடனோ என்று அவனைச் சந்தேகப்படச் செய்வதில் தான் நான் வெற்றியடைகிறேன். இது கடைசியில் டேஸ்டைப் பொறுத்த விஷயம்தானோ, என்னவோ.’
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன் Empty ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்

Post by சிவா Thu May 01, 2014 3:55 am



‘டேஸ்ட், பொதுவான குடும்பச் சூழ்நிலை, கலாசாரச் சூழ்நிலை...’

‘ஐ நோ, ஐ நோ, இதெல்லாம் நட்புக்கு ஆதாரனமானவையென்று நம்பப்படுகின்றன. ஆனால் எனக்கு எப்போதும் நான் ஒரு வித்தியாசமானவென்ற உணர்வு இருந்தது. யார்கூட வேண்டுமானாலும் ஒத்துப்போக முடியுமென்ற கர்வம் - ஆமாம், கர்வம் இருந்தது. கடைசியில் இப்போது நானும் எல்லோரையும் போல ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின், குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தின் வரம்புகளுக்கு உட்பட்டவன், என் நட்பு எல்லோரையுமே அரவணைக்கக் கூடியத்ல்ல என்ற உண்மையை நான் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. நான் என்னுடைய சில ஆழ்ந்த நம்பிக்கைகள் வெறும் லட்சியக் கனவுகளாக நிரூபணமாகி, ஒரு முட்டாளைப் போல உணருகிறேன்.’

ராமு கைலாசத்தின் முதுகில் தட்டிக் கொடுத்து, ‘இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளாதே’ என்றான்.

‘இது சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் ராமு. சில மனிதர்கள் என்னதான் முயன்றாலும் ஒருவரோடொருவர் ஒத்துப்போக முடியாதென்ற உண்மையைத் திடீரென்று ஒரு ஞானோதயம் போல நான் உணர்ந்திருக்கிறேன். இது எவ்வளவு துர்ப்பாக்கியமான விஷயம், இந்த அகர்வால், பாவம், எங்களிடையே தோழமை உருவாக வேண்டும், அது பலப்பட வேண்டும் என்று எவ்வளவு முயலுகிறான். பொதுவான இழைகளைத் தேடியவாறு இருக்கிறான். தனக்கு சாம்பார் ரொம்பப் பிடிக்குமென்கிறான். தன் வீட்டிலும் ரொட்டியைவிடச் சாதம்தான் அதிகம் சாப்பிடுவார்களென்கிறான். திருவள்ளுவரிலிருந்து ராஜாஜி வரையில் பல தென்னிந்திய அறிஞர்கள் தன்னைக் கவர்ந்திருப்பதாகச் சொல்கிறான். பிறகு இந்தி ஆசிரியர்கள், அறிஞர்கள் சிலரின் கருத்துக்களை எனக்குக் கூறி, என்னிடம் பதில் மரியாதையை எதிர்பார்க்கிறான். ஏதோ பள்ளிக்கூடத்தில் இருப்பது போலவோ, தேசிய ஒருமைப்பாட்டுக்கான பரிசு பெற முயன்று கொண்டிருக்கும் ஒரு படத்தில் நடிப்பது போலவோ ஒரு சங்கடமான உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நான் பார்த்திருந்த சில பழைய இந்திப் படங்களை ஒரு நாள் தெரியாத்தனமாக அவனிடம் புகழ்ந்து பேசிவிட்டேன். அதிலிருந்து இந்திப் படங்களைப் பற்றிய தன் அறிவையெல்லாம் வலுக்கட்டாயமாக என் மேல் திணிக்கத் தொடங்கியிருக்கிறான். அவனுடைய தேடல் என்ன, அவன் என்ன யாசிக்கிறான் என்பதொன்றும் எனக்குப் புரியவில்லை. ஒருவேளை அடிப்படையாக அவன் ஒரு ஹிந்தி ஃபனாடிக்காக இருக்கலாம். அதைத் தனக்குத்தானே தவறென்று நிரூபித்துக் கொள்வதற்காக ஓர் ஆவேசத்துடன் என்னுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கிறான் போலும்.... அதே சமயத்தில் தன் மனத்தின் கொச்சையான தஞ்சங்களை முழுவதும் திரஸ்கரிக்கவும் அவனால் முடியவில்லை போலும்... எப்படியிருந்தாலும், இதுவே அவனுடைய முயற்சியாயிருக்கும் பட்சத்தில், அவனுடன் நான் ஒத்துழைப்பதுதான் பொறுப்பான செயலாகும். இல்லையா? ஆனால் இந்தப் பளுவை என்னால் தாங்க முடியவில்லை.

எனக்கு ஒரு கட்டத்துக்குப் பிறகு, ‘டு ஹெல் வித் அகர்வால், டு ஹெல் வித் எவ்ரிதிங்க்’ என்று தோன்றுகிறது.’

ராமு ஒரு கணம் பேசாமலிருந்தான். பிறகு ‘உனக்கு உன்னைப் பத்தி என்னென்னவோ இல்யூஷன், தட்ஸ் தி டிரபிள்’ என்றான். ‘யூ ஆல்வேஸ் வான்ட் டு பிளே ஸம் கிரேட் ரோல்.... ஒரு கம்யூனிடியின் அம்பாசிடராக.. ஓ காட்! நீ நீயாகவே ஏன் இருக்க மாட்டேங்கிறே?’

‘நான் நானாகவேதாம்பா இருக்கப் பார்க்கிறேன்.... அதுக்கு இவன் விடமாட்டேனென்கிறான்னுதான் சொல்ல வரேன்..’

‘விடலைன்னா விட்டுடு...’

‘நீ சுலபமா சொல்லிடறே... ஹவ் இஸ் இட் பாஸிபிள்? என்கூடப் பேசாதேன்னு சொல்ல முடியுமா?’

‘வானிலையும் விலைவாசியையும் மட்டும் பேசு.’

‘அதுவும்... இல்லை, உனக்கு இந்தப் பிரச்னை புரியவில்லை. சில சமயங்களில் நான் அவனிடம் பேசாமலே இருப்பதுண்டு. அப்போது அவன் மூஞ்சி பரிதாபமாக இருக்கும். எனக்கு அவன் மேல் ஏதோ கோபமென்றோ, அவன் என் மனத்தைப் புண்படுத்தி விட்டானென்றோ அவன் உணர்வது போலத் தோன்றும். எனக்கு அவன் மீது அனுதாபம் ஏற்படத் தொடங்கிவிடும். நான் பேசத் தொடங்கி விடுவேன்....’

ராமு ஏதோ சொல்லத் தொடங்கினான். கைலாசம் அவனைக் கையமர்த்தி விட்டுத் தொடர்ந்து பேசினார்:

‘ஆனா, பேசாமல் இருக்கிறது ஸ்ட்ரெயினாக இருப்பது போலவே பேசுவது ஸ்ட்ரெயினாகத்தான் இருக்கிறது. அழும் குழந்தையை சிரிக்க வைப்பதற்காக அதற்கு உற்சாகமூட்டும் சேட்டைகள் காட்டுவது போல, அவனுடன் பேசும்போது என்னையுமறியாமல் நான் ஏதேதோ வேஷமணிய நேருகிறது. எழுத்தை ஒரு ஹாபியாக வைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளனாக, என் இனத்தைப் பற்றிய பிறருடைய சிரிப்பில் கலந்து கொள்ளும் மனவிடுதலை பெற்ற மதராஸியாக, பிற மாநிலத்தவருடைய இயல்புகள், பழக்கங்கள் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவனாக, என் மொழியின் தொன்மையையும் வளத்தையும் பற்றிய அவனுடைய புகழுரைகளை ஏற்றுக்கொண்டு, அதே சமயத்தில் மொழி வெறியர்களைக் கண்டிப்பவனாக.. இப்படிப் பல மேலோட்டமான வேஷங்கள், இவற்றின் எதிரொலியாக அவன் அணியும் இணையான வேஷங்கள். அவன் எப்போதும் என் ஆழங்களைத் தொடுவதில்லை. அவனுக்கோ எனக்குத் தெரிந்த வரையில், ஆழங்களே இல்லை. இந்த நிலைமையை, வேஷங்களின் மூலமே ஒருவரையொருவர் தொட முடிவதை, அவனும் உணராமலில்லை. எவ்வளவுக்கெவ்வளவு ஒரு நாள் நெருங்கிப் பேச முயல்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அதற்கடுத்த நாள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளவே சங்கடப்படுகிறோம்.’
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன் Empty Re: ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்

Post by சிவா Thu May 01, 2014 3:55 am



‘அவன் தன் பிராந்தியத்தின் ஒரு மனவளர்ச்சி பெறாத டைப்பாகவே இருப்பதால், அதன் எதிரொலியாக உன்னை எப்போதும் ஒரு மதராஸியாக அவன் உணரச் செய்வதுதான் பிரச்னையென்று எனக்குத் தோன்றுகிறது. இதை உன்னால் எப்படித் தவிர்க்க முடியும்? இந்த மாதிரியானவர்களை எல்லாம் ரொம்ப நெருங்க விடாமல் முதலிலிருந்தே ஒரு டிஸ்டன்ஸ்லே வச்சிருக்கணும். நீ மற்றவர்களை ஏன் இவ்வளவு சுலபமாக உன்னிடம் உரிமைகள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கணும்னு எனக்குப் புரியலை.’

‘என்ன பண்றது, என்னுடைய இயல்பே அப்படி. ஐ டோன்ட் வான்ட் டு பி அனப்ரோச்சபிள். பிறரை ஆசுவாசம் கொள்ளச் செய்வதற்காக, எனக்கு அவர்கள் மேல் விரோதமில்லை. நான் கர்வமுள்ளவன் இல்லை என்றெல்லாம் உணர்த்துவதற்காக, மெனக்கெட்டு அவர்களுக்கு இணக்கமான ஒரு வேஷத்தை அணிவது என் வழக்கம். கடைசியில் இதுவே ஆபத்தில் கொண்டு விடுகிறது. அவர்கள் இந்த வேஷத்தில் என்னை ஸ்திரப்படுத்த முயலுவது நான் இதை எதிர்த்துத் திணறுவதாக பெரிய தலை வேதனையாகி விடுகிறது. இப்போது ஞாபகம் வருகிறது, அகர்வால் முதல் முதலில் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது நான் மிகவும் சந்தோஷமான நிலையிலிருந்தேன். ஏனென்று தெரியாமலேயே இடுப்பை வளைத்து முகலாய பாணியில் சலாம் செய்து, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று இந்தியில் கூறினேன். சுத்த அனாவசியம், நான் இயல்பாகவே இருந்திருக்கலாம். இப்போது அந்த உற்சாகத்தையும் நடிப்பையும் எப்போதுமே அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அதெப்படிச் சாத்தியமாகும்? நான் உற்சாகமாக உணர்வது அவன் போன்றவர்களுடனல்ல. சே! நான் ஒரு முட்டாள்.’

‘வடிகட்டின முட்டாள்’ என்று கடிகாரத்தைப் பார்த்த ராமு, ‘மை காட்! மணி ரண்டாகிவிட்டதே!’ என்று கூவினான். ‘உன் ராமாயணத்தைக் கேட்டு நேரம் போனதே தெரியவில்லை. உத்தியோகபவன்லே ஒரு ஆளைப் பார்க்கணும் எனக்கு’ என்று சாலையில் வந்த ஓர் ஆட்டோவைக் கை காட்டி நிறுத்தினான்.

‘சரி, அப்புறம் எப்ப வீட்டுக்கு வரே? சொல்லு!’

‘நாளைக்கு ராத்திரி சாப்பிட வந்திடு.’

‘ஒரு கண்டிஷன்.’

‘என்ன?’

‘நாளைக்கும் அகர்வாலைப் பற்றியே பேசி போர் அடிக்கக் கூடாது.’

‘மாட்டேன், ஐ பிராமிஸ்.’

ராமு ஆட்டோவில் ஏறிக்கொள்ளப் போனவன், சட்டென்று நின்றான். ‘இன்னொன்று’ என்றான்.

‘என்ன?’

‘அகர்வால் உன் வீட்டுக்கு வந்ததுண்டா?’

‘அதையேன் கேட்கிறே, அந்தக் களேபரமும் ஆயாச்சு. வீட்டுத்தோசை சாப்பிடணும், வீட்டுத் தோசை சாப்பிடணும்னு ரொம்ப நாளாய்ச் சொல்லிண்டிருந்தான். ஸோ ஒரு நாள் கூட்டிக்கொண்டு போனேன். வீட்டுக்கு வந்து தோசையைத் தின்னு ஒரேயடியாக என் வைஃபை ஸ்தோத்திரம் பண்ணித் தள்ளிப்பிட்டான். மதராஸிப் பொண்களே அலாதியானவர்கள், அது இதுன்னு ஒரேயடியாக அசடு வழிஞ்சுண்டு, என் வைஃபை சிரிக்க வைக்கறதுக்கக என்னென்னவோ ஜோக்ஸ் அடிச்சுண்டு... இட் ஆல்மோஸ்ட் லுக்ட் ஆஸ் இஃப் ஹீ வாஸ் இன்ஃபாச்சுவேட்டட் வித் ஹெர்!”

ராமு கடகடவென்று சிரித்தான். ‘யூ டிஸர்வ் இட்! அப்புறம், நீ அவன் வீட்டுக்குப் போகலையா?’

“போகணும்... என்ன செய்றதுன்னு தெரியலை... நாளைக்கு, நாளைக்குன்னு டபாய்ச்சுண்டிருக்கேன். என் வைஃப், நானும் அவன் வீட்டுக்கு வரப்போவதில்லை. நீங்களும் போக வேண்டாம்னு என்னைக் கடுமையாக எச்சரித்து வைத்திருக்கிறாள், வேறே.’

‘பெண்கள் இவ்விஷயங்களில் எப்போதுமே புத்திசாலித்தனம் அதிகமுள்ளவர்கள்’ என்ற ராமு, ‘ஓ.கே.’ என்று ஆட்டோவில் ஏறிக்கொண்டான்.

கைலாசம் தன் தலைவிதியை நொந்தவாறு மறுபடி ஆபிசுக்குள் நுழைந்தார். தன் அறைக்குச் செல்வதற்கு முன்பாக ‘கேர்டேக்கர்’ அறையினுள் எட்டிப் பார்த்தார். ‘கம் இன், கம் இன்’ என்ற கோஷ் அவரை வரவேற்றார்,

கைலாசம் அவனெதிரில் போய் உட்கார்ந்தார்.

‘சொல்லுங்கள். உங்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?’ என்றான் கோஷ்.

‘நானும் அகர்வாலும் உட்காரும் அறையில் நடுவே ஒரு பார்ட்டிஷன் போடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தீர்களே, என்ன ஆயிற்று?’

‘என்ன இது தாதா. நீங்கள்தானே சொன்னீர்கள், அதெல்லாம் வேண்டாம், உங்களைப் பொறுத்தவரையில் இன்னொருவனுடன் அறையைப் பகிர்ந்து கொள்வதில் எந்த விதமான அசௌகரியமும் இல்லை, என்றெல்லாம்?’

’சொன்னேன், ஆனால்...’

‘இன்ஃபாக்ட், அகர்வாலுடன் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போவது உங்களைப் போன்ற ஒருவருக்குச் சிரமமாயிருக்குமென்று நான்கூட எச்சரித்தேன். ஆனால் நீங்கள், இல்லையில்லை, நான் யாருடன் வேண்டுமானாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும் என்கிறீர்கள்.’

‘ஐ ஆம் சாரி. நான் என் வார்த்தைகளை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.’

கோஷ் கடகடவென்று சிரித்தான். ‘நான் சொன்னபோது நீங்கள் நம்பவில்லையல்லவா?’ என்று மறுபடி சிரித்தான். ‘நான் உங்களைக் குற்றம் சொல்ல மாட்டேன், தாதா. இந்த யு.பி.வாலாக்கள் இருக்கிறார்களே.... அப்பப்பா!’ என்று தலையை ஒரு அனுபவபூர்வமான சலிப்புடன் இப்படியும் அப்படியுமாக ஆட்டினான். ‘யூ நோ, தாதா...’ என்று அந்தப் பிராந்தியத்தினரைப் பற்றிய தன் அறிவை அவருடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினான்.

கைலாசம் மௌனமாகக் கேட்டுக்கொண்டு உட்காந்திருந்தார். அவருக்குத் தன் மீதே வெறுப்பும் கோபமும் ஏற்பட்டன

*******
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன் Empty Re: ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum