ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன்

2 posters

Go down

 சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன் Empty சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன்

Post by சிவா Thu May 01, 2014 3:46 am


சிவப்பாக உயரமாக மீசை வசுக்காமல் - தனக்கு வரப் போகிறவனைப் பற்றிய இந்த மங்கலான உருவம் இப்போது சில நாட்களாக நீலாவின் மனதில் அடிக்கடி ஊசலாடத் தொடங்கியிருந்தது.

வயது இருபத்தி இரண்டு. பெண்குழந்தை . வீட்டில் வரன் பார்க்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். ஜாதகம், பூர்வீகம், குலம், கோத்திரம், பதவி, சம்பளம் -- இத்யாதி . இந்த முயற்சிகளும் அதன் பின்னிருந்த பரிவும் கவலையும் அவளுக்கு ஒரு விதத்தில் பிடித்துத் தானிருந்தது. என்றாலும், இது சம்பந்தமாக அவளுடைய இளம் மனதிலும், சில அபிப்பிராயங்களும், கொள்கைகளும் இருக்கக் கூடும் என்றோ அவற்றுக்கு ஒரு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றோ தன் பெற்றோர் சிறிதும் நினைக்காதது அவளுக்குச் சற்று எரிச்சலையும் அளித்தது. அதே சமயத்தில் இது சம்பந்தமாகத் தன்னை அவர்கள் விசாரித்தால் தன்னால் தீர்மானமான துல்லியமானதொரு பதிலைச் சொல்ல முடியுமா என்றும் சந்தேகமாகவும் இருந்தது. பெரியோர்களுடைய கருத்துக்கள் எவ்வளவுக்கெவ்வளவு திடமான கன பரிமாணங்களும் உண்மையின் தீவிரமும் உடையதாக இருந்தனவோ , அவ்வளவுக்கவ்வளவு அவளுடைய கருத்துக்கள் அவளுக்கே புரியாததொரு புதிராகவும், பிறர் கேட்டால், சிரிப்பார்களோ என்ற பயத்தை மூட்டுபவையாகவும் இருந்தன.

அவன் சிவப்பாக இருந்தான். அவளுடைய கனவுகளில் இடம் பெற்றிருந்த இளைஞன் சிவப்பென்றால் ஆங்காரச் சிவப்பு இல்லை. மட்டான, பதவிசான சிவப்பு. அவன் உயரமாக இருந்தான் -- நீலாவை விட ஓரிரு அங்குலங்கள் உயரமாக. அவள் செளகரியமாக தன் முகத்தை அவன் மார்பில் பதித்துக் கொள்ளக் கூடிய உயரம். வெட்கத்தில் தாழ்ந்திருக்கும் அவள் பார்வை சற்றே நிமிரும் சமயங்களில் அவளை உவகையிலும் சிலிர்ப்பிலும் ஆழ்த்தும் உயரம். கடைசியாக ஆனால் முக்கியமாக அவனுக்கு மீசையோ தாடியோ இருக்கவில்லை. மழு மழுவென்று ஒட்ட ஷவரம் செய்யப்பட்ட சுத்தமான மாசு மறுவற்ற முகம் அவனுடையது. அந்த இளைஞனுடன் அவன் தன் கனவுகளில் தனக்கு மிகவும் பரிச்சயமான இடங்களிலும் , தான் பார்த்தேயிராத பல புதிய இடங்களிலும் மீண்டும் மீண்டும் அலைந்து திரிவான். ஜோடியாக அவர்கள் பார்த்து மகிழ்ந்த பேச்சுக்கள் தான் எத்தனை . ஆனால் அந்தக் கனவு இளைஞன் எவ்வளவுக்கு எவ்வளவு அருகில் இருப்பதாகத் தோன்றினானோ அவ்வளவுக்கு அவ்வளவு எட்டாத் தொலைவில் இருப்பதாகவும் தோன்றினான். எவ்வளவுக்கு எவ்வளவு அவனைப் பற்றித் தெரியும் என்று தோன்றியதோ அவ்வளவுக்கு அவ்வளவு அவனைப் பற்றித் தெரியாதென்றும் தோன்றியது. ஓயாமல் அலை பாயும் நீர்ப் பரப்பில் கோணல் மாணலாக நெளியும் ஒரு பிம்பம் அவன்; வேகமாகச் சென்று மறைந்து விட்ட பஸ் ஜன்னலில் பார்த்த முகம் -- அவள் அவனைப் பார்க்கவும் செய்தாள்; பார்க்கவும் இல்லை.

நீலா ஒரு சர்க்கார் ஆபிஸில் வேலை பார்த்து வந்தாள் - குமாஸ்தாவாக. அவளுடைய ஆபிஸில் நிறைய இளைஞர்கள் இருந்தார்கள். ஏன் அவளுடைய செக்ஷனிலேயே ஒருவன் இருந்தான். எல்லாம் -- அவள் பார்வையில் -- படு சாதாரணமாக 'ச்சீப் ஃபெல்லோஸ் '. அவளைப் போன்ற ஓர் அரிய ரத்தினத்தைப் புரிந்து கொள்ளவோ, அதன் அருமையை அறிந்து போற்றிப் பாதுகாக்கவோ லாயக்கில்லாதவர்கள். இந்த மட்ட ரகமான கும்பலிலிருந்து அவளுக்கு விடுதலை அளிப்பதெற்கென்று அவதாரம் எடுத்திருப்பவன் தான் அவளுடைய கனவு இளைஞன்.

'ஓ என் அன்புக்குரியவனே, எங்கிருக்கிறாய் நீ ? நான் கேட்கும் பாடல்களைக் கேட்டுக் கொண்டு , படிக்கும் பத்திரிகைகளைப் படித்துக் கொண்டு , நடக்கும் சாலைகளில் நடந்து கொண்டு , கவனிக்கும் போஸ்டர்களைக் கவனித்துக் கொண்டு பயணம் செய்யும் டாக்ஸிகளிலுல், ஆட்டோ ரிக்ஷாக்களிலும் பயணம் செய்து கொண்டு , ஏறியிறங்கும் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி, உபயோகிக்கும் ஹேர் ஆயிலையும், டூத் பேஸ்டையும் உபயோகித்துக் கொண்டு , அருந்தும் பானங்களை அருந்திக் கொண்டு , என்னைத் தாக்கும் ஓசை, மணங்களினால் தாக்கப் பட்டு , சிலிர்க்க வைக்கும் காட்சிகளைக் கண்டு சிலிர்ப்பில் ஆழ்ந்து, வியர்க்க வைக்கும் வெயிலில் வியர்த்துக் கொண்டு, விசிறும் தென்றலினால் விசிறப்பட்டு, நனைக்கும் மழையிலும் நிலவொளியிலும் நனைந்து கொண்டு, பீடித்திருக்கும் இதே கனவுகளினால் பீடிக்கப் பட்டவனாய் எங்கிருக்கிறாய் நீ ? வா, வந்து விடு, ப்ளீஸ் என்னை ஆட்கொள். என்னைக் காப்பாற்று, என்ன்னைச் சுற்றியிருக்கும் இந்த மனிதர்களிடமிருந்து, இந்த இடங்களிலுருந்து, இந்தப் பொருள்களிலிருந்து, என்னிடமிருந்தே .. . . '

ஆர்ப்பரிக்கும் எண்ண அலைகள், திமிறித்துள்ளும் உள்ளம்.

தினசரி காலையில் பஸ் ஸ்டாண்டில், ஒரரு நீண்ட க்யூவின் மிகச் சிறிய பகுதியாகத் தன்னை ஆக்கிக் கொள்ளும் கணத்தில் , அவளுடைய இதயத்தை ஒரு விவரிக்க முடியாத சோகமும், தவிப்பும் கவ்விக் கொள்ளும் - - 'இதோ மீண்டும் இன்னொரு நாள், நான் பஸ் ஸ்டாண்டில் வந்து நிற்கிறேன்; பஸ்ஸில் ஏறிப் போகிறேன். -- சலித்துப்போன இதே பழைய முகங்களுடன் ' என்று அவள் நினைத்துக் கொள்வாள். சாலையில் படபடவென விரையும் கார்கள் ஸ்கூட்டர்கள், இவற்றை அவளுடைய பார்வை ஆற்றாமையுடன் துரத்தும். துழாவும். பஸ்ஸில் செல்லும் போது பஸ்ஸை ஓவர்டேக் செய்து கொண்டு செல்லும் வாகனங்களையும், இந்த வாகனங்களுக்குள் அமர்ந்திருக்கும் மனிதர்களையும், அவளுடைய பார்வை நீவும்.; அணைக்கும். இந்தக் கார்கள், ஸ்கூட்டர்கள், அதோ அந்தப் போர்ட்டிகோக்கள், பார்க்கிங் லாட்கள், அடுக்கு மாடிக் கட்டடங்கள், ஜன்னல்கள், - - இவை உள்ள உலகம் தான் கனவு இளைஞன் வசித்த உலகம். பஸ் கியூக்களுக்கும் , டிபன் பாக்ஸ்களுக்கும் அப்பாற்பட்ட உலகம். நீண்ட கியூக்களில் கூட்டமான பஸ்களில் , நிரந்தரமாகச் சிறையாகிப் போன அவளை , அவன் எப்படித்தான் கண்டுகொள்ளப் போகிறானோவென்று அவள் பெருமூச்செறிவாள். அவள் கையிலிருந்த- -, நேற்று ஆபிஸ் கிளப்பிலிருந்து எடுத்து வந்திருந்த - - பத்திரிகையின் பின்னட்டையில் , சிகரெட் விளம்பரத்தில் , தன்னைப் போன்ற பெண்ணொருத்தியை ஒரு கையால் அனைத்தவாறு, இன்னொரு கையில் சிகரெட்டை ஒயிலாகப் பிடித்திருக்கும் இளைஞன் கூட ஓரளவு கனவு இளைஞனின் சாயலுள்ளவன் தான். சிகரெட் ஷேவிங் லோஷன், ஹேர் ஆயில் விளம்பரங்களில் இடம் பெறும் இந்த இளைஞர்கள் கூடவெல்லாம் பேச முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்.! இவர்கள் கனவு இளைஞனின் நண்பர்களாய்த் தான் இருப்பார்கள். அவனுடைய விலாசம் இவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

பிறகு ஆபிஸ் . கையிலிருந்த பத்திரிகையைக் குப்பு சாமியின் மேஜை மீது வைத்துவிட்டு , அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்தரில் கையெழுத்திட்டு விட்டு , அவள் தன் இடத்தில் உட்காருவாள். செக்ஷனில் வேலை செய்யும் சிலர் ஏற்கனவே வந்திருப்பார்கள். மற்றவர்களும் ஒவ்வொருவராக வந்து உட்காருவார்கள். வேலை தொடங்கும். இரவெல்லாம் நிசப்தமாக நிச்சலனமாக இருந்த அந்த அறை திரை தூக்கப்பட்ட நாடக மேடை போலக் குபுக்கென்று உயிர் பெற்று விழித்துக் கொள்ளும். -- குரல்கள், ஓசைகள், அசைவுகள் -- நிற்கும் நடக்கும் , உட்காரும் மனிதர்கள், இவர்களை இணைக்கும் சில பொதுவான அசேதனப் பொருட்கள். படபடவெனப் பொரிந்து தள்ளும் டைப்ரைட்டர்கள், சரசரக்கும் , மொடமொடக்கும் காகிதங்கள் , இக்காகிதங்களின் மேல தம் நீல உதிரத்தை எழுத்து வடிவங்களாக உகுத்தவாறு தாவும், ஊறும் தள்ளாடும் பேனாக்கள் , கிரிங்க். . கிரிங்க். . எனத் தன் இருத்தலையும் ஹோதாவையும் அடிக்கடி கர்வத்துடன் பறைசாற்றும் தொலைபேசி பொத் பொத்தென்று வைக்கப் படும் திறக்கப் படும் ரெஜிஸ்தர்கள், டபால் டபால் என்று திறக்கப் படும் மூடப் படும் இழுப்பறைகள் , அலமாரிகள் , தரையுடன் உராயும் நாற்காலிக்கால்கள், காற்றில் சுவரில் உராயும் ஒரு காலண்டர், ஒரு தேசப்படம் ஒன்றோடொன்று உராயும் மோதும், இணையும் , இணையாத ஒலிகள். . .
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன் Empty Re: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன்

Post by சிவா Thu May 01, 2014 3:46 am



ஒரே விதமான ஓசைகளின் மத்தியில் , ஒரே விதமான மனிதர்களின் மத்தியில் , ஒரே விதமான வேலையைச் செய்துகொண்டு - - சே! இதில் பிரமாதமான கெடுபிடியும் , அவசரமும் வேறே .. . ' மிஸ் நீலா! டெபுடேஷன் ஃபைல் கடைசியாக யார் பெயருக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப் பட்டிருக்கிறது ? ' 'மிஸ் நீலா! ஆர். வி. கோபாலன் டிரான்ஸ்ஃபர் ஆர்டர் டிஸ்பாச்சுக்குப் போய் விட்டதா ? ' 'மிஸ் நீலா! பி.என் (பென்ஷன் ) தலைப்பில் புதிய ஃபைல் திறக்க அடுத்த நம்பர் என்ன ? ' கேள்விகள், கேள்விகள், கேள்விகள். அவர்கள் தன்னைக் கேட்காத போது , அவள் தன்னையே கேட்டுக் கொள்வாள். . .மிஸ் நீலா! உனக்கு ஏன் பைத்தியம் பிடிக்க வில்லை ? மிஸ் நீலா! நீ எதற்காக இந்த அறையில் இந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாய் ? மிஸ் நீலா ! உனக்கும் இந்த மனிதர்களுக்கும் என்ன சம்பந்தம் ?

விதம் விதமான மனிதர்கள். வெவ்வேறு ருசிகளும் போக்குகளும் , சாயல்களும், பாவனைகளும் உள்ள மனிதர்கள். ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் குறிப்பிட்ட வட்டத்தில் சுழலும் மனிதர்கள். சலிப்பூட்டும் மனிதர்கள்.!

இந்த செக்ஷனில் இருந்தவரகளிலேயே வயதானவர் தண்டபாணி. நெற்றியில் விபூதி. வாயில் புகையிலை. முகத்தில் எப்போதும் ஒரு கடுகடுப்பு. பெண்கள் வேலைக்கு வருவதைப் பற்றி அவருக்கு நல்ல அபிப்பிராயம் இல்லாத காரணத்தால் , நீலா என்ற பெண்ணொருத்தி அந்த செக்ஷனில் வேலை செய்த உணர்ந்ததாகவே அவர் காட்டிக் கொள்வதில்லை. செக்ஷனில் உள்ள மற்றவர்கள் ஒரு பெண் இருக்கிறாளே என்று கூறத் தயங்கும் சொற்களை டாபிக்குகளை அவர் வெகு அலட்சியமாகக் கூறுவார் . அலசுவார். வேண்டுமென்று தன்னை அதிர வைக்கும் நோக்கத்துடனேயே அவர் அப்படிப் பேசுவதாக நீலாவிற்குத் தோன்றும்.

குப்புசாமி இன்னொரு ரகம். செக்ஷனில் 'பத்திரிகை கிளப் ' அவர் தான் நடத்தி வந்தார். அவரே கிட்டத்தட்ட ஒரு பத்திரிகை மாதிரி தான்; சதா மேட்டர் தேடி அலையும் பத்திரிகை. பியூன் பராங்குசத்தின் சம்சாரத்துக்குக் கால் நோவென்றால் அதற்குப் பரிகாரமென்னவென்று -- ஹைஸ்கூல் படிப்பை முடித்து விட்ட கணபதி ராமனின் மகன் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று- - அமெச்சூர் நடிகரான சீனிவாசன் எந்த எந்த மேநாட்டு நடிகர்களைப் பின்பற்றலாமென்று -- அடிக்கடி லேட்டாக வரும் கேசவன் தன் தினசரி அட்டவணையை எப்படியெல்லாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாமென்று அவர் ஒவ்வொருவருக்கும் வலிய ஆலோசனை வழங்குவார். நீலாவிடமும் அவர் பேசுவார். 'இன்றைக்கு என்ன சீக்கிரமா வந்துட்டே போல இருக்கே! 'என்கிற ரீதியில் அவர் அவளிடம் வெகு செளஜன்யத்துடன் பேச முற்படும் போது எரிச்சல் தான் வரும் . தண்டபாணி ஓர் அமுக்கு என்றால், குப்புசாமி ஓர் அதிகப் பிரசங்கி.

கணபதி ராமன் , சீனிவாசன், கேசவன், பராங்குசம் -- இவர்களையும் கூட ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்துக்காக அவள் வெறுத்தாள். கணபதி ராமன், சதா அவளுடைய வேலையில் ஏதாவது தவறுகளைச் சுட்டிக் காட்டுவதும் ,சின்னப் பாப்பாவின் கையைப் பிடித்து 'அ ' எழுதச் சொல்லித் தருவதைப் போல , ஒவ்வொரு விஷயத்தையும் ஆதியோடந்தம் சொல்லித் தர முற்படுவதும் அவளுக்குப் பிடிக்கவில்லை. சீனிவாசன் 'மிஸ் நீலா! ' என்று உத்தரவிடும் போதெல்லாம், 'இஃப் யூ டோண்ட் மைன்ட் ', , 'கைண்ட்லி ' என்ற சொற்களைப் பயன் படுத்துவது மரியாதையாகத் தோன்றாமல் ஒரு நாசூக்கான ஏளனமாகவே தோன்றியது. கேசவனுடைய பெரிய மனுஷத் தோரணையும், யாரையும் லட்சியம் செய்யாத (அவள் உட்பட) அலட்சியப் போக்கும் அவளுக்கு அவன் பால் வெறுப்பை ஏற்படுத்தின. பியூன் பராங்குசத்தைப் பொறுத்தவரையில் ரிஜிஸ்தர்களையும் ஃபைல்களையும் , பல சமயங்களில் அவன் அனாவசியமான வேகத்துடன் , ஓசையுடன், தன் மேஜை மீது எறிவதாக அவளுக்குப் பட்டது. சில சமயங்களில் அவள் வராந்தாவில் நடந்து செல்லும் போது , வேறு பியூன்களிடம் தன்னைப் பற்றி மட்டமாக ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்ததாகப் பட்டது.

செக்ஷனில் இருந்த யாரையுமே அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் , அவளுக்கு மிக அதிகமாகப் பிடிக்காத ஆசாமி கேசவன் தான். செக்ஷனில் உள்ள மற்றவர்கள் அவனை ஒரு செல்லப் பிள்ளை போல நடத்துவதும், அளவுக்கு மீறி அவனைத் தூக்கி வைத்துப் பேசுவதும் அவளுக்குப் பொறுப்பதில்லை. இவர்கள் கொடுக்கும் இடத்தினால் தான் 'இதற்கு ' திமிர் அதிகமாகிறது என்று அவள் நினைப்பாள்.

- லக்கி ஃபெல்லோ சார் . . நோ கமிட்மெண்ட்ஸ். நோ வொர்ரீஸ்

-- ஒரு மாசத்திற்கு எவ்வளவு படம் பார்ப்பாய் நீ கேசவன் ?

-- தனியாகப் பார்ப்பாயா , அல்லது ஸ்வீட் கம்பெனி ஏதாவது ?

-- இந்தக் காலத்துப் பசங்களெல்லாம் பரவாயில்லை. ஸார். இவங்க வயசிலே நாம் இருந்த போது என்ன எஞ்ஜாய் பண்ணியிருப்போம் சொல்லுங்கோ!

அவனுடைய இளமைக்கும் சுயேட்சைத் தன்மைக்கும் அவர்கள் அளிக்கும் அஞ்சலி . தம் இறந்த கால உருவத்தை அவன் வடிவத்தில் மீண்டும் உருவகப் படுத்திப் பார்த்து மகிழும் முயற்சி. அவளுக்குச் சில சமயங்களில் பொறாமையாகக் கூட இருக்கும். தனக்குக் கிடைக்காத ஒரு விசேஷக் கவனிப்பும் , ஸ்தானமும் அவனுக்குக் கிடைத்திருப்பது அவள் நெஞ்சை உறுத்தும். இது போன்ற சமயங்களில் இந்தப் பொறாமையும் உறுத்தலும் வெளியே தெரிந்து விடாமல் அவள் மிகச் சிரமப்பட்டு தன் முகத்தையும் பாவனைகளையும் அலட்சியமாக வைத்துக்கொள்வாள் -- எனக்கொன்றும் இதொன்றும் லட்சியம் இல்லை என்பது போல.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன் Empty Re: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன்

Post by சிவா Thu May 01, 2014 3:46 am



ஒரு நாள் மாலை குப்பு சாமி கேசவனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவள் இப்படித்தான் மூஞ்சியை அலட்சியமாக வைத்துக் கொண்டிருந்தாள்.

' உனக்கு எந்த மாதிரி வைஃப் வரணும் என்று ஆசைப் படுகிறாய் ? ' என்று குப்பு சாமி கேட்டார்.

' எந்த மாதிரி என்றால் ? '

'அழகானவளாகவா ? '

' அழகானவளாக வரணும் என்று யாருக்குத் தான் ஆசை இருக்காது ? '

' ரொம்ப அழகாயிருந்தாலும் அப்புறம் மானேஜ் பண்றது கஷ்டம் . '

கேசவன் கட கட வென்று சிரித்தான். 'எனக்கு இதிலே உங்களளவு அனுபவம் இல்லை சார். ' என்றான். இப்படி அவன் சொன்னபோது தன் பக்கம் அவன் பார்வை திரும்பியது போல நீலாவுக்குத் தோன்றியது. இதை ருசுப் படுத்திக் கொள்ள அவன் பக்கம் திரும்பவும் தயக்கமாக இருந்தது.

அன்று வீட்டுக்குச் சென்றதும், அவள் முதல் வேலையாகத் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள் -- கேசவன் பார்வை விழுந்த தன் மாலை நேரத்து முகம் எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்வதற்காக. அது களைத்திருந்தது. வியர்த்திருந்தது. சற்றே புழுதி படிந்திருந்தது. துடிப்பும் பிரகாசமும் இன்றி மந்தமாக இருந்தது.

இது தான் அவளுடைய முகம், அவளுடைய அழகென்று கேசவன் தீர்மானித்து விட்டானோ ? இந்த எண்ணம் தோன்றிய மறு கணமே , சேச்சே , இவன் பார்க்கும் போது என் முகம் எப்படி இருந்தால் என்ன ? இவன் என்னைப் பற்றி என்ன நினைத்தால் என்ன ? என்றும் நினைத்தாள். அவனைப் பற்றி மறக்க முயன்றாள்.

ஆனால் மறு நாள் காலை ஆபிஸ்க்குக் கிளம்பும் போது வழக்கத்தை விட அதிகச் சிரத்தையுடனும் பிரயாசையுடனும், அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். ' அவனுக்காக அல்ல. அவன் மூலம் தன்னைத் திருப்திப் படுத்திக் கொள்வதற்காக. ' என்று அவள் சொல்லிக் கொண்டாள். ' அவனுடைய அலட்சியத்தைப் பிளந்து அவனைச் சலனப் படுத்துவதற்காக அவனுடைய கவனத்தைக் கவர்ந்து அதன்மூலம் என் வெற்றியை ஸ்தாபிப்பதற்காக ' --- இந்தப் போக்கிரித்தனமான எண்ணம் அவள் முகத்தில் ஒரு புன்னகையை எழுப்பியது. அன்று பஸ்ஸில் செல்லும் வழியெல்லாம் அவள் முகத்தில் 'பளிச் பளிச் ' என்று புன்னகை ரேகைகள் தோன்றி மறைந்த வண்ணம் இருந்தன.

அவள் செக்ஷனுக்குள் நுழையும்போது கேசவனின் நாற்காலி காலியாக இருந்தது. அட்டெண்டன்ஸ் மார்க் பண்ணிவிட்டு தன்னிடத்தில் வந்து உட்காரும் போது ' இன்று ஒரு வேளை மட்டம் போட்டு விட்டானோ ? ' என்று நினைத்தாள்.

ஆனால், அவன் மட்டம் போடவில்லை. பத்தே முக்கால் மணிக்கு வந்தான். தாமதமாக வந்த குற்ற உணர்வினால் பீடிக்கப் பட்டவனாய் அவசர அவசரமாக ஃபைல் கட்டுகளைப் பிரித்து வேலையைத் துவக்கினான்.

நீலா கைகளை உயர்த்தித் தன் தலையில் வைத்திருந்த பூச்சரத்தைச் சரி பார்த்துக் கொண்டாள். 'கிளிங் கிளிங் ' என்று வளையல்கள் குலுங்கின. அவன் நிமிரவில்லை. கையிலிருந்த பென்ஸிலைத் தரையில் நழுவ விட்டு விட்டு மேஜைக்கு முன்புறம் போய் உருண்டு விழுந்துள்ள அதை எடுக்கும் சாக்கில் அவள் இடத்தை விட்டு எழுந்தாள். -- சரக் சரக் -- குனிந்து பென்ஸிலைப் பொறுக்கினாள். - 'கிளிங் கிளிங் ' -- ஊகும் அவன் நிமிரவே இல்லை, அவளுக்கு எரிச்சலாக வந்தது. இன்று திடாரென அவன் கவனத்தைக் கவருவது அவளுக்கு ஒரு முக்கியமான விஷயமாக -- கெளரவப் பிரசினையாக -- ஆகி விட்டிருந்தது. அடுத்த படியாக ஒரு ரிஜிஸ்தரை வேண்டுமானால் கீழே போடலாமா என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த போது தான் சீனிவாசன் அவளைக் கூப்பிட்டார்.

' மிஸ் நீலா ! இஃப் யூ டோண்ட் மைண்ட் -- ஒரு லெட்டர் கம்பேர் செய்யணும் '.

அவள் இடத்திலிருந்து எழுந்தாள். கேசவனின் மேஜைக்கு அருகில் உரசினாற்போல புடவை சலசலக்க , வளையல் சப்திக்க , பவுடர் மணக்க , (இன்று கொஞ்சம் பவுடர் அதிகமாகவே பூசிக் கொண்டிருந்தாள். ) நடந்து சென்று அவள் , சீனிவாசனின் மேஜையை அடைந்தாள். கேசவனின் பேனா சற்று நின்றது. அவன் நிமிர்ந்து தன்னைப் பார்ப்பதை அவள் உணர்ந்தாள். 'பாரு, பாரு நன்றாய்ப் பாரு . . ' என்று நினைத்தவாறு அவள் , சீனிவாசனருகில் இருந்த காலி நாற்காலியில் அமர்ந்து அவரிடமிருந்த கடித நகலை வாங்கிப் படிக்கத் தொடங்கினாள். அவர் டைப் செய்யப்பட்ட ஒரிஜினலை வைத்துக் கொண்டு சரி பார்க்கத் தொடங்கினார். தான் படிக்கிறோம் என்பதை நன்கு உணர்ந்தவளாய் அவள் படித்தாள். அவளுடைய அழகிய குரலும் உச்சரிப்பும் இந்த வறட்டு ஆபீஸ் கடிதத்தைப் படிப்பதில் செலவாகிக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டம் தான். ஆனால், கேசவன் கேட்டுக் கொண்டிருக்கிறான் -- இந்த நினைவு அவளுக்கு ஒரு போதையையும் உந்துதலையும் அளித்தது. கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு மீண்டும் தன் இடத்தில் வந்து உட்கார்ந்ததும், கேசவன் திசையில் அவள் பார்வையைச் செலுத்தினாள். குபுக்கென்று அவன் பார்வை அவளை விட்டு அகலுவதைக் கண்டு பிடித்தாள். அப்படியானால் இவ்வளவு நேரமாக அவன் அவளைத் தான் கவனித்துக் கொண்டிருந்தானா ? அவளுக்குக் கர்வம் தாங்கவில்லை. அன்று அவ்ள் தேவைக்கதிகமாகவே நடமாடினாள். கேசவனின் பார்வை அடிக்கடி தன் திசையில் இழுபடுவதைத் திருப்தியுடன் கவனித்தாள் - கப்பம் கட்டாமல் ஏய்த்து வந்த அண்டை நாட்டுச் சிற்றரசன் ஒருவனுக்குத் தன் பலத்தை நிரூபித்த திருப்தி. இன்னும் பெரிய அரசர்களின் மேல் போர் தொடுக்க முஸ்தீப்பாக அவள் ஈடுபட்ட ஒரு சிறு பலப் பரீட்சையில் வெற்றி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன் Empty Re: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன்

Post by சிவா Thu May 01, 2014 3:47 am



அன்று மாலை கனாட் பிளேஸ் கஃபேயில் நண்பர்களுடன் அமர்ந்து காபி அருந்தும் போதும் , பிறகு ஒரு எழுபது மி மி . சினிமாத்தியேட்டரில் பானாவிஷன் பிம்பங்களை 'ஸ்டாரியோஃபோனிக் ' ஒலிப் பின்னணியில், காணூம் போதும் , கேசவனின் மனத்தில் திடார் என்று நீலாவின் உருவம் தோன்றிக் கொண்டிருந்தது. 'இன்று இவள் ரொம்பவும் அலட்டிக் கொள்வது போலிருந்ததே -- என்னிடம் ஏதேதோ தெரிவிக்க முயலுவது போலிருந்ததே -- என் பிரமை தானோ ? ' என்று அவன் நினைத்தான். ஒரு வேளை இவளுக்கு என்மேல் காதல் .. . கீதல் . . . ?

இந்த எண்ணம் அவன் முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்தது. ஒரு பெருந்தன்மையான கருணை நிரம்பிய புன்னகை -- 'பாவம், பேதை! ' என்பதைப் போல ' இவள் குற்றமில்லை நான் ரொம்ப அட்ராக்டிவாக இருக்கிறேன். தட் ஈஸ் தி டிரபிள்... ' என்று அவன் நினைத்தான்.

திடாரென்று அவளுடைய இங்கிலீஷ் உச்சரிப்பு நினைவு வரவே, அவனுடைய புன்னகை அதிகமாகியது. 'சில்லி புரனன்ஷியேஷன்! ' என்று நினைத்தான். திரையில் அட்ரி ஹெப்பர்ன் அழகாக குழந்தைத் தனமாகச் சிரித்தாள். கேசவனுக்கு அப்படியே அவளை கிஸ் பண்ணவேண்டும்போல் இருந்தது. சினிமாவிலிருந்து வெளியே வந்து சிகரெட்டை உறிஞ்சி இப்புகையை ஊதித் தள்ளியபோது அவன் கேசவனாக இல்லை. இந்த நாட்டில் இல்லை. பீட்டர் ஓட்டூலாக மாறி, நியூயார்க் வீதியில் நடந்து கொண்டிருந்தான். அட்ரி ஹெப்பர்னின் சாயலை எதிரே வந்த பெண்களின் முகங்களில் தேடிக்கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் பிரியமான நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் தான். அதற்கு அடுத்தபடி சோபியா லாரன்; பிறகு, ஷெர்லி மெக்லைன்.

அவனுடைய வாழ்க்கைத் துணைவியின் இலட்சிய உருவகம் இந்த பிரியமான நடிகைகளின் சாயல்களில் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று சிதறிக் கிடந்தது. புடவை, டூத் பேஸ்ட் விளம்பரங்களில் சிரிக்கும் வனிதைகளில் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது. கனாட் ப்ளேஸ் வராந்தாக்களில் காணும் சில முகங்கள், சில நடைகள், சில சிரிப்புகள், சில அபிநயங்கள், இவற்றில் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது. இந்த வெவ்வேறு துணுக்குகளைச் சேர்த்துப் பார்த்தால், அவன் விரும்பியவள் எப்படிப் பட்டவளாக இருப்பாள் என்று ஒரு வேளை புலப்படக்கூடும். ஆனால், அவன் இதுவரை இந்த முயற்சியில் ஈடுபடவில்லை. தன்னுடைய நிச்சயமின்மை அவனுக்குப் பிடித்திருந்தது. அந்தந்தக் கணத்தில் ஆங்காங்கே எதிர்ப்படும் அழகுகளில் சுவாதீனமாக லயித்து ஈடுபட அனுமதித்த அவனுடைய சுயேச்சைத் தன்மை அவனுக்குப் பிடித்திருந்தது. ஒரு குறிப்பிட்ட பிம்பத்துக்கு அடிமையாகி தன் பார்வைக்கும் இலக்குகளுக்கும் எல்லைகள் வகுத்துவிட அவனுக்கு விருப்பமில்லை. 'காதலென்பது வாழ்நாள் முழுவதும் ஒருவன் ஈடுபடும் இடையறாத தேடல் ' என்னும் ரொமாண்டிக் ஐடியா அவனுக்குப் பிடித்திருந்தது. அவனுடைய பெற்றோருக்கு வேண்டுமானால் பாட்டுப்பாடத் தெரிந்த தோசை அரைக்கத் தெரிந்த எவளாவது ஒருத்தி வந்தால் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அவனுக்கு வாழ்க்கை வெறும் மோர்க்குழம்பும் தோசையும் அல்ல. சீமந்தமும் தாலாட்டும் அல்ல.... இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. மேம்பட்டது. இந்த மேம்பட்ட சிகரங்களை அவன் எட்டமுடியாமலேயே போகலாம் - அது வேறு விஷயம். ஆனால் இவற்றை எட்டக்கூடிய சுதந்திரத்தை அவன் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். இது அவசியம்.

'மிஸ் நீலா ! என்னை நீங்கள் காதலிக்கும் பட்சத்தில், பாவம் , உங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்! ' என்று அவன் நினைத்தான்.

மறு நாளிலிருந்து மறைத்துக் கொள்ளப் பட்ட ஆர்வத்துடனும், பரபரப்புடனும் அவர்கள் ஒருவரையொருவர் கவனிக்கத் தொடங்கினார்கள். கண்காணிக்கத் தொடங்கினார்கள். 'கேசவன் தன் அழகை ரசிக்கிறானோ ? ' என்று நீலா கவனித்தாள். 'இந்தப் பெண் என்னை பக்தியுடன் பார்க்கிறதோ ? ' என்று கேசவன் கவனித்தான். இருவருமே தான் கவனிப்பது எதிராளிக்குத் தெரியாது என்றும் , தம்மைப் பாதிக்காமல் தம்மைக் காப்பாற்றிக் கொண்டு தாம் மட்டும் எதிராளியைப் பாதித்து விட்டதாகவும் நம்பினார்கள். இந்த நம்பிக்கையில் குதூகலமும் பெருமையும் அடைந்தார்கள். வெற்றியின் பெருமை, வெற்றியின் கர்வம். நீலாவிடம் எத்தனை விதமான நிறங்களில் , எத்தனை விதமான டிசைன்களில் புடவைகள் இருந்தன என்பதை கேசவன் முதன் முதலாகக் கண்டு பிடித்தான். அவள் காதுகளைத் தலை மயிருக்குள் ஒளித்துக் கொள்ளும் விதம் , வயிற்றுப் பாகம் மறையும் படியாகப் புடவைத்தலைப்பை இடுப்பில் நட்டுக் கொண்டு பிறகு தோலில் படர விட்டிருந்த நாசூக்கு., அவள் பேச்சிலிருந்த ஒரு லேசான மழலை. அவள் விழிகளிலும் பாவனைகளிலும் கரைந்து விடாமல் தேங்கிக் கிடந்த ஒரு குழந்தைத் தனமும் பேதமையும் - இவற்றையெல்லாம் அவன் நுணுக்கமாகக் கவனிக்கத் தொடங்கினான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன் Empty Re: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன்

Post by சிவா Thu May 01, 2014 3:47 am



தன் கவனத்தைக் கவர, நீலா ரொம்பவும் பிரயாசைப் படுகிறாள் என்று கேசவன் நினைத்தான். ஆனால், 'நானா கவனிப்பவன் ? ' என்று அவளைக் கவனித்துக் கொண்டே, அவன் நினைத்தான்.

'ஒரு நாளில் கிட்டத்தட்ட ஐம்பது அல்லது அறுபது தடவையாவது , கேசவன் என்பக்கம் பார்க்கிறான் ' என்று நீலா நினைத்தாள். தன் அழகுக்கும் கவர்ச்சிக்கும் ஓர் எளிய பக்தன் அளித்த சிறு காணிக்கையாக இதை அவள் திரஸ்கரிக்காமல் ஏற்றுக் கொண்டாள். 'தன்னுடைய கனவு இளைஞனை அவள் சந்திக்கும் போது, இந்தக் குட்டி பக்தனைப் பற்றி அவனிடம் சொல்லிச் சிரிப்பாள் அவள். கேசவன் அவளைப் பார்க்கப் பார்க்க, கனவு இளைஞனைப் பற்றிய அவளுடைய நம்பிக்கைகளும் ஆசைகளும் மேன் மேலும் உறுதிப் பட்டன. அவளுடைய அழகின் வல்லமையும் , சாத்தியக் கூறுகளும் தெளிவாயின. மறு முறை பார்ககத் தூண்டும் பிரமிக்க வைக்கும் உருவம் அவளுடையது. வடிவம் அவளுடையது. கனவு இளைஞன் அவளை நிச்சயம் தவற விடப் போவதில்லை -- எத்தகைய அதிர்ஷ்டசாலி அவன்!.

செக்ஷனில் இருந்த மற்றவர்கள் மீது அவளுக்கு இருந்த கோபம் கூட இப்போது குறையத் தொடங்கியது. ஏனென்றால் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லும் போதெல்லாம் --- ஏதாவது ஒரு காரியமாக அவர்களை நோக்கி நடக்கும் போதெல்லாம் அவள் உண்மையில் கேசவனுக்காகத் தான் பேசினாள்; கேசவனுக்காகவே நடந்தாள். அவளைச் சுற்றியிருந்த உண்மைகள் திடாரென மறைந்து விட்டிருந்தன. கனவு இளைஞனுக்காகப் போற்றி வந்த அவளுடைய உலகம் ஆகி விட்டிருந்தன.

கேசவனுடைய கண்களிலும் உலகம் மாறித்தான் போயிருந்தது. திடாரென்று தன்னுடைய முக்கியத்துவத்தை பிரத்தியேகத் தன்மையை -- அவன் உணர்ந்தான். காலரியில் உட்கார்ந்து கைதட்டும் பெயரற்ற பலருள் ஒருவனாக -- ஒரு நடிகையின் பல உபாசகர்களுள் ஒருவனாக -- நடைபாதைகளில் மிகுந்து செல்லும் அழகிகளின் பார்வைத்தெளிப்புகளையும் வர்ணச் சிதறல்களையும் பொறுக்கிச் சேர்க்கும் பலவீனர்களுள் ஒருவனாக இருந்தவன், திடாரென்று இந்தக் கும்பல்களிலிருந்து தான் விலகி விட்டதை உணர்ந்தான். தன் ஒருவனுடைய ரசனைக்காகவும், பாராட்டுக்காகவும் மட்டுமே ஒரு அழகு தினந்தோறும் மலருவதை உணர்ந்தான். அவனுக்காகவே எழுப்பப் படும் கவிதை; வரையப் படும் ஓவியம்; இசைக்கப் படும் இசை. -- அவனுக்காக மட்டுமே ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு, டைரக்ட் செய்யப்பட்டு, திரையிடப் படும் ஒரு படம் -- எவ்வளவு அபூர்வமான கர்வப் பட வேண்டிய விஷயம்.!

சில சமயங்களில் அவனுக்கு உற்சாகத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ளவே முடியாதென்று தோன்றியது. சாலையில் எதிர்ப்படும் முன் பின் அறியாதவர்களையெல்லாம் நிறுத்தி, விஷயத்தைச் சொல்ல வேண்டும் போல இருந்தது. அடுக்கு மாடிக் கட்டடத்தின் உச்சியில் போய் நின்று கொண்டு , மேகங்களிடம் தன் ரகசியத்தைப் பீற்றிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அவன் தனியானவன்; வேறு பட்டவன்; வேறு யாருக்குமே கிடைக்காத இரு வாய்ப்பையும், ஒரு கெளரவத்தையும், அதன் மதிப்பு எப்படி இருந்தாலும் பெற்றவன்.

கேசவன் கவலைப் படத் தொடங்கினான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன் Empty Re: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன்

Post by சிவா Thu May 01, 2014 3:47 am



கவலைகளற்ற சுதந்திரப்பட்சி என்று மற்றவர்களால் கருதப்பட்டவன், திடாரென்று தன் விருப்பமின்றியே ஓர் அதிசயமான சிறையில் அடைபட்டுவிட்டதை உணர்ந்தான்; கரைகளற்ற நீர்ப்பரப்பில், அலைகளின் போக்குக்கேற்ப அலைந்து திரிந்த படகாக இருந்தவன் திடாரென்று ஒரு கரையருகில் ஒரு முனையில் தான் கட்டப்பட்டுவிட்டதை உணர்ந்தான். இந்த மாறுதலை அவனால் முழுமனதாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில் இதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும் முடியவில்லை! ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது இது மகத்தான தோல்வியாகவும் வீழ்ச்சியாகவும் தோன்றியது. ஆனால்-

ஆனால், இந்தத் தோல்வியில் ஒரு கவர்ச்சியும் இருந்தது. ஒரு மர்மமான ஆழமும் அழகும் இருந்தன. அந்தத் தோல்வியை நேருக்குநேர் சந்திக்கவும் பயந்து கொண்டு வந்த வழியே திரும்பிச் செல்லவும் மனம் வராமல், அவன் குழம்பினான்; தவித்தான்.

ஒரு நாள் சினிமாத் தியேட்டரில் சினேகிதிகளுடன் வந்திருந்த நீலாவைப் பார்த்து அவன் சிரித்தான்; அவளும் சிரித்தாள். அவனுக்கு தைரியம் வந்தது. செக்ஷனில் சிரிப்புக்கான சந்தர்ப்பங்கள் வரும்போதெல்லாம் வேடிக்கைப்பேச்சுகளும் கலகலப்பும் ஏற்படும்போதெல்லாம் அவர்களுடைய பார்வைகள் ஒன்றையொன்று நாடின. அவர்களுடைய புன்னகைகள் மோதிக்கொண்டன. மின்சார அலை போல ஒன்று அவர்களிடையே எப்போதும் ஓடிக்கொண்டே இருந்தது. அவள் பார்வைக்கு ஒரு அர்த்தம்தான் இருக்க முடியும். அவள் புன்னகைக்கு ஒரு அர்த்தம்தான் இருக்கமுடியும். ஆனாலும் அவனால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. பிறகு, அவன் நினைத்தான்- இவள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்ட பிறகு, நான் ஏன் வீணாக யோசிக்கவேண்டும் ? எனக்கும் சேர்த்து இவள் முடிவு செய்ததாக இருக்கட்டும். இவளுக்கு நான் ஏன் ஏமாற்றத்தை அளிக்கவேண்டும் ? ஒரு பெண்ணின் மனத்திருப்தியை விட என் அழகின் தேடல் தானா பெரிது ? ஓர் உடைந்த இதயத்தின் பாவத்தை மனச்சாட்சியில் சுமந்து கொண்டு குற்றம் சாட்டும் இரு விழிகளை நினைவில் சுமந்து கொண்டு, எந்த அழகை என்னால் ரசிக்க முடியும் ? எதில்தான் முழு மனதாக லயித்து ஈடுபட முடியும் ? நான் நன்றாக மாட்டிக்கொண்டு விட்டேன். காலியாக நிர்மலமாக இருந்த என் மனத்தை ஒரு குறிப்பிட்ட பிம்பம் பூதாகாரமாக அடைத்துக் கொண்டு விட்டது- இனி செய்வதற்கு ஒன்று தான் இருக்கிறது -

ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது; கேசவன் முடிவுக்கு வந்துவிட்டான்.

ஒருநாள் மாலை நீலா ஆபீசைவிட்டுக் கிளம்பும்போது கேசவனும் கூடவே கிளம்பினான். அவள் முகம் சுளிக்காதது அவனுக்குத் தெம்பை அளித்தது.

'வீட்டுக்கா ? ' என்றான். அசட்டுக்கேள்விதான்.

'ஆமாம் '

'எங்கேயாவது போய் காபி சாப்பிடுவோமே ? '

அவள் இதை எதிர்ப்பார்க்கவில்லை என்று தெரிந்தது. முகத்தில் குப்பென்று நிறம் ஏறியது. சமாளித்துக்கொண்டு 'இல்லை; நான் வருவதற்கில்லை ' என்றாள்.

'ஏன் '

'ஒரு வேலை இருக்கிறது '

'நான் நம்பவில்லை '

அவள் பதில் பேசாமல் நடந்தாள். கேசவனுக்குத் தாளவில்லை. இவ்வளவு நாள் யோசித்து யோசித்து - சே! இதற்குத்தானா ?

'ப்ளீஸ்! ' என்று அவன் உணர்ச்சி வசப்பட்டவனாய் அவள் கையைப் பிடித்தான். அவ்வளவுதான். வெடுக்கென்ற உதறலுடன் தன் கையை விடுவித்துக் கொண்டு அவனை நோக்கி ஒரு முறை முறைத்துவிட்டு, அவள் சரசரவென்று வேகமாக நடந்தாள்.

கேசவன் அவள் நடந்து செல்வதைப் பார்த்தவாறு நின்றான்.

'சீ! என்ன துணிச்சல்! ' - பஸ் ஸ்டாண்டில் நிற்கும்போது, உடை மாற்றிக்கொண்டு கையில் பத்திரிக்கையுடன் அமரும்போது, அவளுக்கு கேசவன் மேல் கோபம் கோபமாக வந்தது. இடியட்! என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் இவன்! எப்படிப்பட்டவளென்று நினைக்கிறான் இவன் அவளை ? காபி சாப்பிட வேண்டுமாம், அதுவும் இவனுடன். என்ன ஆசை ? என்ன ... கொழுப்பு! கையை வேறு பிடித்து -

சே! நல்லதுக்குக் காலமில்லை. அவளைச் சுற்றிலும் இறுக்கமும் வறட்சியும் இல்லாமல் சற்றே சந்தோஷத் தென்றல் வீசட்டும் என்று - அழகின் ஒளிக்கற்றைகள் இருந்த இடங்களில் எல்லாம் பாயட்டும் என்று அவள் சுயநலமின்றிச் சிரித்துப் பேசினால், இப்படியா ஒருவன் தப்பர்த்தம் செய்து கொள்வான் ? முட்டாள்தனமாக நடந்து கொள்வான்!

தன் குட்டி பக்தனை அவள் சிறிதும் மன்னிக்கத் தயாராக இல்லை;
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன் Empty Re: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன்

Post by சிவா Thu May 01, 2014 3:47 am



அவனுக்காகவென்று அவள் வகுத்திருந்த சில எல்லைகளை அவன் மீறிவிட்டதாக அவள் நினைத்தாள். நடை வாசலில் நின்று கொண்டிருக்க வேண்டியவன், கர்ப்பக்கிருகத்துக்குள் திபுதிபுவென்று நுழைந்திருக்கக்கூடாதென்று நினைத்தாள். பரிசுத்தமான மனசுடன் அவள் தன் ஜன்னல்களைத் திறந்து வைத்தாள் என்பதற்காக, அவன் உரிமையுடன் ஜன்னலைத் தாண்டி உட்புறம் குதிக்க முயற்சித்திருக்கக்கூடாதென்று நினைத்தாள். எல்லாமே கேசவனின் குற்றத்தையும் அவளுடைய குற்றமின்மையையும் ருசுப்படுத்தும், ஸ்தாபிக்கும், எண்ணங்கள்.

அவன் தான் குற்றவாளி; அவளுடைய நல்ல எண்ணங்களைத் தவறாக புரிந்து கொண்ட குற்றவாளி. இனி இவனிடம் பேசவே கூடாதென்று மறுநாள் ஆபீசுக்குக் கிளம்பும்போது அவள் முடிவு செய்தாள்.

அன்று கேசவன் ஆபீசுக்கு வரவில்லை

'உம்! பச்சாத்தாபப் படுகிறானாக்கும்; அல்லது தன் காலி நாற்காலியின் மூலம் அதிருப்தியைத் தெரிவிக்கிறானாக்கும். என் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறானாக்கும்! ' என்று அவள் அலட்சியமாக நினைத்தாள். அவனைப் பற்றி எதுவும் நினைக்காமல் அவனால் பாதிக்கப் படாமல் இயல்பாக இருக்க முயன்றாள். ஆனால் நினைவுகளை யாரால் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும் ? வேண்டும் வேண்டாம் என்று பாகு பாடு செய்து பொறுக்க முடியும் ? அவன் திசையில் எண்ணங்கள் பாய்வதை அவன் உருவம் மனதில் தோன்றித் தோன்றி மறைவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

மாலையில் வீட்டில் உட்கார்ந்து , கேசவனைத் தள்ளுபடி செய்யக் கூடிய காரணங்களை அவள் தேடிப் பார்த்தாள். செக்ஷனில் வேலை செய்யும் பலருள் ஒருவனாக அவனை அசட்டையாகக் கருதி வந்த தன் பழைய மன நிலையை மீண்டும் உருவாக்கிக் கொள்ள முயன்றாள் ஆனால், அதில் அவளால் வெற்றி பெற முடிய வில்லை. கேசவனை ஒரு தனி மனிதனாக குறிப்பிட்ட சில இயல்புகளும் ருசிகளும் போக்குகளும் உள்ளவனாக எல்லாவற்றுக்கும் மேலாக அவளிடம் சிரத்தை கொண்ட ஒருவனாக, பேச்சுக்கள், பார்வைகள் மூலமாக அவளுடைய மனம் ஒருவிதமாக உருவகப் படுத்தி வைத்திருந்தத்து. இந்த உருவகத்தை அவளால் சிதைக்கவோ அழிக்கவோ முடியவில்லை. முகமற்ற , பெயரற்ற ,உருவற்ற, ஜனத்திரளில் ஒருவனாக -- அவளை எந்த விதத்திலும் பாதிக்காதவனாக -- அவனை மீண்டும் தூக்கி எறிய முடியவில்லை.

'அவனும் இப்போது என்னைப் பற்றி என்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பானோ ? ' இருக்கலாம் ; யார் கண்டது ? என்ன விசித்திரமான தப்ப முடியாத விஷயம் இது ? அவள் அனுமதியின்றி , அவளுக்குத் தெரியாமல் , இந்தக் கணத்தில் அவளை அறிந்த பலர் அவளைப் பற்றி பலவிதமாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த நினைவுகளைப் பற்றி அவளால் எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. அவற்றை ஒடுக்கவோ மாற்றவோ முடியாது; அவற்றிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள முடியாது.

என்ன நினைத்துக் கொண்டிருப்பான் கேசவன் ? அவள் கர்வம் பிடித்தவள் என்றா ? இரக்கமற்றவள் என்றா ? எப்படியாவது நினைத்துக் கொள்ளட்டும் -- ஆனால் ஆனால் -- ஆனால் ஒரு வேளை அவன் ரொம்ப வருத்தப் படுகிறானோ ? தன் தவறுக்காகத் தன்னையே கடிந்து கொண்டு கழிவிரக்கத்தில் உழலுகிறானோ ? இந்தக் கற்பனை அவளுக்கு ஒரு பயத்தையும் சங்கடத்தையும் அளித்தது. ' யாரோ என்னைப் பற்றி ஏதோ நினைத்துக் கொண்டு அவஸ்தைப் பட்டால் அதற்கு நானா பொறுப்பாளி ? ' என்று சமாதானம் செய்து கொள்ள முயன்றாள். ரேடியோவில் கேட்ட காதல் பாடலிலும், பத்திரிகை விளம்பரத்தில் இருந்த இளைஞன் முகத்திலும் , தன் மனதை ஈடுபடுத்தி கற்பனைகளை திசை திருப்பி விட முயற்சித்தாள். ஆனால், திடாரென்று இவையெல்லாம் உயிரற்றதாக அர்த்தமற்றதாக் வெறும் போலியாக , அவளுக்குத் தோன்றின. உயிரும் இயக்கமும் உள்ள ஓர் உண்மையாக அவள் பார்த்திருந்த -- அவளுடன் பேசியிருந்த -- கேசவனைச் சுற்றியே மீண்டும் மீண்டும் இந்த மனம் --

மறு நாள் கேசவன் ஆபிசுக்கு வந்தான். ஆனால் அவன் கேசவனாக இல்லை. கலப்பாக இல்லை. சுற்றுமுற்றும் பார்க்காமல், சிரிக்காமல் காரியமே கண்ணாக இருந்தான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன் Empty Re: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன்

Post by சிவா Thu May 01, 2014 3:47 am


நீலா அவனுடைய மாறுதல்களைக் கவனித்தவளாய், ஆனால், அதைக் கவனித்ததாகக் காட்டிக் கொள்ளாதவளாய் அமர்ந்திருந்தாள். கேசவன் வாய்ப்புக் கிடைக்கும் போது அவளிடம் ' ஐ யாம் சாரி ' என்று மன்னிப்புக் கேட்டுக்கொள்ளப் போகிறான் என்று அவள் எதிர்பார்த்தாள். . .ஆனால், கேசவன் ஒரு நாள் லீவில் தன்னைக் கடுமையாக ஆத்ம சோதனை செய்து கொண்டு , பெண்கள் , அவர்களுடைய பார்வைகள், சிரிப்புகள், இவற்றின் அர்த்தங்கள் ஆகியவற்றிலெல்லாம் முற்றும் நம்பிக்கை இழந்த ஒரு விரக்தி நிலை அடைந்திருந்தான், என்பது அவளுக்குத் தெரியவில்லை.

அன்று லஞ்ச் டயத்திற்குப் பிறகு சில நிமிடங்களுக்குச் செக்ஷனில் அவளும் அவனும் மட்டும் தான் தனியாக இருந்தார்கள். அப்போது கேசவன் , தன்னிடம் பேசப் போகிறான் என்று அவள் எதிர் பார்த்தாள். ஆனால் அவன் பேசவில்லை. அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் கூட இப்படிப் பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் , கேசவன் எந்த சந்தர்ப்பத்தையுமே உபயோகித்துக் கொள்ள வில்லை.

' ரொம்பக் கோபம் போலிருக்கு ! ' என்று அவள் நினைத்தாள்.

அவனுடைய விலகிய போக்கும் உஷ்ணமும் -- ஆபிஸ் வேலை விஷயமாக அவளிடம் பேச வேண்டி வரும் போது மிக மரியாதையுடன் . முகத்தைப் பார்க்காமல் பேசி விட்டு நகருதலும் அவளுக்கு ரசமாகவும் , வேடிக்கையாகவும் இருந்தன. அதே சமயத்தில் இந்தக் கோபத்தின் பின்னிருந்த ஏமாற்றத்தையும் வேதனையையும் ஊகித்துணரும் போது அவளுக்கு அவன் மேல் இரக்கமாகவும் இருந்தது. 'சுத்தப் பைத்தியம் ' என்று அவள் நினைத்தாள். அவள் நிலை அவனுக்கு ஏன் புரிய மாட்டேன் என்கிறது ? அவள் ஒரு பெண். -- விளைவுகளைப் பற்றி சுற்றியுள்ள சமூகத்தின் பார்வையையும் பேச்சுகளையும் பற்றி யோசிக்க வேண்டியவள். எவனோ கூப்பிட்டான் என்று உடனே காபி சாப்பிடப் போக இது என்ன சினிமாவா ? டிராமாவா ?

இப்படியாக, அவன் காப்பி சாப்பிடக் கூப்பிட்டதே தப்பு என்கிற ரீதியில் யோசித்துக் கொண்டிருந்தவள், அவன் அப்படிச் செய்தது சரியாக இருந்தாலும் கூடத் தான் ஏன் அதை ஏற்றுக் கொண்டிருக்க முடியாது ? என்று தனக்குத் தானே நிரூபித்துக் கொண்டு , தன் செய்கை சரிதானா என்று ஸ்தாபித்துக் கொள்ள முயன்றாள். இருந்தாலும் மனதின் அரிப்பையும் , குடைவையும் அவளால் தடுக்க இயல வில்லை. ஒரு வேளை அந்தச் சந்தர்ப்பத்தில் அவள் வேறு வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருக்கலாமோ ? இன்னும் சிறிது பிரியமாக நடந்து கொண்டிருக்கலாமோ ? அவனைப் புண்படுத்தாமலும் அதே சமயத்தில் தன்னைப் பந்தப் படுத்திக் கொள்ளாமலும், சாதுரியமாக நிலைமையைச் சமாளித்திருக்கலாமோ ?

அவள் தான் இப்படியெல்லாம் ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தாளே தவிர அவன் அவளைப் பற்றி கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. . . அவள் பக்கம் பார்ப்பதையே அவன் நிறுத்தி விட்டான். ஏன், சீட்டில் உட்காரும் நேரத்தையே அவன் கூடியவரை குறைத்துக் கொள்ளத் தொடங்கியிருந்தான். அவனுடைய அலட்சியம் அவளுடைய ராத்தூக்கத்தைக் கெடுத்து விடவில்லை. ஆனாலும் ஒரு சூனிய உணர்வு அவளை அவ்வப்போது பிடித்து உலுக்கத் தான் செய்தது. அவளுக்குள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த ஏதோ ஒரு பல்பு ஃபியூஸ் ஆனதைப் போல இருந்தது. அந்த பல்பு இல்லாமலும் , அவள் இயங்கக் கூடும் . இருந்தாலும் வித்தியாசம் இருக்கத் தான் செய்தது. குறை தெரியத்தான் செய்தது.

அழகு படுத்திக்கொள்வதிலும் , அலங்கரித்துக் கொள்வதிலும் முன் போல ஆர்வமும் உற்சாகமும் காட்ட அவளால் முடிய வில்லை. தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு முயற்சியாக அவை தோன்றின. கனவு இளைஞனை மண்டியிடச் செய்யும் தேஜஸ் வாய்ந்ததாகத் தோன்றிய தன் அழகின் மேல் முன் போல் அவளால் நம்பிக்கை வைக்க முடியவில்லை,. அதன் கவர்ச்சியையும் வல்லமையையும் பற்றி தீர்மானமாகவும் இறுமாப்பாகவும் இருக்க முடிய வில்லை. எதை அஸ்திவாரமாகக் கொண்டு அவள் தடபுடலாக மாளிகை கட்டிக்னாளோ அந்த அஸ்திவாரமே இப்போது சந்தேகத்திற்குரியதாக மாறி விட்டிருந்தது. 'இவ்வளவு சீக்கிரம் புறக்கணிக்கக் கூடிய சக்தியா அவள் சக்தி ? பைத்தியம் பிடிக்கச் செய்யும் , நிரந்தரமான , விடுபடமுடியாத , போதையிலாழ்த்தும் அழகு இல்லையா அவளுடைய அழகு ? கேசவன் அவளைப் பார்த்து மயங்கியது கூடத் தற்செயலாக நிகழ்ந்தது தானோ ? அல்லது அவன் மயங்கியதாக நினைத்தது கூட அவள் பிரமை தானா ? தன்னை மறந்து ஒரு நிலையில் -- ஒரு திடார் உந்துதலில் -- அவன் அவளை நெருங்கி வர -, இவள் பைத்தியம் போல அந்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டாளா ? இனி இது போன்ற வாய்ப்புகள் அவள் வாழ்வில் வர நேருமோ, நேராதோ ? அப்பாவும் அம்மாவும் ஜோசியர்களும், தேர்ந்தெடுக்கும் யாரோ ஒரு -- என்ன பயங்கரம் ?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன் Empty Re: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன்

Post by சிவா Thu May 01, 2014 3:48 am


'நான் முட்டாள் படு முட்டாள் ' என்று அவள் தன்னைத் தானே திட்டிக் கொண்டாள். கேசவன் மீசை வைத்திருந்தான். அதனாலென்ன ? சுமாரான நிறம் தான். அதனாலென்ன ? அவன் கேசவன் -- அவளுக்குப் பரிச்சயமானவன். மோசமான டைப் என்று சொல்ல முடியாதவன்.

'உம்! இந்தப் பெண்கள் ! ' -- காலையில் பஸ்ஸில் ஆபிஸை நெருங்கிக் கொண்டிருந்த கேசவன் அனுபவபூர்வமாகவும், கரை கண்டவனாகவும், புன்னகை செய்து கொண்டான். ' இவர்களுக்கு கவனிக்கப் படவும் வேண்டும் கவனிக்கப் படவும் கூடாது. சலுகைகள் எடுத்துக் கொள்ளப்படவும் வேண்டும்; எடுத்துக் கொள்ளப் படவும் கூடாது. காற்றடிக்கவும் வேண்டும்; புடவை பறக்கவும் கூடாது. '

' இந்தப் பெண்களே ஸ்திர புத்தியற்றவர்கள். மோசக்காரிகள் -- பிச்சஸ் - இவர்களை நம்பவே கூடாது ' என்று நினைத்தவனாய் அவன் செக்ஷனுக்குள் நுழைந்தான். தண்டபாணி உரத்த குரலி சீனிவாசனிடம் ஏதோ உரக்க வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தார். கணபதி ராமன் தன் குறை எதையோ குப்பு சாமியிடம் சொல்லி அழுது கொண்டிருந்தார். நீலா . . .

கேசவன் அசட்டையாக அவள் பக்கம் பார்த்தான். திடுக்கிட்டான். அதே புடவை அணிந்திருந்தாள் அவள்., அன்று அவன் காப்பி சாப்பிடக் கூப்பிட்ட போது அணிந்திருந்த அதே புடவை. அவன் அவள் முகத்தைப் பார்த்தான். அவள் பார்வையில் கூத்தாடிய விஷமத்தையும் உல்லாசத்தையும் கவனித்தான். பிறகு, உதட்டைக் கடித்துக் கொண்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டான். இல்லை, மறுபடியும் ஏமாறத் தயாராய் இல்லை அவன்.

அட்டெண்டன்ஸ் மார்க் பண்னி விட்டு அவன் தன் இடத்தில் போய் உட்கார்ந்தான். ஃபைல் ஒன்றைப் பிரித்தான். ,. ' கிளிங் . .கிளிங்.. ' என்ற வளையல் ஓசை -- அவன் நிமிரவில்லை. ' பெரிய மகாராணி ' என்று நினைத்தான். இவள் இஷ்டப் படி போடும் விதிகளின் படி நான் விளையாட வேண்டும் போலிருக்கிறது. அவள், அவன் கவனத்தைக் கவர முயற்சிப்பதும் , அவன் இதை மெளனமாக எதிர்ப்பதுமாக சில நிமிடங்கள் ஊர்ந்தன. திடார் என்று பியூன் பாராங்குசம் கையில் ஒரு காப்பித் தம்ளருடன் செக்ஷனுக்குள் நுழைந்தான். ஒரு தம்ளரை நீலாவின் மேஜை மேல் வைத்தான். இன்னொன்றை கேசவன் மேஜை மீது வைக்குமாறு அவள் ஜாடை காட்டவும், பாராங்குசம் அப்படியே செய்தான்.

கேசவன் நிமிர்ந்தான் -- 'என்னப்பா இது ? '

' நான் தான் வாங்கி வரச் சொன்னேன் ' என்றாள் நீலா. புன்னகையுடன் , ' யூ லைக் காபி, நோ ? '

கேசவன் திணறிப் போனான் . இப்படி ஒரு சந்தர்ப்பத்தை அவன் எதிர் பார்க்க வில்லை. இப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கணக்குப் போட்டிருக்கவில்லை. உஷ்ணமாக ஏதாவது சொல்ல வேண்டும் போலிருந்தது.

' காப்பி சாப்பிடுங்க சார். ஆறிப் போயிடும் ' என்றான் பராங்குசம்.

அவன் குடிக்கப் போவதை எதிர் பார்த்து நீலா தம்ளரைக் கையில் எடுத்து அவனுடன் சேர்ந்து குடிப்பதற்காகக் காத்திருந்தாள். அவள் விழிகளிலிருந்த நிச்சயமும் நம்பிக்கையும்! கேசவன் தான் தோற்று விட்டதை உணர்ந்தான். காப்பியை அருந்தத் தொடங்கினான். அவளிடம் ஏதேதோ கோபப் பட வேண்டும் விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டும் என்று அவன் விஸ்தாரமாக யோசித்து வைத்திருந்தான். ஆனால் இப்போது எல்லாமே அநாவசியமானதாக, அர்த்தமற்றதாகத் தோன்றின. அவள் அருகில் சுமுகமான நிலையில் இருப்பதே போதும் என்று தோன்றியது.

'காப்பிக்காக தாங்ஸ் ' என்றான் அவன்.

'குடித்ததற்காக தாங்க்ஸ் ' என்றாள் அவள்.அதற்கு மேலும் ஏதாவது சொல்ல வேண்டுமென்று துடித்தவளாய் , ஆனால், தவறாக எதையும் சொல்லி விடக் கூடாதே என்று தயங்கியவளாய் அவள் ஒரு புன்னகை மட்டும் செய்தாள். அவனுக்கும் பதிலுக்குப் புன்னகை செய்தான்.

ஒருவரையொருவர் ஜெயிக்க நினைத்தார்கள். ஒருவரிடம் ஒருவர் தோற்றுப் போய் உட்கார்ந்திருந்தார்கள்.

******
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன் Empty Re: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன்

Post by கிருஷ்ணா Thu May 01, 2014 4:29 pm

நாம் ஒன்று நினைக்க தெய்வம்(நிஜம்) ஒன்று நடத்தும்  சூப்பருங்க 


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

 சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன் Empty Re: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum