ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கியின் சிவகாமியின் சபதம்

+2
மீனு
ரூபன்
6 posters

Page 5 of 17 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 17  Next

Go down

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 5 Empty கல்கியின் சிவகாமியின் சபதம்

Post by ரூபன் Sun 1 Nov 2009 - 0:06

First topic message reminder :

ஆசிரியரின் உரை


நீல வானத்திலிந்து பூரண சந்திரன் அமுதக் கிரணங்களைப்
பொழிந்து கொண்டிருந்தான். பூவுலகம் மோகன நிலவிலே மூழ்கி அமைதி குடிகொண்டு
விளங்கியது. எதிரே எல்லையின்றிப் பரந்து கிடந்த வங்காளக் குடாக் கடலில்
சந்திரக் கிரணங்கள் இந்திர ஜாலவித்தை செய்து கொண்டிருந்தன. கரையோரத்தில்
சின்னஞ்சிறு அலைகள் அதிக ஓசை செய்து அமைதியைக் குலைக்க விரும்பாதவை போல்
இலேசான சப்தத்துடன் எழுந்து விழுந்து கொண்டிருந்தன.

கடல் ஓரத்து வெண் மணலில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். ரஸிகமணி ஸ்ரீ. டி.
கே. சிதம்பரநாத முதலியார் அவர்களும் இன்னும் இரு நண்பர்களும் நானும்
இருந்தோம். வேறு மனிதர்களோ பிராணிகளோ கண்ணுக்கெட்டிய தூரம் காணப்படவில்லை.

மாமல்லபுரத்துக் கடற்கரை. பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னால் நடந்த
சம்பவம். ரஸிகமணி அவர்கள் வழக்கம்போல் கவிதையைப் பற்றிப் பேசிக்
கொண்டிருந்தார்.

'விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு! - முன்பு
விட்டகுறை வந்து தொட்டாச்சு!'

என்ற ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடல் வரிகளை அழுத்தந்திருத்தமாக எடுத்துரைத்தார்.

'முன்பு - விட்டகுறை வந்து தொட்டாச்சு!' என்னும் வரி ஒரு சக்தி வாய்ந்த
மந்திரத்தைப்போல் என்னை மதிமயங்கச் செய்தது. அந்தக் கடற்கரை மணலில் அதே
மாதிரி வெண்ணிலவில் இதற்கு முன் எத்தனையோ தடவை நான் உட்கார்ந்திருந்ததாகத்
தோன்றியது. முந்தைய பிறவிகளில் விட்ட குறைதான் இங்கே என்னைக் கொண்டு வந்து
சேர்த்து இன்று இந்தக் கடற்கரை ஓரத்திலே உட்காரச் செய்திருக்கிறது என்றும்
தோன்றியது.

கடலிலே ஆயிரமாயிரம் படகுகளும் கப்பல்களும் திடீரென்று காட்சி அளித்தன.
கரையிலே கூட்டங் கூட்டமாக ஆடவரும் பெண்டிரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
சற்றுத் தூரத்தில் உச்சியில் ரிஷபக் கொடிகளும் சிங்கக் கொடிகளும்
உல்லாசமாகப் பறந்தன. இனிமை ததும்பிய இசைக் கருவிகளிலிருந்து எழுந்த
சங்கீதம் நாற்புறமும் சூழ்ந்து போதையை உண்டாக்கிற்று. கண்ணுக்குத் தெரிந்த
பாறைகளில் எல்லாம் சிற்பிகள் கையில் கல்லுளியை வைத்துக் கொண்டு வேலை
செய்தார்கள். எங்கேயோ யாரோ காலில் கட்டிய சதங்கை ஒலிக்க நடனமாடிக்
கொண்டிருப்பதை உணர முடிந்தது.

சிறிது நேரத்துகெல்லாம் அந்த அகக் காட்சிகள் தெளிவடைந்தன. உருவங்களும் முகங்களும் இனந்திரியுமாறு எதிரே தோன்றின.

ஆயனரும் சிவகாமியும் மகேந்திர பல்லவரும் மாமல்லரும் பார்த்திபனும்
விக்கிரமனும் அருள்மொழியும் குந்தவியும் பொன்னனும் வள்ளியும் கண்ணனும்
கமலியும் புலிகேசியும் நாகநந்தியும் என்னுடைய மனக்கண் முன்னால் பவனி
வந்தார்கள். அப்படிப் பவனி வந்தவர்கள் என் உள்ளத்திலேயே
குடிபுகுந்துவிட்டார்கள்.

இரண்டு தினங்கள் மாமல்லபுரத்தில் தங்கியிருந்தோம். அற்புத சிற்பங்களைத்
தாங்கிய கற்பாறைகளைப் பார்த்தோம். குன்றில் குடைந்தெடுத்த கோயில்களையும்
விமானங்களையும் பார்த்தோம். ஒவ்வொரு கல்லும் ஒரு கதை சொல்லிற்று. ஒவ்வொரு
சிற்பமும் ஓர் இதிகாசத்தை எடுத்துரைத்தது. பார்க்கப் பார்க்க வியப்பு
மிகுந்தது; கேட்கக் கேட்கப் பரவசமாயிற்று. கையிலே பிடித்த கல்லுளிகளையே
மந்திரக் கோல்களாகக் கொண்டு எந்த மகா சிற்பிகள் இத்தகைய மகேந்திர
ஜாலங்களைச் செய்தார்களோ என்று நினைத்தபோது அவர்களைக் கையெடுத்துக்
கும்பிடத் தோன்றியது. அந்தச் சிற்பிகளிடம் தோன்றிய பக்தியினால் தலை
தானாகவே வணங்கிற்று.

'சிவகாமியின் சபதம்' என்னும் பெயர் தாங்கிய இந்த நூலை ஏதேனும் ஒரு வழியிலே
பெற்றுக் கையில் ஏந்திக் கொண்டிருக்கும் அன்பர்கள் 'இது அபாரமான புத்தகம்'
என்று உடனே தீர்மானித்துவிடக்கூடும். ஆயிரத்துக்குமேல் பக்கங்கள் உள்ள
புத்தகம் அல்லவா? அதற்குத் தகுந்த கனமும் இருக்கத் தானே செய்யும்?

இவ்வளவு பாரத்தையும் ஏறக்குறைய பன்னிரண்டு வருஷகாலம் என் உள்ளத்தில்
தாங்கிக் கொண்டிருந்தேன். 'சிவகாமியின் சபத'த்தில் கடைசிப் பாகம், கடைசி
அத்தியாயம், கடைசி வரியை எழுதி 'முற்றும்' என்று கொட்டை எழுத்தில் போட்ட
பிறகுதான் பன்னிரண்டு ஆண்டுகளாக நான் சுமந்துகொண்டிருந்த பாரம் என்
அகத்திலிருந்து நீங்கியது.

மகேந்திரரும் மாமல்லரும் ஆயனரும் சிவகாமியும் பரஞ்சோதியும் பார்த்திபனும்
விக்கிரமனும் குந்தவியும் மற்றும் சில கதாபாத்திரங்களும் என்
நெஞ்சிலிருந்து கீழிறங்கி, 'போய் வருகிறோம்' என்று அருமையோடு சொல்லி
விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள்.

ஆகா! அந்தப் பழந்தமிழ்நாட்டுப் பிரமுகர்கள், பெயருக்கும் புகழுக்கும்
மிக்க ஆசை கொண்டவர்கள் போலும்! என்றென்றும் அழியாத கற்பாறையிலே அல்லவா
தங்களுடைய புகழை அவர்கள் எழுதி வைத்துவிட்டுச் சென்றார்கள்! வேண்டுமென்று
செய்தார்களோ, வேண்டாமலே செய்தார்களோ, நினைத்துச் செய்தார்களோ, நினையாமலே
செய்தார்களோ. அவர்கள் செய்து வைத்த காரியங்கள் நீடுழி காலம் அவர்களுடைய
நினைவை நிலைநாட்டுமாறு அமைந்திருக்கின்றன.

பல காலமாகப் பண்டைத் தமிழகத்தின் பெருமையைப் பற்றியும் பண்பாட்டின்
சிறப்பைப்பற்றியும் கேள்விப்பட்டுக் கொண்டிருந்தேன்; படித்துமிருந்தேன்.
ஆனாலும், கேட்டது படித்தது எதுவும் உள்ளத்தில் நன்கு பதியவில்லை!
நம்பிக்கையும் அவ்வளவாக உண்டாகவில்லை.

மகாபலிபுரம் என்று வழங்கும் மாமல்லபுரத்துக்குச் சென்று கண்ணால் நேரிலே
பார்த்த பிறகு நம்பிக்கை ஏற்பட்டது. ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு
முன்னால் நமது செந்தமிழ் நாட்டில் இவ்வளவு அற்புதமான சிற்பங்களைச் செய்த
மகா சிற்பிகள் இருந்தார்கள்! அவர்களை ஆதரித்துப் போஷித்து உற்சாகப்படுத்தி
அவர்களுடைய கலைத் திறனைப் பிரகாசிக்கச் செய்த மன்னர்களும் இருந்தார்கள்!

அப்படியென்றால், அந்தக் காலத்தில் தமிழகத்தின் பண்பாடும் சமூக
வாழ்க்கையும் எவ்வளவு மேம்பட்டிருக்கவேண்டும்? அத்தகைய மேம்பாட்டை ஒரு
சமூகம் அடைய வேண்டுமானால் அதற்கு எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னாலிருந்து
அச்சமூகத்திலே கலையும் கல்வியும் நல்லாட்சி நல்லொழுக்கம் வளர்ந்து
வந்திருக்க வேண்டும்? இதையெல்லாம் நினைக்க நினைக்க பண்டைத் தமிழ்நாட்டில்
வாழ்ந்த நம் மூதாதையர்களிடம் பக்தியும் மரியாதையும் பொங்கி வளர்ந்தன.

தமிழகத்தில் பழம் பெருமையைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையென்பது
மட்டுமல்ல, இதுவரை உண்மையை ஓரளவு குறைத்துச் சொல்லியே வந்திருக்கிறார்கள்
என்று தோன்றியது.

'கோயில்களும் கோபுரங்களும் குன்றைக் குடைந்தெடுத்த விமானங்களும் பாறைச்
சிற்பங்களும் அந்த நாளைய மன்னர்களின் கொடுங்கோன்மை மூலமாகத் தோன்றியவை',
என்று ஒரு சிலர் கூறியதையும் கேட்டிருந்தேன். அந்தக் கொள்கை முற்றிலும்
அபத்தமானது என்ற முடிவுக்கு வந்தேன். கொடுமையினாலும் பலாத்காரத்தினாலும்
வேறு பல வேலைகளைச் செய்வித்தல் சாத்தியமாயிருக்கலாம். ஆனால், இத்தகைய கலை
அற்புதங்கள் ஒரு நாளும் கொடுமையின் மூலம் உண்டாயிருக்க முடியாது.
கட்டாயப்படுத்தி நிலத்தை உழச் செய்யலாம். துணி நெய்யச் செய்யலாம். ஆனால்
அத்தகைய கட்டாய முறைகளினால் கலை வளர்ந்து விடாது. குழந்தையை அடித்து அழச்
செய்யலாம்; ஆனால் பாடச் செய்ய முடியாது. குழந்தையை அடிமேல் அடியடித்து
ஓடச் செய்யலாம்; ஆனால் ஆடச் செய்யமுடியாது.

மாமல்லபுரத்தில் உள்ளது போன்ற சொப்பன சிற்ப லோகத்தைப் பலவந்தத்தின் மூலமாகச் சிருஷ்டி செய்திருக்க முடியாது.

எனவே, எந்த வகையிலே சிந்தித்துப் பார்த்தாலும் பழந்தமிழ் மக்களிடம் என்னுடைய பக்தி பெருகி வளர்வதாயிற்று.

'பார்த்திபன் கனவு', 'சிவகாமியின் சபதம்' ஆகிய கதைகளை எழுதிவந்த காலத்தில்
இந்தக் காலத்துத் தமிழ் மக்கள் பழந்தமிழ் நாட்டின் பெருமையைத் தெரிந்து
கொள்வதில் எவ்வளவு ஆர்வங்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.

'கல்கி' பத்திரிகை தொடங்கிய புதிதில், சில நண்பர்கள் தொடர்கதை எழுதும்படி
கேட்டார்கள். 'ஆகட்டும்; தொடர்கதை எழுதத்தான் போகிறேன்!' என்று
சொல்லிவிட்டு, 'கல்கி'யின் மேனேஜரிடம் என்னுடைய உத்தேசத்தைச் சொன்னேன்.
'கூடவே கூடாது!' என்று சொன்னார் நண்பர் சதாசிவம். 'இப்போதே
காகிதத்துக்குத் திண்டாட்டமாயிருக்கிறது. தொடர்கதை எழுதினால் எப்படிச்
சமாளிப்பது?' என்றார். 'அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். காகிதத்
தேவையைக் குறைக்கக் கூடிய சக்திவாய்ந்த தொடர்கதை எழுதப் போகிறேன்!
தொடர்கதை ஆரம்பித்துச் சில இதழ்களிலேயே தெரிந்துவிடும்!' என்றேன். 'அது
என்ன அவ்வளவு அதிசயமான கதை' என்று கேட்டார். 'தமிழ்நாட்டுச் சரித்திரக்
கதை - 'பார்த்திபன் கனவு' என்று பெயர். தமிழ்நாட்டில் நம்மவர்கள்
இராஜபுத்திரர்களைப் பற்றியும் மொகலாயர்களைப் பற்றியும் சரித்திரக் கதை
எழுதினால் குதூகலத்துடன் படிப்பார்கள். தமிழ்நாட்டுச் சரித்திரம்
தமிழர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்காது. ஆகையால், இந்தத் தொடர் கதையினால்
உங்களுக்கு மிக்க சௌகரியம் ஏற்படும்?' என்றேன்.

நான் கூறியதை நம்பாமல் ஸ்ரீ சதாசிவம் தலையை அசைத்தார்.

அவர் சந்தேகப்பட்டது உறுதியாயிற்று. நான் எண்ணியபடி நடக்கவில்லை.
தமிழ்நாட்டுச் சரித்திரக் கதையில் தமிழ் மக்கள் எவ்வளவு ஆர்வம்
கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது.

'கல்கி' மானேஜர் மிகவும் கஷ்டப்பட்டுப் போனார். பம்பாய் எங்கே, கல்கத்தா
எங்கே, டில்லி எங்கே என்று நாலு திசையிலும் சென்று பத்திரிகைக்குக்
காகிதம் வாங்க வேண்டியதாயிற்று.

'பார்த்திபன் கனவு' முடிந்த பிறகு, மன நிம்மதி பெறலாம் என்று பார்த்தால்
அதற்கு ஆயனரும் சிவகாமியும் இடங் கொடுக்கவில்லை. மாமல்லபுரத்தில் முதன்
முதலில் என் மனக் கண் முன்னால் தோன்றியவர்கள் அவர்களேயாதலால் அவர்களை
அலட்சியம் செய்ய முடியவில்லை. எனவே, 'சிவகாமியின் சபதம்' ஆரம்பமாயிற்று.
ஆனால், இலேசில் முடிகிறதாக இல்லை! ஆகா! பேதை சிவகாமி எளிதில் சபதம் செய்து
விட்டாள். அதை நிறைவேற்றி வைப்பதற்கு மாமல்லர் ஒன்பது ஆண்டுகள்
பிரம்மப்பிரயத்தனம் செய்தார். அந்த வரலாற்றை எழுதி முடிப்பதற்கோ எனக்கு
இத்தனை காலம் ஆயிற்று.

வாரப் பத்திரிகையில் தொடர் கதை படிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம்
அல்ல. ஒரு வாரத்தில் வெளியான கதைப் பகுதிகளைப் படித்தபிறகு அடுத்த
பகுதிக்கு ஒரு வாரம் வரையில் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். பழைய
நிகழ்ச்சிகளையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கவேண்டும். இந்தத்
தொல்லைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் மேற்படி தொடர் கதைகளை வாராவாரம்
படித்து என்னை ஊக்கப்படுத்தி வந்த பதினாயிரக்கணக்கான தமிழ் அன்பர்களுக்கு
என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாசகர்களின் ஆர்வமும்
ஊக்கமுமே இந்த இரு கதைகளையும் எழுதி முடிப்பதற்கு உறுதுணையாயிருந்தன.

தொடர் கதை படிப்பதற்கு வேண்டிய பொறுமையிருக்கும் என்று எதிர்பார்க்க
முடியாத தமிழ்நாட்டுப் பிரமுகர்கள் சிலர் இந்தச் சரித்திரக் கதைகளைப்
படித்து வந்ததாக அறிந்து உற்சாகமடைந்தேன். அவர்களில் ஒருவர் தற்சமயம்
சென்னை மாகாணத்தின் உள்நாட்டு மந்திரி பதவி வகிக்கும் டாக்டர் ப.
சுப்பராயன் அவர்கள். தொடர்கதை வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் அவர்களைச்
சந்திக்க நேரும் போதெல்லாம் மற்ற விஷயங்களையெல்லாம் விட்டு விட்டு,
'சிவகாமியின் சபதம்' கதையில் சென்ற வாரத்தில் வந்திருக்கும்
நிகழ்ச்சிகளைப் பற்றியும், அடுத்த வாரத்தில் வரலாமென்று ஊகித்த
நிகழ்ச்சிகளைப் பற்றியும் டாக்டர் அவர்கள் பேசுவார்கள்.

அத்தகைய ஊக்கத்தைச் 'சிவகாமியின் சபதம்' முடியும் வரையில் இடைவிடாது
காட்டி வந்ததுடன், இந்த நாவலுக்கு ஓர் அழகிய முன்னுரையும் எழுதி
உதவியதற்காக டாக்டர் சுப்பராயன் அவர்களுக்குப் பெரிதும் கடமைப்
பட்டிருக்கிறேன்.

'சிவகாமியின் சபதம்' 'பார்த்திபன் கனவு' ஆகிய இரு நூல்களும் சரித்திரக்
கதைகள் என்று அடிக்கடி சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. டாக்டர் ப.
சுப்பராயன் அவர்களும் அவ்விதம் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே,
அதைப்பற்றிச் சில வார்த்தை சொல்ல வேண்டியதாயிற்று. அதாவது, மேற்படி
நூல்களில் சரித்திரம் எவ்வளவு என்று விளக்கி விடுவது அவசியமாயிற்று.

கதாபாத்திரங்களைப்பற்றி முதலில் சொல்ல விரும்புகிறேன். மகேந்திர பல்லவர்,
மாமல்ல நரசிம்மர் இருவரும் தமிழ்நாட்டின் சரித்திரத்தில் புகழ்பெற்ற
உண்மையான பாத்திரங்கள், மற்றும் தளபதி பரஞ்சோதியார், வாதாபி புலிகேசி,
இலங்கை மானவன்மன், நெடுமாற பாண்டியன், மங்கையர்கரசி, குலச்சிறையார்
ஆகியவர்கள் சரித்திர பூர்வமானவர்கள். அப்பரும், சம்பந்தரும் சரித்திரப்
பிரசித்தியானவர்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

மற்றபடி இந்த இரண்டு சரித்திரக் கதைகளிலுமே வருகிறவர்கள் அனைவரும் கனவிலோ, கற்பனையிலோ, கல் சொன்ன கதைகளிலோ உதயமான பாத்திரங்கள்.

மகேந்திர பல்லவர், மாமல்ல நரசிம்மர் இவருடைய குணாதிசயங்களைப் பற்றிச்
சரித்திரத்தில் பல குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. அந்தக்
குறிப்புகளுக்கு இணங்கக்கூடிய வகையில் இந்தக் கதைகளிலும் அவர்களுடைய
குணாதிசயங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.

மன்னர் மன்னர்களான அந்த இருவரும் சிறந்த கல்விமான்கள் என்றும், சித்திரம்,
சிற்பம், சங்கீதம் நடனம் ஆகிய கலைகளில் அளவில்லாத பற்று உடையவர்கள்
என்றும், மாறுவேடம் பூணுவதில் நிகரற்ற திறமையாளர்கள் என்றும், யுத்த
தந்திரங்களில் கைதேர்ந்தவர்கள் என்றும், போர்க்களத்தில் மகாவீரர்கள்
என்றும் நிர்ணயிப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் சரித்திர நிபுணர்களின்
கல்வெட்டு ஆராய்ச்சிகளிலிருந்து கிடைத்திருக்கின்றன.

இந்தக் கதைகளிலே வரும் நிகழ்ச்சிகளில், சில முக்கியமான நிகழ்ச்சிகள்
சரித்திர ஆதாரமுடையவை. அவற்றில் முக்கியமானவை: 1. மகேந்திர பல்லவர்
முதலில் சமணராயிருந்து பின்னர் அப்பர் சுவாமிகளின் உபதேசம் பெற்றுச் சைவர்
ஆனது. 2. வாதாபி புலிகேசி மாபெருஞ் சைனியத்துடன் தென்னாட்டின் மீது
படையெடுத்து வந்து காஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டது. 3. புலிகேசி
கொள்ளிடக்கரை சென்று அங்கே சேர, பாண்டிய, களப்பாள மன்னர்களைச் சந்தித்தது.
4. காஞ்சிக் கோட்டையைக் கைப்பற்ற முடியாமல் புலிகேசி திரும்பிச் சென்றது.
5. சளுக்கரின் படையெடுப்புக்குப் பழிக்குப் பழி வாங்கும் பொருட்டுப் பல்லவ
சைனியம் வாதாபிக்குப் படையெடுத்துச் சென்றது. 6. வாதாபி நகர் மீது
படையெடுத்த பல்லவ சைனியத்திற்குப் பரஞ்சோதி தளபதியாயிருந்தது. 7. பல்லவ
சைனியம் வாதாபியைக் கைப்பற்றி அந்நகரத்தைத் தீக்கிரையாக்கியது. 8. தளபதி
பரஞ்சோதி பிற்காலத்தில் சேனாதிபதி உத்தியோகத்தை விட்டுத் தமது சொந்தக்
கிராமமாகிய திருச்செங்காட்டங் குடிக்குச் சென்று சிவநேசச் செல்வராக
வாழ்க்கை நடத்தியது - ஆகிய இவையெல்லாம் சரித்திர பூர்வமான உண்மைச்
சம்பவங்கள்.

இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த காலத்தில் தென்னாடு கலை வளத்தில் தலைசிறந்து
விளங்கியது என்பது சரித்திரம் ஐயமற அறிவிக்கும் உண்மையாகும். சிற்பம்,
சித்திரம், சங்கீதம், நடனம் ஆகிய அழகுக் கலைகள் எல்லாம் தமிழகத்தில்
அப்போது வளம் பெற்றிருந்தன. இந்தக் கலைகளுள் முக்கியமாகச் சிற்பமும்
சித்திரமும், விந்திய பர்வதத்திலிருந்து இலங்கை வரையில் ஏறக்குறைய ஒரே
விதமாகப் பரவியிருந்தன என்பதும், ஒரே பாணியில் அமைந்திருந்தன என்பதும்
சரித்திர பூர்வமாகத் தெரிய வருகின்றன. அஜந்தாவின் குகை மண்டபங்களிலும்
தமிழகத்தில் இப்போது சிற்றன்ன வாசல் என வழங்கும் சித்தர் வாச மலையிலும்,
இலங்கையில் உள்ள ஸ்ரீகிரி மலையிலும் ஒரே விதமான சித்திரங்கள் - அழியா
வர்ணங்களில் எழுதிய அற்புதக் கலைப்பண்பு வாய்ந்த சித்திரங்கள் -
காணப்படுகின்றன. உலகத்தில் வேறு எங்கேயும் இத்தகைய பண்டையச்
சித்திரங்களைக் காணமுடியாது என்று கலை நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ஏறக்குறைய ஒரே காலத்தில் அஜந்தாவிலும் எல்லோராவிலும் வாதாபியிலும்
கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள நாகார்ஜுன மலையிலும் மாமல்லபுரத்திலும்
குன்றுகளைக் குடைந்து விமானங்கள் அமைக்கும் கலை பரவி மகோன்னத நிலையை
அடைந்திருக்கிறது என்பதையும் சரித்திர ஆராய்ச்சியிலிருந்து தெரிந்து
கொள்ளலாம்.

மேற்கூறிய சரித்திர உண்மைகளையெல்லாம் இந்த இரண்டு கதைகளிலும் கொண்டுவர
முயன்றதன் பயனாக வாழ்க்கையிலேயே ஒப்பற்ற அநுபவம் ஒன்று எனக்குக்
கிடைத்தது; அதுதான் அஜந்தா யாத்திரை. அஜந்தா சித்திரங்களைப் பற்றிப்
புத்தகங்களில் படித்ததை ஆதாரமாகக் கொண்டே 'சிவகாமியின் சபதம்' எழுதுவதற்கு
ஆரம்பித்தேன். ஆனால், கதையை எழுதிக் கொண்டு போகப் போக, ஆயனருக்குப்
பிடித்தது போன்ற அஜந்தா பைத்தியம் என்னையும் பிடித்துக் கொண்டது. கதையில்
நேர்முகமாக அஜந்தாவைப் பற்றிச் சொல்லும் கட்டம் வருவதற்கு முன்னால்
அங்குள்ள சித்திரங்களை நேரிலே பார்த்துவிட வேண்டுமென்ற விருப்பமும்
நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. அந்த விருப்பமும் நிறைவேறுவதற்கு
இறைவன் திருவருள் துணை புரிந்தது.

அஜந்தா யாத்திரை பற்றிய கட்டுரையை இந்தப் புத்தகத்தின் அநுபந்தமாகச்
சேர்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், புத்தகம் ஆயிரம்
பக்கங்களுக்கு மேலே போனதும் அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. அது
பயணக் கட்டுரை நூலாகத் தனியே பிரசுரமாகிறது.

ரா. கிருஷ்ணமூர்த்தி
'கல்கி'
சென்னை
5-3-1948







ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 5 Empty 36. வாகீசரின் ஆசி

Post by ரூபன் Wed 4 Nov 2009 - 5:05

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

36. வாகீசரின் ஆசி


அகத்துறைப் பாடல் ஒன்றுக்கு அபிநயம் பிடிக்கும்படி ஆயனர் பணித்ததும்,
நாவுக்கரசரின் திருவாரூர்த் தாண்டகத்திலிருந்து ஓர் அருமையான பாடலைப்
பழம்பஞ்சரம் என்னும் பண்ணிலே அமைத்துச் சிவகாமி பாடினாள்.

ஒரு கன்னிகை முதன் முதலிலே இறைவனுடைய திருநாமத்தைச் செவியுறுகிறாள்.
அப்போது அவளுடைய உள்ளத்தில் அரும்பும் பக்திக் காதலானாது. பின்னர்
படிப்படியாக வளர்ந்து பெருங்கனலாகிக் கொழுந்து விட்டெரிகிறது. இந்த
வரலாற்றை அற்புதமான முறையில் வர்ணிக்கும் அத்திருப்பாடல் பின்வருமாறு:

"முன்னம் அவனுடைய நாமம்கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர்கேட்டாள்
பெம்மான் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றேநீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங்கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே!"

பாடலை ஒரு முறை முழுவதும் பாடிவிட்டு, மீண்டும் ஆரம்பத்திலிருந்து அபிநயம்
பிடிக்கத் தொடங்கினாள் சிவகாமி. அப்போது பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு
இவ்வுலகம் தோன்றிய நாளிலிருந்து பெண் உள்ளத்தில் அரும்பி மலர்ந்த காதல்
உணர்ச்சியே ஓர் உருக்கொண்டு அவர்கள் முன்னால் நிற்பதுபோல் தோன்றியது.
முதன் முதலில் ஓர் இளம் கன்னிகையில் இதயத்தில் காதல் உதயமாகும்போது
அதனுடன் பிறக்கும் நாணங்கலந்த இன்பப்பெருக்கை அவர்கள் கண்முன்னால்
பார்த்தார்கள். காதல் வளர்ந்து வரும் ஆரம்ப தினங்களில் காதலனுடைய பெயரைக்
கேட்கும் போதும், அவனுடைய இருப்பிடம் முதலிய வரலாறுகளை அறியும்போதும்,
அவனுடைய குணாதிசயங்கள் வர்ணிக்கப்படும்போதும் பெண் இதயத்தில் பொங்கித்
ததும்பும் ஆனந்த குதூகலத்தையும் அதனால் அவளுடைய மேனியில் ஏற்படும்
அதிசயமான மாறுதல்களையும் பிரத்தியட்சமாகப் பார்த்தார்கள். நாளடைவில்
அந்தக் காதல் முற்றும்போது, எப்படி அது சித்தப்பிரமையின் சுபாவத்தை
எய்திக் காதலியைப் பித்துப் பிடித்தவளாக்குகிறது என்பதையும், அந்த
நிலையில் காதலுக்காகவும் காதலனுக்காகவும் பெண்ணானவள் எப்பேர்ப்பட்ட
தியாகங்களையெல்லாம் செய்யச் சித்தமாகி விடுகிறாள் என்பதையும் கண்டார்கள்.
பெற்று வளர்த்த அன்னையையும் அப்பனையும் விட்டு விட்டுக் காதலனோடு
புறப்படவும் காதலுக்குத் தடையாக நிற்கும் சமூக ஆசாரங்களையெல்லாம்
புறக்கணித்து ஒதுக்கவும், ஊராரின் நிந்தனைகளையெல்லாம் பொறுத்துக்கொள்ளவும்
எவ்வாறு அந்தப் பெண் மனம் துணிகிறாள் என்பதையும் நேருக்கு நேரே
பார்த்தார்கள்.

வாக்கினால் விவரிக்க முடியாத மேற்சொன்ன உணர்ச்சிகளையெல்லாம் பெண்
உள்ளத்தில் படிப்படியாகக் காதல் முதிர்ந்து வரும் அபூர்வ
பாவங்களையெல்லாம், சிவகாமி அபிநயத்தில் காட்டிவந்தபோது, சபையிலிருந்து
பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, "இது சாமானிய மனித வர்க்கத்துக்குரிய
காதல் அல்ல - அண்ட பகிரண்டங்களுக்கெல்லாம் இறைவனாகிய எம்பெருமானுக்கே உரிய
தெய்வீகக் காதல்!" என்று தோன்றியது.

அவ்வளவுடன் நின்று விடவில்லை. காதல் பரிபூரணமடைவதற்கு இன்னும் ஒருபடி மேலே
போக வேண்டியிருக்கிறது. காதலி தனக்காக இவ்வளவெல்லாம் தியாகங்களைச் செய்ய
சித்தமாயிருந்தும், அந்தத் தெய்வக் காதலன் திருப்தியடையவில்லை. மேலும்
அவளைச் சோதனைக்குள்ளாக்க விரும்பித் திடீரென்று ஒரு நாள் மறைந்து
விடுகிறான். இதனால் சோகக்கடலிலே மூழ்கிய காதலி வெளியுலகை அடியோடு
மறந்துவிடுகிறாள். தன்னையும் மறந்து விருகிறாள். தன் பெயரைக்கூட மறந்து
விடுகிறாள். "உன் பெயர் என்ன?" என்று யாரேனும் கேட்டால், காதலனின்
திருநாமத்தைச் சொல்லுகிறாள்! அத்தகைய மன நிலைமையில் மறுபடியும் தெய்வக்
காதலன் அவள் முன்னால் தோன்றும்போது, காதலியானவள் தான் செய்யாத
குற்றங்களுக்காகத் தன்னை மன்னித்து விடும்படி கோரி அவனுடைய
திருப்பாதங்களில் பணிகிறாள்!

படிப்படியாக மேற்கூறிய உணர்ச்சிகளையெல்லாம் முக பாவத்திலும் கண்களின்
தோற்றத்திலும் அங்கங்களின் அசைவிலும் சைகைகளிலும் காட்டிக் கொண்டு வந்த
சிவகாமி, கடைசியில்,

"தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!"

என்ற அடியைப் பாடிவிட்டுக் கூப்பிய கரங்களுடன் அடியற்ற மரம்போலத் தரையில் விழுந்தாள்!

உடனே சபையில் "ஹா! ஹா ஹா!" என்ற குரல்கள் எழுந்தன. 'சிவகாமி!' என்று
கூவிக்கொண்டு ஆயனர் எழுந்தார். எழுந்து அவள் கிடந்த இடத்தை நோக்கி
விரைந்து ஓடினார். அவரைப் பின்தொடர்ந்து மாமல்லரும் பரபரப்புடன் சென்றார்.

ஆயனர் சிவகாமி கிடந்த இடத்துக்கு அருகில் தரையில் உட்கார்ந்தார். அவருடைய
அங்கங்கலெல்லாம் பதறின. அதைப் பார்த்த மாமல்லர், தரையில் உதிர்ந்து
கிடக்கும் மென்மையான மலர்களை அடியார் ஒருவர் இறைவனுடைய அர்ச்சனைக்காகப்
பொருக்கும் பாவனையுடனே சிவகாமியைத் தமது இரு கரங்களாலும் மிருதுவாக
எடுத்து ஆயனரின் மடியின்மீது இருத்தினார்.

அதற்குள்ளாக அங்கிருந்தவர்களில் பலர் எழுந்து ஓடிவந்து அம்மூவரையும்
சுற்றிக்கொண்டார்கள். சிலர் "தண்ணீர்! தண்ணீர்!" என்றார்கள். சிலர்
"விசிறி! சிவிறி!" என்றார்கள்.

"வழியை விடுங்கள்!" என்று ஒரு குரல் கேட்டது. நாவுக்கரசர் பெருமான் தமது
ஆசனத்திலிருந்து எழுந்து சிவகாமியின் அருகில் வந்தார். ஆயனரின் மடியில்
தலை வைத்து உணர்வின்றிப் படுத்திருந்த சிவகாமியின் முகத்தை அவர் கருணை
ததும்பும் கண்களினால் பார்த்தார். தமது திருக்கரத்தில் கொண்டு வந்திருந்த
திருநீற்றை அவளுடைய நெற்றியில் இட்டார்.

சற்று நேரம் அந்த மண்டபத்தில் ஊசி விழும் சத்தம் கேட்கும்படியான மௌனம் குடிகொண்டிருந்தது.

காலை நேரத்தில் கருங்குவளையின் இதழ் விரிவது போல சிவகாமியின் கண்ணிமைகள்
மெதுவாகத் திறந்தன. திறந்த கண்கள் நாவுக்கரசரின் திருமுகத்தை முதலில்
தரிசித்தன. தந்தையின் மடியில் படுத்தபடியே சிவகாமி இரு கரங்களைக் கூப்பி
அம்மகாபுருஷரைக் கும்பிட்டாள்.

"நீ மகராஜியாய் இருக்க வேணும், குழந்தாய்!" என்று வாகீசப் பெருமான் ஆசி கூறினார்.

அந்த ஆசியைக் கேட்ட சிவகாமியின் பவள நிற இதழ்களில் புன்னகையின் ரேகை
தோன்றியது. அது தாமரை மலர்கள் நிறைந்த தடாகத்தில் செவ்வாம்பல் பூவானது
வெட்கத்தினால் தயங்கித் தயங்கி மடலவிழ்வதுபோல் இருந்தது.

பின்னர் அவளுடைய கருவிழிகள் இரண்டும், எதையோ தேடுவதைப்போல் அங்குமிங்கும்
அலைந்து, கடைசியில் குமார சக்கரவர்த்தியின் திருமுகத்தைப் பார்த்ததும்
அங்கேயே தங்கி விட்டன.

"அடிகள் எனக்குக் கூறிய ஆசி மொழி தங்கள் செவியில் விழுந்ததா?" என்று
அக்கண்கள் மாமல்லரைக் கேட்டதுடன், அவருடைய குற்றங்களையெல்லாம் மறந்து
மீண்டும் அவருடன் சிநேகமாயிருக்கச் சித்தமாயிருப்பதையும் தெரியப்படுத்தின.

மறுபடியும் நாவுக்கரசரின் திருக்குரல் கேட்கவே சிவகாமி பூரண சுய உணர்வு
வந்தவளாய் சட்டென்று எழுந்து நின்றாள். இவ்வளவு பேருக்கு நடுவில் தான்
மூர்ச்சையாகி விழுந்ததை எண்ண அவளுக்குப் பெரிதும் வெட்கமாயிருந்தது.

வாகீசர் கூறினார்: "ஆயனரே! பரதக் கலையின் சிறப்பைக் குறித்து நான்
படித்தும் கேட்டும் அறிந்திருக்கிறேன். ஆனால் அதனுடைய பூரண மகிமையையும்
இன்றுதான் அறிந்தேன். என்னுடைய வாக்கிலே வந்த பாடலில் இவ்வளவு அனுபவமும்
இவ்வளவு உணர்ச்சியும் உண்டென்பதை இதற்கு முன்னால் நான் அறியவில்லை. தங்கள்
குமாரியினால் பரத சாஸ்திரமே பெருமையடையப் போகிறது. உண்மையாகவே அது தெய்வக்
கலையாகப் போகிறது. தில்லைப் பொன்னம்பலத்தில் திருநடனம் புரியும்
இறைவனுக்கே அர்ப்பணமாக வேண்டிய அற்புதக் கலை இது!...

இவ்விதம் சுவாமிகளின் திருவாயிலிருந்து வெளியான அருள் மொழிகளை அனைவரும்
ஆவலுடன் பருகிக் கொண்டிருந்த சமயத்தில் வீதியில் குதிரையொன்று விரைவாக
வரும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் மடத்தின் வாசலில் வந்து நின்றது.
உடனே குமார சக்கரவர்த்தி மடத்தின் வாசற்படியை நோக்கிச் சென்றார்.

வாகீசர் அங்கே சூழ்ந்து நின்றவர்களைப் பார்த்து, "நீங்களும் போகலாம்"
என்று சமிக்ஞையால் கூற, எல்லாரும் தயக்கத்துடன் அங்கிருந்து கலைந்து
சென்றார்கள்.

மாமல்லர் வாசற்படியின் அருகில் நின்று ஏவலாளன் ஒருவனுடன் ஏதோ பேசிவிட்டு,
உள்ளே வந்தார். நாவுக்கரசரை நோக்கிக் கைகூப்பி, "சுவாமி! மதுரையிலிருந்து
தூதர்கள் ஏதோ அவசரச் செய்தியுடன் வந்திருக்கிறார்களாம் நான் விடைபெற்று
கொள்கிறேன்" என்றார்.

"அப்படியே, குமார சக்கரவர்த்தி! தந்தைக்குச் செய்தி அனுப்பினால், அவருடைய
அபிப்பிராயப் படியே நான் தென் தேசத்துக்கு யாத்திரை போவதாகத்
தெரியப்படுத்தவேணும்!" என்றார்.

"ஆகட்டும் சுவாமி" என்று மாமல்லர் கூறி, ஆயனரைப் பார்த்து, "சிற்பியாரே!
துறைமுகம் போய்ச் சேர்ந்ததும், சிவகாமியின் சௌக்கியத்தைப் பற்றிச் செய்தி
அனுப்புங்கள். சில காரணங்களினால் நான் கொஞ்ச காலத்துக்குக் காஞ்சியை
விட்டு வெளிக்கிளம்ப முடியாமலிருக்கிறது" என்றார்.

இவ்விதம் பேசி வருகையில் மாமல்லர் அடிக்கடி சிவகாமியை நோக்கி அவளிடம் நயன
பாஷையினால் விடைபெற்றுக்கொள்ள விரும்பினார். ஆனால், சிவகாமியோ ஆயனரின்
பின்னால் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தாள்.

எனவே, சிவகாமியிடம் சொல்லிக் கொள்ளாமலே மாமல்லர் புறப்பட வேண்டியதாயிற்று.
போகும்போது, நாவுக்கரசர் பெருமான் அங்கிருப்பதைக்கூட அவர் மறந்து 'தட்'
'தட்' என்று அடிவைத்து நடந்து சென்றதானது, ஆத்திரங்கொண்ட அவருடைய மனநிலையை
நன்கு பிரதிபலித்தது.

சற்றுநேரத்துக்கெல்லாம் வாசலில் குதிரைகளின் காலடிச் சத்தமும், ரதத்தின்
சக்கரங்கள் கடகடவென்று உருண்டோ டும் சத்தமும் கேட்டன. சிவகாமிக்கு அப்போது
தன் உயிரானது தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியில் சென்று ரதத்தின்மேல்
ஏறிக் கொண்டு செல்வதுபோல் தோன்றியது.

நாவுக்கரசரிடம் முடிவாக விடை பெற்றுக் கொண்டு ஆயனரும் சிவகாமியும் புறப்பட
வேண்டிய நேரம் வந்த போது, பெருமான் ஆயனருக்குச் சமிக்ஞை செய்து அவரைப்
பின்னால் நிறுத்தினார். முன்னால் சென்ற சிவகாமியின் காதில் விழாதபடி
மெல்லிய குரலில் பின்வருமாறு கூறினார்:

"ஆயனரே! உமது புதல்விக்குக் கிடைத்திருக்கும் கலை அற்புதக் கலை; தெய்வீகக்
கலை. அதனாலேயே அவளைக் குறித்து என் மனத்தில் கவலை உண்டாகிறது. இத்தகைய
அபூர்வமான மேதாவிலாசத்தை இறைவன் யாருக்கு அருளுகிறாரோ, அவர்களைக் கடுமையான
சோதனைகளுக்கு உள்ளாக்குவதும் உண்டு. உமக்குத்தான் தெரியுமே? இந்த எளியேனை
ஆட்கொள்வதற்கு முன்னால் இறைவன் எத்தனை எத்தனை சோதனைகளுக்கெல்லாம்
ஆளாக்கினார்..."

சற்று முன்பு வரையில் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த ஆயனர் மேற்கூறிய
மொழிகளைக் கேட்டுத் தலையில் இடி விழுந்தவர் போல் பதறி, "சுவாமி! இதென்ன
சொல்கிறீர்கள்? மகா புருஷராகிய தாங்கள் எங்கே? அறியாப் பெண்ணாகிய சிவகாமி
எங்கே? அவளுக்கு ஏன் சோதனைகள் வரவேண்டும்? தங்களுடைய திருவாக்கில் இப்படி
வந்துவிட்டதே! என்றார்.

"ஆயனரே! இரைந்து பேச வேண்டாம் சிவகாமிக்கு இது தெரிய வேண்டியதில்லை. ஆனால்
நீர் முன் ஜாக்கிரதையாக இருப்பது நலம். உமது அருமைக் குமாரியைப்
பார்க்கும்போது அவளுக்கு ஏதோ பெரிய துக்கம் நேரப்போகிறது என்று என் உள்ளம்
சொல்லுகிறது. ஆஹா! இத்தகைய வருங்கால திருஷ்டியை இறைவன் எதற்காக எனக்கு
அளித்தார்!" என்று கூறி வருகையில் நாவுக்கரசரின் கண்களில் கண்ணீர்
மல்கிற்று.

"ஆனாலும் நீர் தைரியமாக இருக்கவேண்டும். இந்த உலகில் பணி செய்து கிடப்பதே
நமது கடன். நம்மைத் தாங்கும் கடன் கருணை வடிவான இறைவனுடையது. உமது பணியைச்
செய்து கொண்டு நீர் நிம்மதியாக இரும். எத்தனை சோதனைகள் நேர்ந்தாலும் மனம்
கலங்க வேண்டாம். அன்பர்களுக்கு முதலில் எவ்வளவு துன்பங்களை அளித்தாலும்
முடிவில் இறைவன் ஆட்கொள்வார்."

இவ்விதம் கூறிவிட்டு நாவுக்கரசர் பெருமான் மடத்துக்குள்ளே சென்றார்.
அன்று மாலை அந்தத் திருமடத்துக்குள்ளே பிரவேசித்தபோது உள்ளம் நிறைந்த
குதூகலத்துடன் பிரவேசித்த ஆயனச் சிற்பியாரோ, இப்போது இதயத்திலே பெரியதொரு
பாரத்துடன் வெளியேறினார். அபூர்வமான வேலைப்பாடுகளுடன் அவர் சிலை
வடிவமாக்கிக் கொண்டிருந்த பெரியதொரு பாறாங்கல்லைத் தூக்கி அவருடைய
இதயத்தின் மேலே யாரோ வைத்துவிட்டது போலிருந்தது.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 5 Empty 37. கண்ணபிரான்

Post by ரூபன் Wed 4 Nov 2009 - 5:06

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

37. கண்ணபிரான்


முன் அத்தியாயத்தில் கூறியபடி, இதயத்தில் பெரிய பாரத்துடனே மடத்தின்
வாசற்பக்கம் வந்து ஆயனர், தம் உள்ள நிலையை வெளிக்குக் காட்டாமல்
சமாளித்துக் கொண்டு, சிவகாமியைப் பார்த்து, "குழந்தாய்! இப்பொழுதே நாம்
ஊருக்குத் திரும்பிவிடலாமல்லவா?" என்று கேட்டார்.

"கமலியைப் பார்த்துவிட்டுக் காலையில் போகலாம் அப்பா!" என்று சிவகாமி
மறுமொழி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கடகடவென்ற சத்தத்துடன் இரட்டைக்
குதிரை பூட்டிய ரதம் ஒன்று அங்கே நின்றது. அதை ஓட்டி வந்த சாரதி ரதத்தின்
முன் தட்டிலிருந்து குதித்து வந்து, மடத்து வாசலில் ஆயனரும் சிவகாமியும்
நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தான். அவன் நல்ல திடகாத்திர தேகமுடையவன்
பிராயம் இருபத்தைந்து இருக்கும்.

"ஐயா! இங்கே மாமல்லபுரத்திலிருந்து ஆயனச் சிற்பியாரும் அவருடைய மகள்
சிவகாமி அம்மையும் வந்திருக்கிறார்களாமே, நீங்கள் கண்டதுண்டோ ?" என்று
அவன் கேட்டான்.

"ஓகோ! கண்ணபிரானா? எங்களை யார் என்று தெரியவில்லையா, உனக்கு?" என்றார் ஆயனர்.

"அதுதானே தெரியவில்லை? இந்தச் சப்பை மூக்கையும் இந்த அகலக் காதையும் எங்கே
பார்த்திருக்கிறேன்? நினைவு வரவில்லையே?" என்று கண்ணபிரான் தன் தலையில்
ஒரு குட்டுக் குட்டிக் கொண்டு யோசித்தான்.

"என் அப்பனே! மண்டையை உடைத்துக் கொண்டு எங்கள் மேல் பழியைப் போடாதே! கமலி
அப்புறம் எங்களை இலேசில் விடமாட்டாள். நீ தேடி வந்த ஆயனச் சிற்பியும்
சிவகாமியும் நாங்கள்தான்" என்றார் ஆயனர்.

"அடாடாடா! இதை முன்னாலேயே சொல்லியிருக்கக் கூடாதா? எனக்கும் சந்தேகமாய்த்
தானிருந்தது. ஆனால் 'கண்ணாற் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய்' தீர
விசாரிப்பதே மெய் என்று கும்பகர்ணனுக்கு ஜாம்பவான் சொன்ன பிரகாரம்..
இருக்கட்டும். அப்படியென்றால், நீங்கள் தான் ஆயனச் சிற்பியாரும் அவருடைய
மகள் சிவகாமியுமாக்கும். ஆனால், உங்களில் ஆயனச் சிற்பி யார்? அவருடைய மகள்
யார்?" என்று விகடகவியான அந்த ரதசாரதி கேட்டு விட்டு, அந்திமாலையின்
மங்கிய வெளிச்சத்தில் அவ்விருவர் முகங்களையும் மாறி மாறி உற்றுப்
பார்த்தான்.

சிவகாமி கலகலவென்று நகைத்துவிட்டு, "அண்ணா! நான்தான் சிவகாமி. இவர் என்
அப்பா. நாம் நிற்பது பூலோகம். மேலே இருப்பது ஆகாசம். உங்கள் பெயர்
கண்ணபிரான். என் அக்கா கமலி. இப்போது எல்லாம் ஞாபகம் வந்ததா? அக்கா
சௌக்கியமா? இன்று இராத்திரி உங்கள் வீட்டுக்கு வருவதாக எண்ணியிருந்தோம்"
என்றாள்.

"ஓஹோ! அப்படியா? கும்பிடப்போன தெய்வம் விழுந்தடித்துக் குறுக்கே ஓடிவந்த
கதையாக அல்லவா இருக்கிறது? நீங்கள் எங்கள் வீட்டுக்கு வருவதாக
இருந்தீர்களா?"

"ஆமாம்; வரலாமா? கூடாதா?"

"ஒருவிதமாக யோசித்தால், வரலாம். இன்னொரு விதமாக யோசித்தால் வரக்கூடாது."

"அப்பா! நாம் ஊருக்கே போகலாம். புறப்படுங்கள்!" என்று கோபக் குரலில் சிவகாமி கூறினாள்.

"அம்மா! தாயே! அப்படிச் சொல்லக்கூடாது கட்டாயம் வரவேண்டும். நான்
இன்றைக்கு வீட்டைவிட்டுக் கிளம்பிய போது கமலி என்ன சொன்னாள் தெரியுமா?
'இதோ பார்! இன்றைக்கு நாவுக்கரசர் மடாலயத்துக்கு ஆயனச் சிற்பியார்
வருகிறாராம். அவருடன் என்னுடைய தோழி சிவகாமியும் வந்தாலும் வருவாள்.
இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டுதான் இராத்திரி நீ வீட்டுக்குத் திரும்பி
வர வேண்டும்' என்றாள். நான் என்ன சொன்னேன் தெரியுமா? 'அவர்கள் பெரிய
மனுஷாள், கமலி! நம்மைப் போன்ற ஏழைகள் வீட்டுக்கு வருவார்களா? வந்தால்தான்
திரும்பிப் போவார்களா?' என்றேன். அதற்குக் கமலி 'நான் சாகக் கிடக்கிறேன்
என்று சொல்லி அழைத்துவா!' என்றாள்..."

"அடாடா! கமலிக்கு ஏதாவது உடம்பு அசௌக்கியமா, என்ன?" என்று ஆயனர் கவலையுடன் கேட்டார்.

"ஆம், ஐயா! ஒரு வருஷமாகக் கமலி அவளுடைய தோழியைப் பார்க்காமல்
கவலைப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிராணனை விட்டுக் கொண்டிருக்கிறாள்.
முக்கால் பிராணன் ஏற்கனவே போய்விட்டது. மீதியும் போவதற்கு நீங்கள் வந்தால்
நல்லது."

"அப்படியானால், உடனே கிளம்பலாம் அதற்குள்ளே இங்கே ஜனக்கூட்டம் கூடிவிட்டது" என்றாள் சிவகாமி.

உண்மையிலே அங்கே கூட்டம் கூடிவிட்டது. நகரத்தில் அந்த நெருக்கடியான
பகுதியில் ஆயனரும் சிவகாமியும் அரண்மனை ரத சாரதியுடன்
பேசிக்கொண்டிருக்கும் காட்சி ஜனக்கூட்டத்தைக் கவர்ந்து இழுத்ததில்
ஆச்சரியம் என்ன? ஆயனரையும் சிவகாமியையும் கண்ணபிரான் தான் கொண்டு
வந்திருந்த ரதத்தில் ஏறிக்கொள்ளும்படிச் செய்தான். காஞ்சி மாநகரின்
விசாலமான தேரோடும் வீதிகளில் இரண்டு குதிரை பூட்டிய அந்த அழகிய அரண்மனை
ரதம் பல்லவ ராஜ்யத்தின் சிறந்த ரத சாரதியினால் ஓட்டப்பட்டு விரைந்து
சென்றது.

ரதம் போய்க் கொண்டிருக்கையில் சிவகாமி "அண்ணா! உங்கள் வீட்டுக்கு
வருகிறோம் என்று நான் சொன்னதற்கு "இன்னொரு விதத்தில் யோசித்தால்
வரக்கூடாது என்று சொன்னீர்களே! அது என்ன?" என்று கேட்டாள்.

"தங்கச்சி! மடத்திலிருந்து குமார சக்கரவர்த்தியை அழைத்துப் போனேனல்லவா?
அரண்மனை வாசலில் அவர் இறங்கியதும் என்னைப் பார்த்து, 'கண்ணா! ரதத்தை
ஓட்டிக் கொண்டு மடத்துக்குப் போ! அங்கே ஆயனரும் அவர் மகளும் இருப்பார்கள்.
அவர்களை ரதத்தில் ஏற்றிக்கொண்டு போய் மாமல்லபுரத்தில் விட்டுவிட்டு வா!
அவர்கள் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காதே!' என்று கட்டளையிட்டார்.
குமார சக்கரவர்த்தி அவ்விதம் கட்டளையிட்டிருக்கும்போது, நம்முடைய
வீட்டுக்கு அழைத்துப் போகலாமா என்று யோசித்தேன்" என்றான் கண்ணபிரான்.

"சுற்றி வளைத்துப் பீடிகை போடாமல் உங்களால் ஒன்றும் சொல்ல முடியாதே?" என்று சிவகாமி கேட்டாள்.

"முடியாது தங்கச்சி, முடியாது! அதற்குக் காரணமும் உண்டு. முன்னொரு காலத்தில் நான் சின்னக் குழந்தையாயிருந்தபோது..."

"நிறுத்துங்கள்! நான் அதைக் கேட்கவில்லை. அவசரமாகக் குமார சக்கரவர்த்தி
மடத்திலிருந்து போனாரே, ஏதாவது விசேஷமான செய்தி உண்டோ என்று கேட்டேன்."

"மதுரையிலிருந்து தூதுவர்கள் வந்திருக்கிறார்கள்."

மதுரையிலிருந்து தூதர்கள் என்றதும் சிவகாமிக்குத்தான் முன்னம்
கேள்விப்பட்ட திருமணத் தூது விஷயம் ஞாபகம் வந்தது. எனவே, "தூதர்கள் என்ன
செய்தி கொண்டு வந்தார்கள்?" என்று கவலை தொனித்த குரலில் கேட்டாள்.

"அந்த மாதிரி இராஜாங்க விஷயங்களையெல்லாம் நான் கவனிப்பதில்லை, தங்கச்சி!" என்றான் கண்ணபிரான்.

அதைக் கேட்ட ஆயனர், "ரொம்ப நல்ல காரியம், தம்பி! அரண்மனைச் சேவகத்தில்
வெகு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். நமக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களைக்
காதிலேயே போட்டுக் கொள்ளக்கூடாது" என்றார்.

அப்போது ரதம் தெற்கு ராஜவீதியில் அரண்மனையின் முன் வாசலைத் தாண்டிப்
போய்க் கொண்டிருந்தது. வீதியின் ஒரு பக்கத்தை முழுவதும் வியாபித்திருந்த
அரண்மனையின் வெளி மதிலையும், முன் வாசல் கோபுரத்தையும், அதைக் காவல்
புரிந்த வீரர்களையும் உள்ளே தெரிந்த நெடிய பெரிய தாவள்யமான சுவர்களையும்,
படிப்படியாகப் பின்னால் உயர்ந்து கொண்டுபோன உப்பரிகை மாடங்களையும் சிவகாமி
பார்த்தாள். தன்னையும் தன்னுடைய இதயத்தைக் கவர்ந்த சுகுமாரரையும்
பிரித்துக் கொண்டு இத்தனை மதில் சுவர்களும் மாடகூடங்களும் தடையாக
நிற்கின்றன என்பதை எண்ணி ஒரு நெடிய பெருமூச்சு விட்டாள்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 5 Empty 38. கமலி

Post by ரூபன் Wed 4 Nov 2009 - 5:06

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

38. கமலி


காஞ்சி மாநகரில் சக்கரவர்த்தியின் பிரதான அரண்மனைக்குப் பின்புறத்தில்
விஸ்தாரமான பூந்தோட்டம் இருந்தது. பூந்தோட்டத்தின்
பின்புறமதிற்சுவரையொட்டிச் சில சிறு கட்டிடங்கள் இருந்தன. அவற்றில் சில
குதிரை லாயங்கள், சில ரதங்களை நிறுத்தும் கொட்டடிகள், மற்றவை ரதசாரதிகளும்
தோட்டக்காரர்களும் வசித்த வீடுகள்.

அந்த வீடுகளில் ஒன்றுக்கு முன்னால், கண்ணபிரான் ஓட்டிக்கொண்டு வந்த ரதம்
நின்றது. ரதத்தின் சத்தத்தைக் கேட்டு, வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு பெண்
குதூகலமாகக் குதித்துக் கொண்டு ஓடி வந்தாள்.

"கமலி! யாரை அழைத்து வந்திருக்கிறேன், பார்!" என்று சொல்லிக்கொண்டே கண்ணபிரான் ரதத்திலிருந்து குதித்தான்.

அதே சமயத்தில் ரதத்திலிருந்து சிவகாமி இறங்குவதைப் பார்த்த கமலி, ஒரே
பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று சிவகாமியை ஆர்வத்துடன் கட்டிக்கொண்டாள்.

அப்போது வீட்டிற்குள்ளேயிருந்து ஒரு பெரியவர் வந்தார். "அப்பா! யார் வந்திருக்கிறார் பாருங்கள்!" என்றான் கண்ணபிரான்.

அந்தப் பெரியவர் உற்றுப் பார்த்துவிட்டு, "வாருங்கள், ஐயா!" என்று
சொல்லிக்கொண்டு ஆயனரின் அருகில் சென்றார். பெரியவரும் ஆயனரும்
பேசிக்கொண்டே வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். கமலியும் சிவகாமியும்
உள்ளே போனார்கள்.

சிவகாமியும் கமலியும் குழந்தைப்பிராயத்திலிருந்து தோழிகள். ஆயனர்
காஞ்சியில் இருந்த காலத்தில் அவருடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் கமலியின்
பெற்றோர்கள் வசித்தார்கள். சிவகாமி குழந்தையாயிருந்தபோதே, அவளைக்
காட்டிலும் ஒன்றரை வயது மூத்தவளான கமலி சிவகாமியைத் தன் மடியில்
வைத்துக்கொண்டு, "தங்கச்சி!" என்று அருமையாக அழைத்துச் சீராட்டுவாள்.
குழந்தை சிவகாமியும், "அக்கா! அக்கா!" என்று மழலைச் சொல்லில் குழறுவாள்.

இவ்வாறு ஆரம்பித்த அக்குழந்தைகளின் சிநேகமும் நாளுக்கு நாள் வளர்ந்து
வந்தது. ஆயனர் காட்டுக்குள்ளே சென்று வீடு கட்டிக்கொண்டு வசிக்கத்
தொடங்கிய பிறகு கமலி அடிக்கடி அங்கு வந்து மாதக்கணக்கில் தங்கியிருப்பாள்.
சிவகாமி ஆட்டம் பயிலும் போதெல்லாம் கமலி அவள் எதிரில் இருந்து இமை
கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பாள். அவளுடைய ஆட்டத் திறமையைப்
பாராட்டுவாள். "என் தங்கச்சிக்கு இணை ஈரேழு பதினாலு உலகத்திலும்
கிடையாது!" என்பாள். ஆயனருக்கு அடுத்தபடியாகச் சிவகாமிக்கு ஆட்டக் கலையில்
ஊக்கமளித்தவள் கமலி என்று தான் சொல்லவேண்டும்.

கமலியின் தகப்பனார் காஞ்சியில் பெயர்பெற்ற குதிரை வியாபாரி. அரேபியா
முதலான வெளி தேசங்களிலிருந்து அவர் குதிரைகள் தருவிப்பார்.
மாமல்லபுரத்துத் துறைமுகத்தில் கப்பலில் வந்து குதிரைகள் இறங்கும்.
அவற்றைக் காஞ்சிக்குக் கொண்டு வருவார். முதலில் அரண்மனைக் குதிரைலாயத்தின்
தலைவரும் பல்லவ சைனியத்தின் குதிரைப் படைத் தலைவரும் வந்து, புதிதாகத்
தருவிக்கப்பட்ட குதிரைகளைப் பார்ப்பார்கள். அவர்கள் தங்களுக்கு
வேண்டியவற்றை வாங்கிக்கொண்டதுபோக மற்றக் குதிரைகளைத்தான் பொது ஜனங்களுக்கு
விற்கலாம்.

இதன் காரணமாக, அரண்மனைக் குதிரை லாயத்தின் தலைவர் அடிக்கடி கமலியின்
தந்தையைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்கு வருவதுண்டு. சில சமயம்
அவருடன் அவருடைய மகனும் வருவான். அந்த வாலிபன் பெயர்தான் கண்ணபிரான்.
தந்தைமார்கள் இருவரும் குதிரைப் பரிவர்த்தனை விஷயமாகப் பேசிக்
கொண்டிருக்கையில், மகனுக்கும் மகளுக்கும் இடையே இருதய பரிவர்த்தனை நடந்து
கொண்டிருந்தது. இரு குடும்பத்தாருக்கும் விஷயம் தெரிந்தபோது,
கண்ணபிரானுக்கும் கமலிக்கும் கல்யாணம் செய்து வைத்தார்கள்.

இது நடந்து வருஷம் ஒன்றரை ஆயிற்று. இந்த ஒன்றரை வருஷமும் சிவகாமியும்
கமலியும் சந்திக்கவில்லை என்றாலும், அவர்கள் ஒருவரை ஒருவர் நினையாத நாள்
கிடையாது.

இரவு உணவு அருந்திய பின்னர், ஆயனரும் அரண்மனையின் அசுவபாலரும் வாசல்
திண்ணையில் காற்றோட்டமாகப் படுத்துக் கொண்டு யுத்த நிலைமையைப் பற்றிப்
பேசத் தொடங்கினார்கள். வீட்டுக்குள்ளே அரண்மனைப் பூந்தோட்டத்தை
அடுத்திருந்த அறையில் சிவகாமியும் கமலியும் படுத்துப் பேசிக்
கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் யுத்தத்தைப் பற்றிப் பேசவில்லை.
கமலியின் இல்வாழ்க்கைதான் அவர்கள் சம்பாஷணையில் முக்கிய விஷயமாக இருந்தது.
இடையிடையே 'கலீர்' 'கலீர்' என்று அவர்கள் குதூகலமாகச் சிரிக்கும் சத்தம்
கேட்டது.

இரவு ஒன்றரை ஜாமத்துக்குமேல் ஆனபோது, வாசல் திண்ணையிலிருந்து ஆயனர்,
"அம்மா! சிவகாமி! உதயத்திற்கு முன்னால் நாம் புறப்பட வேண்டும் பேசியது
போதும் தூங்கு!' என்றார். கமலியும் சிவகாமியும் உடனே கண்ணை மூடிக்கொண்டு
தூங்குவதற்குப் பிரயத்தனம் செய்தார்கள். சிறிது நேரம் ஆனதும், சிவகாமி
தூங்கி விட்டதாக எண்ணிக்கொண்டு கமலி சத்தம் செய்யாமல் எழுந்திருந்து அந்த
அறையின் ஒரு பக்கத்துக் கதவைத் திறந்துகொண்டு அடுத்த அறைக்குள் சென்றாள்.

சிவகாமி கண்களை மூடிக்கொண்டிருந்தாளே தவிர உண்மையில் தூங்கவில்லை. அவளுடைய
உள்ளத்தில் எத்தனை எத்தனையோ எண்ணங்கள் அலைமேல் அலை எறிந்து தோன்றிக்
கொண்டிருந்தன.

கமலிக்குக் கண்ணபிரான்மேல் காதல் உண்டான நாளிலிருந்து அவள் தன்னுடைய
அந்தரங்கத்தையெல்லாம் சிவகாமியிடம் அடிக்கடி சொல்வதுண்டு.
ஆரம்பத்திலிருந்தே கமலியின் காதல் ஆனந்தமாயிருந்தது. எவ்விதத் துக்கமோ
வேதனையோ அவள் மனத்தில் ஏற்பட்டதில்லை. அந்த நாட்களில் அவளுடைய பேச்சு ஒரே
குதூகலமாகவும் எக்களிப்பாகவுமே இருந்து வந்தது.

கல்யாணத்திற்குப் பிறகு அந்தத் தம்பதிகளின் இல்வாழ்க்கையும் அவ்விதமே
குதூகலமாயிருக்கிறதென்பதை இப்போது சிவகாமி தெரிந்துகொண்டாள். ஆனால்,
தன்னுடைய காதல் மட்டும் ஏன் இவ்வளவு வித்தியாசமாக இருக்கவேண்டும்? அதில்
எத்தனை வேதனை? எத்தனை ஆத்திரம்? எத்தனை கோபதாபம்? கமலியின் குதூகலமான
காதலுக்கும், தன்னுடைய வேதனை மயமான காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை
எண்ணிப்பார்க்கப் பார்க்க தனக்குத் தகுதியில்லாத இடத்தில் காதலைச்
செலுத்தியது தான் தன்னுடைய துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்று
சிவகாமிக்குத் தோன்றியது.

அவரோ பெரிய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்துக்கு உரியவர். நாமோ கல்லில்
உளியினால் வேலை செய்யும் சிற்பியின் மகள். அவருடைய காதலுக்கு நாம்
ஆசைப்படுவது பெரிய பிசகுதான். ஆனால் இந்தப் பிசகுக்குக் காரணம் யார்? இந்த
ஏழைச் சிற்பியின் மகளைத் தேடிக்கொண்டு அவர் தானே வந்தார்? ஒரு
கவலையுமின்றிக் காட்டில் துள்ளி விளையாடும் மானைப்போல் குதூகலமாக
ஆடிப்பாடிக் கொண்டிருந்த அபலைப் பெண்ணின் உள்ளத்தில் அவர் தானே ஆசைத்தீயை
மூட்டினார்? ஆஹா! அந்த ஆசையானது இப்போது இப்படிப் பெருநெருப்பாய் மூண்டு
விட்டதே? உடம்பையும் உள்ளத்தையும் இப்படித் தகிக்கின்றதே?

சற்று நேரம் புரண்டு பார்த்தும் தூக்கம் வராமற்போகவே, சிவகாமி
படுக்கையை விட்டு எழுந்தாள். அந்த அறையின் பின்புறச் சுவரிலிருந்த
பலகணியின் மாடத்தில் உட்கார்ந்தாள். அவள் எதிர்பார்த்தபடியே பலகணியின்
வழியாகப் பங்குனி மாதத்து இளந்தென்றல் ஜிலுஜிலுவென்று வந்து
கொண்டிருந்தது. அது சும்மா வரவில்லை அரண்மனைப் பூந்தோட்டத்திலிருந்த
செண்பக மரங்களில் நுழைந்தும், மல்லிகைச் செடிகளின் மீது தவழ்ந்தும் அந்த
மலர்களின் இன்ப நறுமணத்தை அளாவிக் கொண்டு வந்தது. அவ்விதம் செண்பகமும்
மல்லிகையும் கலந்து உண்டான சுகந்தமானது சிவகாமியின் உள்ளத்தில் ஏதோ
தெளிவில்லாத பழைய ஞாபகங்களை உண்டாக்கிற்று. எத்தனை எத்தனையோ ஆண்டுகளுக்கு
முன்னால் ஜன்ம ஜன்மாந்தரங்களில் இதே விதமான நறுமணத்தை அவள் நுகர்ந்தது
போலவும், அந்தக் காலங்களிலும் இதே விதமான இன்ப வேதனை அவள் மனத்தில்
குடிகொண்டிருந்தது போலவும், மங்கிய நினைவுகள் உண்டாயின. தனது அன்பைக்
கவர்ந்து உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஆருயிர்க் காதலன் தனக்கு வெகு
சமீபத்தில் இருந்தும் அவனை அடைய முடியாதிருப்பது போலவும், இருவருக்கும்
இடையில் இன்னதென்று தெரியாத இடையூறுகள் முளைத்துப் பெரிய கரிய நிழல்
உருவங்கள் எடுத்து நிற்பதுபோலவும் மனத்தில் பிரமைகள் உண்டாயின.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 5 Empty 39. கமலியின் மனோரதம்

Post by ரூபன் Wed 4 Nov 2009 - 5:07

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

39. கமலியின் மனோரதம்


விவரிக்க முடியாத இன்பத்தையும் வேதனையையும் ஒருங்கே தந்த மேற்கூறிய நிழல்
நினைவுகளைப் பொறுக்க முடியாமல், பின்புறக் கதவை ஓசைப்படாமல் மெதுவாய்த்
திறந்து கொண்டு பூந்தோட்டத்துக்குள் பிரவேசித்தாள். அப்போது இரவில்
மூன்றாம் ஜாமம் நடந்துகொண்டிருந்தது. பிறைச் சந்திரன் விரித்த இளம்
நிலவின் மோகன ஒளியில் அந்தப் பூந்தோட்டம் கனவு உலகத்தில் காணும் ஒரு
காட்சி போல் தென்பட்டது.

பூந்தோட்டத்தில் உலாவி வர எண்ணிப் புறப்பட்ட சிவகாமி, வீட்டுச்
சுவரோரமாகச் சற்றுத் தூரம் சென்றபோது, பேச்சுக் குரல் கேட்டுத்
திடுக்கிட்டு நின்றாள். கமலியும் கண்ணபிரானும்தான்
பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருந்த அறையின் பின்புறப் பலகணி வழியாக
அவர்களுடைய பேச்சுத் தெளிவாகக் கேட்டது. அந்தப் பக்கம் போகமல்
திரும்பிவிடவேண்டுமென்று எண்ணிய சிவகாமியின் செவியில் "மாமல்லர்" "குமார
சக்கரவர்த்தி" என்ற வார்த்தைகள் விழுந்தன. பிறகு அவளுடைய கால்கள்
திரும்பிச் செல்ல மறுத்துவிட்டன. பலகணியின் அருகில் சுவர் ஓரமாக நின்று
அவர்கள் பேசுவதைக் கேட்டாள்.

"மாமல்லருக்குப் பெண் கொடுக்கிறேன் என்று பாண்டிய மன்னர் தூது
அனுப்பியதில் என்ன ஆச்சரியம்? பூலோகத்திலுள்ள ராஜ ராஜாக்கள் எல்லாம் நான்
முந்தி, நீ முந்தி என்று அவருக்குப் பெண் கொடுக்கப்
போட்டியிடமாட்டார்களா?" என்றாள் கமலி.

"மாமல்லருக்குச் சீக்கிரத்தில் கல்யாணம் செய்துவைக்க வேண்டுமென்று
மகாராணிக்கு ஆசை. மூன்று தேசத்து ராஜாக்களுக்குத் திருமணத் தூது அனுப்ப
வேண்டுமென்று ஏற்பாடு செய்திருந்தார். அதற்குள்ளே இந்த யுத்தம் வந்து
விட்டதால் அது தடைப்பட்டுப் போயிற்று. இப்போது பாண்டிய ராஜாவே தூது
அனுப்பியிருப்பதில் மகாராணிக்கு அசாத்திய சந்தோஷம்!" என்றான் கண்ணபிரான்.

"சரி; அப்புறம் என்ன நடந்தது?" என்று கமலி கேட்டாள்.

"அரண்மனையில் மாமல்லரை விட்டேன் உடனே, தாயாருக்கும் பிள்ளைக்கும் சண்டை ஆரம்பமாகிவிட்டது!.."

"சண்டையா! எதற்காக?"

"குமார சக்கரவர்த்தியிடம் 'கல்யாணம்' என்று யாராவது சொன்னாலே, அவருக்குப்
பிரமாதமான கோபம் வந்து விடுகிறது. 'இதற்குத்தானா இவ்வளவு அவசரமாகக்
கூப்பிட்டு அனுப்பினீர்கள்? போர்க்களத்திலிருந்துதான் ஏதோ செய்தி
வந்திருக்கிறதாக்கும் என்று நினைத்தல்லவா ஓடி வந்தேன்?' என்று அவர்
மகாராணியிடம் கோபமாகப் பேசினார்...! கமலி! உனக்கு ஒரு இரகசியம்
சொல்லட்டுமா? மிகவும் முக்கியமான இரகசியம் கேட்டால் பிரமித்துப் போவாய்!"
என்றான் கண்ணன்.

"பெண்பிள்ளைகளிடம் இரகசியம் சொல்லக் கூடாது என்று உனக்குத் தெரியாதா, கண்ணா?" என்றாள் கமலி.

"ஓஹோ! நீ பெண்பிள்ளையா? மறந்து போய்விட்டேன்!" என்று கண்ணன் நகைத்துக் கொண்டே கூறினான்.

"ஆமாம்! நீ ஆண்பிள்ளை என்பதையும் மறந்து போய் விடுவாய்! யுத்தம் வருகிறதல்லவா?"

"யுத்தம் வரட்டும்! அப்போது தெரிகிறது யார் ஆண்பிள்ளை, யார்
பெண்பிள்ளையென்று! நீ என் காலில் விழுந்து, 'கண்ணா! யுத்தத்துக்குப்
போகாதே!' என்று கதறப் போகிறாய். நான் உன்னை உதறித் தள்ளிவிட்டுப் போகப்
போகிறேன்...."

"அப்படியா நினைத்துக்கொண்டிருக்கிறாய் உன் மனத்தில்? யுத்தம் கிட்டி
வரும்போது நீ போகாவிட்டால் நானே உன்னைக் கழுத்தைப் பிடித்துத்
தள்ளமாட்டேனா?... கல்யாணம் ஆன பிறகு நீ இப்படிப் பயங்கொள்ளியாகப் போனதைப்
பார்த்துவிட்டுத்தான் குமாரச் சக்கரவர்த்தி 'கல்யாணம்' என்றாலே எரிந்து
விழுகிறார் போலிருக்கிறது!"

"இப்படித்தானே நீ எண்ணிக்கொண்டிருக்கிறாய்? யுத்தம் வந்திருக்கிறபடியால்
குமார சக்கரவர்த்தி கல்யாணம் வேண்டாம் என்கிறார் என்றுதான் எல்லோருமே
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிசகு கமலி, பெரும் பிசகு!"

"எது பிசகு, கண்ணா?"

"எல்லாரும் நினைத்துக்கொண்டிருப்பது பிசகு. மாமல்லர் கல்யாணப் பேச்சை
வெறுப்பதற்கு வேறு காரணம் இருக்கிறது. அது பெரிய இரகசியம் அதிலும் உன்
தங்கச்சி சிவகாமியைப் பற்றிய இரகசியம் கமலி!"

"என்ன? என்ன? என் தங்கச்சியைப்பற்றி எனக்குத் தெரியாத இரகசியம் என்ன இருக்கிறது? ஏதாவது இசை கேடாகச் சொன்னாயோ, பார்த்துக்கொள்!"

"இசைக்கேடு ஒன்றுமில்லை. பெருமையான விஷயந்தான்!... சொன்னால், எனக்கு என்ன தருகிறாய்?"

"சொல்லிவிட்டுக் கேள்! பொருளைப் பார்த்து விட்டல்லவா விலையைத் தீர்மானிக்க வேண்டும்?" என்றாள் கமலி.

"அப்புறம் ஏமாற்றக்கூடாது, தெரியுமா? பல்லவ சாம்ராஜ்யத்தின் குமார
சக்கரவர்த்தி, வீரத்தில் அர்ஜுனனையும், அழகில் மன்மதனையும் ரதம்
ஓட்டுவதில் கண்ணபிரானையும் ஒத்தவரான மாமல்ல நரசிம்மர், உன்னுடைய தங்கச்சி
சிவகாமியின்மேல் காதல் கொண்டிருக்கிறார், கமலி!"

"ஆ!" என்னும் சத்தம் மட்டுந்தான் கமலியின் வாயிலிருந்து வந்தது. அவள் ஆச்சரியத்தினால் திகைத்து விட்டாள்.

வெளியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த சிவகாமியின் நெஞ்சில் அந்த 'ஆ!'
சத்தமானது கூரிய அம்பைப்போல் புகுந்தது. தன்னிடம் இவ்வளவு ஆசையும்
நம்பிக்கையும் வைத்துள்ள அருமைத் தோழியிடம் தனது அந்தரங்கத்தை வெளியிடாமல்
இத்தனை நாளும் ஒளித்து வைத்திருந்தது பற்றி அவள் வெட்கினாள். அறைக்குள்ளே
சம்பாஷணை மேலும் தொடர்ந்து நடந்தது.

"கமலி! நான் சொன்ன செய்தி உனக்கு அதிசயமாயிருக்கிறதல்லவா?" என்று கண்ணபிரான் கேட்டான்.

"அதிசயம் என்ன? நம்முடைய குமார சக்கரவர்த்தி புத்திசாலி என்றுதான்
அடிக்கடி நான் சொல்லியிருக்கிறேன்? அதனால்தான் அவருக்கு என் தங்கச்சியின்
மேல் மனம் சென்றது" என்று கமலி சமத்காரமாக விடை சொன்னாள்.

"ஓஹோ! அப்படியா? நீயும் உன் தங்கையும் சேர்ந்து பேசிக்கொண்டுதான் இந்த
வேலை செய்தீர்கள் போலிருக்கிறது! உன்னுடைய வலையில் என்னை நீ போட்டுக்
கொண்டாய்! உன் தங்கச்சி மாமல்லரையே வலை போட்டுப் பிடித்துவிட்டாள்!"

"என்ன சொன்னாய்?" என்று கமலி கம்பீரமாகக் கேட்டு விட்டு மேலும்
சொல்லம்புகளைப் போட்டாள்.. "நானா உன்னைத் தேடி வந்து என்னுடைய வலையில்
போட்டுக் கொண்டேன்? நானா வீட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் உன்னைத்
தொடர்ந்து வந்து கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, 'கண்ணே! பெண்ணே!
நீ கருணை செய்யாவிட்டால் நான் உயிரை விடுவேன்!' என்று கதறினேன்? நானா
'என்னைக் கல்யாணம் செய்துகொள் என்று கெஞ்சினேன்?..."

"இல்லை, கமலி, இல்லை! நீ உன்னுடைய கண்ணாகிற வலையை வெறுமனே விளையாட்டுக்காக
விரித்தாய்! அதிலே நானாக ஓடிவந்துதான் அகப்பட்டுக் கொண்டேன்!"

"நம்முடைய கதை இருக்கட்டும் மாமல்லருக்கும் என் தங்கைக்கும் நேசம் என்கிற
விஷயம் உனக்கு எப்படித் தெரிந்தது? அதைச் சொல்லு!" என்றாள் கமலி.

"ஆ! பாம்பின் கால் பாம்புக்குத் தெரியாதா, என்ன? கள்ளனுக்குத் தெரியாதா
கள்ளனின் சமாசாரம்? நான் உன்னை உன் தகப்பனார் வீட்டில் அந்தக் காலத்தில்
என்னமாய்ப் பார்த்தேன்! ஞாபகம் இருக்கிறதா? அம்மாதிரியே உன் தங்கையை
இப்போது மாமல்லர் ஆர்வத்தோடு பார்க்கிறார்."

"இவ்வளவுதானா?"

"இன்னும் என்ன வேண்டும்? நாவுக்கரசர் மடத்தில் அபிநயம் பிடித்தானதும் உன்
தங்கை மூர்ச்சையாகி விழுந்து விட்டாள் என்று சொன்னேனல்லவா? உடனே மாமல்லர்
ஓடிவந்து சிவகாமியைத் தூக்கி ஆயனர் மடியின்மீது வைத்தார். கமலி அப்போது
அவருடைய கைகளும் தேகமும் எப்படிப் பதறின தெரியுமா? இதுவரையில் எனக்குக்
கொஞ்சம் சந்தேகமாயிருந்தது. இன்றைக்குத் தான் சர்வ நிச்சயமாயிற்று."

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவகாமியின் தேகமெல்லாம் சிலிர்த்தது.
விம்மலுடன் அழுகை வரும்போலிருந்தது. சமாளித்துக்கொண்டு மேலும் நடந்த
சம்பாஷணையைக் கேட்டாள்.

"இவ்வளவு கூர்மையாய்க் கவனித்தாயே, நீ ரொம்பப் புத்திசாலிதான்! மாமல்லரும் பாக்கியசாலிதான்!" என்றாள் கமலி.

"மாமல்லர் பாக்கியசாலி என்றா சொல்கிறாய்? இதனால் ஏற்படப் போகிற சங்கடங்களையெல்லாம் நினைத்தால்..."

"சங்கடம் என்ன வந்தது?"

"குமார சக்கரவர்த்தியின் கல்யாணம் என்றால், நம்முடைய கல்யாணத்தைப்போல்
என்று நினைத்துக் கொண்டாயா? எத்தனை எத்தனையோ யோசனைகள் செய்வார்கள்..."

"கண்ணா! என் தங்கையை மட்டும் சாமானியமான பெண் என்று நினைத்தாயா? தமயந்தியை
மணந்துகொள்ளத் தேவலோகத்திலிருந்து தேவர்கள் வந்ததுபோல் சிவகாமியைத் தேடிக்
கொண்டு வரமாட்டார்களா? ஏதோ தமயந்தி மனம் வைத்து நள மகாராஜனுக்கு
மாலையிட்டாள்!.."

"ஆனால் தமயந்தி அரண்மனையில் பிறந்த ராஜ குமாரியாச்சே, கமலி!"

"என் தங்கை ஆயிரம் ராஜகுமாரிகளுக்கு இணையாவாள். கண்ணா! நீ வேணுமானாலும் பார்! என்னுடைய மனோரதம் ஒருநாள் கட்டாயம் நிறைவேறப் போகிறது!"

"அது என்ன மனோரதம் கமலி?"

"இந்த யுத்தமெல்லாம் முடிந்த பிறகு, மாமல்லருக்கு மகுடாபிஷேகம் நடக்கப்
போகிறது. தங்க ரதத்தில், நவரத்ன சிங்காசனத்தில் அமர்ந்து நரசிம்ம
சக்கரவர்த்தி இராஜவீதிகளில் பவனி வருகிறார். அவருக்குப் பக்கத்தில்,
தேவேந்திரனுக்கு அருகில் இந்திராணியைப் போல் என் தங்கை சிவகாமி
அமர்ந்திருக்கிறாள். தங்க ரதத்தின் முன் தட்டில் நீ ஜம் என்று உட்கார்ந்து
ரதத்தை ஓட்டிக்கொண்டு வருகிறாய். நான் அரண்மனைக் கோபுர வாசலில் மேல்
மாடத்தில் நின்று கொண்டிருக்கிறேன். ரதம் அரண்மனை வாசலில் வந்து நின்றதும்
கூடைகூடையாக மல்லிகை மலர்களையும் சண்பகப் பூக்களையும் அவர்கள்மேல்
கொட்டுகிறேன். நடுவில் உன் தலையிலும் ஒரு கூடைப் பூவைக் கவிழ்க்கிறேன்.
இப்படி நடக்கவேண்டும் என்பதுதான் என் மனோரதம், கண்ணா!"

"கமலி, உன் மனோரதம் நிறைவேறினால் எனக்கும் அளவில்லாத சந்தோஷந்தான்" என்றான் கண்ணன்.

சிவகாமி திரும்பித் தன்னுடைய அறைக்குள்ளே சென்று படுக்கையில்
படுத்துக்கொண்டாள். இருதயத்தின் அடிவாரத்திலிருந்து பொங்கி வந்த
விம்மலையும் அழுகையையும் ஆனமட்டும் முயன்றும் அவளால் அடக்கிக்கொள்ள
முடியவில்லை.

இரவு நாலாவது ஜாமத்தில், விழிப்புமில்லாமல் நித்திரையுமில்லாமல் அரைத்
தூக்க நிலையில் சிவகாமி படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும்போது, முன்னர்
அவள் மனக் கண்முன் தோன்றிய நிழல் தோற்றங்கள் உருவம் எடுக்க ஆரம்பித்தன.

ஒரு செண்பக மரத்தின் கிளையில் இரண்டு புறாக்கள் உட்கார்ந்து ஒன்றோடொன்று
கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கின்றன. திடீரென்று சுற்றியிருந்த மரங்கள்
எல்லாம் தீப்பட்டு எரியத் தொடங்குகின்றன. ஆண் புறாவானது பெண் புறாவைப்
பார்த்து, "நீ இங்கேயே இரு. நான் திரும்பி வந்து உன்னைக்
காப்பாற்றுகிறேன்!" என்று சொல்லிவிட்டுப் பறந்து செல்கிறது. அது போன
வழியையே பெண் புறா பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆண் புறா திரும்பி வருமா?
வந்து, பெண் புறாவைத் தப்பவைக்குமா? இதை அறிய முடியாதபடி பெண் புறாவை
நாலாபுறமும் புகை வந்து சூழ்ந்துவிடுகிறது. அந்த நேரத்தில் அவ்விதம்
புகையினால் சூழப்பட்டிருப்பது பெண் புறா அல்ல தானே என்று சிவகாமி
பிரமையுறுகிறாள்.

கற்பனை உலகக்காட்சி மாறுகிறது மல்லிகைத் தோட்டத்தில் ஆணும் பெண்ணுமாக ஒரு
கலைமானும் ஒரு புள்ளிமானும் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கின்றன.
விளையாட்டின் இடையே புள்ளிமானானது மல்லிகைப் புதருக்கு அருகில் மறைந்து
நிற்கிறது. மல்லிகைப் புதரில் பூத்துச் சிரித்திருந்த வெள்ளி
மலர்களுக்கும், புள்ளிமானின் மீது அள்ளித் தெளித்திருந்த
வெள்ளிப்பொட்டுகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் கலைமான் புள்ளிமானைத்
தாண்டிக் கொண்டு அப்பால் போகிறது. அதைக் கண்டு புள்ளிமான் சிரிக்கிறது.
இப்படி அவை விளையாடிக் கொண்டிருந்தபோது சற்றுத் தூரத்தில் ஒரு மல்லிகைப்
புதரில் இரண்டு பிரகாசமான நட்சத்திரங்கள் ஜொலிப்பதைக் கண்டு அதிசயித்தது.
பிறகு, அவை நட்சத்திரங்கள் அல்ல, - அனல் கட்டிகள் என்று தோன்றியது.
பின்னர், அந்த இரண்டு அனல் கட்டிகளும், ஒரு பெரிய புலியின் இரண்டு
கண்கள்தான் என்று தெரியவே, பெண் மானின் சகல நாடியும் ஒடுங்கிவிட்டது.
கலைமானைக் கூவி அழைக்க அது முயன்றது. ஆனால், அதன் தொண்டையிலிருந்து சத்தமே
உண்டாகவில்லை.

மேலே என்ன ஆயிற்று? புள்ளிமான் தப்பித்துச் சென்றதா? கலைமானுடன்
சேர்ந்ததா? அதுதான் தெரியவில்லை. அத்தகைய பயங்கர அபாயத்தில் அகப்பட்டுக்
கொண்டிருந்த பெண்மான் உண்மையில் மான் அல்ல. தானே அந்த மான் என்று மட்டும்
சிவகாமிக்கு அந்தக் கணத்தில் தெரிய வந்தது.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 5 Empty 40. கட்டாயப் பிரயாணம்

Post by ரூபன் Wed 4 Nov 2009 - 5:08

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

40. கட்டாயப் பிரயாணம்


மகேந்திர விடுதியிலிருந்து அதிகாலையில் கிளம்பிய பரஞ்சோதி அன்று
பகலெல்லாம் பிரயாணம் செய்து, வடபெண்ணையுடன் பாபாக்கினி நதி கலக்கும்
இடத்திலுள்ள புத்த விஹாரத்தைச் சூரியாஸ்தமன நேரத்தில் அடைந்தார்கள்.

விஹாரத்தின் வாசலில் புத்த பிக்ஷு ஒருவர் நின்று கொண்டிருந்தார். மாலை
நிறத்து மஞ்சள் வெயிலில் பிக்ஷுவின் காவி உடையானது தங்க நிறமாகப்
பிரகாசித்தது. பரஞ்சோதி குதிரையிலிருந்து இறங்கிப் பிக்ஷுவை அணுகியதும்,
அவர் இவனை என்னவோ கேட்டார். அவர் பேசிய பாஷை பரஞ்சோதிக்குப் புரியவில்லை.
ஆனாலும் தான் யார் என்பதை விசாரிக்கிறார் என்று ஊகித்துக் கொண்டு
தமிழிலேயே, தான் நாகர்ஜுன பர்வதத்துக்குப் போவதாகவும் தன்னை இவ்விடம்
தங்கி வழி கேட்டுக் கொண்டு போகும்படி நாகநந்தியடிகள் பணித்தார் என்றும்
கூறினான்.

நாகநந்தி என்று கேட்டதும் அந்தப் பிக்ஷுவின் முகத்தில் மாறுதல்
காணப்பட்டது. சமிக்ஞையினால் "கொஞ்சம் இங்கேயே இரு!" என்று பரஞ்சோதிக்குச்
சொல்லிவிட்டு, பிக்ஷு உள்ளே சென்றார். சற்று நேரத்துக்கெல்லாம் அவர்
திரும்பிவந்து பரஞ்சோதியை விஹாரத்துக்குள் அழைத்துச் சென்றார். அந்தப்
பௌத்த விஹாரம் காஞ்சியில் பார்த்த இராஜ விஹாரத்தைப் போலக் கல், மரம்,
சுண்ணாம்பினால் கட்டப்பட்டதல்லவென்பதையும், குன்றிலே குடைந்து
அமைக்கப்பட்டதென்பதையும் பரஞ்சோதி கவனித்தான். காஞ்சி இராஜ விஹாரத்தைப்
போல் இது அவ்வளவு பெரிதாக இல்லை. அவ்வளவு விலையுயர்ந்த
பூஜாத்திரவியங்களும் இங்கே காணப்படவில்லை. ஆனால் விஹாரத்தின் அமைப்பு முறை
அதே மாதிரி இருந்தது. நடுவில் பிக்ஷுக்கள் கூடிப் பிரார்த்தனையும்
தியானமும் செய்வதற்குரிய சைத்யமும் அதன் பின்பக்கத்துப் பாறைச் சுவரில்
பிரம்மாண்டமான புத்தர் சிலையும் இருந்தன. அந்தப் புத்தர் சிலையும்,
சிலைக்கு மேலே கவிந்திருந்த போதி விருட்சமும், புத்தர் மீது புஷ்பமாரி
பொழிந்து கொண்டிருந்த கந்தர்வ வடிவங்களும், - எல்லாம் பாறையில் குடைந்து
அமைக்கப்பட்டிருந்தன. அலங்கார தீபங்கள் வரிசை வரிசையாக ஒளிர்ந்தன.
புத்தபகவானுக்கு எதிரில் பலவித வர்ண மலர்கள் தனித் தனிக் கும்பலாகக்
குவிக்கப்பட்டுக் கண்ணைக் கவரும் காட்சியளித்தன. புஷ்பங்களின்
நறுமணத்துடன் அகிற்புகையின் வாசனையும் சேர்ந்து சிந்தையை ஒருமுகப்படுத்த
உதவி செய்தது.

சைன்யத்துக்கு இருபுறத்திலும் புத்த பிக்ஷுக்கள் தங்குவதற்கும்
மாணாக்கர்கள் கல்வி பயில்வதற்கும் உரிய குகை அறைகள் குடையப்பட்டிருந்தன.
ஒரு பக்கத்தின் கோடியில் மச்சுப்படிகள் போன்ற படிக்கட்டுகள் காணப்பட்டன.
அந்தப் படிகளின் வழியாகப் பரஞ்சோதியைப் பிக்ஷு அழைத்துச் சென்றார்.
கீழேயுள்ள அறைகளைப்போல் மேலேயும் பாறையில் குடையப்பட்ட அறைகள் காணப்பட்டன.
அவற்றில் விசாலமான அறை ஒன்றில் பத்மாசனமிட்டு அமர்ந்திருந்த பெரிய புத்த
பிக்ஷுவிடம் பரஞ்சோதி அழைத்துச் சென்று விடப்பட்டான்.

அந்த விஹாரத்தின் தலைமைப் பிக்ஷு அவர்தான் என்பதைப் பரஞ்சோதி
ஊகித்துக்கொண்டு அவரைக் கை கூப்பி வணங்கினான். "புத்தம் சரணம் கச்சாமி,"
"தர்மம் சரணம் கச்சாமி," "சங்கம் சரணம் கச்சாமி" என்று தலைமைப் பிக்ஷு
கூறி மூன்று முறை புத்தபகவானுக்கு வணக்கம் செலுத்திவிட்டு, பரஞ்சோதியைப்
பார்த்துத் தமிழ்ப் பாஷையில் "குழந்தாய்! நீ யார்? என்ன காரியமாக வந்தாய்?
யார் உன்னை அனுப்பினார்கள்?" என்று கேட்டார்.

பரஞ்சோதி நாகநந்தியடிகள் தன்னை ஓலையுடன் அனுப்பி வைத்ததுபற்றி விவரமாகக் கூறினான்.

"நாகநந்தி கொடுத்தனுப்பிய ஓலை எங்கே? அந்த ஓலையை நான் பார்க்கலாமா?" என்று பிக்ஷு கேட்டார்.

"மன்னிக்க வேண்டும் ஓலையை சத்யாச்ரயரைத் தவிர வேறு யாரிடமும் கொடுக்கக் கூடாதென்று நாகநந்தியடிகளின் கட்டளை" என்றான் பரஞ்சோதி.

சத்யாச்ரயர் என்ற பெயரைக் கேட்டதும் பிக்ஷுவின் முகத்தில் ஒரு மர்மமான
புன்னகை தோன்றியது. அதைப் பரஞ்சோதி கவனித்தானாயினும் அதன் பொருளை அறிய
முடியவில்லை.

"நாகநந்தியடிகள் என்ன கட்டளையிட்டாரோ, அவ்விதமே செய். இன்றிரவு இங்கேயே
படுத்துக்கொள். ஸ்ரீ பர்வதத்துக்குப் போகும் வழியெல்லாம் இப்போது அபாயம்
நிறைந்ததாயிருக்கிறது. இன்று ராத்திரியே அவ்விடத்துக்குப் போகும் வீரர்கள்
சிலர் இங்கே வரக்கூடும். அவர்களுடன் சேர்த்து அனுப்பி வைக்கிறேன். அவர்கள்
உனக்கு வழி காட்டுவதுடன் பத்திரமாகவும் கொண்டு போய்ச் சேர்ப்பார்கள்!"
என்று ஆசார்ய பிக்ஷு கூறி, இன்னொரு பிக்ஷுவைப் பார்த்துச் சமிக்ஞை
செய்தார். அவர் பரஞ்சோதியை அங்கிருந்து அழைத்துச் சென்று உணவருந்தச் செய்த
பிறகு, கீழே ஓர் அறையில், அவன் படுத்துக் கொள்வதற்கு இடம் காட்டினார்.
சென்ற இரவில் நல்ல தூக்கம் இல்லாமையாலும் நெடுந்தூரப் பிரயாணத்தினாலும்
களைப்புற்றிருந்த பரஞ்சோதி இன்று படுத்தவுடன் நிம்மதியாகத் தூங்கலானான்.

தோளைப் பிடித்து யாரோ குலுக்குவதறிந்து பரஞ்சோதி திடுக்கிட்டுக் கண்
விழித்தான். முதல்நாள் அவனை மடத்துக்குள் அழைத்து வந்த பிக்ஷுதான் அவனை
எழுப்பிக் கொண்டிருந்தார். பக்கத்தில் பெரிய பிக்ஷுவும் நின்றார்.

"தம்பி! நாகர்ஜுன பர்வதத்துக்குப் போவோர் புறப்படுகிறார்கள் நீயும் கிளம்பு" என்றார் பெரிய பிக்ஷு.

பரஞ்சோதி அவசரமாக எழுந்து தலைமாட்டில் வைத்திருந்த ஓலைக் குழாயை எடுத்து
இடுப்பில் செருகிக் கொண்டான். பிக்ஷுக்களைப் பின்தொடர்ந்து மடத்தின்
வாசலுக்கு வந்தான்.

அங்கே அவனுடைய குதிரையைத் தவிர இன்னும் ஆறு குதிரைகளும், ஒவ்வொரு
குதிரைக்கும் அருகில் ஆஜானுபாகுவான வீரன் ஒருவனும் நிற்பதைக் கீழ்
வானத்தில் தோன்றிய பிறைமதியின் மங்கிய நிலவொளியில் பரஞ்சோதி கண்டான்.

"இந்த வீரர்கள் அவசர காரியமாக ஸ்ரீ பர்வதத்துக்குப் போகிறார்கள்.
இவர்களுடன் போனால் குறுக்கு வழியாக வெகு சீக்கிரம் போய்ச்
சேர்ந்துவிடலாம்" என்று பெரிய பிக்ஷு கூறினார்.

மனத்தில் காரணம் தெரியாத தயக்கத்துடன் பரஞ்சோதி குதிரைமீது ஏறினான்.
குதிரைகள் வடபெண்ணை நதிக்கரையோடு மேற்குத் திசையை நோக்கி விரைந்து சென்றன.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 5 Empty 41. பாசறை

Post by ரூபன் Wed 4 Nov 2009 - 5:09

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

41. பாசறை


புத்த விஹாரத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் அக்குதிரை
வீரர்களில் மூன்று பேர் பரஞ்சோதிக்கு முன்னாலும், மூன்று பேர்
பின்னாலுமாகப் பரஞ்சோதியைத் தங்களுக்கு நடுவிலேயே விட்டுக்கொண்டு
சென்றார்கள்.

பொழுது நன்றாய் விடிந்த பிறகு பரஞ்சோதி அவர்களுடைய தோற்றத்தைக்
கவனித்தான். அவர்கள் திடகாத்திரமுள்ள ஆஜானுபாகுவான மனிதர்கள் என்று
தெரிந்து கொண்டான். இந்த வீரர்கள் ஏதோ ஒரு சைனியத்தைச்
சேர்ந்தவர்களாய்த்தான் இருக்கவேண்டும். முக்கியமான யுத்த காரியமாகத் தான்
போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடன் தன்னை ஏன் அந்தப் புத்த பிக்ஷு
சேர்த்து அனுப்பினார்?

நேரமாக ஆக, பரஞ்சோதியின் மனக்கலக்கம் அதிகமாயிற்று. அவன் அந்த
வீரர்களுக்கு முன்னால் போகவோ பின்னால் போகவோ முயன்ற போதெல்லாம், அவர்கள்
அதற்கு இடங்கொடாமல் அவனை நடுவிலேயே விட்டுக் கொண்டு போனார்கள். இதைப்
பார்க்கப் பார்க்க அவன் உள்ளத்தில் தனக்கு இவர்கள் வழிகாட்டி அழைத்துப்
போகிறார்களா அல்லது சிறைப்படுத்திக் கொண்டு போகிறார்களா என்ற சந்தேகம்
உதித்தது.

ஸ்ரீ பர்வதம் வடக்கே கிருஷ்ணா நதிக்கரையில் இருக்கிறதென்பது
பரஞ்சோதிக்குத் தெரியும். ஆனால் அதிகாலையில் கிளம்பியதிலிருந்து இந்த
வீரர்களோ மேற்குத் திசையை நோக்கியே போய்க் கொண்டிருந்தார்கள். ஒருவேளை
கொஞ்ச தூரம் மேற்கு நோக்கிப் பிரயாணம் செய்த பிறகு வடக்கு நோக்கித்
திரும்பலாம் என்று அவன் எண்ணியபடியும் நடக்கவில்லை.

சூரியன் உச்சி வானத்திற்கு வரும் வரையில் அவர்களுடன் பிரயாணம் செய்த
பின்னர், பரஞ்சோதி தான் உண்மையில் சிறையாளியா இல்லையா என்பதை நிச்சயமாய்த்
தெரிந்து கொள்ள விரும்பினான். அவ்விடத்தில் வடக்கு நோக்கித் திரும்பிய
பாதையில் அவன் தன் குதிரையைத் திருப்பினான்.

கண்மூடித் திறக்கும் நேரத்தில் அந்த ஆறு குதிரை வீரர்களும் தன்னைச்
சூழ்ந்து நிற்பதைக் கண்டான். அவர்களுடைய வேல்களின் முனைகள் அவனுடைய
குதிரைமீது உராய்ந்து கொண்டிருந்தன.

எண்ணெய் ஊற்றி ஆயத்தமாய் வைத்திருக்கும் தீபத்தின் திரியானது அதன்மீது
தீப்பட்டதும் சுடர்விட்டு எரியத் தொடங்குவதுபோல், பரஞ்சோதியின் உள்ளத்தில்
குமுறிக் கொண்டிருந்த ஆத்திரம் இப்போது கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது.
கோபத்தினால் அவனுடைய இரத்தம் கொதித்தது. கையிலே வேலை எடுத்தான் அதைத்
தனக்கு அருகில் இருந்தவன் மீது பிரயோகிப்பதற்காக ஓங்கினான்.

ஆகா! என்ன ஏமாற்றம்! ஓங்கிய வேல் எங்கேயோ போய் விழுந்தது. வேலுக்கு
உடையவனும் தொப்பென்று தரையில் விழுந்தான். எப்படி விழுந்தோம் என்பதே
முதலில் பரஞ்சோதிக்குத் தெரியவில்லை. அப்புறம் தன் உடம்பின்மீது கயிறு
ஒன்று சுற்றிக்கொண்டிருப்பதைக் கண்டான். அந்த வீரர்களில் ஒருவன்
சுருக்குப்போட்ட கயிற்றைத் தன்மீது எறிந்து தன்னைக் கீழே இழுத்துத்
தள்ளிவிட்டான் என்பதை அறிந்தான்.

இரண்டாவது தடவை இவ்விதம் சூழ்ச்சியினால் தான் வெல்லப்பட்டதை நினைத்தபோது,
பரஞ்சோதிக்கு ஒரு பக்கம் வெட்கமும் இன்னொரு பக்கம் ஆத்திரமும் பொங்கின.

அவனுடைய குதிரையோ தன் எஜமானனுக்கு இனிமேல் தன்னால் பயனில்லையென்று
உணர்ந்து கொண்டதுபோல் வந்த வழியே திரும்பி ஓடிக்கொண்டிருந்தது. தப்பிச்
செல்வதற்கு இவ்விதம் வழியே இல்லாமற் போகவே "இனிப் போராடுவதில் பயனில்லை;
நடப்பது நடக்கட்டும்" என்று பரஞ்சோதி சும்மா இருந்தான்.

அந்த வீரர்களில் மூவர், குதிரை மீதிருந்து இறங்கிவந்து பரஞ்சோதியின்
கரங்களை முதுகுப் பக்கம் சேர்த்து, பின் கட்டு முன் கட்டாகக்
கட்டினார்கள். அந்த ஆறு குதிரைகளுக்குள்ளே அதிக வலிவும் ஆகிருதியும் உள்ள
குதிரையின் மீது அவனை ஏற்றி வைத்தார்கள். அவனுக்குப் பின்னால்,
அவ்வீரர்களில் ஒருவனும் உட்கார்ந்து கொண்டான். மறுபடியும் குதிரைகள்
மேற்குத் திசையை நோக்கிச் சென்றன.

அஸ்தமிக்க ஒரு ஜாமம் இருக்கும்பொழுது, பரஞ்சோதி தனக்கு முன்னால் ஓர்
அபூர்வமான காட்சியைப் பார்த்தான். அப்போது அவர்கள் சென்ற பாறையானது வரவர
மேடாகி வந்த பீடபூமியின் உச்சியை அடைந்திருந்தது. அங்கிருந்து
பார்க்கும்போது வெகு தூரத்துக்கு வெகு தூரம் சமவெளிப் பிரதேசமாகக்
காணப்பட்டது. அந்தப் பிரதேசத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் சைனியம் தண்டு
இறங்கியிருந்தது.

ஆயிரக்கணக்கான போர் யானைகள் கருங்குன்றுகளைப் போல் வரிசைவரிசையாக அங்கு
நின்றன. அந்தக் கருங்குன்றுகளுக்கு இடையிடையே அடித்திருந்த கூடாரங்கள்
வெண்ணிற மணற் குன்றுகளைப்போல் தோன்றின. மற்றும் எண்ண இயலாத குதிரைகள்,
ஒட்டகங்கள், ரிஷபங்கள், ரதங்கள், வண்டிகள் ஆகியவை எங்கெங்கும் காணப்பட்டன.
சர்க்கரை இறைந்து கிடக்கும் இடத்தில் மொய்க்கும் எறும்புகளைப்போல்,
லட்சோபலட்சம் வீரர்கள் சில இடங்களில் நெருங்கியும், சில இடங்களில்
பரந்தும், வெகு தூரத்துக்கு வெகு தூரம் காணப்பட்டார்கள்.

கூடாரங்களின் மேலே வரிசை வரிசையாகக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன.
எல்லாவற்றுக்கும் நடுநாயகமாக ஒரு பிரம்மாண்டமான கொடி வானளாவிப் பறந்து
கொண்டிருந்தது. கொந்தளித்துக் கொண்டிருக்கும் சமுத்திரத்தை நெருங்கும்போது
கேட்கும் 'ஹோ' என்ற பேரிரைச்சலைப் போல், இனந்தெரியாதபடி பல ஒலிகள் வந்து
கொண்டிருந்தன.

இந்தக் காட்சியைப் பார்த்த பரஞ்சோதியின் வாயிலிருந்து "ஆஹா!" என்ற சத்தம்
எழுந்தது. அங்கே தண்டு இறங்கியிருப்பது பல்லவ சைனியந்தான் என்று எண்ணிய
பரஞ்சோதியின் உள்ளத்தில், அப்போது அவனுடைய கட்டுண்ட நிலைமையையெல்லாம்
மறக்கச் செய்துகொண்டு ஒரு பெரும் ஆர்வம் பூரித்து எழுந்தது. அது என்ன
ஆர்வம் என்றால், மகத்தான வீரப் போருக்கு ஆயத்தமாகத் துடிதுடித்துக்கொண்டு
நிற்கும் அந்த மகா சைனியத்தில் தானும் ஒரு போர் வீரனாகச் சேர்ந்துவிட
வேண்டும் என்பதுதான்.

அந்தகாரம் சூழ்ந்த இரவில் பிரயாணம் செய்பவன் வழி தெரியாமல் திகைத்துக்
கொண்டிருக்கையில், திடீரென்று தோன்றிய மின்னலின் ஒளியிலே தான் போகவேண்டிய
பாதையைக் கண்டுபிடிப்பதுபோல, பரஞ்சோதியும் தான் பிறவி எடுத்தது எதற்காக
என்பதை அந்தக் கணத்தில் தெளிவாகக் கண்டுகொண்டான். ஓலையில் எழுத்தாணி
கொண்டு எழுதுவதற்காகவோ, தோத்திரப் பாடல்களை உருப்போட்டுப் பாடுவதற்காகவோ,
கையில் சிற்றுளி கொண்டு கல்லைக் கொத்திக் கொண்டிருப்பதற்காகவோ,
வர்ணங்களைக் குழைத்துச் சுவரில் சித்திரம் எழுதுவதற்காகவோ தான்
பிறக்கவில்லை! கையில் வாளும் வேலும்கொண்டு போர்முனையில் நின்று,
எதிரிகளின் தலைகளைப் பனங்காய்களைப் போல் உருட்டி அவர்கள் நெஞ்சில் வேலைப்
பாய்ச்சி, இரத்த வெள்ளத்தில் நீந்தி, வெற்றி சங்கு முழக்கிப் பகைவர்களை
ஹதாஹதம் செய்து விரட்டி 'வீராதி வீரன்' என்று உலகமெல்லாம் பாராட்டும்படி
பெயர் எடுப்பதற்காகப் பிறந்தவன்தான் என்று உணர்ந்தான்.

இந்த எண்ணமாவது பரஞ்சோதிக்கு எல்லையற்ற குதூகலத்தை உண்டாக்கிற்று. ஆயனர்
வீட்டில் புத்தர் சிலைக்குப் பின்னால் ஒளிந்திருந்து அவன் பார்த்த
மகேந்திர சக்கரவர்த்தியின் கம்பீர உருவம் அவன் கண்முன்னால் எழுந்தது. அதோ
வானளாவிப் பறக்கும் கொடியின் அடியில் இந்த மகத்தான சைனியத்தின் பிரதம
சேனாதிபதியான மகேந்திர சக்கரவர்த்தி வீற்றிருப்பார். அவர் முன்னிலையிலே
தான் தன்னைக் கொண்டு போய் நிறுத்துவார்கள். சக்கரவர்த்தியின் சந்நிதியை
அடைந்ததும், அவர் பாதங்களில் விழுந்து, 'பிரபு! பல்லவேந்திரா! தங்களுடைய
வீர மகா சைனியத்தில் இந்தப் பட்டிக்காட்டில் பிறந்த அறியாச் சிறுவனையும்
சேர்த்துகொள்ள அருள் புரிய வேணும்!' என்று வேண்டிக்கொள்வதென்று பரஞ்சோதி
தீர்மானித்தான். சித்திரக் கலையுமாச்சு வர்ணச் சேர்க்கையுமாச்சு! ஆயனரும்
நாகநந்தியும் எக்கேடு கெட்டாவது போகட்டும்!

இவ்விதம் பரஞ்சோதி எண்ணமிட்டுக் கொண்டே பாசறையை நெருங்கியபோது, அவனுடைய
பொங்கி எழுந்த உற்சாகத்தை மீண்டும் சந்தேக நிழல் மறைத்தது. 'இங்கே
இறங்கியிருப்பது பல்லவ சைனியந்தானா?' என்பதுதான் அந்தச் சந்தேகம்.

பல்லவ சாம்ராஜ்யத்தின் கொடி ரிஷபக்கொடி அல்லவா? இங்கே பறக்கும் கொடிகளில் காட்டுப் பன்றியின் உருவம் கடூரமாகக் காட்சியளிக்கின்றதே!

ஒருவேளை இது வாதாபிச் சைனியமாக இருக்குமோ! பல்லவ இராஜ்யத்தின் மீது
படையெடுத்து வரும் சைனியம் இது தானோ? அம்மம்மா! இவ்வளவு பிரம்மாண்டமான படை
பலமுள்ள பகைவனா பல்லவ இராஜ்யத்தின் மீது படையெடுத்து வருகிறான்?

பாசறையின் முன் வாசலை அடைந்ததும், வீரர்கள் குதிரைகளின் மீதிருந்து கீழே
இறங்கிப் பரஞ்சோதியையும் கீழே இறக்கிவிட்டு அவனை நடத்தி அழைத்துச்
சென்றார்கள். பாசறைக்குள் புகுந்து சென்றபோது, பரஞ்சோதியின் மனத்தில்
முன்னமே தோன்றியிருந்த சந்தேகம் உறுதியாயிற்று. பாசறையில் ஆங்காங்கு நின்ற
வீரர்களின் தோற்றமும் அவர்களுடைய பேச்சின் பாஷையும், இந்த சைனியம் பல்லவ
சைனியமாக இருக்க முடியாது என்று ஐயமறத் தெரிவித்தன.

"ஆஹா! பகைவர்களின் பாசறைதான் இது! இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டோ மே?
தப்பிச் செல்வதற்கு வழியே இல்லை போலிருக்கிறதே?" என்று பரஞ்சோதி
எண்ணியபோது, அவனுடைய சப்த நாடியும் ஒடுங்கிவிட்டன. சற்று முன் உள்ளத்தில்
ஏற்பட்ட குதூகலம் நிராசையாக மாறியது. அவன் உடம்பைப் பிணித்திருந்த
கட்டுக்கள் அப்போது முன்னை விடப் பன்மடங்கு அதிகமாக வலித்தன. மனச்
சோர்வினாலும் உடல் வலியினாலும் அவன் நிமிர்ந்து நடக்கக்கூட முடியாமல்
தள்ளாடவே, அவனை அவ்வீரர்கள் இழுத்துக்கொண்டு போக வேண்டியதாக நேரிட்டது.
அப்போது சற்றுத் தூரத்தில் அறிமுகமான முகம் ஒன்று தன்னை நோக்கி வருவதைப்
பரஞ்சோதி கண்டான். அருகில் நெருங்கியதும் அந்த முகம் நேற்று முன்தினம்
அவனுக்கு வழித்துணையாகக் கிடைத்த வஜ்ரபாஹுவின் முகந்தான் என்பது தெரிந்தது.

முதலில் பரஞ்சோதிக்குச் சிறிது உற்சாகம் உண்டாயிற்று. உடனே அவன் மனத்தில்,
'நாம் இந்தக் கதியை அடைவதற்கு மூலகாரணம் இந்த மனிதன்தான்' என்ற எண்ணம்
தோன்றியது.

வஜ்ரபாஹுவோ பரஞ்சோதியைப் பார்த்து மிக்க அதிசயத்தை அடைந்தவனைப் போல், "தம்பி! இது என்ன கோலம்?" என்றான்.

பிறகு, அவனை அழைத்து வந்த வீரர்களைப் பார்த்து ஏதோ கேட்டுவிட்டு, "தம்பி
பயப்படாதே! சத்யாச்ரய புலிகேசி மன்னரிடம் உள்ளது உள்ளபடி சொல்லு உனக்கு
தீங்கு ஒன்றும் நேராது!" என்று கூறினான்.

வஜ்ரபாஹுவின் வார்த்தைகளைக் காட்டிலும் அவனுடைய பிரகாசமான கண்களில்
மின் வெட்டைப்போல் தோன்றிய சமிக்ஞையானது பரஞ்சோதிக்கு அதிக தைரியத்தை
ஊட்டியது.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 5 Empty 42. சத்யாச்ரயன்

Post by ரூபன் Wed 4 Nov 2009 - 5:10

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

42. சத்யாச்ரயன்

வாதாபியைத் தலைநகராகக் கொண்டு, வடக்கே நர்மதை
வரையிலும் தெற்கே துங்கபத்திரை வரையிலும் பரந்து கிடந்த சாம்ராஜ்யத்தின்
சக்கரவர்த்தியை - பாரத நாட்டில் அந்தக் காலத்திலிருந்த வீரர்களுக்குள்ளே
ஒப்பற்ற மகா வீரனாகிய புலிகேசியை நேயர்கள் இப்போது சந்திக்கப்
போகிறார்கள். அப்படிச் சந்திப்பதற்கு முன்னால், அந்த வீரனின் பூர்வ
சரித்திரத்தை நேயர்கள் தெரிந்து கொள்ளுதல் உபயோகமாக இருக்கும்.

புலிகேசியும் அவனுடைய சகோதரர்களும் சிறுவர்களாக இருந்தபோது, அவர்களுடைய
சிற்றப்பன் மங்களேசனுடைய கொடுமைக்கு ஆளாக நேர்ந்தது. மங்களேசனுடைய
சிறையிலிருந்து அவர்கள் தப்பி ஓடி, வெகுகாலம் அடர்ந்த காடுகளில் ஒளிந்து
வாழ்ந்தார்கள். அப்படிக் காட்டில் வசித்த காலத்தில் அவர்கள் அனுபவித்த
அளவில்லாத கஷ்டங்கள் அவர்களுடைய தேகத்தை வஜ்ரதேகமாக்கி, அவர்களுடைய
உள்ளத்தில் வயிரம் ஏற்றி அவர்களை இணையற்ற வீர புருஷர்களாகவும் ஈவிரக்கமற்ற
கடூர சித்தர்களாகவும் செய்து விட்டன.

காலம் கை கூடி வந்தபோது, புலிகேசியும் காட்டை விட்டு வெளிவந்து,
சிற்றப்பனை எளிதில் வென்று அப்புறப்படுத்திவிட்டு வாதாபிச் சிங்காதனத்தில்
ஏறினான். பின்னர், தன் வீரத் தம்பிமார் துணைகொண்டு வாதாபி இராஜ்யத்தை
விஸ்தரிக்கத் தொடங்கினான். வடதிசையில் அவனுடைய ராஜ்யத்தை விஸ்தரித்துக்
கொண்டு போய் நர்மதை நதிக் கரையை எட்டியபோது அவனுடைய சைனியம் உத்தர
பாரதத்தின் ஏக சக்கராதிபதியாக விளங்கிய ஹர்ஷவர்த்தனரின் படைகளுடன்
முட்டவேண்டியதாயிற்று. நர்மதை நதியின் இரு கரைகளிலும் பல வருஷ காலம் போர்
நடந்தது. வாதாபிப் படைகள் எவ்வளவோ வீரத்துடன் போர் புரிந்தும்,
வடநாட்டிலிருந்து மேலும் மேலும் ஹர்ஷரின் சைனியங்கள்
வந்துகொண்டிருந்தபடியால், முடிவான வெற்றி காணமுடியவில்லை. இந்த நிலைமையில்
லட்சோபலட்சம் வீரர்கள் அடங்கிய பெரும் சைனியத்துக்கு ஹர்ஷவர்த்தனர் தாமே
தலைமை வகித்து வருவதாகத் தெரியவந்தபோது, புலிகேசி மேலும் அவருடன்
போராடுவது விந்திய பர்வதத்தில் முட்டிக் கொள்வதேயாகும் என்பதை உணர்ந்து
சமாதானத்தைக் கோரினான். மகா புருஷரான ஹர்ஷவர்த்தனரும் அதற்கு உடனே
இணங்கியதுடன் புலிகேசியின் வீர தீரங்களைப் பாராட்டி நர்மதைக்குத்
தெற்கேயுள்ள பிரதேசத்துக்குச் சக்கரவர்த்தியாக அவனை அங்கீகரித்தார்.

பின்னர், புலிகேசியின் கவனம் தென்னாடு நோக்கித் திரும்பிற்று. அவ்விதம்
திரும்புவதற்கு முக்கிய காரணமாகவும் தூண்டுகோலாகவும் இருந்தவர்கள் ஜைன
முனிவர்கள். புலிகேசி சிங்காதனம் ஏறுவதற்கு ஜைனர்கள் உதவிசெய்த
காரணத்தினால், வாதாபியில் சமண முனிவர்களுக்கு விசேஷச் செல்வாக்கு
ஏற்பட்டிருந்தது. அவர்களுடைய முயற்சியினாலேயே கங்கபாடி மன்னன்
துர்விநீதனுடைய மகளுக்கும் புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனுக்கும்
விவாகம் நடந்தது.

காஞ்சி மகேந்திர சக்கரவர்த்தி ஜைன மதத்திலிருந்து விலகிச் சைவ சமயத்தை
மேற்கொண்டபோது, நாடெங்கும் உள்ள சமணர்களின் உள்ளம் கொதிப்பை அடைந்தது.
ஏனெனில், கல்வியிற் சிறந்த காஞ்சி மாநகரமானது வெகு காலமாக சமணர்களுடைய
குருபீடமாக இருந்து வந்தது. காஞ்சியில் வேகவதியாற்றுக்கு அப்பாலிருந்த
பகுதி 'ஜின காஞ்சி' என்று வழங்கி வந்தது. தென்பெண்ணையாற்றின்
முகத்துவாரத்தருகில் இருந்த பாடலிபுரம் என்னும் ஊரில் தென்னாட்டிலேயே
மிகச் சிறந்த சமணப்பள்ளி புகழுடன் விளங்கி வந்தது. இத்தகைய பிரதேசத்தில்,
சமணத்தின் செல்வாக்குத் தாழ்ந்து சைவம் ஓங்குவது என்பதைச் சமண
சமயத்தலைவர்களால் சகிக்கக்கூட வில்லை.

இவர்களுடைய தூண்டுதலுடனே புலிகேசியின் ஏக சக்கராதிபத்திய வெறியும் சேரவே,
அவ்வீர மன்னன் இது வரையில் யாரும் கண்டும் கேட்டுமிராத பிரம்மாண்டமான
சைனியத்துடனே தென்னாட்டின் மேல் படையெடுப்பதற்குச் சித்தமானான்.

படையெடுப்புச் சைனியம் கிளம்பியபோது, வெற்றி முழக்கத்துடனே காஞ்சியில்
பிரவேசித்து மகேந்திரனுக்குப் புத்தி புகட்டலாம் என்ற எண்ணத்துடன் ஜைன
ஆசார்யர்களும் சைனியத்துடனே புறப்பட்டார்கள். ஆனால், தலைநகருக்கும்
பாசறைக்கும் வித்தியாசம் அதிகம் என்பதையும் சக்கரவர்த்தி புலிகேசிக்கும்
போர்த் தலைவன் புலிகேசிக்கும் மிக்க வேற்றுமை உண்டு என்பதையும் விரைவிலேயே
அவர்கள் கண்டார்கள். தலைநகரிலேயே பூஜ்ய பாதர், ரவிகீர்த்தி முதலிய ஜைன
குருமாருக்குச் சக்கரவர்த்தியைக் காட்டிலும் அதிகமான மரியாதை நடந்தது.
போர்க்களத்திலோ அவர்களைத் திரும்பிப் பார்ப்பவர்கள் யாரும் இல்லை. அந்தக்
குருமார் வைஜயந்தி பட்டணத்தைக் கொளுத்தக் கூடாது என்று சொன்னதைப் புலிகேசி
அலட்சியம் செய்த பிறகு, அவர்களுக்குப் போர்க்களத்தில் இருக்கவே
மனங்கொள்ளவில்லை. புலிகேசியிடம் சிறிது விவாதம் செய்து பார்த்த பிறகு,
அவனிடம் விடைபெற்றுக் கொண்டு அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.

சளுக்கச் சக்கரவர்த்தியை அவருடைய முக்கியப் படைத்தலைவர்கள் சகிதமாக நாம்
சந்திக்கும்போது, மேற்கூறியபடி ஜைன குருமார்கள் பாசறையிலிருந்து போய்
விட்டதைக் குறித்துத்தான் பேச்சு நடந்துகொண்டிருந்தது.

வானை அளாவிப் பறந்து கொண்டிருந்த வராகக் கொடியின் கீழே, விஸ்தாரமான
கூடாரத்தின் நடுவில், தந்தச் சிங்காதனத்தில், மணிமகுடம் தரித்த புலிகேசி
மன்னன் கம்பீரமாக அமர்ந்திருந்தான். சிங்காதனத்துக்கு எதிரே தரையிலே
விரித்திருந்த இரத்தினக் கம்பளத்தில் ஏழெட்டுப் பேர்
உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் படைத் தலைவர்கள் முதலிய பெரிய பதவி
வகிப்பவர்களாக இருக்க வேண்டுமென்று அவர்களுடைய தோற்றத்திலிருந்து தெரிய
வந்தது. அவர்கள் எல்லாருடைய கண்களும் பயபக்தியுடன் புலிகேசியின் முகத்தையே
நோக்கியவண்ணம் இருந்தன.

புலிகேசியும் அவனுடைய படைத் தலைவர்களும் பேசிய பாஷையில் தமிழ்ச் சொற்களும் பிராகிருதச் சொற்களும் கலந்திருந்தன.

(பிற்காலத்தில் இந்தக் கலப்பு மொழியே கன்னட பாஷையாயிற்று.)

"லட்சணந்தான்! இந்த திகம்பர சந்நியாசிகள் என்ன எண்ணிக்கொண்டு நம்முடன்
கிளம்பினார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் இஷ்டப்படியே யுத்தத்தை
நடத்துவதாயிருந்தால் உருப்பட்டாற் போலத்தான்" என்று புலிகேசி கூறினான்.

"அவர்கள் போய்விட்டதே க்ஷேமம். அவர்கள் நம்மோடு வந்து கொண்டிருந்தால்
யுத்தம் செய்யவே முடியாது. கோயில்களும் சங்கராமங்களும் ஸ்தூபங்களும்
கட்டிக் கொண்டு போகலாம்!" என்றான் ஒரு படைத்தலைவன் எல்லாரும் கலகலவென்று
சிரித்தார்கள்.

சிரிப்பு அடங்கியதும் இன்னொரு படைத் தலைவன், "ஜைனமுனிவர்களை அனுப்பிவிட்டோ
ம். சரிதான், ஆனால், புத்த பிக்ஷுவின் இஷ்டப்படிதானே யுத்தம் நடத்துவதாக
ஏற்பட்டிருக்கிறது?" என்று கூறி புலிகேசியின் முகத்தை ஏறிட்டுப்
பார்த்தான்.

"ஆகா! அது வேறு விஷயம். பிக்ஷுவின் யோசனையைக் கேட்டதில் இதுவரையில் நாம்
எவ்வித நஷ்டமும் அடையவில்லை. எந்த காரியமும் தவறாகப் போனதுமில்லை" என்றான்
புலிகேசி.

பிறகு, எதிரிலிருந்தவர்களில் ஒருவனைக் குறிப்பிட்டுப் பார்த்து, "நம்
ஒற்றர் படை வெகு லட்சணமாக வேலை செய்கிறது போலிருக்கிறதே! பிக்ஷுவின் தூதனை
நம்முடைய ஆட்கள் கண்டுபிடித்துக்கொண்டு வருவதற்கு மாறாக, தூதனல்லவா
நம்மைத் தேடிப் பிடித்திருக்கிறான்?" என்று கூறியபோது இயற்கையாகவே
கடுமையான குரலில் இன்னும் அதிகக் கடுமை தொனித்தது.

அந்த ஒற்றர் படைத்தலைவன் ஒருகணம் தலை குனிந்திருந்து விட்டு, பிறகு
நிமிர்ந்து புலிகேசியை நோக்கி, "ஏதோ பிசகு நேர்ந்திருக்கிறது. நான்
அனுப்பிய ஆட்கள் இன்னும் வந்து சேரவில்லை..." என்று சொல்லிக்
கொண்டிருக்கும்போதே கூடாரத்திற்குள் யாரோ வருவது கண்டு திரும்பிப்
பார்த்து, "ஆகா! இதோ வந்துவிட்டார்களே!" என்றான்.

அப்போது, பின்கட்டு முன்கட்டாகக் கட்டியிருந்த பரஞ்சோதியை முன்னால்
தள்ளிக்கொண்டு அவனைச் சிறைப்பிடித்து வந்த வீரர்கள் உள்ளே
வந்துகொண்டிருந்தார்கள்.

அந்தக் காட்சியைப் பார்த்த புலிகேசி, "இது என்ன? இது என்ன? இந்தச் சிறுவன்
யார்?" என்று கேட்டது, பரஞ்சோதியின் காதில் இடி முழக்கம்போல் விழுந்தது.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 5 Empty 43. மர்ம ஓலை

Post by ரூபன் Wed 4 Nov 2009 - 5:10

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

43. மர்ம ஓலை

இராஜாதிராஜனான புலிகேசி மன்னன் ஒல்லியாக உயர்ந்த
ஆகிருதியும், வற்றி உலர்ந்து எலும்புகள் தெரிந்த தேகமும் உடையவனாக
இருந்தான். அவனுடைய முகத்தோற்றம் இரும்பையொத்த நெஞ்சத்தையும்,
தயைதாட்சண்யம் இல்லாத கடூர சுபாவத்தையும் பிரதிபலித்தது. கோவைப் பழம்போல்
சிவந்து அனல் கக்கிய அவனுடைய கண்களைப் பார்க்கும் போது, கழுகின் கண்களைப்
போன்று தூரதிருஷ்டியுடைய கண்கள் அவை என்று தோன்றியது.

புலிகேசியின் முகத்தைப் பார்த்ததும் நமக்கு ஒருகணம் திகைப்பு ஏற்படுகிறது.
'ஆ! இந்த முகத்தை இதற்கு முன்னால் எங்கேயாவது பார்த்திருக்கிறோமா என்ன?'
என்று வியப்புறுகிறோம். 'கம்பீரக்களையுடன் கடூரம் கலந்த இந்த முகத்தையும்
அறிவொளியுடன் கோபக் கனலைக் கலந்து வீசும் இந்தக் கண்களையும் வேறு
எங்கேயும் பார்த்திருக்க முடியாது' என்று தீர்மானிக்கிறோம். 'இத்தகைய
முகம் வேறு யாருக்காவது இருப்பதென்றால், அது யமதர்ம ராஜனாகத்தான் இருக்க
வேண்டும்!" என்ற முடிவுக்கு வருகிறோம்.

புலிகேசியின் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்ட பரஞ்சோதியும் அதே முடிவுக்குத்தான் வந்தான்.

பரஞ்சோதியைப் பிடித்துக்கொண்டு வந்த வீரர்களின் தலைவன் சத்யாச்ரய
புலிகேசிக்கு வணக்கம் செலுத்திவிட்டு, வடபெண்ணை நதிக்கரையிலுள்ள பௌத்தமடத்
தலைவர் இந்த வாலிபனைச் சக்கரவர்த்தியிடம் அழைத்துப் போகச் சொன்னதிலிருந்து
நடந்தவற்றை விவரமாகக் கூறிவந்தான்.

அவன் சொல்லிமுடிப்பதற்குள்ளே புலிகேசி பொறுமை இழந்தவனாய், "அதெல்லாம்
இருக்கட்டும். இவன் யார்? எதற்காக இவனைக் கொண்டுவந்தீர்கள்?" என்று கோபக்
குரலில் கர்ஜித்தான்.

வீரர் தலைவன் நடுங்கிய குரலில், "நாகநந்தி பிக்ஷுவிடமிருந்து
சத்யாச்ரயருக்கு ஓலை கொண்டு வந்ததாக இந்த வாலிபன் சொல்லுகிறான். இதோ அந்த
ஓலை!" என்று கூறி, பரஞ்சோதியிடமிருந்து வழியில் கைப்பற்றிய ஓலையைப்
புலிகேசியிடம் சமர்ப்பித்தான்.

புலிகேசி ஓலையைப் பிரித்து, கவனமாகப் படித்தான். அப்போது அவனுடைய
முகத்தில் வியப்புக்கும் குழப்பத்துக்கும் அறிகுறிகள் ஏற்பட்டன. ஒரு
தடவைக்கு இரண்டு தடவை படித்தபிறகும் தெளிவு ஏற்பட்டதாகத் தோன்றவில்லை.

அவன் ஓலையைப் படித்தபோது, அவனுக்கு எதிரில் இருந்த படைத் தலைவர்கள் அவனுடைய முகத்தையே பார்த்தவண்ணம் இருந்தனர்.

பரஞ்சோதியோ சொல்லமுடியாத மனக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். அவன்
நாகநந்தியின் ஓலையை எடுத்துக் கொண்டு கிளம்பியபோது, இம்மாதிரி
பகைவர்களிடம் சிறைப்பட்டு எதிரி அரசன் முன்னால் நிற்க நேரிடுமென்று
நினைக்கவே இல்லை. அந்த எதிரியின் பாசறையில் வஜ்ரபாஹுவைச் சந்தித்ததும்,
அவன் போகிறபோக்கில், "சத்யாச்ரய புலிகேசியிடம் உண்மையை உள்ளபடி சொல்லு!"
என்று கூறியதும் அவனுடைய மனக் குழப்பத்தை அதிகமாக்கின.

இன்னும் நாகநந்தி தன்னிடம் ஓலையைக் கொடுத்த போது கூறிய வார்த்தைகள் நினைவு
வந்தபோது அவன் தலையே கிறுகிறுக்கும் போல் ஆகிவிட்டது. 'இந்த ஓலையை நீ
சத்யாச்ரயரிடமே கொடுக்க வேண்டும். வேறு யாரிடமும் கொடுக்கக்கூடாது.
சத்யாச்ரயரை ஒருவேளை நீ வழியிலேயே சந்தித்தாலும் சந்திக்கலாம். எப்போது
எந்தக் கோலத்தில் அவர் இருப்பார் என்று சொல்லமுடியாது. அவரை எந்தக்
கோலத்தில் பார்த்தாலும் நீ அதிசயப்படாதே!' - இவ்விதம் நாகநந்தி பிக்ஷு
கூறியது அவனுக்கு நினைவு வந்தது. 'நாகநந்தி கூறிய சத்யாச்ரயர் இந்த வாதாபி
சக்கரவர்த்தி புலிகேசியா? நாம் கொண்டு வந்த ஓலையில் உள்ள விஷயம் அஜந்தா
வர்ணக் கலவை சம்பந்தமானதுதானா? அல்லது, ஒரு பெரிய மர்மமான சூழ்ச்சியில்
நாம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோமா?' என்று பரஞ்சோதி எண்ணியபோது, அவன்
அறிவு குழம்பியது.

புலிகேசி சட்டென்று தலையைத்தூக்கி, எதிரே இருந்த படைத்தலைவர்களைப்
பார்த்து, "இந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறது தெரியுமா?" என்று
கேட்டான். உடனே, "உங்களால் ஒரு நாளும் ஊகம் செய்ய முடியாது" என்று தானே
மறுமொழியும் கூறிவிட்டு, இடிஇடியென்று சிரித்தான்.

இடிமுழக்கம் நிற்பதுபோலவே சட்டென்று சிரிப்பை நிறுத்திவிட்டு,
காவலர்களுக்கு நடுவில் கட்டுண்டு நின்ற பரஞ்சோதியை உற்று நோக்கினான்.
புலிகேசியினுடைய கழுகுக் கண்களின் கூரிய பார்வை பரஞ்சோதியின் நெஞ்சையே
ஊடுருவுவது போலிருந்தது.

புலிகேசி அவனைப் பார்த்துக் கடுமையான குரலில், "பிள்ளாய்! உண்மையைச் சொல்!
நீ யார்? எங்கு வந்தாய்? இந்த ஓலையைக் கொடுத்தது யார்? இதிலுள்ள விஷயம்
இன்னதென்று உனக்குத் தெரியுமா?" என்று சரமாரியாகக் கேள்விகளைப் போட்டான்.

அந்தக் கேள்விகளில் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதவனாய் பரஞ்சோதி மௌனம்
சாதித்தவண்ணம் நின்றான். அதனால் புலிகேசியின் கோபம் கணத்துக்குக் கணம்
பொங்கிப் பெருகிற்று.

அதைப் பார்த்த படைத் தலைவர்களில் ஒருவன், "பிள்ளையாண்டான் செவிடு போலிருக்கிறது!" என்றான்.

இன்னொருவன், "ஊமை!" என்றான்.

மற்றொருவன், "அதெல்லாம் இல்லை பையனுக்கு நம்முடைய பாஷை புரியவில்லை! அதனால்தான் விழிக்கிறான்!" என்றான்.

அப்போது புலிகேசி, "ஆமாம்; அப்படித்தான் இருக்க வேண்டும். ஜைன முனிவர்கள்
கோபித்துக் கொண்டு போனதில் அதுதான் ஒரு சங்கடம். அவர்கள் இருந்தால் எந்த
பாஷையாக இருந்தாலும் மொழிபெயர்த்துச் சொல்லி விடுவார்கள். போகட்டும்,
இவனைக் கொண்டுபோய்ச் சிறைப்படுத்தி வையுங்கள், பிறகு பார்த்துக்
கொள்வோம்!" என்று கூறியவன், திடீரென்று, "வேண்டாம், இவன் இங்கேயே
இருக்கட்டும். சற்று முன்பு வந்திருந்த வீரன் வஜ்ரபாஹுவை உடனே போய்
அழைத்து வாருங்கள்!" என்றான்.

வஜ்ரபாஹுவை அழைக்க ஆள் போனபிறகு, புலிகேசி படைத் தலைவர்களைப் பார்த்துக் கூறினான்.

"இந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறது, தெரியுமா? கேளுங்கள் அதிசயத்தை!
இந்த ஓலை கொண்டுவருகிற பையனிடம் அஜந்தா வர்ண இரகசியத்தைச் சொல்லி அனுப்ப
வேணுமாம். இரண்டு வருஷம் நான் அஜந்தா குகைகளிலேயே வசித்திருந்தும் அந்தப்
புத்த பிக்ஷுக்களிடமிருந்து வர்ண இரகசியத்தை என்னால் அறிய முடியவில்லை.
பிக்ஷுக்கள் அவ்வளவு பத்திரமாக அஜந்தா வர்ண இரகசியத்தைப்
பாதுகாக்கிறார்கள். அப்படியிருக்க இந்தப் பிள்ளையிடம் அதைச் சொல்லி
அனுப்பும்படி இந்த ஓலையில் எழுதியிருக்கிறது. எழுத்தோ நம் பிக்ஷு
எழுதியதாகவே தோன்றுகிறது. இதைப்பற்றி நீர் என்ன நினைக்கிறீர், மைத்ரேயரே!"
என்று சொல்லிக் கொண்டே, புலிகேசி மன்னன் அந்த ஓலையை ஒற்றர் படைத்
தலைவனிடம் நீட்டினான்.

மைத்ரேயன் ஓலையை வாங்கிக் கவனமாகப் படித்தான். பின்னர் சக்கரவர்த்தியைப்
பார்த்து, "சத்யாச்ரயா! இதில் ஏதோ மர்மமான செய்தி இருப்பதாகத் தெரிகிறது.
பையனை விசாரிக்கிறபடி விசாரித்தால் தெரிகிறது!" என்றான்.

"அழகுதான், மைத்ரேயரே! பையனை எப்படி விசாரித்தாலும் அவன் சொல்கிறது நமக்கு
விளங்கினால் தான் உபயோகம்? அதற்காகத்தான் வஜ்ரபாஹுவை எதிர்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்றான் புலிகேசி.

இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வஜ்ரபாஹு கூடாரத்துக்குள்
நுழைந்தான். புலிகேசியின் அருகில் வந்து வணங்கி, "இராஜாதி ராஜனே!
மறுபடியும் ஏதாவது ஆக்ஞை உண்டா?" என்று கேட்டான்.

"வஜ்ரபாஹு, உம்மைப்போலவே இந்தப் பையனும் எனக்கு ஓர் ஓலை கொண்டு
வந்திருக்கிறான். ஆனால், அதிலுள்ள விஷயம் மர்மமாக இருக்கிறது. ஓலையை யார்
கொடுத்தார்கள், யாரிடம் கொடுக்கச் சொன்னார்கள் என்பதை விவரமாக
விசாரித்துச் சொல்லும், அதற்காகத்தான் உம்மை மீண்டும் தருவித்தேன்"
என்றான்.

வஜ்ரபாஹு பரஞ்சோதியின் பக்கம் திரும்பி உற்றுப் பார்த்து, "ஆகா! இந்தப்
பையனா? இவனை நான் முந்தாநாள் இரவு மகேந்திர மண்டபத்தில் பார்த்தேனே!
இவனைப் பார்த்ததுமே எனக்கு சந்தேகம் உண்டாயிற்று. விசாரித்தேன். ஆனால்,
பையன் அமுக்கன். மறுமொழியே சொல்லவில்லை!" என்றான்.

"இப்போது விசாரியும், மறுமொழி சொல்லாவிட்டால் நாம் சொல்லச் செய்கிறோம்" என்றான் வாதாபி அரசன்.

"மன்னர் மன்னா! இவன் சுத்த வீரனாகக் காண்கிறான். இவனைப் பயமுறுத்தித்
தகவல் ஒன்றும் அறிய முடியாது. நானே விசாரித்துப் பார்க்கிறேன்" என்று
வஜ்ரபாஹு கூறி விட்டு பரஞ்சோதியை நோக்கி, "தம்பி! நான் அப்போதே
சொன்னேனல்லவா, அதன்படி சத்யாச்ரயரிடம் உள்ளது உள்ளபடி சொல்லு! பயப்பட
வேண்டாம். நான் உன்னை தப்புவிக்கிறேன்" என்றான்.

அதற்குப் பரஞ்சோதி, "ஐயா! எனக்குப் பயமே கிடையாது எதற்காகப்
பயப்படவேண்டும்? உயிருக்குமேலே நஷ்டமாகக் கூடியது ஒன்றுமில்லை அல்லவா?
இந்த ஓலையை நாகார்ஜுன பர்வதத்துக்குக் கொண்டுபோய்ச் சத்யாச்ரயரிடம்
கொடுக்கும்படி நாகநந்திபிக்ஷு கூறினார். நீங்கள் சொல்லுகிறபடி
இவருக்குத்தான் இந்த ஓலை என்றால், பெற்றுக்கொண்டு விடை எழுதிக்
கொடுக்கட்டும் நான் எடுத்துக்கொண்டு திரும்புகிறேன். அல்லது இந்த ஓலை
இவருக்கு அல்ல என்றால் ஓலையைத் திருப்பிக் கொடுக்கட்டும் வேறு என்ன நான்
சொல்லக்கூடும்?" என்றான்.

வஜ்ரபாஹு புலிகேசியைப் பார்த்து, "அரசர்க்கரசரே! ஓலையை நாகநந்தி
பிக்ஷுதான் கொடுத்ததாகவும், அதில் ஏதோ அஜந்தா வர்ணச் சேர்க்கையைப்பற்றி
எழுதியிருப்பதாகவும் பிள்ளையாண்டான் சொல்கிறான். அந்த ஓலையை நான் சற்றுப்
பார்வையிடலாமா?" என்று கேட்டான்.

புலிகேசி ஓலையை வஜ்ரபாஹுவிடம் கொடுத்து, "இதிலிருந்து தெரியக்கூடியது ஒன்றுமில்லை. நீர் வேணுமானாலும் பாரும்" என்றான்.

வஜ்ரபாஹு ஓலையில் சிறிது நேரம் கவனம் செலுத்தி விட்டு, "பிரபு! நாகார்ஜுன
பர்வதத்திலுள்ள புத்த சங்கராமத்தின் தலைவரின் திருநாமம் சத்யாச்ரய பிக்ஷு
தானே?" என்று கேட்டான்.

"ஆமாம், அதனால் என்ன?"

"இந்த ஓலை அவருக்கே இருக்கலாம் அல்லவா?"

"இருக்கலாம்; ஆனால், நாகநந்தி அவருக்கு இம்மாதிரி விஷயத்தைப் பற்றி எழுத நியாயமே இல்லையே?"

"பிரபு! இந்த ஓலையைப் படித்ததும் நாகநந்தி பிக்ஷு கூறிய ஒரு விஷயம் எனக்கு
ஞாபகம் வருகிறது. கிருஷ்ணா நதிக் கரையோடு வேங்கி ராஜ்யத்தின்மேல்
படையெடுத்துச் செல்லும் தங்கள் சகோதரருக்கும் செய்தி அனுப்பவேண்டும் என்று
அவர் சொன்னார். ஒருவேளை தங்கள் சகோதரர் விஷ்ணுவர்த்தன மகாராஜாவுக்கு இதில்
ஏதாவது செய்தி இருக்கலாம் அல்லவா?"

இதைக் கேட்டதும் புலிகேசியின் முகம் பிரகாசமடைந்தது. "வஜ்ரபாஹு! நீர் மகா
புத்திசாலி. நம்முடனேயே நீர் இருந்து விடலாமே? பல காரியங்களுக்கு
அனுகூலமாயிருக்கும்" என்றான்.

பிறகு, தன் படைத் தலைவர்களிடம் சிறிது கலந்து யோசித்து விட்டு,
"எப்படியும் விஷ்ணுவர்த்தனனுக்கு நான் ஓலை அனுப்ப வேண்டியிருக்கிறது.
ஓலையுடன் ஒன்பது வீரர்கள் போகட்டும். அவர்களுடன் இந்தப் பையனையும்
அனுப்புங்கள். இவனுடைய ஓலையின் விஷயம் என் தம்பிக்கும் விளங்காவிட்டால்,
இவனை உடனே சிரச்சேதம் செய்யக் கட்டளையிட்டு அனுப்புங்கள்!" என்றான்.

பிறகு வஜ்ரபாஹுவை நோக்கி, "இந்த விஷயத்தைப் பையனிடம் சொல்லும்" என்று ஆக்ஞாபித்தான்.

வஜ்ரபாஹு பரஞ்சோதியிடம், "தம்பி! நாகார்ஜுன மலைக்கு இங்கிருந்து
சக்கரவர்த்தியின் ஓலையுடன் ஒன்பது வீரர்கள் நாளைக் காலையில் போகிறார்கள்.
அவர்கள் உன்னையும் அழைத்துப் போவார்கள். நீ கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம்.
நாளை இராத்திரி உன்னை அநேகமாக நான் வழியில் சந்திப்பேன்" என்றான்.

பரஞ்சோதி அகமும் முகமும் மலர்ந்தவனாய், "ஐயா! தங்களுடன் பிரயாணம்
செய்வதாயிருந்தால் நரகத்துக்கு வேணுமானாலும் நான் வரச் சித்தம். தங்களிடம்
கதை கேட்க அவ்வளவு ஆவலாக இருக்கிறது!" என்றான்.

"பையன் என்ன சொல்கிறான்?" என்று புலிகேசி கேட்டதற்கு, "பிள்ளையாண்டான் பலே
கைகாரன். தான் கொண்டுவந்த ஓலை தங்களுக்கு இல்லையென்றால் தன்னிடமே
திருப்பிக் கொடுத்துவிடும்படி கேட்கிறான். இளங்கன்று பயமறியாது என்று
தமிழிலே ஒரு பழமொழி உண்டு!" என்றான் வஜ்ரபாஹு.

புலிகேசி சிரித்துவிட்டு, "அப்படியா? நல்லது. ஓலையைப் பையனிடமே கொடுத்து
வைக்கலாம். இப்போதைக்கு அவனுடைய கட்டையும் அவிழ்த்து விடுங்கள்!" என்றான்.

ஓலையைப் பரஞ்சோதியிடம் கொடுத்ததோடு, அவனுடைய கட்டுக்களையும் உடனே
அவிழ்த்து விட்டார்கள். பிறகு, அவனைச் சக்கரவர்த்தியின் சமூகத்திலிருந்து
அழைத்துச் சென்றார்கள்.

மறு நாள் அந்தி மயங்கும் சமயத்தில் பரஞ்சோதியும் அவனுக்கு முன்னும்
பின்னுமாகச் சென்ற ஒன்பது வீரர்களும் காட்டு மலைப் பாதையில் ஒரு குறுகிய
கணவாயைத் தாண்டி, அப்பால் சற்றுத் தூரத்திலிருந்த ஒரு பழைய பாழடைந்த
வீட்டை அடைந்தார்கள். அந்த வீட்டின் வாசல் திண்ணையில் ஒரு முதிய கிழவன்
உட்கார்ந்திருந்தான். தலையும் தாடியும் நரைத்த அக்கிழவன் உலகப் பிரக்ஞையே
அற்றவனாய்க் கையிலிருந்த ஜபமாலையை உருட்டிக் கொண்டிருந்தான். பத்துக்
குதிரைகள் சேர்ந்தாற்போல் வந்து அவ்வீட்டின் வாசலில் நின்றதைக்கூட அவன்
பொருட்படுத்தவில்லை.

அந்த வீரர்களில் ஒருவன் கிழவனை என்னவோ கேட்க, அவன் இரண்டொரு வார்த்தையில்
மறுமொழி கூறிவிட்டு மறுபடியும் ஜபமாலையை உருட்டலானான்.

அன்றிரவு அந்தப் பாழ் வீட்டிலேயே தங்குவதென்று அவ்வீரர்கள் முடிவு
செய்தார்கள். தங்களில் நாலு பேரை நாலு ஜாமத்துக்குக் காவல் செய்யவும்
ஏற்படுத்திக் கொண்டார்கள். எல்லாரையும்விட அதிகக் களைப்புற்றிருந்த
பரஞ்சோதிக்குப் படுத்தவுடனேயே கண்ணைச் சுற்றிக் கொண்டு தூக்கம் வந்தது.
தூக்கத்தில் ஆழ்வதற்கு முன்னால் அவன் மனத்தில் கடைசியாக 'வஜ்ரபாஹு
இன்றிரவு சந்திப்பதாகச் சொன்னாரே? இனி எங்கே சந்திக்கப் போகிறார்?' என்ற
எண்ணம் தோன்றியது.

பரஞ்சோதி அன்றைக்கும் தூக்கத்தில் கனவு கண்டான். புலிகேசியின் கூரிய
கழுகுப் பார்வை ஒரு கணம் அவன் நெஞ்சை ஊடுருவிற்று. 'இவனை யானையின் காலால்
இடறச் செய்யுங்கள்!' என்று புலிகேசி கட்டளையிடுகிறான். பரஞ்சோதி தன்னை இடற
வந்த யானையின் மீது வேலை எறிந்துவிட்டு ஓடுகிறான். யானை அவனை விடாமல்
துரத்தி வருகிறது. கடைசியில், அது கிட்ட நெருங்கிவிட்டது . யானையின்
தும்பிக்கை தன் தோளில் பட்டதும், பரஞ்சோதி திடுக்கிட்டுத் திரும்பிப்
பார்க்கிறான். பார்த்தால் யானையின் முகம் அந்த வீட்டு வாசல் திண்ணையில்
உட்கார்ந்து ஜபமாலை உருட்டிக் கொண்டிருந்த கிழவனின் முகமாகவும், துதிக்கை
அக்கிழவனின் கையாகவும் மாறியிருக்கின்றன.

இது கனவில்லை. உண்மையாகவே அந்தக் கிழவன் தன்னைத் தொட்டு எழுப்புகிறான்
என்பதைப் பரஞ்சோதி உணர்ந்ததும் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 5 Empty 44. மாயக் கிழவன்

Post by ரூபன் Wed 4 Nov 2009 - 5:11

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

44. மாயக் கிழவன்

கிழவனுடைய கையில் வேல் ஒன்று இருப்பதையும், அதைப்
பெற்றுக்கொண்டு தன்னுடன் கிளம்பி வரும்படி கிழவன் சமிக்ஞை செய்வதையும்,
பலகணி வழியாக வந்த நிலவின் மங்கிய ஒளியில் பரஞ்சோதி உற்றுப் பார்த்துத்
தெரிந்து கொண்டான். பரஞ்சோதி சிறிது தயங்கியபோது, கிழவன் அவனுடைய ஒரு
கையைத் தன்னுடைய இடது கையினால் அழுத்திப் பிடித்தான். உடனே,
பரஞ்சோதிக்குப் பழைய ஞாபகம் ஒன்று வரவே, அந்த மாயக் கிழவன் கொடுத்த வேலை
வாங்கிக்கொண்டு துள்ளி எழுந்தான்.

இருவரும் வீட்டின் கொல்லைப்புறம் வழியாக வெளியே வந்தார்கள். பரஞ்சோதி
தன்னுடைய குதிரையும் இன்னொரு குதிரையும் அங்கே சேணம் பூட்டி ஆயத்தமாக
நிற்பதைக் கண்டான். இருவரும் குதிரைகள் மேல் பாய்ந்து ஏறிக்கொண்டார்கள்.

பரஞ்சோதி எதிர்பார்த்ததுபோல், கிழவனுடைய குதிரை உடனே பாய்ச்சலில்
கிளம்பவில்லை. பரஞ்சோதிக்கு முதுகுப் புறத்தைக் காட்டிய வண்ணம் அவன் ஏதோ
செய்து கொண்டிருந்தான். எனவே, பரஞ்சோதியும் தன்னுடைய குதிரையை இழுத்துப்
பிடிக்க வேண்டியதாயிற்று.

தாமதம் செய்துகொண்டிருந்த கிழவன் நடுவில், "தம்பி! என்னை யார் என்று தெரிகிறதா?" என்று கேட்டான்.

"தாடியைப் பார்த்து முதலில் ஏமாந்துதான் போனேன். கையைப் பிடித்து
அழுத்தியதுந்தான் தெரிந்தது. பிசாசுக்குப் பயப்படாத சூரர் வஜ்ரபாஹு
தாங்கள்தானே?" என்றான் பரஞ்சோதி.

உரத்த சத்தத்துடன் சிரித்துக்கொண்டு கிழவன் திரும்பிய போது அவன்
முகத்திலிருந்த நரைத்த தாடியைக் காணவில்லை. தாடி நீங்கிய முகம் வீரன்
வஜ்ரபாஹுவின் முகமாகக் காட்சி அளித்தது. "யோசித்துச் சொல்லு, அப்பனே!
என்னோடு வருவதற்கு உனக்குச் சம்மதமா?" என்று வஜ்ரபாஹு கேட்க, பரஞ்சோதி,
"எனக்கு வரச் சம்மதந்தான். உங்களுக்குத்தான் இங்கிருந்து போகும் உத்தேசம்
இல்லை போலிருக்கிறது!" என்றான்.

"ஏன் அப்படிச் சொல்லுகிறாய்?"

"பின்னே, இப்படிச் சத்தம் போட்டுப் பேசுகிறீர்களே? அவர்கள் விழித்துக்கொள்ள மாட்டார்களா!"

"அவர்களை எழுப்புவதற்காகவேதான் இரைந்து பேசுகிறேன். தூங்குகிறவர்களை
ஏமாற்றிவிட்டு ஓடித் தப்பித்துக் கொண்டான் என்ற அவப் பெயர்
அச்சுதவிக்கிராந்தனுடைய வம்சத்தில் உதித்த வீரன் வஜ்ரபாஹுவுக்கு
வரப்படுமா?" என்று கூறி, எதையோ நினைத்துக்கொண்டவன்போல் இடி இடியென்று
சிரித்தான்.

இதற்குள் வீட்டு வாசலில் காவலிருந்த வீரன் குதிரைகளின் காலடிச்
சத்தத்தையும் பேச்சுக் குரலையும் கேட்டு வீட்டைச் சுற்றிக் கொல்லைப்புறம்
வந்து பார்த்தான். இரண்டு பேர் குதிரை மேலேறிக் கிளம்பிக் கொண்டிருப்பதை
அவன் கண்டு, "ஓ!" என்ற கூச்சலுடன் வீட்டுக்குள் ஓடினான். உடனே, அந்த
வீட்டுக்குள் வீரர்கள் ஒருவரை ஒருவர் எழுப்பும் சத்தமும், "என்ன? என்ன?"
என்று கேட்கும் சத்தமும், "மோசம்!" "தப்பி ஓடுகிறார்கள்" என்ற கூக்குரலும்
ஒரே குழப்பமாக எழுந்தன.

வஜ்ரபாஹுவும் பரஞ்சோதியும் ஏறியிருந்த குதிரைகள் முதல் நாள் வந்த பாதையில்
திரும்பிச் செல்லத் தொடங்கின. ஆனால், வஜ்ரபாஹு குதிரையை வேண்டுமென்றே
இழுத்துப் பிடித்து அதன் வேகத்தைக் குறைத்ததுடன் ஆங்காங்கு நின்று நின்று
சென்றான். பரஞ்சோதி இந்த தாமதத்தைப்பற்றிக் கேட்டபோது, "சளுக்கர்கள் நம்மை
வந்து பிடிப்பதற்கு அவகாசம் கொடுக்க வேண்டாமா? அவர்கள் வழி தப்பி வேறு
எங்கேயாவது தொலைந்து போய் விட்டால்...?" என்றான்.

"போய்விட்டால் என்ன?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"இவ்விடத்துக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு மலைக் கணவாய் இருக்கிறதல்லவா?
அந்தக் கணவாயில் துர்க்கா தேவி கோயில் ஒன்று இருக்கிறது. நேற்று வரும்போது
நீ கவனித்தாயா?"

"இல்லை!"

"நீ எங்கே கவனிக்கப் போகிறாய்? உன்னுடைய கவனமெல்லாம் ஒருவேளை திருவெண்காட்டுக் கிராமத்திலே இருந்திருக்கும்...."

"என்ன சொன்னீர்கள்?"

"அந்தத் துர்க்கையம்மன் கோயில் வழியாக நான் நேற்றைக்கு வந்தபோது, இன்று
சூரியோதய சமயத்தில் அம்மனுக்கு ஒன்பது உயிர்களைப் பலி கொடுப்பதாக வேண்டிக்
கொண்டு வந்திருக்கிறேன். இவர்கள் வேறு வழியில் போய்விட்டால், என்னுடைய
வேண்டுதலை நிறைவேற்ற முடியாதல்லவா?"

ஆனால், மேற்கூறிய கிழவனின் வார்த்தைகள் பரஞ்சோதியின் செவியில் விழுந்தனவாயினும், அவன் மனத்தில் பதியவில்லை.

பெரியதொரு வியப்பு அவனுடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்தது.
திருச்செங்காட்டங்குடியிலிருந்து அவன் கிளம்பியதிலிருந்து, எத்தனை
எத்தனையோ அதிசய சம்பவங்களைப் பார்த்திருக்கிறான். இவ்வளவிலும் இடையிடையே
அவனுடைய மனமானது திருவெண்காட்டுக்குப் போய் வந்துகொண்டிருந்தது. ஆனால்
அந்த விஷயம் இந்த வேஷதாரி வஜ்ரபாஹுவுக்கு எப்படித் தெரிந்தது என்று
நினைத்து, பரஞ்சோதி ஆச்சரியக்கடலில் மூழ்கினான்.

பலபலவென்று பொழுது விடியும் தருணத்தில் வஜ்ரபாஹுவும் பரஞ்சோதியும் ஒரு
மலைக் கணவாயை அடைந்தார்கள். அவர்கள் இதுகாறும் வந்த பாதையானது அங்கே
குறுகி இருபுறமும் செங்குத்தாக, ஓங்கி வளர்ந்த பாறைச் சுவர்களின் வழியாகச்
சென்றது. கணவாயைத் தாண்டியதும், ஒரு பக்கம் மட்டும் பாறைச் சுவர்
உயர்ந்து, இன்னொரு பக்கம் அகல பாதாளமான பள்ளத்தாக்காகத் தென்பட்டது.

இந்த இடத்துக்கு வந்ததும் வஜ்ரபாஹு தன் குதிரையை நிறுத்தினான்.
பரஞ்சோதியையும் நிறுத்தும்படிச் செய்தான். காலை நேரத்தில் குளிர்ந்த
இளங்காற்று மலைக் கணவாயின் வழியாக ஜிலுஜிலுவென்று வந்தது. பட்சிகளின்
மனோகரமான குரல் ஒலிகளுடன் தூரத்திலே குதிரைகள் வரும் காலடி சத்தம் டக்,
டக், டக், டக் என்று கேட்டது.

"தம்பி! உன்னை மறுபடியும் கேட்கிறேன்; அந்தச் சளுக்க வீரர்கள்
வருவதற்குள்ளே தீர்மானமாகச் சொல். உனக்கு என்னோடு வருவதற்கு இஷ்டமா?"
என்று வஜ்ரபாஹு கேட்டான்.

"உங்களோடுதான் வந்துவிட்டேனே? இனிமேல் திரும்பிப் போக முடியுமா?"

"உனக்கு இஷ்டமில்லாவிட்டால் இப்போதுகூட நீ திரும்பிப் போய் அவர்களுடன் சேர்ந்துகொள்ளலாம்"

"சேர்ந்துகொண்டு..."

"அவர்கள் போகும் இடத்துக்கு நீயும் போகலாம்."

"அவர்கள் எங்கே போகிறார்கள்?"

"நாகார்ஜுன மலைக்குப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் போகப் போவது யமலோகத்துக்கு!"

"அங்கே அவர்களை அனுப்பப் போவது யார்!"

"உனக்கு இஷ்டமிருந்தால் நீயும் நானுமாக. இல்லாவிட்டால் நான் தனியாக.."

பரஞ்சோதி சிறிது யோசித்துவிட்டு, "தாங்கள் எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டான்.

"பல்லவ சைனியத்தின் பாசறைக்கு!"

"ஆஹா! நான் நினைத்தபடிதான்!" என்றான் பரஞ்சோதி.

"உனக்கு எப்படித் தெரிந்தது?"

"நேற்றெல்லாம் யோசனை செய்ததில் தெரிந்தது."

"இன்னும் என்ன தெரிந்தது?"

"தாங்கள் காஞ்சிச் சக்கரவர்த்தியின் ஒற்றர் என்றும் தெரிந்தது."

"தம்பி! உன்னை என்னவோ என்று நினைத்தேன் வெகு புத்திசாலியாக இருக்கிறாயே?"

"ஐயா! நான் தங்களுடன் வந்தால் பல்லவ சைனியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்வார்களா?" என்று கேட்டான் பரஞ்சோதி.

"கட்டாயம் சேர்த்துக்கொள்வார்கள் கரும்பு தின்னக் கூலியா? உன்னைப் போன்ற
வீரனைப் பெறப் பல்லவ சைனியம் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!" என்றான்
வஜ்ரபாஹு.

பரஞ்சோதி இதற்கு மறுமொழி சொல்லவில்லை. சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு, "அப்பனே! என்ன யோசிக்கிறாய்?" என்று வஜ்ரபாஹு கேட்டான்.

"என்னிடமுள்ள ஓலையை என்ன செய்வது என்றுதான்!"

"அதோ தெரிகிற பள்ளத்தாக்கிலே ஓடுகிற தண்ணீரிலே போடு. அதனால் இனிமேல் பிரயோஜனம் ஒன்றுமில்லை."

"நாகநந்தியும் ஆயனரும் எவ்வளவு ஏமாற்றமடைவார்கள்?"

"ஆம்; நாகநந்தி பெரிய ஏமாற்றந்தான் அடைவார்!" என்று கூறிவிட்டு, வஜ்ரபாஹு 'கலகல'வென்று சிரித்தான்.

"ஏன் சிரிக்கிறீர்கள்?"

"இப்படிப்பட்ட கும்பகர்ணனாகப் பார்த்து, அந்தப் புத்த பிக்ஷு ஓலையைக் கொடுத்தாரே என்றுதான்."

"ஐயா! தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் இப்படியே நாகார்ஜுன மலைக்குப்
போய் நாகநந்தியின் ஓலையைக் கொடுத்து விட்டுப் பின்னர் பல்லவ சைனியத்தின்
பாசறைக்கு வருகிறேன்."

"வீண் வேலை, அப்பனே! நாகநந்தி உன்னிடம் கொடுத்த ஓலை அக்கினிக்கு அர்ப்பணமாகிவிட்டது!"

"என்ன சொன்னீர்கள்!"

"நாகநந்தியின் ஓலை தீயில் எரிந்துபோய்விட்டது என்றேன்."

"இதோ என்னிடம் இருக்கிறதே!"

"அது நான் எழுதிவைத்த ஓலை, தம்பி!"

"என்னுடைய சந்தேகம் சரிதான்!" என்று பரஞ்சோதி கூறி ஓலைச் சுருளை எடுத்து வீசிப் பள்ளத்தாக்கில் எறிந்தான்.

"அன்றிரவு தீபத்தில் மயக்க மருந்து சேர்த்து என்னைத் தூங்க வைத்துவிட்டுத்தானே ஓலையை எடுத்தீர்கள்?" என்று கேட்டான்.

"உன்னுடைய வேலின் முனையைப்போலவே உன் அறிவும் கூர்மையாகத்தான் இருக்கிறது!" என்றான் வஜ்ரபாஹு.

வஜ்ரபாஹுவை ஆச்சரியமும் பக்தியும் ததும்பிய கண்களினால் பரஞ்சோதி பார்த்து,
"ஐயா! நாகநந்தி என்னிடம் அனுப்பிய ஓலையில் என்ன எழுதியிருந்தது?" என்று
கேட்டான்.

"புலிகேசியைக் காஞ்சி மாநகருக்கு உடனே வந்து, தென்னாட்டின் ஏக சக்ராதிபதியாக முடிசூட்டிக் கொள்ளும்படி எழுதியிருந்தது!"

"அடடா! அப்படிப்பட்ட துரோகமான ஓலையையா நான் எடுத்துக்கொண்டு வந்தேன்? ஐயோ! என்ன மூடத்தனம்!" என்று புலம்பினான் பரஞ்சோதி.

"போனதைப்பற்றி அப்புறம் வருத்தப்படலாம் இதோ சளுக்க வீரர்கள் யமனுலகம் போக
அதிவேகமாக வருகிறார்கள். நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று வஜ்ரபாஹு
கேட்டான்.

"தங்கள் விருப்பம் எப்படியோ, அப்படி!"

"சரி, இந்தக் கணவாயின் இருபக்கமும் நாம் இருவரும் நிற்கலாம். முதலில்
வருகிறவன் மார்பில் உன்னிடமுள்ள ஈட்டியைப் பிரயோகம் செய். அப்புறம் இந்த
வாளை வைத்துக் கொண்டு உன்னால் முடிந்த வரையில் பார்!" என்று வஜ்ரபாஹு
கூறி, தான் வைத்திருந்த இரண்டு வாள்களில் ஒன்றைக் கொடுத்தான்.

பரஞ்சோதி ஆர்வத்துடன் அந்த வாளை வாங்கிக் கொண்டு தன்னுடைய 'கன்னி'ப் போருக்கு ஆயத்தமாய் நின்றான்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 5 Empty 45. மலைக் கணவாய்

Post by ரூபன் Wed 4 Nov 2009 - 5:12

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை

45. மலைக் கணவாய்

சூரியன் உதயமாகி இரண்டு நாழிகைப் பொழுது ஆனபோது, அந்த
மலைக் கணவாய்ப் பிரதேசம் கோரமான ரணகளமாய்க் காட்சியளித்தது. இளம்
கதிரவனின் செங்கிரணங்கள் பாறையில் ஆங்காங்கு தோய்ந்திருந்த கரும்
இரத்தத்தில் படிந்து ரணகளத்தின் கோரத்தை மிகுதிப்படுத்திக் காட்டின. கால்
கை வெட்டுண்டும், தலை பிளந்தும் தேகத்தில் பல இடங்களில் படுகாயம் பட்டும்
உயிரிழந்த ஒன்பது வீரர்களின் பிரேதங்கள் அந்தக் கணவாய் பாதையிலே கிடந்தன.

அப்படிக் கிடந்த உடல்களினிடையே வஜ்ரபாஹு சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.
அந்த உடல்களை அவன் புரட்டிப் பார்த்தும் அவற்றின் உடைகளைப் பரிசோதித்தும்
எதையோ பரபரப்புடன் தேடிக் கொண்டிருந்ததாகத் தோன்றியது.

சற்றுத் தூரத்தில் ஒரு பாறையின் மீது பரஞ்சோதி உட்கார்ந்திருந்தான். அவன்
முகத்தில் மிகுந்த சோர்வும் அருவருப்பும் குடிகொண்டிருந்தன. கையிலே வாளைப்
பிடித்து ஊன்றிக் கொண்டிருந்தான். பக்கத்திலே இரத்தம் தோய்ந்த வேல்
கிடந்தது.

சற்று முன்னால் நிகழ்ந்த கொடுமையான ஒரு சம்பவம் பரஞ்சோதியின் மனக் கண்
முன்னால் நின்றது. சளுக்க வீரர்களில் மூன்று பேரைப் பரஞ்சோதியும்
ஐந்துபேரை வஜ்ரபாஹுவும் யமனுலகுக்கு அனுப்பினார்கள். அவர்களுக்குச்
சற்றுத் தூரத்திலேயே நின்ற ஒன்பதாவது வீரன் சண்டையிடாமல் குதிரையைத்
திருப்பி விட்டுக் கொண்டு ஓடப் பார்த்தான். அப்போது வஜ்ரபாஹு வேலை எறிய,
அது ஓடுகிறவன் முதுகில் போய்ப் பாய்ந்தது, அவனும் செத்து விழுந்தான்.
அதுவரையில் வஜ்ரபாஹுவின் அஸகாய சூரத்தனத்தைப் பார்த்துப் பார்த்து வியந்து
கொண்டிருந்த பரஞ்சோதிக்கு இதைப் பார்த்ததும் பெரும் வெறுப்பு உண்டாயிற்று.
"ஓடுகிறவன் முதுகில் வேல் எறிவதும் ஒரு வீரமா?" என்று வஜ்ரபாஹுவை அவன்
மனம் இகழத் தொடங்கியது.

திடீரென்று 'ஆ!' என்ற சத்தத்தைக் கேட்டு பரஞ்சோதி திரும்பிப் பார்த்தபோது,
வஜ்ரபாஹு ஓர் ஓலையைக் கையில் வைத்துக்கொண்டு படிப்பதைக் கண்டான். பிறகு,
வஜ்ரபாஹு விரைந்து வந்து பரஞ்சோதி உட்கார்ந்திருந்த பாறைக்குப் பக்கத்தில்
நின்ற தன் குதிரைமீது ஏறிக் கொண்டான். பரஞ்சோதி இன்னும் எழுந்திராமல்
உட்கார்ந்திருப்பதைக் கண்டு, "தம்பி! நீ வரப்போவதில்லையா?" என்று கேட்டான்.

பரஞ்சோதி ஆசாபங்கமும் அருவருப்பும் நிறைந்த கண்களினால் ஒரு தடவை
வஜ்ரபாஹுவைப் பார்த்துவிட்டு மறுபடியும் முன்போல் தலையைக் குனிந்து
கொண்டான்.

வஜ்ரபாஹு குதிரையுடன் பரஞ்சோதியின் அருகில் வந்து, "அப்பனே! கைதேர்ந்த
வீரனைப் போல் நீ சண்டையிட்டாய். அதிலாகவத்துடன் போர் புரிந்து மூன்று
ராட்சஸச் சளுக்கர்களைக் கொன்றாய். உன்னைப் பல்லவ சைனியத்தின் குதிரைப்
படைத்தலைவனாக ஆக்கவேண்டும் என்று பல்லவ சேனாதிபதியிடம் சொல்ல
எண்ணியிருக்கிறேன். இத்தகைய சோர்வும் சோகமும் உன்னை இப்போது பிடித்ததன்
காரணம் என்ன?" என்று கேட்டான்.

பரஞ்சோதி மறுமொழி சொல்லவும் இல்லை. தலை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.
வஜ்ரபாஹுவின் முகத்தையே பார்க்கவிரும்பாதவன்போல் கிழக்கே மலைக்கு மேலே
சூரியன் தகதகவென்று ஒளி வீசிச் சுழன்று கொண்டிருந்த திசையை நோக்கினான்.

வஜ்ரபாஹு குதிரையை இன்னும் கொஞ்சம் பரஞ்சோதியின் அருகில் செலுத்திக்கொண்டு
கூறினான்: "தம்பி! உன்னை இந்த நிலையில் பார்த்தால் எனக்கு யாருடைய ஞாபகம்
வருகிறது தெரியுமா? குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் இருதரப்பு
சைனியங்களும் வந்து யுத்தத்துக்கு ஆயத்தமாக நின்றன. யுத்தம் ஆரம்பிக்க
வேண்டிய சமயத்தில் அர்ச்சுனன் வில்லைத் தேர்த்தட்டில் போட்டுவிட்டு,
'எனக்கு ராஜ்யமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்னால் யுத்தம் செய்ய
முடியாது!' என்று சோகமடைந்து விழுந்தான். உன்னை இப்போது பார்த்தால் அந்த
அர்ச்சுனனைப் போலவே இருக்கிறது."

அர்ச்சுனன் என்ற பெயர் காதில் விழுந்தவுடனேயே பரஞ்சோதி வஜ்ரபாஹுவை
நோக்கினான். அவனுடைய கண்களிலே சோர்வு நீங்கி ஒரு புதிய ஒளி சுடர் விட்டது.
வஜ்ரபாஹு நிறுத்தியதும், "அப்புறம் என்ன நடந்தது?" என்று ஆர்வத்துடன்
கேட்டான்.

"நல்ல வேளையாக அர்ச்சுனனுக்குக் கிருஷ்ண பகவான் ரதசாரதியாக
அமைந்திருந்தார். பரமாத்மா அர்ச்சுனனைப் பார்த்து 'அர்ச்சுனா! எழுந்திரு!
நீ ஆண்பிள்ளை! க்ஷத்திரியன்! யுத்தம் செய்வது உன் தர்மம், கையிலே வில்லை
எடு!' என்றார். இந்த மாதிரி இன்னும் பதினெட்டு அத்தியாயம் உபதேசம்
செய்தார்! அதனால் அர்ச்சுனனுடைய சோர்வு நீங்கி மறுபடியும் ஊக்கம்
பிறந்தது..." என்று சொல்லி வஜ்ரபாஹு நிறுத்தினான்.

"பிறகு?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"பிறகு என்ன? அர்ச்சுனன் காண்டீபத்தைக் கையில் எடுத்து நாணேற்றி டங்காரம்
செய்தான். கிருஷ்ணபகவான் பாஞ்ச ஜன்யம் என்கிற சங்கை எடுத்து 'பூம் பூம்'
என்று ஊதினார். உடனே மகாபாரத யுத்தம் ஆரம்பமாயிற்று."

"யுத்தம் எப்படி நடந்தது?" என்றான் பரஞ்சோதி.

"லட்சணந்தான். இங்கே நான் உட்கார்ந்து உனக்குப் பாரத யுத்தக் கதை சொல்லிக்
கொண்டிருந்தால், இப்போது நடக்க வேண்டிய யுத்தம் என்ன ஆகிறது?" என்று
சொல்லி விட்டு வஜ்ரபாஹு தன்னுடைய குதிரையைத் திருப்பிக் கொண்டு அந்த மலைப்
பாதையில் மேலே போகத் தொடங்கினான்.

பரஞ்சோதி துள்ளி எழுந்து வேலையும் வாளையும் எடுத்துக் கொண்டு தன்
குதிரையின் மீது தாவி ஏறினான். விரைவில் அவன் வஜ்ரபாஹுவின் அருகில் போய்ச்
சேர்ந்தான்.

வஜ்ரபாஹு திரும்பிப் பார்த்து, "தம்பி! வந்து விட்டாயா? உன் முகத்தைப்
பார்த்தால், என்னோடு சண்டை பிடிக்க வந்தவன் மாதிரி தோன்றுகிறது;
அப்படித்தானே?" என்றான்.

"பயப்படாதீர்கள் அப்படி நான் உங்களோடு சண்டை செய்ய வந்திருந்தாலும்
பின்னாலிருந்து முதுகில் குத்திவிட மாட்டேன்! முன்னால் வந்துதான்
சண்டையிடுவேன்! போர்க்களத்திலிருந்து ஓடும் எதிரியின் முதுகில் வேலை
எறிந்து கொல்லும் தைரியம் எனக்குக் கிடையாது!" என்று பரஞ்சோதி கசப்பான
குரலில் சொன்னான்.

வஜ்ரபாஹு சற்று மௌனமாயிருந்துவிட்டு, "அப்பனே! ஓடித் தப்ப முயன்றவனை நான்
வேல் எறிந்து கொன்றிராவிட்டால் என்ன நேரும் தெரியுமா?" என்றான்.

"என்னதான் நேர்ந்துவிடும்?"

"நாம் பார்த்த மாபெரும் வாதாபி சைனியம் ஒரு மாதத்திற்குள்ளாகக் காஞ்சி
நகரின் வாசலுக்கு வந்து சேர்ந்து விடும். வைஜயந்தி பட்டணத்துக்கு என்ன கதி
நேர்ந்ததென்று சொன்னேன் அல்லவா?"

"வைஜயந்தியின் கதி காஞ்சிக்கு நேருமா? பல்லவ சைனியம் எங்கே போயிற்று? மகேந்திர சக்கரவர்த்தி எங்கே போனார்?"

"அதுதானே மர்மமாயிருக்கிறது, தம்பி! காஞ்சியிலிருந்து கிளம்பிய மகேந்திர
பல்லவர் எங்கே போனார் என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை! அவர் இன்னும்
பல்லவ சைனியத்தின் பாசறைக்கு வந்து சேரவில்லையாம்!" என்றான் வஜ்ரபாஹு.

பரஞ்சோதி சற்றுச் சும்மா இருந்துவிட்டு, "ஐயா! அப்புறம் அர்ச்சுனன் என்ன செய்தான்? சொல்லுங்கள்!" என்று கேட்டான்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 5 Empty Re: கல்கியின் சிவகாமியின் சபதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 17 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum