ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராம காவியம்

+6
கலைவேந்தன்
ராஜா
ayyaasamy
ரூபன்
சிவா
Admin
10 posters

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

Go down

இராம காவியம் - Page 4 Empty இராம காவியம்

Post by Admin Tue Feb 17, 2009 11:56 pm

First topic message reminder :

இராம காவியம்

தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்

[You must be registered and logged in to see this image.]

ஞானக்கண் கண்ட காட்சி


உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே

Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down


இராம காவியம் - Page 4 Empty Re: இராம காவியம்

Post by Admin Wed Feb 18, 2009 2:01 am

பரதர் கோசலை சந்திப்பு
[You must be registered and logged in to see this image.]

மீண்டும் தேர் ஏறிக் கைகேயின் பொன் மாளிகையை அடைந்தார். அங்குத் தாயாரைக் கண்டு பாத மலர் வீழ்ந்து பணிந்தார்.

கைகேயி, மகனே! நீடு வாழி. இப்போதுதான் வந்தனையா ? தாத்தா சுகமா ? பாட்டி நலமா ? மாமா நலமா ? என்று நலம் விசார்த்தாள்.

பரதர், அம்மா! எல்லாரும் சுகம். எனக்குத் தரும குண நிதியாகிய தந்தையாரை வணங்க வேண்டும் என்ற ஆர்வம் பொங்கி எழுந்து கரை புரளுகின்றது. அறப்பெரு; செம்மலாகிய அப்பா எங்கே ? மக்களின் தனிப்பெருந்தலைவரும். கருணைக்கடலும் தயாநிதியும் ஆகிய தந்தையார் எங்கே ? என்று ஆர்வத்துடன் கேட்டார்.

கைகேயி, மகனே! பரதா! உன் தந்தை மண்ணுலகை வெறுத்துப் பொன்னுலகம் அடைந்தார் என்றாள். இதனைக் கேட்ட பரதர் இடியேறுண்ட நாகம்போல் நடுங்கினார். தந்தையே! தருமகுண தயாநிதியே! அறுபதினாயிரம் ஆண்டுகள் அறநெறி வழுவாமல் அரசு புரிந்து புத்ரகாமேஷ்டி என்ற யாகம் புரிந்து. எங்களை மகவுகளாகப் பெற்று, மார்பிலும் மடியிலும் சுமந்து கண்ணை இமைகாப்பதுபோல் காத்தருளினீரே. அப்பா, தாங்கள் எந்த வுலகம் போனீர் ? இனி என்று தங்கள் திருமுகத்தைக் காண்பேன் ? கேகய நாடு போய் வருக என்று கட்டளையிட்டீரே ? எப்போது வந்தாய் ? என்று கேட்டீரில்லையே. மக்கள் தாயகமே ? மன்னவர் நாயகமே! என்று பல வகையாகப் புலம்பி அழுதார்.

மகனே! உன் தந்தை, ராமா! ராமா! என்று கூறிக் கொண்டே உயிர் துறந்தார்.

பரதர், அரண்மனையில் இத்தனை மருத்துவ நிபுணர்கள் இருந்தும் என் தந்தையார் காப்பாற்றவில்லையே ? கடமையைச் செய்யவில்லையே ?

அம்மா எனக்கு உண்மையான தந்தையும் தாயும் குருவும் உறவும் தெய்வமும் இராமர்தான். அந்த என் தெய்வத்தின் திருவடியில் என் சென்னியை வைத்து வணங்கினாலன்றி என் மனப்புண் ஆறாது, அம்மா! என் வழிபாடு தெய்வம் ராமண்ணா எங்கே ? என்று கேட்டார்.

கைகேயி, பரதா வருந்தாதே. உன் அண்ணன் கானகம் போயுள்ளான். என்றாள்.

பரதர் அம்மா அண்ணா கானகம்போனாரா ? ஆ! ஆ* என்ன வேதனை, தந்தை மாண்ட பின் எனக்கு அயோத்தியில் என்ன வேலை என்று கானகம் போய் விட்டாரா! தாயே! அண்ணாவைப் பெற்றவர் கௌசலை, வளர்த்தவர் தாங்கள் தானே ? என் அண்ணா என் அண்ணிக்குத் திருமாங்கல்ய தாரணம் புரிந்துவுடனே பெற்ற தாயைக்கூட வணங்காமல் தங்கள் திருவடியைத்தானே வணங்கினார். தங்கட்கு என் அண்ணாவிடம் இருந்த பாசமும் அண்ணாவுக்குத் தங்கள் மீது இருந்த நேசமும் அளவிட முடியாததே. அண்ணா கானகம் போகும்போது, அம்மா, நீங்கள் வேண்டாம் என்று தடுக்கவில்லையா ? நீங்கள் தடுத்திருந்தால் அண்ணா கானகம் போயிருக்கமாட்டாரே என்று கூறித் தவித்தார்.

கைகேயி, மகனே, உன் அண்ணா மன்னவரின் மரணத்துக்கு முன்னாலேயே கானகம் போய்விட்டான் என்றாள்.

ஓ! முன் விசுவாமித்திர முனிவர் அழைக்க வேள்விக்காவல் செய்யச் சென்றாரே. அது போல ஒரு தவமுனிவருக்கு உதவி செய்யச் சென்றாரா ?

பரதா! அப்படியில்லை

அம்மா, இந்த அரசபதவியே அல்லலுக்கு உறைவிடமானது. இந்த அரச போகம் வேண்டாம் என்று கருதித் தவநெறி மேற்கொண்டு போனாரே ?

கைகேயி கூறினாள். மகனே! சிறது பொறுமையாகக் கேள். எல்லாம் உன் நலத்துக்காகவே செய்தேன்.

பல ஆண்டுகட்கு முன் உன் தந்தையார் சம்பராசுரனுடன் போர் புரிந்தபோது நான் தேர் செலுத்தினேன். தேர் பள்ளத்தில் இறங்கி அச்சு முரிந்துவிட்டது. அப்போது நான் இடக்கரத்தை அச்சுக்குப் பதிலாக நீட்டி உதவி செய்தேன. அன்று உன் தந்தையார் எனக்கு இரு வரங்கள் தருவேன் என்றார்.

பரதர், அம்மா தாங்கள் தங்கள் கணவனாருக்குச் செய்தது கடமைதானே. கடமை தங்கள் உடமை. தங்கள் நெற்றியில் உள்ள ம்சள் திலகம் வாழ, தாலிக்கயிறு வாழ உதவினீர். இதற்கு இருவருந் தருவேன் என்றது முறையாகாதே. சரி தாங்கள் என்ன வரங் கேட்டீர் ? என்றார்.

பரதா! நீ உன் பாட்டன் வீட்டில் இருக்கும்போது உன் தந்தையார் இராமனுக்கு முடிசூட்டுவிழா ஏற்பாடு செய்தார்.

பரதர், மகிழ்வுன்டு கூறினார். அம்மா! இதனை முதலிலேயே சொல்லக்கூடாதா ? பட்டாபிஷேகத்துக்கு முன் உலகைச் சுற்றி வருவது மரபு. திருமணத்திற்கு முன் காசியாத்திரை போவது போல ஆகும். அம்மா! ஆனந்தம். பரமானந்தம் என் அண்ணாவுக்கு முடி சூட்டுவிழாவா ? எங்கும் நடைபெறாத அளவில் நடத்த வேண்டும். எப்போது ராமர் அண்ணா திரும்புவார் ?

கேகேயி, பரதா! உன் பிதாவிடம் நான், 14 உலகங்களையும் நீ ஆட்சி புரிய வேண்டும் என்ற ஒருவரமும், 14 ஆண்டு மரவுரியுடனும் சடைமுடியுடனும் இராமன் கானகம் போக வேண்டும் என்று மறுவரமும் வாங்கினேன். அந்த வரத்தின்படி இராமன் மரவுரியுடன் கானகம்; போனான். உன் தந்தை வானகம் போனார். எல்லாம் உன் நன்மைக்காக என்றாள்.

இராமபிரான் கானகம் போனார் என்று கொடிய சொல் காதில் புகுமுன்னரே, ஹரே ராம்! என்று கூறி இருகரங்களாலும் பரதர் காதுகளை மூடிக்கொண்டார். கோபாக்னி மூண்டு எழுந்தது. புருவங்கள் நிமிர்ந்து துடித்தன. மூச்சுக்காற்றிலே நெருப்புப் பொறிகள் பறந்தன. கண்களில் உதிரம் சொரிந்தது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இராம காவியம் - Page 4 Empty Re: இராம காவியம்

Post by Admin Wed Feb 18, 2009 2:09 am

பரதர் பதைபதைதார். அவர் அடைந்த வேதனைக்கு அளவில்லை. அம்மா நீ வாங்கியது வரமா ? இல்லை என் கழுத்தை அறுக்கும் அரம். எம்பெருமான் இருக்க வேண்டிய அரியணையில் நான் இருப்பதா ? சிங்கம் அமரும் பீடத்தில் நாய்குட்டியிருக்கலாமா ? கணவனை உயிருடன் வாட்டுகின்ற வரைப் பார்த்திருக்கிறேன். நீர் கணவனைக் கொன்று விட்டீரே! ஆயிரம் நட்சத்திரங்கள் சேர்ந்தாலும் ஒரு சந்திரனுக்கு இணையாகுமா ? தவ்செய்து பிறந்த என் தெய்வம் காட்டில் துயரப்படச் சிறியேன் நகரத்தில் இருப்பதா ? அம்மா! என் தெய்வங்காய்கனியுண்ண நான் பாலும் பழமும், தேனும் நெய்யும் உண்பதா ? என் அண்ணன் கல்லின்மேல் படுக்க நான் ப்சணையில் படுப்பதா ? நோயின்றி என் தந்தை உயிர் துறந்தார். தங்கள்தான் நோய். மாண்டவனுடன் அவனைக் கெணான்ற நோயும் மடியும். நீர் என் தந்தையைக் கொன்று விட்டு மாளாமல் இருக்கிறீர். அதனால், நீர் நோயன்று. பேய். உன்னைக் கொன்று தாயைக் கொன்ற பாவத்தை தவ் செய்து போக்கிச் கொள்வேன். தம்பீ பரதா! தாயைக் கொல்லலாமா ? என்று என் தெய்வாமாகிய அண்ணா என்னை வைவாரே ? அதனால் உயிருடன் விடுகின்றேன். உன்னால் பெண் குலத்துக்கே இழுக்கு. எத்தனைப் பெரிய கொடிய
செயலைச் செய்து மாளாமல் வருந்தாமல் கற்சிலைபோல இருக்கிறீரே என்ன கொடுமை ?


கற்புடைய பெண்கள் கணவனுடன் மாள்வார்களே! நீர் உயிருடன் இருக்கிறீரே. உனக்கு ஒரு கயிறு கிடைக்கவில்லையா ? இப்படி ஒரு விபரீத புத்தியா ? என் உள்ளமாகிய கோயிலில் இராமண்ணாவைப் பிரதிஷ்டை செய்துள்ளேன். என்தெய்வத்துக்கு அல்லவா இத்தனைப் பெரிய கொடுமை செய்துவிட்டாய். அண்ணா இருக்க அடியேன் ஆட்சி புரிவதா ? என்னைப் பெற்று வளர்த்த உனக்கு என் உள்ளத்தை உணரும் திறம் இல்லையா ? அந்தோ! உன் முகத்தில் விழிப்பதும் பாவம் உன்னுடன் பேசுவதும் பாவம் என்று பலப்பல நிந்தனை உரைகூறி அங்கு நின்றால், மேலும் கோபக்கனல் வளரும் என்று கருதி அந்த இடத்தை விட்டு அப்பால் சென்றார் பரதர்.

சூடான, ஒரு பொருளை மற்றொரு பாத்தித்துக்கு மாற்றினால் சூடு ஆறும். அதுபோல், கோபத்தால் கொதிக்கும் ஒருவர் இடம் மாறினால் சீற்றம் ஆறும்.

ஆதலால், பரதர் கைகேயியை வெறுத்த அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு, இராமபிரானை 12 மாதங்கள் கருச்சுமந்து பெற்றெழுத்து கௌசலா தேவியின் திருமாளிகையை அடைந்தார். கணவனாரையும் தன் அருமந்த மகனையும் இழந்து இரு சிறகுகளையும் இழந்த பறவை போல அழுத கண்ணீரால் நிலத்தில் ஏதோ எழுதுபவள்போல் துடித்துக் கொண்டு இருந்த பெரிய தாயருடைய பாத மலர்களில் தம் திருமுடி தோயப் பணிந்தார். அம்மா! அப்பா எங்கே ? என் தெய்வம் அண்ணா எங்கே ? என்று கேட்டு அழுது நின்றார்.

கௌசலை, பரதா! இராகவன் வனம் போன செய்தி உனக்குக் தெரியாதா ? உன் ஆலோசனையின்றியா உன் தாய் இந்த மலையத்தனை கொடுமை செய்தாள் ? செய்துவிட்டு தெரியாதவனைப் போல நடித்துக் கண்ணீர் வடிக்கின்றாயே ? என்றாள். இந்த வார்த்தை வானம் இடிந்து வஜராயுதம் போன்ற அனல் இடி தன் தலையில் வீழ்ந்தது போல்; இருந்தது. அம்மா! அம்மா! என்று பரதர் மீண்டும் கௌசலையின் திருவடியில் வீழ்ந்து அழுது கூறுகின்றார்.

அம்மா! என் தாய்வரம் கேட்டுப் பெற்று என் அண்ணனை வனம் புகுமாறு செய்த இந்தச் செய்தி அணுத்துணையேனும் அடியேனுக்குத் தெரியாது. என் வழிபாடு தெய்வமாகிய ராமண்ணா கானகம் போன செய்தி அணுத்துiணுயேனும் அடியேன் அறிந்திருப்பேனேயானால், பெற்ற தாய் பசியுடன் வருந்த, எவன் தன் மனைவியுடன் தலையணைக்குப் ப்சடைப்பது போல் உணவு உண்டு மகிழ்வானோ அவன் போகின்ற நரகம் போவேன். ராமண்ணா வனம் போன செய்தியைச் சிறிதேனும் அறிந்திருப்பேனானால், திருப்பணி செய்கின்றேன் கும்பாபிஷேகம் புரிகின்றேன் எனது கூறிப் பொது மக்களிடம் வசூல் செய்து அப்பொருளை எவன் அபகரித்துக் கொள்வானோ ? அவன் போகின்ற எரிவாய் நரகம் போவேன்.


Last edited by இளங்கோ on Wed Feb 18, 2009 2:22 am; edited 1 time in total
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இராம காவியம் - Page 4 Empty Re: இராம காவியம்

Post by Admin Wed Feb 18, 2009 2:10 am

கடவுள் இல்லை, புண்ணியம் இல்லை பாவம் இல்லை சுவர்க்கம் இல்லை என்று எவன் பிரசார் செய்து மக்களை மாக்களாக மாற்றுவானோ அவன் போகும் நரகம் போவேன். காவல்துறை நிலையத்தின் அருகில் சிறுநீர் கழித்தால் தண்டனை வரும் என்று அஞ்சி, ஆலயத்தின் அருகிகல் சிறுநீர் கழிப்பானோ அவன் போகின்ற நரகம் போவேன். கன்றுக்குப் பால் விடாமல் ஒட்டக் கறந்து பாலை எவன் பருகுவானோ அவன் போகின்ற நரகம் போவேன். திருட்டு நகைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி, அந்தத் திருடனுக்கு இடந்தருவானோ அவன் போகின்ற நரகம் போவேன்.

ஊக்கமது கைவிடேல் - ஊக்கத்தைத் தருகின்ற மதுவைக் கைவிடாதே என்று விபரீதப் பொருள் கூறுவானோ அவன் அடையும் நரகம் போவேன். ஆறு குளங்களில் அம்மணமாகக் குளிக்கின்றவன் போகின்ற நரகம் போவேன். ராமண்ணா கானகம் போகும் செய்தி, சிறிதளவேனும் எனக்குத் தெரிந்தால் செய்யும் அறத்தை எவன் குறுக்கே நின்று தடுக்கின்றானோ அவன் போகின்ற நரகத்தகப்வேன். ராமண்ணா கானகம் போகும் தகவல் சிறிதேதனும் அறிந்திருப்போனின், உயிர்க் கொலை செய்து ஊன் உண்பவர் போகின்ற நரகம் போவேன். ராமண்ணா கானகம் போன செய்தி கடுகளவேனும் நான் அறிந்திருந்தால், செய்நன்றி கொன்றவன் போகின்ற நரகம் போவேன். ராமண்ணா கானகம் போன செய்தி அடியேன் அறிந்திருந்தால் தாலி கட்டிய தருமபத்தினியைத் தடியால் அடிப்பவன், போகின்ற நரகம் போவேன். ராமண்ணா கானகம் போன செய்தி சிறிதேனும் அறிந்திரப்போனால் கைக்கூலி வாங்க மன்றோர் சொன்னவன், போகின்ற நரகம் போவேன். ராமண்ணா கானகம் போன செய்தி நான் அறிந்திருந்தேன் என்றால், நிழல் தரும் சாலை மரங்களை எவன் வெட்டுவானோ, அவன் போகின்ற நரகத்திற்குப் போவேன். ராமண்ணா கானகம் போன விஷயம் அடியேனுக்கு அணுவளவேனும் தெரிந்திருந்தால், பொய் சாட்சி சொன்னவன் போகின்ற நரகம் போவேன். ராமண்ணா கானகம் போன செய்தி நான் அறிந்திருந்தேன் என்றால் பிறர் பொருளுக்குப் பேயாய்ப் பறந்தவன் போகின்ற நரகத்துக்குப் போவேன். ராமண்ணா கானகம் போன செய்தி அடியேன் அறிந்திருந்தேன் என்றால் பிறர் மனைவியை விரும்பும் பேதை போகின்ற நரகம் போவேன். ராமண்ணா வனம் போன தகவல் எனக்குத் தெரிந்திருந்தால் மேலும் என்ன நரகங்களுக்கும் போவேன் என்று கூறிப் பரதர் கௌசலையின் பாத மலரை பணிந்தார்;.

கௌசலை பரதரை எடுத்துக் கண்ணீரைத் துடைத்து மகனே! வருந்தாதே, நீ மிதித்த மண் கூடத்தவறு செய்யாது நீ உத்தமமான சித்தம் உடையவன். விதி விளையாடிவிட்டது என்றாள்.

வசிட்ட முனிவர் அங்கு வந்தார். பரதர் வசிட்டருடைய திருவடியில் வீழ்ந்து அழுதார். தசரதருடைய உடலைக் கண்டு மிகவும் வருந்தியழுதார். பின்னர் தசரதருடைய திருமேனிக்கு அபிஷேகம் செய்து அலங்கரித்து மயானத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

வசிட்டர் பரதா! உன்னைச் சக்ரவர்த்தி. புத்திரன் அல்லன் என்று கூறிவிட்டார். அதனால் ஈமச்சடங்கு நீ செய்தல் கூடாது என்றார். பரதர் பெரிதும் வருந்தினார். சத்ருக்னர் இறுதிச் சடங்குகள் செய்தார். 10 நாள் சடங்குகள் செய்யப் பெற்றன.

வசிட்டர் பரதா! சக்ரவர்த்தியின் வாக்கின்படி நீ முடிசூட்டி அரசு செய்வாயாக என்றார்.

பரதர் இந்த வார்த்தையை கேட்டு மிகவும் வருந்தினார். குருநாதா! எம்பெருமான் அமரும் அரியணையில் சிறியேன் இருப்பது முறையா ? பெரியோர்களே! எம்பெருமானைக் காட்டில் இருந்து அழைத்து வந்து முடி சூட்டுவேன. இராமர் அயோத்தி வந்தால் நானும் வருவேன். இல்லையேல் நானும் அண்ணனுடன் வனவாசம் புரிவேன். இதுதான் என் முடிவு என்றுகூறி, ஆடம்பரமான ஆடை அணிகலன்களை அகற்றினார். மரவுரி உடுத்திக் கொண்டார். சத்ருக்னரும் மரவுரி உடுத்திக் தவக்கோலம் புனைந்து கொண்டார்.

அயோத்தில் உள்ள மாந்தர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் வாகனங்களில் ஏறிப் புறப்பட்டார்கள்.

பரதர் நடந்து சென்றார். சத்ருக்னர் பரதரைப் தொடர்ந்து சென்றார். 16 மைல் சென்றார்.

உலகமாளப் பிறந்த உத்தமராகிய இராமபிரான் என் பொருட்டு நடந்து கானகம் சென்றாரே, பாவியாகிய என்னால் இத்துயரம் ஏற்பட்டதே என்று கூறி அழுகின்றார், திசை நோக்கித் தொழுகின்றார். காய் கனி உண்டாரில்லை. இராமபிரான் இருந்த தருப்பைப் புல்லுக்கு அருகில் புழுதியில் இருந்து வருந்தினார்.


Last edited by இளங்கோ on Wed Feb 18, 2009 2:20 am; edited 1 time in total
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இராம காவியம் - Page 4 Empty Re: இராம காவியம்

Post by Admin Wed Feb 18, 2009 2:12 am

பரதர் குகனைச் சந்தித்தல்

பரதர் அறுபதினாயிரம் அக்ஷரோணி சேனைகளுடன் கங்கைக் கரையையடைந்தார்.

கங்கைக் கரையில் சிருங்கிபேரம் என்ற நகரில் குகன் என்ற வேடர் தலைவன் இருந்தான். இயமனையும் வெல்லுந் திறமையுடையவன். விற்போரிலும் வாட்போரிலும் வல்லவன். அஞ்சா நெஞ்சு படைத்தவன். எண்ணற்ற படகுகளையுடையவன். ஊனும் மீனும் உண்பவன். துர்நாற்றம் வீசும் உடம்பையுடையவன். ( இராமபிரான்மீது இவன் கொண்டுள்ள அன்பை ஏற்கனவே அறிந்திருக்கின்றோம். )

பரதர் பாட்டன் வீட்டில் இருந்து தாய்க்கு உளவு சொல்லி, அரசாட்சியைக் கவர்ந்து கொண்டதோடு, அமைதி பெறாமல் கானகத்துக்கும் வந்து, அண்ணனுக்கு இடர் செய்கின்றான் போலும் என்று எண்ணிய குகன் சீறி எழுந்தான். சங்க நாதம் செய்தான். வேடர்களே! வீறு கொண்டு எழுங்கள். வில்லை வளைத்து நில்லுங்கள். எதிர்த்தவரைக் கொல்லுங்கள்.

தோழர்களே! நம்முடைய உதவியின்றி இவர்கள் கங்கா நதியைக் கடக்க முடியுமா ? யானைப் படையைக் கண்டு நாம் அஞ்சுவோமா ? பரம ஏழையாகிய என்னை இராமபிரான் தம்பீ! என்றாரே. அந்த ஒன்றுக்காக நான் உயிரைக் காணிக்கையாகத் தரவேண்டாமா ? நாடு கொடுத்த நாயகனுக்கு காடுங்கொடுக்காமல், படையுடன் வரும் கொடுமை இவ்வுலகில் உண்டா ? அடியுங்கள், உதையுங்கள், கொல்லுங்கள் என்று கூறிக் குகன் ஆரவார் செய்தான்.

போர்ப் பறையறைவதைக் கேட்ட பரதர். சுமந்திரரே! அண்ணாவைக் காணாமல் வெந்து நொந்து வருகின்ற நம்மீது போர் தொடுக்கின்றவன் யாவன் ? என்று கேட்டார்.

சுமந்தரர், எம் பெருமானே! கங்கைக் கரைக்கு அதிபன் எண்ணில்லாத நாவாய்களை உடையவன். குகன் என்னும் வேடர் கோமான். நீர் இராமருக்கு இடர் செய்ய வருவதாக எண்ணிப் போருக்கு ஆயத்தம் புரிகின்றான் என்றார்.

பரதர் கடவுளே! வேடனுக்குக்கூட என் மீது சீற்றமா ? என்ன பாவ் செய்தேனோ ? என்று கூறிச் சேனைகள நிறுத்திவிட்டுத் தான் மட்டும் வருகின்றார். சத்ருக்னர் அவரைத் தொடர்ந்து வருகி;ன்றார்.

குகப் பெருமான் தொலைவில் வருகின்ற பரதரைக் கண்ணுற்றார். மரவுரியுடனும் அழுத கண்ணுந் தொழுத கையுமாகக் கல்லும் உருகுமாறு உள்ளம் உருகித் தவக்கோலத்துடன் வரும் உத்தம பரதனைப் பார்க்கின்றார்.

ஆ! ஆ! கெட்டேன். முன்னே வருகின்றவர் இராமண்ணாவைப் போல் இருக்கின்றாரே! பின்னே வருபவர் இலட்சுமணரைப்போல் காட்சி தருகின்றாரே! அளவற்ற துன்பத்துடன் இராமபிரான் சென்ற திசை நோக்கித் தொழுகின்றாரே! ராமண்ணாவிடம் ஒருநாள் பழகிய எனக்கே நற்குணங்கள் இருக்குமாயின் ராமண்ணாவுடன் பிறந்த பரதரிடம் தீயகுணம் இராதுதானே! நான் அவசர புத்தியுடையவன். நல்லவரைத் தீயவர் என்று எண்ணிவிட்டேன் என்று கூறிப் பரதரைச் சந்தித்து, அவருடைய மலரடியில் வீழ்ந்து வணங்கினான். பரதர் குகனைத் தழுவிக் கொண்டார்.

பரதரே! நீ ஏன் தவக்கோலத்துடன் வனம் வந்தாய் ? என்று வினாவினான்.

பரதர், அண்ணலே! மனுக்குலத்தில் மூத்தவன்தான் அரசுபுரிய வேண்டும் என்ற மரபு உண்டு. அந்த முறையைச் சக்ரவர்த்தி கை நழுவவிட்டார். அண்ணா இருக்க, இளையவானாகிய நான் ஆட்சி புரியலாமா ? அதனால், ராமபிரானை அழைத்துக் கொண்டு போய், முடிசூட்ட எண்ணி வந்தேன். என்றார்.

குகன் இந்த வசனத்தைக் கேட்டு மகிழ்ச்சியினால் ஒரு குதிகுதித்தான், ஆனந்தக் கண்ணீர் வடித்தான். பரதா! தாய் வரம் கேட்க, தந்தை தந்த மகத்தான அரச பதவியை உதறித் தள்ளி விட்டுத் தவக் கோலத்துடன் வந்த உனக்கு, ஆயிரம் இராமர்கள் ஒன்று சேர்ந்தாலும் இணையாகுமா ? உன்னைப் போன்ற உத்தம குணம் பொருந்திய தம்பி 14 உலகங்களிலும் இல்லை என்றான்.

பரதர் அண்ணே! குகப் பெருமானே! அய்யா எங்குத் தங்கியிருந்தார் ? என்று கேட்டார். இராமர் தங்கியிருந்த ஆசிரமத்தைக் குகன் காட்டப் பரதர் கண்டு வருந்தினார். குகனைப் பார்த்து இலட்சுமணன் எங்குப் படுத்து உறங்கினார் ? என்று பரதர் கேட்டார்.

பரதா! இலட்சுமணன் படுத்து உறங்கினானா ? எம்பிரானும் எம்பிராட்டியும் உறங்க, இலட்சுமணன் வில்லை ஊன்றி. நின்று, கண்ணீர் சொரிந்து கொண்டு, வெப்பமான நெடு மூச்சுடன் விடியும் வரை நின்று கொண்டிருந்தான். கண்கள் இமைக்காமல் நின்று காவல் புரிந்து கொண்டிருந்தான் என்றான்.

சேனைகள் படகுகளில் போய் அக்கரை சேர்ந்தன. அரச குடும்பத்தினர் தனிப் படகில் பிரயாணம் புரிந்தார்கள்.

குகன் கன்றைப் பிரிந்த காராம்பசுமைப்போல் துயரமடைந்து அங்கு அமர்ந்திருந்த கௌசலையைப் பார்த்து இவர் யார். என்று குகன் கேட்டான். அன்பே கேள், உலகங்களை ஈன்ற பிரம தேவனை, நாபியில் ஈன்ற பரவாசு தேவனைப் பன்னிரு மாதங்கள் சுமந்து பெற்று, உலகமெல்லாம் தனக்கு உரியவனாக இருந்து, சிறியேன் பிறந்ததால் அத்தனையும் இழந்த துர்ப்பாக்கியவதி கௌசலா தேவி என்றார்.

குகன் கௌசலையின் பாத மலர் வீழ்ந்து பணிந்து அழுதான். கௌசலை, பரதா, குழந்தைபோல் விம்மியழுதிடும் இந்த உத்தமன் யார் ? என்று கேட்டாள். பரதர், அம்மா! இவர் இராமண்ணாவுக்குத் தம்பி, இலட்சுமணனுக்கும் சத்துருக்னனுக்கும் எனக்கும் தமையன் குகன் என்றார். கௌசலை, ஐவரும் ஒற்றுமையாகப் பல்லாண்டு அரசு புரிந்து வாழுங்கள் என்று வாழ்த்தினாள். மற்றைத் தாய்மார் களையும் அறிமுகம் செய்தார் பரதர்.

இலட்சுமணர் பரதருடைய படைகளைக் கண்டு பிழைபடக்கருதிச் சீறி எழுந்தார். துன்பத்தை ஓர் உருவமாக எழுதியதை ஒத்த பரதர் இராமர் திருவடியில் வீழ்ந்து அழுதார்.

அப்பா நலமா ? என்று இராமர் கேட்டார். சத்தியத்தை நிலைநாட்டி விண்ணுலகம் போனார் என்று பரதர் கூறினார் தந்தையாரை நினைத்து நெடிது புலம்பி இராமர் அழுதார். வசிட்டர் தேற்றத் தேறி இங்குலி என்ற கிழங்கைச் சுட்டுப் பிண்டம் தந்தார். சக்ரவர்த்திக்குப் பிண்டம் போட காற்படி அரிசிக்கு வழியில்லை இதுதான் உலக வாழ்வு.

பரதர், அண்ணா நீர் வந்து முடிசூட்டு ஆட்சிபுரிய வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்தார். இராமபிரான், தம்பி! 14 ஆண்டு வனவாசம் புரிய வேண்டும் என்ற நியதியைக் கைவிடக்கூடாது. என் சொல்லைத் தட்டாதே. 14 ஆண்டுகள் 14 நாள்களாகக் கழித்து வருவேன். அரசு புரிவேன். நீ அயோத்திக்குப்போய் கடமையைச் செய் என்றார்.

தேவர்கள் அசீரியாக இராமர் வனவாசம் புரிதல் வேண்டும் என்று கூறினார்கள்.

பரதர் எம்பிரானுடைய பாதுகைகளைப் பெற்றுக் கொண்டு பலமுறை இராமபிரானைத் தொழுது அழுது புறப்பட்டார்.

அயோத்திக்கு அருகில் நந்திக் கிராமத்தில் மணி மண்டபம் அமைத்து, இராமருடைய பாதுகைகளை வைத்து, அப்பாதுகைகளுக்கு முடிசூட்டி வழிபடுவாராயினார். தென் திசையையன்றி வேறு திசையை நோக்காமல் பொறிபுலன்களை அவித்து உப்பில்லாத க்சியைப் பருகி, இராமரின் பாதுகைகளுக்கு தினந்தினம் ஆயிரம் மந்திரங்களால் அர்ச்சனை புரிந்து இடையறாத இராம பக்தியுடன் தவநெறியில் இருந்தார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இராம காவியம் - Page 4 Empty Re: இராம காவியம்

Post by Admin Wed Feb 18, 2009 2:13 am

விராதனின் காதலும் சாபமும்

தசரதருடைய மரணத்துக்குக் காரணம் யாது ?

மகனுடைய பிரிவினால் தசரதர் மரணம் அடைந்தார் என்று எல்லாரும் கூறுகின்றார்கள். இது பொருந்தாது. ஏன் ?

தசரதர் இராமனுக்கு முடிசூட்டிக், கானகம் போக முடிவு செய்தார். இந்த ஏற்பாட்டின்படி இராமருக்கு முடிசூட்டியிருந்தால் சக்ரவர்த்தி மறுநாள் தவம் புரியக் கானகம் சென்றிருப்பார். இப்போதுதான் பிள்ளைப் பிரிவு நேர்ந்திருக்கும்.

கைகேயியின் திட்டப்படிப் பரதருக்கு முடி சூட்டியிருந்தால் இராமபிரான் போகின்ற கானகத்துக்குத் தசரதரும் இராமபிரானுடன் சேர்ந்து போயிருக்கலாம். இதனால், மகனுடைய பிரிவு ஏற்பட்டிருக்காது. நன்கு சிந்தியுங்கள். தசரதர் ஏன் மரணமடைந்தார். ?

மது குலத்தில் மூத்த மகனுக்குத்தான் முடிசூட்ட வேண்டும். இது வழிவழியாக வந்த மரபு. இந்த மரபின்படி இராமருக்குத்தான் முடிசூட்ட வேண்டும் கைகேயிக்குத் தந்த வரத்தின்படி பரதருக்கு முடிசூட்ட வேண்டும். இது வாய்மை. இராமருக்கு முடிசூட்டினால் வாய்மை அழிகின்றது. பரதருக்கு முடிசூட்டினால் மரபு அழிகின்றது. ஒருபுறம் வாய்மை, மறுபுறம் மரபு. இருதலைக் கொள்ளி எறும்புபோல் தவித்தார் தசரதர். ஆனால், வாய்மையைக் காப்பாற்றினால் மரபு கெடுகின்றது. மரபைக் காப்பாற்றினால் வாய்மை கெடுகின்றது. இந்த இடர்ப்பாட்டால் இதயம் வெடித்து தசரதர் மாண்டார் என உணர்க. இதனை வாலி கூறுகிறான்.

பரதர் அயோத்தியை அடைந்தபின், இராமபிரான் சீதையுடனும் இலட்சுமணனுடனும் புறப்பட்டு அத்திரி முனிவருடைய ஆசிரமத்தை அடைந்தார். காமம், கோபம், மயக்கம் என்று மூன்று குற்றங்களும் இல்லாதவர் அத்திரி முனிவர்.

இவருடைய மனைவி அநுசூயை. அசூயை இல்லாதவள் அநுசூயை. இம்மாதரசி மும்மூர்த்திகளையும் குழந்தைகளாகச் செய்தவள். சமானமில்லாத கற்புக்கரசி.

அத்திரி முனிவரையும் அநுசூயை தேவியையும் மூவரும் பணிந்தார்கள். தங்கள் துயரம் தணிந்தார்கள். அந்த ஆசரமம் பூமரங்கள் சூழ்ந்து குளிர்ந்து இருந்தது. காலமில்லாத காலத்தில் மரங்கள் பழுத்திருந்தன. நறுமணம் வீசியது.

அத்திரி முனிவரும் அநுசுயா தேவியும் அவர்கட்குப் பழங்கள் தந்து பசியாரச் செய்தார்கள், அநுசூயா தேவி, சீதையைத் தழுவி, அன்புக் கண்ணீரால் நனைத்து, மகளே! ஜனகராசகுமாரியே, மரவுரியுடன் கணவரைப் பிரியாது கானத்தை அடைந்தனையே ? நீ கற்புக்கரசி, அணிகலன்கள் அத்தனையும் துறந்து வெற்றும்புடன் இருக்கின்றனையே ? நீ சுமங்கலி, கைவளையின்றி இருக்கக்கூடாது. இவை என்னுடைய அணிகலன். நீ என் மருமகள். இந்தா, இந்த அணிகலன்களை அணிந்துகொள் என்ற வரிந்து கூறி, உச்சி முதல் உள்ளங்காலி வரை நிரம்பப் பாரமான அணிகலன்களை அணிவித்தாள்.

அம்மா! உன் கற்புநெறி வாழ்க. ஒரு சமயம் நீ கணவனப் பிரிந்திருக்க நேரும், உனக்குப் பசியெடுக்காத வரம் தருகின்றேன், என் தவப்புதல்வியே! உன் புகழ் நீ வாழ்க, என்று அருள்புரிந்தாள்.

இராமபிரான் அத்திரி முனிவரின் தவச்சாலையில் ஓர் இரவு தங்கினார். மறுநாள் காலை முனிவரை வணங்கி அங்கிருந்து புறப்பட்டார், தண்டக வனத்தை அடைந்தார்.

வீராதன் என்ற ஒரு கொடியவன் அங்கு வந்தான். கரிய பெரிய உருவத்தையுடன். எதிர்த்த மன்னவர்களைக் கொன்று தின்று கொழுத்தவன். சமான மில்லாத ஆற்றல் படைத்தவன். தேர்களை மலைப்பாம்பில் கோத்து தேர்மலை, புலி மாலை, யானை மாலை, கரடி மாலைகளைத் தரித்தக் கொண்டிருப்பான்.

அவன் முத்தலைச் சூலத்தை ஏந்தியிருப்பான். அந்தச் சூலத்தின் ஒரு புறத்தில் 16 யானைகளையும், நடுவில் உள்ள கதிரில் 32 சிங்கங்களையும், மற்றொரு புறத்தில் 16 யாளிகளையும் கோத்திருப்பான், சூடுகின்ற வடையைப் பிள்ளைகள் ஒரு குச்சியில் குத்தி வைத்திருப்பது போல.

பசி வந்தால் ஒவ்வொன்றாகத் தின்பான். மீண்டும் யானை யாளிகளைப் பிடித்துச் சூலத்தில் குத்திச் கொள்வான். மலைபோன்ற பெரிய உருவமுள்ள அவன் இராம லட்சுமணரைத் தின்னும் பொருட்டு வந்தான். சீதா தேவியைக் கண்டான், மையல் கொண்டான். ஆ! ஆ! இவள் என்ன அழகு. இவள் என்ன தங்கச் சிலையா ? என்று கூறிக் கருடன் கோழிக்கு;சைக் கவர்வது போல் பிராட்டியாரை எடுத்துக் கொண்டு விண்ணில் பறந்து சென்றான். தேவி பதறிக் கதறி அழுதாள்.

இராமரும் இலட்சுமணரும் அவன் மீது பாணமழையைத் தூவினார்கள். விராதன் பாணங்களைத் தன் கைகளால் விலக்கி ஏ மனிதச் சிறுவர்களே! நான் பிரம தேவரிடம் அளவில்லாத வரங்களைப் பெற்றவன். ஏன்னால் சாதிக்க முடியாத கருமங்கள் இல்லை. இந்த அழகிய பெண்மணியை எனக்கு அளித்த நன்றிக்கடனுக்காக உங்கள் உயிரைத் தந்தேன். ஓடிப் போங்கள் என்றான்.

இராமர் அவனுடைய நெற்றியில் ஒரு பாணத்தை ஏவினார். அவன் அறிவுமயங்கி நின்றாள. இராமரும் இலட்சுமணரும் அவனுடைய தோள்மீது ஆரோகணித்தார்கள். மயக்கத் தெளிந்தபின் இராம லட்சுமணரைச் சுமந்து விண்ணில் பறந்தான். அதனால், சீதாதேவி பெரிதும் துயரம் அடைந்தாள்.

கருடன் மீது ஏறி விண்ணில் உலாவுதலைப் போல மகிழ்ந்தார் லட்சுமணர், அண்ணா! எம்பிராட்டி ஏங்கி அழுகின்றார். நீர் இவனுடன் விளையாடுகின்றீர். இவனைக் கொல்ல வேண்டும் என்றார். இராமர் அவனுடைய நீண்ட கரத்தை வாளல் வெட்டினார். இலட்சுமணர் மற்றொரு கரத்தை வெட்டினார். மலைபோல் நிலத்தில் வீழ்ந்த விராதன் கடிக்க வந்தான். இராமச்சந்திர மூர்த்தி ஞானமே உருவான சேவடியால் உதைத்தருளினார். அவனுடைய கரிய பெரிய உடம்பிலிருந்து அழகிய ஒரு பொன் வடிவம் வெளிவந்து இந்த வீரனைத் தொழுது துதி செய்தது.

எம்பெருமானே! வேதங்கள் துதி செய்கின்ற பாதமே உலகெங்கும் விரிந்தது என்றால் ஏனைய திருமேனியை அளவிட முடியுமோ ? மடுநடுவில் கஜேந்திரன் என்ற யானையை முதலை பற்றியபோது, மெய் தளர்ந்து ஆதிமூலமே தோன்றி அருள் புரிந்தனையே.

தாயைக் குழந்தையறியும், குழந்தையைத் தாயறிகின்றாள். இறைவனே! உயிர்களை நீயறிகின்றாய். உயிர்கள் உன்னை அறிவதில்லை. இது என்ன மாயம் ? என்ன நியாயம் ? வேதத்தின் மீதும், வேத கீதத்தின் மீதும், மெய்யான போதத்தின் மீதும், அருள் நாதத்தின் மீதும் விளங்கும் உன் பாதத்தை இச்சிறியேன் மீது வைத்தனையே! அடியேன் என்ன புண்ணியம் செய்தேனோ ? உலக மாதாவாகிய எம்பிராட்டியை நாயினேன் விரும்பினேன். இந்த பெரும்பிழையை மன்னித்து அருள் புரிவாய். சேய் செய்த பிழையைத் தாய் பொறுப்பது நியாயந்தானே ? கருணைக் கடலே! உன் திருவடிக்குப் பல கோடி வணக்கம் என்று பலவாறு விராதன்துதி செய்தான். இராமர் விராதனுடைய துதி வசனங்களைக் கேட்டுப் புன்முறுவல் புரிந்தார். உன் வரலாறு யாது ? என்று வினவினார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இராம காவியம் - Page 4 Empty Re: இராம காவியம்

Post by Admin Wed Feb 18, 2009 2:13 am

விராதன் கூறுகின்றான்.

எம்பிரானே! நான் ஒரு கந்தருவன். என் பெயர் தும்புருத்தன். குபேரனுடைய சபையிலே நடனம் புரிகின்ற அரம்பைக்கு நட்டுவனாகப் பணிபுரிபவன். ஓருநாள் குபேரனுடைய சபையிலே அரம்பை நடிக்கும்போது பாடினேன். அதனால் அரக்கனாகப் பிறந்தேன். இராமர் இடைமறித்து, அன்பனே, பாடுவது ஒரு கலை அதற்காக நீ ஏன் அரக்கனாகப் பிறந்தாய் ? என்றார்.

ஐயனே! அரம்பை மீது காதல் கொண்டு பாடினேன் இசை ஒரு தூய கலை. அதனால், குபேரன் என்னை இரக்கமின்றி அரக்கனாகச் சபித்தான் என்றான்.

சிறைச்சாலைக்கு ஒரு மன்னவன் சென்றான். நீ ஏன் சிறைக்கு வந்தாய் ? என்று கேட்டான். சிறைவாசி, தும்மினேன். அதனால் சிறைவாசம் பெற்றேன் என்றான்.

மன்னவன், சிறைவாசியே! தும்மியது ஒரு குற்றமா ? தும்மியதற்காகச் சிறைத்தண்டனை வர நியாயம் இல்லையே! என்றான். நான் பெட்டியைத் திறந்து பொருளைத் திருடினேன் அப்போது தும்மினேன். அதனால் சிறைத் தண்டனை கிடைத்தது என்றான். விராதன் கூற்று இது போல உள்ளது என உணர்க.

விராதன் துதி செய்து விண்ணுலகம் பெற்றான். இராமர் தம்பி இலட்சுமணா! நமது சிற்றன்னை மீது கோபித்தனையே! நான் வனவாசம் வந்ததனால் இவனுக்கு உய்வு கிடைத்தது என்றார்.

சரபங்கர் வீடு பேறு இவர் கற்பங்கள் பல தவ்செய்தவர் சரப - பிராண வாயு, பங்கம் - தடுத்து நிறுத்துதல், பிராணவாயுவைத் தடுத்து நிறுத்தித் தவம்
புரிந்தவர்.

சரம் - பாணம், மன்மத பாணத்தை வென்றவர் என்பது மற்றொரு பொருள்.

சரபங்க முனிவரைப் பிரமலோகத்துக்கு அழைத்து வருமாறு பிரமதேவன் இந்திரனை அனுப்பினான். ஊர்வசி முதலிய தேவ மகளிர் சூழ, இந்திரன் ஐராவத யானை மீது வந்து சரபங்க முனிவரைப் பணிந்து, முனிபுங்கவரே! அளவற்ற தவ செய்த உம்மைப் பிரமதேவர் அழைக்கின்றார் வருக என்று அழைத்தான்.

சரபங்கர், இந்திரனே! பல கற்பகங்கள் தவ் செய்து முத்தி நலம்பெற இருக்கின்றேன். பிரமபதம் அழியும் தன்மை உடையது. எனக்குப் பிரமலோகம் தேவையில்லை. நீ போகலாம் என்றார். இந்திரன் திரும்பும்போது அங்க இராமர் வந்தார். இராமபிரானை வணங்கித் துதி செய்து இந்திரன் பொன்னுலகம் போனான்.

பின்னர் இராமபிரான், சீதாதேவி, இலட்சுமணர் மூவரும் சரபங்கருடைய ஆசிரமத்தை அடைந்தார்கள்.

இராமச்சந்திர மூர்த்தியைக் கண்ட சரபங்கர், மழையைக் கண்ட சகோரப் பறவைபோல மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார். தன் தவம் பலித்தது என்று எண்ணினார். ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

என்னை அழைத்து வருமாறு பிரமதேவர் இந்திரனையனுப்பினார். நான் பதவியை விரும்பாதவன். பிரமபதத்தை மறுத்துவிட்டேன். உன் கருணையினால் நான் முத்தி நலம் பெறுவேன் என்று கூறினார்.

சரபங்கரும் அவருடைய மனைவியும் ஓமத்தீ வளர்த்து அந் ஞானக்கினியில் மூழ்கினார்கள். அவர்களுடைய ஆத்மா பரமாத்மாவில் கலந்துவிட்டது. இந்த அதிசயத்தைக் கண்டு இராமர் வியப்புற்றார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இராம காவியம் - Page 4 Empty Re: இராம காவியம்

Post by சிவா Mon Jun 15, 2009 2:13 pm

தண்ட காருண்யம்

[You must be registered and logged in to see this image.]



மூவரும் தண்டக வனத்தையடைந்தார்கள்.

தண்டக வனத்தில் பலவகையான முனிவர்கள் வாழ்ந்தார்கள்.

வாலக்கில்லியர் என்ற முனிவர்கள், அங்குட்ட அளவில் உள்ளவர்கள். இவர்கள் பிரம குமாரர்கள். இவர்கள் அளவற்ற பெருந்தவசீலர்கள். ஆதித்தன் அருகில் இருந்து ஆதித்தனுடைய வெயிலை மிதமாக்கி உலகுக்கு அருள்பவர்கள்.

முருகப் பெருமானுடைய பன்னிரு கரங்களில் ஒரு கரம் இவர்களைத் தாங்குகின்றது.

இராமரைக் காண இந்த வாலக்கில்லிய முனிவர்களும் வந்தார்கள்.

தண்டகாருண்யத்தில் வசிக்கும் முனிவர்கள் பல நியமம் பூண்டவர்கள். நிலத்தைத் தொடாமல் கயிற்றின் மேல் இருப்பவர் சிலர். தழையை மட்டும் உண்பவர் சிலர், பத்ராசனர் சிலர் தானியங்களைப் பல்லில் கொறித்து உண்பவர்கள, தந்தூலகர் சிலர் தூங்காமலேயே இருப்பவர். அசையாகியர் மௌன நிலையில் உள்ளவர்கள்.

இத்தகைய சிறந்த முனிவர்கள் இராவணாதி அவுணர்களால் இரவும் பகலும் வேதனைப்பட்டு நிலை குலைந்து துயரத்தால் துள்ளித் துடித்துக் கொண்டிருந்தார்கள்.

பல புலிகளுக்கு இடையே உலவும் மான்களைப் போல் துன்புற்றார்கள்.

இந்த முனிபுங்கவர்கள் சாபாநுக்கிரக சக்தி படைத்தவர்கள் இவர்கள் நினைத்தால் அசுரர்கள் அனைவரும் ஒரு வினாடியில் அழிவார்கள். ஆனால், கோபத்தை வேருடன் களைந்து சாந்த சீலர்களாய் விளங்குவதனால் துயரம் அநை;தார்கள்.

தண்டக வனத்துத் தபோதனர்கள் காகுத்தனைக் கண்டவுடன் கதிரவனைக் கண்ட கமலங்களைப்போல் அகமும் முகமும் மலர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இராமச்சந்திர மூர்த்தியே, உனக்கு அபயம் அபயம்

இரக்கமில்லாத அரக்கர்களால் வேதம் ஓதுகின்றோமில்லை. வேள்வி செய்கின்றோமில்லை. மந்திர ஜெபம் செய்கின்றோமில்லை. தவம் புரிகின்றோமில்லை. அதனால், நாங்கள் அந்தணக் தன்மையை இழந்துவிட்டோம். எங்களைக் காப்பது நின் கடன் என்று கூறிச் சரணமடைந்தார்கள்.

இராமபிரான், தவ முனிவர்களே இனி, அரக்கருக்கு அஞ்ச வேண்டாம். என் கணை துணை புரியும். உங்கள் ஆசிர்வாதத்தால் இராவணாதி அரக்கர்களை அழிப்பேன். என் வாக்கு சத்திய வாக்கு. நான் பொய் சொன்னதில்லை. அரக்கர்களாகிய என் பாணமாகிய அக்னியில் சாம்பலாகச் செய்வேன் என்றார்.

இந்த இனிய மொழிகளைக் கேட்டு முனிவர்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள்.

தண்டக வனத்திலே இராமர் பத்து ஆண்டுகள் வசித்தார். நெருப்பு இருந்தால் பனி அணுகாது. இராமர் இருந்ததனால் அரக்கர்கள் கொடுமை அகன்றது.

இராமர், தம்பி இலட்சுமணா ஜானகி நம் வனவாசம் மிகவும் பயனுடையதாக ஆயிற்று. பசுவின் பொருட்டும், அந்தணர் பொருட்டும், எவன் தன் உயிரைத் தியாகம் புரிவானோ, அவன் மும்மூர்த்திகளும் வணங்கத் தக்கவனாகின்றான். பரம சாதுக்களாகிய இந்தத் தவ சீலர்களுக்கு உதவி செய்யும் பெரும் பாக்கியம் நமக்கு கிடைத்தது. இது பெரும் புண்ணியம் என்றார்.

இராமரைக் காண பல முனிவர்கள் வந்தார்கள். ஆனால் அகத்திய முனிவரைக் கண்டு வணங்க, இராமர் விரும்பினார்.

சுதீட்சினி முனிவர், அகத்திய முனிவரின் உறைவிடத்தைத் தெரிவிக்க, இராமர் அகத்தியருடைய ஆசிரமத்தையடைந்தார். என்றுமுள தென் தமிழை உலகுத்குத் தந்த பெருந்தவமுனிவராகிய அகத்திய முனிவர், இராமரை வரவேற்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். ஆசியுரை கூறினார். நன்கு அவரை உபசரித்தார். சிவ கீதையை உபதேசித்தார். சிறந்த வில்லையும் உயர்ந்த கணைகளையும் தந்தார். இவை இராவைண சம்மாரத்துக்குப் பயன்பட்டன.

அகத்தியருடைய அருளைப் பெற்று மூவரும் பஞ்சவடியை நோக்கிப் புறப்பட்டார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இராம காவியம் - Page 4 Empty Re: இராம காவியம்

Post by சிவா Mon Jun 15, 2009 2:17 pm

ஜடாயு சந்திப்பு

[You must be registered and logged in to see this image.]





காசிப முனிவருக்கு விநதை வயிற்றில் அருண பகவானும் கருட பகவானும் பிறந்தார்கள். இவர்கள் பறவைகளுக்கு வேந்தர்கள். தெய்வப் பறவைகள. பேசும் திறமை படைத்தவர்கள்.

அருண பகவான் பேராற்றல் படைத்தவர். ஆதித்த பகவானுக்கு ரத சாரதியாக இருந்து கொண்டு புரிபவர். இவருக்குச் சம்பாதி, ஜடாயு என்று இரு புதல்வர்கள்.

பலபல ஆண்டுகள் சடைபோல் பின்னிக்கொண்டு நீண்ட காலம் வாழ்ந்ததனால் ஜடாயு என்று பேர் பெற்றார். இந்தப் பறவை மன்னன் ஒரு கருமலையில் பவளக் குன்று வீற்றிருப்பது போல் கம்பீரமாக வீற்றிருந்தார். இராமர் அவரைக் கண்டு., கொடிய ஓர் அரக்கன் பறவை வடிவத்தில் நமக்கு இடர் செய்ய வந்திருக்கின்றான் போலும் என்று எண்ணினார்.

ஜடாயு இராம இலட்சுமணர்களை நெருங்கி, குழந்தைகளே நீங்கள் யார் ? என்று வினாவினார்.

நாங்கள் தசரத குமாரர்கள் என்று இராமர் கூறினார்.

இதைக் கேட்ட ஜடாயு, மக்களே தசரதன் என் உடன் பிறவாச் சகோதரன். அவன் நலமாக இருக்கின்றானா ? என்று வினாவினார்.

இராமர் என் தந்தையார் பரகதி அடைந்து விட்டார் என்று கூறினார்.

இதைக் கேட்ட ஜடாயு பதைபதைத்துக் கண்ணீர் வடித்து உள்ளம் துடித்துப் புலம்பி அழுதார்.

தம்பி தசரதா உன்னுடைய கொடைத் தனத்திற்குச் கற்பகம் தோல்வி அடைந்தது. உன்னுடைய குளிர்ந்த வெண் கொற்றக்குடைக்குச் சந்திரனும் தோற்றுவிட்டான். உன்னுடைய பொறுமைக்கு நிலமகளும் தோற்றுவிட்டாள். உன்னுடைய மறைவினால் கற்பகமும், முழுமதியும், பூமியும் மகிழ்ச்சி அடையும். நான் உடல் நீ உயிர். உடலைவிட்டு உயிர் பிரிந்து விட்டது. இனி ஒருபோதும் வாழமாட்டேன். குழந்தைகளே தீ வளர்த்திக் கொடுங்கள். நான் நெருப்பில் விழுந்து மாண்டு போவேன் என்றார்.

இராமர் அவரை வணங்கி, பெரியப்பா நாங்கள் வாழும் பொருட்டுத் தாங்கள் மாளாது வாழ வேண்டும் என்று வேண்டினார்.

இலட்சுமணர், தந்தையே சிறிய தாய்க்குத் தந்தையார் கொடுத்த வரத்தின்படிப் பரதனுக்கு நாட்டை அளித்து இவர் கானகத்தை அடைந்தார் என்றார்.

தந்தையின் சொல்லைப் பரிபாலிக்கத் தம்பிக்கு அரசைக் கொடுத்த உங்கள் தியாகத்தை மிகவும் பாராட்டுகின்றேன். இந்தப் பெண்மணி யார் ? என்று கேட்டார் ஜடாயு.

நான் இலட்சுமணன். இவர்கள் ஜனக ராஜ குமாரி. அண்ணாவுடைய தர்மபத்தினி என்று கூறினார்.

ஜடாயு சீதையைப் பார்த்து. கற்புக்கு அரசியே நின் புகழ் என்றும் வாழ்க. கட்டிய ஒரு துணியுடன் கணவனுடன் வந்தனையே உன் கற்பின் திறத்தை யாரால், எவ்வாறு புகழ முடியும் ? மற்ற பெண்களென்றால், என்னைத் தாயார் வீட்டில் விட்டுவிட்;டுப் போய் வாருங்கள். வனவாசம் முடிந்ததும் திரும்பி வரும்பொழுது என்னை அழைத்து வாருங்கள் என்று கூறுவார்கள். அம்மா ஊசி போன வழியே நுநூல் போவது போல், கணவன் வந்த கொடிய கானகத்திற்கு உன் மெல்ல பாதங்கள் நோவ வந்தனையே உன் கற்புத்திறம் வாழ்க என்று வாழ்த்தினார்.

ஜடாயு பறந்து நிழல் கொடுத்து வழிகாட்டி வர, இராம லட்சுமணர்கள் கோதவரிக் கரையிலுள்ள 5 மாமரங்கள் சூழ்ந்த தபோவனமாகிய பஞ்சவடியில் தங்கினார்கள்.

பஞ்சவடி- மூவரும் புண்ணிய ஏழு நதிகளில் ஒன்றாகிய கோதவரியில் அகமர்ஷண மந்திரம் சொல்லி மூழ்கி மகிழ்ந்தார்கள். அந்த நதி சான்றோர்களின் கவியைப்போல் தெளிவாக இருந்தது.

சக்ரவர்த்தி திருக்கமாரர்களாகிய இராம இலட்சுமணரும், ஜனக ராஜகுமாரியாகிய சீதா தேவியும் விலங்குகளம், அசுரர்களும் நிறைந்த கொடிய கானகத்தில் வசிப்பதைக் கண்டு நிலமகள் கண்ணீர் வடித்து அழுவதைப்போல் இருந்தது அந்த மகாநதி.

சூர்ப்பணகை சூர்ப்பணகை - முறம் போன்ற நகங்களை உடையவள். பிரம தேவருடைய புதல்வர் புலஸ்திய முனிவர். புலஸ்திய முனிவருடைய புதல்வர் விச்சிர வசு. விச்சிர வசுவின் புதல்வன் குபேரன். அதனால், குபேரனுக்கு வைச்ரவணன் என்ற பெயர் உண்டாயிற்று.

அசுர வேந்தனாகிய சுமாலியின் மகள் கேகசி. இந்தக் கேகசிக்க விச்சிர வசு முனிவரால் பிறந்தவர்கள் இராவணன் கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பணகை ஆகியோர்.

இராவணனுக்குத் தந்தை அந்தணர். தாய் அரக்கி. இவ்வாறு இரு ஜாதி ஒட்டாகப் பிறந்தவன் இராவணன். சூர்ப்பணகை அசுர குலம் அடியோடு அழியக் காரணமானவள். இராமாயண மாகிய காவியத்தை நீட்டி விட்டவர்கள் இரண்டு உதவாக்கரையான பெண்கள். ஒருத்தி கூனி, மற்றெநூருத்தி சூர்ப்பணகை இராமாயணமாகிய காவியத்தில் சூர்ப்பணகை கலந்தபின் ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் யுத்த காண்டம் இந்த மூன்றரைக் காண்டங்கள் விரிவு பெற்றன.

ஒரு மனிதனுக்கு நோய் பிறக்கும்பொழுதே உடன் பிறந்து உரிய காலத்தில் வெளிப்பட்டு அவனை அழிப்பதுபோல் சூர்ப்பணகை இராவணனோடு பிறந்து அவனைக் குலத்துடன் மூல நாசம் பெற அழத்துவிட்டாள்.

சூர்ப்பணகையின் கணவன் பித்யுத்ஜிஹ்வா. இவன் இராவணனைவிட அதிகம் படித்தவன். இவன் இருந்தால் நமக்குப் பெருமை வராது என்று எண்ணிய இராவணன், தங்கையின் கணவன் என்று கூடப் பாராமல் கொன்று விட்டான். கணவன் மாண்ட செய்தி அறிந்து சூர்ப்பணகை மகிழ்ச்சி அடைந்தாள். நீ எங்கே சென்றாய் ? யாருடன் உறவாடினாய் என்று கேட்பதற்கு ஆள் இல்லை என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இராம காவியம் - Page 4 Empty Re: இராம காவியம்

Post by சிவா Mon Jun 15, 2009 2:21 pm

சூர்ப்பணகை அடக்குவாரின்றித் தன் விருப்பம்போல் திரிந்த அந்த இடம் ஜனஸ்தானம் என்று பெயர் பெறும்.

இராவணனுடைய தாய் கேகசி. இவளுடைய தங்கை கும்பீனசி. இவளடைய புதல்வர்கள் கரன், திரிசிரன், தூஷணன். கரன் அரனிடம் அறவற்ற வரங்களைப் பெற்றவன், பேராற்றல் படைத்தவன்.

இராமர் வனவாசம் பதிமூன்று ஆண்டுகளும், இரண்டு மாதங்களும் கழிந்தன. எஞ்சியிருப்பது பத்து மாதங்கள்தான்.

ஒருநாள் இராமபிரான் அதிகாலையில் எழுந்து கோதாவரியில் நீராடி, அதன் கரையில், ஒரு சந்தன மரத்தின் கீழ் அமர்ந்து எங்கும் நிறைந்த இறைவனை நினைத்து தியானம் செய்து கொண்டிருந்தார். அந்தக் கானகத்தில் அடக்குவாரின்றி விருப்பம்போல் திரிந்து கொண்டிருந்த சூர்ப்பணகை அழகின் சிகரமாகிய இராமபிரானைக் கண்டாள். அவள் உள்ளத்தில் காமாக்கினி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

ஆ ஆ இவர் என்ன அழகு ? ஆயிரம் மன்மதர்கள் சேர்ந்தாலும் இவருடைய பாத தூளுக்கு நிகராகார். பிரம தேவன் பெரிதும் முயன்று, இவரை அழகின் கருவூலமாகப் படைத்தான் போலும். புதிய வீட்டில் கண்ணேறு கழிப்பதற்குத் தொடங்க விடுகின்ற விகாரப் பதுமை போல் என்னைப் படைத்தான். இவரை அடைந்து இன்பத்தை நுகர்வேன் என்று எண்ணினாள்.

தன் மாயா சக்தியால் அழகிய தங்கப் பதுமைபோல், தேவ அரம்பைபோல் வடிவத்தை எடுத்துக் கொண்டாள். அண்ணம் போல் நடந்து இராமபிரான் திருமுன் நின்றாள். அவளைக் கண்டவுடன் இராமபிரானுடைய அடி மனம் தீயவள் என்று உணர்த்தியது.

அம்மா உன் வரவு எங்களுக்குத் தீமை இல்லாமல் இருக்கட்டும். நீ எந்த ஊர் ? உன் பேர் என்ன ? உன் உறவினர் யாவர் ? என்று வினாவினார்.

சூர்ப்பணகை, பெருமானே வணக்கம். நான் பிரம தேவருடைய பேரன் விச்சிரவசுவினுடைய புதல்வி. என்னுடைய அண்ணன் குபேரன். வெள்ளி மலையை அள்ளி எடுத்த இராவணனுடைய தங்கை என் பெயர் காமவல்லி. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கன்னியாக இருக்கிறேன் என்றாள்.

இராமபிரான், பெண்மணியே இராவணன் அசுர வேந்தன். நீ அவன் தங்கையானால் அசுர வடிவாக இருக்க வேண்டும். நீ தெய்வ மகளாகக் காட்சி அளிக்கின்றனையே என்று கேட்டார்.

பெருமானே நான் தவம் செய்து அசுர வடிவத்தை மாற்றி இத்தெய்வ வடிவத்தைப் பெற்றேன். என்றாள் சூர்ப்பணகை.

இராமர், பெண்மணியே மூன்று உலகங்களையும் ஆளுகின்ற இராவணேசுரனுடைய தங்கையாகிய நீ இந்தக் கொடிய காட்டினில் தனியாக வந்த காரணம் யாது ? என்று கேட்டார்.

என் சித்தத்தில் தித்திக்கும் புத்தமும் போன்றவரே நான் அசுரர்களின் தன்மையைக் கண்டு வெறுத்துத் தேவருக்கும் முனிவருக்கும் அன்புடையவளாக இருக்கின்றேன். தங்களைக் கண்டவுடன் அனலில் வைத்த மெழுகுபோல் என் உள்ளம் உருகுகின்றது. தாங்கள் இதய ராஜா, நான் இதய ராணி.. . தங்களை நான் கரும்பென விரும்புகின்றேன். என்னை நீர் மனைவியாக ஏற்றுக் கொள்ளும் என்று சூர்ப்பணகை அழகாகப் பேசினாள்.

அம்மா நீ விச்சிரவசு என்ற அந்தணரின் மகள். நான் தசரத ராஜகுமாரன். அந்தணரின் மகளை அரசன் மணந்து கொள்ளக்கூடாது. அன்றியும் இராவணன் முதலிய உன் தமையனார்களின் அனுமதி இன்றி உன்னை நான் மணந்து கொள்வது பிழை. ஆதலால், நீ என்னை விரும்புவது முறையன்று என்றார் இராமர்.

அன்பு அதிகமானால் குலம் தடை செய்யாது. காந்தர்வ மணத்தால் நாம் இருவரும் கூடி மகிழலாம்.

இவ்வாறு சூர்ப்பணகையும் இராமரும் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது சீதாதேவி இராமரை நாடி வருவதைச் சூர்ப்பணகை பார்த்தாள். பார்த்து விம்மிதம் அடைந்தாள். இவள் நம்மைப் போல் இடையில் வந்தவளாக இருக்க வேண்டும். பிரமதேவன் அழகிற்கு ஒரு வரம்பாக இந்த இருவரையும் படைத்தான் போலும். கரும்பை மென்றவன் இரும்பை மெல்லுவானா ? இந்த அழகியை மருவுகின்ற இவர் என்னை விரும்புவாரா ? என்று எண்ணினாள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இராம காவியம் - Page 4 Empty Re: இராம காவியம்

Post by சிவா Mon Jun 15, 2009 2:26 pm

இராமரைப் பார்த்து பெருமானே இங்கு வருகின்ற இவள் கொடிய அரக்கி. முனிவர்களை மயக்கி மோசம் செய்கின்றவள். மாயத்தில் வல்லவள். மிகவும் பொல்லாதவள். இவளை நம்பாதீர்கள் என்று கூறினாள்.

சீதையைப் பார்த்து, சிவ பூiஜயில் கரடி புகுந்தது போல் நானும், என் கணவரும் பேசி மகிழ்கின்ற பொழுது இங்கு ஏன் வந்தாய் ? இந்த இடத்தைவிட்டு ஓடிப்போ என்று விரட்டினாள்.

சீதாதேவி அஞ்சி இராமரைப் பற்றிக் கொண்டாள். இராமர், இந்த அரக்கியுடன் உரையாடுவது பிழை. இது பெரும்கேடு செய்யும் என்று எண்ணி ஏ அரக்கியே நெருப்பைத் தின்னப் புழு விரும்புவதுபோல் நீ என்னை விரும்புகின்றாள் என்று கூறிவிட்டு, சீதாதேவியின் கரமலரைப் பற்றிக்கொண்டு பர்ணசாலையை அடைந்தார்.

சூர்ப்பணகை மிகுந்த காமாக்கினியால் வெந்து தம் இருப்பிடம் சென்றாள். அன்று இரவெல்லாம் விரக வேதனையினால் துயரமுற்றாள்.

மறுநாள் ஆதித்தன் உதிக்கின்ற நேரம். இராமபிரான் அதிகாலையில் எழுந்து கோதாவரியில் மூழ்கி அதன் கரையில், ஒரு மரத்தடியில் தியானம் செய்து கொண்டிருந்தார்.

பர்ணசாலையில் சீதாபிராட்டியார் கணவனாருக்குப் பாத பூசை செய்ய மலர்களை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். இளைய பெருமாள் வாள் ஏந்தி இருண்ட சோலையில் காவல் புரிந்து கொண்டிருந்தார். சூர்ப்பணகை காமக்கனலால் வெந்து, நொந்து, பர்ணசாலையில் இருக்கும் ஜானகியைக் கண்டாள். காவல் புரியும் இலட்சுமணரைக் கண்டாளில்லை. அழகே ஒரு வடிவாகிய இவள் இருக்கின்றவரை இராமன் தன்னை விரும்பமாட்டான். நல்ல நாதசுரம் கிடைக்கவில்லை யானால் அபஸ்வர நாதசுரத்தை அமைக்குமாறுபோல் இவள் இல்லையானால் இராகவன் என்னை விரும்புவான் என்று எண்ணி, சூர்ப்பணகை சீதாதேவியைக் கொன்று தின்னும் பொருட்டுப் பாய்ந்து வந்தாள்.

இலட்சுமணர் ஒரு சிறிது பாராமுகமாக இருந்திருப்பாரானால் சீதாதேவி கொடியவளின் வயிற்றுக்குள் போயிருப்பாள். இராமாயண வரலாறே திசை திரும்பிப் போயிருக்கும். இலட்சுமணர், நில்லடி என்று கூறி, ஓடி வந்து அவள் தலைமயிரைப் பற்றிப் பெண்ணைக் கொல்லக்கூடாது என்று கருதி, அவள் வயிற்றில் உதைத்து, வடிவாளை உருவி அவளுடைய மூக்கையும், செவிகளையும், நகில் காம்புகளையும் அரிந்து வீசனார்.

சூர்ப்பணகை பெரும் துயரம் அடைந்து வலி தாங்காமல் ஓ வென்று வாய்விட்டுக் கதறி அழுதாள். அண்ணா இராவணா வெள்ளி மலையை அள்ளி எடுத்த உன் தங்கைக்கு இந்தக் கதி வந்ததே அண்ணா கும்பகர்ணா மருகனே இந்திரஜித்தே அண்ணா கரனே நான் பட்ட வேதனையை யாரிடம் கூறுவேன் ? என் செய்வேன் ? அற்பமான மனிதர்களால் எனக்கு இந்தத் துயரம் வந்தது என்று கூறி, கதறி அழுது கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த இராமபிரான், நீ யார் ? உன்னுடைய மூக்கை அறுத்தவர் யார் ? என்று வினாவினார்.

சூர்ப்ணகை, ஐயனே நேற்று நான் தங்களுடன் பேசியது நினைவில்லையா ? என்று கேட்டுக் கண்ணீர் வடித்தாள்.

நேற்று அழகாக இருந்தாயே இன்று விகாரமாக இருக்கின்றாயே என்று கேட்டார் இராமர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இராம காவியம் - Page 4 Empty Re: இராம காவியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum