\
function showhide1(id){
if (document.getElementById){
obj = document.getElementById(id);
if (obj.style.display == "none"){
obj.style.display = "";
} else {
obj.style.display = "none";
}
}
}

கடந்தசெப்டம்பர்
மாதத்திற்குப் பின் இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய்யா ராஜபக்சே
தனது உரைகளில், பேட்டிகளில் மேற்குலக நாடுகளை வறுக்கத் தொடங்கினார். சீனா
மட்டும் எங்களுக்குப் போதும் என்ற ரீதியிலும் பேசினார். அமெரிக்க
குடியுரிமை பெற்ற அவரின் திடீர் மாற்றத்திற்கான காரணம் கடந்த ஞாயிறு வரை
புதிராகவே இருந்தது. புதிர் திங்கட்கிழமையன்று அவிழ்ந்தது:
“செப்டம்பர் மாதம் இறுதி வாரம் அமெரிக்க நியூயார்க் நகரில் நடந்த
ஐ.நா. பொது அவை அமர்வில் பங்கேற்கச் சென்றிருந்த போது அமெரிக்க அதிகாரிகள்
தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட யுத்த குற்றங்கள் (War Crimes) தொடர்பாக
நீண்ட நேரம் அவரை விசாரித்திருக்கிறார்கள். விமான நிலையத்தில்
வந்திறங்கும் ஒருவரை குடிவரவு அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று
குடைச்சலான கேள்விகளைக் கேட்பதென்பது சற்றே அவமானம் தருகிற அனுபவம்தான்.
அதுவும் இலங்கையில் சர்வ வல்லமை கொண்டவராய் உலா வரும் கோத்தபய்யாவுக்கு
அது உடல் முழுதும் கம்பளிப் புழுக்கள் ஊர்வது போலவே
இருந்திருக்கும்”.
கோத்தபய்யாவுக்கு நடந்தது பற்றி இலங்கை அரசு அப்போது வாய்
திறக்கவில்லை. இது மாதிரியான விஷயங்களை மோப்பம் பிடிக்கும் ஊடகங்கள் கூட
இது பற்றி எழுதவில்லை. இப்போது அமெரிக்கா சென்றிருக்கும் தமிழர் இன
அழித்தலில் மூன்றாவது குற்றவாளியான போர்க்கால இராணுவத் தளபதி
சரத்பொன்சேகாவை “சம்மன்ஸ்’ என்ற விசாரணை அழைப்பு இல்லாமலேயே
குறுக்கு விசாரணை செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பதன்
பின்னணியில்தான் கோத்தபய்யா செய்தியும் வெளிவந்துள்ளது. செப்டம்பரில்
கோத்தபய்யா அமெரிக்காவால் விசாரிக்கப்பட்ட செய்தியை இலங்கையின் வெளியுறவு
அமைச்சர் ரோகித பொகொலகம்மா பூர்வாங்கமாக ஒத்துக் கொண் டிருக்கிறார்.
இப்போது இராணுவத் தளபதி பொன்சேகாவை இறுக்க வேண்டி செய்யப்பட்டிருக்கும்
அமெரிக்க முடிவின் உண்மையான இலக்கும் கோத்தபய்யா தான் எனத் தெரிய
வருகிறது. கோத்தபய்யாவுக்கெதிராய் யுத்தக் குற்ற சாட்சியம் சொல்லும்படி
பொன்சேகாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
கோத்தபய்யாவை அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் குறிவைக்க பல காரணங்கள்
சொல்லப்படுகின்றன. முதலாவது வெள்ளைக் கொடியேந்தி, இறுதி ரத்தக்களறியை
தவிர்க்கும் ஒரே நோக்குடன், ஆயுதங்களை மௌனப்படுத்துதல் (Silencing the
Guns) தொடர்பாக பேச்சுவார்த்தைகளுக்குச் சென்ற நடேசன், புலித்தேவன்
ஆகியோரது படுகொலை. இந்த முயற்சியில் பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா
மூன்று நாடுகளும் ஐ.நா. அமைப்பும் விடுதலைப் புலிகளது அனைத்துலகச்
செயலகத்தினது வேண்டுகோளின் பேரில் அதிகாரப்பூர்வமற்ற வகையில்
ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவை ஈடுபடுத்துவதில் தமிழகத்
தலைவர்களும் இணைந்திருந்தனர். களத்திலிருக்கும் கட்டளைத் தளபதியை வெள்ளைக்
கொடி ஏந்தி சந்திக்கச் சொல்லுங்கள் என்று அதிபர் ராஜபக்சே கூறிய
பின்னர்தான் ஐ.நா. அமைப்பு புலிகளுக்கு செய்தி கூறியிருக்கிறது. ஆனால்
அதிபர் கொடுத்த வாக்குறுதியையும் மீறி, நடேசன், புலித்தேவன் மற்றும் உடன்
சென்றவர்களை சுட்டுக் கொல்லும் உத்தரவை பிறப்பித்தது கோத்தபய்யா. இது
அப்பட்டமான யுத்தக்குற்றம், நம்பிக்கைத் துரோகம். இரண்டையும்
மன்னிப்பதற்கு அமெரிக்க-மேற்கு நாடுகள் தயாராக இல்லை.
இரண்டாவது விடுதலைப் புலிகளை அழித்தபின் தமிழர் இனச் சிக்கலுக்கு
நீதியானதொரு அரசியற் தீர்வினை ராஜபக்சே அரசு முன்வைக்குமென்றும், அதன்
முதல் நிலையாக வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து
மக்களையும் தாமதமின்றி தத்தமது வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்குமென்றும்
உள்ளபடியே மேற்குலகம் நம்பியது. அந்த நம்பிக்கையைச் சார்ந்துதான்
விடுதலைப் புலிகளை அழிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூர யுத்தத்தை
அந்நாடுகள் ஏற்றுக் கொண்டன. ஆனால் யுத்தம் முடிந்த பின் தன் சுயமுகத்தை
சிங்களப் பேரினவாதம் காட்டியது, காட்டி வருகிறது. கோத்தபய்யாதான் இந்தக்
கடும் போக்கின் பிதாமகன், சூத்திரதாரி. அவரைப் பொறுத்தவரை முல்லைத் தீவு
முள்ளிவாய்க்கால் தமிழர் இன அழித்தலின் தொடக்கம் மட்டுமே. இனி
எக்காலத்திலும் இலங்கை நிலப்பரப்பிற்குள் “தமிழருக்கான
அரசியல்” என ஒன்று இருக்கக்கூடாது என்ற நிலைப் பாட்டில் நின்று
கொண்டு இனவெறி மதம் பிடித்து இயங்குகிறார். அவரது இயக்கத்தில் அங்கு
அரங்கேறி வரும் தொடர் இன அழித்தல் பயங்கரங்களை மேற்குலகம் பார்க்கத்
தவறவில்லை. அவர்களை மிகவும் ஆத்திரத்திற்குள்ளாக்கியிருக்கிற சில
செயற்பாடுகள் இவை:
கடந்த மூன்று வாரங்களில் மட்டுமே வவுனியா வதை முகாம்களிலிருந்து
2100-க்கும் மேலான தமிழ் இளைஞர்கள்- இளம்பெண்கள் தனியாகப்
பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள், என்ன
ஆனார்கள் என்பது அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்திற்கே தெரியவில்லை.
கோத்தபய்யாவின் உத்தரவின் பேரில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம்
என மேற்குலக நாடுகள், ஐ.நா. அமைப்புகள் அஞ்சுகின்றன.
தமிழர்கள் பாரம் பரியமாக பல்லாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்த தாயக
நிலப்பரப்பொன்று இருந்தது, இருக்கிறது, அது வடக்கு-கிழக்கு இலங்கை என்ற
அடிப்படையை மேற்குலக நாடுகள் ஏற்கின்றன. இனப்பிரச்சனை அரசியற் தீர்வுக்கு
இதனை ஏற்றுக் கொள்வது முக்கியமெனவும் அந்நாடுகள் ராஜதந்திர வழிகளில்
வலியுறுத்தி வருகின்றன. ஆனால் “தமிழர் தாயகம்’ என்ற கோட்பாடு
இனி ஒருபோதும் எழாதபடி தகர்த்து விட வேண்டுமென்பதில் கோத்தபய்யா வரிந்து
கட்டி நிற்கிறார். முதற்கட்டமாக தமிழ்மக்களின் புனர்வாழ்விற்கென உலக
நாடுகள் இதுவரை வழங்கியுள்ள பெரு நிதியைக் கொண்டு யாழ்குடாவிலேயே பலாலி
தொடங்கி தொண்டைமானாறு வரையான செழித்த நிலப்பரப்பில் 60,000 ராணுவக்
குடும்பங்களை நிரந்தரமாய் குடியமர்த்தும் ஏற்பாடுகளை கோத்தபய்யா முடுக்கி
விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் தென் னிலங்கையில் இருந்தால்
காடைத்தனங்களில் ஈடுபடுவார்கள் என அஞ்சப்படும் “ரவுடி’ ராணுவ
அணிகள்தான் அங்கு நிரந்தரமாக்கப்படப் போகிறார்கள். உலக நாடுகள் கேட்டால்,
“தமிழர் தாயகத்தில் சிங்களர்களை குடியமர்த்தவில்லை… நாட்டின்
ராணுவத்தினரையும் அவர்தம் குடும்பங்களையும் தான்
அமர்த்துகிறோம்…” என புத்திசாலித் தனமாகப் பதில்
சொல்வார்கள். நமக்கு கிடைக்கிற தகவல்களின்படி இந்த விபரம் கொழும்பிலுள்ள
இந்திய அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் உரிய அக்கறையுடன்
புதுடில்லி அரசுக்குத் தெரிவிக்கிறார்களில்லை. கொழும்பிலிருக்கும் இந்திய
தூதர் அலோக் பிரசாத்தை அகற்றி விட்டு ஓர் இதயமுள்ள தமிழ் அதிகாரியை
நியமிக்கும் மிகக்குறைந்தபட்ச அக்கறையை புதுடில்லிக்காரர்கள் செய்தாலே
இன்று அது பெரிய விஷயமாக இருக்கும்.
வதை முகாம்களில் தொடர்ந்தும் மக்களை இருத்தி வைப்பதற்கு எந்த
முகாந்திரமும் இல்லை என்பதில் மேற்குலக நாடுகள் உறுதியாக உள்ளன. எல்லா
மக்களும் அவர்தம் வாழ்விடங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டுமென
ஏறக்குறைய அனைத்து மேற்குலக நாடுகளும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ஆனால்
கோத்தபய்யா கொள்கைப்படி முல்லைத்தீவு -கிளிநொச்சி மாவட்ட மக்களை இன்னும்
ஓராண்டுக்கேனும் வதை முகாம்களில் வைத்திருந்து சிதைக்க வேண்டும்.
மேற்சொன்ன, மற்றும் மேலும் சில காரணங்களால் ஆத்திரமுற்றுள்ள அமெரிக்க
மேற்குலக நாடுகள் கோத்தபய்யாவை குறிவைக்கத் தொடங்கியுள்ளன. கோத்தபய்யாவை
யுத்தக்குற்றவாளி என உலகம் அறிவித்தால் கூட பெரிதாக என்ன நடந்து விடப்
போகிறது? அவரைக் கைது செய்வது சாத்தியமா? அதனால் பாதி அழிந்துவிட்ட
தமிழருக்கு என்ன பயன்? -என்றெல்லாம் கேள்விகள் எழும்.
அதிகாரத்தின் பீடங்களில் எவரும் நிரந்தரமாக அமர்ந்திருந்ததாய் நவீன கால
வரலாறு இல்லை. அங்கும் ஆட்சி மாறுகிற நாளொன்று வரும். அப்போது அனைத்துலகக்
காட்சிகளும் மாறும். கோத்தபய்யா, ராஜபக்சே, பொன்சேகா மூவரையுமே உலக
நீதிமன்றத்திடம் ஒப்படைக்கச் செய்யும் அழுத்தத்தை உலகநாடுகள் நிச்சயம்
இலங்கைக்கு ஏற்படுத்தும்.
இரண்டு, புலிகளின் பயங்கரவாதம் என்ற பழைய பல்லவி காற்றலைகளிலிருந்து
அகன்று சிங்களத்தின் போர்க்குற்றங்கள் குறித்த பறை முழக்கம் உலகெங்கும்
அதிரும். இலங்கை அவமானப்படும். உலகின் முன் கொடிய போர்க்குற்றவாளிகளாய்
அவர்கள் நிற்பார்கள். அதுவே தமிழ் மக்களது அரசியல் சுயநிர்ணய உரிமைக்கு
உலக அங்கீகாரம் பெற்றுத் தரும் புதிய தொடக்கமாகவும் அமையும். ஆதலால்
தமிழர்களே, நம்பிக்கைகள் முற்றுமாய் இற்றுப் போகவில்லை, அற்றுப்
போவதுமில்லை. வரலாறு புதிய தோழமைகளோடு நம் இனத்தை விடுவிக்கும்.
கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளது பொது பாராளுமன்றத்தின் உயர் அதிகாரிகள்
இருவரும், இரண்டு நாடுகளது வெளியுறவுத்துறை அதிகாரிகள் இருவரும் அவர்தம்
இந்தியாவிலுள்ள தூதரகப் பிரதிநிதிகள் சிலருமாய் சென்னை வந்திருந்தார்கள்.
அவர்கள் தத்தமது பாராளுமன்றங்களுக்கு மிக முக்கியமானதோர் ஆய்வறிக்கை
சமர்ப்பிக்க வேண்டிய கடமையின் பேரில் வந்திருந்தார்கள். அவர்களோடு சுமார்
மூன்று மணிநேரம் உரையாடும் அரிய வாய்ப்பு கிட்டியது. அவர்கள் ஆய்வு
செய்யத் தலைப்பட்டது இரண்டு விஷயங்கள். முதலாவது: “இலங்கை மீது மனித
உரிமைகள், அரசியல் தீர்வு தொடர்பாக மேற்குலக நாடுகள் எடுக்க விழையும்
எல்லா நடவடிக்கைகளுக்கும் எதிராக நிற்பது சீனாவும் இந்தியாவும். சீனாவின்
செயலை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்திய வெளியுறவுக் கொள்கையின்
தமிழர் மீது கரிசனையற்ற போக்கினைத்தான் புரிந்து கொள்ள
முடியவில்லை”. ஒரு கட்டத்தில் ஓர் அதிகாரி தலையை அசைத்துக் கொண்டே
சொன்னார்: “இந்தியா எங்களை களைப்படையச் செய்கிறது”.
இரண்டாவதாக அவர்கள் அறிய விரும்பியது:
(நினைவுகள் சுழலும்) nakkheeran