உலக அளவில் இணைக்கப்பட்ட பல கம்ப்யூட்டர்களை நாம் இன்டர்நெட் என
அழைக்கிறோம். ஆனால் இமைப்பொழுதில் எப்படி எங்கோ ஒரு மூலையில் உள்ள
கம்ப்யூட்டர் சர்வரில் உள்ள தகவல்கள் நம் கம்ப்யூட்டரை வந்தடைகின்றன?
இன்டர்நெட்டை முதலில் பயன்படுத்தும் அனைவரின் மனதிலும் இந்த சந்தேகம்,
வியப்பு எழுவது இயற்கையே. ஒரு சிலர் மேலும் துருவி ஆய்வு செய்து,
நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்கின்றனர்.
சிலரோ அதுதான் இன்டர்நெட் என்று கிடைக்கும் தகவல்களைப் பற்றிய
சுவராஸ்யத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். இங்கு அந்த இன்டர்நெட்டில் என்னதான்
நடக்கிறது என்று பார்ப்போம்.
நம் கைகளுக்குள் உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள தகவல்கள், படங்கள்,
வீடியோக்கள் எப்படி நம் இல்லத்தில் ஒரு அறையில் உள்ள கம்ப்யூட்டருக்குள்
வருகிறது என்று பார்க்கலாம்.
கம்ப்யூட்டரை இயக்கி, இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து, பிரவுசரின்
அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர்
தட்டுகிறீர்கள்.
பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் – இன்டர் நெட்எக்ஸ்புளோரர்,
பயர்பாக்ஸ், சபாரி, குரோம், – என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இதனை “கிளையண்ட்” என அழைக்கிறோம். தற்போதைக்கு
“வாடிக்கையாளர்” என வைத்துக் கொள்வோம்.
இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும்
என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும்
நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. அந்த சர்வர், தான்
இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது.
அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி
அப்படியேஅனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள்
“வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்” என்னும் அதி வேக வழியில்
செல்கிறது.
இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை
“உபசரிப்பவர்” என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.
அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில்
உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே
பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது.
நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள்
கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது
புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வளவு அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள
விஷயமும் உள்ளது.
நாம் ஓர் இணையதளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த
சொற்கள் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே? எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து
புரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது.
இதற்கு புரோட்டோகால் (Protocol) என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட் டோகால்
என்பது இரண்டு கம்ப்யூட்டர்கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட
சிஸ்டம் எனச் சொல்லலாம்.
இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி., எஸ்.எம்.டி.பி.,
மற்றும் வை–பி (TCPIP, HTTP, FTP, SMTP WiFi) எனப் பலவகைப்படும்.
நாம் பொதுவாக டி.சி.பி – ஐ.பி. பயன்படுத்துவதால் அது குறித்து
காண்போம்.
இன்டர்நெட்டில் இணைக்கப் படும் ஒவ்வோரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி.
அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 விலிருந்து 255 வரையிலான
எண்களின் கோர்வையாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக
www.yahoo.comஎன்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும். இது இதன் நிலையான
எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது, உங்களுடைய ஐ.எஸ்.பி.
உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும்.
ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது.
முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும்.
இதற்குக் காரணம் ஓர் ஐ.எஸ்.பி., ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான
கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால்,
அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன. இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால்
ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும்.
எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம்.
இந்த எண்களிலான முகவரி முக்கியமானது. ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது;
எந்த கம்ப்யூட்ட ரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும்.
டி.சி.பி. (Transmission Control Protocol) என்பது அனுப்பப்படும்
தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப்
பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத்
தருவதே இந்த வழிமுறையின்ச் செயல்பாடு.
ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும்
என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல்
பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.
அதென்ன தகவல் பாக்கெட்?
------------------------------
இன்டர்நெட் என்பது "பாக்கெட் ஸ்விட்ச்டு நெட் வொர்க்' என அழைக்கப்
படுகிறது. இதற்கு மாறான நெட்வொர்க் "சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்' என
அழைக்கப்படுகிறது. சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்கில் இணைப்பு
ஏற்படுத்துகையில் அந்த இணைப்பை மற்றவர்கள் பயன் படுத்த முடியாது.
ஆனால் பாக்கெட் ஸ்விட்ச்டு நெட்வொர்க் கைப் பலர் பகிர்ந்து கொள்ள
முடியும். ஒரே நேரத்தில் பலர் கேட்கும் தகவல்கள் பிரித்து
அனுப்பப்படுகின்றன.
இவை அதனதன் சேரும் இடத்தைச் சேர்ந்தவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு
கேட்பவரிடம் தரப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட் தகவலிலும் ஏறத்தாழ 1500
கேரக்டர்கள் கொண்டதாக இருக்கும்.
ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஹெடர்கள் அமைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இந்த
ஹெடர்களில் இந்த பாக்கெட்கள் எப்படி இணைக்கப்பட வேண்டும் என
எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ற வகையில் இவை இணைக்கப்படும்.
ஒரு எடுத்துககாட்டைப் பார்ப்போம். பழைய காலத்து அகலமான திறப்பு கொண்ட
கடைகளில் அகலமான கதவு இருந்தால் அதனை திறந்து வைத்தால் அதிக இடம்
பிடிக்கும் என்பதால் சிறு சிறு பலகைகளை,
மேலும் கீழும் அவற்றைக் கொள்வதற்கான சிறிய பள்ளங்களை ஏற்படுத்தி
செருகி பின் ஒரு பெரிய இரும்பு பாளத்தில் இணைத்து பூட்டு போடுவார்கள்.
காலையில் இதனைத் திறந்தவுடன் இந்த பலகைகளைக் கழற்றி ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்திடுவார்கள்.
மீண்டும் கடையைப் பூட்டுகையில் சரியாக வைப்பதற்காக கதவில் எண் அல்லது வேறு
குறியீடுகளை அமைத்திருப்பார்கள். இதே போல் தான் சிறு சிறு பொட்டலங்களில்
தகவல்கள் செலுத்தப்படுகின்றன. தேவை எனக் கேட்ட கம்ப்யூட்டரை அடைந்தவுடன்
அவை ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுகின்றன.
ஒவ்வொரு ஹெடரிலும் செக்சம் (Checksum) எனப்படும் ஒரு எண் தரப்படும். இந்த
எண் மூலம் வரவேண்டிய தகவல் சிந்தாமல் சிதறாமல் வந்து விட்டதா என்று
அறியப்பட்டு இணைக்கப்படும்.
இந்த வேலையை டி.சி.பி. வழிமுறை செயல்படுத்துகிறது. இப்போது முதல்
செயலுக்கு வருவோம். நீங்கள் சொற்களில் டைப் செய்திடும் முகவரி எந்த
இடத்தில் எண்களாகக் கம்ப்யூட்டருக்கு ஏற்றபடி மாறுகிறது?
நீங்கள் டைப் செய்த முகவரியை வைத்துக் கொண்டு உங்கள் ஐ.எஸ்.பி. சர்வர்,
டொமைன் நேம் சர்வர் (Domain Name Server DNS) என்ற ஒன்றை நாடுகிறது.
இந்த சர்வரே நீங்கள் தந்த முகவரியின் பெயரின் அடிப்படையில் தேடுதலைச்
சுருக்கித் தேடி முகவரிக்கான எண் தொகுப்பை ஐ.எஸ்.பிக்கு வழங்குகிறது.
பின் அந்த எண் முகவரியை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நெட்டில் தேடல்
தொடங்கி குறிப்பிட்ட சர்வரை அடைகிறது. பின் முன்பு கூறியபடி தகவல்கள்
கிடைக்கின்றன.