by கோவைசிவா on Sun Nov 01, 2009 9:08 pm
டில்லியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் யுவராஜ், தோனியின் சூப்பர் ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரில் 2-1 என்ற முன்னிலை பெற்றது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையை எட்டியது. மூன்றாவது போட்டி டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று நடந்தது.
மூன்றாவது முறை:
இத்தொடரில் மூன்றாவது முறையாக "டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் டிம் பெய்ன், ஷான் மார்ஷ், வேகப்பந்துவீச்சாளர் ஹில்பெனாஸ் மூவரும் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக முறையே கிரகாம் மானவ், ஹென்ரிக்ஸ், போலிங்கர் தேர்வு செய்யப்பட்டனர்.
நிதான துவக்கம்:
ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர்களாக கேப்டன் பாண்டிங், வாட்சன் களமிறங்கினர். இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், நிதானமாக ரன் சேர்த்தனர். முதல் 16 ஓவர் வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
யுவராஜ் திருப்பம்:
இந்நிலையில் 17வது ஓவரை வீசிய யுவராஜ் சிங் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது சுழலில் சிக்கிய வாட்சன்(41), கேப்டன் தோனியின் துடிப்பான "ஸ்டம்பிங்கில்' அவுட்டானார்.
பாண்டிங் அரைசதம்:
பின்னர் மைக்கேல் ஹசியுடன் இணைந்த பாண்டிங், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருநாள் அரங்கில் தனது 72வது அரைசதம் கடந்தார். இவர் 4 பவுண்டரி உட்பட 59 ரன்கள் சேர்த்த நிலையில், ரவிந்திர ஜடேஜா சுழலில் வீழ்ந்தார். அடுத்து வந்த காமிரான் ஒயிட் (0) ஏமாற்றினார்.
ஹசி அபாரம்:
மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மைக்கேல் ஹசி, ஒருநாள் அரங்கில் தனது 27வது அரைசதம் பதிவு செய்தார். இவருடன் இணைந்த வோஜஸ் (17), ஹென்ரிக்ஸ் (12) நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. மைக்கேல் ஹசி (81), மிட்சல் ஜான்சன் (9) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் சுழலில் அசத்திய ரவிந்திர ஜடேஜா அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினர்.
திணறல் துவக்கம்:
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சேவக் துவக்கம் கொடுத்தனர். சொந்த ஊரில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சேவக் (11), ஜான்சன் வேகத்தில் போல்டானார். அவசரப்பட்ட சச்சின் (32), ரன்-அவுட்டானார். மற்றொரு டில்லி வீரர் காம்பிர் (6) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இதனால் இந்திய அணி 53 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது.
சூப்பர் ஜோடி:
பின்னர் கேப்டன் தோனி-யுவராஜ் சிங் இணைந்து அருமையாக ஆடினர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ், வோஜஸ் வீசிய 35வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து, ஒருநாள் அரங்கில் தனது 42வது அரைசதம் பதிவு செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த தோனி, ஒருநாள் அரங்கில் தனது 33வது அரைசதம் கடந்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்த நிலையில், யுவராஜ் (78), ஹென்ரிக்ஸ் பந்தில் சிக்கினார்.
இரண்டாவது வெற்றி:
பின்னர் இணைந்த சுரேஷ் ரெய்னா-தோனி ஜோடி, அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இந்திய அணி 48.2 ஒவரில் 4 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில், வெற்றி பெற்றது. இதன்மூலம் ஏழு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது. கேப்டன் தோனி (71), ரெய்னா (9) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் வென்றார்.
-----------------
முதல் "பகலிரவு' போட்டி
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் டில்லியில் உள்ள பெரோஷோ கோட்லா மைதானத்தில் நடந்த 3வது ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடந்தது. இது இம்மைதானத்தில் நடத்தப்பட்ட முதலாவது பகலிரவு போட்டி. இதன்மூலம், இந்திய மண்ணில் பகலிரவு போட்டி நடத்தப்படும் 14வது மைதானம் என்ற பெருமை பெற்றது.
----------------------
சச்சின் தேவை "47 ரன்கள்
நேற்று 32 ரன்களுக்கு அவுட்டான சச்சின், ஒருநாள் அரங்கில் 17 ஆயிரம் ரன்களை எட்ட தவறினார். இதுவரை 433 ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ள இவர் 44 சதம், 91 அரைசதம் உட்பட 16,953 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு 17 ஆயிரம் ரன்களை எட்ட இன்னும் 47 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
---
அசத்தல் ஜோடி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில், இந்திய கேப்டன் தோனி-யுவராஜ் சிங் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்து, அணியை வெற்றி பெறச் செய்தது. இதன்மூலம் பெரோஷோ கோட்லா மைதானத்தில் 4வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனை படைத்தது. முன்னதாக கடந்த 2002ம் ஆண்டு இங்கு நடந்த போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக கங்குலி-கைப் ஜோடி 111 ரன்கள் சேர்த்தது சாதனையாக இருந்தது.
* தவிர, இந்த ஜோடி இந்திய மண்ணில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் 4வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையும் படைத்தது. முன்னதாக கடந்த 2007ம் ஆண்டு ஐதராபாத்தில் நடந்த போட்டியில் மைக்கேல் கிளார்க்-சைமண்ட்ஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தது.
---
மானவ் சொதப்பல்
முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கிரகாம் மானவ், பீல்டிங்கில் சொதப்பினார். பேட்ஸ்மேன்கள் அடிக்காமல்விட்ட பந்தை, பிடிக்கமுடியாமல் திணறினார். இது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ரன் சேர்க்க உதவியது.
--------------
100வது போட்டி
டில்லியில் நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 100வது ஒருநாள் போட்டி. இதில் ஆஸ்திரேலியா (58*), இந்தியா (33*) போட்டியில் வெற்றி பெற்றன. 8 போட்டிக்கு முடிவு இல்லை. இதன்மூலம் இந்திய அணியுடன் 100 ஒருநாள் போட்டியில் விளையாடிய மூன்றாவது அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றது. முன்னதாக இந்திய அணி, பாகிஸ்தான் (118 போட்டி) மற்றும் இலங்கை (113 போட்டி) அணிகளுடன் 100 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளது.
---
ஹசி "1000'
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி 81 ரன்கள் எடுத்தார். இவர் தனது 21வது ரன்னை கடந்த போது, ஒருநாள் போட்டியில் இந்த ஆண்டு 1000 ரன்களுக்கு மேல் சேர்த்த மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார். இவர் இதுவரை 30 போட்டியில் பங்கேற்று 1060 ரன்கள் எடுத்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் (1076), ஜிம்பாப்வேயின் மசகட்சா (1064) உள்ளிட்டோர் இச்சாதனை படைத்திருந்தனர்.
* நேற்று மைக்கேல் ஹசி, ஒருநாள் அரங்கில் தனது 27வது அரைசதம் பதிவு செய்தார். இதன்மூலம் இவர் இத்தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக (73, 53, 81) அரைசதம் கடந்து அசத்தினார். தவிர, இது இந்தியாவுக்கு எதிராக இவரது 5வது அரைசதம்.
---
காம்பிர் காயம்
ஹர்பஜன் சிங் வீசிய 18வது ஓவரின் கடைசி பந்தை ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் அடித்தார். அது பீல்டிங் செய்து கொண்டிருந்த காம்பிரின் கழுத்தை பதம்பார்த்தது. இதனால், காம்பிர் கடைசிவரை பீல்டிங் செய்ய வரவில்லை. இவருக்கு பதிலாக விராத் கோஹ்லி பீல்டிங் செய்தார்.
---